Jump to content

துரோக, சரணாகதி, சரணடைதல் மற்றும் சமாதான அரசியல்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

துரோக, சரணாகதி, சரணடைதல் மற்றும் சமாதான அரசியல்

மீராபாரதி

தமிழ் பேசும் மனிதர்கள் குறிப்பாக இலங்கையில் வாழ்கின்றவர்கள் இன்று பல்வேறு தளங்களில் பிரச்சனைகளை எதிர்நோக்கி இருப்பதுடன் பின்தங்கிய நிலையிலும் உள்ளார்கள் என்றால் மறுப்பதற்கில்லை. இவர்களது வாழ் நிலை மற்றும் மனநிலை என்பன மிகவும் பாதிப்படைந்து கவலைக்கிடமாகவும் நம்பிக்கையிழந்தும் காணப்படுகின்றன. இந்த நிலையில் சர்வதேச சமூகங்கள் மற்றும் இந்திய சிறிலங்கா அரசாங்கங்கள் இம் மனிதர்களுக்கு நம்பிக்கையளிக்களிக்கின்ற எந்தவிதமான செயற்பாடுகளையே தொடர்ந்தும் முன்னெடுக்காதிருக்கின்றனர். இவ்வாறு இவர்கள் ஒன்றும் செய்யாமலிருப்பது ஆச்சரியமான விடயமல்ல. ஆனால் இம் மனிதர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் தேசிய கட்சிகளும் புலம் பெயர்ந்த தமிழ் பேசும் மனிதர்களும் குறிப்பாக புலம் பெயர் விடுதலைப் புலிகளின் தலைமைகளும் மற்றும் பிற இயக்கத் தலைமைகளும் கூட இவர்கள் மீது அக்கறையுடன் செயற்படுவதாக தெரியவில்லை. ஆனால் பத்திரிகைகளில் மட்டும் தமது உயிரைக் கொடுத்து வேலை செய்கின்றளவிற்கு அறிக்கைகள் மட்டும் விடுகின்றார்கள். உண்மையில் ஒவ்வொருவரும் எரிகிற வீட்டில் கூரையைப் பிடுங்குவதுபோல் தமிழ் பேசும் மனிதர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் கஸ்டங்கள் முரண்பாடுகளில் குளிர்காய்வதுடன் தமது கட்சிகள் அல்லது அமைப்புகள் இயக்கங்கள் என்பவற்றையே உறுதியாக நிலைநிறுத்துவதற்கும் நியாயப்படுத்துவதற்குமே முயற்சிக்கின்றனர். இதன்மூலம் தமது அதிகாரங்களை பெறுவதற்கும் தக்கவைப்பதற்கும் பதவிகளைக் காப்பாற்றுவதற்கும் மட்டுமல்ல மேலும் மேலும் அவர்களிடம் பணம் கறப்பதற்கும் அதைப் பெருக்குவதையுமே நோக்கமாக கொண்டுள்ளனர். இதற்காகவே இதுகால வரையான தமிழ் பேசும் மனிதர்களின் சமூக அரசியல் சூழல்கள் அதிகமாகப் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. இன்றும் அவ்வாறே நடைபெற்று வருகின்றன. இதற்காக அண்மைக் காலங்கள்வரை அதிகம் பயன்படுத்தப்பட்ட சொற்கள் போராட்டம், வீரம், துணிவு, வெற்றி மற்றும் துரோகி….என்பன போன்று பல. இன்று துரோகி என்பது பரவலாகவும் மற்றும் சரணாகதி, சரணடைதல், சமாதானம் போன்ற சொற்களே அதிகமாக பயன்படுத்தப்படுகின்றன. ஆகவே துரோக அரசியல், சரணாகதி அரசியல், சரணடையும் அரசியல், சமாதான அரசியல் என்பவற்றின் பண்புகள் மற்றும் அதன் சாதக பாதக அம்சங்கள் தொடர்பாக நாம் புரிந்துகொள்ள வேண்டிய அவசியம் உள்ளது. அப்பொழுதுதான் நாம் அவற்றை விளங்கிக்கொண்டு முன்நோக்கி செயற்பட முடியும். மேலும் இதுகாலவரை நாம் எவ்வாறன அரசியலை முன்னெடுத்தோம் என்றும் இனி எவ்வாறன அரசியலை முன்னெடுக்காலாம் எனவும் ஆராயவும் சிந்திக்கவும் முடியும்.

இன்று விடுதலைப்புலிகள் ஆகக் குறைந்தது இலங்கையிலாவது ஒரு அமைப்பாக சக்திவாய்ந்தவர்களாக இல்லை. அவர்களது இருப்பு இல்லை என்பது ஏற்றுக்கொள்வதற்கு கடினமாக இருந்தபோதும், உண்மையான யதார்த்த நிலையை ஏற்றுக்கொள்வதே முன்நோக்கிச் செல்வதற்கு வழிவகுக்கும். ஆகவே தொடர்ந்தும் புலிகளது தலைமையையும் அவர்களது கடந்தகால செயற்பாடுகளையும் விமர்சிப்பது என்பது பயனற்றது. ஆனால் புலம் பெயர் சூழலில் வாழுகின்ற புலிகளின் தலைமைகள் பலர் இன்றும் செயற்படுகின்றனர். புலிகளின் தலைவர் பிரபாரகன் இல்லாதபோது இவர்களுக்கு இடையிலான பிளவுகள் மற்றும் முரண்பாடுகள் ஏற்படுவதுடன் தமக்குள் சண்டை பிடிப்பார்கள் என்பதும் அனைவரும் எதிர்பார்த்த ஒன்று. ஆகவே இவ்வாறு இவர்கள் தமக்குள் பதவி அதிகாரம் மற்றும் முக்கியமாக பணத்திற்காக இழுபறிப்படுவதும் சண்டைபிடித்து ஒருவரை ஒருவர் காட்டிக் கொடுப்பதும் ஒன்றும் ஆச்சரியமான விடயமல்ல. ஏனனில் இவர்களின் அடிப்படை அரசியல் தமிழ் பேசும் மனிதர்களின் தேசிய விடுதலைக்கான அரசியலை பெயரளவிலும் பிரச்சாரளவிலும் முதன்மையானதான கொண்டிருந்தார்கள். இவ்வாறன அரசியலைப் பயன்படுத்தி தமிழ் பேசும் மனிதர்களிடம் பெருமளவான பணத்தை வசூலித்து பின் அவர்கள் மீதே அதிகாரத்தை பிரயோகித்தும் அடக்கியும் வந்தமையே புலித்தலைமையின் கடந்தகால அரசியல் வரலாறு. இன்று இவ்வாறு தமக்குள் பிளவுபட்டிருக்கும் புலிகள் குறிப்பாக புலம் பெயர் புலித் தலைமைகள் ஒவ்வொரும் ஒவ்வொரு பாதைகளில் அதாவது எதிர்எதிர் பாதைகளில் தமது குறுகிய நலன்களுக்காகவும் நோக்கங்களுக்காக தொடர்ந்தும் செயற்படுகின்றனர். ஆகவே புலித் தலைமையின் கடந்தகால செயற்பாடுகளை விமர்சனக் கண்ணோடு நோக்குவதன் மூலம் அவர்களின் ஆரம்ப காலத்திலிருந்து முள்ளிவாய்க்கால் வரையான செயற்பாடுகளிலிருந்து நாம் பாடங்கள் கற்பது பயனுள்ளதாகும். அதேவேளை புலம் பெயர் புலிகளின் தலைமைகளின் செயற்பாடுகள் தொடர்பாக தொடர்ச்சியான கடுமையான விமர்சனங்களை முன்வைப்பதும் முக்கியமானதாகும். ஏனனில் ஏற்கனவே பலவழிகளில் நசிந்துபோயிருக்கும் தமிழ் பேசும் மனிதர்களை தமது குறுகிய நலன்களுக்காக இவர்கள் தொடர்ந்தும் பயன்படுத்தாமலிருப்பதற்கு இவ்வாறான ஆரோக்கியமான விமர்சனங்கள் உதவும். மேலும் கடந்தகால வரலாற்றை பக்கச் சார்பற்றவகையில் கற்பதே, நாம் மேற்கொண்டு ஆரோக்கியமான சிந்தனைகள் செயற்பாடுகள் மூலம் முன்நோக்கிச் செல்வதற்கு உதவும்.

தமிழ் தேசிய விடுதலைப் போராட்டம் உருவாக்கிய “துரோக அரசியல்” என்பது தொடர்பான நாம் தெளிவான ஒரு பார்வையைக் கொண்டிருக்கவேண்டும். ஆயுதப்போராட்டக் காலங்களில் குறிப்பாக புலிகளின் தனிச்சையான ஆதிக்கமிருந்தபோது இச் சொல்லும் அதனடிப்படையிலான செயற்பாடும் மிகப் பிரபல்யமாகவும் இருந்தது. இதற்கு முன்பு பாராளுமன்ற அரசியலிலும் இச் சொல் பயன்படுத்தப்பட்டபோதும் ஆயுதப்போராட்டத்தின்போதுதான் “துரோக அரசியல் செய்பவர்கள்” என்பவர்கள் கொலைசெய்யப்பட்டு அழிக்கப்படுமளவிற்கு வளர்ந்து ஒரு அரசியல் செயற்பாடாக கட்டமைக்கப்ட்டது. தனி நபர் நலன்களுக்காக, தமது பதவிகளைக் காப்பதற்காக, தனிப்பட்ட குரோதங்களுக்காக, கருத்துமுரண்பாடுகளுக்காக என பல உள்மனக் காரணங்களுக்காக அரசியல் என்ற முகமுடி அணிந்து அரசியல் காரணங்கள் பல கூறி துரோகி என்ற பட்டமளித்து பல மனித உயிர்களை ஒவ்வொரும் இயக்கங்களும் கொலை செய்தன. இதன் தாக்கத்தால் பயத்தால் பல மனிதர்கள் தாம் துரோகி பட்டம் பெறக்கூடாது என்பதற்காகவே ஆதரவாளராக செயற்பட்டனர் அல்லது நடப்பவற்றைப் பார்த்துக்கொண்டு மௌனிகளாக இருந்தனர். இவ்வாறுதான் தமிழ் பேசும் சமூகத்தில் “துரோகி” என கட்டமைக்கப்பட்ட சொல்லினால் ஏற்பட்ட மிகமோசமான எதிர்விளைவுகள் ஆரம்பமாகின. அதாவது போராட்டத்தின் ஆரம்ப காலத்தில் போராட்ட இயக்கங்களுக்கு சார்பாகவோ ஆதரவாகவோ இல்லாது சிறிலங்காவின் சிங்கள கட்சிகள் சார்ந்து அல்லது இடதுசாரி கட்சிகள் சார்ந்து செயற்படுகின்றவர்களுக்கு இயக்கங்களால் துரோகி என முத்திரை குத்தப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டது. பின் போராட்டமானது புலிகளின் தலைமையால் எதேச்சதிகாரத்துடன் முன்னெடுக்கப்பட்டபோது புலிகளுக்கு எதிரானவர்கள் அதாவது புலிகளைப் போலவே தமிழ் தேசிய விடுதலைக்காகப் போராடியதாக கூறிய பிற தமிழ் இயக்கங்கள் உட்பட அனைவரும் “துரோகி” என முத்திரை குத்தப்பட்டு கொத்துக்கொத்தாக சுடப்பட்டும் எரிக்கப்பட்டும் குண்டுகள் வைத்தும் அழிக்கப்பட்டனர். அதாவது தமிழ் பேசும் மனிதர்களின் போராட்டத்திற்கு ஆதரவாக தமது புரிந்துணர்வினடிப்படையில் பல்வேறு தளங்களில் வழிகளில் முனைப்புடன் அர்ப்பணிப்புடனும் ஈடுபாட்டுடன் செயற்பட்ட பலர் புலிகளின் அரசியலை ஏற்கவில்லை அல்லது உடன்படவில்லை என்ற ஒரு காரணத்திற்காகவே “துரோகி”யாக முத்திரை குத்தப்பட்டு கொலை செய்யப்பட்டனர். இவர்களுக்கே இந்த நிலைமை எனின் புலிகளை விமர்சித்தவர்களது நிலை தொடர்பாக நாம் புரிந்துகொள்ளலாம். இதன் விளைவாக, “துரோக அரசியல்” செய்பவர்களுக்கு எதிராக வழங்கப்பட்ட மரண தண்டனை என்பது தமிழ் பேசும் மனிதர்களின் சமூகத்திலிருந்த கொஞ்சநஞ்ச ஐனநாயக விழுமியங்களையும் இறுதியாக குழித்தோண்டி புதைத்தது. அதாவது புலிகளின் அரசியலுக்கு மாற்றான அனைத்து அரசியல் செயற்பாடுகளுக்கும் தடைவிதிக்கப்பட்டது அல்லது மட்டுப்படுத்தப்பட்டது அல்லது புலிகளின் தலைமையின் கீழ் கொண்டுவரப்பட்டது. பிற இயக்கங்களும் ஒன்றும் சளைத்தவர்கள் அல்ல. குறிப்பாக இந்திய இராணுவம் இருந்த காலத்தில் இவர்களது அதிகார அடாவடித்தனம் புலிகளின் சாதாரண அங்கத்தவர்கள் ஆதரவாளர்கள் மற்றும் பொது மனிதர்களுக்கு எதிராகவும் மிகவும் மோசமான முறையில் நடாத்தப்பட்டது. இதனால் அடக்கப்பட்ட மனிதர்களின் விடுதலைக்காக நடைபெறவேண்டிய ஆரோக்கியமான போராட்டத்தில், கனவு கண்ட புதிய சமுதாயத்தில் இருக்கவேண்டிய சகல ஐனநாயக விழுமியங்களும் பன்முகத் தன்மைகளும் அனைத்து இயக்கங்கள் அரசியல் கட்சிகள் என்பவற்றால் இல்லாது செய்யப்பட்டது. இதற்காக பொறுப்பு ஏற்கவேண்டியது சமூகப் பிரக்ஞை கொண்டு ஒவ்வொருவரதும் தார்மிக கடமையாகும்.

புலிகளின் ஆதிக்கம் இல்லாது போனதற்குப் பின்பான இன்றைய சூழலில் துரோகி என்றால் என்ன அது யார் என்பதற்கான வரைவிலக்கணம் விளக்கம் அளிக்க முடியாதளவு சிக்கலாக்கியுள்ளது. அதாவது புலிகளின் அங்கத்தவர்களுக்கு எதிராகவே இன்று இது அதிகம் பயன்படுத்தப்படுகின்றது. இதன் விளைவாக இன்று புலிகள் இயக்க அங்கத்தவர்கள் தமக்குள்ளையே ஒருவரை ஒருவர் மாறி மாறி “துரோகி” என அழைக்குமளவிற்கு “துரோகி” என்ற சொல் மிகவும் மலினப்படுத்தப்பட்டுவிட்டது. இதற்கு தளத்திலும் புலத்திலும் இருந்த விடுதலைப் புலிகளின் தலைவர்களின் செயற்பாடே காரணமாக இருக்கின்றது. இதற்கு போராட்ட ஆரம்ப காலத்திலிருந்து மாத்தையா வரை தொடர்ந்து பின் அண்மைக் கால உதாரணமான கருணா மற்றும் பிள்ளையான் தொடங்கி இன்றைய கே.பி மற்றும் நெடியவன் வரை இது பரந்து இருக்கின்றது எனக் கூறினால் மிகையல்ல. புலிகளின் அரசியல் பார்வையில் பிரபாகரனின் இறுதி முடிவு கூட “துரோக அரசியல்” எனவே கருதப்படவேண்டியுள்ளது. ஏனனில் தன்னுயிரைக் காப்பாற்ற சரணடைய முயன்றுள்ளார். ஆல்லது சயனைட் அருந்தாது தப்பிக்க முனைந்துள்ளார். ஆனால் என்ன நடந்தது என்பது அவருக்கும் அவரைச் சுற்றியிருந்தவர்களுக்கு மட்டுமே வெளிச்சம். ஆனால் புலிகளால் கட்டமைக்கப்பட்ட பிரகாரனின் விம்பம் இறுதிநேரத்தில் உடைபட்டது என்பது மட்டும் உண்மையானது என்பதை இன்று பலர் ஏற்றுக்கொள்கின்றனர். இவ்வாறான “அரசியல் துரோகி” களுக்கு தண்டனை என்ன?

பொது மனிதர்களுக்கு எதிராகவும் ஐனநாயக மறுப்பு கொண்ட அரசியல் செயற்பாடுகளிலும் ஒருவர் ஈடுபடுவாரானால் அவருக்கான அதிகபட்ச தண்டனை என்பது நிச்சயமாக மரண தண்டனையாக இருக்கக் கூடாது. மரண தண்டனை என்பது அகராதியிலிருந்தே எடுக்கப்படவேண்டிய ஒன்று என்பது எனது உறுதியாக நிலைப்பாடு ஆகும். ஏனனில் எனது செயற்பாடு பேச்சு எழுத்து என்பவற்கு மாறான அல்லது எதிரான ஒரு மனிதரின் செயற்பாட்டுக்காக பேச்சுக்காக எழுத்திற்காக அவரது உயிரை எடுப்பது என்பது ஐனநாயக விரோதம் மட்டுமல்ல காட்டுமிராண்டித்தனமான அநாகரிகமான செயற்பாடாகும். ஒருவருக்கான தண்டனை என்பது அவரை ஆரோக்கியமான வழிகளில் நேர்மறை மனிதப் பண்புகளுடன் மாற்றுவதற்கான வழிவகையாக இருக்கவேண்டுமேயொழிய அவரையே அழிப்பதாக இருக்கக்கூடாது. ஏனனில் காலோட்டத்தில் ஒருவர் மீது குத்தப்படும் எதிர்மறை முத்திரை என்பது நேர்மறை முத்திரையாக மாறுவதற்கான சந்தர்ப்பமும் வாழ்வில் ஒவ்வொரு கணமும் ஒவ்வொருவருக்கும் இருக்கின்றது. இது ஆரோக்கியமான முன்னேற்றமான மாற்றமா என்பது சிந்தனைக்கு உரியதாக இருக்கலாம். ஏனனில் ஒருவர் தனது எல்லைகுட்பட்ட அறிவுக்கும் அனுபவத்திற்கும் ஏற்பவே தான் எதிர்நோக்கும் சூழலைப் புரிந்துகொள்வதுடன் அதனடிப்படையில் செயற்படுவார்.

உதாரணமாக இன்று தமிழ் தேசிய அரசியலில் இருக்கின்ற முக்கியமான தலைவர்கள் சிலர் அல்லது பலர் முன்பு பல்வேறு இயக்கங்களில் போராளிகளாக இருந்தவர்கள். அந்த இயக்கங்கள் புலிகளினால் ஒரு காலத்தில் தடைசெய்யப்பட்டபேர்து இவர்களுக்கு துரோகி பட்டம் வழங்கப்பட்டது. காலமாற்றத்தின் பின் இவர்கள் புலிகளுடன், அவர்களின் ஆயுதப்போராட்டத்தின் மீது நம்பிக்கை வைத்து, அல்லது வேறு வழி ஒன்றுமில்லை என அதில் இணைந்து, அல்லது அவர்களது அரசியலுக்குள் சரணாகதி அடைந்து, அல்லது மாமனிதர் மற்றும் நாட்டுப்பற்றாளர் பட்டங்கள் என பல காரணங்களுக்காக புலிகளின் அரசியலை பின்நாட்களில் முன்னெடுத்தனர் அல்லது முன்னெடுக்கின்றனர். இவ்வாறு புலிகளால் துரோகி என முத்திரை குத்தப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்ட பலர் பிற்காலங்களில் மாமனிதர் நாட்டுப்பற்றாளர் என புலிகளின் தலைமையால் அலங்கரிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டதும் நடைபெற்றதுண்டு. அதேவேளை மிகச் சிறந்த போரளிகள் என புலிகளால் பொது மனிதர்களால் போற்றப்பட்ட பலர் துரோகிகள் என குற்றம் சுமத்தப்பட்டு மரணதண்டனை பெற்றவர்களும் உண்டு. ஆகவே காலம் ஒருவரை பலவாறு மாற்றுகின்றது. புலித்தலைமையை அன்று போற்றிய அரசியல்வாதிகள் பலர், புலிகளின் ஆதிக்கம் இல்லாத இன்றைய காலத்தில் இந்தியா மற்றும் இலங்கை அரசாங்கங்களிடம் மீண்டும் அரசியல் சரணாகதி அடைந்துள்ளனர் என்பது கவனிக்கப்படவேண்டிய ஒரு விடயம்.

ஆகவே ஒருவரை துரோகி என்பது சர்வதிகாரமாகவும் சமூகத்திலிருக்கின்ற ஐனநாயக பண்புகளை வழிகளையும் மூடுவதாகவுமே இருக்கும். ஒவ்வொருவருக்கும் மற்றவர்களது ஐனநாயக உரிமைகளை பறிக்காதவரை மறுக்காதவரை தான் விரும்பும் அரசியலை தனது வழிகளில் செய்வதற்கான தார்மீக உரிமை இருக்கின்றது. இதை ஒவ்வொருவரும் மதிக்கவேண்டும். இங்கு துரோகம் எனப்படுவது சார்பு நிலையானது மட்டுமே. இதில் யார் சரி பிழை என்பதை எதிர்கால வரலாறு மட்டுமே தீர்மானிக்கும். ஆகவே ஒருவரது அரசியலை துரோக அரசியல் என முத்திரை குத்துவதைக் கைவிட்டு அவரவர் பாதையில் அடக்கப்பட்டிருக்கும் மனிதர்களின் விடுதலைக்கான தமது பங்களிப்பு, பொறுப்பு என்ன என்பதை உணர்ந்து செயற்படுவதே சரியான நிலைப்பாடாக இருக்கும். மேலும் மனித நலன்களுக்காகச் செயற்பட விரும்புகின்றவர்கள் புரிந்துகொள்ளவேண்டியதும் அறிந்துகொள்ள வேண்டியதும் என்னவெனில் யார் அடக்கப்பட்ட மனிதார்களின் சார்பாக, அவர்களின் விடுதலைக்காக, சமூக மாற்றத்திற்கா உழைக்கின்றார்கள் என்பதே. இதைப் புரிந்துகொள்ளாதவரை, “துரோக, சரணகதி, சரணடைதல், சமாதான” அரசியல் என்ற பல முத்திரைகளை பிறர் மீது குத்தி குறுகிய பார்வையையும் செயற்பாட்டையுமே நாம் கொண்டிருக்க முடியும். ஒருவர் தனது சிந்தனை மற்றும் தான் செய்யும் செயற்பாடு என்பவை அடக்கப்பட்ட மனிதர்கள் அரசியல் சமூக அபிலாசைகளை உரிமைகளை அடிப்படையாகக் கொண்டது என்ற பிரக்ஞை இருக்கும் பொழுது மட்டுமே அவர் அம் மனிதர்கள் சார்ந்து தனது அரசியலை தான் விரும்பிய வழிகளில் முன்னெடுக்கின்றார் எனலாம். இவ்வாறன பிரக்ஞையில்லாதவர் தனது அற்ப சொற்க நல்ன்களுக்காக சரணாகதி அரசியலையே முன்னெடுப்பார். இருப்பினும் என்ன அரசியலை முன்னெடுப்பது என்பது ஒருவரது தெரிவு. ஆதைப் பற்றி நாம் நமது அரசியலின் அடிப்படையில் விமர்சனங்களை முன்வைப்பதற்கான உரிமை மட்டுமே நமக்குள்ளது. நமக்கு எதிரான அரசியல் செய்கின்றார் என்பதற்காக அவர்களது உரிமைகளை மறுப்பதோ அடக்குவதோ அழிப்பதோ அல்லது மரண தண்டணை விதிப்பதோ நமத உரிமையல்ல. இது நாம் கனவு காணும் சமூகத்திற்கு எதிரான, ஐனநாயகத்திற்கு எதிரான, தனிமனித உரிமைக்கு எதிரான செயற்பாடாகவே இருக்கும். ஆகவே “துரோக அரசியல்” என்ற சொல்லுக்கும் நாம் விடை கொடுக்க வேண்டியவர்களாக உள்ளோம்.

