உலக நடப்பு

புவி வெப்பமயமாதல் நிர்ணயிக்கப்பட்ட வரம்பை மீறியுள்ளது

3 months 1 week ago

Published By: DIGITAL DESK 3   08 FEB, 2024 | 05:08 PM

image

புவி வெப்பமயமாதலை 1.5 டிகிரி செல்ஷியஸுக்குள் கட்டுப்படுத்த உலக நாடுகளின் தலைவா்கள் வரம்பை நிா்ணயம் செய்தனா். ஆனால், நிா்ணயிக்கப்பட்ட அளவான 1.5 டிகிரி செல்ஷியஸை  முதல் முறையாக ஒரு வருடத்தில் கடந்து விட்டதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் காலநிலை சேவை தெரிவித்துள்ளது.

2015 ஆம் ஆண்டு நடந்த பாரீஸ் ஒப்பந்தத்தில் புவி வெப்பமயமாதல்  அளவை 2 டிகிரி செல்சியஸ் குறைக்க ஒப்பந்தம் கையெழுத்தானது குறிப்பிடத்தக்கது.

கார்பன் வெளியேற்றத்தை குறைப்பதற்கு அவசரமாக நடவடிக்கை எடுப்பதன் மூலம் புவி வெப்பமயமாதல் வேகம் குறைவடையும் என  விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

2023 ஆம் ஆண்டு முதல் இவ் வருடம்  ஜனவரி மாதம் வரையிலான காலப்பகுதியில் வெப்பமயமாதல் 1.52 டிகிரி செல்ஷியஸை  எட்டியுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் கோப்பர்நிக்கஸ் காலநிலை மாற்ற சேவை தரவு சுட்டிக்காட்டியுள்ளது.

இதன் தொடர்ச்சியாக ஜனவரி மாதம் கடும் வெப்பம் நிலவிய எட்டாவது மாதமாக மாறியுள்ளது.

கடந்த ஆண்டு எல் நினோவின் தாக்கம் காரணமாக வெப்பநிலை அதிகரித்துள்ளது.

பசிபிக் பெருங்கடலில் கடல் மேற்பரப்பு வெப்பநிலை இயல்பை விட அதிகரிப்பது எல் நினோ எனப்படும்.

https://www.virakesari.lk/article/175904

லுப்தான்சா ஊழியர்கள் வேலைநிறுத்தம்: 1000 விமான சேவைகள் பாதிப்பு

3 months 1 week ago

ஜேர்மனியின் மிகப்பெரிய விமான நிறுவனமான லுப்தான்சா ஐரோப்பாவில் இரண்டாவது பெரிய விமான நிறுவனமாக திகழ்கிறது.

லுப்தான்சா விமான நிறுவன கிளைகளில் சுமார் 25 ஆயிரம் பேர் பணிபுரிகிறார்கள். ஜேர்மனி நாட்டில் பிராங்க்பர்ட், முனிச் பகுதிகளில் லுப்தான்சா விமான நிறுவனங்களின் முக்கிய அலுவலகங்கள் உள்ளன.

அமெரிக்கா, கனடா, ஜேர்மனி, இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலும் லுப்தான்சா கிளைகள் செயற்பட்டு வருகின்றன. பல நாடுகளுக்கும் விமான சேவைகள் நடந்து வருகிறது

Capture-2-4.jpg

இந்நிலையில் ஜேர்மனியில் உள்ள லுப்தான்சா ஏர்லைன்ஸ் விமான நிறுவன ஊழியர்கள் ஊதிய உயர்வு கோரி இன்று திடீர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். இதனால் 1000 விமான சேவைகள் பாதிக்கப்பட்டு உள்ளன.

சென்னையில் இருந்து அமெரிக்கா, கனடா, ஜேர்மனி உள்ளிட்ட நாடுகளுக்கு செல்ல வேண்டிய லுப்தாப்சா விமான பயணிகளும் தவிப்புக்கு உள்ளாகினர். ஊழியர்களின் வேலைநிறுத்தத்தால் 1 இலட்சம் பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த போராட்டம் இன்று காலை 7 மணிக்கு ஜேர்மனியில் தொடங்கியது. 27 மணி நேரம் இந்த போராட்டம் நீடிக்கும். நாளை (வெள்ளிக்கிழமை) காலை 7:10 மணிக்கு போராட்டம் முடிவடையும் என விமான ஊழியர் தொழிற்சங்கம் அறிவித்துள்ளது.

https://thinakkural.lk/article/291062

பிளாஸ்டிக் டப்பாவில் வைக்கும் உணவு ரசாயனத்தை உறிஞ்சி புற்றுநோய் அபாயத்தை அதிகரிக்குமா?

3 months 1 week ago
பிளாஸ்டிக் பாக்ஸ்
கட்டுரை தகவல்
  • எழுதியவர், சூ க்வின்
  • பதவி, பிபிசி
  • ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

பிளாஸ்டிக் டப்பாக்கள் நம்மில் பலருக்கு அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாகும்; பல்வேறு வகையான உணவுகளை சேமிக்கவும், உறைய வைக்கவும், வெப்பப்படுத்தவும் மற்றும் வெளியே கொண்டு செல்லவும் அவற்றைப் பயன்படுத்துகிறோம்.

ஆனால் சில விஞ்ஞானிகள் பிளாஸ்டிக்கில் உள்ள ரசாயனங்கள் நமது உடல் நலத்துக்கு கேடு விளைவிக்கும் வாய்ப்பு இருப்பதாக கவலை தெரிவிக்கின்றனர்.

பிளாஸ்டிக் பொருட்களைத் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் ஆயிரக்கணக்கான பொருட்களில் சில, நாம் உட்கொள்ளும் உணவு மற்றும் பானங்களில் சேரலாம் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

ஆனால் உற்பத்தியாளர்கள் மற்றும் உணவு பாதுகாப்பு அதிகாரிகள், அப்படி கசியும் ரசாயனங்களின் அளவுகள் மிகவும் குறைவாக இருப்பதால் அவை மனித ஆரோக்கியத்திற்கு எந்த ஆபத்தையும் ஏற்படுத்தாது என்று கூறுகின்றனர்.

உணவுத் தரநிலைக் கழகம் (FSA) வகுத்துள்ள விதிமுறைகளில், உணவுடன் தொடர்பு கொள்ளும் பிளாஸ்டிக்கில் என்னென்ன பொருட்களைப் பயன்படுத்தலாம் மற்றும் பயன்படுத்தக்கூடாது என்பதைக் குறிப்பிடுகிறது. இந்த விதிகளின் கீழ், தீங்கு விளைவிக்கும் அளவில் உணவில் ரசாயனங்களை வெளியிடும் பொருட்களை உற்பத்தியாளர்கள் பயன்படுத்துவது சட்டவிரோதமானது.

உற்பத்தியாளர்கள் உணவின் வெப்பநிலை, உணவின் வகை மற்றும் சேமிப்பு நேரம் உட்பட பிளாஸ்டிக் பயன்படுத்தக்கூடிய சூழ்நிலைகளையும் கருத்தில் கொள்ள வேண்டும். பல்வேறு நாடுகளில் உள்ள கண்காணிப்பு அமைப்புகளின்படி உற்பத்தியாளர்கள் தாங்கள் தயாரிப்புகளை சோதித்ததையும் அவர்கள் சட்டத்திற்கு இணங்குவதையும் நிரூபிக்க முடியும்.

இருப்பினும், சில விஞ்ஞானிகள் இந்த விதிகள் அமல்படுத்தப்படவில்லை என்று வாதிடுகின்றனர்.

 
உணவில் பிளாஸ்டிக் கலக்கிறதா?

பிரிட்டிஷ் பிளாஸ்டிக் கூட்டமைப்பு (BPF) படி, உணவுப் பாக்கெட்ககளில் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் வகைகளில் ஒன்று பாலிப்ரோப்பிலீன்(Polypropylene) (மிருதுவான பாக்கெட்டுகள் முதல் பிஸ்கட் ரேப்பர்கள் வரை எல்லாவற்றிலும் இது காணப்படுகிறது). நம்மில் பலர் வைத்திருக்கும், டிபன் பாக்ஸ்கள், பாலிஎதிலீன் எனப்படும் மற்றொரு வகை பிளாஸ்டிக்கிலிருந்து தயாரிக்கப்படுகின்றது.

ஆனால் உற்பத்தியின் போது பல ரசாயனங்கள் சேர்க்கப்படுகின்றன, அதாவது டிபன் பாக்ஸ்கள் நெகிழ்வானதாக மாற்றுவதற்கு வண்ணங்கள் மற்றும் சில பொருட்கள் சேர்க்கப்படுகின்றன.

"பிளாஸ்டிகின் வேதியியல் கலவை நம்பமுடியாத அளவிற்கு சிக்கலானது" என்று சுவிட்சர்லாந்தை தளமாகக் கொண்ட ஒரு லாப நோக்கற்ற அமைப்பான புட் பேக்கிங் போரம் (Food Packaging Forum) இன் நிர்வாக இயக்குநரும் தலைமை அறிவியல் அதிகாரியுமான முனைவர் ஜானி முன்கே கூறினார்.

உற்பத்தியின் போது ரசாயனங்கள் ஒன்றோடொன்று வினைபுரியும் போது மாறுவது மட்டுமல்லாமல், தெரியாத கூறுகளும் கலவையில் உருவாகும். இவை வேண்டுமென்றே சேர்க்கப்படாத பொருட்கள் என குறிப்பிடப்படுகின்றன.

சில ரசாயனங்கள் பிளாஸ்டிக்கிலிருந்து உணவு மற்றும் பானங்களில் இடம்பெயர்கின்றன, மேலும் சில நம் உடலால் உறிஞ்சப்படுகின்றன என்பது சர்ச்சைக்குரியது அல்ல. "சில வகையான உணவுகள் அதிக ரசாயன பரிமாற்றத்திற்கு வழிவகுக்கும் என்பதையும் நாங்கள் அறிவோம்" என்று டாக்டர் முன்கே கூறினார்.

எடுத்துக்காட்டாக, அமில உணவுகள் (தக்காளி சாஸ் போன்றவை) அல்லது கொழுப்பு நிறைந்த உணவுகள் மற்றவற்றை விட பிளாஸ்டிக் பாக்ஸ்களில் இருந்து அதிக ரசாயனங்களை உறிஞ்சும் வாய்ப்பு உள்ளது.

 
மைக்ரோவேவ் ஓவன்

2022 ஆம் ஆண்டில், விஞ்ஞானிகள் குழு, 'கவலைக்குரிய ரசாயனங்கள்' என 388 ரசாயனங்களின் பட்டியலை வெளியிட்டது, அவை உணவுடன் தொடர்பு கொள்ளும் பொருட்களில் பயன்படுத்தப்படலாம். கவலைக்குரிய ரசாயனங்கள் அபாயகரமானதாகக் கருதப்படுகின்றன, ஏனெனில் அவை புற்றுநோயை உண்டாக்கும் திறன் அல்லது பிற வழிகளில் நமது ஆரோக்கியத்தை பாதிக்கும் வாய்ப்பு உள்ளது.

பெயரிடப்பட்ட 388 கவலைக்குரிய உணவு தொடர்பு ரசாயனங்களில்', 197 ரசாயனங்கள் உணவு பேக்கேஜிங், உணவு சேமிப்பு பாக்ஸ்கள், மேஜை பாத்திரங்கள் மற்றும் பல பொருட்கள் உட்பட, உணவுடன் தொடர்பு கொள்ளும் பிளாஸ்டிக் பொருட்களில் பயன்படுத்தப்படுகின்றன.

"இந்த ரசாயனங்களை தினசரி பயன்படுத்துவதால் புற்றுநோய் வரும் வாய்ப்புகள் உண்டு என்பது அதன் அர்த்தம் இல்லை," என முனைவர் முன்கே கூறினார்.

 
பிளாஸ்டிக் மனிதர்களின் உடல் ஆரோக்கியத்திற்கு ஆபத்தானதா?

ஹார்வர்ட் மருத்துவப் பள்ளி நிபுணர்களின் கூற்றுப்படி, பிளாஸ்டிக்கில் உள்ள பல ரசாயனங்கள் ஒரு நேரத்தில் சிறிய அளவில் வெளிப்பட்டாலும் கூட, "கவலைக்குரியவை" எனக் குறிப்பிடுகின்றனர். ஹார்வர்ட் மருத்துவப் பள்ளியின் இணையதளத்தில் முனைவர் ரஸ் ஹவுசர், "பலவிதமான பாதகமான உடல்நல பாதிப்புகளுக்கு வழிவகுக்கும். மிக முக்கியமாக, நாம் ஒரே நேரத்தில் பல ரசாயனங்கள் (உதாரணமாக, ரசாயன கலவைகள்) சேர்க்கும்போது, நம் உடலில் பாதகமான விளைவுகளை ஏற்படலாம்," என எழுதியுள்ளார்.

பிளாஸ்டிக்கில் காணப்படும் இரண்டு ரசாயனங்கள், ப்தலேட்ஸ் மற்றும் பைபினால்(பிபிஏ)(BPA) அதிக பாதிப்பை ஏற்படுத்தக்கூடியவை. அவை எண்டோகிரைன் சீர்குலைப்பான்கள் என்று அழைக்கப்படுகின்றன, அதாவது அவை உடலின் ஹார்மோன்களில் தலையிடுகின்றன.இயல்பான வளர்ச்சி, கருவுறுதல் மற்றும் இனப்பெருக்கம் போன்ற உயிரியல் செயல்முறைகளின் வரிசையை பாதிக்கலாம்.

சமீபத்தில், ஐரோப்பிய உணவுப் பாதுகாப்பு ஆணையம் (EFSA) ஆய்வுப்படி, இந்தப் பிளாஸ்டிக்கள் மனிதர்களின் உடல் ஆரோக்கியத்திற்கு ஆபத்தானது என்பதை உறுதிப்படுத்தியது.

பாலிப்ரோப்பிலீன் அல்லது பாலிஎதிலினில் இருந்து தயாரிக்கப்படும் பிளாஸ்டிக் உணவு பாக்ஸ்கள் அல்லது இரண்டின் கலவையான "பொதுவாக" பிபிஏ அல்லது ப்தலேட்ஸை கொண்டிருக்காது என்று பிரிட்டிஷ் பிளாஸ்டிக் கூட்டமைப்பு கூறுகிறது.

 
பிளாஸ்டிக் பாக்ஸ்களில் இருந்து ரசாயனங்கள் கசியுமா?

நம் உணவில் எந்த ரசாயனமும் கசிவதைத் தவிர்க்க விரும்பினால், எந்த வகையான டப்பாக்களை பயன்படுத்த வேண்டும்?

வாஷிங்டனில் உள்ள சுகாதார ஆராய்ச்சிக்கான தேசிய மையத்தின் தலைவர் முனைவர் டயானா ஜுக்கர்மேன் கூறுகையில், "பிளாஸ்டிக் கலவையானது எல்லா நேரத்திலும் மாறிக்கொண்டே இருப்பதுதான் பிரச்னை. பெரும்பாலான மக்களைப் போலவே, என்னிடம் பழைய பிளாஸ்டிக் பாக்ஸ்களால் நிரப்பப்பட்ட சமையலறை உள்ளது, ஆனால், அவற்றில் என்ன இருக்கிறது என எனக்குத் தெரியாது,"என்றார்.

“பிளாஸ்டிக்குகள் காலப்போக்கில் உடைந்து, ரசாயனத்தை வெளியிடலாம். பிளாஸ்டிக் சூடாக்கப்படும்போது அல்லது பழையதாகி, மீண்டும் மீண்டும் பயன்படுத்தப்பட்டு கழுவப்படும்போதும் இது நடக்கும்" என்றும் அவர் கூறுகிறார்.

பிளாஸ்டிக்கில் உள்ள ரசாயனங்கள் மற்றும் அவை எந்த அளவிற்கு உணவில் சேரும் என்பது பற்றி முழுமையாகத் தெரிய வரும்வரை, கண்ணாடி அல்லது பீங்கான் பாக்ஸ்களை தேர்வுசெய்ய பரிந்துரைக்கிறார் ஜுக்கர்மேன். குறிப்பாக சூடான உணவு மற்றும் மைக்ரோவேவில் உணவை சூடாக்குவதற்கு கண்ணாடி அல்லது பீங்கான் பாக்ஸ்களை பயன்படுத்தலாம் என்கிறார் அவர்.

“ஒரு பாக்ஸ் மைக்ரோவேவ் பாதுகாப்பானது என்று உற்பத்தியாளர் கூறினால், அது உருகாது என்று பொருள். ஆயினும் நான் ஒருபோதும் பிளாஸ்டிக்கில் எதையும் சூடாக்குவதில்லை - நான் அதை ஒரு கண்ணாடி அல்லது பைரெக்ஸ் பாக்ஸில் வைத்து உணவை காகித துண்டு அல்லது தட்டில் மூடுகிறேன். அதைத்தான் மற்ற அனைவருக்கும் செய்ய நான் பரிந்துரைக்கிறேன்,” என்றார் முனைவர் ஜுக்கர்மேன்.

 
ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுவது என்ன?

