நாவூற வாயூற

நாட்டு மாட்டுப் பாலில் தயாராவதாக கூறப்படும் ஏ2 நெய் கூடுதல் நன்மை தரும் என்பது உண்மையா?

1 month 2 weeks ago

ஏ1, ஏ2 நெய் இரண்டில் எது சிறந்தது?

பட மூலாதாரம், GETTY IMAGES

படக்குறிப்பு, ஏ2 நெய் வழக்கமான நெய்யை விட அதிக பலனளிக்குளிக்குமா என்பது குறித்து விவாதம் எழுந்துள்ளது

கட்டுரை தகவல்

  • தீபக் மண்டல்

  • பிபிசி செய்தியாளர்

  • 28 ஜூலை 2025, 03:22 GMT

இந்தியா முழுவதும் சந்தைகளில் ஏ1, ஏ2 என்ற பெயருடன் பால், நெய் மற்றும் வெண்ணெய் விற்பனைக்கு வந்துள்ளது.

வழக்கமான உள்ளூர் நெய்யைவிட ஏ2 நெய் ஆரோக்கியமானது என்ற முறையில் சந்தைப்படுத்தப்படுகின்றன.

சாதாரண உள்ளூர் நெய் சந்தையில் ஒரு கிலோ ரூ.1,000-க்கு விற்பனை செய்யப்பட்டால், ஏ2 நெய் ஒரு கிலோ ரூ.3,000 வரை விற்பனை செய்யப்படுகிறது.

பால் பொருட்களை தயாரிக்கும் நிறுவனங்கள் ஏ2 நெய் நாட்டு மாட்டு பாலிலிருந்து தயாரிக்கப்படுவதால் கூடுதல் பலனளிப்பதாகக் கூறுகின்றன.

இதில், இயற்கையாக கிடைக்கும் A2 பீட்டா-கேசின் புரதம் உள்ளதாகவும், இந்த புரதம் சாதாரண பாலில் காணப்படும் A1 புரதத்தை விட எளிதில் செரிக்கக் கூடியது என்றும், உடலில் உள்ள அழற்சியைக் குறைப்பதாகவும் அந்நிறுவனங்கள் கூறுகின்றன.

இந்த நெய்யில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், கான்ஜுகேட்டட் லினோலிக் அமிலம் (CLA), மற்றும் A, D, E, K வைட்டமின்கள் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஏ2 நெய் செரிமான மண்டலத்தை வலுப்படுத்துவதாகவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதாகவும், தோல் நிறத்தை மேம்படுத்துவதாகவும் கூறப்படுகிறது.

இது இதய நோய்களுக்கு நல்லது என்றும் கூறப்படுகிறது. இந்த நெய்யை உட்கொள்வது காயங்களை விரைவாக குணப்படுத்த உதவும் என்றும் பால் நிறுவனங்கள் கூறுகின்றன.

பால் பொருள் நிறுவனங்கள் இதை ஒரு புதிய சூப்பர்ஃபுட் ஆக விற்பனை செய்கின்றன.

ஏ1 மற்றும் ஏ2 என்ற பெயரில் பால்பொருட்களை விற்பனை செய்வது சரியா?

எஃப்.எஸ்.எஸ்.ஏ.ஐ. கடந்த வருடம் வெளிய்ட்ட சுற்றறிக்கை

பட மூலாதாரம், FOOD SAFETY AND STANDARDS

படக்குறிப்பு, ஏ1, ஏ2 பால் பொருட்கள் குறித்து எஃப்.எஸ்.எஸ்.ஏ.ஐ. கடந்த வருடம் வெளியிட்ட சுற்றறிக்கை

இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரநிலை ஆணையம் (FSSAI) இத்தகைய ஏ1 மற்றும் ஏ2 என்ற பெயரிடலுடன் பால், நெய், வெண்ணெய் விற்பதை தடை செய்திருந்தது. ஏ2 என்ற பெயரில் நெய் விற்பது தவறான தகவலை அளிப்பதாக உள்ளது என்றும் கூறியது.

கடந்த ஆண்டு, ஏ1 அல்லது A2 என்ற பெயரிடலுடன் பால் அல்லது பால் பொருட்களை விற்பது தவறான தகவலை அளிப்பது மட்டுமல்லாமல், 2006 உணவு பாதுகாப்பு மற்றும் தரநிலைகள் சட்டத்தையும், அதன் அடிப்படையில் வகுக்கப்பட்ட விதிகளையும் மீறுவதாக உள்ளது என்று எஃப்.எஸ்.எஸ்.ஏ.ஐ. ஒரு சுற்றறிக்கை வெளியிட்டிருந்தது.

ஏ1 மற்றும் ஏ2 என்ற பெயரிடலுடன் உள்ள தயாரிப்புகளை 6 மாதங்களுக்குள் நிறுத்துமாறு நிறுவனங்களுக்கு எஃப்.எஸ்.எஸ்.ஏ.ஐ உத்தரவிட்டது.

ஆனால், எஃப்.எஸ்.எஸ்.ஏ.ஐ. ஒரு வாரத்துக்குள் தனது அறிவுறுத்தலை திரும்பப் பெற்றது.

ஏ1 மற்றும் ஏ2 என பெயரிடப்பட்ட பால் பொருட்கள் உண்மையில் ஆரோக்கியத்துக்கு கூடுதல் நன்மை தருகிறதா என்பதுதான் கேள்வி.

ஏ2 நெய் வழக்கமான நெய்யை விட உடலுக்கு அதிக பயனளிக்குமா மற்றும் இதற்கு அதிக மருத்துவ குணங்கள் உள்ளனவா?

ஏ1 மற்றும் ஏ2 பால் அல்லது நெய் என்றால் என்ன?

A1 மற்றும் A2 இடையிலான வேறுபாடு, பாலில் காணப்படும் முக்கிய புரதமான பீட்டா-கேசின் புரதத்தை அடிப்படையாகக் கொண்டது.

பட மூலாதாரம், GETTY IMAGES

படக்குறிப்பு, ஏ1 மற்றும் ஏ2 இடையிலான வேறுபாடு, பாலில் காணப்படும் முக்கிய புரதமான பீட்டா-கேசின் புரதத்தை அடிப்படையாகக் கொண்டது.

ஏ1 மற்றும் ஏ2 இடையிலான வேறுபாடு, பாலில் காணப்படும் முக்கிய புரதமான பீட்டா-கேசின் புரதத்தை அடிப்படையாகக் கொண்டது. முக்கியமாக இந்த வேறுபாடு பசுவின் இனத்தை சார்ந்து இருக்கிறது.

பாலில் காணப்படும் புரதங்களில் பீட்டா-கேசின் ஒரு முக்கியமான புரதம் என தேசிய வேளாண் அறிவியல் அகாடமி (NAAS) ஆய்வுக் கட்டுரை கூறுகிறது.

பசுவின் பாலில் உள்ள மொத்த புரதத்தில் 95% கேசின் மற்றும் வேய் (whey) புரதங்களால் ஆனது. பீட்டா-கேசின் அமினோ அமிலங்களின் சமநிலையை கொண்டுள்ளது.

இரண்டு வகையான பீட்டா-கேசின்கள் உள்ளன. ஐரோப்பிய இன பசுக்களின் பாலில் அதிகம் காணப்படும் ஏ1 பீட்டா-கேசின் மற்றும் இந்திய உள்நாட்டு பசுக்களின் பாலில் இயற்கையாக காணப்படும் ஏ2 பீட்டா கேசின்.

ஏ1 மற்றும் ஏ2 பீட்டா-கேசின் புரதங்கள் அமினோ அமில அளவில் வேறுபடுகின்றன. இது புரதத்தின் செரிமான செயல்முறையை பாதிக்கிறது.

சில ஆய்வுகள் ஏ2 பால் செரிக்க எளிதாக இருக்கலாம் மற்றும் ஆரோக்கியத்தில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்று கூறுகின்றன, ஆனால் இதுகுறித்து மேலும் ஆய்வுகள் தேவை. போதுமான ஆய்வுகள் இல்லாததால், இது கூடுதல் நன்மைகளை தருகிறது என்று நிரூபிக்கப்படவில்லை.

ஏ2 நெய் குறித்து பால் பொருள் நிபுணர்கள் கூறுவது என்ன?

ஏ2 நெய்யின் நன்மை குறித்து நிபுணர்கள் கேள்வி எழுப்புகின்றனர்

பட மூலாதாரம், GETTY IMAGES

படக்குறிப்பு, ஏ2 நெய் தொடர்பாக கூறப்படுபவை பற்றி நிபுணர்கள் கேள்வி எழுப்புகின்றனர்

ஏ2 நெய் உண்மையில் வழக்கமான நெய்யை விட அதிக பயனளிக்குமா அல்லது இதுகுறித்து மிகைப்படுத்தப்பட்ட கூறப்படுகிறதா என்பதை அறிய பிபிசி இந்தி, சில பால் பொருள் நிபுணர்களிடம் கேட்டது.

எங்கள் கேள்விக்கு பதிலளித்த அமுலின் முன்னாள் நிர்வாக இயக்குநரும், தற்போது இந்திய பால் பண்ணையாளர் சங்கத்தின் தலைவருமான ஆர்.எஸ். சோதி, "இந்த விளம்பரத்தை அதிலும் குறிப்பாக ஆன்லைன் சந்தையில் பார்த்து வருகிறேன். அங்கு பிரபலமான கூட்டுறவு நிறுவனங்கள் மற்றும் நிறுவனங்கள் தங்கள் சிறந்த நெய்யை ஒரு கிலோ ரூ.600 முதல் ரூ.1,000 வரை விற்கின்றன.

அதே நேரத்தில், அதே நெய்யை ஏ2 என்று பெயரிட்டு கிலோ இரண்டு முதல் மூவாயிரம் ரூபாய்க்கு விற்கின்றனர். இது வெவ்வேறு வழிகளில் விளம்பரப்படுத்தப்படுகிறது. சிலர் இதை பிலோனா நெய் என்றும், சிலர் உள்நாட்டு பசு இனங்களின் பாலில் இருந்து தயாரிக்கப்பட்ட ஆரோக்கியமான நெய் என்றும் விற்கின்றனர்," என்று தெரிவித்தார்.

"ஏ1 மற்றும் ஏ2 என்பது ஒரு கொழுப்பு அமில சங்கிலியுடன் இணைக்கப்பட்டுள்ள ஒரு வகை புரதம் என்பதை முதலில் தெளிவுபடுத்திவிடுகிறேன். இப்போது எது சிறந்தது என்று விவாதம் நடந்து வருகிறது, ஆனால் எது சிறந்தது என்பதற்கு எந்த அறிவியல் ஆதாரமும் இல்லை என்பதை சொல்லிக்கொள்கிறேன்.

இது விவாதத்திற்கு உரிய விஷயமே இல்லை. ஆனால் ஏ2 சிறந்தது என்று கூறப்படுகிறது, இது தவறு. இவை இரண்டு வகையான பீட்டா-கேசின் புரதங்கள், இந்த புரத சங்கிலியின் 67-வது அமினோ அமிலத்தின் மாற்றத்தால் இந்த வேறுபாடு ஏற்படுகிறது," என்று அவர் தெரிவித்தார்.

ஏ2 நெய்யின் ஊட்டச்சத்து பலன்கள் மற்றும் அதன் மருத்துவ குணங்கள் குறித்து மிகைப்படுத்தப்பட்ட கூற்றுகள் உள்ளன என்று ஆர்.எஸ். சோதி கூறுகிறார்.

"நெய்யில் 99.5 சதவிகிதம் கொழுப்பு உள்ளது. வேறு சிலவும் உள்ளன. எனவே எனது நெய்யில் ஏ2 புரதம் உள்ளது, இது உடலுக்கு மிகவும் பயனளிக்கும் என்று எப்படி கூற முடியும்?" என்று அவர் கேள்வி எழுப்புகிறார்.

அவரது கருத்துப்படி, இது மக்களை ஏமாற்றுவதைத் தவிர வேறொன்றுமில்லை. இது சந்தைப்படுத்தல் மூலம் மக்களை ஏமாற்றுவதாகும்.

ஆனால், A2 நெய் விற்கும் பல பிராண்டுகள் வந்து போய்விட்டன என்றும், அவை சந்தையில் நிலைத்திருப்பது கடினம் என்றும் அவர் கூறுகிறார். ஏனெனில், இந்த நிறுவனங்கள் சந்தைப்படுத்தலுக்கு அதிகம் செலவு செய்கின்றன, பின்னர் தாக்குப்பிடிக்க முடியாமல் அவை சந்தையில் இருந்து வெளியேறுகின்றன.

