Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தமிழர்-முஸ்லிம் நல்லுறவு பேணல் முயற்சிகள்
#1
<b>விடுதலைப் புலிகளுடன் 20 உறுப்பினர்கள் அடங்கிய முஸ்லிம் குழு சந்திப்பு </b>
[சனிக்கிழமை, 28 சனவரி 2006, 21:21 ஈழம்] [ம.சேரமான்]
திருகோணமலையில் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் 20 உறுப்பினர்கள் அடங்கிய முஸ்லிம்கள் குழு இன்று சனிக்கிழமை சந்தித்துப் பேசியது.


மூதூரில் விடுதலைப் புலிகளின் அரசியல் செயலகத்தில் போர் நிறுத்த கண்காணிப்புக் குழு முன்னிலையில் இன்று பிற்பகல் இச்சந்திப்பு நடந்தது.

தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களிடையே நல்லுறவை வளர்த்தெடுக்கும் வகையில் இந்தக் கூட்டத்தில் ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

மூதூர் பிரதேசத்தில் முஸ்லிம் ஆயுதக் குழுவினரது நடமாட்டம் தொடர்பாக விடுதலைப் புலிகள் தரப்பினர் சுட்டிக்காட்டினர்.

இந்த ஆயுதக் குழுவினரது செயற்பாட்டினால் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களிடையேயான உறவு சீர்குலையும் என்றும் புலிகள் தரப்பு சுட்டிக்காட்டியது.

சிறிலங்கா ஆக்கிரமிப்பு மூதூர் பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை காலை இரு தமிழர்கள் கொல்லப்பட்டது குறித்தும் இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

அரசாங்க ஆக்கிரமிப்புப் பகுதிகளில் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண இருதரப்புக் குழுக்கள் அமைக்கவும் இந்தக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் திருகோணமலை மாவட்ட சிறப்புத் தளபதி கேணல் சொர்ணம், திருகோணமலை அரசியல்துறை பொறுப்பாளர் சி.எழிலன் மற்றும் மூதூர், தோப்பூர், ஜின்னா நகர், ஆசாத் நகர் முஸ்லிம் மதத் தலைவர்களும் பொதுமக்களின் பிரதிநிதிகளும் இச்சந்திப்பில் பங்கேற்றனர்.


<i><b>தகவல் மூலம்-புதினம்.கொம்</b></i>
"
"
Reply
#2
<b>முஸ்லிம்கள் ஆயுதம் வைத்திருப்பது தமிழ், முஸ்லிம் உறவை பாதிக்கும்! - முஸ்லிம் பிரதிநிதிகளிடம் எழிலன் முறையீடு- </b>

திருமலை முஸ்லிம் இளைஞர்கள் ஊர்காவல் படை என்ற போர்வையில் ஆயுதங்கள் வைத்திருப்பதால் இனமோதல்கள் ஏற்படுவதுடன் அப்பாவித் தமிழ் மக்களும் பலியாகும். சந்தர்ப்பம் ஏற்படுமென திருமலை மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் எழிலன் தெரிவித்தார்.

மூதூர் பகுதி பள்ளி வாயல்களின் தலைவர்களுக்கும், தமிழீழ விடுதலைப்புலிகளுக்குமிடையிலான சந்திப்பு நேற்று சனிக்கிழமை சம்பூர் அரசியல்துறை அலுவலகத்தில் நடைபெற்றது.

நேற்று பிற்பகல் 2.00 மணி தொடக்கம், 4.00 மணிவரை நடைபெற்ற இச்சந்திப்பில் மூதூர், தோப்பூர், ஜின்னாநகர், பாரதிபுரம், ஆகிய இடங்களைச் சேர்ந்த 20ற்கும்மேற்பட்ட பள்ளிவாயல்களின் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

இச்சந்திப்பில் திருகோணமலை மாவட்ட கட்டளைத்தளபதி கேணல் சொர்ணம், மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் எழிலன், ஆகியோர் கலந்து கொண்டனர். இங்கு அரசியல்துறைப் பொறுப்பாளர் எழிலன் தெரிவிக்கையில்:- மூதூர்ப் பகுதியில் முஸ்லிம் இளைஞர்கள் ஆயுதப் பயிற்சி பெற்றிருப்பதுடன் ஆயுதங்களையும் வைத்துள்ளனர். இது இன முரண்பாட்டை உருவாக்கும் என்றார்.

