Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
சாதனைகளும் சாகஸங்களும்
#1
<b>சாதனைகளும் சாகஸங்களும்</b>

அபூர்வ சகோதரர்கள்' படத்திலிருந்து கமல்ஹாசன் தன்னை உருமாற்றிக் கொள்வதை படத்திற்கு படம் செய்ய ஆரம்பித்தார். "அபூர்வ சகோதரர்கள்' படத்தில் கமல், குள்ள அப்புவாக நடித்ததன் பிரதிபலிப்பு இன்றைக்கும் இருக்கிறது. தர்மபுரி மாவட்டத்தில் கமல்ஹாசனின் ரசிகர் ஒருவர் கமல்ஹாசனைப் போல அப்பு தோற்றத்தில் உயரம் குறைந்து நான்கு கிலோ மீட்டர் நடந்தே சென்றிருக்கிறார். அதுவே ஒரு பெரிய சாதனையே. அப்பு என்றால் கால்களை மடக்கிக் கட்டிக் கொண்டு அதற்காக ஷூ தயார் செய்து மாட்டிக் கொண்டு நிற்பதற்கே தைரியம் வேண்டும். நடப்பதென்றால் அது அசாதாரணமானது.

<img src='http://www.yarl.com/forum/files/aporva_sakothararkal.jpg' border='0' alt='user posted image'>

<b>குள்ள அப்பு வேடத்திற்கு ஒரு முன்னோட்டத்தையே கமல், "புன்னகை மன்னன்' படத்திலேயே காட்டி விட்டார்.</b> சாப்ளின் செல்லப்பாவாக வரும் கமல், டிபார்ட்மெண்டல் ஸ்டோர் ஒன்றில் ஓயாமல் அழும் சிறுமியின் அழுகையை நிறுத்துவதற்காக திடீரென்று குள்ளனாக மாறி குறும்புகள் செய்வார். சிறுமி அழுகையை நிறுத்தி சிரித்து மகிழ்வாள். படத்தில் சில நிமிடங்களே வரும் இந்தக் காட்சிக்காக கமல் இரண்டு நாட்கள் காலை கட்டிக் கொண்டு நடித்தார். அதனால் காலில் ரத்தம் கட்டிக் கொண்டு கமல் பட்ட அவதி சொல்லி மாளாது.

"புன்னகை மன்னன்' படத்தில் வந்த சிறிய உருவத்தை பெரிய கதாபாத்திரமாக்கினால் என்ன என்ற சிந்தனையில் விளைந்தது தான் குள்ள அப்பு வேடம். இந்த வேடம் படத்திற்கே பெரிய விளம்பரம் போல் அமைந்தது.

வாகினி ஸ்டுடியோவில் இரண்டு கமலும் போலீஸுக்கு பயந்து தப்பித்து ஓடும் காட்சியை அங்குள்ள கட்டிடங்களின் மேல் படமாக்கிய போது, கமலைப் பார்க்கப் போயிருந்தேன். அவர் நடித்த படங்களைப் பற்றிய அவரது விமர்சனம் பற்றி எழுத வேண்டும் என்று சொன்ன போது வாகினிக்கு வரச் சொல்லியிருந்தார். வாகினி மாடியிலேயே தயாராவதற்கு முன், என்னிடம் வந்து, "அப்பு வேஷத்தில் நடிக்கப் போகிறேன். அதனால் ஒப்பனை அறையில் காத்திருங்கள். நடித்து முடித்து விட்டு வந்த பின் பேசலாம்' என்றார். வேறு வழியின்றி அவரது ஒப்பனை அறைக்குப் போய் காத்திருந்தேன்.

<b>"அபூர்வ சகோதரர்கள்' படம் வெளிவந்த பின் அதை இரண்டு, மூன்று முறை பார்த்து தான் அவர் ஒவ்வொரு காட்சியிலும் எப்படி அப்புவாக நடித்தார் என்று கிரகிக்க முடிந்தது.</b> அந்தப் படத்தில் பங்கு பெற்றவர்கள் யாரும் அதைப் பற்றிப் பேசத் தயாரில்லை. ஆனால், சில நாளிதழ்களில் "கமல் பள்ளம் தோண்டி நடித்தார்' என்று மட்டும் வந்தது.