உணவு மற்றும் ஊட்டச்சத்து நிபுணர்களின் உலகின் மிகப்பெரிய அமைப்பான அமெரிக்காவில் உள்ள அகாடமி ஆஃப் நியூட்ரிஷன் அண்ட் டயட்டெடிக்ஸ், குளிர்ந்த உணவை சேமிக்க குறிப்பிட்ட பிளாஸ்டிக் பாக்ஸை மட்டுமே பயன்படுத்துமாறு நுகர்வோருக்கு அறிவுறுத்துகிறது.

பெரும்பாலான பிளாஸ்டிக் உணவு பாக்ஸ்களில் ஒரு முக்கோணம், ஒன்று முதல் ஏழு வரையிலான எண்களைக் கொண்டுள்ளது. இது அதைக் கொண்டு தயாரிக்கப்பட்ட பிளாஸ்டிக் என்பதை அடையாளம் காட்டுகிறது. உணவுப் பயன்பாட்டிற்கான பாதுகாப்பான தேர்வுகள் எண்கள்- ஒன்று, இரண்டு, நான்கு மற்றும் ஐந்து என்று அகாடமி கூறுகிறது. அமெரிக்கன் அகாடமி ஆஃப் பீடியாட்ரிக்ஸ் மூன்று, ஆறு மற்றும் ஏழு குறியீடுகளைக் கொண்ட பிளாஸ்டிக் பாக்ஸ்களை தவிர்க்க பரிந்துரைக்கிறது.

பிஎப்ஏ,வின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில்,“உணவு வைப்பதற்காக அங்கீகரிக்கப்பட்ட எந்தவொரு பிளாஸ்டிக் தயாரிப்பும் உணவு தர ஆணையத்தின் "மிகக் கடுமையான" தரநிலைகளை சந்திக்க வேண்டும். வேண்டுமென்றே சேர்க்கப்படாத பொருட்கள் பொதுவாக மறுசுழற்சி செய்யப்பட்ட பிளாஸ்டிக்கில் மட்டுமே காணப்படுகின்றன, ஆனால் தற்போது, மறுசுழற்சி செய்யப்பட்ட பாலிப்ரோப்பிலீன் அல்லது பாலிஎதிலீன் நேரடி உணவுத் தொடர்புக்கு அனுமதிக்கப்படவில்லை. எனவே, இது ஒரு பிரச்னையாக இருக்கக்கூடாது," என்றார் அந்தச் செய்தித் தொடர்பாளர்.

பிளாஸ்டிக் பாக்ஸ்களால் ஏற்படும் உடல்நல அபாயங்கள் குறித்து அனைத்து நிபுணர்களும் ஒரே கருத்தை தெரிவிப்பதில்லை. பிரிட்டனின் புற்றுநோய் ஆராய்ச்சியைச் சேர்ந்த டாக்டர் ரேச்சல் ஓர்ரிட் கூறுகையில், “பிளாஸ்டிக்கைப் பயன்படுத்துவது புற்றுநோயை உண்டாக்குகிறது என்பதற்கான ஆதாரம் இல்லை. பிளாஸ்டிக் பாட்டில்களில் இருந்து குடிப்பது மற்றும் உணவைச் சேமிக்க பிளாஸ்டிக் பாக்ஸ் மற்றும் பைகளைப் பயன்படுத்துவது ஆகியவை இதில் அடங்கும். இந்த பாக்ஸ்களில் உணவை ஒரே நேரத்தில் பல மணிநேரங்களுக்கு சூடாக்கினாலும், அவை புற்றுநோய் அபாயத்தை அதிகரிக்காது" என்று அவர் கூறினார்.

https://www.bbc.com/tamil/articles/cgx5485k0wjo

அமெரிக்கா: இரானிய இலக்குகள் மீது பதிலடி தாக்குதல் - சிரியா, இராக்கில் என்ன நடக்கிறது?

3 months 1 week ago
பக்தாத்தில் அமெரிக்கா ஆளில்லா விமான தாக்குதல் - ஈரான் சார்பு குழுவின் முக்கிய தளபதி பலி

Published By: RAJEEBAN   08 FEB, 2024 | 10:48 AM

image

ஈராக் தலைநகரில் அமெரிக்கா மேற்கொண்ட ஆளில்லா விமானதாக்குதலில் ஈரான் சார்பு ஆயுதகுழுவின் தளபதியொருவர் கொல்லப்பட்டுள்ளார்.

கட்டாப் ஹெஸ்புல்லா அமைப்பின் தலைவர் ஒருவரும் அவரது இரண்டு மெய்ப்பாதுகாவலர்களும் பயணம் செய்துகொண்டிருந்த வாகனம் ஆளில்லா விமானதாக்குதலிற்கு இலக்காகியது எனவும்  பக்தாத் தலைநகரிலிருந்து கிழக்கே உள்ள பகுதியொன்றில் இடம்பெற்ற தாக்குதலில் மூவர் கொல்லப்பட்டனர் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிராந்தியத்தில் அமெரிக்க படையினருக்கு எதிரான தாக்குதல்களை வழிநடத்திய தளபதியே ஆளில்லா விமானதாக்குதலில் கொல்லப்பட்டுள்ளார்.

ஜோர்தானில் அமெரிக்க தளம் மீது மேற்கொள்ளப்பட்ட ஆளில்லா விமானதாக்குதலிற்கும் இந்த குழுவிற்கும் தொடர்புள்ளதாக ஈரான் தெரிவித்துள்ளது.

iraq_drone_attack11.jpg

பக்தாத்தின் மஸ்டால் என்ற பகுதியிலேயே இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது பல வெடிப்புச்சத்தங்கள் கேட்டுள்ளன.

சனசந்தடி நிறைந்த வீதியில் கார் துல்லியமாக தாக்கப்பட்டது இதனால் கார் முற்றாக எரியுண்டுள்ளது என பிபிசி தெரிவித்துள்ளது.

அபுபக்கிர் அல் சடாடி என்ற தளபதியே கொல்லப்பட்டுள்ளார்.

பிராந்தியத்தில் அமெரிக்காவிற்கு எதிரான தாக்குதல்களை திட்டமிட்டு முன்னெடுப்பதற்கு பொறுப்பான தளபதியே கொல்லப்பட்டுள்ளார் என அமெரிக்க மத்திய கட்டளைபீடம் தெரிவித்துள்ளது.

பாரிய அழிவோ பொதுமக்களிற்கு உயிரிழப்போ ஏற்படவில்லை என அமெரிக்க மத்திய கட்டளைப்பீடம் தெரிவித்துள்ளது.

அந்த பகுதிக்கு பிபிசி செய்தியாளர்கள் சென்றவேளை அமெரிக்காவே பெரும் தீமை என மக்கள் கூச்சலிட்டுள்ளனர்.

பிபிசி செய்தியாளர்கள் அந்தவாகனத்தை நெருங்க முயன்றவேளை அங்கிருந்தவர்கள் பத்திரிகையாளர்களிற்கு அனுமதியளிக்க முடியாது என தெரிவித்து அவர்களை அங்கிருந்து துரத்தியுள்ளனர்.

நீங்கள் வெளிநாட்டவர்கள் வெளிநாட்டவர்களே இதற்கு காரணம் என ஒருவர் குற்றம்சாட்டியுள்ளார்.

இந்த தாக்குதலை தொடர்ந்து பக்தாத்தில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/175861

சிறந்த வனவிலங்கு புகைப்பட கலைஞருக்கான சர்வதேச விருது அறிவிப்பு

3 months 1 week ago

Published By: DIGITAL DESK 3   07 FEB, 2024 | 01:56 PM

image

இவ் வருடத்திற்கான சிறந்த வனவிலங்கு புகைப்பட கலைஞர்கள் விருதினை பிரித்தானியாவைச் சேர்ந்த சுயாதீன புகைப்படக் கலைஞர் நிமா சரிகானி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விருதினை லண்டனில் உள்ள இயற்கை வரலாற்று அருங்காட்சியகம் (Natural History Museum) வழங்குகிறது.

நிமா சரிகானி  ஒரு அமைதியான சூழலில் இளம் துருவ கரடி பனிப்பாறையில் உறங்கும் காட்சியை  புகைப்படம் எடுத்துள்ளார். இதற்கு "ஐஸ் பெட்" என்று தலைப்பிடப்பட்டுள்ளது.

இந்த புகைப்படம்  சுற்றுச்சூழலின் அழகு, பாதிப்பு மற்றும் பாதுகாப்பு முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகிறது. 

“வியப்பூட்டி மனதை உருக்கிய புகைப்படம்  நமது பூமியின் அழகையும் பலவீனத்தையும் பார்க்க அனுமதிக்கிறது  நிமா சரிகானியின் சிந்தனையைத் தூண்டிய குறித்த புகைப்படம் ஒரு விலங்குக்கும் அதன் வாழ்விடத்திற்கும் இடையிலான ஒருங்கிணைந்த பிணைப்பு, காலநிலை மாற்றத்தினால் ஏற்பட்டுள்ள வெப்பமயமாதல் மற்றும் வாழ்விட இழப்பின் தீங்கு விளைவிக்கும் தாக்கங்களின் காட்சியை பிரதிநிதித்துவப்படுத்துகிறது" என  இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தின் பணிப்பாளர் கலாநிதி டக்ளஸ் குர் தெரிவித்துள்ளார்.

நிமா சரிகானி  நோர்வேயின் ஸ்வால்பார்ட் தீவுக்கூட்டத்தில் அடர்ந்த மூடுபனி வழியாக துருவ கரடிகளைத் தேடி மூன்று நாட்கள் மேற்கொண்ட பயணத்தை தொடர்ந்து இந்த புகைப்படத்தை பிடித்துள்ளார்.

உலகெங்கிலும் உள்ள வனவிலங்கு புகைப்பட கலைஞர்களின் 25 புகைப்படங்கள் இறுதி போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டது. அதில் நிமா சரிகானி  புகைப்படம் முதலிடம் பிடித்துள்ளது. 

இந்நிலையில், போட்டியில் பங்கேற்ற மற்றைய  நான்கு சிறந்த இறுதிப் போட்டியாளர்கள் மிகவும் பாராட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

3.jpg

2.jpg

1.jpg

5.jpg

https://www.virakesari.lk/article/175782

இஸ்ரேல் ராணுவத்திடம் சிக்கிய குடும்பம் - உதவி கேட்டு தொலைபேசியில் மன்றாடிய 6 வயது சிறுமி என்ன ஆனாள்?

3 months 1 week ago
இஸ்ரேல் ஹமாஸ் போர்

பட மூலாதாரம்,RAJAB FAMILY

படக்குறிப்பு,

ஹிந்த் ரஜாப்

கட்டுரை தகவல்
  • எழுதியவர், லூசி வில்லியம்சன்
  • பதவி, பிபிசி செய்திகள்
  • 5 நிமிடங்களுக்கு முன்னர்

காஸா நகரில் இஸ்ரேலிய ராணுவத்தின் தாக்குதலில் இருந்து தப்பிக்க தனது உறவினர்களுடன் காரில் சென்ற ஆறு வயது சிறுமியின் காணாமல் போயிருக்கும் சம்பவம் காஸாவின் மனிதநேயச் சிக்கலைப் பற்றிய விவாதங்களைக் கிளப்பியுள்ளது. காணாமல் போகும் முன் அந்தச் சிறுமி செஞ்சிலுவைச் சங்கத்தினருடன் பேசிய தொலைபேசி அழைப்பில் அவர் என்ன சொன்னார்?

கடந்த ஜனவரி 29-ஆம் தேதி பாலத்தீனத்தின் மனிதநேய உதவி நிறுவனமான ரெட் கிரெசன்டின் உதவி மையத்திற்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது.

அதில் பேசியது ஒரு ஆறு வயது சிறுமியின் பயந்த குரல். “எனக்கு அருகே இருக்கும் டாங்கி நகர்கிறது,” என்றார் அந்தச் சிறுமி.

உதவி மையத்தில் இருந்த ராணா தனது உணர்வுகளைக் கட்டுப்படுத்திக் கொண்டு, அமைதியாகப் பேசினார். “அது மிகவும் அருகில் இருக்கிறதா?”

“மிகவும் அருகில் இருக்கிறது,” என்றது அந்தச் சிறுமியின் குரல். “எனக்கு ரொம்ப பயமாக இருக்கிறது. என்னை வந்து காப்பாற்றுவீர்களா?”

அந்தத் தொலைபேசி உரையாடலை நீட்டிப்பதைத் தவிர ராணாவால் ஒன்றும் செய்ய முடியவில்லை.

ஆறு வயதாகும் ஹிந்த் ரஜாப், காஸா நகரத்தின் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் சிக்கிக்கொண்டார். அவரது மாமாவின் காரில், தனது உறவினர்களின் உயிரற்ற உடல்களுக்கு மத்தியில் இருந்துகொண்டு உதவிக்காக மன்றாடினார்.

இஸ்ரேல் ராணுவத்திடம் சிக்கிய குடும்பம்

இஸ்ரேல் ராணுவம், காஸா நகரத்தின் மேற்குப் பகுதியிலிருந்து மக்களை தெற்கு நோக்கி கடற்கரைச் சாலை வழியே இடம்பெயரச் சொன்னதைத் தொடர்ந்து, ஹிந்த் ரஜாப் தனது மாமா, அத்தை மற்றும் அவர்களது ஐந்து குழந்தைகளுடன் காஸா நகரை விட்டு வெளியேறினார்.

ஹிந்தின் டாய் விஸ்ஸாம் தங்களது பகுதியில் தீவிரமான குண்டு வீச்சு நடந்ததை நினைவுகூர்கிறார். “நாங்கள் அதிர்ந்து போயிருந்தோம். தப்பிக்க விரும்பினோம். வான்வழித் தாக்குதலில் இருந்து தப்பிக்க இடம்விட்டு இடம் ஓடினோம்,” என்கிறார் அவர்.

அவர்கள் காஸா நகரத்தின் கிழக்கில் இருந்த அஹ்லி மருத்துவமனை பாதுகாப்பாக இருக்கும் என்று நினைத்து அங்கு சென்று தஞ்சம் புக முடிவெடுத்தனர்.

விஸ்ஸாமும் அவரது மூத்த குழந்தைகளும் நடந்து செல்ல முடிவுசெய்தனர். ஹிந்த் ரஜாபை அவரது மாமாவின் காரில் அனுப்ப முடிவு செய்யப்பட்டது.

“அன்று முகவும் குளிராக இருந்தது. மழை பெய்தது. அதனால் ஹிந்தை காரில் போகச் சொன்னேன்,” என்கிறார் தாய் விஸ்ஸாம்.

கார் கிளம்பியதுமே அதே திசையிலிருந்து பலத்த துப்பாக்கிச்சூடு கேட்டதாக அவர் தெரிவித்தார்.

ஹிந்தின் மாமா பிரசித்தி பெற்ற அல்-அஸார் பல்கலைக்கழகம் நோக்கிப் பயணம் செய்தார். வழியில் அவர்கள் இஸ்ரேலிய டாங்கிகளை நேருக்குநேர் சந்தித்ததாக நம்பப்படுகிறது. அவர்கள் காரை அருகிலிருந்த ஒரு பெட்ரோல் பங்கிற்குச் செலுத்தினார்கள். அங்கு அவர்கள் மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியதாகத் தெரிகிறது.

 
இஸ்ரேல் ஹமாஸ் போர்
உதவிக்காக மன்றாடிய குடும்பம்

காருக்குள்ளிருந்து அவர்கள் உதவிக்காக உறவினர்களை அழைத்தனர். அவர்களில் ஒருவர் பாலத்தீன செஞ்சிலுவைச் சங்கமான ரெட் கிரெசன்டைத் தொடர்புகொண்டார். அந்த அலுவலகம், 80கி.மீ. தொலைவில் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் உள்ளது.

அப்போது நேரம் மாலை 6 மணி (இந்திய நேரப்படி). ரெட் கிரெசன்ட் உதவி மையத்திலிருந்தவர்கள் ஹிந்தின் மாமாவுடைய அலைபேசிக்குத் தொடர்புகொண்டனர். ஆனால் அவரது 15 வயது மகள் லயன் தான் பதிலளித்தார். பதிவுசெய்யப்பட்ட அந்த அழைப்பில், லயன், தனது பெற்றோரும் உடன்பிறந்தோரும் கொல்லப்பட்டுவிட்டனர் என்கிறார். அவர்களது காருக்கருகில் ஒரு டாங்கி இருப்பதாகக் கூறுகிறார். அப்போது துப்பாக்கி சுடும் சத்தம் கேட்கிறது. ஒரு அலறலோடு அந்த இணைப்பு துண்டிக்கப்படுகிறது.

ரெட் கிரெசன்ட் குழு மீண்டும் அந்த எண்ணுக்குத் தொடர்பு கொண்டபோது, இம்முறை ஹிந்த் பதிலளித்தார். அவரது குரல் பயத்தில் கம்மியிருந்தது. அந்தக் காரில் பிழைத்திருந்தது அவர் மட்டும்தான் என்பதும் அவர் தாக்குதல் நடக்கும் பகுதியில் சிக்கியுள்ளார் என்பதும் தெளிவானது.

“இருக்கைக்கு கீழே ஒளிந்துகொள், யார் கண்ணிலும் பட்டுவிடாதே,” என்று குழுவினர் அவருக்குத் தொலைபேசியில் கூறினர்.

