நாவூற வாயூற

பூண்டு உண்மையில் நம் ஆரோக்கியத்திற்கு சிறந்ததா? பூண்டு உலகெங்கும் பரவிய வரலாறு

1 week 1 day ago

சீன மற்றும் பிலிப்பைன்ஸ் நாட்டுப்புறக் கதைகளில், காட்டேரிகளை விரட்ட பூண்டு பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.

பட மூலாதாரம், Press Association

படக்குறிப்பு, பூண்டை வெறும் வயிற்றில் உட்கொள்வது இரைப்பை குடல் கோளாறு, வாய்வு மற்றும் குடலில் மாற்றங்களை ஏற்படுத்தும்.

கட்டுரை தகவல்

  • தி ஃபுட் செயின் ப்ரோக்ராம்

  • பிபிசி உலக சேவை

  • 2 நவம்பர் 2025, 01:52 GMT

    புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர்

பூண்டு ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக அதன் தனித்துவமான சுவை மற்றும் மருத்துவ குணங்களுக்காக மதிக்கப்படுகிறது. இது நுண்ணுயிரிகளையும் வைரஸ்களையும் எதிர்க்கும் திறன் கொண்டதால், சமையலிலும் பாரம்பரிய மருத்துவத்திலும் முக்கிய இடம் பிடித்துள்ளது.

மத்திய ஆசியாவில் தோன்றிய பூண்டு, மக்கள் இடம்பெயர்ந்தபோது ஐரோப்பாவுக்கும் அமெரிக்காவுக்கும் பரவியது. இன்று, உலகில் அதிக அளவில் பூண்டை உற்பத்தி செய்கிற நாடாக சீனா உள்ளது.

பிபிசி உலக சேவையின் புட் செயின் நிகழ்ச்சி, பூண்டின் வரலாறு மற்றும் கலாசார முக்கியத்துவத்தைப் பற்றி பேசுகிறது. அதே சமயம், பூண்டு உண்மையில் நமது ஆரோக்கியத்துக்கு நல்லதா? என்ற ஒரு முக்கியமான கேள்வியையும் எழுப்புகிறது.

சமையலில் அத்தியாவசியமான பொருள்

பின்னர், துருக்கிய தொழிலாளர்கள் டென்மார்க்கிற்கு வந்தபோது, பூண்டு சேர்த்த உணவு பரவலானது.

பட மூலாதாரம், AFP via Getty Images

படக்குறிப்பு, பூண்டு உலகெங்கிலும் உள்ள பல உணவு வகைகளில் முக்கியப் பங்கு வகிக்கிறது.

பூண்டு உலகெங்கிலும் உள்ள பல உணவு வகைகளில் முக்கியப் பங்கு வகிக்கிறது. வடமேற்கு பிரான்ஸில் உள்ள தனது பிரெஞ்சு சமையல் பள்ளியில் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, பிரிட்டன் மற்றும் ஆசியாவைச் சேர்ந்த மாணவர்களுக்கு கற்பிக்கும் டேனிஷ் சமையல் கலைஞரான பவுல் எரிக் ஜென்சன், 'பூண்டைப் பற்றித் தெரியாத மாணவரை நான் சந்தித்ததே இல்லை' என்கிறார்.

பூண்டு உணவின் சுவையைப் பெரிதும் உயர்த்துவதாக அவர் நம்புகிறார். 'பூண்டு இல்லாமல் பிரெஞ்சு உணவு எப்படி இருக்கும்?' என்று அவர் ஆச்சரியப்படுகிறார்.

"பிரெஞ்சுக்காரர்களால் பூண்டு இல்லாத உணவை கற்பனை கூட செய்ய முடியாது என நான் நினைக்கிறேன்," குழம்பு முதல் சூப் வரை, காய்கறி அல்லது இறைச்சி உணவுகள் வரை, எல்லாவற்றிலும் ஒரு பல் பூண்டு கண்டிப்பாக இருக்கும். பூண்டு இல்லாமல் சமைப்பதை கற்பனை செய்யவே முடியாது." என்று ஜென்சன் கூறுகிறார்.

ஆனால் 1970களின் தொடக்கத்தில் டென்மார்க்கின் கிராமப்புறத்தில் வளர்ந்தபோது, பூண்டு அவருக்கு புதிதாக இருந்தது.

அதன் கடுமையான மணத்தின் காரணமாக மக்கள் அதை அப்போது பயன்படுத்தவில்லை. பின்னர், துருக்கிய தொழிலாளர்கள் டென்மார்க்கிற்கு வந்தபோது, பூண்டு சேர்த்த உணவு பரவலானது. இத்தாலிய பீட்சாக்கள் மூலமாகவும் ஜென்சன் பூண்டை ரசிக்கத் தொடங்கினார். இப்போது, குளிர்காலத்தில் ஆரோக்கியத்திற்காகவும் பூண்டைப் பயன்படுத்துகிறார்.

"நானும் என் துணைவியும், காலையில் ஒரு கப் சூப் குடிப்போம். அதில் ஒவ்வொருவரும் ஒரு முழு பூண்டு பல்லைப் பிழிந்து சேர்ப்போம். இதனால் எங்களுக்கு சளி, காய்ச்சல் எதுவும் வருவதில்லை. அதற்கு காரணம் பூண்டு தான் என நான் நிச்சயமாக நம்புகிறேன்." என்று அவர் குறிப்பிடுகிறார்.

ஒரு நீண்ட பயணம்

பண்டைய கிரேக்க மருத்துவரும் தத்துவஞானியுமான ஹிப்போகிரட்டீஸ் தனது மருத்துவ சிகிச்சைகளில் பூண்டைப் பயன்படுத்தியதாக செர்ரி குறிப்பிடுகிறார்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, 20ஆம் நூற்றாண்டில் புலம் பெயர்ந்தவர்கள் புதிய இடங்களுக்கு பூண்டை கொண்டு வந்தனர்

பூண்டு ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக கலாசார மற்றும் ஆன்மீக முக்கியத்துவம் பெற்றுள்ளது. பண்டைய கிரேக்கர்கள், சூனியம் மற்றும் வீடுகளின் பாதுகாவலரான ஹெகேட்டுக்கு காணிக்கையாக சாலைச் சந்திப்புகளில் பூண்டை வைத்தனர்.

எகிப்தில், புகழ்பெற்ற துட்டன்காமூனின் கல்லறையில் பூண்டு கிடைத்தது, அவரைப் பாதுகாக்கும் சக்தி பூண்டுக்கு உண்டு என்றும் அவர்கள் நம்பினர்.

அதேபோல், சீன மற்றும் பிலிப்பைன்ஸ் நாட்டுப்புறக் கதைகளில், காட்டேரிகளை விரட்ட பூண்டு பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.

"உலகின் பழமையான சமையல் செய்முறை ஒரு மெசபடோமிய குழம்பு. அது 3,500 ஆண்டுகள் பழமையானது. அதில் இரண்டு பூண்டு பற்கள் பயன்படுத்தப்பட்டிருந்தன" என 'கார்லிக்: எடிபில் பயோகிராபி'என்ற ('Garlic: An Edible Biography') புத்தகத்தின் ஆசிரியரான ராபின் செர்ரி கூறுகிறார்.

"பூண்டு குறித்து உள்ள மிகப் பழமையான மருத்துவ குறிப்பும் சுமார் 3,500 ஆண்டுகள் பழமையானது. 'எபர்ஸ் பாப்பிரஸ்' என்று அழைக்கப்படும் அந்த ஆவணத்தில், உடல்நலக்குறைவு முதல் உடலிலுள்ள ஒட்டுண்ணிகள், இதயம் மற்றும் சுவாசக் கோளாறுகள் வரை பல பிரச்னைகளுக்கு பூண்டை எப்படி பயன்படுத்துவது என்பது பற்றிய பல குறிப்புகள் இருந்தன," என்றும் அவர் கூறுகிறார்.