சுகாதார நிபுணர்கள் கூறுவது என்ன?

ஏ2 நெய் என்பது ஒரு விளம்பர உக்தி என பெரும்பாலானவர்கள் கூறுகின்றனர்

பட மூலாதாரம், GETTY IMAGES

படக்குறிப்பு, ஏ2 நெய் என்பது ஒரு விளம்பர உக்தி என பெரும்பாலானவர்கள் கூறுகின்றனர்

ஏ2 நெய் என்ற பெயரில் விற்பனை செய்யப்படும் நெய் வழக்கமான நெய்யை விட அதிக பலன் தரக்கூடியது என சொல்லப்படுவது குறித்து சுகாதார வல்லுநர்களும் கேள்வி எழுப்புகின்றனர்.

டெல்லியில் உள்ள மனித நடத்தை மற்றும் இணை அறிவியல் நிறுவனத்தில் மூத்த உணவியல் நிபுணரான மருத்துவர் விபூதி ரஸ்தோகி, "ஏ2 நெய் என்ற பெயரில் விற்கப்படும் நெய் வழக்கமான நெய்யை விட அதிக பயனளிக்கும் என்று கூறப்படுவது அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்படும் வரை, இந்த நெய் சிறந்தது என்று எப்படி கூற முடியும்?" என பிபிசி இந்தியிடம் தெரிவித்தார்.

"இரண்டாவது, இந்த வகையான நெய் இயந்திரங்கள் மூலம் பிரித்தெடுக்கப்படவில்லை என நீங்கள் கூறினால், ஏ2 புரதம் பாலிலிருந்து எவ்வாறு பிரித்தெடுக்கப்படுகிறது என்ற கேள்வி எழுகிறது. அவ்வாறு செய்வது சாத்தியமில்லை. ஏ2 நெய் வழக்கமான நெய்யை விட அதிக பலனளிக்கிறது என்பது அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்படும்வரை அது ஒரு விற்பனை தந்திரம் என்றே அழைக்கப்படும் என்பதுதான் உண்மை. ஏ2 புரதம் சிறந்தது என்பதற்கு இதுவரை எந்த ஆதாரமும் இல்லை."

நெய் புரதத்திற்காக உண்ணப்படுவதில்லை என்றும் கூறுகிறார் மருத்துவர் ரஸ்தோகி. ஆனால் ஏ2 நெய் புரதத்தின் பெயரால் விற்பனை செய்யப்படுகிறது. நெய்யில் பெயரளவுக்கே புரதம் இருக்கிறது.

ஆயுர்வேதத்தின் படி ஏ2 கூடுதல் நலன்ளுடையது என்று நிறுவனங்கள் கூறுகின்றன. ஆனால் ஏ2 நெய் என சொல்லப்படுவதை உண்பது ஆரோக்கியத்திற்கு நல்லது என ஆயுர்வேதம் எந்த கூற்றையும் முன்வைக்கவில்லை என்றார் அவர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c8rpr2xy65jo

தொதல் அல்வா.

1 month 3 weeks ago

images?q=tbn:ANd9GcQGxxLCdbr6CmGQVELI3Wl

ஸ்ரீலங்கா போறேனு ஒரு நண்பர் கிட்ட சொல்லவும் எப்படானு ஆரமிச்சு எப்ப வருவனு அவளோ பரவசமா ஆனான். ஏன் இப்ப இவன் சந்திரமுகில ஜோதிகா ஒட்டியாணத்த பாத்த மாதிரி இவளோ பரவசமாகுறான் ஒரு வேல சரக்கு வாங்கியார சொல்லுவான் போலனு மைன்ட்ல யோசிக்கறப்பயே..... வரும் போது மறக்காம தொதல் அல்வா வாங்கிட்டு வானு சொன்னான். அதென்னடா இங்கலாம் கிடைக்காத அல்வா அங்க ஸ்பெசலா?


இங்கயும் நிறைய இடத்துல கிடைக்குது ஆனா அந்த டேஸ்ட் இங்க எங்கயுமே வரல வேற லெவல் வேற லெவல்னு யூடியூபர் மாதிரி ரிவியூ தந்துட்ருந்தான். வாங்கிட்டு வரலனா வெளுத்துவிட்ருவேன் பாத்துக்கனு வேற கொஞ்சம் ஓவராதான் பண்ணான். சர்ரா சர்ரா டியூட்டி ப்ரீல சரக்கு வாங்கி வர சொல்லும் நண்பர்களுக்கு மத்தியில் அல்வா வாங்கி வர சொல்ற நண்பர்களை சம்பாதிச்சு வைச்சுருக்க என்னை நினைத்து எனக்கே பெருமையா இருந்தது. சினிமாலலாம் அப்படியே கிராபிக்ஸ்ல 40-50 அடிக்கு உயர்வாங்களே அப்படி உயரமா தெரிஞ்சேன்.


நா ஊருக்கு கிளம்பறத நியாவகம் வைச்சு கிளம்ப முன்னாடி போன் வேற செஞ்சு நியாவகப்படுத்தினான். பேற நியாவகம் இல்ல அதெங்க நியாவகம் இருக்க போகுதுனு இங்கேந்து கிளம்பற முன்னயே நண்பர்கள்கிட்ட மெசேஜ் போட்டு வைச்சேன்...எங்க கிடைக்குமோ மறக்காம வாங்கி குடுத்துடுங்க இல்லனா இங்க என்ன ஒருத்தன் விடமாட்டான்னு. நினைத்தது மாதிரியே அந்த விஷயம் சுத்தமா மறந்து போச்சு. ஆனா நா சொன்னத நியாவகம் வைத்து நண்பர்கள் மறக்காம ஆளாளுக்கு வாங்கி தந்து குடுத்தப்ப ரொம்பவே ஆச்சரியமாருந்தது. ❤️ யாழ்பானம் ஏர்போர்ட் செக்கிங்ல கூட ஏதோனு பைய பிரிச்சு காட்ட சொல்ல தொதல் அல்வானு சொன்னதுமே சார் தொதல் அல்வாவாம் சார்னு சல்யூட் அடிக்காத குறையாக விட்டு விட்டனர்.


தொதல் அல்வா நம்மூர் ராமநாதபுரம் பக்கம் கீழக்கரை ஸ்பசலாம். இலங்கைலயும் ஸ்பெசல்....சும்மா சொல்லக்கூடாது அவளோ தரம்😋நிஜமா அவளோ சுவை.. திருநெல்வேலி அல்வால தேங்காய்ப்பால் ஊத்தின மாதியே இருந்தது அதோட சுவை😋 எனக்கு மட்டும் இல்லாம வீட்ல நான் தந்த நண்பர்கள்னு எல்லாருக்குமே அவளோ பிடிச்சுது.நல்லாருக்குனு இப்ப வரை சொல்லிட்டே இருக்காங்க.

இப்ப என்னைய விட கேட்டத நியாவகம் வைச்சிருந்து மறக்காம வாங்கி தந்து அனுப்பிய அந்த நண்பர்கள் உயரமாக தெரிகின்றனர்.

படித்ததில் பிடித்தது.

ஊட்டச்சத்துகள் நிறைந்த கருவாட்டில் ஒளிந்திருக்கும் ஆபத்து - குழந்தைகள் சாப்பிடலாமா?

1 month 3 weeks ago

கருவாடு சாப்பிடுவது உடலுக்கு நல்லதா? மருத்துவர்கள் எச்சரிப்பது ஏன்?

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, கருவாட்டில் மேம்பட்ட புரதம், கால்சியம், இரும்புச் சத்து, ஒமேகா-3 கொழுப்பு அமிலம் ஆகியவை உள்ளன.

கட்டுரை தகவல்

  • அன்பு வாகினி

  • பிபிசி தமிழுக்காக

  • 9 மணி நேரங்களுக்கு முன்னர்

கருவாடு, தமிழர்களின் உணவுப் பழக்கத்தில் ஒரு தனித்துவமான இடத்தைப் பிடித்துள்ளது. குறிப்பாகக் கடலோரப் பகுதிகளில் இது பல நூற்றாண்டுகளாகப் பயன்பாட்டில் உள்ளது.

தமிழகத்தில் 3000 ஆண்டுகளுக்கு முன்பே மீனை சூரிய ஒளியில் காயவைத்து கருவாடு ஆக்கும் முறை இருந்ததை சங்க இலக்கியக் குறிப்புகள் காட்டுகின்றன.

உலகளாவிய மீன் உற்பத்தியில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது. இந்தியாவின் மொத்த மீன் உற்பத்தி 16.5 மில்லியன் மெட்ரிக் டன். இதில் 75% நன்னீர் மீன்பிடிப்பு, 25% கடல் மீன்பிடிப்பு. புதிதாகப் பிடித்த மீனைவிட நீண்ட காலம் பாதுகாக்கப்படக் கூடிய கருவாடு எனப்படும் உணவு வகை கடலோர மக்களின் ஊட்டச்சத்துத் தேவைகளைப் பூர்த்தி செய்வதோடு, அவர்களின் பொருளாதாரத்திற்கும் ஒரு முக்கிய ஆதாரமாக விளங்குகிறது.

கருவாட்டில் மேம்பட்ட புரதம், கால்சியம், இரும்புச் சத்து, ஓமேகா-3 கொழுப்பு அமிலங்கள் அதிகம் உள்ளதால் நம் உடல்நலத்தைக் காக்கும் ஒரு 'சூப்பர் ஃபுட்' ஆகவும் இது கருதப்படுகிறது. கருவாட்டில் ஊட்டச்சத்து அதிகம் உள்ளதால் சிறிய அளவில் உட்கொண்டாலே நமக்குத் தேவையான ஊட்டச்சத்து கிடைத்துவிடும்.

ஆனால், கருவாட்டின் ஊட்டச்சத்து முக்கியத்துவம், உணவுப் பாதுகாப்பில் அதன் பங்கு, சிறிய மீன்களின் சிறப்புகள், மருத்துவர்களின் எச்சரிக்கைகள், நவீன தீர்வுகள் பற்றி அறிந்திருக்க வேண்டியது அவசியம். அதுகுறித்து இங்கு விரிவாகப் பார்ப்போம்.

கருவாட்டின் ஊட்டச்சத்து எவ்வளவு மதிப்பு வாய்ந்தது?

கருவாடு சாப்பிடுவது உடலுக்கு நல்லதா? மருத்துவர்கள் எச்சரிப்பது ஏன்?

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, நூறு கிராம் கருவாட்டில் 60-80% வரை புரதம் உள்ளது

தமிழர்களின் பாரம்பரிய சமையல் முறையில், கருவாடு பல்வேறு வடிவங்களில் பயன்படுத்தப்படுகிறது. கருவாட்டுக் குழம்பு, கருவாட்டுப் பொடி சாம்பார், கருவாட்டு வறுவல் போன்றவை தமிழ்நாட்டின் பல பகுதிகளில் பிரபலமான உணவு வகைகள். குறிப்பாக கடலோர மாவட்டங்களான நாகப்பட்டினம், தூத்துக்குடி, ராமநாதபுரம் போன்ற பகுதிகளில் கருவாடு அன்றாட உணவில் முக்கியமான இடத்தைப் பிடித்துள்ளது.

கருவாடு ஊட்டச்சத்து நிறைந்த ஒரு சக்தி வாய்ந்த உணவு. 100 கிராம் கருவாட்டில் 60-80% வரை புரதம் உள்ளது. இது இறைச்சி, முட்டையைவிட அதிகமான அளவு. இந்த மேம்பட்ட புரதம் அனைத்து அத்தியாவசிய அமினோ அமிலங்களையும் கொண்டுள்ளது. இது எளிதில் செரிமானமாகி, தசை வளர்ச்சி, உடல் வளர்ச்சிக்கு உதவுகிறது.

சிறிய மீன்களான நெத்திலி, கெளுத்தி, பாறை போன்றவற்றில் கால்சியம், இரும்புச்சத்து அதிக அளவில் காணப்படுகிறது. இவை எலும்புகளின் வலிமைக்கும், ரத்த சோகையைத் தடுப்பதற்கும் அவசியம்.

