Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
பெரியார்!
#1
பெரியார்!
By டிசே தமிழன்
பெரியார், ‘‘ராமசாமி சொல்கிறானென்று எதையும் நம்பாதே’ என்று மட்டுமல்ல, தன்னைப் புரிந்துகொண்டவர்கள் தனது கருத்துக்கள் தேவையில்லை என்று நினைக்கும்போது தன்னை/ தனது சிந்தனைகளை நிராகரித்துச் செல்லலாம் என்ற மாபெரும் சுதந்திரவெளியையும் தந்தவர்.

ஜெயமோகன் தரவழிகள் மட்டும்ல்ல, இரவிக்குமார் போன்றவர்களும் தமது தனிசார்பு நிலைகளால் பெரியாரை வைத்து இலக்கிய, அறிவுஜீவி அரசியல் ஆட்டம் நடத்திக்கொண்டிருப்பது அவலமானது. ‘நிறப்பிரிகை’ குழு முரண்களைத் தாண்டி, பிறகு அது ‘புதிய கோடாங்கி’- ‘கவிதாசரண்’ என்று இருவேறு குழுக்களாலும் பெரியார் இழுபட்டிருக்கின்றார் (இவ்வாறான விவாதங்களினூடாகவும் பெரியார் குறித்த மறுவாசிப்புக்கள் நிகழ்ந்துகொண்டிருப்பதும் வரவேற்கவேண்டியதொன்றே).

இவ்வாறான விவாதங்கள், வியாக்கியானங்கள் என்பவற்றினூடாகவும் பெரியார், தன்னைப் புதிதாய் வாசித்து விளங்கி கொள்கின்றவர்களுக்கு மிகப்பெரும் ஆளுமையாக விகர்சிப்பதுதான் குறிப்பிட வேண்டியது. இதுவேதான் பெரியார் இன்னும் காலாவதியாகவில்லை என்பதையும், இன்றைய காலத்துக்கும் அவரின் சிந்தனைகளுக்கான தேவையுள்ளது என்பதையும் நிரூபிக்கின்றன.

கீழேயுள்ள பகுதியை வாசித்துப் பாருங்கள்.

நம் காலத்துக் கேள்வி
-ரமேஷ் - பிரேம்

கேள்வி: தமிழின் பின்நவீனத்துவ எழுத்தாளர்களாகிய நீங்கள், உலக அளவிலுள்ள தத்துவார்ந்த விசயங்களையும் நுட்பங்களையும் கற்றுணர்ந்து வந்துள்ளீர்கள். தமிழின் சிந்தனைத் தளத்திலும் புத்தர், அம்பேத்கர், பெரியார் குறித்தெல்லாம் விவாதித்தும் எழுதியும் வருகிறீர்கள். சமீபகாலமாக பெரியார் குறித்த கடும் விவாதங்கள் புயலைக் கிளப்புகின்றன. பெரியார் குறித்த உங்களது விமர்சனப் பார்வையை இந்தத் தருணத்தில் முன்வைப்பதுதானே சரியானது?

ரமேஷ் - பிரேம் பதில்: பெரியார் ஈ.வெ.ராமசாமியை விமர்சித்து ஒதுக்கும் அளவுக்கு எங்களுக்குத் தெரிந்தவரை தமிழ்நாட்டில் அறிவுஜீவியோ அரசியல் தலைவரோ இதுவரை உருவாகவில்லை. தமிழ் அறிவுச்சூழலும் மிகப்பெரும் பாய்ச்சலை நிகழ்த்தி வேறு தளத்திற்குச் சென்றுவிடவில்லை.

பெரியார் தமிழரல்ல. தமிழகத்திலுள்ள யாதொரு சாதியையும் சேர்ந்தவருமல்ல. அவருடைய குரல் வந்த இடத்திலும் ஒரு குறிப்பிட்ட சாராருக்காக ஒலித்ததே இல்லை. இந்தவிதத்தில் தமிழகத்தில் மட்டுமல்ல. இந்தியாவிலேயே இவருக்கு உதாரணமாகச் சொல்ல வேறு ஆள் இல்லை.

பெரியார் பேசியது ஒட்டுமொத்தத் தமிழருக்கு ஒட்டுமொத்தத் திராவிடருக்கு. அவர் தலித்துகளுக்கு எதிரானவராகவும் பெண்களுக்கு எதிரானவராகவும் ஒரு சிலரால் முன்வைக்கப்படும் கருத்துகள் யாவும் அபத்தமானவை. இதை பெண்களே எதிர்க்கிறார்கள். சமீபத்தில் கவிஞர் மாலதிமைத்ரி தனது ‘விடுதலையை எழுதுதல்’ கட்டுரைத் தொகுப்பை பெரியாருக்குச் சமர்ப்பித்திருக்கிறார்.