பண்டைய கிரேக்க மருத்துவரும் தத்துவஞானியுமான ஹிப்போகிரட்டீஸ் தனது மருத்துவ சிகிச்சைகளில் பூண்டைப் பயன்படுத்தியதாக செர்ரி குறிப்பிடுகிறார். அரிஸ்டாட்டில், அரிஸ்டோபேன்ஸ் போன்ற பல சிந்தனையாளர்களும் எழுத்தாளர்களும் பூண்டின் மருத்துவ பயன்களைப் பற்றி குறிப்பிட்டுள்ளனர்.

அடிமைகளின் உணவில் இருந்து அரச குடும்பத்தின் உணவு வரை

பூண்டு ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக அதன் தனித்துவமான சுவை மற்றும் மருத்துவ குணங்களுக்காக மதிக்கப்படுகிறது.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பீட்சா போன்ற நமக்குப் பிடித்த பல உணவுகளில் பூண்டு பெரிதும் பயன்படுத்தப்படுகின்றது.

பண்டைய மெசபடோமியா, எகிப்து, கிரீஸ், ரோம், சீனா, இந்தியா போன்ற பல நாகரிகங்களில் பூண்டு மிகவும் பிரபலமாக இருந்தது.

ரோமானிய வீரர்கள் பூண்டு தங்களுக்கு தைரியமும் வலிமையும் தருவதாக நம்பினர். அவர்கள் யுத்தங்களில் வெற்றி பெற்று புதிய பகுதிகளைக் கைப்பற்றிய போது, பூண்டை ஐரோப்பா முழுவதும் பரவலாக்கினர்.

பூண்டு உணவாகவும் மருந்தாகவும் பயன்பட்டாலும், ஒரு காலத்தில் சமையலில் அது ஏழைகளால் மட்டுமே பயன்படுத்தப்பட்டது.

"அது ஏழைகள் உண்ணும் உணவாகவே கருதப்பட்டது." என்று கூறிய ராபின் செர்ரி, "எகிப்தில் பிரமிடுகள் கட்டிய அடிமைகளுக்கும், ரோமானிய மாலுமிகளுக்கும் வலிமை தருவதற்காக பூண்டு கொடுத்தனர். அது மலிவானது மட்டும் அல்லாமல், கெட்டுப் போன உணவின் சுவையையும் மறைக்கக்கூடும். அதனால் அது ஏழைகள் சாப்பிடும் உணவாகவே நீண்ட காலம் பார்க்கப்பட்டது." என்றும் விளக்குகிறார்.

ஆனால் 14 முதல் 16-ஆம் நூற்றாண்டு வரையிலான மறுமலர்ச்சி காலத்தில் பூண்டின் மதிப்பு மாறியது. அது, ஐரோப்பாவில் கலை, அறிவியல் வளர்ந்த காலம்.

"பிரான்சின் நான்காம் ஹென்றி பூண்டால் ஞானஸ்நானம் செய்யப்பட்டு, அதை அதிகம் உண்டார். இது பூண்டை பிரபலப்படுத்தியது. 19-ஆம் நூற்றாண்டில் பிரிட்டனிலும் பூண்டு பிரபலமானது," என்கிறார் செர்ரி.

1950-60களில் குடியேறியவர்கள் மூலம் பூண்டு அமெரிக்காவுக்கு வந்தது. இது எதிர்மறையான கருத்துகளை மாற்ற உதவியது.

"யூதர்கள், இத்தாலியர்கள், கொரியர்கள் ஆகியோரை 'பூண்டு சாப்பிடுபவர்கள்' என்று அவமானகரமாக அழைத்தனர். இதற்கு மோசமான அர்த்தம் இருந்தது," என்றார் செர்ரி.

மருந்தாகப் பயன்படுத்தப்படும் பூண்டு

மத்திய ஆசியாவில் தோன்றிய பூண்டு, மக்கள் இடம்பெயர்ந்தபோது ஐரோப்பாவுக்கும் அமெரிக்காவுக்கும் பரவியது. இன்று, உலகில் அதிக அளவில் பூண்டை உற்பத்தி செய்கிற நாடாக சீனா உள்ளது.

பட மூலாதாரம், AFP via Getty Images

படக்குறிப்பு, பூண்டு அதன் மருத்துவ குணங்களுக்காக இன்றும் விரும்பப்படுகிறது

உலகில் தற்போது 600-க்கும் மேற்பட்ட பூண்டு வகைகள் உள்ளன. உஸ்பெகிஸ்தான், ஜார்ஜியா போன்ற இடங்களில் விளையும் சில வகைகள் சமீபத்தில் தான் உலக சந்தையில் கிடைக்கத் தொடங்கியுள்ளன.

சமையலில் முக்கியப் பங்கு வகிப்பதைத் தாண்டி, பூண்டு சளியின் அறிகுறிகளைக் குறைக்கவும் பயன்படுகிறது. ரத்த அழுத்தம், கொழுப்பு, புற்றுநோய் ஆகியவற்றில் பூண்டின் தாக்கத்தை ஆய்வு செய்ய பல மருத்துவப் பரிசோதனைகள் நடந்துள்ளன. ஆனால் அதில் வெளியான முடிவுகள் மாறுபட்டதாக உள்ளன.

உதாரணமாக, இரானில் நடந்த சிறிய ஆய்வு, பூண்டு மற்றும் எலுமிச்சை சாறு ஆறு வாரங்களில் கொழுப்பையும் ரத்த அழுத்தத்தையும் குறைத்ததாகக் கூறுகிறது. ஆனால், ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் 200 நபர்களிடம் ஆறு மாதங்களுக்கு நடந்த ஆய்வில் கொழுப்பு குறைவதற்கான குறிப்பிடத்தக்க மாற்றம் எதுவும் காணப்படவில்லை.

மத்திய ஆசியாவில் தோன்றிய பூண்டு, மக்கள் இடம்பெயர்ந்தபோது ஐரோப்பாவுக்கும் அமெரிக்காவுக்கும் பரவியது. இன்று, உலகில் அதிக அளவில் பூண்டை உற்பத்தி செய்கிற நாடாக சீனா உள்ளது.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சீனா இப்போது உலகின் மிகப்பெரிய பூண்டு உற்பத்தியாளராக உள்ளது

2014-இல் ஆஸ்திரேலியாவின் சிட்னி பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வு, பூண்டு வலுவான நுண்ணுயிர், வைரஸ் மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகளைக் கொண்டிருப்பதை உறுதிப்படுத்தியது.

"பூண்டில் அதிக அளவு பொட்டாசியம், பாஸ்பரஸ், துத்தநாகம், கந்தகம் ஆகியவை இருக்கின்றன. மெக்னீசியம், மாங்கனீசு, இரும்பு போன்றவை மிதமான அளவில் உள்ளன. உண்மையில் இது ஒரு அதிசய காய்கறி," என்கிறார் பிரிட்டிஷ் டயட்டெடிக் அசோசியேஷனின் செய்தித் தொடர்பாளரும் குழந்தை மருத்துவ உணவியல் நிபுணருமான பஹீ வான் டி போர்.

