Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலைகள்
#2
ஈழத்தமிழர் ஒடுக்குதலுக்குள்ளாகி வருதலை சர்வதேச சமூகத்தின் மனச்சாட்சிக்கு உறுத்திய வரலாற்றுப் பதிவுகள்

<b>"தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலைகள்"

சா.ஆ. தருமரத்தினம்</b>

பிரான்ஸ் நாட்டின் தலைநகரான `பாரி' நகரில் ( பிரெஞ்சு மொழி உச்சரிப்பே பாரி) நடைபெற்ற மூன்றாம் அனைத்துலகத் தமிழாராய்ச்சி மாநாடு அதே நகரை தலைமைப் பணியகமாகக் கொண்டியங்கும் யுனெஸ்கோவின் தலைவர் டாக்டர் ஆதிசேஷாவினால் வைபவ முறைப்படி ஆரம்பித்து வைக்கப்பட்டமை தெரிந்ததே!

அனைத்துலகத் தமிழாராய்ச்சி மன்றத்தினால் நடாத்தப்பட்ட அனைத்துலகத் தமிழாராய்ச்சி மாநாடுகள் வரிசையிலான மேற்படி மூன்றாவது மாநாட்டில் வைத்தே அதன் நான்காம் மாநாட்டை இலங்கைத் தீவில் தமிழ் மக்கள் செறிந்து வாழும் யாழ்ப்பாணத்தில் நடாத்த முடிவு செய்யப்பட்டிருந்தது.

அத் தீர்மானத்திற்கு அமைவாக 1974 ஆம் ஆண்டு ஜனவரித் திங்கள் 3 ஆம் நாளில் ஆரம்பித்து 9 ஆம் திகதி வரை நான்காம் அனைத்துலகத் தமிழாராய்ச்சி மாநாட்டை நடத்துவதற்கான எற்பாடுகளை அனைத்துலகத் தமிழாராய்ச்சி மன்றத்தின் இலங்கைக்கான கிளை மேற்கொள்ளமுயன்றபோதே இலங்கைக்கிளையில் பெரும் அரசியல் கொந்தளிப்பு ஏற்பட்டது.

மேற்படி தமிழாராய்ச்சி மாநாட்டை மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூரிலும், இந்திய மாநிலமான தமிழக சென்னை நகரிலும் நடைபெற்ற முதலிரு மாநாடுகளையும் சம்பந்தப்பட்ட அந்தந்த நாடுகளின் ராஜாங்கத் தலைவர்களே திறந்து வைத்த பாங்கில் இலங்கையில் இடம் பெறவிருந்த நான்காம் அனைத்துலகத் தமிழாராய்ச்சி மாநாடும் இத்தீவின் ராஜாங்கத் தலைவரினால் திறந்து வைக்கப்பட வேண்டுமென ஒரு சாரார் வலியுறுத்தினர்.

அதனை மேற்படி கிளையின் இளைய தலைமுறையினராகிய உறுப்பினர்கள் ஏகோபித்து பலமாக ஆட்சேபித்தனர். காரணம், சமீபத்தில்தான் 1972 இல் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்ட இலங்கை சோசலிச குடியரசுக்கான அரசியல் யாப்பு, தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை முற்றாக நிராகரித்திருந்தமையால் தமிழ் மக்களின் பலத்த எதிர்ப்புக்கு உள்ளாகி வந்த நிலையில், அதே யாப்பைக் கொண்டு வந்திருந்தவரான பிரதமர் சிறிமாவோவை மாநாட்டிற்கு அழைப்பதன் மூலம் சர்வதேசப் பிரதிநிதிகள் முன்னிலையில் அவர் கௌரவிக்கப்படுவது முரண்பாடானதாக அமையும் என்பதனாலேயே.

