பட மூலாதாரம்,US AIR FORCE
கட்டுரை தகவல்
'வளிமண்டல நதிகள்' அமெரிக்காவின் மேற்குக் கடற்கரையில் பேரழிவை ஏற்படுத்தியுள்ளன. அவை மேலும் வலுவடைந்து வருகின்றன. அடுத்து எவ்விடத்தைத் தாக்கும் என்று கணிக்க விஞ்ஞானிகள் வானத்தில் அவற்றைத் துரத்தி வருகின்றனர்.
கடந்த ஜனவரி மாதம், ஆன்னா வில்சன் 'கல்ஃப்ஸ்ட்ரீம் IV ஜெட்' விமானத்தில் அமர்ந்து, வடக்கு பசிபிக் பெருங்கடலின் மேல் இருந்த வெள்ளை மேகங்களின் அமைதியான தோற்றத்தைக் கண்டார்.
வளிமண்டல விஞ்ஞானி மற்றும் தீவிர வானிலை நிபுணரான வில்சன் தனது ஹெட்ஃபோன்கள் மூலம் அவரது சக ஊழியர் `கவுண்டவுன்` எண்ணுவதைக் கேட்டார். விமானத்தின் பின்பகுதியில், மற்றொரு சக ஊழியர் மெலிதான, உருளை வடிவக் கருவிகளை ஒரு குழாய் மூலம் கீழே இருந்த புயலில் இறக்கி, அது அமெரிக்காவின் மேற்குக் கரையை நெருங்கும்போது அதன் வலிமை எவ்வளவு இருக்கும் என்று அளவிட்டார்.
அவர்கள் கண்காணிக்கும் புயல் 'வளிமண்டல நதி' என்றழைக்கப்படும் ஒரு வகையைச் சேர்ந்தது. இந்த வானிலை நிகழ்வு சமீபத்திய ஆண்டுகளில் அதிக கவனத்தை ஈர்த்து வருகிறது. விஞ்ஞானிகள் மற்றும் பொதுமக்கள் சிலநேரம் அவை ஏற்படுத்தும் பேரழிவு தாக்கத்தைப் புரிந்துகொள்ள முயன்று வருகிறாரகள். காலநிலை மாற்றத்தின் காரணமாக வளிமண்டல நதிகள் பெரிதாகவும், அடிக்கடி நிகழ்பவையாகவும் தீவிரமானதாகவும் இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. மேலும் அவை ஏற்படுத்தும் சேதங்களும் மோசமாகி வருகின்றன.
பெரும்பாலும் வானத்தில் பறக்கும் நதிகள் என்று விவரிக்கப்படும், வளிமண்டல நதிகள் கண்ணுக்குத் தெரியாத மிகப்பெரிய நீராவி ரிப்பன்களாகும். ஒவ்வொன்றும் பல நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் அகலம் கொண்டவை. மிசிசிப்பி ஆற்றைவிட 27 மடங்கு தண்ணீரைக் கொண்டு செல்பவை.
சூடான கடல்களின் நீர் ஆவியாகி, மேலே உயர்ந்து, குளிர்ச்சியான அட்சரேகைகளுக்கு நகரும்போது, இவை உருவாகின்றன. கலிபோர்னியா போன்ற ஒரு கடற்கரையை இந்த நீராவி அடையும்போது, அது ஒரு மலையில் பாய்ந்து, குளிர்ந்து, மழையாகவோ அல்லது பனியாகவோ கீழே வருகிறது. இது மலைப்பகுதிகளில் வழிந்து நிலச்சரிவுகள், பெருமழை, வெள்ளம், மற்றும் கொடிய பனிச்சரிவுகளை ஏற்படுத்தும் அளவுக்கு வலுவானவை.
