ஊர்ப்புதினம்

யாழ். ஒருங்கிணைப்பு கூட்டத்தில் கனரக வாகன போக்குவரத்து குறித்து முக்கிய அறிவிப்பு!

13 hours 20 minutes ago
news-123.jpg

யாழ் மாவட்டத்தில் பாடசாலை ஆரம்பமாகும் மற்றும் நிறைவடையும் நேரத்தில் பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில் ஈடுபடுவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.

யாழ் மாவட்ட செயலகத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இன்று (18) நடைபெற்ற ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திலேயே உடன் அமுலுக்கு வரும் வகையில் குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

முன்பதாக, பிரதான வீதிகளில் பாடசாலை நேரங்களில் குறித்த கனரக வாகனங்கள் வேகமாகவும் வீதி விதிமுறைகளை மீறி பயணிப்பதால் மாணவர்கள் விபத்துக்களை எதிர் நோக்குவதாக குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

இந்நிலையிலேயே குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை போட்டி போட்டு அரச மற்றும் தனியார் பேருந்துகளால் வீதியில் பயணிப்பதால் பொதுமக்கள் அசௌகரியங்களுக்கு முகம் கொடுப்பதாகவும் உரிய தரப்பினர் பொறுப்புணர்வுடன் செயற்பட வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் இவ்வாறு அசமந்தமாக செயற்படும் தரப்பினரை உரிய நடவடிக்கைகளுக்கு உட்படுத்த வேண்டும் எனவும் பொலிசாருக்கு அறிவுறுத்தியுள்ளமை சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

https://thinakkural.lk/article/299532

யாழ். நகரின் சுற்றுலாத்துறை தொடர்பில் முக்கிய கலந்துரையாடல்.!

13 hours 44 minutes ago

மாதவன்.

யாழ்ப்பாணம் மணிக்கூட்டு கோபுரம் தொடக்கம் பண்ணை வரையான பகுதியை தூய்மையான சுற்றுலா வலையமாக்கும்  கலந்துரையாடல் யாழிலுள் உள்ள தனியார் விடுதியில் இடம்பெற்றது.

குறித்த கலந்துரையாடலின் போது கோடீஸ்வரன் றுசாங்கன் கருத்து தெரிவிக்கையில்;
யாழ்ப்பாண மாநகரத்தின் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்கு ஏற்கனவே பல திட்டங்கள் வகுக்கப்பட்ட நிலையில் தற்போது அவை நடைமுறைப்படுத்தும் செயற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன.

அதன் முன்னேற்பாடாக உள்ளூர் சுற்றுலா ஊக்குவிப்பாளர்களுடன் இணைந்து மாநகரத்தின் சுற்றுலா துறையை அபிவிருத்தி செய்வதற்கும் வினை திறனாக செயல்படுத்துவதற்குமான கலந்துரையாடலாக பார்க்கிறேன்.

நாட்டின்  சுற்றுலா துறையை மேம்படுத்தும் தேவைப்பாடு அதிகரித்துள்ள நிலையில் யாழ். மாநகரமும் அத்தகைய செயல்பாட்டை முன்னெடுத்து வருகிறது. கடந்த 30ஆம் திகதி பூஜ்ஜிய கழிவு விழிப்புணர்வு ஊர்வலம் மற்றும்  யாழ். ஆரோக்கிய பவனி இடம்பெற்றது.

யாழ்ப்பாண மாநகரத்தில் அடையாளப்படுத்தப்பட்ட பொது நூலகம், விளையாட்டு மைதானம் மற்றும் அதன் சுற்றுவட்ட பகுதிகளை தூய்மையாக்கும் சுற்றுலா அபிவிருத்தியில் ஈடுபடுத்தி அதன் மூலம் மாநகரத்தின் இயங்கு நிலை செலவினங்களை பெறும் முயற்சி தயாரிக்கப்பட்டு வருகிறது .

ஆகவே யாழ்ப்பாண மாநகரத்தை தூய்மை ஆரோக்கியமான சுற்றுலா நகராக நகர் உருவாக்குவதற்கு யாழ். மாநகரசபை தனது முழுமையான பங்களிப்பை வழங்கும் என அவர் மேலும் தெரிவித்தார்.

குறித்த கலந்துரையாடலில் நகர அபிவிருத்தி அதிகார சபையின் பிரதிப் பணிப்பாளர் கவிதா சிகரம் நிறுவனத்தின் நிறைவேற்று பணிப்பாளர் கோடீஸ்வரன் றுசாங்கன்  மற்றும் தனியார் விருந்தினர் விடுதிகளின் உரிமையாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர். (ச)

யாழ். நகரின் சுற்றுலாத்துறை தொடர்பில் முக்கிய கலந்துரையாடல்.! (newuthayan.com)

14 வாரங்களில் 7 இலட்சம் சுற்றுலாப் பயணிகள் இலங்கை வருகை

13 hours 46 minutes ago

Published By: DIGITAL DESK 3

18 APR, 2024 | 11:56 AM
image
 

7 இலட்சம் சுற்றுலா பயணிகள் வருகை என்ற மைல்கல்லை இலங்கை 14  வாரங்களில் கடந்துள்ளது.

ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் ஏப்ரல் மாதம் 15 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் மொத்தம்  718,315 சுற்றுலா பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின்  தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன.

ஏப்ரல் மாதத்தின் முதல் 15 நாட்களில் 82,531 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர். இது நாட்டுக்கு வரும் சுற்றுலா பயணிகளின் வளர்ச்சி வேகம் சீராக இருப்பதை காட்டுகிறது.

ஒரு வருடத்திற்கு முன்பு நாளாந்த சுற்றுலா பயணிகளின் வருகை 3000 ஆக குறைந்து இருந்த நிலையில், தற்போது ஏப்ரல் மாத்தில் 5,502 ஆக அதிகரித்துள்ளது.