"பூண்டில் 'அல்லிசின்' என்ற கந்தகம் கூட்டு பொருள் உள்ளது. இதில், நம் குடல் மிகவும் விரும்பும் ப்ரீபயாடிக் நார்ச்சத்து நிறைந்துள்ளது. அதனால் குடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. அதில் நுண்ணுயிர் எதிர்ப்பு தன்மையும் உள்ளது." என்றார்.

அதேபோல் பூண்டின் நார்ச்சத்து குடல் பாக்டீரியாவை வளர்க்க உதவுகிறது, மலச்சிக்கல், வயிறு வீக்கம் ஆகியவற்றையும் குறைக்கலாம் என்றும் அவர் கூறுகிறார்.

தினமும் ஒன்று அல்லது இரண்டு பூண்டு பற்களை பச்சையாக சாப்பிடுவது பாதுகாப்பானது.

ஆனால் அமெரிக்கன் ஃபேமிலி ஃபிசிஷியன் (American Family Physician) என்ற மருத்துவ இதழில் வெளியாகியுள்ள அறிக்கையின்படி, பூண்டை அதிகமாக, குறிப்பாக வெறும் வயிற்றில் சாப்பிட்டால், வயிற்றுப் பிரச்னைகள், வாயு பிரச்னை மற்றும் குடலில் உள்ள நல்ல பாக்டீரியாவில் மாற்றம் ஏற்படலாம்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c8drre7vv3do

நாட்டு மாட்டுப் பாலில் தயாராவதாக கூறப்படும் ஏ2 நெய் கூடுதல் நன்மை தரும் என்பது உண்மையா?

3 months 1 week ago

ஏ1, ஏ2 நெய் இரண்டில் எது சிறந்தது?

பட மூலாதாரம், GETTY IMAGES

படக்குறிப்பு, ஏ2 நெய் வழக்கமான நெய்யை விட அதிக பலனளிக்குளிக்குமா என்பது குறித்து விவாதம் எழுந்துள்ளது

கட்டுரை தகவல்

  • தீபக் மண்டல்

  • பிபிசி செய்தியாளர்

  • 28 ஜூலை 2025, 03:22 GMT

இந்தியா முழுவதும் சந்தைகளில் ஏ1, ஏ2 என்ற பெயருடன் பால், நெய் மற்றும் வெண்ணெய் விற்பனைக்கு வந்துள்ளது.

வழக்கமான உள்ளூர் நெய்யைவிட ஏ2 நெய் ஆரோக்கியமானது என்ற முறையில் சந்தைப்படுத்தப்படுகின்றன.

சாதாரண உள்ளூர் நெய் சந்தையில் ஒரு கிலோ ரூ.1,000-க்கு விற்பனை செய்யப்பட்டால், ஏ2 நெய் ஒரு கிலோ ரூ.3,000 வரை விற்பனை செய்யப்படுகிறது.

பால் பொருட்களை தயாரிக்கும் நிறுவனங்கள் ஏ2 நெய் நாட்டு மாட்டு பாலிலிருந்து தயாரிக்கப்படுவதால் கூடுதல் பலனளிப்பதாகக் கூறுகின்றன.

இதில், இயற்கையாக கிடைக்கும் A2 பீட்டா-கேசின் புரதம் உள்ளதாகவும், இந்த புரதம் சாதாரண பாலில் காணப்படும் A1 புரதத்தை விட எளிதில் செரிக்கக் கூடியது என்றும், உடலில் உள்ள அழற்சியைக் குறைப்பதாகவும் அந்நிறுவனங்கள் கூறுகின்றன.

இந்த நெய்யில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், கான்ஜுகேட்டட் லினோலிக் அமிலம் (CLA), மற்றும் A, D, E, K வைட்டமின்கள் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஏ2 நெய் செரிமான மண்டலத்தை வலுப்படுத்துவதாகவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதாகவும், தோல் நிறத்தை மேம்படுத்துவதாகவும் கூறப்படுகிறது.

இது இதய நோய்களுக்கு நல்லது என்றும் கூறப்படுகிறது. இந்த நெய்யை உட்கொள்வது காயங்களை விரைவாக குணப்படுத்த உதவும் என்றும் பால் நிறுவனங்கள் கூறுகின்றன.

பால் பொருள் நிறுவனங்கள் இதை ஒரு புதிய சூப்பர்ஃபுட் ஆக விற்பனை செய்கின்றன.

ஏ1 மற்றும் ஏ2 என்ற பெயரில் பால்பொருட்களை விற்பனை செய்வது சரியா?

எஃப்.எஸ்.எஸ்.ஏ.ஐ. கடந்த வருடம் வெளிய்ட்ட சுற்றறிக்கை

பட மூலாதாரம், FOOD SAFETY AND STANDARDS

படக்குறிப்பு, ஏ1, ஏ2 பால் பொருட்கள் குறித்து எஃப்.எஸ்.எஸ்.ஏ.ஐ. கடந்த வருடம் வெளியிட்ட சுற்றறிக்கை

இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரநிலை ஆணையம் (FSSAI) இத்தகைய ஏ1 மற்றும் ஏ2 என்ற பெயரிடலுடன் பால், நெய், வெண்ணெய் விற்பதை தடை செய்திருந்தது. ஏ2 என்ற பெயரில் நெய் விற்பது தவறான தகவலை அளிப்பதாக உள்ளது என்றும் கூறியது.

கடந்த ஆண்டு, ஏ1 அல்லது A2 என்ற பெயரிடலுடன் பால் அல்லது பால் பொருட்களை விற்பது தவறான தகவலை அளிப்பது மட்டுமல்லாமல், 2006 உணவு பாதுகாப்பு மற்றும் தரநிலைகள் சட்டத்தையும், அதன் அடிப்படையில் வகுக்கப்பட்ட விதிகளையும் மீறுவதாக உள்ளது என்று எஃப்.எஸ்.எஸ்.ஏ.ஐ. ஒரு சுற்றறிக்கை வெளியிட்டிருந்தது.

ஏ1 மற்றும் ஏ2 என்ற பெயரிடலுடன் உள்ள தயாரிப்புகளை 6 மாதங்களுக்குள் நிறுத்துமாறு நிறுவனங்களுக்கு எஃப்.எஸ்.எஸ்.ஏ.ஐ உத்தரவிட்டது.

ஆனால், எஃப்.எஸ்.எஸ்.ஏ.ஐ. ஒரு வாரத்துக்குள் தனது அறிவுறுத்தலை திரும்பப் பெற்றது.

ஏ1 மற்றும் ஏ2 என பெயரிடப்பட்ட பால் பொருட்கள் உண்மையில் ஆரோக்கியத்துக்கு கூடுதல் நன்மை தருகிறதா என்பதுதான் கேள்வி.

ஏ2 நெய் வழக்கமான நெய்யை விட உடலுக்கு அதிக பயனளிக்குமா மற்றும் இதற்கு அதிக மருத்துவ குணங்கள் உள்ளனவா?

ஏ1 மற்றும் ஏ2 பால் அல்லது நெய் என்றால் என்ன?

A1 மற்றும் A2 இடையிலான வேறுபாடு, பாலில் காணப்படும் முக்கிய புரதமான பீட்டா-கேசின் புரதத்தை அடிப்படையாகக் கொண்டது.

பட மூலாதாரம், GETTY IMAGES

படக்குறிப்பு, ஏ1 மற்றும் ஏ2 இடையிலான வேறுபாடு, பாலில் காணப்படும் முக்கிய புரதமான பீட்டா-கேசின் புரதத்தை அடிப்படையாகக் கொண்டது.

