Jump to content

சிந்தித்துப் பாருங்கள்.. எத்தனை திரைப்படங்களுக்குச் சென்று, திரையரங்குகளில் இருபது, முப்பது டாலர்களை வீண்விரயம் செய்துவிட்டு விசர்ப்படம் என்று சொல்லி அலுத்து இருப்பீர்கள்..!


Recommended Posts

1999 பிந்திய செய்தி:

தகவல் மூலம்: மின்னஞ்சல்

+++

இனிய வணக்கங்கள் லெனின், நீங்கள் உங்கள் குழுவினருடன் சேர்ந்து கனடாவில் உருவாக்கிய ஓர் அழகிய படமாகிய 1999ஐ பார்த்த பூரிப்புடன், முதலில் உங்களுக்கும் உங்கள் குழுவினருக்கும், நேரடியாகவும், மறைமுகமாகவும் 1999 படம் உருவாக காரணமாக அமைந்த கலைஞர்களுக்கும், 1999 திரைப்படத்தை திரையரங்கிற்கு சென்று பார்த்து ஊக்கம் கொடுத்த மக்களிற்கும் நன்றிகளையும், பாராட்டுக்களையும், வாழ்த்துகளையும் கூறி உரையாடலை ஆரம்பிக்கின்றேன்.

கலைஞன்:நம்மவர் படைப்புக்களிற்கு அதிகளவு ஊக்கம் தராத, நம்மவர் படைப்புக்களை பெரிதாக கண்டுகொள்ளாத - முக்கியமாக நம்மவர் படைப்புக்களிற்கு பொருளாதார ஆதரவு தருவதற்கு பின்நிற்கும் ஓர் மக்கள் கூட்டத்தை நம்பி 1999 படத்தை எடுப்பதற்கு உங்களுக்கு எப்படி துணிவு, உத்வேகம் வந்தது?

லெனின்: ஒரு கலைஞனாக நான் சிறந்த ஒரு திரைப்படத்தை வழங்காமல் எமது மக்கள் ஆதரவு தரவில்லை என்று வருந்திக்கொண்டு இருப்பது சரியல்ல. கிட்டத்தட்ட 75 வருடங்களுக்கு மேலாகத் தொன்னிந்தியத் திரைப்படங்களையே பார்த்துக்கொண்டிருக்கும் எமது மக்களின் முழமையான ஆதரவு திடீரெனக் கிடைக்கவேண்டும் என்று நாம் எதிர்பார்க்க முடியாது. எமது கதைகளைக் கொண்ட தரமான திரைப்படங்களை மக்கள் நிச்சயமாக ஆதரிப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கிருந்தது. அத்தோடு எவ்வளவுதான் சிறந்த கலைஞர்களாக இருந்தாலும் வேறு ஒரு நாட்டில், வேறு ஒரு சூழலில் வாழ்பவர்களால் உருவாக்கப்படும் தயாரிப்புகளைவிட, எமது கலைஞர்களால் - எமக்குள் நடைபெறும் நிகழ்வுகள் மிகவும் இயல்பாக வெளிக்கொண்டுவரப்படும்போது, அத் திரைப்படம் நிச்சயமாக மக்களின் உணர்வுகளுடன் ஒன்றிப்போகும் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது. அதைவிட 1999இல் சொல்லப்படுகின்ற கதை மக்களைச் சென்றடையவேண்டும் என்று விரும்பினேன். மக்களின் ஆதரவு கிடைக்காவிட்டாலும் நல்ல ஒரு கதைக்கு உயிர்கொடுத்தேன் என்ற திருப்தியாவது மிஞ்சும் என்ற நோக்கத்தில்தான் இத்திரைப்படத்தைத் தயாரிக்க முடிவு செய்தேன்.

director.jpg

கலைஞன்: 1999 திரைப்படத்தை படைப்பதற்கு முன்னர் உங்களுக்கு இருந்த கலை அனுபவங்கள் எவை? இதற்கு முன்னதாக நீங்கள் பங்குகொண்ட கலைப்படைப்புக்கள் எவை? ஓர் திரைப்படத்தை உருவாக்குவதற்கு தேவையான சகல திறமைகளும், ஆற்றல்களும், தகுதிகளும் உங்களுக்கு இருப்பதை எப்படி உறுதி செய்துகொண்டீர்கள்?

லெனின்: 1999 திரைப்படத்திற்கு முன்பு இனியவர்கள், உறுதி, பக்கத்திவீடு என்ற மூன்று குறுந் திரைப்படங்களை உருவாக்கியுள்ளேன். அவைதான் எனது முந்தைய கலை படைப்புக்களும், கலை அனுபவங்களும். எனக்கு ஒரு திரைப்படத்தை தயாரிப்பதற்கான திறமைகள் இருக்கின்றனவா என்று தெரியவில்லை. ஆனால், திரைப்படங்களின் மேல் இருந்த அளவுகடந்தஆர்வம், மற்றும் எனது தந்தையின் கலைப்பற்று போன்றவையே என்னையும் எப்படியாவது இதில் உள்வாங்கிக்கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தை என்னுள் உருவாக்கியது என்று நினைக்கிறேன்.

கலைஞன்: நீங்கள் உங்களினுள்ளே தோன்றிய எண்ணத்தை செயல்வடிவம் கொடுப்பதற்கு தீர்மானித்தபோது யார் யாரெல்லாம் உங்களுக்கு தோளோடு தோளாக உறுதுணையாக நின்றார்கள்? 1999 திரைப்படத்தை எடுப்பது என்று - அதற்கு செயல்வடிவம் கொடுக்க முயன்றபோது எப்படியான சவால்களை எதிர்கொண்டீர்கள்? திரைப்படத்தை உருவாக்கியபோது நீங்கள் எதிர்கொண்ட பிரச்சனைகள் எவை? ஏதாவது ஓர் கட்டத்தில் திரைப்படத்தை கைவிடவேண்டும் போன்ற எண்ணம் உங்களுக்கு தோன்றியதா? உங்கள் மனதில் ஏதாவது ஓர் கணத்தில் எதிர்மறையான எண்ணங்கள் குடியிருந்து இருக்கும் பட்டசத்தில் அவற்றை எவ்வாறு முகம்கொடுத்து வெற்றி கொண்டீர்கள்?

லெனின்: முதலில் எனது எண்ணத்தை எனது சில நண்பர்களிடம் தெரிவித்தேன், அவர்களும் தமது ஒத்துழைப்பு இப்படத்திற்கு இருக்கும் என்றும் என்னை இதில் இறங்கும்படியும் பணித்தார்கள். பின்பு, பலரின் ஒத்துழைப்புடன் திரைக்கதையை எழுதி முடித்தேன். அதன்பின்பு தயாரிப்பாளரை தேடினேன், எவரும் முன்வரவில்லை. நானே தயாரிக்க தீர்மானித்தேன். பின்பு அதிர்ஸ்டவசமாக சபேசன் அவர்களை சந்தித்தேன், அவரும் கதையை கேட்டபின் என்னைப்போலவே இந்த கதை எமது மக்களை சென்றடைய வேண்டும் என்று விரும்பினார். பின்பு, நடிகர்களை தேர்வுசெய்தோம். படப்பிடிப்பை 2008 மார்ச் மாதம் முதலாம் திகதி ஆரம்பித்தோம்.

