<b>யுத்த நிறுத்த ஒப்பந்தத்தைச் செயற்படுத்தப் போவதில்லை:</b> ஜெனீவாவில் சிறிலங்கா அரசாங்கம் மறைமுக அறிவிப்பு!
[புதன்கிழமை, 22 பெப்ரவரி 2006, 19:21 ஈழம்] [ச.விமலராஜா]
யுத்த நிறுத்த ஒப்பந்தத்தின் எதுவித சரத்துகளையும் செயற்படுத்தப் போவதில்லை என்பதை ஜெனீவாவில் மறைமுகமாக சிறிலங்கா அரசாங்கம் அறிவித்துள்ளது.
யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை வலுப்படுத்துவதற்கான பேச்சுக்களுக்குச் செல்லுகிறோம் என்று அறிவித்துவிட்டு ஜெனீவாவுக்கு சிறிலங்கா அரசாங்கக் குழு சென்றது. சர்வதேச சமூகமும் யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை வலுப்படுத்தும் பேச்சுக்கள் என்று வர்ணித்தன.
இந்தப் பேச்சுக்களின் தொடக்கத்தில் உரையாற்றிய தமிழீழ விடுதலைப் புலிகளின் பேச்சுக் குழுவின் தலைவர் அன்ரன் பாலசிங்கமும் யுத்த நிறுத்த ஒப்பந்த சரத்துகளை சுட்டிக்காட்டி, எவை எவை நிறைவேற்றப்பட வேண்டும் என்கிற மக்களின் பிரச்சனைகளைத் தவிர்த்து வேறு எதுவித அரசியல் விமர்சனங்களையும் முன்வைக்காமல் முற்று முழுதாக யுத்த நிறுத்த ஒப்பந்தத்தின் செயற்பாட்டை தனது உரை முழுமைக்கும் வலியுறுத்தினார்.
ஆனால் சிறிலங்கா அரசாங்கத்தின் தரப்பில் அதன் குழுத் தலைவர் நிமல் சிறிபால டி சில்வா யுத்த நிறுத்த ஒப்பந்தம் என்ற சொற்றொடரைக் கூட ஒரு சில இடங்களில்தான் பயன்படுத்தி உள்ளார்.
அந்த குறிப்பிடுவதும் இடங்களில் கூட ஒப்பந்தத்தின் சரத்துகளைக் கூட அல்ல் இந்த ஒப்பந்தத்தை நிராகரிக்கும் கருத்துகளைத்தான்.
அறிமுகம் என்ற தலைப்பிட்டு நிமல் சிறிபால டி சில்வா ஆற்றிய உரையின் 4 ஆம் பந்தியில் யுத்த நிறுத்த ஒப்பந்தம் பற்றி நிமல சிறிபால டி சில்வா கூறியுள்ளதாவது:
"2002 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 22 ஆம் நாள் சிறிலங்காவின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும், விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரனுக்கும் இடையே கைச்சாத்திடப்பட யுத்த நிறுத்த ஒப்பந்தம் எமது அரசியல் யாப்பிற்கும் சட்டத்துக்கும் முரணானது. மேலும் சிறிலங்கா குடியரசின் இறையாண்மைக்கும் அதன் பிரதேச ஒற்றுமைக்கும் ஊறுவிளைவிக்கிற ஒப்பந்தம் அது" என்று கூறுகிறார்.
அதன் பின்னர் கதிர்காமர் மரணம் போன்ற சம்பவங்களைச் சுட்டிக்காட்டும் ஓரிடத்திலும் இறுதிப் பந்தியான சட்டம் ஒழுங்கு என்ற தலைப்பின் கீழும் யுத்த நிறுத்தம் என்ற சொற்றொடரை நிமல் சிறிபால டி சில்வா பயன்படுத்தியுள்ளார். அந்த சட்டம் ஒழுங்குத் தலைப்பின் கீழ் யுத்த நிறுத்த ஒப்பந்தத்தின் மீதான அரசாங்கத்தின் அதிருப்தியைத்தான் சிறிலங்கா அரசாங்கம் வெளிப்படுத்தியிருக்கிறது.
