இனி சிம் கார்டுகளின் அவசியம் இருக்காதா?!
இனி சிம் கார்டுகளின் அவசியம் இருக்காதா? - புதிய ஐஃபோன் 17 ஏன் இவ்வாறு உள்ளது?
பட மூலாதாரம், Getty Images
கட்டுரை தகவல்
கிரஹாம் ஃப்ரேசர்
தொழில்நுட்ப செய்தியாளர்
4 மணி நேரங்களுக்கு முன்னர்
ஸ்மார்ட்ஃபோன்களின் விஷயத்தில், ஆப்பிள் என்ன செய்தாலும் மற்ற நிறுவனங்கள் பெரும்பாலும் அதையே பின்பற்றும். எனவே, இந்த வாரம் ஆப்பிள் நிறுவனம் பாரம்பரிய சிம் கார்டு இல்லாத ஐபோனை அறிமுகப்படுத்தியிருப்பது, அனைவரும் அறிந்த இந்தத் தொழில்நுட்பத்தின் எதிர்காலம் குறித்து கேள்விகளை எழுப்பியுள்ளது.
அனைத்து ஃபோன் பயனர்களுக்கும், தங்கள் சாதனங்களைச் செயல்பட வைக்க செருக வேண்டிய சிறிய பிளாஸ்டிக் கார்டுகளை நன்கு தெரிந்து வைத்திருப்பார்கள்,
ஆனால், ஐபோன் ஏர்-ஐ வாங்குபவர்களுக்கு அது பழங்கால விஷயமாகிவிடும்.
இந்த ஐபோன் இ-சிம் உடன் மட்டுமே இயங்கும். இது பயனர்கள் தங்கள் நெட்வொர்க்கை அல்லது திட்டங்களை மாற்ற, சிம் கார்டு ட்ரே-ஐத் திறக்க ஒரு குண்டூசியைக் கொண்டு குடைந்து சிரமப்படத் தேவையில்லை.
CCS இன்சைட் நிறுவனத்தைச் சேர்ந்த ஆய்வாளர் கெஸ்டர் மான், பிபிசி செய்தியிடம், ஆப்பிளின் இந்த அறிவிப்பு "பொருள்ரீதியான சிம் கார்டின் முடிவின் தொடக்கத்தைக் குறிக்கிறது" என்று கூறினார்.
ஆனால், நாம் அனைவரும் நமது சிறிய சிப் உள்ள பிளாஸ்டிக் துண்டுகளை நிரந்தரமாகக் கைவிட எவ்வளவு காலம் ஆகும்? அது நமது ஃபோன்களைப் பயன்படுத்தும் விதத்தில் என்ன வித்தியாசத்தை ஏற்படுத்தும்?
'சிம் கார்டு ட்ரே மறைந்துவிடும் என எதிர்பார்க்கலாம்'
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, பல ஆண்டுகளாக சிம் கார்டுகள் ஸ்மார்ட்ஃபோன்களுடன் இணைந்ததாக இருந்துள்ளன.
சிம் என்பதன் விரிவாக்கம் Subscriber Identity Module (பயனர் அடையாள மாதிரி) என்பதாகும். இந்தச் சிப் உங்கள் ஃபோனின் ஒரு முக்கியப் பகுதியாகும். இது உங்கள் மொபைல் நெட்வொர்க் வழங்குநருடன் இணைய, அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகளைப் பயன்படுத்த, உங்கள் டேட்டாவை இயக்க உதவுகிறது.
சமீபத்திய ஆண்டுகளில், இ-சிம் ஒரு மாற்று வழியாக உருவெடுத்துள்ளது. புதிய ஃபோன்களில் பயனர்களுக்கு ஒரு பாரம்பரிய சிம் அல்லது இ-சிம் இரண்டையும் பயன்படுத்தும் வாய்ப்பு உள்ளது.
செவ்வாய்க்கிழமை, ஆப்பிள் குடும்பத்தின் புதிய, மற்றும் மிக மெல்லிய தயாரிப்பான புதிய ஐபோன் ஏர் பற்றிய அறிவிப்பில், அது இ-சிம்-ஐ மட்டுமே கொண்ட வடிவமைப்பைக் கொண்டிருக்கும் என்று அந்த தொழில்நுட்ப ஜாம்பவான் நிறுவனம், கூறியது.
இ-சிம் மட்டுமே கொண்ட ஐபோன் உலகம் முழுவதும் கிடைப்பது இதுவே முதல்முறை. அமெரிக்காவில் உள்ள வாடிக்கையாளர்கள் 2022 முதல் இ-சிம் மட்டுமே கொண்ட ஐபோன்களைப் பயன்படுத்துகிறார்கள்.