ஏப்ரல் மாதத்தில் 168,539 ற்கும் 182,724 ற்கும் இடையில் சுற்றுலாப் பயணிகள் வருகையை இலங்கை இலக்காகக் கொண்டுள்ளது.

இந்த இலக்கை அடைய நாளாந்தம் சராசரியாக 5,617 முதல் 6,090 வரை சுற்றுலாப் பயணிகள் வருகை தரவேண்டும்.

தற்போதைய வருகையின் வேகம் இலங்கை மாதத்திற்கான வருகை இலக்கின் கீழ் எல்லையை எட்டக்கூடும் என்பதைக் காட்டுகிறது.

சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்தால் கடந்த ஆண்டு  ஏப்ரல் மாதம்  பதிவு செய்யப்பட்ட 105,498 சுற்றுலா பயணிகளின் வருகையை நாடு விஞ்சும். 

2018 ஆம் ஆண்டில் சுற்றுலா பயணகளின் வருகையை நாடு  அடைய மேம்பட்ட வேகம் தேவை.

ஏப்ரல் மாத்தில் 17 சதவீதமான சுற்றுலா பயணிகள்  இந்தியாவிலிருந்து வருகை தந்துள்ளனர்.

11 சதவீதமான சுற்றுலா பயணிகள்  பிரித்தானியாவிலிருந்து வருகை தந்துள்ளனர்.

ஐக்கிய இராச்சியம் தனது பிரஜைகளுக்காக வெளியிட்டுள்ள இலங்கைக்கான பயண ஆலோசனையை (Travel Advisory) தளர்த்தியுள்ளமையினால் அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகளின் வருகை எதிர்பார்க்கப்படுகிறது.

10 சதவீதமான சுற்றுலா பயணிகள்  ரஷ்காவிலிருந்து  வருகை தந்துள்ளனர்.

ஜெர்மனி, பிரான்ஸ், அவுஸ்திரேலியா மற்றும் சீனா ஆகிய நாடுகள் தரவரிசையில் நான்காவது, ஐந்தாவது, ஆறாவது மற்றும் ஏழாவது இடங்களைப் பிடித்துள்ளன.

14 வாரங்களில் 7 இலட்சம் சுற்றுலாப் பயணிகள் இலங்கை வருகை | Virakesari.lk

இலங்கையில் அதிகளவில் மரணங்கள் ஏற்பட்டமைக்கு காரணம் மாரடைப்பு!

13 hours 49 minutes ago

Published By: DIGITAL DESK 7

18 APR, 2024 | 03:43 PM
image
 

கடந்த வருடங்களில் அதிகளவில் உயிரிழப்புக்கள் ஏற்பட்டமைக்கு பிரதான காரணம் மாரடைப்பு என சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

அத்தோடு, 2010 ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு வரையிலும் அதிகளவில் மரணங்கள் ஏற்பட்டமைக்கு பிரதான காரணமும் மாரடைப்பு என்று சுகாதார திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

அதுமட்டுமன்றி, மாரடைப்பு ஏற்படுவதற்கு பிரதான காரணங்களாக ஆரோக்கியமற்ற உணவு பழக்கங்கள், உடல்  உறுப்புகளின் செயற்பாடுகள் பற்றிய கவனமின்மை, புகையிலை , போதைப்பொருள் பாவனை மற்றும் மன அழுத்தம் உள்ளிட்ட காரணங்களினால் மாரடைப்பு ஏற்படுவதாகவும்  சுகாதாரத் துறை திணைக்களம் சுட்டிகாட்டியுள்ளது. 

 

இலங்கையில் அதிகளவில் மரணங்கள் ஏற்பட்டமைக்கு காரணம் மாரடைப்பு! | Virakesari.lk

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு திருகோணமலைக்கு கடத்தப்படுகிறதா ? சிறிதரன் ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கேள்வி

13 hours 52 minutes ago

Published By: DIGITAL DESK 7

18 APR, 2024 | 05:21 PM
image
 

( எம்.நியூட்டன்)

யாழ்ப்பாணத்தில் இருந்து நள்ளிரவு வேளை சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு திருகோணமலைக்கு கொண்டு செல்லப்படுவதாக மக்கள் என்னிடம் முறையிட்டுள்ளார்கள் இது தொடர்பில் மக்களால் முறையிடப்பட்ட இடங்களை பார்வையிட்டபோது அங்கு 20 முதல் 25 அடிவரை அகழப்பட்டு இருக்கிறது.

அவ்வாறு  அகழப்பட்ட சுண்ணகற்கள் பிறிதொரு இடத்திற்கு கொண்டு சென்று சேர்த்த பின்னர் நள்ளிரவு வேளை  திருகோணமலைக்கு கொண்டுசெல்லப்படுகிறது.

இந்த செயற்பாட்டிற்கு யார் அனுமதி வழங்கியது?   கற்களை அகழ்வதற்கு எந்த திணைக்களம் பொறுப்பு கூறுவது இராணுவம், பொலிஸாரின் அனுமதியுடன் இது நடைபொறுகிறதா? யார் தான்  பொறுப்பு கூறுவது?

12,14 கன்ரர், டிப்பர் வாகனங்களில்  கற்களை கொண்டு செல்கிறார்கள்.  நள்ளிரவில் இந்த வேலைகளை செய்வதால் இரவு கடமையில் நிற்கும் பொலிஸார் இராணுவத்தினர் இதனை கொண்டு செல்வதற்கு அனுமதி வழங்கிறார்களா?

ஒருங்கிணைப்பு   குழு கூட்டத்தில் வடக்கு மாகாண ஆளுநர் இணைத்தலைவர்களில் ஒருவராகிருக்கிறார்.  அமைச்சரும் இணைத்தலைவர்களில் ஒருவராக இருக்கிறார்.

