Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
சிந்திக்க ஓர் சீர் கவி...!
#1
<span style='color:red'>வரலாற்றை மறக்காதே

போர் ஓய்ந்து விட்டதனால்
போராட்டம் முடிந்ததென்று
புளகாங்கிதம் கொள்ளும்
புதல்வர்களே கேட்டிடுவீர்

சாமான்கள் போவதனால்
சமாதானம் வந்ததென்று
சந்தோசித்து நிற்கும்
சகோதரரே கேட்டிடுவீர்

சைக்கிள் பெறுவதற்கா
சமராடி நின்றோம் நாம்
அப்பிள் தின்பதற்கா
அல்லல் பட்டோம் நாம்

இப்படிச் சொல்வதற்காய்
இழிவாய்ப் பார்க்காதீர்
சமாதான விரோதியென
சாக்கடையில் தள்ளாதீர்

தடைமுகாம் கடக்காமல்
தலையாட்டி இல்லாமல்
எங்கேயும் சுற்றிவர
எங்களுக்கும் விருப்பந்தான்

துப்பாக்கிச் சத்தமின்றி
செல்லடிக்கப் பயமின்றி
சுற்றம் சுழ்ந்திருக்கும்
சுழலுக்கும் விருப்பந்தான்

அன்னியரின் தேசத்தில்
அகதியாய் அலைந்திடாமல்
எம்மண்ணை வந்தடைய
எங்களுக்கும் விருப்பந்தான்

நாள்முழுதும் மாயாமல்
கடுங்குளிரில் காயாமல்
நிம்மதியாய் வாழ்வதற்கு
நிச்சயமாய் விருப்பந்தான்

ஆனாலும் என்மனதில்
ஆழப் பதிந்திட்ட
கடந்தகால வரலாறு
கண்முன்னே நிற்கிறது

தவறுகளை மன்னித்தல்
தமிழர்குணம் என்றாலும்
கடந்தகால வரலாற்றை
கணப்பொழுது பார்த்திடுவோம்

சங்கிலியன் ஆட்சியிலே
சந்தோசமாய் நாமிருந்தோம்
சட்டம் ஒழுங்கையெல்லாம்
சரியாகப் பேணிநின்றோம்

தனியாக வாழ்ந்தஎம்மை
தங்களது வசதிக்காய்
சிறீலங்கா அரசுடனே
சேர்த்திட்டார் வெள்ளையர்கள்

அவர்தம் ஆட்சியிலே
அதிகமிது உறைக்கவில்லை
அதனாலே நாமதிகம்
அலட்டிக் கொள்ளவில்லை

எம்நாட்டை நாமே
எழிலாய் ஆண்டிடுவோம்
எல்லாரும் சமமாய்
இணைந்தே வாழ்ந்திடுவோம்

சிங்களத் தலைவர்களின்
சிங்கார வார்த்தைகளில்
நம்பிக்கை கொண்டதனால்
நாம்மோசம் போய்விட்டோம்

சும்மா இருக்காமல்
சுதந்திரத்தைக் கேட்டிட்டோம்
சுதந்திரமும் கிடைத்தது ? 48இலே
சுதந்திரமும் கிடைத்ததாம்.

அம்மே தாத்தேயென்று
அழைத்துக் கொஞ்சியோரின்
அன்பு பேச்செல்லாம்
அடியோடு போயாச்சு
அண்ணா தம்பியென்று
அழகாக நடித்தவரின்
சுயரூபம் மெல்லமெல்ல
சுழன்றாடத் தொடங்கியது

அமைதியாய் வாழ்ந்தவரை
அடித்தழிக்கும் பழக்கத்தை
ஐம்பத்தெட்டில் பண்டா
அழகாய் தொடக்கிவிட்டார்

என்பங்கைப் பாரென்று
எழுந்துநின்ற ஜேயாரும்
ஒன்றல்ல இரண்டுமுறை
ஓடஓட விரட்டிவிட்டார்

தனியாகச் சிங்களத்தை
தான்நாங்கள் பாவிப்போம்
அதிகாரத் தொனியினிலே
அறுதியிட்டுச் சொன்னார்கள்

ஒப்பந்தஞ் செய்தார்கள்
ஒருதலையாய் கிழித்தார்கள்
ஒன்றும் தரமாட்டேன்
ஓடிப்போ என்றார்கள்

சத்தியாக் கிரகஞ்செய்த
சமாதானத் தலைவருக்கு
காலிமுகத் திடலினிலே
கல்லடியும் பொல்லடியும்

