தமிழும் நயமும்

உயர்விலும் உயர்வுநவிற்சி - சுப.சோமசுந்தரம்

1 month ago

உயர்விலும் உயர்வுநவிற்சி

- சுப.சோமசுந்தரம்

பொதுவாக உயர்வுநவிற்சி என்பது இலக்கிய இன்பத்திற்கான ஒரு மரபு; இலக்கியச் சுவை கூட்டும் முயற்சி. எடுத்துக்காட்டாக, பிரிவாற்றாமையில் வாடும் தலைவிக்குத் தோலில் ஏற்படும் ஒரு மாற்றம் அல்லது தாக்கம் பசலை எனப்படுவது. அச்சூழலில் உள்ளத்தின் பிரதிபலிப்பாய் உடல் இயங்கும் இயற்கை நிகழ்வாகப் பசலை இருக்கலாம். அவ்வாறெனில் அதனை உயர்வுநவிற்சி எனச் சொல்வதற்கில்லை. இயற்கை நிகழ்வெனில் இக்காலத்திலும் அது பிரிவாற்றாமையின் வெளிப்பாடாக அமைதல் வேண்டும். அவ்வாறான வெளிப்பாடு இன்றைய அறிவியல் உலகில் பதிவு செய்யப்படவில்லை. எனவே பசலையை ஒரு இலக்கிய மரபாகவே கொண்டு அதனை உயர்வுநவிற்சியாய் வகைப்படுத்துதல் நம் பகுத்தறிவுக்கு எட்டுகின்ற பொருளாய் இப்போதைக்குத் தோன்றுகிறது.                 

      இது தொடர்பாகப் பொதுவான புரிதல் என்னவென்றால் தலைவியை சொல்லிக் கொள்ளும் அளவு ஒரு குறிப்பிட்ட கால இடைவெளி தலைவன் பிரியும்போது தலைவிக்குப் பசலை நோய் தோன்றிப் பிறரறிய அவளது வாட்டத்தை அறிவிக்கும் என்பதாம். ஆனால் வள்ளுவனோ ஒரு படி மேற்சென்று, அணைத்தலின் நெகிழ்வில் ஏற்படும் பிரிவைக் கூடத் தாங்கவொண்ணாத தலைவியின் கண்களில் பசலை படர்ந்ததாய்க் கூறி நம்மை நெகிழ வைக்கிறான். அஃது உயர்விலும் உயர்வுநவிற்சி.

"முயக்கிடைத் தண்வளி போழப் பசப்புற்ற

பேதை பெருமழைக் கண்"

(குறள் 1239; உறுப்பு நலன் அழிதல்)

குறளின் பொருள் : அணைத்தலுக்கிடையே (முயக்கிடை) குளிர்ந்த காற்று அவர்களை ஊடறுத்துச் செல்ல (தண்வளி போழ), அப்பேதையின் குளிர்ந்த பெரிய கண்களைச் (பெருமழைக் கண்) சுற்றிப் பசலை படர்ந்ததாம்.

          அடுத்து நாம் கையிலெடுக்க எண்ணுவது 'இடை'யில் வந்த உயர்வுநவிற்சி. மங்கையவள் மெல்லிய இடையினள் எனச் சொல்ல, அவள்தன் எடையைத் தாங்க இயலாத இடை பற்றிப் பேசும் பரவலான உயர்வுநவிற்சி.

"தழையணி அல்குல் தாங்கல் செல்லா

நுழைசிறு நுசுப்பிற் கெவ்வ மாக

அம்மெல் ஆக நிறைய வீங்கிக்

கொம்மை வரிமுலை செப்புடன் எதிரின"

             (குறுந்தொகை பாடல் 159 ன் வரிகள்)

என்று தோழி கூற்றாக வரும் குறுந்தொகைப் பாடல் வரிகள் நினைவில் கொள்ளத்தக்கன.

பாடல் வரிகளின் பொருள் :

தழை ஆடையையே (தழையணி) தாங்கவொண்ணாத (தாங்கல் செல்லா), அடிவயிற்றின் (அல்குல்) மீது அமைந்த இடைக்குத் (நுசுப்பிற்கு) துன்பம் அளிப்பதாக (எவ்வமாக) அழகிய (அம்) மெல்லிய (மெல்) மார்பில் (ஆகம்) நிறைவாகப் (நிறைய) பெருத்துத் (வீங்கி) திரட்சியுடன் தேமல் போன்ற நுண்ணிய வரிகளுடன் திகழும் முலையானது (வரி முலை) குங்குமச் சிமிழை (செப்புடன்) ஒத்து இருந்தது (எதிரின).