திரைக்கதையை எழுதும் போது மட்டுமே எந்த ஒரு பிரச்சனையையும் நான் சந்திக்கவில்லை. மற்றைய ஒவொரு கட்டத்திலும் பெரும் சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. ஒவ்வொருகட்டத்திலும் எதாவது பிரச்சனைகள் வந்த வண்ணமே இருந்தன. பொருளாதார பிரச்சனைகளை விட எமது சில கலைஞர்களின் பழக்க வழக்கங்களால் வந்த பிரச்சனைகளே அதிகம். படம் எடுப்பது என்பது மிகவும் சிரமமான ஒரு விடயம், அதிலும் ஒரு திரைப்பட துறையில்லாமல் தரமான படத்தை எடுப்பது என்பது மிகவும் கடினமான விடயம். இதற்கு 1999 ஒரு விதிவிலக்கல்ல. சொல்லப்படும் கதை எனது மனதை ஆழமாக பாதித்திருந்ததால் என்னால் அனைத்து சவால்களையும் எதிர்கொள்ளக் கூடியதாக இருந்தது.

1999_Still3.jpg

கலைஞன்: 1999 திரைப்படத்தில் பங்குகொண்ட கலைஞர்களை எவ்வாறு தேர்வு செய்தீர்கள்? எதிர்காலத்தில் நீங்கள் படைக்கக்கூடிய கலைப்படைப்புக்களில் பங்கேற்க விரும்புகின்ற கலைஞர்கள் எப்படி உங்களுடன் இணைந்துகொள்ள முடியும்? உங்கள் படைப்புக்களில் பங்கேற்கும் கலைஞர்கள் எவ்விதமான தகமைகள், ஆற்றல்கள் உடையவர்களாக இருக்கவேண்டும் என்று எதிர்பார்க்கின்றீர்கள்?

லெனின்: கலைஞர்களை தேர்வு செய்வது மிகவும் கடினமான ஒரு விடயம். ஆற்றல் உள்ளவர்களாகவும் ஆர்வம் உள்ளவர்களாகவும் இருக்க வேண்டும். 1999 க்கும் இவற்றையே தேடினேன். எதிர்காலத்திலும் இவற்றையே பார்ப்பேன். நான் எப்போதுமே நடிகர், நடிகைகளை தேடியவண்ணமே உள்ளேன். ஆற்றலும், உண்மையாகவே ஆர்வமும் (கலையில் வெறி) உள்ளவர்களுக்கு எப்போதுமே எனது திரைப்படங்களில் இடமிருக்கும்.

கலைஞன்: ஓர் தாய் பத்துமாதம் சுமந்து ஓர் குழந்தையை பிரசவம் செய்கின்றாள். பலரதும் கவனத்தை ஈர்த்துள்ள 1999 திரைப்படம் சுமார் எத்தனை கிழமைகளில் அல்லது மாதங்களில் உருவாக்கப்பட்டது? உங்களுக்கு ஆட்சேபணை இல்லையென்றால் இதற்கு ஏற்பட்ட பொருட்செலவுகள் பற்றி கூறமுடியுமா?

லெனின்: 2005 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் 1999 இன் கதையை எனது நண்பர்களிடம் சொன்னேன். 2007 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் திரைக்கதையை முடித்தேன். 2008 ம் ஆண்டு மார்ச்மாதம் படப்பிடிப்பை ஆரம்பித்தோம். 2009 ஆம் ஆண்டு அக்டோபர் 14ம் திகதி வன்கூவரில் 1999 படத்தை முதன்முதலில் திரையிட்டோம். நீங்களே கணக்கை போட்டுக்கொள்ளுங்கள்... ஆரம்பித்ததில் இருந்து திரைக்கு கொண்டு வரும்வரை நாம் ஏறக்குறைய $35,000 கனேடிய டாலர்களை 1999க்காக செலவுசெய்தோம்.

கலைஞன்: உங்கள் திரைப்படத்தின் கருப்பொருளாக 'குழு வன்முறைகள்' பற்றி நமது சமூகத்திற்கு மாத்திரம் அல்லாது பொதுவாகவே கனேடிய மக்களுக்கும், இந்தப்படத்தை பார்க்கக்கூடிய அனைவருக்கும் அறிவூட்டப்படுகின்றது. 'குழு வன்முறைகளை' படத்தின் கருப்பொருளாக அமைக்கவேண்டும் என்று ஏன் தீர்மானித்தீர்கள்?

லெனின்: உண்மையை சொன்னால்.. எனது படத்தின் கருப்பொருள் புலம்பெயர்ந்து வாழும் ஓர் இனம் சந்திக்க நேர்கின்ற தவிர்க்க முடியாத இன்னல்களைப்பற்றியது என்றே சொல்வேன். குழு வன்முறை இவ் இன்னல்களின் ஒரு வடிவம் என்பதையே இப்படம் காட்ட எத்தணிக்கின்றது. என் மனதை பாதித்த சில குழு வன்முறை சம்பவங்கள் ஏன் இந்த நாட்டில் நடக்க நோரிட்டது என்ற என் கேள்விக்கு பதில் தேடும்போது கிடைத்ததுதான் இந்த கருப்பொருள்..!

1999_Still1.jpg

கலைஞன்: 1999 திரைப்படத்தை உருவாக்குவதில் தென்னிந்திய கலைஞர்களின் பங்களிப்பு எவ்வாறு இருந்தது? நம்மவர் படைப்புக்களில் தென்னிந்திய கலைஞர்களின் பங்களிப்பு எவ்வளவு தூரம் முதன்மையானது? ஏதாவது ஓர் ரூபத்தில் தென்னிந்திய கலைஞர்களை பயன்படுத்தாமல் நம்மவர்களின் ஒட்டுமொத்த வளங்களை, தொழில்நுட்ப அறிவை, ஆற்றல்களை பயன்படுத்தி ஓர் திரைப்படம் உருவாக்குவது சாத்தியமானது என்று நீங்கள் கருதுகின்றீர்களா? தனியே நம்மவர்களை மாத்திரம் உள்ளடக்கிய படைப்புக்களை உருவாக்குவது தற்போதைய நவீன உலகில் சாத்தியமானதா மற்றும் தேவையானதா? இதன் அனுகூலங்களை, பிரதிகூலங்களை உங்கள் பார்வையில் பகிர்ந்துகொள்ளமுடியுமா?

லெனின்: பாடல்களை பாடியவர்களை தவிர வேறு எந்த ஒரு தென்னிந்திய கலைஞர்களின் பங்களிப்பும் 1999ல் இல்லை. பாடல்களுக்கும் முதலில் எம்மவரையே பயன்படுத்த இருந்தோம். பின்பு நானும், 1999 இசையமைப்பாளர் ராஜ் அவர்களும் தென்னிந்திய பின்னணி பாடகர்களினால் பாடப்படும் பாடல்களை எமது மக்கள் கூடுதலாக வரவேற்பார்கள் என்பதனால் பிரபல பாடகர்கள் எஸ். பாலசுப்ரமணியம், திப்பு, கார்த்திக் போன்றோரை பயன்படுத்தினோம்.