'புயல் வேட்டைக்காரர்கள்'
பட மூலாதாரம்,GETTY IMAGES
படக்குறிப்பு,'வளிமண்டல நதிகள்' ஏற்படுத்தும் சேதங்களும் மோசமாகி வருகின்றன
அமெரிக்காவின் மேற்குக்கரையில், இந்த வளிமண்டல நதிகள் அதீத மழை, மிக வெப்பமான புயல்கள், பெருவெள்ளம், தீவிர கடலோர காற்று மற்றும் நிலச்சரிவுகளை உருவாக்கின்றன. அவை குழுக்களாக வரலாம் - அப்போது அவை `குடும்பங்கள்` என்று அழைக்கப்படுகின்றன. அவற்றில் பல வெகு சில நாட்களின் இடைவெளியில் நிகழ்கின்றன.
முன்பு ஆன்னா வில்சனும் அவரது சகாக்களும் ஒரு 'வளிமண்டல நதி' புயலுக்கு மேலே பறந்தவாறு ஆய்வு செய்வதாக முன்பு குறிப்பிட்டோம் அல்லவா! அந்தப் புயல்களின் குடும்பம் உண்மையில் நான்கு வளிமண்டல நதிகளால் உருவாக்கப்பட்டது. அது பின்னர் கலிபோர்னியாவில் கடுமையான பனிப்பொழிவை ஏற்படுத்தியது. இதனால் 2024ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஒரேகானில் வெள்ளம் ஏற்பட்டது.
ஒவ்வொரு வளிமண்டல நதியும் எழுப்பும் அடிப்படைக் கேள்விகள் ஒரே மாதிரியானவை என்கிறார் கலிபோர்னியா சான் டியாகோ பல்கலைக்கழகத்தின் கடலியல் ஆராய்ச்சி நிறுவனத்தின் கள ஆராய்ச்சி மேலாளராக இருக்கும் வில்சன். "அது எங்கே நிலச்சரிவை உண்டாக்கப் போகிறது? அது எவ்வளவு வலுவாக இருக்கும்? எவ்வளவு காலம் நீடிக்கும்? இவற்றுக்குப் பதிலளிப்பத்தில் நாங்கள் மேம்பட்டு வருகிறோம்," என்று அவர் கூறுகிறார்.
அமெரிக்க விமானப்படை, தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் (நோவா ப- Noaa) மற்றும் பிற அமைப்புகளின் கூட்டுத் திட்டமான வளிமண்டல நதி மறுசீரமைப்பு அல்லது ஏஆர் ரீகானின் (Atmospheric River Reconnaissance - AR Recon) ஒரு பகுதியாகத்தான் கடந்த ஜனவரி மாதம் வில்சன் புயலுக்குள் பயணித்தார். சூறாவளிகளைக் கண்காணிப்பதற்காக பொதுவாக பயன்படுத்தப்படும் 'சூறாவளி வேட்டைக்காரன்' ('hurricane hunter') எனப்படும் NOAA கல்ஃப்ஸ்ட்ரீம் ஜெட், இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட விமானப்படை விமானங்கள் ஆகியவற்றை விஞ்ஞானிகள் குழு வளிமண்டல நதிகளுக்கு மேல் செலுத்துகிறார்கள். அவற்றிலிருந்து `டிராப்சோன்ட்ஸ்` எனப்படும் கருவிகளை புயல்களில் நுழைத்துச் சோதனைகளை நடத்துகிறார்கள்.
"வளிமண்டல நதிகள் சுவாரஸ்யமானவை. ஆனால் நீங்கள் உண்மையில் அவற்றைப் பார்க்க முடியாது, ஏனெனில் அவை வெறும் நீராவி," என்று வில்சன் கூறுகிறார். "அவை உண்மையில் மேற்பரப்புக்கு நெருக்கமாக உள்ளன. அவை பொதுவாக வளிமண்டலத்தின் மிகத் தாழ்ந்த பகுதிகளில் கூடுகின்றன," என்கிறார்.