தொலைபேசியில் உரையாடிய ராணா பகிஹ், சிறுமி ஹிந்துடன் சில மணிநேரம் தொடர்பிலிருந்தார். அதேவேளை ரெட் கிரெசன்ட், இஸ்ரேலிய ராணுவத்திடம், அவர்களது ஆம்புலன்ஸை அவ்விடத்திற்குச் செல்ல அனுமதிக்குமாறு கோரினர்.

“அவள் பயந்து நடுங்கிக் கொண்டிருந்தாள். உதவிக்காக மன்றாடிக் கொண்டிருந்தார்,” என்கிறார் ராணா. “தனது உறவினர்கள் இறந்துவிட்டதாகக் கூறினாள். பிறகு அவர்கள் ‘உறங்கிக் கொண்டிருப்பதாகக்’ கூறினாள். நாங்கள் ‘அவர்களை உறங்கவிடு, தொந்தரவு செய்யாதே’ என்றோம்,” என்கிறார்.

ஹிந்த் மீண்டும்மீண்டும் தன்னை யாராவது வந்து காப்பாற்றும்படிக் கேட்டார்.

“ஒரு கட்டாயத்தில் இருட்டிக் கொண்டிருப்பதாகச் சொன்னாள். அவள் பயந்து போயிருந்தாள். எனது வீடு எவ்வளவு தூரத்தில் இருக்கிறது என்று கேட்டாள். நான் செய்வதறியாமல் உறைந்து போனேன்,” என்று ராணா பிபிசியிடம் தெரிவித்தார்.

இஸ்ரேல் ஹமாஸ் போர்
படக்குறிப்பு,

சிறுமியின் தாத்தாவான பஹா ஹமாதா

தொடர்பு துண்டாகும் முன் சிறுமி என்ன சொன்னார்?

இந்தத் தொலைபேசி அழைப்பு துவங்கி மூன்று மணிநேரம் கழித்து ஹிந்த் இருந்த பகுதிக்கு ஒரு ஆம்புலன்ஸ் அனுப்பப்பட்டது.

அதற்குள் ரெட் கிரெசன்ட் குழு, ஹிந்தின் தாய் விஸ்ஸாமைத் தொடர்பு கொண்டனர். அவரையும் அந்த அழைப்பில் இணைத்தனர். தனது தாயின் குரலைக் கேட்டதும் ஹிந்த் மேலும் அழத் துவங்கினார், என்கிறார் ரானா.

“அவள் அழைப்பைத் துண்டிக்க வேண்டாம் என்று கெஞ்சினாள். நான் அவளிடம் எங்கு அடிபட்டிருக்கிறது என்று கேட்டேன். அவளோடு சேர்ந்து குர்ஆன் வாசித்து பிரார்த்தனை செய்யத் துவங்கினேன். அவள் நான் சொன்ன ஒவ்வொரு வார்த்தையையும் திருப்பிச் சொன்னாள்,” என்கிறார் விஸ்ஸாம்.

மாலை இருட்டியபின்பு ஆம்புலன்ஸில் இருந்த பணியாளர்களான யூசுப் மற்றும் அகமது, ரெட் கிரெசன்ட் அலுவலகத்தைத் தொடர்புகொண்டு அவர்கள் ஹிந்த் இருந்த இடத்தை நெருங்கிவிட்டதாகவும், அவர்களை இஸ்ரேலிய ராணுவம் சோதனை செய்ய போவதாகவும் தெரிவித்தனர்.

அதுதான் அவர்களிடமிருந்தும் ஹிந்திடமிருந்தும் கிடைத்த கடைசித் தகவல். இரண்டு இணைப்புகளும் அதன்பின் துண்டிக்கப்பட்டன.

ஹிந்தின் தொலைபேசி இணைப்பு இன்னும் சில நொடிகள் நீடித்திருந்தது எனவும், அவரது தாய் விஸ்ஸாம் கார் திறக்கப்படும் சத்தத்தைக் கேட்டதாகவும், ஹிந்த் அவரிடம் தொலைவில் ஆம்புலன்ஸ் தென்படுவதாகவும் கூறியதாக சிறுமியின் தாத்தாவான பஹா ஹமாதா பிபிசியிடம் தெரிவித்தார்.

 
மகளுக்காக காத்திருக்கும் தாய்

பிபிசியிடம் பேசிய சிறுமியின் தாய் விஸ்ஸாம், “ஒவ்வொரு நொடியும் என் இதயம் வெடிக்கிறது,” என்று “ஒவ்வொரு ஆம்புலன்ஸ் ஒலியைக் கேட்கும்போதும் ‘அது அவள்தான்’ என்று தோன்றுகிறது. ஒவ்வொரு வெடிச் சத்தம் கேட்கும் போதும் என் மகளுக்கு என்ன ஆனதோ என்று மனம் பதறுகிறது,” என்கிறார் அவர்.

காஸாவின் ரெட் கிரெசன்ட் குழுக்களாலும், ஹிந்தின் குடும்பத்தினராலும் அந்த இடத்தை அடைய முடியவில்லை. அவ்விடம் இன்னும் சண்டை நடக்கும் பகுதியில் உள்ளது. இஸ்ரேலிய ராணுவம் அதைக் கட்டுப்படுத்துகிறது.

ஹிந்துடன் தொலைபேசியில் பேசிய ராணா, “இரவில் தூங்குவதே சிரமமாக உள்ளது. எழுந்தால் அவளது குரல்தான் காதில் கேட்கிறது,” என்கிறார்.

இஸ்ரேலிய ராணுவத்திடம் அன்று அப்பகுதியில் நடந்த தாக்குதல் குறித்தும், ஹிந்த் குறித்தும், அவரை மீட்கச் சென்ற ஆம்புலன்ஸ் குறித்தும் பிபிசி கேட்டது. ஒருநாள் கழித்து மிண்டும் கேட்டது. இஸ்ரேலிய ராணுவம் அதுபற்றி விசாரித்து வருவதாகக் கூறினர்.

தனது மகள் காணாமல்போய் ஒருவாரம் கழித்தும், விஸ்ஸாம் அஹ்லி மருத்துவமனையில் அவருக்காகக் காத்திருக்கிறார். “அவளது பொருட்களை எடுத்து வந்திருக்கிறேன். அவளுக்காகக் காத்திருக்கிறேன். ஒரு மனமுடைந்த தாயாகக் கேட்கிறேன், இதனை யாரும் மறந்துவிடாதீர்கள்,” என்கிறார்.

https://www.bbc.com/tamil/articles/cv2931y3pvvo

2020 தேர்தல் முடிவுகளை மாற்றியமைக்க முயன்றமைக்காக டிரம்பிற்கு எதிராக வழக்கு தொடரலாம் - அமெரிக்க நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு

3 months 1 week ago

Published By: RAJEEBAN   06 FEB, 2024 | 09:05 PM

image

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்பிற்கு எதிராக  2020 ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் முடிவுகளை மாற்றியமைக்க சதி செய்த குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வழக்கு தொடரலாம் என அமெரிக்க நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதிக்கு சட்டவிலக்களிப்பிற்கான உரிமையில்லை எனவும் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது

ஜனாதிபதியாக பதவி வகித்த காலத்தில் தான் முன்னெடுத்த நடவடிக்கைகளிற்காக தனக்கு எதிராக குற்றவியல் குற்றச்சாட்டுகளை சுமத்த முடியாது என டிரம்ப் தாக்கல் செய்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வழக்கு தொடர்பிலேயே நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.

பல வழக்குகளில் தனக்கு விடுபாட்டுரிமையுள்ளது என  தெரிவித்துவந்த டிரம்பிற்கு இந்த தீர்ப்பு ஒரு பின்னடைவு என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னாள் ஜனாதிபதி இந்த தீர்ப்பிற்கு எதிராக மேல்முறையீடு செய்தால் இந்த விவகாரம் அமெரிக்காவின் உச்சநீதிமன்றத்திற்கு செல்லும் - உச்சநீதிமன்ற நீதிபதிகள் மத்தியில் பழமைவாதிகளின் ஆதிக்கம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/175743

3ஆம் சார்ள்ஸ் மன்னருக்கு புற்றுநோய் ! 

3 months 1 week ago
3ஆம் சார்ள்ஸ் மன்னருக்கு புற்றுநோய் ! 

Simrith   / 2024 பெப்ரவரி 06 ,

spacer.png

 

மன்னர் சார்லஸ் ஒருவகை புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக பெர்க்கிங்ஹம் அரண்மனை தெரிவித்துள்ளது.

அவரின் புற்றுநோயின் வகை வெளிப்படுத்தப்படாததுடன்  குறித்த  விடயமானது அவரது சமீபத்திய சிகிச்சையின் போதே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மன்னர் திங்களன்று "வழக்கமான சிகிச்சையை" தொடங்கினார் எனவும், மேலும் சிகிச்சையின் போது பொது கடமைகளை ஒத்திவைப்பார் என்றும் அரண்மனை தெரிவித்துள்ளது.

புற்றுநோயின் நிலை அல்லது முன்கணிப்பு பற்றிய கூடுதல் விவரங்கள் எதுவும் பகிரப்படவில்லை.

 

https://www.tamilmirror.lk/உலக-செய்திகள்/3ஆம்-சார்ள்ஸ்-மன்னருக்கு-புற்றுநோய்/50-332743

 

இஸ்ரேலுக்கும் உக்ரைனுக்கும் உதவி என 118 பில்லியன் டொலர் ஒப்பந்தத்தை வெளியிட்டது அமெரிக்க செனட் !

3 months 1 week ago
US-Senate.png?resize=700,375&ssl=1 இஸ்ரேலுக்கும் உக்ரைனுக்கும் உதவி என 118 பில்லியன் டொலர் ஒப்பந்தத்தை வெளியிட்டது அமெரிக்க செனட் !

எல்லைப் பாதுகாப்பை அதிகரிக்கும் மற்றும் இஸ்ரேலுக்கும் உக்ரைனுக்கும் போர்க்கால உதவியை வழங்கும் வகையிலும் அமெரிக்கா 118 பில்லியன் டொலர் ஒப்பந்தம் ஒன்றினை எட்ட தீர்மானித்துள்ளது.

பல மாதங்களாக குடியேற்ற பிரச்சினை மற்றும் கியிவ் ஆதரவு தொடர்பான சர்ச்சைகளுக்குப் பின்னர் குறித்த சட்டமூலத்தை விரைவாக நிறைவேற்றுமாறு ஜனாதிபதி ஜோ பய்டன் காங்கிரஸை வலியுறுத்தியுள்ளார்.

உக்ரைனை போர்க்கால உதவியுடன் மீண்டும் வழங்க அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் செனட்டில் உள்ள ஜனநாயக மற்றும் குடியரசுக் கட்சித் தலைவர்கள் அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.

இதேநேரம் மெக்சிகோ எல்லையில் சட்டவிரோத குடியேற்றங்களைச் சமாளிக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள பழமைவாத குடியரசுக் கட்சி தொடந்து வலியுறுத்தி வருகின்றது.

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கப்பட்ட சட்டமூலத்தில் உக்ரைனுக்கு 60 பில்லியன் டொலர் உதவியும் இஸ்ரேலுக்கு 14.1 பில்லியன் டொலர் இராணுவ உதவியும் உள்ளடக்கப்பட்டுள்ளது.

https://athavannews.com/2024/1368425

சீனாவை உளவு பார்த்த குற்றச்சாட்டு - அவுஸ்திரேலிய எழுத்தாளருக்கு மரணதண்டனையை அறிவித்தது சீனா

3 months 1 week ago

Published By: RAJEEBAN   05 FEB, 2024 | 11:18 AM

image

சீனாவில் உளவு பார்த்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட அவுஸ்திரேலிய எழுத்தாளர் யாங் ஹெங்ஜூனிற்கு சீனா ஒத்திவைக்கப்பட்ட மரணதண்டனையை விதித்துள்ளது.

மரணதண்டனை இரண்டு வருடங்களிற்கு பின்னர் ஆயுள்தண்டனையாக மாற்றப்படலாம் என அவுஸ்திரேலிய அதிகாரிகள் தெரிவித்துள்ளார்.

சீனா விவகாரங்கள் குறித்து பதிவிட்டு வந்த யாங் உளவு பார்த்த குற்றச்சாட்டுகளை நிராகரித்துள்ளார்.

சீனாவின் தீர்ப்பினால் அதிர்ச்சியடைந்துள்ளதாக அவுஸ்திரேலிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.

அனைத்து அவுஸ்திரேலியர்களும் அவர் யாங் தனது குடும்பத்துடன் இணைவதை விரும்புகின்றனர் அவர் விடுதலை செய்யப்படவேண்டும் என்ற பரப்புரையை நாங்கள் நிறுத்தப்போவதில்லை அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் பெனிவொங் அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளார்.

முன்னர் சீனாவின் மாநில பாதுகாப்பு அமைச்சகத்தில் பணியாற்றிய யங் ஜனநாயக கடத்தல்காரர் என அழைக்கப்பட்டார். அவரது எழுத்துக்கள் அரசாங்கத்தை நேரடியாக விமர்சிப்பதை தவிர்த்துள்ளன.

2019 ஆம் ஆண்டு குவாங்சோ விமான நிலையத்தில் சீனாவை உளவு பார்த்த குற்றச்சாட்டில் இவர் தடுத்துநிறுத்தப்பட்டார்.

அதன் பின்னர் இவர் குறித்த விசாரணைகள் மூடிய கதவுகளின் பின்னால் இடம்பெற்றுள்ளன - 2021இல் இரகசிய விசாரணையும் இடம்பெற்றது.

https://www.virakesari.lk/article/175590

சிலியில் ஏற்பட்டுள்ள  காட்டுத்தீயால்   112 போ் உயிாிழப்பு

3 months 1 week ago
சிலியில் ஏற்பட்டுள்ள  காட்டுத்தீயால்   112 போ் உயிாிழப்பு
adminFebruary 5, 2024
wildfire-in-chile.jpg?fit=921%2C518&ssl=

தென் அமெரிக்க நாடான சிலியில் ஏற்பட்டுள்ள பயங்கர காட்டுத்தீயால் இதுவரையில்  112 போ் உயிாிழந்துள்ளதுடன்   சுமார் 20 ஆயிரம் எக்டேர் வனப்பகுதி எரிந்து நாசமாகியுள்ளது.

சிலியின்   மலைப்பகுதியான வினாடெல்மாரில் ஏற்பட்ட  பயங்கர காட்டுத்தீ   மற்ற பகுதிகளுக்கும் வேகமாக பரவி வருகிறது இதனையடுத்து
தீயணைப்பு வீரர்கள்  ஹெலிகாப்டர்கள் மூலம் தண்ணீரை தெளித்து தீயை கட்டுப்படுத்த முயன்று வருகின்றனர். ஆனாலும் தீ கட்டுக்கடங்காமல் எரிந்து வருகிறது.

இந்த காட்டுத்தீயால் இதுவரை சுமார் 20 ஆயிரம் எக்டேர் வனப்பகுதி எரிந்து நாசமாகியுள்ளதாகவும் . இதனால் அங்குள்ள அரிய வகை தாவரங்கள், விலங்கினங்கள் தீயில் கருகி மடிந்தன. அதனை சுற்றியுள்ள எஸ்ட்ரெல்லா, நவிடாப் ஆகிய பகுதிகளுக்கும் இந்த தீ பரவியதனால்  அங்குள்ள 1,200 வீடுகள் எரிந்து நாசமாகின.

. வேகமாக பரவி வரும் இந்த தீயை அணைப்பது சவாலாக உள்ளது. எனவே தீயை அணைக்கும் பணியில் மீட்பு படையினருக்கு உதவும்படி பொதுமக்களை அந்நாட்டு அதிபர் கேப்ரியல் போரிக் கேட்டுக்கொண்டுள்ளாா்.  இந்த காட்டுத்தீ காரணமாக இனிவரும் நாட்களில் வெப்பநிலை 104 டிகிரி வரை அதிகரிக்கும் என வானிலை அதிகாரிகள் எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
 

https://globaltamilnews.net/2024/200361/

உலக புற்றுநோய் தினம்: காலநிலை மாற்றத்தால் புற்றுநோய் பாதிப்பு அதிகரிக்கும் அபாயம்

3 months 1 week ago
உலக புற்றுநோய் தினம்: காலநிலை மாற்றத்தால் புற்றுநோய் பாதிப்பு அதிகரிக்கும் அபாயம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

7 மணி நேரங்களுக்கு முன்னர்

ஒவ்வோர் ஆண்டும் பிப்ரவரி 4ஆம் தேதி உலக புற்றுநோய் தினம் கடைபிடிக்கப்படுகிறது. புகையிலை, வாழ்க்கை முறை மாற்றம், மோசமான சூழல் எனப் பல விதமான காரணங்களால் புற்றுநோய் பாதிப்பு ஏற்படுகிறது.

இந்நிலையில் உலக அளவில் பெரும் அபாயமாக வளர்ந்து வரும் காலநிலை மாற்றமும் புற்றுநோய் காரணியாக மாறியுள்ளதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

ஆஸ்திரேலிய பல்கலைக்கழகம் ஒன்றால் நடத்தப்பட்டுள்ள ஆய்வில் எவ்வாறு காலநிலை மாற்றம் புற்றுநோய் ஏற்படக் காரணமாக உள்ளது என்ற காரணங்கள் கண்டறியப்பட்டுள்ளன. அதன் ஆய்வு விவரங்கள் குறித்து மருத்துவர்கள், ஆய்வாளர்கள் என்ன சொல்கின்றனர்?