இளைய தலைமுறை உறுப்பினர்களது பலத்த எதிர்ப்பினை வெற்றி கொள்ள முடியாத நிலையில் முக்கூட்டு அரசின் தலைவியாராகிய சிறிமாவோ அம்மையாரின் ஆதரவாளர்களாகிய முற்போக்காளர் அனைத்துலகத் தமிழாராய்ச்சி மன்றத்தின் இலங்கைக் கிளையில் இருந்து விலகியதுடன் மாநாட்டையும் பகிஷ்கரிக்கத் தீர்மானித்தனர் . மேற்படி இலங்கைக் கிளையின் தலைவர் டாக்டர் எச். டபிள்யூ. தம்பையாவும் தமது தலைமைப் பதவியைத்துறந்தார்.

அந் நிலையில் பேராசிரியர் சு.வித்தியானந்தன் அனைத்துலகத் தமிழாராய்ச்சி மன்றத்தின் இலங்கைக் கிளையின் தலைவராகவும்,கட்டடக்கலை விற்பன்னர்களாகிய துரைாஜாவும், கோபாலபிள்ளை மகா தேவாவும் செயலாளர், பொருளாளராகவும் முறையே தெரிவுசெய்யப்பட, மகாநாட்டு ஒழுங்குகள் துரிதகதியில் முன்னெடுக்கப்பட்டன.

நான்காம் அனைத்துலகத் தமிழாராய்ச்சி மகா நாட்டைத் தலைநகர் கொழும்பில் நடத்துவதாயின் பண்டாரநாயக்கா சர்வதேச மகா நாட்டு மண்டபத்தை இலவசமாக உதவுவதாக முன்னர் அறிவித்திருந்த சிறிமாவே அம்மையாரின் அரசோ, இப்போது மகா நாட்டு ஏற்பாடுகளையே குழப்பும் எத்தனத்தில் இறங்கியது. பொது மக்களால் நிர்மாணிக்கப்பட்டதும் அரசினால் பொறுப் பேற்கப்பட்டதுமான வீரசிங்கம் மண்டபத்தினதும் மற்றும் அரசு ஆதரவாளர் யாழ். மேயர் அல்பிரட் துரையப்பா நிர்வாகத்திலிருந்த யாழ். திறந்த வெளியரங்கின் உபயோகமும் மாநாட்டு ஏற்பாட்டாளர்களுக்கு முதலில் மறுக்கப்பட்டது. அரசாங்கப் பாடசாலை மண்டபங்களும் அவ்வாறே மறுக்கப்பட்டன.

எனவே, மாற்று ஒழுங்காக தனியார் மண்டபங்களை மாநாட்டு அமைப்பாளர்கள் எற்பாடு செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டிருந்தனர். மேலும், மாநாட்டுக்கு அரசு அனுமதி இல்லாமையால் பொதுத் தொடர்பு ஊடகங்களான பத்திரிகைகளும், வானொலியும் மாநாடு நடைபெறாது எனும் ஐயப்பாட்டையே தோற்றுவிக்கத் தலைப்பட்டன. அரசு ஏற்படுத்த முனைந்த பொய்ப் பிரசாரத்தை முறியடிக்கும் வகையில் "1974 , தை 3 ஆம் திகதி தொடக்கம் 9 ஆம் திகதி வரை நான்காம் அனைத்துலகத் தமிழாராய்ச்சி மாநாடு கண்டிப்பாக யாழ். நகரில் இடம்பெறும் எனும் வாசகம் மாநாட்டின் நிர்வாகச் செயலாளர் பேரம்பலம் கடிதம் மூலம் விடுத்த வேண்டுகோளுக்கு அமைய, கட்டணம் அறவிடாதே இத் தீவு பூராவும் இருந்த தமிழ் திரைப்படமாளிகைகளின் காட்சிகள் தோறும் அவற்றின் திரைகளில் காண்பிக்கப்பட்டன. அரசின் இருட்டடிப்பு முயற்சி இவ்வாறே வெற்றிகொள்ளப்பட்டது.