அவளது திரண்ட மார்பகத்தின் எடை தாங்காத இடை பேசப்பட்டுள்ளது. அடுத்து,

"உபய தனம் அசையில் ஒடியும் இடைநடையை

ஒழியும் ஒழியுமென ஒண்சிலம்பு

அபயம் அபயமென அலற நடைபயிலும்

அரிவை மீர்"  

         (கலிங்கத்துப் பரணி; பாடல் 58)

என்று கலிங்கத்துப் பரணியிலும் ஒடியும் இடை காணலாம்.

பாடற் பொருள் :

முலையிரண்டும் (உபய தனம்) அசைகையில் இடை ஒடியுமாதலால் நடையை விட்டொழியும் என்று கூறும் ஒளி பொருந்திய காற்சிலம்பு (ஒண் சிலம்பு), 'அபயம் அபயம்' என்று அலறும் அளவு நடை பயிலும் அரிவையரே !(பெண்ணின் ஏழு பருவ நிலைகளில் ஒன்று; 20-25 வயதினர்).

பக்திப் பாடலும் இடையை விட்ட பாடில்லை. இதோ தாயுமானவர் பாடல் :

"மின்போலும் இடை ஒடியும் ஒடியும் என மொழிதல் போல்

மென்சிலம்பு ஒலிகள் ஆர்ப்ப வீங்கிப் புடைத்து விழ சுமை

அன்ன கொங்கை மட மின்னார்கள்"

                 (தாயுமானவர் பாடல்கள் - 12 120/1).

பாடற் பொருள் :

அழகிய மடந்தையரின் (மடமின்னார்கள்) வீங்கிப் புடைத்து விழும் முலைகளின் (கொங்கை) சுமையினால் மின்னல் போன்ற இடை ஒடியும் ஒடியும் என்று அறிவிப்பது போல் அவர்களின் மென்மையான காற் சிலம்புகள் ஒலிக்கின்றன (ஒலிகள் ஆர்ப்ப).

         இதுகாறும் நாம் கண்ட உயர்வுநவிற்சி உடல் எடையைத் தாங்காத இடை பற்றியது. வழக்கம்போல் வள்ளுவன் ஒரு படி மேற்சென்று மலர்க் காம்பின் எடை கூடத் தாங்காத இடையைக் குறிப்பது உயர்விலும் உயர்வுநவிற்சி.

"அனிச்சப்பூ கால்களையாள் பெய்தாள் நுசிப்பிற்கு

நல்ல படாஅ பறை"

                  (குறள் 1115; நலம் புனைந்துரைத்தல்)

    மலர்களில் மென்மையானது அனிச்சம். அந்த அனிச்சப் பூவின் காம்பினைக் (கால்) களையாமல் சூடிக் கொண்டாள் (பெய்தாள்). மென்மை மலருக்கு மட்டுந்தானே ! காம்பிற்கு இல்லையே ! எனவே அக்காம்பின் கனத்தைக் கூடத் தாங்க இயலாத அவளது இடை வருத்தத்திற்கு (நுசிப்பிற்கு) – இடை ஒடிந்ததற்கு – நல்ல பறை படவில்லை (ஒலிக்கவில்லை). அஃதாவது சாப்பறை (இழவு கொட்டு) ஒலித்தது.

             எங்கள் இல்லத்தின் முற்றத்தில் ஒரு ஓரமாக முடங்கிக் கிடந்த உரலை (ஒரு காலத்தில் உயிரோட்டமாய் இருந்து, கிரைண்டர் யுகத்தில் தான் முடக்கப்பட்டதால் நம்மையும் முடங்க வைத்த பொருள்) நகர்த்த வேண்டியிருந்தது. தனியாளாய் நான் முயல, அந்நேரத்தில் வந்த என் ஆருயிர்த்தோழன், “எலேய் ! தனியாவா தூக்குத ? ஒம் முதுகெலும்பு ஒடிஞ்சி இன்னிக்கு எழவுக் கொட்டு அடிக்கணும்ல !” என்றான். இந்த மிகைப்படுத்தலை வள்ளுவன் மேற்கண்ட குறளில் மக்களிடமிருந்து எடுத்தாளக் காண்கிறோம். பாமரன் கோடு போட்டால் பாவலன் ‘ரோடு’ போட வேண்டாமா ? அதுதானே இலக்கிய இன்பம் !