எனவே இந்த விடயத்தில் யாரால் இந்த செயற்பாடு நடைபெறுகிறது. இதனை நிறுத்துவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றார்.

இதன்போது வடக்கு மாகாண ஆளுநர் பொலிஸார் இராணுவத்தினரிடம் இவை தொடர்பில் நள்ளிரவு வேளை கடமையில் இருக்கின்றபோது வீதியில் செல்லும் கனரக வாகனம், டிப்பர் வாகனங்களை சேதனைக்குட்படுத்தி உரிய அனுமதிகளை சோதனை செய்து அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிட்டார்.

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு திருகோணமலைக்கு கடத்தப்படுகிறதா ? சிறிதரன் ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கேள்வி | Virakesari.lk

யாழில் குழாய்க்கிணறுகளை தோன்றுவதால் ஏற்படும் ஆபத்துக்கள் குறித்து ஆய்வு செய்ய நடவடிக்கை

13 hours 55 minutes ago

Published By: DIGITAL DESK 7

18 APR, 2024 | 05:29 PM
image
 

யாழ்ப்பாணத்தில் குழாய்க்கிணறுகளைத் தோன்றுவது தொடர்பில் ஆய்வுகளை மேற்கொண்டு முடிவெடுப்பது என யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் ஆகியோரின் இணைத்தலைமையில்  யாழ் மாவட்ட செயலகத்தில் இன்றைய தினம் வியாழக்கிழமை நடைபெற்றது. 

அதன்போது யாழ்ப்பாணத்தில் அனுமதியற்ற முறையில் அதிகளவான குழாய்க்கிணறுகள் அடிக்கப்பட்டு வருவதாகவும் , அதனால் நிலத்தடி நீர் அற்று போகும் அபாயம் உள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டது 

அதனை தொடர்ந்து கூட்டத்தில் வாத பிரதிவாதங்கள் எழுந்தன. அதனை அடுத்து குழாய்க்கிணறு அடிப்பதால் ஏற்படும் பாதிப்புக்கள் தொடர்பில் ஆய்வுகளை மேற்கொண்டு ,அதன் அடிப்படையில் அவற்றை கட்டுப்படுத்துவது தொடர்பில் முடிவெடுக்கப்படும் என தீர்மானிக்கப்பட்டது.

அதேவேளை யாழ்ப்பாணத்தில் நடைபெறும் சட்டவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்துவது தொடர்பிலும் அது தொடர்பில் கூடிய கவனம் செலுத்தி அவற்றை முற்றாக கட்டுப்படுத்துவது தொடர்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும் கூட்டத்தில் தீர்மானங்கள் எடுக்கப்பட்டன. 

யாழில் குழாய்க்கிணறுகளை தோன்றுவதால் ஏற்படும் ஆபத்துக்கள் குறித்து ஆய்வு செய்ய நடவடிக்கை | Virakesari.lk

மே மாத இறுதிக்குள் வடக்கில் 60 ஆயிரம் பேருக்கு காணி உறுதி வழங்கப்படும் - வடக்கு ஆளுநர்

13 hours 57 minutes ago

Published By: DIGITAL DESK 7

18 APR, 2024 | 05:27 PM
image
 

வடக்கு மாகாணத்தில் காணி உறுதிப்பத்திரங்களை கைமாற்றும் நடவடிக்கை தற்காலிகமாக இடைநிறுத்தபட்டுள்ளதாக யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் ஆளுநர் தெரிவித்துள்ளார்.

காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கல், மீள் குடியேற்றம், புதிய வீட்டுத்திட்டம் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் வடக்கு மாகாண ஆளுநர் பி. எஸ். எம். சார்ள்ஸ் கூட்டத்தில் கருத்து தெரிவிக்கையில்,

இந்த வருட இறுதிக்குள் மீள் குடியேற்ற நடவடிக்கை நிறைவு செய்யப்பட வேண்டும் என ஜனாதிபதி வழங்கியுள்ள பணிப்புரைக்கு அமைய, மீள்குடியேற்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

யாழ் மாவட்டத்தில் ஆயிரத்து 500 குடும்பங்களை சேர்ந்தவர்கள், நண்பர்கள் மற்றும் உறவினர்களின் வீடுகளில் தங்கியுள்ளனர். அவர்களை மீள்குடியேற்றுவது தொடர்பில் விசேட கூட்டம்  நடத்தப்பட வேண்டும்.

அத்துடன் ஏற்கனவே மீள்குடியேற்றப்பட்ட மக்களின் வீடுகளுக்கான மின்சார விநியோகம் தொடர்பில் துரித நடவடிக்கை எடுக்குமாறு துறைசார் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளேன் .

இதேவேளை, வடக்கு மாகாணத்தில் காணி உறுதிப் பத்திரங்களை கைமாற்றும் செயற்பாடுகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.

 "உரித்து" காணி உறுதிகளை வழங்கும் நடவடிக்கையை துரிதப்படுத்துவதற்காக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதற்கமையை மே மாத நிறைவுக்குள்  வடக்கு மாகாணத்தில் 60 ஆயிரம் பேருக்கான  காணி உறுதிப் பத்திரங்கள் கையளிக்கப்படவுள்ளன.

வடக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்படவுள்ள வீட்டுத் திட்டம் தொடர்பான கலந்துரையாடல்கள் மற்றும் திட்டமிடல்கள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

இந்த திட்டத்தில் நெடுந்தீவு மக்களுக்கான 76 வீடுகளும் உள்வாங்கப்பட்டுள்ளது என வடக்கு மாகாண ஆளுநர் தெரிவித்தார். 

மே மாத இறுதிக்குள் வடக்கில் 60 ஆயிரம் பேருக்கு காணி உறுதி வழங்கப்படும் - வடக்கு ஆளுநர் | Virakesari.lk

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் அலுவலகத்தில் குழப்பநிலை!