சரணாகதி அரசியல் என்பது தமது சொந்தப் புத்தியிலும் பலத்தில் நிற்காது, தாம் அல்லது அடக்கப்பட்ட மனிதர்கள் முகம் கொடுக்கும் பிரச்சனைகளுக்கும் அவற்றுக்குத் தேவையான முடிவுகள் தீர்வுகள் என்பன தொடர்பாக அரசாங்கத்திடம் அல்லது அதிகாரத்தில் இருப்பவர்களிடம் முழுமையாக விட்டுவிடுவதுடன் தம்மையும் அவர்களிடம் முழுமையாக அர்ப்பணித்து அவர்கள் கூறுவதை எந்த மறுப்பும் விமர்சனமும் இல்லாது ஏற்பதும் என்பதாகக் கூறலாம். உதாரணமாக இலங்கையில் உள்ள தமிழ் அரசியல் கட்சிகளும் அதனது தலைவர்களும் தமது அதிகாரங்களிலும் பதவிகளிலும் கட்சியை வளர்ப்பதில் மட்டுமே குறியாக இருக்கின்றனர். ஏனனில் இவர்களது அரசியல் செயற்பாடுகள் தமிழ் பேசும் மனிதர்களது அரசியல் அபிலாசைகளையும் கோரிக்கைகளையும் உறுதியாக இலங்கை இந்திய மற்றும் சர்வதேச அரசாங்கங்களிடம் முன்வைப்பதாகவோ அதற்கான செயற்பாடுகளை முன்னெடுப்பாதாகவோ தெரியவில்லை. ஏனனில் யார் ஆட்சியிலில் அல்லது அதிகாரத்தில் இருக்கின்றார்களோ அவர்களிடம் ஒவ்வொருமுறையும் அவர்கள் முன்வைக்கும் முடிவுகளுக்கும் தீர்வுகளுக்கும் அற்ப சலுகைகளுக்கும் தாம் சரணாகதி அடைவதுதான் இவர்களது பிரதான அரசியலாக என்றும் இருந்திருக்கின்றது. இதன் மூலம் தமிழ் பேசும் மனிதர்களது அரசியலை ஒவ்வொருமுறையும் குழிதோண்டிப் புதைப்பதாகவே இவர்கள் வரலாறு இருக்கின்றது. இதில் இரண்டுவிதமான போக்குகள் உள்ளன. ஒன்று இலங்கையில் எதிர்கட்சியாக இருந்து கொண்டு, இந்திய ஆளும் அரசாங்கத்திடம் சரணாகதி அடைவது. உதாரணமாக அன்றிலிருந்து இன்றுவரையான தமிழர் விடுதலைக் கூட்டணியிலிருந்து இன்றைய தமிழ் தேசிய கூட்டணி வரையிலான கட்சிகளின் அரசியலும் அதன் தலைமைகளினதும் அரசியல் போக்கும் மரபும் இவ்வறானதாகவே உள்ளது. இரண்டாவது போக்கு இலங்கையில் ஆளும் அரசாங்கத்திடம் சரணாகதி அடைவது. உதராணமாக தமிழ் தேசிய கூட்டணிக்கு எதிரானவர்களது கட்சிகளின் கூட்டணி அரசியல் இந்த வகைக்குள் அடங்கும். இந்த வகைக்குள் முன்னாள் புலிகளின் தளபதிகள் இருப்பதுதான் இன்றைய முரண்நகை. இந்த முன்னால் புலிகளின் தளபதிகள், இன்று பேசும் அரசியலை கேட்டால் இவர்களா புலிகளின் அரசியலை முன்னெடுத்தவர்கள் என ஆச்சரியப்படவைக்கின்றது. அந்தளவிற்கு அரசாங்கத்திடம் சரணாகதி அடைந்துள்ளார்கள். இவர்களது பழைய மொழியில் இதுதான் “துரோக அரசியல்”. இவ்வாறு இவர்களது அரசியல் நிலைப்பாட்டில் தலைகீழ் மாற்றம் ஏற்படுவதற்கு காரணம் புலிகள் இயக்கத்தில் இருந்த அரசியல் இன்மையா அல்லது ஒவ்வொரு தனிபர்களிடம் இருந்த அவர்களது சொந்த அரசியல் அறிவின் பற்றாக்குறையும் சாதிய பிரதேச வர்க்க நிலைப்பாடுமா என்பது நம் சிந்தனைக்குரிய விடயம்.

ஆனால் இந்திய இலங்கை அரசாங்கங்கள் தமக்குள் முரண்பாடுகள் இருந்தபோதும் தமக்கிடையில் புரிந்துணர்வுடன் செயற்பட்டு ஒரு ஆழமான உறவை வைத்துள்ளார்கள். இதனால்தான் இலங்கை இந்திய ஆட்சியாளர்கள் தமது தேவைகளுக்கும் நல்ன்களுக்கும் ஏற்ப பயன்படுத்தும் அரசியலாக தமிழ் பேசும் மனிதர்களின் அரசியல் என்பது சுதந்திரத்திற்கு முன்வு இருந்து இப்பொழுது வரை இருக்கின்றது. இது தமிழ் பேசும் மனிதர்களைப் பொருத்தவரை மிகவும் துரதிர்ஸ்டமானது. மறுபுறம் இவர்களது மொழியில் பார்த்தால், சமூக மாற்றத்திற்காக செயற்படுகின்றவர்களின் அரசியலின் அடிப்படையில், அடக்கப்பட்ட மனிதர்களின் அரசியலின் அடிப்படையில், புலிகள் உட்பட தமிழ் இயக்கங்கள் மற்றும் தேசிய அரசியல் கட்சிகள் என ஒவ்வொருவரும் முன்னெடுத்த முன்னெடுக்கின்ற அரசியல் என்பது அடக்கப்பட்ட பொது மனிதர்களுக்கு எதிரான “துரோக, சரணாகதி அரசியல்” என்றால் மிகையல்ல. இதற்காக இவர்களுக்கு துரோகி பட்டம் அளித்து மரண தண்டடை அளிப்பதல்ல அடக்கப்பட்ட மனிதர்களின் அரசியலை முன்னெடுப்பவர்களின் பொறுப்பு. மாறாக இவர்களது பொறுப்பான பணியானது, அடக்கப்பட்ட மனிதர்களிடம் இவ்வாறான சுய நல பிழைப்பு அரசியல்வாதிகளை அம்பலப்படுத்துவதாகவே இருக்கவேண்டும். அடக்கப்பட்ட பொதுமனிதர்கள் இவ்வாறான அரசியல்வாதிகளைக் புரிந்துகொண்டு புறக்கணிக்குமளவிற்கு பிரக்ஞை கொண்ட அரசியல் செயற்பாட்டாளர்கள் செயற்படவேண்டும்.

இலங்கை இந்திய அரசாங்கங்களிடம் சரணாகதி அடைந்ததைவிட யுத்த காலத்தில் அதாவது புலிகள் அதிகாரத்திலிருந்தபோது மட்டும் புலிகளின் தலைமையிடம் சரணாகதி அடைந்தவர்கள் தான் மேற்குறிப்பிட்ட தமிழ் தேசிய அரசியல்வாதிகள். இவர்கள் மட்டுமல்ல இவர்களைப்போல மனித உரிமை, ஐனநாயகம் கதைத்த மேலும் பலர் இவ்வாறு புலிகளிடம் சரணாகதியடைந்தவர்களாக இருந்திருக்கின்றனர். இதற்கு காரணம் அன்று புலிகள் தொடர்பாக உருவாக்கப்பட்ட அதீத நம்பிக்கை ஐதீகங்கள் மயக்கம் மற்றும் பிம்பங்கள் என்பனவாகும். இவ்வாறு கட்டமைக்கப்பட்ட கருத்தாதிக்கத்தால் அல்லது அவர்களது வெற்றிகரமான தாக்குதல்களின் விளைவாக அதில் மயக்கமடைந்து அவர்களது பிற்போக்கான அரசியல் செயற்பாடுகளையும் ஐனநாயக வீரோத போக்குகளையும் மறந்து அவர்களை ஏற்றுக்கொண்ட பலர் இன்றுவரை மீண்டும் விழித்து எழவில்லை என்பது கவலைக்கிடமானது. இதில் பல கலாநிதிகள் பேராசிரியர்கள் மற்றும் கல்விமான்களும் அடக்கம் என்பதும் இன்றுவரை இவ்வாறன புலம் பெயர் புலித்தலைமைகளுக்காக குரல் கொடுப்பதும் செயற்படுவதும் தமிழ் தேசிய அரசியலில் ஒரு துர்ப்பாக்கியமான நிகழ்வாகும். இலங்கை வாழ் தமிழ் பேசும் மனிதர்கள் தமது அரசியல் உரிமைகளைப் வெறவேண்டுமாயின் இவ்வாறான சரணாகதி அரசியலுக்கு முதலில் முற்றுபுள்ளி வைக்கவேண்டியது அவசரமான அவசியமான செயற்படாகும். அடக்கப்பட்ட மனிதர்களின் விடுதலைக்கான, அவர்களின் நல்வாழ்வுக்கா, சமூக மாற்றத்திற்கான அரசியலை, தமக்கிருக்கும் ஜனநாயக வழிகளில் உறுதியுடனும் வெளிப்படையாகவும் முன்வைத்து பல்வேறு வழிகளில் செயற்படுவதனுடாக தமது நோக்கத்தை பிரக்ஞையுள்ள அரசியற் செயற்பாட்டாளர்கள் அடையலாம். இதுமட்டுமல்ல இவ்வாறான செயற்பாடுகள் மூலம் தமது ஐனநாயக எல்லைகளை மேலும் பரந்தளவில் விரிவாக்கிக் கொண்டு முன்னே செல்லலாம். இன்றைய சூழலில் இவ்வாறன செயற்பாடுகளை இலங்கை இந்தியாவில் மட்டுமல்ல சர்வதேசளவில் ஒருக்கிணைத்து முன்னெடுக்கவேண்டியது அவசியமாகும்.

தமிழ் தேசிய விடுதலைப் போராட்டதின் போக்கில் கட்டமைக்கப்பட்ட “துரோக மற்றும் சரணாகதி அரசியல்” தொடர்பான சொல்லாடலானது சரணடைதல் என்பது தொடர்பான எதிர்மறையான ஒரு கருத்தாதிக்கத்தை நமக்குள் விதைத்துள்ளது. தனிப்பட்ட முறையில் ஒரு மனிதராக எந்த ஒரு இராணுவத்திடமும் நான் சரணடைவது என்பது என்னால் சிந்திக்கவோ நினைத்துப் பார்க்கவோ முடியாத ஒரு விடயம். இதற்கு சரணடைவது வெட்ககேடானது என்பதல்ல முக்கியமான காரணம். மாறாக சரணடைதலின் பின் முகம் கொடுக்கவேண்டிய அல்லது அனுபவிக்கவேண்டிய சித்திரவதை மற்றும் துன்புறுத்தல்களை கற்பனை செய்யும் பொழுது அதை ஏற்றுக்கொள்ளவோ தாங்கிக்கொள்ளவே முடியாது என உணர்வதே முக்கிய காரணம். இருப்பினும் இறப்பதா சரணடைவதா என இரு தெரிவுகள் என் முன்னால் இருக்கும் பொழுது சரணடைவதையே தெரிவு செய்வேன். ஏனனில் நாம் போராடுவது எனது வாழ்வையோ பிற மனிதர்களது அதாவது புரட்சியாளர்கள் எதிரியாக கருதும் அரசாங்கத்திடம் அடியாளாக பணத்திற்காக வேலை செய்யும் இராணத்தினரின் வாழ்வை கூட அழிப்பதற்கல்ல. மாறக ஒவ்வொரு மனிதர்களதும் அவர்கள் வாழும் சமூகத்தினதும் வாழ்வை மேம்படுத்துவதற்கே நமது ஒவ்வொரு போராட்டமும் முன்னெடுக்கப்படுகின்றது என்றால் மிகையல்ல. ஆகவே சரணடைவதன் மூலம் தொடர்ந்து வாழ்வதற்கான முடிவை எடுப்பதே சரியானது என்பதே எனது நிலைப்பாடு. இவ்வாறு சரணடையும் முடிவை எடுக்கும் பொழுது முன் திட்டமிடலுடன் சர்வதேச சட்டங்களின் அடிப்படையில் பாதுகாப்பை பெற முடியுமாயின் அது நிச்சயமாக சாதகமான ஒரு விடயமே. ஏனனில் இதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. முதலாவது சித்திரவதையிலிருந்து தப்புவதற்கான ஒரு வழியாக இது இருக்கும். இரண்டாவது ஒரு அரசியல் கைதியாக போராட்டத்தை தொடர்வதற்கும் இது வழி செய்யலாம். இதன் மூலம் நாம் தொடர்ந்தும் ஒரு மனித உயிரை காப்பாற்றுவதும் அவர் வாழ்வை பாதுகாப்பதும் மட்டுமல்ல போராட்டத்தையும் வேறு தளங்களில் முன்னெடுத்துச் செல்ல முனையலாம். ஆகவே சரணடைவது என்பது ஒன்றும் வெட்கப்படவேண்டிய விடயமல்ல. அது மிகவும் துணிகரமான முடிவே என்றால் மிகையல்ல. ஆனால் தமிழ் தேசிய விடுதலைப் போராட்டத்தில் சரணடைதல் என்பது இந்த அர்த்தத்தில் பயன்படுத்தப்படாமை இறுதியாக புலிகளின் தலைமையே தன்னைக் காப்பாற்ற முடியாத நிலைக்கு கொண்டு வந்தவிட்டது மனிதாபிமானடிப்படையில் கவலைக்குரிய விடயமே.

விடுதலைப் புலிகளின் தலைமையானது தமது இராணுவரீதியான செயற்பாட்டுக்குள்தான் தமது அரசியலை உள்ளடக்கி போராட்டத்தை முன்னெடுத்தனர். இதனால்தான் போராட்டத்தில் இராணுவ ரீதியாக ஏற்படும் தோல்வி என்பதை தமது அரசியல் ரீதியான தோல்வியாகவும் கருதினர். ஆனால் நிச்சயமாக அப்படி சிந்திக்கவோ அல்லது இருந்திருக்கவோ வேண்டிய அவசியமில்லை. ஏனனில் இரண்டும் முற்றிலிலும் இரு வேறு விடயங்கள் மட்டுமல்ல இராணுவ அல்லது ஆயுத வழி செயற்பாட்டின் தேவை என்பது பிரதான அரசியல் செயற்பாட்டில் மட்டுப்படுத்தப்பட்ட குறுகிய கால தேவைக்காக பயன்படுத்தப்படும் ஒரு பகுதியான செயற்பாடு மட்டுமே. ஆனால் புலிகளின் தலைமை, ஒரு போராட்டத்தின் பகுதிச் செயற்பாடையே, போராட்டத்தின் பிரதான செயற்பாடாக கருதி மதித்து முன்னெடுத்தனர். இது தொடர்பாக கிளிநொச்சி பிடிபடுவதற்கு முன்பு, “இராணுவ தோல்வியா? அரசியல் தோல்வியா” என ஒரு கட்டுரை எழுதியிருந்தேன். அதை எனது வலையில் பார்க்கலாம். பல நேரங்களில் புலிகளின் தலைமை இவை இரண்டையும் ஒன்றிலிருந்து ஒன்றைப் பிரிக்கத் தவறிவிட்டனர். புலிகளின் தலைமையானது தமது இறுதிக் கணங்களில் அரசியல் ரீதியாக சரணடைவது, இராணுவ ரீதியாக சரணடைவது, தமது நலன்களுக்காக சரணடைவது என மூன்றையும் ஒன்றுடன் ஒன்று குழப்பியதன் விளைவே அவர்களுக்கு ஏற்பட்ட துர்ப்பாக்கியமான முடிவுக்கு காரணம் எனலாம். அதாவது இவர்கள் இராணுவ ரீதியாக சரணடைதல் என்பதை தமது அரசியலையே சரணடைய செய்யும் சரணாகதி அரசியலாகவும் நினைத்தமையே இன்றைய நிலைமை ஏற்ப்படக் காரணமாகவுள்ளது என்றால் மிகையல்ல. கிளிநொச்சி பிடிபட்ட போது கூட சரணடைதல் என்பதை புலிகள் அரசியல் ரீதியான தோல்வியாக கருதாது தற்காலிக இராணுவ ரீதியான தோல்வியாகவும அதற்கான சரணடைதலாகவும் புரிந்து செயற்பட்டிருப்பார்களேயானால் இறுதிக் காலங்களில் குறிப்பாக பொது மனிதர்களுக்கும் கீழ் நிலை போராளிகளுக்கும் ஏற்பட்ட கொடூரமான நிலையைத் தவிர்த்திருக்கலாம். ஏனனில் குறிப்பிட்ட சூழ்நிலையைப் பொறுத்து, உதாரணமாக அதிகமான இழப்புகளை கொடுக்கப்போகின்றோம் எனக் கருதும் பட்சத்தில், அதாவது முதலில் பொது மனிதர்களது உயிரையும் பின் நமது உயிரையும் பாதுகாக்கும் நோக்கத்துடன் மற்றும் அடுத்த கட்டத்திற்கு தமது அரசியல் செயற்பாட்டைக் கொண்டு செல்வதற்குமான ஒரு தந்திர உபாயம் என இவ்வாறான இராணுவ சரணடைதலைக் கூறலாம். மாறாக இது ஒருவரது அல்லது இயக்கத்தினது அல்லது கட்சியினது அரசியலையோ அதன் கொள்கைகளையோ சரணடையச் செய்வதாகவோ அல்லது நீர்த்துப்போவச் செய்வதாகவோ அல்லது சரணாகதி அரசியலாகவோ இவ்வாறன சரணடைதல்கள் செயற்பாடுகள் ஏற்படுத்தாது அல்லது கருதப்படமாட்டாது என்பதை அன்று புலிகளின் தலைமை புரிந்திருக்கவில்லை.

நாம் வாழும் காலத்தில் பல உதாரணங்கள் இருக்கின்றன. உதராணமாக அனைவரும் அறிந்த இரண்டு பிரபல்யமான தலைவர்கள் இருக்கின்றார்கள். ஒருவர் நெல்சன் மன்டேலா. மற்றவர் பிடல் காஸ்ரோ. இவர்கள் இருவரும் தம்மை அடக்கிய இராணுவத்தால் பிடிப்பட்டவர்கள். இராணுவத்தில் பிடிபடுவதற்கு பதிலாக அவர்கள் அன்றே இறந்திருக்கலாம். அவ்வாறு அன்றே சண்டையிட்டு இறந்திருந்தால் என்ன பயன்? நிச்சயமாக அவர்களது உயிர் இருந்திருக்காது. போராட்டத்திற்கு என்ன நடந்திருக்கும் என எந்த விதமான எதிர்வும் கூறமுடியாது. ஆனால் அவர்கள் பிரச்சனைகளுடன் வாழ்ந்தார்கள். வாழ்வதன் மூலம் பிரச்சனைகளை எதிர்கொண்டு எவ்வாறு தமது போராட்டத்தை வெற்றிப்பாதையில் கொண்டு செல்லலாம் என சிந்தித்தவர்கள். செயற்பட்டவர்கள். நெல்சன் மண்டேலா சிறையில் இருந்தாவாரே போராட்டத்தை முன்னெடுத்து வெற்றிப்பாதைக்கு கொண்டு சென்றவர். பிடல் “வரலாறு என்னை விடுதலை செய்யும்” என்ற தனது பிரபல்யமான சொற்பொழிவை தனக்கு எதிரான அரசாங்கத்தின் நீதிமன்றத்தில் ஆற்றி அதை நாமும் கற்பதற்கு புத்தகமாக தந்தவர்.

இலங்கையிலும் இவ்வாறு பல உதாரணங்கள் இருந்தபோதும் தமிழ் தேசிய அரசியலில் தங்கத்துரை குட்டிமணி என்பவர்களைக் குறிப்பிடலாம். இவர்கள் கைது செய்யப்பட்ட பின் ஒவ்வொரு முறையும் அவர்கள் நீதிமன்றத்தில் பேசியது அன்றைய சூழலில் முக்கியமான ஒரு போராட்ட அனுகுமுறையாக இருந்தது. அதாவது தம் வாழ்வில் சந்தித்த ஒவ்வொரு சந்தர்ப்பத்தையும் தமது நோக்கத்தற்காக பயன்படுத்தினார்கள். இவ்வாறன ஒரு செயற்பாடே இவர்கள் வாழ்வானது. இது பொது மனிதர்களிடம் எழுச்சியை உருவாக்குதுடன் போராட்டம் தொடர்பான ஒரு விழிப்புணர்வையும் பரந்துபட்டளவில் ஏற்படுத்துவதற்கு ஊடகங்களினுடான இலவசமான பிரச்சாரத்திற்கும் வழிவகுத்தது எனக் கூறலாம். சிலர் இதற்கு எதிரான கருத்தாக, “பிரபாகரன் பிடிபட்டிருந்தால் அல்லது சரணடைந்திருந்தால் ரோகண வீஜயவீரவைக் கொன்றது போல் கொன்று இருப்பார்கள்” என்று கூறலாம். இது உண்மையானது மட்டுமல்ல அவ்வாறுதான் இறுதியில் நடந்தது. இருப்பினும் பல்லாயிரக் கணக்கான மனிதர்களைக் காப்பாற்றுவதற்காக இனி சண்டை பிடித்து வெல்லமுடியாது என உணர்ந்த நேரத்தில் சரணடையாது ஆகக் குறைந்நது மீண்டும் காட்டுக்குள்ளாவது சென்றிருந்தால் அனைவரும் அல்லது குறைந்த இழப்புகளுடன் தப்பித்திருக்கலாம். ஆனால் அதைக் கூட செய்யாது பல்லாயிரக்கணக்கான மனிதர்களும் இளம் போராளிகளும் அநியாயமாக இறப்பதற்கு அல்லவா புலிகளது தலைமையின் பிடிவாதமான அல்லது அவர்கள் எதையோ எதிர்பார்த்த அல்லது யாருக்காகவோ காத்திருந்த முடிவுகள் வித்திட்டது. இந்தத் தவறு எதனால் ஏற்பட்டது? இவ்வாறான தவறுகளுக்கு இன்று இருக்கின்ற புலிகளின் தலைமைகளில் யார் பொறுப்பாக பதில் கூறக் கூடியவர்கள்? கே.பி யா? நெடியவனா? உருத்திரகுமாரனா? ஆல்லது வேறு யாருமா? ஆல்லது இந்த பொறுப்புகளை எல்லாம் தட்டிக் கழித்துவிட்டு தொடர்ந்தும் பிழைப்புவாத, பணம் உழைக்கும், நாட்களைக் கடத்தும் அரசியலையா தொடரப்போகின்றார்கள்? தமிழ் பேசும் மனிதர்களே எப்பொழுது இவர்களை நோக்கி நாம் கேள்வி கேட்பது? இறுதி போரில் இறந்தவர்கள் தொடர்பாக இவர்களது பொறுப்பு என்ன?

புலிகளின் தலைமை பொது மனிதர்களுக்காகத் தான் போராடினார்கள் எனின் அவர்களைக் காப்பாற்றுவதற்காக அநியாய அழிவுகளை தடுப்பதற்காக கிளிநொச்சி பிடிபடப்போகும் தறுவாயில் அல்லது பிடிபட்ட பின்பு கூட தமது ஆயுதங்களை மௌனிக்க செய்திருக்கலாம். அந்த நேரம் சரணடையும் முடிவு எடுக்கப்பட்ருந்தால் அது ஆரோக்கியமான உறுதியான தொலைநோக்குள்ள ஒரு அரசியல் முடிவாகவும் பல மனித உயிர்களைப் பாதுகாத்ததற்குமான முடிவாக இருந்திருக்கும். ஆனால் இறுதிக் கணங்களில் முள்ளிவாய்க்காளில் வைத்து தமது ஆயுதங்களை மௌனிக்கச் செய்து சரணடைந்தது என்பது பொது மனிதர்கள் மற்றும் கீழ் நிலைப் போராளிகளின் உயிர்களை எந்தவகையிலும் மதியாத அதைப் பற்றிய அக்கறையில்லாத தம்மை அதாவது புலிகளின் தலைமைகளின் உயிரை மட்டுமே காப்பாற்ற எடுத்த ஒரு கேவலமான சுயநல முடிவாகவே இருக்கின்றது என்பது வெளிப்படையான ஒரு உண்மை. இவ்வாறான ஒரு முடிவு பிழை என நான் கூறவில்லை. ஆனால் காலம் தாழ்த்திய ஒரு முடிவு மட்டுமல்ல சுயநலம் சார்ந்ததுமாகும். ஏனனில் அப்பொழுதுதான் அவர்களுக்கு தாம் இனி தப்பப் போவதில்லை என்பதை உணர்ந்ததுடன் தம் உயிரின் முக்கியத்துவமும் அதைப் பாதுகாக்கவேண்டிய தேவையையும் உணர்ந்தார்கள். ஆனால் அதுவரை பிற மனிதப் போராளிகள் தம்மைத்தாமே தற்கொலை செய்தும் சண்டையிட்டும் தம்மைப் பாதுகாக்கப் போராடி இற்ந்தபோது அவர்கைள மாவீரர்களாக போற்றிய தலைவர்களுக்கு அவர்களது உயிர் பெரிதாக தெரிவில்லை. மேலும் பல போராளிகளை சிறையிலிருந்தபோது கூட தற்கொலை செய்யத் தூண்டினார்கள். அப்பொழுதெல்லாம் சரணடைதல் பற்றி சிந்திக்கவில்லை. சமாதானம் பேசவில்லை. ஏனனில் இறந்தது நானல்லவே…யாரோ ஒருவர். வேறு மனிதர். மேலும் பொது மனிதர்கள் இறப்பதைப் பற்றிக் கூட புலிகளின் தலைமைக்கு எப்பொழுதும் கவலை இருக்கவில்லை. குழந்தைகள் படும் வேதனை பற்றிய உணரவில்லை. ஏனனில் தம்மை அவர்களில் ஒருவராக உணரவில்லை. நாம் நமது தேசம் என உணர்ந்தது, “வாழும் மனிதர்களையல்ல” மாறாக அந்த மனிதர்கள் வாழ்ந்த மண்ணையும் அந்த மண்னை சுற்றியிருந்த நீர் வளத்தையுமே. இல்லையெனில் உண்மையிலையே இந்த பொது மனிதர்கள்மீது அக்கறை இருந்திருக்குமாயின் கிளிநொச்சி பிடிபட்டபோதே தொடர்ந்தும் சண்டைபிடிக்காது போராளிகளையும் பொது மனிதர்களையும் அவர்களது உயிர்களையும் காப்பாற்றுவதற்கான முடிவை எடுத்திருப்பார்கள்.