வழமையாகச் சொல்லி வரும் யுத்த நிறுத்த மீறல்கள், கதிர்காமர் கொலை, சிறார் படை சேர்ப்பு, மனித உரிமை மீறல்கள், தேர்தல் புறக்கணிப்பு விடயங்கள், கொலைகளுக்கு நாங்கள் விசாரணைகளை நடத்துகிறோம் என்கிற பகிரங்க கண்துடைப்பு வசனங்களை- சிறிலங்கா நாடாளுமன்றத்தில் வாசிக்கப்படுகிற அறிக்கையைத் தவிர ஆக்கப்பூர்வமாக எதுவித அம்சமும் இல்லாத உரையை நிமல சிறிபால டி சில்வா வாசித்திருக்கிறார்.
ஜெனீவா பேச்சு மேசையை வழமையான அவதூறு பரப்புரை யுக்தியாக சிறிலங்கா அரசாங்கம் பயன்படுத்திக் கொள்ள முனைகிறது.
தமிழர் தரப்போ, தமிழ் மக்களின் பிரச்சனைகள் என்ன? யுத்த நிறுத்த ஒப்பந்தத்தில் ஏற்கப்பட்ட சரத்துகளை சிறிலங்கா அரசாங்கம் நிறைவேற்ற வேண்டும் என்று மக்களின் பிரச்சனைகளை முன்வைத்துள்ளது.
அதேபோல் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனைச் சந்தித்துப் பேசுகிற மகிந்தவின் புதிய அணுகுமுறை குறித்தும் சிலாகித்துள்ள நிமல் சிறிபால டி சில்வா, இந்தப் பேச்சுக்களின் அடிப்படை அம்சமான துணை இராணுவக் குழு பற்றி ஒரு இடத்தில் கூட வாயே திறக்கவில்லை. அப்படியானால் யுத்த நிறுத்த ஒப்பந்தம் பற்றி பேசாமல் ஜெனீவாவிற்கு இவர்கள் போனது ஏன் என்ற கேள்விதான் எழுகிறது.
சிறிலங்கா அரசாங்கக் குழுவிற்கு பயிற்சிப் பட்டறையில் சொல்லிக் கொடுக்கப்பட்ட விடயம்தான் என்ன? இந்த இழுத்தடிப்பு வேலைக்குத்தானே ஜெனீவா சென்றார்கள்?
முதல் நாளில் சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்திருக்கும் கருத்துகள் 2 ஆம் நாளின் போக்கை மட்டும் அல்ல இலங்கைத் தீவின் எதிர்காலத்தை தெளிவாகச் சொல்லுகிறது.
சர்வதேச சமூகத்தையும் தமிழ்ச் சமூகத்தையும் ஏமாற்றுகிற ஒரு போக்கை "இராஜதந்திரம்" என்று இனியும் சிங்களத் தலைமைகள் நினைத்து செயற்பட்டால் அவர்கள் சிங்களவர்களையும் ஏமாற்றுவதோடு தமிழர் தரப்பு ஆற்றப் போகிற வேறு வழியற்ற எதிர்வினைக்கு முகம் கொடுத்தே ஆக வேண்டியதைத் தவிர வேறு எதுவும் அவர்களுக்கு வழி இல்லை என்பதைத்தான் ஜெனீவாவின் சிறிலங்கா அரசாங்க அறிக்கை சொல்லிச் செல்கிறது என்று எமது ஜெனீவா செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
நிமல் சிறிபால டி சில்வாவின் உரை:
அறிமுகம்:
சிறிலங்கா அரசாங்கத்துக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையேயான பேச்சுக்களில் இது ஒரு முக்கியமான கட்டம். அர்த்தமுள்ள யுத்த நிறுத்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் இலங்கையின் அனைத்து இனத்தவருக்குமான பயன் ஏற்படுத்துகிற அடிப்படையில் இப்பேச்சுக்கள் அமைய வேண்டும்.
கௌரவமான அமைதி என்ற கொள்கையை முன்வைத்து எமது அரச தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
சிறிலங்கா பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்கவுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரனுக்கும் இடையே கடந்த 2002 ஆம் ஆண்டு எமது அரசியல் யாப்புக்கும் சட்டத்துக்கும் முரணான யுத்த நிறுத்த ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது.
இது சிறிலங்கா குடியரசின் இறையாண்மைக்கும், பிரதேச ஒற்றுமைக்கும் சேதம் ஏற்படுத்தக் கூடியது.
தற்போதுள்ள பிரச்சனைக்கு பேச்சுக்களின் மூலம் தீர்வு காண இந்த யுத்த நிறுத்த ஒப்பந்தம் ஒரு முதல் கட்ட நடவடிக்கையாக இருக்கும் என்று நாம் கருதுகிறோம்.