இந்தச் செயல்முறையின் போது அவர்கள் மேக மூட்டத்தின் கீழ் பயணிக்க முனைகிறார்கள், என்கிறார் வில்சன். இது செயற்கைக்கோள்கள் போன்ற வழக்கமான வானிலை கண்காணிப்புக் கருவிகளில் இருந்து அவற்றை மறைக்கிறது. "செயற்கைக்கோள்கள் மேற்பரப்பிற்கு அருகில் என்ன நடக்கிறது என்பதைப் பார்ப்பது மிகவும் கடினம். எனவே நமது சென்சார்களை கீழே இறக்கி, வெப்பநிலை, காற்றழுத்தம், காற்று, மற்றும் ஈரப்பதம் ஆகிய அடிப்படை வானிலை அளவீடுகளைப் பெறுகிறோம்," என்று அவர் கூறுகிறார்.
'ஆபத்தானவை, ஆனால் நன்மையும் உண்டு'
பட மூலாதாரம்,ANNA WILSON
படக்குறிப்பு,ஆன்னா வில்சன்
கடந்த 2023ஆம் ஆண்டு இலையுதிர்காலம் மற்றும் 2024ஆம் ஆண்டு வசந்த காலத்துக்கு இடையில் வாஷிங்டன், ஓரிகான் மற்றும் கலிபோர்னியா ஆகிய பகுதிகளைத் தாக்கிய 51 வளிமண்டல நதிகளின் ஒரு பகுதிதான் வில்சன் மற்றும் அவரது குழுவினர் ஜனவரி மாதம் கண்காணித்து வந்த புயல்கள்.
முந்தைய பருவத்தைவிட 13 புயல்கள் அதிகமாக உருவாகின. அத்தகைய புயல் எப்போது, எங்கே வரும், அது எவ்வளவு சக்தி வாய்ந்தது என்பதை அறிவது, பூமியில் உள்ள மக்களுக்கு என்ன நேரப் போகிறது என்பதைத் தயாரிக்க உதவுகிறது. எடுத்துக்காட்டாக, சரியான நீர்த்தேக்கங்களைச் சரியான நேரத்தில் காலி செய்ய உதவுகிறது. ஆனால் வில்சன் மற்றும் அவரது சகாக்கள் 2016இல் இந்தப் பணியைச் செய்யத் துவங்கினர். இது வளிமண்டல நதிகளை நன்கு புரிந்து கொள்வதற்கான பரந்த அறிவியல் முயற்சியின் ஒரு பகுதி. அவற்றின் ஆச்சரியமான நன்மைகளையும் அறிந்துகொள்ள இது முயல்கிறது.
தீவிர வானிலை நிபுணர்கள் சுட்டிக்காட்டுவது போல, வளிமண்டல நதிகள் அழிவுகரமானவை மாத்திரமே அல்ல. மாறாக, அவை உயிர்களுக்கு ஆதரவாகவும் இருக்கும்.
"நமக்கு வளிமண்டல நதிகள் அவசியம். அவை இல்லாவிட்டால் அமெரிக்காவின் மேற்கில் வறட்சி ஏற்படும்," என்று வில்சன் கூறுகிறார். அமெரிக்காவின் மேற்குக் கடற்கரையில் நிகழும் மூன்றில் இரண்டு பங்கு வறட்சிகள் வளிமண்டல நதிகளால் முடிவுக்குக் கொண்டு வரப்படுகின்றன. அவை `வறட்சி நிவாரணிகள்` என்று அழைக்கப்படுகின்றன.
"வளிமண்டல நதிகள் நன்மையும் பயக்கின்றன," என்று கலிபோர்னியா பல்கலைக்கழகம், லாஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் நாசாவின் ஜெட் ப்ராபல்ஷன் ஆய்வகத்தின் வளிமண்டல விஞ்ஞானி பின் குவான் ஒப்புக்கொள்கிறார். "நாங்கள் அவற்றின் அபாயகரமான பக்கத்தை முன்னிலைப்படுத்த முனைகிறோம். ஆனால் அவை கலிபோர்னியா போன்ற வறண்ட பகுதிகளில் முக்கியமான நீர் விநியோகத்தை வழங்குகின்றன என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டும்," என்கிறார். ஒட்டுமொத்தமாக, கலிபோர்னியாவின் மழை மற்றும் பனியில் 50% வரை அவை உருவாக்குபவைதான்.