பெரியார் நிர்வாணமாக ஜெர்மனியில் நின்றது என்பது ஒரு மிகப்பெரும் துறவுநிலை. அது பாலிச்சை விழைவு அல்ல. மகாவீரருக்குப் பிறகு இந்தியத் துணைக்கண்டத்தில் தனது பிறப்புறப்பை மறைக்காமல் நின்ற சமூக ஆளுமை பெரியார் மட்டுமே. அந்த புகைப்படத்தை வெளியிடும் துணிவு பெரியாரியவாதிகளுக்கு இருந்தது. ஏனெனில் பெரியாரை முழுமையாக உள்வாங்கியவர்கள் எல்லாவித சமூக மதிப்பீடுகளுக்கும் அப்பாற்பட்டவர்கள். தோழர் ஆனைமுத்துவைப் போல.

இன்று பெரியாருக்கு எதிராக முன்வைக்கப்படும் கருத்துக்கள் யாவும் பெரியாருடைய தனிப்பட்ட வாழ்க்கை சார்ந்த ஒழுக்க மதிப்பீடுகளே. இந்தக் கருத்துக்கள் அவருடைய வெளிப்படையான ஒளிவு மறைவற்ற எழுத்துக்களிலிருந்தே தொகுத்தும் திரித்தும் எடுக்கப்படுகின்றன. பெரியாரே வெளிப்படையாகத் தன்னைத் திறந்துகாட்டிய பிறகு அவருடைய கூற்றிலிருந்தே எடுத்து அவரை பாலியல் ஒழுக்கமற்றவர் எனக்கூறுவது அபத்தமானது.

பெரியார், தமிழ் பின்நவீனவாதி. கடல் போல பேசியும் எழுதியும் செயல்பட்டுமிருக்கிறார். அவரது மிகப்பெரும் சிந்தனா வாழ்வின் ஒவ்வொரு வாக்கியத்தையும் காலவரிசைப்படி பொருள்கொள்ளவேண்டும். அதைத் தவிர்த்து வரலாற்றுப் புரட்டலில் ஈடுபடும் அரைவேக்காட்டு அறிவுஜீவிகளால் ஒரு சமூகக் குற்றத்தைத்தான் செயல்படுத்த முடியும். ‘ராமசாமி சொல்கிறானென்று எதையும் நம்பாதே’ இப்படி யாரும் உலக அளவில் தன்னை நிராகரித்தவரில்லை.

பெரியார்கோட்பாட்டளவில் மட்டுமே செயல்பட்ட ஒரு மனிதர். அவர் ஆசைப்பட்டிருந்தால் தமிழகத்தின் முதலமைச்சராகியிருப்பார். ஆனால் அவரோ ஒரு நாடோடிச் சிந்தனாவதி. பார்ப்பனீயத்தைக் கட்டுடைத்ததில் அண்ணல் அம்பேத்கருக்கு இணையானவர். பார்ப்பனீயமே இந்தியப் பாசிசம் எனப் பரந்துபட்ட மக்களைப் பேசவைத்தவர் பெரியார். அவருக்கு நிகரான வேறொரு ஆளுமை இன்றுவரை தமிழ்நாட்டில் உருவாகவில்லை. பெரியாருக்கு மட்டுமே சாதியழிந்த தமிழ்த்தேசியம் முதல் கனவாகவும் அதுவே எல்லாருடைய இறுதிக் கனவாகவும் இருந்தது. இருக்கிறது. தலித்துகளை ஆட்கொண்டது பெரியார். தலித்துக்கள் ஆட்கொண்டது எம்.ஜி.ஆரை. இன்றுவரை தலித் அறிவுஜீவிகளை எம்.ஜி.ஆருக்கு எதிரான சொல்லாடல்களை ஏன் உருவாக்கவில்லை? எம்.ஜி.ஆரிடமிருந்து தலித்துக்களை எப்படி மீட்டெடுக்கப் போகிறார்கள்?

பெரியாரைக் குறித்துக் கடும்புயல் ஏதும் வீசவில்லை. பெரியார், தலித்துகளுக்கு எதிரானவர் என்றும், அவர் பெண்களை மதிக்காத ஒழுங்கினர் என்றும் பேசப்படுகின்றன. இரண்டொருவர் இப்படி பெரியார் மீது அவதூறுகளைச் சுமத்தி தங்களை பரபரப்பான ஒரு வியாபாரப் பொருளாக மாற்ற முனைகிறார்கள்.