அந் நிலையில் செய்வதறியாது திகைத்த அரசு மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இத்தீவுக்கு வருகைதந்திருந்த அறிஞர்களையும், பார்வையாளர்களையும் கட்டுநாயக்க சர்வதேச விமானநிலையத்தில் வைத்தே நாடு கடத்தியது. அவ்வாறு நாடு கடத்தப்பட்ட தமிழ் அறிஞர்கள்,பார்வையாளர்கள் அவரவர் நாட்டுத் தலைநகரங்களில் வைத்து சர்வதேச பத்திரிகையாளர்களிடம் ஒரு பண்பாட்டு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இயலாதவாறு தமக்கு இழைக்கப்பட்ட அநீதியைப் பாருக்கு பறைசாற்றினர். அரசுக்கு அதனால் பெரும் தலைக்குணிவே ஏற்பட்டிருந்தது. இருப்பினும், சென்னையில் இருந்தே வருவாரென எதிர்பார்க்கப்பட்ட பார்வையாளரான உலகத் தமிழர் இளைஞர் பேரவையின் தலைவர் டாக்டர் ஜனர்த்தனன் மட்டும் விதிவிலக்காக நாட்டினுள் பிரவேசிக்க முடிந்தது. மாறாக, மலேயா சென்று சிங்கப்பூர் விமானம் மூலம் இலங்கையை வந்தடைந்த டாக்டர் ஜனார்த்தனன், மலையகத் தமிழ் பகுதிகளில் தமது விஜயத்தை முடித்துக்கொண்ட பின்பே யாழ்ப்பாண மாநாட்டை வந்தடைந்தார்.

தமிழாராய்ச்சி மாநாடு நடைபெறுவதற்காகக் குறிப்பிடப்பட்டிருந்த நாளுக்கு மூன்றே மூன்று நாட்கள் மட்டுமே எஞ்சியிருந்த போதே மாநாட்டை நடத்துவதற்கான அங்கீகாரம் அரசினால் வழங்கப்பட்டது. மூன்றாம் அனைத்துலகத் தமிழாராய்ச்சி மாநாடு பிரான்சு நாட்டின் ராஜாங்கத் தலைவரால் அல்லாது யுனெஸ்கோ அதிபர் டாக்டர் ஆதிஷேசையாவினால் திறந்து வைக்கப்பட்ட அதே பாங்கில் அனைத்துலகத் தமிழாராய்ச்சி மாநாட்டு வரிசையையே ஆரம்பித்து வைத்திருந்தவரான அனைத்துலகத் தமிழாராய்ச்சிமன்றத்தின் தோற்றுநர் வண. சேவியர் தனிநாயகம் அடிகளாரால் நான்காம் அனைத்துலகத் தமிழாராய்ச்சி மாநாடும் யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் வைத்து வைபவ முறைப்படி திறந்து வைக்கப்பட்டது.

மாநாட்டின் ஆய்வு அமர்வுகள் வீரசிங்கம் மண்டபத்திலும் யாழ். றிமர் மண்டபத்திலும் சிறப்பாக நடைபெற, அதன் கலை நிகழ்ச்சிகள் யாழ். திறந்த வெளியரங்கிலும் தமிழர் பண்பாட்டுப் பொருட்காட்சி சுண்டிக்குளி மகளிர் கல்லூரி மண்டபத்திலும் மாலையில் நடைபெற்றன. அயல் நாட்டுத் தமிழ் அறிஞர்களின் வருகையின்போது;

யாழ் நகரைச் சுத்தமாகவும், அலங்காரமாகவும் வைத்திருக்குமாறு யாழ். மாநகர ஆணையாளர் ஏ.ரி.சுந்தரம் பகிரங்கமாக விடுத்திருந்த வேண்டுகோளுக்கு யாழ். குடாநாடே முழுமையாகச் செவி கொடுத்திருந்தது. யாழ். நகரோ சோடனைகளாலும், மின் அலங்காரங்களாலும், சப்புறங்களாலும் இந்திர விழாக் கோலம் காட்டி நிற்க, 3 ஆம் திகதி முதல் 9 ஆம் திகதிவரை மாநாடு கோலாகலமாக நடைபெற்று முடிந்தது.