அமெரிக்கா மற்றும் கனடாவின் மேற்குக் கரையில், வளிமண்டல நதிகள் ஹவாய் அருகே தோன்றியவை என்று நம்பப்படுவதால், அவை `பைனாப்பிள் எக்ஸ்பிரஸ்` என்று அழைக்கப்படுகின்றன. இருப்பினும், வளிமண்டல நதிகள் உலகளாவிய நிகழ்வு என்பதால் வல்லுநர்களிடையே இந்தப் பெயர் அரிதாகவே பயன்படுத்தப்படுகிறது என்று குவான் கூறுகிறார்.
மேலும் மேற்குக்கரையைத் தாக்கும் பல வளிமண்டல நதிகள் உண்மையில் ஹவாய்க்கு வெகு தொலைவில் உருவாகின்றன. 2017ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், வழக்கத்திற்கு மாறாக, ஒரு நீண்ட வளிமண்டல நதி ஜப்பானில் இருந்து வாஷிங்டன் வரை சுமார் 8,000கி.மீ. நீண்டது.
கடந்த 2019ஆம் ஆண்டில், ஆராய்ச்சியாளர்கள் வளிமண்டல நதிகளின் தீவிரத்தை தரவரிசைப்படுத்த ஒன்று (பலவீனமான, மிதமான மழைப்பொழிவு) முதல் ஐந்து (விதிவிலக்கான, அபாயகரமானவை) வரை ஓர் அளவீட்டை உருவாக்கினர்.
ஸ்கிரிப்ஸ் இன்ஸ்டிடியூஷன் ஆஃப் ஓசியானோகிராஃபியின் நீரியல் நிபுணரான கியான் காவ் கூறுகையில், "மிதமான வளிமண்டல நதிகள் நீர் விநியோகத்திற்குப் பயனுள்ளதாகக் கருதப்படுகின்றன. இவை மிகவும் தீவிரமானவை மட்டுமே ஆபத்தானவை. எனவே நன்மை தீமை இரண்டையும் கொண்டுள்ளன," என்கிறார்.
முன்னறிவிப்புகள் ஏன் முக்கியமானவை?
பட மூலாதாரம்,RICH HENNING/NOAA
படக்குறிப்பு,வளிமண்டல ஆறுகள் கண்ணுக்கு தெரியாதவை. மேக மூட்டத்தின் கீழ் பயணிக்க முனைபவை. இது 2023இல் நோவா விமானத்தில் இருந்து எடுக்கப்பட்ட படம்
வளிமண்டல நதிகளைக் கணிப்பது அவற்றின் அழிவுகரமான பக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கு முக்கியமானது, ஆனால் அது கடினமாது, என்று காவ் கூறுகிறார். ஆரம்பத்தில், அவை கடலுக்கு மேல் உருவாகின்றன. அங்கு அவற்றைக் கவனிப்பதற்கான வழிகள் குறைவு. பின்னர் அவை ஆயிரக்கணக்கான கிலோமீட்டர்கள் பயணிக்கின்றன.
மேலும் அந்தப் பயணத்தின்போது, அவை நின்று போகலாம், தீவிரமடையலாம், பலவீனமடையலாம், வெப்பமடையலாம் அல்லது குளிர்ச்சியடையலாம், பிற வளிமண்டல நதிகள், அல்லது அவற்றின் எச்சங்களுடன் தொடர்பு கொள்ளலாம். இந்த மாற்றங்கள் ஏதேனும் அவற்றின் தாக்கத்தைப் பாதிக்கும் என்று அவர் கூறுகிறார்.
பெரும் மழை வரும்பட்சத்தில் நீர்த்தேக்கங்களைக் காலி செய்யலாமா என்பதை முன்கூட்டியே முடிவு செய்ய, வானிலை மற்றும் நீர் முன்னறிவிப்பு பயன்படுத்தப்படுகின்றன.