எமது அரச தலைவர் பொறுப்பேற்ற நாள் முதல் பல்வேறு சந்தர்ப்பங்களில் விடுதலைப் புலிகளுடன் பேச்சுக்கு அழைப்பு விடுத்து வருகிறார்.
விடுதலைப் புலிகளுடனான பேச்சுக்கள் தொடர்பில் சிறிலங்காவின் அனைத்துக் கட்சி கூட்டத்தை கடந்த சில வாரங்களாகக் கூட்டி ஒரு இணக்கப்பாட்டை உருவாக்கியுள்ளோம். எமது வரலாற்றில் இத்தகைய இணக்கப்பாடு காணப்படுவது இதுவே முதன்முறையானது.
நாங்கள் எமது மக்களின் முழுமையான ஆதரவுடன் இங்கே ஜெனீவாவுக்கு வந்துள்ளோம்.
புதிய அணுகுமுறை:
இனப்பிரச்சனைக்கு கௌரவமான தீர்வு என்பதை முன்வைத்து 2005 ஆம் ஆண்டு நவம்பர் 17ஆம் நாள் எமது அரச தலைவராக மகிந்த ராஜபக்ச தெரிவு செய்யப்பட்டார்.
எமது அரச தலைவரின் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் மகிந்த சிந்தனையானது, தமிழீழ விடுதலைப் புலிகளுடன் நேரடிப் பேச்சுக்களை நடத்துவதை வலியுறுத்துகிறது. தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவருடன் நேரடிப் பேச்சுக்களை நடத்தக் கூட அவர் தயாராக இருப்பதாக அறிவித்தார்.
ஆத்திரமூட்டும் செயற்பாடுகள் பல நிகழ்த்தப்பட்ட போதும் எமது அரச தலைவர் அமைதி முயற்சிகளில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டு, மிகுந்த பொறுமையைக் கடைபிடித்தார்.
இந்தப் பொறுமையானது எமது பலவீனம் அல்ல. அமைதியின் மீதான எமது ஈடுபாட்டை வெளிப்படுத்துவதாகவும். அத்தகைய ஆத்திரமூட்டும் நடவடிக்கைகள் தொடரும் நிலையில் தொடர்ந்து உயிரிழப்புகள் ஏற்படும் நிலையில் யுத்த நிறுத்தம் என்பது ஒட்டுமொத்தமாக அர்த்தமற்றதாகவே சீர்குலைந்துவிடும்.
இந்த நிலையில், உரிய தீர்வு காண்பதற்கு புதிய அணுகுமுறையை எமது அரச தலைவர் மேற்கொள்கிறார். எமது அரசாங்கம் பேச்சுக்களை நடத்தவும் கேட்கவும் புதியதாக சிந்திக்கவும் முற்படுகிறது.
சனநாயகம் மற்றும் மனித உரிமைகள்:
ஆசியாவின் நீண்டகால சனநாயகம் நிலைத்திருக்கும் நாடு எமது சிறிலங்கா. கடந்த 65 ஆண்டுகாலத்துக்கும் மேலாக எமது மக்கள் தமது பிரதிநிதிகளை அனைத்து இனக் குழுக்களுக்களிலிருந்தும் தெரிவு செய்து வருகின்றனர்.
சிங்களவர், தமிழர், முஸ்லிம், மலாய், பேர்கர் உள்ளிட்ட அனைத்து இன மக்களுக்கும் அனைத்துவிதமான உரிமைகளும் வழங்கப்பட்டிருக்கிண்றன.
எந்த ஒரு இனத்தவரும் தமது பிரதிநிதியைத் தெரிவு செய்யும் உரிமையை எமது அரசாங்கம் மறுத்தது இல்லை.
2005 ஆம் ஆண்டு சிறிலங்கா அரச தலைவர் தேர்தல் நடைபெற்ற நாள் வருத்தத்திற்குரியது.
குறிப்பிட்ட சில மாவட்டங்களில் பொதுமக்களை வாக்களிக்க விடாமல் தமிழீழ விடுதலைப் புலிகள் தடுத்தனர். கடந்த ஏப்ரல் 2004 ஆம் ஆண்டு தேர்தலின் போதும் பல இடங்களில் தேர்தல் முறைகேடுகள் நடந்தன என்பதை சர்வதேச சமூகத்தின் கண்காணிப்பாளர்கள் உறுதிப்படுத்தினர்.
இவை அனைத்தும் சனநாயகத்தை நிராகரிக்கும் விடுதலைப் புலிகளின் செயற்பாடுகள்.
