ஊர்ப்புதினம்

இந்தியாவுடன் இணைந்து யாழ் சர்வதேச விமான நிலையம்  அபிவிருத்தி

1 week 1 day ago

இந்தியாவுடன் இணைந்து யாழ் சர்வதேச விமான நிலையம்  அபிவிருத்தி
adminMay 6, 2024
jaffna-international-airport.jpg

இந்தியாவுடன் இணைந்து யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தை   அபிவிருத்தி செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக துறைமுகங்கள், கப்பல்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.

யாழ்  சர்வதேச விமான நிலையத்தை அபிவிருத்தி செய்வதற்காக முதலீட்டாளர்களிடமிருந்து  கோரப்பட்டிருந்த முன்மொழிவுகளுக்கமைய  ஒரேயொரு முன்மொழிவு மாத்திரமே கிடைக்கப்பெற்றதன்  காரணமாக இவ்வாறு   தீர்மானிக்கப்பட்டுள்ளதாக  அமைச்சின் செயலாளர் கே.டி.எஸ். ருவன்சந்திர குறிப்பிட்டுள்ளார்.

 

https://globaltamilnews.net/2024/202491/

நாடளாவிய ரீதியில் கிராம சேவையாளர்கள் பணிப்பகிஷ்கரிப்பு - மக்கள் அவதி

1 week 1 day ago
06 MAY, 2024 | 12:19 PM
image

வவுனியா

வவுனியாவில் கிராம சேவையாளர்கள் இன்று திங்கட்கிழமை (06) பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

நாடளாவிய ரீதியில் கிராம சேவையாளர்களினால் முன்னெடுக்கப்பட்டு வரும் இரண்டு நாள் சுகயீன விடுமுறை வேலை நிறுத்தத்துக்கு ஆதரவு தெரிவித்து வவுனியாவில் கிராம சேவையாளர்கள் பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதன் காரணமாக பொதுமக்கள் தங்கள் சேவையினை பெற்றுக்கொள்வதில் மிகுந்த சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.

இந்த பணிப்பகிஷ்கரிப்பானது சம்பள அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

download__1_.jpg

download.jpg

தம்பலகாமம்

நாடளாவிய ரீதியில் கிராம உத்தியோகத்தர்களின் சுகயீன விடுமுறையை வலியுறுத்தி தம்பலகாமம் பிரதேச செயலக கிராம உத்தியோத்தர்களும் இன்று (06) பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். 

இதனால் பிரதேச செயலகத்தின் பொது மக்கள் தினமான இன்றைய தினம் சேவைகளை பெற செயலகத்தை நாடும் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் வீடு திரும்புகின்றனர்.

நாடளாவிய ரீதியில் கிராம உத்தியோத்தர்கள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளதன் அடிப்படையில், சேவைகள் இடம்பெறாமல் பூட்டப்பட்டுக் கிடக்கும் தம்பலகாமம் பிரதேச செயலகத்துக்கு கிராம உத்தியோகத்தர்களை சந்தித்து சேவைகளைப் பெற தூர பிரதேசங்களில் இருந்து வருகை தரும் மக்கள் பெரும் ஏமாற்றத்துடன் வீடு திரும்புவதை காணக்கூடியதாக உள்ளது. 

download__2_.jpg

https://www.virakesari.lk/article/182790

இந்தியாவில் கைதாகி விடுதலையான 5 மீனவர்களையும் நாட்டுக்கு அழைத்து வருவதில் எவரும் அக்கறை கொள்ளவில்லை - என்.எம்.ஆலம்

1 week 1 day ago
06 MAY, 2024 | 01:40 PM
image

ந்திய கடற்பரப்பில் நுழைந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு தற்போது விடுவிக்கப்பட்டுள்ள 5 மீனவர்களையும் நாட்டுக்கு அழைத்துவர கடற்றொழில் அமைச்சர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் இதுவரை எவ்வித முனைப்பும் காட்டவில்லை என  வட மாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் செயலாளர் என்.எம்.ஆலம் குற்றம் சுமத்தியுள்ளார்.

இன்று திங்கட்கிழமை (6) காலை மன்னாரில் உள்ள அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

இந்திய கடற்பரப்பில் நுழைந்த நிலையில் கைது செய்யப்பட்டு தற்போது விடுவிக்கப்பட்டுள்ள 5 மீனவர்களின் நிலை தொடர்பாக இந்த ஊடக சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் 30ஆம் திகதி தலைமன்னாரில் இருந்து கடற்றொழிலுக்கு சென்ற 05 மீனவர்கள் தமிழக கடலோரக் காவல் படையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு, வழக்கு விசாரணைகள் இடம்பெற்றுவந்த நிலையில் கடந்த 2 வாரங்களுக்கு முன்னர் அவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

எவ்வித குற்றச்சாட்டுக்களும் சுமத்தப்படாத நிலையில் அவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். மீன்பிடியில் ஈடுபட்டபோது கடலில் ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக அவர்களின் படகு அங்கு ஒதுங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த மீனவர்கள் 5 பேரும் கைது செய்யப்பட்ட காலம் முதல் அவர்கள் விடுவிக்கப்பட்ட காலம் வரை சுமார் 6 மாதங்கள் அவர்கள் தொடர்பான எவ்வித நடவடிக்கைகளையும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கடற்றொழில் அமைச்சர் எவரும் எடுக்கவில்லை.

தமிழக மீனவர் ஒருவர் இலங்கையில் கைது செய்யப்பட்டிருந்தால் அல்லது பாதிக்கப்பட்டிருந்தால் தமிழகத்தில் இடம்பெறுகின்ற போராட்டங்களும், தமிழக அரசு மற்றும் அங்குள்ள இந்திய துணை தூதரகங்கள் முனைப்புடன் செயற்படுகின்றன. ஆனால், எமது மீனவர்களுக்கு இவ்வாறான நிலை ஏற்படுகின்றபோது இங்குள்ள அரசியல் பிரதிநிதிகளால் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை.

இந்த 5 மீனவர்களும் விடுவிக்கப்பட்டு இன்று இந்தியாவில் உள்ள எம்மோர் என அழைக்கப்படும் புத்த கோவில் பகுதியில்   இலங்கை துணைத் தூதரகத்தினால் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

ஆனால் அவர்களை இலங்கைக்கு அழைத்து வரும் நடவடிக்கைகளை இதுவரை முன்னெடுக்கப்படவில்லை. இவர்களில் மூவர் திருமணம் செய்தவர்கள்; இருவர் திருமணம் செய்யாதவர்கள். அவர்களின் குடும்பங்கள் இங்கு பல்வேறு பொருளாதார நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்து வருகின்றன.

அவர்களின் குடும்பத்தினரை சந்தித்து அவர்களின் தற்போதைய நிலையை எவரும் கேட்டறிந்ததாக தெரியவில்லை. வட பகுதியில் உள்ள ஒவ்வொரு மீனவரின் நிலையும் இவ்வாறே அமைந்துள்ளது.

யாருமே அவர்கள் மீது அக்கறை செலுத்துவதில்லை. எனவே தற்போது அங்குள்ள மீனவர்களின் நிலையை கருத்தில் கொண்டு, கடற்றொழில் அமைச்சர் மற்றும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் துரித நடவடிக்கையை எடுத்து, 5 பேரையும் உடனடியாக நாட்டுக்கு அழைத்து வர நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றார். 

https://www.virakesari.lk/article/182802

ஈழவேந்தன் என்று தன்னை அழைத்த தமிழ்த் தேசியவாதி

1 week 1 day ago

image

 

லங்கைத் தீவில் நீதீயையும் சமத்துவத்தையும் அடைவதற்காக தமிழர்கள் நடத்தி நீண்ட போராட்டம் மனக்கிளர்ச்சியைத் தருகின்ற சர்ச்சைக்குரிய  பல ஆளுமைகளை முன்னரங்கத்துக்கு கொண்டுவந்திருக்கிறது. அவர்களில் ஒருவர் ஈழவேந்தன் என்று தனக்கு புனைபெயரை வைத்துக்கொண்ட தமிழ்த் தேசியவாத அரசியல் செயற்பாட்டாளர் மா.க. கனகேந்திரன். 

தமிழ் அரசியலில் ஏழு தசாப்தங்களுக்கும் அதிகமான காலமாக தன்னை ஈடுபடுத்திக்கொண்ட அவர் இலங்கை பாராளுமன்றத்தில் 2004 ஆம் ஆண்டு தொடக்கம் 2007 ஆம் ஆண்டுவரை உறுப்பினராகவும் அங்கம் வகித்தார். 90 வயதைக் கடந்த அவர் 28 ஏப்ரில் 2024 கனடாவின் ரொறண்டோ நகரில் காலமானார். அவரது மறைவு குறித்த செய்திக்கு இலங்கை தமிழ்ப் பத்திரிகைகள் பரந்தளவில் முக்கியத்துவத்தை கொடுத்தன. சில பத்திரிகைகள் ஆசிரிய தலையங்கத்தையும் தீட்டியிருந்தன.

மாணிக்கவாசகர் கனகசபாபதி கனகேந்திரன் என்ற முழுப்பெயரைக் கொண்ட ஈழவேந்தன் 14 செப்டெப்பர் 1932 யாழ்ப்பாணத்தில் பிறந்தார். அவரின் தந்தையார் கனகசபாபதி ரயில்வே திணைக்களத்தில் ஒரு ரயில் நிலைய அதிபராக பணியாற்றினார். தாயார் பெயர் சிவயோகம். 

யாழ்ப்பாணத்தில் கொழும்புத்துறையைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் அந்த குடும்பம் நல்லூரிலேயே வசித்துவந்தது. கனகேந்திரன் யாழ்ப்பாணம் சென்.ஜோன்ஸ் கல்லூரியிலும் கொழும்பு வெஸ்லி கல்லூரியிலும் கல்வி பயின்றார். தமிழிலும் ஆங்கிலத்திலும் புலமைமிகுந்தவரான அவர் இலங்கை மத்திய வங்கியில் ஒரு மொழிபெயர்ப்பாளராக இணைந்து பிறகு தமிழ் மொழிபெயர்ப்பு பிரிவின் தலைவராக 1980 ஆம் ஆண்டு சேவையில் இருந்து ஓய்வுபெற்றார்.

பதினகவை வயதிலேயே அரசியலால் கவரப்பட்ட கனகேந்திரன் 1952 ஆம் ஆண்டு இலங்கை தமிழரசு கட்சியில் இணைந்தார்.  தீவிர பற்றுக்கொண்ட தமிழ்த் தேசியவாதியாக மாறிய அவர் தனிச்சிங்களச் சடடம் கொண்டுவரப்பட்ட பிறகு தீவிரமான அரசியல் செயற்பாட்டாளராக மாறினார். தமிழரசு கட்சியின் ' சுதந்திரன் ' பத்திரிகையில் ஈழவேந்தன் என்ற புனைபெயரில் அரசியல் கட்டுரைகளை எழுதத்தொடங்கிய அவர் ஈழவேந்தன் என்ற பெயரிலேயே அரசியல் கூட்டங்களிலும் உரையாற்றினார்.

ஈழம் என்பது இலங்கைத் தீவின் புராதன தமிழ்ப்பெயர். சங்க இலக்கியங்களிலும் இலங்கை ஈழம் என்று  குறிப்பிடப்பட்டது. சுதந்திரத்துக்கு முந்திய வருடங்களிலும் சுதந்திரத்துக்கு பின்னரான ஆரம்ப வருடங்களிலும் 'ஈழம் ' என்ற பதத்துக்கு பிரிவினைவாத கற்பிதம் எதுவும் கிடையாது. அது இலங்கையின் புராதன பெயர் மாத்திரமே.