"இந்த வளிமண்டல நதிகளை நாம் முன்கூட்டியே சிறப்பாகக் கணிக்க முடிந்தால், அவற்றை இன்னும் துல்லியமாக, நீண்ட காலத்துடன் கணிக்க முடிந்தால், செயல்பாட்டு முடிவுகளை எடுக்க நமக்கு அதிக நேரம் கிடைக்கும். எடுத்துக்காட்டாக, நாம் நீர்த்தேக்கங்களில் இருந்து தண்ணீரை வெளியேற்ற வேண்டுமா வேண்டாமா என்பது குறித்த முடிவுகளை எடுப்பது," என்கிறார் காவ்.
மூன்று முதல் ஐந்து நாட்களுக்கு முந்தைய குறுகிய கால முன்னறிவிப்புகள் மிகவும் துல்லியமானவை, என்கிறார் காவ். நீண்டகால முன்னறிவிப்புகளின் துல்லியம் குறைகிறது என்று அவர் கூறுகிறார்.
"இரண்டு வாரங்களுக்கு அப்பால் உள்ள முன்னறிவிப்புகளை மேம்படுத்த ஆராய்ச்சியாளர்கள் மிகவும் கடினமாக உழைத்து வருகிறார்கள்," என்று அவர் கூறுகிறார். ஏனெனில் ஒரு மாதம் அல்லது அதற்கு மேல் தயார்படுத்துவது மக்களுக்குக் கூடுதல் நேரத்தை வழங்கும்.
இங்குதான் AR Recon விமானங்களின் பங்கு வருகிறது. மற்ற கருவிகள் அடைய முடியாத வளிமண்டல நதிகளுக்குள் இவை பார்க்கின்றன.
மேம்பட்ட தரவுகளின் அவசியம் என்ன?
பட மூலாதாரம்,US AIR FORCE
படக்குறிப்பு,தொழில்நுட்ப சார்ஜென்ட் லாரி பேங்க்ஸ் 2023இல் வளிமண்டல நதிகள் பணியின்போது ஒரு டிராப்சோன்டை சரிபார்க்கிறார்
வில்சனின் குழுவைப் பொறுத்தவரை, புயல்களைப் பின்தொடரும் ஒவ்வொரு விமானப் பயணமும் காலையில் ஒரு முன்னறிவிப்புக் கூட்டத்துடன் துவங்குகிறது. அந்தக் கூட்டத்தில் வரவிருக்கும் நாட்களில் அமெரிக்காவில் மழை மற்றும் பனிப்பொழிவு பற்றிய முன்னறிவிப்புகளைப் பற்றி விவாதிக்கப்படுகிறது. எதிர்பார்க்கப்படும் மழை அல்லது பனிப்பொழிவைக் உருவாக்கவிருக்கும் வளிமண்டல நதியைப்பற்றிய கூடுதல் தரவுகளைக்கொண்டு மேம்படுத்தப்படக்கூடிய தகவல்கள் அந்தக் கூட்டத்தில் அடையாளம் காணப்படுகின்றன. அவர்கள் பின்னர் அந்த வளிமண்டல நதிக்குப் பறந்து சென்று, தேவையான தரவுகளைத் தங்கள் கருவிகள் மூலம் சேகரிக்கின்றனர்.
"இந்த விமானங்களின் நோக்கம், செயற்கைக்கோள்கள் இவற்றைப் பார்ப்பதில் சிரமப்படும்போது, தரவுகளில் உள்ள இடைவெளிகளை நிரப்புவதாகும்," என்று வில்சன் கூறுகிறார்.