ஏ1 மற்றும் ஏ2 இடையிலான வேறுபாடு, பாலில் காணப்படும் முக்கிய புரதமான பீட்டா-கேசின் புரதத்தை அடிப்படையாகக் கொண்டது. முக்கியமாக இந்த வேறுபாடு பசுவின் இனத்தை சார்ந்து இருக்கிறது.

பாலில் காணப்படும் புரதங்களில் பீட்டா-கேசின் ஒரு முக்கியமான புரதம் என தேசிய வேளாண் அறிவியல் அகாடமி (NAAS) ஆய்வுக் கட்டுரை கூறுகிறது.

பசுவின் பாலில் உள்ள மொத்த புரதத்தில் 95% கேசின் மற்றும் வேய் (whey) புரதங்களால் ஆனது. பீட்டா-கேசின் அமினோ அமிலங்களின் சமநிலையை கொண்டுள்ளது.

இரண்டு வகையான பீட்டா-கேசின்கள் உள்ளன. ஐரோப்பிய இன பசுக்களின் பாலில் அதிகம் காணப்படும் ஏ1 பீட்டா-கேசின் மற்றும் இந்திய உள்நாட்டு பசுக்களின் பாலில் இயற்கையாக காணப்படும் ஏ2 பீட்டா கேசின்.

ஏ1 மற்றும் ஏ2 பீட்டா-கேசின் புரதங்கள் அமினோ அமில அளவில் வேறுபடுகின்றன. இது புரதத்தின் செரிமான செயல்முறையை பாதிக்கிறது.

சில ஆய்வுகள் ஏ2 பால் செரிக்க எளிதாக இருக்கலாம் மற்றும் ஆரோக்கியத்தில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்று கூறுகின்றன, ஆனால் இதுகுறித்து மேலும் ஆய்வுகள் தேவை. போதுமான ஆய்வுகள் இல்லாததால், இது கூடுதல் நன்மைகளை தருகிறது என்று நிரூபிக்கப்படவில்லை.

ஏ2 நெய் குறித்து பால் பொருள் நிபுணர்கள் கூறுவது என்ன?

ஏ2 நெய்யின் நன்மை குறித்து நிபுணர்கள் கேள்வி எழுப்புகின்றனர்

பட மூலாதாரம், GETTY IMAGES

படக்குறிப்பு, ஏ2 நெய் தொடர்பாக கூறப்படுபவை பற்றி நிபுணர்கள் கேள்வி எழுப்புகின்றனர்

ஏ2 நெய் உண்மையில் வழக்கமான நெய்யை விட அதிக பயனளிக்குமா அல்லது இதுகுறித்து மிகைப்படுத்தப்பட்ட கூறப்படுகிறதா என்பதை அறிய பிபிசி இந்தி, சில பால் பொருள் நிபுணர்களிடம் கேட்டது.

எங்கள் கேள்விக்கு பதிலளித்த அமுலின் முன்னாள் நிர்வாக இயக்குநரும், தற்போது இந்திய பால் பண்ணையாளர் சங்கத்தின் தலைவருமான ஆர்.எஸ். சோதி, "இந்த விளம்பரத்தை அதிலும் குறிப்பாக ஆன்லைன் சந்தையில் பார்த்து வருகிறேன். அங்கு பிரபலமான கூட்டுறவு நிறுவனங்கள் மற்றும் நிறுவனங்கள் தங்கள் சிறந்த நெய்யை ஒரு கிலோ ரூ.600 முதல் ரூ.1,000 வரை விற்கின்றன.

அதே நேரத்தில், அதே நெய்யை ஏ2 என்று பெயரிட்டு கிலோ இரண்டு முதல் மூவாயிரம் ரூபாய்க்கு விற்கின்றனர். இது வெவ்வேறு வழிகளில் விளம்பரப்படுத்தப்படுகிறது. சிலர் இதை பிலோனா நெய் என்றும், சிலர் உள்நாட்டு பசு இனங்களின் பாலில் இருந்து தயாரிக்கப்பட்ட ஆரோக்கியமான நெய் என்றும் விற்கின்றனர்," என்று தெரிவித்தார்.

"ஏ1 மற்றும் ஏ2 என்பது ஒரு கொழுப்பு அமில சங்கிலியுடன் இணைக்கப்பட்டுள்ள ஒரு வகை புரதம் என்பதை முதலில் தெளிவுபடுத்திவிடுகிறேன். இப்போது எது சிறந்தது என்று விவாதம் நடந்து வருகிறது, ஆனால் எது சிறந்தது என்பதற்கு எந்த அறிவியல் ஆதாரமும் இல்லை என்பதை சொல்லிக்கொள்கிறேன்.

இது விவாதத்திற்கு உரிய விஷயமே இல்லை. ஆனால் ஏ2 சிறந்தது என்று கூறப்படுகிறது, இது தவறு. இவை இரண்டு வகையான பீட்டா-கேசின் புரதங்கள், இந்த புரத சங்கிலியின் 67-வது அமினோ அமிலத்தின் மாற்றத்தால் இந்த வேறுபாடு ஏற்படுகிறது," என்று அவர் தெரிவித்தார்.

ஏ2 நெய்யின் ஊட்டச்சத்து பலன்கள் மற்றும் அதன் மருத்துவ குணங்கள் குறித்து மிகைப்படுத்தப்பட்ட கூற்றுகள் உள்ளன என்று ஆர்.எஸ். சோதி கூறுகிறார்.

"நெய்யில் 99.5 சதவிகிதம் கொழுப்பு உள்ளது. வேறு சிலவும் உள்ளன. எனவே எனது நெய்யில் ஏ2 புரதம் உள்ளது, இது உடலுக்கு மிகவும் பயனளிக்கும் என்று எப்படி கூற முடியும்?" என்று அவர் கேள்வி எழுப்புகிறார்.

அவரது கருத்துப்படி, இது மக்களை ஏமாற்றுவதைத் தவிர வேறொன்றுமில்லை. இது சந்தைப்படுத்தல் மூலம் மக்களை ஏமாற்றுவதாகும்.

ஆனால், A2 நெய் விற்கும் பல பிராண்டுகள் வந்து போய்விட்டன என்றும், அவை சந்தையில் நிலைத்திருப்பது கடினம் என்றும் அவர் கூறுகிறார். ஏனெனில், இந்த நிறுவனங்கள் சந்தைப்படுத்தலுக்கு அதிகம் செலவு செய்கின்றன, பின்னர் தாக்குப்பிடிக்க முடியாமல் அவை சந்தையில் இருந்து வெளியேறுகின்றன.

சுகாதார நிபுணர்கள் கூறுவது என்ன?

ஏ2 நெய் என்பது ஒரு விளம்பர உக்தி என பெரும்பாலானவர்கள் கூறுகின்றனர்

பட மூலாதாரம், GETTY IMAGES

படக்குறிப்பு, ஏ2 நெய் என்பது ஒரு விளம்பர உக்தி என பெரும்பாலானவர்கள் கூறுகின்றனர்

ஏ2 நெய் என்ற பெயரில் விற்பனை செய்யப்படும் நெய் வழக்கமான நெய்யை விட அதிக பலன் தரக்கூடியது என சொல்லப்படுவது குறித்து சுகாதார வல்லுநர்களும் கேள்வி எழுப்புகின்றனர்.

டெல்லியில் உள்ள மனித நடத்தை மற்றும் இணை அறிவியல் நிறுவனத்தில் மூத்த உணவியல் நிபுணரான மருத்துவர் விபூதி ரஸ்தோகி, "ஏ2 நெய் என்ற பெயரில் விற்கப்படும் நெய் வழக்கமான நெய்யை விட அதிக பயனளிக்கும் என்று கூறப்படுவது அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்படும் வரை, இந்த நெய் சிறந்தது என்று எப்படி கூற முடியும்?" என பிபிசி இந்தியிடம் தெரிவித்தார்.

