Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ஐரோப்பிய ஒன்றியத்தின் தடை இனவாதிகளுக்கு ஊக்குவிப்பு
#3
ஐரோப்பிய அறிக்கையின் பின்னணி-விளைவுகள்-புலிகள் நிலைப்பாடு என்ன?: சு.ப.தமிழ்ச்செல்வன் விளக்கம்
[புதன்கிழமை, 28 செப்ரெம்பர் 2005, 19:35 ஈழம்] [கிளிநொச்சிலிருந்து செ.தனோஜன்]
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான ஐரோப்பிய ஒன்றியத்தின் அறிக்கை வெளியிடப்பட்டதன் பின்னணி, அதன் விளைவுகள் மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகள் நிலை ஆகியவற்றை தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் விளக்கியுள்ளார்.


கிளிநொச்சியில் இன்று புதன்கிழமை மாலை நடாத்தப்பட்ட விசேட ஊடகவியலாளர் மாநாட்டில் தமிழ்ச்செல்வன் கூறியதாவது:

ஐரோப்பிய ஒன்றியத்தின் அறிக்கை தமிழ் மக்களுக்கும் எங்களுக்கும் அதிர்ச்சி தருகிற விடயமாகத்தான் இருக்கிறது.

கடந்த காலங்களில் தமிழர் உரிமைப் போராட்டம் தொடர்பாகவோ, தமிழர்கள் மீதான மனித உரிமை மீறல்கள் தொடர்பாகவோ சர்வதேச சமூகத்துக்கு உண்மை நிலைகள் தெரியக் கூடாது என்பதற்காக பத்திரிகை தணிக்கைகளை சிறிலங்கா அரசு மேற்கொண்டது. இதற்காக வெளிநாட்டவர்களோ செய்தியாளர்களோ வருவதற்கு தடையும் விதித்திருந்தது.

அதுபோன்ற சூழ்நிலையை தற்போதும் உருவாக்குவதுதான் சிறிலங்கா அரசாங்கத்தின் நோக்கமாக இருக்கிறது.

ஏனெனில் இங்குள்ள உண்மை நிலைகளை உலகுக்குச் செல்லவிடாமல் தடுப்பதற்கான பல இராஜதந்திர பிரச்சார நடவடிக்கைகளை அண்மைக்காலமாக சிறிலங்கா அரசாங்கம் கட்டவிழ்த்து விட்டுள்ளது.

குறிப்பாக பேச்சுவார்த்தைகள் உள்ளிட்ட சமாதான நடவடிக்கைகளை முடக்கி இங்குள்ள உண்மை நிலைகளை மூடிமறைத்து, எமது உரிமைப் போராட்டம் மற்றும் அரசியல் முன்னெடுப்புக்கள் தொடர்பாக சர்வதேச சமூகத்துக்கு தவறான புரிந்துணர்வை உருவாக்குவதில் சிறிலங்கா அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

சிறிலங்கா அரசாங்கத்தின் இந்த செயற்பாடுகளை ஊக்குவிக்கும் நடவடிக்கையாக ஐரோப்பிய ஒன்றியத்தின் அறிக்கை வெளிவந்திருக்கிறது.

யுத்த நிறுத்த காலப் பகுதியில் எமது போராளிகள், ஆதரவாளர்கள் பெரும் எண்ணிக்கையில் கொல்லப்பட்டுள்ளனர். இப்படுகொலைகளுக்கு சிறிலங்கா இராணுவம்தான் முழுப் பொறுப்பு. இப்படி அரச பயங்கரவாதத்தை பெருமளவிற்குக் கட்டவிழ்த்து விட்ட சிறிலங்கா அரசுக்கு எவ்வித கண்டனத்தையும் ஐரோப்பிய ஒன்றியம் தெரிவிக்கவில்லை.

இது சிறிலங்கா அரசாங்கத்தின் 'அரச பயங்கரவாதச் செயல்களை' நியாயப்படுத்துவதாகும்.

சமாதான நடவடிக்கைகளைச் சீர்குலைக்கும்

எங்களைப் பொறுத்தவரையில் சமாதான முன்னெடுப்புகளுக்கு இப்படியான நடவடிக்கைகள் ஒரு பின்னடவைத் தரும். ஏனெனில் சர்வதேச சமூகத்தினது நேர்மையான உண்மையான ஈடுபாடுதான் தமிழ் மக்களை இந்த சமாதான முன்னெடுப்புகளில் நம்பிக்கை கொள்ள வைத்தது.