(நன்றி - உன்னதம்)

My special thankx to Keetru

http://elanko.net/pathivu/?p=37
Reply
#2
<b>வரலாற்றின் போக்கைத் திருப்பியவர் பெரியார்</b>



தலித் சுப்பையா


(திருப்பூர் தமிழர் எழுச்சி விழாவில் அக்.2 ஆம் தேதி காலை-மாலை நிகழ்ச்சிகளில் தலித் சுப்பையா குழுவினரின் ‘விடுதலைக் குரல்’ எழுச்சி இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இசை நிகழ்ச்சியில் பாடல்களுக்கிடையே தோழர் தலித் சுப்பையா, அறிவார்ந்த சிந்தனைகளை முன் வைத்தார். அவர் பேசியவைகளிலிருந்து ஒரு தொகுப்பு.)

தோழர்களே! பெரியார் மரணமடைந்தபோது - அதற்கு, தமிழ்நாட்டில் இரங்கல் தெரிவிக்காத அமைப்புகள் இரண்டு. ஒன்று சங்கரமடம்; மற்றொன்று அகில இந்திய பார்வர்டு பிளாக். சங்கரமடம், நமது இன எதிரி. எனவே அது இரங்கல் தெரிவிக்காதது வியப்பு அல்ல. ஆனால் நமது மண்ணின் மைந்தர்களான கள்ளர், தேவர், மறவர் சமூகத்தினர் ஏன் இரங்கல் தெரிவிக்கவில்லை? இதற்கான வரலாற்றுக் காரணத்தை நான் தெரிவிக்க விரும்புகிறேன். 1957-ல் முதுகளத்தூரில் நடந்த கலவரத்தில் நூற்றுக்கணக்கான சேரிகள் எரிக்கப்பட்டன. அது ஒரு சாதிப் போர். அப்போது முதல்வராக இருந்தவர் பெரியவர் காமராசர். மாபெரும் மனிதர். எங்களுடைய கல்விக்கு அவர்தான் அடித்தளமிட்டவர். சாதிக் கலவரத்தை நடத்துவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெரியார் வைத்த கோரிக்கையை ஏற்று, காமராசர் கடும் நடவடிக்கையை எடுத்தார். அதனால்தான் காமராசர் இறந்த போது, மதுரை, கம்பம், உசிலம்பட்டி, தேனி பகுதிகளில், ஆடு வெட்டி பூசை செய்து, தீபாவளி கொண்டாடினார்கள். காமராசர் எடுத்த கடும் நடவடிக்கைகளுக்காக, தங்கள் எதிர்ப்பைக் காட்டினார்கள். நான் பிறந்த கிராமம் - சிவகங்கை படமாத்தூர் அருகே உள்ள நாட்டார்குடி, முதுகளத்தூர் கலவரத்தின் போது கிராமத்தில் வாழ முடியாமல், மதுரைக்கு இடம் பெயர்ந்து, குடி புகுந்த குடும்பம் என் குடும்பம். எனவே தான் இந்த வரலாறு எனக்குத் தெரியும்.

இன்றைக்குப் பெரியாரைக் குறைகூறும் ‘தலித்’களுக்கு, இந்த வரலாறு தெரியுமா? இப்படிக் குறை கூறுகிறவர்கள் எல்லாம் வடமாவட்டங்களில் பிறந்த வயது குறைந்தவர்கள். இந்த வரலாறுகள் பதிவு செய்யப்படாத காரணத்தால், இவர்கள் எல்லாம், பெரியாரைக் குறை கூறுகிறார்கள். வரலாறுகளைத் தெரிந்து கொள்ளாமலே, பெரியாரைக் குறை கூறுவது நியாயம் தானா? பெரியார் நாடகம் பார்த்தீர்களா? என்று ஒரு வாசகர் கேட்ட கேள்விக்கு, ஒருவர் பதில் எழுதுகிறார், “40 வருடமாக அந்த நாடகம் தானே நடந்து கொண்டிருக்கிறது” என்று. நான் மிகவும் வருத்தப்பட்டேன். பெரியார் நாடகமாக இருக்கலாம்; ஏன், அது வரலாற்று நாடகம்! ஒரு வரலாற்றை நாடகமாக்கியிருக்கிறார்கள். அதுதான் உண்மை. பொறுப்பில்லாமல் பேசக் கூடாது. பெரியார் எங்கேயாவது, வன்னியர்களுக்குத் தலைவர், செட்டியார்களுக்குத் தலைவர் என்று எந்தச் சாதிக்காவது தலைவர் என்று உங்களால் அடையாளம் காட்ட முடியுமா? வ.உ.சிதம்பரனாரை சாதித் தலைவராக்குகிறார்கள்; காமராசரை சாதித் தலைவர்களாக்குகிறார்கள்; பெரியாரை அப்படி நீங்கள் காட்ட முடியுமா?

