Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தமிழ் அடையாளத்துடன் புதிய கதைசொல்லி
#1
என்னைக் கவர்ந்த நல்ல எழுத்தாற்றல் உள்ள இன்னொரு ஈழத்து வலைப் பதிவாளர் டிசே தமிழன், மேரி ஆனின் கதைகளை விமர்சித்துள்ளார் ,எல்லாத்தையும் இங்க போட ஏலாது மிச்சத்தை அவரது பதிவிற்குச் சென்று வாசிக்கவும், நல்ல பதிவு.....

தமிழ் அடையாளத்துடன் புதிய கதைசொல்லி

Bodies in Motion by Mary Anne Mohanraj



"...Even in the middle of war, children were being born here, life was going on. Without sugar, sometimes without even rice, going on anyway, despite the grief and the pain. Sometimes, the blood on the sheets was only from a bridal night, sometimes, there was celebration, there was pleasure, there was joy."
-Mary Anne Mohanraj (Wood and Flesh)

(1)
இந்தத் தொகுப்பில் மேரி ஆன் மோகன்ராஜின் இருபது சிறுகதைகள் தொகுக்கப்பட்டுள்ளன. சிறுகதைகளாக இருப்பினும் ஒரு நாவலுக்குரிய தன்மையுடன் சில பாத்திரங்கள் பல்வேறு கதைகளில் பல்வேறு சூழலில் மீண்டும் மீண்டும் வருகின்றன. 'கந்தையா', 'வல்லிபுரம்' என்ற குடும்பப் பெயர்களைக் கொண்ட இரு குடுமபங்களின் பிள்ளைகளின் கதைகளும், பிறகு அவர்களின் பிள்ளைகளின் பிள்ளைகள் கதைகளும் கூறப்படுகின்றன. கதைகள் 1939ல் இருந்து 2002 வரையான காலப்பகுதியில் யாழ்ப்பாணத்தில், கொழும்பில், அமெரிக்காவின் பலவேறு மாநிலங்களில் நடப்பதாய் விரிந்தபடி இருக்கின்றன. கதையில் வரும் பாத்திரங்கள் இலகுவில் வாசிப்பவருக்கு புரியவேண்டும் என்பதற்காய் கதைகள் ஆரம்பிக்க முன்னர் குடும்ப மரம் (family tree) தரப்பட்டிருக்கின்றது.

தொகுப்பிலுள்ள இருபது கதைகளில் ஆகக்ககுறைந்தது பத்துக் கதைகளாவது நல்ல கதைகள் என்று துணிந்து கூறலாம். எஸ்.ராமகிருஷ்ணனின் (முக்கியமாய் பால்யநதி), தங்கமணியின் எழுத்துக்களை வாசிக்கும்போது ஒருவிதமான அமைதியும் நிதானமும் படர்கின்றமாதியான வாசிப்பை மேரி ஆனின் படைப்புக்களிலும் பெற்றிருந்தேன். எல்லாக் குடும்பங்களுக்குள்ளும் கூற முடியாத இரகசியங்கள் கசிந்தபபடியேதானே இருக்கின்றன. அவை குறித்து அறிய ஆவல் இருப்பினும் அவ்வாறு அறியமுற்படுகையில் தமது குடும்ப அங்கத்தவர்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கைகள் தகர்ந்துவிடுமோ என்ற பயம் இரகசியங்களை இரகசியங்களாவே வைத்துப் பார்க்கவே மனித மனங்களை விரும்பச் செய்கின்றன. இந்தக் கதைகளிலுள்ள கதாபாத்திரங்களும் தமக்குரிய தனிமைகளுடன், நம்பிக்கைகளுடன், துரோகங்களுடன், இரகசியங்களுடன் நடமாடுகின்றன. கதைகளை வாசித்துக்கொண்டுபோகும்போது எந்த பாத்திரத்தின் மீதும் மூர்க்கமாய் கோபப்படமுடிவதில்லை. ஏன் இப்படி இவர்கள் செய்து கொண்டிருக்கின்றார்கள் என்ற இயலாமையுடந்தான் பார்த்துக்கொண்டிருக்க முடிகின்றது. 'உபபாண்டவத்தில்' வருவதுபோன்று, அந்த அந்தப் பாத்திரங்கள் உரையாடத் தொடங்கும்போது அவை தமக்கான நியாயங்களையும், அந்தப் பாத்திரம் குறித்து பிற பாத்திரங்கள் பேசும்போது வேறுவிதமான பார்வைகளையும் வாசிப்பவருக்குத் தருகின்றது. முக்கியமாய் மேரி ஆன் எந்தப் பாத்திரத்தின் மீதும் தனது பார்வையை (ஜெயமோகன் எழுத்துக்களில் இருக்கும் முக்கிய பலவீனமே இதுதான்) திணிக்காமல் அவற்றை அவர்கள்பாட்டில் பேசவிடுவது குறிப்பிட்டுச் சொல்லவேண்டிய ஒரு விடயம். இந்தக் கதைகளில் என்னை(உடைந்தபோன பல 'நான்'களை), உங்களை, உஙளுக்குத் தெரிந்த பலரைப் பார்த்துக்கொண்டே போகலாம். குடும்பஙகளில் சாத்தியமாயுள்ள Heterosexual, Homosexual, Adultery, Teen Age Sex என்று எல்லாவிதமான உறவுகளும் பேசப்படுகின்றன. எல்லாப் பாத்திரங்களுக்குள்ளும் காமம் ஒரு சிற்றாறைப் போல ஓடிக் கொண்டிருக்கின்றது. அது பலவேளைகளில் உறவுகளை பிணைப்பதாயும் (Bond?) சிலவேளைகளில் உறவுகளை முறிப்பதாயும் அமைகின்றது.