அதற்கு காரணம் வீனஸ் ஸ்டுடியோவில் "அபூர்வ சகோதரர்கள்' படத்திற்காக அங்குள்ள தளங்களில் நடந்து செல்வதற்கேற்ப பள்ளம் தோண்டியிருந்ததை பத்திரிகை நண்பர்கள் மோப்பம் பிடித்து எழுதியிருந்தனர். எல்லா காட்சிகளிலும் அவர் அப்படித்தான் நடித்திருந்தார் என்று ஒரு வரியில் எழுதி விட முடியாது.

எம்.ஜி.ஆருக்கு எப்படி "நாடோடி மன்னன்' படமோ, அது போல் கமலுக்கு "அபூர்வ சகோதரர்கள்!' இந்த படத்தால் எம்.ஜி.ஆர்., "எழுந்தால் மன்னன், விழுந்தால் நாடோடி' என்று எம்.ஜி.ஆரின் எதிர்காலத்தையே "நாடோடி மன்னன்' நிர்ணயிப்பதாக திரையுலகமே பேசியது. "அபூர்வ சகோதரர்கள்' படத்தின் போது கமலுக்கும் அதே நிலைதான். நடித்து சம்பாதித்த சொத்துக்கள் (வாணி விலகலால்) கையை விட்டுப் போன நிலையில் எவ்வித அடிப்படை பலமும் இல்லாமல் இருந்த கமலைத் தாங்கி நின்றது அப்பு வேடமே.

"அபூர்வ சகோதரர்கள்' படத்திற்காக குள்ள அப்பு வேடத்தில் நடிக்க கமல் எடுத்துக் கொண்ட முயற்சிகள் நிறைய. "அப்பு வேடத்தில் இப்படித் தான் நடிக்கப் போகிறேன்' என்று வீடியோவில் படமெடுத்து, அதை பஞ்சு அருணாசலத்திடம் தர, அவர் அந்த வேடத்தை அடிப்படையாகக் கொண்டு முழு கதையையும் எழுதிக் கொடுத்து விட்டார்.

படத்தில் கமல் அப்பு வேடத்தில் எல்லா காட்சிகளிலும் பள்ளம் தோண்டி அதில் இறங்கி நடித்தார் என்பதில்லை. அப்படியும் நடித்தார். காலை மடித்து கட்டிக் கொண்டு நடித்தார். இந்த இரண்டும் இல்லாத முறையிலும் கமல் நடித்திருக்கிறார்.

லாங் ஷாட்டில் குள்ள அப்பு நடந்து போவது போல் முழு உருவம் காட்டி நடித்திருந்தால் அது பள்ளம் தோண்டி அதில் இறங்கி நடந்து சென்றிருப்பார். முழங்காலில் மட்டும் ஷூவை செருகிக் கொண்டு விடுவார். கேமராவை தரையில் வைத்து, சற்று உயர்த்தி உயர் கோணத்தில் (டாப் ஆங்கிள்) இதை படமாக்கும் போது பள்ளம் தெரியாது.

ஆனால், காலைக் கட்டிக் கொண்டு அப்புவாக நடித்திருக்கும் போது அதைக் கண்டுபிடித்து விட முடியும். பள்ளத்துக்குள் நடக்கும் போது கமலிடம் ஓரளவு இயல்பான நடை வெளிப்படும். ஆனால், காலை கட்டிக் கொண்டு நடக்கும் போது ஒவ்வொரு காலாக ஊன்றி (முட்டியால்) தான் நடக்க முடியும். இந்த நடை வித்தியாசம் தான் கமல் எப்படி நடித்தார் என்பதற்கு அடையாளம்.

முட்டி போட்ட காலை மடித்துக் கட்டியபடி ஷூவையும் பொருத்திக் கொண்டு, இரண்டடி உயரமுள்ள ரப்பர் பந்தின் மீது சர்க்கஸ் கோமாளி போல் ஏறி நிற்பது சாதாரணமா? ஆனால், கமல் அதை செய்து காட்டியது அசாதாரணம்.

புலியுடன் நடித்த காட்சிகளில் கமலின் துணிச்சல் நம்மை பிரமிக்க வைத்தது. பொதுவாக சினிமாவில் நடிக்கும் வன விலங்குகளின் வாயைத் தைத்து, மயக்க நிலைக்கு கொண்டு வந்து விடுவர். ஆனால், "அபூர்வ சகோதரர்கள்' படத்தில் வரும் புலி, "பாரத் சர்க்கஸில்' தினசரி பங்கு பெறுகிற புலி. கூண்டை விட்டு வெளியே வந்து விட்ட புலியை, சாட்டையில் விரட்டி மீண்டும் கூண்டுக்குள் போகச் செய்வார் அப்பு கமல். அதில் அப்புவை முழு உருவமாகக் காட்டுவர். அரைத் தோற்றத்தில், பின்புறமாகவும் காட்டுவர். முழு உருவத்தின் போது காலை கட்டிக் கொண்டு தான் நிற்க வேண்டும்.