ஒருவர் எழுதுகிறார் பெரியாரை, ‘இரவல் சிந்தனையாளர்’ என்று. தோழர்களே! நான் ஒரு மாதத்துக்கு 18 தமிழ்ப் பத்திரிகைகளையும், 6 ஆங்கிலப் பத்திரிகைகளையும் வாசிக்கிறேன். நான் - பிறர் படிக்கக் கேட்ட சமூகம். பிறர் பாடக் கேட்ட சமூகம். இன்று நாங்கள் பாடுகிறோம், சமூகம் கேட்கிறது. இதற்கு அடித்தளமிட்டவர் யார்? தமிழ்நாட்டில், அம்பேத்கர் நூற்றாண்டுக்குப் பிறகு, தலித் இயக்கங்கள் அம்பேத்கரை அறிமுகப்படுத்தின. ஆனால் அதற்கு முன்பே, தமிழ்நாட்டில் அம்பேத்கரை அறிமுகப்படுத்தியது யார்? பெரியார். அம்பேத்கரின் ‘சாதியை ஒழிக்க வழி’ நூலை தமிழில் அச்சிட்டு, மக்களிடையே பரப்பியவர் யார்? பெரியார்! ஆனால் பெரிய பொறுப்பில் உள்ளவர்களே பொறுப்பில்லாமல் பெரியாரை குறை கூறுகிறார்கள். தமிழ்ச் சமூக மரபில் அடித்தட்டு மக்கள். தாழ்த்தப்பட்ட மக்கள், பார்ப்பனர்களுக்கு எதிராக ஒரு யுத்தம் நடத்துகிறபோது, ஆயுதம் எடுத்துப் போராடுகிற மக்களாக இருப்பவர்கள் தாழ்த்தப்பட்ட மக்கள். அவர்களை சக பாட்டாளி மக்களிடமிருந்து பிரித்தெடுப்பதற்கான அவசியமென்ன? சிந்தித்துப் பாருங்கள்!

தோழர்களே! 1925 இல் இந்திய வரலாற்றில் ஒரு முக்கிய ஆண்டு. நாக்பூரில் ஹெட்கேவர் ஆர்.எஸ்.எஸ்.சை துவக்கியது அந்த ஆண்டுதான். தமிழகத்தில் பெரியார் சுயமரியாதை இயக்கம் துவங்கி, இந்து மதத்துக்கு தூக்குக் கயிறு மாட்டியது அதே ஆண்டு தான்! வடநாட்டில் அம்பேத்கர், 1955 இல், ஆர்.எஸ்.எஸ். துவக்கப்பட்ட அதே நாகபுரியில் தான் இந்து மதத்துக்குத் தூக்குக் கயிறு மாட்டினார். புத்த மார்க்கத்தைத் தழுவினார். அதை மதமாற்றம் என்று சொல்வது தவறு. புத்த மார்க்கம் ஒரு மதமல்ல; புத்தர் ஒரு கடவுள் அல்ல; அம்பேத்கர் இந்து மதத்துக்கு தூக்கு மாட்டியதால் தான், ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் அம்பேத்கர் நினைவு நாளைத் தேர்வு செய்து, ராமர் கோயில் கட்டுவதற்காக பாபர் மசூதியை இடித்தார்கள்.

தோழர்களே! பெரியார் என்பவர் துயரின் வெளிப்பாடு அல்ல; அவர் மாபெரும் வரலாறு. காமராசர் கட்டிய பள்ளிக் கூடத்தில் படித்தவர்கள் நாங்கள். அவர் துவக்கிய மதிய உணவுத் திட்டத்தில் சாப்பிட்டு படித்தவர்கள் நாங்கள். பெரியார் நடத்திய பார்ப்பன எதிர்ப்புக் களத்தினூடாக சாதி என்றால் என்ன? தீண்டாமை என்றால் என்ன? அவை எப்படி இயங்குகிறது என்பதன் விளக்கங்களை அறிந்தவர்கள் நாங்கள்.

உலகம் முழுதும் ஆங்கிலேயனும், பிரஞ்சுக்காரனும், செர்மானியக்காரனும் சந்தித்துக் கொண்டால், தங்கள் தாய்மொழியிலே வணக்கம் சொல்கிறார்கள். இங்கே தான் சிலர் ‘குட்மார்னிங்’ என்கிறார்கள். சிலர் ‘நமஸ்தே’ என்கிறார்கள். சிலர் ‘ஜி’ என்கிறார்கள். ஆனால் உழைக்கும் மக்கள், தங்கள் மண்ணின் மொழியிலேயே உறவு சொல்லி வணக்கம் சொல்கிறார்கள். அம்மா, வணக்கம், அண்ணன் வணக்கம், அப்பு வணக்கம் என்கிறார்கள். நாங்களும் எங்கள் நிகழ்ச்சியை ‘வணக்கம்’ சொல்லியே துவங்குகிறோம்.

