03-26-2004, 12:16 AM
--------------------------------------------------------------------------------
அரசியல்த்துறை,
தமிழீழ விடுதலைப் புலிகள்,
தமிழீழம்.
25-03-2004.
<b>மட்டு-அம்பாறையின் தற்போதைய நெருக்கடி தொடர்பாக அங்குள்ள போராளிகளுக்கும் பொறுப்பாளர்களுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளின்
தலைமைப்பீடம் விடுக்கும் வேண்டுகோள்!</b>
நமது மண்ணின் பெருமைக்கும் மாவீரர்களிற்கு களங்கத்தை ஏற்படுத்தியிருக்கும் கருணாவின் நடவடிக்கைகள் தொடர்பாக நீங்கள் உண்மைகளைப் புரிந்துகொண்டு, சரியான நிலைப்பாட்டை எடுக்க வேண்டிய தருணம் வந்துவிட்டது. தமிழீழத்தின் மட்டக்களப்பு-அம்பாறை மாவட்டங்களின் தளபதியாக இருந்த கருணா தான் புரிந்த குற்றங்களை மறைப்பதற்காகப் பிரதேச வேறுபாட்டையும், சகோதரச் சண்டையையும் ஒருங்கே ஏற்படுத்த முனைகிறார்.
மட்டக்களப்பு மக்களும், போராளிகளும் தேசியத் தலைவரை அணுகவிடாமலும் அவரோடு தொடர்புகொள்ள முடியாமற் தடுத்து வைத்திருந்து, தன்குற்றங்களை மறைக்க முனைந்தார். அதையும் மீறி, அவரின் பாலியற் குற்றங்களும் நிதி மோசடிகளும் தன்னிச்சையான படுகொலைகளும் தலைமைப்பீடத்திடம் ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்பட்ட போது, விசாரணைக்காக அவர் அழைக்கப்பட்டார்.
தனது குற்றங்கள் நிரூபணமாகி, ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படுமென அஞ்சிய கருணா, தலைமையின் கட்டளைக்குக் கீழ்ப்படிய மறுத்ததுடன் தலைமையின் மேற் பொய்யான பல பழிகளையும் சுமத்தினார். அத்தோடு, தான் பிரிந்து இயங்கப்போவதாகவும் தானே கிழக்கு மாகாணத்தின் தலைவர் என்றும் மீனக வளாகத்திற்குப் பொதுமக்கள் சிலரையும் அழைத்து போராளிகளின் முன் பிரகடனம் செய்துள்ளார்.
இத்தனை ஆண்டுகாலமாக ஆயிரமாயிரம் மாவீரர்களினதும் கரும்புலிகளினதும் புனிதமான உதடுகளால் உச்சரிக்கப்பட்டுவந்த உறுதிமொழியைச் (சத்தியப் பிரமாணத்தை) செய்யவிடாது தடுத்துள்ளார். எம்மாவீரர் மீது போர்த்தப்படுவதும் உலகத்தமிழர்களால் வணங்கப்படுவதுமான எம்முயிரினும் மேலான தேசியக்கொடியை அவமதித்துள்ளார். எமது தலைவரின் படங்களை உடைக்கும் படியும் எரிக்கும் படியும் போராளிகளை வற்புறுத்தியுள்ளார். தமிழ்த் தேசியத்தைக் கொச்சைப்படுத்தி ஊடகங்களுக்குக் கருத்து வழங்கியுள்ளார்.
மட்டு-அம்பாறை மாவட்டத்திற் பல்வேறு படுகொலைகளுக்கும் பாரிய சொத்தழிவுகளுக்குங் காரணமாக இருந்த தேசத்துரோகிகளுடனும் எதிரிப்படைத் தளபதிகளுடனும் தன்சுயநலத்திற்காகக் கூட்டுவைத்துள்ளார். உண்மை நிலையினைத் தெளிவுபடுத்தும் பத்திரிகைகளை எரித்தும் ஊடகங்களைத் தடைசெய்தும் மட்டக்களப்பு-அம்பாறை மக்களுக்கு உண்மை நிலை தெரியவராது தடுத்துவருகிறார்.