புலிகளின் தலைமை இறுதிக்கணங்களான அந்த நேரம் சரணடைய எடுத்த முடிவு என்பது இராணுவ ரீதியாக மட்டுமல்ல அரசியல் ரீதியாகவும் எந்த வலுவுமில்லாததாக இருந்தது. யாரோ கூறியதுபோல் எல்லோரையும் கிண்டல் செய்யும் “ஒரு பகிடி”யான முடிவே அது என்றால் மிகையல்ல. இதன் அர்த்தம் அப்பொழுது வெள்ளைக் கொடியுடன் சரணடைந்தவர்களை இலங்கை அரசாங்கத்தின் அனுசரணையுடன் அவர்களது இராணுவம் கொன்றதை நியாயப்படுத்துவதுமல்ல. அவர்கள் அவ்வாறு தமது உயிரைக் காப்பாற்ற எடுத்த முடிவை தவறு என கூறுவதுமல்ல. ஆனால் இரண்டு விடயங்கள் கவனத்திற்குரியது. ஓன்று சரணடைதல் தொடர்பான முடிவு எடுக்கப்ட்ட நேரமும் அதற்கான சூழலும் தமிழ் பேசும் மனிதர்களின் அரசியலை வலுவிலக்கச் செய்துள்ளதே இங்கு கவனத்திற்கு உரிய விடயமாகும். இரண்டாவது விடயமாக கவனிக்கப்படவேண்டியது புலிகளின் தலைமைகள் தமது உயிர் பாதுகாப்பாக இருக்கும் வரை பல்லாயிரக்கனக்கான பொது மனிதர்கள் இளம் போராளிகள் தற்கொலை படையணிகள் இறப்பதை வியாபாரம் செய்து கொண்டாடிய போதும் மற்றும் துரோகி என பட்டமிழைக்கப்பட்ட வேறு அரசியல் கருத்துக்கள் கொண்ட மனிதர்கள் என்பவர்களையும் தாம் கொன்று தெருதெருவாக விசியபோதும் மனித உயிர் பற்றிய கரிசனை இல்லாமல் இருந்தது மிகவும் கடுமையான விமர்சனத்திற்கு உரிய ஒரு விடயமாகும். திலீபன், குமரப்பா புலேந்திரன் உடன் இறந்த மற்ற ஒன்பது போராளிகளினதும் உயிர்களை மட்டுமல்ல இன்னும் பல்லாயிரக்கனக்கான போராளிகளினதும் பொது மனிதர்களினதும் உயிர்களைக் காப்பாற்றியிருக்கலாம். அவர்களது விடுதலைக்காக பல வழிகளில் புதிய ஆரோக்கியமான முறைகளில் போராடியிருக்கலாம். ஆனால் இறந்தவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு நோக்கத்திற்காக தற்கொலை செய்ய நிர்ப்பந்திக்கப் பணிக்க அல்லது அவ்வாறு செய்யப் பயிற்றுவிக்கப்பட்டார்கள். ஏனனில் தலைமையின் உயிர் மட்டும் பாதுகாப்பாக இருந்தது. அந்த உயிர் இறக்கவில்லை. இறந்தது எல்லாம் யாரோ ஒருவரின் உயிர். எனது கேள்வி சந்தேகம் என்னவெனில் பல போராளிகளது தேவையில்லா மரணங்களை பல சந்தர்ப்பங்களில் தவிர்த்திருக்கலாம் என்பதே. என்னைப்பொறுத்தவரை எல்லாவற்றையும் விட மனித உயிரே உயர்ந்தது. ஆனால் தமிழ் இயக்கங்கள் குறிப்பாக புலிகளின் தலைமை வழிநாடாத்திய அரசியலோ உயிர்களை மிகக் கேவலமாக அற்பமாக மதிக்கும் அரசியல் என்றால் மிகையல்ல. ஆகவே இறுதி நேரத்தில் தமது உயிரைப் காப்பதற்காக மட்டும் சரணடையும் முடிவை எடுத்தது அவர்களது பார்வையில் “துரோகச் செயல்” தான். ஆனால் இது துரோகமா இல்லை என யார் தீர்மானிக்கப்போகின்றார்கள். இவ்வாறு கட்டாயமாகத் தீர்மானிக்கவேண்டும் என்பதல்ல இக் கட்டுரையின் நோக்கம். நமது போராட்டத்தின் அதைத் முன்னெடுத்த தலைமையின் பண்பை புரிந்துகொள்வதே முக்கியமானது. துரதிர்ஸ்டவசமாக நமது போராட்டமும் போராடிய இயக்கங்களும் அடக்கப்பட்ட மனிதர்களுக்காகப் போரடவில்லை. அவர்களின் பெயரால் தமது அதிகாரத்திற்காகவே போராடினார்கள் என்றால் மிகையல்ல.

இவ்வாறு புலிகளின் தலைமை தொடர்பான அவர்களது சிந்தனைகள் செய்ற்பாடுகள் தொடர்பான ஆரோக்கியமான ஒரு விமர்சன பார்வையை முன்வைத்தோமேயானால் நாம் நிறையவே கற்ற முடியும். மாறாக நமது தேசிய தலைவரின் பாதையில் தொடர்ந்தும் செய்ற்படுவதாக கூறும் புலம் பெயர் புலிகளின் அமைப்புகளான நாடு கடந்த அரசாங்கமும் மற்றும் ஒவ்வாரு நாட்டிற்கான புலம் பெயர் புலிகளின் போலி ஜனநாயக சபைகளும் இவற்றுக்கான பதில்களை முன்வைக்கவேண்டும். கடந்தகால தவறுகள் மற்றும் பொது மனிதர்களின் சந்தேகங்கள் கேள்விகள் ஒவ்வொன்று தொடர்பாகவும தமது நிலைப்பாடுகளை பதில்களை முன்வைக்கவேண்டும். இவர்கள் இவ்வாறு செய்யாது விட்டுவிட்டு தொடர்ந்தும் செயற்படுவார்களாயின் தமிழ் பேசும் மனிதர்களை மீண்டும் மீண்டும் முட்டாளாக்கும் பயன்படுத்தும் செயற்பாடே இவர்களுடையதாகும். இந்த அமைப்புகளிலிருந்தும் அதன் சார்பாகவும் பொது மனிதர்களிடம் பங்களிப்புக்காக குறிப்பாக பணத்திற்காக அணுகும் நபர்களிடம் பொது மனிதர்கள் தமது கேள்விகளை சந்தேகங்களைக் கேட்கவேண்டியது கட்டாயமாகும். மேற்குறிப்பிட்ட சந்தேகங்கள் கேள்விகள் போன்றவற்றை இந்த இயக்கங்களுக்குப் பங்களிப்பு செய்த மனிதர்களாவது அறியமுடியாமலிருப்பதற்கு, தமிழ் பேசும் மனிதர்களது அரசியலைப் பிரதிநிதித்துவப்படுத்திய தலைமைகளின் கட்சிகளின் அரசியலில் வெளிப்படையற்றதன்மையும் பொது மனிதர்களுக்கு பொறுப்பு கூறவேண்டிய கடப்பாட்டு உணர்வும் இல்லாமை முக்கியமான காரணங்கள் எனக் கூறலாம். இதானால் இந்த தலைமைகள் கூறுவது அனைத்தும் இறுதியானதும் வேதவாக்குமானது. பொது மனிதர்களும் இவற்றை வேதவாக்காக மதித்தார்களே ஒழிய அவற்றை எதிர்த்து கேள்வி கேட்கவில்லை. விமர்சிக்கவுமில்லை. விளக்கம் கேட்கவுமில்லை. அதற்கான சந்தர்ப்பத்தையோ சூழலையோ புலிகளின் தலைமையோ பிற இயக்க அல்லது கட்சிகளின் தலைமைகளோ உருவாக்கவுமில்லை. தமிழ் பேசும் மனிதர்களின் விடுதலைப் போராட்ட அரசியல் காவு கொடுக்கப்பட்டதற்கு இவ்வாறான பண்புகளும் ஒரு காரணம் என்றால் மிகையல்ல..

நம் உயிர் அது கொண்ட உடல் இந்த பிரபஞ்சத்தில் சுதந்திரமாகவும் சகல உரிமைகளுடன் ஆரோக்கியமான ஒரு சமூகத்தில் வாழ்வதற்கான போராட்டமே நமது அடிப்படை அரசியல் செயற்பாடுகளுக்கான காரணம் என்றால் மிகையல்ல. ஆகவே நமது உடலை பாதுகாக்கவேண்டியதே முதன்மையான நோக்கமாக இருந்திருக்கவேண்டும். மனிதர்கள் நடாத்தும ஒவ்வொரு போராட்டமும் ஒவ்வொருவரும் விடுதலையடைந்து சுதந்திரமாக ஆனந்தமாக சம உரிமைகளுடன் வாழ்வதுதான். ஆகவே போராட்டம் என்பதே வாழ்வுடன் இணைந்ததுதான். மாறாக வாழ்வை செயற்கையாக கொலை செய்து இறப்பதன் மூலம் தொலைப்பதல்ல. இதனால் எந்தப் பயனும் யாருக்குமில்லை. ஆகவே சமாதான அரசியல் பேசலாம். சமாதான அரசியல் என்பது தமிழ் பேசும் மனிதர்களது அரசியலையே சரணடையச் செய்யுவிடும் சரணாகதி அரசியல் அல்ல. ஆனால் இன்று பலராலும் பேசப்படுகின்ற சமாதான சக வாழ்வு அரசியல் என்பது தான் சரணாகதி அரசியலே. தமிழ் பேசும் மனிதர்களின் அரசியல் அபிலாசைகளையும் உரிமைகளையும் இது காலவரை அவற்றுக்காக இழக்கப்பட்ட உயிர்களையும் இலங்கை இந்திய அரசாங்கங்களிடம் அடகுவைத்துவிட்டு அவர்களிடம் கையேந்தி பிச்சை எடுக்கின்றனர். சிலநேரங்களில் இந்த அரசாங்களின் செயற்பாடுகளுக்குப் பயந்து பிச்சை வேண்டாம் நாயைப் பிடி என்றளவில் தான் இன்றைய தமிழ் பேசும் அரசியல் வாதிகள் இருக்கின்றனர். இதற்குமாறாக நமது உரிமைகள் அரசியல் அபிலாசைகளையும் அடிப்படை மனித கௌரவத்தையும் சுதந்திரத்தையும் நிலைநிறுத்திக் கொண்டே சமாதான அரசியல் பேச வேண்டும். இவற்றை விட்டுக் கொடுத்து பேசப்படும் சமாதான அரசியல் என்பது “பூச்சியத் தீர்வே”. ஆனால் இவ்வாறான அரசியல் பேசுவதற்கு ஆகக் குறைந்தது தமிழ் தேசிய போராட்டத்தை வெற்றியடையச் செய்வதற்கு தமிழ் கட்சிகள் மற்றும் இயக்கங்களுக்குள் உறுதியான ஒற்றுமை அவசியமாகும். ஆகவே சில வேண்டுகோளை முன்மொழிவுகளை இங்கு முன்வைக்க விரும்புகின்றேன்.

முதலாவது இன்றுள்ள ஒவ்வொரு தமிழ் கட்சிகளதும் இயக்கங்களதும் கடந்தகால தலைமைகள் தவறு இழைத்திருக்கின்றனர். ஒவ்வொருவரது கைகளிலும் இரத்தக் கறைகள் உள்ளன. ஆகவே இவர்கள் அனைவரும் தங்கள் கட்சியையும் இயக்கங்களையும் கலைப்பதே ஆரோக்கியமானதும் பயனள்ளதுமாகும். இவ்வாறு கலைத்துவிட்டு ஒரு கட்சியின் கீழ் ஒற்றுமையாகவும் உறுதியாகவும் நின்று செயற்படுவோமானால் நிச்சயம் வெற்றி கிடைப்பதற்கான சாத்தியங்கள் அதிகம்.

இவ்வாறான ஒரு அரசியல் கட்சியை இலங்கை இந்தியா சிறிலங்கா வடக்கு கிழக்கு பிரதேசம் மற்றும் சர்வதேச அடிப்படையில் உருவாக்குவது சிறந்தது.

புலம் பெயர் தேசங்களில் தமிழ் தேசிய அரசியலைப் பயன்படுத்தி தன்னிச்சையாக அரசியலில் ஈடுபடுகின்றனவர்களை ஒருங்கிணைத்து ஒரு அரசியல் கட்சி சார்பாக பிரதிநித்துவப்படுத்துவது பலம் மிக்கதும் பயனள்ளதுமாகும். அல்லது இவ்வாறான அரசியல் கட்சி சார்ந்து பிரதிநிதிகளை தேர்தல்களில் நிறுத்துவதன் மூலம் சர்வதேச ரீதியாக நமது அரசியல் கோரிக்கைகளை ஐனநாயக ரீதியில் பலமாக முன்வைக்கலாம்.

சிறிலங்காவில் சிங்களம் பேசுகின்ற மனிதர்களுடன் குறிப்பாக தமிழ் பேசும் மனிதர்களின் சகல உரிமைகளையும் குறிப்பாக சுயநிர்ணைய உரிமையை ஏற்றுக்கொள்கின்ற முற்போக்காளர்களுடன் கூட்டுறவு அடிப்படையில் இணைந்து வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதும் தேசிய விடுதலை போராட்டம் வெல்வதற்கான சாத்தியத்தை கொடுக்கும். சிங்களம் தமிழ் பேசும் மனிதர்களுக்கு இடையில் ஆழமான புரிந்துணர்வும் உறுதியான ஒன்றினைந்த செய்ற்பாடும் ஏற்படவில்லை எனின் வெற்றி என்பது கஸ்டமானதே.

நம்பிக்கையுடன்

நட்புடன்

மீராபாரதி

http://meerabharathy.wordpress.com/2010/09/06/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%95%e0%af%8d%e0%ae%9e%e0%af%88-%e0%ae%a4%e0%af%81%e0%ae%b0%e0%af%8b%e0%ae%95-%e0%ae%9a%e0%ae%b0%e0%ae%a3%e0%ae%be%e0%ae%95%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%9a%e0%ae%b0/

Link to comment
Share on other sites

  • Replies 74
  • Created
  • Last Reply

வெறும் ஊகத்தின் அடிப்படையில் மட்டுமே இந்த சரண் அடைதல் பற்றி எழுதப்பட்டு இருக்கிறது...

எரிகிற வீட்டில் கூரையைப் பிடுங்குவதுபோல் தமிழ் பேசும் மனிதர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் கஸ்டங்கள் முரண்பாடுகளில் குளிர்காய்வதுடன் தமது கட்சிகள் அல்லது அமைப்புகள் இயக்கங்கள் என்பவற்றையே உறுதியாக நிலைநிறுத்துவதற்கும் நியாயப்படுத்துவதற்குமே முயற்சிக்கின்றனர்.

இது இதை எழுதிய கட்டுரையாளருக்கும் பொருத்தமாக இருக்கும் எண்டு நினைக்கிறன்...

வெறும் புலிகள் எதிர்ப்பு கோசங்களும் கட்டுரைகளும் எழும்பி வந்து தமிழர்களுக்கு தீர்வை வாங்கி தந்துவிடப்போவதில்லை.... செயற்பாடுகள் மிக முக்கியமாக வளிகாட்டுதல்கள் மட்டும் தான் தமிழ் மக்களை ஒரு சாராரை நோக்கி திரும்பி பார்க்க வைக்கும்... 30 வருடம் போராடிய புலிகளை சாடுவதை விடுத்து இரண்டு வருடங்கள் ஆகப்போகும் இந்த காலமும் இதை விட்டு வெளியிலை யாரும் இன்னும் வரவில்லை எண்டதே பின்னடைவு தான்... 30 வருடம் எதிர்த்து தான் தமிழ் மக்களை வளிக்கு கொண்டு வரமுடியும் எண்று கட்டுரையாளர் நினப்பாராக இருந்தால் இவர்களால் எண்றும் வர முடியாது...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தக்கன வாழும், தகாதன அழியும் என்ற கூர்ப்புவிதியின்படிதான் தமிழ் அரசியல் அமைப்புக்களின் எதிர்காலம் இருக்கும். ஒரு காலத்தில் டைனோசர் ஆதிக்கத்தில் இருந்த இந்தப் பூமியானது, மனிதர்களின் ஆதிக்கத்திற்குள் வந்ததுபோன்று, புலிகளின் ஆதிக்கத்தில் இருந்த தமிழர்களின் அரசியல் செயற்பாடுகள், ஏதோவொரு தமிழ்மக்களின் வாழ்வுபால் அக்கறையுள்ள, ஒன்றிணைந்த அமைப்பின்கீழ் வந்து சேரும். அப்போது காளான்களாகக் காணப்படும் தற்போதைய அரசியல் அமைப்புக்கள் உக்கி உலைந்து போயிருக்கும். எனினும் ஓர் ஒன்றிணைந்த அமைப்பு உருப்படியாக அரசியல் செய்ய அதிகம் காலம் எடுத்தால், தமிழர்கள் இலங்கையில் சிறுபான்மையினருக்குள் சிறுபான்மையினராகப் போய்விடுவர் என்பதும் உண்மையாகலாம்!

வெறும் புலிகள் எதிர்ப்பு கோசங்களும் கட்டுரைகளும் எழும்பி வந்து தமிழர்களுக்கு தீர்வை வாங்கி தந்துவிடப்போவதில்லை.... செயற்பாடுகள் மிக முக்கியமாக வளிகாட்டுதல்கள் மட்டும் தான் தமிழ் மக்களை ஒரு சாராரை நோக்கி திரும்பி பார்க்க வைக்கும்... 30 வருடம் போராடிய புலிகளை சாடுவதை விடுத்து இரண்டு வருடங்கள் ஆகப்போகும் இந்த காலமும் இதை விட்டு வெளியிலை யாரும் இன்னும் வரவில்லை எண்டதே பின்னடைவு தான்... 30 வருடம் எதிர்த்து தான் தமிழ் மக்களை வளிக்கு கொண்டு வரமுடியும் எண்று கட்டுரையாளர் நினப்பாராக இருந்தால் இவர்களால் எண்றும் வர முடியாது...

வெறும் புலியெதிர்ப்புக் கட்டுரை என்று ஒதுக்கிவிடமுடியாத அளவில், பலவிடயங்களை கட்டுரையாளர் தொட்டுள்ளார். சில சரியாக இருக்கலாம், சில பிழையாக இருக்கலாம். எனினும் சுயவிமர்சனத்தை மறுத்து, தொடர்ந்தும் தமிழ் மக்களின் அரசியலை நகர்த்தும் மேய்ப்பர்கள் தோல்வியடைவார்கள் என்பதும் உண்மைதான்.

Link to comment
Share on other sites

என்ன இன்னமும் புலி என்ன தவறு விட்டது என்பதை இன்னமும் :( :( , இந்த ஆராய்ச்சி எல்லம் எப்ப முடியும்

Link to comment
Share on other sites

வெறும் ஊகத்தின் அடிப்படையில் மட்டுமே இந்த சரண் அடைதல் பற்றி எழுதப்பட்டு இருக்கிறது...

இது இதை எழுதிய கட்டுரையாளருக்கும் பொருத்தமாக இருக்கும் எண்டு நினைக்கிறன்...

வெறும் புலிகள் எதிர்ப்பு கோசங்களும் கட்டுரைகளும் எழும்பி வந்து தமிழர்களுக்கு தீர்வை வாங்கி தந்துவிடப்போவதில்லை.... செயற்பாடுகள் மிக முக்கியமாக வளிகாட்டுதல்கள் மட்டும் தான் தமிழ் மக்களை ஒரு சாராரை நோக்கி திரும்பி பார்க்க வைக்கும்... 30 வருடம் போராடிய புலிகளை சாடுவதை விடுத்து இரண்டு வருடங்கள் ஆகப்போகும் இந்த காலமும் இதை விட்டு வெளியிலை யாரும் இன்னும் வரவில்லை எண்டதே பின்னடைவு தான்... 30 வருடம் எதிர்த்து தான் தமிழ் மக்களை வளிக்கு கொண்டு வரமுடியும் எண்று கட்டுரையாளர் நினப்பாராக இருந்தால் இவர்களால் எண்றும் வர முடியாது...

தயா நீங்கள் எவ்வளவு தான் கத்தினாலும் இவர்கள் காதில் வாங்க மாட்டர்கள் ஏன் என்ரால் இவர்களுக்கு கொடுக்கப்பட்ட தொழில் போராட்டத்தை சீரழிப்பது, அதுக்குத் தான் ஊதியமும் வழங்கப்படுகிறது, உண்மையில் இஅவர்களுக்கு அக்கரை இரூந்தால் எப்படி தமிழ் ஈழம் அடையலாம் என்றுதான் யோசிப்பார்கள் ஒழிய புலிகள் என்ன பிழை விட்டார்கள் என்று ஆராய மாட்டர்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன இன்னமும் புலி என்ன தவறு விட்டது என்பதை இன்னமும் :( :( , இந்த ஆராய்ச்சி எல்லம் எப்ப முடியும்

தோல்விகளில் இருந்து பாடம் கற்காமல் எவரும் எதிலும் வெற்றிபெறுவதில்லை.

தயா நீங்கள் எவ்வளவு தான் கத்தினாலும் இவர்கள் காதில் வாங்க மாட்டர்கள் ஏன் என்ரால் இவர்களுக்கு கொடுக்கப்பட்ட தொழில் போராட்டத்தை சீரழிப்பது, அதுக்குத் தான் ஊதியமும் வழங்கப்படுகிறது, உண்மையில் இஅவர்களுக்கு அக்கரை இரூந்தால் எப்படி தமிழ் ஈழம் அடையலாம் என்றுதான் யோசிப்பார்கள் ஒழிய புலிகள் என்ன பிழை விட்டார்கள் என்று ஆராய மாட்டர்கள்

உங்களுக்குத் தெரிந்த தொழிலைக் கச்சிதமாகச் செய்யுங்கள். நல்லது நடக்கும்!

Link to comment
Share on other sites

தக்கன வாழும், தகாதன அழியும் என்ற கூர்ப்புவிதியின்படிதான் தமிழ் அரசியல் அமைப்புக்களின் எதிர்காலம் இருக்கும். ஒரு காலத்தில் டைனோசர் ஆதிக்கத்தில் இருந்த இந்தப் பூமியானது, மனிதர்களின் ஆதிக்கத்திற்குள் வந்ததுபோன்று, புலிகளின் ஆதிக்கத்தில் இருந்த தமிழர்களின் அரசியல் செயற்பாடுகள், ஏதோவொரு தமிழ்மக்களின் வாழ்வுபால் அக்கறையுள்ள, ஒன்றிணைந்த அமைப்பின்கீழ் வந்து சேரும். அப்போது காளான்களாகக் காணப்படும் தற்போதைய அரசியல் அமைப்புக்கள் உக்கி உலைந்து போயிருக்கும். எனினும் ஓர் ஒன்றிணைந்த அமைப்பு உருப்படியாக அரசியல் செய்ய அதிகம் காலம் எடுத்தால், தமிழர்கள் இலங்கையில் சிறுபான்மையினருக்குள் சிறுபான்மையினராகப் போய்விடுவர் என்பதும் உண்மையாகலாம்!

நீங்கள் சொல்லுவது உண்மைதான்.... ஆனால் உவமானம் பிழையானது...

இன்னும் விபரமாக சொன்னால் உயிர்வாழ்வு பற்றிய விதி இது "வலியவன் வெல்வான்" .... பலமானவர்கள் வாழ்வார்கள் பலவீனமானவர்கள் அழிந்து போவார்கள்.... மனித அறிவு பலத்துக்கு நிகராக ஊன் உண்ணியான டைனோசர்கள் இரை கிடைக்காமல் அழிந்து போக இலைதளைகளை உண்ணும் பெரிய விலங்கான யானைகள் மட்டும் வாழ்கின்றன...! மனிதனுக்கு அடங்கி நடக்கும் யானைகள் அடிமைகளாக வாழவைக்கப்படுகின்றன என்பதுதான் உண்மை... ...