பின் குறிப்பு :

'அனிச்சப் பூ கால் களையாள்' குறள் எனது கட்டுரைகளில் இதற்கு முன் எடுத்தாண்டதுதான். கட்டுரையிலுள்ள குறுந்தொகை, கலிங்கத்துப் பரணி பாடல்கள் முகநூல் அன்பர் கார்த்திக் அவர்களால் கவனம் பெற்றேன். எனவே எனது இக்கட்டுரையை அவருக்கே அன்புடன், நன்றியுடன் காணிக்கை ஆக்குகிறேன்.

தேனுக்குள் இன்பம் -சுப.சோமசுந்தரம்

1 month ago

தினம் ஒரு தமிழ்ப் பாடல் 

                        - சுப.சோமசுந்தரம்

"தேனுக்குள் இன்பம் கறுப்போ சிவப்போ
வானுக்குள் ஈசனைத் தேடும் மதியிலீர்!
தேனுக்குள் இன்பம் செறிந்திருந்தாற் போல்
ஊனுக்குள் ஈசன் ஒளிந்திருந்தானே!"
   --------------திருமந்திரம் பாடல் 3065.

பாடற் குறிப்பு :
புற வழிபாட்டை விட அக வழிபாட்டுச் சிறப்பைக் கூறும் திருமூலரின் மற்றொரு பாடல். எளிமையான வரிகள். இப்பாடலுக்கான  எந்த உரையும் பாடலை விட எளிமையாக அமைய முடியாது. இருப்பினும்....

பாடற் பொருள் :
தேனின் சுவை கறுப்பா சிவப்பா ? வானுக்குள் ஈசனைத் தேடும் மதியற்றோரே ! (இங்கு வான் என்பது புறவுலகிற்கான குறியீடு). தேனுக்குள் அதன் சுவை காட்சிப்படுத்த முடியாமல் ஒன்றறக் (inherent) கலந்ததைப் போல், இந்த  ஊனுடம்புக்குள்ளேயே ஈசன் ஒளிந்துள்ளான்.  அஃதாவது அழிந்து போகும் மனிதனுக்குள்தான் (அல்லது எந்த ஜீவனுக்குள்ளும்) அழியாப் பரம்பொருளான  இறைவன் ஒன்றறக் கலந்துள்ளான்; எனவே அங்கே தேடு என்பதே பொருள். சீவனில் சிவத்தைத் தேடு, Love thy neighbour, அன்பே சிவம் என்று பலவாறு சொல்லிக் கொள்ளலாம்.

பின் குறிப்பு : மெய்யெண்கள் கணத்தை (set of real numbers), (0,1) என்ற இடைவெளியில் (interval) இருவழிக் கோப்பின் (bijective map) மூலமாகப் பொருத்திய பின், என் கணிதப் பேராசிரியர் இத்திருமந்திரப் பாடலைச் சுட்டியது நினைவில் நிழலாடுகிறது. எல்லையில்லாத இறைவன்  எல்லையுள்ள மனிதனில் அடக்கம் - மெய்யெண் கணம் (0,1) என்ற இடைவெளியில் அடங்கியதைப் போல். எண் படித்தாலே எழுத்தும் வரும் போல.

குகனொடும் ஐவரானோம் - சுப.சோமசுந்தரம்

1 month 1 week ago

தினம் ஒரு தமிழ்ப் பாடல் 

- சுப.சோமசுந்தரம்

என் இளம் பிராயத்தில் என் ஆச்சி (பாட்டி) அடுத்த வீட்டு ஆச்சியிடம் என் சேட்டைகள் குறித்து அங்கலாய்த்தாள், “ஒம் பேரன் என்னா சேட்டை பண்ணுதாங்கே !”. நிஜத்தில் நான் இவளுக்குத்தான் பேரன். என்னை அவள் பேரன் ஆக்கியது அவர்களது நட்பின், உறவின் நெருக்கத்தைக் காட்டுவது. சில காலம் கழித்துத் தமிழாசிரியர், கம்பனின் யுத்த காண்டத்தில்

“குகனொடும் ஐவர் ஆனோம் முன்பு பின் குன்று சூழ்வான்

மகனொடும் அறுவரானோம் எம்முழை அன்பின் வந்த

அகனமர் காதல் ஐய நின்னொடும் எழுவர் ஆனோம்

புகலருங் கானம் தந்து புதல்வராற் பொலிந்தான் நுந்தை"