நடுநிலைமை, நீதி ஆகியவற்றின் அடிப்படையில்தான் இந்த சமாதான முன்னெடுப்புகள் வெற்றி பெறும்.

அதை விடுத்து ஒருதலைபட்சமான, ஒருபக்கச்சார்பான நிலைப்பாடுகள் சமாதான முன்னெடுப்புகளை பலவீனப்படுத்தும். ஐரோப்பிய ஒன்றியத்தின் முடிவானது தமிழ் மக்களுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் சமாதான முன்னெடுப்புகளின் மீது நம்பிக்கையின்மையைத்தான் உருவாக்கும்.

அதே நேரத்தில் இந்த முடிவால் உடனடிப் பாதிப்புகள் ஏதும் ஏற்படாது.

இந்த சமாதான காலத்தில்தான் சர்வதேச சமூகத்துக்கு எமது தாயக உண்மை நிலைகளை வெளிப்படுத்துகிற வாய்ப்பு எமது குழுக்களுக்குக் கிடைத்தது. இது சமாதான முன்னெடுப்புகள் மீது எம் மக்கள் மத்தியில் உற்சாகத்தையும் நம்பிக்கையையும் ஏற்படுத்தியது.

இந்த சமாதான முன்னெடுப்பில் பங்கேற்றுள்ள இருதரப்பினரது நியாயங்களையும் சர்வதேச சமூகம் கேட்டுக் கொண்டதால் இந்த சமாதான முன்னெடுப்புகள் நியாயமானவை என்று எம் மக்கள் எண்ணினர்.

சமாதான முன்னெடுப்புகளை வரவேற்றனர். ஆனால் இப்போது ஐரோப்பிய ஒன்றியம் வெளியிட்டுள்ள இந்த அறிக்கையை ஒரு பக்கச்சார்பானதாகத்தான் தமிழ் மக்கள் கருதுகிறார்கள்.

ஐரோப்பிய ஒன்றிய அறிக்கையின் பின்னணி என்ன?

சந்திரிகா அம்மையாரின் ஆட்சிக்காலத்தில்தான் தமிழ் மக்கள் பேரழிவுகளுக்குள்ளாயினர். சிறிலங்கா அரச தலைவரின் அலங்கார வார்த்தைகளும் பேச்சுகளும் ஒவ்வொரு நிலைமையிலும் முரண்பாடானாதாகவே இருந்து இருக்கிறது. அவரது பேச்சை, அறிக்கையை நம்பிக் கொண்டு சர்வதேச சமூகம் ஒரு முடிவை மேற்கொள்ளுமேயானால் அது ஒரு பாரிய தவறிழைக்கப்படுவதாகவே கருத வேண்டியிருக்கும்.

சந்திரிகாவின் பேச்சின் அடிப்படையில் சர்வதேச சமூகம் முடிவெடுத்தால் நீதியான, நேர்மையான சமாதான முன்னெடுப்புகள் கேள்விக்குறியாகத்தான் இருக்கும்.

சர்வதேச சமூகத்துடன் தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்பு கொள்வதைத் தடுப்பதில் அண்மைக்காலமாக சிறிலங்கா அரசாங்கம் அதீத முயற்சிகளை மேற்கொண்டு வந்தது.

அமைதிப் பேச்சுகள் சர்வதேச அரங்கில் நடைபெறக் கூடாது என்றும் சர்வதேச இராஜதந்திரிகள் தமிழீழப் பகுதிக்குச் செல்லக் கூடாது என்றும் பல இடையூறுகளை சிறிலங்கா அரசாங்கம் ஏற்படுத்தியது.

அதேநேரத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான பிரச்சாரத்தை சர்வதேச அரங்கில் மிகத் தீவிரமாகவும் சிறிலங்கா அரசாங்கம் முடுக்கிவிட்டிருந்தது. இப்படி சர்வதேச சமூகத்துக்கு ஒருதரப்புக் கருத்துகள் சென்றதன் அடிப்படையில் இந்த அறிக்கை வந்துள்ளது.

