Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தாத்ஸ் சிந்தனைகள்
#1
நித்திரை கழிய மற்ற நேரத்தையெல்லாம் நவக்கிரகங்களுக்கு குடுத்துப்போட்டு இருக்கிறம்.

எல்லாப்பிள்ளையளுக்கும் வணக்கம்! ஏதோ உந்த மழையும் ஓயுற மாதிரி தெரியேல்லை. அம்பாறை, மட்டக்களப்புப்பக்கம் கன பகுதிகளுக்கான பாதையளும் பாவிக்கேலாத அளவுக்குச் சேதமாகிக்கிடக்காம். கிழக்கு மாகாணத்தில் 4,5 நாடுகள் தங்களின்ர படையயோட திரியினம். இருந்தும் இன்னும் சனம் குறைந்தபட்ச வசதியளே கிடைகாமல் கஷ்ரப்படுகிறது. கிட்டடியில் ஒரு அலுவலா தெற்குபக்கம் போன நேரம் கன வெள்ளைக்காற ஆமிமார் பெரிய ஒரு கப்பலில இருந்து பொருட்களை இறங்கிக்கொண்டிருந்திச்சினம். கப்பலில பெரீசா 'சுனாமி நிவாரணப் பொருட்கள்" எண்டு போட்டிருந்திச்சு. அப்பாடா ஒருமாதிரி எங்கட சனத்தின்ர துயரமெல்லாம் தீரப்போகுது. எதுக்கும் அவையளுக்கு நாலு வார்தை நன்றி சொல்லுவோம் எண்டு கிட்டப்போனன். இதென்னடா கரைச்சல்! மல்லர் மாதிரி இரண்டு இரண்டு ஆமியளாக ஒரு சின்ன டப்பாவை நாலு கையாலையும் கவனமாய் இறுக்கிப்பிடிச்சு இறக்கிக்கொண்டிருந்திச்சினம்.

அதென்ன அப்பிடிக் கனமான டப்பா எண்டு பார்த்தால் 'சண்-கிறீம்" எண்ட திலை கிடந்திச்சு. விசயம் ஒண்டும் விளங்காமல் உதென்ன எண்டு அவையளையே கேட்டன். 'றிலீஃப் கொன்வோய் (நிவாரணப்பொருட்கள்) எண்டு பதில் வந்திச்சு. 'நிவாரணத்துக்கு ஏன் சன்-கிறீமைக் கொண்டு வாறீயள்? ஏதாவது அவசரமா, அவசியமாய் தேவைப்படுறதைக் கொண்டு வந்திருக்கலாமெல்லே! 'நோ.. யூ ஆர் றோங்க் மிஸ்ரர். வீடில்லாமல் மக்கள் வெளியாலை கனநேரம் வெய்யிலுக்கிள்ளை நிண்டால், அவையளுக்கு தோல்வருத்தம் வந்திடும். நீர் லோக்கல் பியூப்பிள்ளை ஒண்டு. உமக்கிது விளங்காது" 'என்ர கடவுளே! உங்கட வெள்ளைத் தோலுக்குத்தான் பாதுகாப்புக்கு சன்-கிறீம் பூசிப்போட்டு வெளியாலை திரியோணும். எங்களின்ர தோல் வெளியிலுக்குப் பழக்கப்பட்டிட்டிது. அது சரி ஆறடிக்கு மேலாலை வளர்நத்திருக்கிறீங்கள். ஒரு கிறீம் டப்பாவுக்கு இரண்டு பேர்கணக்கில 1500 பேர் நிக்கிறீயள். நான் வயசு போன கிழவனே உதைமாதிரி 50 டப்பா ஒரே தடவையில சுமப்பன். நீங்கள் உதென்ன கப்பல் பார்த்தவன் மாதிரி காரியம் செய்யிறீயள் எல்லாரும்? நான் சொன்னதை முன்னுக்கு கேட்டுக்கொண்டு நிண்ட ஒரு அதிகாரி தரத்தவர் சந்தோசமடைஞ்சமுகத்தோட வந்து என்ர கையைக் குலுக்கினார். 'ஓ யூ லோக்கல் ஓல்ட மான். நீங்க ரொம்ப புட்டிசாலி. இண்டையில இருந்து சிறிலாங்காவுக்கான எங்கட legal adviser (சட்ட ஆலோசகர்) நீங்க தான்! மாதம் ஆயிரம் டொலர் சம்பளம்! 'இஞ்சை தேவைப்படாத கிறீம் டப்பாவைத் தூக்கிறதுக்கு 2 பேர் தேவையில்லை எண்டு சொல்ல புட்டிசாலியா இருக்கத்தேவையில்லை. உதெல்லாம் எனக்கு விளங்கும். சோப்புப்போட்டு ஆக்களை எடுக்கிற உந்த வேலையை வேறஇடத்தில வைச்சுக் கொள்ளுங்கோ! எண்டு சொன்னபடியே அந்த இடத்தை விட்டுக் கழண்டிட்டன்.

