உயர்விலும் உயர்வுநவிற்சி - சுப.சோமசுந்தரம்
உயர்விலும் உயர்வுநவிற்சி
- சுப.சோமசுந்தரம்
பொதுவாக உயர்வுநவிற்சி என்பது இலக்கிய இன்பத்திற்கான ஒரு மரபு; இலக்கியச் சுவை கூட்டும் முயற்சி. எடுத்துக்காட்டாக, பிரிவாற்றாமையில் வாடும் தலைவிக்குத் தோலில் ஏற்படும் ஒரு மாற்றம் அல்லது தாக்கம் பசலை எனப்படுவது. அச்சூழலில் உள்ளத்தின் பிரதிபலிப்பாய் உடல் இயங்கும் இயற்கை நிகழ்வாகப் பசலை இருக்கலாம். அவ்வாறெனில் அதனை உயர்வுநவிற்சி எனச் சொல்வதற்கில்லை. இயற்கை நிகழ்வெனில் இக்காலத்திலும் அது பிரிவாற்றாமையின் வெளிப்பாடாக அமைதல் வேண்டும். அவ்வாறான வெளிப்பாடு இன்றைய அறிவியல் உலகில் பதிவு செய்யப்படவில்லை. எனவே பசலையை ஒரு இலக்கிய மரபாகவே கொண்டு அதனை உயர்வுநவிற்சியாய் வகைப்படுத்துதல் நம் பகுத்தறிவுக்கு எட்டுகின்ற பொருளாய் இப்போதைக்குத் தோன்றுகிறது.
இது தொடர்பாகப் பொதுவான புரிதல் என்னவென்றால் தலைவியை சொல்லிக் கொள்ளும் அளவு ஒரு குறிப்பிட்ட கால இடைவெளி தலைவன் பிரியும்போது தலைவிக்குப் பசலை நோய் தோன்றிப் பிறரறிய அவளது வாட்டத்தை அறிவிக்கும் என்பதாம். ஆனால் வள்ளுவனோ ஒரு படி மேற்சென்று, அணைத்தலின் நெகிழ்வில் ஏற்படும் பிரிவைக் கூடத் தாங்கவொண்ணாத தலைவியின் கண்களில் பசலை படர்ந்ததாய்க் கூறி நம்மை நெகிழ வைக்கிறான். அஃது உயர்விலும் உயர்வுநவிற்சி.
"முயக்கிடைத் தண்வளி போழப் பசப்புற்ற
பேதை பெருமழைக் கண்"
(குறள் 1239; உறுப்பு நலன் அழிதல்)
குறளின் பொருள் : அணைத்தலுக்கிடையே (முயக்கிடை) குளிர்ந்த காற்று அவர்களை ஊடறுத்துச் செல்ல (தண்வளி போழ), அப்பேதையின் குளிர்ந்த பெரிய கண்களைச் (பெருமழைக் கண்) சுற்றிப் பசலை படர்ந்ததாம்.
அடுத்து நாம் கையிலெடுக்க எண்ணுவது 'இடை'யில் வந்த உயர்வுநவிற்சி. மங்கையவள் மெல்லிய இடையினள் எனச் சொல்ல, அவள்தன் எடையைத் தாங்க இயலாத இடை பற்றிப் பேசும் பரவலான உயர்வுநவிற்சி.
"தழையணி அல்குல் தாங்கல் செல்லா
நுழைசிறு நுசுப்பிற் கெவ்வ மாக
அம்மெல் ஆக நிறைய வீங்கிக்
கொம்மை வரிமுலை செப்புடன் எதிரின"
(குறுந்தொகை பாடல் 159 ன் வரிகள்)
என்று தோழி கூற்றாக வரும் குறுந்தொகைப் பாடல் வரிகள் நினைவில் கொள்ளத்தக்கன.
பாடல் வரிகளின் பொருள் :
தழை ஆடையையே (தழையணி) தாங்கவொண்ணாத (தாங்கல் செல்லா), அடிவயிற்றின் (அல்குல்) மீது அமைந்த இடைக்குத் (நுசுப்பிற்கு) துன்பம் அளிப்பதாக (எவ்வமாக) அழகிய (அம்) மெல்லிய (மெல்) மார்பில் (ஆகம்) நிறைவாகப் (நிறைய) பெருத்துத் (வீங்கி) திரட்சியுடன் தேமல் போன்ற நுண்ணிய வரிகளுடன் திகழும் முலையானது (வரி முலை) குங்குமச் சிமிழை (செப்புடன்) ஒத்து இருந்தது (எதிரின).
