ஊர்ப்புதினம்

இந்தியாவிலிருந்து இலங்கைக்கு கடல் வழியாக படகில் தப்பி வர முயன்ற இருவர் உட்பட 8 பேர் கைது

1 week 6 days ago

Published By: DIGITAL DESK 3

01 MAY, 2024 | 03:57 PM
image
 

இந்தியாவில் தனுஷ்கோடி கடல் வழியாக படகில் சட்டவிரோதமாக இலங்கைக்கு  தப்பி வர முயன்ற இலங்கை தம்பதி இருவர் மற்றும்  தப்பி வர உதவிய ஆறு பேர் என 8 பேரை தங்கச்சிமடம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டம் வேதாளை பகுதியைச் சேர்ந்த சைபுல்லா நவீத், இம்ரான், நைனா முகமது, ரகுமான் உள்ளிட்ட நான்கு பேர் நேற்று (30)  இரவு தங்கச்சி மடம் பேருந்து நிலையத்தில் நின்று பேசிக் கொண்டிருந்துள்ளனர்.

அவர்கள் நால்வர் மீதும் முன்னதாக இலங்கைக்கு ஆட்களை சட்டவிரோதமாக அனுப்பி வைத்த வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் சந்தேகமடைந்த இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த தங்கச்சிமடம் பொலிஸார் நால்வரையும் பிடித்து விசாரித்தனர்.

அப்போது இலங்கை வவுனியா பகுதியைச் சேர்ந்த தம்பதிகளான சாந்தி மற்றும் ராஜேஸ்வரன் ஆகிய இருவரும்  கடந்த 2017 ஆம் ஆண்டு விமானம் மூலம் சென்னை வந்ததாகவும், சென்னையில் தங்கி இருந்த நிலையில் மீண்டும் இலங்கைக்கு திரும்பிச் செல்ல 

முடியாததால் சென்னை புழல் பகுதியைச் சேர்ந்த வினோத்குமார் மற்றும் கணேசன் லிங்கம் ஆகியோரை தொடர்பு கொண்டு சட்டவிரோதமாக  தனுஷ்கோடி கடல்  வழியாக படகில் இலங்கைக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுள்ளனர்.

இதனை அடுத்து ராஜேஸ்வரனிடம் பணத்தை பெற்றுக் கொண்ட கணேசலிங்கம் மற்றும் வினோத் குமார் ஆகிய இருவரும் வேதாளை  பகுதியை சேர்ந்த நவீத் இம்ரானை தொடர்பு கொண்டு இலங்கைக்கு இருவரையும் அனுப்பி வைக்க  ஏற்பாடு செய்துள்ளனர்.

இதையடுத்து  ராஜேஸ்வரன், சாந்தி, கணேசலிங்கம், வினோத் குமார் ஆகிய நால்வரும் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சென்னையில் இருந்து புறப்பட்டு ராமேஸ்வரம் வந்து தங்கச்சிமடம் அடுத்துள்ள ரிசார்ட் ஒன்றில்  தங்கி இருந்துள்ளனர்.

இன்று (1) புதன்கிழமை இரவு தங்கச்சிமடம் மாந்தோப்பு கடற்கரையில் இருந்து நாட்டுப்படகில் புறப்பட்டு தனுஷ்கோடி கடல் வழியாக வவுனியா தப்பி செல்ல  திட்டமிட்டது விசாரணையில்  தெரிய வந்துள்ளது.

இலங்கை தம்பதிகள் இருவர் மற்றும் இலங்கைக்கு தப்பிச் செல்ல  உதவிய ஆறு பேர் என மொத்தம் எட்டு பேரை தங்கச்சிமடம் பொலிஸார் கைது செய்து தங்கச்சிமடம்  காவல் நிலையத்தில் வைத்துள்ளனர்.

தங்கச்சிமடம் காவல் நிலையத்தில் உள்ள எட்டு பேரிடம்  மத்திய, மாநில உளவுத்துறை, மரைன் பொலிஸார் மற்றும் சட்ட ஒழுங்கு பொலிஸார் அடுத்தடுத்து தனித்தனியாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விசாரணைக்கு பின்னர் 8 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளதாக  தங்கச்சிமடம்   காவல்துறையினர்  தெரிவித்துள்ளனர்.

இந்தியாவிலிருந்து இலங்கைக்கு கடல் வழியாக படகில் தப்பி வர முயன்ற இருவர் உட்பட 8 பேர் கைது | Virakesari.lk

மே தினத்தை கொண்டாடி மகிழ்ந்த தலைமன்னார் ஊர்மனை கிராம மக்கள்!

1 week 6 days ago
01 MAY, 2024 | 07:00 PM
image
 

தலைமன்னார் ஊர்மனை கிராம மக்கள் இம்முறை மே தினத்தை வெகு சிறப்பாக கொண்டாடியுள்ளனர்.

இக்கிராம மக்கள் கடந்த காலங்களில் பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் பொருளாதார பின்னடைவு மற்றும் இந்திய மீனவர்களின் அத்துமீறலால் ஏற்பட்ட பாதிப்புகள் உள்ளடங்களாக பல்வேறு பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டிருந்தனர்.

இந்த நிலையில் இந்த கிராம மக்கள் இன்றைய தினம் (1) மே தினத்தை ஒன்றுதிரண்டு மிகவும் ஒற்றுமையாக கொண்டாடி மகிழ்ந்துள்ளனர்.

தலைமன்னார் ஊர்மனை கிராமத்தின் புனித லோறன்சியார் ஆலய பங்குத்தந்தை சந்தியோகு மார்க்கஸ் அடிகளார் தலைமையில் புனித லோரன்சியார் மீனவ கூட்டுறவு சங்கம் மற்றும் லோரன்சியார் விளையாட்டு கழகம் கூட்டாக இணைந்து மே தின நிகழ்வுகளை ஏற்பாடு செய்திருந்தனர்.

தலைமன்னார் ஊர்மனை கிராமத்தில் மீன்பிடி துறையில் அமைந்துள்ள சுரூபத்தடியில் இன்று  காலை மே தின கொண்டாட்ட நிகழ்வு திருப்பலியுடன் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இதையடுத்து கிராம மக்களுக்கு காலை உணவு வழங்கப்பட்டது.

அதனை தொடர்ந்து அந்த மக்கள் யாவரும் ஒன்றுதிரண்டு மீன்பிடி துறைமுகத்தில் போட்டி நிகழ்வுகளில் ஈடுபட்டனர். 

நீச்சல் போட்டி, தெப்பம் வலிக்கும் போட்டி, பெரிய மற்றும் சிறிய படகுகளின் போட்டி, பெண்களுக்கான கயிறு இழுத்தல் போட்டி நிகழ்வுகள் இடம்பெற்றன.

தலைமன்னார் ஊர்மனை கிராமத்தின் கடற்படையினர் மற்றும் பொலிஸ் தரப்பினர் உள்ளிட்ட பல்வேறு பிரதிநிதிகள் இந்த நிகழ்வுகளில் கலந்துகொண்டிருந்தனர்.

மன்னர் மாவட்டத்தில் பல்வேறு மீன கிராமங்களில் மே தின கொண்டாட்ட நிகழ்வுகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

P2560738.JPG

P2560741.JPG

P2560747.JPG

P2560752.JPG

P2560753.JPG

மே தினத்தை கொண்டாடி மகிழ்ந்த தலைமன்னார் ஊர்மனை கிராம மக்கள்!  | Virakesari.lk

பிக்கு அபகரித்த 88 ஏக்கர் காணியை மீட்க கோரிக்கை

1 week 6 days ago
1000216711.jpg
அப்துல்சலாம் யாசீம்
திருகோணமலை குச்சவெளி – திரியாய் கிராம சேவகர்

பிரிவுக்குட்பட்ட ஆத்திக்காட்டுவெளி பகுதியில் உள்ள தமிழ் மக்களின் பாரம்பரிய விவசாயக் காணிகளில் பௌத்த பிக்கு ஒருவர் விவசாயம் மேற்கொண்டு வருவதாகவும் இதனால் தமது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவற்றை தமது வாழ்வாதாரத்திற்காக மீட்டுத் தருமாறு விவசாயிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.
 
 
ஆத்திக்காடு பகுதியில் உள்ள 88 ஏக்கர் காணி பானாமுரே திலகவங்ச நாயக்க தேரர் என்ற பௌத்த பிக்கு ஒருவரின் பெயரில் தற்காலிக இடாப்பு பதிவு மேற்கொள்ளப்பட்டு கிட்டத்தட்ட 3 வருடங்களாக சிறுபோக நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், இதற்காக அரசாங்கத்திடம் இருந்து 20 சிங்கள மக்களின் பெயரில் மானியப் பசளை பெற்று வருவதாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
 
1984 ஆம் ஆண்டுக்கு முன்னர் பல வருட காலமாக பரம்பரை பரம்பரையாக குறித்த காணிகளில் குச்சவெளி மக்கள் விவசாயத்தில் ஈடுபட்டு வந்ததாகவும், யுத்த நிலைமையின் காரணமாக இடம்பெயர்ந்து சென்று மீண்டும் திரும்பும்போது குறித்த பகுதியில் இருந்த உறுதி மற்றும் பேமிட் காணிகள் அடங்கலாக பெருமளவான விவசாயக் காணிகள் வன வள பாதுகாப்புத் திணைக்களத்தினால் கையகப்படுத்தப்பட்டிருந்ததாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
 
இந்நிலையில் 2021 ஆம் ஆண்டு காலப்பகுதியில் 88 ஏக்கர் மற்றும் அதற்கு மேற்பட்ட காணிகள் அப்பகுதியில் உள்ள சப்தநாக பப்பத வன செனசுன விகாரைக்கரியது என குறிப்பிட்டு ஆக்கிரமிக்கப்பட்டு புத்த பிக்கு ஒருவரின் தலைமையின்கீழ் விவசாயம் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கின்றனர்.
 
2018 ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்டுள்ள சப்தநாக பப்பத வன செனசுன விகாரைக்காக 2020.10.02 வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலில் பூஜா கிராண்ட் மூலம் 20.2343 ஹெக்டேயர் காணி 2020.05.26ஆம் திகதியில் இருந்து 30 வருடகால குத்தகைக்கு கொடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
இக்காணிக்குள் மக்களுடைய உறுதிக் காணிகளும் உள்டங்குவதாக பிரதேச செயலகத்தினால் சட்டமா அதிபரிடம் ஆலோசனை கோரி கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிய வருகின்றது. 

தமிழரசுக் கட்சிக்கு இறுதிக் கிரியை செய்யும் பிரபல சட்டத்தரணி: அடுக்கப்படும் ஆதாரங்கள்

1 week 6 days ago

ஒரு நீண்ட நெடிய அரசியல் பாதையிலே வந்த முதிய தலைவர் பல ஆண்டுகளாக தமிழரசுக் கட்சிக்கு பாதாள குழியைத் தோண்டி வைத்தார். இப்போது மற்றுமொரு வழக்கறிஞர் வந்து அந்த குழிக்குள் தமிழரசுக் கட்சியை தள்ளி  கிரியை செய்து கொண்டிருக்கின்றார் என்று பிரபல புலம்பெயர் தமிழ் தொழிலதிபரும் லங்காசிறி மற்றும் ஐபிசி ஊடக குழுமத்தின் தலைவருமான கந்தையா பாஸ்கரன்(kandiah baskaran) தெரிவித்தார்.

அவர்கள் யார் என்பது பார்த்துக் கொண்டிருக்கும் மக்களுக்குத் தெரியும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். 

 

ஐபிசி தமிழின் நிலவரம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.  

சிதறிய கூட்டமைப்பு 

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,  

தமிழரசுக் கட்சியின் இன்றைய நிலை உலகத் தமிழர்கள் பார்த்து ஏளனம் செய்யும் அளவிலும் சிரிக்கும் அளவிலும் இருக்கின்றது.  

 

மேலும், இங்கு யாருக்கும் தமிழ் மக்களின் மீதோ மண்ணின் மீதோ காதலோ ஆசையோ கிடையாது.  பதவியின் மீதும் அந்த பதவியினால் கிடைக்கும் வரப்பிரசாதங்களை, சுகபோகங்களை அனுபவிக்கும் பதவி ஆசையே இங்கு பலருக்கும் இருக்கின்றது.  இதனை நான் வெளிப்படையாகவே கூறுவேன்.

காசை கொடுத்து தமிழரசுக் கட்சியின் உறுப்பினராக வேண்டிய தேவை எனக்குக் கிடையாது அதே சமயம் காசை வாங்கிக் கொண்டுதான் என்னை கட்சியின் உறுப்பினராக ஏற்றுக் கொள்ள வேண்டிய தேவை தமிழரசுக் கட்சிக்கும் கிடையாது.  

நான் நீண்ட நெடிய நாட்களாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மீது அதீத ஈடுபாட்டை கொண்டவன்.  அதற்கு காரணம், ஈழத் தமிழருடைய போராட்ட வரலாற்றில் அழிக்கப்பட முடியாத ஒன்றாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இருந்தது. 

ஏனென்று சொன்னால் தமிழீழ விடுதலைப் புலிகளால் எல்லா கட்சிகளையும் இணைத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது. 

2009ஆம் ஆண்டு ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்டதன் பிறகு தமிழருக்கு இருந்த ஒரு சொத்தாக நான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பார்க்கின்றேன். ஆனால் அது ஒரு குறுகிய காலத்திலே ஒட்டுமொத்தமாக சிதறடிக்கப்பட்டுள்ளது என  குறிப்பிட்டார்.

https://tamilwin.com/article/tamil-arasu-katchi-issue-kandaiah-baskaran-message-1714491488

இலங்கைக்கு ஆதரவளிக்கத் தயார்! -கனேடிய உயர்ஸ்தானிகராலயம்

1 week 6 days ago
canada-710x375.jpg இலங்கைக்கு ஆதரவளிக்கத் தயார்! -கனேடிய உயர்ஸ்தானிகராலயம்.