(2)


Mary Anne Mohanraj (2001)

பிள்ளைகளின் பிள்ளைகளைப் பற்றிக் கூறும் கதைகளில், Minnal in Winter கதை மிகவும் பிடித்த ஒன்று. பத்தொன்பது வயது மின்னல், புலமைப்பரிசில் பெற்று அமெரிக்காவுக்குப் படிக்க வருகின்றார். அவரது தாயார் கொழும்பில் இருந்தாலும் அவரது சித்தியொருவர் மாசூஸட்டில் இருக்கின்றார். வளாகத்துக்குள் தங்கியிருக்கும் மின்னலுக்கு சேர்ந்து படிக்க ஆரம்பிக்கும் ஸ்பானிய பெடியனுடன் காதல் முகிழ்ந்து, உறவின் நீட்சியில் கர்ப்பமும் தரிக்கின்றார். இதே சமயம், கொழும்பிலிருக்கும் தாய் மின்னலுக்கு நல்லதொரு திருமணப் பொருத்தம் வந்திருக்கின்றது, படிப்பை இடையில் நிறுத்திவிட்டு வருக என்று கடிதம் எழுதுகின்றார். இங்குள்ள உறவு குறித்து அம்மாவுக்கு கூறுவதா அல்லது அம்மா பார்த்த பையனைத் திருமணஞ்செய்வதா என்று மின்னல் குழம்பத்தொடங்குகின்றார். அந்த நேரத்தில் மாசூஸட்டில் இருக்கும் சித்தி வீட்டுக்கு போகின்றார். அவரது சித்தி ராஜியும் அந்தச்சமயத்தில் கர்ப்பிணியாய் இருக்கின்றார். இறுதியில் அம்மாவின் முடிவுக்கு உடன்படுவதில்லை எனவும், அதேசமயம் அந்த கருவைத் தாங்குவதில்லை எனவும் முடிவு செய்து தொடர்ந்து படிக்கப் போவதாய் கதை முடியும். இந்தக் கதை நகர்ந்துகொண்டு போகும் விதம் மிக அற்புதமானது. ஒரு பெடியனோடு படித்து கொண்டிருக்கும்போது ஏற்படும் எதிர்ப்பால் கவர்ச்சியால் ஈர்க்கப்பட்டு தன்னை முழுதாய் எடுத்துக்கொள் என்று தன்வசம் இழப்பது....காதலில்/காமத்தில் கிறங்கிக்கிடப்பது...பிறகு கர்ப்பந் தரிக்கும்போது தன் எதிர்காலத்தை நினைத்து வருந்துவது.... என அனைத்தும் மிக இயல்பாய் வெளிப்படுத்தப்பட்டிருக்கும். கதையின் ஓரிடத்தில் மின்னல் யோசிப்பதாய் வரும், 'அம்மா இப்படி ஒரு பெடியனுக்கருகில் இருந்தால் எப்படியான உணர்ச்சிகள் பீறிட்டெழும் என்று சரியாக நீ எனக்குக் கற்றுத்தந்து மனந்திறந்து விவாதித்திருந்தால், இன்று இப்படியான சிக்கலில் மாட்டாமல் கவனமாயிருந்திருப்பேனென' என்று எல்லாம் அந்தப் பாத்திரம் யோசிப்பது பற்றி, ஒரு பதின்மவயதுப்பெண்ணின் மனநிலையில் இருந்து அழகாய் மேரி ஆன் எழுதியிருபபார். மின்னல் குழம்புபோது நாங்களும் குழம்பி, படிப்புத்தான் அனைத்தையும் விட தன் சுயத்தைப் பிரதிபலிக்கப்போகும் விடயம் என்று தீர்க்கமாய் முடிவெடுக்கும்போது வாசிக்கும் நமக்குள்ளும் ஒருவித அமைதி படர்ந்துவிடுகின்றது.

http://djthamilan.blogspot.com/2005/09/blo...1566016861.html
Reply


Messages In This Thread
தமிழ் அடையாளத்துடன் புதிய கதைசொல்லி - by narathar - 10-02-2005, 09:43 AM
[No subject] - by Thala - 10-02-2005, 10:30 AM
[No subject] - by கோமதி - 10-02-2005, 11:24 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)