இந்த நிலையில் அர்த்தமுள்ள யுத்த நிறுத்த ஒப்பந்தம் கடைபிடிக்கப்பட, வடக்குப் பிரதேச மக்கள் சனநாயகச் செயற்பாடுகளை சுதந்திரமாக மேற்கொள்ள வேண்டும்.
இலங்கையின் வடபகுதியான கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் விடுதலைப் புலிகளினால் அனைத்து இன மக்களினது அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டுள்ளன.
யுத்த நிறுத்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் வடக்கு - கிழக்குப் பகுதியில் விடுதலைப் புலிகளும் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்ட போதும் அதை தங்களது போர் நடவடிக்கைகளுக்காவே பயன்படுத்தினர். அரசியல் பிரமுகர்களின் படுகொலைகளை நிகழ்த்தினர்.
யுத்த நிறுத்த ஒப்பந்த மீறல்கள்:
யுத்த நிறுத்த ஒப்பந்தத்தின் முன்னுரையிலேயே போர் நடவடிக்கைகளை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்றுதான் வலியுறுத்தப்பட்டுள்ளது. ஆனால் எமக்குக் கிடைத்திருக்கும் ஆதாரங்கள் அடிப்படையில் தங்களது இராணுவ பலத்தை அதிகரித்துக் கொள்ளவே இந்த ஒப்பந்தத்தை விடுதலைப் புலிகள் பயன்படுத்தியுள்ளனர்.
இத்தகைய செயற்பாட்டை விடுதலைப் புலிகள் கைவிட வேண்டும் என்று சிறிலங்கா அரசாங்கம், கண்காணிப்புக் குழு, சர்வதேச சமூகம் வலியுறுத்திய போதும் அதை அவர்கள் நிராகரித்தனர். இதனால் பாரிய அளவிலான யுத்த நிறுத்த ஒப்பந்த மீறல்கள் நிகழ்த்தப்பட்டு யுத்த நிறுத்த ஒப்பந்தம் முறிவடையும் நிலைக்கு வந்தது.
கடந்த மாதம் வரை விடுதலைப் புலிகளினால் மொத்தம் 3,519 யுத்த நிறுத்த மீறல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கண்காணிப்புக் குழு தெரிவித்துள்ளது. சிறிலங்கா அரசாங்கத்தால் 163 மீறல்கள் மேற்கொள்ளப்பட்டதாக கண்காணிப்புக் குழு தெரிவித்துள்ளது. ஆக 96 விழுக்காடு ஒப்பந்த மீறல்களை விடுதலைப் புலிகளே மேற்கொண்டுள்ளனர்.
படுகொலைகள், சிறார் படை சேர்ப்பு, கடத்தல்கள், இளைஞர்களைக் கடத்துதல், தற்கொலைத் தாக்குதல்கள், படையினரை படுகொலை செய்தல், பொதுமக்கள், மாணவர்கள், அரசியல் பணியாளர்களைச் சித்திரவதை செய்தல் மற்றும் சொத்துகளுக்குச் சேதம் விளைவித்தல் என்கிற வகையில் விடுதலைப் புலிகளின் யுத்த நிறுத்த மீறல்கள் உள்ளன.
இந்தச் செயற்பாடுகளினால் யுத்த நிறுத்தம் ஒப்பந்தம் சீர்குலைந்து, வடக்கு - கிழக்கில் இயல்பு நிலைமை திரும்புவதில் தடை ஏற்பட்டது.
இந்த நிலையில் விடுதலைப் புலிகளால் படுகொலை செய்யப்பட்ட லக்ஸ்மன் கதிர்காமருக்கு நாம் வணக்கம் செலுத்துகிறோம்.
இந்தச் சூழலில் முஸ்லிம் சமூகத்தினர் பற்றியும் நாம் சில கவலைகளைப் பகிர்ந்து கொள்கிறோம்.
விடுதலைப் புலிகளால் வடபகுதியிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டனர். அவர்கள் தமது வீடுகளுக்கு மீள திரும்ப இந்த ஒப்பந்தம் வகை செய்ய வேண்டும் என்று விரும்புகின்றனர். கிழக்குப் பிரதேசத்தில் அவர்களது பாதுகாப்பும் பாரிய ஆபத்தில் உள்ளது.
ஆகையால் இந்தப் பேச்சுக்களில் முஸ்லிம்களின் பிரச்சனைகளும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும்.