"இரண்டாவது, இந்த வகையான நெய் இயந்திரங்கள் மூலம் பிரித்தெடுக்கப்படவில்லை என நீங்கள் கூறினால், ஏ2 புரதம் பாலிலிருந்து எவ்வாறு பிரித்தெடுக்கப்படுகிறது என்ற கேள்வி எழுகிறது. அவ்வாறு செய்வது சாத்தியமில்லை. ஏ2 நெய் வழக்கமான நெய்யை விட அதிக பலனளிக்கிறது என்பது அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்படும்வரை அது ஒரு விற்பனை தந்திரம் என்றே அழைக்கப்படும் என்பதுதான் உண்மை. ஏ2 புரதம் சிறந்தது என்பதற்கு இதுவரை எந்த ஆதாரமும் இல்லை."

நெய் புரதத்திற்காக உண்ணப்படுவதில்லை என்றும் கூறுகிறார் மருத்துவர் ரஸ்தோகி. ஆனால் ஏ2 நெய் புரதத்தின் பெயரால் விற்பனை செய்யப்படுகிறது. நெய்யில் பெயரளவுக்கே புரதம் இருக்கிறது.

ஆயுர்வேதத்தின் படி ஏ2 கூடுதல் நலன்ளுடையது என்று நிறுவனங்கள் கூறுகின்றன. ஆனால் ஏ2 நெய் என சொல்லப்படுவதை உண்பது ஆரோக்கியத்திற்கு நல்லது என ஆயுர்வேதம் எந்த கூற்றையும் முன்வைக்கவில்லை என்றார் அவர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c8rpr2xy65jo

தொதல் அல்வா.

3 months 2 weeks ago

images?q=tbn:ANd9GcQGxxLCdbr6CmGQVELI3Wl

ஸ்ரீலங்கா போறேனு ஒரு நண்பர் கிட்ட சொல்லவும் எப்படானு ஆரமிச்சு எப்ப வருவனு அவளோ பரவசமா ஆனான். ஏன் இப்ப இவன் சந்திரமுகில ஜோதிகா ஒட்டியாணத்த பாத்த மாதிரி இவளோ பரவசமாகுறான் ஒரு வேல சரக்கு வாங்கியார சொல்லுவான் போலனு மைன்ட்ல யோசிக்கறப்பயே..... வரும் போது மறக்காம தொதல் அல்வா வாங்கிட்டு வானு சொன்னான். அதென்னடா இங்கலாம் கிடைக்காத அல்வா அங்க ஸ்பெசலா?


இங்கயும் நிறைய இடத்துல கிடைக்குது ஆனா அந்த டேஸ்ட் இங்க எங்கயுமே வரல வேற லெவல் வேற லெவல்னு யூடியூபர் மாதிரி ரிவியூ தந்துட்ருந்தான். வாங்கிட்டு வரலனா வெளுத்துவிட்ருவேன் பாத்துக்கனு வேற கொஞ்சம் ஓவராதான் பண்ணான். சர்ரா சர்ரா டியூட்டி ப்ரீல சரக்கு வாங்கி வர சொல்லும் நண்பர்களுக்கு மத்தியில் அல்வா வாங்கி வர சொல்ற நண்பர்களை சம்பாதிச்சு வைச்சுருக்க என்னை நினைத்து எனக்கே பெருமையா இருந்தது. சினிமாலலாம் அப்படியே கிராபிக்ஸ்ல 40-50 அடிக்கு உயர்வாங்களே அப்படி உயரமா தெரிஞ்சேன்.


நா ஊருக்கு கிளம்பறத நியாவகம் வைச்சு கிளம்ப முன்னாடி போன் வேற செஞ்சு நியாவகப்படுத்தினான். பேற நியாவகம் இல்ல அதெங்க நியாவகம் இருக்க போகுதுனு இங்கேந்து கிளம்பற முன்னயே நண்பர்கள்கிட்ட மெசேஜ் போட்டு வைச்சேன்...எங்க கிடைக்குமோ மறக்காம வாங்கி குடுத்துடுங்க இல்லனா இங்க என்ன ஒருத்தன் விடமாட்டான்னு. நினைத்தது மாதிரியே அந்த விஷயம் சுத்தமா மறந்து போச்சு. ஆனா நா சொன்னத நியாவகம் வைத்து நண்பர்கள் மறக்காம ஆளாளுக்கு வாங்கி தந்து குடுத்தப்ப ரொம்பவே ஆச்சரியமாருந்தது. ❤️ யாழ்பானம் ஏர்போர்ட் செக்கிங்ல கூட ஏதோனு பைய பிரிச்சு காட்ட சொல்ல தொதல் அல்வானு சொன்னதுமே சார் தொதல் அல்வாவாம் சார்னு சல்யூட் அடிக்காத குறையாக விட்டு விட்டனர்.


தொதல் அல்வா நம்மூர் ராமநாதபுரம் பக்கம் கீழக்கரை ஸ்பசலாம். இலங்கைலயும் ஸ்பெசல்....சும்மா சொல்லக்கூடாது அவளோ தரம்😋நிஜமா அவளோ சுவை.. திருநெல்வேலி அல்வால தேங்காய்ப்பால் ஊத்தின மாதியே இருந்தது அதோட சுவை😋 எனக்கு மட்டும் இல்லாம வீட்ல நான் தந்த நண்பர்கள்னு எல்லாருக்குமே அவளோ பிடிச்சுது.நல்லாருக்குனு இப்ப வரை சொல்லிட்டே இருக்காங்க.

இப்ப என்னைய விட கேட்டத நியாவகம் வைச்சிருந்து மறக்காம வாங்கி தந்து அனுப்பிய அந்த நண்பர்கள் உயரமாக தெரிகின்றனர்.

படித்ததில் பிடித்தது.

ஊட்டச்சத்துகள் நிறைந்த கருவாட்டில் ஒளிந்திருக்கும் ஆபத்து - குழந்தைகள் சாப்பிடலாமா?

3 months 2 weeks ago

கருவாடு சாப்பிடுவது உடலுக்கு நல்லதா? மருத்துவர்கள் எச்சரிப்பது ஏன்?

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, கருவாட்டில் மேம்பட்ட புரதம், கால்சியம், இரும்புச் சத்து, ஒமேகா-3 கொழுப்பு அமிலம் ஆகியவை உள்ளன.

கட்டுரை தகவல்

  • அன்பு வாகினி

  • பிபிசி தமிழுக்காக

  • 9 மணி நேரங்களுக்கு முன்னர்

கருவாடு, தமிழர்களின் உணவுப் பழக்கத்தில் ஒரு தனித்துவமான இடத்தைப் பிடித்துள்ளது. குறிப்பாகக் கடலோரப் பகுதிகளில் இது பல நூற்றாண்டுகளாகப் பயன்பாட்டில் உள்ளது.

தமிழகத்தில் 3000 ஆண்டுகளுக்கு முன்பே மீனை சூரிய ஒளியில் காயவைத்து கருவாடு ஆக்கும் முறை இருந்ததை சங்க இலக்கியக் குறிப்புகள் காட்டுகின்றன.