இலங்கையில் நீதி, பொறுப்புக்கூறல், சமாதானம் மற்றும் நல்லிணக்கம் ஆகியவற்றுக்கு வழிவகுக்கக்கூடிய அர்த்தமுள்ள நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்கத் தயாராக இருப்பதாக கொழும்பிலுள்ள கனேடிய உயர்ஸ்தானிகராலயம் குறிப்பிட்டுள்ளது.

கனடாவிலுள்ள ப்ரம்டன் நகரில் இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் தமிழினப்படுகொலையில் கொல்லப்பட்டவர்களை நினைவுகூரும் வகையிலான சின்னமொன்றை நிர்மாணிப்பதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள நிலையில், இது குறித்து இலங்கை அரசாங்கம் கொழும்பிலுள்ள கனேடிய உயர்ஸ்தானிகரை வரவழைத்து கலந்துரையாடியதாகத் தகவல்கள் வெளியாகியிருந்தன.

அதன்படி இந்நினைவுச்சின்னம் தொடர்பில் கலந்துரையாடும் நோக்கிலான சந்திப்பொன்று கனேடிய உயர்ஸ்தானிகர் எரிக் வோல்{க்கும், வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அருணி விஜேவர்தனவுக்கும் இடையில் இடம்பெற்றதாக கொழும்பிலுள்ள கனேடிய உயர்ஸ்தானிகராலயம் மின்னஞ்சல் ஊடாக தமக்கு உறுதிப்படுத்தியதாக ‘தமிழ் கார்டியன்’ செய்தி வெளியிட்டுள்ளது.

அத்துடன், கனடாவின் சமஷ்டிக் கட்டமைப்பின்கீழ் மாகாண மற்றும் உள்ளுராட்சி அரசாங்கங்கள் மத்திய அரசாங்கத்திலிருந்து வேறுபட்டு சுதந்திரமாக இயங்கமுடியும் எனவும், அவற்றுக்கென தனித்த நிர்வாக அதிகாரங்கள் உண்டு எனவும் கனேடிய உயர்ஸ்தானிகராலயம் அதன் மின்னஞ்சல் பதிலில் தெரிவித்திருப்பதாக ‘தமிழ் கார்டியன்’ செய்தி வெளியிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2024/1380498

 

தோட்ட தொழிலாளர்களின் ஊதியத்தை அதிகரிப்பது தொடர்பான வர்த்தமானி வெளியீடு!

1 week 6 days ago
del481528-750x375.jpg தோட்ட தொழிலாளர்களின் ஊதியத்தை அதிகரிப்பது தொடர்பான வர்த்தமானி வெளியீடு!

தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த ஊதியத்தை அதிகரிப்பது தொடர்பான அரசவர்த்தமானி வெளியாகியுள்ளது.

மேற்படி வர்த்தமானியில், தேயிலை, இறப்பர் தோட்டத் தொழிலாளர்களின் குறைந்தபட்ச நாளாந்த ஊதியம் 1,700 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில், நாளாந்த ஊதியம் 1350 ரூபாவாகவும், நாளாந்த மேலதிக கொடுப்பனவு 350 ரூபாவாகவும் வழங்கப்படும் என்பதுடன், நாளாந்த ஊதியமாக 1700 ரூபாய் வழங்கப்படும் என குறித்த வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினை உள்ளிட்ட அனைத்துப் பிரச்சினைகளுக்கும் விரைவில் தீர்வினை வழங்கவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

கொட்டகலையில் இடம்பெற்ற இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் மே தினக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

https://athavannews.com/2024/1380521

பலத்தைக் காட்ட ஏட்டிக்குப் போட்டியாக மேதினக் கூட்டங்களை நடத்தும் அரசியல் கட்சிகள்!

2 weeks ago

பலத்தைக் காட்ட ஏட்டிக்குப் போட்டியாக மேதினக் கூட்டங்களை நடத்தும் அரசியல் கட்சிகள்!

இலங்கை முழுவதும் அரசியல் கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்கள் 40க்கும் மேற்பட்ட மேதினக் கூட்டங்களையும் பேரணிகளையும் ஏற்பாடு செய்துள்ளன.

ஏட்டிக்கு போட்டியாக மேதினக் கூட்டங்களை நடத்தி தமது பலத்தை வெளிப்படுத்த அரசியல் கட்சிகள் எதிர்பார்த்துள்ளன.

ஐக்கிய தேசியக் கட்சியின் மேதினக் கூட்டம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் மாளிகாவத்தை பீ.டி.சிறிசேன மைதானத்திற்கு முன்னால் பிரதீபா வீதியில் நடத்தப்படவுள்ளது.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மேதினக் கூட்டம் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷ தலைமையில் பொரளை கெம்பல் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியின் மேதினக் கூட்டம் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் கோட்டை சதாம் வீதியில் நடக்கவுள்ளது.

ஜே.வி.பி தலைமையிலான தேசிய மக்கள் சக்தியின் மேதினக் கூட்டம் கட்சித் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தலைமையில் கொழும்பு தாமரைத் தடாகத்திற்கு அருகில் கன்னங்கர மாவத்தை பகுதியில் நடக்கவுள்ளது.

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அணியின் மேதினக் கூட்டத்தை கம்பஹாவில் நடக்கவுள்ளது.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மேதினக் கூட்டம் கொட்டகலையிலும், தொழிலாளர் தேசிய சங்கத்தின் மேதினக் கூட்டம் தலாவாக்கலை நகரிலும், தமிழரசுக் கட்சியின் மேதினக் கூட்டம் கிளிநொச்சி மற்றும் மட்டக்களப்பிலும் நடைபெறவுள்ளன.

 

http://www.samakalam.com/பலத்தைக்-காட்ட-ஏட்டிக்கு/

சர்வதேச தொழிலாளர் தினம் இன்று – நாடு முழுவதும் 40 பேரணிகள்!

2 weeks ago

சர்வதேச தொழிலாளர் தினம் இன்று கொண்டாடப்படுகிறது .இத்தினத்தை உலகின் ஒவ்வொரு நாடும் அணிவகுப்புகள், பேரணிகள் போன்றவற்றை ஏற்பாடு செய்து கொண்டாடுகிறது!

இந்த ஆண்டு தொழிலாளர் தினத்தை கொண்டாடும் வகையில், இலங்கையில் உள்ள அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகள் இன்று மே தின அணிவகுப்பு கூட்டங்களை ஏற்பாடு செய்துள்ளன. அதன்படி நாடளாவிய ரீதியில் 40 பேரணிகள் நடைபெறவுள்ளன.

ஐக்கிய தேசியக் கட்சியின் மே தினப் பேரணி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இன்று பிற்பகல் 2.00 மணிக்கு கொழும்பில் ஆரம்பமாகவுள்ளது.