பின்னரான காலப் பகுதியில்தான் சுதந்திர தமிழ் அரசு ஒன்றுக்கான பெயராக ஈழம் என்பது அரசியல் விவாதங்களில் பிரவேசித்தது. தமிழ்த் தேசிய தீவிரவாத இயக்கங்கள் தமிழ் ஈழம் என்றும் இடதுசாரிப் போக்குடைய இயக்கங்கள் ஈழம் என்றும் அழைத்தன. உருவகிக்கப்பட்ட தமிழ்ப் பிரிவினைவாத அரசு வடக்கு மாகாணத்தையும் கிழக்கு மாகாணத்தையும் உள்ளடக்கியதாகும்.

அதனால் கனகேந்திரன் தனக்கு ஈழவேந்தன் என்று புனைபெயரை வைத்துக்கொண்டபோது  அவர் ஈழம் அல்லது தமிழ் ஈழம் என்ற தனிநாட்டை விரும்பிய பிரிவினைவாதியாக இருக்கவில்லை. ஆனால், அவர் ஒரு ஈழம்வாதி என்ற காரணத்தினாலேயே ஈழவேந்தனாக புனைபெயரை வைத்துக்கொண்டார் என்று ஆட்கள் தவறாக எண்ணினார்கள். 

ஈழவேந்தன் என்ற பெயரை ஏன் தெரிவுசெய்தீர்கள் என்று ஒரு தடவை நான் அவரைக் கேட்டேன். என்ன புனைபெயரை வைக்கலாம் என்று யோசித்துக்கொண்டிருந்தபோது  ஈழம் என்பது செம்மையான தமிழ்ப் பெயராக இருந்ததால் அதை தெரிவுசெய்ததாக அவர் பதிலளித்தார். தமிழ்க்கவிஞர் பாரதிதாசன் 'பாவேந்தன்'  என்று அழைக்கப்பட்டார். அதில் இருந்தே வேந்தன் என்ற பெயரை வைக்கும் சிந்தனை உருவானது. 

காலப்போக்கில் கனகேந்திரனை ஈழவேந்தன் கிரகணம் செய்துவிட்டார். எம்.கே. ஈழவேந்தன் என்று அவர் அழைக்கப்பட்டாலும் அவர் உத்தியோகபூர்வமாக அவர் அவ்வாறு பெயரை மாற்றவில்லை. ஈழவேந்தன் படிப்படியாக தமிழ் அரசியலில் பிரபல்யமான ஒருவராக வளர்ச்சி கண்டார். சிறந்த பேச்சாளரான அவர் பல்வேறு மூலங்களில் இருந்து மேற்கோள்களை எடுத்துக்கூறி சபையோரை பரவசப் படுத்தக்கூடியவர். வரலாற்று தகவல்களை தன்னகத்தே வைத்திருக்கும் ஒரு புதையலாக விளங்கிய அவர் விரல் நுனியில் பெருவாரியான புள்ளிவிபரங்களை வைத்திருந்தார்.

ஈழவேந்தனின் உரைகள் கேட்பதற்கு மிகவும் சுவாரஸ்யமானவையாகவும் இருக்கும். தமிழ்ப் பேரறிஞரும் கத்தோலிக்க பாதிரியாருமான வணபிதா சேவியர் தனிநாயகம் அடிகளார் தனது தமிழ் உரைகளை  திருமூலரின் திருமந்திரத்தில் இருந்து ஒரு மேற்கோளைக் கூறிக்கொண்டே தொடங்குவார். 'என்னை நன்றாய் இறைவன் படைத்தனன், தன்னை நன்றாய் தமிழ் செய்யுமாறே' என்பதே அந்த வரியாகும். 

ஈழவேந்தனும் வரியைக் கூறியவாறே தனது பேச்சுக்களை ஆரம்பிப்பார். உண்மையில் அது அவரின் தனித்துவமான அடையாளமாக இருக்கும். பிற்காலத்தில் அவரது உரைகள் 'ஈழம் வெல்லும், அதை காலம் சொல்லும் ' என்ற வரிகளுடன் முடித்துவைப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.

கூட்டணியின் கொழும்புக்கிளை

இருபதாம் நூற்றாண்டின்  எழுபதுகளின் நடுப்பகுதியிலும் பிற்பகுதியிலும் கொழும்பில் ஈழவேந்தனுடன் நெருக்கமாக ஊடாடினேன். நான் உறுப்பினராக இருந்த தமிழர் ஐக்கிய விடுதலை கூட்டணியின் கொழும்புக்கிளையின் தலைவராக ஈழவேந்தன் செயற்பட்டார். அதன் செயலாளராக இருந்த நில அளவையாளர் கே. உமாமகேஸ்வரன் பிறகு  'புளொட் ' என்று அழைக்கப்படும் தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தின் தலைவராக வந்தார்.

அந்த நாட்களில் தமிழரசு கட்சி / தமிழர் ஐக்கிய விடுதலை கூட்டணியின் கொழும்புக்கிளை கொள்ளுப்பிட்டி அல்பிரட் ஹவுஸ் கார்டினில் 14 ஆம் இலக்கத்தில் உள்ள தமிழரசு கட்சியின் தலைவர் எஸ்.ஜே.வி. செல்வநாயகத்தின் வாசஸ்தலத்தில் புதன்கிழமைகளில் மாலை வேளைகளில்  அதன் வாராந்தக் கூட்டத்தை நடத்துவது வழமை. பிறகு அந்த கூடடங்கள் பம்பலப்பிட்டி ரோறிஸ் வீதியில்  51 ஆம் இலக்கத்தில் அமைந்திருந்த முன்னாள் வட்டுக்கோட்டை பாராளுமன்ற உறுப்பினர் ரி. திருநாவுக்கரசுவுக்கு சொந்தமான ஒரு  வீட்டில் நடைபெற்றது. இந்தியாவில் சென்னையிலும் ஈழவேந்தனை பல சந்தர்ப்பங்களில் நான் சந்தித்திருந்தேன்.

ஆனால், 2009ஆம் ஆண்டில் இருந்து அவர் கனடாவில் வசித்துவந்த போதிலும், நாம் ஒருவரை ஒருவர் ஒருபோதும் சந்தித்ததில்லை. 2007 ஆம் ஆண்டில் ஈழவேந்தன் முதன்தடவையாக கனடாவுக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டு வந்தபோது தமிழ் வானொலி ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் என்னைப் பெரிதும் புகழ்ந்து பேசினார். தொப்பிக்கல / குடும்பிமலை பற்றி நான் எழுதிய கட்டுரை குறித்து குறிப்பிட்டபோது அவர் ' எங்கடை ஜெயராஜ் ' என்று அன்புடன் கூறினார்.

என்னுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு இருவரும் சந்தி்க்கவேண்டும் என்றும் அதற்கு ஏற்பாடு செய்யவேண்டும் என்றும் கேட்டிருந்தார். ஆனால் சிறிது நேரத்தில்  மீண்டும் தொலைபேசியில் வந்த அவர் என்னைச் சந்திக்கவேண்டாம் என்று தனக்கு ஆலோசனை கூறப்பட்டதாகத் தெரிவித்தார். உண்மையில் எவரோ ஒருவரோ அல்லது பலரோ அவரது மனதைக் குழப்பிவிட்டார்கள். ' எனக்கு விளங்குகிறது' என்று நான் பதிலளித்தேன். அவ்வளவுதான்.

தான்தோன்றித்தனம் 

அரசியலில் ஈழவேந்தன் தான்தோன்றித்தனமான ஒரு தீவிர போக்குடையவராக விளங்கினார். அவ்வப்போது தனது  அரசியல் நிறத்தை மாற்றிக்கொண்டாலும் தமிழ் இலட்சியத்தின் மீதான அவரின் மெய்யான  நம்பிக்கையும் அர்ப்பணிப்பும் நிலையானவையாக இருந்தன. இளைஞராக இருந்தபோது ஒரு சமஷ்டிவாதியாக விளங்கிய ஈழவேந்தன் அவரது வாழ்வின் பிற்காலத்தில் ஒரு பிரிவினைவாதியாக மாறினார். தமிழர் ஐக்கிய விடுதலை கூட்டணி  1976 ஆம் ஆண்டில் தமிழ் ஈழத்தைக் கோருவதற்கு முன்னதாகவே அவர் அதற்காகக் குரல்கொடுப்பவராக இருந்தார்.

ஈழவேந்தனின் அரசியல் கோட்பாடு அவர் எழுதிய 'தமிழ்மண் காப்போம்,தாயகம் மீட்போம் ' என்ற தலைப்பிலான சிறிய நூலில் சுருக்கமாக விளக்கப்பட்டிருக்கிறது. இலங்கையில் வரலாற்று ரீதியாக தமிழரின் வாழ்விடங்கள் எவ்வாறு திட்டமிட்ட முறையில் சிங்களமயப்படுத்தப்பட்டன என்பதையும் அதைத் தடுக்க வடமாகாணத்தையும் கிழக்கு மாகாணத்தையும் உள்ளடக்கிய தனித்தமிழ் நாடு ஒன்று உருவாக்கப்படவேண்டியதன் அவசியத்தையும் பற்றியதே அந்த நூல். அதில் உள்ளடங்கியிருந்த மறுதலிக்கமுடியாத பெருவாரியான புள்ளிவிபரங்களை அந்த நாட்களில் தமிழ் இளைஞர்கள் மிகுந்த பற்றார்வத்தோடு கிரகித்துக் கொண்டார்கள்.

1965ஆம் ஆண்டில் பிரதமர் டட்லி சேனநாயக்க தலைமையிலான தேசிய அரசாங்கத்தில் தமிழரசு கட்சி இணைந்தபோது அதை விரும்பாத தீவிரபோக்குடைய இளைஞர் குழுவில் ஈழவேந்தனும் ஒருவர். இந்த அதிருப்தியாளர்கள் 'தமிழ்த்தாய் மன்றம் ' என்ற இயக்கம் ஒன்றை ஆரம்பித்தார்கள்.  தமிழரசு கட்சியின் தலைமைத்துவம் மீது நெருக்குதலைப் பிரயோகிக்கும் ஒரு குழுவாக அது செயற்பட்டது.

தமிழர் சுயாட்சி கழகம் 

1968 ஆம் ஆண்டு அன்றைய ஊர்காவற்துறை பாராளுமன்ற உறுப்பினர் வி. நவரத்தினம் தமிழரசு கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டபோது அதற்குள் ஒரு பிளவு ஏற்பட்டது. தமிழரசு கட்சியின் 'தங்கமூளை ' என்று முன்னர் வர்ணிக்கப்பட்ட நவரத்தினம் தமிழர் சுயாட்சி கழகம் எ்ற பெயரில் புதிய கட்சியை அமைத்தார். தனியான தமிழ் அரசு ஒன்றே அதன் கோரிக்கையாக இருந்தது. தமிழரசு கட்சியில் இருந்து வெளியேறிய ஈழவேந்தன் புதிய கட்சியில் இணைந்துகொண்டார். அந்த கட்சியின் 'விடுதலை ' என்ற பத்திரிகையில் அவர் கிரமமாக கட்டுரைகளை எழுதினார்.

புதிய கட்சியின் தேர்தல் பிரசாரங்களில் ஈழவேந்தன் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டார். தமிழரசு கட்சியின் தலைவர் செல்வநாயகம் மற்றும் அமிர்தலிங்கம் போன்ற இளம் தலைவர்களை ஈழவேந்தன் ஆவேசமாக தாக்கிப் பேசினார். அவர்தான் முதன்முதலில் செல்வநாயகத்தை 'காற்சட்டைக் காந்தி ' என்று ஏளனமாக வர்ணித்தவர். அந்த நாட்களில் செல்வநாயகத்தை அவரது சீடர்கள் 'ஈழத்துக்காந்தி ' என்று மதித்துப் போற்றினார்கள். இந்தியாவின் மகாத்மா காந்தியின் அகிம்சைக் கொள்கையை செல்வநாயகம் பின்பற்றியதே அதற்கு காரணம். 