இதற்குப் பதிலளித்த முஸ்லிம் பிரதிநிதிகள்:- முஸ்லிம்கள் ஆயுதங்கள் தமிழ் மக்களுக்கு எதிராக பயன்படுத்தப்பட மாட்டாது என்றார். இவ்வாறான சந்திப்புக்கள் எதிர்காலத்தில் மாதத்திற்கு ஒரு முறை நடாத்தப்பட வேண்டுமெனவும் வலியுறுத்தப்பட்டது.


<i><b>தகவல் மூலம்- ஈழநாதம்-மட்டக்களப்பு பதிப்பு</b></i>
"
"
Reply
#3
<b>மூன்றரை மாதத்துக்கு பின்னரான முஸ்லிம்கள் - புலிகள் சந்திப்பில் சமூகங்களில் இருந்து முரண்பாட்டாளர்களை புறந்தள்ளுவதாக தீர்மானம் </b>

அம்பாறை மாவட்டத்தில் சுமார் மூன்றரைமாத கால இடைவெளியின் பின்னர் நேற்று தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும், முஸ்லிம் பிரதிநிதிகளுக்குமிடையில் முக்கிய சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது. போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் அனுசரணையுடன், தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசமான பாவட்டாவிலுள்ள மாவட்ட அரசியல்துறைப் பணிமனையில் இச்சந்திப்பு இடம் பெற்றது.

இச்சந்திப்பில் விடுதலைப் புலிகளின் சார்பில் அம்பாறை மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் ஜெயா, தளபதி ஜனார்த்தனன், மாவட்ட நிருவாகப் பொறுப்பாளர் தொல்காப்பியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

முஸ்லிம்கள் சார்பில் அக்கரைப்பற்று பட்டின பள்ளிவாசல் தலைவர் ஏ.ரீ.பாறூக், அக்கரைப்பற்று வர்த்தகர் சங்க முக்கியஸ்த்தர் ஓ.எம்.இஸ் மாயில், சகவாழ்வுமன்ற அம்பாறை மாவட்ட இணைப்பாளர் ஐ.எம்.இப்றா கீம், முஸ்லிம் சமாதான செயலக தலைவர் யூ.எம்.உவைஸ் மற்றும் முக்கிய பிரமுகர்களான ஏ. எல்.மு கைதீன், எம்.சீ.முகம்மட்ஹாசீம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மிக அந்நியோன்னியமாகவும், புரிந்துணர்வுடனும் நடைபெற்ற இச்சந்திப்பு வெற்றிகரமாக இடம் பெற்றதாக இருதரப்பினரும் தெரிவித்தனர்.

இச்சந்திப்பின் இறுதியில் விடுதலைப்புலிகளும், முஸ்லிம் பிரதிநிதிகளும் கூட்டாகவிடுத்த அறிக்கையில் பின்வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று முதல் ஒவ்வொரு மாதமும் இருசாராரும் சந்தித்து மக்களின் அன்றாட வாழ்க்கை வசதிகள், பிரச்சினைகள் பற்றி கலந்துரையாடி இயல்பு வாழ்க்கையை தொடர்ந்து பேணுவதுடன் தமிழ், முஸ்லிம் உறவுகளைப் பேணிப்பாதுகாப்பது என்றும், தற்போது நிலவும் விவசாயச் செய்கை, மற்றும் வியாபாரத் தற்காலிக தொழில் புரிதல் சம்பந்தமாக இடையூறுகள் அனைத்தும் களையப்பட்டு இன்று முதல் தமிழ், முஸ்லிம் மக்கள் தத்தமது தொழில்களை இயல்பாகச் செய்வதென்றும் முடிவு காணப்பட்டது.

