Jump to content

செல்வன்


Recommended Posts

ஈழவனும், சஜீவனும், குழுவினரும் தற்போது பற்றைகள் நிறைந்த காட்டுப் பகுதியில் ஒளிந்து இருந்தனர். இந்தப் பகுதிக்கு இந்திய இராணுவம் வருவது மிகக்குறைவு. ஆனால், இங்கு இருந்ததனால் இவர்களினால் ஊரில் நடைபெறும் விடயங்களை உடனுக்குடன் அறிந்துகொள்வது மிகக்கடினமாக இருந்தது. தொடர்பாடல், மற்றும் உணவுப் பிரச்சனைகளிற்கும் முகம் கொடுக்க வேண்டி இருந்தது. யமுனா இந்திய இராணுவத்திடம் பிடிபட்டமையால் ஆதி மிகவும் சோர்ந்துபோய் இருந்தான். சஜீவன் போராட்டத்தில் இழப்புக்கள், தோல்விகள் ஏற்படுவது வழமை என்றும், தனக்குக் கூட நாளைக்கு ஏதாவது நடக்கக்கூடும் என்றும், ஆனால் தொடர்ந்தும் நீங்கள் துணிவுடன் போராட வேண்டும் எனவும் ஆதிக்கு அறிவுரை கூறினான். தனக்கு ஏற்பட்ட கள அனுபவங்களை பற்றி, வீரமரணமடைந்த தனது நண்பர்களைப் பற்றி ஆதிக்கு அவன் கதை, கதையாகக் கூறினான். மருதங்கேணியும், புத்தனும் தாம் எப்படி, ஏன் இயக்கத்தில் சேர்ந்தோம் என தமது சொந்தக் கதைகளை கூறினர். இவர்களிற்கு தம்மிடையே ஒருவருடன் ஒருவர் உரையாடுவதற்கு இப்போது நீண்ட நேரம் கிடைத்தது. மருதங்கேணி மிக நன்றாக ஓவியம் வரையக்கூடியவன். மரம் ஒன்றில் ஏறி, சிறிய பிளேட் துண்டு ஒன்றை பாவித்து, மரப்பட்டைகளை கீறி அதில் தாய் ஒருத்தி தனது கைக்குழந்தையை இடுப்பில் சுமந்தபடி, தோளில் துப்பாக்கி ஒன்றையும் தூக்கியபடி ஒற்றையடிப் பாதை ஒன்றினூடாக நடப்பது போலவும், தூரத்தில் தமிழீழம் தெரிவது போலவும், தமிழீழத்தின் பின்னணியில் சூரியன் உதிப்பது போலவும் காட்சியை உருவாக்கிக்கொண்டு இருந்தான். புத்தன் விடுதலை கானங்கள் பாடிக்கொண்டு இருந்தான்.

புத்தன்: (பாடுகின்றான், ஆதி, சஜீவன், மருதங்கேணி இரசித்துக் கேட்கின்றனர், ஈழவன் பாடலைக் கேட்டபடி காவல் செய்கின்றான்..)

பட்டினி கிடந்து பசியால் மெலிந்து

பாழ்பட நேர்ந்தாலும் - எந்தன்

கட்டுடல் வளைந்து கைகால் தளர்ந்து

கவலை மிகுந்தாலும் - வாழ்வு

கெட்டு நடுத்தெரு வோடு கிடந்து

கீழ்நிலை யுற்றாலும் - மன்னர்

தொட்டு வளர்த்த தமிழ்மகளின் துயர்

துடைக்க மறப்பேனா?

நோயில் இருந்து மயங்கி வளைந்து

நுடங்கி விழுந்தாலும் - ஓலைப்

பாயில் நெளிந்து மரண மடைந்து

பாடையில் ஊர்ந்தாலும் - காட்டுத்

தீயில் அவிந்து புனலில் அழிந்து

சிதைந்து முடிந்தாலும் - எந்தன்

தாயில் இனிய தமிழ்மொழியின் துயர்

தாங்க மறப்பேனா?

பட்டமளித்துப் பதவி கொடுத்தொரு

பக்கம் இழுத்தாலும் - ஆள்வோர்

கட்டி அணைத்தொரு முத்த மளித்துக்

கால்கை பிடித்தாலும் - என்னைத்

தொட்டு விழுந்து வணங்கி இருந்தவர்

தோழமை கொண்டாலும் - அந்த

வெட்டி மனிதர் உடல்களை மண்மிசை

வீழ்த்த மறப்பேனா?

பொங்கு வெறியர் சிறைமதிலுள் எனைப்

பூட்டி வதைத்தாலும் - எந்தன்

அங்கம் பிளந்து விழுந்து துடிக்க

அடிகள் கொடுத்தாலும் - உயிர்

தொங்கி அசைந்து மடிந்து தசையுடல்

தூள்பட நேர்ந்தாலும் - ஒரு

செங்களம் ஆடி வருகிற புகழோடு

சிாிக்க மறப்பேனா?

சஜீவன்: "உங்கட குரலில காசிஅண்ணேட இந்தப்பாட்டு தூக்கலா இருக்கு..."

ஆதி: "பாட்டு அந்தமாதிரி இருக்கு.. இப்பிடியே பாடிக்கொண்டு இருங்கோ, கேட்டுக்கொண்டே இருக்கலாம்!"

மருதங்கேணி: "எனக்கு முன்னுக்கு சரியாப் பசிச்சது.. பாட்டக் கேட்டோன பசிபோட்டுது!"

ஈழவன்: "புத்து இனி எனக்கு பிரச்சன இல்ல, கையில சாப்பிட ஒண்டும் இல்லாட்டி நீ பாட்டு ஒண்டு பாடிவிட்டா பெடியளுக்கு பசி பறந்துபோகும்!" (சிரிப்பு..)

புத்தன்: "உண்மதான் ஈழவா, ஆனா பாடுற எனக்கு பசிக்குமே?"