நவரத்தினம் தலைமையிலான தமிழர் சுயாட்சி கழகம்  1970 பொதுத்தேர்தலில் வடக்கில் பல தொகுதிகளில் போட்டியிட்டது. ஆனால் ஒரு தொகுதியில் கூட வெற்றிபெறவில்லை. நவரத்தினத்தினால் தானும் அவரது செல்வாக்கு மிகுந்த ஊர்காவற்துறை தெ்குதியில் வெற்றிபெற முடியவில்லை. சிறிமா பண்டாரநாயக்க தலைமையிலான புதிய ஐக்கிய முன்னணி அரசாங்கம் புதிய அரசியலமைப்பைக் கொண்டுவந்தது. அந்த அரசியலமைப்பு தமிழர்களின் நியாயபூர்வமான அரசியல் அபிலாசைகளை நிறைவேற்றவும் தமிழர்களின் மனக்குறைகளை தீர்க்கவும்தவறியது.

அதன் விளைவாக தமிழர்கள் மத்தியில் பெரியளவில் அரசியல் ஐக்கியத்தை ஏற்படுத்துவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டன. தமிழரசு கட்சி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் போன்ற பிரதான தமிழ்க்கட்சிகள் 1972 ஆம் ஆண்டில் ஒன்றிணைந்து தமிழர் விடுதலை கூட்டணியை அமைத்தன. 1976 ஆம் ஆண்டில் தமிழர் விடுதலை கூட்டணி தமிழர் ஐக்கிய விடுதலை கூட்டணியாக மாறி தமிழ் ஈழக்கோரிக்கை தொடர்பிலான தீர்மானத்தை நிறைவேற்றியது. தமிழர் விடுதலை கூட்டணியிலோ அல்லது தமிழர் ஐக்கிய விடுதலை கூட்டணியிலோ இணைந்து கொள்வதற்கு நவரத்தினம் மறுத்தார். அந்த நேரத்தில் தமிழர்களின் ஐக்கியமே முக்கியமானது என்று உணர்ந்த ஈழவேந்தன் போன்றவர்கள் நவரத்தினத்தின் நிலைப்பாட்டை விரும்பவில்லை. ஈழவேந்தன் தமிழரசு கட்சியில் மீண்டும் சேர்ந்து தமிழர் ஐக்கிய விடுதலை கூட்டணியிலும் சேர்ந்துகொண்டார்.

1977 ஜூலை பொதுத்தேர்தலில் தமிழர் ஐக்கிய விடுதலை கூட்டணி மகத்தான வெற்றிபெற்றது. வடக்கிலும் கிழக்கிலும் தமிழர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட 19 தொகுதிகளில் ஒன்றைத் தவிர ஏனையவற்தை கூட்டணி கைப்பற்றியது. நாட்டும்பிரிவினையை முன்னிறுத்தி தேர்தலில் போட்டியிட்ட கூட்டணி அந்த வெற்றியை தமிழ் ஈழத்துக்கான ஆணை என்று வியாக்கியானம் செய்தது. தேர்தல் பிரசாரங்களில் தீவிரமாக ஈடுபட்ட ஈழவேந்தன் பேருவகை அடைந்தார்.

1977 ஜூலை வன்செயல் 

பொதுத்தேர்தலுக்கு பிறகு சில தினங்களில் 1977 ஆகஸ்ட் வன்செயல் மூண்டது. அதில் ஈழவேந்தன் கடுமையாகப் பாதிக்கப்பட்டார். மத்திய வங்கியில் சில சிற்றூழியர்களால் அவர் தாக்கப்பட்டபோது அவரது ஏனைய சிரேஷ்ட சகாக்கள் காப்பாற்றினர். நுகேகொடையில் இருந்த ஈழவேந்தனின் வீடும் வன்முறைக் கும்பலினால் தாக்கப்பட்டது. குடும்பத்தினர் அதிர்ஷ்டவசமாக தப்பினர். ஆனால் ஈழவேந்தனின் நூல்கள், செய்திப்பத்திரிகை கத்தரிப்புகள் மற்றும் முக்கியமான அரசியல் ஆவணங்கள் உட்பட அவர்களது பெரும்பாலான உடைமைகள் தீக்கிரையாகின. ஈழவேந்தனும் குடும்பத்தினரும் கொழும்பு பம்பலப்பிட்டி சரஸ்வதி மண்டப அகதிமுகாமில் தஞ்சமடைந்தனர்.

18  ஆசனங்களைக் கைப்பற்றிய தமிழய் ஐக்கிய விடுதலை கூட்டணி பாராளுமன்றத்தில் இரண்டாவது பெரிய கட்சியாக விளங்கியது. அப்பாபிள்ளை அமிர்தலிங்கம் எதிர்க்கட்சி தலைவரானார். தமிழ் ஈழத்துக்கு மாற்றாக உருப்படியான திட்டம் ஒன்றை பரிசீலிக்கத் தயாராக இருப்பதாக தமிழர் ஐக்கிய விடுதலை கூட்டணியின் தலைவர் கூறினார்.அன்றைய ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தன 1979 ஆம் ஆண்டில் அதிகாரப்பரவலாக்கம் தொடர்பில் ஆணைக்குழு ஒன்றை நியமித்தார். ஆணைக்குழு அறிக்கை ஒன்றை வெளியிட்டது. ஆனால் அதில் தமிழர் ஐக்கிய விடுதலை கூட்டணியின் பிரதிநிதியாக இருந்த கலாநிதி நீலன் திருச்செல்வம் அதிருப்தி அறிக்கை ஒன்றைச் சமர்ப்பித்தார்.

தமிழ் ஈழ விடுதலை முன்னணி

அதிகாரப் பரவலாக்கல் அலகுகளாக 1980 ஆம் ஆண்டில் மாவட்ட சபைகள் அமைக்கப்பட்டன. அந்த திட்டத்துடன் ஒத்துச் செயற்பட்டு தமிழ் ஈழத்தக்கான ஒரு ஒப்பேறக்கூடிய மாற்றாக அது அமையுமா என்று முயற்சித்துப்பார்க்க அமிர்தலிங்கம் விரும்பினார்.ஆனால் அது ஒரு துரோகத்தனமான செயல் என்று தமிழர் ஐக்கிய விடுதலை கூட்டணிக்குள் ஒரு பலம்வாய்ந்த பிரிவினர் மாவட்டசபை திட்டத்தை கடுமையாக எதிர்த்தார்கள். அவர்களில் முக்கியமானவர் ஈழவேந்தன்.

இந்த அதிருப்தியாளர்கள் பிரிந்துசென்று தமிழர் ஐக்கிய விடுதலை கூட்டணிக்கு எதிராக தமிழ் ஈழ விடுதலை முன்னணியை அமைத்தனர்.  யாழ்ப்பாணம் தொகுதியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரனின் தந்தைவழி மாமனாரான டாக்டர் எஸ். ஏ. தர்மலிங்கம் அந்த புதிய முன்னணியின் தலைவர்..செயலாளர்  ஈழவேந்தன். செல்வநாயகத்தின் மகன் எஸ்.சி. சந்திரகாசன் முன்னணிக்கு ஆதரவை வழங்கினார். 

மாவட்ட அபிவிருத்தி சபைக்கு எதிராக விட்டுக்கொடுப்புக்கு இடமில்லாத நிலைப்பாட்டை கடைப்பிடித்த தமிழ் ஈழ விடுதலை முன்னணி,  தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியைப் பொறுத்தவரை ஒரு முள்ளாகவே இருந்தது. சந்திரகாசனுக்கு சொந்தமானதாக இருந்த சுதந்திரன் பத்திரிகையின் ஆதரவும்  முன்னணிக்கு கிடைத்தது. அதன் ஆசிரியராக கோவை மகேசன் இருந்தார். 

அதேவேளை, தனது முனைப்புமிக்க தமிழ் தீவிரவாத நிலைப்பாட்டின் காரணமாக ஈழவேந்தன் பிரச்சினைக்குள்ளானார்.இந்தியாவின் அலகாபாத்தில் 1979 ஆம் ஆண்டில்  நடைபெற்ற உலக இந்து மகாநாட்டில் உரையாற்றிய அவர் இலங்கையில் இந்து தமிழர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் அறிக்கையொன்றைச் சமர்ப்பித்தார். அவர் கொழும்பு திரும்பியதும் சர்வதேச மகாநாடொன்றில் பங்கேற்பதற்கு முன்னனுமதியைப் பெறத்தவறியமைக்காக மத்திய வங்கியினால் பணியில் இருந்து இடைநிறுத்தம் செய்யப்பட்டார்.

அதற்கு பிறகு புதிதாக அப்போது நிறைவேற்றப்பட்டிருந்த பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்ட ஈழவேந்தன் யாழ்ப்பாண கோட்டையில் தடுத்து வைக்கப்பட்டார். நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டபோது அவருக்காக தமிழர் ஐக்கிய விடுதலை கூட்டணியின் அன்றைய தலைவர் எம். சிவசிதம்பரம் முன்னிலையானார். சிவசிதம்பரத்தின் சட்டத்திறமை காரணமாக ஈழவேந்தன் வழக்கில் இருந்து விடுதலையானார். மீண்டும் பதவியில் அமர்த்தப்பட்ட போதிலும் ஈழவேந்தன் 1980 ஆண்டு  மத்திய வங்கி பணியில் இருந்து ஓய்வுபெறத் தீர்மானித்தார்.

தடுத்துநிறுத்த முடியாத  அவர் அப்போது சுதந்திரப் பறவையாக இந்தியாவுக்கு சென்று தமிழ் ஈழ இலட்சியத்துக்காக பிரசாரங்களை முன்னெடுத்தார்.1981ஆம் ஆண்டு ஜனவரியில் மதுரையில் நடைபெற்ற  அனைத்துலக தமிழாராய்ச்சி மகாநாடடில் ஈழவேந்தன்  தமிழ்நாடு முதலமைச்சர் எம்.ஜி.இராமச்சந்திரனின் அதிருப்திக்கு ஆளானார்.மகாநாட்டில் கலந்துகொண்ட பிரதிநிதிகள் மத்தியில் ஈழவேந்தன் ஈழ ஆதரவு பிரசுரங்களை விநியோகித்ததால் ஆத்திரமடைந்த எம்.ஜி.ஆர். அவரை மகாநாட்டு அரங்கில் இருந்து வெளியேற்ற நடவடிக்கை எடுத்தார். நியூயோர்க்கில்  1982 ஆம் ஆண்டில் நடைபெற்ற தமிழ் ஈழ மகாநாட்டிலும் ஈழவேந்தன் பங்கேற்றார்.

தமிழர்களுக்கு எதிராக 1983 ஜூலையில் கட்டவிழ்த்துவிடப்பட்ட வன்செயல்களுக்கு பிறகு ஈழவேந்தன் குடும்பத்தினருடன் தமிழ்நாட்டில் நிரந்தரமாக குடியேறி அரசியல் தஞ்சம் கோரினார். சந்திரகாசன் தலைமையிலான அகதிகள் அமைப்பு ஒன்றில் பணியாற்றிய அதேவேளை ஈழவேந்தன் தமிழ் ஈழ விடுதலை முன்னணியின் செயற்பாடுகளையும் முன்னெடுத்தார். செலாவாக்குமிக்க பிரமுகர்களைச் சந்தித்து அவர் தமிழ் ஈழ இலட்சியத்தை பிரசாரப்படுத்தினார்.

