நாவூற வாயூற

கோடையில் சிக்கன் சாப்பிடுவது உடல் சூட்டை அதிகரிக்குமா? நிபுணர் விளக்கம்

6 days 10 hours ago

சிக்கன் உடல் சூட்டை அதிகரிக்குமா? கோடைக் காலத்தில் சாப்பிடலாமா? நிபுணர் விளக்கம்

2 மணி நேரங்களுக்கு முன்னர்

கோடைக்காலத்தில் சிக்கன் அதிகமாகச் சாப்பிட்டால் உடல் சூடு அதிகரித்துவிடும் என்ற பொதுவான எச்சரிக்கை நம் வீடுகளில் பரவலாகச் சொல்லப்படுகிறது. இதுகுறித்து ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுவது என்ன?

“சிக்கன், மட்டன், மாட்டிறைச்சி, மீன், பன்றி என எந்த அசைவ உணவைச் சாப்பிடும்போதும் உடலின் வெப்பநிலை சிறிதளவு அதிகரிக்கும். உணவின் வெப்ப விளைவு (Thermic Effect) என்று இது அழைக்கப்படுகிறது.  ஆனால், அது உடலை எந்த விதத்திலும் பாதிக்காது. அது செரிமான செயல்முறையின் ஒரு பகுதியே. அசைவ உணவுகளில் கிடைக்கும் கலோரிகளில் சுமார் 20-25% அவற்றின் செரிமானத்திற்கே பயன்படுத்தப்படும்” என்கிறார் ஊட்டச்சத்து நிபுணர் முனைவர் மீனாட்சி பஜாஜ்.

நமது உடல், அதன் உட்புற வெப்பநிலையை 98.6°F என்ற அளவைச் சுற்றியே பராமரிக்க கடுமையாக உழைக்கிறது. இந்தச் செயல்முறை வெப்ப ஒழுங்குமுறை என்று அழைக்கப்படுகிறது. இது உயிர் வாழ்வதற்கு மிகவும் முக்கியமானது.

“ஹைபோதாலமஸ் என்ற மூளையின் ஒரு சிறிய பகுதி, நமது உட்புற உடல் வெப்பநிலையை தொடர்ந்து கண்காணித்து சரிசெய்கிறது. உடலைக் குளிர்விக்க, வியர்த்து, சருமத்திற்கு அதிக ரத்தத்தை அனுப்புகிறது, வெப்பத்தை வெளியிடுகிறது. சூடாக்க, நடுக்கத்தை ஏற்படுத்துகிறது, வெப்பத்தைத் தக்கவைக்க ரத்த நாளங்களைச் சுருக்குகிறது” என்று விளக்கினார் ஊட்டச்சத்து நிபுணர் ரம்யா அஷோக்.

மேற்கொண்டு பேசிய அவர், “ஒருவர் உண்ணும்போது,  உடல் அதை ஜீரணிக்க ஆற்றலைப் பயன்படுத்துகிறது. இந்தச் செயல்முறைதான் உணவின் வெப்ப விளைவு. கோழி போன்ற புரதம் நிறைந்த இறைச்சி உணவுகளை ஜீரணிக்க அதிக ஆற்றல் தேவை. அதனால் உடலில் சிறிய அளவில் வெப்பம் உருவாகும். ஆனால், அது மொத்த ஆற்றல் பயன்பாட்டில் சுமார் 10% மட்டுமே என்பதால் கவலையடையத் தேவையில்லை” என்றார்.

வல்லுநர்களின் கூற்றுப்படி, ஓர் உணவை செரிமானம் செய்வதற்காக உடல் பயன்படுத்தும் ஆற்றலின் விளைவாக வெப்ப விளைவு ஏற்படுகிறது. சைவ உணவுகளில் கிடைக்கும் புரதத்தைவிட, அசைவ உணவுகளில் கிடைக்கும் புரதம் செரிமானம் ஆகும்போது வெப்ப விளைவு சற்று அதிகமாக இருக்கும்.

முனைவர் மீனாட்சி பஜாஜின் கூற்றுப்படி, எந்த இறைச்சி உணவாக இருந்தாலும், சாப்பிட்ட பிறகு சூடாக உணர்வது இயல்புதான். "அசைவ உணவுகளைச் சாப்பிடும்போது வியர்த்துக் கொட்டுவதை உணர்ந்திருப்போம். அது தற்காலிகமானது. அதற்குக் காரணம் செரிமான செயல்முறை நடக்கும்போது உற்பத்தியாகும் வெப்பம்தான். இந்தச் சூடு ஆரோக்கியத்தை பாதிக்காது.”

சிக்கன் சாப்பிட்ட பிறகு உடலின் வெப்பநிலை எப்படி மாறுகிறது என்பதைப் புரிந்துகொள்ள விஞ்ஞானிகள் எலிகளை வைத்து ஒரு பரிசோதனையை நடத்தினர்.   அதில் பிற உணவுகளைவிட சிக்கன் சாப்பிடும் நேரத்தில் வெப்ப விளைவு உடலில் அதிகமாக இருப்பதைக் கண்டறிந்தனர்.   மேலும், சிக்கனில் புரதத்தை மட்டுமே சாப்பிடும் வேளையில், வெப்ப விளைவால் உடல் சூடாகும்  அளவு குறைவாக இருந்தது உணரப்பட்டதாக இந்த ஆய்வு கூறுகிறது.

படக்குறிப்பு,உணவு உண்ட பிறகு உடலில் நடக்கும் வெப்ப விளைவு தொடர்பாகக் கடந்த 2013ஆம் ஆண்டில், எலிகள் மீது நடத்தப்பட்ட ஆய்வில் சிக்கன் சாப்பிடும்போது வெப்பநிலை ஓரளவுக்கு அதிகரிப்பது உணரப்பட்டது.

“சராசரியாக ஒரு நபர் ஒரு நாளுக்கு 85 கிராம் அல்லது ஒரு வாரத்திற்கு 600 கிராம் வரை புரதம் அதிகமுள்ள உணவுகளைச் சாப்பிட வேண்டும். இதில், பருப்பு, சுண்டல் போன்ற சைவ உணவுகள், சிக்கன், மீன், மட்டன், மாட்டிறைச்சி போன்ற அசைவ உணவுகள் என அனைத்தும் கலந்திருக்க வேண்டும்” என்று கூறுகிறார் ஊட்டச்சத்து நிபுணர் முனைவர் மீனாட்சி பஜாஜ்.

கோடையில் சிக்கன் சாப்பிடுவது தீங்கல்ல. அதனுடன் அதிக பழங்கள், காய்கறிகளையும் சேர்த்து உணவுமுறையைச் சீராகப் பராமரிக்க வேண்டும். அதிக தண்ணீர் மற்றும் ஆரோக்கியமான திரவங்களைப் பருக வேண்டும் என்று வல்லுநர்கள் பரிந்துரைக்கின்றனர்.

ஊட்டச்சத்து நிபுணர் ரம்யா, "காற்றோட்டம் இல்லாத ஆடைகளை அணிவது, வெப்பமான காலநிலைக்கு அதிகமாக வெளிப்படுவது, நீர்ச்சத்தை இழப்பது, காரமான அல்லது எண்ணெய் அதிகமுள்ள உணவுகளைச் சாப்பிடுவது போன்ற காரணிகளே உடல் சூட்டை அதிகரிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன," என்று எச்சரிக்கிறார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c8rped1v8gjo

ஆட்டுக்கால் சூப் குடிப்பதால் என்ன நன்மை? அதை யாரெல்லாம் சாப்பிடக் கூடாது?

1 week 6 days ago

ஆட்டுக்கால் சூப் குடிப்பதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் என்ன?

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,ஆட்டுக்கால் சூப் குடிப்பது எலும்புகளுக்கு மட்டுமின்றி உடல் ஆரோக்கியத்திற்குத் தேவையான பல நன்மைகளை வழங்குவதாக நிபுணர்கள் கூறுகின்றனர்

கட்டுரை தகவல்

  • எழுதியவர், க.சுபகுணம்

  • பதவி, பிபிசி தமிழ்

  • 6 மணி நேரங்களுக்கு முன்னர்

எதிர்பாராதவிதமாக எலும்பு முறிவு ஏற்பட்டால், குடும்பத்தில் உள்ள பெரியவர்கள் ஆட்டுக்கால் சூப் வைத்து தினசரி குடிக்குமாறு வலியுறுத்துவார்கள்.

காய்ச்சல், சளி போன்ற தொந்தரவுகளால் அவதிப்படும் போது, வீட்டில் ஆட்டுக்கால் சூப் வைத்துக் கொடுப்பார்கள்.

இப்படி, பல விஷயங்களுக்கு ஆட்டுக்காலை சூப் வைத்துக் குடிக்குமாறு வலியுறுத்தும் அளவுக்கு அதில் அப்படி என்ன இருக்கிறது?

உண்மையாகவே ஆட்டுக்கால் சூப், நமது ஆரோக்கியத்திற்கு, குறிப்பாக எலும்பு மற்றும் மூட்டுகளுக்கு வலிமையை வழங்குகிறதா? இதைத் தெரிந்துகொள்ள ஊட்டச்சத்து நிபுணர்களிடம் பேசினோம்.

ஆட்டுக்கால் சூப் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்ன?

எலும்பின் ஆரோக்கியம் மற்றும் நோய் எதிர்ப்பாற்றலுக்குத் தேவையான, கால்சியம், மெக்னீசியம், பாஸ்பரஸ், துத்தநாகம் போன்ற ஊட்டச்சத்துகள் ஆட்டுக்காலில் இருந்து கிடைப்பதாக ஹார்வர்ட் பொது சுகாதாரக் கல்லூரியில் வெளியான ஒரு கட்டுரை கூறுகிறது.

ஆட்டு இறைச்சியில், குறிப்பாக அதன் கால் எலும்புகளில் இருக்கும் ஊட்டச்சத்துகள் நமது எலும்புகள், மூட்டுகள், முடி, சருமம், ஆற்றல், நோய் எதிர்ப்பாற்றல் என்று பல வகைகளில் நன்மை பயப்பதாகக் கூறுகிறார் ஊட்டச்சத்து நிபுணர் திவ்யா சத்யராஜ்.

ஆட்டுக்காலில் கொலாஜென் மற்றும் ஜெலட்டின் நிறைந்துள்ளதாகக் கூறுகிறார் ஊட்டச்சத்து நிபுணர் ரம்யா அஷோக். இந்தக் கூறுகள், மூட்டு ஆரோக்கியத்திற்கு உதவுவதாகவும், மூட்டு வலிக்கு நிவாரணமாக இருப்பதாகவும் அவர் குறிப்பிடுகிறார்.

அதுமட்டுமின்றி கொலாஜென் சரும ஆரோக்கியத்தைப் பேணுவதற்கும் உதவுவதாகக் கூறுகிறார் ரம்யா.

அவரது கூற்றை ஆமோதிக்கும் வகையில் பேசிய திவ்யா சத்யராஜ், ஆட்டுக்கால்களில் இருக்கும் கோலாஜென், மூட்டுகளில் உயவுப் பொருளாகச் (lubricant) செயல்படுவதாகக் குறிப்பிடுகிறார். அதோடு, அவை சருமத்தில் சுருக்கம் போன்ற முதிர்ச்சி அடைவதால் ஏற்படும் அறிகுறிகளைக் குறைப்பதாகவும், ஆட்டுக்கால் சூப்பை தொடர்ச்சியாகப் பருகுவது சருமத்தை இளமையாக வைத்திருக்க உதவும் எனவும் தெரிவித்தார்.

ஆட்டுக்கால் சூப் குடிப்பதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் என்ன?

படக்குறிப்பு,ஆட்டுக்காலில் இருக்கும் கோலாஜென் எலும்பு மற்றும் மூட்டுகளை வலுப்படுத்த உதவுவதாகக் கூறுகிறார் ஊட்டச்சத்து நிபுணர் ரம்யா அஷோக்

ஆட்டுக்கால் சூப் குடிப்பதால் எலும்புகள், சருமம் மட்டுமின்றி உடலின் பல செயல்பாடுகளைச் சீராக வைத்துக்கொள்ள உதவுவதாக விளக்கினார் ஊட்டச்சத்து நிபுணர் ரம்யா.