வாய் தைக்காத புலியைக் கட்டுப்படுத்த பயிற்சியாளர் இருப்பார் என்றாலும், புலி லேசாக மிரண்டிருந்தாலும் எதிரே நிற்கும் கமலுக்குத்தான் ஆபத்து. இன்றைக்கும் படம் பார்த்தால் புரியும். அந்தப் புலி வத்தல், தொத்தலானது அல்ல. 16 அடி வேங்கைப் புலி என்பார்களே... அந்த ரகத்திலானது. காலைத் துõக்கி ஒரு அடி அடித்தாலும், அல்லது பாய்ந்தாலும் ஆள் காலி. உன்னிப்பாகக் கவனித்தால் அந்தக் காட்சியில் கமலின் நடிப்பையும் தாண்டி, அவரது முகத்தில் கலவரம் தெரியும். இந்தக் காட்சி மற்றும் சர்க்கஸ் காட்சிகள் படமாக்கப்பட்டது எர்ணாகுளத்தில்.

புலி, நாசரைக் கொல்லும் காட்சியை சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ., மைதானத்தில் எடுத்தனர். அப்போதும் கமல் காலை கட்டிக் கொண்டு, புலியை அழைத்துச் செல்வது போல் நடித்தார்.

"புது மாப்பிள்ளைக்கு...' என்ற பாடலில் கமல் காலை கட்டிக் கொண்டு நடனமெல்லாம் ஆடியிருப்பார். அதில் பனிப் பிரதேசம், பனி பொழிவு போல் அரங்க அமைப்பு என்பதால் தொழில் நுட்ப சாகஸங்கள் வெளிப்படுத்த நிறைய வாய்ப்புகள்.

இதே பாடலில் தன்னைப் போன்ற சர்க்கஸ் குள்ளர்களுடன் அப்பு மினி ரயிலில் உட்கார்ந்து ஆடிப்பாடிச் செல்வதாக காட்சி வரும். அப்போது அப்பு கமல், தன் காலை மடக்குவதாக ஒரு ஷாட் உண்டு. அது போல் ஜெய்சங்கரை அப்பு மடக்கிக் கொல்வதற்கு முன் அவருடன் சிறிய தர்க்கம் நடத்துவார் அவருக்கு எதிரேயுள்ள சோபாவில் அமர்ந்து. அப்போதும் தன் இடது காலை மடக்கி, வலது கால் மீது வைப்பார்.

கமல் காலை கட்டிக் கொண்டு நடித்திருந்தால் முட்டி வரையிலான காலை மடக்க சாத்தியமில்லை. இந்தக் காட்சிகளில் மட்டும் கமல் முட்டிக்கு மேலே இன்னும் கொஞ்சம் செயற்கை காலை பொருத்தி, அதை பொம்மலாட்டத்திற்கு எப்படி கயிறுகளைப் பயன்படுத்தி உருவங்களை ஆட்டுவிக்கிறார்களோ, அது போல் செயற்கை காலை மடக்கி படமாக்கியிருக்கின்றனர்.

"சினிமா என்றாலே நாங்கள் அவ்வப்போது ரசிகர்களை ஏமாற்றி வித்தை காட்ட வேண்டியிருக்கிறது' என்று சினிமா வட்டாரத்தில் அடிக்கடி சொல்வார் எம்.ஜி.ஆர்., அதற்கு நிறைய மூளை வேண்டும். அந்த மூளையை சரியான விகிதத்தில் செலவிட ÷ண்டும். அப்படி செலவிட்டு சாதனை படைத்த "பொறியாளர்'கள் எம்.ஜி.ஆரும், அவருக்குப் பின் கமல்ஹாசனும்.

"அபூர்வ சகோதரர்கள்' படத்தைப் பொறுத்த வரையில் நாம் படத்தைப் பார்த்து அனுமானம் செய்த அடிப்படையில் தான் மேற்கண்ட விஷயங்களை எழுதியிருக்கிறோம். "பொம்மலாட்ட அடிப்படையில்' என்ற வார்த்தைகள் மட்டும் நாம் கிரகிக்க முடிந்த விஷயம். அதற்கு மேல் படத்தில் பணிபுரிந்த அனைவருமே "ரகசியம்' காப்பவர்களாக இருக்கின்றனர்.