 
காலநிலை மாற்றம்: அதிகரிக்கும் அபாயம்
புற்றுநோய்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

நாசா ஆய்வுப்படி, புவியின் வெப்பநிலை சுமார் 1.2 டிகிரி செல்ஷியஸ் அதிகரித்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

உலக வரலாற்றில் 2023ஆம் ஆண்டுதான் மிக வெப்பமான ஆண்டாக இருந்தது என்று அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா தெரிவிக்கிறது. அதன் ஆய்வுப்படி, புவியின் வெப்பநிலை சுமார் 1.2 டிகிரி செல்சியஸ் அதிகரித்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

பசுமைக்குடில் வாயுக்களை அதிகமாக வெளியேற்றும் நாடுகளின் பட்டியலில் இந்தியா மூன்றாவது இடத்தைப் (3394.9 MtCO2e) பிடித்திருப்பதாக உலக வள நிறுவனம் (World Resource Institute) பட்டியலிட்டுள்ளது.

டெல்லியை தளமாகக் கொண்டு இயங்கும் அறிவியல் மற்றும் சுற்றுச்சூழலுக்கான ஆய்வு மையம் (Center for science and Environment), இதனால் சுற்றுசூழல் மற்றும் வளிமண்டலம் சமநிலையற்று இருப்பதாகக் கூறியுள்ளது.

புற்றுநோய்

பட மூலாதாரம்,GETTY IMAGES

“கோடைக் காலத்தில் கடும் வெப்பம், மழைக் காலத்தில் வெள்ள அபாயம், நிலச்சரிவு போன்ற பல்வேறு இயற்கை சீற்றங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 2023ஆம் ஆண்டில் ஜனவரி முதல் செப்டம்பர் மாதம் வரை இந்தியாவில் 86 சதவீதம், தீவிரமான (extreme) வானிலை மட்டுமே இருந்துள்ளது," என்று அறிவியல் மற்றும் சுற்றுசூழலுக்கான மையம் கூறுகிறது.

"ஆறறிவு கொண்டு தொழில்நுட்பங்களுடன் பல விஷயங்களை சாதித்துக் கொண்டிருப்பதாக மனிதர்கள், நினைத்துக் கொண்டிருக்கிறோம், ஆனால் அனைத்து வகையிலும் இந்த சாதனைகள் எல்லாவற்றுக்கும் இயற்கைதான் ஊந்துதலாகவும் ஆதாரமாகவும் இருந்து கொண்டிருக்கிறது," என்று 'ஒற்றை வைக்கோல் புரட்சி' என்ற நூலில், மசானபு ஃபுகோகா எழுதியிருப்பார்.

அதுபோல, மனித மேம்பாட்டிற்கு இயற்கை முதுகெலும்பாக இருந்து வருகிறது.

 
வளர்ச்சிக்கு உந்துதலான இயற்கை
புற்றுநோய்

பட மூலாதாரம்,NITHYANANDH JAYARAM / TWITTER

படக்குறிப்பு,

சுற்றுச்சூழல் ஆர்வலர் நித்தியானந்த் ஜெயராமன்

இந்தியா, இயற்கையின் பல வகையான சுற்றுச்சூழல் அமைப்பைக் கொண்ட ஒரு வளமான நாடு. வடக்கே இமயமலையின் உறைபணியும், தெற்குப் பகுதியில் கதகதப்பான வானிலையும், மறுபுறம் வடகிழக்கில் தொடர்ந்து மழையும், வடமேற்கில் வறண்ட தார் பாலைவனமும் என அனைத்து வகையான காலநிலையையும் உள்ளடக்கிய நாடு.

உலகமயமாக்கலுக்குப் பிறகு இந்தியா வேகமாக முன்னேற்றம் அடைந்து வருகிறது. விவசாயம், வருவாய், தொழில் துறை, அறிவியல் போன்ற பல்வேறு துறைகளில் வளர்ச்சி கண்டாலும், அனைத்திற்கும் முதுகெலும்பாக இருக்கும் சுற்றுசூழலுக்கு வீழ்ச்சியே என்று இதுவரையிலான ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

"அனைவருக்கும் தெரிந்தது போலவே, நவீன முதலாளித்துவ பொருளாதாரத்தை உருவாக்கச் செய்த நடவடிக்கைகளால் வளிமண்டலத்தில் பசுமைக்குடில் வாயுக்களின் அளவு அதிகரித்துள்ளது.

இதனால் புவி வெப்பமடைந்து உலகில் காலநிலை மாற்றம் அதிக அளவில் நிகழ்கிறது," என்று சுற்றுச்சூழல் ஆர்வலர் நித்தியானந்த் ஜெயராமன் கூறுகிறார். அனைத்து உயிரினங்களும் உயிர் வாழ ஆதரவாக ஆக்சிஜன் வாயு இருக்கிறது. ஆனால், பசுமைக்குடில் வாயுக்களான கரிம வாயு, மீதேன், நைட்ரஜன் டை ஆக்சைடு ஆகியவை நச்சுத்தன்மை வாய்ந்தவை.

கடந்த சில ஆண்டுகளாக, இந்த வாயுக்கள் வெளியேற்றப்படும் அளவு அதிகரித்து உள்ளது. இதனால் இந்தியா காலநிலை மாற்றத்தால் பெருமளவில் சுற்றுச்சூழல் ஆபத்தையும், வானிலை வேறுபாடுகளையும் சந்தித்து வருகிறது என்று சர்வதேச நாணய நிதியம் கூறியுள்ளது.

இது ஒருபுறம் இருக்க, சூழலியல் பாதிப்பு மட்டுமின்றி மக்களின் வாழ்க்கை முறை, ஆரோக்கியம் ஆகியவற்றையும் இந்தப் பிரச்னைகள் பாதிக்கின்றன.

 
காலநிலை மாற்றத்தால் புற்றுநோயா?
புற்றுநோய்

பட மூலாதாரம்,SURESH KUMAR

படக்குறிப்பு,

புற்றுநோயியல் நிபுணர் மருத்துவர் சுரேஷ் குமார்

"காலநிலை மாற்றத்தால் மக்களுக்கு இதய நோய், மூச்சுத் திணறல் போன்ற நுரையீரல் சார்ந்த பல பிரச்னைகளோடு புற்றுநோயும் வரக் காரணமாக இருக்கிறது," என்று புற்றுநோயியல் நிபுணர் மருத்துவர் சுரேஷ் குமார் கூறினார்.

புகையிலைப் பழக்கம், வாழ்க்கை முறை, மரபியல் போன்ற காரணத்தால் புற்றுநோய் ஏற்பட்டாலும், காலநிலை மாற்றம் மிகவும் குறைவாக அங்கீகரிக்கப்பட்ட மற்றும் பேசப்படாத ஒரு காரணியாக இருந்து வருவதாகக் குறிப்பிடுகிறார் அவர்.

உலகளவில் ஆண்டுக்கு, 10 மில்லியன் மக்கள் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயிரிழக்கிறார்கள் என்றும் மக்கள் இறப்பதற்கான காரணியில் மாரடைப்பிற்கு அடுத்து இரண்டாவதாக புற்றுநோய் இருப்பதாகவும் மருத்துவர் சுரேஷ் தெரிவித்தார்.

இதுகுறித்து ஆஸ்திரேலியாவின் மோனார்ஷ் பல்கலைக்கழகம் ஓர் ஆராய்ச்சியை மேற்கொண்டது. அதில் காலநிலை மாற்றம் மறைமுகமாக புற்றுநோய் வரக் காரணமாக இருக்கிறது என்று கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்த ஆய்வை மேற்கொண்ட மோனார்ஷ் பல்கலைக்கழகத்தின் பேராசிரியரும், சுற்றுச்சூழல் ஆய்வாளருமான யுமிங் கோ பிபிசி தமிழிடம் பேசினார்.

இது ஒரு முடிவில்லா சுழற்சி என்றும், அதிக அளவில் புதைபடிம எரிபொருட்களைப் பயன்படுத்துவதால், காற்றில் பசுமை இல்ல வாயுக்கள் அதிகரித்து சுற்றுப்புறத்தில் காற்று மாசு அதிகரிக்கிறது.

இந்தத் தரமற்ற காற்றைத் தொடர்ந்து சுவாசித்தால் மூளை, நுரையீரல், உணவுக் குழாய் ஆகியவற்றில் புற்றுநோய் பாதிப்பு ஏற்படக்கூடும்,” என்று குறிப்பிட்டார்.

 
புற்றுநோய்

பட மூலாதாரம்,YUMING GUO / LINKEDIN

படக்குறிப்பு,

பேராசிரியர் யுமிங் கோ

காலநிலை மாற்றத்தால் உலகின் வெப்பநிலை அதிகரித்துள்ளது, இதனால் கோடை மற்றும் மழைக் காலங்களில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இயற்கை சீற்றங்கள், வெள்ளம், புயல் போன்றவை அதிக அளவில் நிகழ்ந்ததால் மக்களின் வாழ்க்கை நடைமுறை, பயிர் விளைச்சலில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

கலப்படமான தரமற்ற நீர், உணவை உண்ண, மக்கள் தள்ளப்பட்டிருக்கிறார்கள். இதனால் பல்வேறு நோய்த் தொற்றுகள், உடல் பருமன் ஏற்பட்டு வயிறு, குடல், மண்ணீரல் போன்ற உறுப்புகளில் புற்றுநோய் ஏற்பட வழிவகுப்பதாக பேராசிரியர் யுமிங் கோவின் ஆய்வறிக்கை கூறுகிறது.

புவி வெப்பமடைதலால் சூரியனின் தீங்கு விளைவிக்கும் புற ஊதாக் கதிர்களில் (UV rays) இருந்து உயிர்களைக் காக்கும் ஓசோன் படலத்தில் பெரிய ஓட்டை ஏற்பட்டிருப்பதாக நாசா ஏற்கெனவே அறிவித்திருந்தது. "அந்த புற ஊதாக் கதிர்கள் அதிகம் தோலில் படும்போது மெலனோமா (melanoma), தோல் புற்றுநோய் போன்ற பாதிப்புகள் ஏற்படக்கூடும்," என்று எச்சரிக்கிறார் யுமிங் கோ.

தொழில் வளர்ச்சி பெருகிவிட்டது, ஆண், பெண் வேறுபாடின்றி அதிக நேரம் கடும் வெப்பத்தில் பணிபுரியும் சூழ்நிலை பலருக்கும் ஏற்பட்டுள்ளது. இதன் விளைவாக பசுமைக்குடில் வாயுக்களை அதிகமாக சுவாசிப்பதால் அவர்களுக்கு மார்பகத்தில், இனப்பெருக்க உறுப்புகளில் புற்றுநோய் ஏற்பட அதிக வாய்ப்பு இருப்பதாகவும் பேராசிரியர் யும்ங் கோ குறிப்பிட்டார்.

இதுபோன்ற சூழ்நிலைகளால் மக்களுக்கு புற்றுநோய் ஏற்படும் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மேலும் நோய்வாய்ப்பட்ட மக்களுக்கு ஏற்கெனவே எதிர்ப்பு சக்தி குறைவாக இருந்தும், மீண்டும் இதே மாசான சுற்றுச்சூழலில் இருக்கும்போது சிகிச்சைப் பலன் குறைந்து இறப்பு விகிதமும் அதிகரித்துள்ளதாக யுமிங் கோவின் ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

 
புற்றுநோயைத் தவிர்க்க என்ன செய்ய வேண்டும்?
புற்றுநோய்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

"புதைபடிம எரிபொருட்களின் பயன்பாட்டைக் குறைத்து, புதுப்பிக்கவல்ல ஆற்றலைப் பயன்படுத்த வேண்டும்"

"காலநிலை மாற்றம் நிகழ்வதை உடனடியாகத் தடுத்து நிறுத்த முடியாது, தாமதப்படுத்த மட்டுமே முடியும். அதற்கான நடவடிக்கைகளை எடுத்தால், கொடிய நோய்களால் வரும் விளைவுகளைத் தவிர்க்க முடியும்," என்று வலியுறுத்தினார் யுமிங் கோ.

மேலும் இதுகுறித்து நித்தியானந்த் ஜெயராமன் போன்ற சுற்றுச்சூழல் ஆர்வலர்களிடம் பேசியபோது, சுற்றுச்சூழலுக்கு முக்கியத்துவம் கொடுத்து அனைத்துத் துறைகளையும் உள்ளடக்கிய மேம்பாடு மட்டுமே உண்மையான வளர்ச்சி என்றும், தனி மனித கொள்கைகளுடன் சேர்ந்து அரசாங்கம் மக்களுக்கு உதவ வேண்டும் என்றும் தெரிவித்தனர்.

"பசுமைக்குடில் வாயு வெளியேற்றப்படுவதைத் தவிர்க்க முடிந்தவரை புதைபடிம எரிபொருட்களின் பயன்பாட்டைக் குறைத்து, புதுப்பிக்கவல்ல ஆற்றலைப் பயன்படுத்த வேண்டும். காடுகளின் பரப்பளவைப் பாதுகாப்பதோடு, மேலதிக மரங்களை நடவேண்டும். இதுகுறித்துப் பலவகை பிரசாரத்தின் மூலம் மக்களுக்கும் அறிவுறுத்த வேண்டும்."

இன்னொருபுறம், உடல் ஆரோக்கிய ரீதியாகவும் வாழ்க்கை நடைமுறையிலும் நேர்மறை மாற்றங்களைக் கொண்டு வர வேண்டியது அவசியம் என்கிறார் புற்றுநோய் மருத்துவர் சுரேஷ் குமார். "மது மற்றும் புகைப் பழக்கத்தைத் தவிர்த்து, சத்தான உணவுப் பழக்கத்தை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

"தற்போதைய காலத்தில் நாம் மேற்கத்திய உணவுப் பழக்கத்தைப் பின்பற்றி வருகிறோம். அதைத் தவிர்த்து நமது வாழ்விடத்தின் காலநிலைக்கு ஏற்ப நார்ச்சத்து மிகுந்த ஆரோக்கியமான உணவு வகைகளை உண்டு, உடற்பயிற்சி செய்தால், நோயற்ற வாழ்வை வாழலாம்," என்று தெரிவித்தார்.

https://www.bbc.com/tamil/articles/c72gey0j9p0o

பிரான்ஸ் தலைநகரில் புகையிரத நிலையத்தில் கத்திக்குத்து தாக்குதல் - சந்தேகநபர் கைது

3 months 1 week ago

Published By: RAJEEBAN   03 FEB, 2024 | 05:00 PM

image

பிரான்ஸ் தலைநகர் பரிசில் புகையிரதநிலையமொன்றில் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில் மூவர் காயமடைந்துள்ளனர்.

கேர்டிலையொன் புகையிரதநிலையத்தில் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில் ஒருவருக்கு வயிற்றில் கடும் காயம் ஏற்பட்டுள்ளது.

கத்தி மற்றும் சுத்தியலுடன் காணப்பட்ட நபர் ஒருவர் பொதுமக்கள் மீது தாக்குதலை மேற்கொண்டார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

புகையிரத பாதுகாப்பு உத்தியோகத்தர் தாக்குதலை மேற்கொண்ட நபரை தடுத்து நிறுத்தினார். அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் பயங்கரவாத தாக்குதல் போல தோன்றவில்லை சந்தேக நபர் மனநிலை பாதிக்கப்பட்டவர் போல காணப்படுகின்றார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தாங்க முடியாத சம்பவம் இதுவென தெரிவித்துள்ள பிரான்சின் உள்துறை அமைச்சர் சந்தேகநபரை தடுத்துநிறுத்தியவர்களை பாராட்டியுள்ளார்.

பிரான்ஸ் ஒலிம்பிக் போட்டிகளிற்கு தயாராகிக்கொண்டிருக்கும் நிலையில் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

பிரான்சில் கத்திக்குத்து தாக்குதல்கள் தொடர்ச்சியாக இடம்பெறுவது குறிப்பிடத்தக்கது. டிசம்பர் மாதம் ஈபிள் கோபுரத்திற்கு அருகில் இடம்பெற்ற தாக்குதலில் ஜேர்மனியை சேர்ந்த சுற்றுலாப்பயணியொருவர் கொல்லப்பட்டார்.

https://www.virakesari.lk/article/175483

அமெரிக்கா: இரானிய இலக்குகள் மீது பதிலடி தாக்குதல் - சிரியா, இராக்கில் என்ன நடக்கிறது?

3 months 1 week ago
அமெரிக்க விமானம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

25 நிமிடங்களுக்கு முன்னர்

அமெரிக்க ராணுவ தளத்தில் நடந்த தாக்குதலுக்குப் பதிலடி அளிக்கும் வகையில், சிரியா மற்றும் இராக்கில் உள்ள 85 இரானிய இலக்குகள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியுள்ளது.