இரு சமூகங்களுக்குமிடையேயிருந்து குறிப்பிட்ட ஒரு சிலர் முரண்பாட்டாளர்களாகத் தொழிற்படுவதை இனங்கண்டு அவர்களை சமூகங்களிலிருந்து புறந்தள்ளும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும், தொடர்ந்து ஏற்படுத்தப்படும் சந்திப்புக்களில் அம்பாறை மாவட்ட முஸ்லிம் பிரதேசங்களைச் சேர்ந்த பிரமுகர்களை கலந்துகொள்ளச் செய்வதென்றும் அநாவசியமற்ற, நாகரீகமற்ற, முகவரியற்ற துண்டுப் பிரசுரங்களை வெளியிடுவதை தவிர்த்துக் கொள்வதோடு அவர்களை இரு சமூகங்களும் உடனுக்குடன் தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டது.

<i><b>தகவல் மூலம்- ஈழநாதம்-மட்டக்களப்பு பதிப்பு</b></i>
"
"
Reply
#4
<b>அம்பாறையில் விடுதலைப் புலிகள்- முஸ்லிம் பிரதிநிதிகள் சந்திப்பு </b>
[திங்கட்கிழமை, 6 பெப்ரவரி 2006, 01:02 ஈழம்] [கிளிநொச்சிலிருந்து செ.தனோஜன்]
அம்பாறை மாவட்ட விடுதலைப் புலிகள் பிரதிநிதிகளும், முஸ்லிம் பிரதிநிதிகளும் அம்பாறை மாவட்ட விடுதலைப் புலிகளின் அரசியல்துறை செயலகத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை சந்தித்து பேசினர்.


அதன் பின்னர் வெளியிடப்பட்ட கூட்டறிக்கை:

இருசாராரும் இன்று முதல் ஒவ்வொரு மாதமும் சந்தித்து மக்களின் அன்றாட வாழ்க்கை வசதிகள், பிரச்சனைகள் பற்றிக் கலந்துரையாடி இயல்பு வாழ்கையை தொடர்ந்து பேணுவதுடன் தமிழ் - முஸ்லப்ம் உறவுகளை பேணிப் பாதுகாப்பது என்றும்,

தற்போது நிலவும் விவசாயச் செய்கை மற்றும் வியாபார தற்காலிகத் தொழில் புரிதல் சம்பந்தமாக நிலவும் இடையூறுகள் அனைத்தும் களையப்பட்டு இன்று முதல் தமிழ், முஸ்லீம் மக்கள் தத்தமது தொழில்களை இயல்பாக செய்வதென்றும் முடிவு காணப்பட்டது.

இரு சமூகங்களுக்குமிடையிலிருந்து குறிப்பிட்ட ஒரு சிலர் முரண்பாட்டாளர்களாக தொழிற்படுவதை இனங்கண்டு அவர்களை சமூகங்களிலிருந்து புறந்தள்ளும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும்

தொடர்ந்து ஏற்படுத்தப்படும் சந்திப்புக்களில் அம்பாறை மாவட்ட முஸ்லிம் பிரதேசங்களைச் சேர்ந்த பிரமுகர்களை கலந்து கொள்ளச் செய்வதென்றும் அநாவசிய, நாகரீகமற்ற, முகவரியற்ற துண்டுப் பிரசுரங்களை வெளியிடுவதை தவிர்த்துக்கொள்வதோடு அவர்களை இரு சமூகங்களும் உடனுக்குடன் தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழீழ விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசமான பாவட்டை அரசியல்துறைப் பணிமனையில் நான்கு மாதங்களுக்குப் பின் இச்சந்திப்பு நடைபெற்றது.

இச்சந்திப்பில் விடுதலைப் புலிகள் சார்பில் மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் ஜெயா, தளபதி ஜெனார்த்தனன் நிர்வாகப் பொறுப்பாளர் தொல்காப்பியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அம்பாறை மாவட்ட போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழு பிரதிநிதிகள் முன்னிலையில் இச்சந்திப்ப்பு நடைபெற்றது
<i><b>
தகவல் மூலம்-புதினம்.கொம்</b></i>
"
"
Reply
#5
<span style='color:green'><b>தமிழர் முஸ்லிம் சமரசம்</b>