சிறிய மீன்களின் முழு உடலையும் (எலும்புகள் உள்பட) உண்ண முடியும் என்பதால், இவை பெரிய மீன்களைவிட 2-3 மடங்கு அதிக கால்சியம், 5-10 மடங்கு அதிக இரும்பு ஆகியவற்றைக் கொண்டுள்ளதாக இந்திய ஊட்டச்சத்து நிறுவனத்தின் (NIN) ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. இது குறிப்பாக வளரும் குழந்தைகள், கர்ப்பிணிகள், முதியவர்களுக்கு மிகவும் ஏற்ற சத்தான உணவு.

கருவாடு சாப்பிடுவது உடலுக்கு நல்லதா? மருத்துவர்கள் எச்சரிப்பது ஏன்?

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, கருவாட்டில் வைட்டமின் டி, ஏ, பி12 போன்ற முக்கியமான வைட்டமின்கள் அதிக அளவில் உள்ளன

மேலும், ஓமேகா-3 கொழுப்பு அமிலங்கள் மூளை, இதய ஆரோக்கியத்திற்கு உதவுகின்றன. ஓமேகா-3 கொழுப்பு அமிலங்கள் மூளையின் செயல்பாட்டை மேம்படுத்தவும், குழந்தைகளின் கற்றல் திறன், நினைவாற்றலை அதிகரிக்கவும் உதவுகின்றன. இவை ரத்த அழுத்தம், இதய நோய் அபாயத்தைக் குறைக்கவும் உதவுகின்றன.

கருவாட்டில் வைட்டமின் டி, ஏ, பி12 போன்ற முக்கியமான வைட்டமின்கள் அதிக அளவில் உள்ளன. வைட்டமின் டி எலும்புகளின் வலிமைக்கு அவசியமானது. வைட்டமின் ஏ கண்பார்வை, நோய் எதிர்ப்பு சக்திக்கு நல்லது.

வைட்டமின் பி12 நரம்பு மண்டலம், ரத்த சிவப்பு அணுக்கள் உற்பத்திக்கு மிகவும் அவசியம். துத்தநாகம், செலீனியம் போன்ற தாது உப்புகள் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தி, தொற்று நோய்களில் இருந்து பாதுகாப்பு அளிக்கின்றன.

உணவு மற்றும் வேளாண்மை அமைப்பின் (FAO) சமீபத்திய ஆய்வுகளும், ஊட்டச்சத்துக் குறைபாடு உள்ள நாடுகளில் கருவாட்டைப் பயன்படுத்தி அதைக் குறைக்க முடியும் என்பதை உறுதிப்படுத்துகின்றன.

கருவாட்டை எவ்வாறு பாதுகாப்பான முறையில் உணவுத் திட்டங்களில் ஒருங்கிணைக்கலாம் என்பதற்கான நடைமுறைப் பரிந்துரைகளையும் அந்த அமைப்பு வழங்குகிறது.

எந்த கருவாட்டில் என்ன ஊட்டச்சத்து அதிகம் உள்ளது?

கருவாடு சாப்பிடுவது உடலுக்கு நல்லதா? மருத்துவர்கள் எச்சரிப்பது ஏன்?

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, நெத்திலி, கெளுத்தி, பாறை, வாளை, சூரை போன்ற மீன் வகைகள் கருவாடு தயாரிக்கப் பயன்படுத்தப்படுகின்றன

உலகம் முழுவதும், குறிப்பாக வளரும் நாடுகளில், உணவு, ஊட்டச்சத்துப் பாதுகாப்பு பெரிய சவாலாக உள்ளது. இந்த சவாலைச் சமாளிக்க சிறிய மீன்கள் ஒரு முக்கியத் தீர்வாக மாறியுள்ளன.

சிறிய மீன்கள் விலை குறைவாகவும் ஊட்டச்சத்து நிறைந்ததாகவும் இருப்பதால் அவற்றை 'ஊட்டச்சத்து சூப்பர் ஸ்டார்ஸ்' என்று உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு அழைக்கிறது. வங்கதேசம், கம்போடியா போன்ற நாடுகளில் சிறிய மீன்கள் உள்ளூர் மக்களின் அன்றாட ஊட்டச்சத்துத் தேவைகளைப் பூர்த்தி செய்கின்றன.

இந்தியாவில் ஒடிசா மாநிலம் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி சேவை (ICDS ) திட்டத்தில் சிறுமீன் கருவாட்டை குழந்தைகளின் உணவில் சேர்த்து, ஊட்டச்சத்துக் குறைபாடுகளைக் குறைப்பதற்கான ஆய்வுகளை மேற்கொண்டு வெற்றிகரமான முடிவுகளை வெளியிட்டுள்ளது.

கருவாடு தயாரிப்பில் பயன்படுத்தப்படும் மீன் வகைகளும் முக்கியமானவை. நெத்திலி, கெளுத்தி, பாறை, வாளை, சூரை போன்றவை பொதுவாகப் பயன்படுத்தப்படுகின்றன.

ஒவ்வொரு மீன் வகையும் தனித்துவமான ஊட்டச்சத்துச் சிறப்புகளைக் கொண்டுள்ளன. எடுத்துக்காட்டாக, நெத்திலி, கால்சியம் அதிகம் கொண்டது. கெளுத்தி, ஓமேகா-3 கொழுப்பு அமிலங்களை அதிகம் கொண்டது. பாறை புரதத்தை அதிக அளவில் கொண்டது.

கருவாடு தயாரிக்கும் முறைகள்

கருவாடு சாப்பிடுவது உடலுக்கு நல்லதா? மருத்துவர்கள் எச்சரிப்பது ஏன்?

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, அதை வெயிலில் 3-5 நாட்கள் காய வைப்பது, கருவாடு தயாரிக்கும் முறைகளில் ஒன்று.

கருவாடு தயாரிப்பதற்கு, கடலில் பிடித்த மீன்களைக் கழுவிச் சுத்தம் செய்து வெயிலில் 3-5 நாட்கள் காய வைக்கப்படும். மாதக்கணக்கில் கெட்டுப் போகாமல் இருப்பதற்காக இதில் 20% முதல் 30% வரை உப்பு சேர்த்து காயவைக்கப்படுகிறது.

புகை போடுவதன் மூலம் கருவாடு தயாரிப்பது மற்றொரு பாரம்பரிய முறை. குறிப்பாக தூத்துக்குடி, மண்டபம் போன்ற பகுதிகளில் இந்த முறை பிரபலமாக உள்ளது. இதில், விறகுகளை எரிப்பதில் வெளியாகும் புகையில் மீன்களைக் காய வைக்கின்றனர். இது கருவாட்டிற்குத் தனித்துவமான சுவையைக் கொடுப்பதோடு, நீண்ட நாட்கள் கெட்டுப் போகாமல் அதைப் பாதுகாக்கவும் உதவுகிறது.

நொதித்தல் மூலம் கருவாடு தயாரிப்பது, மற்றொரு சுவையான முறை. இதில் உப்புடன் சேர்த்து மீன்கள் ஒரு குறிப்பிட்ட காலம் வரை நொதிக்க வைக்கப்படுகிறது. இந்த முறையில் தயாரிக்கப்படும் 'மாசி' எனப்படும் கருவாட்டு பொடி தமிழ்நாட்டில் மிகவும் பிரபலம். இந்த நடைமுறையில் புரதங்கள் பகுதியளவு ஹைட்ரோலைஸ் ஆகி செரிமானத்தை எளிதாக்குகின்றன.

மருத்துவர்கள் கருவாட்டைத் தவிர்க்கச் சொல்வது ஏன்?

கருவாட்டுக்கு ஊட்டச்சத்து நன்மைகள் பல இருக்கும் போதிலும், சில சுகாதார சவால்களும் அதில் உள்ளன. பாரம்பரிய முறையில் தயாரிக்கப்படும் கருவாட்டில் உப்பு அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. சராசரியாக, 100 கிராம் கருவாட்டில் 5-10 கிராம் உப்பு இருக்கலாம். ஆனால் பெரும்பாலும் 20-30% உப்பு சேர்க்கப்படுகிறது. இது உயர் ரத்த அழுத்தம், இதய நோய்களுக்கு வழிவகுக்கும். இதைப் பற்றிய விழிப்புணர்வு மிகவும் அவசியம்.

அதோடு கருவாடு தயாரிப்பு சுகாதாரமின்றி இருந்தால், அதில் நுண்ணுயிர்த் தொற்று அபாயம் இருக்கவும் வாய்ப்புள்ளது. சுத்தமற்ற சூழலில் காயவைப்பது, பூச்சிகள், மண் கலப்படம் போன்றவற்றுக்கான சாத்தியம் உள்ளது. சில வேளைகளில் கெட்டுப்போன மீனை கருவாடு தயாரிக்க சிலர் பயன்படுத்துவதால், உணவுப் பாதுகாப்பில் மிகப்பெரிய சவால் உள்ளது.

புகை போடுவதன் மூலம் தயாரிக்கப்படும் கருவாட்டில் பாலிசைக்ளிக் அரோமாடிக் ஹைட்ரோகார்பன்கள் (PAHs) உருவாகலாம். இவை புற்றுநோய்க்கான காரணிகளாக இருக்கலாம். உலக சுகாதார நிறுவனத்தின் ஆய்வுகள், அதிகம் புகை போடப்பட்ட உணவு வகைகளை உட்கொள்வது சில வகை புற்றுநோய்களின் அபாயத்தை அதிகரிக்கும் எனக் காட்டுகின்றன.

கருவாட்டில் கன உலோகங்கள் கூடுதல் அளவில் சேர்ந்துவிடும் அபாயமும் உள்ளது. குறிப்பாக கடல் மாசுபாடு அதிகமுள்ள பகுதிகளில் பிடிக்கப்படும் மீன்களில் பாதரசம், காட்மியம் போன்ற கன உலோகங்கள் அதிக அளவில் இருக்கலாம்.

இவை நீண்ட காலத்திற்கு உடலில் சேர்ந்து நரம்பு மண்டல பாதிப்புகளை ஏற்படுத்தலாம். இந்தக் காரணங்களாலேயே, கருவாட்டு உணவு வகைகளை மருத்துவர்கள் தவிர்க்குமாறு வலியுறுத்துகிறார்கள்.

இருப்பினும், இந்த சவால்கள் அனைத்தையும் சரியான உற்பத்தி மற்றும் பதப்படுத்தும் முறைகளின் வாயிலாகச் சரிசெய்ய முடியும். குறைந்த உப்பு, சுகாதாரமான உற்பத்தி முறைகள், நவீனப் பாதுகாப்பு நடவடிக்கைகள் மூலம் தரமான கருவாடு மக்களுக்குக் கிடைப்பதை உறுதி செய்ய முடியும்.

பாதுகாப்பான கருவாடு தயாரிப்பு முறைகள் என்ன?

இந்தப் பிரச்னைகளுக்கு சூரிய ஒளியில் (solar dryer) காய வைக்கப்படும் மீன் ஒரு சிறந்த தீர்வாக உள்ளது.

இந்த முறையில் குறைந்த உப்பு (5 சதவிகிதத்திற்கும் குறைவாக) பயன்படுத்தப்படுகிறது. சுகாதாரமான முறையில் தயாரிக்கப்படுவதால் பாக்டீரியா தொற்று ஏற்படுவதில்லை. இயற்கையான ஊட்டச்சத்துகள் பாதுகாக்கப்படுகின்றன.

இப்படிச் செய்வது வெப்பப்படுத்துவதால் இழக்கப்படும் வைட்டமின் ஏ, ஒமேகா-3 போன்ற ஊட்டச்சத்துகளைப் பாதுகாக்கிறது. பூச்சிகள், தூசி மற்றும் பிற மாசுபடுத்திகளில் இருந்து மீனைப் பாதுகாக்கிறது. இதனால் கருவாட்டின் சுகாதாரம் மேம்படுகிறது. இத்தகைய முறையில் கருவாடு தயாரிக்க குறைந்த நேரமே போதுமானது என்பதும் கவனிக்கப்பட வேண்டிய ஓர் அம்சம்.

கருவாட்டின் பொருளாதார, சமூகப் பங்கு

கருவாடு சாப்பிடுவது உடலுக்கு நல்லதா? மருத்துவர்கள் எச்சரிப்பது ஏன்?

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,சிறு மீன்களில் தயாரிக்கப்படும் கருவாடுகள் அதிக ஊட்டச்சத்து கொண்டவை

கருவாடு தயாரிப்பும் விற்பனையும் கடல்சார் பொருளாதாரத்தில் முக்கியப் பங்கு வகிக்கிறது. குறிப்பாக சிறு குறு மீனவர்கள், மகளிர் கூட்டுறவு அமைப்புகள் மற்றும் கடற்கரை சமூகங்களுக்கு இது வாழ்வாதார ஆதாரமாக உள்ளது. 70% கடலோர மீனவப் பெண்கள் மீனை காய வைத்தல், வகைப் பிரித்தல், விற்பனை செய்வதில் ஈடுபட்டுள்ளனர்.