ஈழவன்: "இனி சாப்பாட்ட உனக்கு மட்டும் தாறன்..." (சிரிப்பு)

(தூரத்தில் நிதர்சனும், அருவியும் இவர்களிற்கு உண்பதற்கு உணவு கொண்டு வருகின்றனர். தற்போது இருவரும் யாழ்நகரிற்கு பாடசாலைக்கு செல்வதில்லை. வானவில் ஈப்பி கூலிக்குழுவினால் கடத்தப்பட்டவுடன் எல்லாமே குழம்பிவிட்டது. இதன்பின் இருவரும் இயக்கத்தில் இணைவதற்கு தீவிரமாக முயன்றார்கள். ஆனால், ஈழவன் வெளியில் இருந்து சிறிதுகாலத்திற்கு தமக்கு நாளாந்தம் தேவையான உதவிகளை செய்யும்படியும், இதன்பின் முழுநேரமாக இயக்கத்தில் இணைய முடியும் எனவும் ஆலோசனை கூறி இருந்தான்)

புத்தன்: "அடடா.. சாப்பாடப் பற்றிக் கதைக்க சாப்பாடே வந்திட்டுது.. சாப்பாட்டுக்கு ஆயுசு நூறு.."

ஈழவன்: "என்ன இண்டைக்கு பெடியள் வேளைக்கே வந்திட்டாங்கள்?"

சஜீவன்: "நாந்தான் வரச்சொன்னான். நாளைக்கு வயல்கர பிள்ளையார் கோயில் பக்கம் ஒருக்கால் போகவேணும்.."

ஈழவன்: "ஓ நான் மறந்து போனன். வாறபுதன் கிழம கருநாவுக்கு பொங்கல் வக்கவேணும்.."

அருவி: "நாங்கள் வரவும், ஆமி வரவும் சரியா இருந்திச்சு.."

சஜீவன்: "எங்க கண்டனீங்கள்? அதுவும் இந்த நேரத்தில?"

நிதர்சன்: "வடலிப்பக்கம் கள்ளு வாங்கிக் குடிக்க போறாங்கள்" (சிரிப்பு)

ஈழவன்: "சரி வாங்கோ சாப்பிடுவம்.."

அருவி: "அண்ணமார் நீங்கள் சாப்பிடுங்கோ.. நாங்கள் காவலுக்கு நிற்கிறம்.."

மருதங்கேணி மரத்தில் ஓவியம் வரைவதை நிறுத்திவிட்டு கீழே இறங்கிவருகின்றான். அனைவரும் மரநிழல் ஒன்றின் கீழ் இருந்து உண்கின்றனர். நிதர்சன் மரத்தில் ஏறி தொலைநோக்கியூடாக இந்தியப்படையினர், மற்றும் ஈப்பி கூலிக்குழுவின் நடமாட்டங்கள் தெரிகின்றதா என அவதானிக்கின்றான். அருவி கைக்குண்டுகள் சிலவற்றுடன் சுற்றுப்புறத்தில் காவல் செய்கின்றான். எப்படி, சுடுவது, கைக்குண்டை எறிவது போன்ற அடிப்படைப் பயிற்சிகளை சஜீவன் அருவியிற்கும், நிதர்சனிற்கும் பழக்கி இருந்தான். ஆதி ஏற்கனவே கூலிகுழுக்களின் கட்டாய இராணுவப் பயிற்சிக்கு உட்படுத்தப்பட்டிருந்ததால் ஆயுதங்களை எப்படி கையாள்வது என்பதை நன்கு அறிந்துவைத்திருந்தான். இதைவிட, மருதங்கேணி, புத்தன், சஜீவனும் ஆதியிற்கு ஆயுதங்களை கையாள்வது எப்படி என நேரம் கிடைக்கும்போது கற்றுக்கொடுத்தனர்.

ஊரில் ஈப்பி கூலிக்குழுவின் அட்டகாசங்கள் உச்சநிலைக்கு சென்றுவிட்டது. பகலில் வீடுகளினுள் புகுந்து கொள்ளைகளில் கூலிக்குழுவினர் ஈடுபட்டனர். இந்தியப்படை விரைவில் தமிழீழத்தைவிட்டு வெளியேறப்போகின்றது என்ற செய்திகள் பரவலாக அடிபட்டமையே இதற்கான காரணம். தாம் ஈழத்தைவிட்டு ஓடுமுன் தமக்கு விருப்பமில்லாத தனிப்பட்டவர்களை கொலைசெய்வதிலும், தமது தனிப்பட்ட தேவைகளிற்கு பணம் பறிப்பதிலும் ஈப்பி கூலிக்குழுவினர் மும்மரமாக இருந்தனர். இந்தக்கிழமை மட்டும் பன்னிரண்டு பேரை ஈப்பிகூலிக்குழு யாழ்ப்பாணத்தில் சுட்டுக்கொன்றது. இதில் இரண்டு பாடசாலை மாணவர்களும் அடங்குவர்.

உணவு அருந்தி முடிந்ததும் சஜீவன் அருவியையும், நிதர்சனையும் அழைத்து தாம் அடுத்ததாக செய்யப்போகின்ற கூலிக்குழுமீதான ஒரு தாக்குதலிற்கு இவர்கள் செய்யவேண்டிய பங்கினைப்பற்றி விளக்கிக்கொண்டு இருந்தான். சில மணிநேரங்களின் பின், மாலை சுமார் ஏழுமணியளவில் அருவியும், நிதர்சனும் தமது இருப்பிடங்களிற்கு திரும்பிச் சென்றனர். மருந்தங்கேணி அருகில் உள்ள ஒரு தோட்டக் கிணற்றில் குளித்துக்கொண்டு இருந்தான். புத்தனும், ஆதியும் தோட்டத்தில் வேலை செய்யும் வயோதிபர் ஒருவருடன் உரையாடிக்கொண்டு இருந்தனர். அவர் இரண்டாம் உலகப்போரின் போது தனது வாழ்வில் நடைபெற்ற பழைய கதைகளை சொல்லிக்கொண்டு இருந்தார். ஈழவனும், சஜீவனும் தமது அடுத்த தாக்குதல் திட்டம் பற்றி விவாதித்துக்கொண்டு இருந்தனர்.