அவரது கூற்றுப்படி, அதிலுள்ள கிளைசீன், ப்ரோலீன் போன்ற அமினோ அமிலங்கள், குடல் செயல்பாடுகளைச் சீராக்க உதவுவதோடு, கல்லீரல் செயல்பாட்டைச் சீரமைப்பதன் மூலமாக உடலின் நச்சு நீக்க செயல்முறையையும் பேணுகின்றன.

"பாரம்பரியமாகவே, தமிழ்நாட்டில் காய்ச்சல், எலும்பு முறிவு போன்றவற்றை எதிர்கொள்ளும் நபர்களுக்கு, ஆட்டுக்கால் சூப் கொடுப்பது அறிவுறுத்தப்படுகிறது. அதற்குக் காரணம், வேகமாக குணமடைவதற்கான ஊட்டச்சத்து, வலிமை மற்றும் ஆற்றலை அவை வழங்குவதே" என்கிறார் ரம்யா.

ஆட்டுக்கால் சூப் யாருக்கெல்லாம் நல்லதல்ல?

ஆட்டுக்கால் சூப் குடிப்பதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் என்ன?

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,ஆட்டுக்காலில் அதிக கொழுப்புச் சத்து இருப்பதால், கொழுப்பு அதிகமாக இருப்பவர்கள் அதைத் தவிர்ப்பது நல்லது என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகின்றனர்

ஆட்டுக்கால் சூப் உடல் ஆரோக்கியத்திற்குப் பல நன்மைகளைச் செய்தாலும் அவற்றில் கொழுப்பு அளவு அதிகம் இருப்பதால் அவற்றை இதய நோய், அதீத கொழுப்பு, உடல் பருமன் போன்ற பிச்னைகள் உள்ளவர்களுக்கு அளிப்பதைத் தவிர்ப்பது நல்லது என்கிறார் ரம்யா.

அவற்றைச் சமைக்கும் விதத்திலும் கவனம் செலுத்த வேண்டியது அவசியம் என்று வலியுறுத்துகிறார் அவர்.

"முழுமையாகச் சுத்தப்படுத்தப்படாத எலும்புகளில் சால்மொனெல்லா அல்லது ஈ.கோலி போன்ற பாக்டீரிய தொற்றுகள் இருப்பதற்கான அபாயம் உள்ளது. ஆகவே, அவற்றைச் சுத்தப்படுத்துவதில் அதிக கவனம் தேவை" என வலியுறுத்தும் ரம்யா, நன்கு சமைக்கப்படாத ஆட்டுக்கால்களை உட்கொள்வதிலும் இத்தகைய ஆபத்துகள் இருக்க வாய்ப்புள்ளது என எச்சரிக்கிறார்.

உடலில் யூரிக் அமிலம் அதிகளவில் இருப்பவர்கள், முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்டவர்கள், ஏற்கெனவே சிறுநீரக பிரச்னைகளால் அவதிப்படுபவர்கள் மருத்துவர்களின் பரிந்துரையின் பேரில் இதை எடுத்துக்கொள்வது சிறந்தது என்று அறிவுறுத்துகிறார் ஊட்டச்சத்து நிபுணர் ரம்யா அஷோக்.

பொதுவாக, ஆட்டுக்கால்களில் இருக்கும் முழு பயன்களையும் பெற வேண்டுமெனில், அவற்றை 10 முதல் 12 மணிநேரம் வரை, மெல்லிய வெப்பத்தில் தொடர்ச்சியாக வேகவைக்க வேண்டும் என்கிறார் அவர்.

ஆட்டுக்கால் சூப் குடிப்பதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் என்ன?

படக்குறிப்பு,மிகக் குறைந்த உடல் எடை கொண்டவர்களுக்கு, சைனஸ் பாதிப்பு உள்ளவர்களுக்கு ஆட்டுக்கால் சூப் குடிப்பதால் நல்ல பயன்கள் கிடைப்பதாகக் கூறுகிறார் ஊட்டச்சத்து நிபுணர் திவ்யா சத்யராஜ்

ஆனால், "இன்றைய வாழ்க்கை முறையில் அது சாத்தியமில்லை. வீட்டில் வழக்கமாகச் சமைக்கும் முறையில்கூட ஓரளவுக்கு அந்த ஊட்டச்சத்துகள் கிடைக்கும் என்பதால், வாரம் ஒருமுறை அல்லது மாதம் இருமுறை என்ற அளவில் சீராக எடுத்துக்கொண்டாலே அதன் பயன்கள் உடலுக்குக் கிடைக்கும்," என்று விளக்கினார்.

"சுமார் 10 மணிநேரம் தொடர்ந்து மிதமான சூட்டில் சமைப்பதன் மூலம் அவற்றில் இருக்கும் அனைத்து ஊட்டச்சத்துகளும் சுமார் 95% கிடைக்கும். ஆனால், அப்படித்தான் சமைத்துச் சாப்பிட வேண்டும் என்று இல்லை.

வழக்கமான முறையில் சமைத்துச் சாப்பிட்டாலே ஆட்டுக்காலில் இருக்கும் சத்துகள் 50 முதல் 75 சதவிகிதம் வரை உடலுக்குக் கிடைக்கும். எனவே 10 மணிநேரம் சமைக்க வேண்டும் எனக் கருதி அவற்றைத் தவிர்ப்பதைவிட, வழக்கமான முறையில் சமைத்து தொடர்ந்து உட்கொள்வது சிறந்தது," என்கிறார் திவ்யா.

ஆட்டுக்கால் சூப் யாருக்கெல்லாம் அவசியம்?

ஆட்டுக்கால்களில் கொழுப்புச் சத்து அதிகம் இருப்பதால், கொழுப்பு அதிகமுள்ள நபர்களுக்கு அதைப் பரிந்துரைப்பதில்லை எனக் கூறும் திவ்யா சத்யராஜ், ஆட்டுக்கால் சூப் எலும்புகளை மட்டுமின்றி கிட்டத்தட்ட மொத்த உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்த உதவுவதாகக் குறிப்பிட்டார்.

புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, கீமோதெரபி சிகிச்சையில் இருப்பவர்களுக்கான உணவுமுறையில் ஆட்டுக்கால் சூப்பையும் தான் பரிந்துரைப்பதாகக் கூறுகிறார் அவர்.

ஆட்டுக்கால் சூப் குடிப்பதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் என்ன?

பட மூலாதாரம்,GETTY IMAGES

"பொதுவாக கீமோதெரபி சிகிச்சையில் பல பக்கவிளைவுகள் உள்ளன. அதை மேற்கொள்வோரால் பெரிதாகச் சாப்பிட முடியாது. ஆனால் அவர்கள் நிச்சயமாக ஆரோக்கியமான உணவுகளை உட்கொண்டாக வேண்டும். ஆட்டுக்கால் சூப்பில் அத்தகைய அனைத்து ஊட்டச்சத்துகளும் இருப்பதால் அதைப் பருகுவது ஆரோக்கியத்திற்கு உதவும்," என்றார்.

கீமோதெரபியால் உடலின் நோய் எதிர்ப்பாற்றல் குறையும் எனக் கூறிய திவ்யா, அதை மேம்படுத்த ஆட்டுக்கால் சூப் உதவும் என்பதும் தான் அதை அதிகம் பரிந்துரைக்க ஒரு காரணம் எனக் குறிப்பிட்டார்.

ஜிம் செல்பவர்கள் இதை உட்கொள்வது உடலை வலுப்படுத்துவதில் பெரிதும் உதவுவதாகக் கூறும் திவ்யா, புரோட்டீன் பவுடர் போன்றவற்றை உட்கொள்வதைவிட, இவற்றில் அதிக நன்மைகள் கிடைப்பதாகத் தெரிவித்தார்.

இவைபோக, ஊட்டச்சத்துக் குறைபாடு உள்ளவர்கள், உடல் எடைக் குறைபாடு உடையவர்கள், சைனஸ் பாதிப்பு உள்ளவர்கள், பலவீனமான எலும்புகளைக் கொண்டவர்கள் இதைச் சாப்பிட்டால் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துகள் கிடைக்கும் என்றும் விளக்கினார் திவ்யா.

அதுமட்டுமின்றி, முடி உதிர்வு பிரச்னையைக் குறைப்பதிலும் இது பயனளிப்பதாகக் குறிப்பிடும் அவர், ஆட்டுக்கால்களில் இருக்கும் கோலாஜென் உள்படப் பல கூறுகள், பலவிதமான நன்மைகளை உடலுக்கு வழங்குவதாகக் கூறினார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c1ljg064e89o

உணவில் பயன்படுத்தும் சூரியகாந்தி, கடுகு எண்ணெய்கள் ஆபத்தானவையா? உண்மை என்ன?

1 month ago

உணவில் பயன்படுத்தும் சூரியகாந்தி, கடுகு எண்ணெய்கள் ஆபத்தானவையா? உண்மை என்ன?

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்

  • எழுதியவர், ஜெசிகா பிராட்லி

  • பதவி, பிபிசி நியூஸ்

  • 4 ஜூன் 2025, 03:22 GMT

சூரியகாந்தி மற்றும் கடுகு எண்ணெய் போன்று, விதைகளில் இருந்து தயாரிக்கப்படும் சமையல் எண்ணெய்கள் ஆரோக்கியத்திற்குத் தீங்கு விளைவிக்கும் என்ற சர்ச்சைக்குரிய கூற்றுகள் சமீபத்தில் வெளிவந்துள்ளன. அது எந்த அளவுக்கு உண்மையானது?

உங்கள் சமையலறை அலமாரியில் எங்காவது சூரியகாந்தி எண்ணெய் அல்லது கடுகு எண்ணெய் கொண்ட ஒரு பாட்டில் நிச்சயமாக இருக்கக்கூடும்.

அவற்றை நீங்கள் சமைக்கப் பயன்படுத்தலாம், அல்லது சாலட்களில் தெளிக்கலாம்.

விதையில் இருந்து தயாரிக்கப்படும் எண்ணெய்கள் இன்று உலகம் முழுவதும் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன.

ஆனால், தற்போது இந்த எண்ணெய்கள் குறித்துப் பலரும் இணையதளத்தில் தீவிரமாக விவாதித்து வருகின்றனர்.

பல ஆண்டுகளாக, விதையில் இருந்து தயாரிக்கப்படும் எண்ணெய்கள் குறித்து சமூக ஊடகங்களில் எண்ணற்ற பதிவுகள் வெளிவந்துள்ளன.

இந்த எண்ணெய்கள் 'தீங்கு விளைவிக்கும்', 'நச்சுத்தன்மை கொண்டவை' மற்றும் ஆரோக்கியத்திற்கு ஆபத்தானவை என்பதுதான் இந்தப் பதிவுகளின் சாராம்சம்.

குறிப்பாக, விதையில் இருந்து தயாரிக்கப்படும் எட்டு வகையான எண்ணெய்களை "த ஹேட்ஃபுல் எயிட்-The Hateful Eight" என விமர்சகர்கள் குறிப்பிடுகின்றனர்.

இவற்றில் கடுகு, சோளம், பருத்தி விதை, திராட்சை விதை, சோயா, அரிசி தவிடு, சூரியகாந்தி, குங்குமப்பூ போன்ற பிரபலமான எண்ணெய்களும் அடங்கும்.

இந்த எண்ணெய்கள் அனைத்தும் இதய நோய்கள் மற்றும் டைப் 2 நீரிழிவு நோய்க்குக் காரணமாகின்றன என்று குற்றம் சாட்டப்படுகிறது.

விதைகளில் இருந்து எடுக்கப்படும் இந்த எண்ணெய்கள் உண்மையில் நமது எதிரிகளா? அல்லது நியாயமே இல்லாமல் அவை குறை கூறப்படுகின்றனவா?

இதய ஆரோக்கியம் - சமையல் எண்ணெய் தொடர்பு என்ன?

சூரியகாந்தி மற்றும் கடுகு எண்ணெய்கள் ஆபத்தானவையா?