கருவாடு உற்பத்தியின் பொருளாதார முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்ள சில புள்ளிவிவரங்கள் உதவுகின்றன. தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் சுமார் 50,000 டன் கருவாடு உற்பத்தி செய்யப்படுகிறது. இது ரூ.500 கோடிக்கும் மேல் மதிப்பு கொண்டது. கடல் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையத்தின் (MPEDA) தரவுகள்படி, இந்தியாவின் மொத்த கருவாடு ஏற்றுமதியில் தமிழ்நாடு 25% பங்களிக்கிறது.

இந்தியாவின் கருவாடு உள்நாட்டில் மட்டுமின்றி, குறிப்பிடத்தக்க ஏற்றுமதி சாத்தியத்தையும் கொண்டுள்ளது. காயவைத்த மீன்கள், அது சார்ந்த பொருட்கள் இலங்கை, வங்கதேசம், நேபாளம், மலேசியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், நைஜீரியா, கானா போன்ற ஆப்பிரிக்க நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

நவீன தொழில்நுட்பங்கள், புதுமுறை தீர்வுகள்

கருவாடு உற்பத்தியில் நவீன தொழில்நுட்பங்களின் பயன்பாடு பல நன்மைகளை வழங்குகிறது. இது கருவாட்டின் தரம், பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து மதிப்பை மேம்படுத்துகிறது. சூரிய உலர்த்திகள் (Solar dryers) மிகவும் பயனுள்ள தொழில்நுட்பமாக உள்ளன. இவை பாரம்பரிய வெயில் உலர்த்தும் முறையைவிட மேம்பட்டவை.

சூரிய உலர்த்தியின் மூடப்பட்ட கட்டமைப்பால் பூச்சிகள், தூசிகளில் இருந்து மீன் பாதுகாக்கப்படுகிறது. இந்த முறையில் வெப்பநிலை, காற்றோட்டம் கட்டுப்படுத்தப்படுவதால், காய வைக்கும் நேரம் குறைகிறது, ஊட்டச்சத்துகள் பாதுகாக்கப்படுகின்றன.

சூரிய உலர்த்தியில் மீன் காய வைக்கப்படும்போது, உப்பின் அளவை கணிசமாகக் குறைக்க முடியும். இதற்கு 5% உப்பு மட்டுமே போதுமானது.

உப்பின் அளவை 5 சதவிதமாகக் குறைப்பதன் மூலம், ஆரோக்கியம் தொடர்பான அபாயங்களைக் குறைக்க முடியும். சில நவீன முறைகளில், உப்புக்குப் பதிலாக பிற பாதுகாப்புப் பொருட்கள் (சிட்ரிக் அமிலம், ரோஸ்மேரி சாறு போன்றவை) பயன்படுத்தப்படுகின்றன, அவை உப்பின் பாதுகாப்புப் பண்புகளைப் போலவே செயல்படுகின்றன.

காற்றில்லா முறையில் உறையில் அடைக்கும் (Vaccum packaging) தொழில்நுட்பம் கருவாட்டின் பயன்படுத்தத்தக்க காலத்தை கணிசமாக அதிகரிக்கிறது. இது பாக்டீரிய வளர்ச்சியைத் தடுத்து, பல மாதங்களுக்கு கெட்டுப்போகாமல் பாதுகாக்கிறது.

உணவுத் திட்டங்களில் கருவாட்டை ஒருங்கிணைத்தல்

கருவாடு சாப்பிடுவது உடலுக்கு நல்லதா? மருத்துவர்கள் எச்சரிப்பது ஏன்?

பட மூலாதாரம்,GETTY IMAGES

கருவாட்டின் ஊட்டச்சத்து நன்மைகளை அதிகமான மக்கள் பெறவும், ஊட்டச்சத்துக் குறைபாடுகளைக் குறைக்கவும், அரசு, சமூகத் திட்டங்களில் இதை ஒருங்கிணைப்பது அவசியம். ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி சேவை (ICDS), மதிய உணவுத் திட்டங்களில் கருவாட்டை சேர்ப்பது ஒரு சிறந்த முன்முயற்சி. ஒடிசா மாநிலம் இதில் முன்னோடியாக உள்ளது. அங்கு குழந்தைகளுக்கு மீன் பொடி வழங்கப்படுகிறது. இதே மாதிரியை தமிழ்நாட்டிலும் பின்பற்றலாம்.

பள்ளி ஊட்டச்சத்துத் திட்டங்களில் கருவாட்டைப் பயன்படுத்துவதற்கான வாய்ப்புகள் உள்ளன. கருவாட்டுப் பொடியை சாம்பார் அல்லது குழம்புகளில் சேர்ப்பதன் மூலம் குழந்தைகளின் புரதம், தாதுப்பொருள் தேவைகளைப் பூர்த்தி செய்யலாம். குறிப்பாக கிராமப்புறங்களில் உள்ள குழந்தைகளுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

கர்ப்பிணி, தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களுக்கான ஊட்டச்சத்துத் திட்டங்களில் கருவாட்டைச் சேர்ப்பது மற்றொரு நல்ல வாய்ப்பு. கருவாட்டில் உள்ள இரும்புச்சத்து, கால்சியம் அவர்களுக்கு மிகவும் அவசியம். குறைந்த உப்புகொண்ட கருவாட்டுப் பொடியை அவர்களுக்கான உணவில் சேர்த்துக் கொடுக்கலாம்.

கருவாடு தமிழர்களின் பாரம்பரிய ஊட்டச்சத்து மூலப்பொருளாகும். இதன் மேம்பட்ட புரதம், கால்சியம், இரும்புச் சத்து, ஓமேகா-3 கொழுப்பு அமிலங்கள் அனைவருக்கும், குறிப்பாக குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள், முதியவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

- கட்டுரையாளர் உணவுத் தொழில்நுட்ப வல்லுநராக இருக்கிறார். இதில் பேசப்பட்டுள்ள விஷயங்கள் அனைத்தும் அவரது சொந்தக் கருத்துகளே.

இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c1wpvr9lq0xo

ஆடிப்பிறப்பு.... ஆடிக்கூழ்.

1 month 4 weeks ago

maxresdefault.jpg

ஆடிக்கூழ்.
நாளை ஆடிப்பிறப்பு. (17.07.2025)

ஆடிப்பிறப்பன்று ஆடிக்கூழ் காய்ச்சுதல் அன்றைய காலம் முதல் இன்றைய காலம் வரை பெரும்பாலான (வீடுகளில்) இடங்களில் நடைபெறும் சம்பிரதாயம்.

ஆடிக்கூழ் செய்யும் முறை 👇
தேவையான பொருட்கள்:
750 கிராம் பனங்கட்டி
1 ¼ கப் சிவப்பு பச்சை அரிசி
½ கப் முழுப் பயறு
½ கப் வறுத்த உளுத்தம் மா
½ கப் தேங்காய் சொட்டு
2 ரின் தேங்காய்ப்பால் (400 மி.லீ x 2)
3 ¼ லீட்டர் தண்ணீர் (-/+)
½ மே.க மிளகு(-)
உப்பு
செய்முறை:
அரிசியை குறைந்தது 2 மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும். அடுத்ததாக தண்ணீரை வடித்து, வடியில் வார விடவும். வாரவிட்ட அரிசியை மிக்சியில் அரைத்து, அரிதட்டால் அரித்து எடுக்கவும்( மிளகு சேர்க்க விரும்பினால் அரிசியுடன் சேர்த்து அரைக்கவும்). மாவை இரு பங்குகளாக பிரித்து வைக்கவும்.
தேங்காயில் சின்னச் சின்ன சொட்டுகளாக ½ கப் சொட்டுகள் வெட்டி வைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் பனங்கட்டியுடன் 1 லீட்டர் தண்ணீர் சேர்த்து, கரையும் வரை கொதிக்க விடவும்.
முழுப்பயரை வறுத்து வைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் 2 லீட்டர் தண்ணீர் விட்டு, கொதித்ததும், வறுத்த பயறைச் சேர்த்து அவிய விடவும். பயறு அரைப்பங்கு அவிந்ததும் அதனுள் பனங்கட்டிப்பாணியை வடித்து விடவும்.
அரைப்பங்கு அரிசிமாவுடன் உளுத்தம்மா, 1 சிட்டிகை உப்பு சேர்த்துக் கலந்து, 1 கப் தண்ணீர் விட்டு கட்டிகள் இல்லாமல் கரைத்து வைக்கவும்.
மீதமுள்ள மாவில் 1 சிட்டிகை உப்பு சேர்த்து கலந்து, கொதித்த பனங்கட்டிப்பாணியை கொஞ்சம் கொஞ்சமாக விட்டுக் குழைத்து எடுத்து, அதனை சிறிய சில்லுகளாக தட்டவும் அல்லது உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.
பயறு அவிந்தவுடன் அதனுடன் தட்டிய சில்லுகள் அல்லது உருட்டிய மா உருண்டைகளை ஒவ்வொன்றாக சேர்த்து அவியவிடவும். அதனுடன் தேங்காய்ப்பால் மற்றும் தேங்காய்ச் சொட்டுகளையும் சேர்த்து அவியவிடவும்.
சில்லுகள் / உருண்டைகள் அவிந்ததும், உளுத்தம்மா கரைசலை விட்டு கைவிடாமல் கிண்டவும்.
கொதித்து இறுகத்தொடங்கவும் அடுப்பில் இருந்து இறக்கி பரிமாறவும்.
ஆடிக் கூழ் தயார்!
குறிப்பு:
கூழ் சிறிது தண்ணித் தன்மையாக வேண்டும் என்றால் 1 கப் அரிசி எடுக்கவும்.
பயறு அதிகம் விரும்பாதவர்கள், 6 மே.க பயறு சேர்க்கவும்.
சில்லுகள் / உருண்டைகள் அதிகம் விரும்பாதவர்கள் 2/3 பங்கு மாவை கரைத்தும் மீதி 1/3 பங்கு மாவில் சில்லுகள் / உருண்டைகளை செய்யவும்.
வறுத்த உளுத்தம் மா, தேங்காய் சொட்டு மற்றும் பயற்றின் அளவை, உங்கள் ருசிக்கேற்ப்ப கூட்டிப் குறைக்கவும்.

Babu Babugi

கோடையில் சிக்கன் சாப்பிடுவது உடல் சூட்டை அதிகரிக்குமா? நிபுணர் விளக்கம்

2 months 2 weeks ago

சிக்கன் உடல் சூட்டை அதிகரிக்குமா? கோடைக் காலத்தில் சாப்பிடலாமா? நிபுணர் விளக்கம்

2 மணி நேரங்களுக்கு முன்னர்

கோடைக்காலத்தில் சிக்கன் அதிகமாகச் சாப்பிட்டால் உடல் சூடு அதிகரித்துவிடும் என்ற பொதுவான எச்சரிக்கை நம் வீடுகளில் பரவலாகச் சொல்லப்படுகிறது. இதுகுறித்து ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுவது என்ன?

“சிக்கன், மட்டன், மாட்டிறைச்சி, மீன், பன்றி என எந்த அசைவ உணவைச் சாப்பிடும்போதும் உடலின் வெப்பநிலை சிறிதளவு அதிகரிக்கும். உணவின் வெப்ப விளைவு (Thermic Effect) என்று இது அழைக்கப்படுகிறது.  ஆனால், அது உடலை எந்த விதத்திலும் பாதிக்காது. அது செரிமான செயல்முறையின் ஒரு பகுதியே. அசைவ உணவுகளில் கிடைக்கும் கலோரிகளில் சுமார் 20-25% அவற்றின் செரிமானத்திற்கே பயன்படுத்தப்படும்” என்கிறார் ஊட்டச்சத்து நிபுணர் முனைவர் மீனாட்சி பஜாஜ்.

நமது உடல், அதன் உட்புற வெப்பநிலையை 98.6°F என்ற அளவைச் சுற்றியே பராமரிக்க கடுமையாக உழைக்கிறது. இந்தச் செயல்முறை வெப்ப ஒழுங்குமுறை என்று அழைக்கப்படுகிறது. இது உயிர் வாழ்வதற்கு மிகவும் முக்கியமானது.

