Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
கண்காணிப்புக்குழு தலைவருக்கு அரசியல் துறை பொறுப்பாளர் கடிதம்
#1
கண்காணிப்புக்குழு தலைவருக்கு அரசியல் துறை பொறுப்பாளர் கடிதம்
இன்று, 07 ஏப்பிரல் 2006, தமிழ்த் தேசியப் பற்றாளரும் மனித உரிமை ஆர்வலருமான திரு.வி.விக்கினேஸ்வரன் திருகோணமலையில் வைத்துக் கொலைசெய்யப்பட்டுள்ளதை, மிகுந்த அதிர்ச்சியுடனும் கவலையுடனும் உங்களது உடனடிக் கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகிறேன். வன்முறையைச்சாராத சனநாயக வழிமுறையில், தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுக்க் முன்னின்று உழைத்த இந்த மனிதாபிமானப் பணியாளர் கொல்லப்பட்டுள்ளமையானது தமிழர் தேசத்தையே துக்கத்துக்குள்ளாக்கியுள்ளது. திருமலை துறைமுக பொலிஸ் நிலையத்திற்கும் சிரேஸ்ட்ட பொலிஸ் அத்தியேட்சகர் அலுவலகத்திற்குமிடையில் உட்துறைமுக வீதியில் அமைந்துள்ள இலங்கை வங்கியின் மத்திய கிளையினுள் திரு விக்கினேஸ்வரன் நுழையும்போது சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

இலங்கை அரசாங்கத்தின் சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்டுபவர்கள் யாரோ அவர்கள் சூழ்ந்திருக்கும் ஓரிடத்தில் வைத்து இச்சம்பவம் இடம்பெற்றுள்ளமையினால், அவர்களது உடந்தையில்லாமல் இதனை எவருமே மேற்கொண்டிருக்கமுடியாது என்பதில் எந்தச் சந்தேகமுமில்லை. இலங்கை இராணுவத்தினது புலனாய்வு அமைப்பு மற்றும் அதனுடன் இணைந்தியங்கும் துணை இராணுவக் குழுவுமே இச்சம்பவத்துடன் தொடர்புபட்டுள்ளதை எமக்குக் கிடைத்துள்ள தகவல்கள் உறுதிப்படுத்துகின்றன. தமிழ்த் தேசியப் பற்றாளர்கள் திட்டமிடப்பட்ட வகையில் தொடர்ந்தும் கொலைசெய்யப்பட்டுவரும் நிலையில் இலங்கை அரசாங்கமும் அதன் சட்டத்தை நிலைநாட்டும் நிருவாக அமைப்புக்களும் பாராமுகத்துடன் செயற்பட்டுவருகின்றன. தற்போது நிலவுகின்ற கள நிலமைகளின் அடிப்படையில் வைத்து நோக்குமிடத்து, போர் நிறுத்த ஒப்பந்தத்தை முழுமையாகப் பின்பற்றுவது எனவும் ஜெனிவாவில் ஏற்றுக்கொள்ளப்பட்டவாறு அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளில் துணை இராணுவக் குழுக்களின் செயற்பாட்டை இல்லாதுசெய்வது எனவும் உறுதியளித்த இலங்கை அரசாங்கத்தின் வாக்குறுதிகள் அனைத்தும் அர்த்தமில்லாது போயுள்ளது. போர் நிறுத்த ஒப்பந்த விதிகளை விசுவாசத்துடன் கடைப்பிடிப்பதாகக் கூறிக்கொள்ளும் ஒரு அரசு மறைமுகமாக தனது இராணுவப்புலனாய்வு அமைப்பையும் அதனுடனிணைந்தியங்கும் துணை இராணுவக் குழுக்களையும் பயன்படுத்தி விடுதலைப்புலிகளின் உறுப்பினர்களையும் தமிழ் ஆர்வலர்களையும் அனுதாபிகளையும் கொலைசெய்து வருவது இங்கு குறிப்பிடத்தக்கது. இதுபோன்ற நடவடிக்கைகள், சர்வதேச சமூகத்தினால், அவர்களது முழு ஆதரவுடன் ஆரம்பிக்கப்பட்ட சமாதான முயற்சிகளுக்கு பேராபத்தை ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாமல் இது எதிர்கால முயற்சிகளையும் சீர்குலைத்துவிடும்.
நன்றி
ஈழநாதம் மட்டு
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)