இன்று இரண்டு மே தினக் கூட்டங்களில் பங்கேற்கவுள்ள ஜனாதிபதி, இன்று காலை கொட்டகலை பொது விளையாட்டரங்கில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மே தினக் கூட்டத்தில் பங்கேற்கவுள்ளார்.

தேசிய மக்கள் சக்தி கொழும்பு, யாழ்ப்பாணம், மாத்தறை மற்றும் அனுராதபுரத்தில் நான்கு பேரணிகளை ஏற்பாடு செய்துள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி கொழும்பிலும் தலவாக்கலையிலும் இரண்டு மே தினக் கூட்டங்களை நடத்துகிறது .

ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கொழும்பு கெம்பல் மைதானத்தில் மேதினக் கூட்டத்தை நடத்துகிறது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மே தினக் கூட்டத்தை கம்பஹாவில் நடத்துகிறது.

https://thinakkural.lk/article/300621

பேலியகொடையில் விபசாரத்தில் ஈடுபட்ட 25 பெண்கள் நோயினால் பாதிப்பு!

2 weeks ago
01 MAY, 2024 | 10:15 AM
image

பேலியகொடை பொலிஸ் பிரிவில் மேற்கொள்ளப்பட்ட யுக்திய நடவடிக்கையின் போது பொலிஸாரால் கைது செய்யப்பட்ட 25 விபச்சாரிகள் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக வைத்திய பரிசோதனையில் தெரிய வந்துள்ளது . 

போதைப்பொருள் பாவனைக்காக விபசாரத்தில் ஈடுபடும் பெண்கள் தொடர்பில் பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த பெண்கள் கைது செய்யப்பட்டனர்.  

இவ்வாறு, கைது செய்யப்பட்ட 25 பெண்களும் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதுடன் இவர்களை வைத்திய பரிசோதனைக்கு  உட்படுத்த நீதிமன்றம் அனுமதி வழங்கியது . 

இவர்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு  இரத்த மாதிரிகள் பரிசோதிக்கப்பட்ட போது இவர்கள் கொனோரியா, ஹெர்பெஸ் போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது . 

சிறைச்சாலை வைத்தியசாலையின் வைத்திய கண்காணிப்பின் கீழ் அவர்களுக்கு சிகிச்சை  அழித்து  மறுவாழ்வு வழங்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

அத்துடன், இந்த பெண்களுடன்  தொடர்பில் இருந்தவர்கள் வைத்திய பரிசோதனைகளை செய்து கொள்ளுமாறு பேலியகொடை பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

https://www.virakesari.lk/article/182382

இன்று முதல் எரிபொருள் விலை குறைப்பு!

2 weeks ago
இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலை குறைப்பு!

Published By: VISHNU   30 APR, 2024 | 09:44 PM

image
 

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் செவ்வாய்க்கிழமை (30) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி ஒக்டேன் 92 பெற்றோலின் விலை லிட்டருக்கு 3 ரூபாவினால் குறைக்கப்பட்டு 368 ரூபாவாக குறைந்துள்ளது. ஒக்டேன் 95 பெற்றோல் 20 ரூபாவினால் குறைக்கப்பட்டு 420 ரூபாவாகும்.

அதேபோல், ஒரு லீற்றர் லங்கா டீசலின் விலை 30 ரூபாவால் குறைக்கப்பட்டவுள்ள நிலையில் அதன் புதிய விலை 333 ரூபாவாக குறைவடையவுள்ளது.

சூப்பர் டீசல் ஒரு லீற்றரின் விலை 9 ரூபாவால் குறைக்கப்படவுள்ள நிலையில் அதன் புதிய விலை 377 ரூபாவாகும்.

மேலும், மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் விலை 20 ரூபாவால் குறைக்கப்படவுள்ள நிலையில் அதன் புதிய விலை 215 ரூபாய் என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.

https://www.virakesari.lk/article/182364

யாழ்ப்பாணத்தில் சீல் வைக்கப்பட்ட 3 உணவகங்கள்

2 weeks ago

யாழ்ப்பாணத்தில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய 3 உணவகங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளதுடன், 2 இலட்சத்து 75 ஆயிரம் ரூபா தண்டப்பணமும் விதிக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி பகுதியில் பொது சுகாதார பரிசோதகரால் உணவகங்கள் பரிசோதிக்கப்பட்டு, குறைபாடுகள் இனங்காணப்பட்ட உணவகங்களுக்கு திருத்த வேலைகளுக்கான அறிவுறுத்தல்கள் எழுத்து மூலமாக வழங்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் திருத்த வேலைகள் பூர்த்தியானமை தொடர்பாக பொது சுகாதார பரிசோதகர் குழுவினால் மீள் பரிசோதனை கடந்த 25.04.2024 அன்று மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது பொது சுகாதார பரிசோதகரால் வழங்கப்பட்ட அறிவுறுத்தல்களைக் கருத்தில் கொள்ளாது கவனயீனமாக தொடர்ந்தும் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய 3 உணவகங்கள் பரிசோதனையில் சிக்கிக் கொண்டுள்ளன.

யாழ்ப்பாணத்தில் சீல் வைக்கப்பட்ட 3 உணவகங்கள் | 3 Sealed Restaurants In Jaffna

வழக்கு தாக்கல்

இதனையடுத்து 3 உணவகங்களுக்கும் எதிராக திருநெல்வேலி பொது சுகாதார பரிசோதகரால் மேலதிக நீதிவான் நீதிமன்றில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

வழக்குகளை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட மேலதிக நீதவான் மூன்று உணவகங்களுக்கும் மொத்தமாக 2 இலட்சத்து 75 ஆயிரம் ரூபா தண்டப்பணம் விதித்தமையுடன் மூன்று உணவகங்களையும் திருத்த வேலைகள் நிறைவடையும் வரை சீல் வைத்து மூடுமாறு பொது சுகாதார பரிசோதகருக்கு கட்டளையிட்டுள்ளார்.

இதனையடுத்து பொது சுகாதார பரிசோதகர் சஞ்சீவனால் மூன்று உணவகங்களும் சீல் வைத்து மூடப்பட்டன. 

https://tamilwin.com/article/3-sealed-restaurants-in-jaffna-1714466164

போலி முகநூல் பதிவுக்கு எதிராக திருகோணமலை மாவட்ட நீதிமன்றில் வழக்கு தாக்கல்!

2 weeks ago
30 APR, 2024 | 05:29 PM
image

போலி முகநூல் பதிவொன்றுக்கு எதிராக திருகோணமலை மாவட்ட நீதிமன்றில் இன்று செவ்வாய்க்கிழமை (30) வழக்கொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

2024ஆம் ஆண்டு 9ஆம் இலக்க நிகழ்நிலைக் காப்புச் சட்டத்தின்கீழ் குறித்த வழக்கினை பதிவு செய்யப்பட்ட சட்டத்தரணி நாகராஜா மோகன் தாக்கல் செய்திருந்தார். குறித்த மனுவை ஆதரித்து சிரேஷ்ட சட்டத்தரணி இராமலிங்கம் திருக்குமாரநாதன் மன்றில் சமர்ப்பணம் செய்திருந்தார்.