உதைச்சொல்லத்தான் ஒரு விசயம் ஞாபகத்துக்கு வருகிது. இந்தியாவின்ர பெரிய நகரங்களிலை எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பீட்டின் படி 62 வீதமான சனத்துக்கு ஜோர்ஜ் புஷ் அரசை நல்லாப் பிடிச்சிருக்காம். ஏதோ நல்லா உதவியள் கிடைச்சிருக்கு எண்டு நினைப்பியள். ஓமோம் எம்.ரி.வியிலை பாட்டுக்கள், அது இதெண்டு எக்கச்சக்கம் நற்பணியளாம். போனகிழமை இந்தியா முழுக்க 25எப்.எம் வானொலியளை அமெரிக்கா தொடங்கிறதுக்கு ஆரம்பகட்டமா அலுவல் குடுக்க வெளிக்கிட்டிருக்கு. பாருங்கோ காலத்தை! இவையள் ஊரோட உளவாடும் கும்பலுக்கு உதவ, வேற ஆரோ இவையளின்ர நடுவீட்டுக்குள்ளையே.. ம்...ம்... 62வீதம் எண்டால் சும்மாவே? காங்கிரஸ் இல்லாட்டி பாரதீய ஜனதாவுக்குக் கூட உவ்வளவு கிடையாது. என்னவோ நீதி,நியாயத்தை மதிச்சு மற்றவையளையும் மூச்சுவிட அனுமதிச்சு எல்லாரும் வாழத்தலைப்பட்டா எவ்வளவு நல்லது! இன்னுமொரு விசயம் பிள்ளையள். ஈராக்கிலையும், ஆப்கானிஸ்தானிலையும் இருக்கிற அமெரிக்கப்படைகளுக்கு ஒரு வருசத்துக்கு ஒதுக்கியிருக்கின்ற பாதுகாப்புச்செலவு 100 பில்லியன் டொலர் (100 000 000 000 டொலர்! என்ற கடவுளே. ஏ9 என்ன ஆசியாவைச் சுத்தியே சீனப் பெருஞ்சுவர் மாதிரி குந்து கட்டலாம்!) உவ்வளவோட, ஆயிரம் பேருக்கு மேலை தங்கட ஆக்களையும் இழந்தும் நினைச்சதும் நடக்கேல்லை! நல்ல பேரும் கிடைக்கேல்லை! அந்த செலவோட பார்த்தால் இலங்கைக்கு ஓமெண்ட தொதை 200இல ஒரு பங்குதான். அதிலையும் வந்து சேர்றது எவ்வளவெண்டு வந்தாப்பிறகுதான் தெரியும்.