வெள்ளிக்கிழமை அன்று, நீண்ட தூரத்தில் உள்ள இலக்குகள் மீது குண்டு வீசும் விமானங்கள் உட்படப் பல்வேறு வகையான விமானங்கள் அமெரிக்காவில் இருந்து புறப்பட்டன. அவை, சிரியாவில் நான்கு, இராக்கில் மூன்று என மொத்தம் ஏழு இடங்களில் தாக்கின. அவற்றில், 85க்கும் மேற்பட்ட இலக்குகள் தகர்க்கப்பட்டன.

அமெரிக்காவின் தாக்குதலில் இராக் மற்றும் சிரியாவில் உள்ள கட்டுப்பாட்டு மையங்கள், ராணுவ தளவாட மையங்கள் மற்றும் ட்ரோன் சேமிப்புக் கிடங்குகள் தகர்க்கப்பட்டன.

இரானின் இஸ்லாமிய புரட்சிகர காவலர்கள் கார்ப் குட்ஸ் படை(Islamic Revolutionary Guards Corp Quds Force) மற்றும் அது சார்ந்த போராளிக் குழுக்களுக்கு எதிராக அமெரிக்கப் படைகள் வான்வழித் தாக்குதல்களை நடத்தியதாக அமெரிக்காவின் மத்தியப் பாதுகாப்புப் படையான சென்ட்காம்(CENTCOM) கூறியுள்ளது.

 
அமெரிக்கப் படைகள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

கடந்த ஞாயிற்றுக்கிழமை(ஜனவரி 28) அன்று அமெரிக்க ராணுவ தளத்தின் மீது ஆளில்லா விமானம் தாக்கி மூன்று வீரர்களைக் கொன்றதற்கு பதிலடியாக சிரியா மற்றும் இராக்கில் உள்ள 85 இலக்குகள் மீது இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் அமெரிக்க மத்தியப் பாதுகாப்புப் படையினர் கூறினர்.

"எங்கள் பதிலடி இன்று தொடங்கியது. நாங்கள் தேர்ந்தெடுக்கும் நேரத்திலும் இடங்களிலும் எங்களின் பதிலடி தொடரும்" என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வெள்ளிக்கிழமை ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

டவர் 22 என்ற அமெரிக்க தளத்தில் ட்ரோன் தாக்குதலில் மூன்று அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதலின்போது, 40க்கும் மேற்பட்ட வீரர்கள் காயமடைந்தனர்.

இரான் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்த அமெரிக்கா, மோசமான விளைவுகள் பதிலாகத் தரப்படும் என்றும் கூறியிருந்தது.

ஆனால், இதற்குப் பதிலிளித்த இரான், தனது ஈடுபாட்டை முற்றிலுமாக மறுத்துள்ளது. அமெரிக்காவின் இந்தக் குற்றச்சாட்டுகளை ஆதாரமற்றது என்றும், அமெரிக்காவை எதிர்க்கும் குழுக்களின் முடிவுகளில் தாம் தலையிடுவதில்லை என்றும் இரான் கூறியது.

 
தாமதத்திற்கான காரணம் என்ன?

பதில் தாக்குதலுக்கு அதிக நேரம் எடுத்துக்கொண்டதால், அமெரிக்காவின் குடியரசுக் கட்சியினரிடம் இருந்து கேள்விகளையும் விமர்சனங்களையும் எதிர்கொண்டது ஜோ பைடன் தலைமையிலான அரசு.

ஆனால், வெளியுறவுக் கொள்கை வல்லுநர்கள் இந்த கால தாமதமான அணுகுமுறை இரானுக்கு அவர்களின் ராணுவப் பணியாளர்களைத் தாக்குதல் நடக்கவிருக்கும் தளங்களில் இருந்து திரும்பப் பெற அனுமதித்ததாகக் கூறினர். இதனால், அமெரிக்காவிற்கும் இரானுக்கும் இடையிலான ஒரு பெரிய மோதல் தவிர்க்கப்பட்டிருப்பதாகவும் அவர்கள் கருதுகிறார்கள்.

"இது இரானிய ஆதரவுடைய போராளிகள், அமெரிக்கப் படைகளைத் தாக்கும் திறனைக் குறைக்கும்," என மத்திய கிழக்கிற்கான முன்னாள் துணைப் பாதுகாப்புச் செயலாளரான மிக் முல்ராய் பிபிசியிடம் கூறினார்.

எனினும் இது எதிர்கால தாக்குதல்களுக்கு ஒரு தடையாக இருக்காது. ஆனால், அமெரிக்காவிற்கும் இரானுக்கும் இடையே "நேரடியான போரைத் தவிர்த்ததுதான் இந்தத் தாமதத்தின் நன்மை," என்றார் மிக் முல்ராய்.

 
தாக்குதலில் பலியான அமெரிக்க வீரர்கள்

பட மூலாதாரம்,DOD

தாக்குதலுக்கு முன்னதாக, அமெரிக்க சென்ட்காம் கமாண்டர் ஜெனரல் மைக்கேல் எரிக் குரில்லா, வெள்ளியன்று எக்ஸ் தளத்தில், B-1 குண்டுவீச்சு விமானம் புறப்படும் வீடியோவை பகிர்ந்தார்.

அதனுடன் கூடிய அறிக்கையில், "நாங்கள் தொடர்ந்து நடவடிக்கை எடுப்போம், எங்கள் மக்களைப் பாதுகாக்கத் தேவையான அனைத்தையும் செய்வோம், அவர்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துபவர்களை பொறுப்பேற்கச் செய்வோம்," என்று கூறியிருந்தார்.

இந்தத் தாக்குதல் அமெரிக்க அதிபர் பைடன் மற்றும் பென்டகன் தலைவர்கள், இறந்த மூன்று வீரர்களுக்கு அஞ்சலி செலுத்திய சில மணிநேரங்களில் நடத்தப்பட்டுள்ளது. இறந்த வீரர்களின் குடும்பத்தினருக்கு பைடன் ஆறுதல் கூறினார்.

 
'இரான் விளைவுகளைச் சந்திக்கும்'
அமெரிக்க ராணுவம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

முன்னதாக பிபிசியிடம் பேசிய அமெரிக்காவிற்கான முன்னாள் பிரிட்டன் தூதர் லார்ட் கிம் டாரோச், இந்த பதில் தாக்குதல்கள் தவிர்க்க முடியாதவை எனக் குறிப்பிட்டார். அதுவும் இது அதிபர் தேர்தல் நடக்கும் ஆண்டாக இருப்பதால், பதில் தாக்குதலைத் தவிர்ப்பது கடினம் என்றார்.

"இதுபோன்ற தாக்குதல் சம்பவங்களுக்குப் பதிலடி கொடுப்பதில் அமெரிக்க அரசு நிர்வாகம் மென்மையாக இருக்க விரும்பவில்லை. இரான் மற்றும் சிரியாவிற்கு இதுவொரு எச்சரிக்கையாக இருக்கும். ஆனால், இந்தத் தாக்குதல்களும் பதில் தாக்குதல்களும் தொடர்ந்தால், அது மேலும் பதற்றமான சூழலை ஏற்படுத்தும்," என்றார்.

அமெரிக்க தளங்கள் மீது நடந்த தாக்குதலுக்கு தனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என இரான் மறுத்தாலும், ஒரு முறை போராளிக் குழுக்களுக்கு நிதியளிக்கத் தொடங்கிவிட்டு, பின் தாக்குதல் நடத்துவதற்கு நாங்கள் உத்தரவிடவில்லை எனக் கூற முடியாது," என்றார் லார்ட் கிம்.

"அதன் விளைவுகளை நீங்கள் எதிர்கொள்ளப் போகிறீர்கள்," என்றார் அவர்.

https://www.bbc.com/tamil/articles/clj931g6jjyo

மத்தியகிழக்கை நோக்கி நகர்த்தப்படுகின்ற அமெரிக்க இராணுவம்! ஆரம்பமாகின்றதா அமெரிக்க ஈரான் போர்?

3 months 1 week ago

அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே ஒரு யுத்தம் இடம்பெறுவதற்கான மணித்துளிகள் எண்ணப்பட்டுக்கொண்டிருக்கதாகக் கூறுகின்றார்கள் சில போரியல் நோக்கர்கள்.

சில தினங்களுக்கு முன்னர் ஜோர்தானில் உள்ள அமெரிக்க காவல் நிலையான டவர்-22 மீது ஈரான் வழிநடாத்தலில் செயற்பட்டுவருகின்ற Kataib Hezbollah என்ற அமைப்பு மேற்கொண்ட தாக்குதலில் 3 அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டு 40 வீரர்கள் வரையில் காயமடைந்ததைத் தொடர்ந்து அமெரிக்கா பதில் நடவடிக்கையில் இறங்கும் என்று பரவலாகவே எதிர்பார்க்கப்பட்டுவருகின்றது.

https://tamilwin.com/article/us-iran-war-in-middle-east-1706876382

உல்ஃப்காங் பௌலி: ஐன்ஸ்டீன் தனது அறிவுசார் வாரிசாக அறிவித்த சிறந்த இயற்பியலாளர்

3 months 2 weeks ago
ஐன்ஸ்டீன் தனது அறிவுசார் வாரிசாக அறிவித்த இயற்பியலாளர் சாதித்தது என்ன?

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர், டாலியா வென்ச்சுரா
  • பதவி, பிபிசி முண்டோ
  • 1 பிப்ரவரி 2024

உல்ஃப்காங் பௌலி 20ஆம் நூற்றாண்டில் இயற்பியல் துறையில் மிகவும் சிறந்து விளங்கிய ஆராய்ச்சியாளர்களில் ஒருவர். இருப்பினும் இயற்பியல் துறையில் அவர் வாழ்ந்த காலகட்டத்தில் இருந்த மற்றவர்களைப் போல் அவர் நன்கு அறியப்படவில்லை.

இயற்கையின் புதிய விதி ஒன்றை அவர் கண்டுபிடித்ததற்காக அவருக்கு 1945இல் நோபல் பரிசு வழங்கப்பட்டது. அவரது சகாக்களின் ஆய்வுகள் மற்றும் கோட்பாடுகள் பற்றிய அவரது கடுமையான விமர்சனங்களைக் கடந்து அவரை சமமாகப் பாராட்டினர். மேலும், அவர்கள் அவரை "இயற்பியலின் மனசாட்சி" என்று அழைத்தனர் என்ற தகவல்கள் தொடர்ந்து அவர் குறித்துப் பேசும்போது மேற்கோள் காட்டப்படுகின்றன.

மேலும், தெளிவற்ற நியூட்ரினோ துகள் இருப்பதை உறுதி செய்வதற்கு பல தசாப்தங்களுக்கு முன்பே அப்படி ஒன்று இருப்பதாக அவர் கணித்திருந்தார். "நான் ஒரு பயங்கரமான உண்மையைக் கண்டறிந்துள்ளேன். நான் யாரும் கண்டுபிடிக்க முடியாத ஒரு துகள் குறித்த தகவல்களை வெளிப்படுத்தியுள்ளேன்," என்று அவர் அப்போது அறிவித்தார்.

இது எப்போதோ ஒருமுறை சாத்தியமானதுதான். ஆனால் 25 ஆண்டுகளுக்குப் பிறகுதான் அது உண்மையில் சாத்தியமாயிற்று. அது போன்ற தெளிவற்ற துகள்கள் இன்னும் பிரபஞ்சத்தில் நம்பமுடியாத அளவிற்கு ஏராளமாக இருந்தாலும், கண்டறியக் கடினமாக இருக்கும் கண்ணுக்குத் தெரியாதவற்றைப் போலவே இருக்கின்றன.

அவரது சகாக்கள் "பௌலி விளைவு" என்று அவரது பெயரை வைத்தே மூடநம்பிக்கையாக ஒரு கருத்துருவை உருவாக்கினர். வெளிப்படையாகச் சொல்ல வேண்டுமென்றால், அவர் அருகில் இருந்தபோது, சில அழிவுகள் ஏற்பட்டன என்பதால் அவர் ஒரு துரதிர்ஷ்டசாலி என்பது போன்று அவருடன் இருந்தவர்கள் கருதினர்.

பல ஆண்டுகளாக, அவர் அருகில் இருந்தாலே துரதிர்ஷ்டவசமானது எனக் கருதப்படுவதற்கு என்ன காரணம் என்றால் அவர் இருந்த போதெல்லாம் ஆய்வகத்தில் இருந்த சோதனை உபகரணங்களில் ஏற்பட்ட தோல்விகள் பற்றிய நிகழ்வுகள் பரப்பப்பட்டன என்பதுதான். இது அவரது பெரும்பாலான சக ஊழியர்களுக்கு ஒரு திசை திருப்பலாக இருந்தது. இந்நிலையில், சிலர் அவரைத் தங்கள் ஆய்வகங்களுக்குள் நுழையவே தடை விதித்தனர்.

ஆனால் அது உண்மை என்று அவரும் நம்பினார். மேலும் 1948இல் பிரஸ்ஸல்ஸில் நடந்த ஒரு சர்வதேச மாநாட்டில் அவர் கலந்து கொண்டபோது அவர்கள் அவரைப் பற்றி வெளிப்படையாகப் பேசிய நகைச்சுவைப் பேச்சுக்கள், அவரே அதை மேலும் அழுத்தமாக நம்ப வழிவகுத்தது.

இத்தாலிய இயற்பியலாளர் பெப்போ ஒச்சியாலினி ஒரு நடைமுறையைக் கொண்டு வந்தார். அதனால் பௌலி தனது ஆய்வகத்திற்குள் நுழைந்தபோது கூரையில் இருந்து ஒரு விளக்கு கீழே விழுந்து உடைவதைப் போல் ஓர் அமைப்பை ஏற்படுத்தினார். ஆனால் பௌலி அங்கே இருந்தபோது சாதனங்கள் வழக்கமாக பாதிப்படைந்ததைப் போலவே அந்தச் செய்முறையும் தோல்வியடைந்தது.

அதேநேரம், பௌலி செல்வாக்கு மிக்க சுவிஸ் மனநல மருத்துவர் கார்ல் ஜங்குடன் எதார்த்தத்தின் தன்மையைப் பற்றி நீண்ட ஆய்வு செய்து கொண்டிருந்தார். மேலும் அறிவியலுக்கான ஆதாரமாகத் தொடர்ந்து விஞ்ஞானிகளுடனான கடிதப் பரிமாற்றத்தின் ஏராளமான மரபுகளையும் அவர் விட்டுச் சென்றார்.

 
ஐன்ஸ்டீன் வட்டத்திற்குள் உல்ஃப்காங் பௌலியின் குடும்பம்
வுல்ஃப்காங் பாலி

பட மூலாதாரம்,CERN

படக்குறிப்பு,

பௌலி பிறந்து 20 மாதங்களில் அவரது தாயுடன் இருந்தபோது எடுத்த படம்.

பௌலி வியன்னாவில் 1900ஆம் ஆண்டு பிறந்தார். அந்த ஆஸ்திரிய தலைநகரம் கலாசாரம் மற்றும் அறிவியல் படைப்பாற்றலின் மையமாக இருந்தது.

அவரது பெற்றோர் ஐரோப்பாவில் வளர்ந்து வரும் யூத எதிர்ப்பு காரணமாக கத்தோலிக்க மதத்திற்கு மாறி மதச் சார்பற்ற யூதர்களாக இருந்தனர். இருப்பினும், நாஜிக்களின் நடவடிக்கைகளில் இருந்து தப்பும் நோக்கத்துடன் அவர் குடும்பத்துடன் அமெரிக்காவுக்கு இடம் பெயரவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

அவரது இயல்பான திறமைகளுக்கும் மேலாக, அவரைச் சுற்றியிருந்த அனைத்தும் அவரது அறிவுக்கு ஊக்கமளித்தன. அவருடைய அப்பா மருத்துவ வேதியியல் துறையில் ஒரு மரியாதைக்குரிய பல்கலைக்கழக பேராசிரியராக இருந்தார். இந்நிலையில், அவரது அம்மா பெர்தா கமிலா ஷூட்ஸ், ஒரு பிரபல எழுத்தாளர், சோசலிஸ்ட் மற்றும் பெண்ணியவாதியாக இருந்தார்.

மேலும் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் மற்றும் தத்துவஞானி எர்ன்ஸ்ட் மாக் போன்ற ஆளுமைகளை அவரது சமூக வட்டம் உள்ளடக்கியதாக இருந்தது.

பள்ளியில், பௌலி கணிதம் மற்றும் இயற்பியலில் மிகச் சிறந்த மாணவராக விளங்கினார். மற்ற பாடங்களில் அவர் அதிக ஆர்வம் காட்டவில்லை. மேலும் 18 வயதில் அவர் மியூனிச் பல்கலைக்கழகத்தில் கோட்பாட்டு இயற்பியலாளர் அர்னால்ட் சோமர்ஃபெல்டுடன் படிக்கச் சென்றார். அவர்தான் பௌலிக்கு கனவு வழிகாட்டியாக இருந்தார். அவரது மாணவர்களில் 6 பேர் நோபல் பரிசு பெற்றவர்கள்.

 
ஐன்ஸ்டீன் மறுத்த கட்டுரையை எழுதிய பௌலி
வுல்ஃப்காங் பாலி

பட மூலாதாரம்,CERN

படக்குறிப்பு,

இயற்பியலாளர் உல்ஃப்காங் பௌலிக்கு (1900-1958), ‘விலக்கு கொள்கையை’ கண்டுபிடித்ததற்காக இயற்பியலுக்கான நோபல் பரிசு அளிக்கப்பட்டது.