பட மூலாதாரம்,GETTY IMAGES

விதைகளில் இருந்து தயாரிக்கப்படும் சமையல் எண்ணெய்களில் அதிக அளவில் காணப்படும் ஒமேகா-6 கொழுப்பு அமிலங்களைப் பற்றியே பெரும்பாலான விமர்சனங்கள் எழுகின்றன.

இந்த வகை கொழுப்பு அமிலங்கள் ஆரோக்கியத்திற்கு அவசியமானவை. நம் உடலால் சுயமாக அவற்றை உற்பத்தி செய்ய இயலாது.

ஒமேகா-6 அமிலங்கள் நாள்பட்ட வீக்கத்தை ஏற்படுத்துவதாகவும், அது இதய நோய், புற்றுநோய் போன்ற நோய்களின் அபாயத்தை அதிகரிப்பதாகவும் சமீபத்தில் சில விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

ஆனால், ஒமேகா-6 அமிலங்கள் வீக்கத்தை அதிகரிக்காது என்று அறிவியல் ஆய்வுகள் காட்டுவதாக மாசசூசெட்ஸில் உள்ள டஃப்ட்ஸ் பல்கலைக்கழகத்தின் மருத்துவ நிறுவனத்தின் பேராசிரியரும் இயக்குநருமான டாரிஷ் மொசாஃபாரியன் கூறுகிறார்.

"ஒமேகா-6 அமிலங்கள் சக்தி வாய்ந்த அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்ட லிபோக்சின்கள் போன்ற தனித்துவமான இயற்கை மூலக்கூறுகளை உருவாக்குகின்றன என்பதை, புதிய ஆராய்ச்சி வெளிப்படுத்துகிறது" என்று அவர் விளக்கினார்.

அமெரிக்காவில் 200,000க்கும் அதிகமான மக்களின் உணவுமுறை மற்றும் ஆரோக்கியம் குறித்து கிட்டத்தட்ட 30 ஆண்டுகளாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

விதையில் இருந்து தயாரிக்கப்படும் எண்ணெய்கள் உள்பட, தாவர அடிப்படையிலான எண்ணெய்களை உணவில் பயன்படுத்துபவர்கள் இதய நோய் அல்லது புற்றுநோயால் இறப்பதற்கான வாய்ப்புகள் குறைவு என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர்.

மறுபுறம், அதிகளவில் வெண்ணெய் உட்கொள்பவர்களுக்கு இந்த ஆபத்து அதிகரித்து இருப்பதாகக் கூறப்படுகிறது.

நமது ஆரோக்கியத்தில் ஒமேகா-6 கொழுப்பு அமிலங்கள் ஏற்படுத்தும் விளைவுகளை, குறிப்பாக விதையில் இருந்து தயாரிக்கப்படும் எண்ணெய்களில் உள்ள ஒமேகா-6 கொழுப்பு அமிலமான 'லினோலிக்' அமிலத்தை மையமாகக் கொண்டு, பல ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்த லினோலிக் அமிலம் நமது ரத்தத்தில் உள்ள (குறைந்த அடர்த்தி கொண்ட லிப்போபுரோட்டீன் (low-density lipoprotein: LDL) 'கெட்ட கொழுப்பை' குறைக்கும் தன்மை கொண்டது என்று கண்டறியப்பட்டுள்ளது.

ஜான்ஸ் ஹாப்கின்ஸ் ப்ளூம்பெர்க் பொது சுகாதாரப் பள்ளியின் மனித ஊட்டச்சத்து பேராசிரியரான மேட்டி மார்க்லண்ட் 2019ஆம் ஆண்டு நடத்திய ஆய்வில், ரத்தத்தில் அதிக அளவு லினோலிக் அமிலம் உள்ளவர்களுக்கு இதய நோய் ஏற்படும் அபாயம் குறைவாக இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

விதையில் இருந்து தயாரிக்கப்படும் எண்ணெய்களில் இருந்து ஒமேகா-6 கொழுப்பு அமிலங்களை அதிகமாக உட்கொள்வது, நோய் அல்லது இறப்பு ஏற்படுவதற்கான அபாயத்தை அதிகரிக்க வாய்ப்பில்லை என்று உலக சுகாதார அமைப்பு (WHO) மேற்கொண்டுள்ள ஆய்வில் ஈடுபட்டுள்ள விஞ்ஞானிகள் முடிவுக்கு வந்தபோதும், இதுகுறித்த உயர்தர ஆராய்ச்சிகள் நடத்தப்பட வேண்டும் என்று அவர்கள் கருதுகிறார்கள்.

விதையில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய் எவ்வாறு சுத்திகரிக்கப்படுகிறது?

சூரியகாந்தி மற்றும் கடுகு எண்ணெய்கள் ஆபத்தானவையா?

பட மூலாதாரம்,GETTY IMAGES

விதையில் இருந்து தயாரிக்கப்படும் எண்ணெய்கள் ஹெக்ஸேன் என்ற வேதிப்பொருளைப் பயன்படுத்தி பிரித்தெடுக்கப்படுகின்றன என்று சில கவலைகள் உள்ளன.

கச்சா எண்ணெயில் இருந்து தயாரிக்கப்படுவதுதான் ஹெக்ஸேன். ஆனால், இந்தச் செயல்முறை ஆரோக்கியத்திற்குத் தீங்கு விளைவிக்கும் என்பதற்கு எந்த அறிவியல் ஆதாரமும் இல்லை.

"உணவுப் பதப்படுத்துதலில் ஹெக்ஸேன் சாற்றின் பயன்பாடு மிகவும் பொதுவானது என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இருப்பினும், வாசனையை நீக்குதல் மற்றும் ப்ளீச்சிங் போன்ற செயல்முறைகள் தீங்கு விளைவிக்கும் சேர்மங்களை நீக்குகின்றன," என்று அமெரிக்காவின் ஸ்டான்ஃபோர்ட் நோய்த் தடுப்பு ஆராய்ச்சி மையத்தின் ஊட்டச்சத்து ஆய்வுகளின் இயக்குநர் கிறிஸ்டோபர் கார்டனர் கூறுகிறார்.

அழுத்தும் (crushing) முறையில் எடுக்கப்படும் விதை எண்ணெய்களில் இந்தச் (ஹெக்ஸேன் மூலம் பிரித்தெடுக்கும்) செயல்முறை இல்லை. இருப்பினும், இந்த வழியில் உற்பத்தி செய்யப்படும் எண்ணெயின் விலை அதிகம்.

இந்த எண்ணெய்களால் புற்றுநோய் ஏற்படுகிறதா?

சூரியகாந்தி மற்றும் கடுகு எண்ணெய்கள் ஆபத்தானவையா?

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஒமேகா-6 கொழுப்பு அமிலங்கள் ஆரோக்கியத்திற்கு நன்மை பயப்பதாகப் பல ஆய்வுகள் கூறினாலும், சமீபத்தில் ஆராய்ச்சியாளர்கள் இந்த அமிலங்கள் ஒரு குறிப்பிட்ட வகை மார்பகப் புற்றுநோயின் வளர்ச்சியைத் தூண்டக்கூடும் என்று கண்டறிந்துள்ளனர்.

புற்றுநோய் செல்கள் உடலில் வளர்வதற்கான எரிபொருளாக, நாம் உண்ணும் உணவில் உள்ள ஊட்டச்சத்துக்களைப் பயன்படுத்துகின்றன.

ஆனால், இதில் ஒமேகா-6 அமிலங்கள் வகிக்கும் பங்கை வெளிப்படுத்தும் ஆராய்ச்சிகள் குறைவாகவே மேற்கொள்ளப்படுகின்றன.

"ஒமேகா-6 கொழுப்பு அமிலங்கள் சில வழிகளில் நமது ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியம் என்பதை நினைவில் கொள்வது அவசியம். நீங்கள் அவற்றை முற்றிலுமாக நீக்கிவிட்டால், பக்க விளைவுகள் ஏற்படக்கூடும்" என்று நியூயார்க்கில் உள்ள வெயில் கார்னெல் மருத்துவ ஆராய்ச்சி மையத்தின் முதுகலை ஆய்வாளரான நிக்கோலஸ் கொண்டோராஸ் எச்சரிக்கிறார்.

ஆரோக்கியத்திற்கு உகந்தது எது?

சூரியகாந்தி மற்றும் கடுகு எண்ணெய்கள் ஆபத்தானவையா?

பட மூலாதாரம்,GETTY IMAGES

கடுகு எண்ணெய் மற்றும் சோயாபீன் எண்ணெய் குறித்து வேறு எந்த விதை எண்ணெயையும்விட அதிகமான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. எனவே அவை குறித்துப் போதுமான சான்றுகள் உள்ளன.

"இவை இரண்டிலும் ஆரோக்கியமான கொழுப்புகள் சமநிலையில் உள்ளன. அதில் மோனோஅன்சாச்சுரேட்டட் கொழுப்புகள், ஒமேகா-6 பாலிஅன்சாச்சுரேட்டட் கொழுப்புகள் மற்றும் ஒமேகா-3 பாலிஅன்சாச்சுரேட்டட் கொழுப்புகள் அடங்கும்," என்று மொசாஃபாரியன் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், கடுகு எண்ணெய் அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது என்றும், ஆலிவ் எண்ணெயைவிட ரத்தக் கொழுப்பின் அளவை சிறப்பாக மேம்படுத்துகிறது என்றும் கூறினார்.

அதோடு 27 சோதனைகளின் பகுப்பாய்வின்படி, கடுகு எண்ணெய் சூரியகாந்தி எண்ணெயைவிட மோசமான கெட்ட கொழுப்பின் (LDL) அளவை கணிசமாகக் குறைக்கிறது என்று விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

குறிப்பாக டைப் 2 நீரிழிவு நோயாளிகளுக்கு இது பயனுள்ளதாக இருக்கும் என்றும், எடை குறைக்கும் முயற்சிகளுக்கும் உதவியாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

சாச்சுரேட்டட் கொழுப்புகளுடன் ஒப்பிடும்போது, சோயாபீன் எண்ணெய், கொழுப்பின் அளவை மேம்படுத்துவதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

சோயாபீன் எண்ணெயை அதிகமாக உட்கொள்பவர்களுக்குப் பிற காரணங்களால் இறப்பு ஏற்படும் அபாயம் குறைவாக இருக்கும் என்று ஓர் ஆய்வு கண்டறிந்துள்ளது.

அடுத்தகட்ட ஆராய்ச்சிகள் செய்யப்பட வேண்டுமா?

"இயற்கை அளித்துள்ள சத்தான பரிசுகளில் விதைகளும் ஒன்று. அவை ஆரோக்கியமான கொழுப்புகளின் தொகுப்பு" என்கிறார் மொசாஃப்ரியன்.

விதையில் இருந்து தயாரிக்கப்படும் எண்ணெய்களை உட்கொள்வதால் ஏற்படும் உடல்நல பாதிப்புகள் குறித்து இன்னும் கடுமையாக சோதிக்க வேண்டிய அவசியம் இருப்பதாக சில விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.

மறுபுறம், இந்த எண்ணெய்கள் ரத்தக் கொழுப்பு, குளுக்கோஸ் மற்றும் இன்சுலின் அளவுகளில் ஏற்படுத்தும் நன்மைகளை ஏற்கெனவே பல ஆராய்ச்சிகள் நிரூபித்துள்ளன என்று பேராசிரியர் மார்க்லண்டும் பிறரும் கூறுகின்றனர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cn5y3y0x925o

முளைவிட்ட உருளைக்கிழங்கு, பூண்டு, வெங்காயத்தை உணவில் சேர்க்கலாமா?

1 month ago

முளைவிட்ட உருளைக்கிழங்குகள் மற்றும் வெங்காயம் உட்கொள்வது நல்லதா? ஆரோக்கியம், உணவு,

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்

  • எழுதியவர், நஜானின் மொடாமெதி

  • பதவி, பிபிசி பாரசீகம்

  • 30 மே 2025, 04:22 GMT

உங்கள் சமையலறைக்குச் சென்று நீங்கள் உங்களுக்குப் பிடித்த உணவை சமைக்க துவங்குகிறீர்கள். அதற்கு உருளைக்கிழங்கு தேவைப்படுகிறது. நீங்கள் அதனை எடுக்கும் போது, அதில் முளைவிட்டிருந்தால் என்ன நினைப்பீர்கள்?