“ஹைபோதாலமஸ் என்ற மூளையின் ஒரு சிறிய பகுதி, நமது உட்புற உடல் வெப்பநிலையை தொடர்ந்து கண்காணித்து சரிசெய்கிறது. உடலைக் குளிர்விக்க, வியர்த்து, சருமத்திற்கு அதிக ரத்தத்தை அனுப்புகிறது, வெப்பத்தை வெளியிடுகிறது. சூடாக்க, நடுக்கத்தை ஏற்படுத்துகிறது, வெப்பத்தைத் தக்கவைக்க ரத்த நாளங்களைச் சுருக்குகிறது” என்று விளக்கினார் ஊட்டச்சத்து நிபுணர் ரம்யா அஷோக்.

மேற்கொண்டு பேசிய அவர், “ஒருவர் உண்ணும்போது,  உடல் அதை ஜீரணிக்க ஆற்றலைப் பயன்படுத்துகிறது. இந்தச் செயல்முறைதான் உணவின் வெப்ப விளைவு. கோழி போன்ற புரதம் நிறைந்த இறைச்சி உணவுகளை ஜீரணிக்க அதிக ஆற்றல் தேவை. அதனால் உடலில் சிறிய அளவில் வெப்பம் உருவாகும். ஆனால், அது மொத்த ஆற்றல் பயன்பாட்டில் சுமார் 10% மட்டுமே என்பதால் கவலையடையத் தேவையில்லை” என்றார்.

வல்லுநர்களின் கூற்றுப்படி, ஓர் உணவை செரிமானம் செய்வதற்காக உடல் பயன்படுத்தும் ஆற்றலின் விளைவாக வெப்ப விளைவு ஏற்படுகிறது. சைவ உணவுகளில் கிடைக்கும் புரதத்தைவிட, அசைவ உணவுகளில் கிடைக்கும் புரதம் செரிமானம் ஆகும்போது வெப்ப விளைவு சற்று அதிகமாக இருக்கும்.

முனைவர் மீனாட்சி பஜாஜின் கூற்றுப்படி, எந்த இறைச்சி உணவாக இருந்தாலும், சாப்பிட்ட பிறகு சூடாக உணர்வது இயல்புதான். "அசைவ உணவுகளைச் சாப்பிடும்போது வியர்த்துக் கொட்டுவதை உணர்ந்திருப்போம். அது தற்காலிகமானது. அதற்குக் காரணம் செரிமான செயல்முறை நடக்கும்போது உற்பத்தியாகும் வெப்பம்தான். இந்தச் சூடு ஆரோக்கியத்தை பாதிக்காது.”

சிக்கன் சாப்பிட்ட பிறகு உடலின் வெப்பநிலை எப்படி மாறுகிறது என்பதைப் புரிந்துகொள்ள விஞ்ஞானிகள் எலிகளை வைத்து ஒரு பரிசோதனையை நடத்தினர்.   அதில் பிற உணவுகளைவிட சிக்கன் சாப்பிடும் நேரத்தில் வெப்ப விளைவு உடலில் அதிகமாக இருப்பதைக் கண்டறிந்தனர்.   மேலும், சிக்கனில் புரதத்தை மட்டுமே சாப்பிடும் வேளையில், வெப்ப விளைவால் உடல் சூடாகும்  அளவு குறைவாக இருந்தது உணரப்பட்டதாக இந்த ஆய்வு கூறுகிறது.

படக்குறிப்பு,உணவு உண்ட பிறகு உடலில் நடக்கும் வெப்ப விளைவு தொடர்பாகக் கடந்த 2013ஆம் ஆண்டில், எலிகள் மீது நடத்தப்பட்ட ஆய்வில் சிக்கன் சாப்பிடும்போது வெப்பநிலை ஓரளவுக்கு அதிகரிப்பது உணரப்பட்டது.

“சராசரியாக ஒரு நபர் ஒரு நாளுக்கு 85 கிராம் அல்லது ஒரு வாரத்திற்கு 600 கிராம் வரை புரதம் அதிகமுள்ள உணவுகளைச் சாப்பிட வேண்டும். இதில், பருப்பு, சுண்டல் போன்ற சைவ உணவுகள், சிக்கன், மீன், மட்டன், மாட்டிறைச்சி போன்ற அசைவ உணவுகள் என அனைத்தும் கலந்திருக்க வேண்டும்” என்று கூறுகிறார் ஊட்டச்சத்து நிபுணர் முனைவர் மீனாட்சி பஜாஜ்.

கோடையில் சிக்கன் சாப்பிடுவது தீங்கல்ல. அதனுடன் அதிக பழங்கள், காய்கறிகளையும் சேர்த்து உணவுமுறையைச் சீராகப் பராமரிக்க வேண்டும். அதிக தண்ணீர் மற்றும் ஆரோக்கியமான திரவங்களைப் பருக வேண்டும் என்று வல்லுநர்கள் பரிந்துரைக்கின்றனர்.

ஊட்டச்சத்து நிபுணர் ரம்யா, "காற்றோட்டம் இல்லாத ஆடைகளை அணிவது, வெப்பமான காலநிலைக்கு அதிகமாக வெளிப்படுவது, நீர்ச்சத்தை இழப்பது, காரமான அல்லது எண்ணெய் அதிகமுள்ள உணவுகளைச் சாப்பிடுவது போன்ற காரணிகளே உடல் சூட்டை அதிகரிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன," என்று எச்சரிக்கிறார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c8rped1v8gjo

ஆட்டுக்கால் சூப் குடிப்பதால் என்ன நன்மை? அதை யாரெல்லாம் சாப்பிடக் கூடாது?

2 months 3 weeks ago

ஆட்டுக்கால் சூப் குடிப்பதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் என்ன?

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,ஆட்டுக்கால் சூப் குடிப்பது எலும்புகளுக்கு மட்டுமின்றி உடல் ஆரோக்கியத்திற்குத் தேவையான பல நன்மைகளை வழங்குவதாக நிபுணர்கள் கூறுகின்றனர்

கட்டுரை தகவல்

  • எழுதியவர், க.சுபகுணம்

  • பதவி, பிபிசி தமிழ்

  • 6 மணி நேரங்களுக்கு முன்னர்

எதிர்பாராதவிதமாக எலும்பு முறிவு ஏற்பட்டால், குடும்பத்தில் உள்ள பெரியவர்கள் ஆட்டுக்கால் சூப் வைத்து தினசரி குடிக்குமாறு வலியுறுத்துவார்கள்.

காய்ச்சல், சளி போன்ற தொந்தரவுகளால் அவதிப்படும் போது, வீட்டில் ஆட்டுக்கால் சூப் வைத்துக் கொடுப்பார்கள்.

இப்படி, பல விஷயங்களுக்கு ஆட்டுக்காலை சூப் வைத்துக் குடிக்குமாறு வலியுறுத்தும் அளவுக்கு அதில் அப்படி என்ன இருக்கிறது?

உண்மையாகவே ஆட்டுக்கால் சூப், நமது ஆரோக்கியத்திற்கு, குறிப்பாக எலும்பு மற்றும் மூட்டுகளுக்கு வலிமையை வழங்குகிறதா? இதைத் தெரிந்துகொள்ள ஊட்டச்சத்து நிபுணர்களிடம் பேசினோம்.

ஆட்டுக்கால் சூப் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்ன?

எலும்பின் ஆரோக்கியம் மற்றும் நோய் எதிர்ப்பாற்றலுக்குத் தேவையான, கால்சியம், மெக்னீசியம், பாஸ்பரஸ், துத்தநாகம் போன்ற ஊட்டச்சத்துகள் ஆட்டுக்காலில் இருந்து கிடைப்பதாக ஹார்வர்ட் பொது சுகாதாரக் கல்லூரியில் வெளியான ஒரு கட்டுரை கூறுகிறது.

ஆட்டு இறைச்சியில், குறிப்பாக அதன் கால் எலும்புகளில் இருக்கும் ஊட்டச்சத்துகள் நமது எலும்புகள், மூட்டுகள், முடி, சருமம், ஆற்றல், நோய் எதிர்ப்பாற்றல் என்று பல வகைகளில் நன்மை பயப்பதாகக் கூறுகிறார் ஊட்டச்சத்து நிபுணர் திவ்யா சத்யராஜ்.

ஆட்டுக்காலில் கொலாஜென் மற்றும் ஜெலட்டின் நிறைந்துள்ளதாகக் கூறுகிறார் ஊட்டச்சத்து நிபுணர் ரம்யா அஷோக். இந்தக் கூறுகள், மூட்டு ஆரோக்கியத்திற்கு உதவுவதாகவும், மூட்டு வலிக்கு நிவாரணமாக இருப்பதாகவும் அவர் குறிப்பிடுகிறார்.

அதுமட்டுமின்றி கொலாஜென் சரும ஆரோக்கியத்தைப் பேணுவதற்கும் உதவுவதாகக் கூறுகிறார் ரம்யா.

அவரது கூற்றை ஆமோதிக்கும் வகையில் பேசிய திவ்யா சத்யராஜ், ஆட்டுக்கால்களில் இருக்கும் கோலாஜென், மூட்டுகளில் உயவுப் பொருளாகச் (lubricant) செயல்படுவதாகக் குறிப்பிடுகிறார். அதோடு, அவை சருமத்தில் சுருக்கம் போன்ற முதிர்ச்சி அடைவதால் ஏற்படும் அறிகுறிகளைக் குறைப்பதாகவும், ஆட்டுக்கால் சூப்பை தொடர்ச்சியாகப் பருகுவது சருமத்தை இளமையாக வைத்திருக்க உதவும் எனவும் தெரிவித்தார்.

ஆட்டுக்கால் சூப் குடிப்பதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் என்ன?

படக்குறிப்பு,ஆட்டுக்காலில் இருக்கும் கோலாஜென் எலும்பு மற்றும் மூட்டுகளை வலுப்படுத்த உதவுவதாகக் கூறுகிறார் ஊட்டச்சத்து நிபுணர் ரம்யா அஷோக்

ஆட்டுக்கால் சூப் குடிப்பதால் எலும்புகள், சருமம் மட்டுமின்றி உடலின் பல செயல்பாடுகளைச் சீராக வைத்துக்கொள்ள உதவுவதாக விளக்கினார் ஊட்டச்சத்து நிபுணர் ரம்யா.

அவரது கூற்றுப்படி, அதிலுள்ள கிளைசீன், ப்ரோலீன் போன்ற அமினோ அமிலங்கள், குடல் செயல்பாடுகளைச் சீராக்க உதவுவதோடு, கல்லீரல் செயல்பாட்டைச் சீரமைப்பதன் மூலமாக உடலின் நச்சு நீக்க செயல்முறையையும் பேணுகின்றன.

"பாரம்பரியமாகவே, தமிழ்நாட்டில் காய்ச்சல், எலும்பு முறிவு போன்றவற்றை எதிர்கொள்ளும் நபர்களுக்கு, ஆட்டுக்கால் சூப் கொடுப்பது அறிவுறுத்தப்படுகிறது. அதற்குக் காரணம், வேகமாக குணமடைவதற்கான ஊட்டச்சத்து, வலிமை மற்றும் ஆற்றலை அவை வழங்குவதே" என்கிறார் ரம்யா.

ஆட்டுக்கால் சூப் யாருக்கெல்லாம் நல்லதல்ல?

ஆட்டுக்கால் சூப் குடிப்பதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் என்ன?

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,ஆட்டுக்காலில் அதிக கொழுப்புச் சத்து இருப்பதால், கொழுப்பு அதிகமாக இருப்பவர்கள் அதைத் தவிர்ப்பது நல்லது என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகின்றனர்

ஆட்டுக்கால் சூப் உடல் ஆரோக்கியத்திற்குப் பல நன்மைகளைச் செய்தாலும் அவற்றில் கொழுப்பு அளவு அதிகம் இருப்பதால் அவற்றை இதய நோய், அதீத கொழுப்பு, உடல் பருமன் போன்ற பிச்னைகள் உள்ளவர்களுக்கு அளிப்பதைத் தவிர்ப்பது நல்லது என்கிறார் ரம்யா.

அவற்றைச் சமைக்கும் விதத்திலும் கவனம் செலுத்த வேண்டியது அவசியம் என்று வலியுறுத்துகிறார் அவர்.