இரட்டை வேடக் காட்சிகளை பொதுவாக பகலில் படமாக்க மாட்டர். கிராபிக்ஸ் வருவதற்கு முன் "அபூர்வ சகோதரர்கள்' படத்தின் இரட்டை வேடக் காட்சிகளை பகலிலேயே படமாக்கியிருக்கிறார் பி.சி.ஸ்ரீராம் என்பது, அவரது ஒளிப்பதிவு திறமைக்கு ஒரு சான்று.

பகலில் இயற்கை வெளிச்சம் என்பது நம் கட்டுப்பாட்டில் இல்லாதது. அதனால் பகலில் இரட்டை வேடக் காட்சிகளை படமாக்கும் போது மேகங்கள் குறுக்கீடு வந்தால், நடுவே கோடு தெரியும். அது மாஸ்க் முறையில் படமாக்குவதால் ஏற்படும் விளைவு. "கல்யாண ராமன்' படத்தில் இரண்டு கமலையும் பகலில் படமாக்கியதால், நடுவே ஒரு கோடு தெரிவதை இப்போதும் பார்க்கலாம்.

"அபூர்வ சகோதரர்கள்' படத்தில் குள்ள அப்பு வேடத்தைப் பார்த்து விட்டு பலரும் சினிமாவில், மேடையில் அதை எதிரொலிக்கச் செய்திருக்கின்றனர்.

எஸ்.எஸ்.சந்திரன் "புருஷன் எனக்கு அரசன்' என்ற படத்தில் பாடல் காட்சியொன்றில் காலை மடக்கி முட்டி போட்டு அசையாமல் பாடி நடித்தார். அது போல் மேடையில் நடித்தவர்களும் ஒரு விஷயத்தை மறந்து விட்டனர். அவர்கள் அப்பு போல் கோட்டு அணிந்தார்களே தவிர, உயரத்தைக் கவனிக்கவில்லை. இடுப்பில் பேன்ட் எதுவரை இருந்தது என்பதைக் கவனிக்கவில்லை.

தொப்பி, கண்ணாடி அணிந்தால் எம்.ஜி.ஆராகி விடலாம், காலை மடக்கினால் அப்புவாகி விடலாம் என்று எளிதில் கணக்கு போட்டு விட்டனர்.

கமல் அப்புவின் உயரத்திற்கேற்ப கோட்டு அணிந்து கொண்டார். பேன்ட்டை இடுப்புக்கும், மார்புக்கும் நடுவே கொண்டு வந்தார். மூக்கில் குள்ள உருவத்திற்கேற்ற மாற்றமும், பற்களில் மாற்றமும் செய்து கொண்டார். ராஜா கதாபாத்திரத்திலிருந்து வித்தியாசப்படுத்த இத்தனை முயற்சிகளையும் மேற்கொண்டார் கமல்.

அப்பு வேடத்தின் பிரதிபலிப்பை சில வருட இடைவெளிக்குப்பின் சத்யராஜ், தான் இயக்கித் தயாரித்த "வில்லாதி வில்லன்' படத்தின் சண்டைக் காட்சியொன்றில் வெளிப்படுத்தினார். நின்று கொண்டே சண்டை போடும் சத்யராஜ், ஓரிடத்தில் சர்ரென்று காலை விரித்து உட்கார்ந்து, கைகளால் எதிரிகளோடு மோதுவார். அதாவது நடனக் கலைஞர்கள், ஸ்டன்ட் கலைஞர்கள் தான் அப்படி பக்கவாட்டில் இருகால்களையும் விரித்து அமர முடியும். சத்யராஜால் அது சாத்தியமில்லை அவர் அதை எப்படிச் செய்தார்?

பள்ளம் தோண்டி கால்கள் முழுவதையும் அதில் மறைத்துக் கொள்ள, அவருக்கு நேர் பின்புறமாக ஸ்டன்ட் கலைஞர் ஒருவர் உட்கார்ந்து கால்களை விரித்து அமர்ந்து நடித்திருக்கிறார். அந்த ஷாட் விரலை சொடுக்கி முடிப்பதற்குள் காணாமல் போய் விடும். அதனால் சத்யராஜ் தான் அப்படி காலை விரித்து நடித்திருக்கிறார் என்று நமக்குத் தோன்றும். நமது சந்தேகத்தை சத்யராஜிடம் கேட்ட போது, அதை அவர் மறுக்கவில்லை.