கண்டிப்பாக மிகவும் தரமான படைப்புக்களை முழுவதுமாக நம்மவர்களையே வைத்து உருவாக்கலாம். 1999இனை நான் இவ்வாறான ஒரு படைப்பாகவே கருதுவேன். வன்கூவர் சர்வதேச திரைப்பட விழாவிற்குத் தெரிவுசெய்யப்பட்டு, சிறந்த முதல் 10 கனேடிய திரைப்படங்களில் ஒன்றாக வந்த எமது 1999 திரைப்படத்தில் பாடல்கள் இடம்பெறவில்லை. பாடல்களை எமது மக்களை கவர்வதற்காகவே படத்தில் திணித்தோம். ஆதலால் வன்கூவர் சர்வதேசத் திரைப்படவிழாவில் தெரிவுசெய்யப்பட்ட 1999 திரைப்படம் முற்றுமுழுதாக நம்மவர்களின் படைப்பே என்று கூறுவேன். இதிலிருந்து தென்னிந்திய கலைஞர்களின் துணையில்லாமலே தரமான திரைப்படங்களை நாங்கள் உருவாக்க முடியும் என்று நம்புகின்றேன்.

ஆனால், தென்னிந்திய கலைஞர்களின் துணையின்றி தனியாக திரைப்படம் தயாரிப்பது தேவைதானா என்று கேட்டால் இல்லை தேலையில்லை என்றே சொல்வேன். ஏனெனில், தென்னிந்திய திரைப்படத்துறை மிகவும் முதிர்ச்சியடைந்த, பல அனுபவம்மிக்க, சிறந்த கலைஞர்களைக் கொண்ட ஓர் துறை. அதைப் பயன்படுத்துவதனால் நாம் பல நன்மைகளையும் சிறந்த அனுபவங்களையும் பெறலாம். ஆனால், யாதார்த்தத்தை பார்த்தால் இதுவரை தென்னிந்திய திரைப்படத்துறையை எமது படைப்புக்களுக்காக பயன்படுத்த எத்தணித்தவர்கள் பலர் தோல்விகளையே சந்தித்து இருக்கின்றார்கள். இதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. எனவேதான் எனது படங்களை நான் முடிந்தளவு எமது கலைஞர்களை வைத்தே தயாரிக்கின்றேன்.

கலைஞன்: திரைப்படங்களை நம்மவர்கள் உருவாக்குவதில் எமது சமூகம் எவ்வாறான பங்களிப்பை, ஊக்கத்தை வழங்கமுடியும், வழங்கவேண்டும் என்று நீங்கள் விரும்புகின்றீர்கள்? கலை, கலாச்சார செயற்பாடுகள் என்கின்றவகையில் அரசாங்க மட்டத்தில் எவ்வாறான உதவிகளை, சேவைகளை திரைப்படங்களை உருவாக்கும்போது நம்மவர்கள் பெற்றுக்கொள்ள முடியும்? நீங்கள் 1999 படத்தை உருவாக்கும்போது ஏதாவது உதவிகளை கனேடிய அரசாங்க திட்டங்களில், சேவைகளில் இருந்து பெற்று இருந்தீர்களா?

லெனின்: எமது சமூகம் எமது தரமான படைப்புக்களை இனங்கண்டு அதற்க்கு ஆதரவளிக்க வேண்டும். இதுவரை எமது பெரியோர் சிலர் "தரமான படத்தை எடுத்தால் எமது மக்கள் ஆதரிப்பார்கள்" என்றும், "நாம் தரமான படைப்புக்களை உருவாக்குவதில்லை. அதனால்தான் எம்மால் ஒரு திரைப்பட துறையை தக்க வைக்க இயலாமல் உள்ளது" என்றும் பேசினார்கள். இக்கருத்தில் எனக்கும் ஓரளவு உடன்பாடு இருந்தது. ஆனால், முதன்முதல் சர்வதேசத் திரையரங்கில் வெளியிடப்பட்டு சிறந்த 10 கனேடியத் திரைப்படங்களினுள் ஒன்றாகத் தேர்வு செய்யப்பட்ட எமது கலைஞர்களின் படைப்பான 1999ஐ பார்க்க வந்த மக்களின் எண்ணிக்கையைவிட ஒரு சாதாரண (மசாலா) தென்னிந்தியத் திரைப்படத்திற்குச் செல்லும் எமது மக்களின் எண்ணிக்கை மிகமிக அதிகமாகவுள்ளது மிகவும் கவலைக்குரிய விடயமாகும்.

இன்று ஏதாவது ஒரு படம் பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தை மட்டுமே கொண்டு, ஒரு திரையரங்கினுள் சென்று அங்கு ஓடும் ஏதாவதொரு தென்னிந்தியத் திரைப்படத்தை பார்க்கும் எங்கள் மக்கள் தமிழ் மற்றும் ஆங்கிலப் பத்திரிகைகள் வானொலிகள், தொலைக்காட்சிகளில் பேசப்பட்ட எமது படைப்பான 1999 திரைப்படத்தை எப்படித்தான் இருக்கிறது என்று பார்ப்போம் என்றேனும் யோசிக்கவில்லை. "எமது படைப்புகள் தரமானவையாக இருக்காது" என்கின்ற எண்ணம் மக்களிடையே இருந்தாலும், எதற்கும் ஒரு ஆரம்பம் வேண்டும்தானே..!

வடஅமெரிக்காவிலுள்ள சிறந்த திரைப்பட விழா ஒன்றில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு படத்திற்குகூட எம்மக்கள் வரத் தயங்கினால்... எமக்கென்று ஒரு திரைப்படத்துறை எவ்வாறு உருவாகும்? எமது மறைந்துபோன, மறைக்கப்பட்ட பல்லாயிக்கணக்கான கதைகளை நாம் எப்படி வெளியுலகிற்கு கொண்டுவருவது? 1999 ஒரு தனிப்பட்டவரின் படமல்ல..! நூற்றுக்கணக்கான எம் இளைஞர்களின் கூட்டுமுயற்சி. சிந்தித்துப் பாருங்கள்.. எத்தனை திரைப்படங்களுக்குச் சென்று, திரையரங்குகளில் இருபது, முப்பது டாலர்களை வீண்விரயம் செய்துவிட்டு "விசர்ப்படம்" என்று சொல்லி அலுத்து இருப்பீர்கள்..! அப்படி வீணடிக்கும் ஒரு பத்து டாலரை ஏன் எமது கலைஞர்களை ஊக்குவிக்க நீங்கள் செலவு செய்யக்கூடாது? திரையரங்கிற்கு வந்து பார்த்தால்தானே 1999 படத்தின் தரம் புரியும்!

திரைப்படங்கள் உருவாக்குவதற்கு கனேடிய அரசாங்கத்தில் பல சலுகைகள் உள்ளன. அவை ஒன்றையுமே நாம் 1999இற்கு பெறவில்லை. எமக்கு எவ்வாறு அச் சலுகைகளை பெற்றுக்கொள்வதென்று தெரிந்து இருக்கவில்லை.

1999_Still0.jpg

கலைஞன்: வழமையாக நாங்கள் ஓர் படைப்பை செய்தபின்னர் அதில் உள்ள நிறைகள் எங்கள் மனதை மகிழ்ச்சிப்படுத்தும் அதேசமயம், அதில் உள்ள குறைகள் மீண்டும் மீண்டும் நினைவில்வந்து எங்கள் மனதை வாட்டி எடுத்துக்கொண்டு இருக்கக்கூடும். 1999 திரைப்படத்தை மீண்டும் புதிதாக படைக்க உங்களுக்கு சந்தர்ப்பம் கிடைக்கின்றது என்று வைத்தால் நீங்கள் இப்படத்தில் ஏற்படுத்தக்கூடிய மாற்றங்கள் எவை? படத்தில் ஏதாவது தவறுகள் இடம்பெற்று இருக்கின்றன என்று நீங்கள் இப்போது நினைக்கின்றீர்களா?