"முழுமையாகச் சுத்தப்படுத்தப்படாத எலும்புகளில் சால்மொனெல்லா அல்லது ஈ.கோலி போன்ற பாக்டீரிய தொற்றுகள் இருப்பதற்கான அபாயம் உள்ளது. ஆகவே, அவற்றைச் சுத்தப்படுத்துவதில் அதிக கவனம் தேவை" என வலியுறுத்தும் ரம்யா, நன்கு சமைக்கப்படாத ஆட்டுக்கால்களை உட்கொள்வதிலும் இத்தகைய ஆபத்துகள் இருக்க வாய்ப்புள்ளது என எச்சரிக்கிறார்.

உடலில் யூரிக் அமிலம் அதிகளவில் இருப்பவர்கள், முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்டவர்கள், ஏற்கெனவே சிறுநீரக பிரச்னைகளால் அவதிப்படுபவர்கள் மருத்துவர்களின் பரிந்துரையின் பேரில் இதை எடுத்துக்கொள்வது சிறந்தது என்று அறிவுறுத்துகிறார் ஊட்டச்சத்து நிபுணர் ரம்யா அஷோக்.

பொதுவாக, ஆட்டுக்கால்களில் இருக்கும் முழு பயன்களையும் பெற வேண்டுமெனில், அவற்றை 10 முதல் 12 மணிநேரம் வரை, மெல்லிய வெப்பத்தில் தொடர்ச்சியாக வேகவைக்க வேண்டும் என்கிறார் அவர்.

ஆட்டுக்கால் சூப் குடிப்பதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் என்ன?

படக்குறிப்பு,மிகக் குறைந்த உடல் எடை கொண்டவர்களுக்கு, சைனஸ் பாதிப்பு உள்ளவர்களுக்கு ஆட்டுக்கால் சூப் குடிப்பதால் நல்ல பயன்கள் கிடைப்பதாகக் கூறுகிறார் ஊட்டச்சத்து நிபுணர் திவ்யா சத்யராஜ்

ஆனால், "இன்றைய வாழ்க்கை முறையில் அது சாத்தியமில்லை. வீட்டில் வழக்கமாகச் சமைக்கும் முறையில்கூட ஓரளவுக்கு அந்த ஊட்டச்சத்துகள் கிடைக்கும் என்பதால், வாரம் ஒருமுறை அல்லது மாதம் இருமுறை என்ற அளவில் சீராக எடுத்துக்கொண்டாலே அதன் பயன்கள் உடலுக்குக் கிடைக்கும்," என்று விளக்கினார்.

"சுமார் 10 மணிநேரம் தொடர்ந்து மிதமான சூட்டில் சமைப்பதன் மூலம் அவற்றில் இருக்கும் அனைத்து ஊட்டச்சத்துகளும் சுமார் 95% கிடைக்கும். ஆனால், அப்படித்தான் சமைத்துச் சாப்பிட வேண்டும் என்று இல்லை.

வழக்கமான முறையில் சமைத்துச் சாப்பிட்டாலே ஆட்டுக்காலில் இருக்கும் சத்துகள் 50 முதல் 75 சதவிகிதம் வரை உடலுக்குக் கிடைக்கும். எனவே 10 மணிநேரம் சமைக்க வேண்டும் எனக் கருதி அவற்றைத் தவிர்ப்பதைவிட, வழக்கமான முறையில் சமைத்து தொடர்ந்து உட்கொள்வது சிறந்தது," என்கிறார் திவ்யா.

ஆட்டுக்கால் சூப் யாருக்கெல்லாம் அவசியம்?

ஆட்டுக்கால்களில் கொழுப்புச் சத்து அதிகம் இருப்பதால், கொழுப்பு அதிகமுள்ள நபர்களுக்கு அதைப் பரிந்துரைப்பதில்லை எனக் கூறும் திவ்யா சத்யராஜ், ஆட்டுக்கால் சூப் எலும்புகளை மட்டுமின்றி கிட்டத்தட்ட மொத்த உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்த உதவுவதாகக் குறிப்பிட்டார்.

புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, கீமோதெரபி சிகிச்சையில் இருப்பவர்களுக்கான உணவுமுறையில் ஆட்டுக்கால் சூப்பையும் தான் பரிந்துரைப்பதாகக் கூறுகிறார் அவர்.

ஆட்டுக்கால் சூப் குடிப்பதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் என்ன?

பட மூலாதாரம்,GETTY IMAGES

"பொதுவாக கீமோதெரபி சிகிச்சையில் பல பக்கவிளைவுகள் உள்ளன. அதை மேற்கொள்வோரால் பெரிதாகச் சாப்பிட முடியாது. ஆனால் அவர்கள் நிச்சயமாக ஆரோக்கியமான உணவுகளை உட்கொண்டாக வேண்டும். ஆட்டுக்கால் சூப்பில் அத்தகைய அனைத்து ஊட்டச்சத்துகளும் இருப்பதால் அதைப் பருகுவது ஆரோக்கியத்திற்கு உதவும்," என்றார்.

கீமோதெரபியால் உடலின் நோய் எதிர்ப்பாற்றல் குறையும் எனக் கூறிய திவ்யா, அதை மேம்படுத்த ஆட்டுக்கால் சூப் உதவும் என்பதும் தான் அதை அதிகம் பரிந்துரைக்க ஒரு காரணம் எனக் குறிப்பிட்டார்.

ஜிம் செல்பவர்கள் இதை உட்கொள்வது உடலை வலுப்படுத்துவதில் பெரிதும் உதவுவதாகக் கூறும் திவ்யா, புரோட்டீன் பவுடர் போன்றவற்றை உட்கொள்வதைவிட, இவற்றில் அதிக நன்மைகள் கிடைப்பதாகத் தெரிவித்தார்.

இவைபோக, ஊட்டச்சத்துக் குறைபாடு உள்ளவர்கள், உடல் எடைக் குறைபாடு உடையவர்கள், சைனஸ் பாதிப்பு உள்ளவர்கள், பலவீனமான எலும்புகளைக் கொண்டவர்கள் இதைச் சாப்பிட்டால் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துகள் கிடைக்கும் என்றும் விளக்கினார் திவ்யா.

அதுமட்டுமின்றி, முடி உதிர்வு பிரச்னையைக் குறைப்பதிலும் இது பயனளிப்பதாகக் குறிப்பிடும் அவர், ஆட்டுக்கால்களில் இருக்கும் கோலாஜென் உள்படப் பல கூறுகள், பலவிதமான நன்மைகளை உடலுக்கு வழங்குவதாகக் கூறினார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c1ljg064e89o

உணவில் பயன்படுத்தும் சூரியகாந்தி, கடுகு எண்ணெய்கள் ஆபத்தானவையா? உண்மை என்ன?

3 months 1 week ago

உணவில் பயன்படுத்தும் சூரியகாந்தி, கடுகு எண்ணெய்கள் ஆபத்தானவையா? உண்மை என்ன?

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்

  • எழுதியவர், ஜெசிகா பிராட்லி

  • பதவி, பிபிசி நியூஸ்

  • 4 ஜூன் 2025, 03:22 GMT

சூரியகாந்தி மற்றும் கடுகு எண்ணெய் போன்று, விதைகளில் இருந்து தயாரிக்கப்படும் சமையல் எண்ணெய்கள் ஆரோக்கியத்திற்குத் தீங்கு விளைவிக்கும் என்ற சர்ச்சைக்குரிய கூற்றுகள் சமீபத்தில் வெளிவந்துள்ளன. அது எந்த அளவுக்கு உண்மையானது?

உங்கள் சமையலறை அலமாரியில் எங்காவது சூரியகாந்தி எண்ணெய் அல்லது கடுகு எண்ணெய் கொண்ட ஒரு பாட்டில் நிச்சயமாக இருக்கக்கூடும்.

அவற்றை நீங்கள் சமைக்கப் பயன்படுத்தலாம், அல்லது சாலட்களில் தெளிக்கலாம்.

விதையில் இருந்து தயாரிக்கப்படும் எண்ணெய்கள் இன்று உலகம் முழுவதும் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன.

ஆனால், தற்போது இந்த எண்ணெய்கள் குறித்துப் பலரும் இணையதளத்தில் தீவிரமாக விவாதித்து வருகின்றனர்.

பல ஆண்டுகளாக, விதையில் இருந்து தயாரிக்கப்படும் எண்ணெய்கள் குறித்து சமூக ஊடகங்களில் எண்ணற்ற பதிவுகள் வெளிவந்துள்ளன.

இந்த எண்ணெய்கள் 'தீங்கு விளைவிக்கும்', 'நச்சுத்தன்மை கொண்டவை' மற்றும் ஆரோக்கியத்திற்கு ஆபத்தானவை என்பதுதான் இந்தப் பதிவுகளின் சாராம்சம்.

குறிப்பாக, விதையில் இருந்து தயாரிக்கப்படும் எட்டு வகையான எண்ணெய்களை "த ஹேட்ஃபுல் எயிட்-The Hateful Eight" என விமர்சகர்கள் குறிப்பிடுகின்றனர்.

இவற்றில் கடுகு, சோளம், பருத்தி விதை, திராட்சை விதை, சோயா, அரிசி தவிடு, சூரியகாந்தி, குங்குமப்பூ போன்ற பிரபலமான எண்ணெய்களும் அடங்கும்.

இந்த எண்ணெய்கள் அனைத்தும் இதய நோய்கள் மற்றும் டைப் 2 நீரிழிவு நோய்க்குக் காரணமாகின்றன என்று குற்றம் சாட்டப்படுகிறது.

விதைகளில் இருந்து எடுக்கப்படும் இந்த எண்ணெய்கள் உண்மையில் நமது எதிரிகளா? அல்லது நியாயமே இல்லாமல் அவை குறை கூறப்படுகின்றனவா?

இதய ஆரோக்கியம் - சமையல் எண்ணெய் தொடர்பு என்ன?

சூரியகாந்தி மற்றும் கடுகு எண்ணெய்கள் ஆபத்தானவையா?

பட மூலாதாரம்,GETTY IMAGES

விதைகளில் இருந்து தயாரிக்கப்படும் சமையல் எண்ணெய்களில் அதிக அளவில் காணப்படும் ஒமேகா-6 கொழுப்பு அமிலங்களைப் பற்றியே பெரும்பாலான விமர்சனங்கள் எழுகின்றன.

இந்த வகை கொழுப்பு அமிலங்கள் ஆரோக்கியத்திற்கு அவசியமானவை. நம் உடலால் சுயமாக அவற்றை உற்பத்தி செய்ய இயலாது.

ஒமேகா-6 அமிலங்கள் நாள்பட்ட வீக்கத்தை ஏற்படுத்துவதாகவும், அது இதய நோய், புற்றுநோய் போன்ற நோய்களின் அபாயத்தை அதிகரிப்பதாகவும் சமீபத்தில் சில விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

ஆனால், ஒமேகா-6 அமிலங்கள் வீக்கத்தை அதிகரிக்காது என்று அறிவியல் ஆய்வுகள் காட்டுவதாக மாசசூசெட்ஸில் உள்ள டஃப்ட்ஸ் பல்கலைக்கழகத்தின் மருத்துவ நிறுவனத்தின் பேராசிரியரும் இயக்குநருமான டாரிஷ் மொசாஃபாரியன் கூறுகிறார்.

"ஒமேகா-6 அமிலங்கள் சக்தி வாய்ந்த அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்ட லிபோக்சின்கள் போன்ற தனித்துவமான இயற்கை மூலக்கூறுகளை உருவாக்குகின்றன என்பதை, புதிய ஆராய்ச்சி வெளிப்படுத்துகிறது" என்று அவர் விளக்கினார்.

அமெரிக்காவில் 200,000க்கும் அதிகமான மக்களின் உணவுமுறை மற்றும் ஆரோக்கியம் குறித்து கிட்டத்தட்ட 30 ஆண்டுகளாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

விதையில் இருந்து தயாரிக்கப்படும் எண்ணெய்கள் உள்பட, தாவர அடிப்படையிலான எண்ணெய்களை உணவில் பயன்படுத்துபவர்கள் இதய நோய் அல்லது புற்றுநோயால் இறப்பதற்கான வாய்ப்புகள் குறைவு என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர்.

மறுபுறம், அதிகளவில் வெண்ணெய் உட்கொள்பவர்களுக்கு இந்த ஆபத்து அதிகரித்து இருப்பதாகக் கூறப்படுகிறது.