Link to comment
Share on other sites

"ம் உடன வெளிக்கிடும்... உடன உடன.... " இந்திரநாதன் மனைவி கெளரியை அவசரப்படுத்திக் கொண்டு இருந்தார். இந்திரநாதன் கொழும்பில் உள்ள பெரிய பிரபல கணக்கியல் நிறுவனத்தில் பணிப்பாளராக இருந்தார். மாதம் இரண்டு லட்சம் சம்பளம், இதைவிட மேசைக்கு கீழாக சுருட்டிக்கொள்ளும் பணங்கள், சீதனச் சொத்துக்கள், வேறு வரும்படிகள் சேர்த்து மாதம் ஐந்து லட்சங்கள் அளவில் வரும்படி தேறும். கொள்ளுப்பிட்டியில் மிகவும் வசதியான ஆடம்பர அடுக்குமாடி வீட்டில் குடும்பத்துடன் சந்தோசமாக வாழ்ந்தார். இவருக்கு நான்கு பிள்ளைகள், மூத்தவன் பிரதாபன் - பத்தொன்பது வயது, கொழும்பு சர்வதேச பாடசாலையில் கல்விகற்றான், இரண்டாமவன் பரன் - பதினேழு வயது, கொழும்பு றோயல் கல்லூரியில் கல்விகற்றான், மூன்றாவது அகல்யா - பதினாறு வயது, இவளும் கொழும்பு சர்வதேச பாடசாலையில் கல்வி கற்றாள், கடைசிப்பிள்ளை சிந்து - பத்து வயது, கொழும்பு றோயல் கல்லூரியில் கல்வி கற்றான். இந்திரநாதனிற்கு வயது ஐம்பத்து நான்கு, மனைவி கெளரிக்கு வயது நாற்பது, சொந்த மச்சாளை திருமணம் செய்திருந்தார். இந்திரநாதனின் நிறுவனத்திலேயே சாணக்கியனின் பெரியப்பா குமாரசாமி பிரதம கணக்காளராக வேலை செய்தார். இந்திரநாதனின் பூர்வீகம் கொழும்பு, கெளரியின் பூர்வீகம் யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணை.

கெளரி - (பெரிய நிலைக் கண்ணாடிக்கு முன்னால் நின்று முன்னுக்கும், பின்னுக்கும் திரும்பி புடவை, கூந்தல், ஆபரணங்களை சரிபார்க்கின்றாள், முகத்திற்கு பூசப்பட்ட பவுடர் சற்று குறைவாக இருந்தது போல் தெரிந்தது. கொஞ்சம் பவுடரை கையில் போட்டு, இருதடவை தட்டிவிட்டு முகத்திற்கு சிறிதளவில் தடவுகின்றாள்) "ம் வந்துகொண்டிருக்கிறன், கொஞ்சம் பொறுங்கோ..."

இந்திரநாதன்: "ஹவ் லோங்க் கான் ஐ வெயிட் போ யூ?"

கெளரி - "ஜஸ்ட் எ செக்கண்ட்..." (கூந்தலை திரும்பவும் சீப்பினால் சீவி சரிசெய்கின்றாள், கழுத்தில் தற்போது அணிந்திருந்த ஆபரணம் பிடிக்காததால் அலுமாரிக்கு சென்று வேறு நகையை மாற்றுகின்றாள்)

இந்திரநாதன்: (கதவில் குத்துகின்றார்..) "ஹும்!" (கோபம்)

அகல்யா: "மம்மி வட்ஸ் ஹப்பினிங் ஓவ தெயா? அப்பா இஸ் கோலிங் யூ, காண்ட் யூ லிசின்?"

கெளரி: (ஆறுதலாக மாடிப்படிகளில் அன்னநடை நடந்து இறங்கிவருகின்றாள்) "மஞ்சு, சும்மா பிள்ளைகளோட சேந்து டீவியப் பாத்து விளையாடிக் கொண்டு இருக்காம, வீட்டக்கூட்டி துப்பரவாக்கு, குசினியுக்க பாத்திரங்களக் கழுவி வை, இரவைக்கு புட்டுக்கு பொரியல் வைக்கவேணும், உருளக்கிழங்க வடிவாச் சீவி வை, நான் வந்தாப்பிறகு பொரிக்கலாம்." (வேலைக்காரிக்கு ஆணையிட்டபடி காரில் ஏறுவதற்கு வெளியே செல்கின்றாள்)

இந்திரநாதன்: (கெளரி காரில் ஏறியதும் அவளைப் பார்த்து ஒரு முறைப்பு)

கெளரி: (முன் இருக்கையில் உட்கார்ந்து, காரினுள் உள்ள கண்ணாடியை திறந்து முகத்தை பார்த்துவிட்டு புன்சிரிப்பு)

இந்திரநாதன்: "இப்ப கோயிலுக்கு தானே போறம்?"

கெளரி: "ம்.. மயூராபதி அம்மன் கோயிலுக்கு விடுங்கோ.."

இந்திரநாதன் காரை ரிவேர்சில் எடுத்து திருப்பி கோல் வீதியில் இறக்குகின்றார். இந்திரநாதன் வாழும் தெருவில் உள்ள அனைவரும் இவர்கள் கோயிலுக்கு போவதை நின்று வேடிக்கை பார்க்கிறார்கள். அதிலும் கெளரியை பார்த்து ரசிப்பதற்கு அவர்கள் வீட்டைச்சுற்றி ஒரு பெரிய ரசிகர் கூட்டமே இருந்தது. கெளரி நல்ல அழகு என்று கூறுவதை விட, வெள்ளைத்தோல் போர்த்திய அழகிய சிற்பம் எனக்கூறலாம். ஆனால், அவள் மனதில் மலசலகூடத்தில் இருப்பதைவிடக் கேவலமான அழுக்குகள் இருந்தது. இதை கெளரியின் ரசிகர்கள் சிலர் அறிந்திருந்தாலும் அவளது வெளித்தோற்றத்தில் நன்றாக மயங்கிவிட்டதால், இவள் மீது பேரன்பு செலுத்தினர்.

