Jump to content

வெண்ணிலா


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வெண்ணிலா

வானத்தில் முழுமதி ஒளிவீசிக் கொண்டிருந்தது. அன்று போயா விடுமுறை. எங்கும் கடைகள் மூடப்பட்டிருந்ததால் வீதி வெறிச்சோடிக் கிடந்தது. அந்த அகலமான வீதியில் தன்னந்தனியாக நடந்துகொண்டிருந்த அருணிற்கு சொந்த மண்ணின் காற்றைச் சுவாசிப்பது சுகமாகவே இருந்தாலும் சுதந்திரக் காற்றை எப்போ சுவாசிக்கப் போகிறோம் என்று அங்கலாய்ப்பாகவே இருந்தது. ஜந்து வருடங்களாக திரைகடலோடித் திரவியம் தேடிவிட்டு நேற்றுத்தான் அருண் நாடு திரும்பி இருந்தான். தன் சொந்தமண்ணில் நடைபெற்றுவரும் அவலங்களை அப்பப்போ செய்திகள் மூலம் அறிந்த அருணிற்கு மனதுக்குள் இனம் புரியாத ஏதோ ஒரு உணர்வு. ஒரு விதமாக ஒப்பந்தத்தை முடித்துக்கொண்டு தனது நாட்டிற்குத் திரும்பி வந்தாலும் தன் அன்னையையும் தங்கைகளையும் பார்க்க இன்னும் வழி கிடைக்கவில்லை. தலைநகரில் உறவினர் வீட்டில் தங்கி இருந்த அருணிற்கு ஒவ்வொரு நிமிடமும் வருடங்களாக இருந்ததில் ஆச்சரியமில்லை.

அருணிற்கு தாய் தந்தை எல்லாமே அவன் அம்மாதான். சிறு வயதிலேயே அருண் தந்தையை இழந்துவிட்டான். அருணிற்குப்பின் மூன்று தங்கைகளைப் பரிசாகக் கொடுத்து விட்டு அப்பா ஓர்நாள் நெஞ்சுவலியில் உலகவாழ்க்கையை முடித்துக் கொண்டார். அப்பா இருக்கும்பொழுது அவனது குடும்பம் ஓகோ என்று வாழாவிட்டாலும் பசி பட்டினி இல்லாமல் சந்தோசமாக வாழ்ந்தார்கள். அப்பாவின் திடீர் முடிவுக்குப் பின் அம்மா எவ்வளவோ கஸ்ரப்பட்டு அனைவரையும் வளர்த்து ஆளாக்கி உறவினர் உதவியுடன் அருணையும் வெளிநாடு அனுப்பி வைத்தார்.

அருணிற்கு அடுத்ததாக மூன்று தங்கைகளும் அழகிலும் அறிவிலும் வளர்ந்து மூத்த தங்கை நிலா தன் இருபதாவது பிறந்ததினத்தை எட்டி இருந்தாள். அம்மாவுக்கோ நெருப்பை மடியில் கட்டி வைத்திருப்பது போன்ற உணர்வு. எந்த நேரமும் அருணிற்குக் கடிதம் எழுதும்போதும் எப்படியாவது இந்த வருடத்திற்குள் நிலாவிற்கு திருமணம் முடித்து விடவேண்டுமென்றே கோரிக்கை விட்டிருப்பாள். அருணிற்கும் இதுபற்றி நெருடல் இல்லாமல் இல்லை. அவனும் தன் தங்கையின் திருமணம் பற்றி தீவிரமாக சிந்திக்கத் தொடங்கினான். அருணுடன் சிறுவயது முதல் படித்த நண்பன் பிரபு வெளிநாட்டில் இருந்து தாய்நாடு போய் இருந்தான். அவர்கள் குடும்பத்தில் பெண்சகோதரிகள் இல்லாதபடியால் அவனுக்கு பொறுப்புக்கள் இருக்கவில்லை. எனவே பெற்றோர் பெண்பார்க்க ஆரம்பத்திருந்தனர். அருண் தன் தங்கைக்கு நண்பனைத் திருமணம் செய்யும் எண்ணத்தை வெளிப்படுத்தியதும் அவனுக்கோ பரம சந்தோசம்.

இருபக்கமும் சாதகமான சூழ்நிலை இருந்ததாலும் பிரபு ஆறுமாதத்திற்குள் வெளிநாடு செல்ல வேண்டுமென்ற காரணத்தினாலும் அருண் நாடு திரும்ப முன்பே நிலாவின் திருமணம் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. அருண் தன் தங்கையின் திருமணத்தை நேரில் பார்க்க முடியாவிட்டாலும் வீடியோவிலும் போட்டோக்களிலும் பார்த்து சந்தோசமும் பெருமிதமும் அடைந்தான்.