      என இராமன் வீடணனுக்குச் சொன்னதை எடுத்துரைத்த போது சத்தியமாக என் ஆச்சிதான் நினைவுக்கு வந்தாள். தயரதனின் நான்கு புதல்வரோடு குகனை ஐந்தாவதாக, சுக்ரீவனை (குன்று சூழ்வான் மகன்) ஆறாவதாக, அன்பினால் எதிரிக் கோட்டையிலிருந்து வந்த வீடணனை ஏழாவதாக வரிசைப்படுத்துகிறான் இராமன். அத்தோடு நின்றானில்லை. “அரிய கானக வாழ்வை எமக்குத் தந்து மென்மேலும் புதல்வர்களால் பொலிவு பெற்றான் உன் தந்தை (நுந்தை)" என்கிறான். வீடணனை உடன்பிறப்பாய் ஏற்ற இராமன்  தன் தந்தையை 'உன் தந்தை' எனச் சொல்லி உடன்பிறப்பு எனும் உறவை உடனே உறுதிப்படுத்துகிறான். தன் பேரனை 'உன் பேரன்' எனத் தோழியிடம் சொன்ன என் ஆச்சி கம்பனை அறிந்தாளில்லை. கம்பன் அவளை அறிந்திருக்கிறான் என்பதை உணர்ந்து வியந்துதான் போனேன்.

இலக்கிய உறுபொருள் - சுப.சோமசுந்தரம்

1 month 1 week ago

இலக்கிய உறுபொருள்

- சுப.சோமசுந்தரம்

எனது பள்ளித் தோழர்களுக்கான வாட்ஸ்அப் குழுமத்தில் 'தினம் ஒரு தமிழ்ப் பாடல்' எனும் தலைப்பில், எனது சிறிய இலக்கிய வாசிப்பின் அடிப்படையில், தற்போது சுருக்கமாகப் பதிவிடுகிறேன். அங்கு இன்றைய என் பதிவை இங்கும் பகிரத் தோன்றியது.

         இன்றைய இப்பதிவின் நோக்கங்கள் இரண்டு (இரு நோக்கு இதன் கண்ணுளது !). ஒன்று, நட்பின் திறம் பேசுவது; இரண்டு, இலக்கியத்தின் உறுபொருள் பற்றியது.

           மனதின் மென்மையான உணர்வுகளைப் படம் பிடிப்பதில் கம்பன் கைதேர்ந்த கலைஞன். நட்பின் திறம் கூற ஓரிடத்தில் ராமனையும் சுக்ரீவனையும் கையிலெடுக்கிறான். கம்பராமாயணம் பாடல் 3812 இல்

"வானிடை மண்ணில் நின்னைச் செற்றவர்

என்னைச் செற்றார் தீயரே எனினும்

உன்னோடு உற்றவர் எனக்கும் உற்றார்"

என்று சுக்ரீவனிடம் நட்பு பாராட்டுகிறான் இராமன்.

பாடற் பொருள் :

விண்ணுலகானாலும் மண்ணுலகானாலும் உன்னைப் பகைத்தவர் (செற்றவர்) என்னையும் பகைத்தார்; தீயவராய் இருப்பினும் உனக்கு வேண்டியவர் எனக்கும் வேண்டியவர்.

            இலக்கியம் அறிந்தோர் ஒரு பாடலை மேம்போக்காகப் பொருள் கொள்வதில்லை. 'தீயரே எனினும்' என்றது நட்பின் திண்மை பற்றிக் கூற வந்த உயர்வுநவிற்சி. அவ்வளவே ! மேலும் அது தேர்ந்து தெளிந்த நட்பின் மீது உள்ள நம்பிக்கை. அத்தகு நண்பன் தீயோரை நட்பாகக் கொள்ள மாட்டான் என்ற நம்பிக்கையும் உள்ளடக்கியது.

"பெயக்கண்டும் நஞ்சுண் டமைவர் நயத்தக்க

நாகரிகம் வேண்டு பவர்"

                 (குறள் 580)

என்ற வள்ளுவமும் நட்பின் வலிமையும் நம்பிக்கையும் பற்றியது. மேலும், தேர்ந்து தெளிந்த நண்பன் தந்ததோ சொன்னதோ மனதிற்கு ஏற்புடைத்தாய் இல்லையெனினும் அதனை ஏற்றமைவது நாகரிகம் என்பதன் குறியீடே குறளில் வந்த நஞ்சும் நாகரிகமும்.