உங்களில ஆருக்காவது என்ரை பக்கத்துவீட்டு பொன்னர்கிழவனைத் தெரியுமே? இவரே கிழவர்.. இவர் போய் அவரை கிழவர் எண்டிறெண்டு நினைக்கிறீயளாக்கும். இதென்ன பெரிய வயசு! எல்லாம் மனம் தான் பாருங்கோ! ஆ.. அவர் பொன்னரோ போனகிழமை நல்லாய்த்தான் வாக்குவாதப்பட்டிட்டன். உந்த அழிவுகளைப் பற்சி கதைச்சுக்கொண்டிருக்கேக்கிள்ளை தான் நான் சொன்ன 'பத்து வருசத்துக்கு முன்னால உலகமெல்லாம் இருந்த பாலைக்குடிச்சு முடிச்ச பிள்ளையார். இந்த சுனாமி அலையளை நடு வழியிலை வைச்சுக் குடிச்சு குடிச்சு உதவியிருக்கலாம்" எண்டு. 'இப்பிடி நாங்கள் கஷ்ரப்படடோணும் எண்டு, எங்கட தலைவிதி இருந்தால் அதை ஆராலைதான் மாத்தலாம்? எண்டு பெரிய ஒரு பெருமூச்சோடை சொன்னார். 'கண்டறியாத மண்ணாங்கட்டி தலைவிதி! அப்பிடி ஏதாவது அபூர்வம் நடந்து, உது மட்டும் தடுக்கப்பட்டிருக்கோணும்... என்ர ஆசையைச் சொன்னன். 'நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால், தெய்வம் ஏதுமில்லை! நடப்பதையே நினைத்துவிட்டால்,.. அவற்றை பாட்டைக்கேட்க எனக்குப் பத்திக்கொண்டு வந்திச்சு. எட கைகாவலுக்கு உதவாத கண்டறியாத பாட்டுக்களைப் பாடிக் கொண்டு, மனுசற்றை மண்டையெல்லே வெடிக்கிது. 'எட 74 வயசில நான் இன்னும் உயிரோடை இருக்கிறன். எத்தினை வாழவேண்டியதுகள் எங்களை விட்டிட்டுப்போட்டுதுகள்" 'ஏரம்பர்! உம்மட ERAMPU எழுத்துகளின்ர கூட்டுக்கு 26ஆம் திகதி அண்டைக்கு கண்டமில்லை". 'சும்மா கண்டமும், சமுத்திரமும்! விசர்க்கதை! அந்த டிச.26 ஞாயிற்றுக்கிழமை ராசிபலன் பகுதியை நானும் கிட்டடியிலை திரும்பி எடுத்துப்பார்த்தனான். ஏதாவது கிடக்கோ எண்டறிய, ஒரு ராசிக்குக் கூட அப்பிடி ஒண்டுமே சொல்லப்படலேல்லை. எல்லாம் முடிஞ்சாப்பிறகு குரு மேடும், கும்பமேடும் கையிலை கிடக்கு, கண்டுபிடிக்கலாம் எல்லாத்தையும் எண்டு கதை அளக்கினம் எங்களுக்கு. உதிலை ஒண்டுமே இல்லை எண்டு நான் சொல்லேல்லை. ஆனாலும், நம்பிற அளவுக்கு ஒண்டுமே இல்லை எண்டிறதைத்தான் சொல்லவாறன். இன்றும் சிலர் பழைய நேரத்தை அமுல்படுத்தினால் பிரச்சினை தீருமெண்டு சொல்லினம். அகலாங்கு, நெட்டாங்கு எல்லாம் மனுசரால ஆக்கப்பட்ட கற்பனைக்கோடுகள் எண்டிறது இந்த அறுந்த தேவாங்குகளுக்கு ஏன்தான் விளங்குதில்லையோ? நான் தமிழன், அப்பிடியிருக்க என்ர பேரை இங்கிலிஷிலை எழுதி, என்ரை தலைவிதியை என்னண்டு சொல்லிறது? அதுவும் தமிழ்ப்பெயரை ஆங்கிலத்திலை எழுதேக்கிள்ளை கிட்டத்தட்டத்தான் அது சரியாய் இருக்கும். இன்னுமொண்ருங்கோ! கனகராசா எண்டால் அதை கனGAறாஜா எண்டெல்லே எழுதினம். இல்லாட்டி சுட்டெண் பிழைக்கிதெண்டிட்டு பேரை silent letters ஜப்போட்டு சரிகட்டிறதே? அண்டைக்கு தெரிஞ்ச தம்பி ஓராள் தான் கட்டப்போற வீட்டுப் பிளானை என்னட்டைத் தந்து, ஜடியா கேட்டார். நான் பார்த்து அங்கையிஞ்ச கொஞ்சம் நீள அகலங்களை கூட்டிக்குறைச்சுப்போட்டன். அதுக்கு அவர் சொன்னார், அளவுகள் ஒற்றை இலக்கத்திலை இருக்கோணும் எண்டொரு சாத்திரம் இருக்காம். கல்தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றிய எங்கட மூத்த குடியளிடை உப்பிடியும் ஒரு சாத்திரம் இருக்காம். அவருக்குச் சொன்னன். 'அடியிலை ஒன்றை இலக்கங்களோ இருக்கிற இந்த அளவுகளை எல்லாம் அங்குலமாய் போட்டால் இரண்டை இலக்கமாத்தானே கட்டாயம்வரும். காலா காலா இருந்து வாற வழக்கம் எண்டால் கல், காதம் எண்ட அளவுகளையெல்லோ கடைப்பிடிக்கோணும். அடியும், அங்குலமும் வெள்ளைக்காரன் காட்டிக்கொடுத்ததெல்லே!