தோளில் துணிப்பை ஒன்றை தொங்கவிட்ட வண்ணம் காணப்படும் அந்த குள்ளமான உருவம் தமிழ்நாட்டின் பத்திரிகைகள்,சஞ்சிகைகளின் அலுவலகங்களில் பரிச்சயமான ஒருவராக விளங்கினார். இலங்கையில் தமிழர் தொடர்பான நிகழ்வுகள் பற்றிய கூடுதல் தகவல்களைப் பெறுவதற்காக இந்திய செய்தியாளர்கள் அவரை அடிக்கடி சந்தித்தனர். அதனால் அவர்  அவர்களின் நன்மதிப்புக்குரியவரானார். வரலாற்று ரீதியான நிகழ்வுகள் குறித்தும் ஈழவேந்தனிடம் அவர்கள் நிறையவே கேட்டறிந்தனர். சென்னை தமிழ் செய்திப்பத்திரிகை ஒன்றின் செய்தி ஆசிரியர் ஈழவேந்தனை ஒரு தடவை இலங்கை தமிழர் விவகாரங்களில் ' நடமாடும் கலைக்களஞ்சியம் ' என்று வர்ணித்தார்.

தமிழ்நாட்டில் அந்த நேரத்தில் ஊடகங்கள் தமிழர் ஐக்கிய விடுதலை கூட்டணிக்கு  நிகராக தமிழ் ஈழ விடுதலை முன்னணியின் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தன. தமிழர் ஐக்கிய விடுதலை கூட்டணியின் பத்திரிகை அறிக்கைகளுக்கு கொடுத்த அதே  முக்கியத்துவத்தை தமிழ் ஈழ விடுதலை முன்னணியின் அறிக்கைகளுக்கும் பத்திரிகைகள் கொடுத்தன. தங்களிடமிருந்து பிரிந்துசென்ற தமிழ் ஈழ விடுதலை முன்னணிக்கு  தமிழர் ஐக்கிய விடுதலை கூட்டணிக்கு நிகரான முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது குறித்து அமிர்தலிங்கம் அதிருப்தியடைந்தார்.

முக்கியமான இந்திய ஆங்கில பத்திரிகையொன்றின் ஆசிரியரிடம் இது பற்றி நான் கேட்டேன். " இந்த ஆள் ஈழவேந்தன் தனது பத்திரிகை அறிக்கையுடன் எனது அலுவலகத்துக்கு வந்து மணித்தியாலக் கணக்காக காத்திருப்பார். தமிழ் ஈழ விடுதலை முன்னணியின் அறிக்கையை பிரசுரம் செய்ய இணங்குவதே அவரை அங்கிருந்து போகச் செய்வதற்கு ஒரே வழி " என்று அவர் பதிலளித்தார்.

இந்த நிலமை இலங்கையில் இந்திய இராணுவத்துக்கும் விடுதலை புலிகளுக்கும் இடையில் போர் மூண்ட பிறகு மாறிவிட்டது. 1991 ஆம் ஆண்டில் ராஜீவ் காந்தி கொலைக்கு பிறகு இலங்கைத் தமிழர்களைப் பொறுத்தவரை இந்தியாவில் நிலைமை மோசமடைந்தது. விடுதலை புலிகள் இயக்கம் தடைசெய்யப்பட்டது. பெரிதாக வெளியில் தலைகாட்டாத போக்கை கடைப்பிடிக்க ஆரம்பித்த போதிலும், தமிழ்நாட்டின் பத்திரிகைகளுடன் ஈழவேந்தன் தொடர்புகளை தொடர்ந்தும் பேணி தகவல்களை வெளிப்படுத்தினார்.

ஈழவேந்தன் முதலில் முதலில் விடுதலை புலிகளின் ஒரு ஆதரவாளர் அல்ல. ஆனால் காலப்போக்கில் அவர் அந்த இயக்கத்தின்  அனுதாபியானார். அவர்  நெடுமாறன், கோபாலசாமி (வைகோ ) போன்ற நன்கு பிரபல்யமான விடுதலை புலிகளின் ஆதரவாளர்களுடன் நெருக்கமாகப் பழகத் தொடங்கினார்.

தமிழ்நாட்டில் கைது

இலங்கையில் விடுதலை புலிகளுக்கு அனுப்புவதற்காக மருந்துவகைகளை பெறுவதற்கு சதிமுயற்சியில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டு ஈழவேந்தனும் வேறு நால்வரும் 1997 பெப்ரவரியில் தமிழ்நாடு பொலிசாரால் கைதுசெய்யப்பட்டனர். ஒரு குறிப்பிட்ட காலம் சிறைவைக்கப்பட்ட பிறகு அவர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டனர். ஆனால் நீண்ட வழக்கு விசாரணைக்கு பிறகு 1999  ஆகஸடில் நீதிமன்றம் அவர்களை நிரபராதிகள் என்று விடுதலை செய்தது.

இலங்கைக்கு நாடுகடத்தல் 

 1998 ஆம் ஆண்டில் பிரதமர்  அடல் பிஹாரி வாஜ்பாய் தலைமையில் பாரதிய ஜனதா அரசாங்கம் அமைந்த பிறகு வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்ட நிலையில் ஈழவேந்தன் விடுதலை புலிகளை ஆதரிப்பதில் மேலும் தீவிரம் காட்டத் தொடங்கினார்.2000 டிசம்பரில் சென்னை அரும்பாக்கத்தில் கைதுசெய்ப்பட்ட அவர் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டார். அதற்கு பரந்தளவில் எதிர்ப்பு கிளம்பியபோதிலும் இந்திய அதிகாரிகள் தளரவில்லை. அதற்கு பிறகு ஈழவேந்தன் இலங்கையில் வாழ்ந்து வரலானார்.

  2002 ஆண்டில் நோர்வேயின் அனுசரணையுடன் போர்நிறுத்தம் செய்யப்பட்டு சமாதான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டதையடுத்து ஈழவேந்தன் வெளிப்படையாக தன்னை விடுதலை புலிகளுக்கு ஆதரவைத் தெரிவிக்கத் தொடங்கினார். விடுதலை புலிகளுக்கு ஆதரவாக  அறிக்கைகளை வெளியிட்ட அவர் அடிக்கடி வன்னிக்கு சென்று பிரபாகரன் உட்பட அந்த இயக்கத்தின் தலைவர்களை சந்தித்துவந்தார்.

  தேசியப்பட்டியல் எம்.பி.

  இதன் விளைவாக 2004 ஆம் ஆண்டில் ஈழவேந்தனுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவி கிடைத்தது. அந்த பொதுத்தேர்தலில் விடுதலை புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த தமிழ் தேசிய கூட்டமைப்பு 20 ஆசனங்களை கைப்பற்றியதுடன் இரு தேசியப்பட்டியல் ஆசனங்களும் கிடைத்தன. 22 பாராளுமன்ற உறுப்பினர்களை கொண்டிருந்தபோதிலும்,  விடுதலை புலிகளின் பொம்மைகள் என்று கருதப்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு நம்பகத்தன்மை இருக்கவில்லை. பயனுறுதியுடைய முறையில் செயற்படவுமில்லை. அதன் பாராளுமன்ற உறுப்பினர்கள் சபைக்குள் அரசியல் சாகசங்களில் ஈடுபட்டார்கள். ஒரு தடவை அவர்கள் பாராளுமன்றத்திற்குள் ஒரு போலி மரணச்சடங்கையும் நடத்திக்காட்டினர். அதில் ஈழவேந்தன் பிணமாக நடிக்க ஏனைய உறுப்பினர்கள் அவரை தூக்கிச்சென்றார்கள்.

 பாராளுமன்ற உறுப்பினராக இருந்தபோதிலும் ஈழவேந்தனை புதுடில்லி தொடர்ந்தும் அனுமதிக்கமுடியாத ஒருவராகவே நடத்தியது. பிராந்திய ஒத்துழைப்புக்கான தெற்காசிய சங்கத்தின் (சார்க்) உறுப்பு நாடுகளின் பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்தியா செல்வதற்கு விசா தேவையில்லை என்பதால் ஈழவேந்தன் தனது இராஜதந்திரக் கடவுச்சீட்டைப் பயன்படுத்தி சென்னை மீனம்பாக்கம் விமானநிலையத்துக்கு விமானத்தில் சென்று இறங்கினார். ஆனால் விமானநிலையத்தில் இருந்து வெளியேறுவதற்கு அவர் அனுமதிக்கப்படாமல் கொழும்புக்கு விமானத்தில் திருப்பியனுப்பப்பட்டார்.

  அவரின் பாராளுமன்ற வாழ்வும்  நீண்டகாலம் நிலைக்கவில்லை. 2007 ஆம் ஆண்டில் நீண்ட விஜயம் ஒன்றை மேற்கொண்டு  ஈழவேந்தன் கனடாவுக்கு சென்றார். திரும்பிவருமாறு விடுதலை புலிகள் கேட்டபோதிலும் அவர் தனது வருகையை தாமதித்தார்.அதனால் ஆத்திரமடைந்த விடுதலை புலிகளின் புலனாய்வுப்பிரிவு தலைவர் பொட்டு அம்மான் அவரை பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து வெளியேற்ற ஒரு சதித்திட்டத்தை தீட்டினார். பாராளுமன்ற கூட்டங்களில் கலந்துகொள்ளாமல் இருப்பதற்காக அவர் எடுத்த லீவு தமிழ் தேசிய கூட்டமைப்பின் சகபாடி உறுப்பினர்களினால் புதுப்பிக்கப்படவில்லை.

 2007 நவம்பரில் அவர் கொழும்பு திரும்பியபோது அதிர்ச்சி காத்திருந்தது. லீவு அனுமதி பெறாமல் தொடர்ச்சியாக மூன்று மாதங்களுக்கு பாராளுமன்ற அமர்வுகளில் பங்கேற்காததால் அவரின் பதவி பறிபோனது. வன்னிக்கு சென்று அவர்  வேண்டுகோள் விடுத்தபோதிலும் பயன் கிடைக்கவில்லை.  அவரின் இடத்துக்கு ஒரு முஸ்லிம் சட்டதனதரணியான இமாம் நியமிக்கப்பட்டார்.

 தென்னாபிரிக்காவில் உண்ணாவிரதம்

ஈழவேந்தனை 2007  கீழ்த்தரமாக  நடத்திய விடுதலை புலிகள் 2009 ஜனவரியில் வன்னிக்குள் இராணுவம் விரைவாக  முன்னேறத் தொடங்கியதும் அவரது உதவியை நாடினர்.வெளிநாட்டுக்கு சென்று போர்நிறுத்தம் ஒன்றைக் கொண்டு வருவதற்கு அவரால் இயன்றதைச் செய்யுமாறு விடுதலை புலிகள் கேட்டனர். தென்னாபிரிக்காவுக்கு சென்ற ஈழவேந்தன் இலங்கையில் போர்நிறுத்தம் கோரி சாகும்வரை  உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டார். ஆனால் அந்த பே்ராட்டம்  ஒன்பது நாட்களில் முடிவுக்கு வந்தது.2009 மே மாதத்தில் விடுதலை புலிகள் இராணுவரீதியாக தோற்கடிக்கப்பட்டனர். அமெரிக்காவுக்கு  சென்ற ஈழவேந்தன் அங்கிருந்து கனடாவுக்கு போனார்.