இதை சமைப்பதா? இதனை சமைப்பது உடலுக்கு நன்மை அளிக்குமா? அல்லது குப்பையில் போடுவது சரியாக இருக்குமா என்று ஆயிரம் கேள்விகள் உங்கள் மனதில் எழுகிறதா?

அடுத்த நேரம் என்ன சமைப்பது என்ற யோசனையே பெரிதாக இருக்கும் போது, முளைவிட்ட உருளை, வெங்காயம் மற்றும் பூண்டு போன்ற பொருட்களை சமைப்பது நல்லதா, கெட்டதா என்ற கேள்வி மேலும் குழப்பத்தையே ஏற்படுத்தும். ஆனால் இதற்கான பதிலை ஒரு வரியில் கூறிவிட இயலாது.

உருளைக்கிழங்கு முளைவிடும் போது என்ன நடக்கும்?

முளைவிடுதல் என்பது ஒரு இயற்கையான நிகழ்வு. உங்கள் வீட்டில் இருக்கும் உருளைக்கிழங்கு ஒரு செடியாக வளர போகிறது என்பதன் அறிகுறி அது.

இந்த நிலையில், உருளைக்கிழங்கு க்ளைகோலாய்ட்ஸ் (glycoalkaloids) என்ற நஞ்சை அதிகமாக உற்பத்தி செய்யும். இந்த இயற்கையாக உருவாகும் நச்சுத்தன்மை, செடிகளை பூஞ்சைகள் மற்றும் பூச்சிகளின் தொற்றில் இருந்து பாதுகாக்க உதவுகிறது.

இந்த நச்சுகளில் காணப்படும் மற்றொரு கலவை சொலானின். இது உருளைக்கிழங்கு, தக்காளி, பெரிய கத்தரிக்காய் மற்றும் குடைமிளகாய் போன்றவற்றிலும் காணப்படும்.

அறுவடை செய்து, சேமித்து வைக்கும் போது இந்த நச்சுக் கலவைகளின் வளர்ச்சி மேலும் அதிகரிக்கிறது. இது மனிதர்கள் மற்றும் விலங்குகள் என இரு தரப்பினருக்குமே அபாயத்தை ஏற்படுத்தக் கூடியது.

முளைவிட்ட உருளைக்கிழங்குகள் மற்றும் வெங்காயம் உட்கொள்வது நல்லதா? ஆரோக்கியம், உணவு,

பட மூலாதாரம்,SHUTTER STOCK

படக்குறிப்பு,முளைவிட்ட உருளைக்கிழங்குகளை சமைக்க பயன்படுத்தும் போது பசுமையான பகுதி முழுமையாக நீக்கப்பட வேண்டும்

இப்படியாக முளைவிட்ட காய்கறிகளை உட்கொள்ளலாமா?

"முளைவிட்ட உருளைக்கிழங்குகளில் மிகவும் ஆபத்தானது க்ளைகோலாய்டுகள். இது உணவுக்கு கசப்பான சுவையை தருவது மட்டுமின்றி, வாந்தியையும் ஏற்படுத்தும்," என்று டாக்டர் க்ரிஸ் பிஷப் தெரிவிக்கிறார். அவர் லிங்கன் பல்கலைக்கழகத்தில் அறுவடைக்கு பிந்தைய தொழில்நுட்பப்ப் பிரிவில் பணியாற்றுகிறார். 'பொட்டேட்டோஸ் போஸ்ட்ஹார்வெஸ்ட்' என்ற புத்தகத்தை அவர் எழுதியுள்ளார்.

"உருளைக்கிழங்குகள் பச்சை நிறத்தில் தோற்றமளித்தால் அதில் இந்த இயற்கை ரசாயனம் இருப்பது வெளிப்படையாக தெரிந்துவிடும். அதனால் தான் பச்சை நிறத்தில் இருக்கும் உருளைக்கிழங்குகளை உணவில் எடுத்துக் கொள்ளக் கூடாது," என்று பிஷப் பிபிசிக்கு தெரிவித்தார்.

"இந்த ரசாயனத்தின் செறிவானது, முளைவிட்ட உருளைக்கிழங்குகளில் இன்னும் கூடுதலாக இருக்கலாம். எனவே அவற்றை முழுமையாக நீக்கிவிட வேண்டும். சந்தேகம் இருக்கும் பட்சத்தில், முளைவிட்ட பகுதியில் அதன் 'வேர்' வரை சென்று முழுமையாக நீக்கிய பிறகு, மற்ற பகுதியை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்," என்றும் அவர் தெரிவித்தார்.

அதே போன்று பிரிட்டனின் உணவு தரங்களுக்கான முகமை, முளைவிட்ட உருளைக்கிழங்குகளில் எப்பகுதியை உணவில் சேர்ப்பது சரியாக இருக்கும் என்று அறிவித்துள்ளது.

அதன்படி, "குருத்தை நீக்கிவிட்ட பிறகும், உருளைக்கிழங்கு திடமாக இருக்கும் பட்சத்தில், எந்த சேதமும் இல்லாத பட்சத்தில், அதனை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்," என்று அறிவுறுத்துகிறது அந்த முகமை.

"இருப்பினும், உருளைக்கிழங்கில் பச்சை நிறம் தெரிந்தால், அதனை சமையலுக்கு பயன்படுத்த வேண்டாம். ஏன் என்றால் பச்சை நிறம் இருப்பது, அதில் நச்சுத்தன்மை இருப்பதை சுட்டிக்காட்டும் அறிகுறியாகும்," என்றும் குறிப்பிட்டுள்ளது.

"முளைவிட்ட உருளைக்கிழங்குகள், தொட்டுப் பார்ப்பதற்கு மிகவும் திடமாக, சுருக்கங்கள் ஏதுமின்றி இருக்கும் பட்சத்தில், குருத்துகள் மிகவும் சிறிதாக இருந்தால், அவற்றை உணவில் சேர்த்துக் கொள்வது பாதுகாப்பானது. ஆனால், தொடுவதற்கு மிகவும் மிருதுவாகவும், சுருக்கங்களுடனும் காணப்பட்டால் அதில் உள்ள ஊட்டச்சத்துகள் அனைத்தையும் அவை இழந்துவிட்டதை சுட்டிக்காட்டுகின்றன. எனவே அவற்றை உட்கொள்ள வேண்டாம்," என்ற முகமை குறிப்பிடுகிறது.

முளைவிட்ட உருளைக்கிழங்குகள் மற்றும் வெங்காயம் உட்கொள்வது நல்லதா? ஆரோக்கியம், உணவு,

பட மூலாதாரம்,SHUTTER STOCK

படக்குறிப்பு,உருளைக்கிழங்குகள் முளைவிட்டிருந்தால், அதில் அளவுக்கு அதிகமாக நச்சுகள் உள்ளன என்று அர்த்தம்.

சொலானின் நச்சு

அதிக எச்சரிக்கையுடன் இருக்குமாறு சில நிபுணர்கள் கூறுகின்றனர்.

கிழக்கு ஆங்க்லியா பல்கலைக்கழகத்தில் தாவர அறிவியல் துறையில் பேராசிரியராகப் பணியாற்றும் கேத்தி மார்டின், "முளைவிட்ட உருளைக்கிழங்குகளை நீங்கள் உட்கொள்ளவே கூடாது," என்று கூறுகிறார்.

உருளைக்கிழங்குகளை வெளிச்சத்தில் வைக்கும் போது, அது முளைவிடுதலை தூண்டுகிறது. க்ளைகோலாய்டு, சொலானின் போன்ற நஞ்சுகளின் உற்பத்தியையும் தூண்டுகிறது. இது மனிதர்கள் மற்றும் விலங்குகளுக்கு கேடானது. குறிப்பாக நாய், பூனை போன்ற செல்லப் பிராணிகளுக்கு இவை ஆபத்தானவை என்று அவர் விளக்குகிறார்.

"பச்சை நிறமில்லாத உருளைக்கிழங்குகளில் சொலானின் அளவு மிகவும் குறைவாகவே உள்ளது. இருப்பினும், இது விஷமாக மாறக்கூடிய ஆபத்தைக் கொண்டிருப்பதால் ஒருவர் உருளைக்கிழங்கை பச்சையாக உண்ணக் கூடாது," என்றும் கேத்தி தெரிவிக்கிறார்.

உண்மையில் மிகவும் அரிதாகவே சொலானின் நஞ்சால் அசம்பாவிதங்கள் ஏற்பட்டுள்ளன. பிரிட்டனில் 1970-களின் பிற்பாதியில், 78 பள்ளி மாணவர்கள் பச்சை உருளைக்கிழங்குகளை உட்கொண்ட பிறகு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விவகாரம் அதிகமாக அறியப்பட்ட நிகழ்வாக இன்றும் உள்ளது.

மிகவும் குறைவான அளவில் உட்கொண்டால் அதனால் ஏற்படும் பாதிப்பையும் நீங்கள் குறைவாகவே உணர்வீர்கள்.

சொலானின் நஞ்சால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு வயிற்றுப்போக்கு, வாந்தி மற்றும் கடுமையான வயிற்று வலி ஏற்படும். மிகவும் தீவிரமான தாக்கம் இருக்கும் பட்சத்தில், தலைசுற்றல், மயக்கம், குழப்பம், பலவீனமாக உணருதல், பார்வை திறனில் பிரச்னை, சுய நினைவை இழத்தல் போன்றவையும் ஏற்படும். சில நேரங்களில் மரணங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இத்தகைய உருளைக்கிழங்குகளை உட்கொள்ளும் போது சிலருக்கு சில நிமிடங்களில் அறிகுறிகள் தென்படலாம். சிலருக்கு இரண்டு நாட்கள் கழித்து அறிகுறிகள் தென்படலாம்.

முளைவிட்ட உருளைக்கிழங்குகள் மற்றும் வெங்காயம் உட்கொள்வது நல்லதா? ஆரோக்கியம், உணவு,

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,சொலானின் நச்சால் மக்களுக்கு வயிற்றுப்பொக்கு, வாந்தி மற்றும் கடுமையான வயிற்றுவலி போன்றவை ஏற்பட வாய்ப்புகள் உள்ளன

முளைவிட்ட உருளைகளை என்ன செய்வது?

  • குருத்துகள் மிகவும் சிறிதாக இருந்தால், சமைப்பதற்கு முன்பு அவற்றை நீக்கிவிடவும்

  • ஒரு அங்குலத்திற்கு மேலாக வளர்ந்திருந்தாலோ, அல்லது உருளைக்கிழங்கு மிகவும் மிருதுவாக இருந்தாலோ அதனை சமைக்க வேண்டாம்

  • பச்சை நிறத்தில் இருக்கும் பகுதிகளை வெட்டி நீக்கவும். இது அதிக அளவில் இருக்கும் நச்சுகளையே குறிக்கிறது.

  • உருளைக்கிழங்கு அழுகியிருந்தால் அதனை குப்பையில் போடுவதே சிறந்தது

  • உருளைக்கிழங்குகளில் குருத்துகள் முளைத்திருக்கும் பட்சத்தில், அதனை பொறுமையாக கையாளவும். அதனை பிடுங்கி எறிவது, உருளையின் அப்பகுதியில் நோய் தொற்றை ஏற்படுத்தும். நம் உடலில் காயங்கள் ஏற்படுவது போன்று தான் அதுவும் நிகழும்.

நீங்கள் கர்ப்பமாக இருந்தாலோ அல்லது நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும் பட்சத்திலோ அல்லது பாலூட்டும் தாய்மாராகவோ இருந்தால், எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.

உருளைக்கிழங்குகளை வீட்டில் எப்படி வைத்திருக்க வேண்டும்?

உருளைக்கிழங்குகள் வீணாவதை தடுக்கவும், 'ஃபிரெஷ்ஷாக' இருப்பதை உறுதி செய்யவும் கீழ் காணும் வழிமுறைகளை நீங்கள் பின்பற்றலாம்

  • 3-10° செல்சியஸ் வெப்ப நிலை கொண்ட, குளிர்ச்சியான, ஈரப்பதமற்ற, இருண்ட இடத்தில் வைக்கலாம்.

