Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
வட, தென் தமிழீழத்தில் ஒரே காலத்தில் யுத்தம் தொடங்கப்படும்
#1
வட, தென் தமிழீழத்தில் ஒரே காலத்தில் யுத்தம் தொடங்கப்படும்: துணைத் தளபதி றமணன்


வட, தென் தமிழீழப் பகுதிகளில் ஒரே நேரத்தில் யுத்தம் தொடங்கப்படும் என்று மட்டக்களப்பு மாவட்ட துணைத் தளபதி றமணன் தெரிவித்துள்ளார்.


கிளிநொச்சி மாவட்ட மற்றும் தாயகத்தின் ஏனைய பகுதிகளில் பொதுமக்களுக்கான தற்காப்பு பயிற்சிகள் கிளிநொச்சி பொது விளையாட்டு மைதானத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை (17.01.06) நடைபெற்றது.

இந்நிகழ்வின் தொடக்க விழாவில் மட்டக்களப்பு மாவட்ட துணைத் தளபதி றமணன் ஆற்றிய உரை:

உலகத்திலே இருக்கின்ற எந்த சக்தியாலும் வெல்ல முடியாத இராணுவமாக தமிழீழ விடுதலைப் புலிகள் அடுத்த கட்டப் பாய்ச்சலுக்குத் தயார் நிலையில் இருக்கின்றார்கள்.

எங்களது போராட்டத்தை பொறியிலே சிக்க வைக்க கடந்த அரசியல் கால கட்டத்தில் சூழ்ச்சி மேற்கொள்ளப்பட்டது. எங்கள் தலைவருடைய இராஜதந்திரமான செயற்பாட்டால் அந்தச் சூழலை மாற்றப்பட்டு நாம் இறுதி உரிமையைப் பெறுவதற்கான சூழல் ஏற்படுத்தப்பட்டு இருக்கிறது.

இந்தச் சூழலை வெல்வதற்காக இந்த இராணுவப் படையோடு மக்கள் படை திரண்டு பொங்கி எழ வேண்டிய காலம் இது. கடந்த யுத்த காலங்களில் சிறிலங்கா இராணுவத்துக்கு பல நாடுகள் பல பயிற்சிகளையும் தளபாடங்களையும் வழங்கினார்கள். அவற்றை எதிர்கொண்டு எங்கள் தலைவரின் நெறிப்படுத்தலில் அந்த யுத்தத்தை முறியடித்த போரில் மக்கள் எழுச்சி கொண்டதை வரலாறு மறந்துவிடாது.

ஜயசிக்குறு சண்டை காலத்தில் நாம் மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்தபோது அங்கிருந்த போராளிகளின் எண்ணிக்கை 350. அகற்றப்பட்ட இராணுவ முகாம்கள் 45. வட தமிழீழத்திலும் தென் தமிழீழத்திலும் ஒரே காலத்தில் யுத்தம் தொடங்க வேண்டும் என்பதுதான் இன்று எங்களுடைய தலைவரின் திட்டம். அன்று 350 போராளிகள் இருந்த மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று பல போராளிகள் குட்டிசிறி மோட்டார் படையணியில் தமது பயிற்சிகளை எடுத்துவிட்டு தலைவரின் கட்டளைக்குக் காத்திருக்கிறார்கள்.

அங்கு இருக்கக் கூடிய படையினரது எணிக்கை 4 ஆயிரம். ஒரு டிவிசனுக்கும் குறைவானது. விசேட அதிரடிப்படையினரின் எண்ணிக்கை 900. அவர்கள் போருக்குத் தயார்படுத்தப்பட்டவர்கள் அல்ல. 96 ஆம் ஆண்டு விசேட அதிரடிப் படையினர் மீது தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்ட போது சந்திரிகா மீது படையினர் வழக்குத் தொடர்ந்தனர். பெரும் யுத்தத்துக்கு தயார்படுத்தப்பட்டவர்கள் அல்ல நாங்கள். எங்களை போரிலே ஈடுபடுத்துவது பிழையான விடயம். நாங்கள் ஏரியா கொமாண்டோக்கள் மட்டுமே என்று நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தனர்.

