கருப்பு பணத்தை வெள்ளையாக்க
கருப்பு மையால் புத்தகம்
கருணாநிதிக்கு ஜெயலலிதா கண்டனம்
உலகத் தமிழ் இணைய மாநாட்டை தொடங்கி வைத்து முதல்வர் ஜெயலலிதா பேசியதாவது:-
அண்ணா பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகம் என்று திரும்பத் திரும்ப சொல்லும் போது ஆம், அண்ணா பல்கலைக்கழகம் தானே!, அண்ணாவே பல்கலைக்கழகம் தானே! என்று அர்த்தப்படுவதாகவே எனக்குத் தோன்றுகிறது.
அண்ணா ஒரு பல்கலைக்கழகம்! அண்ணா என்னும் அந்தப் பல்கலைக்கழகத்தின் உயிர்த்துடிப்புள்ள விரிவாக்கம் தான் எனது இயக்கம்! அவருடைய தமிழ்க் கனவு நனவாக்குவதே எனது அரசின் குறிக்கோள்! லட்சியம்! இது தான் எனது முழக்கம்.
தமிழ்நாட்டில் எந்த ஒரு குழந்தையும் தமிழ் மொழியைக் கற்காமல் பள்ளியை விட்டு வெளியேறக் கூடாது என்னும் லட்சியத்தோடு மாநிலத்திலுள்ள அனைத்துப் பள்ளிகளின் பாடத்திட்டங்களிலும் தமிழ் மொழி ஒரு பாடமாக கற்பிக்கப்படுவதை உறுதி செய்யும், வகையில் 2003-2004 ஆம் கல்வி ஆண்டு முதல் அனைத்து வகைப் பள்ளிகளிலும் எல்.கே.ஜி. முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவியர்கள் அனைவருக்கும் அறிவியல் தமிழ், பாடத்தைக் கற்பிக்க நான் ஆணை பிறப்பித்துள்ளேன் என்பதை மிக்க மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். ஆட்சி மொழித்திட்டத்தை முழுமையாகச் செயல்படுத்த, உறுதி பூண்டுள்ள எனது அரசு, மைய அரசின் மொழிகளுள் தமிழ் மொழியையும் ஒன்றாக அறிவிக்கவும்; தமிழ் மொழியைச் செம்மொழியாக அறிவிக்கவும் வேண்டுமென்று மைய அரசைக் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
இந்தியத் தலைநகரம் டெல்லியில் உள்ள புகழ்மிக்க ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழியை கற்பித்தல், கற்றல், மற்றும் ஆய்வு செய்தல் ஆகிய திட்டங்களுக்காக, தமிழிருக்கை நிறுவப்படுவதன் இன்றியமையாமையையும் தேவையையும் கருத்தில் கொண்டு 50 லட்சம் ரூபாய் ஒட்டுமொத்த நல்கைத் தொகையாக ஒரே தவணையில் எனது அரசு வழங்கியுள்ளது என்பதையும் இந்த இனிய வேளையில் மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன். மேடையில் தமிழ், தமிழ் என்று அரசியலுக்காக வெற்று முழக்கம் செய்து விட்டு ஆக்கப்பூர்வமாக எதுவும் செய்யாதவர்களால் தமிழ் வளருமா? தமிழ்ப்பணி என்கின்ற போர்வையில் தங்கள் குடும்ப வளர்ச்சிக்குப் பணம் தேடிக் கொண்டிருக்கின்றவர்களைப் பார்க்கிறோம். கேட்டால் இலக்கியப் பணி என்கிறார்கள்! எது இலக்கியம்!
வெள்ளைத் தாளை, பேனா மையால் கருப்பாக்கி விட்டால், அது இலக்கியம் ஆகி விடுமா? ஆகும் என்று சாதிக்கிறார்கள். தமிழகத்திலே உண்டு. அவர்கள் போகும் வழி எல்லாம் புத்தக வியாபாரம் தான்!
அவர்களைப் பொறுத்த வரை தமிழ்த் தொண்டு என்பது கருப்புப் பணத்தை வெள்ளையாக்கிக் கொள்வதற்காக வெள்ளைத் தாளைக் கருப்பாக்கிக் கொண்டிருக்கும் வியாபார ஏற்பாடு.
எது தமிழ்ப்பணி? இங்கே இன்று நடைபெறுகிறதே இந்த மாநாடு, இது தமிழ்ப் பணி, நீங்கள் ஆற்றி கொண்டிருப்பது தமிழ்ப்பணி! இந்தத் தமிழ்ப்பணியை நான் போற்றுகிறேன்.
இந்த மாநாடு அறிவியல் தமிழ், கணித தமிழ் மற்றும் இணையத் தமிழ் வளர்ச்சிக்கு ஒரு விருந்தாக அமைய வேண்டும். முன்னப் பழமைக்கும், பின்னைப் புதுமைக்கும், ஈடுகொடுக்கும் வண்ணம் நம் தமிழ் மொழி வளர இம்மாநாடு வழி தேட வேண்டும். காலத்தின் தேவைக்கேற்ப தமிழின் தனித்தன்மை சிதைய விடாமல் தமிழை வளர்க்க வேண்டும் என்பது தான் என் பேரவா. எனது இந்த அவா தொடர்ந்து நிறைவேற இம்மாநாடு திட்டப்பணிகளைத் தீட்ட வேண்டும். தமிழ், தமிழருக்கு மட்டும் உரிய மொழி அன்று. இத்தரணிக்கே உரிய மொழி! தமிழ் உள்ளூர் மொழியன்று! உலக மொழி! அத்தகைய உலக மொழியை வானம் அளந்ததனைத்தும் அளந்திடும் வளர் மொழியாக்க உறுதி கொள்வோம் என்று கூறி இம்மாநாடு சிறப்புற நடைபெற வாழ்த்தி இந்தத் தமிழ் இணை மாநாட்டினைத் தொடங்கி வைப்பதில் பெருமைக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
-தமிழ்ச்செழியன்
http://www.vikatan.com/vc/2003/aug/vc01126.shtml