  • கடைகளில் இருந்து வாங்கிக் கொண்டு வந்த உருளைக்கிழங்குகளை அப்போதே கழுவ வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஈரப்பதம் அதிகரிக்கும் என்பதால் எளிதில் அழுகிப் போவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

  • உருளைக்கிழங்குகளையும் வெங்காயங்களையும் தனித்தனியாக வைப்பது நல்லது. ஏன் என்றால் இவ்விரண்டு உணவுப் பொருட்களும் ஈரப்பதம் மற்றும் வாயுவை வெளியேற்றும் தன்மை கொண்டவை. இது முளைவிடுதலை தூண்டும்.

முளைவிட்ட உருளைக்கிழங்குகள் மற்றும் வெங்காயம் உட்கொள்வது நல்லதா? ஆரோக்கியம், உணவு,

பட மூலாதாரம்,SHUTTER STOCK

படக்குறிப்பு,உருளைக்கிழங்குகளையும் வெங்காயங்களையும் தனித்தனியாக வைப்பது நல்லது.

முளைவிட்ட வெங்காயம் மற்றும் பூண்டை உணவில் சேர்த்துக் கொள்ளலாமா?

முளைவிட்ட வெங்காயம் மற்றும் பூண்டு, உருளைக்கிழங்கு போன்று நச்சுத்தன்மை கொண்டவை அல்ல.

"மாறாக முளைவிட்ட பூண்டு மற்றும் வெங்காயத்தை உண்பது பாதிப்பை ஏற்படுத்தாது. ஏன் என்றால் அவற்றில் ஆபத்தை ஏற்படுத்தும் நச்சுத்தன்மை ஏதும் இல்லை," என்று கூறுகிறார் பேராசிரியர் மார்டின்.

"பூண்டு அல்லது வெங்காயத்தில் இருக்கும் ஊட்டச்சத்தில் இருந்து இவை முளைக்கின்றன. இருப்பினும் அவை கசப்பாகவும், மிகவும் மிருதுவானதாகவும் கொண்டிருக்கும்," என்றும் அவர் தெரிவிக்கிறார்.

பூண்டு, வெங்காயம் போன்ற உணவுப் பொருட்களையும் 3-10° செல்சியஸ் வெப்ப நிலை கொண்ட, குளிர்ச்சியான, ஈரப்பதமற்ற, இருண்ட இடத்தில் வைக்கலாம். ப்ளாஸ்டிக் பைகளில் போட்டு வைக்காமல், காற்றோட்டமான பைகளில் அவற்றை போட்டு வைத்தால் காற்றோட்டத்துடன் அவை இருக்கும்.

உருளைக்கிழங்குகள் போன்றே, வெங்காயம், பூண்டுகளில் இருந்து நாற்றம் எழுந்தாலோ, அழுகிப் போவதற்கான அறிகுறிகள் தென்பட்டாலோ அவற்றை குப்பையில் கொட்டுவதே எப்போதும் நல்லது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/ckgqzqe81xqo

மூளை வளர்ச்சி, அறிவாற்றலை மேம்படுத்த உதவும் முட்டை - எப்படி தெரியுமா?

2 months 2 weeks ago

கோலின், மூளை வளர்ச்சி, அறிவாற்றல்

பட மூலாதாரம்,GETTY IMAGES/ SERENITY STRULL/ BBC

கட்டுரை தகவல்

  • எழுதியவர், ஜெசிகா பிராட்லி

  • பதவி, பிபிசி

  • 14 ஏப்ரல் 2025

    புதுப்பிக்கப்பட்டது 5 மணி நேரங்களுக்கு முன்னர்

கோலின் ஊட்டச்சத்து நமது அறிவாற்றலை மேம்படுத்தவும், பதற்றத்தை குறைக்கவும் உதவலாம். ஆனால், அதனை போதுமான அளவு பெறுகிறீர்களா?

கோலின் குறித்து இதுவரை நீங்கள் கேள்விப்படாமல் இருந்திருக்கலாம். ஆனால் வாழ்வின் பல்வேறு காலகட்டங்களில் இது நமது ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியமானது என்று ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

அதிக அளவில் கோலின் எடுத்துக்கொள்வது அறிவாற்றல் செயல்திறனை மேம்படுத்துவதுடன், கவனக்குறைவு, டிஸ்லெக்ஸியா உள்ளிட்ட நரம்பியல் வளர்ச்சிக் கோளாறுகளை தடுக்கும் திறன் கொண்டிருக்கலாம் என்று தற்போதைய ஆய்வுகள் கூறுகின்றன.

மனிதர்களின் நரம்பியல் வளர்ச்சியில் கோலின் முக்கிய பங்காற்றுகிறது என்றும் கண்டறியப்பட்டுள்ளது.

கர்ப்ப காலத்தில் கோலின் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொண்ட தாய்மார்கள், குறியீடுகள் மற்றும் தகவல்களை விரைவாக புரிந்து கொள்ளும் திறன் கொண்ட குழந்தைகளைப் பெற்றேடுத்தனர் என்பது ஒரு ஆய்வில் தெரியவந்தது.

விஞ்ஞானிகள் கோலின் ஒரு அதிசய ஊட்டச்சத்து என்கிறார்கள். ஆனால் அது பெரிதும் கவனிக்கப்படவில்லை.

கோலின் எந்த பொருட்களில் இருந்து கிடைக்கும்? நீங்கள் அதை போதுமான அளவு பெறுகிறீர்களா?

ஒரு முக்கிய ஊட்டச்சத்து

நமது உடலில் உள்ள ஒவ்வொரு செல்லிலும் கோலின் காணப்படுகிறது என்கிறார் நியூயார்க் நகரிலுள்ள புரூக்ளின் கல்லூரியில் சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து அறிவியல் பேராசிரியராக பணியாற்றும் ஜின்யின் ஜியாங்.

கோலின் ஒரு "அத்தியாவசிய" ஊட்டச்சத்து. நமது ஆரோக்கியத்திற்கு தேவையான இதனை, நமது உடல் தானாகவே போதுமான அளவு உற்பத்தி செய்யாது.

அதற்கு பதிலாக, நாம் அதை நமது உணவிலிருந்து பெற வேண்டும்.

இது ஒமேகா 3 கொழுப்பு அமிலங்களைப் போன்றது என்றாலும், உண்மையில் பி வைட்டமின்களுடன் நெருக்கமாக தொடர்புடையது என்று அறிவியல் எழுத்தாளர் மற்றும் ஒர் ஊட்டசத்து ஆலோசனை நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியுமான எம்மா டெர்பிஷயர் கூறுகிறார்.

மாட்டிறைச்சி, முட்டை, மீன், கோழி மற்றும் பால் போன்ற விலங்குகளில் இருந்து பெறப்படும் உணவுகளில் பெரும்பாலும் கோலின் காணப்படுகிறது.

அதே சமயம், வேர்க்கடலை, கிட்னி பீன்ஸ், காளான் மற்றும் ப்ரோக்கோலி போன்றவற்றிலும் உள்ளது. இருப்பினும், விலங்குகளில் இருந்து பெறப்படும் உணவுகளில், தாவர அடிப்படையிலான உணவுகளில் உள்ளதை விட அதிக அளவு கோலின் காணப்படுகிறது.

நம் உடலில் பல்வேறு உறுப்புகளின் செயல்பாடுகளுக்கு, குறிப்பாக கல்லீரல் செயல்பாட்டுக்கு கோலின் அவசியம். போதுமான அளவு கோலின் இல்லாவிட்டால், பல்வேறு பிரச்னைகள் உருவாகலாம்.

"கோலின், கல்லீரலிலிருந்து கொழுப்பை வெளியே அனுப்புவதற்கு உதவுகிறது. மேலும், ஒருவருக்கு கோலின் குறைபாடு இருந்தால், அவருக்கு கல்லீரலில் அதிகப்படியான கொழுப்பு படியலாம் (fatty liver) " என்கிறார் ஜியாங்.

கோலின், மூளை வளர்ச்சி, அறிவாற்றல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,சோயாபீன்களின் மூலம் 100 கிராமுக்கு 120மிகி அளவில் கோலினைப் பெற முடியும்.

தாய்மார்களின் கர்பகாலத்தில் கரு வளர்ச்சியடையும்போது, மூளையில் செல் பெருக்கம் குறைய, கோலின் குறைபாடு காரணமாக அமைகிறது. இது பல்வேறு தீங்குகளை விளைவிக்கலாம்.

எனவே மூளையில் கோலினின் பங்கு மிகவும் முக்கியமானது.

இது முதன்மையாக "மூளைக்குத் தேவையான ஊட்டச்சத்து" என டெர்பிஷயர் கூறுகிறார்.

நரம்பு செல்களின் மூலம் மூளையிலிருந்து நமது உடலுக்கு செய்திகளை கொண்டு செல்லும் அசிட்டைல்கோலின் என்ற நரம்பியல் கடத்தியை உற்பத்தி செய்யவும் கோலின் உதவுகிறது.

அசிட்டைல்கோலின், நமது நினைவாற்றல், சிந்தனை மற்றும் கற்றலுக்கு தேவைப்படும் மூளை நரம்பு செல்களில் முக்கிய பங்காற்றுகிறது.

36 முதல் 83 வயதுக்குட்பட்ட 1,400 பேரை உள்ளடக்கிய ஒரு ஆய்வில், அதிக கோலினை உட்கொண்டவர்கள், சிறந்த நினைவாற்றலுடன் இருப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

மேலும், நடுத்தர வயதில் கோலினை சேர்த்துக்கொள்வது நமது மூளையைப் பாதுகாக்க உதவக்கூடும்.

கோலின் பொதுவாக "நூட்ரோபிக்ஸ்" எனப்படும் சப்ளிமென்ட் மருந்துகளில் ஒரு முக்கிய மூலப்பொருளாக சேர்க்கப்படுகிறது. பல்வேறு பொருட்களின் கலவையாகிய இது, கற்றல் மற்றும் நினைவாற்றலை அதிகரிக்க உதவுவதாக சிலர் நம்புகின்றனர்.

மறுபுறம், கோலின் குறைபாடும் அல்சைமர் மற்றும் பார்கின்சன் நோய் போன்ற நரம்புச் சிதைவுக் கோளாறுகளுடன் தொடர்புடையதாக உள்ளது.

ஒரு ஆய்வில், அதிக அளவில் கோலினை உட்கொண்டால், பதற்றம் குறைவதாக கண்டறியப்பட்டுள்ளது. மற்றொரு ஆய்வில், அதிக அளவில் கோலினை சேர்த்துக்கொள்வதற்கும், மனச்சோர்வு ஏற்படும் ஆபத்து குறைவதற்கும் தொடர்பு இருந்தது கண்டறியப்பட்டுள்ளது.

போதுமான அளவு கோலினை எடுத்துக்கொண்டால், பல நன்மைகள் கிடைக்கக்கூடும்.

தனித்தனியாக, எலிகளில் நடத்தப்பட்ட ஆராய்ச்சியின் மூலம், ஹோமோசைஸ்டீன் என்ற அமினோ அமிலத்தின் அளவைக் குறைப்பதற்கும் கோலின் உதவும் என்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த அமினோ அமிலம் இதய நோயின் அபாயத்தை அதிகரிக்கக்கூடும்.

மேலும், அதிக அளவில் கோலினை உட்கொண்டவர்கள், அதிக எலும்பு அடர்த்தி கொண்டிருப்பதாகவும் ஒரு ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

எலும்பின் அடர்த்தி நன்றாக இருந்தால், எலும்புகள் வலுவாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும். இதனால் எலும்பு முறிவின் அபாயமும் குறையும்.

"எலும்பு வலுவிழப்புக்கு எதிராக கோலின் செயல்படக்கூடும்" என்று கோலின் மற்றும் எலும்பு ஆரோக்கியத்திற்கு இடையிலான தொடர்பை ஆய்வு செய்த நார்வேயின் கடல்சார் ஆராய்ச்சி நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர் ஓயென் ஜனிக் கூறுகிறார்.