சுமார் பதினைந்து நிமிடங்களில் கோயிலிற்கு வந்துசேர்ந்துவிட்டனர். கெளரியை கோயில் வாசலில் இறக்கிவிட்டு இந்திரநாதன் காரை தரிப்பிடத்தில் நிறுத்துவதற்காகச் செல்கின்றார். கெளரி கையில் பழத்தட்டுடன், சினிமா நட்சத்திரங்களின் பாணியில் கோயிலினுள் செல்கின்றாள். இதேவேளை தமிழ்தங்கை நீண்டகாலமாக மயூராபதி அம்மன் கோயிலுக்கு செல்லவேண்டும் என விரும்பியிருந்தாள். இதனால், இன்று வெள்ளிக்கிழமை தமிழ்தங்கை, இனியவள், சாணக்கியன், பிரியசகி, அனிதா, சுட்டி பேருந்தில் கோயிலுக்கு வந்திருந்தனர். பூசை தொடங்குவதற்கு இன்னும் நேரம் இருந்தது. அனைவரும் கோயிலில் நிலத்தில் உட்கார்ந்து இருந்தனர்.

சாணக்கியன்: "அம்மா அங்க பாருங்கோ யார் வாரெண்டு!"

அனிதா: "யாரண்ண அது?"

பிரியசகி: "பாக்க கோயிலுக்கு சாமி கும்பிட வந்தமாதிரி தெரியேல, படம் நடிக்க வந்தமாதிரி தெரியுது" (சிரிப்பு)

இனியவள்: "வாய மூடடி, யார் ஆக்களோ தெரியாது"

தமிழ்தங்கை: "ஓ இவதான் குமாரசாமி அண்ணையிட பொஸ்ஸிண்ட மிசிஸ்"

அனிதா: "இவவா அவ!" (ஆச்சரியம்..) "பெரியப்பா ஆட்டக்காரி எண்டு சொல்லிறது சரிபோலத்தான் இருக்கு" (சிரிப்பு)

பிரியசகி: "இஞ்ச கோயிலிக்கு என்ன மாதிரி டிரெஸ் பண்ணிக்கொண்டு வாரீனம் பாத்தீங்களா?"

இனியவள்: (பயம்..) "ஆக்களிண்ட காதில கேக்கப்போது, மெல்லக் கதையடி!"

சாணக்கியன்: "அம்மா அவவோட போய்க் கதைப்பமே?"

அனிதா: "என்ன கதைக்கப் போறீங்கள்?"

பிரியசகி: "உங்கட இளமையின்ர ரகசியம் என்ன எண்டு கேட்டுப் பார்க்கலாம்" (சிரிப்பு)

இனியவள்: "ம்.. பார்க்கிறதுக்கு இருவது வயசுக் குமரி மாதிரி இருக்கிறா.."

சாணக்கியன்: "குமரியோ? இவவுக்கு நாலு பிள்ளைகள் இருக்கு, முதலாவதுக்கு இருவது வயசு இருக்கும்.."

தமிழ்தங்கை: "தம்பி எல்லாத்தையும் நிப்பாட்டு, நாங்கள் கோயிலுக்கு வந்தனாங்கள், பேசாம சாமியக் கும்பிட்டுப் போவம், யாற்றையும் கத எங்களுக்கு என்னத்துக்கு?"

அனிதா: "எனக்கு கனநேரம் நிலத்தில இருந்து கால் விறைச்சுப் போச்சு, எழும்பி நிற்கப்போறன்.."

பிரியசகி: "அனி, வாறீங்களே பூசை துவங்குமட்டும் கோயில சும்மா சுத்திப் பாத்துக்கொண்டு வருவம்.."

அனிதா: "சரி, வாங்கோ போவம்.."

சுட்டி: "நானும் வாறன்.."

தமிழ்தங்கை: (சுட்டியைப் பார்த்து) "அம்மாட பேர்ஸ்ஸத் தந்திட்டுப் போ, விழுத்திப் போடுவாய்"

அனிதா, பிரியசகி, சுட்டி கோயில் வீதியில் சுற்றி நடந்து வருகின்றனர். கெளரியைக் கண்ட பூசாரி ஓடிச்சென்று பழத்தட்டை அவளிடமிருந்து பயபக்தியுடன் வாங்கிக்கொள்கின்றார். சில செல்வந்தப் பெண்கள் கெளரியைச் சுற்றி நின்று ஊர்ப்புதினங்களையும், தமது அருமை, பெருமைகளையும் பற்றி பேசிக்கொண்டு இருக்கின்றனர். ஆடவர் கூட்டமொன்று கெளரியின் அழகை கோயிலினுள் இருந்து ரசித்துக்கொண்டு இருக்கின்றது

இந்திரநாதன் காரை பார்க் செய்துவிட்டு கோயிலினுள் வருகின்றார். தனது மனைவியைச் சுற்றி பல பெண்கள் நின்று சல்லாபம் செய்வதை வேடிக்கை பார்க்கின்றார். இந்திரநாதனைக் கண்டதும் அவரைப் பற்றி அறிந்த சில ஆடவர்கள் கெளரியைப் பார்த்து ரசிப்பதை கைவிட்டு மயூராபதி அம்மனின் பக்கம் தமது பார்வையையும், மனதையும் திருப்புகின்றனர். இந்திரநாதன் சற்று சந்தேக புத்திகூடியவர். தனது மனைவியின் அழகைப் பார்த்து மற்றவர்கள் ரசித்தால் அவருக்கு பொல்லாத கோபம் வரும். ஒருமுறை இவ்வாறு கோயிலில் சில ஆடவர்கள் கெளரியின் அழகில் மயங்கி நின்றபோது, இந்திரநாதன் "நீங்கள் சாமி கும்பிட வந்தனீங்களோ? இல்லாட்டி வேறு என்னவும் கும்பிட வந்தனீங்களோ?" என பலர் முன்னிலையில் கேட்டமையால் குழப்பம் வந்துவிட்டது. இதற்கு பதில் அளித்த ஒரு துடிப்பான இளைஞன் "கோயிலுக்கு வாறமாதிரி வெளிக்கிட்டு வந்தா இந்தப்பிரச்சனைகள் உங்களுக்கு வராது" என நேரடியாகப் பதில் சொல்லிவிட்டான். இதனால் இந்திரநாதனுக்கு அவமானமாகப் போய்விட்டது. ஆனால், கெளரி இதைப்பற்றியெல்லாம் கவலைப்படுவதில்லை.