17 hours 6 minutes ago
%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B3%E0% அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் அலுவலகத்தில் குழப்பநிலை!

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு மந்துவில் பகுதியில் அமைந்துள்ள கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் அலுவலகத்தில் நேற்றையதினம் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போது குழப்பநிலை ஏற்பட்டிருந்தது.

இது தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது குறித்த  மக்கள் சந்திப்பின் போது செய்தி சேகரிப்பதற்கு சென்றிருந்த முல்லைத்தீவு மாவட்ட ஊடகவியலாளர் ஒருவர் அதனை காணொளியாக பதிவு செய்திருந்த நிலையில், அமைச்சரின் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பாதுகாப்பு உத்தியோகத்தர் காணொளி எடுக்க வேண்டாமென  அவரைத் தடுத்ததோடு அதனை மீறி எடுத்து செய்தி பிரசுரித்தால் வீடுதேடி வருவோம் எனவும் அச்சுறுத்தல் விடுத்ததாகத்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து இச்சம்பவம் தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலிஸ் அதிகாரிக்கு அறிவிக்கப்பட்டதாகவும், பின்னர் பொலிஸார் அமைச்சருக்கு இது குறித்து தெரியப்படுத்தி இருந்ததாகவும் ஆனால் எந்த நடவடிக்கையும் இது தொடர்பாக  எடுக்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

https://athavannews.com/2024/1378726

அரச ஊழியர்களின் EPF/ETF தொடர்பில் வெளியான அறிவிப்பு..!

18 hours 4 minutes ago

அரச பெருந்தோட்ட நிறுவனங்களின் கீழ் பணியாற்றும் ஊழியர்களின் செலுத்தப்படாத சட்டரீதியான பங்களிப்புகளை (EPF/ETF) செலுத்துவது தொடர்பான அமைச்சரவை பத்திரம் அடுத்த வாரம் அமைச்சரவைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.

அரச பெருந்தோட்ட நிறுவன மறுசீரமைப்பு அமைச்சரும் நிதி இராஜாங்க அமைச்சருமான ரஞ்சித் சியம்பலாபிட்டிய இதனைத் தெரிவித்துள்ளார்.

இதன்படி ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியத்தின் மேலதிக கட்டணங்களுடன் 500 கோடி ரூபாவிற்கும் அதிகமான தொகை செலுத்தப்பட உள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த வருடத்தின் முதல் கடமையாக அமைச்சின் செயலாளருக்கு தேவையான அறிவுறுத்தல்களை வழங்கியதாக சுட்டிக்காட்டிய இராஜாங்க அமைச்சர்,

உழைக்கும் மக்களின் சட்ட உரிமைகளை பாதுகாத்து பெருந்தோட்ட நிறுவன சீர்திருத்தங்களை ஆரம்பிக்க வேண்டும் என்றார்.

இது தொடர்பாக ஊழியர்கள் தரப்பினால் 2000க்கும் மேற்பட்ட வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், சட்டத்தரணி கட்டணமாக சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் பெருமளவு பணத்தை செலவிடுவதாகவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

https://thinakkural.lk/article/299474

கடலில் குழந்தை பிரசவித்த நயினாதீவு பெண்

18 hours 10 minutes ago

Published By: DIGITAL DESK 3

18 APR, 2024 | 11:40 AM
image
 

யாழ்ப்பாணம் - நயினாதீவைச் சேர்ந்த பெண்ணொருவர் கடலில் குழந்தை பிரசவித்துள்ளார். 

நயினாதீவைச் சேர்ந்த பெண்ணொருவருக்கு நேற்று புதன்கிழமை திடீரென பிரசவ வலி ஏற்பட்டதை அடுத்து, நயினாதீவு பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றுமாறு வைத்தியர் பரிந்துரைத்தார். அதனையடுத்து போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்கு, அம்புலன்ஸ் படகு தற்போது சேவையில் ஈடுபடாததால், பொதுமக்கள் போக்குவரத்து படகில் ஏற்றி குறிகாட்டுவான் நோக்கி அழைத்து வந்துள்ளனர். 

இந்நிலையில் கடலில் படகு பயணித்துக்கொண்டிருந்த வேளை, பிரசவ வலி பெண்ணுக்கு அதிகரித்ததை அடுத்து, படகின் கீழ் தளத்தில் இருந்த ஆண்களை மேல் தளத்திற்கு அனுப்பி வைத்த பின்னர் , படகில் பயணித்த பெண்களே பிரசவம் பார்த்துள்ளனர். 

படகு குறிகட்டுவான் இறங்கு துறையை வந்தடைந்ததும், அங்கு தயார் நிலையில் நின்ற புங்குடுதீவு வைத்தியசாலையின் நோயாளர் காவு வண்டியில் தாயையும் சேயையும், யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அழைத்து சென்றனர். 

தற்போது தாயும் சேயும் நலமாக உள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

https://www.virakesari.lk/article/181359

உள்ளத்தில் இருப்பதை உரக்கச் சொல்ல ஒரு சந்தர்ப்பம்!!!