லெனின்: ஒரு இயக்குனராக நான் அறிந்த உண்மை "ஒரு போதும் நாம் நம்மை முழுமையாக திருப்திப்படுத்தும் திரைப்படங்களை உருவாக்க மாட்டோம்!" எப்போதுமே, படத்தின் எத்தனையோ பல பகுதிகளை இன்னமும் நன்றாக செய்திருக்கலாம் என்றே எண்ணத்தோன்றும். 1999இல் உள்ள எந்த ஒரு காட்சியும் என்னை முழுமையாக திருப்திப்படுத்தவில்லை என்றே கூறுவேன். எனது எதிர்கால திரைப்படங்களில் தவிர்க்கக்கூடிய பல குறைகளை தவிர்ப்பேன்.

கலைஞன்: படத்தை உருவாக்கும் காலத்தில் இடம்பெற்ற சுவாரசியமான சம்பவங்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ள முடியுமா?

லெனின்: பல சுவாரசியமான சம்பவங்கள் நடைபெற்றன. எனக்கு மிகவும் சுவாரசியமானது மட்டுமல்லாமல் பெருமைப்படக்கூடியதும் என்றால் படத்தில் K.S. பாலச்சந்திரன் (Uncle) அவர்களோடு பணிபுரிந்ததையே சொல்வேன். K.S. பாலச்சந்திரன் அவர்கள் எமக்கு கிடைத்த பெரும் கொடையென்றே கூற முடியும்.

கலைஞன்: கனடா வன்கூவரில் நடைபெற்ற திரைப்பட விழாவிற்கு 1999 திரைப்படமும் சேர்த்துக் கொள்ளப்பட்ட பின்னரே இந்தப்படம் நம்மவர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தது என்று நினைக்கின்றேன். வன்கூவர் திரைப்பட விழாவில் 1999 திரையிடப்பட்டது சம்மந்தமான அனுபவங்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ள முடியுமா?

லெனின்: வன்கூவர் திரைப்பட விழாவில் 1999 திரையிடப்பட்டது சம்மந்தமான அனுபவங்கள் உண்மையாகவே மறக்க முடியாதவை. எத்தனையோ பல பிரபல்யமான இயக்குனர்களையும், திரைப்பட கலைஞர்களையும் சந்தித்து அவர்களுடன் பழகும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. "எம்மால் தொடமுடியாத உயரத்தில் இருப்பவர்கள்" என்று எண்ணியவர்களுடன் மனம்விட்டு பேசியபோதுதான் அவர்களும் எங்களைப்போல சாதாரண நிலையிலிருந்துதான் உயர்ந்திருக்கிறார்கள் என்றும், எமக்கு சரியான வாய்ப்புக்கள் கிடைத்திருந்தால் அவர்களை போல பிரபல்யமாகியிருப்போம் என்ற தன்னம்பிக்கையும் எனக்கும், சக 1999 குழுவினருக்கும் வந்தது. பல பெயர்பெற்ற இயக்குனர்களின் நட்பு கிடைத்தது என்பதுடன் மட்டுமல்லாமல் 1999 பற்றிய அவர்களது கருத்துக்களைக்கூடப் பெற்றுக்கொள்ள முடிந்தது. இவ்வாறான அனுபவசாலிகளின் நட்பு திரைப்படத்துறையிலுள்ள எமக்கு ஒரு வரப்பிரசாதம் என்றே எண்ணுகின்றோம்.

1999_Still4.jpg

கலைஞன்: 1999 திரைப்படத்தை உருவாக்குவதில் தமிழர்கள் அல்லாத பிறமொழி கலைஞர்கள், தொழில்நுட்பவியலாளர்களின் பங்களிப்புக்கள் எவ்வாறு இருந்தன? பிற சமூகங்கள் மத்தியில் 1999இற்கு எவ்வாறான வரவேற்பு கிடைத்துள்ளது?

லெனின்: எந்த ஒரு பிறமொழி கலைஞர்களும் இதில் பங்கு பெறவில்லை, 1999 முழுவதுமாக எமது கலைஞர்களினால் உருவாக்கப்பட்டது. உண்மையை சொன்னால்... எமது மக்களைவிட வேற்றினத்தவர்களே 1999 திரைப்படத்தை அதிகளவில் வரவேற்றார்கள். படம் முடிந்த பின்பும் மணிக்கணக்கில் என்னுடன் 1999 படத்தைப்பற்றி உரையாடியவர்களும் உள்ளார்கள். வன்கூவரில் ஒரு பல்கலைக்கழக பேராசிரியர் (UBC) 1999ஐ வைத்தும், புலம்பெயர்ந்து வாழும் மக்களைப்பற்றியும் ஓர் ஆய்வுக்கட்டுரை வரைகின்றார். 1999ஐ நான் எமது மக்களுக்காக மட்டுமே எடுக்கவில்லை, சக கனேடிய மக்களுக்குமாகவும்தான் உருவாக்கினேன்.

கலைஞன்: கனடாவில் நம்மவர்களிடையே நிலவுகின்ற குழு வன்முறைகளை பல்வேறு கோணங்களில் விபரிக்கும் அதேநேரம் வேற்று இனத்தவர்களுக்கு தாயக பிரச்சனைகள் பற்றிய அறிவூட்டல் செய்கின்ற ஓர் திரைப்படமாகவும் 1999ஐ பார்க்க முடிகின்றது, பாராட்டுக்கள்! திரைப்படம் - கலைப்படைப்புக்கள் மூலம் எவ்வாறு எமது பிரச்சனைகளை இன்னமும் காத்திரமான முறைகளில் வேற்று இனத்தவர்களுக்கு கூறமுடியும் என்று நீங்கள் நினைக்கின்றீர்கள்?

லெனின்: திரைப்படங்கள் மிகவும் எளிதில் மக்களைப்பாதித்து விடும். காரணம், திரைப்படத்தை பார்க்கும்போது மக்கள் தங்களை உள்வாங்கி, கதையோடு தம்மையும் இணைத்துக் கொள்கின்றார்கள். இதனால் மிகவும் எளிதாக நாம் சொல்ல நினைப்பவற்றை மற்றவர்களுக்கு சொல்லலாம். இதனால்தான் நாம் எமக்கென்று ஒரு திரைப்படத்துறையை அமைத்தால் மேலும் தரமான எமது கதைகளைக்கொண்ட பல திரைப்படங்களை உருவாக்கலாம். ஆனால், கவலைக்குரிய விடயம் என்னவென்றால் இந்த உண்மையை நம்மில் பலர் புரிந்து கொள்வதில்லை.

1999_Poster_Image.jpg

கலைஞன்: உங்கள் குருவாக நீங்கள் யாரை கருதுகின்றீர்கள்? படைப்புக்களை செய்யும்போது குறிப்பாக நீங்கள் முன் உதாரணமாக கையாளுகின்ற - பயன்படுத்துகின்ற ஆக்கங்கள், கலைஞர்கள் பற்றி அறிந்துகொள்ளலாமா?

லெனின்: உண்மையைச் சொன்னால்.. குருவுக்கு நான் எங்கே போவது? இதனாலேயே எனக்கு குருவாக யாரும் இல்லை! ஆனால்.. மணிரத்தினம் அவர்கள், மற்றும் ஒரு சிலரின் ஒவ்வொரு படத்தையும் மனப்பாடம் பண்ணியிருக்கின்றேன். இவர்களின் படங்களில் இருந்து நிறையவே பல கற்று இருக்கின்றேன்.