முதல் 1000 நாட்கள்

குழந்தைகளின் வளர்ச்சிக்கு முதல் இரண்டு ஆண்டுகள் முக்கியமானவை என்பதும், கர்ப்பம் மற்றும் பாலூட்டும் போது தாயின் உணவுமுறை இதில் ஒரு ஒருங்கிணைந்த தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதும் நன்கு நிறுவப்பட்டுள்ளது.

கருப்பையில் உள்ள குழந்தையின் வளர்ச்சிக்கு கோலின் மிகவும் முக்கியமானது என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

குழந்தைகள் தங்களின் தாய்மார்களுடன் ஒப்பிடும்போது மூன்று மடங்கு அதிக கோலினுடன் பிறக்கின்றன. இதன் மூலம் கர்ப்ப காலத்தில் கோலினின் முக்கியத்துவத்தை அறியமுடிகின்றது என்கிறார் டெர்பிஷயர்.

கோலின், மூளை வளர்ச்சி, அறிவாற்றல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,குழந்தையின் வளர்ச்சிக்கு கோலின் மிகவும் முக்கியமானது என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

கருப்பையில் உள்ள கோலினின் அளவு, குழந்தையின் அறிவாற்றல் வளர்ச்சியுடன் தொடர்புடையதாக இருப்பதாக பல ஆய்வுகள் கூறுகின்றன. மேலும் இந்த நன்மைகள் குழந்தை வளர்ந்த பிறகும் பல ஆண்டுகள் தொடரக்கூடும்.

கர்ப்ப காலத்தின் இரண்டாவது மூன்று மாத காலம் (வாரம் 13 முதல் 28 வரை) 'இரண்டாம் ட்ரைமெஸ்டர்' எனப்படுகின்றது. அக்காலத்தில் அதிக அளவு கோலின் உட்கொண்ட கர்ப்பிணி பெண்களின் குழந்தைகள், தங்கள் ஏழு வயதில் செய்துக்கொண்ட நினைவாற்றல் பரிசோதனையில் உயர் மதிப்பெண்கள் பெற்றதாக ஓர் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

ஒரு பெண் கர்ப்பமாக இருக்கும் போது, அவர் போதிய அளவில் கோலின் பெறவில்லை என்றால், பிறக்கும் குழந்தைகளில் கவனக்குறைவு/அதிக செயல்பாட்டு குறைபாடு (ஏடிஎச்டி) தொடர்புடைய நடத்தைகள் காணப்படலாம் என்று சில ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன.

"பள்ளி மாணவர்களிடையே ஏடிஎச்டி மற்றும் டிஸ்லெக்ஸியா அதிகரித்து வரும் நிலை காணப்படுகிறது. இதில் சில மரபணுவோடு சம்பந்தப்பட்டது என்றாலும், கருப்பையில் முக்கிய ஊட்டச்சத்துகள் கிடைக்காமல் போவதாலும் இது ஏற்படக்கூடும். நரம்பியல் வளர்ச்சியில் மிக நுணுக்கமான மாற்றங்கள் நிகழ்கின்றன. அவை பிற்காலத்தில் குழந்தைகளின் வளர்ச்சியைப் பாதிக்கின்றன. இப்போது நாங்கள் அதற்கான பின்விளைவுகளுக்கு சிகிச்சை அளித்து வருகிறோம் " என்று டெர்பிஷயர் விளக்குகிறார்.

கர்ப்ப காலம் மற்றும் தாய்ப்பால் வழங்கும் காலத்தில், கோலின் உட்கொள்வதற்கும் மூளை வளர்ச்சிக்கும் இடையேயான தொடர்பை ஜியாங் ஆய்வு செய்துள்ளார்.

"விலங்குகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில், தாய்க்கு அதிக கோலின் இருந்தால் அவற்றின் குட்டிகளின் அறிவாற்றல் வளர்ச்சி மேம்பட்டதாக இருக்கும்" என்று கூறும் அவர், "மனிதர்களில் மேற்கொள்ளப்படும் ஆய்வுகளிலும் இதேபோன்ற முடிவுகள் வெளிப்படத் தொடங்கியுள்ளன. இருப்பினும், ஒரே மாதிரியான முடிவுகள் கிடைக்கவில்லை" என்று விளக்குகிறார்.

நமக்கு போதுமான அளவு கோலின் கிடைக்கிறதா?

ஐரோப்பாவில், ஐரோப்பிய உணவுப் பாதுகாப்பு ஆணையமான ஈஎப்எஸ்ஏ (EFSA), கோலினை உட்கொள்வதற்கான பரிந்துரைகளை வெளியிட்டுள்ளது.

பெரியவர்களுக்கு தினசரி 400 மில்லிகிராம், கர்ப்பிணிகளுக்கு 480 மில்லிகிராம், மற்றும் தாய்ப்பால் வழங்கும் பெண்களுக்கு 520 மில்லிகிராம் கோலின் பரிந்துரைக்கப்படுகிறது.

கோலின் உட்கொள்வதற்கான பரிந்துரைகளை, அமெரிக்காவிலுள்ள இன்ஸ்டிடியூட் ஆப் மெடிசின் (IOM) முதன்முதலில் 1998ம் ஆண்டு வெளியிட்டது.

ஆண்களுக்கு தினசரி 550 மில்லிகிராம், பெண்களுக்கு 425 மில்லிகிராம், கர்ப்ப காலத்தில் 450 மில்லிகிராம், மற்றும் தாய்ப்பால் கொடுக்கும் போது 550 மில்லிகிராம் என அதில் பரிந்துரைக்கப்பட்டது.

ஒரு முட்டையில் சுமார் 150 மில்லிகிராம் கோலின் உள்ளது.

ஒரு கோழியின் மார்புத் துண்டில் சுமார் 72 மில்லிகிராம், மற்றும் ஒரு கைப்பிடி வேர்க்கடலையில் சுமார் 24 மில்லிகிராம் கோலின் காணப்படுகிறது.

மூளைக்கு அதிகம் தேவை

38 விலங்கு மற்றும் 16 மனிதர்கள் மீது நடத்தப்பட்ட ஒரு ஆய்வு, கோலின் சப்ளிமெண்ட் மூளை வளர்ச்சிக்கு உதவுகிறது என கூறுகிறது.

இருப்பினும், தற்போது வரை கோலின் மற்றும் மேம்பட்ட அறிவாற்றல் செயல்பாட்டுக்கிடையிலான வலுவான தொடர்பை விலங்குகளை அடிப்படையை கொண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் மட்டுமே வெளிக்காட்டுகின்றன.

அந்த ஆய்வுக் கட்டுரை கோலின் சப்ளிமெண்ட்டுக்கான சரியான அளவை குறிப்பிடவில்லை.

ஆனால் மனிதர்களை கொண்டு நடத்தப்பட்ட பெரும்பாலான ஆய்வுகள் தினசரி 930 மில்லி கிராம் அளவு கோலின் வழங்கும் சப்ளிமெண்ட்களை பயன்படுத்தின. இது சுமார் ஆறு கோழி முட்டைகளில் உள்ள கோலின் அளவுக்கு இணையானது. இதனால் எந்தவொரு மோசமான விளைவுகளும் பதிவாகவில்லை.

பரிந்துரைக்கப்பட்ட தினசரி அளவை விட அதிக கோலின் தேவைப்படும் சிலரும் இருக்கலாம் என்று ஓயென் கூறுகிறார்.

எடுத்துக்காட்டாக, ஈஸ்ட்ரோஜன் அளவு குறைவாகக் காணப்படும் மாதவிடாய் நின்ற பெண்கள் மற்றும் கல்லீரலில் அதிகப்படியான கொழுப்பு படிந்தவர்களுக்கு கோலின் அதிகம் தேவைப்படலாம்.

ஒவ்வொருக்கும் இடையே உள்ள மரபணு வேறுபாடுகளால், சிலருக்கு கோலினின் தேவை அதிகமாக இருக்கலாம் என டெர்பிஷயர் கூறுகிறார்.

கோலின், மூளை வளர்ச்சி, அறிவாற்றல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,வேர்க்கடலையில் அதிக அளவு கோலின் உள்ளது.

இருப்பினும், நம்மில் பலர் போதுமான அளவு கோலினை பெறவில்லை என்பதை பல ஆய்வுகள் வெளிப்படுத்துகின்றன.

ஒரு ஆய்வில், அமெரிக்க மக்களில் 11 சதவிகித மக்கள் மட்டுமே பரிந்துரைக்கப்பட்ட அளவு கோலினை தினசரி உட்கொள்கிறார்கள் என்று கண்டறியப்பட்டுள்ளது.

முட்டைகளில் அதிக அளவு கோலின் உள்ளது. சைவ உணவு முறையை பின்பற்ற விரும்புவோர், இந்த ஊட்டச்சத்தை போதுமான அளவில் பெற முடியாது என்ற சில கவலைகள் உள்ளன.

இருப்பினும் வளர்ந்த நாடுகளில் கோலின் சப்ளிமெண்ட்கள் பரவலாகவும் கிடைக்கின்றன.

முட்டை உண்பவர்கள், முட்டை உண்ணாதவர்களை விட, சுமார் இரண்டு மடங்கு அதிக கோலினை உட்கொள்கிறார்கள் என்று ஒரு ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

இதனால், "முட்டை உண்ணாமலோ அல்லது சப்ளிமெண்ட் எடுக்காமலோ, தினசரி போதுமான அளவு கோலின் கிடைப்பது மிகவும் கடினம்" என்று ஆராய்ச்சியாளர்கள் முடிவு செய்தனர்.

ஆனால், ஒரு நாளைக்கு 400 மில்லி கிராம் கோலின் என்று, ஐரோப்பிய உணவு பாதுகாப்பு ஆணையத்தால் பரிந்துரைக்கப்பட்ட அளவை

''நீங்கள் உங்கள் உணவை கவனமாகத் திட்டமிட்டால், ஒரு நாளைக்கு 400 மில்லி கிராம் என்று, ஐரோப்பிய உணவு பாதுகாப்பு ஆணையத்தால் பரிந்துரைக்கப்பட்ட அளவு கோலினை பெற முடியும்'' என்று ஜியாங் கூறுகிறார்.

போதுமான கோலின் கிடைக்கவில்லை என்று கவலைப்படுபவர்கள் தினசரி சப்ளிமெண்ட் எடுத்துக் கொள்ளலாம் என்று ஓயென் கூறுகிறார்.

இதற்கிடையில், ஆரோக்கியத்துக்கு கோலின் எவ்வாறெல்லாம் உதவும் என்பதை நன்கு புரிந்து கொள்ள விலங்குகளிடமும், மனிதர்களிடமும் ஆராய்ச்சி நடத்தப்பட வேண்டும் என்றும் அவர் கூறுகிறார்.

ஆனால், "மருத்துவர்கள் கோலின் குறித்து அதிகம் அறிந்து கொள்ளத் தொடங்கியுள்ளனர்," என்கிறார் டெர்பிஷயர்.

பெரும்பாலும் சற்று கவனிக்கப்படாததாகத் தோன்றினாலும், கோலின் விரைவில் பரவலாக அறியப்படும் என்று அவர் நம்புகிறார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

https://www.bbc.com/tamil/articles/c05nez8lqe4o

இன்டர்மீடியா: உணவுக் கழிவுகளை சுவைமிக்க உணவாக மாற்றும் பூஞ்சை - விரும்பி உண்ணும் மக்கள்

2 months 3 weeks ago

பூஞ்சை, உணவு

பட மூலாதாரம்,COURTESY OF VAYU HILL-MAINI, UC BERKELEY/ RESEARCH, UC BERKELEY

படக்குறிப்பு,தக்காளி கழிவில் வளர்க்கப்படும் நியூரோஸ்போரா பூஞ்சை. ரொட்டி மீது செடார் சீஸ் சேர்த்து டோஸ்ட் செய்யப்பட்ட சுவை மணத்தைத் தரும்

கட்டுரை தகவல்

  • எழுதியவர், த வி வெங்கடேஸ்வரன்

  • பதவி, பிபிசி தமிழுக்காக

  • 3 ஏப்ரல் 2025

    புதுப்பிக்கப்பட்டது 4 ஏப்ரல் 2025

ஆன்லைன் மூலமாக மூன்று மாதத்துக்கு முன்பே முன்பதிவு செய்தால் மட்டுமே டென்மார்க்கின் கோபன்ஹேகன் நகரில் உள்ள அல்கிமிஸ்ட் என்னும் உணவகத்தில் சாப்பிட இடம் கிடைக்கும்.