19 hours 12 minutes ago

அரசதலைவர் தேர்தலில் தமிழ்ப் பொதுவேட்பாளர் களமிறக்கப்படும் விடயம் சூடுபிடித்திருக்கின்றது. இந்த விடயத்தைப்பற்றிப் பேச்சு எழுந்தவுடனேயே இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் தலைவர் இரா.சம்பந்தன் ஆகியோர் எதிர்ப்பு வெளியிட்டிருந்தனர். அவர்களுக்கு ஒத்தூதும் வகையில் வடக்கு மாகாணசபையின் அவைத் தலைவர் சி.வீ.கே. சிவஞானமும் கருத்து வெளியிட்டிருக்கிறார். கடந்த காலங்களில் அரசதலைவர் தேர்தலின்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினது வகிபாகம் மிகப்பெரியது. அந்தக் கட்சி எடுக்கும் முடிவையே தமிழ் மக்களும் எடுத்திருந்தனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள்ளும் பங்காளிகளுடன் பேசி, அந்த முடிவு எடுக்கப்பட்டதா என்ற கேள்வி எழுந்தால் எந்தத் தாமதமும் இல்லாமல் இல்லை என்ற பதிலே கிடைக்கும். சகல முடிவுகளையும் சம்பந்தன் அல்லது சம்பந்தனின் பெயரால் சுமந்திரனே எடுத்தனர், அதை ஏனையோரிடம் திணித்தனர். அவர்களும் எதிர்ப்புகளை கட்சிக்குள் பதிவு செய்துவிட்டு, திணிக்கப்பட்ட முடிவை செயற்படுத்தினர். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் தெரிவுக்கான தேர்தலில் எம்.ஏ.சுமந்திரன் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, கட்சிக்குள் அவருக்கான இடம் - செல்வாக்கு கட்சி தொடர்பில் தீர்மானிக்கும் சக்திக்கான அந்தஸ்து என்பன கேள்விக்குள்ளாகியிருக்கின்றது. கடந்த காலங்களைப்போன்று தென்னிலங்கையின் அரசதலைவர் வேட்பாளர்களை கண் மூடித்தனமாக ஆதரித்த சுமந்திரன்- சம்பந்தன் கூட்டின் போக்கை இலங்கைத் தமிழரசுக் கட்சிக்குள் உள்ளவர்களே ஏற்க மறுக்கின்ற சூழல் உருவாகியிருக்கின்றது.

இலங்கைத் தமிழரசுக் கட்சி அரசதலைவர் தேர்தல்களில் எடுத்த முடிவு தவறு என்பதை காலம் நிரூபித்திருக்கின்றது. இதை அந்தக் கட்சியின் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஈ.சரவணபவன் கூட அண்மையில் ஊடக சந்திப்பில் குறிப்பிட்டிருந்தார். இப்படியான சூழலில் தங்களது கைகளை மீறி, தமிழ்ப் பொது வேட்பாளர் விவகாரம் சென்று விடுமோ என்ற அச்சத்தில், இரா. சம்பந்தன் -எம்.ஏ.சுமந்திரன் மற்றும் அவரது அணியினர் கருத்துகளை முன்வைக்க ஆரம்பித்திருக்கின்றனர். அவர்கள் இதற்காக, ராஜபக்சக்கள் மீண்டும் வந்து விடுவார்கள், தென்னிலங்கையில் இனவாதிகள் ஒன்றாகி விடுவார்கள் என்ற தேய்ந்துபோன இசைத் தட்டையே மீண்டும் வாசிக்கத் தொடங்கியிருக்கின்றார்கள். ஒவ்வொரு தேர்தல்களின் போதும், தமிழ் மக்கள் இதைச் செய்தால் தென்னிலங்கை இப்படி எதிர் வினையாற்றும் என்று சொல்லிச் சொல்லியே, தமிழ் மக்க ளுக்கு எது தேவை என்பதைச் சொல்லாமல் செய்து விட்டிருந்தனர். இம்முறை அதேதவறை தமிழ் மக்கள் மீண்டும் இழைப்பதற்குத் தயாரில்லை.

அரசதலைவர் தேர்தலில் தமிழ்ப் பொதுவேட்பாளர் என்ற முடிவை நோக்கி தமிழ் மக்கள் தாங்களாக வரவில்லை. அதை நோக்கி கடந்தகால அரசதலைவர் தேர்தல் அனுபவங்கள் தமிழ் மக்களை தள்ளிவிட்டிருக்கின்றன. இப்போதும், தமிழ்ப் பொதுவேட்பாளர் என்றதும் எதிர் வரும் அரசதலைவர் தேர்தலில் போட்டியிடவிருக்கின்ற சிங்கள வேட்பாளர்கள் பதறத் தொடங்கியிருக்கின்றனர். அவர்கள் எவரும் தமிழ்ப்பொது வேட்பாளர் விடயத்தை சாதகமாகப் பார்க்கவில்லை. அந்தத் தென்னிலங்கை வேட்பாளர்களைப்போல அல்லது அதற்கு ஒருபடி மேலேபோய், சம்பந்தன் - சுமந்திரன் இணை அணியும் பதறத் தொடங்கியிருக்கின்றது. ராஜபக்ச பூச்சாண்டி அல்லது தென்னிலங்கை இனவாதிகள் என்ற பயத்தைக் காண்பித்து, தாங்கள் சேவகம் செய்யவேண்டிய ஏதோவொரு தென்னிலங்கை வேட்பாளரை நோக்கி தமிழ் மக்களைத் தள்ள வேண்டும் என்று இந்த அணியினர் சிந்திக்கின்றனர். ஆனால், தமிழ் மக்களைப் பொறுத்த வரையில் இதுவரைகாலமும் தென்னிலங்கை வேட்பாளர்களை ஆதரித்து எதுவும் பெறமுடியாத சூழலில், தமிழ்ப் பொதுவேட்பாளரை ஆதரித்து, எங்கள் நிலைப்பாடு இதுதான் என்பதைச் சொல்வதற்கான சந்தர்ப்பமாக மாத்திரம் அரசதலைவர் தேர்தலை பிரயோகிப்பதில் தவறில்லையே...!

(13.04.2024-உதயன் பத்திரிகை)

 

https://newuthayan.com/article/உள்ளத்தில்_இருப்பதை_உரக்கச்_சொல்ல_ஒரு_சந்தர்ப்பம்!!!