ஆயுதப் போராட்டத்தால் சிறார் பாதிப்பு:
விடுதலைப் புலிகளின் படையணியில் 5,368 சிறார்கள் இருப்பதாக யுனிசெஃப் அறிக்கை தெரிவிக்கிறது. யுத்த நிறுத்த ஒப்பந்தம் அமலுக்கு வந்தது முதல் சனவரி 30 ஆம் நாள் வரை சிறார் படை தொடர்பிலான 2,011 யுத்த நிறுத்த ஒப்பந்த மீறல்களை விடுதலைப் புலிகள் மேற்கொண்டுள்ளனர். ஒட்டுமொத்த மீறல்களில் இது 55 விழுக்காடாகும்,
இது குறித்து அனைத்து சர்வதேச சமூகமும் கவலை தெரிவித்துள்ளது. சிறார் பாலியல் துஸ்பிரயோகத்தில் ஈடுபட்ட நபரைக் கைது செய்ய காவல்துறையினரை விடுதலைப் புலிகள் அண்மையில் கைது செய்தனர்.
சட்டம் ஒழுங்கு:
2002 ஆம் ஆண்டு யுத்த நிறுத்த ஒப்பந்தத்துக்குப் பின்னர் பாரிய அளவிலான படுகொலைகள் நடந்தன. ஒப்பந்தத்தின் வரையறைகள் தொடர்பில் சிறிலங்கா அரசாங்கம் பாரிய அதிருப்தி கொள்கிறது.
நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க எமது அரச தலைவர் மகிந்த ராஜபக்ச முழு நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.
பாதாள உலகக் குழுக்கள், ஆயுதக் குழுக்கள், போதைப் பொருள் கடத்தும் குழுவினரை ஒடுக்குவதற்கு பாரிய நடவடிக்கைகளை எமது அரசாங்கம் மேற்கொண்டு வருகிறது.
திருகோணமலையில் இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்டமை, தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தினர் கடத்தப்பட்டமை, நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை போன்ற அனைத்து குற்றச் செயல்களிலும் உரிய விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்தக் குற்றச்செயல்களில் ஈடுபட்டோரை சட்டத்தின் முன் நிறுத்த உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
பொருளாதார அபிவிருத்தி:
சிறிலங்கா அரச தலைவராக மகிந்த ராஜபக்ச பொறுப்பேற்ற உடன் நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக அறிவித்தார்.
போரினாலும் ஆழிப்பேரலையாலும் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்குப் பகுதியில் பொருளாதாரா அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுக்க சிறப்புக் கவனம் செலுத்தப்படும் என்றும் அரசாங்கம் அறிவித்துள்ளது.
மகிந்த சிந்தனை மூலம் வடக்கு - கிழக்கு மாகாணங்களுக்கு ஏராளமான பொருளாதார அபிவிருத்தித் திட்டங்கள் திட்டமிடப்பட்டுள்ளன. இவற்றை மகிந்த ராஜபக்ச தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையில் தெரிவித்திருக்கிறோம்.
2004 ஆம் ஆண்டு டிசம்பரில் ஏற்பட்ட ஆழிப்பேரலையால் வடக்கு - கிழக்கு மக்கள் பாரிய பாதிப்புக்குள்ளாகினர். ஆழிப்பேரலை மீளமைப்புக்காக ஏலவே பல திட்டங்களை நாம் செயற்படுத்தி வருகிறோம்.
யாழ்ப்பாணத்தில் விவசாயிகளுக்கான சலுகைகளை அறிவித்துள்ளோம்.
அர்த்தமுள்ள யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை முன்னெடுப்பதின் மூலமே வடக்கு - கிழக்கின் பொருளாதார அபிவிருத்தியை நாம் மேற்கொள்ள முடியும்.
இறுதியுரை:
இன்றைய பேச்சுக்கள் ஒரு புதிய தொடக்கம். இந்தப் பேச்சுக்கள் முன்னெடுக்கப்பட்டு இலக்குகளை அடையும் என்று நம்பிக்கை கொள்கிறோம்.
வன்முறையற்ற பாதையில் உள்ளார்ந்த ஈடுபாட்டுடன் போர் நடவடிக்கைகள் தவிர்த்த நிகழ்ச்சித் திட்டத்தை விடுதலைப் புலிகள் முன்னெடுக்க வேண்டும் என்றார் நிமல சிறிபால டி சில்வா.
http://www.eelampage.com