மேற்படி மாநாட்டின் பண்பாட்டுப் பொருட்காட்சியில் வைத்து டாக்டர் சாலை இளந்திரையன் உலகத் தமிழர் பண்பாட்டு இயக்கத்தைத் தொடக்கி வைத்ததும், சாலை இளந்திரையன் அதன் தலைவராகவும், குரும்பசிட்டி கனகரத்தினம் செயலாளராகவும் தெரிவு செய்யப்பட்டிருந்தமை யாவரும் அறிந்ததே.

முடிவடைந்த நான்காம் அனைத்துலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் கலந்து கொண்ட அயல் நாட்டு அறிஞர்களுக்கான வழியனுப்பு விழா மறுநாள் 10 ஆம் திகதி யாழ். திறந்த வெளியரங்கில் நடைபெற்றிருத்தல் வேண்டும். ஏற்பாடுகளின்படி யாழ். திறந்தவெளியரங்கு அதற்கெனத் தயார்நிலையில் இருந்துள்ள போதும், அதன் புறப்படலைகளோ பூட்டப்பட்டிருந்தன. யாழ். மாநகர முதல்வர் ஏ.ரி.துரையப்பாவிடம் இருந்து கடிதம் பெற்று வந்தால் மட்டுமே அரங்கின் புறப்படலைகள் திறக்கப்படும் என்று அரங்கின் காப்பாளர் தெரிவித்திருந்தார்.

யாழ். மாநகர சபை மேயர் தெரிவு இடம் பெறும் சந்தர்ப்பங்களில் சபை உறுப்பினர்கள் காணாமற் போவது வழமையே. அப்போதோ மாநகர முதல்வரே தலைமறைவாகி விட்டார். அவரது இருப்பிடம் அறியப்படாத நிலையில் வீரசிங்கம் மண்டபத்திலே மேற்படி வழி அனுப்பு விழாவை நடத்தவேண்டிய நிர்ப்பந்தம் மாநாட்டு அமைப்பாளர்களுக்கு ஏற்பட்டிருந்தது. வழியனுப்பு விழாவிற்குத் திரண்டு வந்திருந்த ஐம்பதினாயிரத்துக்கும் மேற்பட்ட ஆர்வலர்களை, மண்டத்தில் உள்ளடக்க இயலாத நிலையில் மண்டபம் முன்பாக அதற்கும் தெருவிற்கு இடைப்பட்ட நிலத்தில் நிறுவப்பட்ட திடீர் மேடையில் வழியனுப்பு விழா ஆரம்பமாக தெருவிற்கு மறுபக்கத்தில் புல்தரையில் உட்கார்ந்து விழா நிகழ்ச்சிகளைப் பார்வையாளர்கள் அவதானித்துக் கொண்டிருந்தனர். போக்குவரவுக்குத் தெரு மூடப்பட்டிராத போதும் மேடைக்கும் பொது மக்களுக்கும் இடையே பயணிக்க வேண்டாமென்று இரு புறத்தும் பணிபுரிந்த தொண்டர்களால் பணிவன்புடன் கேட்டுக் கொள்ளப்பட்டதன் பேரில், ஊர்திகள் யாவும் மாற்றுப் பாதையையே உபயோகித்தன. அதே பாதையால் மோட்டார் சைக்கிளில் வந்த போக்குவரவுப் பொலிஸ் அதிகாரி சேனாதிராஜாவும் பார்வையாளர்களுக்கும் மேடைக்கும் குறுக்கே பயணியாது சுற்று வீதியூடாக யாழ்.பொலிஸ் தலைமையகம் சென்றடைந்தார். அதனையொரு சாட்டாக எடுத்துக் கொண்டு, அப்போதுதான் அனுராதபுரத்தில் இருந்து வந்தடைந்த கலகம் அடக்கும் பொலிஸார் பார்வையாளர் மீது கட்டவிழ்த்து விடப்பட்டனர்.