இந்திரநாதன்: (பூசகரைப் பார்த்து) "ஐயா பூச எப்ப தொடங்கும்?"

பூசகர்: "நீங்கள் எல்லாம் வந்திட்டீங்கள், இந்தா இப்ப தொடங்கிறன்.. தம்பி டேய் மணிய அடிடா.. பூச துவங்கப்போகிது" (விரைவாக கற்பக்கிரகம் நோக்கிச் செல்கின்றார்)

பூசை தொடங்குகின்றது. கற்பூரதீப ஒளியுடன் திரைச்சீலை நகர்கின்றது. எல்லோரும் அரோகரா எனச் சத்தமிடுகின்றனர். பல்வேறு மணி ஒலிகளாலும், தீப ஒளிகளாலும் கோயில் நிறைந்து கண்களிற்கு மங்களகரமாகக் காட்சியளிக்கின்றது.

Link to comment
Share on other sites

கருணா ஈப்பி கூலிக்குழுவில் சேர்வதற்கு ஒரு காரணம் இருந்தது. சிறீ லங்கா இராணுவம் தமிழர் பிரதேசம் மீது நில ஆக்கிரமிப்பு இராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்ட காலத்தில், மக்கள் தமது உடமைகளை அந்தந்தப்படியே கைவிட்டு பயத்தில் அகதிகளாக ஓடியபின், அவர்களது வீடுகளினுள் சென்று கருணா திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்தான். இவன் தண்ணீர் இறைக்கும் மின்சார மோட்டார்களை திருடுவதில் கைதேர்ந்தவன். ஊரில் திடீரென சில கிழமைகளில் பலரது கிணற்று தண்ணீர் தொட்டிகளில் மின்சார மோட்டார்கள் களவுபோனதும் அதை அவர்கள் இயக்கத்திடம் சென்று முறையிட்டனர். இறுதியில் கருணா கையும் களவுமாகப் பிடிபட்டான். அப்போது இவனுக்கு தண்டனையாக இயக்கம் இவனது தலையை மொட்டையடித்து, தலைக்கு குங்குமம் பூசி, திருடிய ஒரு மின்சார மோட்டாரை தோளில் தூக்கவைத்து ஊரை சுற்றிவரச் செய்தது. தான் மக்கள் முன்னிலையில் திருடனாகக் காட்டப்பட்டுவிட்டேன் என கருணா மனதில் அவமானப்பட்டான். இயக்கத்தை பழிவாங்குவதற்கு நல்ல ஒரு சந்தர்ப்பத்திற்காக காத்திருந்தான். இந்திய ஆக்கிரமிப்பு இராணுவம் தமிழீழத்தில் கால்பதித்து, தமிழ் மக்களை அழிக்கும் போரில் ஈடுபடத்தொடங்கியதும், ஈப்பி கூலிகுழு தனது தேவையைப் பூர்த்திசெய்வதற்கு பொருத்தமாக இருந்ததனால் அதில் கருணா இணைந்துவிட்டான். இன்றுவரை தனது தனிப்பட்ட எதிரிகள், இயக்கத்திடம் தனது மோட்டார் திருட்டைபற்றி முறையிட்டவர்கள், இயக்க ஆதரவாளர்கள் என சுமார் இருபதிற்கும் மேற்பட்டவர்களை சுட்டுக் கொன்றிருந்தான். பல வீடுகளில் ஆயுதமுனையில் நகைகளை, பணத்தை கொள்ளையடித்திருந்தான். சில பெண்களை கற்பழித்தும் இருந்தான். இவனது அட்டகாசங்கள் ஊரில் அளவுக்கு மிஞ்சி சென்றது. ஆனால், இந்திய இராணுவத்திற்கோ கருணா செல்லப்பிள்ளையாக இருந்தான். கருணாவிற்கு அன்னியோன்யமான சில இந்திய இராணுவ சிப்பாய்கள் பாடசாலை மாணவிகளிடம் கருணா ஒரு சிறந்த ஆண்மகன் என்றும் அவனை திருமணம் செய்யுமாறும் வழிதெருவில் இடைமறித்து சோதனை செய்யும் போது கூறினார்கள்.

அருவி: "எங்க நாயக் காணேல, இன்னும் எவ்வளவு நேரம் நிற்கிறது?"

நிதர்சன்: "நிண்டு பாப்பம், ஆமி வராட்டி பிரச்சன இல்லதானே?"

அருவி: "ஆமி அங்காளப் பக்கத்தால வந்து ரயில் பாதையடியில நிக்கிற அவேக்கு ஏதாவது பிரச்சனை வந்தா.."

நிதர்சன்: "அண்ணமார் பாத்துக்கொள்ளுவீனம்... ஏதாவது சூட்டுச் சத்தம் கேட்டா எங்கள ஓடச்சொல்லிச் சொன்னவேள்..."

அருவி: "ஆ... அங்க வாறாங்கள்.."

நிதர்சன்: "சரி சைக்கிளில ஏறு நாங்கள் மெல்ல மெல்ல போவம்.."

கருணா: (தூரத்தில் இரு இளைஞர்கள் சைக்கிளில் செல்வதை கண்டுவிட்டு) "மச்சான் இண்டைக்கு ரெண்டு பேர் ஆப்பிட்டுச்சீனம்.. வாகனத்த உடன அவேண்ட பக்கம் விடு..."