உலகளாவிய மீன் உற்பத்தியில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது. இந்தியாவின் மொத்த மீன் உற்பத்தி 16.5 மில்லியன் மெட்ரிக் டன். இதில் 75% நன்னீர் மீன்பிடிப்பு, 25% கடல் மீன்பிடிப்பு. புதிதாகப் பிடித்த மீனைவிட நீண்ட காலம் பாதுகாக்கப்படக் கூடிய கருவாடு எனப்படும் உணவு வகை கடலோர மக்களின் ஊட்டச்சத்துத் தேவைகளைப் பூர்த்தி செய்வதோடு, அவர்களின் பொருளாதாரத்திற்கும் ஒரு முக்கிய ஆதாரமாக விளங்குகிறது.

கருவாட்டில் மேம்பட்ட புரதம், கால்சியம், இரும்புச் சத்து, ஓமேகா-3 கொழுப்பு அமிலங்கள் அதிகம் உள்ளதால் நம் உடல்நலத்தைக் காக்கும் ஒரு 'சூப்பர் ஃபுட்' ஆகவும் இது கருதப்படுகிறது. கருவாட்டில் ஊட்டச்சத்து அதிகம் உள்ளதால் சிறிய அளவில் உட்கொண்டாலே நமக்குத் தேவையான ஊட்டச்சத்து கிடைத்துவிடும்.

ஆனால், கருவாட்டின் ஊட்டச்சத்து முக்கியத்துவம், உணவுப் பாதுகாப்பில் அதன் பங்கு, சிறிய மீன்களின் சிறப்புகள், மருத்துவர்களின் எச்சரிக்கைகள், நவீன தீர்வுகள் பற்றி அறிந்திருக்க வேண்டியது அவசியம். அதுகுறித்து இங்கு விரிவாகப் பார்ப்போம்.

கருவாட்டின் ஊட்டச்சத்து எவ்வளவு மதிப்பு வாய்ந்தது?

கருவாடு சாப்பிடுவது உடலுக்கு நல்லதா? மருத்துவர்கள் எச்சரிப்பது ஏன்?

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, நூறு கிராம் கருவாட்டில் 60-80% வரை புரதம் உள்ளது

தமிழர்களின் பாரம்பரிய சமையல் முறையில், கருவாடு பல்வேறு வடிவங்களில் பயன்படுத்தப்படுகிறது. கருவாட்டுக் குழம்பு, கருவாட்டுப் பொடி சாம்பார், கருவாட்டு வறுவல் போன்றவை தமிழ்நாட்டின் பல பகுதிகளில் பிரபலமான உணவு வகைகள். குறிப்பாக கடலோர மாவட்டங்களான நாகப்பட்டினம், தூத்துக்குடி, ராமநாதபுரம் போன்ற பகுதிகளில் கருவாடு அன்றாட உணவில் முக்கியமான இடத்தைப் பிடித்துள்ளது.

கருவாடு ஊட்டச்சத்து நிறைந்த ஒரு சக்தி வாய்ந்த உணவு. 100 கிராம் கருவாட்டில் 60-80% வரை புரதம் உள்ளது. இது இறைச்சி, முட்டையைவிட அதிகமான அளவு. இந்த மேம்பட்ட புரதம் அனைத்து அத்தியாவசிய அமினோ அமிலங்களையும் கொண்டுள்ளது. இது எளிதில் செரிமானமாகி, தசை வளர்ச்சி, உடல் வளர்ச்சிக்கு உதவுகிறது.

சிறிய மீன்களான நெத்திலி, கெளுத்தி, பாறை போன்றவற்றில் கால்சியம், இரும்புச்சத்து அதிக அளவில் காணப்படுகிறது. இவை எலும்புகளின் வலிமைக்கும், ரத்த சோகையைத் தடுப்பதற்கும் அவசியம்.

சிறிய மீன்களின் முழு உடலையும் (எலும்புகள் உள்பட) உண்ண முடியும் என்பதால், இவை பெரிய மீன்களைவிட 2-3 மடங்கு அதிக கால்சியம், 5-10 மடங்கு அதிக இரும்பு ஆகியவற்றைக் கொண்டுள்ளதாக இந்திய ஊட்டச்சத்து நிறுவனத்தின் (NIN) ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. இது குறிப்பாக வளரும் குழந்தைகள், கர்ப்பிணிகள், முதியவர்களுக்கு மிகவும் ஏற்ற சத்தான உணவு.

கருவாடு சாப்பிடுவது உடலுக்கு நல்லதா? மருத்துவர்கள் எச்சரிப்பது ஏன்?

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, கருவாட்டில் வைட்டமின் டி, ஏ, பி12 போன்ற முக்கியமான வைட்டமின்கள் அதிக அளவில் உள்ளன

மேலும், ஓமேகா-3 கொழுப்பு அமிலங்கள் மூளை, இதய ஆரோக்கியத்திற்கு உதவுகின்றன. ஓமேகா-3 கொழுப்பு அமிலங்கள் மூளையின் செயல்பாட்டை மேம்படுத்தவும், குழந்தைகளின் கற்றல் திறன், நினைவாற்றலை அதிகரிக்கவும் உதவுகின்றன. இவை ரத்த அழுத்தம், இதய நோய் அபாயத்தைக் குறைக்கவும் உதவுகின்றன.

கருவாட்டில் வைட்டமின் டி, ஏ, பி12 போன்ற முக்கியமான வைட்டமின்கள் அதிக அளவில் உள்ளன. வைட்டமின் டி எலும்புகளின் வலிமைக்கு அவசியமானது. வைட்டமின் ஏ கண்பார்வை, நோய் எதிர்ப்பு சக்திக்கு நல்லது.

வைட்டமின் பி12 நரம்பு மண்டலம், ரத்த சிவப்பு அணுக்கள் உற்பத்திக்கு மிகவும் அவசியம். துத்தநாகம், செலீனியம் போன்ற தாது உப்புகள் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தி, தொற்று நோய்களில் இருந்து பாதுகாப்பு அளிக்கின்றன.

உணவு மற்றும் வேளாண்மை அமைப்பின் (FAO) சமீபத்திய ஆய்வுகளும், ஊட்டச்சத்துக் குறைபாடு உள்ள நாடுகளில் கருவாட்டைப் பயன்படுத்தி அதைக் குறைக்க முடியும் என்பதை உறுதிப்படுத்துகின்றன.

கருவாட்டை எவ்வாறு பாதுகாப்பான முறையில் உணவுத் திட்டங்களில் ஒருங்கிணைக்கலாம் என்பதற்கான நடைமுறைப் பரிந்துரைகளையும் அந்த அமைப்பு வழங்குகிறது.

எந்த கருவாட்டில் என்ன ஊட்டச்சத்து அதிகம் உள்ளது?

கருவாடு சாப்பிடுவது உடலுக்கு நல்லதா? மருத்துவர்கள் எச்சரிப்பது ஏன்?

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, நெத்திலி, கெளுத்தி, பாறை, வாளை, சூரை போன்ற மீன் வகைகள் கருவாடு தயாரிக்கப் பயன்படுத்தப்படுகின்றன

உலகம் முழுவதும், குறிப்பாக வளரும் நாடுகளில், உணவு, ஊட்டச்சத்துப் பாதுகாப்பு பெரிய சவாலாக உள்ளது. இந்த சவாலைச் சமாளிக்க சிறிய மீன்கள் ஒரு முக்கியத் தீர்வாக மாறியுள்ளன.

சிறிய மீன்கள் விலை குறைவாகவும் ஊட்டச்சத்து நிறைந்ததாகவும் இருப்பதால் அவற்றை 'ஊட்டச்சத்து சூப்பர் ஸ்டார்ஸ்' என்று உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு அழைக்கிறது. வங்கதேசம், கம்போடியா போன்ற நாடுகளில் சிறிய மீன்கள் உள்ளூர் மக்களின் அன்றாட ஊட்டச்சத்துத் தேவைகளைப் பூர்த்தி செய்கின்றன.