ராம‌ன், ர‌ஹ்மான் சர்ச்சை: எவ‌ரையேனும் புண்ப‌டுத்தியிருந்தால் ம‌ன்னியுங்கள்! - உல‌மா க‌ட்சித் த‌லைவ‌ர் அப்துல் ம‌ஜீத்.-

22 hours 7 minutes ago
ws-750x375.jpeg ராம‌ன், ர‌ஹ்மான் சர்ச்சை: எவ‌ரையேனும் புண்ப‌டுத்தியிருந்தால் ம‌ன்னியுங்கள்! - உல‌மா க‌ட்சித் த‌லைவ‌ர் அப்துல் ம‌ஜீத்.-

”சில‌ வ‌ருட‌ங்களுக்கு முன் உல‌மா க‌ட்சித்த‌லைவ‌ர் என்ற‌ வ‌கையில் தன்னால்  கூற‌ப்ப‌ட்ட‌ ராம‌ன், ர‌ஹ்மான் க‌ருத்துக்க‌ள் எவரையேனும் புண்படுத்தியிருந்தால்  அதற்காக  தான் ப‌கிர‌ங்க‌ ம‌ன்னிப்பு கேட்பதாக” முபாற‌க் அப்துல் ம‌ஜீத் மௌல‌வி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” இஸ்லாமிய‌ ம‌த‌த்தை பொறுத்த‌ வ‌ரை முத‌ல் ம‌னித‌ன் ஆத‌ம் ஒரு முஸ்லிமாக‌வே வாழ்ந்தார் என்ப‌தால் உல‌கில் உள்ள‌ அனைத்து ம‌த‌ங்க‌ளைச்  சேர்ந்தோரும் ச‌கோத‌ர‌ர்க‌ளே ஆவர். இத‌னால் ஆதிகால‌ முஸ்லிம்க‌ளின் சிறிய‌ க‌தைக‌ள் பின்னாளில் பெரும் க‌ற்ப‌னை காவிய‌ங்க‌ளாக‌ மாறியுள்ள‌ன‌ என்ப‌தே என‌து ந‌ம்பிக்கை. இந்த‌ வ‌கையில்தான் நான் மேற்ப‌டி க‌ருத்துக்க‌ளை சொல்லியிருந்தேன்.

ஆனால் அர்ர‌ஹ்மான் என்ப‌து இறைவ‌னின் திருப்பெய‌ர்க‌ளில் ஒன்று என்ப‌தால் அத‌னோடு ஒருவ‌ரை இணைப்ப‌து இறைவ‌னை அவமதிக்கும் செயல்  என‌ நான்  ம‌திக்கும், ஒருவ‌ர் என‌க்கு வ‌ருத்த‌த்துட‌ன் கூறிய‌தால்  நான் தெரிவித்த கருத்து அவ‌ர‌து ம‌ன‌தை மிக‌வும் காய‌ப்ப‌டுத்தியுள்ள‌து என்ப‌தைப் புரிந்துகொண்டேன்.

ம‌க்களை எமாற்றும், இன‌வாத‌, ல‌ஞ்ச‌ம் வாங்கும், மோச‌மான‌ ம‌னித‌ர்க‌ளின் உள்ள‌ங்க‌ளை விட‌ ந‌ல்ல‌வ‌ர்க‌ள் ம‌ன‌து புண்படும் என்றால் அத‌னை த‌விர்ப்ப‌து ந‌ல்ல‌து. அந்த‌ வ‌கையில் ர‌ஹ்மானோடு ராம‌னை இணைத்து க‌ருத்து சொன்ன‌மைக்காக‌ நான்  ம‌ன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்” இவ்வாறு தெரிவித்துள்ளார்.

https://athavannews.com/2024/1378686

@colomban

கோட்டாவின் அதிசொகுசு வாகனம் தொடர்பில் சர்ச்சை!

22 hours 11 minutes ago
piyumi.jpg கோட்டாவின் அதிசொகுசு வாகனம் தொடர்பில் சர்ச்சை!

”முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பயன்படுத்திய அதிசொகுசு வாகனமான ரேஞ்ச் ரோவரை மொடல் அழகியான பியூமி ஹன்சமாலி பயன்படுத்திய விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் இது குறித்து உடனடியாக விசாரணையை முன்னெடுக்குமாறு” சட்டவிரோத சொத்துக்கள் விசாரணை பிரிவில் இன்று (17) முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது.

Mage Rata அமைப்பின் தலைவரான சஞ்சய மஹவத்தவினாலேயே குறித்த முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது. குறித்த முறைப்பாட்டில் “தேர்தல் நெருங்கிவிட்டது என்பது தெளிவாகிறது, அரசியல்வாதிகள் தாம் சேமித்த கறுப்புப் பணத்தை வரவிருக்கும் தேர்தல் பிரசாரங்களில் பயன்படுத்த  முனைகின்றார்கள். அதன்படி, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பயன்படுத்திய  அதிசொகுசு வாகனமான ரேஞ்ச் ரோவரை பியூமி ஹன்சமாலி எவ்வாறு பெற முடிந்தது என்பதில் எங்களுக்கு சில சந்தேகங்கள் உள்ளன.

குறிப்பாக “ரேஞ்ச் ரோவர் வாகனம் முன்னாள் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டதா அல்லது கோட்டாபயவால் பியூமிக்கு வழங்கப்பட்டதா என்ற கேள்வி எழுகின்றது. அரசியல்வாதிகளின் பணமோசடி நடவடிக்கைகளுக்கு பியூமி ஹன்சமாலி பயன்படுத்தப்படுகின்றாரா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது” என சஞ்சய மஹவத்த குறிப்பிட்டுள்ளார்.

https://athavannews.com/2024/1378630

கோட்டாபய ராஜபக்ஷவினால் நான் ஏமாற்றப்பட்டுள்ளேன்-பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித்!

22 hours 12 minutes ago
President-Cardinal-700x375.jpg கோட்டாபய ராஜபக்ஷவினால் நான் ஏமாற்றப்பட்டுள்ளேன்-பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித்!