இதற்கு முன்னேற்பாடாகப் போலும் யாழ்.பொலிஸ் அத்தியட்சகர் ஆரியசிங்கா, சுகயீன விடுமுறை வாங்கியிருந்தார். ஆகவே, அதற்கான முழுப்பழியும் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் சந்திரசேகராவின் தலையில் சுமத்தப்பட்டது. வெண்கலக் கடையில் புகுந்த யானைகளின் அட்டகாசம் போன்று, விழா நிகழ்வுகளை அமைதியாக செவிமடுத்து கொண்டிருந்த அப்பாவிப் பொது மக்கள் மீது காரணமின்றி கலகம் அடக்கும் பொலிஸார் குண்டாந்தடியடிப் பிரயோகம் செய்து, வகை தொகையின்றி கண்ணீர்குண்டுகளையும் எய்து உச்சவலு மின் கம்பிகள் அறுந்து விழும்படியாக துப்பாக்கிக் குண்டுகளையும் தீர்த்தனர்.

சம்பவித்த அசம்பாவிதத்தால் நூற்றுக்கணக்கானோர் பாதிக்கப்பட்டனர். பெண்களும் பிள்ளைகளும் நெரிசலில் மிதிபட்டுக் காயமடைய நேரிட்டதுடன் அநேகர் உடுத்த உடைகளையும் இழக்க நேரிட்டது. உச்சவிசை மின் கம்பிகளில் சிக்குண்ட ஒன்பது தமிழர் பதைக்க பதைக்க படுகொலை செய்யப்பட்டனர். யாழ்.மத்திய பஸ் நிலையம் வரை அடித்து விரப்பட்ட மக்கள், ராணி படமாளிகையில் அடைக்கலம் தேட முற்பட்ட போதும் படமாளிகைக்குள்ளேயும் கண்ணீர்ப்புகைக் குண்டுகள் பாய்ச்சப்பட்டன.

உலகத் தமிழர் பேரவைத் தலைவர் டாக்டர் ஜனார்த்தனனைக் கைது செய்வதற்கும் ஓர் எத்தனம் மேற்கொள்ளப்பட்டதாயினும், ஒரு கிறீஸ்தவ மதகுருவின் உடையில் மாறுவேடம் பூண்டு ஜனார்த்தனன் தலைநகர் கொழும்பு சென்றடைய இந்திய தூதுவரகம் மூலம் பாதுகாப்பாக அவர் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

இந்திர விழாக்கோலம் பூண்டிருந்த யாழ் நகரம், ஒரே நொடிப்பொழுதில் சோகமயமாகியது. முழு யாழ்ப்பாணமும் துக்கம் அனுட்டித்ததனால் அவ்வாண்டு தை முதல் நாளில் எந்தவொரு இல்லத்திலும் பால் பொங்கவில்லை, மாறாகத் தமிழர் உள்ளங்கள்தாம் கொதித்துப் பொங்கின. தமிழாராய்ச்சித் தியாகிகள் நினைவாக நிறுவப்பட்ட ஒன்பது நினைவுத் தூண்கள் இன்னும் யாழ்.வீரசிங்க மண்டபம் முன்பாக மேற்படி அனர்த்தத்தை நினைவுபடுத்துவனவாக அமைகின்றன. ஈழத்தில் தமிழர்கள் ஒரு பண்பாட்டு நிகழ்ச்சியைத்தானும் அரசின் தலையீடு இல்லாது தாமே சுதந்திரமாக நடத்தவியலாதவாறு ஒடுக்கப்பட்டு வருதலை, உலகின் மனச்சாட்சிக்கு உறுத்திய முதல் வலாற்றுப் பதிவாக இதனை எடுத்துக் கொள்ளலாம்.