இந்தியாவில் ஒடிசா மாநிலம் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி சேவை (ICDS ) திட்டத்தில் சிறுமீன் கருவாட்டை குழந்தைகளின் உணவில் சேர்த்து, ஊட்டச்சத்துக் குறைபாடுகளைக் குறைப்பதற்கான ஆய்வுகளை மேற்கொண்டு வெற்றிகரமான முடிவுகளை வெளியிட்டுள்ளது.

கருவாடு தயாரிப்பில் பயன்படுத்தப்படும் மீன் வகைகளும் முக்கியமானவை. நெத்திலி, கெளுத்தி, பாறை, வாளை, சூரை போன்றவை பொதுவாகப் பயன்படுத்தப்படுகின்றன.

ஒவ்வொரு மீன் வகையும் தனித்துவமான ஊட்டச்சத்துச் சிறப்புகளைக் கொண்டுள்ளன. எடுத்துக்காட்டாக, நெத்திலி, கால்சியம் அதிகம் கொண்டது. கெளுத்தி, ஓமேகா-3 கொழுப்பு அமிலங்களை அதிகம் கொண்டது. பாறை புரதத்தை அதிக அளவில் கொண்டது.

கருவாடு தயாரிக்கும் முறைகள்

கருவாடு சாப்பிடுவது உடலுக்கு நல்லதா? மருத்துவர்கள் எச்சரிப்பது ஏன்?

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, அதை வெயிலில் 3-5 நாட்கள் காய வைப்பது, கருவாடு தயாரிக்கும் முறைகளில் ஒன்று.

கருவாடு தயாரிப்பதற்கு, கடலில் பிடித்த மீன்களைக் கழுவிச் சுத்தம் செய்து வெயிலில் 3-5 நாட்கள் காய வைக்கப்படும். மாதக்கணக்கில் கெட்டுப் போகாமல் இருப்பதற்காக இதில் 20% முதல் 30% வரை உப்பு சேர்த்து காயவைக்கப்படுகிறது.

புகை போடுவதன் மூலம் கருவாடு தயாரிப்பது மற்றொரு பாரம்பரிய முறை. குறிப்பாக தூத்துக்குடி, மண்டபம் போன்ற பகுதிகளில் இந்த முறை பிரபலமாக உள்ளது. இதில், விறகுகளை எரிப்பதில் வெளியாகும் புகையில் மீன்களைக் காய வைக்கின்றனர். இது கருவாட்டிற்குத் தனித்துவமான சுவையைக் கொடுப்பதோடு, நீண்ட நாட்கள் கெட்டுப் போகாமல் அதைப் பாதுகாக்கவும் உதவுகிறது.

நொதித்தல் மூலம் கருவாடு தயாரிப்பது, மற்றொரு சுவையான முறை. இதில் உப்புடன் சேர்த்து மீன்கள் ஒரு குறிப்பிட்ட காலம் வரை நொதிக்க வைக்கப்படுகிறது. இந்த முறையில் தயாரிக்கப்படும் 'மாசி' எனப்படும் கருவாட்டு பொடி தமிழ்நாட்டில் மிகவும் பிரபலம். இந்த நடைமுறையில் புரதங்கள் பகுதியளவு ஹைட்ரோலைஸ் ஆகி செரிமானத்தை எளிதாக்குகின்றன.

மருத்துவர்கள் கருவாட்டைத் தவிர்க்கச் சொல்வது ஏன்?

கருவாட்டுக்கு ஊட்டச்சத்து நன்மைகள் பல இருக்கும் போதிலும், சில சுகாதார சவால்களும் அதில் உள்ளன. பாரம்பரிய முறையில் தயாரிக்கப்படும் கருவாட்டில் உப்பு அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. சராசரியாக, 100 கிராம் கருவாட்டில் 5-10 கிராம் உப்பு இருக்கலாம். ஆனால் பெரும்பாலும் 20-30% உப்பு சேர்க்கப்படுகிறது. இது உயர் ரத்த அழுத்தம், இதய நோய்களுக்கு வழிவகுக்கும். இதைப் பற்றிய விழிப்புணர்வு மிகவும் அவசியம்.

அதோடு கருவாடு தயாரிப்பு சுகாதாரமின்றி இருந்தால், அதில் நுண்ணுயிர்த் தொற்று அபாயம் இருக்கவும் வாய்ப்புள்ளது. சுத்தமற்ற சூழலில் காயவைப்பது, பூச்சிகள், மண் கலப்படம் போன்றவற்றுக்கான சாத்தியம் உள்ளது. சில வேளைகளில் கெட்டுப்போன மீனை கருவாடு தயாரிக்க சிலர் பயன்படுத்துவதால், உணவுப் பாதுகாப்பில் மிகப்பெரிய சவால் உள்ளது.

புகை போடுவதன் மூலம் தயாரிக்கப்படும் கருவாட்டில் பாலிசைக்ளிக் அரோமாடிக் ஹைட்ரோகார்பன்கள் (PAHs) உருவாகலாம். இவை புற்றுநோய்க்கான காரணிகளாக இருக்கலாம். உலக சுகாதார நிறுவனத்தின் ஆய்வுகள், அதிகம் புகை போடப்பட்ட உணவு வகைகளை உட்கொள்வது சில வகை புற்றுநோய்களின் அபாயத்தை அதிகரிக்கும் எனக் காட்டுகின்றன.

கருவாட்டில் கன உலோகங்கள் கூடுதல் அளவில் சேர்ந்துவிடும் அபாயமும் உள்ளது. குறிப்பாக கடல் மாசுபாடு அதிகமுள்ள பகுதிகளில் பிடிக்கப்படும் மீன்களில் பாதரசம், காட்மியம் போன்ற கன உலோகங்கள் அதிக அளவில் இருக்கலாம்.

இவை நீண்ட காலத்திற்கு உடலில் சேர்ந்து நரம்பு மண்டல பாதிப்புகளை ஏற்படுத்தலாம். இந்தக் காரணங்களாலேயே, கருவாட்டு உணவு வகைகளை மருத்துவர்கள் தவிர்க்குமாறு வலியுறுத்துகிறார்கள்.

இருப்பினும், இந்த சவால்கள் அனைத்தையும் சரியான உற்பத்தி மற்றும் பதப்படுத்தும் முறைகளின் வாயிலாகச் சரிசெய்ய முடியும். குறைந்த உப்பு, சுகாதாரமான உற்பத்தி முறைகள், நவீனப் பாதுகாப்பு நடவடிக்கைகள் மூலம் தரமான கருவாடு மக்களுக்குக் கிடைப்பதை உறுதி செய்ய முடியும்.

பாதுகாப்பான கருவாடு தயாரிப்பு முறைகள் என்ன?

இந்தப் பிரச்னைகளுக்கு சூரிய ஒளியில் (solar dryer) காய வைக்கப்படும் மீன் ஒரு சிறந்த தீர்வாக உள்ளது.

இந்த முறையில் குறைந்த உப்பு (5 சதவிகிதத்திற்கும் குறைவாக) பயன்படுத்தப்படுகிறது. சுகாதாரமான முறையில் தயாரிக்கப்படுவதால் பாக்டீரியா தொற்று ஏற்படுவதில்லை. இயற்கையான ஊட்டச்சத்துகள் பாதுகாக்கப்படுகின்றன.