அடியை வாங்கிவிட்டும்
அவர்களொன்றும் செய்யவில்லை
அஹிம்சை அஹிம்சையென்று
அடிக்கடி சொல்லிநின்றார்

அவர்களது அறிக்கைகளும்
அடிக்கடி தொல்லைதர
அதற்கென்று ஒருதிட்டம்
அழகாய் புனைந்திட்டார்

அஹிம்சை பேசியோரின்
அகன்ற வாய்களினை
அமைச்சர் பதவியுடன்
அழகாக மூடிட்டார்

பணத்தாசை பிடித்திருந்த
படித்தநம் தலைவர்கள்
பதவிக்கும் பஜிரோக்கும்
பல்லிளித்து நின்றிட்டார்

உலகத் தமிழருக்காய்
உன்னதமாய் மாநாடு
உருவாகி நிற்றல்கண்டு
உள்ளங்குமுறி நின்றார்

மகத்தான வகையினிலே
மாநாடு நடக்கையிலே
கொடூரக் காரர்கள்
கொலைக்களமாய் ஆக்கிட்டார்

துயர்நிறைந்த காட்சியினை
தூரத்தேபார்த்து நின்ற
துரோகக் கும்பலுக்கு
துரையப்பா தான் தலைவன்

தானாகப் படித்து
தமிழன் பல்கலைபோனான்
தாங்காத சிங்களவன்
தரப்படுத்தல் கொண்டுவந்தான்

எங்கே எழுந்தாலும்
எப்படித்தான் முளைத்தாலும்
எடுப்பார் சட்டத்தை
எமையடக்கிப் போட்டிடுவார்

படிப்பினிலே தமிழர்கள்
பார்புகழ வாழ்தல்கண்டு
காமினியும் மத்தியுவும்
களத்திற்கே வந்திட்டார்

ஆசியாவில் பெரிதாக
அழகாக எழுந்துநின்ற
புத்தகக் களஞ்சியத்தைப்
புசுக்கிப் போட்டிட்டார்

எங்கே எழுந்தாலும்
எப்படித்தான் முளைத்தாலும்
எடுப்பார் சட்டத்தை
எமையடக்கிப் போட்டிடுவார்

இனியும் இவரோடு
இணைந்திருக்க முடியாது
தமிழர் தலைவர்கள்
தனியாக யோசித்தார்

வல்லவர்கள் ஒன்றுகூடி
வடிவாக யோசித்து
வட்டுக் கோட்டையிலே
வரைந்திட்டார் ஒருதிட்டம்

தமிழர்கள் இந்நாட்டில்
தலைநிமிர்ந்து வாழ்வதற்காய்
தமிழீழம் அமைத்திடவே
தந்திடுங்கள் ஆணையென்றார்

வரலாறு காணாத
வகையினிலே மக்களெல்லாம்
வரிசையிலே காத்திருந்து
வாக்களித்தார் அவர்களுக்கு

பெற்றிட்ட ஆணையினை
பெரிதாக மதித்திடுவோம்
பெட்டிகளைக் கட்டுகையில்
பெரிதாகச் சத்தமிட்டார்

கொழும்பு போனதுமே
கொள்கையினை விட்டாச்சு
தலைநகரைக் கண்டதுமே
தம்மண்ணை மறந்தாச்சு

வீழ்ந்தோம் நாம்வீழ்ந்தோம்
விழாமல் வாழ்தலைவிட
வீழ்ந்தாலும் எழுந்திடலே
விரர்க்குச் சிறப்பு

தமிழர் உரிமைபெற
தலைநகரம் தேவையில்லை
தன்மான உணர்வுடனே
தனியாக நாம்முயல்வோம்

தேசத்தைக் காத்திடவே
தேசீயத் தலைவரின்கீழ்
அணியணியாய் இளைஞர்கள்
அணிவகுத்து நின்றிட்டார்

துரோகிகளை அழித்தலுடன்
துவங்கிய இப்போராட்டம்
அநியாயப் படையினையும்
அலைக்கழிக்கத் தொடங்கியது

சிங்களப் படைகள்
சிதறி ஓடியது
சிறிலங்கா அரசு
சிந்தை கலங்கியது

வெளிநாட்டு அமைச்சருக்கு
வெளிக்கிடவும் நேரமில்லை
விசயத்தைச் சொல்வதற்காய்
விரைந்திட்டார் இந்தியாவுக்கு