மேலும், நடைபெற்ற தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலைகளை விசாரிப்பதற்கு ஒரு நீதி விசாரணைக்குழுவை அரசு நியமிக்க வேண்டுமென விடுக்கப்பட்ட வற்புறுத்தல் யாவும் அசட்டை செய்யப்பட்டன.

எனவே, ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதியரசர் தலைமையில் மற்றுமொரு ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதியரசர் மாணிக்கவாசகர், தென் இந்தியத் திருச்சபையின் முதல் யாழ்.மறை வட்ட ஆயர் அதி வண. சபாபதி குலேந்திரன் மூவரையும் உள்ளடக்கியதாக சம்பந்தப்பட்ட தமிழாராய்ச்சி மாநாட்டுப் படுகொலைகளை விசாரித்து அறிக்கை சமர்ப்பிக்கும் பொருட்டு ஒரு பொது விசாரணைக்குழு யாழ்ப்பாணம் பொது அலுவல்கள் குழுவின் தலைவர் டாக்டர் பசுபதியினால் உத்தியோபூர்வமாக நியமிக்கப்பட்டது. இத்தீவின் வரலாற்றில் அவ்வாறாக நியமிக்கப்பட்டிருந்த முதல் பொது விசாரணைக் குழு அதுவே.

யாழ்பொது அலுவல்கள் குழுவின் தலைவர் டாக்டர் பசுபதியின் புதல்வர், சிவா பசுபதி சமீபத்தில்தான் இத்தீவின் சட்டத்துறை நாயகமாக நியமனம் பெற்றிருந்தமையால், அவரது தந்தையின் செயற்பாடு சிவா பசுபதியின் பதவிக்கு ஏதும் தீங்கை உண்டுபண்ணக்கூடுமென்ற அச்சம் காரணமாக, டாக்டர் பசுபதிக்குப் பதிலாகப் பேராசிரியர் கு.நேசையா யாழ்ப்பாணம் பொது மக்கள் குழுவின் தலைமைப் பதவியை ஏற்றுக் கொண்டார்.

பொது விசாரணைக்குழுவின் செயலாளராக வல்வெட்டித்துறைப் பெரியார் வேற்பிள்ளை இடம் பெற, முன்னாள் மாவட்ட நீதியரசர் தம்பித்துரை வழக்குத் தொடுநராகவும், ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற அறிவிப்பாளர் இ.அரசரத்தினம் மொழிபெயர்ப்பாளராகவும், மற்றுமொரு ஓய்வு பெற்ற அறிவிப்பாளர் இரத்தினராஜாவும் மற்றும் இருவரும் அறிவிப்பாளர்களாவும் விசாரணையைப் பதிவு செய்யும் பொருட்டு நியமிக்கப்பட்டனர். சுண்டுக்குளி சோமசுந்தரம் ஒழுங்கையில் இருந்த சேனாதிராஜாவின் இல்லமே விசாரணைக்குழுவின் செயலகமாக அமைந்தது. விசாரணை அமர்வுகள் சுண்டுக்குளியில் விருந்தினர் இல்லமாக விளங்கிய பாம் கோட்டியில்தானே நடைபெற்றிருந்தன.

விசாரணைக்கு வரும்படி பொலிஸாரும் அழைக்கப்பட்டிருந்த பொழுதிலும் விசாரணைக்குப் பொலிஸார் சமுகம் தந்திராத நிலையிலேயே விசாரணைகள் தொடர்ந்து நடைபெற வேண்டியதாயிற்று. கிறெஸ்ரர் தலைமையில் விசாரணைகள் இடம் பெற்றிருந்தமையால் கிறெஸ்ரர் விசாரணைக் குழுவெனவே அது அறியப்பட்டது. விசாரணைகளின் கிறெஸ்ரர் விசாரணைக் குழு சமர்ப்பித்திருந்த அறிக்கையோ தமிழாராய்ச்சி மாநாட்டுப் படுகொலைக்களுக்கும் அங்கு சம்பவித்திருந்த அசம்பாவிதங்களுக்கும் பொலிஸாரே காரணமென அறிவித்திருந்நது.