அருவி: "அவங்கள் கண்டுட்டாங்கள், சரி சைக்கிளில இறுக்கி உலக்கு.."

நிதர்சன்: "நினைச்ச மாதிரி எங்கள துரத்துறாங்கள்... ம் நீயும் என்னோட சேந்து இறுக்கி பெடலப்போடு"

அருவி: "வாங்கோடி ராசா.. இண்டைக்கு உங்களுக்கு வட்டியும் குட்டியுமா தாறமடி பூச"

கருணா: (அருவியும், நிதர்சனும் இவர்களைக் கண்டு ஓடுவதைகண்டுவிட்டு)"ரயில் பாதப் பக்கம் போறாங்கள்! விடாத உடன போ!"

வாகனச்சாரதி: "அண்ண இதுக்க போறது பயமில்லையே? இந்த ஏரியால எல்.டீ.டீயி சிலது ஒளிஞ்சு நிப்பாங்கள்"

கருணா: "ஒரு பயமும் இல்ல, உடன போடா... எல்.டீ.டீயியும் மண்ணாங்கட்டியும்... இப்ப நாங்கள் உந்த ரெண்டு பெடியங்களையும் பிடிச்சு எங்கட குரூப்பில சேக்கத்தானே போறம்? ஏன் எந்த சேரமும் எல்.டீ.டீயப் பத்தி நினைச்சு பயப்படுறாய்?"

வாகனச்சாரதி: "இந்தா பாருங்கண்ண பறந்து பிடிக்கிறன் இப்ப ஓடுற பெடியள" (பிக் அப் வாகனம் சீறிக்கொண்டு அருவியையும், நிதர்சனையும் துரத்துகின்றது..)

அருவி: "டேய் ரெயில் பாத வந்திட்டுது... இனி அண்ணமார் பாத்துக்கொளுவீனம்.. சைக்கிளவிட்டுப் பாய் உடன.."

நிதர்சன்: "ம் நீ பாய் முதலில... ஈப்பி பின்னால வரூது.. உடன ஓடு"

(இருவரும் சைக்கிளை தெருவோரம் தூக்கி எறிந்துவிட்டு அருகிலிருந்த பற்றையினுள் பாய்ந்து தப்பி ஓடுகின்றார்கள். இந்த நேரம் ஈப்பி கூலிக்குழுவின் வாகனமும் ரயில் பாதையை வந்தடைந்துவிட்டது. இவர்களின் வரவுக்காக பற்றையினுள் பதுங்கி இருந்து காத்திருந்த ஈழவனின் படையணி கூலிக்குழு மீது அதிரடித்தாக்குதலை தொடங்குகின்றது..)

ஈழவன்: "ம் துவங்கு... அடிடா மவனே.." (டொம் டொம் டொம் டொம் டொம் டொம்...)

கூலிக்குழு: "ஆ அம்மா... எல்.டீ.டீயி. எல்.டீ.டீயி... வாகனத்த திருப்பு... சுடு சுடு.." (டுமீல்...)

சஜீவன்: "நாசமாப் போங்கோடா நாய்களே.." (அடுத்தடுத்து கைக்குண்டுகளை ஈப்பி கூலிக்குழுவின் பிக் அப் வாகனம் மீது வீசுகின்றான்..)

கூலிக்குழு: "ஐயோ..."

புத்தன்: "அடி... அடி.. அடி... ஒருவன் பாஞ்சு தப்பி ஓடுறான்.." (டக் டக் டக்..)

மருதங்கேணி: "அடியடா டேய் விடாத..." (டுமீல்....)

ஆதி: "அண்ண பிக் அப்புக்கு கீழ ஒருவன் கவர் எடுத்து இருக்கிறான்.." (டக் டக் டக்)

சஜீவன்: "நாசமாப் போக!" (கைக்குண்டை எறிகின்றான்..)

சில நிமிடங்களில் துரோகி கருணா உட்பட பிக் அப் வாகனத்தில் வந்த ஆறு ஈப்பி கூலிக்குழுவினரும் கொல்லப்படுகின்றனர். ஈழவன் படையணி அதிரடித் தாக்குதல் செய்ததால் கூலிக்குழுவிடம் இருந்து எதிர்ப்பு அதிகளவில் ஒன்றும் வரவில்லை. கூலிக்குழு தம்மைச் சுற்றி என்ன நடைபெறுகின்றது என சுதாகரிப்பதற்கு கூட நேரம் கிடைக்கவில்லை. எல்லாம் இரு நிமிடங்களில் நடந்துமுடிந்தது. ஈழவன் பகுதியில் எதுவித இழப்பும் இல்லை. கைப்பற்றிய ஆயுதங்களுடனும், வெற்றிக் களிப்புடனும் தமது மறைவிடத்திற்கு வந்துசேர்கின்றனர். இதேவேளை அருவியும், நிதர்சனும் வேறு பாதையூடாக தமது இருப்பிடங்களுக்கு திரும்புகின்றனர்.

அருவி: "அந்த மாதிரி அடி மச்சான்.."

நிதர்சன்: "ஒருமாதிரி கருணாவுக்கு சங்கு ஊதிப்போட்டம்"

அருவி: "என்ர வாழ்க்கையில நான் செய்த ஒரு உருப்படியான காரியம்"

நிதர்சன்: "துரோகிகள அழிக்கிறதுக்கு உதவி இருக்கிறம். சந்தோசமா இருக்கு.."

அருவி: "சனியன் துளைஞ்சான்.."