என்னவோங்கோ! அவனவன் அங்கையிஞ்சை அதையிதைக் கண்டு பிடிச்சு ஈ-மெயில், இலையான்-மெயில் எண்டெல்லாம் அறிமுகப்படுத்தி, முன்னேறிக்கொண்டிருக்க நாங்கள் சும்மா இருந்துகொண்டு விஞ்ஞானத்துக்குப் பதிலா விண்ணாளம் கதைச்சுக் காலம் போக்கிக்கொண்டிருக்கிறோம். அவங்கள் மணிக்கூட்டைக் கண்டுபிடிச்சு, நேரா நேரத்துக்குத் தன்ர கடமையளைச் செய்து கொண்டிருக்கிறார்கள். நாங்களோ அவன்ரை கண்டுபிடிப்பை வைச்சு, இருக்கிற 24 மணித்தியாலத்தில நித்திரை கழியமிச்சமிருக்கிற நேரம் எல்லாத்தையும் நவக்கிரங்களுக்குப் பிரிச்சுக்குடுத்துப்போட்டு ஆவெண்டு கொண்டு இருக்கிறம். நீங்கள் நினைக்கக்கூடாது. இவர் ஆகலும் ஓவராப் போறாரெண்டு இப்பத்தைய நிலைமை என்னை அப்பிடிச் சொல்லிற அளவுக்குக் கொண்டு வந்துவிட்டது. அவங்கள் சந்திரனுக்குப் போனாங்கள், செவ்வாய்க்கு 'பாத்ஃபைன்டர்" அனுப்பினாங்கள் இன்னும் ஸ்பிறிற், ஹசினி எண்டு ஏதேதோ பேரிலையெல்லாம் அனுப்பித்தொலைக்கிறாங்கள் பூமிக்கு வெளியாலையும் மனுசர் வாழக்கூடின மாதிரி கிரகங்கள் இருக்கோ எண்டு அண்ட வெளியிலை உலாத்திக் கொண்டிக்கிறார்கள். நாங்கள் இஞ்சை '1இல் செவ்வாய்க்குற்றம் உள்ள அவாவுக்கு, 2இல குற்றம் இருக்கிற அவரைத் தேடி அலைச்சுகொண்டிருக்கிறம். அவனாரோ கண்டுபிடிச்ச மணிக்கூட்டை வைச்சுக்குறிப்பெழுதின ஒண்டுதான் நாங்கள் கண்ட மிச்சம். நல்லகாரியம் ஒண்டுமே குறிப்பிட்ட நேரத்துக்கு நடக்கிறறேல்லை. சொன்ன நேரத்துக்கு ஒரு இழவும் நடக்கிறேல்லை. அப்படியிருக்க பிறந்தநேரம் மட்டும் சரியாக் குறிச்சிருப்பினம் எண்டு எப்பிடி எதிர்கார்கிறது. சரி அப்பிடித்தான் caiso high quality மணிக்கூட்டைக் துணைக்கு எடுத்துக்கொண்டாலும், கால் வெளியே வந்தாப்பிறகோ, தலை வந்தாப்பிறகோ எந்த நேரம் பிறந்த நேரம் எண்டு குறிக்கிறவை? அதிலை ஏதாவது பொது வழக்கம் தானும் இருக்கிதோ? எனக்குத் தெரிஞ்ச ஒருசிலர் பள்ளிக்கூடத்திலை பதியேக்கிளை தான் சும்மா ஒரு நாலு வயசெண்டு சொல்லி Birth certificate எடுத்தவை. தயவுசெய்து குறை நினைக்கக்கூடாது. ஒரு கேள்வி ஒண்டு கேக்கிறன். முந்தி அந்நாளிலை என்ரை காலத்தில பிரபல்யமா இருந்த மூக்கம்மா, முனியம்மா எண்ட நடிகையளை உங்களுக்குத் தெரியுமோ? ஆ...