சம்பந்தப்பட்ட கிறெஸ்ரர் குழுவின் விசாரணை அறிக்கையை மானிப்பாய் பாராளுமன்ற உறுப்பினர் வி.தருமலிங்கம் வெகு நாசூக்காக பாராளுமன்ற நடவடிக்கைகளின் பதிவேடான ஹன்சாட்டில் அதன்பின் னிணைப்பாகச் சேர்த்துக்கொள்ளும்படி செய்வதில் வெற்றி பெற்றிருந்தார். தமது பாராளுமன்ற சகாக்கள் எந்த அரசியல் கட்சிகளைச் சார்ந்தவர்களாயினும் யாவருடனும் வெகு சகஜமாகப் பழகும் ஒருவர் தருமலிங்கம். எனவே, பொதுப்படையாக ஏனையோர் அவரது உரைகளில் தலையீடு செய்வது அபூர்வம். தமது பாராளுமன்ற உரையில் கிறெஸ்ரர் விசாரணை அறிக்கையின் உள்ளடக்கத்தை விரிவாக பிரஸ்தாபித்திருந்த தருமலிங்கம், அவையில் அச்சமயம் பிரதமர் சிறிமாவோ அம்மையார் பிரசன்னமாக இருந்திராமையால் பிரதமரின் பார்வைக்காகத் தாம் சம்பந்தப்பட்ட கிறெஸ்ரர் அறிக்கையை ஹன்சார்ட்டில் அதன் பின்னிணைப்பாகச் சேர்த்துக்கொள்ள சமர்ப்பிப்பதாக உரைத்திருந்தார். எவர் ஒருவர் தானும் அதனை ஆட்சேபித்திராமையால் கிறெஸ்ரர் விசாரணை அறிக்கை முழுமையும் ஒரு வரலாற்றுப் பதிவாக ஹன்சாட்டில் இடம்பெற்றுவிட்டது.

ஹன்சார்ட்டில் இருந்து கிறெஸ்ரர் விசாரணை நீக்கப்பட வேண்டுமாயின், பாராளுமன்றத்தில் அதற்காக ஒரு பிரேரணை முன்மொழிந்து வழிமொழியப்பட்டு அப் பிரேரணை மீதான விவாதம் நடத்திய பின்பே அவ்வாறு செய்தல் சாத்தியம். கிறெஸ்ரர் விசாரணையை மென்மேலும் ஹன்சார்ட் பதிவுகளில் ஆவணப்படுத்துவதற்கே அது வழிவகுக்கும் என்பதால் அம் முயற்சி மேற்கொள்ளப்பட்டிருக்கவில்லை.

எனவே, தமிழாராய்ச்சிப் படுகொலைகள் சம்பந்தப்பட்ட விவகாரமும் ஒரு வரலாற்றுப் பதிவாக நாடாளுமன்ற நடவடிக்கை பதிவேடான ஹன்சார்ட் ஏட்டில் சதா கலத்துக்கும் நிரந்தரமாக ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.

"ஈழத் தமிழர் ஒடுக்குதலுக்கு உள்ளாகி வருதலை சர்வதேசிய சமூகத்தின் மனச்சாட்சியை உறுத்திய வரலாற்றுப் பதிவுகள் மேலும் தொடரும்."

<b>நன்றி - தினக்குரல்</b>
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply


Messages In This Thread
[No subject] - by Mathan - 01-09-2006, 02:02 PM
[No subject] - by மேகநாதன் - 01-09-2006, 04:17 PM
[No subject] - by selvanNL - 01-09-2006, 04:27 PM
[No subject] - by sri - 01-10-2006, 11:00 AM
[No subject] - by Vasampu - 01-10-2006, 11:48 AM
[No subject] - by Mathan - 01-10-2006, 11:56 AM
[No subject] - by Mathan - 01-10-2006, 12:10 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)