(தொடரும்)

நன்றி
தினமலர்
<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>
Reply
#2
<b>தமிழ் சினிமாவில் தொழில் நுட்பம்ஒரு பார்வை</b>

<img src='http://www.yarl.com/forum/files/pic2_186.jpg' border='0' alt='user posted image'> <img src='http://www.yarl.com/forum/files/pic.jpg' border='0' alt='user posted image'>

அண்மையில் வெளிவந்து ஓடிக் கொண்டிருக்கும் "ஆட்டோகிராப்' படத்தில் சேரன் பள்ளிக்குச் செல்லும் வழியில் வாய்க்கால் ஒன்று இருக்கும். அதன் அருகிலுள்ள பாலத்தில் பள்ளிப் பருவத்து சேரன் அமர்ந்து வாய்க்காலை நோக்குவது போல் ஒரு ஷாட். அப்போது வாய்க்காலில் தண்ணீர் ஏதும் இல்லாமல் வறண்டு போயிருக்கும். அதே இடத்தில் வளர்ந்து விட்ட வாலிபர் சேரன் அதே போல் அமர்ந்திருப்பதன் ஒப்புவமை ஷாட் அப்போது வாய்க்காலில் தண்ணீர் நிறைந்து ஓடும்.


கோணம் மாறாமல், எடுக்கப்பட்ட ஷாட் என்பதால் கிராபிக்ஸ் மூலமாக தண்ணீரை ஓட விட்டிருப்பர் என்று தான் முதலில் நமக்கு தோன்றியது. தவிர எங்கும் வறட்சி நிலவுவதால் வாய்க்காலில் தண்ணீராவது... நிறைந்திருப்பதாவது, என்ற எண்ணம் இயற்கையாகவே எழும்.

படம் பார்த்த சில நாட்களில் அந்தக் காட்சியைப் படமாக்கிய ஒளிப்பதிவாளர் ரவிவர்மனை சந்திக்க நேரிட்டது. அவரிடம் வாய்க்காலில் தண்ணீர் பற்றிப் பேசிய போது, "அது கிராபிக்ஸில் படமாக்கியதல்ல. நான்கு மாதங்கள் காத்திருந்து தண்ணீர் வந்த போது படமாக்கினோம்' என்றார். இதில் பாராட்டுக்குரிய அம்சம் என்னவென்றால், நான்கு மாதங்களுக்குப் பின் கேமரா கோணம் மாற்றாமல் படமாக்கியது தான்.

கேமரா கோணத்தில் ஒரு மில்லி மீட்டர் மாற்றம் இருந்தாலும், அந்த ஷாட்டில் சிறிய அதிர்வு ஏற்பட்டிருக்கும். அப்படி ஏற்படாத வகையில் படமாக்கியதால் தான் கிராபிக்ஸ் மூலம் தண்ணீர் வந்ததோ என்று நமக்கு சந்தேகம் எழுந்தது.

விஜய் "டிவி'யில் பிப்., 29, 2004 அன்று இந்தியத் தொலைக்காட்சியில் முதல் முறையாக என்று "டைட்டானிக்' தமிழ் பேசியதைப் பார்த்தேன். பெரிய திரையில் பார்க்காமல் போய் விட்டோமே என்று வருத்தப்பட வைத்தது அதன் காட்சி அமைப்புகள். ஆனால், முகம் சுளிக்க வைத்த இன்னொரு விஷயம் "டப்பிங்' என்ற பெயரில் மோசமாக தேர்வு செய்யப்பட்ட இரவல் குரல்கள்.

கதாநாயகி கேத்தி வின்ஸ்லெட்டுக்கு அனுராதா குரல் கொடுத்திருக்கிறார் போலிருக்கிறது. வழக்கத்தை விட கொஞ்சம் சிரமப்பட்டே பேசியிருக்கிறார். கதாநாயகி முதியவராக வரும் (பிளாஷ்பேக் காட்சிகளை நினைவுபடுத்துபவர்) போது குரலை மாற்றிப் பேசியிருக்கிறார் அனுராதா.