குறித்த வழக்கு தொடர்பில் சமர்ப்பணம்செய்கையில்,

மெய்யுறுதிப்படுத்தப்படாத முகநூல் நிகழ்நிலைக் கணக்கினை பயன்படுத்துபவரது ஆள் அடையாளம் உறுதிப்படுத்தப்படல் வேண்டும், குறித்த முகநூல் கணக்கு பயன்படுத்தப்படும் அமைவிடம் அவற்றோடு தொடர்புடைய ஏனைய நிகழ்வுகள் பற்றிய விடயங்கள் உறுதிப்படுத்தப்படல் வேண்டும், போன்ற விண்ணப்பங்களை முன்வைத்ததோடு முகநூல் நிறுவனத்திடமிருந்தும், டயலொக் நிறுவனத்திடமிருந்தும் மேற்குறித்த விடயங்கள் மற்றும் நிகழ்வுகள் பற்றிய விபரங்களை உடனடியாக பெறுவது தொடர்பாகவும் அவற்றை உடனடியாக கௌரவ நீதிமன்றத்திற்கு சமர்ப்பிப்பது தொடர்பாகவும் தேவையானதும், அவசியமானதுமான நடவடிக்கைகளை எடுக்குமாறு கொழும்பு 01இல் செயற்படுகின்ற குற்றவியல் விசாரணை திணைக்களத்தின் கணணிக் குற்றங்கள் விசாரணைப் பகுதியின் சமூக ஊடகப் பிரிவின் பணிப்பாளருக்கு உத்தரவிடுவதற்கான கட்டளையினை பிறப்பிப்பிக்குமாறு சமர்ப்பணம் செய்யப்பட்டது.

குறித்த விண்ணப்பங்களை ஏற்ற மாவட்ட நீதவான் மாணிக்கவாசகர் கணேசராஜா குறித்த கட்டளையை பிறப்பித்திருந்தார். திருகோணமலை மாவட்ட நீதிமன்றில் இவ்வாறான வழக்கு தாக்கல் செய்யப்படுவது இதுவே முதல் தடவையாகும்.

https://www.virakesari.lk/article/182355

இனிமேல் கொழும்பு உள்ளிட்ட நாட்டின் பிரதான நகர வீதி சமிஞ்சைகளுக்கருகில் காத்திருக்கும் யாசகர்களுக்கு பணம் கொடுத்தால் அபராதம் விதிக்கப்படும்

2 weeks ago
1000215521.jpg

கொழும்பு உள்ளிட்ட நாட்டின் பிரதான சந்திகளின் வீதி விளக்குகளுக்கு அருகில் காத்திருந்து யாசகம் பெறுவோருக்கு பணம் கொடுப்பவர்களுக்கு எதிராக சட்டத்தை கடுமையாக அமுல்படுத்த பொலிஸார் தீர்மானித்துள்ளனர்.

 
 
 
அதன்படி, யாசகர்களுக்கு பணம் கொடுத்தால் அபராதம் விதிக்கப்படும் என பொலிஸார் தெரிவித்தனர்.
 
 
 
இந்த வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக கடமையில் இருக்கும் பொலிஸ் உத்தியோகத்தர்களும் சிவில் உடையில் பொலிஸ் குழுக்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
 
யாசகர்களால் இலங்கைக்கு வந்த சோதனை! பெரும் வாய்ப்பை இழந்த சோகம்

2025 ஆம் ஆண்டுக்கான வருடாந்த SMMT சர்வதேச வாகன உச்சி மாநாட்டை இலங்கையில் நடத்துவதில்லை என்ற தீர்மானத்தில், கொழும்பில் போக்குவரத்து விளக்குகளில் உள்ள யாசகர்களின் அச்சுறுத்தலான செயற்பாடு தாக்கம் செலுத்தியதாக இலங்கை ஆட்டோமொபைல் சங்கத்தின் செயலாளர் தேவப்பிரிய ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

மேலும் கூறுகையில், 2015 இல் கொழும்பில் SMMT சர்வதேச வாகன உச்சி மாநாட்டுடன் தொடர்புடைய ஆசிய பசுபிக் பிராந்திய II கூட்டத்தை இலங்கை நடத்தியது, இதில் 150 பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

சர்வதேச வாகன உச்சி மாநாடு

2025 ஆம் ஆண்டு SMMT சர்வதேச வாகன உச்சி மாநாட்டை நடத்துவதற்கான முயற்சியை இலங்கை சமர்ப்பித்த பொதுக் கூட்டம் ருவாண்டாவில் இடம்பெற்றது.

யாசகர்களால் இலங்கைக்கு வந்த சோதனை! பெரும் வாய்ப்பை இழந்த சோகம் | Intl Summit Avoids Sri Lanka Due To Beggar

 

கூட்டத்தில் கலந்துகொண்ட பிரதிநிதிகள், கொழும்பு நகர எல்லைக்குள் உள்ள போக்குவரத்து விளக்குகளில் யாசகம் பெறுபவர்கள் கொழும்பில் பல்வேறு இடங்களுக்குச் செல்லும்போது விரும்பத்தகாத அனுபவங்கள் மற்றும் குறிப்பிடத்தக்க போக்குவரத்து இடையூறுகளை ஏற்படுத்துவதை அவதானித்ததாக அவர் கூறினார்.

ஏலத்தில் வெற்றி பெற்றால், இந்நிகழ்வுக்கு பல்வேறு நாடுகளில் இருந்து ஏராளமான பிரதிநிதிகள் இலங்கைக்கு வரவழைக்கப்பட்டு, நாட்டிற்கு கணிசமான வெளிநாட்டு வருமானத்தை ஈட்டித்தரும்.

 

 

எவ்வாறாயினும், கொழும்பு நகர எல்லைக்குள் போக்குவரத்து விளக்குகளில் யாசகர்களின் அச்சுறுத்தல் காரணமாக SMMT சர்வதேச வாகன உச்சி மாநாட்டை இலங்கையில் நடத்த முடியாது என ருவாண்டாவில் நடைபெற்ற வருடாந்த பொதுக் கூட்டத்தில் பெறப்பட்ட செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் நற்பெயருக்குக் களங்கம்

மேலும், நகர எல்லைக்குள் யாசகம் பெறுபவர்களுக்கு உதவித் தொகை வழங்குவது நமது நாட்டின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தும் என்றும் தெரிவித்தனர்.

யாசகர்களால் இலங்கைக்கு வந்த சோதனை! பெரும் வாய்ப்பை இழந்த சோகம் | Intl Summit Avoids Sri Lanka Due To Beggar

எனவே, 2025 ஆம் ஆண்டில் குறிப்பிடத்தக்க வாகனத் தொழிற்துறை கூட்டத்தை இலங்கை நடத்த விரும்பினால், கொழும்பில் இந்த நிலைமையை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு அவர்கள் எங்களை வலியுறுத்தினர்.