இப்ப சொல்லுங்கோ...! தக்கன வாழ்வது எது சிங்களவரா...?? தகாதன அழிந்தது எது தமிழர்களா...?? இல்லை புலிகளா....??? புலிகள் எண்டால் புலிகளை தவிர மற்றது எல்லாம் வாழ்கின்றதா....?? வாழவைக்க முயற்ச்சிகள் தான் எடுக்க புலிகள் இல்லாத யாரும் சுயநலம் இல்லாது முடியுமா...?? இல்லை முன் வருகிறார்களா....??

இங்கை தமிழரை வாழவைக்க போவது எது....??? எப்படியான பலம்.. அந்த பலம் எப்படி ஈட்டப்பட போகின்றது...??? அரசியல் எண்டால் அதுக்கான அடித்தளம் என்ன... அதாவது அத்திவாரம்..?? இலக்கு....??? இப்படி எதுவுமே பதில் இல்லாத தெளிவில்லாத ஒண்டை நோக்கி யார் பின்னால் வருவார்கள்.....?? இப்படியான விமர்சனம் எனும் போர்வைக்கள் தமிழருக்கு எப்படியான பலத்தை ஊட்டும் என்கிறீர்கள்....??

வெற்றிக்கான பலம் எப்படி பெறப்பட போகின்றது.....??

நான் கேக்கிறது மனிதனின் சுதந்திரம் பற்றியதுக்கான பலம் ... யானையின் மனிதனால் கட்டுப்படுத்தி வாழவைக்கப்படும் யானையின் வாழ்வை அமைக்கும் பலம் இல்லை... !

இங்கை வெற்றி பெற்றது உயிர்வாழ்வின் தத்துவம் தான் ... வலியவன் வெல்வான் எனும் தத்துவம்... ! நாங்கள் வலிமை இழந்து போக காரணம் யார் என்பதை நீங்கள் அறிவீர்கள் தானே....??

அடிமையாக இருப்பது தான் நல்லது அப்படியான அரசியல் சிறந்தது எண்டால் தமிழன் சிங்களம் படிக்கிறதுதான் நல்லது... சுதந்திரம் கேட்டு அதுக்காக பயனித்தவன் துரோகியாக போகட்டும்...

வெறும் புலியெதிர்ப்புக் கட்டுரை என்று ஒதுக்கிவிடமுடியாத அளவில், பலவிடயங்களை கட்டுரையாளர் தொட்டுள்ளார். சில சரியாக இருக்கலாம், சில பிழையாக இருக்கலாம். எனினும் சுயவிமர்சனத்தை மறுத்து, தொடர்ந்தும் தமிழ் மக்களின் அரசியலை நகர்த்தும் மேய்ப்பர்கள் தோல்வியடைவார்கள் என்பதும் உண்மைதான்.

சுய விமர்சனம் என்பது நான் என்னை பாத்து கேட்டுக்கொள்வது அண்ணை... அதை புலிகள் எந்தக்காலத்திலும் செய்யவில்லை என்பது மிகப்பெரிய பொய்...! புலிகள் இதுவரை தோல்வியே பெறாதவர்கள் இல்லை... அனைத்து தோல்விகளையும் வெற்றியின் படியாக்கியதின் இரகசியம் கூட இந்த சுயவிமர்சனம் என்பதால் தான்... இதை நீங்கள் உங்கட நண்பரிடம் கேட்டு உறுதிப்படுத்திக்கொள்ளலாம்...

அதையே நீங்கள் வெளியில் இருந்து புலிகள் எண்டு குறிப்பிட்டு ஒரு விமர்சனத்தை வைத்தால் அதுக்கு பெயர் விமர்சனம் மட்டும் தான் சுய விமர்சனம் இல்லை...!

அதை எல்லாம் விடுத்து வெளிப்படையாக தெரியும் உண்மை களை கூட மறுத்து வேறுவகையான புனைவோடை செய்யப்படுவது விமர்சனம் கூட இல்லை...

நீங்கள் தாரகி அவர்களின் பழைய கட்டுரைகள் எடுத்து மீண்டும் படித்துப்பாருங்கள்.... அவர் எப்போதும் புலி ஆதரவாளர் கிடையாது... ஆனால் உண்மையான விமர்சனம் என்பது எப்படி என்பதைகாணலாம்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தற்போதைய சுயவிமர்சனம் என்பது புலிகளை நினைத்துக்கொண்டு நாம் எழுதுவது போன்று வடிவமைக்கப்பட்டுவிட்டது. ஆனால் அதை செய்பவர்கள் சுயவிமர்சனத்துக்கான அடிப்படையான தன்னை உணர்தல் அதனை வெளிக்கொண்டுவரலை செய்யாததையே நாம் வெறுக்கின்றோம். புலிகளை வெளியில் நின்று பார்த்தவர்களாலோ அல்லது புலிகள் எதைச்செய்தாலும் குற்றம் கண்டுபிடித்தவர்களாலேயோ இந்த சுயவிமர்சனங்கள் வைக்கப்பட்டு அது ஒரு பாதையை எமக்கு காட்டுமானால் அந்த பாதை நிச்சயம் நமது இலட்சியத்துக்கான பாதையாக இராது என்பது எனது ஆணித்தரமான கருத்து. அதை விடுத்து உண்மையான தமிழ்மக்களுக்கான இலட்சியத்தோடு சரி பிழை இரண்டையும் சரியாக எமது இலட்சியம் தளுவிய பார்வையில் சுயவிமர்சனம் அமையுமாயின் அதை வரவேற்கலாம்.

நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் சொல்லுவது உண்மைதான்.... ஆனால் உவமானம் பிழையானது...

இன்னும் விபரமாக சொன்னால் உயிர்வாழ்வு பற்றிய விதி இது "வலியவன் வெல்வான்" .... பலமானவர்கள் வாழ்வார்கள் பலவீனமானவர்கள் அழிந்து போவார்கள்.... மனித அறிவு பலத்துக்கு நிகராக ஊன் உண்ணியான டைனோசர்கள் இரை கிடைக்காமல் அழிந்து போக இலைதளைகளை உண்ணும் பெரிய விலங்கான யானைகள் மட்டும் வாழ்கின்றன...! மனிதனுக்கு அடங்கி நடக்கும் யானைகள் கூட வாழவைக்கப்படுகின்றன...

இப்ப சொல்லுங்கோ...! தக்கன வாழ்வது எது சிங்களவரா...?? தகாதன அழிந்தது எது தமிழர்களா...?? இல்லை புலிகளா....??? புலிகள் எண்டால் புலிகளை தவிர மற்றது எல்லாம் வாழ்கின்றதா....?? வாழவைக்க முயற்ச்சிகள் தான் எடுக்க புலிகள் இல்லாத யாராமும் முடியுமா...?? இல்லை முன் வருகிறார்களா....??

சூழலுக்கு இயைபாக்கமடைந்து வாழக் கற்றுக்கொள்வனதான் பிழைத்துக்கொள்ளும், வெறும் வலிமை மட்டும் போதாது! மாறிவந்த சூழலுக்கு இயைபாக்கமடையாமல் இருந்ததால்தான் புலிகளுக்கு அழிவு வந்தது. அதே நேரத்தில் உலகச் சூழலை நன்கு புரிந்த சிறிலங்கா அரசு அதற்கேற்றவாறு தனது நடவடிக்கைகளை மாற்றியதால்தான் வென்றது என்பதும் வரலாறு. எனவே மாற்றங்களை விரும்பாது தொடர்ந்தும் பழைய சூழல் வரும் என்று மாறாது இருப்பவை தகாதனவாகவே காணாமல் போய்விடும். புலிகள் பலமாக இருந்த காலத்தில் வேறு அரசியல் சக்திகளை வளரவிடாமல் தடுத்ததனால்தான் தற்போது தமிழர்களிடையே அரசியல் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. எனவே அரசியல் ரீதியில் தற்போதைய நிலையை உடனடியாக மாற்றக்கூடியவர்கள் எவருமில்லை என்றுதான் சொல்லவேண்டும்.

இங்கை தமிழரை வாழவைக்க போவது எது....??? எப்படியான பலம்.. அந்த பலம் எப்படி ஈட்டப்பட போகின்றது...??? அரசியல் எண்டால் அதுக்கான அடித்தளம் என்ன... அதாவது அத்திவாரம்..?? இலக்கு....??? இப்படி எதுவுமே பதில் இல்லாத தெளிவில்லாத ஒண்டை நோக்கி யார் பின்னால் வருவார்கள்.....?? இப்படியான விமர்சனம் எனும் போர்வைக்கள் தமிழருக்கு எப்படியான பலத்தை ஊட்டும் என்கிறீர்கள்....??

வெற்றிக்கான பலம் எப்படி பெறப்பட போகின்றது.....??

நான் கேக்கிறது மனிதனின் சுதந்திரம் பற்றியதுக்கான பலம் ... யானையின் மனிதனால் கட்டுப்படுத்தி வாழவைக்கப்படும் யானையின் வாழ்வை அமைக்கும் பலம் இல்லை... !

ஒன்றிணைந்த பலமான அரசியல் சக்தியே தமிழர்களை மீண்டும் அரசியல் உரிமைகளைப் பெற்று வாழும் சந்தர்ப்பத்தைக் கொண்டுவரும். அரசியல் ரீதியாக அதல பாதாளத்தில் விழுந்துவிட்டு ஓரிரவிற்குள் மேலே எழுந்துவிடமுடியாது. ஏன் புலிகள் கூட இராணுவ ரீதியில் தங்களைக் கட்டியெழுப்ப எத்தனையோ வருடங்கள் தேவைப்பட்டன. அதைப் போலத்தான் அரசியல் கட்டமைப்புக்களும் தெளிவான அரசியல் சிந்தனையில் கட்டியெழுப்பப்படவேண்டும். அதற்கான அடித்தளம் என்பது மக்கள் அரசியல் ரீதியாக தெளிவூட்டப்படவேண்டும். தமிழர்களுக்கு தமக்கு ஒரு தனிநாடு தேவை என்பதில் ஒற்றுமையான நம்பிக்கை இருந்திருந்தால், அதற்காக திரண்டு போராடியிருப்பார்கள். ஆனால் இடைநடுவில் தனிநாட்டைவிட்டு வேறோர் தீர்வும் கிடைத்தால்கூடப் போதும் என்ற நிலைக்கு வந்ததுகூட அரசியல் ரீதியான பலவீனமே. எனவே மக்கள்தான் தங்களுக்கு என்ன தேவை என்பதைத் தெளிவாக, பலமாகச் சொல்லவேண்டும். மேலே குறிப்பிட்ட கட்டுரையில் உள்ளதுபோன்று புலம் பெயர்ந்த தமிழரும், தாயகத்தில் உள்ள தமிழர்களும் ஒருமித்த குரலில் தங்களது அரசியல் விருப்பங்களைச் சொல்லவைக்குமளவிற்கு அவர்கள் அரசியல் தெளிவூட்டப்படவேண்டும். தாயகத்தில் தற்போது உள்ள நிலையில் இதெல்லாம் சரிவராது என்று சொல்லிக் கொண்டிருந்தால், காலம் வீணடிக்கப்படும். அதே நேரத்தில் ஜனநாயகம் நிலவும் புலம்பெயர்ந்த் நாடுகளில், தமிழர்களுக்கு ஏன் தமிழீழம் வேண்டும் என்று உரையாடாமல், குத்துவெட்டுக்கள், குழுபறிப்புக்கள், காட்டிக்கொடுத்தல்கள் போன்றவற்றில் ஈடுபடுபட்டுக்கொண்டிருப்பதை என்னவென்று சொல்லுவது?

இங்கை வெற்றி பெற்றது உயிர்வாழ்வின் தத்துவம் தான் ... வலியவன் வெல்வான் எனும் தத்துவம்... ! நாங்கள் வலிமை இழந்து போக காரணம் யார் என்பதை நீங்கள் அறிவீர்கள் தானே....??

அடிமையாக இருப்பது தான் நல்லது அப்படியான அரசியல் சிறந்தது எண்டால் தமிழன் சிங்களம் படிக்கிறதுதான் நல்லது...

வலிமையோடு இருந்தால் மாத்திரம் போதாது. மாறும் சூழலில் வலிமையென்பது, அந்தச் சூழலுக்கு ஏற்பவரையில் விரைவாக மாறுவதில்தான் இருக்கின்றது. விரைவாக மாறாததால்தான் டைனோசர்கள் அழிந்தன, புலிகளும் அழிவுற்றார்கள்.

மேலும் அடிமை அரசியல் சிறந்தது என்று கட்டுரையாளர் சொல்லவில்லை. அந்த அடிமை அரசியலை விட்டு தமிழ் மக்களின் அபிலாசைகளைப் பெற்றுக் கொள்ள மீண்டும் அரிவரியில் இருந்துதான் ஆரம்பிக்கவேண்டும் என்று சொல்லுகின்றார்.

சுய விமர்சனம் என்பது நான் என்னை பாத்து கேட்டுக்கொள்வது அண்ணை... அதை புலிகள் எந்தக்காலத்திலும் செய்யவில்லை என்பது மிகப்பெரிய பொய்...! புலிகள் இதுவரை தோல்வியே பெறாதவர்கள் இல்லை... அனைத்து தோல்விகளையும் வெற்றியின் படியாக்கியதின் இரகசியம் கூட இந்த சுயவிமர்சனம் என்பதால் தான்... இதை நீங்கள் உங்கட நண்பரிடம் கேட்டு உறுதிப்படுத்திக்கொள்ளலாம்...

அதையே நீங்கள் வெளியில் இருந்து புலிகள் எண்டு குறிப்பிட்டு ஒரு விமர்சனத்தை வைத்தால் அதுக்கு பெயர் விமர்சனம் மட்டும் தான் சுய விமர்சனம் இல்லை...!

அதை எல்லாம் விடுத்து வெளிப்படையாக தெரியும் உண்மை களை கூட மறுத்து வேறுவகையான புனைவோடை செய்யப்படுவது விமர்சனம் கூட இல்லை...

நீங்கள் தாரகி அவர்களின் பழைய கட்டுரைகள் எடுத்து மீண்டும் படித்துப்பாருங்கள்.... அவர் எப்போதும் புலி ஆதரவாளர் கிடையாது... ஆனால் உண்மையான விமர்சனம் என்பது எப்படி என்பதைகாணலாம்...

மேலே மேய்ப்பர்கள் தங்களைத் தாங்களே சுயவிமர்சனம் செய்யவேண்டும் என்றுதான் எழுதியிருக்கின்றேன். <_<

புலிகள் அரசியல்ரீதியாகச் சுயவிமர்சனத்தை தேவையான தருணங்களில் செய்திருந்தால் நாங்கள் இப்போது இதைப்பற்றி இங்கிருந்து கருத்தாடிக் கொண்டிருக்க வேண்டிய தேவை வந்திருக்காது.

அடிக்கடி நீங்கள் புலிகள் ஆயுதப் போட்டியைத் தவிர்க்கவே சமாதான ஒப்பந்தம் செய்ததாக கருத்துக்களை வைத்திருந்தீர்கள். அப்படியாயின் சமாதான காலத்தில் பல விமான ஓடுபாதைகளை அமைத்து, விமானப்படையைக் கட்டியெழுப்ப முயன்றது அதற்கு முரணாக இருந்ததற்கு என்ன விளக்கம் தருவீர்கள்? முரணாக இருப்பதனால்தான் கேட்கின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தற்போதைய சுயவிமர்சனம் என்பது புலிகளை நினைத்துக்கொண்டு நாம் எழுதுவது போன்று வடிவமைக்கப்பட்டுவிட்டது. ஆனால் அதை செய்பவர்கள் சுயவிமர்சனத்துக்கான அடிப்படையான தன்னை உணர்தல் அதனை வெளிக்கொண்டுவரலை செய்யாததையே நாம் வெறுக்கின்றோம். புலிகளை வெளியில் நின்று பார்த்தவர்களாலோ அல்லது புலிகள் எதைச்செய்தாலும் குற்றம் கண்டுபிடித்தவர்களாலேயோ இந்த சுயவிமர்சனங்கள் வைக்கப்பட்டு அது ஒரு பாதையை எமக்கு காட்டுமானால் அந்த பாதை நிச்சயம் நமது இலட்சியத்துக்கான பாதையாக இராது என்பது எனது ஆணித்தரமான கருத்து. அதை விடுத்து உண்மையான தமிழ்மக்களுக்கான இலட்சியத்தோடு சரி பிழை இரண்டையும் சரியாக எமது இலட்சியம் தளுவிய பார்வையில் சுயவிமர்சனம் அமையுமாயின் அதை வரவேற்கலாம்.

நன்றி

சுயவிமர்சனத்திற்கு தயா அண்ணா எழுதிய விளக்கம் சரியானது. எனவே புலிகளுக்காக மற்றவர்கள் சுயவிமர்சனம் செய்யமுடியாது என்பது உண்மைதான். ஆனால் விமர்சனம் செய்யலாம். நான் அறிந்தவரை புலிகள், அதன் புலம்பெயர் அமைப்புக்கள் தங்களைச் சுயவிமர்சனம் செய்ததாகத் தெரியவில்லை. அப்படி உண்மையில் இருந்தால் நாடு கடந்த அரசுக்கும், மக்களவைகளுக்கும் குத்துவெட்டுக்கள் வந்திருக்காது. அதாவது சுயவிமர்சனம் செய்திருந்தால் ஒற்றுமையின் பெறுமதியை உணர்ந்திருப்பர்.

இல்லை ஒற்றுமையாக இருக்கின்றார்கள் என்று சொன்னால் அது கண்ணைத் திறந்து வைத்துக்கொண்டு கனவு காண்கின்றீர்கள் என்று அர்த்தம்.

Link to comment
Share on other sites

சூழலுக்கு இயைபாக்கமடைந்து வாழக் கற்றுக்கொள்வனதான் பிழைத்துக்கொள்ளும், வெறும் வலிமை மட்டும் போதாது! மாறிவந்த சூழலுக்கு இயைபாக்கமடையாமல் இருந்ததால்தான் புலிகளுக்கு அழிவு வந்தது. அதே நேரத்தில் உலகச் சூழலை நன்கு புரிந்த சிறிலங்கா அரசு அதற்கேற்றவாறு தனது நடவடிக்கைகளை மாற்றியதால்தான் வென்றது என்பதும் வரலாறு. எனவே மாற்றங்களை விரும்பாது தொடர்ந்தும் பழைய சூழல் வரும் என்று மாறாது இருப்பவை தகாதனவாகவே காணாமல் போய்விடும். புலிகள் பலமாக இருந்த காலத்தில் வேறு அரசியல் சக்திகளை வளரவிடாமல் தடுத்ததனால்தான் தற்போது தமிழர்களிடையே அரசியல் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. எனவே அரசியல் ரீதியில் தற்போதைய நிலையை உடனடியாக மாற்றக்கூடியவர்கள் எவருமில்லை என்றுதான் சொல்லவேண்டும்.

இசைவாக்கம் என்பது இருந்தது... அதனால் தான் போர் நிறுத்தம் கடைசிவரை அமுலில் இருந்ததோடு , கடைசி நாள் வரைக்கும் பேச்சுவார்த்தையும் உலகோடு சாத்தியமாக இருந்தது...

ஆனால் இந்த பேச்சு வார்த்தைகள் பேரங்கள் எல்லாமே புலிகளின் பலம் காரணமாக ஏற்ப்பட்டவை... அந்த பலத்தை தூக்கி கடாசி விட்டு எதையும் புலிகளால் சாதித்து இருக்க முடியாது என்பது இண்றைய சூழலை பார்த்தாலே சுலபமாக புரிந்து கொள்ள முடியும்...

இங்கை நீங்கள் சொல்வது போல தோல்வி அடைந்ததும் அடக்க ப்பட்டதும் புலிகளோ ஆழுமையோ அல்ல... அடக்கப்பட்டதும் அழிக்கப்பட்டதும் தமிழர்களின் பேரம் பேசும் சக்தி.. இந்த பேரம் பேசும் சக்தியை வைத்துக்கொள்ளத்தான் புலிகள் கடைசி வரை போராடினர்... இந்த பேரம் பேசும் சக்தி அழிந்து போனமைதான் தமிழர்களுக்கு விடிவே இல்லை எண்டு சொல்லப்படுவதுக்கான அடித்தளமே...

இசைவாக்கம் என்பது கூட சர்வதேசத்தின் தேவையான புலிகளை பலவீனப்படுத்தும் செயற்திட்டத்துக்கு வலுச்சேர்ப்பதாகவே அமைந்து இருப்பதோடு மீளவும் இதே நிலைக்குதான் தமிழரை தள்ளியும் விட்டு இருக்கும்...

ஒன்றிணைந்த பலமான அரசியல் சக்தியே தமிழர்களை மீண்டும் அரசியல் உரிமைகளைப் பெற்று வாழும் சந்தர்ப்பத்தைக் கொண்டுவரும். அரசியல் ரீதியாக அதல பாதாளத்தில் விழுந்துவிட்டு ஓரிரவிற்குள் மேலே எழுந்துவிடமுடியாது. ஏன் புலிகள் கூட இராணுவ ரீதியில் தங்களைக் கட்டியெழுப்ப எத்தனையோ வருடங்கள் தேவைப்பட்டன. அதைப் போலத்தான் அரசியல் கட்டமைப்புக்களும் தெளிவான அரசியல் சிந்தனையில் கட்டியெழுப்பப்படவேண்டும். அதற்கான அடித்தளம் என்பது மக்கள் அரசியல் ரீதியாக தெளிவூட்டப்படவேண்டும். தமிழர்களுக்கு தமக்கு ஒரு தனிநாடு தேவை என்பதில் ஒற்றுமையான நம்பிக்கை இருந்திருந்தால், அதற்காக திரண்டு போராடியிருப்பார்கள். ஆனால் இடைநடுவில் தனிநாட்டைவிட்டு வேறோர் தீர்வும் கிடைத்தால்கூடப் போதும் என்ற நிலைக்கு வந்ததுகூட அரசியல் ரீதியான பலவீனமே. எனவே மக்கள்தான் தங்களுக்கு என்ன தேவை என்பதைத் தெளிவாக, பலமாகச் சொல்லவேண்டும். மேலே குறிப்பிட்ட கட்டுரையில் உள்ளதுபோன்று புலம் பெயர்ந்த தமிழரும், தாயகத்தில் உள்ள தமிழர்களும் ஒருமித்த குரலில் தங்களது அரசியல் விருப்பங்களைச் சொல்லவைக்குமளவிற்கு அவர்கள் அரசியல் தெளிவூட்டப்படவேண்டும். தாயகத்தில் தற்போது உள்ள நிலையில் இதெல்லாம் சரிவராது என்று சொல்லிக் கொண்டிருந்தால், காலம் வீணடிக்கப்படும். அதே நேரத்தில் ஜனநாயகம் நிலவும் புலம்பெயர்ந்த் நாடுகளில், தமிழர்களுக்கு ஏன் தமிழீழம் வேண்டும் என்று உரையாடாமல், குத்துவெட்டுக்கள், குழுபறிப்புக்கள், காட்டிக்கொடுத்தல்கள் போன்றவற்றில் ஈடுபடுபட்டுக்கொண்டிருப்பதை என்னவென்று சொல்லுவது?

ஆயுத ரீதியில் பலம் என்பது புலிகள் 1983ல் இருந்து இலங்கை படைகளோடு ஒப்பிடும் போது அதே விகிதாச்சாரத்தில் தான் கடைசி வரை இருந்து வந்து இருக்கிறார்கள்... ! ஆயுத பலமாக இருந்தாலும், ஆள்பலமாக இருந்தாலும் எப்போம் ஒரு விகிதாச்சாரமே மேலோங்கி நிண்றது... வெறும் அர்ப்பணிப்புக்களும், தந்திரோபாயங்களும் , மனத்திடமுமே போர்களை புலிகளுக்கு வெற்றி பெற்று குடுத்ததோடு எதிரியிடம் இருந்த தொழில் நுட்ப்பங்கள் தோல்வியை பலவாறு குடுத்து இருந்தது...

அரசியல் ரீதியிலும் இதேதான் நிலை... புலிகள் மீது காழ்ப்புணர்வு மாற்றுக்குழுக்கள் கொண்டு இலங்கை அரசோடு நிண்டு இதே மாதிரியான பரப்புரைகளுக்கும் மிண்டு கொடுத்து பலவீனப்படுத்தினர்...! அங்கே தமிழரை பலப்படுத்த வேண்டும் என்பதை விட அதிகமாக எங்களவர்களுக்கு பட்டது புலிகளை பலவீனபடுத்தி தாங்கள் நலனை பெறவேணும் எனும் ஒரே குறிக்கோள் மட்டுமே...

தமிழர்கள் பலமாக இருந்த காலங்களில் கூட நிண்டு தமிழர்களை பலப்படுத்த முன்வராதவர்கள் , அழிவின் பின்னர் எதை சாதிப்பார்கள் என்கிறீர்கள்... ?? மக்களுக்கு அரசியல் அறிவை குடுப்பினம் எண்டது கூட வெறும் சப்புக்கட்டல்களே....