தோழர்களே! பெரியாரிடம் இந்துமதம் என்றால் என்ன என்று கேட்டார்கள். அவர் கவிஞர் இல்லை; ஆனால் கவித்துவமாக - மூன்று சொற்றொடர்களில் பதில் சொன்னார். இந்து மதமா? அது ‘அசிங்கம்; ஆபாசம்; அறியாமை’ என்று மூன்று சொற்களில் கவித்துவமாகச் சொல்கிறார். பெரியாரை முறையாக வாசிக்கிறவர்கள் - அவரது சிந்தனையின் பல்வேறு பரிமாணங்களைப் பார்க்கலாம். ஆம், பெரியார் இந்துமதத்துக்குத் தூக்குக் கயிறு போட்டார். “தொங்குதடா அந்தரத்தில் இந்துமதம்; அதைத் தூக்கிலிட்ட பெரியாருக்கு எம் செவ்வணக்கம்.”

அமெரிக்காவைச் சார்ந்த பெவர்பி நிக்கலஸ் என்ற ஆராய்ச்சியாளர் 6 மாத காலம் இந்தியா முழுவதையும் சுற்றிப் பார்த்துவிட்டு, ‘இந்தியாவைப் பற்றிய ஒரு தீர்ப்பு’ எனும் நூலை எழுதினார். அதில், ஒவ்வொரு மாநிலத்தவரும் வங்காளி, மலையாளி, தெலுங்கர் என்றும், மாநிலங்களுக்குள்ளே போனால், ரெட்டியார், முதலியார் என்றும், ஒவ்வொருவரும் கூறுகிறார்களே தவிர, தன்னை இந்தியர் என்று ஒருவர்கூட கூறவில்லை என்று எழுதினார். அதைத் தான் பெரியார் - இந்தியா என்பது ஒரு கற்பனை என்றார். நாம் அதைத் தான் இந்தப் பாடல் மூலம் கேட்கிறோம்.

சாதிகளாய் பிரிந்திருப்பது நியாயமா? தமிழ்
சனங்களாகச் சேருவது என்ன பாவமா?
இந்துவாக இருப்பது என்ன மோகமோ? - இந்த
இழிவைச் சுமக்க எத்தனை காலம் வேணுமோ!

தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் ஆற்றல்மிகு செயல்வீரர் பத்ரிநாராயணன், அவர் கொல்லப்பட்டார் என்ற செய்தியை ஒரு நாள் பத்திரிகையில் படித்தபோது நான் கலங்கிப் போனேன். மூடநம்பிக்கைகளுக்கு எதிராக இறுதிவரைப் போராடிய தோழர் பத்ரி நினைவுக்காக இந்தப் பாடலை, புதுவையில் நடந்த ஒரு விழாவில் பண்ணமைத்துப் பாடினோம். லெனின் ஒரு முறை கூறினார், உலகம் முழுதும் தங்கம் தான் சக்தி வாய்ந்த செலாவணியாக இருக்கிறது. உலகம் தழுவிய ஒரு சோஷலிச சமுதாயம் உருவாகும் போது, நகரங்களில் கழிவறைகளைக் கட்டி, அதில் இந்தத் தங்கத்தைத் தளமாகப் போடுவோம் என்றார் லெனின். பகுத்தறிவாளர்களாகிய நாம், பகுத்தறிவு அரசு ஒன்று அமைகிற போது, கோயில்களை எல்லாம் இடித்துத் தள்ளி விட்டு அங்கு கழிவறைகளைக் கட்டுவோம், “வீட்டுக்கொரு பூசை அறை; வீதியெங்கும் கோயில்களாம்; தமிழர்கள் பூசாரிகளாய் மாறியதேனோ! தந்தை பெரியார் மறந்ததால் வந்த தீங்கு தானோ?”

தோழர்களே! பெரம்பலூரில் நடந்த ஒரு பெரும் கூட்டத்தில் நான் என்னை மறந்து பெரியாரைப் பற்றிப் பாடிக் கொண்டிருந்தேன். எங்கள் இசைக்குழுவில் இடம் பெற்றுள்ள, தோழர்கள் அலெக்ஸ், பாக்கியநாதன் இருவரும், பெரியாரைப் பற்றிய பாடலை நாம் பாடாத மேடை இருக்கவே கூடாது என்பார்கள். அப்படி நான் பாடிக் கொண்டிருந்தபோது, ஒருவர் மேடைக்கு வந்து பெரியாரைப் பற்றிப் பாடாதே என்றார். ஏன்? அவர் ஒட்டுமொத்த தமிழ்ச் சமுதாயத்தின் தலைவரல்லவா? என்றேன். அவர், ‘இல்லை, அவர் பிற்படுத்தப்பட்டோரின் தலைவர். நமக்கான தலைவர் இல்லை’ என்றார். நான் எவ்வளவோ வாதாடியும் பயனில்லை. கடைசியில் பாட்டை பாதியில் நிறுத்த வேண்டியதாயிற்று. அதற்குப் பிறகு என்னுடைய பாடல் ஒன்வொன்றிலுமே பெரியாரை இடம் பெறச் செய்தேன். பாடல் வரிகளின் இடையிலே பெரியாரைச் சொருகி விடுவேன். அப்போது அவர்கள் பாடலை நிறுத்தச் சொல்ல முடியாது அல்லவா?