மட்டக்களப்பிலே இருக்கக் கூடிய இராணுவத்தினரது தொகையை நாங்கள் இலகுவாக வெற்றி கொள்ளக் கூடிய சூழ்நிலை இன்று உருவாகிறது. வட தமிழீழத்தில் 4 டிவிசன்கள் உள்ளன. அதை எதிர்கொள்ள மக்கள் படை தயாராக வேண்டும்.

இந்த விடுதலைப் போராட்டம் கெரில்லா அமைப்பாக இருந்த போது நீங்கள் உணவூட்டிய, சிறகால் காப்பாற்றிய போராளிகளே இன்று உள்ளனர். அதே உணர்வோடு இன்றும் மக்கள் செயற்பட வேண்டும்.

இன்றைய சிறிலங்கா அரசாங்கம் சமாதானத்துக்கான எந்த ஒரு நிலைப்பாட்டையும் கொண்டிருக்கவில்லை. கடந்த மாவீரர் நாள் உரையிலே தலைவர் கால அவகாசத்தை கொடுத்தார். ஆனால் எந்த ஒரு தீர்வுத்திட்டத்தையும் அரசாங்கம் முன்வைக்கவில்லை. சிறிலங்கா அரசாங்கம் பல நாடுகளில் சென்று ஆயுதங்களைக் கொள்வனவு செய்கிறது. ஜே.வி.பி.யினரும், ஜாதிக ஹெல உறுமயவினரும் சிறிலங்கா இராணுவத்தை வலுப்படுத்த வேண்டும் என்கிறார்கள்.

நாங்கள் எங்கள் கால்களிலே- தலைவரின் வழியில்- தலைவரின் காலத்தில்தான் உரிமையை வென்றெடுக்க முடியும்.

தமிழர்களுடைய கடந்த கால வரலாறுகளில் மக்களை வழிநடத்த ஒரு தலைவர் இல்லாமல் அல்லோகலப்பட்டோம். இன்று கூட உலகத்திலே பல நாடுகள் ஒரு தலைமைத்துவம் இல்லாமல் சின்னாபின்னமாக அலங்கோலமாக தத்தளிப்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது.

ஆனால் நாங்கள் கொடுத்து வைத்தவர்கள். எங்கள் தேசத்துக்கான தலைவர் எந்த சக்தியாலும் வாங்கி விட முடியாதவர். பல நாடுகளின் விடுதலை யுத்தங்கள் குரங்கின் இடுப்பில் கயிற்றைப் போட்டு ஆட்டுவதைப் போல் ஆட்டுவிக்கப்படுகின்றன. ஆனால் எங்கள் தலைவரிடம் அது எடுபட்டதா? எங்களை யாரும் அசைக்க முடியாது. எங்களுக்கு யாரும் எல்லை போட முடியாது. எங்களுக்கு யாரும் அழுத்தத்தைப் போட முடியாது என்ற நிலையைத்தான் தலைவர் உருவாக்கி வைத்துள்ளார். அதனால் நாங்கள் தனித்துவமாக இருக்கிறோம்.

ஆயுதங்களை வைத்துவிட்டு சர்வதேசம் சொல்வதற்கு ஆடினால் சமாதானம் வரும் என்கிறார்கள். இதுதான் சர்வதேச நிலைப்பாடு. அது சமாதானம் அல்ல. 17,903 மாவீரர்கள் எதற்காக உயிர்நீத்தார்கள்? பல ஆயிரம் மக்கள் இந்த மண்ணிற்காக தங்களை அர்ப்பணித்துள்ளார்கள். சொத்துகளை இழந்திருக்கிறார்கள். இப்படி நாங்கள் இழந்துவிட்டு அவர்கள் சொல்வதைப் போல் ஆயுதங்களைக் கையளிப்பதா? அவர்கள் கூறுகிற சமாதானத்தை ஏற்றுக்கொள்வதா? சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

நாங்கள் எதிர்கொள்ளப் போகிற- வெற்றி கொள்ளப் போகிற யுத்தத்தை எல்லோரும் இணைந்து எழுச்சியோடு போராடுவோம்.