சீ மன்னிக்கோணும்! நான் உங்கட காலத்துக்கு வாறன். ஆர்உந்த பேயா சிங்கியோ, சாயாசிங்கியோ! அந்தப்பிள்ளைக்கு செவ்வாய்தோசம், இஞ்சினைக்கிள்ளை வந்து ஆராவது தன்னைக் கட்டுவீங்களோ எண்டு அறிவிக்கிது எண்டு வைப்போம். பருத்தித்துறையில இருந்து காலி வரைக்கும் கண்டி-வீதி ஆம்பிளையளினர கியூவால நிரம்பி வழியுமோ இல்லையோ? ஒழுங்கா கியூவில நிக்கினமோ அல்லாட்டி கலவரம் வருகிறதோ எண்டிற அளவுக்கு நிலைமை மாறிவிடும். எட இவ்வளவு சொல்லிற ஏன்ரபுத்தியே அந்தநேரம் எப்பிடிப்போகுதோ தெரியாது. சும்மா பல்லைக்காட்டிறதை விட்டிட்டு, சொல்லவாற விசயத்தைப் பிடியுங்கோ! இயல்பாகவே சந்தர்ப்பங்களுக்கு ஏற்றமாதிரி சாத்திர, சம்பிரதாயங்களை ஏற்கனவே நாங்கள் மாத்தி வைச்சிருக்கிறம். அந்த மாற்றமும், வழக்கங்களும் எங்கட ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு ஆதரவாக இருக்கோணுமே தவிர, ஆக்கினையளா இல்லை.

உப்பிடித்தான் கதைபடேக்கிள்ளை எங்கட முன்வீட்டு செல்வம் ஆச்சி சொல்லுவா, 'அது அது அறிஞ்சவை தெரிஞ்சவை தான் கனகாலமா ஆராய்ச்சியள் செய்து, எங்கட முன்னேற்றத்துக்காகத்தான் ஏடுகளில்லை எழுதி வைச்சிட்டுப் போனவை. அதுக்கு ஒருசிலர் பிழையா விளக்கம் குடுத்தாப்போல எல்லாம் பிழையெண்டு நாங்கள் அவசரப்பட்டு சொல்லக்கூடாது' எண்டு. எங்கட முன்னேற்றத்துக்காகத்தான் விட்டிட்டுப் போனவை எண்டால்.... அந்த தீர்க்கமான உண்மையளை வைச்சு நாங்கள் முன்னேறியெல்லோ இருக்கோணும். உலகத்திலேயே உருப்படமாக் கிடக்கிற இரண்டு நாடுகளும் (இலங்கையும்,இந்தியாவும்) பெரிய சாத்திரக்கொம்புகள் இருக்கின்ற நாடுகள்தானே! ஆனாலும் பாருங்கோ! செல்வம் ஆச்சியைப் போலத்தான் நானும் கிட்டத்தட்ட அதைத்தான் சொல்லிறன். எல்லாமே எல்லாக் காலத்துக்கும் அறிவுச்சியாக நிலைபேற்றோட இருக்காது. இருக்கிற அறிவுநிலையிலை இருந்து மேலதிகமாச் சிந்தித்துப் பெறுகிறதுதான் ஏற்றுக்கொள்ளக்கூடிய அறிவு.

நிகழ்வுகளுக்கான மூல காரியங்களை அறிவியல் ரீதியாக, புலன்களால் அறியக்கூடியதாக விளங்கிக்கொள்ள முயற்சிக்கோணும்.