கதாநாயகன் லியானார்டோ டிகாப்ரியோவுக்கு டப்பிங் குரல் பொருந்தவே இல்லை. "காதல் கொண்டேன்' படத்தில் சோனியா அகர்வாலை காதலிப்பவராக வரும் சுதீப் ரஞ்சனுக்கு குரல் கொடுத்தவரே "டைட்டானிக்' நாயகனுக்கும் குரல் கொடுத்திருக்கிறார். மற்ற கதாபாத்திரங்களுக்கு குறிப்பாக நாயகியின் தாயாருக்கு இரவல் குரல் சகிக்கவில்லை. படத்தை ரசிப்பதற்கு இந்த பொருந்தாத குரல்கள் பெரும் இடையூறு!

ஏன் இப்படி என்று விசாரித்தால் டப்பிங்கை விஜய் "டிவி' நிறுவனமே செய்திருக்கிறது என்பது தெரிய வந்தது. செலவைக் குறைத்து சிக்கனமாக மொழி மாற்றம் செய்தால் அதில் பூரணத்துவம் இருக்காது என்பதற்கு டைட்டானிக் ஒரு உதாரணம் ஆங்கிலப் படம் என்றால் அதற்கென்றுள்ள குணம் மொழிமாற்றத்தின் போது மாறக் கூடாது. மச்சி, மடையா, முண்டம், நாயே, பேயே போன்ற நமது வழக்கத்திலுள்ள வார்த்தைகளை பிற மொழிப்படங்களில் கொண்டு வரவே கூடாது.

"தமிழ் மணம்' பரப்புகிறேன் என்ற பெயரில் அநாகரிகத்தை அரங்கேற்றக் கூடாது. ஜாக்கிசான் படங்களில், ஜேம்ஸ்பாண்ட் போன்ற ஆக்ஷன் படங்களில் பொருந்தாத குரல்கள், பொருந்தாத வார்த்தைகளை கவனிக்கையில் ஆங்கிலம் புரியாவிட்டாலும் ஆங்கிலத்திலேயே பார்த்து விடலாமே என்று தான் தோன்றுகிறது. "மம்மி' படத்தில் டப்பிங் பரவாயில்லை என்ற அளவில் இருந்தது. ஜேம்ஸ்பாண்ட் நடிகர் பியர்ஸ் பிராஸ்னன் நடித்த "ஹோவர்கிராப்ட்' தமிழில் டப் செய்யப் பட்ட விதம் சிறப்பு.

மணிரத்னம் இயக்கிய "தில்சே' இந்தி, "உயிரே' என்று தமிழில் "டப்' செய்யப்பட்டது. ஷாருக்கான் தமிழில் எப்படி பேசப் போகிறாரோ என்று ஒரு அவநம்பிக்கையில் படம் பார்த்தால், ஷாருக்கானுக்கு மட்டுமின்றி, படத்தில் நடித்த மனிஷா கொய்ராலா உட்பட அத்தனை கலைஞர்களுக்கும் தேர்வு செய்யப்பட்ட குரல்கள், பேசிய வசனங்கள் ரொம்ப தரம், தத்ரூபம்! ஷாருக்கான் தமிழ் கற்றுக் கொண்டு தமிழ்ப்படத்தில் நடித்தது போலவே இருந்தது. "தைய தையா' என்ற பாடலில் கூட இந்தி சாயல் வரவில்லையே.

இந்த தரத்தை மணிரத்னம் தான் இயக்கிய "கீதாஞ்சலி' தெலுங்குப் படத்தை "இதயத்தை திருடாதே' என்று தமிழுக்கு கொண்டு வந்தபோதும் வெளிப்படுத்தியிருந்தார். தெலுங்கில் "நுவ்வு' என்பது தமிழில் "நீ' என்று வரும். அப்போது உதட்டசைவில் வித்தியாசம் தெரியும். அது போன்ற வித்தியாசங்கள் கூட வராத அளவில் கவனமாக மணிரத்னம் தமிழ்படுத்தியிருந்தார். "டப்' செய்யப்படுகிற படம் என்பதை மனதில் வைத்தே சில காட்சிகளை, வசனங்களை கவனமாக படமாக்குவார்.