ஒவ்வொரு கல்ஃப்ஸ்ட்ரீம் விமானப் பயணமும் சுமார் எட்டு மணிநேரம் நீடிக்கும். மேலும் வில்சன் சொல்வது போல், உங்கள் சொந்த உணவைக் கொண்டு வருவது ஒரு முக்கியமான நடைமுறை தயாரிப்பு. கருவிகள் விமானத்தில் இருக்கும் குழுவிற்கு தரவுகளை அனுப்புகின்றன. விமானத்தில் இருப்பவர்கள் அதைச் சரிபார்த்து உலகளாவிய தொலைத்தொடர்பு அமைப்புக்கு அனுப்புகிறார்கள். இது உலகளாவிய வானிலை தொடர்பான தரவுகளைச் சேகரித்து விநியோகிக்கும் ஒரு வானிலை அமைப்புச் சேவை.
செயற்கைக்கோள்கள் உட்படப் பல நூறு மில்லியன் பிற அவதானிப்புகளுடன் தரவுகளைப் பயன்படுத்தும் முன்கணிப்பு மாதிரிகள் இந்தத் தரவுகளை எடுத்துக்கொள்கின்றன. இப்போது மிகவும் துல்லியமான முன்னறிவிப்புகள், டிராப்சோன்ட் கருவிகளின் தரவு மூலம் மேம்படுத்தப்பட்டு, நீர்த்தேக்க நிர்வாகிகள் மற்றும் அவசரகால நிர்வாகிகளுடன் பகிர்ந்து கொள்ளப்படுகின்றன.
டிராப்சோன்ட் (Dropsonde) கருவிகள் தரும் தரவுகள் உண்மையில் முன்னறிவிப்புகளை மேம்படுத்த உதவுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. சமீபத்திய பகுப்பாய்வு ஒன்று எதிர்காத்தில் கல்ஃப்ஸ்ட்ரீம் ஜெட் மற்றும் விமானப்படை விமானங்கள் இரண்டையும் உள்ளடக்கிய தினசரி விமானப் பயணங்களைப் பரிந்துரைக்கிறது.
முடிந்தவரை அதிகமான தரவுகளைச் சேகரிக்க இது பரிந்துரைக்கப்படுகிறது. தகவல் சேகரிப்பதற்கும், வானிலை மாதிரிகள் உருவாக்கும் அமைப்புகளில் வேலை செய்வதற்கும், முன்னறிவிப்புகளை மேம்படுத்துவதற்கும், தனிப்பட்ட புயல்கள் பற்றிய புரிதலை ஆழப்படுத்துவதற்கும் இந்தக் குழு மற்ற தொழில்நுட்பங்களையும் பயன்படுத்துகிறது.
ஒரே நேரத்தில் பல பேரழிவுகள்
பட மூலாதாரம்,GETTY IMAGES
படக்குறிப்பு,கடந்த 2023ஆம் ஆண்டு ஜனவரி மாதம் கலிபோர்னியாவை தாக்கிய ஒரு வளிமண்டல நதியால் ஏற்பட்ட வெள்ளம்
வளிமண்டல நதிகளைப் புரிந்துகொள்வதற்கான இந்த முயற்சி மிக அவசரமான தேவை என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். ஏனெனில் வளிமண்டல நதிககளின் தன்மை மாறி வருவதாகவும், அவை அடிக்கடி நிகழ்வதாகவும், அழிவுகரமானதாக மாறி வருவதாகவும் கூறுகின்றனர்.
மெங்கியான் லூ, ஹாங்காங் அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் நீர்நிலையியல் மற்றும் நீர் வளங்கள் துறையில் இணைப் பேராசிரியராக உள்ளார். அவரும் அவரது குழுவும் 2024ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஓர் உலகளாவிய ஆய்வை வெளியிட்டனர். இது வளிமண்டல நதிகளின் எதிர்காலத் தீவிரம், எண்ணிக்கை மற்றும் அதனுடன் தொடர்புடைய மழை மற்றும் பனிப்பொழிவை உலகம் முழுவதும் நடக்கும் என்கிறது. அவர்களின் கணிப்புகள்படி, வளிமண்டல நதிகளின் உலகளாவிய எண்ணிக்கை இந்த நூற்றாண்டின் இறுதியில் கிட்டத்தட்ட இரட்டிப்பாகும். ஆனால் நிலத்தில் இதன் அர்த்தம் என்னவென்பது பிராந்தியத்திற்குப் பிராந்தியம் மாறுபடும் என்று அந்த ஆய்வு தெரிவிக்கிறது.