நாட்களின் சுழற்சியில் நான்கு மாதங்கள் உருண்டோடின. தனது எண்ணக் கனவுகளை இனிமைகூட்ட தனக்கு ஒரு மருமகனோ மருமகளோ வரஇருக்கும் செய்தியும் மடலில் வந்தது. அருணிற்கோ விண்ணில் பறக்கும் பரவசம். ஓடிச்சென்று தன் தாயையும் சகோதரிகளையும் நண்பளையும் அணைத்து மகிழ ஆசை இருந்தாலும் பொறுப்புக்களை எண்ணி தன் ஆசைகளை அடக்கிக் கொண்டான். பிரபுவும்; தன் குழந்தையைப் பார்த்துவிட்டு வெளிநாடு செல்லும் ஆசையில் பயணத்தைப் பின்போட்டு விட்டான். ஆண்துணை இல்லாத வீட்டில் சில காலம் அவனின் துணை தேவை என்பதால் அருணும் நிம்மதியாக இருந்தான்.

நிலாவின் பிரசவநாளும் நெருங்கிக் கொண்டிருந்தது.

நிலாவோ அண்ணாவுக்கு எழுதும் கடிதங்களில் எல்லாம் “அண்ணா உன் மருமகனைப் பார்க்க எப்போ வரப்போகிறீர்கள்?” என வேண்டுதல் விடுத்தபடியே இருந்தாள். அருணின் ஒப்பந்த நாளும் முடிந்து ஓடோடி வந்துவிட்டான். எப்போ நாளை விடியும் எப்படியாவது வவுனியா போய் எப்பாடுபட்டாவது கிளாலிக்கடல் தாண்டி எந்த வண்டியிலாவது பயணம் செய்து தன் உறவுகளைச் சந்திக்கும் இனிய உணர்வுடன் அருண் கண்ணயர்ந்தான்.

விடிந்தது. எத்தனையோ தடைகளையெல்லாம் தாண்டி பயணத்தைத் தொடர்ந்து யாழ்நகர் வந்துவிட்டான். யாழ்நகரில் இருந்து அருணின் பகுதிக்குச் செல்லும் பாதைகள் எல்லாம் உடைந்த நிலையில் இருந்ததால் படகு மூலம்தான் ஊருக்குள் செல்லமுடியுமென அறிந்த அருண் ஏமாற்றத்துடன் காத்திருந்தான். அன்றிரவு ஒரு நீண்ட பொழுதாகக் கழிந்தது. இரவுமுழுவதும் ஒரே செல் வீச்சுக்களும் விமானக் குண்டுவீச்சக்களும் காதைப்பிளந்தன. எங்கும் போர்முழக்கம் கேட்டபடி இருந்ததால் விடியும்வரை நித்திரையின்றி நண்பனின் வீட்டில் முடங்கிக் கிடந்தான்.

விடிந்ததும் செவியில் விழுந்த செய்திகள் அருணைத் திகைக்க வைத்தன. தன் ஊருக்குள் இராணுவம் புகுந்து விட்டதாகவும் மக்கள் பல திசைகளிலும் ஓடிக்கொண்டிருப்பதாகவும் பேசிக்கொண்டனர். அருணின் இதயம் வேகமாகத் துடிக்கத் தொடங்கியது. உடம்பில் ஏதோ நடுக்கம். மூன்று நாட்களுக்கு ஊருக்குள் போகமுடியாமல் அந்த மூன்று நாட்களும் மூன்று யுகங்களாகக் கழிந்தன. நான்காவது நாள் இராணுவம் ஊரிலிருந்து பின்வாங்கிச் சென்றுவிட்டதாக அறிந்ததும் அருண் முதல் ஆளாக தன் ஊர்மக்கள் தங்கி இருந்த இடங்களுக்குச் செல்லும் முயற்சியில் இறங்கினான்.