2009 ஆகஸ்டில் கனடாவில் ஈழவேந்தன் அரசியல் தஞ்சம் கோரானார். பல தடவைகள் விண்ணப்பம் செய்தபோதிலும் தஞ்சக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. ஆனாலும் மனிதாபிமான அடிப்படையில் ஒட்டாவா அரசாங்கம் இலங்கைக்கு திருப்பியனுப்பவில்லை என்பதால் தொடர்ந்து அவர் கனடாவில் தங்கியிருக்கக்கூடியதாக இருந்தது. 

 கனடாவில் அவர் பெருமளவு அரசியல் மற்றும் கலாசார செயற்பாடுகளில் பங்குபற்றினார். நியூயோர்க்கில் வசிக்கும்  சட்டத்தரணி விஸ்வநாதன் ருத்ரகுமாரனை "பிரதமராகக் " கொண்ட  நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஒரு பாராளுமன்ற உறுப்பினராக ஈழவேந்தன் 2010  மே மாதத்தில் தெரிவு செய்யப்பட்டார். அதனால்  நாடுகடந்த தமிழ் ஈழ அரசாங்கத்தை எதிர்க்கும் கனடாவில் உள்ள புலிகள் ஆதரவு பிரிவுகளிடமிருந்து அவர் தனிமைப்படவேண்டிவந்தது.

 2022 செப்டெம்பரில் ஈழவேந்தனின் 90 வது  பிறந்தநாள் பெரும் எடுப்பில் கொண்டாடப்பட்டது. அண்மைக்காலமாக அவரின் உடலாரோக்கியம் குன்றத்தொடங்கியதை அடுத்து  சில வாரங்களுக்கு முன்னர் ரொறண்டோவில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.  

ரொறண்டோ வைத்தியசாலை படுக்கையில் ஈழவேந்தனின் உயிர் கடந்த மாதம்  24 ஆம் திகதி பிரிந்தது. மே 4 இறுதிச்சடங்கு நடைபெற்றது.  அவரத மனைவி அருளாம்பிகை, மகள்மார் யாழினி,எழிலினி மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.

 

https://www.virakesari.lk/article/182806

மருத்துவ உபகரணங்களுக்கு தட்டுப்பாடு

1 week 2 days ago

நீரிழிவு, புற்றுநோய், இருதய நோய்கள் உள்ளிட்ட பல நோய்களுக்கு தேவையான மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களுக்கு, தட்டுப்பாடு காணப்படுவதாக அரச மருந்தாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

 

இதனால் நோயாளர்கள் பல பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளதாக அரச மருந்தாளர்கள் சங்கத்தின் தலைவர் துஷார ரணதேவ தெரிவித்துள்ளார்.

வைத்தியசாலைகளில் இதுவரையில் 20 வீதமான மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுதாக சுகாதார அமைச்சின் மருந்து விநியோகப் பிரிவின் பிரதி பணிப்பாளர் நாயகம் விஜேசூரிய தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், அதற்கு மாற்று மருத்துகள் நாட்டில் உள்ளதாகவும் வைத்தியசாலைகளில் அரிதாக தேவைப்படும் 115 வகையான மருந்துகளுக்கு தட்டுபாடுகள் நிலவுவதாகவும், அவற்றை கொள்வனவு செய்வதற்கான நிதி மற்றும் அனுமதிகளை வைத்தியசாலைகளுக்கு பெற்றுக்கொடுத்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

https://athavannews.com/2024/1381171

யாழ்ப்பாணத்துக்கு வந்தார் நடிகர் பாண்டியராஜன்!

1 week 2 days ago
05 MAY, 2024 | 06:14 PM
image
 

தென்னிந்திய நடிகரும் இயக்குநருமான ஆர். பாண்டியராஜன் இன்று (05) யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்தார்.

அவர் யாழ்ப்பாணம் கொழும்புத்துறை இல. 199 சுண்டுக்குழியில் அமைந்துள்ள மண்டபத்தில் நடைபெற்ற சிறப்பு பட்டிமன்றத்தில் கலந்துகொண்டார்.

"மக்களுக்கு சினிமாவும் சீரியலும் வழிகாட்டுகிறதா? வழிமாறுகின்றதா?" என்றொரு தலைப்பிலும் "இன்றைய சூழ்நிலையில் பிறருக்கு உதவி செய்வது ஆபத்தே? ஆனந்தமே?" என்ற தலைப்பிலும் இரு பட்டிமன்றங்கள் நடைபெற்றன.

இந்த பட்டிமன்றத்தினை காண பல இடங்களிலும் இருந்து மக்கள் வருகை தந்தனர். 

இதில் கிருபா சாரதி பயிற்சிசாலை அதிபர் அ.கிருபாகரன், பட்டிமன்ற நடுவர் முனைவர் நெல்லை பி.சுப்பையா, கவிஞர் பிரிய நிலா உள்ளிட்ட பட்டிமன்ற பிரவாத அணிசேர் கலைஞர்கள் பலரும் பங்கெடுத்தனர்.

VideoCapture_20240505-115240.jpg

received_789522346438580.jpeg

received_947136526891680.jpeg

Screenshot_20240505_134220_WhatsApp.jpg

https://www.virakesari.lk/article/182765

வடக்கு, கிழக்கில் கண்ணிவெடி அகற்றுவதற்கு இன்னும் 23 சதுர கிலோ மீற்றர்களே எஞ்சியுள்ளன! - தேசிய கண்ணிவெடி நடவடிக்கை மையத்தின் பணிப்பாளர் தெரிவிப்பு

1 week 2 days ago
05 MAY, 2024 | 01:59 PM
image

வடக்கு, கிழக்கில் கண்ணிவெடி அகற்றுவதற்கு இன்னும் 23 சதுர கிலோமீற்றர்களே எஞ்சியுள்ளன என மனிதாபிமான கண்ணிவெடி ஒழிப்பு தொடர்பான சர்வதேச மாநாட்டில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

அத்தோடு, இலங்கையின் கண்ணிவெடி அகற்றும் செயற்பாடு குறித்தும் இந்த மாநாட்டில் பாராட்டப்பட்டுள்ளது.

இந்த மாநாடு சுவிற்ஸர்லாந்தின் ஜெனீவாவில் உள்ள சர்வதேச மாநாட்டு மையத்தில் (ICCG) கடந்த ஏப்ரல் 29 முதல் மே 1 வரை நடைபெற்றது. 

இந்த மாநாட்டில் 130 நாடுகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். மனிதாபிமான கண்ணிவெடி அகற்றலுக்கான ஜெனீவா சர்வதேச மையம் (GICHD) மற்றும் ஐக்கிய நாடுகளின் கண்ணிவெடி நடவடிக்கைக்கான ஒருங்கிணைந்த ஒருங்கிணைப்புக் குழு ஆகியவற்றால் இந்த மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டது.

04 பிரதான இடைக்கால கலந்துரையாடல்களை உள்ளடக்கிய இந்த மாநாட்டில் இலங்கையின் தலைமையில் ஒரு கலந்துரையாடல் மாநாடு நடைபெற்றதும் விசேடமாகும்.

இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் செயலாளரும் தேசிய கண்ணிவெடி நடவடிக்கை மையத்தின் பணிப்பாளருமான டபிள்யூ.எஸ். சத்யானந்த மற்றும் பிரதிப் பணிப்பாளர் வி. பிரேமச்சந்திரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

மனிதாபிமான கண்ணிவெடி நடவடிக்கைக்கான சர்வதேச மாநாட்டின்படி கண்ணிவெடி அகற்றும் பணியில் ஒவ்வொரு நாடும் அடைந்துள்ள முன்னேற்றம், செயல்முறையை வெற்றிகரமாக நிர்வகிப்பதில் பெற்ற அனுபவம், அறிவு பரிமாற்றம், சவால்கள் மற்றும் எதிர்கால திட்டங்கள் குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டதாக டபிள்யூ.எஸ்.சத்யானந்த தெரிவித்தார்.

கண்ணிவெடி அகற்றும் பணியில் இலங்கை அடைந்துள்ள முன்னேற்றம் குறித்து இங்கு விரிவாக கலந்துரையாடப்பட்டது. 

தற்போது இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் ஒரு சதுர கிலோ மீற்றர் தூரத்தில் 3000க்கும் மேற்பட்ட கண்ணிவெடிகள் அகற்றப்பட்டுள்ளதாகவும், அடுத்த 03 வருடங்களில் இலங்கையை கண்ணிவெடிகள் இல்லாத நாடாக மாற்றுவது அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு எனவும், இன்னும் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் 23 சதுர கிலோமீற்றர் நிலப்பரப்பில் மாத்திரமே கண்ணிவெடிகள் அகற்றப்படவிருக்கிறது எனவும் இந்த மாநாட்டில் சத்யானந்த சுட்டிக்காட்டியுள்ளார்.

மனிதாபிமான கண்ணிவெடி அகற்றலுக்கான ஜெனிவா சர்வதேச மையத்தின் வழிகாட்டுதலின் கீழ் இலங்கையில் கண்ணிவெடி அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. 

இப்பணிகளை இலங்கை இராணுவம் Hallo Trust, MAG, Sharp மற்றும் DASH ஆகிய அமைப்புகளுடன் இணைந்து நடைமுறைப்படுத்தி வருகிறது. 

அமெரிக்கா, பிரித்தானியா, கனடா, ஜப்பான், அவுஸ்திரேலியா, சுவிற்ஸர்லாந்து மற்றும் நோர்வே போன்ற நாடுகள் இதற்கு நிதியுதவி அளித்து வருகின்றன.

வடக்கு, கிழக்கில் கண்ணிவெடிகளை அகற்றி மக்களை மீள்குடியேற்ற இலங்கை எடுத்துவரும் வேலைத்திட்டம் குறித்து மாநாட்டில் கலந்துகொண்ட வெளிநாட்டு பிரதிநிதிகளுக்கு சத்யானந்த தெரிவிக்க இந்த சந்தர்ப்பத்தை தான் பயன்படுத்திக்கொண்டதாகவும் தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/182741

பொருளாதாரச் சிக்கல்கள் காரணமாக தத்துக்கொடுக்கப்படும் குழந்தைகள் எண்ணிக்கை அதிகரிப்பு!

1 week 3 days ago

பொருளாதாரச் சிக்கல்கள் காரணமாக தத்துக்கொடுக்கப்படும் குழந்தைகள் எண்ணிக்கை அதிகரிப்பு!

பொருளாதாரச் சிக்கல்கள் காரணமாக, பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை தத்துக்கொடுக்கப்படும் சந்தர்ப்பங்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது !

ஒரு வருடத்தில் சராசரியாக சுமார் 1700 குழந்தைகள் த தத்துக்கொடுக்கப்படுவதாக பதிவாளர் திணைக்களத்தின் சிரேஷ்ட பிரதிப் பதிவாளர் நாயகம் (சிவில் பதிவுகள்) திருமதி லக்ஷிகா கணேபொல தெரிவித்துள்ளார்.

கணிசமான எண்ணிக்கையிலான குழந்தைகள் வெளிநாட்டவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. பெற்றோர்கள் குழந்தைகளை வேறு நபர்களிடம் கொடுக்கும் போது, அது குறித்த தகவலை பதிவாளர் துறைக்கு தெரிவிக்க வேண்டும்.
பொருளாதாரச் சிக்கல்கள், திருமணத்துக்குப் புறம்பான உறவுகள் போன்ற சமூகப் பிரச்சனைகளே குழந்தைகளை பிறரிடம் தத்து கொடுப்பது அதிகரித்து வருவதற்கு முக்கிய காரணம் என சமூகவியலாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

மேலும் நாட்டில் கருக்கலைப்புச் சம்பவங்கள் கணிசமாக அதிகரித்துள்ளதாகவும் பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
 

https://thinakkural.lk/article/300915

போகம்பர சிறைச்சாலை ஹோட்டலாக மாறுகிறது !