"பொதுவாக, அடிக்கடி நிகழும் வலிமையான வளிமண்டல நதிகள், அடிக்கடி மற்றும் வலுவான மழையைக் கொண்டு வருகின்றன. ஆனால் அனைத்து வளிமண்டல நதிகளும் மழையாக மாறும் என்று சொல்ல முடியாது. ஏனெனில் காலநிலை அமைப்புகள் நேரானவை அல்ல, மிகக் குழப்பமானவை," என்று லூ கூறுகிறார்.
காலநிலை மாற்றத்தால் வளிமண்டலம் வெப்பமடைவதால், அது ஈரப்பதத்தின் அளவை அதிகரிக்கும். "இதன் விளைவாக அடிக்கடி நிகழும் வலுவான வளிமண்டல நதிகளை எதிர்பார்க்கிறோம்," என்று அவர் கூறுகிறார்.
வெப்பம் மற்றும் ஈரப்பதத்தைக் கொண்டு செல்வதில் அவற்றின் பங்கு காரணமாக, காலநிலை தொடர்ந்து வெப்பமடைவதால் வளிமண்டல நதிகள் எவ்வாறு மாறும் என்பதை அறிவது புவி வெப்பமடைதலின் பரந்த தாக்கத்தைப் புரிந்துகொள்வதற்கு அவசியம் என்று லூ கூறுகிறார். உதாரணமாக, வளிமண்டல ஆறுகள் வெப்பத்தைக் கொண்டு வருவதால் மேற்கு அன்டார்டிகாவில் பனியை உருகத் தூண்டுகின்றன.
வளர்ந்து வரும் ஆராய்ச்சி அமைப்பு உலகம் முழுவதும் அவற்றின் தாக்கத்தை எடுத்துக்காட்டுகிறது. கிழக்கு ஆசியாவில், அவை வெப்பமான பருவங்களில் 90% தீவிர மழைப்பொழிவு, வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளை ஏற்படுத்துகின்றன. வளிமண்டல நதிகள் ஒரு பகுதிக்கு பனிப்பொழிவு மற்றும் பனிப்புயல்களையும், மற்றொரு பகுதிக்கு மழை மற்றும் கடுமையான வெள்ளங்களையும் கொண்டு வரக்கூடும் என்பதால், அவை பல இடங்களில் ஒரே நேரத்தில் பேரழிவு தரும் வானிலையை உருவாக்கக்கூடும்.
அவை காட்டுத்தீ போன்ற பிற பேரழிவுகளையும் உருவாக்கலாம். தாவரங்கள் இல்லாததால் மண் அரிப்பு ஏற்பட்டு நிலச்சரிவை ஏற்படுத்துகின்றன. அவை வேகமாக தாவர வளர்ச்சியைத் தூண்டும், இது அடுத்த காட்டுத்தீக்கு எரிபொருளாக மாறும். அடுத்த பருவத்தில் எரிந்த பகுதிகளில் அதிகரிப்புக்கு வழிவகுக்கும். இது ஒரு சுழற்சியாக மாறும் என ஆராய்ச்சி கூறுகிறது.
அடுத்து என்ன செய்ய வேண்டும்?
பட மூலாதாரம்,GETTY IMAGES
படக்குறிப்பு,கடந்த ஜனவரி மாதம் ஒரு வளிமண்டல நதி கலிபோர்னியாவில் உள்ள சாண்டா யெனெஸ் பள்ளத்தாக்கிற்குள் நகர்கிறது
அடுத்தடுத்து உருவாகும் வளிமண்டல நதிகள் முடிவில்லாத மழையைக் கொண்டு வருகின்றன. இது அடிக்கடி நிகழ்வதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 2022ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தின் பிற்பகுதியில் இருந்து 2023ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தின் நடுப்பகுதி வரை, ஒன்பது வளிமண்டல நதிகள் கலிபோர்னியாவை வரிசையாகத் தாக்கின. இதன் விளைவாக வெள்ளம், நிலச்சரிவு மற்றும் மின்சாரத் தடை ஏற்பட்டது. ஒரு ஆய்வின் ஆராய்ச்சியாளர்கள் சுட்டிக்காட்டியபடி. இத்தகைய வளிமண்டல நதிகளின் நிகழ்வுகளுக்கு இடையில் நனைந்த மண் வறண்டு போகாது, இதனால் வெள்ளம் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.