நமது ஆரோக்கியத்தில் ஒமேகா-6 கொழுப்பு அமிலங்கள் ஏற்படுத்தும் விளைவுகளை, குறிப்பாக விதையில் இருந்து தயாரிக்கப்படும் எண்ணெய்களில் உள்ள ஒமேகா-6 கொழுப்பு அமிலமான 'லினோலிக்' அமிலத்தை மையமாகக் கொண்டு, பல ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்த லினோலிக் அமிலம் நமது ரத்தத்தில் உள்ள (குறைந்த அடர்த்தி கொண்ட லிப்போபுரோட்டீன் (low-density lipoprotein: LDL) 'கெட்ட கொழுப்பை' குறைக்கும் தன்மை கொண்டது என்று கண்டறியப்பட்டுள்ளது.

ஜான்ஸ் ஹாப்கின்ஸ் ப்ளூம்பெர்க் பொது சுகாதாரப் பள்ளியின் மனித ஊட்டச்சத்து பேராசிரியரான மேட்டி மார்க்லண்ட் 2019ஆம் ஆண்டு நடத்திய ஆய்வில், ரத்தத்தில் அதிக அளவு லினோலிக் அமிலம் உள்ளவர்களுக்கு இதய நோய் ஏற்படும் அபாயம் குறைவாக இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

விதையில் இருந்து தயாரிக்கப்படும் எண்ணெய்களில் இருந்து ஒமேகா-6 கொழுப்பு அமிலங்களை அதிகமாக உட்கொள்வது, நோய் அல்லது இறப்பு ஏற்படுவதற்கான அபாயத்தை அதிகரிக்க வாய்ப்பில்லை என்று உலக சுகாதார அமைப்பு (WHO) மேற்கொண்டுள்ள ஆய்வில் ஈடுபட்டுள்ள விஞ்ஞானிகள் முடிவுக்கு வந்தபோதும், இதுகுறித்த உயர்தர ஆராய்ச்சிகள் நடத்தப்பட வேண்டும் என்று அவர்கள் கருதுகிறார்கள்.

விதையில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய் எவ்வாறு சுத்திகரிக்கப்படுகிறது?

சூரியகாந்தி மற்றும் கடுகு எண்ணெய்கள் ஆபத்தானவையா?

பட மூலாதாரம்,GETTY IMAGES

விதையில் இருந்து தயாரிக்கப்படும் எண்ணெய்கள் ஹெக்ஸேன் என்ற வேதிப்பொருளைப் பயன்படுத்தி பிரித்தெடுக்கப்படுகின்றன என்று சில கவலைகள் உள்ளன.

கச்சா எண்ணெயில் இருந்து தயாரிக்கப்படுவதுதான் ஹெக்ஸேன். ஆனால், இந்தச் செயல்முறை ஆரோக்கியத்திற்குத் தீங்கு விளைவிக்கும் என்பதற்கு எந்த அறிவியல் ஆதாரமும் இல்லை.

"உணவுப் பதப்படுத்துதலில் ஹெக்ஸேன் சாற்றின் பயன்பாடு மிகவும் பொதுவானது என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இருப்பினும், வாசனையை நீக்குதல் மற்றும் ப்ளீச்சிங் போன்ற செயல்முறைகள் தீங்கு விளைவிக்கும் சேர்மங்களை நீக்குகின்றன," என்று அமெரிக்காவின் ஸ்டான்ஃபோர்ட் நோய்த் தடுப்பு ஆராய்ச்சி மையத்தின் ஊட்டச்சத்து ஆய்வுகளின் இயக்குநர் கிறிஸ்டோபர் கார்டனர் கூறுகிறார்.

அழுத்தும் (crushing) முறையில் எடுக்கப்படும் விதை எண்ணெய்களில் இந்தச் (ஹெக்ஸேன் மூலம் பிரித்தெடுக்கும்) செயல்முறை இல்லை. இருப்பினும், இந்த வழியில் உற்பத்தி செய்யப்படும் எண்ணெயின் விலை அதிகம்.

இந்த எண்ணெய்களால் புற்றுநோய் ஏற்படுகிறதா?

சூரியகாந்தி மற்றும் கடுகு எண்ணெய்கள் ஆபத்தானவையா?

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஒமேகா-6 கொழுப்பு அமிலங்கள் ஆரோக்கியத்திற்கு நன்மை பயப்பதாகப் பல ஆய்வுகள் கூறினாலும், சமீபத்தில் ஆராய்ச்சியாளர்கள் இந்த அமிலங்கள் ஒரு குறிப்பிட்ட வகை மார்பகப் புற்றுநோயின் வளர்ச்சியைத் தூண்டக்கூடும் என்று கண்டறிந்துள்ளனர்.

புற்றுநோய் செல்கள் உடலில் வளர்வதற்கான எரிபொருளாக, நாம் உண்ணும் உணவில் உள்ள ஊட்டச்சத்துக்களைப் பயன்படுத்துகின்றன.

ஆனால், இதில் ஒமேகா-6 அமிலங்கள் வகிக்கும் பங்கை வெளிப்படுத்தும் ஆராய்ச்சிகள் குறைவாகவே மேற்கொள்ளப்படுகின்றன.

"ஒமேகா-6 கொழுப்பு அமிலங்கள் சில வழிகளில் நமது ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியம் என்பதை நினைவில் கொள்வது அவசியம். நீங்கள் அவற்றை முற்றிலுமாக நீக்கிவிட்டால், பக்க விளைவுகள் ஏற்படக்கூடும்" என்று நியூயார்க்கில் உள்ள வெயில் கார்னெல் மருத்துவ ஆராய்ச்சி மையத்தின் முதுகலை ஆய்வாளரான நிக்கோலஸ் கொண்டோராஸ் எச்சரிக்கிறார்.

ஆரோக்கியத்திற்கு உகந்தது எது?

சூரியகாந்தி மற்றும் கடுகு எண்ணெய்கள் ஆபத்தானவையா?

பட மூலாதாரம்,GETTY IMAGES

கடுகு எண்ணெய் மற்றும் சோயாபீன் எண்ணெய் குறித்து வேறு எந்த விதை எண்ணெயையும்விட அதிகமான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. எனவே அவை குறித்துப் போதுமான சான்றுகள் உள்ளன.

"இவை இரண்டிலும் ஆரோக்கியமான கொழுப்புகள் சமநிலையில் உள்ளன. அதில் மோனோஅன்சாச்சுரேட்டட் கொழுப்புகள், ஒமேகா-6 பாலிஅன்சாச்சுரேட்டட் கொழுப்புகள் மற்றும் ஒமேகா-3 பாலிஅன்சாச்சுரேட்டட் கொழுப்புகள் அடங்கும்," என்று மொசாஃபாரியன் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், கடுகு எண்ணெய் அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது என்றும், ஆலிவ் எண்ணெயைவிட ரத்தக் கொழுப்பின் அளவை சிறப்பாக மேம்படுத்துகிறது என்றும் கூறினார்.

அதோடு 27 சோதனைகளின் பகுப்பாய்வின்படி, கடுகு எண்ணெய் சூரியகாந்தி எண்ணெயைவிட மோசமான கெட்ட கொழுப்பின் (LDL) அளவை கணிசமாகக் குறைக்கிறது என்று விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

குறிப்பாக டைப் 2 நீரிழிவு நோயாளிகளுக்கு இது பயனுள்ளதாக இருக்கும் என்றும், எடை குறைக்கும் முயற்சிகளுக்கும் உதவியாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

சாச்சுரேட்டட் கொழுப்புகளுடன் ஒப்பிடும்போது, சோயாபீன் எண்ணெய், கொழுப்பின் அளவை மேம்படுத்துவதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

சோயாபீன் எண்ணெயை அதிகமாக உட்கொள்பவர்களுக்குப் பிற காரணங்களால் இறப்பு ஏற்படும் அபாயம் குறைவாக இருக்கும் என்று ஓர் ஆய்வு கண்டறிந்துள்ளது.

அடுத்தகட்ட ஆராய்ச்சிகள் செய்யப்பட வேண்டுமா?

"இயற்கை அளித்துள்ள சத்தான பரிசுகளில் விதைகளும் ஒன்று. அவை ஆரோக்கியமான கொழுப்புகளின் தொகுப்பு" என்கிறார் மொசாஃப்ரியன்.

விதையில் இருந்து தயாரிக்கப்படும் எண்ணெய்களை உட்கொள்வதால் ஏற்படும் உடல்நல பாதிப்புகள் குறித்து இன்னும் கடுமையாக சோதிக்க வேண்டிய அவசியம் இருப்பதாக சில விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.

மறுபுறம், இந்த எண்ணெய்கள் ரத்தக் கொழுப்பு, குளுக்கோஸ் மற்றும் இன்சுலின் அளவுகளில் ஏற்படுத்தும் நன்மைகளை ஏற்கெனவே பல ஆராய்ச்சிகள் நிரூபித்துள்ளன என்று பேராசிரியர் மார்க்லண்டும் பிறரும் கூறுகின்றனர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cn5y3y0x925o

முளைவிட்ட உருளைக்கிழங்கு, பூண்டு, வெங்காயத்தை உணவில் சேர்க்கலாமா?

3 months 2 weeks ago

முளைவிட்ட உருளைக்கிழங்குகள் மற்றும் வெங்காயம் உட்கொள்வது நல்லதா? ஆரோக்கியம், உணவு,

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்

  • எழுதியவர், நஜானின் மொடாமெதி

  • பதவி, பிபிசி பாரசீகம்

  • 30 மே 2025, 04:22 GMT

உங்கள் சமையலறைக்குச் சென்று நீங்கள் உங்களுக்குப் பிடித்த உணவை சமைக்க துவங்குகிறீர்கள். அதற்கு உருளைக்கிழங்கு தேவைப்படுகிறது. நீங்கள் அதனை எடுக்கும் போது, அதில் முளைவிட்டிருந்தால் என்ன நினைப்பீர்கள்?

இதை சமைப்பதா? இதனை சமைப்பது உடலுக்கு நன்மை அளிக்குமா? அல்லது குப்பையில் போடுவது சரியாக இருக்குமா என்று ஆயிரம் கேள்விகள் உங்கள் மனதில் எழுகிறதா?

அடுத்த நேரம் என்ன சமைப்பது என்ற யோசனையே பெரிதாக இருக்கும் போது, முளைவிட்ட உருளை, வெங்காயம் மற்றும் பூண்டு போன்ற பொருட்களை சமைப்பது நல்லதா, கெட்டதா என்ற கேள்வி மேலும் குழப்பத்தையே ஏற்படுத்தும். ஆனால் இதற்கான பதிலை ஒரு வரியில் கூறிவிட இயலாது.

உருளைக்கிழங்கு முளைவிடும் போது என்ன நடக்கும்?

முளைவிடுதல் என்பது ஒரு இயற்கையான நிகழ்வு. உங்கள் வீட்டில் இருக்கும் உருளைக்கிழங்கு ஒரு செடியாக வளர போகிறது என்பதன் அறிகுறி அது.

இந்த நிலையில், உருளைக்கிழங்கு க்ளைகோலாய்ட்ஸ் (glycoalkaloids) என்ற நஞ்சை அதிகமாக உற்பத்தி செய்யும். இந்த இயற்கையாக உருவாகும் நச்சுத்தன்மை, செடிகளை பூஞ்சைகள் மற்றும் பூச்சிகளின் தொற்றில் இருந்து பாதுகாக்க உதவுகிறது.

இந்த நச்சுகளில் காணப்படும் மற்றொரு கலவை சொலானின். இது உருளைக்கிழங்கு, தக்காளி, பெரிய கத்தரிக்காய் மற்றும் குடைமிளகாய் போன்றவற்றிலும் காணப்படும்.

அறுவடை செய்து, சேமித்து வைக்கும் போது இந்த நச்சுக் கலவைகளின் வளர்ச்சி மேலும் அதிகரிக்கிறது. இது மனிதர்கள் மற்றும் விலங்குகள் என இரு தரப்பினருக்குமே அபாயத்தை ஏற்படுத்தக் கூடியது.

முளைவிட்ட உருளைக்கிழங்குகள் மற்றும் வெங்காயம் உட்கொள்வது நல்லதா? ஆரோக்கியம், உணவு,

பட மூலாதாரம்,SHUTTER STOCK

படக்குறிப்பு,முளைவிட்ட உருளைக்கிழங்குகளை சமைக்க பயன்படுத்தும் போது பசுமையான பகுதி முழுமையாக நீக்கப்பட வேண்டும்

இப்படியாக முளைவிட்ட காய்கறிகளை உட்கொள்ளலாமா?