அதை விட்டிட்டு நாலு பேர் சொல்லினம் எண்டிறதுக்காக தலையாட்டக்கூடாது. 1609ஆம் ஆண்டு தன்ர தொலைநோக்கியை வைச்சு கலிலியோ பூமியின்ர வடிவம், சூரியத்தொகுதியைப் பற்றியெல்லாம் சொல்லிப்போட்டார். அதுக்குப்பிறகும் அவர். புவியியல் தொடர்பாகச் சொன்ன கருத்துக்கள் பிடிக்காமல் வத்திக்கானில இருந்த பாப்பரசரின்ரை அதிகாரம் அவரை சிறையில தள்ளிச்சிது. அதெல்லாம் நடந்து 392 வருசங்களுக்குப் பிறகும் வத்திக்கான் தங்கட பிழையை ஒத்துக்கொண்டிருச்சு. கொப்பேணிகஸீம், கலிலியோவும் பூமி உருண்டை எண்டு சொல்லி கிட்டத்தட்ட எல்லாருமே நம்பினாப்பிறகு, 1960-1970களில தமிழ்நாட்டில இருக்கிற புத்திஜீவிகள் கூட்டம் 'அகத்தியர்" படம் எடுத்திச்சினம். அதிலை இமயமலையில நடந்த சிவபெருமானின்ரை திருமண வைபவத்துக்கு பூமியிலை உள்ள எல்லாச்சனமும் போனதாலை பூமி 'படார்" எண்டு ஒரு பக்கம் சரிஞ்சிடும். விசயம் பிசகப்போகுது, சனம் பயப்பிடுகிதெண்டு சிவபெருமான் பார்த்திட்டு, அகத்தியரை அடுத்த பக்கத்துக்கு போய் பலன்ஸ் பண்ணச் சொல்லிக் கேட்பார். அந்தாளும் பாவம்! முக்கியமான அலுவல், அதுவும் கடவுளே உதவி கேட்கிறாரெண்டிட்டு, அந்த மனுசனும் பாவம் உம்மெண்டு மூஞ்சையை நீட்டிக் கொண்டு சோகப்பாட்டொண்டு பாடிக்கொண்டு, மற்றப்பக்கமாக நடந்து போவர். பாட்டோ அகத்தியர் போகப்போக தட்டை உலகம் எப்படி பலன்ஸ் ஆகுதெண்டு அந்தப்படத்திலை அவையள் animate பண்ணி படம் காட்டுவினம்.

பார்த்தீங்களே, என்னவிசயம் எண்டாலும் ஆதாரபூர்வமா தெரிஞ்சாத்தான் உண்மையெண்டு ஏற்றுக் கொள்ளலாம். அதைவிட்டிட்டு கொஞ்சம் அசந்தாலும், எங்கட காதிலையே பூச்சுத்தி பேப்பட்டம் கட்டிப்போடுவினம். நீங்கள் சிலநேரம் நினைப்பியள், இந்த மனுசன் உதைவிட திரும்ப வராமலே இருந்திருக்கலாம். எப்ப பார்த்தாலும் சும்மா குறை கண்டு பிடிச்சுக்கொண்டு, நொட்டை கதைச்சபடி தானெண்டு! என்ர குஞ்சுகள்! உங்களைப்பற்றி நான் கதைக்காமல், கவலைப்படாமல் வேறஆர்? நீங்களே சொல்லுங்கோ பார்ப்பம். அதுக்கும் நான் எங்கட எல்லாற்றையும் நன்மைக்காகத்தானே சொல்லிறன். என்னிலையும் உங்களுக்குப் பிடிக்காத விசயங்களை, எனக்கு நீங்கள் தாரளமா எழுதலாம். அப்ப நான் வாறன் என்ன! பேந்து சந்திப்பம் (சும்மா என்னைத் திட்டிக்கொண்டு பத்திரிகைப் பக்கத்தைப் புரட்டவேண்டாம்)

ஈழநாதம்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#2
:twisted: :twisted: :twisted: :mrgreen: :mrgreen: :mrgreen:
[b]
Reply
#3
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> என்ன தலைப்பு வித்தியாசமாய் இருக்கு..?? <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)