பௌலியின் கணிதத் திறனால் சோமர்ஃபெல்ட் மிகவும் ஈர்க்கப்பட்டார். மதிப்புமிக்க கணித அறிவியல் கலைக் களஞ்சியத்திற்கு சார்பியல் கோட்பாடு பற்றிய கட்டுரையை எழுதுவதற்கான அழைப்பை ஐன்ஸ்டீன் நிராகரித்தபோது, அதைச் செய்யும்படி அவரிடம் கேட்டார்.

சார்பியல் கோட்பாடு புரட்சிகரமானது மட்டுமல்ல - அது இன்னும் புதியதாக இருந்தது என்பதை நினைவில் கொள்ளவேண்டும்; அந்த நேரத்தில் பெரும்பாலான இயற்பியலாளர்களே கூட அதை நன்கு அறிந்திருக்கவில்லை.

இயற்பியலாளர் ஹான்ஸ் வான் பேயர் மெட்டானெக்ஸஸில் வலியுறுத்துவது போல, உயர்நிலைப் பள்ளியில் இருந்து புதிதாக வெளியேறும் மாணவரிடம் விமர்சன மதிப்பாய்வை உருவாக்கும் பணியை ஒப்படைப்பது விவேகமற்றது. ஆனால், சோமர்ஃபெல்டின் பந்தயம் வெற்றிகரமாக முடிந்தது.

பௌலியின் 200 பக்கங்களுக்கு மேல் இருக்கும் விமர்சனம் அக்காலத்தின் சிறந்த கணிதவியலாளர்களால் பாராட்டப்பட்டது.

"கோட்பாட்டின் ஓர் எளிய ஆய்வை எழுதுவதற்கு அப்பால், அவர் சார்பியல் கோட்பாடுகளில் உள்ள வெளிப்படையான பிரச்னைகளைச் சுட்டிக்காட்டினார்," என்று எடின்பர்க் பல்கலைக்கழக அறிவியல் தத்துவ பேராசிரியர் மைக்கேலா மஸ்ஸிமி பிபிசியிடம் கூறினார்.

"இது அனைவரையும் கவர்ந்தது என்பதுடன் சர்வதேச அரங்கில் அவரை உறுதியாக நிலைநிறுத்தியது," என்று அவர் மேலும் கூறினார். அதுமட்டுமின்றி ஐன்ஸ்டீனே அதைப் பாராட்டினார்.

"இந்த முதிர்ந்த மற்றும் பிரமாண்டமாக உருவாக்கப்பட்ட படைப்பைப் படிக்கும் யாரும், அதன் ஆசிரியர் 21 வயதுடையவர் என்று நம்ப மாட்டார்கள்," என்று இந்த சார்பியல் கோட்பாட்டின் ஆசிரியர் கருத்து தெரிவித்தார்.

அந்த மதிப்பாய்வு உடனடி கிளாசிக் ஆனது என்பதுடன் நிலையான படைப்பாக இருந்தது. அவரது துறையில் நிபுணர்களின் பார்வையில், அந்த இளம் மாணவர் நிறைய வாக்குறுதிகளைக் காட்டினார்.

 
24 வயதில் தனித்தன்மை
வுல்ஃப்காங் பாலி

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

கடந்த 1940களில் அணு மற்றும் குவாண்டம் இயற்பியலில் முன்னோடி விஞ்ஞானியாக இருந்த அர்னால்ட் சோமர்ஃபெல்டை (1868-1951) பௌலி சந்தித்தபோது எடுத்த படம்.

டாக்டர் பட்டம் பெற்ற பிறகு, பௌலி கோட்டிங்கன் பல்கலைக்கழகத்தில் ஜெர்மன் கணிதவியலாளரும் இயற்பியலாளருமான மேக்ஸ் பார்னின் (நோபல் 1954) உதவியாளராகப் பணியாற்றினார். அடுத்த ஆண்டு, அணுவைப் பற்றிய புரிதலில் புரட்சியை ஏற்படுத்திய டேனிஷ் இயற்பியலாளர் நீல்ஸ் போரை (நோபல் 1922), டென்மார்க்கின் கோபன்ஹேகனில் தன்னுடன் பணியாற்ற அழைத்தார்.

ஆனால் ஹாம்பர்க் பல்கலைக்கழகத்தில் கற்பிக்க ஜெர்மனிக்கு சென்றபோதுதான், அணுவின் கட்டமைப்பில் உள்ள அடிப்படைச் சிக்கல்களைத் தீர்க்கும் இரண்டு தீவிரமான கருத்துருக்களை முன்வைத்தார். அவற்றில் ஒன்று அவருக்கு நிச்சயமாக நோபல் பரிசைப் பெற்றுத் தரும்: அது விலக்கு கொள்கை (Pauli exclusion principle) அல்லது பௌலி கொள்கை என அறியப்பட்டது.

அதை நன்கு புரிந்துகொள்வது சிக்கலானது. ஆனால் இது எதைப் பற்றியது அல்லது அது ஏன் மிகவும் அடிப்படையானது என்பதை பிபிசிக்கு விளக்கிய இயற்பியலாளர் க்ளோஸின் உதவியுடன் அதைப் புரிந்துகொள்ள முயல்வது பயனளிக்கும் விதத்தில் இருக்கும்.

அந்த நேரத்தில், அணுக்களுக்கு நேர்மறை மின்னூட்டம் உள்ளது என்றும், எலக்ட்ரான்கள் ஏணியில் உள்ள படிகளைப் போல பிரிக்கப்பட்ட நீள்வட்ட சுற்றுப்பாதையில் அவற்றைச் சுற்றி வருகின்றன என்றும் அறியப்பட்டிருந்தது.

ஒவ்வொரு கட்டத்திலும், அல்லது குவாண்டம் நிலையிலும், ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான எலக்ட்ரான்கள் இருக்கலாம். மிகக் குறைந்த அளவில், எடுத்துக்காட்டாக இரண்டு எலக்ட்ரான்கள் மட்டுமே இருக்க முடியும்.

மேலும் அவை என்ன என்பதை அந்தக் கருத்துரு வரையறுக்கிறது. ஹைட்ரஜன் அதன் மிகக் குறைந்த அளவில் ஒற்றை எலக்ட்ரானை கொண்டுள்ளது; இரண்டு எலக்ட்ரான்கள் இருந்தால், அது ஹீலியம். அடுத்த உறுப்பு லித்தியம். ஆனால் அதில் மூன்று எலக்ட்ரான்கள் இருப்பதால், அவை அடுத்த கட்டத்தை ஆக்கிரமிக்கின்றன.

வுல்ஃப்காங் பாலி

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

ஐன்ஸ்டீனும் பௌலியும் ஒருவரையொருவர் போற்றிக் கொண்டனர். (1930களில் எடுக்கப்பட்ட படம்).

குளோஸ் குறிப்பிட்டுள்ள கொள்கை, "அந்த குவாண்டம் நிலைகளில் ஒன்றை ஏற்கெனவே எலக்ட்ரான் ஆக்கிரமித்திருந்தால், அங்கு மற்றொரு எலக்ட்ரானை வைக்க முடியாது: அது விலக்கப்பட்டது," என்று கூறுகிறது.

இதை விளக்குவதற்காக, அவர் ஒரு உதாரணம் கூறினார். "நான் மேசையைத் தட்டினால், என் கையிலிருந்து எலக்ட்ரான்கள் மேசை மீது செல்லாது. ஏனென்றால் என் கைகளில் வெளிப்புற விளிம்பில் உள்ள எலக்ட்ரான்கள், அந்த மர மேசையில் எலக்ட்ரான்கள் ஏற்கெனவே ஆக்கிரமித்துள்ள நிலையை ஆக்கிரமிக்க முயல்கின்றன."

"எலக்ட்ரான்கள் எங்கும் செல்ல முடியாது. அவை ஆக்கிரமித்துள்ள இடங்களில் இருந்து ஏற்கெனவே விலக்கப்பட்டிருப்பதால் அவற்றைத் தனி இடங்களில் வைக்க வேண்டும் என்பது அணுக்களின் வெவ்வேறு ரசாயன இயல்புகளுக்கு வழிவகுக்கிறது."

அதன் விளைவாக, நீங்களும், நானும், பிரபஞ்சம் மற்றும் அனைத்தும் உள்ளன என்று அவர் கூறினார். விதிவிலக்குக் கொள்கை தொடர்பான புதிரில் வெவ்வேறு இடங்களில் எலக்ட்ரான்களை உருவாக்கி கட்டமைப்புகளைக் கட்டமைக்கவில்லை என்றால், அவை மிதந்து கொண்டிருக்கும் என்பதுடன் அணுக்கள், திடப் பொருள்கள் அல்லது படிகங்கள் என எதையும் உருவாக்காது.

"பிரபஞ்சத்தில்கூட, நட்சத்திரங்களின் முடிவு விலக்கு கொள்கையுடன் தொடர்புடையதாகவே இருக்கிறது. நட்சத்திரம் அதன் ஆயுள் முடிந்து வீழ்ச்சியடையும்போது, அதன் கூறுகள் தங்களைத் தாங்களே மேன்மேலும் சுருக்கிக்கொள்ள முயல்கின்றன. ஏனெனில் அவை விலக்கப்படுகின்றன."

 
தலை சுற்ற வைத்த பௌலியின் விலக்கு விதி
வுல்ஃப்காங் பாலி

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

பௌலி 1949ஆம் ஆண்டு சர்வதேச அணு இயற்பியல் காங்கிரஸில் அவர் பங்கேற்றபோது எடுத்த படம்.

எல்லோரும் எதிர்பார்க்கிறபடி, இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. அறிஞர்கள் அதை விரைவாக அடையாளம் கண்டுகொண்டனர்.

"இந்தச் செய்தி மிக வேகமாகப் பரவியது," என்கிறார் மாசிமி. "பௌலி ‘விலக்கு விதியை’ அறிவித்தார். மேலும் அவர் அதை ஒரு விதி என்றே அழைத்தார். அதை ஒரு கொள்கை என்று அவர் கருதவில்லை,” என ஆல்ஃபிரட் லாண்டே, ஒரு முக்கிய பரிசோதனை இயற்பியலாளருக்கு எழுதிய கடிதத்தில், இறுதியில் 1924 தெரிவித்தார்.

"ஒரு மாதம் கழித்து, நீல்ஸ் போர் (Niels Bohr) கோபன்ஹேகனில் இருந்து அவருக்கு எழுதிய கடிதத்தில், ‘நீங்கள் கண்டுபிடித்த பல அழகான விஷயங்களால் நாங்கள் அனைவரும் மிகவும் உற்சாகமாக இருக்கிறோம். மேலும் நான் எந்த விமர்சனத்தையும் மறைக்க வேண்டியதில்லை. ஏனென்றால் நீங்கள் எல்லாவற்றையும் பைத்தியம் என்று விமர்சித்தீர்கள்’ எனக் குறிப்பிட்டிருந்தார்," என்று மாசிமி கூறினார்.

"எதார்த்தம் என்னவென்றால், விலக்கு விதியைப் புரிந்துகொள்ள முடியாமல் அவர்கள் தலையைச் சொறிந்தனர்.”

"ஆனால் பௌலியின் தொலைநோக்குப் பார்வை 1924இல் அறிமுகப்படுத்தப்பட்டது. உண்மையில் குவாண்டம் இயக்கவியலின் அடித்தளம் அமைக்கப்படுவதற்கு முன்பு, பல தசாப்தங்களாக இயற்பியலாளர்களைப் பாதித்த ஒரு பிரச்னைக்கு இந்த விதி இறுதியாக ஒரு தீர்வை வழங்கியது," என்று அவர் கூறி முடித்தார்.

பின்னர் இந்த விதி ஒரு கொள்கையாக உறுதிப்படுத்தப்பட்டு, இயற்பியலுக்கான நோபல் கமிட்டியின் உறுப்பினர் பேராசிரியர் ஐ. வாலர் கூறியது போல், அதை வழங்கும்போது, இது இயற்கையின் அடிப்படை விதியாக வகைப்படுத்தப்பட்டது.

"எலக்ட்ரான்களுக்காக முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்ட கொள்கை, புரோட்டான்கள் எனப்படும் ஹைட்ரஜன் கருக்களுக்கும் மற்றும் பல அணுக்கரு வினைகளில் உருவாகும் நியூட்ரான்களுக்கும் செல்லுபடியாகும் என நிரூபிக்கப்பட்டுள்ளது," என்று அவர் கூறினார்.

"இந்த விதியை ஆதரிக்க எலக்ட்ரான்களுக்கு இடையில் எந்த புதிய சக்தியையும், எந்த பொறிமுறையையும், தர்க்கத்தையும்கூட அவர் முன்மொழியவில்லை.”

"இது வெறுமனே ஒரு விதியாக இருந்தது. அதன் இயல்பான தன்மையில் கட்டாயமானது என்பதுடன் நவீன இயற்பியலின் முழு பகுதியிலும் வேறு எதையும் போலல்லாமல் இருந்தது.”

"எலக்ட்ரான்கள் ஒன்றுக்கொன்று தனிப்பட்ட குவாண்டம் எண்களைத் தவிர்க்கின்றன. இது வேறு எந்த காரணத்திற்காகவும் இல்லாமல், பௌலியின் விலக்கு கொள்கையின் காரணமாகவே நடைபெறுகிறது.”

 
 
வுல்ஃப்காங் பாலி

பட மூலாதாரம்,CERN

படக்குறிப்பு,

"ராயல் ஸ்வீடிஷ் அகாடமி ஆஃப் சயின்ஸ் அவருக்கு 1945இல் இயற்பியலுக்கான நோபல் பரிசை வழங்கியது" என்று தந்தி மூலம் அறிவித்தது. அதைப் பெற அவரால் செல்ல முடியவில்லை. ஆனால் அவர்கள் அதை பிரின்ஸ்டனில் கொண்டாடினர்.

அக்கால அணு இயற்பியலின் சோதனை மற்றும் கோட்பாட்டு அறிவை ஆழமாகப் பகுப்பாய்வு செய்வதன் மூலமும், அவரது அற்புதமான கணிதத் திறன்களைப் பயன்படுத்துவதன் மூலமும் பௌலி தனது அனைத்து கண்டுபிடிப்புகளையும் உருவாக்கினார். அது அவரை மற்றவர்களின் வேலையைக் கடுமையாக விமர்சிக்கவும் செய்தது.

இயற்பியல் சமூகத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட அல்லது நிராகரிக்கப்படுவதற்கு புதிய யோசனைகள் பற்றிய அவரது கருத்து மிகவும் முக்கியமானது. அவர்கள் அவரை "இயற்பியலின் மனசாட்சி" என்று கருதினர்.

பௌலியின் தலையாட்டுதலைவிட வேறு எந்த வகையான ஒப்புதலும் இயற்பியலாளர்களுக்கு மதிப்புமிக்கதாக இருக்காது," என்று பெல்ஜிய இயற்பியலாளர் லியோன் ரோசன்ஃபெல்ட் குறிப்பிட்டார். அந்த அளவுக்கு அவரை முக்கியமானவராகக் கருதினார்கள்.

அந்த பாத்திரத்திற்காக, அவர் தொடர்ந்து மேற்கோள் காட்டப்படும் சொற்றொடர்களின் பாரம்பரியத்தை விட்டுச் சென்றார். அவற்றில் மிகவும் பிரபலமானது அழிவுகரமானது.

இயற்பியலாளர் ருடால்ப் பீயர்ல்ஸ் பௌலியின் வாழ்க்கை வரலாற்று நினைவுக் குறிப்பில் எழுதியது போல், நண்பர் ஓர் இளம் இயற்பியலாளரின் கட்டுரையை அவருக்குக் காட்டினார்; அவர் மிகவும் மதிப்புமிக்கவர் அல்ல, ஆனால் அவர் பௌலியின் கருத்தை அறிய விரும்பினார்.

"இது போலியானதுகூட இல்லை' என்று பௌலி வருத்தத்துடன் கருத்து தெரிவித்தார்.”

"அது சரியல்ல என்பது மட்டுமல்ல, பொய்யும்கூட இல்லை" என்பதே அவரது பதிலுக்கான பொருள் என்று மற்ற ஆதாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால் உண்மை என்னவென்றால், தத்துவஞானி கார்ல் பாப்பரின் பொய்யான கொள்கைக்கு அவை தகுதி பெறாத அளவுக்கு ஊகமான வாதங்களை நிராகரிக்க இந்த சொற்றொடர் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

ஒரு குறைபாடுள்ள கருதுகோளைச் சோதிப்பதன் மூலம், ஒருவர் செயல்பாட்டில் ஏதாவது கற்றுக்கொள்கிறார். அது அறிவியல் கண்டுபிடிப்புக்குத் தூண்டுகிறது. ஆனால் அது பொய்யாகக்கூட இல்லாவிட்டால், அவர் நேரத்தை வீணடிக்கிறார் என பாப்பர் கூறினார்.

இவ்வாறு, அவரது பல விமர்சனங்கள் நினைவில் நிலைத்திருந்தன. ஏனெனில், கசப்பானவையாக இருந்தாலும், அவை வேடிக்கையாகவும் பொதுவாக வரவேற்கத்தக்கதாகவும் இருந்தன.