நிதர்சன்: "ஆனா இனி நாங்கள் கவனமா இருக்க வேணும்.. ஆமி வந்து இனி என்ன அட்டகாசம் செய்யுறானோ தெரியாது"

அருவி: "ம் ரெண்டு நாளைக்கு நாங்கள் கொஞ்சம் கவனமா இருக்கவேணும்"

கூலிக்குழுவினரின் நான்கு பிணங்கள் இரத்த வெள்ளத்தில் பிக்அப் வாகனத்தினுள் இருக்கின்றது. இரு பிணங்கள் தெருவில் விழுந்து கிடக்கின்றன. தெருவில் இரத்த வெள்ளம்.. சுமார் ஒரு மணித்தியாலத்தின்பின் இந்திய இராணுவம் இந்தப்பகுதிக்கு வந்து சேர்கின்றது. ஊர் இராணுவத்தினால் சுற்றி வளைக்கப்பட்டு முற்றுகையிடப்படுகின்றது. ஈப்பி கூலிக்குழுவினால் பொதுமக்கள் கண்டபடி தாக்கப்படுகின்றனர். பலர் விசாரணைக்காக பிடித்துச் செல்லப்படுகின்றனர். கருணா கொல்லப்பட்ட செய்தி காட்டுத் தீயென அயல் ஊர்களிற்கும் பரவுகின்றது. யமுனாவின் தோழர்களினால் கூலிக்குழுவினர் கொல்லப்பட்டமையால் ஆத்திரமுற்ற இந்திய இராணுவத்தினர் யமுனாவை தடுப்புமுகாமில் வைத்து கண்டபடி தாக்கி சித்திரவதை செய்கின்றனர். செய்தியை அறிந்த ஈழப்பிரியன் குடும்பத்தினர் தமக்கு ஈப்பி கூலிக்குழுவினால் ஏதாவது ஆபத்து ஏற்படக்கூடும் என்ற பயத்தில் உடனடியாக நாளை கொழும்பிற்கு செல்வதற்கு ஆயத்தம் செய்கின்றனர்.

Link to comment
Share on other sites

இனிய மாலைப் பொழுதில் வானவில்லும், சுட்டியும் தெருவில் நின்று கிரிக்கற் விளையாடிக்கொண்டு இருந்தார்கள். அனிதாவும், பிரியசகியும் சினேகிதி வீட்டுக்கு சென்றிருந்தார்கள். லிசான் வியாபாரத்தின் நிமித்தம் இந்தியாவிற்கு சென்றுவிட்டான். இம்முறை வன்னிமைந்தனும் லிசானுடன் சென்றிருந்தார். சாணக்கியன் பல்கலைக்கழகத்திற்கு போய்விட்டான். தமிழ்தங்கையும், இனியவளும் ரூபவாஹினியில் நிகழ்ச்சிகள் பார்த்துக்கொண்டு இருந்தனர்.

வானவில்: "நாளைக்கு காலம்பற தூயவன் வாறான். சந்தோசமா இருக்கு.."

சுட்டி: "ஓம் இனி எங்களோட சேந்து விளையாட இன்னொரால் கிடைச்சிருக்கு.."

வானவில்: "விதுவும் வந்தா இன்னும் நல்லா இருக்கும்"

சுட்டி: "அவன் இப்ப பள்ளிக்கூடம் மாறீட்டானாம். ஜவ்னா கிந்துவில படிக்கிறானாம்"

வானவில்: "எனக்கும் எல்லாம் தெரியும்.."

சுட்டி: "சரி போலப்போடு.." (டமார்... பந்து யன்னலில் வந்து அடிக்கிறது..)

தமிழ்தங்கை: "டேய் கிரவுண்டில போய் விளையாடுங்கடா.. இது யாற்றையோ வீடு.. கண்ணாடிய உடைச்சா பிறகு காசுகட்டவேணும்"

சுட்டி: "இனி அடிக்கேல.."

வானவில்: "நீ பள்ளிக்கூடத்தில எப்பவாம் ஜொயின் பண்ணப்போறாய்?"

சுட்டி: "இன்னும் ரெண்டு மாதத்தில அமெரிக்காவுக்கு போகப் போறம்.. அங்கபோய்ப் படிக்கலாம் எண்டு அப்பா சொன்னவர்"

வானவில்: "ம்.. உண்டபாடு ஒரே கொண்டாட்டம். உனக்கு அமெரிக்காவுக்கு போக விருப்பமா? எங்களவிட்டிட்டு போறது கவல இல்லையா?"

சுட்டி: "சரியான கவல.. ஆனா ஒண்டும் செய்யேலாதே?"

வானவில்: "அங்க அக்கா வாறா... "

சுட்டி: "கையில ஏதோ பெட்டி கொண்டு வாறீனம்.."

அனிதா: "சரியான பாரமா இருக்கு.. கைநோகிது"

பிரியசகி: "தாங்கோ, வீடு மட்டும் இனி நான் தூக்கிறன்"

அனிதா: "புத்தகங்களே இவ்வளவு பாரமா இருக்கு, இந்தச் சோதினைய எப்பிடி நான் படிச்சு பாஸ் பண்ணப்போறனோ... கடவுள்தான் காப்பாற்ற வேணும்"

பிரியசகி: "நானும் உங்களோட சோதின எடுக்கிறந்தானே? பிறகென்ன கவல?"

அனிதா: "அதில்ல... பயமா இருக்கு.."

பிரியசகி: "சினேகிதி பாஸ் பண்ணி இருக்கிறாதானே? எண்டபடியா நாங்களும் பாஸ் பண்ணலாம்"

அனிதா: "அவ நல்லா இங்கிலிஸ் செய்வா.."

பிரியசகி: "ஏன் நாங்கள் செய்யமாட்டமா? எங்கள் ரெண்டு பேருக்கும் ஓ.எலுக்கு இங்கிலிசுகு டீ வரேலையா?"

அனிதா: "ஆனா இந்த டோபல் சோதின அதவிட கஸ்டமாம்"

வானவில்: "அக்கா என்ன கையில பெட்டி?"

பிரியசகி: "சினேகிதி அக்கா நீயும் சுட்டியும் விளையாடுறதுக்கு கொஞ்ச கேம்ஸ் தந்தவ.."

வானவில்: "அப்ப தாங்கோ நான் தூக்கிறன்.." (பாரமான பெட்டியை வானவில் தூக்கிக்கொண்டு செல்கின்றான். சுட்டி பின்னால் ஓடுகின்றான்)

அனிதா: "பாவமக்கா அவன்.. ஏன் பொய் சொன்னீங்கள் கேம்ஸ் இருக்கெண்டு.."