சிங்களத்தின் இடுப்பு, நெஞ்சு, தலைப்பகுதி என எல்லாப் பகுதியிலும் அடி விழ வேண்டும். மகிந்த ராஜபக்ச போடுகிற திட்டம் முட்டாள்தனமான திட்டம். சிங்களதேசம் அனுபவிக்கப் போகிற துன்பங்களை நாங்கள் பார்க்கப் போகிறோம். நாங்கள் நிச்சயம் வெல்வோம்.

யாராலும் அசைத்துவிட முடியாத அத்திவாரங்களாக எங்கள் மாவீரர்கள் இருக்கிறார்கள். அந்தத் தியாகத்தினூடாக, தெய்வங்களினூடாக விடுதலையை வென்றெடுப்போம்.

கடந்த காலங்களில் எப்படி படைகளை உடைத்து தகர்த்து சிதறடித்து ஓடவைத்தோமோ அதேபோல் இப்போதும் இருக்கிற இரானுவத்தை சிதறடித்து ஓட விரட்டி சர்வதேசம் வியந்து பார்க்கிற தமிழீழத்தை- உலகத்திலே சிறந்த இனமாக- நாடாக வளர்த்தெடுக்க உறுதி பூணுவோம் என்றார் றமணன்.


புதினம்
Reply
#2
அமைதிப் பேச்சுக்களில் தீர்வு ஏற்படாவிட்டால் மீண்டும் யுத்தம்: சி.எழிலன் எச்சரிக்கை!

அமைதிப் பேச்சுக்களில் எதுவித தீர்வும் ஏற்படாவிட்டால் யுத்தம் மீண்டும் தொடங்கும் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் திருகோணமலை மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் சி.எழிலன் எச்சரித்துள்ளார்.


திருகோணமலை சம்பூரில் உள்ள விடுதலைப் புலிகளின் அரசியல்துறை செயலகத்தில் ரொய்ட்டர்ஸ் செய்தி ஸ்தாபனத்துக்கு சி.எழிலன் அளித்த நேர்காணல்:

அமைதிப் பேச்சுக்களில் எதுவித தீர்வும் ஏற்படாவிட்டால் யுத்தம் மீண்டும் தொடங்கும். தீர்வுகள் ஏதுமில்லாமல் நீண்ட காலத்துக்கு இந்தச் சூழ்நிலையோடு நாங்கள் காத்திருக்க முடியாது.

சிறிலங்கா இராணுவத்தினரின் வன்முறைகளினால் ஆத்திரமடைந்த மூன்றாவது சக்தியான மக்கள்தான் சிறிலங்கா அரச படைகள் மீது தாக்குதல்களை நடத்துகின்றனர்.

சிறிலங்கா அரசுதான் முதன் முதலில் விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து விலத்தப்பட்ட கருணா குழுவைப் பயன்படுத்தி அதாவது அந்த மூன்றாவது சக்தியைப் பயன்படுத்தி பொதுமக்கள் மீது தாக்குதல்களை மேற்கொண்டது.

தற்போது இங்கு அமைதி இல்லை. எந்த நேரத்திலும் யுத்தத்தைத் தொடங்குவதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம்.

சிறிலங்கா இராணுவத்தினால் தங்களைப் பாதுகாக்க முடியாத நிலையில் தமிழ் மக்கள் இயல்பாகவே எங்களை ஆதரிக்கின்றனர். ஆழிப்பேரலையின் போது நாம் அவர்களோடு இணைந்து செயற்படுவோம் என்று எண்ணினோம். ஆனால் அவர்கள் அதை நிறுத்திவிட்டார்கள். ஆழிப்பேரலை கூட அவர்களிடத்தில் எதுவித மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை என்றார் எழிலன்.

யுத்தம் தொடங்கினால் விடுதலைப் புலிகளின் முதல் இலக்கு யாழ்ப்பாணமாகத்தான் இருக்கும் என்பது தொடர்பாகவும் திருகோணமலையில் தற்கொடைப் படையினர் மீது கடற்படை மீது தாக்குதல்கள் நடத்தப்படக் கூடும் என்பது குறித்தும் கேட்டபோது அவை தொடர்பில் சி.எழிலன் எதுவும் தெரிவிக்கவில்லை. "பொறுத்திருந்து பாருங்கள்" என்று கூறினார்.

புதினம்
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)