போகும் வழியெங்கும் இராணவத்தினரின் அட்டகாசங்களைப் பற்றி மக்கள் கதைத்தபடியே இருந்தனர். அருணிற்கு எதுவுமே காதில் விழவில்லை. எப்படியோ விசாரித்து தெரிந்தவர்களின் உதவியுடன் தன் தாயும் தங்கைகளும் தங்கி இருந்த ஆலயத்தை அடைந்தான். ஆலய வளவு முழுவதும் அகதிகள் கூட்டம் தன் மக்களுக்கும் இப்படி ஒரு நிலையா? என மனம் அங்கலாய்த்தது. அருணைக் கண்டதும் உறவினர்கள் ஓடி வந்தனர். எல்லோரின் அனுதாப அலைகளும் தன் மேல் வீசுவதை உணர்ந்தவனாகச் சென்று கொண்டிருந்தவனை ஓடி வந்து கட்டிக் கொண்டு அழும் அம்மாவின் அலறல். ஏதோ நடக்கக் கூடாதது நடந்து விட்டது. உள் மனது எச்சரித்தது. சுற்றுமுற்றும் பார்த்தான். ஒருபடியாக மனதைத் தைரியப்படுத்திக் கொண்டு “தங்கச்சிமார் எங்கே?” என்று கேட்டான். “நிலாவுக்கு பெண் குழந்தை பிறந்திருக்கு” என்று கண்ணீருடன் பதில் வந்தது. அருண் ஆவலுடன் இரண்டு;;ரெண்டு எட்டாக வைத்து ஆலய மண்டபத்துள் நுழைந்தான்.

அங்கே சுவர் ஓரமாக விரிக்கப்பட்டிருந்த ஓலைப்பாயில் தங்கை சாய்ந்தபடி உட்காந்திருந்தாள். அவள் மடியில் பால் மணத்துடன் பச்சிளம் குழந்தையாக அவன் இத்தனை நாட்களாக கற்பனையில் கதைபேசிய ஆசை மருமகள். சுற்றும் முற்றும் பார்த்தான். அவன் நண்பனைக் காணவில்லை. “நிலா பிரபு எங்கே?” என்று கேட்டான். அவளின் காதில் அண்ணாவின் கேள்வி விழுந்ததாகத் தெரியவில்லை. அவளின் கண்கள் எங்கோ சூனியத்தை வெறித்தபடி இருந்தன. முகத்தில் வெறுமை. அருணிற்கு எங்கோ உண்மை இடிக்கத் தொடங்கியது.

அவனின் மற்றைய தங்கைகள் தம் அத்தானை இராணுவம் பிடித்துச் சென்றதையும் மறுநாள் பிணமாக வீதியில் வீசிச்சென்ற உண்மையை வேதனையுடன் வெளிப்படுத்தினர். அருணிற்குள் பூகம்பம் வெடித்தது போல உணர்ந்தான். தன் தங்கையை இந்தக் கோலத்தில் பார்ப்பதற்கா இத்தனை கஸ்ரப்பட்டான். அவன் நண்பனை நினைக்க இதயத்தை யாரோ பிசைவது போன்ற வேதனை. எப்படி என் தங்கை இதைத் தாங்கிக் கொண்டிருக்கிறாள் என்று நினைக்கவே வேதனை இன்னும் பல மடங்காகியது. யன்னலின் ஊடாக வெளியே நோக்கினான். வானத்தில் வெண்ணிலவு தேய்நிலவாகத் தேய்ந்து கொண்டிருந்தது அவன் தங்கையைப்போல. அவன் தங்கை வாய்விட்டு அழவில்லை. அவளின் விழிகளில் இருந்து சொட்டுச் சொட்டாக விழுந்த கண்ணீரின் வெப்பம் தாங்க மாட்டாமல் மடியில் இருந்த மழலை சிணுங்கத் தொடங்கியது.

Link to comment
Share on other sites

இப்படி எத்தனையோ உண்மை சம்பவங்கள் நடந்துள்ளன.நல்லதொரு கதை.காவலூர் கண்மணிக்கு நன்றி.

Link to comment
Share on other sites

கண்மணி அக்கா வழமை போலவே உங்கள் கதை வெண்ணிலவா பிரகாசித்து இறுதியில் அமாவாசையாக முடங்கிவிட்டது :lol: ...நல்லதொரு கதைய வாசித்த சந்தோசம் ஆனா இறுதியில் மனதை கனக்க செய்துவிட்டீர்கள் அடுத்த கதையை வாசிக்கு ஆவலுடன் விடைபெறுகிறேன்!! :icon_mrgreen:

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிறுகதையை வாசித்து ஊக்கமும் உற்சாகமும் அளித்த நுணாவிலான் யமுனா இருவருக்கும் நன்றிகள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கண்மணி அக்கா நல்லதொரு கதை. இப்படி எவ்வளவு உண்மை சம்பவங்கள் எங்கட நாட்டிலே :icon_mrgreen:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.