போராட்ட நோக்கத்தைப்
பொருட்டே படுத்தாமல்
ஈழத்து நிலைமையினை
இந்தியாவும் பார்த்தது

தமிழீழம் அமைந்திட்டால்
தமிழினமே ஒன்றுபடும்
தமிழ்நாட்டு மக்களுக்கும்
தடைபோட முடியாது

தமிழர்படும் துயரை
தாங்கிவிட முடியவில்லை
விடிவைத் தருவதற்காய்
விரைந்தே வருவோமென்றார்

நல்லவர்போல் நடித்து
நம்மீழ நாட்டிற்குள்
நாசுக்காய் காலூன்றி
நயவஞ்சனை புரிந்தார்

ஆனாலும் எம்படையை
அடக்கிவிட முடியவில்லை
அழிக்கவென்று வந்தவர்கள்
அழிந்தே போனார்கள்

தளராத எம்படைகள்
தந்திட்ட தாக்குதலால்
தானாகப் பின்வாங்கி
தளர்வுடனே போய்ச்சேர்ந்தார்

உள்ளத்தில் உறுதியுடன்
உண்மையான இலக்கிற்காய்
உறுதியாய் போராட்டம்
உயிரூட்டம் பெற்றதுவே

காமாலைக் கண்ணனுக்கு
கண்டதெல்லாம் மஞ்சள்
பைத்தியக் காரனுக்கோ
பாரிலுள்ளோர் பைத்தியங்கள்

பயங்கர வாதியாக
பவனிவரும் அமெரிக்கா
தந்ததெங்கள் படையணிக்கு
பயங்கரவாதி பட்டம்

அமெரிக்க அரசினரின்
அநியாயம் புரியாமல்
அவர்தம் நண்பர்களும்
அவ்வழியே நின்றிட்டார்

கதையை முடித்துவிட்டேன்
கதையை முடித்துவிட்டேன்
கள்ளச் சிரிப்புடனே
கதிர்காமர் துள்ளிநின்றார்

இத்துடனே முடிந்தது
இவர்களது போராட்டம்
சந்திரிக்கா அம்மாக்கு
சரியான சந்தோசம்

அடங்காத் தமிழனுக்கு
இவையெல்லாம் பொருட்டல்ல
அடுத்தகட்டத் தாக்குதலில்
அம்மாக்கு விளங்கியது

ஆனாலும் அகம்பாவம்
அவரை விடவில்லை
அழிப்பென் புலியையென்றார்
அழிந்ததுவோ அவராட்சி

சமாதானம் காணாமல்
சாயமாட்டேன் எனச் சொல்லி
ரம்மியமாய் பேசும்
ரணிலாரும் வந்திட்டார்

எதிரியுடன் பேசி
எமதுரிமை கிடைக்குமென்றால்
எங்கேயும் பேச
எப்போதும் நாம்தயார்தான்

நாம்ஆண்ட மண்மையும்
நமக்குரிய உரிமையையும்
நட்புடனே தருவரென்றால்
நாம் ஏன் உயிர் விடவேண்டும்

சமாதானம் வருவதற்கும்
சமமாக வாழ்வதற்கும்
உகந்ததொரு சுழலொன்று
உருவாகி உள்ளதுதான்

நேரான வழியினிலே
நேசக்கரம் நீட்டுகின்றோம்
அழுந்தப் பிடித்திட்டால்
அரவணைத்துக் கொண்டிடலாம்

அப்படியொரு நிலமை
அமைந்தால் நல்லதுதான்
ஆனாலும் அதற்காக
அவசரப்படக் கூடாது

கடந்த காலத்தின்
கசப்பான அனுபவங்கள்
மீண்டும் வராதென்று
முடிவெடுக்க முடியாது

அதனாலே நாமெதிலும்
அவதானமாயிருப்பேம்
எத்தகைய பாதையையும்
எதிர்கொள்ளத் துணிந்திடுவோம்

அதர்மம் நிலைக்காது
அநியாயம் வாழாது
அதனாலே எம்விடிவை
அசையாமல் நம்புகிறேன்

ஆண்ட மண்ணை நாம்
ஆளத்தான் போகின்றோம்
அதுவரையில் நடப்பதினை
அமைதியாய் பார்த்திருப்போம்.</span>

மணிவாசகன்/தமிழ் ஒசை

சிந்திக்க வலையில் தந்தது சூரியன். கொம்...!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply


Messages In This Thread
சிந்திக்க ஓர் சீர் கவி - by kuruvikal - 04-23-2004, 10:46 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)