அவளது திரண்ட மார்பகத்தின் எடை தாங்காத இடை பேசப்பட்டுள்ளது. அடுத்து,
"உபய தனம் அசையில் ஒடியும் இடைநடையை
ஒழியும் ஒழியுமென ஒண்சிலம்பு
அபயம் அபயமென அலற நடைபயிலும்
அரிவை மீர்"
(கலிங்கத்துப் பரணி; பாடல் 58)
என்று கலிங்கத்துப் பரணியிலும் ஒடியும் இடை காணலாம்.
பாடற் பொருள் :
முலையிரண்டும் (உபய தனம்) அசைகையில் இடை ஒடியுமாதலால் நடையை விட்டொழியும் என்று கூறும் ஒளி பொருந்திய காற்சிலம்பு (ஒண் சிலம்பு), 'அபயம் அபயம்' என்று அலறும் அளவு நடை பயிலும் அரிவையரே !(பெண்ணின் ஏழு பருவ நிலைகளில் ஒன்று; 20-25 வயதினர்).
பக்திப் பாடலும் இடையை விட்ட பாடில்லை. இதோ தாயுமானவர் பாடல் :
"மின்போலும் இடை ஒடியும் ஒடியும் என மொழிதல் போல்
மென்சிலம்பு ஒலிகள் ஆர்ப்ப வீங்கிப் புடைத்து விழ சுமை
அன்ன கொங்கை மட மின்னார்கள்"
(தாயுமானவர் பாடல்கள் - 12 120/1).
பாடற் பொருள் :
அழகிய மடந்தையரின் (மடமின்னார்கள்) வீங்கிப் புடைத்து விழும் முலைகளின் (கொங்கை) சுமையினால் மின்னல் போன்ற இடை ஒடியும் ஒடியும் என்று அறிவிப்பது போல் அவர்களின் மென்மையான காற் சிலம்புகள் ஒலிக்கின்றன (ஒலிகள் ஆர்ப்ப).
இதுகாறும் நாம் கண்ட உயர்வுநவிற்சி உடல் எடையைத் தாங்காத இடை பற்றியது. வழக்கம்போல் வள்ளுவன் ஒரு படி மேற்சென்று மலர்க் காம்பின் எடை கூடத் தாங்காத இடையைக் குறிப்பது உயர்விலும் உயர்வுநவிற்சி.
"அனிச்சப்பூ கால்களையாள் பெய்தாள் நுசிப்பிற்கு
நல்ல படாஅ பறை"
(குறள் 1115; நலம் புனைந்துரைத்தல்)
மலர்களில் மென்மையானது அனிச்சம். அந்த அனிச்சப் பூவின் காம்பினைக் (கால்) களையாமல் சூடிக் கொண்டாள் (பெய்தாள்). மென்மை மலருக்கு மட்டுந்தானே ! காம்பிற்கு இல்லையே ! எனவே அக்காம்பின் கனத்தைக் கூடத் தாங்க இயலாத அவளது இடை வருத்தத்திற்கு (நுசிப்பிற்கு) – இடை ஒடிந்ததற்கு – நல்ல பறை படவில்லை (ஒலிக்கவில்லை). அஃதாவது சாப்பறை (இழவு கொட்டு) ஒலித்தது.
எங்கள் இல்லத்தின் முற்றத்தில் ஒரு ஓரமாக முடங்கிக் கிடந்த உரலை (ஒரு காலத்தில் உயிரோட்டமாய் இருந்து, கிரைண்டர் யுகத்தில் தான் முடக்கப்பட்டதால் நம்மையும் முடங்க வைத்த பொருள்) நகர்த்த வேண்டியிருந்தது. தனியாளாய் நான் முயல, அந்நேரத்தில் வந்த என் ஆருயிர்த்தோழன், “எலேய் ! தனியாவா தூக்குத ? ஒம் முதுகெலும்பு ஒடிஞ்சி இன்னிக்கு எழவுக் கொட்டு அடிக்கணும்ல !” என்றான். இந்த மிகைப்படுத்தலை வள்ளுவன் மேற்கண்ட குறளில் மக்களிடமிருந்து எடுத்தாளக் காண்கிறோம். பாமரன் கோடு போட்டால் பாவலன் ‘ரோடு’ போட வேண்டாமா ? அதுதானே இலக்கிய இன்பம் !
பின் குறிப்பு :
'அனிச்சப் பூ கால் களையாள்' குறள் எனது கட்டுரைகளில் இதற்கு முன் எடுத்தாண்டதுதான். கட்டுரையிலுள்ள குறுந்தொகை, கலிங்கத்துப் பரணி பாடல்கள் முகநூல் அன்பர் கார்த்திக் அவர்களால் கவனம் பெற்றேன். எனவே எனது இக்கட்டுரையை அவருக்கே அன்புடன், நன்றியுடன் காணிக்கை ஆக்குகிறேன்.