Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
மனநோய்
#1
உலக மனநல வாரம் நாளையுடன் முடிவடைவதையொட்டி இன்றைய இந்து நாளிதழ் ஒரு கட்டுரை வெளியிட்டுள்ளது. அது மனநோயின் அறிகுறிகளில் ஒன்றான "தவறான நம்பிக்கை" பற்றி எழுதப்பட்டக் கட்டுரை.

சென்னையிலுள்ள ஒரு மனநல மருத்துவரால் எழுதப்பட்ட அக்கட்டுரை அருமை.
மனநோயின் அறிகுறிகள் பல. சிந்தனையில் குழப்பம், உணர்ச்சி மாற்றங்கள்,கண்ணோட்டத்தில் மாறுபாடு,ஞாபகசக்திக் குறைகள், செயல் மாற்றங்கள், சுய உணர்வில் மாற்றங்கள், தூக்கக் குறைபாடுகள், பேச்சு மற்றும் எழுத்துக் குறைகள்,அறிவிலும், பண்பியல் தொகுப்பிலும் குறைகள் எனப்பல உள்ளன.

சமூக மனநல மருத்துவம் என்னும் ஒன்று உருவாகக் காரணமாயிருந்த "தன்னையே அறிந்த மனம்" (த மைண்ட் தட் ஃபவுண்ட் இட்செல்ஃப்) என்னும் புகழ் பெற்ற புத்தகம் எழுதியவர் கிளிஃபோர்டு பியர்ஸ் என்னும் மனநோயாளி.

தங்கள் நோயால் தினமும் மனநல மருத்துவர்களுக்கு மனநலக் கல்வி கற்பிப்பவர் மனநோயாளிகளே.

மனநோய் உடலியல், உளவியல் மற்றும் சமூகவியல் காரணங்களால் தான் ஏற்ப்படுகிறது. இக்காரணங்கள் தனித்து மற்றும் சேர்ந்து இயங்கும்போது பலப் பிரச்சினைகள் ஏற்ப்படுகின்றன. ஏழ்மைக்கும் மனநலத்திற்க்கும் உள்ளத் தொடர்பு நிரூபிக்கப்பட்ட ஒன்று. இன்பத்தைத் தேடி அலையும் மனப்போக்கும் மனநலமும் தொடர்புடையன.

மனநோய்க்குக் காரணம் தாழ்வு மனப்பன்மையே என்னும் அட்லரின் கொள்கையும், மனித உறவுகளில் ஏற்படும் குறைபாடுகளே என்னும் சலைவனின் கொள்கையும் என்னை மிகவும் கவர்ந்தவை.

"உன்னையறிந்தால்" என்னும் ஒரு ராஜ் டீ.வி பழைய தொடர் (1996-97) நிகழ்ச்சி சிறப்பான ஒன்றாக அப்போது இருந்தது. வெறும் பதினைந்து நிமிடங்கள் வரும் அத்தொடர் (வாரம் ஒரு முறை வியாழன் மாலை 4.30 மணிக்கு)மனநலம் குறித்து எனக்கு மிகவும் ஆர்வம் ஏற்ப்படக் காரணமாயிருந்த ஒன்று. கண்ட குப்பையான தொடரெல்லாம் மறுஒளிபரப்பாகும் இக்காலத்தில் இத்தொடர் காணாமல் போய்விட்டது எனக்கு வியப்பு. டாக்டர் ஆர்.கே.ருத்ரனின் தோற்றமும் அவரது தெளிவான சரளமான எளிமையான தமிழும், கடினமான (எனக்கு) விஷயத்தையும் சுருக்கமாக சொல்லி விளங்க வைத்தது என்னை மிகவும் கவர்ந்தன.

நான் இதுவரை ஆட்டோகிராஃப் வாங்கிய மூன்று பேர்களில் அவர் ஒருவர் (மற்ற இருவர் சுஜாதாவும்,ஜெயமோகனும்). எனக்கு இச்செயலில் விருப்பம் இல்லாவிட்டாலும் இவர்களைக் கண்டவுடன் அவ்வாறு கேட்கத் தோன்றியது.

டாக்டர் ருத்ரனின் சமூகப்பணி போல சுஜாதா மற்றும் ஜெயமோகனின் எழுத்துப்பணி (மனநலம் தொடர்பாக) சிறப்பான ஒன்றாகக் கருதுகிறேன். இதற்கு உதாரணமாக என்னால் ஒரு கதையைக் குறிப்பிட்டுச் சொல்ல இயலாது. இவர்களின் பல கதைகள் மனநலத்தைப் பற்றி விவரிப்பாகச் சொல்லும் திறன் படைத்தவை.

அஞ்சி அஞ்சி வாழ்ந்தது போதும் ராஜா என்று பாடியபடி வந்து மொட்டை மனிதர்களிடம் நடிகர் வடிவேலு உதைபடும் நகைச்சுவைக் காட்சி (எந்த படம்?) மனித உறவுகளில் ஏற்படும் குறைபாட்டிற்கு நல்ல உதாரணம்.

முதலில் ஒரு மொட்டையிடம் வந்து எங்க மொட்டை? பழநியா? என்று கேட்டு உதை படுவார்( மொட்டைக்குக் காரணம் - தாயின் மறைவு). இரண்டாவதாக ஒரு மொட்டையிடம் வந்து அம்மா எப்ப செத்துப் போனா? என்று கேட்டு உதைபடுவார் (இங்கு மொட்டைக்குக் காரணம் - திருப்பதி) மூன்றாவதாக மொட்டையிடம் ஒன்றும் கேட்காமல் இருந்ததற்காக உதை படுவார் ( இங்கு மொட்டை பற்றி பேசினால் சண்டை வரும் என்று சொன்னதற்காக). நான்காவதாக ஒரு கடையில் சோடா கேட்டுவிட்டு கடையில் இரண்டு மொட்டைத் தலையர்
இருப்பதைக் கண்டு ஓட்டமாக ஓடிவிடுவார்.

நன்றி>வண்ணக்குளப்பம்
.

.
Reply


Messages In This Thread
மனநோய் - by Birundan - 10-09-2005, 11:04 PM
[No subject] - by iruvizhi - 10-10-2005, 01:32 PM
[No subject] - by தூயவன் - 10-11-2005, 06:26 AM
[No subject] - by iruvizhi - 10-11-2005, 02:18 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)