அதே குழுக்களால் இண்டை நடக்கும் இந்த இனத்துரோக முறையான Extraction எனும் முறை மூலம் இருக்கும் ஒரு கருத்தை வலுக்கட்டாயமாக அகற்றி விட்டு வேறு ஒண்று வந்து அதுக்குள் புகவைக்க முயலும் நுட்ப்பம் இரண்டாம் உலக யுத்தகாலம் முன்னரே வந்தது... இதை புரிந்து கொள்ள முடியாமல் இதுக்கு சிக்குப்படும் மக்களை காக்க வேண்டிய பொறுப்பையும் செயற்படுபவர்கள் செய்ய வேண்டி உள்ளார்கள் என்பது தான் உண்மையாக இருக்கிறது...

வலிமையோடு இருந்தால் மாத்திரம் போதாது. மாறும் சூழலில் வலிமையென்பது, அந்தச் சூழலுக்கு ஏற்பவரையில் விரைவாக மாறுவதில்தான் இருக்கின்றது. விரைவாக மாறாததால்தான் டைனோசர்கள் அழிந்தன, புலிகளும் அழிவுற்றார்கள்.

மேலும் அடிமை அரசியல் சிறந்தது என்று கட்டுரையாளர் சொல்லவில்லை. அந்த அடிமை அரசியலை விட்டு தமிழ் மக்களின் அபிலாசைகளைப் பெற்றுக் கொள்ள மீண்டும் அரிவரியில் இருந்துதான் ஆரம்பிக்கவேண்டும் என்று சொல்லுகின்றார்.

டைனோசர்கள் தானாக அழிந்து போயின... இங்கே செயற்கையான முறையில் புலிகள் பலவீனப்படுத்தப்பட்டனர்... அழிந்தனர் எண்று இந்த கட்டுரையாளர் நம்புபவராக இருந்தால் இப்படி யான கட்டுரை கூட அவசியம் அற்று போய் இருக்கும்... !

புலிகள் மீண்டும் வந்துவிடக்கூடாது , மக்கள் அவர்களை ஏற்றுக்கொள்ளாது குழப்பத்தில் சிக்க வைக்க வேண்டும் , எனும் பயத்தில் எழுத்தப்பட்ட கட்டுரையாக மட்டுமே இதை பார்க்க முடியுது...

செத்த பிணத்தை யாரும் 2 வருடமாக அரிந்து பாத்து கொண்டு இருக்க மாட்டார்கள்...

மேலே மேய்ப்பர்கள் தங்களைத் தாங்களே சுயவிமர்சனம் செய்யவேண்டும் என்றுதான் எழுதியிருக்கின்றேன். <_<

புலிகள் அரசியல்ரீதியாகச் சுயவிமர்சனத்தை தேவையான தருணங்களில் செய்திருந்தால் நாங்கள் இப்போது இதைப்பற்றி இங்கிருந்து கருத்தாடிக் கொண்டிருக்க வேண்டிய தேவை வந்திருக்காது.

அடிக்கடி நீங்கள் புலிகள் ஆயுதப் போட்டியைத் தவிர்க்கவே சமாதான ஒப்பந்தம் செய்ததாக கருத்துக்களை வைத்திருந்தீர்கள். அப்படியாயின் சமாதான காலத்தில் பல விமான ஓடுபாதைகளை அமைத்து, விமானப்படையைக் கட்டியெழுப்ப முயன்றது அதற்கு முரணாக இருந்ததற்கு என்ன விளக்கம் தருவீர்கள்? முரணாக இருப்பதனால்தான் கேட்கின்றேன்.

புலிகள் அரசியல் ரீதியில் சரியான வளியில் செயற்பட்டு கொண்டு இருந்தார்கள்... இந்தியாவை திருப்திப்படுத்த முனைந்து இருக்காவிட்டால் எல்லாமே சாத்தியமாகி இருக்கும்... !

புலிகள் விமானப்படையை அமைத்தது போர் நிறுத்த காலங்களில் என்பது மிகவும் பொய்... எனக்கு தெரிய 1993ல் இரணைமடு விமானப்பாதை அமைக்கப்பட்டது... ! முள்ளியவளை விமானப்பாதை பழைய இரண்டாம் உலகப்போரில் பயன் பாட்டில் இருந்த பழைய பாதை திருத்தப்பட்டு பயன் படுத்த பட்டது... 1995ம் ஆண்டு மாவீரர் நாளில் முள்ளியவளை மாவீரர் துயிலும் இல்லம் மீது விமானம் மூலம் பூக்கள் தூவப்பட்டன... அதோடை இராணுவத்தோடு சண்டை இட புலிகளின் சிலின் விமானம் போதும் , அதனால் ஒரு சவாலை விடுக்க முடியும் எண்டு நான் நம்பவில்லை... நீங்கள் நம்புகிறீர்களா....??

வெறும் தற்ப்பாதுக்காப்பு தாக்குதல்களுக்கு கூட விமானங்களும் கரும்புலிகளும் பாவிக்க பட முடியும் என்பதை நீங்கள் உணரவில்லையா....??

தவிர உலகம் இண்டைக்கும் சொல்வது ஒண்டுதான் நீங்கள் யாராக இருந்து விட்டு போங்கள்... தமிழீழம் , சுயநிர்ணயம் , விடுதலை எண்று பேசும் தமிழர்கள் எல்லாருமே ஒண்று புலிகள் அல்லது PRO புலிகள்... மற்றவை நடுநிலயாளர்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

. புலிகள் பலமாக இருந்த காலத்தில் வேறு அரசியல் சக்திகளை வளரவிடாமல் தடுத்ததனால்தான் தற்போது தமிழர்களிடையே அரசியல் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. எனவே அரசியல் ரீதியில் தற்போதைய நிலையை உடனடியாக மாற்றக்கூடியவர்கள் எவருமில்லை என்றுதான் சொல்லவேண்டும்.

ஏன் கிருபன் இதை இப்படியும்எடுக்கலாம்தானே

அங்கு புலிகள் தவிர்ந்து டக்லஸ் சித்தார்த்தன் என பலரும் இருந்தனர். ஆனால் அவர்களை தெரிவு செய்யாது மக்கள் புலிகளை ஆதரித்தனர். எனவே புலிகள் தவிர்ந்த மற்றயவர்களுக்கு இடமில்லாமல் போனதாகவும் எடுக்கலாம்.

டக்லசை மக்கள் பயத்தால் ஆதரிக்கவில்லை என்று சொல்லமாட்டீர்கள் என்று நினைக்கின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் கிருபன் இதை இப்படியும்எடுக்கலாம்தானே

அங்கு புலிகள் தவிர்ந்து டக்லஸ் சித்தார்த்தன் என பலரும் இருந்தனர். ஆனால் அவர்களை தெரிவு செய்யாது மக்கள் புலிகளை ஆதரித்தனர். எனவே புலிகள் தவிர்ந்த மற்றயவர்களுக்கு இடமில்லாமல் போனதாகவும் எடுக்கலாம்.

டக்லசை மக்கள் பயத்தால் ஆதரிக்கவில்லை என்று சொல்லமாட்டீர்கள் என்று நினைக்கின்றேன்.

நம்பகத்தன்மையான அரசியல் தலைமைகள் வேண்டும். அதற்காக சொத்தை, சூத்தை உள்ளதையெல்லாம் ஏற்கவேண்டியதில்லை. மக்கள் அரசியல்ரீதியில் என்றும் பயணிக்கவே தயாராக இருந்தார்கள். ஆனால் மக்களோடு, அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ற அரசியல் செய்யத்தான் யாரும் முனையவில்லை. எல்லோருமே தங்கள் வழிக்கு மக்கள் வரவேண்டும் என்றுதான் விரும்பினர்.

தற்போது எகிப்தில் நடைபெறும் மக்கள் எழுச்சிக்கு ஒரு அரசியல் தலைமை என்று ஒன்றும் பெரிதாக இருக்கவில்லை. எனினும் மக்களின் சக்தியால் மாற்றங்கள் நிகழக்கூடிய சந்தர்ப்பம் உள்ளதைக் காணக்கூடியதாக இருக்கின்றது. ஆனால் நம் மக்கள் இப்படித் திரளமாட்டார்கள் என்று முயன்று பார்க்காமலேயே இருப்பதுதான் நம்மின அரசியல் தலைமைகளிடம் உள்ள குணம். உண்மையில் தமிழ் அரசியல் தலைமைகள் ஜனநாயகப் பண்புகளை வளர்த்துக்கொள்ளாதவரை தமிழர்களுக்கு எதுவித தீர்வும் கிட்டப்போவதில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கை நீங்கள் சொல்வது போல தோல்வி அடைந்ததும் அடக்க ப்பட்டதும் புலிகளோ ஆழுமையோ அல்ல... அடக்கப்பட்டதும் அழிக்கப்பட்டதும் தமிழர்களின் பேரம் பேசும் சக்தி.. இந்த பேரம் பேசும் சக்தியை வைத்துக்கொள்ளத்தான் புலிகள் கடைசி வரை போராடினர்... இந்த பேரம் பேசும் சக்தி அழிந்து போனமைதான் தமிழர்களுக்கு விடிவே இல்லை எண்டு சொல்லப்படுவதுக்கான அடித்தளமே...

தமிழர்களின் பேரம் பேசும் சக்தியாகப் புலிகள் விளங்கினார்கள் என்பது உண்மையே. எனினும் புலிகள் தங்களது இராணுவ வலிமை மாத்திரம்தான் பேரம்பேச உதவும் என்று நம்பி அரசியல் ரீதியில் பேரம் பேசுமளவிற்குத் தேவையான நண்பர்களை வளர்த்துக் கொள்ளவில்லை.

இசைவாக்கம் என்பது கூட சர்வதேசத்தின் தேவையான புலிகளை பலவீனப்படுத்தும் செயற்திட்டத்துக்கு வலுச்சேர்ப்பதாகவே அமைந்து இருப்பதோடு மீளவும் இதே நிலைக்குதான் தமிழரை தள்ளியும் விட்டு இருக்கும்...

புலிகளைப் பலமாக வைத்திருக்க எவரும் விரும்பவில்லை என்பது புலிகளுக்குத் தெரிந்திருந்தும், மாறாமல் இருந்தது சரியான முடிவு இல்லை என்றே நடந்தவை சொல்லுகின்றன.

ஆயுத ரீதியில் பலம் என்பது புலிகள் 1983ல் இருந்து இலங்கை படைகளோடு ஒப்பிடும் போது அதே விகிதாச்சாரத்தில் தான் கடைசி வரை இருந்து வந்து இருக்கிறார்கள்... ! ஆயுத பலமாக இருந்தாலும், ஆள்பலமாக இருந்தாலும் எப்போம் ஒரு விகிதாச்சாரமே மேலோங்கி நிண்றது... வெறும் அர்ப்பணிப்புக்களும், தந்திரோபாயங்களும் , மனத்திடமுமே போர்களை புலிகளுக்கு வெற்றி பெற்று குடுத்ததோடு எதிரியிடம் இருந்த தொழில் நுட்ப்பங்கள் தோல்வியை பலவாறு குடுத்து இருந்தது...

அரசியல் ரீதியிலும் இதேதான் நிலை... புலிகள் மீது காழ்ப்புணர்வு மாற்றுக்குழுக்கள் கொண்டு இலங்கை அரசோடு நிண்டு இதே மாதிரியான பரப்புரைகளுக்கும் மிண்டு கொடுத்து பலவீனப்படுத்தினர்...! அங்கே தமிழரை பலப்படுத்த வேண்டும் என்பதை விட அதிகமாக எங்களவர்களுக்கு பட்டது புலிகளை பலவீனபடுத்தி தாங்கள் நலனை பெறவேணும் எனும் ஒரே குறிக்கோள் மட்டுமே...

ஆயுத ரீதியாகப் புலிகள் சிறிலங்காப் படைகளுடன் ஒப்பிடுகையில் பின்நின்றது உண்மைதான். எனினும் சமாதான காலத்தில் சிறிலங்காப் படைகள் அதிவேகமான வளர்ச்சியை மற்றைய நாடுகளின் உதவியுடன் அடைந்தார்கள்.

அரசியல் ரீதியாக தமிழர்கள் தொடர்ந்தும் கீழ்நோக்கியே போய்க்கொண்டிருந்தார்கள். 70, 80 களில் மேற்கு நாடுகள், இந்தியா அதிலும் குறிப்பாகத் தமிழகம் என்று பேராதரவுடன் இருந்த தமிழர்களின் பிரச்சினை, இந்திய இராணுவ வருகையுடன் மாற்றம் அடைந்தது. ராஜீவ் காந்தியின் மரணத்தின் பின்னர், தமிழகத்திலும் இருந்த ஆதரவு வீழ்ச்சிகண்டது. இப்படியே தேய்ந்துபோன ஆதரவால்தான் 2009 இல் தமிழர்கள் பேரழிவைச் சந்தித்தபோதும் ஒருவரும் உதவவில்லை. இதேவேளையில் பிரமேதாசா காலத்திலும், டி.பி.விஜேதுங்க காலத்திலும் அரசியல் ரீதியாக சர்வதேசத்தில் வீழ்ச்சியைச் சந்தித்த இலங்கையரசு, இந்தியா, சீனா, ரஷ்யா என்றில்லாமல் மேற்கு நாடுகளின் ஆதரவையும் பெற்றிருந்தது. இல்லாவிடில் மேற்கு நாடுகளில் புலிகள் மீதான தடைகள் வந்திருக்குமா என்ன?

தமிழர்கள் பலமாக இருந்த காலங்களில் கூட நிண்டு தமிழர்களை பலப்படுத்த முன்வராதவர்கள் , அழிவின் பின்னர் எதை சாதிப்பார்கள் என்கிறீர்கள்... ?? மக்களுக்கு அரசியல் அறிவை குடுப்பினம் எண்டது கூட வெறும் சப்புக்கட்டல்களே....

அதே குழுக்களால் இண்டை நடக்கும் இந்த இனத்துரோக முறையான Extraction எனும் முறை மூலம் இருக்கும் ஒரு கருத்தை வலுக்கட்டாயமாக அகற்றி விட்டு வேறு ஒண்று வந்து அதுக்குள் புகவைக்க முயலும் நுட்ப்பம் இரண்டாம் உலக யுத்தகாலம் முன்னரே வந்தது... இதை புரிந்து கொள்ள முடியாமல் இதுக்கு சிக்குப்படும் மக்களை காக்க வேண்டிய பொறுப்பையும் செயற்படுபவர்கள் செய்ய வேண்டி உள்ளார்கள் என்பது தான் உண்மையாக இருக்கிறது...

உங்கள் வாதம் புலிகளால் மட்டும்தான் எல்லாம் முடியும், மற்றவர்கள் ஒன்றும் செய்ய லாயக்கற்றவர்கள் என்றுதான் உள்ளது. இது சரியாக இருக்கலாம். மற்றைய அமைப்புக்களுக்குச் சந்தர்ப்பங்கள் கிடைத்தபோது அவர்களும் அதிகாரத்தையே விரும்பி மக்களை அடக்கியாண்டனர் என்பது இந்திய இராணுவக் காலத்த்ல் ஈ.பி.ஆர்.எல்.எவ். நடந்துகொண்ட முறையில் இருந்தே தெரிந்ததுதானே. ஆனால் இவர்கள் எல்லாம் அரசியல் சக்தியாக இருக்கவில்லை. மக்கள்மேல் அக்கறையற்ற ஆதிக்க சக்திகளாகவே இருந்தனர். தற்போதும் உள்ளனர். எனவே மக்கள் மேல் அக்கறையில்லாதவர்களை அரசியல் தலைமையாக மக்கள் எப்போதும் ஏற்றுக்கொள்வதில்லை. மாறாக, மக்கள் எப்போதும் அவர்களை நிராகரித்தே வந்துள்ளனர்.

எனவே ஜனநாயக அடிப்படையிலான அரசியல் அமைப்புக்கள் உதயமானால்தான் தமிழர்களுக்கு விமோசனம் கிட்டும்!

டைனோசர்கள் தானாக அழிந்து போயின... இங்கே செயற்கையான முறையில் புலிகள் பலவீனப்படுத்தப்பட்டனர்... அழிந்தனர் எண்று இந்த கட்டுரையாளர் நம்புபவராக இருந்தால் இப்படி யான கட்டுரை கூட அவசியம் அற்று போய் இருக்கும்... !

புலிகள் மீண்டும் வந்துவிடக்கூடாது , மக்கள் அவர்களை ஏற்றுக்கொள்ளாது குழப்பத்தில் சிக்க வைக்க வேண்டும் , எனும் பயத்தில் எழுத்தப்பட்ட கட்டுரையாக மட்டுமே இதை பார்க்க முடியுது...

செத்த பிணத்தை யாரும் 2 வருடமாக அரிந்து பாத்து கொண்டு இருக்க மாட்டார்கள்...

டைனோசர்கள் தானாக அழியவில்லை. வெளியிலிருந்து எதிர்பார்க்காமல் வந்த ஆபத்தால்தான் அவையும் அழியவேண்டி வந்தன.

புலிகள் மீண்டும் வருவதில் எந்தப் பிரச்சினையும் இல்லை. சுயவிமர்சனம் செய்யாமல், கொள்கைகளையும், செயற்பாட்டு முறைகளையும் மாற்றாமல், மக்களின் ஜனநாயக உரிமைகளை மதிக்காமல் இருந்தால் திரும்ப வந்தாலும் மீண்டும் பழைய பல்லவிதான் பாடவேண்டும். அதாவது "நீங்கள் தாருங்கள், நாங்கள் பார்த்துக் கொள்கின்றோம்" என்று சொல்லி வராமல், "நாங்கள் ஒன்றாகவே எங்கள் விடுதலையை ஒற்றுமையாக முன்னெடுப்போம்" என்று வரவேண்டும்.

புலிகள் அரசியல் ரீதியில் சரியான வளியில் செயற்பட்டு கொண்டு இருந்தார்கள்... இந்தியாவை திருப்திப்படுத்த முனைந்து இருக்காவிட்டால் எல்லாமே சாத்தியமாகி இருக்கும்... !

இந்தியாவை திருப்திப்படுத்த முனைந்த அரசியல் சரியான வழியாகத் தெரியவில்லையே! உண்மையில் இடைத்தரகர்களை நம்பித்தான் மோசம் போனதாக நான் கருதிகின்றேன்.

புலிகள் விமானப்படையை அமைத்தது போர் நிறுத்த காலங்களில் என்பது மிகவும் பொய்... எனக்கு தெரிய 1993ல் இரணைமடு விமானப்பாதை அமைக்கப்பட்டது... ! முள்ளியவளை விமானப்பாதை பழைய இரண்டாம் உலகப்போரில் பயன் பாட்டில் இருந்த பழைய பாதை திருத்தப்பட்டு பயன் படுத்த பட்டது... 1995ம் ஆண்டு மாவீரர் நாளில் முள்ளியவளை மாவீரர் துயிலும் இல்லம் மீது விமானம் மூலம் பூக்கள் தூவப்பட்டன... அதோடை இராணுவத்தோடு சண்டை இட புலிகளின் சிலின் விமானம் போதும் , அதனால் ஒரு சவாலை விடுக்க முடியும் எண்டு நான் நம்பவில்லை... நீங்கள் நம்புகிறீர்களா....??

வெறும் தற்ப்பாதுக்காப்பு தாக்குதல்களுக்கு கூட விமானங்களும் கரும்புலிகளும் பாவிக்க பட முடியும் என்பதை நீங்கள் உணரவில்லையா....??

புலிகளின் விமானங்கள் உலகச் செய்தியாக வந்தது 2007இல்தான். விமானங்கள் சிறிதாக இருந்தாலும், அவற்றின் இராணுவ முக்கியத்துவம் மிகக் குறைவாக இருந்தாலும், அரசியல் ரீதியில் அவை ஏற்படுத்திய தாக்கம் பாரியது. இந்தியாகூட புலிகளைப் பலவீனமாக்கி வைத்திருக்கத்தான் முதலில் விரும்பியது என்றும், புலிகளின் விமானத்தாக்குதல்களின் பின்னரே புலிகளை முழுமையாக அழிக்க இலங்கையரசிற்கு ஒப்புதல் கொடுத்தது என்றும் ஒரு கதையுண்டு.

தவிர உலகம் இண்டைக்கும் சொல்வது ஒண்டுதான் நீங்கள் யாராக இருந்து விட்டு போங்கள்... தமிழீழம் , சுயநிர்ணயம் , விடுதலை எண்று பேசும் தமிழர்கள் எல்லாருமே ஒண்று புலிகள் அல்லது PRO புலிகள்... மற்றவை நடுநிலயாளர்...

இதைத்தான் PRO புலிகளும் விரும்புகின்றனர். ஆனால் நடுநிலையாளர் என்று எவருமில்லை.

தமிழ் மக்களின் அரசியல் ரீதியான விடுதலைக்கு, சிங்களப் பேரினவாத அரசுடனான அரசியல் போர் இன்னமும் தொடங்காமல்தான் உள்ளது.

Link to comment
Share on other sites

தமிழர்களின் பேரம் பேசும் சக்தியாகப் புலிகள் விளங்கினார்கள் என்பது உண்மையே. எனினும் புலிகள் தங்களது இராணுவ வலிமை மாத்திரம்தான் பேரம்பேச உதவும் என்று நம்பி அரசியல் ரீதியில் பேரம் பேசுமளவிற்குத் தேவையான நண்பர்களை வளர்த்துக் கொள்ளவில்லை.

புலிகளைப் பலமாக வைத்திருக்க எவரும் விரும்பவில்லை என்பது புலிகளுக்குத் தெரிந்திருந்தும், மாறாமல் இருந்தது சரியான முடிவு இல்லை என்றே நடந்தவை சொல்லுகின்றன.

புலிகள் எதை செய்து இருக்க வேண்டும் எண்று நீங்கள் நினைக்கிறீர்கள்....! அரசியல் அடிபணிதலா....??

ஆயுத ரீதியாகப் புலிகள் சிறிலங்காப் படைகளுடன் ஒப்பிடுகையில் பின்நின்றது உண்மைதான். எனினும் சமாதான காலத்தில் சிறிலங்காப் படைகள் அதிவேகமான வளர்ச்சியை மற்றைய நாடுகளின் உதவியுடன் அடைந்தார்கள்.

அரசியல் ரீதியாக தமிழர்கள் தொடர்ந்தும் கீழ்நோக்கியே போய்க்கொண்டிருந்தார்கள். 70, 80 களில் மேற்கு நாடுகள், இந்தியா அதிலும் குறிப்பாகத் தமிழகம் என்று பேராதரவுடன் இருந்த தமிழர்களின் பிரச்சினை, இந்திய இராணுவ வருகையுடன் மாற்றம் அடைந்தது. ராஜீவ் காந்தியின் மரணத்தின் பின்னர், தமிழகத்திலும் இருந்த ஆதரவு வீழ்ச்சிகண்டது. இப்படியே தேய்ந்துபோன ஆதரவால்தான் 2009 இல் தமிழர்கள் பேரழிவைச் சந்தித்தபோதும் ஒருவரும் உதவவில்லை. இதேவேளையில் பிரமேதாசா காலத்திலும், டி.பி.விஜேதுங்க காலத்திலும் அரசியல் ரீதியாக சர்வதேசத்தில் வீழ்ச்சியைச் சந்தித்த இலங்கையரசு, இந்தியா, சீனா, ரஷ்யா என்றில்லாமல் மேற்கு நாடுகளின் ஆதரவையும் பெற்றிருந்தது. இல்லாவிடில் மேற்கு நாடுகளில் புலிகள் மீதான தடைகள் வந்திருக்குமா என்ன?

இராஜீவ் மரணம் நிகழ்ந்து இருக்காவிட்டாலும் புலிகளின் மீதான ஆதரவு தமிழகத்தில் இல்லாமல் போய் இருக்கும்... அது கொள்கை ரீதியில் இந்தியாவில் ஆரம்பிக்கப்பட்டு நீண்டகாலம் ஆகி இருந்தது....

புலிகள் மீதான தடை மேற்க்கு நாடுகளில் ஒரு இரவுக்குள் வந்து விழுந்தது இல்லை... இந்திய பக்கபலம் பெற்ற சந்திரிக்காவால் கொண்டு வரப்பட்ட கதிர்க்காமர், நீலன் திருச்செல்வம் போண்ற தமிழர்களால் ஊர் ஊராக சொண்று செய்ய பட்ட பிரச்சாரம் அது... பக்க பலமாக கூட்டங்களுக்கு போய் இராஜதந்திரீக்களை சந்தித்தவர்கள், தமிழர் தரப்பை பலவீனப்படுத்த பாடு பட்டவர்கள் தான் இண்று புலிகள் அரசியல் செய்யவில்லை எண்டு பிரச்சாரம் செய்பவர்கள்... !

இதுக்கு மத்தியில் புலிகள் அரசியல் பலம் பெற முடியவில்லை என்பது உண்மைதான்... !

