Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
இப்படி நீ ஏன் பொங்கினாயோ?
#1
கடல் அன்னையே இப்படி நீ
ஏன் பொங்கினாயோ

எல்லோரும்
ஒவ்வொருவரையும் காத்துக் கொள்ள
ஆயுதங்களை உருவாக்குவதிலும்
ஆயதங்களைக் கொண்டு வந்து குவிப்பதையும்
மண்ணுக்காக உயிர்களைக் கொல்வதிலுமே
முனையாக நின்றார்களே தவிர
இயற்கை அனர்த்தங்களிலிருந்து
மக்களைக் காப்பாற்ற - இவர்கள்
எவருமே எண்ணியதாக இல்லை

வந்த பின் காப்பதற்கும்
நடந்து முடிந்தவற்றுக்காக
நீலிக் கண்ணீர் வடிப்பதற்கும்
அதையே தமக்கு சாதகமான
அரசியலாக்கிக் கொள்ளவும்
சிலர் எண்ணும் போது
இதயம் குமுறுகிறது.

உங்கள் பலத்தை விட
எனது பலம் பன் மடங்கு அதிகம்
என்று கூறுவது போல
இயற்கை அன்னை சீறி எழுந்து விட்டது
போலவே எண்ணத் தோன்றுகிறது.

எனக்காகவோ
எனது குடும்பத்துக்காகவோ என்று மட்டும்
அழுவதற்கு முடியவில்லை
என் குடும்பத்திலோ
எனது உறவினர் குடும்பத்திலோ
எனது நண்பர்கள் குடும்பத்திலோ
யாரோ ஒருவர்
எனக்கு நெருங்கிய ஒருவரை
நான் இழந்திருக்கிறேன்.

யார் பெயரைச் சொல்லி அழ
எத்தனை பேரைச் சொல்லி அழ
உலகின் ஒவ்வொரு கோடியிலும்
யாராவது ஒருவர் மடிந்து இருக்கிறார்
ஆகக் குறைந்தது உல்லாசப் பிராணியாகவாவது.

உலகப் போர் ஒன்றோ
ஈழப் போரொன்றோ
வேறொரு போரோ
இனியும் வேண்டாம்
பாருங்கள் இழப்புகளை

உலகமே சாவீடாக அழுகிறது
அனைத்து இடங்களிலும் பாதிக்கப்பட்டவர்கள்
தமது வேற்றுமைகளை மறந்து
வேதனைகளில் இணைந்தும் பிணைந்தும்
போயிருக்கிறார்கள்

இன்று
தமது குடும்பத்தை
பற்றிச் சொல்லி அழ
தனது குடும்பமில்லை
தனது அயலவனும் எதிரியானவனுமே - இன்று
குடும்பத்திலொருவனாய்
கட்டிப் பிடித்துக் கொண்டு
அழுகிறான்.

இலங்கையில்
இன-மத-மொழி ரீதியாக
எதிரிகளானவர்களும்
ஆயுதங்களை
நேருக்கு நேர் பிடித்துக் கொண்டிருந்த
போராளிகள்
மக்கள் மற்றும் இராணுவத்தினர்;
ஒன்றாய் இணைந்து மீட்புப் பணிகளில்
ஈடுபட்டிருக்கிறார்கள்
மனிதம் மண்ணில் விதை போட்டுள்ளது.

யுத்தமொன்று வருமென
அஞ்சிய மக்களுக்கு
இன்று அதைவிட ஒரு பெரிய
இழப்பை இயற்கை கொடுத்திருக்கிறது
இனியும் ஒரு அழிவு வேண்டாம்
தாங்குவதற்கு எம்மால் முடியாது
அப்படியான ஒன்றுக்கு
இனியும் வித்திட்டால்
அது ஈனத்தனமானது

ஆயுதங்களுக்கு பதில்
அன்பை விதையுங்கள்
அடுத்தவர் மனதில் வெறியை உருவாக்குவதற்கு பதில்
கருணையை உருவாக்குங்கள்
அவரவர் உரிமைகளை மதியுங்கள்
உரிமைக்கான அங்கிகாரத்தை வழங்குங்கள்
இதைவிட நல்லதொரு தருணம்
இனியுமில்லை

பாதிக்கப் பட்டவர்கள்
இணைந்து நிற்கிறார்கள்
உயிரிழந்த அத்தனை
உயிர்களின் ஆத்துமாக்களாவது
அமைதியை உருவாக்கட்டும்

வித்தியாசமான வேண்டுதல்தான்
உங்கள் சாவின் குரல்கள்
இனி ஒரு சாவையோ சாவுகளையோ
உருவாக்காது இருக்கட்டும்...................
Reply


Messages In This Thread
இப்படி நீ ஏன் பொங்கினாயோ? - by AJeevan - 12-29-2004, 11:45 PM
[No subject] - by sOliyAn - 12-30-2004, 03:10 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)