இருப்பினும், சிலர் புண்படுத்தப்பட்டனர் என்பதுடன் 1933 முதல் 1944 வரை அவர் சிறந்த விஞ்ஞானிகளால் 20 முறை பரிந்துரைக்கப்பட்ட போதிலும், நோபல் கமிட்டி அவருக்குப் பரிசு வழங்குவதற்கு இவ்வளவு காலம் எடுத்ததற்கு இது காரணமா என்று சந்தேகிப்பவர்களும் உள்ளனர்.

ஆனால் 1945இல், அதாவது அவர் தனது பிரத்தியேகக் கொள்கையை வகுத்து 20 ஆண்டுகளுக்குப் பிறகு, அவருக்கு ஏன் இந்த விருது வழங்கப்பட்டது என்பது யாருக்கும் தெரியாது.

அந்த ஆண்டு, அவரைப் பரிந்துரைத்த மூவரில் ஒருவரான ஐன்ஸ்டீன், இரண்டாம் உலகப் போரின்போது ஐரோப்பாவை விட்டு வெளியேறியதில் இருந்து பௌலி பணியாற்றிய பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற புதிய நோபல் பரிசு வென்றவரைக் கொண்டாடிய விழாவில் பங்கேற்றார்.

செர்ன் (CERN) இணையதளம் விவரித்தபடி, பல புகழ்பெற்ற விருந்தினர்கள் பேசிய பிறகு, ஐன்ஸ்டீன் எழுந்து நின்று, பௌலியை அவரது அறிவுசார் வாரிசாகக் குறிப்பிட்டு ஒரு திடீர் உரையை நிகழ்த்தினார்.

இதைக் கேட்டபோது பௌலி மிகவும் உணர்ச்சிவசப்பட்டார். ஐன்ஸ்டீன் இறந்த பத்து ஆண்டுகளுக்குப் பிறகு மேக்ஸ் பர்னுக்கு எழுதிய கடிதத்தில் அவர் அதை நினைவு கூர்ந்தார். மேலும் அந்தப் பேச்சு தன்னிச்சையாக இருந்ததால், அதைப் பற்றிய பதிவு எதுவும் இல்லை என்றும் வருந்தினார்.

அவரது அறிவுசார் வாரிசாகத் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள அவருக்குப் போதுமான நேரம் இல்லை. பௌலி தனது தொழில் வாழ்க்கையின் பெரும்பகுதியைக் கழித்த சூரிச்சில் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு காலமானார்.

https://www.bbc.com/tamil/articles/czvq8r5r882o

போர் நிறுத்தப் பேச்சு: ஹமாஸ் தலைவர் கெய்ரோவுக்கு விரைவு

3 months 2 weeks ago
போர் நிறுத்தப் பேச்சு: ஹமாஸ் தலைவர் கெய்ரோவுக்கு விரைவு
February 2, 2024
wld01.jpg

காசாவில் உயிரிழப்பு 27,000ஐ தாண்டியது

முற்றுகையில் உள்ள காசா மீது இஸ்ரேலின் தாக்குதல்கள் தொடரும் நிலையில் காசாவில் முன்மொழியப்பட்ட போர் நிறுத்தம் தொடர்பில் பேசுவதற்காக ஹமாஸ் தலைவர் நேற்று (01) எகிப்து தலைநகர் கெய்ரோவை சென்றடைந்தார்.

இஸ்ரேலுடன் போரிட்டு வரும் ஹமாஸ் அமைப்பு முன்மொழியப்பட்டிருக்கும் ஆறு வார போர் நிறுத்த உடன்படிக்கையை மீளாய்வு செய்து வருகிறது. பாரிஸில் அண்மையில் இடம்பெற்ற சந்திப்பிலேயே இந்தப் போர் நிறுத்த முன்மொழிவு தயாரிக்கப்பட்டது.

எனினும் நான்கு மாதங்களை நெருங்கும் இந்தப் போரில் காசா மீதான இஸ்ரேலின் தாக்குதல் எந்தத் தணிவும் இன்றி நீடிக்கிறது. தெற்கு நகரான கான் யூனிஸை மையப்படுத்தி அங்கு போர் உக்கிரமடைந்திருக்கும் நிலையில், உயிரிழப்பு எண்ணிக்கை 27,000ஐ தாண்டியுள்ளது.

இதன்படி காசாவில் குறைந்தது 27,019 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டிருப்பதோடு மேலும் 66,139 பேர் காயமடைந்துள்ளனர் என்று பலஸ்தீன சுகாதார அமைப்பு நேற்று வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தெற்கின் பிரதான நகரான கான் யூனிஸில் கடந்த புதன் இரவிலும் இஸ்ரேலின் வான் தாக்குதல்கள் உக்கிரமாக நீடித்ததாக அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன. குறிப்பாக இரு மருத்துவமனைகளைச் சூழவே தாக்குதல்கள் இடம்பெற்றுவதாக உதவியாளர்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இதில் கடந்த புதன்கிழமை தொடக்கம் இடம்பெற்ற தாக்குதல்களில் காசாவில் மேலும் 119 பேர் கொல்லப்பட்டதாக அந்தப் பகுதிக்கான சுகாதார அமைச்சு கூறியது.

இஸ்ரேலின் புதிய தாக்குதல்கள் குறிப்பாக காசா உள்துறை மற்றும் ஊடக அமைச்சு தலைமையகங்கள் மீது நடத்தப்பட்ட வான் தாக்குதல்களால் காசா நகர வானில் கரும்புகை எழுந்ததாக அங்குள்ள குடியிருப்பாளர்கள் விபரித்துள்ளனர்.

மத்திய காசாவில் அல் நுஸைரத் அகதி முகாம் கடும் தாக்குதலுக்கு இலக்கானதோடு தெற்கு காசாவில் மிகப் பெரியதும் தொடர்ந்து இயங்கி வருவதுமான கான் யூனிஸ் நகரில் இருக்கும் நாசர் மருத்துவமனையைச் சூழ டாங்கிகள் குண்டு மழை பொழிந்ததாக பார்த்தவர்களை மேற்கோள் காட்டி ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

கான் யூனிஸ் நகரில் உள்ள அகதி முகாம் ஒன்றில் இருந்து இஸ்ரேலிய வாகனங்கள் வெளியேறியதை அடுத்து அந்தப் பகுதியில் இருந்து 14 சடலங்களை பொதுமக்கள் மற்றும் அம்பூலன்ஸ் பணியாளர்கள் மீட்டுள்ளனர். இவ்வாறு மீட்கப்பட்ட உடல்கள் நாசர் மருத்துவமனைக்கு எடுத்துவரப்பட்டு அடக்கம் செய்வதற்காக தயார்படுத்தப்பட்டிருப்பதாக அல் ஜசீரா தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.

“இங்கே இப்போது படுகொலை ஒன்று இடம்பெற்று வருகிறது” என்று பலஸ்தீன பகுதிக்கான எல்லைகளற்ற மருத்துவர்கள் அமைப்பின் தலைவர் லியொ கேன்ஸ் குறிப்பிட்டார்.

காசாவில் உள்ள மருத்துவமனைகளின் கீழ் சுரங்கப்பாதைகளை செயற்படுத்தி வருவதாகவும் மருத்துவ வசதிகளை கட்டளை மையங்களாக பயன்படுத்தி வருவதாகவும் ஹமாஸ் மீது இஸ்ரேல் குற்றம்சாட்டியபோதும் அதற்கான ஆதாரங்களை முன்வைக்க அதனால் இதுவரையில் முடியாமல் போயுள்ளது. ஹமாஸ் அமைப்பு இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்து வருகிறது.

மனிதாபிமான உதவிகள் தடைப்பட்டு வருவதன் காரணமாக மக்களிடையே பட்டினிச் சாவு ஏற்படும் சாத்தியம் பற்றி உலக சுகாதார அமைப்பின் அவசரப் பிரிவுக்கான பணிப்பாளர் மைக்கல் ரியான் புதனன்று (31) எச்சரித்திருந்தார்.

“காசாவின் பொதுமக்கள் இந்தப் போரின் பாங்குதாரர்கள் அல்ல என்பதோடு அவர்களும் அவர்களின் சுகாதார வசதிகளும் பாதுகாக்கப்பட வேண்டும்” என்று அவர் கூறினார்.

மூன்று கட்டத் திட்டம்

கட்டார் மற்றும் எகிப்து தலைமையிலான மத்தியஸ்த முயற்சிகள் தீவிரப்படுத்தப்பட்டிருப்பதோடு, ஹமாஸ் தலைவர் இஸ்மைல் ஹனியே நேற்று கெய்ரோவை சென்றடைந்தார். கடந்த வார இறுதியில் அமெரிக்க உளவுப் பிரிவான சி.ஐ.சி. தலைவர் வில்லியம் பர்ன்ஸ் பாரிஸ் நகரில் நடத்திய பேச்சுவார்த்தை அடிப்படையில் தயாரிக்கப்பட்டிருக்கும் போர் நிறுத்த முன்மொழிவு குறித்தே அவர் கெய்ரோவில் பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளார்.

காசா பகுதியில் மேலும் உதவி விநியோகங்களுடன் ஆரம்பத்தில் ஆறு வார போர் நிறுத்தத்துடன் ஆரம்பிக்கும் மூன்று கட்டத் திட்டம் ஒன்று பற்றி ஆராயப்பட்டு வருவதாக ஹமாஸ் வட்டாரத்தை மேற்கோள்காட்டி ஏ.எப்.பி. செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதன் முதல் கட்டத்தில் காசா போராளிகள் தடுத்து வைத்திருக்கும் “பெண்கள், சிறுவர்கள் மற்றும் நோயுற்ற ஆண்கள் என 60க்கு மேற்பட்ட” பணயக்கைதிகள் மாத்திரம் விடுவிக்கப்படவுள்ளனர். இதற்கு பகரமாக இஸ்ரேலிய சிறையில் இருக்கும் பலஸ்தீன கைதிகள் விடுவிக்கப்படவிருப்பதாக மேற்படி வட்டாரம் குறிப்பிட்டுள்ளது.

மேலும் பணயக்கைதிகள் பரிமாற்றத்துடன் தொடர்புபட்ட சாத்தியமான அடுத்த கட்டங்களில் இஸ்ரேலிய படைகள் வாபஸ் பெறுவது தொடர்பிலும் பேச்சுவார்த்தைகள் இடம்பெறுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் இஸ்ரேலிய தாக்குதலால் அழிக்கப்பட்டிருக்கும் காசா பகுதியை கட்டியெழுப்புவதும் இந்தப் பேச்சுவார்த்தையில் இடம்பெற்றுள்ளது.

சுமார் 1,140 இஸ்ரேலியர் கொல்லப்பட்ட கடந்த ஒக்டோபர் 7 ஆம் திகதி பலஸ்தீன போராளிகள் நடத்திய தாக்குதலை அடுத்தே இந்தப் போர் வெடித்தது. இதில் போராளிகளால் கடத்தப்பட்ட சுமார் 250 பணயக்கைதிகளில் தொடர்ந்து 132 பேர் காசாவில் பிடிக்கப்பட்டிருப்பதாக நம்பப்படுகிறது. இதில் குறைந்தது 29 பேர் கொல்லப்பட்டிருப்பதாக நம்பப்படுகிறது.

இஸ்ரேல் கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக நடத்திவரும் தாக்குதல்களால் காசா பகுதியில் பாதிக்கும் அதிகமான கட்டுமானங்கள் தரைமட்டமாக்கப்பட்டு அல்லது சேதமாக்கப்பட்டு மனிதர்கள் வாழ முடியாத பகுதியாக மாறி உள்ளது.

உதவி விநியோகம்

எனினும் காசாவில் இருந்து துருப்புகளை வாபஸ் பெறுவதை நிராகரித்திருக்கும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, ஹமாஸ் அமைப்பை ஒழிப்பதாக மீண்டும் ஒருமுறை சூளுரைத்துள்ளார். அதேபோன்று உடன்படிக்கையின் ஓர் அங்கமாக ஆயிரக்கணக்கான பலஸ்தீன கைதிகளை விடுவிப்பதற்கும் நெதன்யாகு எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.

காசாவில் பிடிக்கப்பட்டிருக்கும் பணயக்கைதிகளின் உறவினர்கள் தொடர்ந்து ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருவதால் நெதன்யாகு அரசு கடும் அழுத்தத்தை எதிர்கொண்டு வருகிறது. முன்கூட்டியே தேர்தல் ஒன்றை நடத்துவதற்கான குரலும் இஸ்ரேலில் வலுத்து வருகிறது.

பலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா நிறுவனத்தின் ஊழியர்கள் சிலர் ஒக்டோபர் தாக்குதலுடன் தொடர்புபட்டிருப்பதாக இஸ்ரேல் குற்றம்சாட்டியதை அடுத்து பல நாடுகளும் உதவிகளை நிறுத்தியது காசாவில் மனிதாபிமான நெடிக்கடியை மேலும் அதிகரிக்கச் செய்துள்ளது.

இஸ்ரேலின் நெருங்கிய கூட்டாளியான அமெரிக்க உட்பட முக்கிய நன்கொடை நாடுகள் ஐ.நா நிறுவனத்திற்கான நிதியை நிறுத்தியுள்ளன.

இந்நிலையில் ஐக்கிய நாடுகள் குழுக் கூட்டத்தில் பேசிய அதன் செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டரஸ், நன்கொடை நாடுகளை சந்தித்து அவைகளின் கவலைகளை கேட்டறிந்ததாகவும் நாம் எடுத்த நடவடிக்கைகள் பற்றி கோடிட்டுக் காட்டியதாகவும் கூறினார்.

இந்த நிதி நெருக்கடிக்குக் காரணமான இஸ்ரேலின் குற்றச்சாட்டு குறித்து சுயாதீன விசாரணைக்கு ஆதரவு வழங்குவதாக பலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா நிறுவனத்தின் பேச்சாளர் டமரா அல்ரிபாய் ஏ.எப்.பி. இற்கு குறிப்பிட்டுள்ளார்.

ஜெரூசலத்தில் ஐ.நா தூதுவர்களை சந்தித்த நெதன்யாகு, பலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா நிறுவனத்தில் ஹமாஸ் முழுமையாக ஊடுருவி விட்டதாகவும் மற்ற நிறுவனங்கள் மூலம் அது மாற்றப்பட வேண்டும் என்றும் கூறினார்.

இந்தப் போர் பரந்த அளவில் தாக்கத்தை செலுத்தி வரும் சூழலில், மத்திய கிழக்கில் இயங்கும் ஈரான் ஆதரவு போராட்டக் குழுக்கள் இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவை இலக்கு வைத்து தாக்குதல்களை நடத்தி வருகின்றன.

மறுபுறம் காசாவில் போர் வெடித்தது தொடக்கம் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையிலும் இஸ்ரேலிய படையினரின் சுற்றிவளைப்புகள் மற்றும் வான் தாக்குதல்கள் அதிகரித்துள்ளன.

 

https://www.thinakaran.lk/2024/02/02/world/39920/போர்-நிறுத்தப்-பேச்சு-ஹம/

ஈரான் இலக்குகளை தாக்கும் புதிய திட்டத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்

3 months 2 weeks ago
hhs-1.jpg?resize=750,375&ssl=1 ஈரான் இலக்குகளை தாக்கும் புதிய திட்டத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்.

சிரியா மற்றும் ஈராக்கில் உள்ள ஈரான் இலக்குகளை தாக்கும் புதிய திட்டத்திற்கு அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

சிரிய எல்லைக்கு அருகிலுள்ள ஜோர்டானில் ட்ரோன் தாக்குதலில் மூன்று அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு இந்த தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், டவர் 22 என்று அழைக்கப்படும் இராணுவ தளத்தில் 41 அமெரிக்க வீரர்கள் காயமடைந்த தாக்குதலை ஈரான்; மறுத்துள்ளது.

தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட ட்ரோன் ஈரானால் தயாரிக்கப்பட்டது என்றும், உக்ரைனை ஆக்கிரமிக்க ஈரான் ரஷ்யாவிற்கு அனுப்பிய ட்ரோன்களைப் போன்றது என்றும் அமெரிக்க புலனாய்வு அமைப்புகள் நம்புவதாக அமெரிக்க அதிகாரிகள் கூறியுள்ளனர்.

https://athavannews.com/2024/1368079

அமெரிக்க செனட் விசாரணையில் பெற்றோர்களிடம் மன்னிப்பு கேட்ட மார்க் ஜூக்கர்பெர்க்

3 months 2 weeks ago
அமெரிக்கா: மார்க் ஜூக்கர்பெர்க் பெற்றோர்களிடம் மன்னிப்பு கேட்டது ஏன்? என்ன நடந்தது?

பட மூலாதாரம்,GETTY IMAGES

5 மணி நேரங்களுக்கு முன்னர்

அமெரிக்க செனட் சபையில் நடத்தப்பட்ட தீவிர விசாரணையின்போது, சமூக ஊடகங்களால் தங்கள் குழந்தைகள் பாதிக்கப்படுவதாகப் புகாரளித்த குடும்பத்தினரிடம், மெட்டா நிறுவன தலைவர் மார்க் ஜூக்கர்பெர்க் மன்னிப்பு கோரினார்.

