Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
மலர்ந்திடு, தமிழ்ப் புத்தாண்டே!
#1
<img src='http://img13.echo.cx/img13/7219/untitled12yi.gif' border='0' alt='user posted image'><b>மலர்ந்திடு, தமிழ்ப் புத்தாண்டே!</b><img src='http://img13.echo.cx/img13/7219/untitled12yi.gif' border='0' alt='user posted image'>


பொதியமா வரையின் தென்றல்
பூட்டிய தினவு பொங்க
மதியது மங்காச் சொல்லேர்
மணித்தமிழ் மாந்தர் வாழ,
புதியதோர் உலகை எங்கள்
புதல்வர்கள் மகிழ்ந்து காண,
உதித்திடும் தமிழ்ப்புத் தாண்டே,
உன்னெழில் வரவு வாழ்க!!

ஊர்த்திரு நாளும், போற்றும்
உயிர்த்திரு நாளும், வெற்றித்
தேர்த்திரு நாளும், தம்மைச்
சீக்கிரம் சேரும் என்று
பார்த்திருக் கின்ற ஈழப்
பைந்தமிழ் வம்சம் வாழ,
"பார்த்திப" ஆண்டே! உன்றன்
பரிவுகொள் வரவு வாழ்க!

நெருநலின் நிகழ்வு எல்லாம்
நினைவினில் பதிவு கொள்ள,
இருநிலம் பிளந்த வேராய்
எம்மவர் நெஞ்சில் ஈழப்
பெருநிலத்(து) ஏக்கம் சற்றும்
பிரிவறா(து) ஊன்றிக் கொள்ள,
வருகநீ புத்தாண்டே, யாம்
வான்மட்டும் உயர்ந்து கொள்ள!

ஈழமே! எம்மை யீன்ற
ஞாலமே! உன்னை யெண்ணிக்
காலமேல் கால மாகக்
காத்திருக் கின்ற நின்றன்
சீலமார் மைந்தர் காதில்
தேனெனும் செய்தி ஒன்றைச்
சாலவோர் பரிசு என்று
தந்தி(டு)இத் தமிழ்ப்புத் தாண்டில்!

மெய்யகம் இப் புத்தாண்டில்
மேல்நிலை வகிக்க வேண்டும்!
பொய்அகன்(று) உண்மை வெல்லப்
புதுவழி வகுக்க வேண்டும்!
வையகம் தன்னை நல்லார்
வாஞ்சையும் தெளிந்த நெஞ்சும்
கையகப் படுத்தும் என்ற
கனவுமெய்ப் படுதல் வேண்டும்!!

"ஆண்டுதான் வந்த(து) இன்று:
அமைதியோ வருவ(து) என்(று)?" என்(று)
யாண்டுமோர் ஏக்கம் எங்கள்
யாழ்நிலம் எங்கும் தோன்ற-
மீண்டுமோர் ஆண்டாய் வந்தும்
மெத்தநீ ஆண்டாய் என்னும்
மாண்டபேர் எய்தும் வண்ணம்
மலர்ந்திடு, தமிழ்ப்புத் தாண்டே!

தொ.சூசைமிக்கேல் (tsmina2000@yahoo.com)
Reply


Messages In This Thread
மலர்ந்திடு, தமிழ்ப் புத்தாண்டே! - by hari - 04-14-2005, 05:22 AM
[No subject] - by Malalai - 04-14-2005, 06:00 AM
[No subject] - by AJeevan - 04-14-2005, 08:31 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)