'ராஸ்மஸ் மங்க்' என்னும் இந்த உணவகத்தின் தலைமை சமையல்காரரும் விஞ்ஞானிகளும் சேர்ந்து உருவாக்கிய "இன்டர்மீடியா" எனும் ஒருவகை இனிப்பு தின்பண்டத்துக்குத் திருநெல்வேலி இருட்டுக்கடை அல்வா போல அலைமோதும் கூட்டம் காணப்படுகிறது.

பிரெட் அல்லது காய்கறிகளில் பூஞ்சை பூத்துவிட்டால் அருவருப்புடன் தூக்கி எறிந்து விடுவோம். ஆனால், இந்த இன்டர்மீடியா தின்பண்டத்தில் தங்க நிறத்தில் இருக்கும் இந்த உணவானது நியூரோஸ்போரா இன்டர்மீடியா எனும் பூஞ்சை பூத்த பிறகுதான் பக்குவப்படுகிறது.

அறிவியலையும் சமையல் கலையையும் கலந்திணைப்பு செய்து வயு-ஹில்-மைனி (Vayu Hill-Maini) எனும் நுண்ணுயிரி பொறியாளர் துணையோடு இந்த உணவுப் பண்டத்தை உருவாக்கியுள்ளார்கள்.

உணவில் பூஞ்சை

தாவரம், விலங்கு, மீன், பூச்சிகள் போலவே பூஞ்சை இனமும் மனித உணவுகளில் பல்வேறு வகையில் பங்களிப்பு செலுத்துகிறது.

சாக்கரோமைசஸ் செரிவிசியா எனும் ஈஸ்ட் வகை ஒரு செல் உயிரியைக் கொண்டு நொதிக்க வைத்துத்தான் ரொட்டி, பீர், ஒயின், பாலாடைக்கட்டி போன்ற உணவுகளைத் தயார் செய்கிறார்கள்.

ஐரோப்பாவில் பிரபலமான ப்ளு சீஸ் எனப்படும் உணவை ஒரு வகையான பெனிசிலியம் எனும் பூஞ்சையின் உதவியோடு தயார் செய்கிறார்கள். ஆஸ்பெர்கிலஸ் ஓரிசேயி எனும் பூஞ்சை இனத்தை வைத்து மிசோ, சோயா சாஸ், ஜப்பானிய/கொரிய பீர் வகையான ஷேக் முதலியவை தயாரிக்கப்படுகின்றன.

பேசிலஸ் புமிலஸ் எனும் பூஞ்சையைக் கொண்டு இன்று மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் புரோபயாடிக் மருந்துகளைத் தயார் செய்கிறார்கள். கற்பாசி எனப்படும் பதர் கே பூல் அல்லது தாகப் பூல் என்பது ஒருவகைப் பாசி. பர்மோட்ரேமா பெர்லாட்டம் எனப்படும் இந்த உயிரி உள்ளபடியே ஒருவகை ஆல்கே பூஞ்சையுடன் கூட்டுவாழ்வு உறவைக் கொண்ட கலவை.

வட இந்தியாவின் கரம் மசாலா, செட்டிநாட்டுச் சமையலில் பயன்படுத்தப்படும் இந்தப் பூஞ்சை சாதாரணமாக எந்தச் சுவைமனமும் கொண்டிருக்காது. ஆனால், சூடான எண்ணெய் அல்லது நெய்யில் தாளிக்கும்போது புகை, மரம், மண் வாசனையைத் தூக்கி உணவின் சுவை மணத்தைக் கூட்டுகிறது.

கலந்திணைப்பு

உணவு, பூஞ்சை

பட மூலாதாரம்,COURTESY OF VAYU HILL-MAINI, UC BERKELEY/ RESEARCH, UC BERKELEY

படக்குறிப்பு,வயு ஹில்-மைனி, சிறுவயதில் இருந்தே சமையல் மற்றும் அறிவியல் மீது ஆர்வத்தை வளர்த்துக் கொண்டார்

வயு-ஹில்-மைனியின் தந்தை கியூபாவை சார்ந்த குடும்பப் பின்னணி கொண்டவர். பின்னர் நார்வேவுக்கு புலம் பெயர்ந்தவர்கள். அவரது தாயின் முன்னோர்கள் கென்யாவில் இருந்து ஸ்வீடனுக்கு புலம் பெயர்ந்த இந்திய வம்சாவளியினர்.

அவரது தாய் அக்கம்பக்கம் குடியிருந்தவர்களுக்கு இந்திய சமையல் கலை கற்றுக் கொடுத்து வந்தார். எனவே, அவரது வீட்டில் எப்போதும் உலகின் பல்வேறு உணவுகளின் சுவை மணம் பரவி விரவியிருந்தது. "சிறு குழந்தையாக இருந்தபோது சமையல் அறையில்தான் நான் வளர்ந்தேன்" என நினைவுகூர்கிறார் ஹில்-மைனி.

பல்வேறு பண்பாடுகள் கொண்டவர்கள் அவர்களுடைய வீட்டில் இருந்ததன் காரணமாக உலகின் பல்வேறு பண்பாடு சார்ந்த கறிமசால் பொருள்கள், சுவைமனம் ஊட்டும் பொருள்கள் அவர்கள் வீட்டில் இருந்தன. இவற்றைக் கலப்பு செய்து சிறுவயது முதலே புதுப்புது சமையல்களைச் செய்து பரிசோதனை செய்வதில் ஆர்வம் கொண்டார். அதுபோலவே பள்ளியில் அறிவியல் மீதும் அதிக ஆர்வம் கொண்டவராக இருந்தார்.

"சிறுவயது முதலே சமையல் மீதும் அறிவியல் மீதும் எனக்கு ஆர்வம் கூடுதலாக இருந்து வருகிறது" என்கிறார் ஹில்-மைனி.

சமையலறை அறிவியல்

பள்ளிக் கல்வி முடிந்த பின்னர் அல்கிமிஸ்ட் உள்பட ஐரோப்பா மற்றும் அமெரிக்காவின் முன்னணி சமையல் கல்விக் கூடங்களில் சமையல் கலையைப் பயின்றார்.

பின்னர் அமெரிக்காவுக்கு புலம் பெயர்ந்தார். அங்கே முதலில் பல உணவகங்களில் கடைநிலை சிப்பந்தியாகவும் சமையல் எடுபிடியாகவும் கலையை மேலும் சிறப்பாகக் கற்றுக்கொண்டார். இவர் தயாரித்த புதுவித சாண்ட்விச்சை சுவைத்துப் பார்த்த ஓர் உணவக முதலாளி வியந்து இவருக்கு வாய்ப்பு அளித்தார்.

சமையல் கலையில் திறமை கூடியது; அதே நேரத்தில் அறிவியலின் துணை கொண்டு சமையல் கலையை அணுகும் ஆர்வமும் முளைத்தது. உணவகங்களில் வேலை செய்துகொண்டே கல்லூரிப் படிப்பை முடித்தார். பின்னர் 2020இல் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் உயிரிவேதியல் துறையில் முனைவர் பட்டம் பெற ஆய்வு மாணவராகச் சேர்ந்தார். அங்கே உணவு உள்பட நாம் உட்கொள்ளும் பல்வேறு வேதிப் பொருள்கள் மீது குடல் நுண்ணுயிரிகள் எத்தகைய உயிரி வேதிவினை ஆற்றுகிறது என ஆய்வு செய்தார்.

உற்பத்தியாகும் உணவும் சமைக்கப்படும் உணவும் பெருமளவில் வீணாவது கண்டு கவலை கொண்டார் ஹில்-மைனி. அமெரிக்காவில் உற்பத்தியாகும் உணவில் மூன்றில் ஒரு பங்கு வீணாகிறது," என்கிறார்.

முட்டையின் ஓடு, பழத்தோல் போன்றவை மட்டுமல்ல பெருமளவில் உணவே வீணாகிறது எனப் பல்வகை ஆய்வுகள் சுட்டிக்கட்டுகின்றன.

உலகளவில் உணவுத் துறை ஏற்படுத்தும் கார்பன் மாசில் பாதிக்குப் பாதி அளவு உணவு வீண் செய்யப்படுவதால் ஏற்படுகிறது. எனவே, விவசாயக் கழிவுகளை உணவாக மாற்ற முடியுமா என அடுத்து ஆய்வு செய்ய ஆர்வம் கொண்டார்.

பாரம்பரிய இந்தோனீசிய உணவு

உணவு, பூஞ்சை

பட மூலாதாரம்,COURTESY OF VAYU HILL-MAINI, UC BERKELEY/ RESEARCH, UC BERKELEY

படக்குறிப்பு,வாயு ஹில்-மைனி நியூரோஸ்போரா வெற்றுருவங்களை ஆய்வு செய்தார். அவற்றில் ஒன்று மனித உணவுக் கழிவுகளுக்குத் தகவமைத்து படிநிலை வளர்ச்சி பெற்றுள்ளது என அறிந்துகொண்டார்

உணவகங்களில் வேலை செய்தபோது சக இந்தோனீசியா சமையல் கலை வல்லுநர்கள் தங்கள் நாட்டில், குறிப்பாக மேற்கு ஜாவா தீவில் விரும்பி உண்ணும் அஹ்ன்சாம் எனும் உணவை அறிமுகம் செய்திருந்தனர்.

சோயா விதைகளை அழுத்திப் பிழிந்து சோயா பால் எடுத்த பிறகு எஞ்சும் கழிவில் இருந்தும் நிலக்கடலையைச் செக்கில் ஆட்டி எண்ணெய் எடுத்தபிறகு மிஞ்சும் கழிவில் இருந்தும் இந்த உணவு தயாரிக்கப்படுகிறது.

பாலில் தயிராய் சிறிதளவு உறையூட்டித் தயிர் செய்வது போல இந்தக் கழிவுகள் மீது சிறிதளவு நியூரோஸ்போரா இன்டர்மீடியா எனும் பூஞ்சையை இடுவார்கள். பூஞ்சை வளர்ந்து கழிவை நொதித்து மனிதன் உண்பதற்கு ஏற்ற பக்குவத்தில் உணவைத் தயார் செய்துவிடும். உயிரி வேதிவினை நடைபெறும்போது உமிழும் சில வேதிப்பொருள்கள் பக்குவம் செய்த கழிவு ஸ்பான்ஜ் போன்ற பதமும் செட்டார் சீஸ் வைத்து டோஸ்ட் செய்யப்பட்ட ரொட்டி போன்ற சுவை மனத்தையும் பெற்றுவிடும்.

ஈஸ்ட் எனும் பூஞ்சை ரொட்டி மாவை நொதிக்கச் செய்து ரொட்டி தயார் செய்கிறது என்றாலும் உணவுப் பொருளை வேறு வடிவு கொண்ட உணவுப் பொருளாக மாற்றுகிறது. ஆனால் இந்தோனீசியா அஹ்ன்சாம் உணவில் நியூரோஸ்போரா இன்டர்மீடியா பூஞ்சை கழிவைப் பதப்படுத்தி உணவாக மாற்றுகிறது.

நியூரோஸ்போரா இன்டர்மீடியா பூஞ்சையை ஹில்-மைனி தனது முனைவர் பட்ட மேலாய்வுக்கு எடுத்துக்கொண்டார். மேலும் தனது ஆய்வுக்காக, தான் படித்த சமையல் கலை நிறுவனங்களையும் அங்குள்ள சமையல் கலை வல்லுநர்களையும் இணைத்துக்கொண்டார்.

மரபணுவியல்

இந்தோனீசியாவில் இருந்து ஆய்வுக்காக என அங்கே பாரம்பரிய முறையில் தயாரிக்கப்படும் அஹ்ன்சாம் மாதிரிகள் பலவற்றை வரவழைத்து ஆய்வு செய்தார். பக்குவம் செய்த இந்த உணவில் என்னென்ன வகை நியூரோஸ்போரா இன்டர்மீடியா உள்ளது என மரபணு வரிசை செய்து ஆராய்ந்து பார்த்தார்.