உங்கள் வாதம் புலிகளால் மட்டும்தான் எல்லாம் முடியும், மற்றவர்கள் ஒன்றும் செய்ய லாயக்கற்றவர்கள் என்றுதான் உள்ளது. இது சரியாக இருக்கலாம். மற்றைய அமைப்புக்களுக்குச் சந்தர்ப்பங்கள் கிடைத்தபோது அவர்களும் அதிகாரத்தையே விரும்பி மக்களை அடக்கியாண்டனர் என்பது இந்திய இராணுவக் காலத்த்ல் ஈ.பி.ஆர்.எல்.எவ். நடந்துகொண்ட முறையில் இருந்தே தெரிந்ததுதானே. ஆனால் இவர்கள் எல்லாம் அரசியல் சக்தியாக இருக்கவில்லை. மக்கள்மேல் அக்கறையற்ற ஆதிக்க சக்திகளாகவே இருந்தனர். தற்போதும் உள்ளனர். எனவே மக்கள் மேல் அக்கறையில்லாதவர்களை அரசியல் தலைமையாக மக்கள் எப்போதும் ஏற்றுக்கொள்வதில்லை. மாறாக, மக்கள் எப்போதும் அவர்களை நிராகரித்தே வந்துள்ளனர்.

எனவே ஜனநாயக அடிப்படையிலான அரசியல் அமைப்புக்கள் உதயமானால்தான் தமிழர்களுக்கு விமோசனம் கிட்டும்!

புலிகளால் மட்டும் என்பது தலைக்கணம்... புலிகளை விட யாரும் சுயநலம் இல்லாமல் முன் வரவில்லை என்பதுதான் உண்மை...!

புலிகள் செய்தவைகளை தூற்றுவது மட்டுமே பலராலும் செய்யப்பட்டதே அண்றி புலிகளுக்கு சமாந்தரமாக யாராலும் எதையும் செய்யும் அளவுக்கு அர்ப்பணிப்பு இருக்கவில்லை...

நான் கேக்கிறன் உங்களிடம்... நீங்கள் உங்களை நம்பி வந்த உங்களது போராளிகளை கொண்டு ஒரு பிரதேசத்தை கட்டுப்பாட்டுக்கை கொண்டு வந்து அதுக்கு பாதுகாப்பு கொடுத்து வைத்து இருக்கிறீர்கள் எண்டால் நான் வந்து அங்கு உங்களுக்கும் உங்களது போராளிகளுக்கும் எதிராக அரசியல் செய்ய இடம் தருவீர்களா....??

புலிகளோடு நல்ல தொடர்பை பேணிய குற்றத்துக்காக மாற்றியக்க தாஸ் எனும் ஒரு போராளி ஆஸ்பத்திரி வீதியில் வைத்து அதே இயக்கத்தை சேர்ந்தவர்களால் நாய் சுடுவது போல சுடப்படும் போது சுட்டவர்கள் புலிகளுக்கு சொன்ன செய்தி என்னவாக இருந்தது....??

கூட அவ்வளவு காலமும் இருந்தவனை சகோதர அமைப்புடன் தொடர்புகளை பேணுகிறான் என்னும் குற்றத்துக்காக அமைப்பை விட்டு விலத்தினால் கருத்து மோதல் எண்று சொல்ல முடியும் , ஆனால் கொலை எப்படியான உணர்வையும் ஆபத்தையும் புலிகளுக்கு உணர்த்தி இருக்கும்...??

இதுக்கு தனது போராளிகளை பாதுகாக்க புலிகள் என்ன நடவடிக்கை எடுத்து இருக்க வேணும் எண்டுறீயள்....?

டைனோசர்கள் தானாக அழியவில்லை. வெளியிலிருந்து எதிர்பார்க்காமல் வந்த ஆபத்தால்தான் அவையும் அழியவேண்டி வந்தன.

புலிகள் மீண்டும் வருவதில் எந்தப் பிரச்சினையும் இல்லை. சுயவிமர்சனம் செய்யாமல், கொள்கைகளையும், செயற்பாட்டு முறைகளையும் மாற்றாமல், மக்களின் ஜனநாயக உரிமைகளை மதிக்காமல் இருந்தால் திரும்ப வந்தாலும் மீண்டும் பழைய பல்லவிதான் பாடவேண்டும். அதாவது "நீங்கள் தாருங்கள், நாங்கள் பார்த்துக் கொள்கின்றோம்" என்று சொல்லி வராமல், "நாங்கள் ஒன்றாகவே எங்கள் விடுதலையை ஒற்றுமையாக முன்னெடுப்போம்" என்று வரவேண்டும்.

இந்தியாவை திருப்திப்படுத்த முனைந்த அரசியல் சரியான வழியாகத் தெரியவில்லையே! உண்மையில் இடைத்தரகர்களை நம்பித்தான் மோசம் போனதாக நான் கருதிகின்றேன்.

டைனோசர் அழிந்த காலங்களில் அதுக்கான உணவுப்பிரச்சினையும்( இரை) அவைகளுக்கிடையான சண்டைகளுமே அழிவுக்கு காரணம் எண்டு ஆய்வுகள் சொல்கிறது... அவைகளை அழிக்கும் அளவுக்கு மனிதன் அந்தக்காலங்களில் பலமாக இருக்கவில்லை...

இது ஒருவகையில் எங்கட அழிவுக்கு காரணமாக இருக்கலாம்.. அது காட்டிக்குடுத்தவர்களா வந்தது....

புலிகளின் விமானங்கள் உலகச் செய்தியாக வந்தது 2007இல்தான். விமானங்கள் சிறிதாக இருந்தாலும், அவற்றின் இராணுவ முக்கியத்துவம் மிகக் குறைவாக இருந்தாலும், அரசியல் ரீதியில் அவை ஏற்படுத்திய தாக்கம் பாரியது. இந்தியாகூட புலிகளைப் பலவீனமாக்கி வைத்திருக்கத்தான் முதலில் விரும்பியது என்றும், புலிகளின் விமானத்தாக்குதல்களின் பின்னரே புலிகளை முழுமையாக அழிக்க இலங்கையரசிற்கு ஒப்புதல் கொடுத்தது என்றும் ஒரு கதையுண்டு.

இதைத்தான் PRO புலிகளும் விரும்புகின்றனர். ஆனால் நடுநிலையாளர் என்று எவருமில்லை.

தமிழ் மக்களின் அரசியல் ரீதியான விடுதலைக்கு, சிங்களப் பேரினவாத அரசுடனான அரசியல் போர் இன்னமும் தொடங்காமல்தான் உள்ளது.

புலிகளின் விமானத்தாக்குதலை இந்தியா ஒரு பொருட்டாக மதித்ததாக நான் அறியவில்லை... புலிகள் அனுராத புரத்துக்குள் அதுவும் கட்டுநாயக்கா மாதிரி தமிழர்கள் வாழும் பிரதேசம் போல் இல்லாமல் தமிழர்கள் வாழும் பிரதேசத்தில் இருந்து பல மைல்கள் தள்ளி முழுச்சிங்கள பிரதேசத்துக்குள் இருந்த ஒரு முகாமை புலிகள் தாக்கியது தங்களது பிரதேசங்களுக்குள்ளும் இப்படினான உதாரண தாக்குதல்கள் நடக்கலாம் எண்று இந்தியா நம்பியது தான் இதன் விழைவு... !

மற்றும் படி புலிகள் விமானம் புலிகளின் நிலப்பிரதேசங்கள் வீழ்ச்சி உறும் போது செயல் இளக்கும் என்பது தெரியாதது அல்ல இந்தியா... புலிகளின் விமானம் என்பது இலங்கை அரசுக்கு ஒரு கௌரவ பிரச்சினையே அண்றி இந்தியாவுக்கான பிரச்சினை அல்ல... அதை இந்தியாவின் பிரச்சினையாக காட்டியதும் கூட இலங்கை அரசு மட்டும் தான்... செய்திகளை திரும்ப படித்தீர்கள் எண்டால் அவைகளை காணலாம்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புலிகள் எதை செய்து இருக்க வேண்டும் எண்று நீங்கள் நினைக்கிறீர்கள்....! அரசியல் அடிபணிதலா....??

எல்லாவற்றையும் கறுப்பு-வெள்ளையாகப் பார்க்கக்கூடாது. கறுப்பிற்கும் வெள்ளைக்கும் இடையே பல செறிவுகளில் சாம்பல் வர்ணங்களும் உள்ளன!

இராஜீவ் மரணம் நிகழ்ந்து இருக்காவிட்டாலும் புலிகளின் மீதான ஆதரவு தமிழகத்தில் இல்லாமல் போய் இருக்கும்... அது கொள்கை ரீதியில் இந்தியாவில் ஆரம்பிக்கப்பட்டு நீண்டகாலம் ஆகி இருந்தது....

இந்த விளக்கம் சரியா தவறா என்று சொல்லுவதற்கான வாய்ப்பு தற்போது இல்லை. ஏனெனில் ராஜீவின் மரணம் அந்த நேரத்தில் மாணவர்களாக இருந்த தமிழீழ ஆதரவாளர்களைக் கூட மாற்றியது என்பது அத்தகைய ஆதரவாளராக இருந்து தீவிர ஆதரவை விலக்கிய எனது இந்தியத் தமிழ் நண்பர் சொன்னார் (அவர் தற்போதும் தமிழர்களுக்கு விடிவு வேண்டும் என்பதில் மிகவும் அக்கறையாகத்தான் உள்ளார்). அவரின் கருத்தை நான் சரியென்று நினைக்கின்றேன்.

புலிகள் மீதான தடை மேற்க்கு நாடுகளில் ஒரு இரவுக்குள் வந்து விழுந்தது இல்லை... இந்திய பக்கபலம் பெற்ற சந்திரிக்காவால் கொண்டு வரப்பட்ட கதிர்க்காமர், நீலன் திருச்செல்வம் போண்ற தமிழர்களால் ஊர் ஊராக சொண்று செய்ய பட்ட பிரச்சாரம் அது... பக்க பலமாக கூட்டங்களுக்கு போய் இராஜதந்திரீக்களை சந்தித்தவர்கள், தமிழர் தரப்பை பலவீனப்படுத்த பாடு பட்டவர்கள் தான் இண்று புலிகள் அரசியல் செய்யவில்லை எண்டு பிரச்சாரம் செய்பவர்கள்... !

இதுக்கு மத்தியில் புலிகள் அரசியல் பலம் பெற முடியவில்லை என்பது உண்மைதான்... !

இது ஜோர்ஜ் புஷ் மாதிரி "ஒன்றில் நீங்கள் எங்களுடன், இல்லை எதிரியுடன்" என்ற கூற்றாக இருக்கின்றது. புலிகள் அரசியல் செய்யவில்லை என்று சொல்பவர்களை எல்லாம் புலிகளுக்கு எதிராக வேலை செய்தவர்கள் என்பது வெறும் அவதூறுதான்.

புலிகளால் மட்டும் என்பது தலைக்கணம்... புலிகளை விட யாரும் சுயநலம் இல்லாமல் முன் வரவில்லை என்பதுதான் உண்மை...!

புலிகள் செய்தவைகளை தூற்றுவது மட்டுமே பலராலும் செய்யப்பட்டதே அண்றி புலிகளுக்கு சமாந்தரமாக யாராலும் எதையும் செய்யும் அளவுக்கு அர்ப்பணிப்பு இருக்கவில்லை...

நான் கேக்கிறன் உங்களிடம்... நீங்கள் உங்களை நம்பி வந்த உங்களது போராளிகளை கொண்டு ஒரு பிரதேசத்தை கட்டுப்பாட்டுக்கை கொண்டு வந்து அதுக்கு பாதுகாப்பு கொடுத்து வைத்து இருக்கிறீர்கள் எண்டால் நான் வந்து அங்கு உங்களுக்கும் உங்களது போராளிகளுக்கும் எதிராக அரசியல் செய்ய இடம் தருவீர்களா....??

ஆயுதம் ஏந்திய இயக்கங்களை மட்டுமே உங்கள் கண்கள் கண்டிருக்கின்றன. ஆயுதம் ஏந்தாமல் அரசியல் செய்தவர்களைக் கூடத் தனித்துவமாகச் செயற்படவில்லை என்றுதான் சொல்லவேண்டும். ஈரோஸ் போன்ற இயக்கம் தனித்துவமாக இயங்கியிருந்தால், சிலவேளை தற்போதைய அரசியல் வெற்றிடம் ஏற்பட்டிருக்காது என்று சிந்திப்பதுண்டு. அதற்காக ஈரோஸ் குத்துவெட்டுக்களின்றிப் பிழைத்திருக்கும் என்றும் சொல்லிவிடமுடியாது.

புலிகளோடு நல்ல தொடர்பை பேணிய குற்றத்துக்காக மாற்றியக்க தாஸ் எனும் ஒரு போராளி ஆஸ்பத்திரி வீதியில் வைத்து அதே இயக்கத்தை சேர்ந்தவர்களால் நாய் சுடுவது போல சுடப்படும் போது சுட்டவர்கள் புலிகளுக்கு சொன்ன செய்தி என்னவாக இருந்தது....??

கூட அவ்வளவு காலமும் இருந்தவனை சகோதர அமைப்புடன் தொடர்புகளை பேணுகிறான் என்னும் குற்றத்துக்காக அமைப்பை விட்டு விலத்தினால் கருத்து மோதல் எண்று சொல்ல முடியும் , ஆனால் கொலை எப்படியான உணர்வையும் ஆபத்தையும் புலிகளுக்கு உணர்த்தி இருக்கும்...??

இதுக்கு தனது போராளிகளை பாதுகாக்க புலிகள் என்ன நடவடிக்கை எடுத்து இருக்க வேணும் எண்டுறீயள்....?

தாஸ் புலிகளோடு நல்ல தொடர்பைப் பேணிக் கொண்டிருந்தாரா? :o

எனக்குத் தெரிந்தவரை (சிறிய வயது என்பதால் அதிகம் தெரியாது!) தாஸ் உயிருடன் இருந்தவரை நெல்லியடி/உடுப்பிட்டிக்குள் புலிகள் நுழையமுடியாது இருந்தனர். ஒவ்வொரு இயக்கமும் தங்கள் பகுதிகளை வரையறுத்துச் செயற்பட்டனர். மாறிப்போய் ரெலோவிடம் சூடுபட்ட புலி இயக்கத்தில் இருந்தவர் தற்போதும் லண்டனில்தான் இருக்கின்றார்!

புலிகளை விமர்சிப்பதை மற்ற இயக்கங்களுக்கு வக்காலத்து வாங்குவது என்று கருதக்கூடாது. முன்னரே எழுதியதுபோன்று எல்லோரும் தத்தமது அதிகாரத்திற்கே தமிழீழப் போராட்டத்தைப் பயன்படுத்திக்கொண்டனர்.

டைனோசர் அழிந்த காலங்களில் அதுக்கான உணவுப்பிரச்சினையும்( இரை) அவைகளுக்கிடையான சண்டைகளுமே அழிவுக்கு காரணம் எண்டு ஆய்வுகள் சொல்கிறது... அவைகளை அழிக்கும் அளவுக்கு மனிதன் அந்தக்காலங்களில் பலமாக இருக்கவில்லை...

இது ஒருவகையில் எங்கட அழிவுக்கு காரணமாக இருக்கலாம்.. அது காட்டிக்குடுத்தவர்களா வந்தது....

டைனோசர் அழிந்த கதை பின்வரும் இணைப்பில் உள்ளது.

http://www.alaikal.com/news/?p=33133

புலிகளின் விமானத்தாக்குதலை இந்தியா ஒரு பொருட்டாக மதித்ததாக நான் அறியவில்லை... புலிகள் அனுராத புரத்துக்குள் அதுவும் கட்டுநாயக்கா மாதிரி தமிழர்கள் வாழும் பிரதேசம் போல் இல்லாமல் தமிழர்கள் வாழும் பிரதேசத்தில் இருந்து பல மைல்கள் தள்ளி முழுச்சிங்கள பிரதேசத்துக்குள் இருந்த ஒரு முகாமை புலிகள் தாக்கியது தங்களது பிரதேசங்களுக்குள்ளும் இப்படினான உதாரண தாக்குதல்கள் நடக்கலாம் எண்று இந்தியா நம்பியது தான் இதன் விழைவு... !

மற்றும் படி புலிகள் விமானம் புலிகளின் நிலப்பிரதேசங்கள் வீழ்ச்சி உறும் போது செயல் இளக்கும் என்பது தெரியாதது அல்ல இந்தியா... புலிகளின் விமானம் என்பது இலங்கை அரசுக்கு ஒரு கௌரவ பிரச்சினையே அண்றி இந்தியாவுக்கான பிரச்சினை அல்ல... அதை இந்தியாவின் பிரச்சினையாக காட்டியதும் கூட இலங்கை அரசு மட்டும் தான்... செய்திகளை திரும்ப படித்தீர்கள் எண்டால் அவைகளை காணலாம்...

புலிகளின் விமானத்தாக்குதலின் அரசியல் விளைவுகளைப் பற்றிக் கேணல் ஹரிகரன் எழுதியிருந்தார். புலிகள் கூட புலம் பெயர்ந்த மக்களின் சோர்வை நீக்கத்தான் விமானத்தாக்குதல்களைப் பயன்படுத்தினர். எனவே இராணுவ முக்கியத்துவம் இல்லாத விமானப்படைக்கு அதிக பணம் செலவழித்து, கடைசியில் அதுவும் ஒரு ஆப்பாக வரக் காரணமான திட்டத்தை என்னவென்று சொல்லுவது?

Link to comment
Share on other sites

எல்லாவற்றையும் கறுப்பு-வெள்ளையாகப் பார்க்கக்கூடாது. கறுப்பிற்கும் வெள்ளைக்கும் இடையே பல செறிவுகளில் சாம்பல் வர்ணங்களும் உள்ளன!

இந்த விளக்கம் சரியா தவறா என்று சொல்லுவதற்கான வாய்ப்பு தற்போது இல்லை. ஏனெனில் ராஜீவின் மரணம் அந்த நேரத்தில் மாணவர்களாக இருந்த தமிழீழ ஆதரவாளர்களைக் கூட மாற்றியது என்பது அத்தகைய ஆதரவாளராக இருந்து தீவிர ஆதரவை விலக்கிய எனது இந்தியத் தமிழ் நண்பர் சொன்னார் (அவர் தற்போதும் தமிழர்களுக்கு விடிவு வேண்டும் என்பதில் மிகவும் அக்கறையாகத்தான் உள்ளார்). அவரின் கருத்தை நான் சரியென்று நினைக்கின்றேன்.

புலிகளை குறிவைத்து அவர்களின் நோக்கத்தை கொச்சைப்படுத்துவது என்பது புலிகளை மக்களில் இருந்து விலகவைக்கும் உத்தியாக மட்டும் தான் பார்க்க முடிகிறது... இதை விட விமர்சகர்கள் வேறு எதையும் சாதிக்க போகிறார்கள் எண்று நான் நம்பவில்லை...

உள்ளூரில் இருந்து ஓணான் பிடிக்காதவை வெளிநாடு வந்து உடும்பு பிடிப்பினம் எண்டு நம்புறது போல தான் இதுவும்..

ஈழத்திலும் சரி தமிழகத்திலும் சரி தமிழீழத்தை ஆதரித்த மக்கள் தொகை என்பது TELO வையும் , ஆதரித்தவர்கள் தான் அதிகம்.... TELO போராளிகளை பத்து விடுதலை புலியோடை சமன் படுத்தி பேசும் மக்கள் TELO வை செயல் இழக்க வைத்த புலிகளை விரும்பவில்லை என்பது தான் சரியாக இருக்கிறது...

இந்தியாவில் இது மிகவும் சாதாரணம்... புலிகளை நம்பி புலிகளுடன் தொடர்பை பேணிய மக்கள் புலிகளுடன் இண்றுவரைக்கும் அன்பாகவே இருக்கிறார்கள்... மற்றும் படி ஒட்டு மொத்த தமிழ் நாடு தமிழீழத்துக்காக திரண்டது போல சொல்லப்படுவதில் உண்மை இல்லை... இதை பழைய திமுக காறரை கண்டால் கேட்டுப்பாருங்கள் வெளிப்படையாகவே சொல்வார்கள்...

அதோடை இந்திய இராணுவம் ஈழத்தில் கொடுமை செய்தது எண்டு எல்லா தமிழ் மக்களுக்கும் தெரியும்... ஆனால் தமிழகம் ஒண்டும் கெம்பி எழும்பி விடவில்லை... அமைதியாகதான் இருந்தது... ஒரு பேரணி கூட நடக்கவில்லை...! வைகோ, நெடுமாறன் அண்ணை போண்றவர்கள் தான் அண்றும் கதறினவை... இண்றும் கதறுகிறார்கள்...

நீங்கள் பலவித சாம்பல் எண்டு சொல்லும் ஆக்கள் கூட அந்தகாலப்பகுதியை பயன் படுத்தி ஜனநாயக அரசியல் செய்ய வரவில்லை எண்டதை சுட்டிக்காட்ட விரும்புறன்...

இது ஜோர்ஜ் புஷ் மாதிரி "ஒன்றில் நீங்கள் எங்களுடன், இல்லை எதிரியுடன்" என்ற கூற்றாக இருக்கின்றது. புலிகள் அரசியல் செய்யவில்லை என்று சொல்பவர்களை எல்லாம் புலிகளுக்கு எதிராக வேலை செய்தவர்கள் என்பது வெறும் அவதூறுதான்.

ஆயுதம் ஏந்திய இயக்கங்களை மட்டுமே உங்கள் கண்கள் கண்டிருக்கின்றன. ஆயுதம் ஏந்தாமல் அரசியல் செய்தவர்களைக் கூடத் தனித்துவமாகச் செயற்படவில்லை என்றுதான் சொல்லவேண்டும். ஈரோஸ் போன்ற இயக்கம் தனித்துவமாக இயங்கியிருந்தால், சிலவேளை தற்போதைய அரசியல் வெற்றிடம் ஏற்பட்டிருக்காது என்று சிந்திப்பதுண்டு. அதற்காக ஈரோஸ் குத்துவெட்டுக்களின்றிப் பிழைத்திருக்கும் என்றும் சொல்லிவிடமுடியாது.

புலிகள் எங்களை அரசியல் செய்ய விடவில்லை எண்று சொல்லும் குற்றச்சாட்டானது எவ்வள பொய்மை கொண்டது எண்டது வெளிப்படையான உண்மை... புலிகளை சாராமல் இலங்கையில் இருந்து சிங்கள அடக்கு முறைக்கு எதிராக அரசியல் செய்த பலர் இலங்கையில் அரசால் கொல்லப்பட்டு இருக்கிறார்கள்... கைது செய்யப்பட்டு நாட்டை விட்டு தப்பி ஓடி வெளியில் வந்தும் இருக்கிறார்கள்... வெளியில் வந்தும் இருக்கிறார்கள்...

நான் சொல்வது ஜனநாயக ரீதியில்... ஆனால் புலி தங்களுக்கு பாதுகாப்பு தரவில்லை நிண்டு அரசியல் செய்ய என்பது கேவலமான ஒரு பலவீன நிலை.... தங்கட பலவீனங்களை மறைக்க இப்ப காரணம் தேடுகிறார்கள்...

புலிகள் பலமாக இருந்த காலத்து புலிகளின் 'சமதர்மத்துக்கு' சமாந்தரமாக , ஜனநாயகத்தை தமிழர் மத்தியில் கட்டி எழுப்ப சந்தர்ப்பம் பலமாகவே இருந்தது... ! ஆனால் செய்யவில்லை... அப்படி ஒரு ஜனநாயகம் கட்டி எழுப்புவதை இலங்கை அரசு ஆதரிக்கவில்லை எண்று சொன்னால் கூட நம்பலாம் ஆனால் புலிகள் தடையாக இருந்தார்கள் என்பது அப்பட்டமான பொய்...

தமிழ் அரசியல் கட்ச்சிகளின் செயற்பாடுகளுக்கு புலிகள் எந்தவகையில் தடையாக இருந்தார்கள்....??

ஈரோச் அமைப்பின் வெளிச்ச கூட்டு சின்னத்தில் போட்டி இட்டு பாராளுமண்றம் போனவர்கள் புலிகளின் பினாமிகள் எண்டு சொல்லப்பட்ட கதைகள் எல்லாம் உண்டு... காரணம் அவர்களுக்கு புலிகள் குடுத்த அங்கீகாரமும் ஊக்கமுமே காரணம் எண்டதை நீங்கள் அறியவில்லையா...??

தாஸ் புலிகளோடு நல்ல தொடர்பைப் பேணிக் கொண்டிருந்தாரா? :o

எனக்குத் தெரிந்தவரை (சிறிய வயது என்பதால் அதிகம் தெரியாது!) தாஸ் உயிருடன் இருந்தவரை நெல்லியடி/உடுப்பிட்டிக்குள் புலிகள் நுழையமுடியாது இருந்தனர். ஒவ்வொரு இயக்கமும் தங்கள் பகுதிகளை வரையறுத்துச் செயற்பட்டனர். மாறிப்போய் ரெலோவிடம் சூடுபட்ட புலி இயக்கத்தில் இருந்தவர் தற்போதும் லண்டனில்தான் இருக்கின்றார்!