"முந்தையிருந்து நட்டோர் கொடுப்பின்

நஞ்சும் உண்பர் நனிநாகரிகர்"

              (நற்றிணை பாடல் 355; வரிகள் 6 & 7)

என்று மேற்சொன்ன குறளுக்கு நல்ல இணையாக நற்றிணை பகர்வதும் உவந்து நோக்கத்தக்கது.

வில்லுப்பாட்டு கச்சேரி எப்படி அமைய வேண்டும்.

1 month 3 weeks ago

வில்லுப்பாட்டு கச்சேரி என்பது, கீழ்கண்ட கருத்தில் இருக்க வேண்டும். மக்களுக்கும் புரிய வேண்டும்.

வில்லுப்பாட்டுக்கான கதைகள் பல்வேறு வகையில் அமைகின்றன. மரபு வழிக்கதைகள் முதல் தற்கால நிகழ்வுகள் வரை எதையும் வில்லுப்பாட்டுக்கான கதையாகக் கொள்ளலாம். ஆனால் கட்டமைப்பு நிலையில் அவை பொதுவான வடிவத்தைக் கொண்டு விளங்குவதைக் காணலாம்.

வில்லுப்பாட்டில் வரும் கதைகள் பொதுவாகப் பின்வருமாறு அமையும், அவை

அ) தொன்மைக் கதைகள்

ஆ) நாட்டுப்புறக் கதைகள்

இ) தெய்வக் கதைகள்

ஈ) சமுதாயக் கதைகள்

உ) வரலாற்று வீரர் கதைகள்

ஊ) நடப்பியல் நிகழ்வுகள்

போன்றனவாகும்.

இவ்வகையில் அய்யன் கதை, வள்ளியம்மன் கதை, பார்வதியம்மாள் கதை, மார்க்கண்டன் தவசு, அரிச்சந்திரன் கதை, கிருட்டிணசாமி கதை, பெருமாள்சாமி கதை, மாகாளியம்மன் கதை, இராமாயணக் கதைகள், சுடலைமாடன் கதை, நீலி கதை, முத்துப்பட்டன் கதை, சின்ன நாடான் கதை, தோட்டுக்காரி அம்மன் கதை, ஐவர் ராசாக்கள் கதை, கான்சாகிபு போர், கட்டபொம்மன் கதை, காந்திமகான் கதை போன்றவை குறிப்பிடத்தக்க வில்லுப்பாட்டுக் கதைகளாகும்.

எடுத்துக்காட்டாக, மக்களிடம் மிகவும் செல்வாக்குப் பெற்று விளங்கிய ‘அரிச்சந்திரன் கதை’யைப் பார்ப்போம்.

அரிச்சந்திரன் கதை நாம் வழி வழியாக அறிந்து வரும் கதைதான். தனது நாட்டை இழந்தும் மனைவியையும் மகனையும் பிரிந்தும் வாழ்கிறான். அரிச்சந்திரன், தன்னையே விற்கும் நிலைக்குத் தள்ளப்பட்டு, சுடுகாடு காக்கும் பணி மேற்கொண்ட போதும் உண்மைக்காக கொண்ட கொள்கை தவறாமல் இருக்கிறான். கடைசியில் தனது வாய்மை மூலம் வெற்றி காண்கிறான்.

அரிச்சந்திரன் கதையில் வரும் துயரம் மிகுந்த காட்சிகள் வில்லுப்பாட்டிற்கு மிகவும் ஏற்ற சூழலைத் தருவதால் இக்கதை வில்லுப்பாட்டுக்கென விரும்பி ஏற்றுக்கொள்ளப்படுகிறது.

Muni Samy

பிழை என்பது என்ன?

2 months 1 week ago

பிழை என்பது என்ன? குற்றம் என்பது என்ன ?

தவறு என்று தெரியாமல் செய்வது பிழை

தெரிந்தே செய்வது குற்றம்

பிழை மன்னிக்கப்படலாம்

தவறு தண்டிக்கப்படும்

பிழை வேறு குற்றம் வேறு

Checked
Wed, 06/11/2025 - 01:54
தமிழும் நயமும் Latest Topics
Subscribe to தமிழும் நயமும் feed