இலங்கை இனப்பிரச்சனையில் சமதரப்பு என்கிற வகையில் தமிழ் மக்களின் கருத்துகளையும் அறிந்து நீதியான முடிவை மேற்கொள்ள வேண்டும் என்று சர்வதேச சமூகத்துக்கு நாங்கள் வேண்டுகோள் விடுக்கிறோம்.

குறிப்பாக ஐரோப்பிய ஒன்றியம் இதை கருத்திக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் அறிக்கை தாற்காலிக நடவடிக்கை என்றுதான் கூறி இருக்கிறார்கள். ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் நேரடியாக இங்கு வந்து கள நிலைமைகளைப் பார்வையிட்டு, தமிழ் மக்களின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடி முடிவு எடுக்க வேண்டும்.

தமிழீழ நடைமுறை அரசும் சர்வதேச சமூகமும்

ஆழிப்பேரலைக்குப் பின்னர் தமிழ் மக்களது எழுச்சி, தமிழ் மக்களின் நிர்வாகக் கட்டமைப்பின் வலு சர்வதேச அரங்கில் வெளிப்பட்டுக் கொண்டிருந்தது.

பாரிய பேரழிவுகளுக்குள்ளான தமிழ் மக்கள் தங்களுக்கான கட்டுப்பாட்டுப் பிரதேசங்களை மீட்டு, ஒரு நடைமுறை அரசை உருவாக்கி மிகச் சிறப்பான முறையில் மனிதாபிமான பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள் என்று சர்வதேச சமூகத்துக்கு தெரியவந்தது.

தமிழ் மக்கள் மீதான இப்படியான சர்வதேச சமூகத்தின் எண்ணத்தைத் தகர்க்க, குலைக்க அண்மைக்காலமாக சிறிலங்கா அரசாங்கம் தீவிரமான பிரச்சாரத்தை மேற்கொண்டு வந்தது.

தமிழ் மக்களின் இந்த உயர்நிலை வளர்ச்சியை பலவீனப்படுத்த சிறிலங்கா அரசு மேற்கொண்ட முயற்சியின் வெளிப்பாடுதான் இந்த ஐரோப்பிய ஒன்றியத்தின் அறிக்கை.

சிறிலங்காவின் உதாசீனமும் கதிர்காமர் கொலையும்

சிறிலங்கா வெளிவிகார அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமர் கொல்லப்பட்டதன் எதிரொலியாகத்தான் இந்த அறிக்கை வெளியாகி உள்ளது.

அந்தப் படுகொலைக்கும் எமக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்று நாம் பலமுறை விளக்கியுள்ளோம்.

லக்ஸ்மன் கதிர்காமர் கொலையையும் சேர்த்து தனது பொய்ப் பிரச்சாரத்தை சிறிலங்கா அரசு அண்மைக்காலத்தில் தீவிரப்படுத்தியது.

யுத்த நிறுத்த காலத்தில் தமிழ் மக்களும், எங்களது போராளிகளும், முக்கியப் பொறுப்பாளர்களும் கொல்லப்பட்டனர். அந்த சமயத்தில் இந்த ஆட்கொலைகளை விரைந்து தடுத்து நிறுத்துமாறும் முடிவுக்கு கொண்டுவருமாறும் சர்வதேச சமூகத்திற்கு வேண்டுகோள் விடுத்தோம். ஆனால் சிறிலங்கா அரசு உதாசீனமாக இருந்ததால் கவனமெடுக்காததால் இந்த கொலைச் செயல்கள் இப்போது சிறிலங்காவின் அரச பகுதிக்குள்ளும் நடைபெறும் வகையில் தீவிரமடைந்துள்ளது.

கதிர்காமர் கொலையைப் பயன்படுத்தி தமிழர் உரிமைப் போராட்டத்தை சர்வதேச சமூகத்தில் தனிமைப்படுத்தவும் ஓரங்கட்டவும் முனைகிறார்கள்.

இதற்கு சர்வதேச சமூகம் நிச்சயமாக உடன்படக் கூடாது. அது இலங்கைத் தீவில் பாரிய நெருக்கடியை உருவாக்கும்.

இனப்படுகொலையை தூண்டும் அறிக்கை

கடந்த காலத்தில் தமிழ் மக்கள் பாரிய இனப் படுகொலைகளுக்குள்ளான போது, பாரிய மனித உரிமை மீறல்கள் திணிக்கப்பட்ட போது வாழ்வியல் பிரச்சனைகளையும் பெரும் படை பலத்தையும் எதிர்கொண்ட காலத்தில் சிறிலங்கா அரசாங்கம், சர்வதேச சமூகத்துக்கு ஒரு தவறான புரிந்துணர்வையே ஏற்படுத்தி வந்தது.