தோழர்களே! சங்கராச்சாரிகளிலே பல ‘கிரேடுகள்’ இருக்கிறார்கள். ‘தீக்குறளை சென்றோதோம்’ என்று திருப்பாவையில் ஆண்டாள் பாடுவதற்கு, ஒரு செத்துப் போன சங்கராச்சாரி என்ன விளக்கம் தந்தார் தெரியுமா? ‘தீமையைப் பயக்கும் திருக்குறளைப் படிக்கக் கூடாது’ என்று விளக்கம் கூறி, தமிழர் மறையான திருக்குறளையே இழிவுபடுத்தினார். அதற்கெல்லாம் சேர்த்துத்தான், இப்போது ஒட்டுமொத்தமாக ‘ஆப்புவச்சு’ அடிச்சிருக்காங்க. யார் யாருக்கு இவர்கள் எல்லாம் ‘ஆசி’ வழங்கிக் கொண்டிருந்தார்களோ அவர்களிடம் போய் கைகட்டிக் கொண்டு நிற்கிறார்கள். இதற்கெல்லாம் விதை போட்டவர் யார்? இந்த விழிப்புணர்வுக்கு அடித்தளமிட்டவர் யார்? பெரியார் அல்லவா?

தோழர்களே! நான் போட்டோ எடுக்காத குடும்பத்தில் பிறந்தவன். என்னுடைய வீட்டில் எனது தாய் தந்தை போட்டோ கூட இல்லை. எனது வீட்டில் இரண்டு சிலைகள் மட்டுமே இருக்கின்றன. இரண்டும் பெரியார் சிலைகள். அதில் ஒன்று பத்து ஆண்டுகளுக்கு முன்பு புதுச்சேரியில் தோழர் கோவை இராமகிருட்டிணன் எனக்கு அன்பளிப்பாக வழங்கியது. மற்றொன்று, எனது திருமணத்துக்கு நண்பர் ஒருவர் அன்பளிப்பாக வழங்கியது. இந்த இரண்டு சிலைகளையும், எனது பிள்ளைகள், ஒவ்வொரு நாளும் வணங்கிவிட்டுத்தான் பள்ளிக்குச் செல்கிறார்கள். பெரியார் எனக்கு என்ன மாட்டு ‘லோன்’ வாங்கிக் கொடுத்தாரா? ஆட்டு ‘லோன்’ வாங்கிக் கொடுத்தாரா? வங்கிக் கடன் வாங்கிக் கொடுத்தாரா? பட்டம் வாங்கிக் கொடுத்தாரா? பெரியார் தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதையும் செய்யவில்லை என்று சிலர் சொல்கிறார்கள். ஆனால் என்ன செய்யவேண்டும் என்று சொல்லவில்லை. ஏன் சொல்லவில்லை? மாபெரும் மனிதர்கள் வரலாற்றின் போக்கைத் திருப்புவார்கள். துக்கடா அரசியல்வாதிகளைப் போல், மாட்டு லோன் வாங்கித் தரலை; ஆட்டு லோன் வாங்கித் தரலை; என்று இப்படியா பேசுவது? மார்க்ஸ் - யாருக்கு ஆட்டு ‘லோன்’; மாட்டு ‘லோன்’; ரேஷன் கார்டு வாங்கிக் கொடுத்தாரு? அவர் வரலாற்றின் போக்கை மாற்றியவர். அதுபோல், தமிழ்ச் சமுதாயத்தின் வரலாற்றின் போக்கை மாற்றியவர் பெரியார்; அப்படித்தான் பார்க்க வேண்டும்!

“இந்து மதம் எனக்குப் பிடிக்காத மதம். அதன் அயோக்கியத்தனத்தை நான் விரும்புவதில்லை” என்றார் டாக்டர் அம்பேத்கர். அதனால் தான் மதம் மாறச் சொன்னார். மதம் மாறுவதால் என்ன பலன் என்று அம்பேத்கரிடம் கேட்டார்கள். இந்திய சுதந்திரத்தால் எங்களுக்கு என்ன பலன் என்று கேட்டார் டாக்டர் அம்பேத்கர். பெரியாரும் அம்பேத்கரும் இந்துத்துவத்தை எதிர்த்து அடித்த அடியால்தான் அது பலவீனமானது. நாம் நிமிர்ந்து நிற்கிறோம்.

தோழர்களே! ஒடுக்கும் ஆளும்வர்க்கமே வெளியேறு என்ற முழக்கத்தை நாம் முன் வைக்க வேண்டும். வரலாற்றில் ஒவ்வொரு தேசிய இனமும், இந்த முழக்கத்தைத் தான் முன் வைத்திருக்கிறது. தந்தை பெரியார் திராவிடர் கழகமும் அதைத் தான் முன் வைக்கிறது. பெரியார் என்ற மாமனிதர் நிழலில் நாம் நின்று கொண்டிருக்கிறோம். அவர் விதைத்த விதைகளினால் தான், நாம் இன்று அதிகாரிகளாக, டாக்டர்களாக, வழக்கறிஞர்களாக வர முடிந்திருக்கிறது. 50 ஆண்டுகளுக்கு முன் இந்தத் துறைகளில் எல்லாம் பார்ப்பனர்கள்தான் கொடிகட்டிப் பறந்தார்கள். இந்த மாற்றத்துக்கு யார் காரணம்? தந்தை பெரியார்! அவர் அழகிய முகத்தைப் பாருங்கள்; அதில் தமிழகம் தெரிகிறது.”

தோழர்களே! அம்பேத்கர் சென்னை வந்தபோது, தாழ்த்தப்பட்ட சமுதாயத்து அரசு ஊழியர்கள் - அவரை சந்தித்து, தங்களுக்குத் தலைமை ஏற்று வழி நடத்த வேண்டும் என்று கேட்டார்கள். அதற்கு அம்பேத்கர், “இங்கே தமிழ் நாட்டிலேயே உங்களுக்காகப் போராடுகிற தலைவர் இருக்கிறார் தெரியுமா? அவர்தான் ஈ.வெ.ராமசாமி. அவர் தலைமையில் செயல்படுங்கள்” என்று கூறுகிறார். இந்த வரலாறைத் தெரியாதவர்கள் பெரியாரை இன்று குறை கூறுகிறார்கள்.

(தொகுப்பு : விடுதலை இராசேந்திரன்)



நன்றி- புரட்சிப்பெரியார்முழக்கம்
!




-
Reply
#3
நன்றி....

(எனக்கு ஒரு சின்ன சந்தேகம்.... "பாவலர்" பட்டம் பெற என்ன தகுதி?)
,
......
Reply
#4
<b>பெரியார் பேசுகிறார்</b>


<b>அகிம்சையைப் பேசி நாசமாய்ப் போய் விட்டோம்</b>


தாய்மார்களே! தோழர்களே! அகிம்சை என்பதைப் பற்றிக் கேட்டால் அது கோழைத் தனம் என்பேன். பழங்காலத்தில் அது பொருத்தமாக இருந்திருக்கலாம். அதை இப்போது ஏற்று அதன்படி நடப்பதென்பது சாத்தியம் இல்லை. அகிம்சை பிரயோசனப்படாது. இப்போது ஏதோ மற்றவர்களைக் கோழையாக்கி, அடக்கித் தாங்கள் வாழ - தந்திரக்காரர்கள் அகிம்சை என்று பேசுகிறார்கள்.

அகிம்சை என்பது ‘தெய்வீகக்’ கருத்தின் பேரில் சொன்ன உபதேசம். முதலில் நம் நாட்டில் அகிம்சையைப் பற்றிப் பேசியவர்கள் பவுத்தர்கள், சமணர்கள். இரண்டாவது, மேல் நாட்டில் ஏசுபிரான் பேசினார். அதற்குப் பிறகு யாரும் பேசவில்லை. சமணர்கள் நடைமுறைகளைப் பார்த்தால் பைத்தியக்காரத்தனமாகத் தோன்றும். சமணர்கள் தலையை மொட்டையடித்துக் கொண்டார்கள்; தலையில் பேன் பிடித்தால் பேனைக் கொல்ல வேண்டி வரும் என்பதற்காகவே மொட்டையடித்துக் கொண்டார்கள். கையில் மயில் தோகையை வைத்து முன்னால் கூட்டிக் கொண்டு நடக்கவேண்டும்; விளக்குமாற்றால் கூட்டக்கூடாது, விளக்குமாற்றால் கூட்டினால் எறும்பு, பூச்சிகள் செத்துவிடும். இப்படியெல்லாம் என்னென்னமோ செய்து அகிம்சையைப் பற்றிப் பெருத்த உபதேசம் செய்தார்கள். பலன் என்ன? அவர்களுடைய தலைகள் பனங்காயாட்டம் வெட்டப்பட்டன. இதைக் கொண்டாட இன்னும் பண்டிகை நடக்கிறது. ‘அன்பே சிவம்’; ‘சிவமே அன்பு’ என்று சொல்லி ஏமாற்றுகிறார்கள். இவர்கள்தான் ஆயிரம், பதினாயிரம் என்று சமணர்களை வெட்டிச் சாய்த்தார்கள். எதற்குச் சொல்கிறேன் என்றால், சமணர்கள் பேசிவந்த அகிம்சை அவர்களுக்குப் பயன்படவில்லை என்பதைக் காட்டத்தான். அகிம்சை பேசியதன் காரணமாகவே சமணர்கள் அழிக்கப்பட்டார்கள். பலன் என்ன?

ஏசு, ‘ஒரு கன்னத்தில் அடித்தால் மற்றொரு கன்னத்தைத் திருப்பிக் காட்டு’ என்று சொன்னார். இன்று அதுபோல் நடந்தால், பல் போய்விடும். ‘மேல் வேட்டியைக் கேட்டால் இடுப்பு வேட்டியையுங் கொடு’ என்று சொன்னார். இப்போது அப்படிச் செய்தால், என்ன ஆகும்? எல்லோரும் நிர்வாண சங்கத்தில் தான் சேரவேண்டும். இன்றைக்கு அந்த கிறிஸ்தவர்கள் தான் வெடிகுண்டு, அணுகுண்டு செய்கிறார்கள். இம்சை செய்வதற்கு என்பதல்ல; எதிரியிடம் ஓர் அணுகுண்டு இருக்கும்போது என்னிடமும் 2, 3 இருக்கிறது என்றுசொன்னால்தான், தான் தப்பிக்க முடியும் என்ற நிலை இருக்கிறது.

நாம் அகிம்சையை நம்பிப் பேசி நாசமாய்ப் போய் விட்டோம், இல்லாவிட்டால் 3000 வருடங்களாக தேவடியாள் மகன், சூத்திரன் என்று நம்மை இழிவு செய்கிறபோது இங்கு ஒரே ஒரு பார்ப்பாரக் குஞ்சு இருக்குமா? இது ரொம்பக் கேடு. உலகத்தில் வேறு எந்த ஜீவனும் தன் இனத்தைச் சேர்ந்த மற்றொரு ஜீவனை அடித்துச் சாப்பிடுவதில்லை. மனிதன்தான் தன் இனத்தையே அடிப்பது, கொல்வது, சதி செய்து வாழ்வது எல்லாம். மனிதனை மனிதன் கொலை செய்வது எவ்வளவு? மனிதனை மனிதன் கொடுமைப்படுத்துவதைக் காணமுடியுமே தவிர, மாடு மாட்டைக் கடித்தது, நரி நரியைக் கொன்றது, மான் மானை அடித்தது என்று காணமுடியாது. மனிதனை மனிதன் வஞ்சிப்பது, கொடுமைப்படுத்துவது, வதைப்பது வளர்ந்துவிட்டது.

ஆகையினால் நமக்கு அவசியம் கத்தி வேண்டும். அரசர்களை எடுத்துக் கொண்டாலும் எந்த அரசன் கையில் கத்தி இல்லாமல் இருந்தான்? முதலாவது செங்கோல் தடி; இரண்டாவது உடைவாள்; இவை இல்லாத அரசனே கிடையாது. கத்தியும் கழுவுமே சைவத்தைக் காப்பாற்றின. கடவுளை எடுத்துக் கொண்டாலும், எந்தக் கடவுள் ஆயுதம் இல்லாமல் இருக்கிறது? குழவிக்கல் மாதிரியான இலிங்கம் தவிர, உருவமாகக் காட்டுகிற சிவனுக்கெல்லாம், கையில் கொழு, மழு, கோடரி, அரிவாள், ஈட்டி, வேல், சூலாயுதம், அப்புறம் கொஞ்சம் பக்குவப்பட்ட பிறகு திரிசூல ஆயுதம், அதற்குமேல் பக்குவ மேற்பட்ட பின் வில், சக்கரம் இப்படியாக உள்ளனவே. அகிம்சை எங்கே போகிறது? பேரோ, சைவக் கடவுள் - அதற்குக் கத்தியும், கொழுவும், மழுவும் ஆயுதம், ஆயுதம் இல்லாவிட்டால் ஏது சைவம்? சமணர்களை வெட்டி, குத்தி, கழுவில் ஏற்றித் தீர்த்த பிறகுதானே சைவம் மிஞ்சிற்று? சமணர்களிடம் ஆயுதம் இல்லாத காரணத்தாலேயே சமணம் அழிந்தது. சைவம் ஆயுதத்தினாலேயே மிஞ்சிற்று. ‘சைவம்’, ‘அன்பு’ என்பதெல்லாம் தாசியின் காதல் போன்றதே.



திருச்சியில் 21௰௧956-ல் சொற்பொழிவு, (‘விடுதலை’,25.10.1956)
!




-
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)