"சாகர சங்கமம்' தெலுங்கு "சலங்கை ஒலி' என்று தமிழ் பேசிய போது, கமல் சொந்தக் குரலில் பேசியிருந்தார். இதை அடுத்து அதே ஏ.டி.த.நாகேஸ்வரராவ் தயாரிப்பில், கே.விஸ்வநாத் இயக்கத்தில் "ஸ்வாதி முத்யம்' தெலுங்கில் கமல் நடித்திருந்தார். அதன் டப்பிங் விஷயத்தில் கமலுக்கும், தயாரிப்பாளருக்கும் பிரச்னை. கமல் தமிழ் டப்பிங்கில் பேச மறுத்து விட்டார். தயாரிப்பாளரோ விடவில்லை. "ஸ்வாதி முத்யம்' படத்தை "சிப்பிக்குள் முத்து' என்ற பெயரில் டப் செய்த போது கமலுக்கு எஸ்.பி.பாலசுப்ரமணியம் குரல் கொடுத்தார். இந்த குறைபாடு காரணமாகவே "சிப்பிக்குள் முத்து' எதிர்பார்த்த அளவு ஓடவில்லை.

நாகார்ஜுனன் தெலுங்கில் நடித்த "உதயம்' தமிழில் பிரமாதமாக ஓடியது. இப்படி டப்பிங் சிறப்பு காரணமாக வைஜயந்தி ஐ.பி.எஸ்., இதுதாண்டா போலீஸ் தமிழ்நாட்டில் பெரும் வெற்றிப் படங்களாக அமைந்தன. தமிழராக இருந்தாலும் தெலுங்கில் முன்னணியில் இருக்கும் டாக்டர் ராஜசேகர், தன் படங்களை தமிழில் டப் செய்யும் போது அதற்கு மிகுந்த சிரமம் எடுத்துக் கொள்வார். இரண்டு, மூன்று நாட்களில் சாதாரணமாக ஒரு படத்தை "டப்' செய்து விடுவர். ஆனால், ராஜசேகர் 15 நாட்கள் அதற்காக செலவிடுவார். பல டப்பிங் கலைஞர்களை வரவழைத்து, எந்தக் குரல் பொருந்துகிறதோ அதைத் தான் தேர்வு செய்வார்.

டப்பிங் எனும் போது சிவாஜியிடம் ஒரு வேடிக்கையான விஷயம் உண்டு. சிவாஜி தமிழ் தவிர தெலுங்கு, மலையாளம், இந்திப் படங்களில் நடித்திருந்தாலும், எதிலும் சொந்தக் குரலில் பேசியதில்லை. தெலுங்கில் சிவாஜி சரளமாகப் பேசக் கூடியவர். ஆனால், சிவாஜியின் படங்கள் தெலுங்கில் "டப்' செய்யப்படும்போது அங்கு பிரபலமாக உள்ள குணசித்திர நடிகர் ஜக்கையா, சிவாஜிக்கு ஆஸ்தான குரல் அளிப்பவராக இருந்தார். சிவாஜி நடித்த தெலுங்குப் படங்கள் தமிழில் "டப்' செய்யப்பட்டால், அதற்கும் சிவாஜி குரல் தர மாட்டார்.

"பக்த துக்காராம்' என்ற தெலுங்குப் படத்தில் சிவாஜி கவுரவ வேடமேற்று மராட்டிய சிவாஜியாக நடித்திருந்தார். அஞ்சலிதேவி தயாரித்த இதில் நடிப்பதற்கு சிவாஜி பணம் ஏதும் பெற்றுக் கொள்ளவில்லை. ஏனென்றால் "பராசக்தி'க்கு முன்பே சிவாஜி, அஞ்சலிதேவியின் தயாரிப்பில் "பரதேசி'யில் (தெலுங்கில்) நடிக்க ஒப்பந்தமாகியிருந்தார்.

ஆனால், அது தாமதமாகி சிவாஜியின் மூன்றாவது படமாக வந்தது. அந்த நன்றிக் கடனுக்குத் தான் சிவாஜி இலவசமாக நடித்திருந்தார். தன் சொந்த செலவிலேயே ஆந்திரா சென்று நடித்து விட்டு திரும்பினார்.

"பக்த துக்காராம்' சிவாஜி நடித்த காரணத்தால் தமிழில் "டப்' செய்யப்பட்டு வந்தது. மராட்டிய சிவாஜியாக, சிவாஜிகணேசன் சொந்தக் குரலில் கர்ஜனை செய்திருப்பார் என்று பார்த்தால், வேறொருவர் குரல் கொடுத்திருந்ததால் படத்தை ரசிக்க முடியாமல் போனது.