1 week 3 days ago

போகம்பர சிறைச்சாலை ஹோட்டலாக மாறுகிறது !
ShanaMay 5, 2024
 
Bogambara-Prison%20(1).jpg

 

போகம்பர சிறைச்சாலையை ஹோட்டல் வளாகமாக மாற்ற தனியார் முதலீட்டாளர் முன்வந்திருக்கிறார். இதன் பழமையைப் பாதுகாத்து அபிவிருத்தித் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

போகம்பர சிறைச்சாலை 2014ஆம் ஆண்டு நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு அபிவிருத்திப் பணிகளுக்காக ஒதுக்கப்பட்டது.

மேலும், அந்த அதிகார சபையின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் பெரிய கண்டி அபிவிருத்தித் திட்டம் மற்றும் கண்டி நகர அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் இது மீள் அபிவிருத்தி செய்யப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.

சிறைச்சாலையின் பிரதான கட்டடம் காலனித்துவ கட்டடக்கலையை பாதுகாத்து அபிவிருத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளதோடு, பொது மக்களுக்கு திறந்த மற்றும் பொழுதுபோக்கு வசதிகளுடன் வளாகத்தின் பொருளாதார மதிப்பை அதிகரிப்பதே இந்த திட்டத்தின் நோக்கம் என்று நகர அபிவிருத்தி அதிகார சபையின் மத்திய மாகாண பணிப்பாளர் இ.எம்.எஸ்.பி. ஏகநாயக்க தெரிவித்தார்.

தற்போதும் சிறைச்சுவர் மற்றும் பிரதான கட்டடம் தவிர மற்ற பகுதிகளின் அபிவிருத்திக்குத் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. சிறைச்சாலை வைத்தியசாலை கட்டடத்தின் சீரமைப்பு பணிகள் நிறைவடைந்துள்ளன.

2018ஆம் ஆண்டு வரை நகர அபிவிருத்தி அதிகார சபையானது சிறைச்சாலையின் முன்பகுதியை நன்கு பாதுகாக்கப்பட்ட பழைய கட்டடத்துடன் கூடிய பூங்காவாக உருவாக்கியுள்ளது.

சிறைச்சாலையின் பிரதான வர்த்தகத் தொகுதி, உணவுக்கூடம், அருங்காட்சியகம் மற்றும் சுற்றுலா ஹோட்டல் உள்ளிட்ட வர்த்தகக் கட்டடமாக அபிவிருத்தி செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளது.

போகம்பர சிறைச்சாலை வளாகத்தின் கட்டடக்கலை மற்றும் வரலாற்று விழுமியங்களைப் பாதுகாத்து, அபிவிருத்தி செய்யப்படவுள்ளதாக பணிப்பாளர் தெரிவித்தார்.

இதற்காக நகர அபிவிருத்தி அதிகார சபையும் இலங்கை முதலீட்டு சபையும் இணைந்து தனியார் முதலீட்டாளர் ஒருவரை தெரிவு செய்துள்ளன. இது தவிர முதலீட்டாளர் தெரிவு செய்யப்பட்டு மதிப்பீடுகள் தயாரிக்கும் பணி தற்போது நடைபெற்று வருவதாகவும் பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.

போகம்பர சிறைச்சாலை 138 வருடங்களாக செயற்பட்டு வந்துள்ளது. 2014ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் திகதி மூடப்பட்டு அதன் செயற்பாடுகள் பல்லேகலையில் உள்ள புதிய சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டது.

போகம்பர சிறைச்சாலை தற்போது பொதுமக்களின் பார்வைக்காக மட்டுமே திறக்கப்பட்டுள்ளது.

போகம்பர சிறைச்சாலை கட்டப்படுவதற்கு முன்னர், இலங்கை பிரித்தானியர்களின் காலனியாக மாறிய பின்னர், தற்போதைய கண்டி மத்திய சந்தைக்கு முன்னால் அமைந்துள்ள ஹெங்மேன்ஸ் ஹில் (Hangmans Hill) என்ற மலைப்பாதையில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

1876ஆம் ஆண்டு ஆங்கிலேயர்களால் போகம்பறை ஏரியை நிரப்பி சட்டத்தை அமுல்படுத்தும் நோக்கத்தில் இந்த சிறைச்சாலை கட்டப்பட்டது.

அரசாங்க திணைக்களத்தின் மூலம் அப்போது சிறைச்சாலை மற்றும் காவல் துறையின் பிரதான ஆணையாளராக இருந்த என்.ஆர். சோண்டர்ஸின் மேற்பார்வையில் இருந்தது. இந்த சிறைச்சாலை 92 கைதிகளின் உழைப்பில் 4 இலட்சம் ரூபாய் நிதியில் கட்டப்பட்டுள்ளது.

இந்த நாட்டில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட இரண்டு சிறைச்சாலைகளில் போகம்பறர சிறைச்சாலையும் ஒன்று. பரப்பளவு மற்றும் பாதுகாப்பில் இலங்கையின் இரண்டாவது இடத்தில் இருக்கும் போகம்பர சிறைச்சாலையில் ஒரே நேரத்தில் மூவர் தூக்கிலிடப்பட்டிருக்கலாம். 13 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்து கிடக்கும் இங்கிலாந்து எடிம்பரோ ராணி விக்டோரியாவின் கிரீடத்தின் வடிவில், பிரான்சின் பரிஸ் பஸ்டில் கோட்டையைப் போன்றே கட்டப்பட்டது. இது 556 அடி நீளமும், 144 அடி அகலமும், 102 அடி உயரமும் கொண்டது.

இது 408 கைதிகளுக்குப் போதுமான 1080 கன அடி (10×12×9) கொண்ட 328 அறைகளைக் கொண்டுள்ளது.

போகம்பர சிறைச்சாலை ஒரு கட்டடக்கலை அடையாளமாகும். இது ஆசியாவிலேயே மிக நீளமான கட்டடமாகும். இங்கு 1876 முதல் 1975 வரை 524 குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

1975ஆம் ஆண்டு நவம்பர் 21 மற்றும் 22 ஆகிய இரு தினங்களில் நாட்டையே உலுக்கிய முப்பதாவது கொலைக் குற்றவாளிகளான டபிள்யூ.ஜி.ரிச்சர்ட் மற்றும் டி.எம்.ஜயவர்தன ஆகிய இரு குற்றவாளிகள் தூக்கிலிடப்பட்ட பின்னர், போகம்பர சிறைச்சாலையில் இதுவரை மரண தண்டனை நிறைவேற்றப்படவில்லை.

எஹலேபொல குமாரிஹாமி நீரில் மூழ்கி சடலமாக கண்டெடுக்கப்பட்ட இடமும் இந்த சிறை வளாகத்திலேயே உள்ளது.

மேலும், உத்துவன்கன்தே சரதியல், மரு சிரா, கொல்வின் ஆர் டி சில்வா, பிலிப் குணவர்தன, வில்லியம் டி சில்வா போன்ற பிரபலங்களும் இங்கு சிறை வைக்கப்பட்டிருந்தனர்.

இதே போன்று உதுவன்கன்தே சரதியல், மரு சிறா போன்றவர்களும் கொல்வின் ஆர்.டி. சில்வா, பிலிப் குணவர்தன, வில்லியம் டி. சில்வா போன்ற பிரபல்யமான மனிதர்களும் இங்கு சிறைப்படுத்தப்பட்டிருந்தார்கள். சிறைச்சாலையாக செயற்படுகின்ற காலத்தில் அலங்காரப் பொருட்கள் உற்பத்தி, புளொக் கல் உற்பத்தி, பூ வளர்த்தல், சவர்க்காரம் செய்தல் மற்றும் தேங்காய் எண்ணெய் உற்பத்தி போன்ற தொழில்களும் அங்கு சிறைச்சாலையின் நலன்புரிப் பிரிவால் இங்கு செயற்படுத்தப்பட்டிருந்தன.
 

https://www.battinews.com/2024/05/blog-post_32.html

பிரபாகரன் இருந்திருந்தால் பொது வேட்பாளர் என்ற பேச்சுக்கே இடம் இல்லை - டக்ளஸ் !

1 week 3 days ago

பிரபாகரன் இருந்திருந்தால் பொது வேட்பாளர் என்ற பேச்சுக்கே இடம் இல்லை - டக்ளஸ் !
ShanaMay 5, 2024
 
douglas-720x450-1.jpg

 

பிரபாகரன் இருந்திருந்தால் பொது வேட்பாளர் என்ற பேச்சுக்கே இடம் இல்லை என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

நேற்று சனிக்கிழமை (04) மாலை மட்டக்களப்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் கூறுகையில்,

சில தமிழ் கட்சிகள் சிவில் அமைப்பு பிரதிநிதிகள் பொது வேட்பாளர் என்ற கருத்தை தற்போது முன்னெடுத்து வருகின்றனர். இதில் எவ்வித உண்மைத்தன்மையும் இல்லை. அது சரியானதும் நியாயமானதுமாக நான் கருதவில்லை.

கடந்த காலங்களில் தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்று சொல்பவர்கள் தங்களது சுயலாபங்களுக்காக தீராத பிரச்சினைகளாகவே கடைப்பிடித்து வந்தனர்.

அவர்கள் தமிழ் சமூகத்துக்கு ஏற்ற நடைமுறைக்கு சாத்தியமான யதார்த்த முடிவுகளை எடுக்க வேண்டும். இந்த தமிழ் பொது வேட்பாளர் என்ற விடயம் அரசியல் உள்நோக்கம் கொண்ட சுயஇலாபம் கொண்டதாகும்.

அது ஜனாதிபதி முக்கிய மூன்று வேட்பாளர்களுடன் எமது மக்களது பிரச்சினைகள் சம்பந்தமாக கலந்துரையாடி, அதன் பின்பு ஓர் உத்தரவாதத்தினை ஏற்படுத்திக்கொள்ள நாம் அவர்களை இணங்க வைக்க வேண்டும். பொது வேட்பாளர் என்பது ஒரு பொய்த்தனம்.

பிரபாகரன் உயிரோடு இருந்திருந்தால் பொது வேட்பாளர் என்ற பேச்சுக்கே இடம் இல்லை என்றார்.
 

https://www.battinews.com/2024/05/blog-post_76.html

இந்திய மக்களவைத் தேர்தல் பணிகளை மேற்பார்வை செய்ய இலங்கைக்கு அழைப்பு !

1 week 3 days ago
008-701x375.jpg இந்திய மக்களவைத் தேர்தல் பணிகளை மேற்பார்வை செய்ய இலங்கைக்கு அழைப்பு !

இந்திய மக்களவைத் தேர்தல் பணிகளை மேற்பார்வை செய்வதற்காக இலங்கைக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்திய தேர்தல் ஆணையகத்தின் ஏற்பாட்டில் நடைபெறும் சர்வதேச தேர்தல் பார்வையாளர் நிகழ்ச்சியின் ஓர் அங்கமாக இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகின் மிகப்பெரிய தேர்தலொன்று நடைபெறுவதைக் காண்பதற்காக 23 நாடுகளிலுள்ள தேர்தல் முகாமைத்துவ அமைப்புகளுடன் தொடர்புடைய 75 சர்வதேச பார்வையாளர்களுக்கு இந்திய தேர்தல் ஆணையகம் இவ்வாறு அழைப்பு விடுத்துள்ளது.

அதன்படி, மே மாதம் 4ஆம் திகதி முதல் 9ஆம் திகதி வரை நடைபெறுகின்ற சர்வதேச தேர்தல் பார்வையாளர் நிகழ்ச்சியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி 10 உறுப்பினர்களைக் கொண்ட தூதுக்குழு பங்கேற்கின்றது.