ஏப்ரல் 2023 இல், திட்டங்கள் வகுக்கப்பட்டன, மேலும் சிக்கலைச் சமாளிக்க ஒரு மூலோபாயக் குழு நிறுவப்பட்டது.

 

 

இறுதியில், நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை நடைமுறைபடுத்த தீர்மானிக்கப்பட்டது.

மேலும் கொழும்பு நகர எல்லைக்குள் போக்குவரத்து விளக்குகளில் யாசகம் பெறுபவர்களுக்கு எந்த உதவியும் வழங்க வேண்டாம் என்று மக்களை வலியுறுத்தியுள்ளார்.

https://tamilwin.com/article/intl-summit-avoids-sri-lanka-due-to-beggar-1714443745

இலங்கையில் ரணில் அரசியல் அதிசயத்தை நிகழ்த்தியுள்ளார் - எரிக்சொல்ஹெய்ம்

2 weeks ago

Published By: RAJEEBAN   30 APR, 2024 | 01:02 PM

image

இலங்கையில் ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க அரசியல் அதிசயத்தை நிகழ்த்தியுள்ளார் என நோர்வேயின் இலங்கைக்கான முன்னாள் சமாதான தூதுவர் எரிக்சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்..

நெருக்கடியின் போது அச்சமடைந்து ஓடாதவர் என்ற தனது சமூக ஊடக பதிவில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

18 மாதங்களிற்கு முன்னர் நாடு முன்னொருபோதும் இல்லாத மிக மோசமான நெருக்கடி நிலையில் சிக்குண்டிருந்தது என அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்ச்சியாக மின்சார துண்டிப்பு காணப்பட்டது, எரிபொருளிற்காக நீண்ட வரிசைகள் காணப்பட்டன - பணவீக்கம் மிகவேகமாக அதிகரித்துக்கொண்டிருந்தது. அனேக வர்த்தகங்கள் வீழ்ச்சியடையும் நிலையில் காணப்பட்டன என தெரிவித்துள்ள அவர் மக்கள் ஜனாதிபதியை வீழ்த்தினார்கள் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் தற்போது ஸ்திரதன்மை மீண்டும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. பணவீக்கம் மிகவும் குறைவாக காணப்படுகின்றது. மின்துண்டிப்பும், எரிபொருளுக்கான வரிசைகளும் கடந்தகால விடயங்களாகிவிட்டன எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பல இலங்கையர்களிற்கு இன்னமும் வாழ்க்கை கடினமாக உள்ளது. பல பொருளாதார வலிகள் காணப்படுகின்றன, ஆனால் இலங்கை  தற்போது எதிர்காலத்தை நோக்கி சிந்திக்கலாம் எனவும் எரிக்சொல்ஹெய்ம் பதிவிட்டுள்ளார்.

நெருக்கடி தாக்கியவேளை தப்பியோடாதவர் ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க எனவும் குறிப்பிட்டுள்ள எரிக்சொல்ஹெய்ம் இலங்கையில் எனது நீண்டகால நண்பர்கள் ரணில் விக்கிரமசிங்க அவரது மனைவி மைத்திரியுடன் சுவையான இரவு உணவை உண்டது மிகவும் சிறப்பான விடயம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

https://www.virakesari.lk/article/182317

யாழில் ஆரம்பமான புதிய கட்சி!

2 weeks ago

யாழில் ஆரம்பமான புதிய கட்சி!
1629990814.jpg

இனியபாரதி.

ஐக்கிய மக்கள் கட்சி எனும் புதிய கட்சி யாழ்ப்பாணத்தில் இன்றுமுதல் ஆரம்பித்து வைக்கபடுவதாக அந்த கட்சியின் உபதலைவர் அப்பையா இராஜவேந்தன் தெரிவித்துள்ளார்.

யாழ். ஊடக அமையத்தில் நேற்று திங்கட்கிழமை(29) ஊடக  சந்திப்பு ஏற்பாடு செய்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்;
புலம்பெயர் தேசத்தில் வசிக்கும் புலேந்திரன் உதயகுமார் என்பவரை தலைவராக கொண்டு கடந்த 2021ஆம் ஆண்டு முதல்  நாம் வெகுஜன அமைப்பாக செயற்பட்டு வருகின்றோம் .

கல்வி ,வாழ்வாதாரம், போரால் பாதிக்கப்பட்டோர் என பல தரப்பட்ட சேவைகளை நாம் செயற்படுத்தி வருகின்றோம். அதனடிப்படையில் இன்று முதல் எமது சேவைகளை ஐக்கிய மக்கள் கட்சி என்ற பெயரில் தொடர்ந்து முன்னெடுக்கவுள்ளோம்.

எமது மக்களுக்கு தேவையான அனைத்து விடயங்களையும் இலங்கையின் அரசியல் அபைப்பிற்குட்பட்டு செயற்படுத்த  இருக்கின்றோம். 

தற்பொழுது எமக்கு தேர்தல் நோக்கமில்லை. இருந்தாலும் இது குறித்து தேர்தல் காலத்திலேயே இறுதி முடிவினை எடுப்போம். .இன, மத, மொழி வேறுபாடின்றி பலதரபட்ட மக்களிற்காகவும் இணைந்து செயற்படவுள்ளோம்.

தமிழ் இனம்சார்ந்த பிரச்சினைகளுக்காக பல கட்சிகளும் குரல் கொடுத்து கெண்டிருக்கின்ற நிலையில் அந்த கட்சிகளின் கண்ணுக்கு புலப்படாத பொதுமக்களை  அடையாளம் கண்டு அவர்களுக்கு சேவையாற்றுவது எமது நோக்கமாகும் என அவர் தெரிவித்தார். (ச)
 

 

https://newuthayan.com/article/யாழில்_ஆரம்பமான_புதிய_கட்சி!

உடலியல் ரீதியான தண்டனையை முடிவுக்குக்கொண்டுவருவதற்கான சர்வதேச தினம் இன்று

2 weeks 1 day ago

Published By: DIGITAL DESK 3   30 APR, 2024 | 08:45 AM

image

(நா.தனுஜா)

உடலியல் ரீதியான தண்டனையை முடிவுக்குக்கொண்டுவருவதற்கான சர்வதேச தினம் இன்றாகும். உலகளாவிய ரீதியில் வருடாந்தம் 1.3 பில்லியன் சிறுவர்கள் உடலியல் ரீதியான தண்டனைகளால் பல்வேறு விதங்களிலும் பாதிப்புக்களுக்கு உள்ளாவதாக தரவுகள் கூறுகின்றன. இலங்கையில் பாடசாலைகளில் மாணவர்களுக்கு உடலியல் ரீதியான தண்டனைகள் வழங்கப்படுவதை முடிவுக்குக்கொண்டுவருவதற்குரிய நடவடிக்கைகள் அவ்வப்போது முன்னெடுக்கப்பட்ட போதிலும், அவை எதிர்பார்க்கப்பட்ட பலனைத் தரவில்லை. 