இப்படிச் செய்வது வெப்பப்படுத்துவதால் இழக்கப்படும் வைட்டமின் ஏ, ஒமேகா-3 போன்ற ஊட்டச்சத்துகளைப் பாதுகாக்கிறது. பூச்சிகள், தூசி மற்றும் பிற மாசுபடுத்திகளில் இருந்து மீனைப் பாதுகாக்கிறது. இதனால் கருவாட்டின் சுகாதாரம் மேம்படுகிறது. இத்தகைய முறையில் கருவாடு தயாரிக்க குறைந்த நேரமே போதுமானது என்பதும் கவனிக்கப்பட வேண்டிய ஓர் அம்சம்.

கருவாட்டின் பொருளாதார, சமூகப் பங்கு

கருவாடு சாப்பிடுவது உடலுக்கு நல்லதா? மருத்துவர்கள் எச்சரிப்பது ஏன்?

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,சிறு மீன்களில் தயாரிக்கப்படும் கருவாடுகள் அதிக ஊட்டச்சத்து கொண்டவை

கருவாடு தயாரிப்பும் விற்பனையும் கடல்சார் பொருளாதாரத்தில் முக்கியப் பங்கு வகிக்கிறது. குறிப்பாக சிறு குறு மீனவர்கள், மகளிர் கூட்டுறவு அமைப்புகள் மற்றும் கடற்கரை சமூகங்களுக்கு இது வாழ்வாதார ஆதாரமாக உள்ளது. 70% கடலோர மீனவப் பெண்கள் மீனை காய வைத்தல், வகைப் பிரித்தல், விற்பனை செய்வதில் ஈடுபட்டுள்ளனர்.

கருவாடு உற்பத்தியின் பொருளாதார முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்ள சில புள்ளிவிவரங்கள் உதவுகின்றன. தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் சுமார் 50,000 டன் கருவாடு உற்பத்தி செய்யப்படுகிறது. இது ரூ.500 கோடிக்கும் மேல் மதிப்பு கொண்டது. கடல் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையத்தின் (MPEDA) தரவுகள்படி, இந்தியாவின் மொத்த கருவாடு ஏற்றுமதியில் தமிழ்நாடு 25% பங்களிக்கிறது.

இந்தியாவின் கருவாடு உள்நாட்டில் மட்டுமின்றி, குறிப்பிடத்தக்க ஏற்றுமதி சாத்தியத்தையும் கொண்டுள்ளது. காயவைத்த மீன்கள், அது சார்ந்த பொருட்கள் இலங்கை, வங்கதேசம், நேபாளம், மலேசியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், நைஜீரியா, கானா போன்ற ஆப்பிரிக்க நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

நவீன தொழில்நுட்பங்கள், புதுமுறை தீர்வுகள்

கருவாடு உற்பத்தியில் நவீன தொழில்நுட்பங்களின் பயன்பாடு பல நன்மைகளை வழங்குகிறது. இது கருவாட்டின் தரம், பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து மதிப்பை மேம்படுத்துகிறது. சூரிய உலர்த்திகள் (Solar dryers) மிகவும் பயனுள்ள தொழில்நுட்பமாக உள்ளன. இவை பாரம்பரிய வெயில் உலர்த்தும் முறையைவிட மேம்பட்டவை.

சூரிய உலர்த்தியின் மூடப்பட்ட கட்டமைப்பால் பூச்சிகள், தூசிகளில் இருந்து மீன் பாதுகாக்கப்படுகிறது. இந்த முறையில் வெப்பநிலை, காற்றோட்டம் கட்டுப்படுத்தப்படுவதால், காய வைக்கும் நேரம் குறைகிறது, ஊட்டச்சத்துகள் பாதுகாக்கப்படுகின்றன.

சூரிய உலர்த்தியில் மீன் காய வைக்கப்படும்போது, உப்பின் அளவை கணிசமாகக் குறைக்க முடியும். இதற்கு 5% உப்பு மட்டுமே போதுமானது.

உப்பின் அளவை 5 சதவிதமாகக் குறைப்பதன் மூலம், ஆரோக்கியம் தொடர்பான அபாயங்களைக் குறைக்க முடியும். சில நவீன முறைகளில், உப்புக்குப் பதிலாக பிற பாதுகாப்புப் பொருட்கள் (சிட்ரிக் அமிலம், ரோஸ்மேரி சாறு போன்றவை) பயன்படுத்தப்படுகின்றன, அவை உப்பின் பாதுகாப்புப் பண்புகளைப் போலவே செயல்படுகின்றன.

காற்றில்லா முறையில் உறையில் அடைக்கும் (Vaccum packaging) தொழில்நுட்பம் கருவாட்டின் பயன்படுத்தத்தக்க காலத்தை கணிசமாக அதிகரிக்கிறது. இது பாக்டீரிய வளர்ச்சியைத் தடுத்து, பல மாதங்களுக்கு கெட்டுப்போகாமல் பாதுகாக்கிறது.

உணவுத் திட்டங்களில் கருவாட்டை ஒருங்கிணைத்தல்

கருவாடு சாப்பிடுவது உடலுக்கு நல்லதா? மருத்துவர்கள் எச்சரிப்பது ஏன்?

பட மூலாதாரம்,GETTY IMAGES

கருவாட்டின் ஊட்டச்சத்து நன்மைகளை அதிகமான மக்கள் பெறவும், ஊட்டச்சத்துக் குறைபாடுகளைக் குறைக்கவும், அரசு, சமூகத் திட்டங்களில் இதை ஒருங்கிணைப்பது அவசியம். ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி சேவை (ICDS), மதிய உணவுத் திட்டங்களில் கருவாட்டை சேர்ப்பது ஒரு சிறந்த முன்முயற்சி. ஒடிசா மாநிலம் இதில் முன்னோடியாக உள்ளது. அங்கு குழந்தைகளுக்கு மீன் பொடி வழங்கப்படுகிறது. இதே மாதிரியை தமிழ்நாட்டிலும் பின்பற்றலாம்.

பள்ளி ஊட்டச்சத்துத் திட்டங்களில் கருவாட்டைப் பயன்படுத்துவதற்கான வாய்ப்புகள் உள்ளன. கருவாட்டுப் பொடியை சாம்பார் அல்லது குழம்புகளில் சேர்ப்பதன் மூலம் குழந்தைகளின் புரதம், தாதுப்பொருள் தேவைகளைப் பூர்த்தி செய்யலாம். குறிப்பாக கிராமப்புறங்களில் உள்ள குழந்தைகளுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

கர்ப்பிணி, தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களுக்கான ஊட்டச்சத்துத் திட்டங்களில் கருவாட்டைச் சேர்ப்பது மற்றொரு நல்ல வாய்ப்பு. கருவாட்டில் உள்ள இரும்புச்சத்து, கால்சியம் அவர்களுக்கு மிகவும் அவசியம். குறைந்த உப்புகொண்ட கருவாட்டுப் பொடியை அவர்களுக்கான உணவில் சேர்த்துக் கொடுக்கலாம்.

கருவாடு தமிழர்களின் பாரம்பரிய ஊட்டச்சத்து மூலப்பொருளாகும். இதன் மேம்பட்ட புரதம், கால்சியம், இரும்புச் சத்து, ஓமேகா-3 கொழுப்பு அமிலங்கள் அனைவருக்கும், குறிப்பாக குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள், முதியவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

- கட்டுரையாளர் உணவுத் தொழில்நுட்ப வல்லுநராக இருக்கிறார். இதில் பேசப்பட்டுள்ள விஷயங்கள் அனைத்தும் அவரது சொந்தக் கருத்துகளே.

இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c1wpvr9lq0xo

Checked
Mon, 11/10/2025 - 21:31
நாவூற வாயூற Latest Topics
Subscribe to நாவூற வாயூற feed