கலைஞன்: புலம்பெயர் மண்ணில் நம்மவர்கள் படைத்த திரைப்படங்கள், புலம்பெயர் மண்ணில் நம்மவர்கள் படைக்கப்போகின்ற திரைப்படங்கள் வெற்றி பெறுவதற்கு நீங்கள் கூறக்கூடிய ஆலோசனைகள் எவை?

லெனின்: என்ன காரணம் என்று உண்மையாகவே எனக்குத்தெரியாது. 1999 எமது சக்திகள் எல்லாவற்றையும் பயன்படுத்தி இயன்ற அளவிற்கு முறையாக உருவாக்கினோம். ஆனால், எதிர்பார்த்த வெற்றி எமக்கு கிடைக்கவில்லை. இதற்கு பல காரணங்கள் இருக்கலாம். என்னதான் வெற்றி பெற்றதோ இல்லையோ ஆனால்... ஒன்று மட்டும் உண்மை, நாங்கள் எல்லோரும் 1999திரைப்படத்திற்காக கடுமையாக உழைத்தோம். இந்த கடின உழைப்பினால்தான் இன்று 1999 திரைப்படம் உங்களையும் (கலைஞன்) சேர்த்து எத்தனையோபேரின் மனங்களை பாதித்துள்ளது என்று நம்புகின்றேன். இதற்குமேல் என்னால் என்ன கூறுவது என்று தெரியவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் இந்த படத்தை பற்றி இப்ப தான் கேள்விப்படுகிறேன்...பாட்டுக்களையும் நம்மவர்களை கொண்டு பாட‌ வைத்திருக்கலாம் ...அவர்களது முயற்சிக்கு பாராட்டுகள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அழகான்... விரிவான்.....தெளிவான் ......ஒரு நேர்முக உரையாடலை பதிந்துள்ள் கலைஞ்சன் , உண்மையில் உங்கள் திறமை வெளிப்பட்டு இருக்கிறது. பாராடுக்கள்.

Link to comment
Share on other sites

ரதி, விரைவில் ஐரோப்பாவிலும் 1999 திரைப்படத்தை காண்பிப்பதற்கு முயற்சிகள் நடைபெற்றுக்கொண்டு இருக்கின்றன என்று நினைக்கின்றேன்.

+++

நன்றி நிலாமதி அக்கா. எங்கள் கலைப்படைப்புக்கள், கலைஞர்களை ஊக்குவிக்கவேண்டியது காலத்தின் தேவை. இல்லாவிட்டால் மிச்சம் சொச்சம் எஞ்சியுள்ள எங்கள் அடையாளங்களும் காலப்போக்கில் அழிந்துவிடும். நம்மவர்களுக்கு ஏதோ என்னாலான சிறிய உதவி, அவ்வளவுதான்.

Link to comment
Share on other sites

நானும் 1999 பிரிவியூ அன்று பார்த்தேன்(fஏமஸ் பிலேயேர்ஸில்). 15 வருடங்களாக கனடாவை ஆட்டிப்படைத்த "காங் சண்டை" தான் கரு.அரைவாசி சம்பவங்கள் உண்மையில் நடைபெற்றவை.மிகவும் அழகாக எவர் படத்தையும் கொப்பி பண்ணாமல் தனக்கென ஒரு பாணியில் படத்தை எடுத்திருப்பது மிகவும் பாராட்டுக்குரியது.அதுவும் சுதன் (கதாநாயகன்) பாத்திரம் சூபேர்ப்,சுகனும் மிகத்திறமையாக நடித்திருந்தார்.மற்ற எல்லா கலைஞர்களுமே மிகச்சிறப்பாகத்தான் நடித்திருந்தார்கள்.கரெக்டர்களின் பெயர்களைத் தெரிவுசெய்ததில் இருந்து இயக்குனரின் திறமையையும் தேடலையும் புரிந்துகொள்ளலாம்{மரநாய்,உடும்பன்)

பாட்டுக்களின் இடைசெருகல் தேவையற்றது.கதாநாயகி?

மற்றப்படி 1999 இற்கு 79 மாக்ஸ்.

Link to comment
Share on other sites

நன்றாக நினைவில வச்சு இருக்கிறீங்கள் பெயருகளை. எனக்கு இவரது நடிப்பு நன்றாக பிடிச்சு இருக்கிது. தனது பகுதியை படத்தில நன்றாக செய்து இருந்தார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐரோப்பாவில் பார்க்கச் சந்தர்ப்பம் கிடைக்கும் என நம்புகின்றேன்.

லெலின் சிவம் மனதைத் தளராது இன்னும் பல திரைப்படங்களைத் தரவேண்டும். மக்களைக் கவர சந்தைப்படுத்துவதில் கவனம் எடுத்தால் "விசர்ப்படம்" பார்க்கப் போகின்றவர்களும் வருவார்கள். மற்றது, நமது கலைஞர்களின் பழக்கங்கள் பிரச்சினையாக இருந்தது என்று சொல்லியுள்ளார்.. ஆனால் என்ன பிரச்சினை என்று சொல்லவில்லை. கலைஞர்கள் "பந்தா" காட்டுகின்றார்களா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் இருக்கும் இடத்தில் திரையிட்டால் கட்டாயம் போய் பார்ப்பேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்று ஏதாவது ஒரு படம் பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தை மட்டுமே கொண்டு, ஒரு திரையரங்கினுள் சென்று அங்கு ஓடும் ஏதாவதொரு தென்னிந்தியத் திரைப்படத்தை பார்க்கும் எங்கள் மக்கள் தமிழ் மற்றும் ஆங்கிலப் பத்திரிகைகள் வானொலிகள், தொலைக்காட்சிகளில் பேசப்பட்ட எமது படைப்பான 1999 திரைப்படத்தை எப்படித்தான் இருக்கிறது என்று பார்ப்போம் என்றேனும் யோசிக்கவில்லை. "எமது படைப்புகள் தரமானவையாக இருக்காது" என்கின்ற எண்ணம் மக்களிடையே இருந்தாலும், எதற்கும் ஒரு ஆரம்பம் வேண்டும்தானே..!