கோட்டாபய ராஜபக்ஷவின் வாக்குறுதியினால் நான் ஒருமுறை ஏமாற்றப்பட்டதாக கொழும்பு பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித் தேரர் தெரிவித்துள்ளார்.

செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித் இதனைத் தெரிவித்தார்.

ஆட்சிக்கு வந்த பின்னர் ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் முழுமையான விசாரணை நடத்தப்படும் என கோட்டாபய ராஜபக்ஷ தனக்கும் பேராயர் சபைக்கும் வாய்மொழியாக வாக்குறுதியளித்ததாக கர்தினால் தேரர் இங்கு தெரிவித்தார்.

எவ்வாறாயினும், ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை கிடைத்த பின்னர், அது தொடர்பான அனைத்து விசாரணைகளும் கைவிடப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

அத்துடன் இந்த நாட்டின் அரசியல் தலைவர்கள் நேர்மையான நோக்கத்துடன் செயற்படுவதில்லை எனவும் எந்தவொரு அரசியல் தலைவரும் ஆட்சிக்கு வந்ததும் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவார் என மக்கள் எதிர்பார்ப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

https://athavannews.com/2024/1378652

மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு!

22 hours 16 minutes ago
srilanka-populatin-Athavan-650x375.jpg மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் புள்ளி விபரத் திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு!

நாட்டில் தனி நபரின் மாதாந்த செலவு ஜனவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் பெப்ரவரி மாதத்தில் குறைந்துள்ளதாக மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி, நாட்டில் உள்ள ஒருவருக்கு அவர்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய மாதாந்தம் குறைந்தபட்சம் 16,975 ரூபாய் தேவைப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு பெப்ரவரியில், தேசிய நுகர்வோர் விலைக் குறியீட்டின்படி, நாட்டின் பணவீக்கம் முந்தைய மாதத்துடன் ஒப்பிடுகையில் குறைந்துள்ளது.

மேலும் கொழும்பு மாவட்டத்தில் வாழும் ஒருவருக்கு குறைந்தபட்ச அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய 18,308 ரூபா தேவைப்படுவதாகவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளமை  குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2024/1378659

32 ஆயிரம் பேருக்கு வடக்கில் வீடுகள்!

22 hours 18 minutes ago

32 ஆயிரம் பேருக்கு வடக்கில் வீடுகள்!
1402191681.jpeg

எதிர்வரும் ஒரு வருடத்துக்குள்
32 ஆயிரம் பேருக்கு வடக்கில் வீடுகள்!
வடக்கு ஆளுநர் தெரிவிப்பு

(ஆதவன்)

வடக்கு மாகாணத்தில் 32 ஆயிரம் பேர் வீட்டுத் திட்டங்களுக்காகத் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். எதிர்வரும் ஒரு வருடத்துக்குள் இந்தத் திட்டம் நடை முறைப்படுத்தப்படும் என்று வடக்கு ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்தார்.

வவுனியா நெடுங்கேணி மகா வித்தியாலயத்தில் நேற்றுமுன்தினம் இடம்பெற்ற புத்தாண்டுக் கொண்டாட்டத்தின் போதே வடமாகாண ஆளுநர் இவ்வாறு தெரிவித்தார்.

ஆளுநர் மேலும் தெரிவித்ததாவது:-

‘வடக்கு மாகாணத்தில் இவ்வருடம் திட்டமிட்ட பயிர்ச்செய்கையை மேற்கொள்ளமுடியும். இதற்கு போதுமான அளவு நீர் காணப்படுகின்றது. பெரிய மற்றும் சிறிய குளங்களின் நீர்மட்டம் போதுமானதாகக் காணப்படுகின்றமையால் இடைப்போகம் மற்றும் சிறுபோகம் ஆகியவற்றில் சிறந்த விளைச்சலை எதிர்பார்க்க முடியும். ஆகவே இதனூடாக வறுமையிலிருந்து மீள்வதற்கான சந்தர்ப்பமுண்டு.

இந்த வருடத்துக்கான வரவு - செலவுத் திட்டத்தில் குளங்களைப் புனரமைப்பதற்கான நிதி ஒதுக்கீடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அதே போல வடக்கு மாகாணத்தில் உள்ள 17 குளங்களை புனரமைப்புச் செய்வதற்கான நிதியை மத்திய அரசாங்கத்திடமும் ஏனைய நிதி நிறுவனங்களிடமும் நாங்கள் கோரியுள்ளோம்.

மக்களிடையே கலை, கலாசாரத்தை வளர்ப்பதற்கு அவர்கள் வாழும் கிராமங்களிலேயே திறந்த வெளி மேடைகளை அமைத்து அங்கு வாழக்கூடிய இளைஞர் யுவதிகளுக்கு சந்தர்ப்பங்களை பெற்றுக்கொடுக்க வேண்டும். கிராமங்களில் திறந்த வெளி மேடைகளை அமைத்து நிகழ்ச்சிகளை அரங்கேற்றுவதன் ஊடாக எமது தனித்துவமான கலை, கலாசாரத்தைப் பேணிப் பாதுகாக்க முடியும்'- என்றார். (ஏ) 

https://newuthayan.com/article/32_ஆயிரம்_பேருக்கு_வடக்கில்_வீடுகள்!

யாழில் விஷ பூச்சி கடிக்குள்ளானவர் உயிரிழப்பு

1 day 12 hours ago

Published By: DIGITAL DESK 3

17 APR, 2024 | 04:31 PM
image
 

யாழ்ப்பாணத்தில் காதின் கீழ் பகுதியில் விஷ பூச்சி கடித்ததில் சிகிச்சை பலனின்றி ஒருவர் உயிரிழந்துள்ளார். 

52 வயதுடைய சண்முகவேல் அருட்செல்வம் என்பவரே உயிரிழந்துள்ளார்.