சுமார் மூன்றரை மாதங்களின் பின்னர் அம்பாறை மாவட்டத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும், முஸ்லிம் பிரமுகர்களுக்கும் இடையிலான சமரச சந்திப்பு இடம்பெற்றிருக்கின்றது. அம்பாறை மாவட்டத்தில் இயல்பு வாழ்க்கையை ஸ்திரப்படுத்தி இரு தரப்பு உறவை வலுவாக்கவும் இந்தச் சந்திப்பில் உறுதி எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கின்றது.
இந்தச் சந்திப்பின் பின்னர் வெளியிடப்பட்ட கூட்டு அறிக்கையில் முக்கியமான ஒரு விடயம் இடம்பெற்றிருப்பது கவனிக்கத்தக்கது.
""இரு சமூகங்களுக்கும் இடையில் (தமிழர்-முஸ்லிம் சமூகங்களுக்கு இடையில்) குறிப்பிட்ட சிலர் முரண்பாட்டாளர்களாகத் தொழில்படுவதை இனங்கண்டு அவர்களை சமூகங்களில் இருந்து புறந்தள்ளும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.''- என்பதும் இந்தச் சந்திப்பில் முடிவு செய்யப்பட்டதாகக் கூட்டறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கின்றது.
கிழக்கில்- தென் தமிழீழத்தில் - தமிழர்களும், முஸ்லிம்களும் வாழ்வியலுக்கான பூகோளப் பிரதேச விடயத்தில் ஒன்றுபட்டு சீவிப்பவர்கள். அங்கு அவர்களின் பாரம்பரியத் தாயகப் பிரதேசத்தை நோக்குபவர்கள் "பிட்டும் தேங்காய்ப் பூவும் போல' அவர்கள் கலந்திருப்பதை உணர்வர்.

அது மாத்திரமல்ல. அவர்கள் தாங்கள் பின்பற்றும் மார்க்கத்தினால் வேறுபட்டவர்களானாலும் பேசும் மொழியில் ஒன்றுபட்டவர்கள். இலங்கையில் மொழி அடிப்படையில் எழுந்த இந்த இனப்பிரச்சினையில் தமிழ் இனம் சிறுபான்மையினராக அடக்கப்பட, பௌத்த, சிங்களப் பேரினம் பெரும்பான்மையினராகி அடக்குகின்றது.
அத்தகைய மேலாண்மைப் போக்குடைய பேரினவாதிகள் தமது அடக்குமுறை நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புக் காட்டும் சிறுபான்மையினரை பலவீனப்படுத்துவதற்காக, அவர்களை (சிறுபான்மையினரை) மேலும் பல சிறுபான்மை இனங்களாக உடைத்து, அவற்றின் பலத்தைக் குன்றச் செய்யும் சதித் திட்டத்தை முன்னெடுத்தனர்.
அந்தச் சதித் திட்டத்தில் பலிக்கடாவான தமிழ் பேசும் சமூகம், "தமிழ் இனம்' என்றும், "முஸ்லிம் இனம்' என்றும் கூறுபோட்டு - கூறுகெட்டு - அவலப்படும் நிலைக்கு உள்ளாகியிருக்கின்றது.

தமிழ், முஸ்லிம் சமூகங்களுக்கு இடையில் ஏற்பட்டுள்ள இந்தப் பிரிவை மேலும் மும்முரமடையச் செய்யும் கபடவேலையை இரண்டு தரப்பிலும் சில தீய சக்திகள் முனைப்புடன் மேற்கொண்டு வருகின்றன.
கிழக்கில் கருணா குழு என்ற வெளிப்பெயரை முன்நிறுத்திச் செயற்படும் ஒட்டுப்படைகள் தமிழர் தரப்பிலும்-
அரசுப் பதவிகளுக்காகக் குத்துக்கரணம் அடித்த சில அரசியல்வாதிகளின் ஆசீர்வாதத்துடன் செயற்படும் சில சக்திகள் முஸ்லிம்கள் தரப்பிலும்-
இரு தரப்புகளினதும் பரஸ்பர உறவுக்கு வேட்டு வைத்து வருகின்றன.