ஒரு கலைஞனின் உள்ளக்குமுறல் .....யாழுக்காக பேட்டி கண்ட கலைஞனுக்கு பாராட்டுகள்

Link to comment
Share on other sites

1999 பட இயக்குனரின் செவ்வி மகிழ்ச்சி தருகிறது. படம் சென்னையில் திரையிடப் படவேண்டும் என்பது எனது வேண்டுகோள். காங் வன்முறை பற்றி 1999லும் பின்னும் 3 தடவைகள் கனடா வந்து வெளிக்கள வேலை செய்திருக்கிறேன். ஹொப்பர் ஹட் பக்கத்து புடவைக்கடை (சேலைகளின் சோலை என நினைக்கிறேன்) பெண்மணி சுடப்பட்டபோது அந்தக் கட்டிடத்தின் மேல்மாடியில் லோகன் கணபதியுடன் காங் வன்முறை பற்றி பேசிக் கொண்டிருந்தேன். சில தடவைகள் காங் வன்முறையாளர்கலை எதிர் கொண்டு முரண்பட்டும் இருக்கிறேன். அவர்களுடன் தொடர்பில் இருந்த வர்கள் பலரை பேட்டி கண்டிருக்கிறேன். காவல்துறை அதிகாரிகளுடன் பேசி இருக்கிறேன். லோகன் அந்த நாட்க்களில் காங் தொடர்பாக கோபத்துடன் பேட்டிகள் கொடுத்துக் கொண்டிருந்தார். ஒரு காங் குழுவினர் லோகன் கணபதி வெளிநாட்டில் இருந்து என்கவுண்டர் ஸ்பெசலிஸ்ட்டை கொண்டுவந்திருப்பதாகக் கருதி விட்டனர். நகைக்காதீர்கள் உண்மைதான். லோகனும் நானு போய் இறங்கியபோது ஒரு பெறோல்செட்டில் அவர்கள் மிரண்டு காரை எடுத்ஹுக்கொண்டு ஓடிய சம்பவமும் இடம் பெற்றது. நான் எப்பவும் தோழில் மாட்டி இருக்கும் ஜொல்னா பை செய்த மாயம் அது. இது தொடர்பான எனது நாவலை இன்னும் எழுத முடிய வில்லை. வசதி கிட்டும்போது இன்னும் ஒரு 3 மாதம் கனடாவில் வந்திருந்து எழுதி முடிக்கவே விருப்பம். முக்கியமாக பதிவாக வேண்டிய காலக்கட்டம் அது. எனது நண்பர் பலாவும் பங்குபற்றியிருப்பது கூடுதல் மகிழ்ச்சி. திரைப்பட இயக்குனர் லெனினுக்கு எனது நல்வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பேட்டி கண்டு பேசவைத்த கலைஞனுக்குப் பாராட்டுகள்.

திரைப்படத்தை வெளிக்கொணர உழைத்த உள்ளங்களும் பாராட்டுக்குரியவர்கள். லெனின் அவர்கள், திரையாக்கத்திற்காக அவர்பட்ட சிரமங்கள் அவரது பேட்டியில் இளையோடி இருக்கிறது. அந்தச் சிரமங்களுக்கான ஒத்தடமாக இருப்பது பாராட்டுகள் மட்டுமே. இதற்கு எம்மவர்களது எத்தனை ஊடகங்கள் முக்கியம் கொடுத்தனவோ தெரியவில்லை. யாழ் இணையமூடாகவே நான் அறிந்து கொண்டுள்ளேன்.

இந்தியத் திரைத்துறை மசாலாக்களை துக்கிக்பிடித்து உண்டு செரிக்க வைக்கும் பல நிறுவனங்கள் புலம்பெயர் நாடுகளில் இருக்கின்றன. ஏன் அந்த நிறுவனங்கள் இவற்றையும் வெளியிட்டு ஊக்கப்படுத்தக்கூடாது. புலவரது கருத்தும் ஏற்புடையதே. அதாவது சென்னையில் வெளியிட முயற்சிகள் செய்ய வேண்டும். அவர்கள் வண்ணங்கள் கொண்ட வானவேடிக்கை காட்டி எமது பொருண்மியத்தைக் குறிவைக்கும்போது நாமேன் செய்யக் கூடாது.

இந்தப் படத்தை குறுந்தகட்டிலும் வெளியிட்டு குறைந்தது 7 யூரோவிற்கு ஒரு 10,000 பிரதிகள் விற்றாலே தயாரிப்புச் செலவுகளை ஈடுகட்டுவதும் அடுத்தயாரிப்புக்கு உதவுவதுமாக இருக்கும். இதற்கான உதவியை எமது திரை வெளியீட்டகத்தினரது உதவியைக் கோருவதூடாக அவர்களது எம்மவர் தயாரிப்புகள் மீதான மனப்போக்கையும் பதிவு செய்யலாம்.

Link to comment
Share on other sites

நன்றி புத்தன், கவிஞர் அண்ணா, நொச்சி.

+++

உங்கள் வேண்டுகோளை விரைவில் லெனின் அவர்கள் நிறைவேற்றுவார் என்று நினைக்கின்றேன் கவிஞர் அண்ணா. கனடா குழுவன்முறை சம்மந்தமாய் பலவிதமான கதைகள் கதைக்கப்படுவது வழமை. ஒவ்வொருத்தர் ஒவ்வொருவிதமாய் சொல்வார்கள். ஐரோப்பிய நாட்டில் இருந்து வந்த ஓர் தமிழ்குழுவே இந்த குழுவன்முறை இல்லாமல் போவதற்கு பல அதிரடி நடவடிக்கைகள் எடுத்து இருந்தார்கள் என்றும் நான் காதுவழி கேட்டு இருக்கின்றேன். எப்படி இருப்பினும், குழுவன்முறைகள் ஓரளவுக்காயினும் நிறுத்தப்பட்டது மகிழ்ச்சியையும், நிம்மதியையும் தருகின்றது.

ஆனாலும்... ஆயுதங்கள் பயன்படுத்தாவிட்டாலும்.. பாடசாலை மட்டத்திலேயே சிறுவர்களிடையேகூட சுமார் பதினொரு வயது மட்டத்தில் இருந்தே பலவிதமான குழுக்கள் இருந்துதான் வருகின்றன. பெரும்பாலும் வயதில் சற்று கூடியவர்கள் தம்மிலும் இளையவர்களை வெருட்டி - bullying - தமது கட்டுப்பாட்டில்.. அதாவது தமக்கு எதிராக செயற்படாதவகையில் வைத்து இருப்பார்கள். இதனால் பாடசாலைகளுக்கு பிள்ளைகளை அனுப்பும் பெற்றோர் பலவிதமான நெருக்கடிகளை எதிர்கொள்ளவேண்டி இருக்கின்றது. பல பிள்ளைகள் பெற்றோருக்கு பயத்தில் ஒன்றும் சொல்வதும் இல்லை.

இந்த குழுவன்முறைகள்... தற்கால சினிமா, ஹாலிவூட், நவீன இசை கலாச்சாரத்தின் மூலம் நெருப்பூட்டி வளர்க்கப்பட்டு இருக்கின்றது, வளர்க்கப்படுகின்றது. குழுவன்முறையில் ஆயுதமாக துப்பாக்கிதான் பயன்படுத்தப்படுகின்றது என்று இல்லை. கத்திகள், கம்புகள் - விளையாட்டு உபகரணங்கள் கூட இதற்கு விதிவிலக்கு இல்லை.

சில சம்பவங்கள் - கொலைகள் - குழுவன்முறைகளுடன் நேரடியாக தொடர்புகொண்டு இருக்காவிட்டாலும்.. குழுவன்முறையின் செல்வாக்கு இருந்து இருக்கின்றது.

+++

நொச்சி, 1999திரைப்படம் பற்றி கனடாவில் நமது தமிழ் ஊடகங்கள் பரவலாக விளம்பரம் செய்து இருந்தார்கள் என்று நினைக்கின்றேன். இதரநாடுகள் பற்றி தெரியவில்லை. ஆனால் நடந்த பிரச்சனை என்ன என்றால்.. 1999 திரைப்படம் விளம்பரம் செய்யப்பட்டபோதும் ஆதவன் என்ற பெயரில் வந்த தென்னிந்திய திரைப்படம் பார்க்கவே சனம் அல்லோல கல்லோலப்பட்டது. ஏக காலத்தில் திரையிடப்பட்டதால் ஆதவனை பார்த்து குசியடைந்தால் போதும் என்று 1999 திரைப்படத்திற்கு போதிய ஆதரவு மக்களிடம் இருந்து கிடைக்கவில்லை. ஆதவன் படம் ஓர் காரணமாக இருந்தாலும்.. இதனால் மட்டும்தானே மக்கள் ஆதரவு தரவில்லை என்பதும் கேள்விக்குறியே.