எனவே இலங்கையில், குறிப்பாக பாடசாலைகளில் உடலியல் ரீதியான தண்டனைகள் வழங்கப்படும் போக்கை முற்றாக முடிவுக்குக்கொண்டுவரும் நோக்கில் வைத்திய கலாநிதி துஷ் விக்ரமநாயக்கவின் தலைமையில் இயங்கிவரும் சிறுவர்களுக்கு எதிரான துன்புறுத்தல்களை முடிவுக்குக்கொண்டுவருவதற்கான நிதியமும் (Stop Child Cruelty Trust) அவரது ஒருங்கிணைப்பில் இயங்கும் சிறுவர் பாதுகாப்பு கூட்டமைப்பும் (Child Protection Alliance) இணைந்து, பல்வேறு துறைகளிலும் பிரபலமான மேலும் 19 பேரை இணைத்துக்கொண்டு 'நோ குட்டி 2.0' (NoGuti 2.0 - சிங்கள சொற்பதமான இது தமிழில் 'அடி வேண்டாம்' எனும் அர்த்தத்தை வழங்கும்) எனும் சமூகவலைத்தள பிரசாரமொன்றை இம்மாதம் முதலாம் திகதியிலிருந்து இன்று (30) வரையான 30 நாட்களுக்கு முன்னெடுத்துவருகின்றன. இப்பிரசாரமானது ஏற்கனவே கடந்த 2022 ஆம் ஆண்டு 'நோ குட்டி' (NoGuti) எனும் பெயரில் சமூகவலைத்தளங்களிலும், அதற்கு அப்பாலும் முன்னெடுக்கப்பட்டிருந்தது. 

உடலியல் ரீதியான தண்டனை வழங்கலை முற்றாகத் தடைசெய்யும் விதமாக முன்மொழியப்பட்டுள்ள தண்டனைச்சட்டக்கோவைத் திருத்தத்தை நடைமுறைப்படுத்துமாறு அரசாங்கத்துக்கு அழுத்தம் பிரயோகிப்பதே இப்பிரசாரத்தின் பிரதான நோக்கமாகும்.

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையினால் கடந்த 2017 ஆம் ஆண்டு பாடசாலைகளில் வழங்கப்படும் தண்டனைகள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் 80 சதவீத மாணவர்கள் உடலியல் ரீதியான தணடனைகளுக்கு உள்ளாவதாகவும், 53 சதவீத மாணவர்கள் உடலியல் சார்ந்த மீறல்களுக்கு உட்படுவதாகவும், 72.5 சதவீத மாணவர்கள் உளவியல் ரீதியான பாதிப்புக்களுக்கு உள்ளாவதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. இவ்வாறானதொரு பின்னணியில் இத்தகைய தண்டனைகளை முடிவுக்குக்கொண்டுவருவதை இலக்காகக்கொண்டு தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையினால் முன்மொழியப்பட்ட 18 பரிந்துரைகளில் தற்போதுவரை ஒன்றுகூட நடைமுறைப்படுத்தப்படவில்லை எனவும், இது சிறுவர்களின் உடல் மற்றும் உளவியல் சுகாதாரத்தில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றது எனவும் சிறுவர்நல செயற்பாட்டாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

ஒரு பிள்ளையை சரியாக நெறிப்படுத்தவேண்டிய சந்தர்ப்பங்களில் அதற்கென பல நேர்மறையான அணுகுமுறைகள் உள்ளபோது, அப்பிள்ளையின் உடல், உள நலனில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய எதிர்மறையான அணுகுமுறைகளைக் கையாளவேண்டியதன் அவசியம் என்ன எனவும் அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். 

https://www.virakesari.lk/article/182281

விகாராதிபதியினால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமது விவசாயக் காணிகளை பெற்றுத்தருமாறு விவசாயிகள் கோரிக்கை

2 weeks 1 day ago

Published By: DIGITAL DESK 7    30 APR, 2024 | 08:40 AM

image

குச்சவெளி – திரியாய் கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட ஆத்திக்காட்டுவெளி பகுதியில் உள்ள தமிழ் மக்களின் பாரம்பரிய விவசாயக் காணிகளில் பௌத்த பிக்கு ஒருவர் விவசாயம் மேற்கொண்டு வருவதாகவும் இதனால் தமது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவற்றை தமது வாழ்வாதாரத்திற்காக மீட்டுத் தருமாறு விவசாயிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.

ஆத்திக்காடு பகுதியில் உள்ள 88 ஏக்கர் காணி பானாமுரே திலகவங்ச நாயக்க தேரர் என்ற பௌத்த பிக்கு ஒருவரின் பெயரில் தற்காலிக இடாப்பு பதிவு மேற்கொள்ளப்பட்டு கிட்டத்தட்ட 3 வருடங்களாக சிறுபோக நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், இதற்காக அரசாங்கத்திடம் இருந்து 20 சிங்கள மக்களின் பெயரில் மானியப் பசளை பெற்று வருவதாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

1984 ஆம் ஆண்டுக்கு முன்னர் பல வருட காலமாக பரம்பரை பரம்பரையாக குறித்த காணிகளில் குச்சவெளி மக்கள் விவசாயத்தில் ஈடுபட்டு வந்ததாகவும், யுத்த நிலைமையின் காரணமாக இடம்பெயர்ந்து சென்று மீண்டும் திரும்பும்போது குறித்த பகுதியில் இருந்த உறுதி மற்றும் பேமிட் காணிகள் அடங்கலாக பெருமளவான விவசாயக் காணிகள் வன வள பாதுகாப்புத் திணைக்களத்தினால் கையகப்படுத்தப்பட்டிருந்ததாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர். 

இந்நிலையில் 2021 ஆம் ஆண்டு காலப்பகுதியில் 88 ஏக்கர் மற்றும் அதற்கு மேற்பட்ட காணிகள் அப்பகுதியில் உள்ள சப்தநாக பப்பத வன செனசுன விகாரைக்கரியது என குறிப்பிட்டு ஆக்கிரமிக்கப்பட்டு புத்த பிக்கு ஒருவரின் தலைமையின்கீழ் விவசாயம் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கின்றனர்.