அதை உலகமும் நம்பிக் கொண்டிருந்தது. அதைப் பயன்படுத்திக் கொண்டு தமிழ் மக்கள் மீதான அடக்குமுறைகளையும் இனப்படுகொலைகளையும் சிறிலங்கா அரசாங்கம் தீவிரப்படுத்தியது.

அதேபோல் யுத்தத்தால் பாதிக்கப்பட்டு மனிதாபிமான நெருக்கடிகளை எதிர்நோக்கியிருக்கும் தமிழர்களுக்கு எதுவிதமான மீளமைப்பு மற்றும் புனரமைப்புப் பணிகளை சிறிலங்கா அரசாங்கம் செய்யவில்லை.

அதுமட்டுமின்றி உலக சமூகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய இயற்கைப் பேரழிவான ஆழிப்பேரலையில் பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் உயிரிழந்தனர். மனிதாபிமான உதவிகளை எதிர்நோக்கி இருந்தனர். அந்தச் சூழலில் சர்வதேச சமூகத்தால் பரிந்துரைக்கப்பட்ட பொதுக்கட்டமைப்பையே நிராகரித்தது சிங்களப் பேரினவாதம். அப்படியான சிறிலங்கா அரசுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில்தான் இந்த அறிக்கை வெளியாகி இருக்கிறது.

தற்போது தென்னிலங்கையில் மீண்டும் சிங்கள இனவாதம் தீவிரமடைந்துள்ளது. சமாதான முன்னெடுப்புகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அவர்களது நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளன.

இந்த நிலையில் சர்வதேச சமூகமும் ஒருபக்கச் சார்பான தோற்றத்தை அளிக்கும் அறிக்கையை வெளியிட்டிருப்பது இனவாதிகளுக்கு ஊக்கத்தையும் உற்சாகத்தையும் அளிக்கும். தமிழ் மக்கள் மீது இனப்படுகொலைகளையும் அடக்குமுறைகளையும் ஏவிவிட ஊக்கமளிப்பதாகவே இந்த அறிக்கை அமையும்.

தற்போது சிங்களப் பேரினவாதம் தீவிரமடைந்து முன்னைய பயங்கர நிலைமைகள் உருவாகி வரும் சூழலில் சிறிலங்கா அரச தரப்பின் பிரச்சாரத்தை மட்டும் நம்பிக்கொண்டு சர்வதேச சமூகம் முடிவு மேற்கொண்டிருப்பது தமிழ் மக்களுக்கு கவலைதருகிற விடயம்.

இருந்தாலும் இது தாற்காலிகமாகத்தான் இருக்கும். தமிழ் மக்களுடைய உணர்வுகளை புரிந்துகொண்டு சர்வதேச சமூகம் நீதியான நிலைப்பாட்டை மேற்கொள்ளும் என்று நம்புகிறோம்.

ஐரோப்பிய பிரதிநிதிகளுடன் சந்திப்பு

ஐரோப்பிய ஒன்றியம் உத்தியோகப்பூர்வமாக எங்களுக்கு இம்முடிவை அனுப்பவில்லை. ஊடகங்கள் வாயிலாகத்தான் அறிந்தோம்.

அண்மையில் நியூயோர்க்கில் நடைபெற்ற இலங்கைக்கு உதவி வழங்கும் நாடுகளின் இணைத் தலைமை நாடுகளின் கூட்டறிக்கையில் இருதரப்பினரிடமும் தங்களது நிலைப்பாடுகளைத் தெரிவித்து உள்ளனர்.

ஆனால் ஐரோப்பிய ஒன்றியம் வெளியிட்டு இருக்கும் இந்த அறிக்கை அதிலிருந்து முற்றிலும் மாறுபட்டதாக இருக்கிறது. தமிழீழ விடுதலைப் புலிகள் மீது மட்டுமே குற்றம் கூறி அழுத்தம் தரும் வகையில் ஐரோப்பிய ஒன்றிய அறிக்கை உள்ளது.

ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் பிரதிநிதிகளை விரைவில் சந்தித்து எங்களது தலைமைப் பீடத்தின் உறுதியான நிலையை விளக்குவோம்.

நோர்வே தரப்பைப் பொறுத்தவரை பதவியேற்க உள்ள நோர்வே புதிய அரசு வழமையான தனது நிலையையே மேற்கொள்வதாக அறிவித்திருக்கிறது.

நோர்வே அனுசரணையாளர்களை விரைவில் சந்திக்க உள்ளோம். அச்சந்திப்பின் போது எங்களுடைய அதிர்ச்சியையும் அதிருப்தியையும் தெரிவிக்க உள்ளோம். உண்மைத்துவத்தின் அடிப்படையில் தமிழ் மக்களின் பிரச்சனைகள் குறித்து சர்வதேச சமூகம் நீதியான முடிவை மேற்கொள்ள வேண்டும் என்று நோர்வேத் தரப்பிடம் தெரிவிப்போம்.

சமாதான முன்னெடுப்புகளைத் தொடருவதாக இருந்தால் நடுநிலை மற்றும் சமத்துவத்தின் அடிப்படையில்தான் அது நடைபெற வேண்டும். இதில் தமிழ் மக்களும் தமிழீழ விடுதலைப் புலிகளும் உறுதியாக இருக்கிறார்கள்.

இந்த நம்பிக்கையைப் பாதிக்கும் வகையிலான அறிவிப்புகள் வருமானால் அவை சமாதான முன்னெடுப்புகளை நிரந்தரமாக முடக்கும்.

களநிலமையைப் பார்வையிட அழைப்பு

யுத்த நிறுத்த ஒப்பந்தம் நடைமுறையில் இருக்கும் காலத்தில் எத்தனையோ சீண்டல்கள், இழப்புகள், குழப்பங்களை சிறிலங்கா அரச தரப்பு ஏற்படுத்திய போதும் நாம் அர்ப்பணிப்போடு யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்தி வந்தோம்.

ஆழிப்பேரலை மீளமைப்புக்கான பொதுக்கட்டமைப்பு தொடர்பாக சர்வதேச சமூகத்தின் யோசனைகளுக்கு அமைய முழு ஈடுபாட்டுடன் பேச்சுகளை நடாத்தி இருக்கிறோம். இந்த அடிப்படையில் நியாயமான முடிவை ஐரோப்பிய மேற்கொண்டால் தமிழ் மக்கள் வரவேற்பார்கள்.

சிறிலங்கா அரசாங்கத்தின் அழுத்தம், பிரச்சாரங்களுக்குப் பணிந்து போன நிலையில் சில தாற்காலிகமாகவே இம்முடிவை ஐரோப்பிய ஒன்றியம் மேற்கொண்டுள்ளது. இது இறுதியான முடிவு அல்ல. ஐரோப்பிய ஒன்றியத்தின் அனைத்து நாடுகளும் இணைந்து தீர்மானகரமாக நிலைப்பாடு எதுவும் எடுக்கவில்லை. தடை தொடர்பாக ஆலோசிப்பதாகவே அவர்களது சொற்பதங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

எங்களுடைய நீதியான, நியாயமான நிலைப்பாடுகளை விளக்குவதற்காக ஐரோப்பிய நாடுகளுக்கு அழைப்பு விடுத்துள்ளோம்.

எங்களுடைய கருத்துகளை பல்வேறு வழிமுறைகளுடாக அவர்களுக்குத் தெரியப்படுத்துவோம். சர்வதேச சமூகமானது ஒருதலைபட்சமாக தொடர்ந்து இத்தகைய முடிவுகளை மேற்கொண்டால் தமிழீழ விடுதலைப் புலிகளும் துர்பாக்கியமான, இக்கட்டான நிலைமையில் முடிவுகளை எடுக்க நேரிடும் என்றார் தமிழ்ச்செல்வன்.
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
Reply


Messages In This Thread
[No subject] - by வினித் - 09-28-2005, 01:38 PM
[No subject] - by வினித் - 09-28-2005, 02:24 PM
[No subject] - by adithadi - 09-28-2005, 02:25 PM
[No subject] - by DV THAMILAN - 09-28-2005, 03:47 PM
[No subject] - by வினித் - 09-28-2005, 09:29 PM
[No subject] - by வினித் - 10-17-2005, 12:39 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)