வெளியக தலையீடற்ற பொறிமுறையை நிறுவுவதிலும் அதிகாரங்களைப் பகிர்வதிலும் அர்ப்பணிப்புடன் செயற்படுகிறோம் - ஜப்பானிய வெளிவிவகார அமைச்சரிடம் அலி சப்ரி
(நா.தனுஜா)
ஒருமைப்பாடு மற்றும் தேசிய நல்லிணக்கத்தை அடைந்துகொள்வதை முன்னிறுத்தி எவ்வித வெளியகத் தலையீடுகளுமின்றி உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு போன்ற உள்ளக செயன்முறைகளை நிறுவுவதற்கும், அதிகாரங்களைப் பகிர்ந்தளிப்பதற்கும் அரசாங்கம் கொண்டிருக்கும் கடப்பாடு குறித்தும் ஜப்பானிய வெளிவிவகார அமைச்சரிடம் எடுத்துரைத்ததாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
இருநாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கைக்கு வருகைதந்துள்ள ஜப்பான் வெளிவிவகார அமைச்சர் யொகோ கமிகவா மற்றும் இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி ஆகியோரின் கூட்டு ஊடக சந்திப்பு இன்று சனிக்கிழமை (04) கொழும்பிலுள்ள வெளிவிவகார அமைச்சில் நடைபெற்றது.
அங்கு கருத்து வெளியிட்ட அமைச்சர் அலி சப்ரி மேலும் கூறியதாவது:
ஜப்பானுக்கும் இலங்கைக்கும் இடையில் சுமார் 72 வருடகாலமாக நெருங்கிய நட்புறவு பேணப்பட்டு வருகின்றது. இந்நட்புறவானது அண்மைய காலங்களில் இரு நாடுகளுக்கும் இடையில் பரஸ்பரம் இடம்பெற்ற உயர்மட்ட விஜயங்களால் மேலும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் நானும் ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் யொகோ கமிகவாவும் பரந்துபட்ட விடயங்கள் தொடர்பில் இருதரப்புக் கலந்துரையாடலை முன்னெடுத்திருந்தோம்.
இதன்போது கடந்த காலங்களில் இலங்கை மிகமோசமான பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்திருந்த வேளையில், ஜப்பான் வெளிப்படுத்திய உடனிற்பு மற்றும் வழங்கிய உதவிகளுக்காக நான் அவருக்கு நன்றி தெரிவித்தேன். அதேபோன்று வெளியகக் கடன் மறுசீரமைப்பு செயன்முறையில் ஜப்பான் வழங்கிவரும் பங்களிப்பு மற்றும் ஜப்பான் அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட நிதியுதவி என்பவற்றுக்கும் நன்றி கூறுகிறேன்.
அதேபோன்று பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தவும், கடன் உறுதிப்பாட்டை விரிவுபடுத்தவும், வளர்ச்சியை மையமாகக் கொண்ட மறுசீரமைப்பு செயன்முறைகளை நடைமுறைப்படுத்தவும் இலங்கை அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகள் குறித்து ஜப்பான் வெளிவிவகார அமைச்சருக்குத் தெளிவுபடுத்தினேன்.
இன்றளவிலே இலங்கை பொருளாதார நெருக்கடியிலிருந்து மாத்திரம் மீட்சியடையவில்லை. மாறாக, இம்மீட்சியானது இலங்கை மக்களின் மீண்டெழும் தன்மையையும் அர்ப்பணிப்பையும் வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.
அதன்படி, சர்வதேச நாணய நிதியத்தின் அடுத்த மீளாய்வுக்குள் கடன் மறுசீரமைப்பு செயன்முறை பூர்த்திசெய்யப்படுமென எதிர்பார்க்கின்றோம்.
அதேவேளை இலங்கையின் பொருளாதார உறுதிப்பாடு, மீட்சி மற்றும் எதிர்கால வளர்ச்சி என்பன குறித்த அமைச்சர் யொகோ கமிகவா தனது நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளார். அதன்படி தற்போது இலங்கையில் முன்னெடுப்பதற்கென உத்தேசிக்கப்பட்டுள்ள திட்டங்களையும், மின்சாரம், உட்கட்டமைப்பு, துறைமுகம் மற்றும் நெடுஞ்சாலை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் புதிய முதலீட்டுத் திட்டங்களையும் ஆரம்பிக்குமாறு நான் அவருக்கு அழைப்பு விடுத்துள்ளேன். இலகு ரயில் சேவைத்திட்டத்தையும் மீள ஆரம்பிப்பது குறித்து கலந்துரையாடியிருக்கிறோம்.
மேலும், ஒருமைப்பாடு மற்றும் தேசிய நல்லிணக்கத்தில் அடையப்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து அமைச்சர் யொகோ கமிகவாவுக்கு விளக்கமளித்ததுடன், அவற்றை முன்னிறுத்தி எவ்வித வெளியகத் தலையீடுகளுமின்றி உண்மை மற்றம் நல்லிணக்க ஆணைக்குழு போன்ற உள்ளக செயன்முறைகளை நிறுவுவதற்கும், அதிகாரங்களை பகிர்ந்தளிப்பதற்கும் அரசாங்கம் கொண்டிருக்கும் கடப்பாடு குறித்தும் எடுத்துரைத்தேன் என்று தெரிவித்தார்.