அம்பாறையில் நேற்று முன்தினம் நடைபெற்ற சமரச சந்திப்பில் இவை பற்றிப் பேசப்பட்டிருப்பதாகவும், இவ்வாறு சிறுபான்மை இனங்களுக்கிடையில் முரண்பாட்டைத் தோற்றுவிக்கும் சக்திகளையே இரு சமூகங்களில் இருந்தும் புறந்தள்ளும் நடவடிக்கைகளை மேற்கொள்வது எனத் தீர்மானிக்கப்பட்டிருப்பதாகவும் அறியவருகின்றது.

மூன்றாம் தரப்பு, தனித் தரப்பு என்றெல்லாம் கூறி, பிரசாரம் செய்து , முஸ்லிம்களுக்கு உணர்ச்சி ஊட்டி, அவர்களையும், தமிழர்களையும் பிரித்து வைக்க எத்தனிக்கும் முஸ்லிம் தலைமைகள் குறித்தும் முஸ்லிம் மக்கள் கவனமாக இருப்பது நல்லது.
தமிழர்களும், முஸ்லிம்களும் பேச்சு மொழி காரணமாக தமிழ்ப் பேசும் மக்களே.

தற்போதைய இனப்பிரச்சினை மொழி அடிப்படையில்தான் முதலில் உருப்பெற்றது.
எனவே, மூன்றாம் தரப்புக்கு அல்லது தனித்தரப்புக்கான பேச்சும் கோரிக்கையும் முஸ்லிம் தரப்பிலிருந்து தெற்குக்கு எழுப்பப்படுவதைப் பார்க்கிலும் தமிழ்த் தலைமையை நோக்கி வலியுறுத்தப்படுவதே பொருத்தமானதும், நியாயமானதுமாகும்.
இதையே புதிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் "உதயன்' - "சுடர் ஒளி' நாளிதழுக்கு வழங்கிய விசேட செவ்வியில்
""பேச்சுக்களில் முஸ்லிம்களின் தனித் தரப்புக் குறித்து சில முஸ்லிம் தலைவர்கள் என்னுடன் பேசினார்கள். இது புலிகளுக்கும் அரசுக்கும் இடையில் தீர்க்கப்பட வேண்டிய முக்கிய விடயம். இதற்குள் தலையிட்டுக் குழப்பாதீர்கள் என்று அவர்களிடம் கூறிவிட்டேன். இயலுமானால் பிரபாகரனுடன் போய்ப் பேசுங்கள். அவருடன் ஒரு தரப்பாக வாருங்கள். அல்லது அரசுடன் இணைந்து வாருங்கள்''- என்று கூறியிருந்தார்.

ஆகவே, பதவிக்காகவும், சலுகைகளுக்காகவும் முஸ்லிம் தலைவர்கள், கொழும்புக்குக் காவடி தூக்குவதை விடுத்து, தமிழ் பேசும் மக்கள் என்ற முறையில் தமிழர் தலைமையுடன் கலந்துரையாடி, உரிமைக்காக வாதிட்டு, இப்பிரச்சினையை சுமுகமாகத் தீர்த்துக் கொள்ள ஏன் முன்வரக் கூடாது? வலுவான தமிழ்த் தலைமையுடன் ஐக்கியப்பட்டுச் செயற்படுவதன் மூலம் நியாயமான உரிமைகளை ஈட்டும் தமது முயற்சிகளில் முஸ்லிம் தரப்பு கணிசமாக வெல்ல முடியும்.

தமிழர்களோடு போட்டிக்கு நிற்பதாக வீம்பு பண்ணிக் கொண்டு, சிங்களவர்களுக்கு ஆலவட்டம் பிடிப்பதை நிறுத்தி விட்டு, தமிழர் தரப்புடன் ஒன்றிணைந்து செயற்பட விழைவதே முஸ்லிம்களுக்கும் நல்லது. தமிழர்களுக்கும் நல்லது.
இதற்கான அழைப்பும் இணக்கமும் கூட இரண்டு தரப்பிலிருந்தும் வருவதும் காலத்தின் கட்டாயமாகும்.</span>

<i><b>ஆசிரியர் தலையங்கம்-உதயன் (07/02/06)</b></i>
"
"
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)