இந்த தூதுக்குழுவில் இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழுவின் 2 பிரதிநிதிகள் மற்றும் தேர்தல் சட்ட சீர்திருத்தங்களுக்கான பரிந்துரைகளை உருவாக்குவதற்கான குழுவின் 8 பிரதிநிதிகள் உள்ளடங்குகின்றனர்.

இந்நிலையில், இலங்கை தூதுக்குழுவின் பங்கேற்பு, இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதற்கும், இந்தியாவிற்கும், இலங்கைக்கும் இடையிலான தேர்தல் நடைமுறைகள் தொடர்பான அறிவு மற்றும் அனுபவங்களை பகிர்ந்துகொள்வதற்குமான முக்கிய தளமாக இது அமையும் என இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2024/1381165

தாய் சடலமாக மீட்பு – வீட்டில் இருந்த 16 வயது சிறுவனை காணவில்லை

1 week 3 days ago

தாய் சடலமாக மீட்பு – வீட்டில் இருந்த 16 வயது சிறுவனை காணவில்லை
adminMay 5, 2024
child-dead.jpg

யாழ்ப்பாணம் தெல்லிப்பழை பகுதியில் வீடொன்றில் இருந்து சந்தேகத்திற்கு இடமான முறையில் உயிரிழந்த பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. அதேவேளை சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின் மகனான 16 வயதுடைய சிறுவன் வீட்டில் இருந்து காணாமல் போயுள்ளதுடன் , வீட்டின் சுவர்களில் இரத்த கறைகளும் காணப்படுகின்றன.

தெல்லிப்பழை பகுதியை சேர்ந்த ஹெனடிக் ஜஸ்மின் (வயது 37) எனும் பெண்ணே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அவர் தனது  இரு பிள்ளைகளுடன் வசித்து வந்த நிலையில் அவரது கணவன் வெளிநாட்டில் வசித்து வருகின்றார்.

இந்நிலையில் சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின் மகள் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை அருகில் உள்ள வீட்டில் தூங்க சென்ற சமயம் வீட்டில் தாயும் மகனும் மட்டுமே இருந்துள்ளனர்.

அயல் வீட்டில் தூங்க சென்ற பெண்ணின் மகள் மறுநாள் வீட்டிற்கு சென்ற வேளை தாய் உயிரிழந்த நிலையில் சடலமாக காணப்பட்டுள்ளார். அதேவேளை தனது சகோதரன் வீட்டில் இல்லாததையும் அறிந்துள்ளார்.

அது தொடர்பில் அயல் வீட்டாருக்கு தெரியப்படுத்தியதை அடுத்து , அயல் வீட்டார்  காவல்துறையினருக்கு அறிவித்ததை அடுத்து , சம்பவ இடத்திற்கு சென்ற  காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்ததுடன் , சடலத்தை மீட்டு உடற்கூற்று பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர்.  அத்துடன் காணாமல் போன சிறுவனை தேடும் நடவடிக்கைகளையும் முன்னெடுத்துள்ளனர்.

 

https://globaltamilnews.net/2024/202449/

முள்ளிவாய்க்கால் கஞ்சி வார்ப்பு

1 week 3 days ago

முள்ளிவாய்க்கால் கஞ்சி வார்ப்பு
adminMay 5, 2024
IMG-20240505-WA0004.jpg

யாழ் கிறிஸ்தவ ஒன்றியத்தின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் நினைவாக கஞ்சி வழங்கும் நிகழ்வு யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்பட்டது.   இறுதி யுத்தத்தின்போது மக்களின் உணவாக கஞ்சி காய்ச்சி வழங்கப்பட்டது. அதன் நினைவாக முள்ளிவாய்க்கால் கஞ்சி வழஙகும் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

 மேலும் இனிமேல் இவ்வாறு ஒரு அவலம் ஏற்படாது இருப்பதை உறுதிப்படுத்தவும் இந்நிகழ்வு நடைபெற்றதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

IMG-20240505-WA0010-800x461.jpgIMG-20240505-WA0019-800x739.jpgIMG-20240505-WA0020-516x800.jpg
 

தமிழ் மக்களின் பிரச்சினைகள் சரியான முறையில் கையாளப்படவில்லை – அமைச்சர் டக்ளஸ்

1 week 3 days ago
04 MAY, 2024 | 08:19 PM
image
 

தமிழ் மக்களின் பிரச்சனைகள் சரியான முறையில் கையாளாத காரணத்தினால் தான் தமிழ் மக்கள் தற்போதைய நிலமைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள். ஆனாலும் வருகின்ற காலத்திலாவது தமிழ் மக்களின் பிரச்சனைகளைச் சரியாக கையாளும் பட்சத்தில் விரைவில் பிரச்சனைகளுக்குத் தீர்வுகாணலாம் என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மட்டக்களப்பு மாவட்டத்தின் மகிழூர் பகுதிக்கு சனிக்கிழமை(04) நேரில் விஜயம் செய்து அப்பகுதி மீகவர்களின் குறை நிறைகளைக் கேட்டறித்து கொண்டார். இதன்போது ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்…

சுருக்குவலைப் பயன்படுத்துதல் கிழக்கில் மாத்திரமல்ல நாடு பூராகவும் பரந்துபட்ட அளவில் இடம்பெற்று வருகின்றது. நான் செல்லும் இடம் எனலாம் அதனைத் தடை செய்யுமாறு கோரிக்கைகள் வந்து கொண்டிருக்கின்றன. முடிந்தவரையில் சுருக்குவலைப் பயன்பாட்டைத் தடை செய்வதற்குரிய நடவடிக்கையை நான் எடுத்துக் கொண்டு வருகின்றேன்.

அதுபோல் மட்டக்களப்பு வாவியிலும் தொழில் செய்பவர்கள் பல்வேறுபட்ட பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகின்றார்கள். அதற்குத் தீர்வு காணும் முகமாக ஒரு மாத்திற்குள் ஒரு குழுவை அமைத்து அதுதொடர்பில் ஆராய்ந்து அறிக்கையை சமர்ப்பிக்கவுள்ளார்கள். அதனை வைத்துக் கொண்டு நாம் நடவடிக்கை எடுக்கவுள்ளோம்.

இந்திய மீனவர்களின் அத்துமீறல் என்பது இரு நாடுகளுக்குமிடையிலான பிரச்சனையாகும். இது தொடர்பில் நாம் போச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருகின்றோம். அதுபோல் சட்டநடவடிக்கைகளையும் எடுத்துவருகின்றோம். இன்னும் பேச்சுவார்த்தைகளில் முழு நட்பிக்கை வத்து முயற்சிகளை எடுத்துள்ளோம்.

தற்போது மீன்களின் இனப்பெருக்க காலம் என்பதால் இரண்டு மாதங்களாக இந்திய மீனவர்கள் தொழிலுக்கு வரவில்லை. தேர்தல் முடிந்தவுடன் கூடிக் கதைக்கலாம் என அண்மையில் தமிழ்நாட்டு முதலமைச்சரிடமிருந்தும், புதுச்சேரி முதலமைச்சரிடமிருந்தும் எனக்கு அமைப்பு வந்திருந்தன. அதற்காக நாம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றோம்.

தமிழ் மக்களின் பிரச்சனைகள் சரியான முறையில் கையாளாத காரணத்தினால்தான் தமிழ் மக்கள் தற்போதைய நிலமைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள். ஆனாலும் வருகின்ற காலத்திலாவது தமிழ் மக்களின் பிரச்சனைகளைச் சரியாக கையாளும் பட்சத்தில் விரைவில் பிரச்சனைகளுக்குத் தீர்வுகாணலாம்.

30 வருடங்களாக் நான் சொல்லி வந்தவிடையம் அவைரும் அறிந்ததே. அதாவது இலங்கை இந்திய ஒப்பந்தத்தில் ஏற்படுத்தப்பட்ட 13வது திருத்தச்சட்டம், மாகாணசபை முறைமையை ஆரம்பித்ததனூடாகத்தான் தமிழர்களுடைய  அரசியல் உரிமைப் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண முடியும் என நான் மிக நீண்ட காலமாக சொல்லி வந்தேன். அதனை “செவிடன் காதில் ஊதிய சங்கு” போல் அதனை யாரும் கேட்கவில்லை.

ஆனால் தற்போது அதுபற்றி பலரும் முணு முணுக்கின்றார்கள். அவ்வகையிலாவது அது நல்லவிடையமாகும். யாரும் இவற்றை எதிர்க்கும்போதும், அதனை ஆதரிக்கும்போதும் உண்மைத் தன்மையாக யாரும் இருப்பதாகத் தெரியவில்லை. உண்மைத்தன்மையாக முன்வருவார்களேயானால் இப்பிரச்சனைகளுக்குத் தீர்வு காணலாம்.

வரஇருக்கின்ற ஜனாதிபதித் தேர்தலில், தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமராச மற்றும் அனுர குமார திசாநாயக்க ஆகிய மூன்று வேட்பாளர்கள் பிரதானமானவர்களாக காணப்படுகின்றார்கள்.

இந்த மூவரில் ஒருவருடன் கலந்துரையாடி எமது வாக்குகளை உங்களுக்குத் தலராம் எமது பிரச்சனைகளுக்குத் தீர்வு காணவேண்டும் என்ற பேரம்பேசலைச் செய்து கலந்துரையாடினால்தான் ஒரு ஆரோக்கியமான சூழல் உருவாகுமே தவிர வெறுமனே பொ வேட்பாளர் என்பது வெறும் பம்மாத்து ஆகும்.

புண்ணுக்கு வலியா மருந்துக்கு வலியா என பார்த்தால் கடந்த கால தமிழ் அரசியல் மருந்துக்குத்தான் வலி என்ற அரசியலை முன்னெடுத்திருந்தனர். அது என்ன நிலமையில் மக்களைக் கொண்டு விட்டுள்ளது என்பதை புரிகின்றது. எனவே புண்ணுக்குத்தான் வலி இதனை தமிழ் மக்களும் சரிவர உணர்ந்து யார் தமது பிரச்சனைகளை ஆக்கபூர்வமாக முன்னெடுக்கின்றார்களோ அவர்களோடு அணிதிரழ்வததான் சரியானது என தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/182689

ஜனாதிபதி ரணில் – பசில் இன்று சந்திப்பு!

1 week 3 days ago
basil-ranil-300x200.jpg

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகரும் முன்னாள் அமைச்சருமான பசில் ராஜபக்ஷவுக்கும் இடையிலான மற்றுமொரு சந்திப்பு இன்று பிற்பகல் நடைபெறவுள்ளது.