கடந்த 14 ஆம் திகதி இவருக்கு காதின் கீழ் பகுதியில் விஷ பூச்சி ஒன்று கடித்துள்ளது.  வலி தீவிரமடைந்ததை அடுத்து நேற்று முன்தினம் திங்கட்கிழமை யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை உயிரிழந்துள்ளார். 

https://www.virakesari.lk/article/181310

ஓமான் வளைகுடா கடலில் கவிழ்ந்த கப்பலிலிருந்த 21 இலங்கை பணியாளர்கள் காப்பாற்றப்பட்டனர்!

1 day 12 hours ago

Published By: VISHNU

17 APR, 2024 | 09:14 PM
image

ஓமான் வளைகுடா கடலில் கடும் புயலில் சிக்கி கவிழ்ந்த கப்பலின்  காணப்பட்ட 21 இலங்கை பணியாளர்களை ஈரானிய அவசர சேவைகள்  பிரிவு காப்பாற்றியுள்ளதாக அரச ஊடகம் புதன்கிழமை செய்தி வெளியிட்டுள்ளது. 

குக் தீவுகளின் கொடியுடன் எண்ணெய் ஏற்றிச் சென்ற கப்பல் தெற்கு நகரமான ஜாஸ்கில் இருந்து சுமார் 50 கிலோமீட்டர் (30 மைல்) தொலைவில் கவிழ்ந்த்தாக அதிகாரபூர்வ ஐஆர்என்ஏ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

 'ஒரு மீட்புக் கப்பல் அப்பகுதிக்கு அனுப்பப்பட்டது மற்றும் 21 பணியாளர்கள் காப்பாற்றப்பட்டனர்" என்று ஜாஸ்க் துறைமுகங்கள் மற்றும் கடல்சார் நிர்வாகத்தின் இயக்குனர் முகமது அமீன் அமானி தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/181336

சந்நிதியான் ஆச்சிரமத்தால் நேற்றும் பல்வேறு உதவிகள்!

1 day 13 hours ago

யாழ்ப்பாணம் 32 நிமிடம் நேரம் முன்

சந்நிதியான் ஆச்சிரமத்தால் நேற்றும் பல்வேறு உதவிகள்!

 

803321722.jpg

 

மாதவன்.

யாழ்ப்பாணம் தொண்டைமானாறு சந்நிதியான் ஆச்சிரமத்தால் பல்வேறு உதவிகள் நேற்று செவ்வாய்க்கிழமை(16) வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட முத்து ஐயன்கட்டு, ஜீவநகர் முத்துமாரி அம்மன் ஆலயத்தின் பயன்பாட்டிற்காக மலசலகூடம் கட்டுமானப் பணிக்காக  1ஆம் கட்ட நிதியாக 75ஆயிரம் ரூபா வழங்கப்பட்டதுடன் வவுனியா -  கணேசபுரம் கிராமசேவகர் பிரிவிலுள்ள அறநெறிப் பாடசாலையின் கட்டிடம் அமைப்பதற்கான 2ஆம் கட்ட நிதியாக 1லட்சத்து 50ஆயிரம் ரூபாவும் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

இந்த உதவிகளை சந்நிதியான் ஆச்சிரிம சுவாமிகள் கலாநிதி மோகனதாஸ் மற்றும் ஆச்சிரம தொண்டர்களுடன் நேரில் சென்று வழங்கிவைத்தார்.

சந்நிதியான் ஆச்சிரமத்தால் நேற்றும் பல்வேறு உதவிகள்! (newuthayan.com)

கெஹலியவின் குடும்ப உறுப்பினர்கள் சுகாதார அமைச்சின் வாகனங்களிலேயே வெலிக்கடை சிறைசாலைக்குச் செல்கின்றனராம்!

1 day 13 hours ago
17 APR, 2024 | 12:16 PM
image
 

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல விளக்கமறியலில் வைக்கப்பட்டு சுமார் மூன்று மாதங்களாகும் நிலையில்,  அவர் அமைச்சராக இருந்தபோது வழங்கப்பட்ட இரண்டு உத்தியோகபூர்வ வாகனங்கள் தொடர்ச்சியாக அவரது குடும்ப உறுப்பினர்களால் பயன்படுத்தப்படுவதாக சுகாதார அமைச்சின் அதிகாரி ஒருவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

அத்துடன், விஜேராம மாவத்தையில் அவருக்கு வழங்கப்பட்ட உத்தியோகபூர்வ இல்லம் ஏன் இதுவரை கையகப்படுத்தப்படவில்லை எனவும் அந்த அதிகாரி கேள்வி எழுப்பியுள்ளார்.

அரச உத்தியோகத்தர் ஒருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டால், அவர் பெற்றிருந்த அனைத்துச் சலுகைகளும் உடனடியாக இரத்துச் செய்யப்படும், ஆனால், கெஹலிய ரம்புக்வெலவுக்கு ஏன் விசேட கவனம் செலுத்தப்படுகிறது என அந்த அதிகாரி கேள்வி எழுப்பியுள்ளார்.

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கெஹலிய ரம்புக்வெல்லவின் குடும்ப உறுப்பினர்கள் அதே உத்தியோகபூர்வ வாகனங்களில் வெலிக்கடை சிறைச்சாலைக்கு வருவதாகவும் அந்த அதிகாரி குற்றம் சாட்டியுள்ளார்.

கெஹலியவின் குடும்ப உறுப்பினர்கள் சுகாதார அமைச்சின் வாகனங்களிலேயே வெலிக்கடை சிறைசாலைக்குச் செல்கின்றனராம்! | Virakesari.lk

Checked
Fri, 04/19/2024 - 02:36
ஊர்ப் புதினம் Latest Topics
Subscribe to ஊர்ப்புதினம் feed
texte-feed
sqdgvsqfqsg vdgvdgvv qdsbrzbvzrbvzr