புலிகளை விமர்சிப்பதை மற்ற இயக்கங்களுக்கு வக்காலத்து வாங்குவது என்று கருதக்கூடாது. முன்னரே எழுதியதுபோன்று எல்லோரும் தத்தமது அதிகாரத்திற்கே தமிழீழப் போராட்டத்தைப் பயன்படுத்திக்கொண்டனர்.

டைனோசர் அழிந்த கதை பின்வரும் இணைப்பில் உள்ளது.

http://www.alaikal.com/news/?p=33133

சாவகச்சேரி காவல் நிலையம் TELO வால் தாக்கப்பட்ட போதும் , ஓமந்தையில் யாழ்தேவி தடம் பிரட்டப்பட்ட போதும் TELO வுக்கு பொறுப்பாக இருந்தது தாஸ்... அப்போது எல்லாம் TELO வுக்கு உதவியாக புலிகள் இருந்தார்கள்... ! அப்படி உதவ போனவர்களை நிறையப்பேரை நான் சந்திச்சு இருக்கிறன்....

புலிகளின் விமானத்தாக்குதலின் அரசியல் விளைவுகளைப் பற்றிக் கேணல் ஹரிகரன் எழுதியிருந்தார். புலிகள் கூட புலம் பெயர்ந்த மக்களின் சோர்வை நீக்கத்தான் விமானத்தாக்குதல்களைப் பயன்படுத்தினர். எனவே இராணுவ முக்கியத்துவம் இல்லாத விமானப்படைக்கு அதிக பணம் செலவழித்து, கடைசியில் அதுவும் ஒரு ஆப்பாக வரக் காரணமான திட்டத்தை என்னவென்று சொல்லுவது?

விமானங்கள் புலிகளால் மூலோபாய ரீதியில் இலங்கை அரசின் செலவீனங்களை கூட்ட தான் புலிகளால் பயன் படுத்த பட்டதே அண்றி புலம்பெயர்ந்த மக்களை குளிர்விக்க அல்ல....

மற்றும் படி புலிகளின் விமானங்களை பிரச்சார பொருளாக்கி உலக நாடுகளிடம் போய் நிண்டு அதை பற்றிய அறிக்கைகளை இலங்கை வேண்டியது...

Link to comment
Share on other sites

புலித் தலைவர்களை கொன்றவர் பா.சிதம்பரம் தான்

டெல்லியில் இருந்து ஜெகத் கஸ்பரை இயக்கி 2009, மே 18-ல் புலித் தலைவர்களை சரணடைய சொல்லி கொல்ல வைத்தவர்கள், சந்தேகமே இல்லாமல் காங்கிரஸ் கட்சியின் முத்த அமைச்சரும் தமிழருமான பா.சிதம்பரம் தான்.

பா.சிதம்பரம் ஈழத்தமிழருக்காக அல்லது காங்கிரஸ் கட்சி ஈழத்தமிழருக்காக நடத்திய ஒரே கூட்டம் 15-02-2009 சென்னை மயிலாப்பூரில் உள்ள மாங்கொல்லையில் தான். அன்று அவர் பேசியதை திரும்பவும் கேட்டால்

தெளிவாய் புரியும், யார் டெல்லியில் இருந்த காங்கிரஸ் பெரியவர் என்று. இன்னும் தமிழன் ஏறமாறக்கூடாது.

திருடன் எத்தனை நாள் திட்டம் போட்டுத் திருடினாலும் திருடுகிற இடத்தில் ஏதோ ஒரு தடயத்தை விட்டுத்தான் செல்வான் என்று சொல்வார்கள். விசாரணை நேர்மையாக இருந்தால் சிறிய தடயம் கூட அவனைச் சிக்க வைத்து விடும். நடேசன் வெள்ளைக் கொடியோடு சரணடைந்த நிகழ்வில் அப்படித்தான் சிக்கியிருக்கிறார் ஜெகத் கஸ்பர் என்னும் பாதிரி.

“ஈழம் செத்த பிறகும் இரத்தம் குடிக்கிறார் ஜெகத் கஸ்பர்” என்ற கட்டுரை வினவு தளத்தில் வெளியானதைத் தொடர்ந்து குமுதம் ரிப்போர்ட்டர் இதழுக்கு நேர்காணல் ஒன்றை வழங்கியிருக்கும் ஜெகத் கஸ்பர், “மௌனத்தின் வலி” நூல் முழுக்க முழுக்க போருக்கு எதிரான பத்திரிகையாளர்கள் சார்பில் கொண்டு வரப்பட்டதுதான் என்றும், கவிதைகள் திருத்தப்பட்டது மற்றும் வாங்கிய கவிதைகளை வெளியிடாமல் தி.மு.க.விற்கு ஆபத்தில்லாத கவிதைகளை வெளியிட்டது எல்லாமே பத்திரிகையாளர்கள்தான் என்று கூறி தப்பித்துக் கொண்டிருக்கிறார். போருக்கு எதிரான பத்திரிகையாளர் அமைப்பு பற்றி வேறொரு சந்தர்ப்பத்தில் தனியே எழுதுவோம்.

மேற்கூறிய குமுதம் ரிப்போர்ட்டர் நேர்காணலில், அதன் நிருபர் கடைசி நேரத்தில் நடந்த நிகழ்வுகள் தொடர்பாக மூன்று கேள்விகளை கஸ்பரிடம் முன்வைக்கிறார். அந்தக் கேள்விகளையும் அதற்கான ஜெகத் கஸ்பரின் பதிலையும் அப்படியே கீழே தருகிறோம்.

கேள்வி: இறுதிக்கட்ட போரின் இறுதி நாட்களில் இந்தியாவுக்கும், புலிகளுக்கும் நடந்த பேச்சு வார்த்தையில் இந்தியா சார்பில் நீங்களும் கலந்து கொண்டீர்கள். போரை நிறுத்த புலிகளிடம் என்னென்ன நிபந்தனைகள் முன் வைக்கப்பட்டன?

கஸ்பர்: இதில் சம்பந்தப்பட்டவர்களின் ஒப்புதலைப் பெற்றுக் கொண்டுதான் எதையும் நான் பேச முடியும். அந்த நாள் வரும்போது பேசுவேன். ஆனால், நிச்சயமாக சண்டை நிறுத்தத்திற்கு வாய்ப்பு இருந்தது. 48 மணி நேரத்துக்குள் சண்டை நிறுத்தம் என்று வாய்ப்புத் தரப்பட்டது. ‘தமிழ் மக்களுக்கு நிரந்தரமான தீர்வு வரும்போது ஆயுதங்களை ஒப்படையுங்கள்’ என்று விருப்பத்தை மட்டுமே கேட்டிருந்தோம். நிச்சயமாக அவர்கள் (புலிகள்) அதை ஏற்கவில்லை.

கேள்வி: ஏன் அதை விடுதலைப்புலிகள் ஏற்றுக் கொள்ளவில்லை

கஸ்பர்: அவர்கள் பக்கம் என்ன நடந்தது என்று எனக்குத் தெரியாது. மீண்டும் சொல்கிறேன். நிச்சயமாக சண்டை நிறுத்தத்திற்கு வாய்ப்பு இருந்தது. அதற்கு வாக்குறுதியும் தரப்பட்டது. ஆயுதங்களை ஒப்படைக்க விருப்பம் மட்டுமே கேட்டிருந்தார்கள். நிபந்தனை விதிக்கவில்ல

கேள்வி: வெளிப்படையாகச் சொல்லுங்கள். ஈழ விடுதலைப் போராட்ட அழிவைத் தடுக்க புலிகள் என்ன செய்திருக்க வேண்டும்?

கஸ்பர்: கடைசிக் கட்டத்தில் என்னென்ன நடந்தது என்று முழுமையாக நமக்குத் தெரியாது. எனவே, தீர்மானமான கருத்தைச் சொல்ல முடியாது. என்னளவில், சண்டை நிறுத்தத்திற்கு ஒரு வாய்ப்பு இருந்தது. அது நடக்கவில்லை. அது நடந்திருந்தால் போராட்டம் காக்கப்பட்டிருக்கலாம். எனக்குத் தெரிந்த வரை, ‘தலைவர் (பிரபாகரன்) சரணடைய வேண்டும், பொட்டு அம்மான் சரணடைய வேண்டும்’ என்று எந்த நிபந்தனையும் பேச்சுவார்த்தையின்போது விதிக்கப்படவில்லை. ‘ஆயுதங்களை ஒப்படைக்கத் தயாராக இருங்கள்’ என்றார்கள். இதை அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. அது ஏன் என்றும் எனக்குத் தெரியாது.

போர் முடிந்து கிட்டத்தட்ட ஆறு மாதங்களுக்குப் பிறகு கடைசி நேர முள்ளிவாய்க்கால் போர் குறித்து இப்போது பதிவு செய்கிற ஜெகத் கஸ்பர், போர் நிறுத்தம் ஒன்றிற்கு இலங்கை அரசு தயாராக இருந்ததாகவும், புலிகள் ஆயுதங்களை ஒப்படைக்கவோ போர் நிறுத்தத்திற்கு சம்மதிக்கவோ இல்லை என்றும் சொல்கின்றார். புலிகளுக்கும், இந்திய அரசுக்குமிடையிலான கடைசிநேரத் தூதராகச் செயல்பட்ட இவரின் பேச்சைக் கேட்டிருந்தால் போராட்டம் காப்பாற்றப்பட்டிருக்கும் என்றும் இப்போது குமுதம் இதழில் சொல்லியிருக்கின்றார் ஜெகத் கஸ்பர்.

இன்றைக்கு இப்படிப் பேசுகிற இதே ஜெகத் கஸ்பர், போருக்குப் பின்னர் மே மாதம் 21ம் தேதி வெளியான நக்கீரன் இதழில் “யுத்த துரோகம்” என்னும் பெயரில் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார்.

அக்கட்டுரையில் ஜெகத் எழுதியிருந்தது இதுதான்.

“கடைசி நாளில் அதாவது கடந்த சனிக்கிழமை (16.05.2009) பிரபாகரனும், அதிமுக்கிய தளபதிகள் சிலரும் களத்தை விட்டு அகன்ற பின் காயமடைந்த போராளிகளை அப்புறப்படுத்திக் காப்பாற்றும் முடிவை எடுத்து அதற்காக புலிகளின் கடற்படைத் தளபதி சூசை மதுரையில் ஒருவரோடு தொடர்பு கொண்டதாகவும், அந்த மதுரை நபர் சு.ப.வீயைத் (சு.ப. வீரபாண்டியன்) தொடர்பு கொண்டதாகவும், கடைசியில் கனிமொழியின் உதவியோடு காங்கிரசு கட்சியின் முக்கியப் பிரமுகரோடு பேசி (எதார்த்தமான முடிவு) ஒன்று எடுக்கப்பட்டதாகவும் கூறுகின்றார். “புலிகளின் அனைத்துலகப் பொறுப்பாளர் செல்வராசா பத்மநாதன் கொழும்பிலுள்ள இந்தியத் தூதுவருக்கு ஆயுதங்களை ஒப்படைக்கத் தயாராக உள்ளோம் என்று பேக்ஸ் மூலமாக உடனே தெரிவிக்க வேண்டும். மற்றவைகளை இந்தியா பார்த்துக் கொள்ளும்” என்பதுதான் அந்த முடிவு.

இம்முடிவு எடுக்கப்பட்டு இரவு 10 மணிக்கு லண்டனில் உள்ள ஜெகத் கஸ்பர்ராஜின் நண்பர் மூலம் செல்வராசா பத்மநாதனுக்கு தகவல் சொல்லப்பட, அவரும் மின்னல் வேகத்தில் இயங்கி ‘இந்தியாவிடமே (அதாவது கொழும்பில் உள்ள இந்தியத் தூதரிடம்) ஆயுதங்களை ஒப்படைக்கத் தயாராக இருப்பதாகவும், அது சாத்தியமில்லை என்றால் ஐ.நா ஏற்பாட்டில் ஒப்படைக்கிறோம்’ என்றும் இரவு 11.50 மணிக்கு முடிவு எடுத்ததாகவும் கஸ்பர் கூறுகிறார்.

உடனே கனிமொழி ஏற்கனவே பேசிய அந்தக் காங்கிரச பெரியவரைத் தொடர்பு கொண்டு இந்தியா, அல்லது ஐ.நா.வின் முன்னிலையில் சரணடைவது என்ற புலிகளின் முடிவைச் சொன்ன போது, ‘கால அவகாசமில்லை. இந்தியாவிடம் சரணடைவதற்கான சாத்தியப்பாடுகள் இப்போது இல்லை. இலங்கை ராணுவத்திடமே சரணடைவதுதான் இப்போதைய நெருக்கடி நிலையில் ஆகக் கூடியது’ என்று அந்த காங்கிரசு பெரியவர் சொன்னதாகவும் கூறுகின்றார்.

பின்னர் மக்களைக் காப்பாற்றும் பொருட்டு, இலங்கை ராணுவத்திடமே சரணடைவது என்ற முடிவை அதே சனிக்கிழமை நள்ளிரவு புலிகள் எடுத்ததாகவும், திங்கள் கிழமை அதிகாலை அதாவது 2.30 மணிவரை களத்தில் நின்ற நடேசன், பத்மநாதனுடன் உரையாடி விட்டு காலையில் வெள்ளைக் கொடியோடு சரணடையச் சென்ற போது, நடேசனையும் தளபதி ரமேஷையும் போராளிகளையும் இலங்கை ராணுவம் சுட்டுக் கொன்று விட்டதாகவும் ஜெகத் கஸ்பர் தனது வாக்குமூலக் கட்டுரையில் எழுதியிருந்தார்.

அன்றைய சூழலில் இக்கட்டுரையை மேலோட்டமாகப் படித்தவர்கள், பிரபாகரனையும் போராளிகளையும் காப்பாற்ற ஃபாதர் வேலை செய்திருக்கிறார் என்றே நினைத்தார்கள். வாசித்ததைத் தாண்டி யோசிக்கவில்லை. ஆனால் இன்று இக்கட்டுரையைப் படிக்கும் போது எழுகின்ற கேள்விகளுக்கு ஜெகத் கஸ்பரோ அதோடு தொடர்புடையவர்களோ பதில் சொல்வார்களா?

அதே மே மாத இறுதியில் இது போன்ற இன்னொரு வாக்குமூலக் கட்டுரையும் இணையங்களில் உலவியது. லண்டன் டைம்ஸ் இதழில் வெளிவந்த மேரி கொல்வினின் கட்டுரைதான் அது. அவரும் ஜெகத்தைப் போலவே புலிகளுக்கும் மேற்குலக அரசுகளுக்குமிடையில் இறுதி நேர தூதுவராகச் செயல்பட்டவர். தவிரவும் மேரி கொல்வின் 2001இல் வன்னிக்குச் சென்றிருந்த போது இராணுவத்தின் ஷெல்லடியில் ஒரு கண்பார்வை பாதிக்கப்பட்டவர். அவரது வாக்குமூலக் கட்டுரையில் என்ன இருக்கிறது என்பதையும் நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

“நாங்கள் எமது ஆயுதங்களைக் கீழே வைக்கிறோம்’ என்று ஞாயிற்றுக்கிழமை (17.05.2009) அன்று பின்னிரவில் கடைசியாக நடேசன் என்னிடம் கூறினார். ஆனால் ஒபாமா நிர்வாகத்திடமிருந்தும் பிரிட்டிஷ் அரசாங்கத்திடமிருந்தும் பாதுகாப்புக்கான உத்திரவாதத்தை நாம் எதிர்பார்த்துள்ளோம்’ என்றும் கூறியிருந்தார். வெற்றி பெற்றுக் கொண்டிருக்கும் இலங்கை ராணுவத்திடம் சரணடைவது 26 ஆண்டு கால உள்நாட்டுப் போரில் மிகவும் அபாயகரமான தருணம் என்பதை அவர்கள் (அதாவது புலித் தலைவர்கள்) நன்கு உணர்ந்திருந்தனர் என்று லண்டன் டைம்ஸ் நிருபரான மேரி கொல்வின் குறிப்பிடுகின்றார்.

மேலும் புலிகளின் சமாதானச் செயலகத்தைச் சார்ந்த சீவரத்தினம் புலித்தேவனையும், நடேசனையும், சமாதானச் செயலகத்தைச் சார்ந்த 300 போராளிகளையும் காப்பாற்றுவதே அவர்களின் (புலிகளின்) நோக்கமாக இருந்தது என்று எழுதுகின்ற மேரி கொல்வின், முக்கியமாக மூன்று விசயங்களை ஐ.நா.விற்கு தெரிவிக்குமாறு நடேசன் தன்னிடம் கேட்டுக் கொண்டதாகக் கூறுகின்றார். ஒன்று புலிகள் ஆயுதங்களைக் கீழே வைப்பார்கள், இரண்டு அமெரிக்கர்கள் அல்லது பிரிட்டிஷாரிடமிருந்து பாதுகாப்புக்கான உத்திரவாதம் வழங்கப்பட வேண்டும். மூன்று தமிழ் சிறுபான்மையினரின் உரிமைகளை உத்தரவாதப்படுத்தும் அரசியல் நடவடிக்கைகளுக்கு இலங்கை அரசாங்கம் இணங்கவேண்டும். இந்த உறுதிமொழிகளை புலிகள் கோரியிருந்தனர்.”

புலிகள் வைத்த இம்மூன்று கோரிக்கைகளையும் சுட்டிக் காட்டுகிற மேரி கொல்வின், “ஞாயிற்றுக்கிழமை 17.05.2009 இரவுக்குப் பின்னர் புலிகளிடம் இருந்து மேலதிகமான அரசியல் கோரிக்கைகளோ, படங்களோ வரவில்லை. சரண் என்ற வார்த்தையை உபயோகிக்க நடேசன் மறுத்தார். என்னிடம் அவர் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டபோது அந்த வார்த்தையைப் பிரயோகிக்க மறுத்திருந்தார்” என்றும் கூறுவது மிக முக்கியமானது. மேரி கொல்வின் எழுத்திலிருந்து இறுதிப் போரின் போது புலிகளின் மனநிலை என்னவாக இருந்தது என்பதைப் புரிந்து கொள்ள முடிகின்றது. ஒருவேளை, வேறு வழியில்லாமல் சரணடையும் சூழல் எழுந்தால் கூட, அது மூன்றாம் தரப்பு நாடு ஒன்றிடம்தான் என்று நடேசன் தெரிவித்ததாகவும் மேரி கொல்வின் எழுதுகின்றார்.

அப்போது நியூயார்க்கிலிருந்த ஐ.நா. அலுவலகம், ஐ.நா.வின் ஆசியாவுக்கான தூதர் விஜய் நம்பியாருடன் மேரி கொல்வினுக்கு தொடர்பை ஏற்படுத்திக் கொடுக்கின்றது. புலிகள் ஐ.நா.வின் உத்திரவாதத்தில் ஆயுதங்களை ஒப்படைக்கும் முடிவை எடுத்திருப்பதை மேரி கொல்வின் விஜய் நம்பியாரிடம் சொல்கிறார். விஜய் நம்பியாரோ, “நடேசனும், புலித்தேவனும் சரணடையும் போது பாதுகாப்பாக இருப்பார்கள்” என்று தனக்கு இலங்கை தரப்பில் உத்திரவாதம் அளிக்கப்பட்டதாக கொல்வினிடம் கூறுகிறார். கடைசியில் திங்கள் கிழமை காலை 6.20 மணிக்கு அந்த இறுதிச் சமாதான முயற்சியில் ஈடுபட்ட இன்னொரு நபரான சந்திர நேரு என்ற இலங்கை எம்.பி, நடேசனுடன் பேசியிருக்கிறார். (இவர் இப்போது அச்சுறுத்தல் காரணமாக இலங்கைக்குச் செல்ல முடியாமல் லண்டனில் வாழ்கிறார்) என்றும் மேரி கொல்வின் தனது வாக்குமூலக் கட்டுரையில் எழுதியிருக்கின்றார்.

(மேரி கொல்வினின் இக்கட்டுரையைப் பிரசுரித்த இணையதளங்கள் பலவும் புலிகள் சரணடைவதற்காகவே மேரி கொல்வினிடம் கோரியதாகத் தலைப்பிட்டு அதைப் பிரசுரித்திருந்தன. மேரி கொல்வினின் அக்கட்டுரை கீழ்க்கண்ட தளத்தில் வாசிக்கலாம். http://www.timesonli...icle6350563.ece

புலிகளின் அரசியல் பிழைகளை ஆதரிப்பதோ, ராணுவ வாத சகதிக்குள் சிக்கி அவர்களின் ஆயுதப் போராட்டம் முடிவுக்கு வந்ததைத் தூக்கி நியாயப்படுத்துவதோ நமது நோக்கமல்ல. ஆனால், அவர்களிடம் எப்படியான நபர்கள் ஊடுருவி, அவர்களைக் கடைசி நேரத்தில் கழுத்தறுத்திருக்கின்றார்கள் என்பதை நிரூபிக்கவே இந்த விடயங்களையெல்லாம் குறிப்பிடுகின்றோம்.

சூரியன் வெளுக்காத அந்த அதிகாலையில் முள்ளிவாய்க்காலில் பெரும் ரத்த ஆறு ஓடியது. ப.நடேசன், புலித்தேவன், தளபதி ரமேஷ், தளபதி இளங்கோ, பிரபாகரனின் மூத்த மகன் சார்லஸ் ஆன்டனி, அவரின் உதவியாளர் சுதர்மன், தாமஸ், லக்ஷ்மன், தளபதி சிறிராம், இசை அருவி, கபில் அம்மான், அஜந்தி, வார்தா புதியவன், ஜெனார்த்தன் எனப் புலிகளின் முக்கியத் தளபதிகளும் சமாதானச் செயலகத்தைச் சார்ந்த 300 போராளிகளும் வெள்ளைக் கொடியோடு இலங்கை ராணுவத்திடம் சரணடைய, அவர்கள் குடும்பம் குடும்பமாகக் கொடூரமான முறையில் கொன்றொழிக்கப்பட்டார்கள். இதை ஒரு நாள் முழுக்க நடந்த கொடிய நரவேட்டை என்கிறார்கள்.

இங்குதான் நடேசனின் இந்த சரணடைதல் தொடர்பான மர்மம் ஒன்று நமது நெஞ்சைச் சுடுகிறது. புலிகள் கடைசி வரை சொன்னது ஆயுதங்களை மவுனிக்கச் செய்கிறோம் என்பதைத்தான். அதற்கு மிகச் சரியான உதாரணமாக புலிகளின் சர்வதேசப் பொறுப்பாளர் கே.பி.யின் சேனல் 4 நேர்காணல். அதே 17.05.2009 அன்று புகழ்பெற்ற பிரிட்டிஷ் தொலைக்காட்சியான சேனல்4 க்கு கே.பி அளித்த நேர்காணல் இப்படிப் போகிறது:

சேனல்4: புலிகளின் இப்போதைய நிலைப்பாடு என்ன?

கே.பி.: எமது அமைப்பு ஆயுதங்களைக் கீழே போட்டு விட்டு சமாதானப் பேச்சுக்களில் பங்கேற்பதற்குத் தயாராகவிருக்கின்றது.

சேனல்4: எவ்வளவு போராளிகள் அங்கு இருக்கின்றார்கள்?

கே.பி.: 2 ஆயிரத்திற்கும் குறைவான போராளிகள்தான் அங்குள்ளனர். நாம் போரை நிறுத்திக் கொள்ளத் தயாராகவிருக்கின்றோம். எமது மக்கள் செத்துக் கொண்டிருக்கின்றார்கள். ஒவ்வொரு மணித் தியாலமும் நூற்றுக்கும் அதிகமானவர்கள் மரணமடைந்து கொண்டிருக்கின்றார்கள். நேற்றிலிருந்து 3 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டிருக்கின்றார்கள். 25 ஆயிரம் பேர் படுகாயமடைந்திருக்கின்றார்கள்.

சேனல்4: நீங்கள் என்ன சொல்ல வருகின்றீர்கள்… விடுதலைப் புலிகள் கொரில்லாப் போர் முறைகளில் தமது சண்டையைத் தொடர்வார்களா?

கே.பி.: நான் நினைக்கின்றேன், கடந்த 28 வருட காலமாக நாம் போராட்டத்தை நடத்தி வருகின்றோம். நாளாந்தம் மனித உயிர்கள்தான் இதில் பலியாகி வருகின்றன. இன்னும் 30 வருடங்களுக்கு இது தொடர்ந்தால்… நான் அதனை நம்பவில்லை. தமிழ் மக்களுக்கு சமாதான வழிமுறைகளில் தீர்வைக் காண வேண்டும் என்றே நாம் நம்புகின்றோம்.

சேனல்4: பிரபாகரன் இப்போதும் அந்தப் பகுதியில் இருக்கின்றாரா?

கே.பி.: ஆம்.

சேனல்4: நீங்கள் அவருடன் பேசியுள்ளீர்கள். அவர் சரணடையத் தயாராகவிருக்கின்றாரா?