இருவருக்கும் இடையில் ஐந்தாவது தடவையாக இடம்பெறும் இந்த சந்திப்பு கொழும்பு மஹகமசேகர மாவத்தையில் உள்ள ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெறவுள்ளது.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் மற்றும் நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதிக்கும் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கும் இடையில் இறுதியாக கடந்த ஏப்ரல் 23ஆம் திகதி கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. இந்த சந்திப்பின்போது, பிரதமர் தினேஷ் குணவர்தன, அமைச்சர்களான நிமல் சிறிபால டி சில்வா, ஹரின் பெர்னாண்டோ, டிரான் அலஸ், பிரசன்ன ரணதுங்க மற்றும் கஞ்சன விஜேசேகர ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதன்போது, எதிர்வரும் காலங்களில் எந்த தேர்தலை முதலில் நடத்துவது என்பது தொடர்பில் தீர்மானிக்கப்பட வேண்டுமென முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டால், அனைத்துக் கட்சிகளிடமும் எழுத்துப்பூர்வமாக ஆதரவை கேட்பது சிறந்தது எனவும் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ இதன்போது கருத்து தெரிவித்துள்ளார். அத்துடன், அரசாங்கத்தின் பல செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டியிருப்பதால், ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பான தீர்மானத்தை எதிர்வரும் ஜூன் மாத இறுதியில் அறிவிக்கவுள்ளதாக ஜனாதிபதி இந்த சந்திப்பின்போது தெரிவித்துள்ளார்.

https://thinakkural.lk/article/300881

வெளியக தலையீடற்ற பொறிமுறையை நிறுவுவதிலும் அதிகாரங்களைப் பகிர்வதிலும் அர்ப்பணிப்புடன் செயற்படுகிறோம் - ஜப்பானிய வெளிவிவகார அமைச்சரிடம் அலி சப்ரி

1 week 3 days ago
04 MAY, 2024 | 06:42 PM
image

(நா.தனுஜா)

ஒருமைப்பாடு மற்றும் தேசிய நல்லிணக்கத்தை அடைந்துகொள்வதை முன்னிறுத்தி எவ்வித வெளியகத் தலையீடுகளுமின்றி உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு போன்ற உள்ளக செயன்முறைகளை நிறுவுவதற்கும், அதிகாரங்களைப் பகிர்ந்தளிப்பதற்கும் அரசாங்கம் கொண்டிருக்கும் கடப்பாடு குறித்தும் ஜப்பானிய வெளிவிவகார அமைச்சரிடம் எடுத்துரைத்ததாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

இருநாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கைக்கு வருகைதந்துள்ள ஜப்பான் வெளிவிவகார அமைச்சர் யொகோ கமிகவா மற்றும் இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி ஆகியோரின் கூட்டு ஊடக சந்திப்பு இன்று சனிக்கிழமை (04) கொழும்பிலுள்ள வெளிவிவகார அமைச்சில் நடைபெற்றது. 

அங்கு கருத்து வெளியிட்ட அமைச்சர் அலி சப்ரி மேலும் கூறியதாவது:

ஜப்பானுக்கும் இலங்கைக்கும் இடையில் சுமார் 72 வருடகாலமாக நெருங்கிய நட்புறவு பேணப்பட்டு வருகின்றது. இந்நட்புறவானது அண்மைய காலங்களில் இரு நாடுகளுக்கும் இடையில் பரஸ்பரம் இடம்பெற்ற உயர்மட்ட விஜயங்களால் மேலும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் நானும் ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் யொகோ கமிகவாவும் பரந்துபட்ட விடயங்கள் தொடர்பில் இருதரப்புக் கலந்துரையாடலை முன்னெடுத்திருந்தோம். 

இதன்போது கடந்த காலங்களில் இலங்கை மிகமோசமான பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்திருந்த வேளையில், ஜப்பான் வெளிப்படுத்திய உடனிற்பு மற்றும் வழங்கிய உதவிகளுக்காக நான் அவருக்கு நன்றி தெரிவித்தேன். அதேபோன்று வெளியகக் கடன் மறுசீரமைப்பு செயன்முறையில் ஜப்பான் வழங்கிவரும் பங்களிப்பு மற்றும் ஜப்பான் அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட நிதியுதவி என்பவற்றுக்கும் நன்றி கூறுகிறேன்.  

அதேபோன்று பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தவும், கடன் உறுதிப்பாட்டை விரிவுபடுத்தவும், வளர்ச்சியை மையமாகக் கொண்ட மறுசீரமைப்பு செயன்முறைகளை நடைமுறைப்படுத்தவும் இலங்கை அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகள் குறித்து ஜப்பான் வெளிவிவகார அமைச்சருக்குத் தெளிவுபடுத்தினேன். 

இன்றளவிலே இலங்கை பொருளாதார நெருக்கடியிலிருந்து மாத்திரம் மீட்சியடையவில்லை. மாறாக, இம்மீட்சியானது இலங்கை மக்களின் மீண்டெழும் தன்மையையும் அர்ப்பணிப்பையும் வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. 

அதன்படி, சர்வதேச நாணய நிதியத்தின் அடுத்த மீளாய்வுக்குள் கடன் மறுசீரமைப்பு செயன்முறை பூர்த்திசெய்யப்படுமென எதிர்பார்க்கின்றோம்.

அதேவேளை இலங்கையின் பொருளாதார உறுதிப்பாடு, மீட்சி மற்றும் எதிர்கால வளர்ச்சி என்பன குறித்த அமைச்சர் யொகோ கமிகவா தனது நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளார். அதன்படி தற்போது இலங்கையில் முன்னெடுப்பதற்கென உத்தேசிக்கப்பட்டுள்ள திட்டங்களையும், மின்சாரம், உட்கட்டமைப்பு, துறைமுகம் மற்றும் நெடுஞ்சாலை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் புதிய முதலீட்டுத் திட்டங்களையும் ஆரம்பிக்குமாறு நான் அவருக்கு அழைப்பு விடுத்துள்ளேன். இலகு ரயில் சேவைத்திட்டத்தையும் மீள ஆரம்பிப்பது குறித்து கலந்துரையாடியிருக்கிறோம்.

மேலும், ஒருமைப்பாடு மற்றும் தேசிய நல்லிணக்கத்தில் அடையப்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து அமைச்சர் யொகோ கமிகவாவுக்கு விளக்கமளித்ததுடன், அவற்றை முன்னிறுத்தி எவ்வித வெளியகத் தலையீடுகளுமின்றி உண்மை மற்றம் நல்லிணக்க ஆணைக்குழு போன்ற உள்ளக செயன்முறைகளை நிறுவுவதற்கும், அதிகாரங்களை பகிர்ந்தளிப்பதற்கும் அரசாங்கம் கொண்டிருக்கும் கடப்பாடு குறித்தும் எடுத்துரைத்தேன் என்று தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/182696

சடுதியாக குறைவடைந்துள்ள இலங்கையின் சனத்தொகை – மத்திய வங்கி அறிக்கை

1 week 3 days ago

இலங்கையின் சனத்தொகை சுமார் ஒரு இலட்சத்து நாற்பத்து நாலாயிரத்தால் குறைந்துள்ளதாக மத்திய வங்கியின் அறிக்கை ஒன்று கூறுவதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதார மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் பேராசிரியர் வசந்த அத்துகோரள தெரிவித்தார்.

 

பத்து ஆண்டுகளில் மக்கள் தொகை எதிர்மறையான வளர்ச்சியைக் காட்டுவது இதுவே முதல் முறை என்று அவர் குறிப்பிட்டார்.

 

மக்கள்தொகை குறைப்பு சதவீதம் பூஜ்யம் மற்றும் ஆறு சதவீதம்.

 

இதனால் பெண் மக்கள் தொகை எழுபதாயிரமும், ஆண் மக்கள் தொகை எழுபத்து நாலாயிரமும் குறைந்துள்ளது.

 

இதேவேளை, கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது பிறப்பு எண்ணிக்கை 27421 ஆக குறைந்துள்ளதாக கூறும் பேராசிரியர், இறப்பு எண்ணிக்கையும் 1447 ஆக அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

 

அதிகரிப்பு ஒரு சதவீதமாக எட்டு சதவீதம் ஆகும்.

 

மத்திய வங்கியின் அறிக்கையின்படி நாட்டில் திருமணங்களின் எண்ணிக்கை 19,784 ஆக குறைந்துள்ளது.

https://www.thamilan.lk/articles/9yDU04jxuk05zuaiwQte

கடன் மறுசீரமைப்பை பூர்த்திசெய்வதற்கு அவசியமான ஒத்துழைப்பையும் ஆதரவையும் வழங்கத் தயார் - இலங்கையிடம் சீனா உத்தரவாதம்

1 week 3 days ago
04 MAY, 2024 | 06:11 PM
image

(நா.தனுஜா)

கடன்மறுசீரமைப்பு செயன்முறையைப் பூர்த்திசெய்வதற்கு இலங்கைக்கு அவசியமான முழுமையான ஒத்துழைப்பையும் ஆதரவையும் வழங்குவதற்குத் தயாராக இருப்பதாக சீனா உறுதியளித்துள்ளது.

ஜோர்ஜியாவின் ட்பிலிஸி நகரில் 2 - 5ஆம் திகதி வரை நடைபெறும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் வருடாந்த மாநாட்டில் இலங்கையின் சார்பில் கலந்துகொள்வதற்காக ஜோர்ஜியா சென்றிருக்கும் நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க மற்றும் திறைசேரியின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன ஆகியோர் அங்கு பல்வேறு உயர்மட்டப் பிரதிநிதிகளுடன் இருதரப்பு சந்திப்புக்களை நடத்திவருகின்றனர்.

அதன் ஓரங்கமாக இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்கவுக்கும், சீனாவின் பிரதி நிதியமைச்சர் லியோ மின்னுக்கும் இடையில் நடைபெற்ற சந்திப்பின்போது இலங்கையின் பொருளாதார மீட்சி, சர்வதேச நாணய நிதியத்தின் உதவி செயற்றிட்டம், கடன் மறுசீரமைப்பு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

இதன்போது கடன் மறுசீரமைப்பு செயன்முறையை பூர்த்தி செய்வதற்கு அவசியமான முழுமையான ஒத்துழைப்பையும், ஆதரவையும் வழங்குவதற்குத் தயாராக இருப்பதாக சீன பிரதி நிதியமைச்சர் லியோ மின் உறுதியளித்துள்ளார். 

அதுமாத்திரமன்றி இலங்கைக்கு அனைத்து வழிகளிலும் உதவுவதில் சீனா கொண்டிருக்கும் வலுவான நிலைப்பாட்டையும் அவர் மீளுறுதிப்படுத்தினார்.

அதேபோன்று ஆசிய அபிவிருத்தி வங்கியின் பிரதித் தலைவர் யிங்மிங் யாங்குடனான சந்திப்பின்போது 2024 - 2028ஆம் ஆண்டு வரையான புதிய ஒத்துழைப்பு செயற்றிட்டம் குறித்தும், நுண்பாகப் பொருளாதார ஸ்திரத்தன்மையை மீளுறுதிப்படுத்துவதற்கான முயற்சிகளில் ஆசிய அபிவிருத்தியின் ஒத்துழைப்பு என்பன தொடர்பில் கலந்துரையாடப்பட்டது. 

அத்தோடு பொருளாதாரத்திலும் கடன் மறுசீரமைப்பு செயன்முறையிலும் அடையப்பட்டிருக்கும் முன்னேற்றம் குறித்தும் இதன்போது ஆராயப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/182692

OnmaxDT பிரமிட் திட்டத்தின் ஊடாக பண மோசடி செய்த ஆறு பேருக்கு பயணத்தடை!

1 week 3 days ago
04 MAY, 2024 | 04:20 PM
image
 

ஒன்மேக்ஸ் டிடி  (OnmaxDT) பிரமிட் திட்டத்தின்  ஊடாக  பணமோசடி  செய்த ஆறு பேருக்கு  வெளிநாடு செல்வதற்கு  தடை விதித்து கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் நேற்று (03) உத்தரவிட்டுள்ளது. 

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் விடுக்கப்பட்ட கோரிக்கையை அடுத்து இந்த வெளிநாட்டுப் பயணத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தினருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

சீதுவ, திஸ்ஸமஹாராம, லுனுகம்வெஹர ரன்ன, அகுனுகொலபலஸ்ஸ, மற்றும் ரத்கம ஆகிய பிரதேசங்களில் வசிக்கும் ஆறு பேருக்கே இவ்வாறு பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/182666

Checked
Wed, 05/15/2024 - 08:44
ஊர்ப் புதினம் Latest Topics
Subscribe to ஊர்ப்புதினம் feed
texte-feed
sqdgvsqfqsg vdgvdgvv qdsbrzbvzrbvzr