ஆனால், ஆப்பிள் நிறுவனம் கூட வழக்கமான சிம் கார்டை முழுமையாகக் கைவிடவில்லை.
இந்த வாரம் அது அறிவித்த மற்ற புதிய ஐபோன்களான – 17, 17 ப்ரோ, 17 ப்ரோ மேக்ஸ் ஆகியவை சில சந்தைகளில் இ-சிம் மட்டுமே கொண்டவையாக இருக்கும் என்பது உண்மைதான் என்றாலும், பெரும்பாலான நாடுகளில் அவை வழக்கமான சிம் கார்டு ஸ்லாட்டுகளைத் தக்கவைத்துக் கொள்ளும்.
சாம்சங் மற்றும் கூகிள் போன்ற பிற பெரிய உற்பத்தியாளர்களும், இ-சிம்களை ஒரு தேர்வாக ஏற்றுக்கொண்டாலும், பெரும்பாலான இடங்களில் வழக்கமான சிம் கார்டுகளை இன்னும் பராமரித்து வருகின்றனர்.
இருப்பினும், முன்னேற்றம் எந்த திசை நோக்கி இருக்கிறது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என நிபுணர்கள் கூறுகின்றனர்.
CCS இன்சைட்டின் சமீபத்திய கணிப்பின்படி, 2024 இறுதிக்குள் 1.3 பில்லியன் இ-சிம் ஸ்மார்ட்ஃபோன்கள் பயன்பாட்டில் இருந்தன. இந்த எண்ணிக்கை 2030 க்குள் 3.1 பில்லியனை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
"காலப்போக்கில், சிம் ட்ரே முற்றிலும் மறைந்துவிடும் என எதிர்பார்க்கலாம்," என்று PP ஃபோர்சைட் நிறுவனத்தின் தொழில்நுட்ப ஆய்வாளர் பாலோ பெஸ்காடோர் கூறினார்.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, ஆப்பிள் ஐபோன் ஏர், இதுவரை உருவாக்கப்பட்ட மிக மெல்லிய ஐபோன் ஆகும்.
இ-சிம்-ன் நன்மைகள் என்ன?
இ-சிம்-க்கு மாறுவது "பல நன்மைகளை" வழங்குவதாக பெஸ்காடோர் கூறினார். மிக முக்கியமாக, ஃபோனின் உட்புறத்தில் சிறிது இடத்தை மிச்சப்படுத்துவதால், பெரிய பேட்டரிகளைச் பயன்படுத்த முடியும்.
பிளாஸ்டிக் சிம் கார்டுகள் பயன்படுத்தப்படாததால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் நன்மைகளையும் அவர் வலியுறுத்தினார். மேலும், வெளிநாடுகளுக்குப் பயணம் செய்யும் மக்கள் இ-சிம்-ஐப் பயன்படுத்தும்போது அதிக சேவை வழங்குநர் விருப்பங்கள் கிடைக்கும் என்றும் "கட்டண அதிர்ச்சிகள்" இருக்காது என்றும் அவர் நம்புகிறார்.
இது புதிய வாடிக்கையாளர் நடத்தைகளைக் கொண்டுவரும் என்றும், "மக்கள் தங்கள் மொபைல் வழங்குநருடன் தொடர்புகொள்ளும் விதத்தை மெதுவாக மாற்றும்" என்றும் கெஸ்டர் மான் கூறினார்.
உதாரணமாக, சில வாடிக்கையாளர்கள் தங்கள் வழங்குநருடன் சிம் குறித்துப் பேச, ஒரு கடைக்குச் செல்லத் தேவையில்லை.
ஒரு கடைக்கு நேரடியாக செல்லும் நேரத்தை மிச்சப்படுத்த விரும்புபவர்களுக்கு இது ஒரு பெரிய நன்மையாக இருக்கலாம்.
ஆனால், எல்லா மாற்றங்களைப் போலவே, இது அனைவராலும் வரவேற்கக்கூடியதாக இல்லாமல் இருக்கலாம் என்றும் அவர் கூறினார்.
"இந்த மாற்றம் வயதானவர்கள் அல்லது தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதில் நம்பிக்கையில்லாதவர்களுக்கு குறிப்பாக முக்கியமானது. இ-சிம்களை எப்படிப் பயன்படுத்துவது என்பதை விளக்கத் தொழிற்துறை கடினமாக உழைக்க வேண்டும்" என்று மான் கூறினார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு