Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
திராவிட இயக்கக் கருத்துநிலையின் இன்றைய பொருத்தப்பாடு -
#1
Reply
#2
இதில் நாம் முக்கியமாக நோக்கவேண்டிய அமிசம் யாதெனில், சாதியமைப்புக்கெதிராகத் தொடங்கிய போராட்டம் அடிப்படைச் சமூக-பொருளாதார அமைப்பு மாறாததனாலும், மாற்றம் ஏற்பட்டச் சிற்சில துறைகளிலுங்கூட நிலவிய 'உறவுகள்' காரணமாகவும் சாதியமைப்பு மீள் வலியுறுத்தப்படுகிறது.

இது தொலைநோக்கில் ஒட்டுமொத்தச் சனநாயகமயப்பாட்டைச் சிக்கற்படுத்துவதாக இருக்கும். ஆனால், அதே, வேளையில் சனநாயகமயப்பாட்டின் தாக்கத்தினாலேதான் இந்நிலை ஏற்படுகின்றதென்ற உண்மையையும் மறந்துவிடுதல் கூடாது.

தலித்திய எழுச்சி இந்தச் சமூகச் சிக்கற்பாடுகளின் வெளிப்பாடாக அமைகின்றது. அது பற்றிச் சற்று விரிவாகப் பின்னர் நோக்குவோம்.

9

திராவிட இயக்க வரலாறு வழிவந்த சமூக அனுபவங்கள் பற்றிப் பேசும் இந்நிலையில், திராவிட இயக்கம் அது 'தமிழ்ப் பண்பாடு' என்று கருதிய துறையில் ஏற்படுத்திய மாற்றங்களை நோக்குதல் வேண்டும். இது மிக முக்கியமான ஓர் அமிசமாகும். ஏனெனில் 1850, 1900,1930,1950களில் 'தமிழ்ப் பண்பாடு' என்று கருதப்பட்டனவற்றுக்கும், பின்னர் வரும் காலகட்டங்களிலே 'தமிழ்ப் பண்பாடு' என்று கருதப்படுவனவற்றுக்குமிடையிலே பார்வைப்பரப்பு வேறுபாடு உண்டு.

தமிழ்ப் பண்பாடு சம்பந்தமாகத் திராவிட இயக்கத்தின் பிரதான தாக்கம், இக்கருத்துநிலை காரணமாக, தமிழ்ப் பண்பாடு என்று கொள்ளப்படும் ஒரு 'பொதுமைப்பரப்பினை' சமயச் சார்பற்றதாக்கியமையே. (செக்கியூலர்-secular என்னும் தொடரை நாம் இன்றுங்கூட சமய நீக்கம், சமயச் சார்பின்மை என எதிர்நிலையில் மொழிபெயர்க்கின்றோமேயன்றி, அதனை ஒரு 'உடனிலைப்'பாடான -positive எண்ணக் கருவாக எழுத முடியாதுள்ளது.) சைவத் தமிழ், வைஷ்ணவத் தமிழ், கிறிஸ்தவத் தமிழ், இஸ்லாமியத் தமிழ்ப் பாரம்பரியங்கள் பற்றிய ஆய்வுகள் இக்காலகட்டத்திலே செய்யப்பட்டு, அவையாவற்றையும் தமிழின் பொதுப்பாரியத்தினுள்ளே கொண்டுவரும் ஒரு புலமைப் போக்கு இன்று வலுவுடையதாகவிருப்பினும், இவையாவற்றுக்கும் அப்பாலான, சமயச் சார்பற்ற ஒரு 'தமிழ்ப் பண்பாட்டு' இருக்கை ஒன்று உள்ளது என்ற ஒரு பார்வைப் பரப்பு இன்று உள்ளது. இதன் உருவாக்கத்திலே திராவிடக் கருத்து நிலைக்கு ஒரு முக்கியப் பங்கு உண்டு.

'தமிழ்ப் பண்பாடு' எனும் பொழுது மதப் பாரம்பரியங்களுக்கு அழுத்தம் கொடுக்காது, பிற மொழிச் செல்வாக்குக்கள் குறைந்தவை/அற்றவை என்று கருதப்டும் இலக்கியங்களை முதன்மைப்படுத்தும் ஒரு செல்நெறியும் தோன்றிற்று. இதன் காரணமாகச் சங்க இலக்கியங்கள், திருக்குறள், சிலப்பதிகாரம் ஆகியன தமிழ்ப் பண்பாட்டின் கருவூலங்களாக எடுத்துரைக்கப்பட்டன.

இவ்வேளையில், அனைத்திந்திய, உலக மட்டத்தில் தமிழ்/தமிழ்ப் பண்பாட்டின் முக்கியத்துவம் வாய்ந்த பங்களிப்புக்கள் என்று கருதப்படுகின்ற பக்தி இலக்கியம், நடராஜர் சிலை போன்றவற்றை இக்கருத்துநிலை முதன்மைப்படுத்தாது விட்டமையையும் குறிப்பிடல் வேண்டும்.

திராவிடக் கருத்துநிலையின் தொழிற்பாடு காரணமாக முற்றிலும் அதன் தொடர்பியல் தேவைகளுக்காக, தமிழின் மொழிப் பயன்பாட்டில் பெருத்த மாற்றம் ஏற்பட்டது. தனித்தமிழியக்கம் திராவிடக் கருத்துநிலை வளர்ச்சியின் ஒரு காலகட்டத்தை உணர்த்தி நிற்பதாகும். ஆனால், பெரியார், அண்ணாதுரை கருத்தாடல்களில் இந்த மொழிப் பிரயோகம் மாற்றங்களைப் பெற்றது. பெரியாரின் பயன்பாட்டில் பேச்சு நிலை வழக்கு (spoken dialict) முதன்மைப்பட அண்ணாதுரையின் பயன்பாட்டில் (பின்னர் கருணாநிதியிலும்) தமிழின் விதி முறைப் பிரயோகத்திற் (formal use) பல மாற்றங்கள் ஏற்பட்டன. ஒரு குறிப்பிட்ட மொழிநடை (அடுக்குத் தமிழ்) அரசியல் சமூகத் தொடர்பாடலைப் பெரிதும் வலுப்படுத்துவதாக இருந்தது. மேலும், திராவிட இயக்கத்தினர் பத்திரிகைகளையும் தமது தொடர்பாடற் சாதனமாகக் கொள்ளத் தொடங்கியிருந்தனர். இவர்களது வாசக வட்டத்தின் தன்மை, பார்வைப் பரப்புக் காரணமாகத் தமிழின் பத்திரிக்கை எழுத்துத் துறையில் ஒரு புதிய 'மரபு' (idiom) தோன்றிற்று எனலாம். திராவிட இயக்கத்தின் செல்வாக்குச் சினிமாத் துறையையும் பாதித்தது. அந்தப் பாதிப்புக் காரணமாக, இந்தப் புதிய 'நடை' மிக்க பரவலினைப் பெற்றது.

தமிழ்ப் பண்பாட்டுத் துறையில் திராவிட இயக்கத்தின் தொழிற்பாடுகளை மிக உன்னிப்பாக ஆராயும்பொழுது, தமிழ்ப் பண்பாடு இவர்களால் அரசியல்மயப்படுத்தப்பட்ட ஓர் எண்ணக் கருவாகிற்று என்றும் துணிந்து கூறலாம். தமிழ் நாட்டில் ஏற்கனவே நிலவிய 'தமிழர்' என்ற சொல்லின் ஒரு பயன்பாடு பிராமணர்களல்லாத தமிழர்களையும் குறிப்பது. தமிழகத்தில் 'தமிழர்' பற்றிய குறிப்பீட்டுக்குத் 'தமிழியன்' (Tamilian) என்ற ஆங்கிலப் பிரயோகத்தையும் அவதானித்தல் வேண்டும். தமிழரைத் 'தமிழ்ஸ்' (Tamils) என்னாமல் (இலங்கையிலுள்ளது போல்), 'தமிழியன்' எனும் பொழுது, தொனிப்பொருளாக வேறுபாடு வெளிப்படுத்தப்படுகின்றது.


* * * Travida 1 - ன் தொடர்ச்சி * * *

இந்த அரசியல்மயப்பாடு காரணமாக, தமிழ்ப் பண்பாட்டின் குறியீடுகளிலும் வேறுபாடு ஏற்படத் தொடங்கிற்று. தைப்பொங்கல், தமிழர் திருநாள் ஆகிற்று; திருக்குறள், 'உலகத்துக்கு அறிவு வழங்கிய தமிழ் மகன் திருவள்ளுவனாரின் நூல்' (சக்திப் பதிப்பக மலிவுப்பதிப்பு முன் அட்டையில்) ஆயிற்று; திருமணங்கள் பாரம்பரிய வடமொழி வரும் சடங்குகளின்றி நடைபெறத் தொடங்கின (žர்திருத்தக் கலியாணம்); தமிழ்ச் சினிமாவிற் சில குடும்பநிலைப் பண்புகள், தமிழ்ப் பண்புகளாகப் போற்றப்பட்டன. தமிழனின் மானம், தமிழச்சியின் கற்பு என்பன உருவுடைப் பொருள்கள் (reification) ஆகின அரசியல் தொடர்பாடலில் இப்பிரயோகங்கள் வலிமை மிக்க கூற்றுக்களாகின.

தமிழ்த் தேசியப் பிரக்ஞை உருவாக்கத்தில் இந்தக் குறியீடுகள் மிக முக்கிய இடம்பெறத் தொடங்கின.

10

திராவிட இயக்கம்/கருத்து நிலை தமிழ் மக்களிடையே ஏற்படுத்திய மிகப் பிரதானமாக 'தாக்கங்களில்' ஒன்று மதம் பற்றிய அதன் நோக்கு ஆகும்.

இவ்வியக்கம்/கருத்துநிலையின் உடனுறை நோக்கமான பிராமணிய எதிர்ப்புக் காரணமாக, திராவிட இயக்கம் அதன் பல்வேறு வளர்ச்சிக் கட்டங்களிலும் 'வைதிக' (வேத வழி வருகின்ற) இந்து மதச் சடங்குகளை எதிர்த்தது. சைவம் ஆகமங்களை ஏற்றுக்கொண்டது. ஆனால் பெரியாரின் சுயமரியாதை இயக்கம், இந்து மதத்தை அதன் சகல நிலைகளிலும் நிராகரித்தது. இவர்கள் தங்கள் உந்துதற் கோட்பாடுகள் எனக் கொண்டிருந்த 'பகுத்தறிவுவாதம்', 'நாத்திகவாதம்' என்பனவும் இவர்களை அந்த நிலைக்குத் தள்ளின.

அந்தக் கண்ணோட்டத்தில் இந்து மதம் என்பது சமூகக் கட்டுப்பாட்டுக்காகத் தோற்றுவிக்கப்பட்ட ஒரு 'ஆரிய'/பிராமணியச் சூழ்ச்சி என்றே நோக்கப்பட்டது. கிறிஸ்தவம், இஸ்லாம் பற்றி இப்பார்வை முன்வைக்கப்படவில்லை.

இந்த நோக்குக் காரணமாக, மதத்தின் சமூக வகிபாகத்தையே (Social role of religion) மறுதலிக்கும் ஒரு நிலைமை ஏற்பட்டது எனலாம். மதத்தின் மெய்யியல் தளத்தைக் கேள்விக்குள்ளாக்கி, அதன் சமூக-அரசியல் தொழிற்பாடுகளை வன்மையாகக் கண்டித்த கார்ல் மார்க்சும் எங்கெல்சும், மதத்தின் சமூக வகிபாகத்தை நிராகரிக்கவில்லை.* மார்க்ஸ் மதத்தை விவரிக்கும்பொழுது அது 'ஒடுக்கப்பட்டவர்களின் பெருமூச்சாக' அமைவதையும், யதார்த்த வாழ்வில் மறுதலிக்கப்பட்ட விடயங்கள் மறுமையில் தரப்படும் என்ற ஒரு 'போதை' நிலையினைத் தருவதையும் குறிப்பிட்டுள்ளார்.

மதத்தை, குறிப்பாகத் தமிழ்நாட்டுச்சைவம், வைணவத்தைச் சமூக நிறுவனமாக நிராகரிக்கும் இப்போக்குத் தமிழகத்துப் பொதுவுடைமை இயக்கத்திலும் உண்டு. பொதுவுடைமை இயக்க--பகுத்தறிவு இயக்க வளர்ச்சி வரலாற்றின்

-----

* மார்க்ஸ்-எங்கெல்ஸ், On Religion, மொஸ்கோ, 1956.

...

ஆரம்ப நிலையில் சிங்காரவேலர், ஈவெராவுக்கிருந்த உறவு மிக முக்கியமானதாகும்.

சமனற்ற வளர்ச்சியையும் அதிகாரப் படிநிலைச் சமூக அமைப்பையும் (hierarchial society) கொண்ட ஒரு சமூகத்தில், மதம் மக்கள் மனதைச் சமூக இருக்கைக்குப் பதனப்படுத்தும் (Social conditioning) ஒரு வழிமுறையாக அமைகிறது. அந்தப் பதனப்பாடு ஒழிக்கப்படவேண்டுமெனில் உற்பத்தி முறைமையின் சமூக உறவுகள் மாற்றப்படவேண்டும். அத்துடன் இத்தகைய நிலையில் சில கருத்து நிலை/கண்ணோட்டங்கள் மேலாண்மையுடையனவாகவிருக்கும். இவை மரபு என்று போற்றப்படுவனவாகவும் அமைந்துவிடலாம். அத்தகையனவற்றை நிராகரிக்கும்பொழுது, சமூக இருக்கையைத் தொடர்ந்து பேணுவதற்கான இன்னொரு வன்மையான நோக்குமுறை வேண்டும்.

'திராவிட', 'சுயமரியாதை'க் கருத்துநிலையானது பகுத்தறிவு வாதம், நாத்திகத்தைத் தொகுநிலை அர்த்தமாகக் கொள்ளும் தன்மை இருந்தது. ஆனால் அண்ணாதுரையோ, திமுக தோற்றத்துடன் திருமூலர் திருமந்திரத்திலிருந்து எடுக்கப்படும் ஒரு வரியான 'ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்' என்பதை ஒரு கோஷமாக்கினார். இது மதத்தை ஏற்பதாயிற்று. குறிப்பாகக் கிறிஸ்தவர்கள், முஸ்லீம்களிடையே திராவிடக் கருத்து நிலை பற்றிய பகுத்தறிவு நோக்கு அச்சத்தை நீக்கிற்று.

இந்தக் கோஷம் திமுகவின் மதநோக்கிற் சில முரண்பாடுகளை ஏற்படுத்திற்று

இந்த உண்மையை அறுபதுகளின் பிற்கூற்றிலும் அதன் பின்னரும் ஏற்படும் 'மத உணர்வு' (religionity) மீட்பிற் காணலாம். காஞ்சி காமகோடி பீடத்தை முதன்மைப்படுத்தி அறுபதுகளில் நடந்த மத-சடங்காசார மீட்டெடுப்பு இயக்கம், படிப்படியாகப் பிராமணரல்லாத மட்டங்களுக்கும் செல்ல, அந்நிலைகளில் முருக, மாரியம்மன் வணக்கங்கள் மிக முக்கியமாகின. திராவிடக் கருத்துநிலையைப் பரப்பப் பயன்படுத்தப்பட்ட அதே சினிமா ஊடகம் இதற்கும் பயன்படுத்தப்பட்டது. மேலும் எண்பதுகளில், குறிப்பாக நகர்ப்புறத்து ஏழைகள் மத்தியில் சபரிமலை வழிபாடு பிரபலம் பெற்றது. இப்பொழுது திராவிட முன்னேற்றக் கழக அங்கத்தினர்களிடையே காணப்படும் மதவழிபாட்டு நடைமுறைகள் அவர்களின் தலைமையினரிடையே விமர்சிக்கப்பட்டுள்ளது.*

----

* இந்த மாற்றங்கள் பற்றிய குறிப்புக்களுடன் வெறிவந்த 'இந்தியா ருடே' மார்ச் 1997 இதழைப் பார்க்க.

திராவிடக் கட்சிகள் மாநில ஆட்சியை ஏற்றுக்கொண்டபொழுது, அவர்களுடைய கருத்துநிலை எவ்வாறிருப்பினும், கோயில்களையும் மற்றைய மதச்சார் நிறுவனங்களையும் நிர்வகிக்கவேண்டிய ஒரு தேவை ஏற்பட்டது என்பதையும் இங்குக் குறிப்பிடுதல் வேண்டும். இது இந்த விடயங்களில் 'தலையீடு' செய்யவேண்டிய ஒரு நிலைமையினை ஏற்படுத்திற்று

இந்துமத மீட்டெடுப்பு நடவடிக்கைகளின் பொழுது, பிராமணரல்லாத குன்றக்குடி அடிகளார் முன்னின்று நடத்திய சமூக-மத-பண்பாட்டு நடவடிக்கைகள் பற்றி இங்குக் குறிப்பிடல் அவசியமாகின்றது. அவருடைய முயற்சிகளை (திராவிட இயக்கத்தினர்) மறுதலிப்பதில் ஒரு தயக்கம் காணப்பட்ட தென்பதை ஏற்றுக்கொள்ளவே வேண்டும். குன்றக்குடி அடிகளாரின் தமிழ் நிலைப்பட்ட நடவடிக்கைகளும் முக்கியமானவையாகும். அவருடன் ஒப்பிட்டுப் பேசக்கூடிய கருத்துநிலை முக்கியமற்றவரெனினும், பிராமணரல்லாத நிலையில் மதப் பிரசாரகராகவிருந்த கிருபானந்த வாரியாரையும் இங்குக் குறிப்பிடல் வேண்டும். இவருக்குக் கௌரவ இலக்கிய முனைவர் (DLitt) பட்டம் தமிழ்ப் பல்கலைக்கழகத்தினால் வழங்கப்பட்டது.

மதம் என்னும் சமூக-பண்பாட்டு நிறுவனத்தை மறுதலிப்பது என்பது இந்தியா போன்ற பாரம்பரியச் சமூகம் ஒன்றிற் (traditional society) சுலபமாகச் செய்துவிடக்கூடிய விடயமன்று.

இக்கட்டத்தில், இந்தியச் சமூக அமைப்பில், மேனிலை அசைவியக்கம் (Upward social mobility) பற்றி எம்.என். சிறிநிவாஸ் கூறியுள்ள ஒரு பொதுவிதியின் செயற்பாட்டையும் நாம் இங்கு ஒளிவு மறைவின்றிக் குறித்துக் கொள்ளல் வேண்டும்.

அச்செல்நெறியை சிறிநிவாஸ் 'சமஸ்கிருதமயவாக்கம்' (Sanskritisation) என்பர். இங்கு 'சமஸ்கிருதம்' என்பது ஒரு மொழிநிலைக் குறிப்பல்ல. அதாவது அடிநிலைச் சமூகத்தினர் மேனிலை எய்தும்பொழுது, உயர்நிலைச் சமூகத்தினரின் பண்பாட்டுப் போக்குகளைக் கையேற்றுக்கொள்ளல் இந்தியச் சமூகவியலின் பொதுவிதி என்பர். இது பெரும்பாலும் பிராமணியச் சடங்குகளைக் கொண்டதாக இருக்கலாம். ஆனால், எல்லா வேளைகளிலும் அல்ல. ஏதோ ஒரு வகையில் ஒரு 'மதநூற் பாரம்பரியத்துக்குச் செல்லல்' என்பதைக் குறிக்கும்.*

-----

* பார்க்க: M.N. Srinivas. Social Change in India.

...

இந்த சமஸ்கிருதமயவாக்கம் பல வடிவங்களில் பிராமணரல்லாதாரைச் சூழ்ந்துள்ளது. தமிழ் மரபின் தெய்வங்கள், இன்று பெருந்தெய்வங்களாகப் போற்றப்படுகின்றன.

தலித் மக்களின் வளர்ச்சியின்பொழுதும் இத்தகைய ஒரு நிலை ஏற்படும் என்பதற்கான அறிகுறிகள் இப்பொழுதே காணப்படுகின்றன.

11

திராவிட இயக்க வரலாற்றில், அதன் கருத்துநிலைப் போக்கின் ஒரு முக்கிய பெறுபேறாக அமைந்தது தமிழ்ப் பிரக்ஞை, தமிழ்த் தேசிய உணர்வு ஆகும். தமிழ் மக்கள் தங்கள் இன உணர்வு பற்றிய அரசியல் பிரக்ஞை கொள்வதில் திராவிட இயக்கத்தின் பங்கு கணிசமானதாகும். இத்துறையில் ம.பொ. சிவஞான கிராமணியாரின் தமிழரசுக் கட்சியும் ஓரளவு தொழிற்பட்டதுண்மையெனினும், தமிழ் மக்கள் தாங்கள் ஓர் அரசியற்குழுமம் என்ற உணர்வைப் பெறுவதில் இவ்வியக்கத்தின் பங்களிப்பு முக்கியமானதாகும்.

திராவிட இயக்கத்தின் அரசியற் பயன்பாடு பற்றி ஆராய்த என்.ராம், இந்தக் கருத்து நிலை, தமிழ்த்தேசிய இன உணர்வு (nationality conciousness) உருவாக்கத்தில் முக்கிய இடம் பெறுகின்றது என்று கூறியுள்ளார் (ராம் 1978:79).

இலங்கையில் தமிழ்த் தேசிய உணர்வு உருவாக்கத்திலும் எடுத்துரைப்பிலும் திராவிட இயக்கத்தின் பெரியாரின் செல்வாக்கு மிகக் கணிசமானதாகும். இலங்கையில் பெரியாரின் சுயமரியாதை இயக்கத்துக்கு மிகவும் வரையறுக்கப்பட்ட ஒரு வரவேற்பே இருந்தது. ஆனால் இருந்தது என்பது உண்மை. 1920,30 களில் 'குடி அரசு'ப் பத்திரிகைக்கு இலங்கைத் தமிழரிடையே ஒரு வாசக வட்டம் இருந்தது. உதாரணமாக, கரவெட்டி என்னும் கிராமத்தில், 1930 இன் பிற்காலத்தில் பெரியாரின் கொள்கைகளை எடுத்துப்பேசிய ஓர் இளைஞர் குழாம் இருந்தது. அவர்களில் ஒருவர் 'குடி அரசு' என்ற பட்டப் பெயருடன் (குடியரசு கந்தவனம்) இறக்கும்வரை (ஏறத்தாழ 1960கள் வரை) அழைக்கப்பட்டு வந்தார். இத்தகைய ஒரு குழுமம் கிழக்கிலங்கையிலுமிருந்தது. பிற்காலத்தில் தமிழரசுக் கட்சியின் பத்திரிக்கையின் ஆசிரியராக விளங்கிய எஸ்.டி. சிவநாயகம் மட்டக்களப்பில் சுயமரியாதைக் கொள்கைகளைப் பரப்பினார். அவர் செல்வாக்கிற்கு ஆட்பட்டவர்களாக செ. இராசதுரை (பின்னர் பாராளுமன்ற அங்கத்தினர்/அமைச்சர்), எஸ்.இ. கமலநாதன் ஆகியோர் விளங்கினர். அரசியல் நிலைப்பட்ட தமிழின உணர்வு வளர்ச்சியில் 1949 இல் தோற்றுவிக்கப்பெற்ற இலங்கைத் தமிழரசுக் கட்சி முக்கிய ஆர்வம் காட்டிற்று. இந்தக் கட்சியினர் தங்கள் கட்சிப் பிரசாரங்களில் அண்ணாதுரை, திமுகவின் கருத்துப் பரப்புகைக்குப் பயன்படுத்திய சொற்பொழிவு முறைமையைப் பயன்படுத்தினர். இவர்களும் பாசறை, தளபதி போன்ற பதங்களைப் பயன்படுத்தினர்.

இத்தகைய பின்பற்றுகைகளுக்கு மேலே சென்று, இலங்கைத் தமிழரசுக் கட்சியினர், திராவிட இயக்கத்தினருடன் நேரடித் தொடர்புகளும் ஏற்படுத்தினர். தமிழரசுக் கட்சித் தலைவர்கள் எஸ்.ஜே.வி. செல்வநாயகமும் அ. அமிர்தலிங்கமும், பெரியாரையும் அண்ணாதுரை அவர்களையும் சந்தித்தனர் (தமிழரசுக் கட்சி வெள்ளிவிழா மலர் 1974).

இலங்கையில் வாழ்ந்து வரும் இந்திய வழிசாவழித் தமிழரிடையே, குறிப்பாக 1950 களில் திராவிட இயக்கம் முக்கியமான அரசியற் செல்வாக்குக் கொண்டிருந்தது. இச்செல்வாக்கு இலங்கையின் மலையகத்தில் (Hill Country of Sri Lanka) உள்ள தோட்டத் தொழிலாளரிடையே பரவத் தொடங்கியதும் அக்கட்சிக்குத் தடை விதிக்கப்பட்டது. இலங்கைத் திராவிட இயக்கத்தின் வரலாற்றில் இளஞ்செழியனுக்குள்ள இடம் முக்கியமானதாகும்.

இந்த வரலாற்றுண்மையை அண்மையில் வெளிவந்த பெ.முத்துலிங்கத்தின் 'எழுதாத வரலாறு' (கொழும்பு 1997) என்னும் நூல் வெளிக்கொணர்ந்துள்ளது.

12

திராவிட இயக்க/கருத்துநிலைத் தொழிற்பாடுகளின் அரசியல், சமூகப் பலாபலன்கள் பற்றி மீள்நோக்கச் செய்யும் பொழுது, இக்கருத்துநிலையானது, குறிப்பாக மாநிய ஆட்சிக் கருத்துநிலையாக மாறிய நிலையில், (அதாவது பாராளுமன்ற ஆட்சிமுறை பங்குகொள்ளலை ஏற்றுக்கொண்ட பின்னர்) இந்தக் கருத்துநிலைக்கு ஆதரவு வழங்காத, இதனைக் குரோத உணர்வுடன் நோக்கிய, கருத்துநிலையாளர்களைப் பெரும்பாலும் கொண்டிருந்த ஓர் உத்தியோகத்தர் குழாத்தினராலேயே (bureaucracy) நிர்வகிக்கப்பட்டு வந்தது என்ற உண்மையையும் பதிவு செய்தல் அவசியம். அனைத்திந்திய ஒருமைப்பாடு, பிராமண உத்தியோக மேலாண்மை, சமஸ்கிருத நெறிப்படுகை ஆகியனவற்றை எதிர்த்த திராவிட இயக்கம், மாநில ஆட்சியை ஏற்றுக்கொண்டதும் இந்த மூன்று கட்டுக்கோப்புக்களுள்ளும் நின்று இயங்கவேண்டிய தேவை ஏற்பட்டது.

இதனால், இந்தக் கருத்துநிலை வழிவரும் செயற்பாடுகள் நடைமுறைப்படுத்தப்படுவதில் சிக்கல்கள் ஏற்பட்டன.

தேர்தல் அரசியலில் இறங்கியபொழுது ஏற்பட்ட நிலைப் பெயர்வுகளுடன் இதுவும் சேர, இந்தக் கருத்து நிலையின் வலிமை பெரிதும் பாதிக்கப்பட்டதெனலாம்.

மாநில நிர்வாகத்தைத் திராவிடக் கட்சிகள் ஏற்றுக்கொண்டபொழுது, தவிர்க்க முடியாத வகையிற் சில பிராமண உத்தியோகத்தர்கள் முதன்மை எய்தினர். திமுகவின் முதல் ஆட்சிக் காலத்தில் வி.பி.ராமன் என்ற அட்வகற் ஜெனரல் முதன்மை பெற்றதை ஒரு முக்கிய உதாரணமாகக் காட்டுவர்.

13

திராவிட இயக்கம்/கருத்துநிலையின் இன்றைய பொருத்தப்பாடு பற்றிச் சிந்திக்கும்பொழுது, முக்கியப் பிரச்சினை மையங்களில் ஒன்றாக அமைவது 'தலித்' பிரச்சினையாகும்.

எண்பதுகளின் பிற்கூற்று முதல் இது படிப்படியாக முக்கியத்துவம் பெறத் தெடங்கி, தொண்ணூறுகளில் தமிழ் நாட்டின் மிக முக்கியப் பிரச்சினைகளுள் ஒன்றாக மேற்கிளப்பியுள்ளது.

தலித் இயக்கத்தின் இன்றைய எழுச்சியையும் அதன் தன்மைகளையும் மதிப்பிடுவதற்கு 1980 இல் வெளியிடப்பட்ட மண்டல கமிஷனின் அறிக்கையில் வரும் சில குறிப்புக்கள் பெரிதும் உதவுகின்றன. மற்றைய பின்தங்கிய சமூகத்தினரின் பிரச்சினைகளில் வடக்கு-தெற்கினை ஒப்புநோக்க முனைந்த பொழுது (தொகுதி 1, அத்தியாயம் 8) தமிழ்நாட்டின் சிறப்பு அம்சம் ஒன்று பற்றி ஆராய்கிறது:

8,13 உண்மையான நடைமுறையில் ஒதுக்கீட்டின் நன்மைகள், பின்தங்கிய சமூகங்களிடையேயுள்ள அவர்களுள் முன்னேறியவர்களான சாதிகளுக்கே சென்றுள்ளன. தமிழ்நாடு பின்தங்கிய வகுப்பினர் ஆணைக்குழு இது பற்றிச் சிறப்புக் கவனம் எடுத்தது (1970).........

இதிலுள்ள பிரதான வினா இதுதான். பின் தங்கிய வகுப்பினரிடையே 88.7% வீதமுள்ள பலங்குறைந்தனவும், சிறியனவுமான பின்தங்கிய சாதிகள், ஒதுக்கீட்டின் நன்மைகள் கையளவு குறுகிய ஒரு குழுவினரிடையே போவதை ஏன் எதிர்க்கவில்லை? கர்நாடகத்தில் தேவராஜ் அர்ஸ் இந்த எதிர்ப்புணர்வைப் பயன்படுத்தி, இந்தச் சாதிகளிடையே தனக்கென ஓர் அரசியல் தளத்தை உருவாக்கிக் கொண்டார். ஆனால் தமிழ்நாட்டில், திராவிடக் கழகம் காரணமாக அத்தகைய நிலைமை ஏற்படவில்லை. தமிழ்ப் பண்பாட்டு மீட்பு தமிழ்நாட்டினை இறுகப் பற்றியிருக்கும் வரை, உண்மையான ஒரு பின்தங்கிய வகுப்பினர் இயக்கம் அங்கு தோன்றாது.

மற்றைய மாநிலங்களில் நடந்தேறியது போல, தமிழ் நாட்டில், ஹரிஜனங்களுக்கும் மற்றைய பின்தங்கிய வகுப்பினருக்குமிடையேயுள்ள மோதுகை, பிராமணர்-பிராமணரல்லாதார் பிளவை மறைத்துவிடாது. இங்கு ஹரிஜனங்கள் சுயமரியாதை இயக்கத்தை உடனடியாக ஏற்றுக்கொண்டுள்ளனர்.*

1980 இல் வெளியிடப் பெற்ற இக்கருத்து ஒரு பத்தாண்டுக் கால முடிவில் பொய்ப்பிக்கப்பட்டுவிட்டது.

எண்பதுகளில் படிப்படியாக முளைவிடத் தொடங்கிய தலித் இயக்கம் (ராஜசேகர் ஷெட்டி எண்பதுகளின் தொடக்கத்தில்--1981, 82--வெளிவந்த தனது நூல்களை 'தலித் வெளியீடுகள்' என்ற நிறுவனம் மூலமே கொண்டு வந்தார்) அம்பேத்கர் நூற்றாண்டு விழா ஆண்டு மதல் (1989) மிகப்பெரிதாகப் பரவி, தொண்ணூறுகளில், தமிழ்நாட்டில், பிராமண-பிராமணரல்லாதார் எதிர்ப்புணர்வு அளவுக்கு முக்கியத்துவமுடைய ஒரு பிரச்சினையாக மாறியுள்ளது. இப்பொழுது தென் தமிழகத்தில் நடந்துகொண்டிருக்கும் சாதிக் கலவரங்கள் (தேவேந்திரகுல வேளாளருக்கும் தேவர்களுக்குமிடையே நடப்பது) இந்த உண்மையை வலியுறுத்துகின்றன.

தமிழ்நாடு பின்தங்கிய வகுப்புக்கள் ஆணைக்குழு கூறியுள்ள முறையில், திராவிட இயக்கம் தமிழ்நாட்டில் தமிழ்ப் பண்பாட்டு மீட்புப் பற்றிக் கொண்ட நடவடிக்கைகள்,

------

* Report of the Backward Classes Commission (Mandal Commission) First Part (Vol I & II, Government of India, New Delhi, 1980, P.32.

....

பிராமணரல்லாத மக்களிடையே ஒரு பொதுமைப்பாட்டை ஏற்படுத்தினவா என்பது இப்பொழுது கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது.

திராவிட இயக்கம் தான் மேற்கொண்ட 'பிராமணரல்லாத சமூகங்களின் சனநாயகவாக்கம்' என்ற நோக்கின் தர்க்கத்தைத் தொடர்ந்து கடைப்பிடித்திருந்தால், அது ஒடுக்கப்பட்ட தமிழ்க் குழுமங்களிடத்துச் சென்றிருந்தல் வேண்டும். ஆனால், அந்த நடைமுறை பூரணப்படவில்லை என்பதை இன்றைய நிலையிலிருந்து மீளநோக்கும் பொழுது ஏற்றுக்கொள்ள வேண்டியுள்ளது. அந்த வரலாற்றுப் பணி நிறைவேற்றப்படாது கிடக்கின்றது.

திராவிட இயக்க வரலாற்றின் சமூகப் பின்புலத்தை நோக்கும்பொழுது, திராவிட இயக்கம் என்பது பிராமணரல்லாத சமூகங்களினது அவற்றின் அதிகாரப் படிநிலை வைப்பு முறையை (hierarchical order) மீறாது அமைந்த படிப்படியான அரசியல் சமூகச் செயற்பாடு வீச்சுகளுக்கு உதவி அவற்றை அவற்றின் மேல்நிலை அசைவியக்கத்துக்கு (upward social mobility) உதவியுள்ளது என்பது நன்கு புலனாகின்றது. இந்த மேல்நிலை அசைவியக்கத்துக்கான செயற்பாட்டு வீச்சு அதிகரித்தபொழுது, மேற்கிளம்பும் சாதியினருக்கு நேரடியாக மேலேயுள்ள சாதியினர் அதனை எதிர்ப்பது ஒரு வரலாற்றுண்மையாகும். எடுத்துக்காட்டாக நாடார்கள் மேனிலையாக்கம்; இலங்கையில் மாவிட்டபுரத்தில் நடந்த போராட்டம் (1968).

திராவிட இயக்கச் செல்வாக்கால் ஏற்பட்ட இந்த மேனிலையாக்கம் தமிழ்நாட்டின் இடைநிலைச் சாதிகளோடு நின்றுவிட்டது போலத் தெரிகிறது. பெரியார் பற்றிய மீள்வாசிப்பிற்கூட, பெரியார் தாழ்த்தப்பட்டவர்களை இயக்கமாக்குவதிலும் போராடச் செய்வதிலும் போதிய முனைப்புக் காட்டவில்லை என்றும் பெரியார் மீது வைக்கப்படும் விமர்சனங்களில் ஓரளவு நியாயமானது இதுவே எனத் தோன்றுகின்றது என்றும் குறைந்த பட்சம் 1954க்குப் பிறகாவது அவர் தாழ்த்தப்பட்டவர் எழுச்சியில் கவனத்தைக் குவித்திருக்கலாமே என்று தோன்றுவது இயல்பு என்றும் (ராஜன் குறை, பெரியாரியம், நிறப்பிரிகைக் கட்டுரைகள், கோவை, 1995, ப.25) கூறப்படுவதை மனங்கொள்வது அவசியமாகின்றது. தனது கட்டுரையில் இந்த மனப்பதிவுகள் முற்றிலும் ஏற்றுக்கொள்ளப்படக் கூடியவையல்ல என்று ராஜன் குறை வாதிடுவதை இங்குக் குறிப்பிடல் வேண்டும். ஆனால் ஒரு மேலோட்டமான மனப்பதிவில் இக்கருத்து ஆழமான இடம் பெறுகின்றது என்பதை மறுக்க முடியாது. இதே கட்டுரைத் தொகுதியில் வரும் கேசவன் கட்டுரையினையும் நோக்குக.

இவ்வாறு நோக்கும்பொழுது தலித் இயக்கம் என்பது, அனைத்திந்திய இயக்கமொன்றினது தமிழ்நாடு நிலைப்பட்ட விஸ்தரிப்பு என்பதனை ஒத்துக்கொள்ளவே வேண்டியுள்ளது. 'தலித்' என்ற சொற் பயன்பாட்டினையும் நோக்கல் வேண்டும். இது ஒரு மராட்டியச் சொல். 'தமிழர்' என்ற கருதுகோள் பற்றிய தலித் கண்ணோட்டங்கள் சில (அவர்களிற் சிலர் அதனை மறதலிக்கின்றனர்) இதனைக் காட்டி நிற்கின்றன. தலித் முன்னேற்றத்தினை ஒட்டுமொத்தமான தமிழ்த் தேசியத்தின் ஓரங்கமாக்கல் வேண்டுமென்ற அரசியல் நிலைப்பாடுகளின் முக்கியத்துவத்தையும் நாம் இங்கு உணர்ந்து கொள்ளல் வேண்டும்.

பார்ப்பனீயத்தை மறுதலித்துத் தோன்றிய திராவிட இயக்கம், திராவிடப் பண்பாடு அதன் கருத்து முன் வைப்புக்களில், 'ஆரிய' நாகரிகச் சாதனைகள் என்று கொள்ளப்படுவனவற்றுக்கு மாறாகத் திராவிட/தமிழ்ச் சாதனைகளை (இலக்கியம் முதலான) முன்வைப்பதுடன் மாத்திரம் நின்றுவிடாமல் அந்த வட்டத்துக்குக் கீழே சென்று, தமிழ் நாட்டின் ஒட்டு மொத்தமான சனநாயகமயவாக்கத்துக்கான கருத்துநிலைக் கூர்மையை வளர்த்துக்கொள்வது அவசியமாகிறது. சனநாயக மயப்பாட்டு வழி வரும் ஒருமைப்பாட்டைக் குறியீடு செய்யும் வகையில் அரசியல், சமூகச் சின்னங்கள் அமைவது அவசியம். இது சமூக சனமயவாக்கத்தின் தவிர்க்கப்பட முடியாத நியதியாகும்.

14

திராவிடக் கருத்துநிலையின் இன்றைய பொருத்தப்பாடு பற்றி நோக்கும் இம்முயற்சியில், முக்கிய இடம் பெறவேண்டியது, கடந்த சில வருடங்களாக நடைபெற்றுவரும் 'பெரியார் மீள்கண்டுபிடிப்பு'ச் செயற்பாடு ஆகும்.

ஆனைமுத்துத் தொடங்கிய மார்க்žய-பெரியாரியக் கட்சியின் தொழிற்பாடுகள், வட இந்தியாவில், குறிப்பாக மத்திய இந்தியாவிற் சாதி எதிர்ப்புக் கிளர்ச்சிகளின்பொழுது பெரியாரின் சேவை முக்கியத்துவம் கணிக்கப்பட்டவை போன்றவை எண்பதுகளிலே நடைபெற்றுக்கொண்டிருந்தவெனினும், 1990 களின் தொடக்கக் காலம் முதல், தமிழ்நாட்டின் இளம் புலமையாளர் மத்தியிலே, பெரியாரின் கொள்கைகளை மீள்கண்டுபிடிப்பதற்கும், அவற்றினைச் சமகாலத் தமிழ் நாட்டின் சமூக-அரசியற் போக்குக்களை விளக்குவதற்குப் பயன்படுத்துவதற்குமான ஒரு முயற்சி காணப்படுகின்றது. நிறப்பிரிகைக் குழுவினர் என்று இனங்காணப்படும் அ.மார்க்ஸ், ரவிக்குமார், பொ. வேல்சாமி (பெரியாரியம், நிறப் பிரிகை, கோவை, 1994) ஆகியோரைக் குறிப்பிடும் அதே வேளையில், பெரியார் பற்றி அண்மையில் ஒரு விரிவான நூல் எழுதியுள்ள எஸ்.வி.ராஜதுரை, வி.கீதா (பெரியார், சென்னை 1996) போன்றோரையும் குறிப்பிடல் வேண்டும். இவர்கள் மாத்திரமல்லாமல் கோவை ஞானி போன்றவர்களும் (தமிழகத்தில் பண்பாட்டு நெருக்கடிகள், கோவை, 1994) பெரியார் பற்றிய மீளாய்வினை வற்புறுத்தியுள்ளனர். தமிழ் நாட்டின் பொதுவுடைமைக் கட்சிகளுக்கு பெரியார் பற்றிய மீள்வாசிப்பு, மீள்கண்டுபிடிப்பு அவசியம் என்பதை ஒத்துக் கொள்கின்றன (ப. மாணிக்கம், ரா. நல்லகண்ணு ஆகியோருடன் நேரடி உரையாடல்).

பெரியாரியக் கண்டுபிடிப்பை முதன்மைப்படுத்துகின்ற அதே வேளையில், பெரியார் மீது அரசியற் பழி சுமத்தும் ஒரு சிந்தனைப் போக்கும் இல்லாமலில்லை என்பதைக் குணாவின் 'திராவிடத்தால் வீழ்ந்தோம்' (1995) என்கின்ற நூல் காட்டுகின்றது.

பெரியாரை ஒரு முக்கிய எதிர்க்கலாசாரச் சக்தியாக மீள் கண்டுபிடிப்புச் செய்யும் முயற்சி அரசியல் சமூக முக்கியத்துவமுடையதாகம்.
Reply
#3
இந்திய/தமிழ்நாட்டுச் சமுதாய அமைப்பை எவ்வாறு விளங்கிக்கொள்வது எனும் விவாதத்தில் பொதுவுடைமைவாதிகள் மேற்கொண்ட 'வர்க்கக் கருதுகோள்' போதாது என்றும், அந்தக் கருதுகோள் சாதிக்கும் வர்க்கத்துக்குமுள்ள உறவு/உறவின்மைகளைச் சரிவரப் புரிந்துகொள்ளவில்லை என்றும், இந்தியச் சமூக அமைப்பின் பிரதான அலகான சாதி (மத அங்கீகாரமும் மத வலிமையும் கொண்டது) எல்லாப் பொருளாதார உற்பத்தி முறைமைகளுக்கிடையேயும் தொழிற்படக்கூடியது என்றும் வாதிடும் ஒரு புலமைப் போக்கு இந்தியா முழுவதிலும் காணப்பட்டுவந்துள்ளது. சுதந்திரத்தின் பின் அரசியல் மாற்றத்தால், அடிநிலை மக்களின் மீதான ஒடுக்குமுறைகள் குறையவில்லை என்ற அறிக்கை, இப்பிரச்சினையை எவ்வாறு நோக்கல்வேண்டுமென்பது பற்றிய வினாக்களைக் கிளப்பிற்று. அந்த வேளையில் டாக்டர் அம்பேத்கர், பெரியார் ஈவெரா, ராம் மனோகர் லோகியா ஆகியோரின் செயற்பாடுகளும் சிந்தனைப் பின்புலங்களும் முக்கியத்துவப்படுத்தப்பட்டன. 1980 களில் வெளிவந்த ராஜசேகர் ஷெட்டியின் எழுத்துக்களிலே இதனைக் காணலாம்.

தமிழ் நாட்டில் இச்செல்நெறி வேறொரு வழிமுறை வழியே மேற்கிளம்பியது.

தமிழ்நாட்டின் காங்கிரஸ் இயக்கம் காந்தியத்தின் சமூகச் žர்திருத்தத்தை முன்கொண்டு செல்லவில்லை. இங்கு ஹரிஜன இயக்கம் பற்றிய ஒரு விழிப்புணர்ச்சி இருந்ததெனினும் அது ஒரு புரவலர் மனப்பாங்குடனேயே (Patronizing attitude) செய்யப்பட்டதெனலாம். காங்கிரசுக்குள்ளேயிருந்தோர் சிலர் பிராமணரல்லாதார் நலன்களை முன்வைக்க சென்னை மகாஜன சபையினைத் தோற்றுவிக்க வேண்டி வந்தது (திருவிக முதலியோர்). வைக்கம் போராட்டம் காங்கிரசின் இது பற்றிய பலவீனத்தை நன்கு காட்டிற்று. சுயமரியாதை இயக்கத்துக்கான நியாயப்பாடு காங்கிரசின் சமூகச் செயற்பாட்டு மௌனங்களிலே தங்கியிருந்தது. தமிழ் நாட்டில் பொதுவுடைமை இயக்கம், விவசாயக் கூலிகளின் போராட்டத்தில், குறிப்பாகத் தஞ்சையில் முக்கியப் பங்கெடுத்திருந்ததெனினும், சுயமரியாதை இயக்கத்தின் சமூக நியாயப்பாட்டைக் கோட்பாட்டு ரீதியில் மறுதலித்தது. குறிப்பாக, சுதந்திரத்தின் பின்னர் இடதுசாரி இயக்கம், விவசாயிகள், தொழிலாளிகள் மட்டத்தில் முனைப்புப் பெற்றிருந்ததெனினும், தமிழ்நாட்டில் சமூக ஒழுங்கமைப்பு யதார்த்தத்தை விளக்குவதிற் சிரமப்பட்டது. திராவிட இயக்கம் பற்றிய வரன்முறையான கருத்துநிலை மதிப்பீடுகள் 1970 களிலேயே (அது மாநில ஆட்சித் சக்தியாக மேற்கிளம்பிய முன்னரே) மேற்கொள்ளப்படுகிறது. (உதாரணம் வி.பி. சிந்தன், ராம், ராமச்சந்திரனின் கட்டுரை 1978). சாதி, வர்க்கம் பற்றிய விளக்கங்கள் எளிமைப்படுத்தப்பட்ட வாய்ப்பாடு நிலையிலிருந்து விடுபட்டு அவற்றின் சிக்கற்பாட்டு முழுமையோடு பார்க்கப்படுவதற்கான அரசியற் சூழல் எல்லா வேளைகளிலும் நிலவாததாலும், தமிழ்நாட்டுச் சமூக ஒழுங்கமைப்பின் தனித்துவங்கள் பற்றிய வரன்முறையான ஆய்வுகள் இல்லாததாலும், மார்க்žயம் செலுத்தக்கூடிய ஒளிப்பாய்ச்சல்கள் விரும்பிய அளவு இருக்கவில்லை. தமிழ்ச் சமூகத்தைப்பற்றிய வரன்முறையான மார்க்žயக் கண்ணோட்ட ஆய்வுகள் 1960 களிலேயே தொடங்குகின்றன (உ-ம். நா. வானமாமலையின் 'ஆராய்ச்சி'). இக்காலகட்டத்திலேதான் மார்க்žயத் தீவிரவாதப் போக்குத் தென்னிந்தியாவில், குறிப்பாக ஆந்திரா, தமிழ்நாட்டிற் பரவிற்று. இந்தப் போக்கிற் சென்ற இளந்தலைமுறையினர், தமிழ்நாட்டுச் சமூக நிதர்சனங்களின் உண்மை நிலையைக் கண்டு பெரியாரின் நடைமுறைகளை எதிர்க்கலாசார நடவடிக்கையாகவே கண்டனர்; காண்கின்றனர்.

இந்நிலையிலே சர்வதேச மட்டத்திற் பொதுவுடைமை இயக்கத்துக்கு ஏற்பட்ட சரிவு மிக முக்கியமான விடயமாகின்றது. 1917 முதல் சோவியத் ரஷ்யாவில் மேற்கொள்ளப்பட்டு வந்த ஆட்சி முறைமை எழுபது வருடங்களுக்குப் பின்னும் இனத்துவ (ethnic) உணர்வைக் குறைக்க முடியவில்லையென்பதும், வர்க்கம், வர்க்க உணர்வுகள் பற்றிய நடைமுறை அனுபவங்கள் சமூகப் பாரம்பரியங்களைக் கணக்கெடுக்க வேண்டுமென்பதும் மிகத்துல்லியமாக எடுத்துரைக்கப்பட்டன. பெறெஸ்ரோயிகா'வுடன் தோன்றிய ஏகநிலைக் கருத்துச் சிதைவு மார்க்žயம் இந்தியச் சூழலிற் பிரயோகிக்கப்படும் முறைமைகள் பற்றிய பெருவினாக்களை எழுப்பின.

இத்தகைய ஒரு கருத்துச்சூழலில், தமிழ்நாட்டு நிலைப்பட்ட மார்க்žயச் சிந்தனை, பெரியாரியத்தை மீள்நோக்கச் செய்யவேண்டிய தேவை ஏற்படுகிறது எனலாம்.

பெரியாரைப் பின்பற்றியவர்களிடையேயும் இம்மாற்றம் தெரியத்தொடங்குகின்றமையை அனுமானித்தல் வேண்டும். பெரியாரின் மறைவுக்கப் பின் அவரது உத்தியோகபூர்வக் கட்சி வலுவுள்ள அரசியலிலிருந்து ஒதுங்கித் தன்னை ஒரு 'அமுக்கக் குழு' (Pressure group) மட்டத்துக்குக் கொண்டுவர, பெரியார் கொள்கைகளின் அனைத்திந்தியப் பொருத்தப்பாட்டை (குறிப்பாக தலித் சிந்தனையில்) உணர்த்த பெரியார் வாரிசுகள் (ஆனைமுத்து குழுவினர்) பெரியாரை மார்க்žய அணுகுமுறைக்குள் கொண்டுவருகின்றன.

இந்த இரண்டு சக்திகளினதும் நகர்வுகள் பெரியாரியம் மீள்கண்டுபிடிப்புச் செய்யப்படுவதை ஒரு வரலாற்றுத் தேவையாக்கின.

பெரியாரின் மறைவின் பின்னரே இது பெரிதும் உணரப்படலாயிற்று (1973). பெரியார் பற்றிய இத்தகைய சிந்தனைகள் தமிழ்த் தேசியத்தினைத் தமது அரசியல் நிலைபாடாகக் கொள்கின்றன. இலங்கையில் நடைபெறும் ஆயுதந்தாங்கிய ஈழத்துத் தமிழர் விடுதலை இயக்கத்தின் ஊடாட்டம், இந்தச் சிந்தனை உருவாக்கத்திற் கணிசமான ஓர் இடத்தைப் பெற்றுள்ளது என்று கூறலாம்.

இன்று முன்னணியில் நிற்கும் புலமை முக்கியத்துவமுள்ள பல இளைஞர்கள் இந்தக் கண்ணோட்டத்திற் பிராமணியத்தின் கடுமையான விமர்சகர்களாக உள்ளனர் என்பது கவனத்திற்கொள்ளப்படவேண்டிய ஒரு சமூகவியல் உண்மையாகும். இவர்கள் பற்றி இவ்வாய்வின் தொடக்கத்திலும் குறிப்பிட்டுள்ளேன்.

இவர்களின் இந்த எழுத்துச் சிந்தனைப் போக்குகள், கடந்த சில வருடங்களாகக் காணப்படாத முறையில் தமிழ்நாட்டின் சிந்தனை வெளிப்பாடுகளில் இருதுருவத் தன்மையைக் காட்டுகின்றன.

இத்தகைய ஒரு புலமை நிலை தோன்றுவதற்கான இன்னுமோர் அரசியற் பின்புலத்தையும் அறிந்துகொள்வது அவசியமாகும்.

முன்னர் பொதுவுடைமைக் கட்சிகளோடு தொடர்புகொண்டிருந்த, அவற்றிலிருந்து பிரிந்து சென்றவர்களே பெரியாரின் மீள்கண்டுபிடிப்பில் முன்னுக்கு நிற்கின்றனர்.

ஆனால், இந்த மீள்கண்டுபிடிப்பில் ஒரு முக்கிய அமிசம் உள்ளது. இந்தப் பெரியாரிய மீட்பு, செயற்பாடு சார்ந்த ஓர் அரசியல் நடைமுறையாக மாறாது, பண்பாட்டுத் துறை நடவடிக்கையாகவே உள்ளது என்பது முக்கியமான ஒரு விடயமாகும்.

பெரியார் பற்றிய இந்த மீள்கண்டுபிடிப்பு, சமகாலச் சர்வதேசச் சிந்தனையில் முக்கிய இடம் பெற்றிருக்கும் பெண் நிலைவாதத்தைத் தமிழ்ச் சமூகநிலைப்படுத்திக் கொள்வதற்குப் பெரிதும் உதவுகின்றது. குடும்பம், கற்பு பற்றிய பெரியாரின் சிந்தனைகள் இன்று சர்வதேசியப் பெண்நிலை வாதத்திலே விதந்து போற்றப்படுபவையாகவுள்ளன (நட்டாலி பிக்கெறிங்).

15

இன்றைய அனைத்திந்திய நிலைமையை எடுத்து நோக்கும்பொழுது, இந்தியாவின் பல்வேறு பாகங்களிலும், அவ்வப் பிரதேசங்களின் சமூக, பொருளாதார, அரசியற் பிரச்சினைகளை மையப்புள்ளிகளாகக் கொண்டே, பிரதேசக் கட்சிகள் தோன்றியுள்ளமையை அவதானிக்கலாம். அகாலி தள் (பஞ்சாப்), கண தந்திர பரிஷத் (அசாம்) போன்ற முற்றிலும் மாநில மையம் கொண்டுள்ள கட்சிகள்-தோன்றவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டிருப்பதை நோக்கும்பொழுது, தமிழ் நாட்டின் சமூக-பொருளாதார முரண்பாடுகளையும் அரசியல், பண்பாட்டுப் புலப்பதிவுகளையும் கொண்ட திராவிட இயக்கம் நிலவுவது இயல்பான ஒன்றேயாகும்.

முன்னர் கண்டபடி, இந்த இயக்கமும், முதலில் தனது தனித்துவங்களையும் ஒதுக்கற்பாடுகளையும் வற்புறுத்தி நின்ற தெனினும், காலப்போக்கிலே அனைத்திந்தியத் தேசிய இன உணர்வுடைய ஓர் இயக்கமாக மாற முனைந்துள்ளது என்பதை அவதானிக்கத் தவறக்கூடாது.

இந்தப் பிரதேசத் தள அரசியல் செயற்பாடுகள் அனைத்திந்தியக் கட்சிகளுக்கு மிகச் சுவாரசியமான, இக்கட்டான நிலையை ஏற்படுத்தியுள்ளன. காவிரி நீர்ப் பிரச்சினையில், காங்கிரஸ், பொதுபுடைமைக் கட்சிகள் உள்ளிட்ட கர்நாடகப் பிரதேசக் கிளைகள் ஒரு நிலைப்பாட்டையும் (தண்­ர் ஒரு குறிப்பிட்ட அளவுக்குமேல் வழங்கப்படக் கூடாது என்ற நிலைப்பாட்டையும்) தமிழ்நாட்டுக் கிளைகள் அதற்கு எதிரான நிலைப்பாட்டையும் மேற்கொள்ளவேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளமையையும் உதாரணமாகக் கூறலாம்.

இவ்வாறாகத் தமிழ் நாட்டில் பிரதேசத் தனித்துவத்தை எடுத்துக்காட்டுவதற்கும் தமிழ் நாட்டின் பிரதேசப் பிரச்சினைகளை எடுத்துணர்த்துவதற்கும் திராவிடக் கருத்துநிலை எந்த அளவுக்குப் பொருத்தமானது என்று, அதன் வரலாற்று நடைமுறைகளினடிப்படையில் வைத்து நோக்கவேண்டிய அவசியமொன்று உள்ளது.

இக் கண்ணோட்டத்தில் நோக்கும்பொழுதுதான் 'திராவிட'/தமிழ் என்ற எண்ணக் கருக்களின் பொருளமைதி (The semantics of the concept) முக்கியமாகின்றது. இது பற்றி ஏற்கனவே பார்த்துள்ளோம்.

16

திராவிட இயக்கத்தினது, குறிப்பாக அதன் கருத்து நிலையினது இன்றைய அவசியத்தை வற்புறுத்தி, அதற்கான தேவை பற்றிச் சிந்திக்கும்பொழுது, அனைத்திந்திய மட்டத்திற் சில பிரதேசங்களிற் காணப்படும் இந்து அடிப்படைவாதமான 'இந்துத்தவத்'தினது தன்மைகள் பற்றி உணர்ந்து கொள்வது அவசியமாகும். இந்துத்துவம் போன்ற ஒரு மத அடிப்படைவாதக் கொள்கையை எதிர்ப்பதில் பகுத்தறிவுவாதத்தைத் தளமாகக் கொண்ட திராவிடக் கோட்பாட்டுக்கு ஓர் இடமுண்டு என்பதை மறுத்தல் முடியாது.

அனைத்திந்திய மட்டத்திற் காணப்படும் இந்துத்துவ வெளிப்பாட்டின் தமிழ் நாட்டு நிலை நின்ற பாதிப்பும் முக்கியமானதாகும். இந்துத்துவக் கொள்கையை முதனிலைப்படுத்தும் பாரதீய ஜனதாக் கட்சிக்குத் தமிழ்நாட்டிற் 'பிராமணர்களின் ஆதரவு உண்மை' வலியுறுத்தப்படுகின்றது. இது தமிழ் நாட்டில் ஏற்கனவே நிலவும் பிராமண-பிராமணரல்லாதார் பிளவை மேலும் அகலப்படுத்துகிறது.

இந்த அரசியலுண்மை எம்மை இன்னொரு விடயம் பற்றிய ஆய்வுக்கு இட்டுச் சென்றுவிடுகின்றது. அதாவது அனைத்திந்திய மட்டத்தில், தமிழ்நாடு தவிர்த்த மற்றைய மாநிலங்களில் பிராமணிய எதிர்ப்பு இயக்கங்கள் உள்ளனவா என்பதையும் அவை எவ்வாறு இயங்குகின்றன என்பதையும் அறிதல் வேண்டும். இவ்வகையில் மகாராஷ்டிரத்தின் உதாரணம் தமிழ் நாட்டுக்குப் பெரிதும் உதவக்கூடிய ஒன்றாகும். ஜோதிராவ் பூலேயும் டாக்டர் அம்பேத்கரும் இந்த மாநிலத்திலிருந்து தோன்றியவர்களே. தலித் இயக்கம், மகாராஷ்டிரத்திலிருந்து மற்றைய பிரதேசங்களுக்குச் சென்றது.*

17

இந்தியாவில் இப்பொழுது ஏற்பட்டுக்கொண்டிருக்கும் 'திறந்தn பொருளாதாரக் கொள்கை', பிரதேசத் தனித்துவங்களைப் பாதிக்கும் என்பது பற்றிய ஒரு தெளிவும் இருத்தல் அவசியமாகும். ஜஸ்டிஸ் கட்சியின் தோற்றம், திராவிட முன்னேற்றக் கழகத்தின் முனைப்பு ஆகியவற்றுக்குப் பின்னால் தமிழகத்தின் நிலையூன்றிய பொருளாதார நலன்களான நிலவுடைமையாளர், தரகு முதலாளித்துவத்தினர் போன்றோர் சம்பந்தப்பட்டிருந்தனர் என்பது இன்று பொதுவாகப் பலராலும் ஏற்றுக்கொள்ளப்படுகின்ற ஒரு பொருளியல் வரலாற்றுண்மையாகும். திராவிட முன்னேற்றக் கழகம் அதன் ஆரம்ப நிலையில் சோஷலிஸக் கொள்கைகளை வற்புறுத்தியதெனினும், அது ஆட்சிக்கு வந்ததன் பின்னர் பெரும் விவசாயிகளும் செல்வந்தக் குடியானவர்களும் (Big farmers and rich peasants) ஆதரித்தனர் என்பது தெரிய வருகிறது.

----

* பிற்குறிப்புப் பார்க்கவும்

...

இன்று காணப்படும் அனைத்திந்திய முதலாளித்துவம், தென்னாசியச் சந்தையை நோக்கி நகர்கிறது. இத்தகைய ஒரு சூழ்நிலையில் 'திராவிட' எனும் நிலைபாடு தமிழ்நாட்டினைத் தளமாகக் கொண்ட/ கொள்ள விரும்பும் முதலீடுகளுக்கு உதவும் ஒரு கருத்துநிலையா என்பதையும் மனங்கொள்ளல் வேண்டும்.

18

இவ்வாறு நோக்கும்பொழுதுதான் இனத்துவப் (ethnic) பிரக்ஞையும் அதன் பண்பாட்டுத் தளமும் முக்கியமாவதை அவதானிக்கலாம்.

இப்பிரச்சினை இன்று எம்மை வேறொரு வினாவுக்கு இட்டுச் செல்கின்றது. அதாவது 'திராவிட' என்ற அடையின் இன்றைய அர்த்தப்பாடு யாது என்பதாகும்.

நாம் ஏற்கனவே நோக்கியபடி, திராவிட என்ற அடை இன்று தெலுங்கு, கன்னடர், தமிழர், மலையாளிகள் ஆகியோருக்கான பொதுப் பெயர் என்ற நிலைமை போய், தமிழின் புராதன, 'வடமொழிப் பண்பாட்டின் எதிர் நிலை' அடையாளம் சுட்டும் ஒரு சொற்குறியீடாக, தமிழ்த்தேசியத்தின் ஒருவெளிப்பாடாக அமைகின்ற ஒரு நிலைமையைக் காண்கின்றோம்.

இந்த அடையாளத்துக்கு ஒரு பொருளாதாரப் பின்னணி உண்டு என்பதையும், அது தலித்தியத்தினாற் கேள்விக்குள்ளாக்கப்படுவதையும் ஏற்கனவே குறித்துள்ளோம்.

19

இக்கட்டத்தில் ஒரு முக்கியமான புலமைத்துவ வினாவை முன்வைப்பது ஒரு கடமையென்றே கருதுகிறேன்.

திராவிடக் கருத்துநிலை (ideology) என்பது ஒரு கருத்து நிலையா அல்லது குறிப்பிட்ட ஒரு வரலாற்றுக் கட்டத்தில் ஏற்பட்ட சமூக/ பொருளாதார/ பண்பாட்டு/ அரசியல் மாற்றங்கள் யாவற்றையும் சுட்டிநிற்கின்ற ஒரு கருத்துநிலைத் தொகுதியா (Cluster of ideologies)?

இது பற்றிய ஓர் உன்னிப்பான விவாதம் அவசியம் என்று கருதுகிறேன். திராவிடக் கருத்துநிலையின் உருவாக்கக்கூறுகளைப் பிரித்து நோக்கும்பொழுது, அவற்றுட் சில தமது வரலாற்றுப் பயன்பாட்டைப் பூர்த்திசெய்துவிட்டனவாகவும் சில அவற்றினுள்ளே கிடந்த அகமுரண்பாடுகளை வெளிக்கொணர்ந்துள்ளனவாகவும், ஆனால் சில இன்னும் வரலாற்றுத் தேவையுடையனவாகவும் இருப்பதைக் காண்கிறோம்.

இதன் காரணமாகவே, இந்தக் கருத்துநிலை பற்றிய சிந்திப்புக்களில் ஒரு தேக்கமிருப்பதை உணரக்கூடியதாகவிருக்கிறது (காலமாகிவிட்டது என்று கருதும்பொழுது எங்கோ ஓர் உயிர்த்துடிப்பு இருப்பது போலத் தெரிகிறது).

இந்தத் தேக்கநிலையிலிருந்து வெளிவருவதற்கு நாம் சில முக்கிய வினாக்களுக்கு விடை இறுக்க வேண்டியவர்களாகிறோம்.

(i) இது ஓர் ஆய்வு முறைமைப் பிரச்சினை--நாம் இதன் பரிமாணங்கள் யாவற்றையும் விளங்கிக் கொள்ள முடியாத அளவுக்கு இதன் ஓர் உள்ளக அம்சமாக இருக்கிறோமா?

(ii) இன்றைய எமது உண்மையான இரசியல் சமூகப் பிரச்சினைகள் யாவை? அவை பற்றிய தெளிவு நமக்கு இருக்கிறதா?

20

திராவிட இயக்கத்தின் வரலாறும் திராவிடக் கருத்து நிலையின் நிலைப்பெயர்வுகளும், இவற்றின் தொடர்ச்சியான வரலாற்றுப் பயன்பாட்டைக் கேள்விக்குள்ளாக்கும் ஒரு நிலையில் (ஏற்கனவே குறிப்பிடப்பெற்ற), அண்மைக் காலத்தில், மிகவும் முனைப்புப் பெற்றுள்ள பிராமணரல்லாத--தமிழ் நிலைப்பட்ட சமூக அடையாளத்துக்கான புலமை எழுச்சியின் முக்கியத்துவத்தினைக் கருத்திற் கொள்ளவேண்டியுள்ளது. பிராமணரல்லாத--தமிழ் அடையாளத்தை வற்புறுத்தும் இந்தப் புலமைப் போக்கு, முன்னர் எப்பொழுதுமில்லா வகையில் ஆங்கிலத்திலும் தமிழிலும் தன்னை நியாயப்படுத்தி எழுதிக்கொள்கிறது. இந்த எழுச்சியின் சமூக உட்கிடக்கை நன்கு உணரப்படுவது அவசியமாகும். தமிழ்நாட்டின் பண்பாட்டு அடையாளக் குறியீடுகளூடே புதைந்து கிடக்கும் சமூக யதார்த்தத்தைப் புரிந்துகொள்வது அவசியம். அத்துடன் இந்தப் புலமைப் போக்கின் வர்க்கப் பின்புலத்தையும் அவதானித்துக் கொள்ளத் தவறக்கூடாது.

இந்தப் புலமை எழுச்சியையும் இதற்கான எதிர்வினைகளையும் (இவை இலக்கியத்திற் வெளிப்படுவதை நன்கு அவதானிக்கின்றோம்; பார்க்க: ஜெயமோகன் எழுத்துக்கள் சில) நோக்கும்பொழுது, பண்பாட்டின் அரசியல் (politics of culture) முக்கியமாகின்றது.

பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்கூற்றிற் கருங்கூட்டி, இருபதாம் நூற்றாண்டின் தமிழக வரலாற்றிற் பிரதான இடத்தை வகித்த இக்கருத்துநிலை அடுத்து வரும் நூற்றாண்டிற் பெறப்போகும் இடம் யாது?

இதற்கான விடையைக் காணுவதே இந்தக் கருத்தரங்கின் நோக்கு.

இதற்குப் பதில் காண முனையும்பொழுது, இன்றைய உலகின் செல் நெறி ஒரு சுவாரசியமான, இரு துருவப் பாட்டைக் கொண்டது எனும் உண்மையைப் பதிவு செய்தல் அவசியம். அதாவது, இந்த உலகம் ஒரே நேரத்தில், ஒரு பூகோளக் கிராமமாகவும் (global village), அதே நேரத்தில் இனத்துவ, பண்பாட்டுத் தனித்துவங்களைப் பேணத் துடிப்பதாகவும் இயங்குகிறது. தொழில் நுட்ப வளர்ச்சியும் தொடர்பியற் பரம்பல்களும் முதலாவதனை எடுத்துரைக்க, இலங்கை முதல் பொஸ்னியா, பர்மா, பிலிப்பைன்ஸ் வரையுள்ள நாடுகளில் இரண்டாவதற்கான உதாரணத்தைக் காண்கின்றோம்.

இந்த இரண்டு நிலைகளையும் எவ்வாறு இணைப்பது என்பதுதான் இருபத்தோராம் நூற்றாண்டின் சவாலாக இருக்கப்போகிறது.

பிற்குறிப்பு

1997 மேயில் நிலவிய நிலைமைக்கும், இக்கட்டுரை அச்சுக்குப்போகும் 1999 செப்டெம்பர்-ஒக்டோபருக்குமிடையிலும் திராவிடக் கட்சிகளின் அரசியலில் மிகப்பெரிய மாற்றம் ஒன்று நிகழ்ந்துள்ளது.

அனைத்திந்திய மட்டத்தில் தேர்தல் அரசியலில் ஈடுபடும் பொழுது, தமிழக நிலையில், இது நாள் வரை திராவிடக் கருத்துநிலைக்கு முரணானது என்று கருதப்படுகிற கொள்கைகள் உடைய கட்சிகளோடு இணைந்து போட்டியிடவேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.

இந்துத்துவக் கொள்கையின் அரசியற் சின்னமென எடுத்துக் கூறப்படும் பாரதீய ஜனதாக் கட்சியுடன் மேற்கொண்ட உறவே இங்கு பேசப்படுகின்றது.

1998 தேர்தலில் அஇஅதிமுக, பாஜகவுடன் சேர்ந்தது, அவ்வேளை திமுக தவிர்த்த தமிழ்த் தேசியக் கட்சிகளான மதிமுக, பாமக ஆகிய இரண்டும் அஇஅதிமுகவுடனிருந்தன. அது மாத்திரமல்லாமல், உத்தியோகபூர்வமாகப் பெரியாரின் வாரிசு என்று கருதப்படும் திராவிடர் கழகமும் அதற்கு ஆதரவளித்தது. அஇஅதிமுக மத்திய அரசிலும் இடம் பெற்றது.

1999 இல் அஇஅதிமுக அவ்வரசுக்கான ஆதரவை மீள்வாங்கியபொழுது, மைய அரச வீழ்வது தவிர்க்கமுடியாததாயிற்று.

அப்பொழுதும் அதனையொட்டி வந்த தேர்தலின்பொழுதும் நிலைமை மாறி, அஇஅதிமுக வீழ்த்திய கட்சிக்கு ஆதரவு கொடுப்பதென திமுக தீர்மானித்தது.

இதற்கான முழுக் காரணமும், அஇஅதிமுகவின் அரசியலுக்கு எதிர்நிலையான ஒரு நிலைப்பாட்டை மேற்கொண்டுள்ளமையே.

தமிழ்த் தேசியத்தோடு தொடர்புடையனவான பாமக, மதிமுகவும் திமுகவுடனேயே உள்ளன. திக தொடர்ந்து அஇஅதிமுகவுடன் உள்ளது.

இவ்வேளை அரசியல் எதிர்பார்ப்புக்கள் பற்றி ஆராய்வதற்குரிய ஒன்று அல்ல. ஆயினும் ஒன்று நிச்சயம். திராவிடக் கட்சிகளின் பிளவு வரலாற்றில் இது ஒரு புதிய கட்டம் என்பது புலனாகின்றது. ஒரு குழுமத்தின் எதிர்காலம் மற்றையதன் தோல்வியிலேயே தங்கியுள்ளது என்ற ஒரு நிலைப்பாடு திமுக, அஇஅதிமுக ஆகிய இரு பக்கங்களிலும் காணப்படுகிறது.

இதனால் ஏற்பட்டுள்ள கட்சிகளிடையே இன்றுள்ள மோதுகை, அடித்தளத்தில், இவ்வியக்கத்தினுள் தவிர்க்கமுடியாதபடி வந்து சேர்ந்த சனவிருப்புவாதப் போக்குக்கும் (Populist) இந்திய-தமிழ்நாட்டுப் பின்புலத்தில் தவிர்க்க முடியாதபடி ஏற்படும் சமூக-அரசியல் நிலைமைகளின் (பின் சுதந்திர காலம்) போக்குகளுக்கும் ஏற்பட்டுள்ள மோதுகை என்றம் கூறலாம்.

அரை நூற்றாண்டு காலச் சுதந்திர ஆட்சியின் பின் அனைத்திந்திய அரசியல் நிலையிற் பல முக்கியமான மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன:

1 பிரதேச நிலைபாடுகளின் வளர்முக முக்கியத்துவம். அனைத்திந்திய நோக்கு இறுக்கத்துக்கு முக்கியம் கொடுக்காத அளவுக்கு, பிரதேசப் பிரச்சினைகள் மேலெழும்பியுள்ளன.

அனைத்திந்திய ஒற்றுமையும் பிரதேசத் தனித்துவமும் எவ்வாறு இணைக்கப் பெறலாம் என்பதே இப்பொழுது நடந்து வரும் அரசியலின் சாரமாகும்.

2 பிரதேச நிலைகளின் சமூக அதிகார யதார்த்தத்தைப் பிரதிபலிக்கின்ற வகையில், இந்தியச் சமூக ஒழுங்கமைப்பின் பிரதான அமிசமான 'சாதி' மேலோங்கியுள்ளது.

இது இந்தியாவின் பின் காலணித்துவப் போக்குகளில் (Post-colonial) முக்கியமானதாகும்.

வரலாற்று ரீதியாக நோக்கும்பொழுது,இந்தியச் சமூகத்தின் அடிப்படை முரண்பாடுகளில் இது முக்கியமானது. ஆட்சி சனநாயகமயப்டப்பட இது தவிர்க்க முடியாத ஒன்றாகின்றது. பொருளாதாரச் சமவீனம், தொழிநுட்ப வளர்ச்சியின்மை, பாரம்பரிய உற்பத்தி முறைமை அடிநிலையில் ஆட்டம்காணாத் தன்மை ஆகியனவற்றுக்கும் இதற்கும் தொடர்புண்டு.

3 அனைத்திந்திய நிலையில் (மத்தியில்), பொருளாதார மாற்றுப் போக்குக்களுக்கு இடமெதுவும் கொடுக்காத உலகப் பொருளாதார நிலைமை-இதனால் அனைத்திந்திய வளர்ச்சிபற்றிக் கட்சிகளிடையே வேறுபாடின்மை தவிர்க்க முடியாததாகின்றது.

இத்தகைய ஒரு சூழலில் திராவிடக் கட்சிகள் மாநிலக் கட்சிகளாகவே தொழிற்படும் ஒரு நிலைமைக்குத் தள்ளப்படுகின்றன.

ஆனால் கருத்துநிலை நின்று நோக்கும்பொழுது, இதுவல்ல முக்கியம். முக்கியமானது யாதெனின்--அனைத்திந்தியச் சமூக அமைப்பில் பொதுப்படையாகக் காணப்படும் வருண/சாதி அமைப்பிலிருந்து விடுபடுவதற்கான ஒரு வன்மையான மாதிரியமாக (Model) திராவிடக் கருத்துநிலை இருக்கமுடியாது போயுள்ளமைதான்.

இதனைக் கூறும்பொழுது பெரியாரின் சிந்தனைப்போக்கு அப்படியான தளைநீக்கப் போராட்டத்துக்கான (liberation struggle) பல மைய அமிசங்களை உள்ளடக்கியுள்ளதாகும்.

பெரியாரியத்தின் அந்த அமிசங்கள் படிப்படியாக வெளிக்கொணரப்படும்பொழுது, அரசியற் செயற்பாட்டுநிலையில், கட்சிகள் மட்டத்தில், அக்கருத்துநிலை இறுகப் பேணப்பட முடியாதுள்ளமை (இதுவும் வரலாற்று நிர்ப்பந்தமே) உண்மையான ஓர் அவலமாகும்.

பெரியாரியத்தினைத் திராவிடக் கட்சிகளின் அரசியலிலிருந்து பிரித்து, அதனைத் தனியொரு சமூக விடுதலைக் கோட்பாடாக நோக்கும் ஒரு செல்நெறி இப்பொழுது காணப்படுகிறது.

மார்க்žயச் சிந்தனை மரபில் வந்தோர் இந்தப் புலமை முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர். இத்துறையில் எஸ்.வி. இராசதுரை, வி.கீதாவின் ஆய்வுகள் முக்கியப் பங்களிப்புச் செய்துள்ளன என்று கூறலாம். இவ் ஆய்வில் 'நிறப்பிரிகை'க் குழுவினரான அ.மார்க்சும் அவரது புலமைக் குழுவினரும் ஏற்படுத்திய தாக்கம் மிகக் கணிசமானதாகும். பெரியாரியத்தைத் தமிழ் நாட்டுக்கு வெளியே இயைபுள்ள தலித் விடுதலைக் கோட்பாடாக்க முதலில் முயன்றவர் திரு ஆனைமுத்து அவர்கள்.

பெரியாருடைய சுயமரியாதைக் கோட்பாடு, சாதி விடுதலைக்கான பொருத்தமான வழி என்று வாதிடப்பட்டுள்ளது.

இன்று முக்கியப்பட்டு நிற்கும் பெண்நிலைவாதக் கோட்பாடுகளின் அடிச்சரமான ஆணாதிக்க விடுவிப்பில், பெரியாரின் கொள்கைகள் வகிக்கும் முக்கிய இடம் பற்றி அத்துறை விமர்சகர்கள் பெரிதும் சிலாகித்துக் கூறியுள்ளனர்.

ஆனால் இவற்றை நிறுவனமயப்படுத்தி வழிநடத்தும் ஒரு புலமைச் செயற்பாட்டு நிலையம் அவசியமாகின்றது.

தமிழ்நாட்டின் இன்றைய அரசியற் போக்குக்கள் அத்தகையதோர் ஏற்பாட்டினைச் சாத்தியப்படுத்துவனவாகவில்லை.

இந்நிலையில் அம்பேத்கார் கூறும் மாதிரியம்(model) முக்கியப்படுவது இயல்பே.

அம்பேத்கரியம், தலித் மக்களின் தளை இறுக்கத்துக்கான காரணிகளாக முதலாளித்துவத்தையும் பிராமணியத்தையும் கொள்கின்றது. எனவே, அந்தக் கண்ணோட்டத்தில் தலித் விடுதலை என்பது முதலாளித்துவத்துக்கும் பிராமணியத்துக்கும் எதிரான போராட்டமாக அமையவேண்டுமென்பதாகும்.

இந்த அடிப்படை முரண்பாட்டிலிருந்து விடுபடுவதற்கு மார்க்žயமும் அதன் வர்க்கப் போராட்டத் தளத்துடன், இன்னொரு மாதிரியாக (Model) உள்ளது. சாதி/ வர்க்கத்தைப் பிரிநிலைப்படுத்துவதிலும் இணைப்பதிலும் இந்திய மார்க்žயச் சிந்தனை மேலும் செயற்பட வேண்டிய தேவையுள்ளது.

மார்க்žயம் இப்பிரச்சினையை எவ்வாறு எதிர்கொள்கின்றது என்பது ஒரு முக்கிய வினாவாகும். 'வர்க்கம்' என்னும் கோட்பாட்டை வைத்துக் கொண்டு பார்க்கும் பொழுது, சாதியின் தோற்றத்துக்கும் தொடர்ச்சிக்குமான வரலாற்று, பண்பாட்டுக் காரணிகள் முக்கியமாகின்றன.

இது பற்றிய மார்க்žயச் சிந்தனை ஒருமைப்பாடு இல்லையென்பதை ஏற்றுக்கொள்ளல் வேண்டும்.

அடித்தளம்/மேற்கட்டுமானம் போன்ற எளிமையான வாய்பாடுகள் கொண்டு இதனை விளக்கிவிட முடியாது. இந்திய வளர்ச்சிகளின் சிறப்பமிசங்களை இனங்கண்டு கொள்ளலும், அவை எவ்வாறு நடைமுறையில் இயங்குகின்றன என்பது பற்றியறிதலும் மிக முக்கியமானவையாகும்.

நமது சமூகத்தின் அடிப்படை முரண்பாடுகளை விளங்கிக் கொள்ள, காலனித்துவ காலக் கருதுகோள்களைத் தடயமாகக் கொண்டமையின் வரலாற்று இயைபு பற்றி மிக ஆழமாகச் சிந்திக்க வேண்டிய காலம் விரைவில் வரும்.

'இந்தியச் சமூகம்' எவ்வாறு இயங்குகின்றது என்பது பற்றிய தெளிவு அவசியம்.

இதற்கான முதற்பணி, இந்தியச் சமூகம் பற்றிய விடயி நோக்கான (Objective) ஒரு விவரிப்பு அவசியமாகும். அந்த விவரிப்பு, இச்சமூகத்தின்/ சமூகங்களின் சகல அமிசங்களையும் நடவடிக்கைகளையும் உள்ளடக்கல் வேண்டும்.

அத்தகைய ஒரு விவரிப்பை முழு இந்தியாவும், இந்தியாவின் பிரதான பிரதேசங்களும் எதிர்நோக்கி நிற்கின்றன.

இக்கட்டுரையாக்கத்துக்கு உதவிய

நூல்கள், கட்டுரைகள்

கேசவன், கோ.,திராவிட இயக்கத்தில் பிளவுகள், அலைகள் வெளியீட்டகம், சென்னை, 1994.

சிவத்தம்பி, கா., தனித்தமிழியக்கத்தின் அரசியற் பின்னணி, சென்னை புக்ஸ், சென்னை, 1979.

---- Understanding the Dravidian Movement. NCBH. Chennai. 1995.

மார்க்ஸ், அ. ரவிக்குமார், வேலுசாமி, பொ. (பதிப்பாசிரியர்கள்), பெரியாரியம்--நிறப்பிரிகைக் கட்டுரைகள், விடியல் பதிப்பகம், கோவை, 1995.

Eugene F. Irshick. Politics and Social Conflict in South India, Berkeley, 1969.

Gail Omveldt, The Dravidian Movement I & II, The Hingu. 21-22 June 1999.

Geetha, V. and Rajadurai, S.V., Dalits and non-Brahmin Consciousness in Tamilnadu, Economic and POlitical Weekly, 25 Sept 1993.

--- பெரியார்--சுயமரியாதை சமதர்மம், விடியல் பதிப்பகம், கோவை, 1996.

Natalia Pikering., Recasting the Indian Nation-Dravidian Nationalism Replies to the Women's Question, Thatched Patio, Colombo, 1993.

Pandiyan, M.S.S., Notes on the Transformation of Dravidian Ideology-Tamilnadu 1900-1940, Madras Institute of Development Studies, 1994.

Rajashekar Shetty, V.I., How Marx Failed in India, Dalit Publication, Bangalore, 1981.

---- Class and Caste Struggle, Dalit Publication, Bangalore.

Ram, N., Dravidian Movement in its Pre-Independent Phases, Economic and Political Weekly, Annual Number 1979.

Ram, N., Chinthan, V.P. and Ramachandran, V.K., Dravidian Movement--A Historical Perspective, paper presented to V All India Conference of Social Scientists, Calcutta, 1978.

Sundaralingam. R., Politics and Nationalist Awakening in South India (1852-91), Delhi, 1980.

* * * முற்றும் * * *
Reply
#4
நன்றி நூலகம்,
http://noolaham.net/library/books_aharam.htm
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)