"அமெரிக்காவின் மேற்கில் நிகழும் வெள்ளச் சேதங்களில் 90% வளிமண்டல நதிகள் ஏற்படுத்தியவை. இதன் மொத்த மதிப்பு ஓராண்டுக்கு 100 கோடி இந்திய ரூபாய். இந்த எண்ணிக்கை இந்த நூற்றாண்டின் இறுதியில் இரண்டு அல்லது மூன்று மடங்காக ஆகலாம்," என்று குவான் கூறுகிறார்.
அவை எப்போதும் நீராவியை மட்டும் எடுத்துச் செல்வதில்லை. 2021ஆம் ஆண்டில், அவை ஆப்பிரிக்காவில் இருந்து சஹாரா பாலைவனத்தின் தூசியை ஐரோப்பாவிற்கு ஓட்டிச் சென்று, ஆல்ப்ஸ் மலையின் பனியை இருட்டாக்கி, அதன் பிரதிபலிப்பைக் குறைத்து, வெப்பத்தைக் கொண்டு வந்து, பனியின் ஆழத்தை 50% குறைத்தன.
வளிமண்டல நதிகளை நாம் எவ்வாறு சமாளிக்க முடியும்?
காலநிலை மாற்றம் அவற்றை எவ்வாறு மாற்றுகிறது என்பதை நாம் அடையாளம் காண வேண்டும் என்றும், புவி வெப்பமடைதலை எதிர்த்துப் போராட இன்னும் நிலையான வளர்ச்சி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் காவ் கூறுகிறார். முன்கூட்டிய எச்சரிக்கை அமைப்புகள், பொது விழிப்புணர்வு மற்றும் மிகவும் துல்லியமான மற்றும் அதிநவீன வானிலை முன்னறிவிப்புகளும் நம்மைத் தயார்படுத்துவதில் முக்கியமானவை என்று அவர் கூறுகிறார். அத்துடன் வளிமண்டல நதிகளை முதலில் உருவாக்க எந்த வானிலை மற்றும் காலநிலை நிலைமைகள் உதவுகின்றன என்பதைப் புரிந்துகொள்வது அவசியம் என்கிறார்.
இதற்கிடையில், ஒவ்வோர் ஆண்டும் நூற்றுக்கணக்கான டிராப்சோன்ட்கள் இந்த மர்மமான புயல்களைக் கண்காணிக்கின்றன. அவற்றை மேலும் கணிக்கக்கூடிய தரவுகளைச் சேகரிக்கின்றன என்பதை அறிவது குறைந்தபட்சம் ஆறுதலாக இருக்கலாம்.
இந்தப் பணி தனக்கு நம்பிக்கை அளிப்பதாகவும், குறிப்பாக கலிபோர்னியாவில் உள்ள அவசரகால செயல்பாட்டு மையம் போன்ற நிலத்தில் பதில் அளிப்பவர்களுடன் பணிபுரிவது நம்பிக்கையை அளிப்பதாகவும் ஆன்னா வில்சன் கூறுகிறார். "உடனடியாக பொருந்தக்கூடிய ஒரு பணியைச் செய்வது ஒரு விஞ்ஞானிக்கு மிகவும் அற்புதமான உணர்வு. இது மக்களுக்கு மிக அவசியமானதாக இருக்கிறது," என்று அவர் கூறுகிறார்.
https://www.bbc.com/tamil/articles/cyj3jmgj4mxo