இன்ஸ்டாகிராம் மற்றும் ஃபேஸ்புக்கை நிர்வகிக்கும் ஜூக்கர்பெர்க், புகாரளித்த குடும்பத்தினரை நோக்கி நீங்கள் பட்ட துயரத்தை வேறு யாரும் படக்கூடாது என்றார்.

மார்க் ஜூக்கர்பெர்க் மற்றும் டிக்டாக், ஸ்னாப், எக்ஸ், டிஸ்கார்ட் நிறுவனங்களின் தலைவர்களும் செனட் சபையின் இரு கட்சிகளைச் சேர்ந்த செனட்டர்களால் கிட்டத்தட்ட நான்கு மணிநேரம் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர்.

குழந்தைகள் பாதுகாப்பு குறித்து ஆன்லைன் தளங்களில் என்ன நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன என்பதை அறிய அமெரிக்க சட்டமியற்றுபவர்கள் விரும்பினர்.

சமூக ஊடகங்களில் பதிவிடப்படும் விஷயங்களுக்கு அந்தந்த நிறுவனங்களே பொறுப்பேற்கும் விதமாக ஒரு சட்டத்தை இயற்ற தற்போது அமெரிக்க காங்கிரஸ் பரிசீலித்து வருகிறது.

கடந்த புதன்கிழமை அன்று தொழில்நுட்ப நிறுவன தலைவர்களைக் கேள்வி கேட்பதற்கான ஓர் அரிய வாய்ப்பு அமெரிக்க செனட்டர்களுக்கு கிடைத்தது.

 
அமெரிக்க செனட் சபை விசாரணை
அமெரிக்க செனட் சபை விசாரணை, மெட்டா நிறுவன தலைவர் மார்க் ஜூக்கர்பெர்க்

மார்க் ஜூக்கர்பெர்க் மற்றும் டிக்டாக் தலைமை நிர்வாக அதிகாரி ஷௌ ஜி செவ் ஆகியோர் தானாக முன்வந்து சாட்சியமளிக்க ஒப்புக்கொண்டனர். ஆனால் ஸ்னாப், எக்ஸ் (முன்னர் ட்விட்டர்), மெசேஜிங் தளமான டிஸ்கார்டின் தலைவர்கள் முதலில் செனட் சபை விசாரணைக்கு வர மறுத்தனர். பின்னர் கண்டிப்பாக விசாரணைக்கு வர வேண்டுமென அரசு ஆணைகள் அவர்களுக்கு அனுப்பப்பட்டன.

விசாரணையின்போது ஐந்து தொழில்நுட்ப தலைவர்களின் இருக்கைகளுக்குப் பின்னால், சமூக ஊடக பதிவுகளின் விளைவாக தங்கள் குழந்தைகள் தங்களைத் தாங்களே காயப்படுத்திக் கொண்டதாக அல்லது தற்கொலை செய்துகொண்டதாகப் புகாரளித்த குடும்பங்கள் அமர்ந்திருந்தனர்.

நிறுவன தலைவர்கள் உள்ளே நுழைந்தபோது அவர்களிடம் இருந்த எரிச்சல், சட்டமியற்றுபவர்கள் நிறுவன தலைவர்களிடம் கடினமான கேள்விகளைக் கேட்டபோது கைதட்டியது என அந்தக் குடும்பங்கள் தங்கள் உணர்வுகளை முழுமையாக வெளிப்படுத்தினர்.

பெரும்பாலும் விசாரணையின்போது ஆன்லைன் பாலியல் சுரண்டலில் இருந்து குழந்தைகளைப் பாதுகாப்பது குறித்து அதிக கேள்விகள் கேட்கப்பட்டன. ஐந்து சக்தி வாய்ந்த நிறுவனங்களின் நிர்வாகிகள் எடுத்துக்கொண்ட உறுதிமொழியை சாதகமாகப் பயன்படுத்தி செனட்டர்கள் பல்வேறு கடினமான கேள்விகளையும் கேட்டனர்.

சீன நிறுவனமான பைட் டான்ஸுக்கு சொந்தமானது டிக்டாக். அதன் தலைவர் ஷௌ ஜி செவ்விடம் அமெரிக்க பயனர்கள் குறித்த தரவுகள் சீன அரசாங்கத்துடன் பகிர்ந்து கொள்ளப்படுகிறதா என்று கேட்கப்பட்டது, அதை அவர் மறுத்தார்.

அமெரிக்க செனட் சபை விசாரணை, மெட்டா நிறுவன தலைவர் மார்க் ஜூக்கர்பெர்க்
படக்குறிப்பு,

உறுதிமொழி எடுத்துக்கொள்ளும் தொழில்நுட்ப நிறுவன தலைவர்கள்

சிங்கப்பூரை சேர்ந்த செவ்விடம், "எப்போதாவது நீங்கள் சீன கம்யூனிஸ்ட் கட்சியில் உறுப்பினராக இருந்ததுண்டா?" என அமெரிக்க செனட்டர் டாம் காட்டன் கேட்டார். அதற்கு செவ் "இல்லை செனட்டர், என் நாடு சிங்கப்பூர்" எனக் கூறினார்.

"நீங்கள் எப்போதாவது சீன கம்யூனிஸ்ட் கட்சியுடன் ஏதேனும் தொடர்பில் இருந்ததுண்டா?" என காட்டன் மீண்டும் கேட்டார். அதற்கு செவ், "இல்லை செனட்டர். மீண்டும் சொல்கிறேன், என் நாடு சிங்கப்பூர்" எனக் கூறினார்.

மூன்று இளம் குழந்தைகளின் தந்தையாக, இந்த விசாரணையில் விவாதிக்கப்படும் பிரச்னைகள் "மோசமானவை மற்றும் ஒவ்வொரு பெற்றோரின் கொடுங்கனவாகவும் அவை உள்ளன" என்று தனக்குத் தெரியும் என்றும் செவ் கூறினார்.

சிங்கப்பூரில் உள்ள 13 வயதுக்கு உட்பட்டவர்கள் டிக்டாக் கணக்குகளை உருவாக்குவதைத் தடுக்கும் விதிகளின் காரணமாக, தனது சொந்த பிள்ளைகள் டிக்டாக் பயன்படுத்துவதில்லை என்பதை அவர் ஒப்புக்கொண்டார். காங்கிரஸில் எட்டாவது முறையாக சாட்சியமளிக்கும், மெட்டாவின் தலைமை நிர்வாகி மார்க ஜூக்கர்பெர்க் தான் அதிக கேள்விகளுக்கு உட்படுத்தப்பட்டார்.

"எச்சரிக்கை: குழந்தை பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பான உள்ளடக்கங்கள் இதில் இருக்கலாம். ஆனால் பயனர்கள் விரும்பினால் இதைப் பார்க்கலாம்," என்ற ஒரு இன்ஸ்டாகிராம் அறிவிப்பை ஜூக்கர்பெர்கிடம் காட்டி, குடியரசுக் கட்சியின் செனட்டர் டெட் குரூஸ், "மிஸ்டர் ஜூக்கர்பெர்க், நீங்கள் என்ன நினைத்து இதைச் செய்தீர்கள்?" என்றார்.

"இத்தகைய அறிவிப்புக்குப் பின்னால் இருக்கும் அடிப்படை அறிவியலானது, அதைத் தடுப்பதற்குப் பதிலாக, அதை நோக்கிப் பயனர்களை வழிநடத்துவதற்குப் பெரும்பாலும் உதவியாக இருக்கிறது" என்றார். மார்க் ஜூக்கர்பெர்க், "தனிப்பட்ட முறையில் இதை பரிசீலிப்பதாக" உறுதியளித்தார்.

குடியரசுக் கட்சியின் செனட்டர் ஜோஷ் ஹவ்லி உடனான மற்றொரு விவாதத்தின்போது, பின்னால் அமர்ந்திருக்கும் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்க அழைக்கப்பட்டார் மார்க் ஜூக்கர்பெர்க்.

அவர் எழுந்து, பார்வையாளர்களை நோக்கி, "நீங்கள் கடந்து வந்த அனைத்திற்கும் நான் வருந்துகிறேன், இது பயங்கரமானது. உங்கள் குடும்பங்கள் அனுபவித்த துயரங்களை யாரும் அனுபவிக்கக் கூடாது," என்றார்.

 
ஆன்லைன் பாதுகாப்பில் முன்னேற்றம் இல்லாததால் செனட்டர்கள் விரக்தி
அமெரிக்க செனட் சபை விசாரணை, மெட்டா நிறுவன தலைவர் மார்க் ஜூக்கர்பெர்க்
படக்குறிப்பு,

டிக்டாக் தலைமை நிர்வாக அதிகாரி ஷௌ ஜி செவ்

தற்போது அமெரிக்க காங்கிரஸில் உள்ள ஆன்லைன் பாதுகாப்பு சட்டத்திற்கு நிறுவனங்களின் அணுகுமுறை என்ன என்பதே இந்த விசாரணையின் முக்கிய அம்சமாக இருந்தது. டிஸ்கார்டின் தலைவர் ஜேசன் சிட்ரான் மற்றும் குடியரசுக் கட்சியின் செனட்டர் லிண்ட்சே கிரஹாம் ஆகியோருக்கு இடையிலான பதற்றமான விவாதத்தில் இது வெளிப்பட்டது.

கிரஹாம், ஆன்லைன் பாதுகாப்பு தொடர்பான காங்கிரஸின் பல மசோதாக்களை பட்டியலிட்டு, சிட்ரான் அவற்றை ஆதரிக்கிறாரா இல்லையா என்று கேட்டார். இந்தக் கேள்வி உட்பட வேறு சில கேள்விகளுக்கும் பதிலளிப்பதில் டிஸ்கார்ட் தலைவர் சிட்ரானுக்கு தயக்கம் இருந்தது.

அதே நேரத்தில் அவர் பதிலளிக்கப் போதுமான வாய்ப்பையும் கிரஹாம் கொடுக்கவில்லை. இறுதியாக "நீங்கள் இங்கே விசாரணையில் இருக்கிறீர்கள். பிரச்னையைத் தீர்க்க இவர்களுக்காக (நிறுவன தலைவர்கள்) நாம் காத்திருந்தால், சாகும் வரை காத்திருக்க வேண்டியது தான்," என்று கிரஹாம் கூறினார்.

விசாரணைக்கு முன்னதாக, மெட்டா புதிய பாதுகாப்பு நடவடிக்கைகளை அறிவித்தது. சிறார்களுக்கு இன்ஸ்டாகிராம் மற்றும் மெசஞ்சரில் அந்நியர்கள் யாரும் செய்திகளை அனுப்ப முடியாது என்ற புதிய விதியும் அதில் இருக்கிறது.

சமூக ஊடகத் துறை ஆய்வாளர் மாட் நவர்ரா பிபிசியிடம், "பல அமெரிக்க அரசியல் பிரமாண்டங்கள்" மற்றும் ஜூக்கர்பெர்க் மன்னிப்பு கேட்டதன் மூலம் கிடைத்த சரியான வாய்ப்பு போன்ற பல நிகழ்வுகள் இந்த விசாரணையில் நடந்ததாகக் கூறினார்.

சமூக தளங்களை ஒழுங்குபடுத்துவதற்கு இருதரப்பு சட்ட ஒத்துழைப்பின் அவசியத்தை செனட்டர்கள் ஒப்புக்கொண்ட போதிலும், அடுத்து என்ன நடக்கும் என்ற கேள்விக்கான பதில் தெளிவாக இல்லை என்றும் அவர் கூறினார்.

"இதுபோன்ற விசாரணைகளை மீண்டும் மீண்டும் பார்த்துவிட்டோம். அவை பெரும்பாலும், குறிப்பிடத்தக்க அல்லது கணிசமான ஒழுங்குமுறைகளை இதுவரை உருவாக்கவில்லை. நாம் 2024இல் இருக்கிறோம். சமூக ஊடக நிறுவனங்களைப் பொறுத்தவரை, விசாரணைகளின்போது சுட்டிக்காட்டப்பட்டபடி, அமெரிக்காவில் நடைமுறையில் எந்தக் கட்டுப்பாடுகளும் இல்லை," என்று அவர் கூறினார்.

நிறுவன தலைவர்கள் தங்கள் தளங்களில் உள்ளடக்கத்தைத் தணிக்கை செய்வதற்கு எத்தனை பேரை வேலைக்கு அமர்த்தினார்கள் என்பதையும் வெளிப்படுத்தினர்.

 
'குழந்தைகள் ஆன்லைன் பாதுகாப்புச் சட்டத்தை' நிறைவேற்ற வலியுறுத்தல்
அமெரிக்க செனட் சபை விசாரணை, மெட்டா நிறுவன தலைவர் மார்க் ஜூக்கர்பெர்க்

இணையத்தில் மிகப்பெரிய அளவு பயனர்களைக் கொண்டுள்ள மெட்டா மற்றும் டிக்டாக், தங்களிடம் தலா 40,000 உள்ளடக்க மதிப்பீட்டாளர்கள் இருப்பதாகவும், ஸ்னாப் 2,300 என்றும், எக்ஸ் 2,000 என்றும், டிஸ்கார்ட் சிறிய நிறுவனம் என்பதால் "நூற்றுக்கணக்கில்" மட்டுமே மதிப்பீட்டாளர்கள் இருக்கிறார்கள் என்றும் கூறியது.

டிஸ்கார்ட் என்பது ஒரு மெசேஜிங் தளம். இது எவ்வாறு அதன் தளம் முழுவதும் "சிறார் துஷ்பிரயோகத்தை" கண்டறிந்து தடுக்கிறது என்பது குறித்து முன்னர் கேள்வி எழுப்பப்பட்டது. விசாரணைக்குப் பிறகு, அறையில் இருந்த சில பெற்றோர்கள் வெளியே பேரணி நடத்தினர். சமூக ஊடக நிறுவனங்களைப் பொறுப்பேற்கச் செய்யும் சட்டத்தை அவசரமாக நிறைவேற்றுமாறு பலர் சட்டமியற்றுபவர்களுக்கு அழைப்பு விடுத்தனர்.

"நான் நினைத்ததைப் போலவே, இன்று நாம் பேசும் இந்தத் தீங்குகள் தங்கள் குடும்பங்களைப் பாதிக்காது என்று பல பெற்றோர்கள் தொடர்ந்து நினைக்கிறார்கள்," என்று ஜோன் போகார்ட் கூறினார். மே 2019இல் ஒரு டிக்டாக் டிரெண்டில் பங்கேற்றதன் மூலமாகத் தனது மகன் மேசன் இறந்தார் என அவர் கூறினார்.

"இந்தத் தீங்குகள் எங்கள் குழந்தைகளைப் பாதிக்கிறது, எங்களிடம் சாட்சியங்கள் உள்ளன. 'குழந்தைகள் ஆன்லைன் பாதுகாப்புச் சட்டத்தை' சட்டமன்ற உறுப்பினர்கள் நிறைவேற்றுவதற்கான நேரம் இது.

நவம்பர் 2023இல் காங்கிரஸ் சபையில் சாட்சியமளித்த முன்னாள் மூத்த ஊழியர் ஆர்டுரோ பெஜரும் அங்கு இருந்தார். அவர் பிபிசியிடம், "பதின்ம வயதினருக்கான பாதுகாப்பான சூழலை வழங்கும் பொறுப்பில் இருந்து மெட்டா நிறுவனம் தப்பிக்க முயல்கிறது. பதின்பருவ பிள்ளைகள் தாங்கள் சந்தித்த கொடுமைகளைச் சொல்ல அந்தத் தளத்தில் வசதி இல்லை. அது இல்லாமல் பதின்ம வயதினருக்கு மெட்டா எப்படி பாதுகாப்பாக இருக்க முடியும்?" எனக் கூறினார்.

இன்றைய விசாரணையின்போது, ஆன்லைனில் பதின்ம வயதினருக்கான பாதுகாப்பான சூழலை ஆதரிக்க "30க்கும் மேற்பட்ட புதிய கருவிகளை" அறிமுகப்படுத்தியுள்ளதாக மெட்டா கூறியது.

https://www.bbc.com/tamil/articles/cek721xpxlno

அமைதிக்கான நோபல் பரிசுக்கு ட்ரம்பின் பெயர் பரிந்துரை!

3 months 2 weeks ago
2dc4afd0-d307-11ed-be2e-754a65c11505.jpg அமைதிக்கான நோபல் பரிசுக்கு ட்ரம்பின் பெயர் பரிந்துரை!

இந்த ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசுக்கு அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

குடியரசுக் கட்சியைச் சேர்ந்த ‘கிளாடியா டென்னி‘ என்பவரே  ட்ரம்பின் பெயரை பரிந்துரைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

ட்ரம்ப் ஜனாதிபதி பதவியில் இருந்தபோது, மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமைதியை நிலைநாட்ட அவரால் வடிவமைக்கப்பட்ட கொள்கைகளுக்காகவே பரிந்துரைசெய்யப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

https://athavannews.com/2024/1367898

Checked
Thu, 05/16/2024 - 17:57
உலக நடப்பு Latest Topics
Subscribe to உலக நடப்பு feed
texte-feed
svsv dfde fe