அதுபோல் "தச்சோளி அம்பு' என்ற மலையாள படவுலகின் முதல் சினிமாஸ்கோப் படத்தில் சிவாஜி நடித்திருந்தார். அந்தப் படத்தில் சிவாஜிக்கு இரவல் குரல்தான். நல்ல வேளை இதை தமிழில் "டப்' செய்யவில்லை.

கிருஷ்ணா தயாரிப்பில் "பெஜவாடா பெப்புலி' என்ற தெலுங்குப் படத்தின் படப்பிடிப்பு அருணாசலம் ஸ்டுடியோவில் நடைபெற்றது. கிருஷ்ணா, சிவாஜி, ராதிகா நடித்துக் கொண்டிருந்தனர். சிவாஜியின் சொந்தக் குரலில் தெலுங்கு மணத்தை காண ஆவலோடு காத்திருந்தால், ஏமாற்றம் தான் மிஞ்சியது.

கிருஷ்ணா, ராதிகா தெலுங்கில் வசனங்களைப் பேச, சிவாஜி மட்டும் தமிழில் பேசினார். அதாவது "நீகு ஏமி தெலுசு?' என்ற சிவாஜி "உனக்கு என்ன தெரியும்?' என்ற ரீதியிலேயே வசனம் பேசினார். தெலுங்கு வசனங்களையெல்லாம் அவருக்கு தமிழ் படுத்தியே எழுதிக் கொடுத்திருந்தனர்.

படத்தின் டப்பிங்கின் போது சிவாஜியின் உதட்டசைவிற்கேற்ப ஜக்கையா தெலுங்கில் பேசி விடுவார். மீண்டும் தமிழ் தெலுங்கு வடிவமெடுக்கும். சிவாஜி அப்படி நடந்து கொண்டதற்கு காரணம் "தமிழைத் தவிர வேறு கலாச்சாரம் நமக்குத் தெரியாது. பிற மொழி வசனங்களை பாடம் செய்வதால் ஏற்படும் கவனத்தால் நடிப்பும், முகபாவமும் சரியாக வராது' என்பது பின்னர் விசாரித்ததில் தெரிய வந்தது.

இந்த டப்பிங் விஷயத்தில் இந்தியாவிலேயே சாதனைக்குரிய நடிகராக கருதப்படுபவர் கமல்ஹாசன். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என்று எந்த மொழியில் நடித்தாலும் அத்தனையிலும் அவர் சொந்தக் குரலிலேயே பேசி நடித்திருக்கிறார். டப்பிங்கிலும் அப்படித்தான். அந்தந்த கலாசாரத்திற்கேற்ப வசனம் பேசி நடித்திருப்பது அவரது சிறப்பு.

டப்பிங்கில் சிவாஜி, எம்.ஜி.ஆருக்குப் பின் குறுகிய காலத்தில் வசனம் பேசி சாதனை புரிந்தவர்கள் கமல்ஹாசன், சரிதா. தெலுங்கில் நடிக்கும் மும்பை நடிகைகளுக்கும், டப் செய்யப்படும் மலையாள, தெலுங்கு, தமிழ் படங்களுக்கும் அதிக பட்சமாக குரல் கொடுத்து சாதனை படைத்து வருபவர் சரிதா. சில மணி நேரங்களிலேயே ஒரு முழு படத்தின் வசனங்களையும் சரிதா பேசி விட்டுப் போய்விடுவார். விஜயசாந்திக்கு கனத்த குரல் என்பதால் அவர் நடிக்கும் தெலுங்கு படங்கள் அனைத்திற்கும் சரிதாவே குரல் நாயகி.

இப்போது விளம்பரப் படங்களை பல மொழிகளில் எடுக்கின்றனர். அந்த படங்களில் நடிக்கும் அமிதாப், ஷாருக்கான் (இவர் ஏற்கனவே கமல்ஹாசனின் "ஹே ராம்' படத்தில் சொந்தக் குரலில் தமிழில் பேசியிருக்கிறார்) கோவிந்தா போன்றவர்கள் இந்தியில் மட்டுமின்றி தமிழ், தெலுங்கு, கன்னட மொழி விளம்பரங்களிலும் சொந்தக் குரலிலேயே பேசியிருக்கின்றனர். இதில் நடிகைகள் மட்டும் கொஞ்சம் விதிவிலக்கு. ஏனென்றால் மும்பை வரவுகளிலிருந்து எல்லா மொழி நாயகியருக்கும் குரல் வளம் கரகர, மொறமொற சமாச்சாரம் தான்.

(தொடரும்)


நன்றி: தினமலர்
<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)