நாம் போராளிகளாக இணையும் பொழுது உறுதியெடுத்துக்கொள்ளும் குறிக்கோள் மற்றும் செயற்பாட்டுக் கோவையின்படி இவை அனைத்தும் தண்டனைக்குரிய குற்றங்கள் என்பதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள். குற்றங்களை ஏற்று, மன்னிப்புப் பெறுவதற்கான காலஅவகாசத்தை எமது தலைவர் கருணாவிற்கு வழங்கியும் கருணா அதை ஏற்றுக்கொள்ளவில்லை. மட்டக்களப்பு-அம்பாறை மக்களைப் பிரதேசவாதத்தால் ஏமாற்றி, சுரண்டி, தன் உல்லாச வாழ்க்கையையும் சொகுசுகளையும் தொடர்ந்து அனுபவிக்கத் திட்டந் தீட்டிவருகிறார். மட்டக்களப்பு-அம்பாறை மக்கள் இன்னமும் கருணாவாற் சுரண்டப்படுவதை எமது தேசியத் தலைமை அனுமதிக்கப்போவதில்லை.
இன்று உலகத்தின் முன் குற்றவாளியாகவும், துரோகியாகவும் அவமானப்பட்டுநிற்கும் கருணா தன்னைத் தண்டனையிலிருந்து காப்பதற்காக உங்களை முன்னே நிறுத்திப் பலிகொடுக்கத் திட்டமிடுகிறார். அப்பாவிப் போராளிகள் எவரும் அநியாயமாகப் பலியாகக்கூடாதென்பதே எமது தேசியத் தலைவரது நோக்கமாகும்.
உண்மை நிலையை அறியாத போராளிகளையும் மக்களையும் பயன்படுத்தி, எம் விடுதலைப் போராட்டத்தையும் எம் மண்ணையும் துரோகிகளுக்கும் எதிரிகளுக்கும் விற்றுவிடுவதே கருணாவின் திட்டமாகும். நாம் இதுவரை சிந்திய இரத்தத்தையும், புரிந்த தியாகங்களையும் அந்நியருக்கு விற்கின்றார். எம்மினத்தைக் காப்பதற்காக, துரோகி கருணாவை எம்மண்ணிலிருந்து களைவதற்கான நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
கருணாவின் துரோகத்தைப் போராளிகள் நன்கு விளங்கிக்கொண்டு உடனடியாகக் கருணாவை விட்டு விலகிவிடவேண்டும். கருணாவின் மீது, ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படுவதை எதிர்க்க முனையும் எவரும் தமிழ்த் தேசியத்தின் துரோகியாகவே கணிக்கப்படுவார். அமைப்பில் இணைந்துள்ள அனைவரும் எமது தேசியத் தலைவர் மேதகு. வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் தலைமையை ஏற்று இணைந்தவர்கள் என்ற வகையிலும் தலைவரை நம்பியே பெற்றோர்களும் தம் பிள்ளைகளைத் தந்துள்ளார்கள் என்ற வகையிலும் உண்மையை அறியாமல் கருணாவின் அருகில் நிற்கும் போராளிகள் நிலைமையைப் புரிந்துகொண்டு கருணாவை விட்டு விலகி வரவேண்டுமென மீண்டும் வேண்டுகிறோம்.
கருணாவை விட்டு விலகி, வீடு சென்று தம் குடும்ப உறவுகளுடன் இணைந்து வாழ விரும்புபவர்களுக்கும் எமது தேசியத்தலைவர் பூரண அனுமதி வழங்கியுள்ளார் என்பதனையும் அறியத்தருகிறோம்.
போராளிகளில் எவராவது இனிமேலும் கருணாவின் சார்பாக ஆயுதமேந்தி நின்றால், அதன் விளைவுகளுக்கு அப்போராளியே தனிப்பட்ட பொறுப்பாளியாவார். அவரின் இறப்பும் மாவீரர் பட்டியலிற் சேர்த்துக்கொள்ளப்படமாட்டாது.
கருணாவும் அவரது அடிவருடிகளும் செழிப்பதற்காகத் தமிழீழம் மீட்கப் புறப்பட்ட போராளிகள் அநியாயமாக மடியவேண்டுமா? கருணாவின் பக்கம் நிற்கும் அணித்தலைவர்கள் பொறுப்புணர்வுடன் சிந்தித்து வரலாற்றுப் பழியிலிருந்து விலக வேண்டும்.
மட்டக்களப்பு-அம்பாறை மண்ணின் வீரவரலாறு கருணாவாற் கறைபடிந்து நிற்கலாகாது. எமது மண்ணின் மாவீரமும் அர்ப்பணிப்பும் உழைப்பும் தலைநிமிர்ந்து நிற்கும் வகையில் நாம் அனைவரும் ஒன்றுபட்டு உழைப்போம்.
'புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்"
--------------------------------------------------------------------------------
நன்றி - தமிழ் நாதம்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