கே.பி.: சரணடைவதல்ல. நாம் ஆயுதங்களைக் கீழே போடுவோம். கையளிக்கப் போவதில்லை.

சேனல்4: ஆயுதங்களை ஏன் கையளிக்க மாட்டீர்கள்?

கே.பி.: உண்மையில் இது பாதுகாப்புடன் சம்பந்தப்பட்டது. நாம் எமது தாயக விடுதலைக்காகவே ஆயுதங்களைத் தூக்கினோம். அவற்றை ஏன் நாங்கள் கையளிக்க வேண்டும்?

சேனல்4: போர் முடிவுக்கு வந்துவிட்டதா அல்லது மாற்றமடைகின்றதா?

கே.பி.: போர் முடிவடையலாம் அல்லது அரசியல் பாதையில் மாற்றமடையலாம். அடுத்த ஒரு சில மணி நேரங்களில் என்ன நடைபெறுகின்றது என்பதிலேயே இது தங்கியிருக்கின்றது. நாங்கள் சொல்வதெல்லாம் இதுதான். ஆயுதங்களை நாங்கள் கீழே போட விரும்புகின்றோம். எமது தேசத்துக்கு ஒரு அரசியல் தீர்வைக் காண விரும்புகின்றோம். ஆமாம் எமது மக்களுக்கான அரசியல் தீர்வு ஒன்று அவசியம் – என்று கே.பி. பேசுகின்றார்.

கே.பி.யின் பேச்சில் நமக்கு அரசியல் ரீதியாக பல முரண்கள் இருந்தாலும், அவை குறித்துப் பேசுவது இக்கட்டுரையின் நோக்கத்தை திசைமாற்றி விடும் என்பதால் அது பற்றிப் பேசுவதை இங்கே தவிர்க்கின்றோம்.

ஆனால் கே.பி. சுட்டிக்காட்டிய அந்த ஒரு சில மணிநேரத்தில் நடந்தவைதான் இரண்டு விசயங்கள். அந்த 17ஆம் தேதி நள்ளிரவில் “கனிமொழியின் உதவியோடு காங்கிரசு கட்சியின் முக்கியப் பிரமுகரோடு பேசி “புலிகளின் அனைத்துலகப் பொறுப்பாளர் செல்வராஜா பத்மநாதன் கொழும்பிலுள்ள இந்திய தூதுவருக்கு ஆயுதங்களை ஒப்படைக்கத் தயாராக உள்ளோம் என்று பேக்ஸ் மூலமாக உடனே தெரிவிக்க வேண்டும். மற்றவைகளை இந்தியா பார்த்துக் கொள்ளும்” என்ற முடிவு எடுக்கப்பட்டு இரவு 10 மணிக்கு லண்டனில் உள்ள ஜெகத் கஸ்பர்ராஜின் நண்பர் மூலம் செல்வராஜா பத்மநாதனுக்கு தகவல் சொல்லப்படுகிறது.

அவரும் கொழும்பில் உள்ள இந்தியத் தூதுவரிடம் ஆயுதங்களை ஒப்படைக்கத் தயாராக இருப்பதாகவும், அது சாத்தியமில்லை என்றால் ஐ.நா. ஏற்பாட்டில் ஒப்படைக்கிறோம் என்ற முடிவை இரவு 11.50 மணிக்கு எடுத்ததாகவும், உடனே கனிமொழி அந்தக் காங்கிரசு பெரியவரை தொடர்பு கொண்டு புலிகளின் முடிவைச் சொன்ன போது அந்த காங்கிரஸ் பெரியவர் ‘இலங்கை ராணுவத்திடமே சரணடைவதுதான் இப்போதைய நெருக்கடி நிலையில் ஆகக் கூடியது’ என்று கூறுகிறார்.

இந்த முடிவு என்பது இந்தியா எடுத்த முடிவு. இந்த முடிவை ஏற்கச் சொல்லி ஜெகத் கஸ்பர் லண்டனில் உள்ள தனது நண்பர் மூலமாக கே.பி.யை நிர்ப்பந்திக்கிறார். இந்தியாவின் விருப்பங்களை மீறி ஐ.நா.வோ, மேற்குலகமோ இலங்கையில் எதையும் செய்துவிடாது என்பது நமக்குத் தெரிந்ததுதான்.

இதே நேரத்தில் மேற்குலக நாடுகள் மூலமாக கே.பி. எடுத்த முயற்சிகளினூடாக 17ஆம் தேதி கொழும்பு வருகிறார் ஐ.நா.வின் விஜய் நம்பியார். இவர் இந்திய அபிமானி. இவருடைய தம்பி சதீஷ் நம்பியார் இலங்கை அரசிடம் ஊதியம் பெற்றுக் கொண்டு ராணுவ ஆலோசகராக இருக்கின்றார். விஜய் நம்பியார் இந்திய வம்சாவளி என்பதெல்லாம் தனிக்கதை. ஆனால் கொழும்பு சென்ற விஜய் நம்பியார் அடுத்த சில மணிநேரங்களில் அங்கிருந்து கிளம்பி நியூயார்க் சென்று விடுகின்றார். அதாவது இந்தியாவின் முயற்சிகளுக்கு இடையூறாக இருக்காமல் அவர் நியூயார்க் சென்று விடுகிறார்.

இலங்கையிடமே சரணடையுங்கள் என்று புலிகளை நிர்ப்பந்திக்கும் முயற்சியை ஒரு பக்கம் எடுத்துக் கொண்டே, மேற்குலகின் தலையீடு கடைசி நேரத்தில் தனது திட்டத்தைக் குழப்பி விடக் கூடாது என்பதிலும் மிகக் கவனமாக இருந்திருக்கிறது இந்திய அரசு என்பது தெளிவாகத் தெரிகின்றது.

ஜெகத் கஸ்பர் மூலமாக இந்தியா பார்த்துக் கொள்ளும் என்ற பொய்யான உறுதிமொழி நடேசனுக்கு வழங்கப்பட்டிருக்கின்றது. இவர்களால் வழங்கப்பட்ட உத்திரவாதங்களை நம்பித்தான் வெள்ளைக் கொடியோடு சிங்களப் படைகளிடமே சரணடைந்த நடேசன் கொல்லப்பட்டிருக்கின்றார்.

களத்தில் நின்ற புலிகளோ தூங்கி நெடுநாட்கள் ஆகி விட்டது. தூக்கமின்மை, போதிய உணவின்மை, போராடும் வலுவின்மை, காயமடைதல், வீதியெங்கும் சிதறிக் கிடக்கும் வன்னி மக்களின் பிணங்கள் என்று புலிகள் உளவியல் ரீதியாகவும், ராணுவ ரீதியாகவும் தகர்ந்து போயிருந்திருக்கின்றார்கள். இந்தியாவின் தேர்தல் முடிவுகளும் அவர்களுக்கு இடியாக வந்து இறங்க, இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்ட இந்திய அரசு, “ஆயுதங்களை மவுனிக்கச் செய்கிறோம். காயமடைந்தவர்களைக் காப்பாற்ற உதவுங்கள்” என்ற புலிகளின் கோரிக்கையை ‘சரணடைதல்’ என்று மாற்றுகிறது. இந்தியாவின் இந்த முடிவை ஜெகத் கஸ்பர்ராஜ் செயல்படுத்தியிருக்கின்றார்.

தனது மே மாதக் கட்டுரையில் ‘புலிகள் சரணடையும் முடிவை அறிவித்தார்கள். அதன்படி சரணடைந்தவர்களை இலங்கை ராணுவம் கொன்று விட்டது’ என்று எழுதிய அதே ஜெகத் கஸ்பர், இப்போதோ போர் நிறுத்தத்திற்கு வாய்ப்பிருந்தும் புலிகள் அதற்குத் தயாராக இல்லாத காரணத்தால்தான் இவ்வாறு நடந்து விட்டது என்று கொல்லப்பட்டுவிட்ட புலிகள் மீதே பழியைத் தூக்கிப் போடுகின்றார்.

கடற்படைத் தளபதி சூசையின் கோரிக்கையும், அதை சரணடைதலாக மாற்றிய ஜெகத்தின் தந்திரமும்…

ஜெகத்தின் ‘யுத்த துரோகம்’ கட்டுரையில் சூசையின் பேச்சையே தனது முடிவுகளுக்கு ஏற்ப திரித்துக் கூறுகின்றார் கஸ்பர். 16ஆம் தேதி சூசை மதுரைக்காரரிடம் பேசிய நேரத்தில் பிரபாகரனும், முக்கியத் தளபதிகளும் களமுனையை விட்டு அகன்று சென்ற பின்பு பேசியதாக கஸ்பர் சொல்கின்றார். அப்படியானால் சூசை பேசியது எங்கிருந்து? தப்பிச் சென்ற இடத்திலிருந்தா? சூசையின் பேச்சை இணையத்தில் கேட்ட எவர் ஒருவரும், கடும் சண்டை நீடிக்கும் ஐநூறு மீட்டருக்குள் இருந்து கொண்டேதான் அவர் சேட்டிலைட் போனில் பேசியிருக்கின்றார் என்று புரிந்துகொள்ள முடியும்.

மேலும் சூசை மன்றாடியதாகக் கூறுகின்றார் கஸ்பர். ஆனால் அவருடைய பேச்சில் எங்குமே சரணடையும் கோரிக்கையோ, கெஞ்சல் குரலோ மன்றாட்டமோ இல்லை. கடுமையான பதட்டமும் கோபமும்தான் அவருடைய பேச்சில் இருந்ததே தவிர, கஸ்பர் சொல்வதைப் போல மன்றாடவில்லை. அப்படி மன்றாடியிருந்தால் அதற்கான ஆதாரத்தைக் கொடுக்க வேண்டியது ஜெகத் கஸ்பர்ராஜின் பொறுப்பு.

“காயமடைந்திருக்கும் போராளிகளையாவது காப்பாற்றுங்கள்” என்று சூசை கோரிக்கை வைத்தது உண்மைதான். ஆனால் காயமடைந்தவர்களை வட்டுவாகல் வழியாக மீட்கும் கோரிக்கையைத்தான் சூசை வைக்கின்றார். இதைத்தான் ‘எதார்த்தமான முடிவு’ என்ற பெயரில் சரணடையும் முடிவாக மாற்றுகின்றார் கஸ்பர்.

இறுதி நேரத்தில் அதிசயங்கள் எதுவும் நடந்தால் ஒழிய இப்போரின் முடிவு என்பது இப்படியாகத்தான் இருக்கும் என்பது அனைவரும் அறிந்ததே. 13ஆம் தேதி சிங்கள ராணுவத்தின் கடற்படையும் தரைப்படையும் முள்ளிவாய்க்கால் கடற்கரையில் ஒன்று சேர்ந்ததோடு புலிகளும் மக்களுமாக சுற்றி வளைக்கப்படுகிறார்கள். தப்பிக்கும் வாய்ப்புகளும் தகர்ந்து விடுகின்றன. ஆனால் போர் முடிவுக்கு வரவில்லை. அந்த நேரத்தில் பேச்சு வார்த்தை என்னும் மிகப் பலவீனமான ஆயுதத்தை புலிகள் கையில் எடுக்கிறார்கள்.

காயமடைந்தவர்களைக் காப்பாற்றுங்கள் என்று ஜெகத் கஸ்பர்ராஜிடமும், கனிமொழியிடமும் கேட்கின்றார்கள். நீடித்துக் கொண்டிருக்கும் போரை விரைந்து முடிவுக்குக் கொண்டு வர விரும்பிய இந்தியா, ஜெகத் கஸ்பரைப் பயன்படுத்தி காரியத்தை எளிதாக முடித்துக் கொண்டிருக்கிறது.

மேரி கொல்வின் விஜய் நம்பியாரிடம் புலிகளின் கோரிக்கையை எடுத்துச் சொல்லும்போது, வெள்ளைக் கொடியேந்தி சரணடையும் முடிவு இந்தியாவின் உத்திரவாதத்தின் பேரில் புலிகளால் ஏற்கெனவே எடுக்கப்பட்டு விட்டது. இதைத்தான் மேரி கொல்வினிடம் சொல்கிறார் விஜய் நம்பியார்.

ஆனால் ஜெகத் கஸ்பர், இந்தியா கொடுத்த உறுதிமொழியை மறைத்து, அதனை இலங்கை வழங்கிய உறுதிமொழி என்று மடை மாற்றி, இந்தக் கொலைக் குற்றத்திலிருந்து இந்தியாவைத் தப்ப வைக்கின்றார். கடைசியில் 300 போராளிக் குடும்பங்கள் கொடூரமான முறையில் கொன்றொழிக்கப்படுகின்றார்கள்.

நடேசனும், 300 போராளிகளும் ஈவிரக்கமற்ற முறையில் கொல்லப்படுவதற்கு ஜெகத் கஸ்பர்ராஜின் முயற்சியே காரணமாக இருந்திருக்கின்றது. ஆகவே டெல்லியில் இருந்து பேசிய அந்த காங்கிரசு பெரியவர் யார் என்பதை கஸ்பர் வெளிப்படையாகக் கூற வேண்டும். அந்த காங்கிரசு பெரியவர் எடுத்த எதார்த்தமான முடிவை ஜெகத் கஸ்பரோ, கனிமொழியோ ஏன் ஆட்சேபிக்கவில்லை என்ற கேள்விக்கு பதில் சொல்ல வேண்டும். செய்வதை எல்லாம் செய்து முடித்து விட்டு, இன்று நக்கீரன் இதழில் பிரபாகரனோடு உண்டு உறங்கியது போல எழுதிக் கொண்டிருக்கும் நாடகத்தைக் கஸ்பர் நிறுத்த வேண்டும்.

எமதருமை புலத்து மக்களே,

இனியும் இந்த சந்தர்ப்பவாதப் பச்சோந்திகளை நம்பி ஏமாறாதீர்கள். ஈழப் போராட்டம் என்பது பிராந்திய வல்லரசுகளிடம் கெஞ்சி பெறப்பட வேண்டிய விசயம் அல்ல; அது நமது ஈழ மக்களின் இறைமை சார்ந்தது. நமக்கான போராட்டங்களை நாமே முன்னெடுப்போம்!

Read more: http://thurkai.blogspot.com/2010_01_01_archive.html#ixzz1CZka4ZiF

Link to comment
Share on other sites

மட்டுமல்ல இவர்களைப்போல மனித உரிமை, ஐனநாயகம் கதைத்த மேலும் பலர் இவ்வாறு புலிகளிடம் சரணாகதியடைந்தவர்களாக இருந்திருக்கின்றனர். இதற்கு காரணம் அன்று புலிகள் தொடர்பாக உருவாக்கப்பட்ட அதீத நம்பிக்கை ஐதீகங்கள் மயக்கம் மற்றும் பிம்பங்கள் என்பனவாகும். இவ்வாறு கட்டமைக்கப்பட்ட கருத்தாதிக்கத்தால் அல்லது அவர்களது வெற்றிகரமான தாக்குதல்களின் விளைவாக அதில் மயக்கமடைந்து அவர்களது பிற்போக்கான அரசியல் செயற்பாடுகளையும் ஐனநாயக வீரோத போக்குகளையும் மறந்து அவர்களை ஏற்றுக்கொண்ட பலர் இன்றுவரை மீண்டும் விழித்து எழவில்லை என்பது கவலைக்கிடமானது. இதில் பல கலாநிதிகள் பேராசிரியர்கள் மற்றும் கல்விமான்களும் அடக்கம் என்பதும் இன்றுவரை இவ்வாறன புலம் பெயர் புலித்தலைமைகளுக்காக குரல் கொடுப்பதும் செயற்படுவதும் தமிழ் தேசிய அரசியலில் ஒரு துர்ப்பாக்கியமான நிகழ்வாகும்.

சிங்களவர்களின் அட்டுழியம்,அடக்குமுறை இவற்றில் இருந்து மீட்பதக்கு ஏற்ற மீட்பர்களாக புலிகள்தான் இருந்தார்கள் அதுதான் அவர்களை எல்லோரும் ஆதரித்தோம்......

இனிமேலும் இன்னும் நல்ல மீட்பர்கள் வந்தால் நாம் ஆதரிப்போம்

Link to comment
Share on other sites

குடுமியும் குர்தாவுமாய் திரியும் இவர்கள் இப்படி பந்திபந்தியாக எழுதி எதை சாதிப்பார்களென எனக்கு விளங்கவில்லை.

எம்மவர் ஒன்றில் சுல்தான் அல்லது பக்கிரி வேடம் எடுக்கின்றார்கள்.

அரசியல் தெரிந்தவன் எழுதுபவன் எழுதிக்கொண்டே இருக்கின்றான்.

ஆயுதம் எடுத்தவன் ஏதுமறியாமல் போட்டுக்கொண்டே இருந்தான்.

இரண்டையும் இணைக்க தவறியதுதான் எமது பிழை.

அனைத்து இயக்கங்களிலும் பிரபலமானவர்களின் பெயர்களை எழுதவே கை நடுங்குது.

Link to comment
Share on other sites

குடுமியும் குர்தாவுமாய் திரியும் இவர்கள் இப்படி பந்திபந்தியாக எழுதி எதை சாதிப்பார்களென எனக்கு விளங்கவில்லை.

எம்மவர் ஒன்றில் சுல்தான் அல்லது பக்கிரி வேடம் எடுக்கின்றார்கள்.

அரசியல் தெரிந்தவன் எழுதுபவன் எழுதிக்கொண்டே இருக்கின்றான்.

ஆயுதம் எடுத்தவன் ஏதுமறியாமல் போட்டுக்கொண்டே இருந்தான்.

இரண்டையும் இணைக்க தவறியதுதான் எமது பிழை.

அனைத்து இயக்கங்களிலும் பிரபலமானவர்களின் பெயர்களை எழுதவே கை நடுங்குது.

(இதுக்கு கிருபண்ணை கூட பதில் தரலாம் பிழை இல்லை... )

நாசமாய் போன தமிழீழத்தை விடுங்கோ எனக்கு விளங்காத வேறை ஒண்டைப்பற்றி சொல்லுங்கோ....!

சில மாதங்களுக்கும் முன்னம் காஸ்மீரகத்திலை மக்கள் எழுச்சியோடை போராட்டங்கள் நடந்தது ஞாபகம் இருக்கோ.... இந்திய படைகள் கொடூரமான முறையை கையாளுது எண்டு ஐநா எல்லாம் கவலை வெளியிட்டது... ! ஞாபகம் இருக்கோ...??

காஸ்மீரிகளை பொறுத்தவை தமிழீழத்தை விட அதிகமான சர்வதேச ஆதரவு கொண்டவர்கள்... பாக்கிஸ்தான், அமெரிக்கா சீனா வரைக்கும் அவர்களுக்கு ஆதரவு தளம் இருக்கு... அங்கை இருக்கும் ஒரு அமைப்பு மட்டும் தான் அமெரிக்காவால் தடை செய்யப்பட்டது.... மற்றய அமைப்புக்கள் தடை செய்ய படாதவர்கள்....!

நிலைமை இப்படி இருக்க அரசியலில் சிறந்து விளங்கும் காஸ்மீரிகளால் மக்கள் போராட்டம் கெம்பி எழும்பி வீதிகளில் இறங்கி இந்திய படைகளுக்கும் ஆட்ச்சியாளர்களுக்கும் எதிராக போராடினர்... ஆனால் சில நாட்களிலேயே இலங்கையில் தமிழர்கள் கொல்லப்பட்டது போண்ற கொடூரமான முறையில் அவர்களின் போராட்டம் பெரும்பான்மை இந்தியர்களின் ஆதரவோடை அடக்க ப்பட்டு இருக்கு...

இண்டைக்கு போராட்டத்தை ஒப்பிடுவதாக இருந்தால் காஸ்மீரிகளுக்கும் ஈழத்தமிழருக்கும் பெரிய வித்தியாசம் இல்லை... பல நாடுகளின் வெளிப்படையான ஆதரவு கொண்டவை காஸ்மீரிகள், என்பதை விட... ஆனால் நிலைமை ஈழத்தமிழருக்கும் காஸ்மீரிகளுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை... அதோடை பெரும்பான்மை சமூகத்தை எதிர்த்து சிறுப்பான்மையினரின் போர் இது...

நான் கேக்க நினைக்கிறது ஒண்டு தான்... பல நாடுகளின் ஆதரவை பெற்று அரசியலில் சிறப்பாக விளங்கும் காஸ்மீரிகளால் ஏன் உரிமையை பெற்றுக்கொள்ள முடியாது இருக்கு....??

இதுக்கு மட்டும் உங்கட விளக்கத்தை தாங்கோ பிறகு எங்களுக்கு தமிழீழ அரசியல் பாடம் எடுக்கலாம்... பதில் தராமல் ஓடுவது உங்களுக்கு புதுசு இல்லை... ஆனால் நீங்கள் அரசியல் எண்டு எழுத வாற எல்லா இடத்திலையும் இந்த கேள்வியை கொண்டு வந்து ஒட்டுவன்... :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதுக்கு மட்டும் உங்கட விளக்கத்தை தாங்கோ பிறகு எங்களுக்கு தமிழீழ அரசியல் பாடம் எடுக்கலாம்... பதில் தராமல் ஓடுவது உங்களுக்கு புதுசு இல்லை... ஆனால் நீங்கள் அரசியல் எண்டு எழுத வாற எல்லா இடத்திலையும் இந்த கேள்வியை கொண்டு வந்து ஒட்டுவன்... :)

அவர் எப்போ அரசியல் எழுதினார்

அரச அவியல் தான் எழுதுறவர்.

Link to comment
Share on other sites

அண்ணை விளங்குகின்ற ஆட்களுக்குத்தான் பதில் எழுதமுடியும்.

உங்களுக்கெல்லாம் விளங்காத பக்கம் ஒன்று இருக்கின்றது.அதை உங்களுக்கு விளங்கப்படுத்ததான் உலகம் முயற்சித்தது முடியாமல் போனதால்தான் அழிக்க முடிவெடுத்தது.

கொலை அரசியலும்,பலவந்தமாக சிறுவர்களை கடத்தியதும் உங்கட கண்ணுக்கு எப்படிதெரியாமல் விட்டது.சொந்தபிள்ளைக்கு பிறந்தநாள் பாட்டி மற்றவன் பிள்ளையை குண்டுகட்டிதள்ளிவிடுவது.

உலகின் கண்ணுக்கு தெரிந்த அந்த அநியாயம் உங்களுக்கு தெரியாமல் விட்டது எப்படி.

அதுதான் இப்போதும் அங்கு மக்கள் சிறிது சந்தோசமாக இருக்கின்றார்களென்றாலும் இங்கு பலருக்கு பிடிப்பதில்லை.தங்கட பிழைப்பில் மண் விழுந்துவிடுமோ என்றகவலைதான் இன்றும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்கட தியறிப்படி

அப்பனும் போராடணும்

மகனும் போராடணும்

பேரனும் போராடணும்

நீங்கள் இதைச்சொல்லிச்சொல்லி சோத்துப்பாசல் எடுக்கணும்

அப்பனும் மகனும் பேரனும் தின்னணும்

இது தானண்ணை எங்களை அழித்தது.

வேறு யாருமில்லை. :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குடுமியும் குர்தாவுமாய் திரியும் இவர்கள் இப்படி பந்திபந்தியாக எழுதி எதை சாதிப்பார்களென எனக்கு விளங்கவில்லை.

எம்மவர் ஒன்றில் சுல்தான் அல்லது பக்கிரி வேடம் எடுக்கின்றார்கள்.

அரசியல் தெரிந்தவன் எழுதுபவன் எழுதிக்கொண்டே இருக்கின்றான்.

ஆயுதம் எடுத்தவன் ஏதுமறியாமல் போட்டுக்கொண்டே இருந்தான்.

இரண்டையும் இணைக்க தவறியதுதான் எமது பிழை.

அனைத்து இயக்கங்களிலும் பிரபலமானவர்களின் பெயர்களை எழுதவே கை நடுங்குது.

theoretical physics and experimental physics என்று இரண்டு வகையுள்ளது. பரிசோதனை மூலம் கண்டுபிடிப்பதற்கு தத்துவ/விஞ்ஞான அறிவு ரீதியாக விளக்கம் சொல்லவும் வேண்டும். அதுபோலத்தான் அரசியலும். தனிய பரிசோதனையாலும் இலக்கை அடைய முடியாது. தனியத் தத்துவத்தாலும் அடையமுடியாது. தத்துவத்தைப் பிரயோகிக்கக் கூடிய பரிசோதனையாளர்கள் தேவை. நீங்கள் கூறியதுபோல இரண்டு தரப்பாரும் ஒருவருடன் ஒருவர் இணைந்து செயற்படாமல் ஆளையாள் சந்தேகத்துடன் பார்த்து, மட்டம் தட்டிக் கொண்டிருக்கிருந்தனர். இப்போதும் இருக்கின்றனர். இதனால்தான் அரசியல் ரீதியாக தமிழினம் பின்னோக்கிப் போய்க்கொண்டிருக்கின்றது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.