"முளைவிட்ட உருளைக்கிழங்குகளில் மிகவும் ஆபத்தானது க்ளைகோலாய்டுகள். இது உணவுக்கு கசப்பான சுவையை தருவது மட்டுமின்றி, வாந்தியையும் ஏற்படுத்தும்," என்று டாக்டர் க்ரிஸ் பிஷப் தெரிவிக்கிறார். அவர் லிங்கன் பல்கலைக்கழகத்தில் அறுவடைக்கு பிந்தைய தொழில்நுட்பப்ப் பிரிவில் பணியாற்றுகிறார். 'பொட்டேட்டோஸ் போஸ்ட்ஹார்வெஸ்ட்' என்ற புத்தகத்தை அவர் எழுதியுள்ளார்.

"உருளைக்கிழங்குகள் பச்சை நிறத்தில் தோற்றமளித்தால் அதில் இந்த இயற்கை ரசாயனம் இருப்பது வெளிப்படையாக தெரிந்துவிடும். அதனால் தான் பச்சை நிறத்தில் இருக்கும் உருளைக்கிழங்குகளை உணவில் எடுத்துக் கொள்ளக் கூடாது," என்று பிஷப் பிபிசிக்கு தெரிவித்தார்.

"இந்த ரசாயனத்தின் செறிவானது, முளைவிட்ட உருளைக்கிழங்குகளில் இன்னும் கூடுதலாக இருக்கலாம். எனவே அவற்றை முழுமையாக நீக்கிவிட வேண்டும். சந்தேகம் இருக்கும் பட்சத்தில், முளைவிட்ட பகுதியில் அதன் 'வேர்' வரை சென்று முழுமையாக நீக்கிய பிறகு, மற்ற பகுதியை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்," என்றும் அவர் தெரிவித்தார்.

அதே போன்று பிரிட்டனின் உணவு தரங்களுக்கான முகமை, முளைவிட்ட உருளைக்கிழங்குகளில் எப்பகுதியை உணவில் சேர்ப்பது சரியாக இருக்கும் என்று அறிவித்துள்ளது.

அதன்படி, "குருத்தை நீக்கிவிட்ட பிறகும், உருளைக்கிழங்கு திடமாக இருக்கும் பட்சத்தில், எந்த சேதமும் இல்லாத பட்சத்தில், அதனை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்," என்று அறிவுறுத்துகிறது அந்த முகமை.

"இருப்பினும், உருளைக்கிழங்கில் பச்சை நிறம் தெரிந்தால், அதனை சமையலுக்கு பயன்படுத்த வேண்டாம். ஏன் என்றால் பச்சை நிறம் இருப்பது, அதில் நச்சுத்தன்மை இருப்பதை சுட்டிக்காட்டும் அறிகுறியாகும்," என்றும் குறிப்பிட்டுள்ளது.

"முளைவிட்ட உருளைக்கிழங்குகள், தொட்டுப் பார்ப்பதற்கு மிகவும் திடமாக, சுருக்கங்கள் ஏதுமின்றி இருக்கும் பட்சத்தில், குருத்துகள் மிகவும் சிறிதாக இருந்தால், அவற்றை உணவில் சேர்த்துக் கொள்வது பாதுகாப்பானது. ஆனால், தொடுவதற்கு மிகவும் மிருதுவாகவும், சுருக்கங்களுடனும் காணப்பட்டால் அதில் உள்ள ஊட்டச்சத்துகள் அனைத்தையும் அவை இழந்துவிட்டதை சுட்டிக்காட்டுகின்றன. எனவே அவற்றை உட்கொள்ள வேண்டாம்," என்ற முகமை குறிப்பிடுகிறது.

முளைவிட்ட உருளைக்கிழங்குகள் மற்றும் வெங்காயம் உட்கொள்வது நல்லதா? ஆரோக்கியம், உணவு,

பட மூலாதாரம்,SHUTTER STOCK

படக்குறிப்பு,உருளைக்கிழங்குகள் முளைவிட்டிருந்தால், அதில் அளவுக்கு அதிகமாக நச்சுகள் உள்ளன என்று அர்த்தம்.

சொலானின் நச்சு

அதிக எச்சரிக்கையுடன் இருக்குமாறு சில நிபுணர்கள் கூறுகின்றனர்.

கிழக்கு ஆங்க்லியா பல்கலைக்கழகத்தில் தாவர அறிவியல் துறையில் பேராசிரியராகப் பணியாற்றும் கேத்தி மார்டின், "முளைவிட்ட உருளைக்கிழங்குகளை நீங்கள் உட்கொள்ளவே கூடாது," என்று கூறுகிறார்.

உருளைக்கிழங்குகளை வெளிச்சத்தில் வைக்கும் போது, அது முளைவிடுதலை தூண்டுகிறது. க்ளைகோலாய்டு, சொலானின் போன்ற நஞ்சுகளின் உற்பத்தியையும் தூண்டுகிறது. இது மனிதர்கள் மற்றும் விலங்குகளுக்கு கேடானது. குறிப்பாக நாய், பூனை போன்ற செல்லப் பிராணிகளுக்கு இவை ஆபத்தானவை என்று அவர் விளக்குகிறார்.

"பச்சை நிறமில்லாத உருளைக்கிழங்குகளில் சொலானின் அளவு மிகவும் குறைவாகவே உள்ளது. இருப்பினும், இது விஷமாக மாறக்கூடிய ஆபத்தைக் கொண்டிருப்பதால் ஒருவர் உருளைக்கிழங்கை பச்சையாக உண்ணக் கூடாது," என்றும் கேத்தி தெரிவிக்கிறார்.

உண்மையில் மிகவும் அரிதாகவே சொலானின் நஞ்சால் அசம்பாவிதங்கள் ஏற்பட்டுள்ளன. பிரிட்டனில் 1970-களின் பிற்பாதியில், 78 பள்ளி மாணவர்கள் பச்சை உருளைக்கிழங்குகளை உட்கொண்ட பிறகு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விவகாரம் அதிகமாக அறியப்பட்ட நிகழ்வாக இன்றும் உள்ளது.

மிகவும் குறைவான அளவில் உட்கொண்டால் அதனால் ஏற்படும் பாதிப்பையும் நீங்கள் குறைவாகவே உணர்வீர்கள்.

சொலானின் நஞ்சால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு வயிற்றுப்போக்கு, வாந்தி மற்றும் கடுமையான வயிற்று வலி ஏற்படும். மிகவும் தீவிரமான தாக்கம் இருக்கும் பட்சத்தில், தலைசுற்றல், மயக்கம், குழப்பம், பலவீனமாக உணருதல், பார்வை திறனில் பிரச்னை, சுய நினைவை இழத்தல் போன்றவையும் ஏற்படும். சில நேரங்களில் மரணங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இத்தகைய உருளைக்கிழங்குகளை உட்கொள்ளும் போது சிலருக்கு சில நிமிடங்களில் அறிகுறிகள் தென்படலாம். சிலருக்கு இரண்டு நாட்கள் கழித்து அறிகுறிகள் தென்படலாம்.

முளைவிட்ட உருளைக்கிழங்குகள் மற்றும் வெங்காயம் உட்கொள்வது நல்லதா? ஆரோக்கியம், உணவு,

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,சொலானின் நச்சால் மக்களுக்கு வயிற்றுப்பொக்கு, வாந்தி மற்றும் கடுமையான வயிற்றுவலி போன்றவை ஏற்பட வாய்ப்புகள் உள்ளன

முளைவிட்ட உருளைகளை என்ன செய்வது?

  • குருத்துகள் மிகவும் சிறிதாக இருந்தால், சமைப்பதற்கு முன்பு அவற்றை நீக்கிவிடவும்

  • ஒரு அங்குலத்திற்கு மேலாக வளர்ந்திருந்தாலோ, அல்லது உருளைக்கிழங்கு மிகவும் மிருதுவாக இருந்தாலோ அதனை சமைக்க வேண்டாம்

  • பச்சை நிறத்தில் இருக்கும் பகுதிகளை வெட்டி நீக்கவும். இது அதிக அளவில் இருக்கும் நச்சுகளையே குறிக்கிறது.

  • உருளைக்கிழங்கு அழுகியிருந்தால் அதனை குப்பையில் போடுவதே சிறந்தது

  • உருளைக்கிழங்குகளில் குருத்துகள் முளைத்திருக்கும் பட்சத்தில், அதனை பொறுமையாக கையாளவும். அதனை பிடுங்கி எறிவது, உருளையின் அப்பகுதியில் நோய் தொற்றை ஏற்படுத்தும். நம் உடலில் காயங்கள் ஏற்படுவது போன்று தான் அதுவும் நிகழும்.

நீங்கள் கர்ப்பமாக இருந்தாலோ அல்லது நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும் பட்சத்திலோ அல்லது பாலூட்டும் தாய்மாராகவோ இருந்தால், எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.

உருளைக்கிழங்குகளை வீட்டில் எப்படி வைத்திருக்க வேண்டும்?

உருளைக்கிழங்குகள் வீணாவதை தடுக்கவும், 'ஃபிரெஷ்ஷாக' இருப்பதை உறுதி செய்யவும் கீழ் காணும் வழிமுறைகளை நீங்கள் பின்பற்றலாம்

  • 3-10° செல்சியஸ் வெப்ப நிலை கொண்ட, குளிர்ச்சியான, ஈரப்பதமற்ற, இருண்ட இடத்தில் வைக்கலாம்.

  • கடைகளில் இருந்து வாங்கிக் கொண்டு வந்த உருளைக்கிழங்குகளை அப்போதே கழுவ வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஈரப்பதம் அதிகரிக்கும் என்பதால் எளிதில் அழுகிப் போவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

  • உருளைக்கிழங்குகளையும் வெங்காயங்களையும் தனித்தனியாக வைப்பது நல்லது. ஏன் என்றால் இவ்விரண்டு உணவுப் பொருட்களும் ஈரப்பதம் மற்றும் வாயுவை வெளியேற்றும் தன்மை கொண்டவை. இது முளைவிடுதலை தூண்டும்.

முளைவிட்ட உருளைக்கிழங்குகள் மற்றும் வெங்காயம் உட்கொள்வது நல்லதா? ஆரோக்கியம், உணவு,

பட மூலாதாரம்,SHUTTER STOCK

படக்குறிப்பு,உருளைக்கிழங்குகளையும் வெங்காயங்களையும் தனித்தனியாக வைப்பது நல்லது.

முளைவிட்ட வெங்காயம் மற்றும் பூண்டை உணவில் சேர்த்துக் கொள்ளலாமா?

முளைவிட்ட வெங்காயம் மற்றும் பூண்டு, உருளைக்கிழங்கு போன்று நச்சுத்தன்மை கொண்டவை அல்ல.

"மாறாக முளைவிட்ட பூண்டு மற்றும் வெங்காயத்தை உண்பது பாதிப்பை ஏற்படுத்தாது. ஏன் என்றால் அவற்றில் ஆபத்தை ஏற்படுத்தும் நச்சுத்தன்மை ஏதும் இல்லை," என்று கூறுகிறார் பேராசிரியர் மார்டின்.

"பூண்டு அல்லது வெங்காயத்தில் இருக்கும் ஊட்டச்சத்தில் இருந்து இவை முளைக்கின்றன. இருப்பினும் அவை கசப்பாகவும், மிகவும் மிருதுவானதாகவும் கொண்டிருக்கும்," என்றும் அவர் தெரிவிக்கிறார்.

பூண்டு, வெங்காயம் போன்ற உணவுப் பொருட்களையும் 3-10° செல்சியஸ் வெப்ப நிலை கொண்ட, குளிர்ச்சியான, ஈரப்பதமற்ற, இருண்ட இடத்தில் வைக்கலாம். ப்ளாஸ்டிக் பைகளில் போட்டு வைக்காமல், காற்றோட்டமான பைகளில் அவற்றை போட்டு வைத்தால் காற்றோட்டத்துடன் அவை இருக்கும்.

உருளைக்கிழங்குகள் போன்றே, வெங்காயம், பூண்டுகளில் இருந்து நாற்றம் எழுந்தாலோ, அழுகிப் போவதற்கான அறிகுறிகள் தென்பட்டாலோ அவற்றை குப்பையில் கொட்டுவதே எப்போதும் நல்லது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/ckgqzqe81xqo

Checked
Tue, 09/16/2025 - 04:41
நாவூற வாயூற Latest Topics
Subscribe to நாவூற வாயூற feed