2018 ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்டுள்ள சப்தநாக பப்பத வன செனசுன விகாரைக்காக 2020.10.02 வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலில்  பூஜா கிராண்ட் மூலம் 20.2343 ஹெக்டேயர் காணி 2020.05.26ஆம் திகதியில் இருந்து 30 வருடகால குத்தகைக்கு கொடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இக்காணிக்குள் மக்களுடைய உறுதிக் காணிகளும் உள்டங்குவதாக பிரதேச செயலகத்தினால் சட்டமா அதிபரிடம் ஆலோசனை கோரி கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிய வருகின்றது.

https://www.virakesari.lk/article/182280

யாழில் 7 ஆயிரம் அரச காணித்துண்டுகள் மக்களுக்கு பகிர்ந்தளிப்பு - மாகாண காணி ஆணையாளர்

2 weeks 1 day ago
30 APR, 2024 | 09:48 AM
image

யாழ்ப்பாண மாவட்டத்தில் இதுவரையிலான கால பகுதியில் 7 ஆயிரம் அரச காணி துண்டுகள், காணி அற்றவர்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளதாக மாகாண காணி ஆணையாளர் அம்பலவாணர் சோதிநாதன் தெரிவித்துள்ளார். 

மாகாண காணி ஆணையாளர் அலுவலகத்தில் திங்கட்கிழமை (29) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்தார். 

யாழ்.மாவட்டத்தில் 05 வீதத்திற்கும் உட்பட்டதாகவே அரச காணிகள் காணபப்டுகின்றன. சாவகச்சேரி, மருதங்கேணி, கோப்பாய் மற்றும் தெல்லிப்பழை ஆகிய பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் அரச காணிகள் உள்ளன. 

யாழ்.நகரை அண்டிய பகுதிகளில் காணிகள் விஸ்தீரணம் கொண்டதாக இல்லை என தெரிவித்தார். 

அதேவேளை முதலீட்டு நடவடிக்கைகளுக்காக அரச காணிகளை வழங்க தொடர்ந்து நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும், முதலீட்டுக்கு ஏற்ற காணிகளை பிரதேச செயலகங்கள் ஊடாக இனம் கண்டு அவற்றை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என மேலும் தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/182288

சனிக்கிழமையன்று இலங்கை வருகிறார் ஜப்பான் வெளிவிவகார அமைச்சர்

2 weeks 1 day ago

Published By: VISHNU   29 APR, 2024 | 08:44 PM

image

(நா.தனுஜா)

ஜப்பான் வெளிவிவகார அமைச்சர் யொகோ கமிகவா இருநாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு எதிர்வரும் 4 ஆம் திகதி இலங்கைக்கு வருகைதரவிருப்பதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

நாட்டில் 4 - 5 ஆம் திகதிவரை தங்கியிருப்பதற்கு உத்தேசித்துள்ள அவர், இதன்போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் பிரதமர் தினேஷ் குணவர்தன ஆகியோரை மரியாதை நிமித்தம் சந்திக்கவுள்ளார்.

அதனைத் தொடர்ந்து ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் யொகோ கமிகவா தலைமையிலான குழுவினர் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியுடன் இருதரப்பு கலந்துரையாடல்களில் ஈடுபடவுள்ளனர்.

இதன்போது இலங்கையின் பொருளாதார மீட்சிக்கான உதவிகள், கடன்மறுசீரமைப்பு செயன்முறையில் ஜப்பானின் ஒத்துழைப்பு, இருதரப்பு நல்லுறவை மேலும் வலுப்படுத்தல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் விரிவாக ஆராயப்படுமென எதிர்பார்க்கப்படுகின்றது.

https://www.virakesari.lk/article/182266

போதைப்பொருள் குற்றவாளிகள் சார்பில் ஆஜராகும் சட்டத்தரணிகளை வெளிப்படுத்தும் பிரசாரம் ஆரம்பம் - டிரான் அலஸ்

2 weeks 1 day ago

Published By: VISHNU   29 APR, 2024 | 06:24 PM

image

(நா.தனுஜா)

'யுக்திய' செயற்திட்டத்துக்கு எதிராக, போதைப்பொருள் கடத்தல்காரர்கள் சார்பில் ஆஜராகும் சட்டத்தரணிகள் தொடர்பில் வெளிப்படுத்தும் விசேட பிரசாரமொன்று செவ்வாய்க்கிழமையிலிருந்து (30) ஆரம்பமாகவிருப்பதாகவும், எத்தகைய உயிரச்சுறுத்தல்கள் ஏற்படினும் போதைப்பொருள் கடத்தல்காரர்கள் மற்றும் பாதாள உலகக் குற்றவாளிகளை ஒழிக்கும் நடவடிக்கையை முன்னெடுத்துச்செல்வதில் அமைச்சர் டிரான் அலஸ் உறுதியாக இருப்பதாகவும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

போதைப்பொருள் கடத்தல்காரர்கள், குற்றவாளிகள், பாதாள உலக செயற்பாடுகளில் ஈடுபடும் கொலைகாரர்களைக் கொல்வது பாவம் அல்ல என கடந்த வாரம் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸினால் வெளியிடப்பட்ட கருத்தையடுத்து, அவர் பதவி விலகவேண்டும் எனவும், அன்றேல் அவரைப் பதவியிலிருந்து நீக்குவதற்கு ஜனாதிபதி நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் சட்டத்தரணிகள் சங்கத்தினால் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தற்போது வெளிநாடு சென்றிருக்கும் நிலையில், இத்தீர்மானம் தொடர்பில் கருத்து வெளியிட்டிருக்கும் அமைச்சர் டிரான் அலஸின் நிர்வாகக்குழு உயரதிகாரி ஒருவர், பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சருக்கும், சில சட்டத்தரணிகளுக்கும் இடையில் கடந்த சில மாதங்களாக பெரும் கருத்து முரண்பாடு தோற்றம் பெற்றிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

பிரபல சட்டத்தரணிகள் பலர் போதைப்பொருள் கடத்தல்காரர்கள் சார்பில் ஆஜராகி, பல மில்லியன் ரூபாயைப் பெற்றிருப்பதாக கடந்த ஆண்டு செப்டெம்பர் 18 ஆம் திகதி பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸினால் வெளியிடப்பட்ட கருத்தே இந்த முரண்பாட்டுக்கான அடிப்படைக் காரணமாக அமைந்திருப்பதாகவும் அவ்வதிகாரி சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்தோடு 'யுக்திய' செயற்திட்டத்துக்கு எதிராக, போதைப்பொருள் கடத்தல்காரர்கள் சார்பில் ஆஜராகும் சட்டத்தரணிகள் தொடர்பில் வெளிப்படுத்தும் விசேட பிரசாரமொன்று இன்றைய தினத்திலிருந்து ஆரம்பமாகவிருப்பதாகக் குறிப்பிட்டுள்ள அவர், எத்தகைய உயிரச்சுறுத்தல்கள் ஏற்படினும் போதைப்பொருள் கடத்தல்காரர்கள் மற்றும் பாதாள உலகக் குற்றவாளிகிளை ஒழிக்கும் நடவடிக்கையை முன்னெடுத்துச்செல்வதில் அமைச்சர் டிரான் அலஸ் உறுதியாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/182269

Checked
Wed, 05/15/2024 - 05:43
ஊர்ப் புதினம் Latest Topics
Subscribe to ஊர்ப்புதினம் feed
texte-feed
sqdgvsqfqsg vdgvdgvv qdsbrzbvzrbvzr