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

சிட்னியில் வாரமாதம் இப்படம் திரையிடப்படவுள்ளது. விபரங்கள் விரைவில்

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எங்கட சின்னனுகள் எல்லாம் ஒவ்வொரு வழியில கலக்கி எடுக்குதுகள். சந்தோசமா இருக்கு. இந்த படத்த நானும் கட்டாயம் போய் பாப்பன். எண்ட கனடா நண்பனும் நல்லா இருக்கெண்டு சொன்னவன். வேட்டை காரனுக்கு கொண்டு போய் காசை குடுத்து ஜோசப் ஆய் ஊய் எண்டு கத்தி காதை பிளக்குரதிலும் பாக்க இது எவ்வளவோ நல்ல விஷயம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிட்னி தமிழ் மன்றம் 32ஆம் ஆண்டு நிறைவாக, மன்ற வரலாற்றில் முதன்முறையாக திரையிடும் தமிழ்த் திரைப்படம் 1999!

அனைவரும் பேராதரவு தந்து படத்தினைப் பார்த்து மகிழுமாறு அன்புடன் அழைக்கிறது சிட்னி தமிழ் மன்றம்!

தமிழன் படத்திற்க்கு தர‌ணியில் தனிச்சிறப்பு!

முழுக்க ஈழத் தமிழர் உழைப்பில் லெனின் சிவத்தின் கைவண்ணத்தில் மலர்ந்த முதல் தமிழ்ப் படம் ‌ "1999"!

2009 வான்கூவர் இன்டர்நேஷ‌னல் திரைப்ப‌டவிழாவில் சிறப்புக் காட்சி!

2010 ரீல்வோர்ல்ட் திரைப்பட விழாவில் சிறப்புக் காட்சி!

திரையரங்கம்: க்ரேடர் யூனியன், பர்வுட்

திரை நாட்கள் :

வெள்ளி கிழமை, 19 பெப்ருவரி 2010 ‍ 8:45 மாலையளவில்

சனிகிழமை 20 பெப்ருவரி 2010 ‍ 5:45 மாலையளவில்

அனுமதிச் சீட்டு : $12

ஜான் நிவென் - மன்ற தலைவர் (0411 259 978)

26102805.png

Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

சிட்னி இரு காட்சிகள் காண்பிக்கப்பட்டன. 2 வது காட்சி அரங்கு நிறைந்த காட்சிகளாக காண்பிக்கப்பட்டது. 2 வது காட்சியில் திரைப்படம் பார்க்க வந்த 15க்கு மேற்பட்டவர்களுக்கு நுளைவுச்சீட்டு கிடைக்காமல் ஏமாற்றத்துடன் சென்றார்கள். மொன்றியல், ரொன்ரோ, நோர்வேயில் பார்த்தவர்களின் எண்ணிக்கை எவ்வளவு?

இப்படம் சிட்னியில் பலரைக் கவர்ந்தது. நான் பார்த்த சிறந்த படங்களில் இதுவும் ஒன்று. நேரம் கிடைக்கும் போது எனது விமர்சனத்தை புதிய தலைப்பில் விரைவில் உங்களுடன் பகிரவுள்ளேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நார்வே பட விழாவும் நான்கு படைப்பாளிகளின் அனுபவமும்!

எஸ்.பி.ஜனநாதன் கூட முதலில் இந்த விழாவுக்கு போக தயங்கினாராம். அதற்கான காரணத்தை அவரே சொன்னார். எனக்கு ஆங்கிலம் தெரியாது. அதனால் என்னுடன் வருகிறவர்கள் நண்பர்களாகவும், ஆங்கிலம் தெரிந்தவர்களாகவும் இருந்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்தேன். நான் இதற்கு முன்பு இவர்களுடன் அதிகம் பழகியதில்லை. ஆனால் என் தம்பிகளுடன் போயிருந்த உணர்வு என்றார். இந்த திரைப்பட விழாவில் ஜனநாதனை அதிகம் கவர்ந்த படம் 1999 என்ற திரைப்படம். முழுக்க முழுக்க நார்வேயில் எடுக்கப்பட்ட படம்தான் இது. புலம் பெயர்ந்த தமிழர்களின் கஷ்டத்தை சொல்கிற படமாம் இது.

http://www.envazhi.com/?p=16336

Link to comment
Share on other sites

நன்றி குளவி, கந்தப்ஸ்

+++

கந்தப்பு, பிரபாவும் ஒரு பதிவு போட்டு இருக்கறார். பார்த்தீங்களோ http://kanapraba.blogspot.com/2010/02/1999.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்படத்தைப் பார்த்துவிட்டுத்தான் லெனின் பேட்டியை வாசித்தேன். பல விடயங்களை அறிந்து கொண்டேன். தொடர்ந்து புலம் பெயர்ந்து வாழ் சாதனைபெற்ற ஈழத்தமிழர்களை செவ்வி கண்டு யாழில் இணைக்கும் கலைஞனின் முயற்சிக்கு வாழ்த்துகள். தொடர்ந்து உங்கள் பணி தொடரவேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நொச்சி, 1999திரைப்படம் பற்றி கனடாவில் நமது தமிழ் ஊடகங்கள் பரவலாக விளம்பரம் செய்து இருந்தார்கள் என்று நினைக்கின்றேன். இதரநாடுகள் பற்றி தெரியவில்லை. ஆனால் நடந்த பிரச்சனை என்ன என்றால்.. 1999 திரைப்படம் விளம்பரம் செய்யப்பட்டபோதும் ஆதவன் என்ற பெயரில் வந்த தென்னிந்திய திரைப்படம் பார்க்கவே சனம் அல்லோல கல்லோலப்பட்டது. ஏக காலத்தில் திரையிடப்பட்டதால் ஆதவனை பார்த்து குசியடைந்தால் போதும் என்று 1999 திரைப்படத்திற்கு போதிய ஆதரவு மக்களிடம் இருந்து கிடைக்கவில்லை. ஆதவன் படம் ஓர் காரணமாக இருந்தாலும்.. இதனால் மட்டும்தானே மக்கள் ஆதரவு தரவில்லை என்பதும் கேள்விக்குறியே.

வன்னியில் நடந்த இன அழிவுக்கு துணைபோன காங்கிரசு அரசுக்கு துணை நின்ற கலைஞரின் வாரிசின் 'ஆதவன்' படத்தைப் புறக்கணிக்கும் படி ஊடகங்களில் செய்திகள் வந்தன. யாழிலும் கருத்துக்கள் வைக்கப்பட்டன. ஆனால் கனடாவாழ் ஈழத்தமிழர்கள் ஆதவனுக்கு ஆதரவு தந்து '1999'க்கு ஆதரவைத் தராமல் விட்டார்களே. எனினும் 1999னைப் பார்க்காதவர்கள் ,'1999'னைப் பார்த்தவர்களின் கருத்துக்களைக் கேட்டு '1999'னைப் பார்க்க ஆர்வத்தோடு இருக்கிறார்கள். சிட்னியில் காண்பிக்கப்பட்ட 2 காட்சியிலும் பார்க்கதவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க 3 வது காட்சி விரைவில் திரையரங்கில் காண்பிக்கப்படவுள்ளது. 2 வது காட்சி அரங்கு நிறைந்த காட்சியாக இருந்ததினால் 15 க்கு மேற்பட்டவர்கள் நுளைவுச்சீட்டு இன்றி ஏமாற்றத்துடன் திரும்பினார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வன்னி எலிகள், 1999

வியக்கும் தமிழ் இயக்குனர்கள்!