ஆய்வில் இன்டர்மீடியாவின் வேற்றுருவும் எல்லா அஹ்ன்சாம் மாதிரிகளில் இருந்த வேற்றுருவும் வேறுவேறு என்று புலப்பட்டது. அஹ்ன்சாம் வகை நியூரோஸ்போரா இன்டர்மீடியா வேற்றுரு வேறு எங்கும் காணப்படவில்லை; அதே போல அஹ்ன்சாம் உணவு மாதிரிகளில் வேறு எந்த வேற்றுருவும் இருக்கவில்லை.

மனிதன் அணியும் ஆடையில் உள்ள சீலைப் பேன் தலை முடியில் வளர முடியாது; அதேபோல, தலைமுடியில் வாழும் பேன் வகை சீலை போன்ற ஆடைகளில் வாழ முடியாது. பரிணாமப் படிநிலையில் இரண்டும் இருவேறு இடங்களில் வாழும் தன்மையைப் பெற்றுவிட்டன.

அதேபோல, மனிதன் விவசாயம் செய்யத் துவங்கிய பின்னர் பல்வேறு விதமான விவசாயக் கழிவுகளும் உணவுக் கழிவுகளும் உருவாயின. இந்தப் புதிய இடங்களுக்குத் தக்கவாறு தகவமைத்து அஹ்ன்சாம் வகை நியூரோஸ்போரா இன்டர்மீடியா பூஞ்சை பரிணமித்தது என்கிறார் ஹில்-மைனி.

கழிவிலிருந்து கருவூலம்

உணவு, பூஞ்சை

பட மூலாதாரம்,COURTESY OF VAYU HILL-MAINI, UC BERKELEY/ RESEARCH, UC BERKELEY

படக்குறிப்பு,சமைத்த அரிசிச் சோற்றில் நியூரோஸ்போரா பூஞ்சையை உறையூற்றி வைத்துத் தங்க நிறச் சாதத்தைத் தயாரிக்கும் முறை

அஹ்ன்சாம் வகை நியூரோஸ்போரா இன்டர்மீடியாவை 30 வகையான தாவரக் கழிவுகளில் இட்டு ஆய்வு செய்தனர்.

தாவரங்களில் உள்ள செலுலோஸ் போன்ற பொருள்களை மனிதனால் செரிக்க வைக்க முடியாது. மேய்ந்து உண்ணும் ஆடு மாடு போன்றவற்றால் இவற்றை ஜீரணிக்க முடியும். எனவேதான் நாம் அரிசி கோதுமை போன்ற தானியங்களை மட்டும் எடுத்துக்கொண்டு மற்றவற்றை விவசாயக் கழிவாக அப்புறப்படுத்தி விடுகிறோம்.

முக்கிய தாவரக் கழிவுகளில் என்னென்ன வேதியியல் மாற்றங்களை இந்தப் பூஞ்சை தூண்டுகிறது என இனம் கண்டனர். சர்க்கரை ஆலையில் இருந்து வெளிவரும் கரும்புக் கழிவு, தக்காளி கெட்சப் செய்த பின்னர் வரும் கழிவு, பாதாம் பருப்புக் கழிவு, வாழைப்பழத் தோல் உள்படப் பெருமளவில் குவியும் விவசாயத் தொழில் உற்பத்திக் கழிவுகள் மீது கவனம் செலுத்தினர்.

இந்தக் கழிவுகளில் உள்ள மனிதனால் ஜீரணிக்க முடியாத பெக்டின் செல்லுலோஸ் போன்ற தாவர செல்களின் சுவர் பாலிசாக்கரைடு பொருட்களைச் சுமார் 36 மணிநேரத்தில் மனிதனால் ஜீரணிக்கக்கூடிய, சத்தான மற்றும் இனிமையான உணவாக இந்தப் பூஞ்சை மாற்றுகிறது என்று தங்கள் ஆய்வில் கண்டனர்.

மேலும் இயற்கை வேற்றுரு வகை போலன்றி மனிதன் உற்பத்தி செய்யும் விவசாயக் கழிவுகளில் வளரும் இந்த வகை நியூரோஸ்போரா பூஞ்சை மனிதனுக்கு ஆபத்து விளைவிக்கும் எந்த நச்சுப் பொருள்களையும் உற்பத்தி செய்யவில்லை எனவும் கண்டுபிடித்தனர். அதாவது இந்தப் பூஞ்சையை உண்பதில் தீங்கு ஏதுமில்லை.

"பூஞ்சையை ஜீரணம் செய்து மாற்றம் செய்யும் விவசாயத் தாவரக் கழிவுகளில் மனிதனால் ஜீரணிக்கக்கூடிய புரத உள்ளடக்கம் கூடுகிறது. அதே போல, பூஞ்சை செய்யும் வேதியியல் மாற்றம் காரணமாகக் கழிவின் சுவை மணத்திலும் மாற்றம் ஏற்படுகிறது. நாம் விரும்பாத சோயாபீன்களுடன் தொடர்புடைய சில சுவை மணம் முற்றிலும் அகன்று விடுகிறது. இப்போது அதே கழிவு கூடுதல் புரத ஆற்றலுடன் மனிதன் உண்ண ஏற்ற சுவை மணத்துடன் மாறிவிடுகிறது" என்கிறார் ஹில்-மைனி

சுவைக்கும் உணவு

சத்தான உணவாக இருக்கலாம்; ஆனால் சுவை இல்லை என்றால் யாரும் சீண்ட மாட்டார்கள்." "குறிப்பாக ஒரு சமையல் கலை வல்லுநருக்கு மிக முக்கியக் கேள்வி- இந்த 'உணவு சுவையாக உள்ளதா?'" என்கிறார் ஹில்-மைனி.

பிரெஞ்சு மக்கள் விரும்பி உண்ணும் ப்ளு சீஸ் எனும் வகைப் பாலாடைக் கட்டியின் மணம் மற்றும் சுவையைக் கண்டு வேறுபல பண்பாட்டைச் சார்ந்தவர்கள் முகம் சுளிப்பார்கள். ஒரு குறிப்பிட்ட கலாசாரச் சூழலுக்கு வெளியே மக்கள் அதை நேர்மறையாக உணரவில்லை என்றால் அனைவரும் ஏற்கும் வகையில் சுவை மணம் உள்ளது என அறியலாம்.

இதுவரை அஹ்ன்சாம் உணவைச் சுவைத்துப் பார்த்திராத ஐரோப்பிய நபர்களிடம் அல்கெமிஸ்ட் உணவகத்தில் வைத்து பரிசோதனை மேற்கொண்டனர். இந்தோனீசிய அஹ்ன்சாம் மட்டுமின்றி வேர்க்கடலை, முந்திரி, பைன் பருப்பு, அரிசிச் சோறு போன்றவற்றிலும் இந்தப் பூஞ்சையை வளர்த்து உணவு உருவாக்கி அல்கெமிஸ்ட் சமையல் கலை வல்லுநர்கள் பரிசோதனை நடத்தினர்.

பூஞ்சை வளர்ந்த அரிசிச் சோறு போன்றவற்றில் இனிமையான பழச் சுவை மனம் உருவானது. நூடுல்ஸ் போன்றவற்றில் காணப்படும் ஜப்பானிய சுவை மணமான உமாமி சுவை மணத்தையும், மிதமான காரச் சுவை மணத்தையும் உணர முடிந்தது என வாடிக்கையாளர்கள் கூறினார். சுவைத்துப் பார்த்த உணவாக வாடிக்கையாளர்களிடம் ப்ளூ சீஸ் போல விருப்பு அல்லது வெறுப்பு என்ற இரு துருவ நிலைப்பாடு ஏற்படவில்லை. எவரும் வெறுத்து ஒதுக்கவில்லை.

புதிய தின்பண்டம்

உணவு, பூஞ்சை

பட மூலாதாரம்,COURTESY OF VAYU HILL-MAINI, UC BERKELEY/ RESEARCH, UC BERKELEY

படக்குறிப்பு,அல்கிமிஸ்ட் உணவகத்தில் பிரபலமாகி வரும் இன்டர்மீடியா இனிப்பு தின்பண்டம்.

இந்த ஆய்வின் தொடர்ச்சிதான் அல்கெமிஸ்ட் உருவாக்கிய இன்டர்மீடியா இனிப்புப் பண்டம். கீழே ஜெல்லி அடுக்கு. அதன் மேலே ப்ளம் ஒயின் அடுக்கு. இதற்கு மேலே சிறப்பாகத் தயாரிக்கப்பட்ட அரிசிச் சோறு கஸ்டர்ட். சமைக்கப்பட்ட சோற்றில் நியூரோஸ்போரா பூஞ்சையை உறையூற்றி அறுபது மணிநேரம் புளிக்க வைக்க வேண்டும்.

அரிசிச் சோறு தங்க நிறமாக மாறிவிடும். இந்த அரிசிச் சோற்றை வைத்துக்கொண்டு கஸ்டர்ட் தயார் செய்ய வேண்டும். இதன் மேலே எலுமிச்சையை சிறு துளி விடவேண்டும். வருத்த எலுமிச்சை தோல் சீவலைப் பொடியாகத் தூவிவிடவேண்டும். இதுதான் 'இன்டர்மீடியா' இனிப்புப் பண்டச் செய்முறை.

"இந்தப் பூஞ்சை மிதமான காரச் சுவை மணம் தருவதால் முதலில் நாங்கள் காரத் தின்பண்டம் தயாரிக்கத்தான் முடிவு செய்தோம். ஆனால் சமைத்த அரிசிச் சோற்றில் இந்தப் பூஞ்சையை நொதிக்கும்போது ஊறுகாய் சுவையும் பழத்தின் சுவை மனமும் ஒருங்கே சேர்ந்து வருவதால் இனிப்புத் தின்பண்டம் செய்யத் துவங்கினோம். இறுதியில் நாங்கள் தயாரித்த இந்த இனிப்புப் பண்டம் எங்களுக்கே வியப்பாக இருக்கிறது," என்கிறார் இந்த ஆய்வில் ஈடுபட்ட அல்கெமிஸ்ட் உணவகத்தின் தலைமை சமையல் கலை வல்லுநரான மங்க்.

நேச்சர் மைக்ரோபையாலஜி எனும் ஆய்விதழில், "பாரம்பரிய நொதித்தல் துணை கொண்டு உணவுக் கழிவுகளை உணவுக்காகப் பதம் செய்தல்" என்கிற ஆய்வுக் கட்டுரையும் இன்டர்நேஷனல் ஜெர்னல் ஆஃப் காஸ்ட்ரோனமி அண்ட் பூட் சைன்ஸ் எனும் ஆய்விதழில் வெளியிடப்பட்டது. அதேபோல, "ஆய்வகத்தில் இருந்து உணவு மேசைக்கு: உணவாக உட்கொள்ளக்கூடிய நியூரோஸ்போரா இன்டர்மீடியாவை பயன்படுத்தி சமையல் கலை முனைப்பு காணுதல்" என்கிற ஆய்வுக் கட்டுரையையும் இவர்கள் இணைந்து வெளியிட்டுள்ளனர்.

இந்த ஆய்வின் வெளிச்சத்தில் அறிவியல் துணைகொண்டு சமையல் கலையை வளர்த்து எடுக்கும் நோக்கில் அல்கெமிஸ்ட் உணவகம் "ஸ்போரா" என்கிற சமையல் கலை ஆய்வுக் கூடத்தை நிறுவியுள்ளது.

"அறிவியல் பார்வையில் புதிய சமையல் கலை - உணவு குறித்த புதிய அறிவியல் பார்வை' இதுதான் நான் மேற்கொள்ளும் அறிவியல் ஆய்வு" என்கிறார் ஹில்-மைனி.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

https://www.bbc.com/tamil/articles/c0jzpq4ndleo

Checked
Sat, 07/05/2025 - 15:35
நாவூற வாயூற Latest Topics
Subscribe to நாவூற வாயூற feed