நார்வேயில் நடைபெற்ற தமிழ் திரைப்பட விழாவில் கலந்து கொண்டு பார்வையாளர்களின் பாராட்டுகளையும், பரிசுகளையும் அள்ளிக் கொண்டு வந்திருக்கும் இயக்குனர்கள் எஸ்.பி.ஜனநாதன், மிஷ்கின், சசிக்குமார், சமுத்திரக்கனி ஆகியோர் தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொள்வதற்காக பத்திரிகையாளர்களை சந்தித்தார்கள். முதலில் இந்த விழாவை நடத்திய வசீகரனுக்கு தங்கள் நன்றியை தெரிவித்துக் கொண்டார்கள் அத்தனை பேரும்.

படப்பிடிப்பு இருந்ததால் எனக்கு நார்வே போகிற ஐடியாவே இல்லை. ஆனால் அங்கிருந்து என்னை தொடர்பு கொண்ட வசீகரன், "அண்ணா. நீங்க அவசியம் வரணும்" என்று வற்புறுத்தினார். அவர் கேட்ட முதல் கேள்விதான் என்னை அங்கு போக வைத்தது. "உங்களுக்கு நான் வெஜ்ஜா? வெஜ்ஜா" என்று கேட்டார். விருந்தோம்பலில் தமிழன் உலகம் முழுக்க ஒரே மாதிரிதான் இருக்கிறான் என்பதற்கு அவர் ஒரு உதாரணம். எனக்கு வெளிநாட்டில் இருக்கிறோம் என்ற உணர்வே வரவில்லை. பிளைட்டில் இறங்கிய நிமிடம் முதல், இங்கு புறப்பட்டு வருகிற வரை என்னை சுற்றி தமிழர்கள்தான் இருந்தார்கள். "அண்ணே, யாருக்கு விருது கிடைக்கும்னு தெரியாது. உங்களுக்கு கிடைக்காம போனாலும் நீங்க பொறுத்துக்கணும்" என்றார் வசீகரன்.

நான் அவரிடம், "இங்கு யார் விருது பெற்றாலும் எனக்கு சந்தோஷம். எல்லாருமே என்னோட சகோதரர்கள்தான். எனக்கு வருத்தமெல்லாம் வராது" என்று சொன்னேன் என்று வெளிப்படையாகவே தனது கருத்துக்களை பகிர்ந்து கொண்டார் சசிக்குமார்.

மிஷ்கினின் அனுபவம் வேறு மாதிரியானது. மற்ற இயக்குனர்கள் சென்னைக்கு திரும்பிய போதும், இவர் மட்டும் மேலும் மூன்று நாட்கள் அங்கு தங்கியிருந்துவிட்டுதான் திரும்பினார். "வசீகரனின் அப்பா என்னை அழைத்துக் கொண்டு நார்வேயில் இருக்கும் புகழ்பெற்ற மியூசியம், நு£லகத்திற்கெல்லாம் அழைத்துச் சென்றார். நீயும் என்னோட மகன்தான் என்று அவர் சொன்னது என்னை சந்தோஷப்பட வைத்தது" என்றார். இவருடைய 'நந்தலாலா' படத்திற்கு சிறந்த மக்கள் தேர்வு பட விருது கிடைத்திருக்கிறது.

எஸ்.பி.ஜனநாதன் கூட முதலில் இந்த விழாவுக்கு போக தயங்கினாராம். அதற்கான காரணத்தை அவரே சொன்னார். எனக்கு ஆங்கிலம் தெரியாது. அதனால் என்னுடன் வருகிறவர்கள் நண்பர்களாகவும், ஆங்கிலம் தெரிந்தவர்களாகவும் இருந்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்தேன். நான் இதற்கு முன்பு இவர்களுடன் அதிகம் பழகியதில்லை. ஆனால் என் தம்பிகளுடன் போயிருந்த உணர்வு என்றார். இந்த திரைப்பட விழாவில் ஜனநாதனை அதிகம் கவர்ந்த படம் 1999 என்ற திரைப்படம். முழுக்க முழுக்க நார்வேயில் எடுக்கப்பட்ட படம்தான் இது. புலம் பெயர்ந்த தமிழர்களின் கஷ்டத்தை சொல்கிற படமாம் இது.

இந்த படத்தை பற்றிதான் அதிகம் பேசினார் சமுத்திரக்கனி. ரொம்ப ஸ்டன்னிங்கான படம் அது. பிரமாண்டமாக எடுத்திருக்காங்க. அதுமட்டுமல்ல, புலம் பெயர்ந்த தமிழர்களில் பல அற்புதமான இயக்குனர்கள் அங்கு இருக்காங்க. வன்னி எலிகள் என்றொரு படம் பார்த்தேன். இரண்டே இரண்டு எலிகளை வைத்துக் கொண்டு ஒரு அற்புதமான கதையை சொல்லியிருக்கிறார் அந்த இயக்குனர். மனிதர்களை நடிக்க வைப்பதே கஷ்டம். இதில் எலியை நடிக்க வைத்திருக்கிற அந்த இயக்குனரை எப்படி பாராட்டுவது என்று வியந்தார் சமுத்திரக்கனி.

இந்த நால்வரும் வியந்த 1999 படத்தை விரைவில் தமிழகத்திலும் ரிலீஸ் செய்யும் முயற்சியில் இருக்கிறார் வசீகரன். இப்பவே ஒரு வெல்கம் போர்டு வைப்போம்...

- தமிழ்சினிமா

Link to comment
Share on other sites

நன்றி கந்தப்ஸ். தொடர்ந்து சமயம் கிடைக்கும்போது நம்மவர் படைப்புக்கள் பற்றி அலசுகின்றேன். உங்கள் தகவல்களுக்கும் நன்றிகள். லெனின் நிச்சயம் மிக்க மகிழ்ச்சி அடைந்திருப்பார் 1999இன் அவுஸ்திரேலிய காட்சிகள் பற்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிட்னியில் 1999 ஐ வெளியிட்ட சிட்னி தமிழ் மன்றம் இந்திய தமிழ் நண்பர்களுடைய மன்றம். ஒரு ஈழத்து தயாரிப்பை அவர்கள் முன்வந்து வெளியிடுகிற அதே சிட்னியில் நம்மவர்கள் வெளியிடும் படம் விண்ணைத் தாண்டி வருவாயா :rolleyes::):)

இந்த லட்சணத்தில உலகத்தில தமிழை உய்விக்க வந்த இனமென்று வரட்டுக் கூச்சல் வேறு எங்களுக்கு..

Link to comment
Share on other sites

சிட்னியில் 1999 ஐ வெளியிட்ட சிட்னி தமிழ் மன்றம் இந்திய தமிழ் நண்பர்களுடைய மன்றம். ஒரு ஈழத்து தயாரிப்பை அவர்கள் முன்வந்து வெளியிடுகிற அதே சிட்னியில் நம்மவர்கள் வெளியிடும் படம் விண்ணைத் தாண்டி வருவாயா :rolleyes::):lol:

இந்த லட்சணத்தில உலகத்தில தமிழை உய்விக்க வந்த இனமென்று வரட்டுக் கூச்சல் வேறு எங்களுக்கு..

:D

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.