பிரியசகி: "வீட்டில சாப்பிட்டுப்போட்டு சும்மாதானே இருக்கிறான்.. தூக்கட்டும்... எனக்கு கைநோகிது.."

வானவில்: (வீட்டுக்கு வந்து பெட்டியை திறந்து பார்த்துவிட்டு..) "என்ன ஒரே புத்தகமா இருக்கு?"

சுட்டி: "அக்கா உன்ன எமாத்திப்போட்டா " (சிரிப்பு...)

வானவில்: "வரட்டும் செய்யிறன் வேல..." (பெட்டியை குசினிக்குள் கொண்டு சென்று ஒளித்துவைக்கின்றான்..)

இனியவள்: "இதென்ன தம்பி பெட்டி? ஏன் குசியுக்க கொண்டு வந்தனீ?"

(பிரியசகியும், அனிதாவும் வீட்டினுள் வருகின்றனர்..)

பிரியசகி: "ஒரே களைப்பா இருக்கு. அம்மா கொஞ்ச கூல் டிரிங்க்ஸ் தாறீங்களே?"

தமிழ்தங்கை: "நாளைக்கு ஈழப்பிரியன் அங்கிள் வாறீனம். வீடு எல்லாம் ஒழுங்குபடுத்தியாச்சே?"

அனிதா: "ஓமம்மா சினேகிதியின்ர அம்மா எல்லாம் செய்து தந்தவ. அட்வான்ஸ் எல்லாம் பே பண்ணியாச்சு. லீஸ் எடுத்தாச்சு. தூயாவேள் நாளைக்கே அங்க போய் இருக்கலாம்."

இனியவள்: "நல்லநாள் பார்க்கவேணும். வந்ததும் வராததுமா புதுவீட்டுக்கு போறதே? அதுமட்டும் அவே எங்களோட இஞ்ச இருக்கட்டும்"

பிரியசகி: "ம் எங்க கொண்டுவந்த பெட்டியக் காணேல?"

இனியவள்: "குசினியுக்க ஏதோ கொண்டுபோனாங்கள்.."

வானவில்: "ஏமாத்திப் போட்டாய். உன்ன பிறகு கவனிக்கிறன்.."

பிரியசகி: "சரி போடா.."

வானவில்: "சரி போடி.."

இனியவள்: "தம்பி அக்காவோட அப்பிடி கதைக்ககூடாது.."

(தொலைபேசி மணி அடிக்கின்றது...)

அனிதா: "ஹலோ.."

ஈழப்பிரியன்: "ஹலோ நான் ஈழப்பிரியன்.."

அனிதா: "அங்கிள் எங்க நிக்கிறீங்கள்?"

ஈழப்பிரியன்: "வவுனியாவில நிக்கிறம், நாளைக்கு காலம்பற உங்க வந்துசேருவம்.."

அனிதா: "ஓ அப்பிடியா... நாங்கள் ரெயில்வே ஸ்டேசனுக்கு உங்கள கூப்பிட வருவம்.. இரவு டிரெயினிலதானே வாறீங்கள்?"

ஈழப்பிரியன்: "ஓமோம்... காலம்பற ஆறு சொச்சத்துக்கு உங்க நிப்பம் எண்டு நினைக்கிறன்.. நீங்கள் எல்லாரும் சுகமா இருக்கிறீங்களா?"

அனிதா: "எங்களுக்கு என்ன குறைச்சல்.. அங்க உங்கள் எல்லாருக்கும் என்ன பிரச்சனையோ எண்டு நினைச்சு பயந்துகொண்டிருந்தனாங்கள், தூயாவோட கதைக்கலாமா அங்கிள்?"

ஈழப்பிரியன்: "இல்ல நான் தனிய வந்தனான். இஞ்ச ஒரு கடையில இருந்து போன் பண்ணினனான்.."

அனிதா: "அம்மா கதைக்கப்போறாவாம்..."

தமிழ்தங்கையும், ஈழப்பிரியனும் தங்கும் வீடு பற்றியும், வேறு முக்கிய விடயங்கள் பற்றியும் உரையாடுகின்றனர். வானவில்லும், சுட்டியும் திரும்பவும் விளையாடச் செல்கின்றனர். அனிதா குளிக்கச் செல்கின்றாள். பிரியசகியும், இனியவளும் தொலைக்காட்சி பார்க்கின்றனர்.

Link to comment
Share on other sites

அதிகாலை மூன்று மணியிலிருந்து ஊரில் உள்ள நாய்கள் எல்லாம் சேர்ந்து ஒன்றாகக் குரைத்து அட்டகாசம் செய்யத் தொடங்கிவிட்டன. அடிக்கடி வாகன இரைச்சல்கள் கேட்டது. "டக் டக் டக்" என சப்பாத்துக் கால்களுடன் தெருவில் இந்திய இராணுவம் நடந்து செல்லும் ஓசை அரைத் தூக்கத்திலிருந்த சிவராஜாவின் காதுகளில் தெளிவாகக் கேட்டது. சிவராஜா மடத்தடி முருகன் கோயிலிற்கு அருகில் குடும்பத்துடன் வசித்து வந்தார். சிவராஜாவுக்கு வயது அறுபது, மனைவி தமிழினி வயது ஐம்பது, பிள்ளைகள் வெண்ணிலா வயது இருபத்துநான்கு, ஜனனி வயது இருபது, டண் வயது பதினாறு, விசால் வயது பதினைந்து. சிவராஜா சிறீ லங்கா காவல்துறையில் பணியாற்றி ஓய்வுபெற்றபின் தற்போது ஊரில் தோட்டம் செய்து வந்தார்.

தமிழினி: (இரகசியமாக சிவராஜாவின் காதுகளினுள்) "அப்பா எழும்புங்கோ... வீட்டுக்கதவில யாரோ தட்டி சத்தம் கேக்கிது.."

சிவராஜா: (இரகசியமாக) "நான் முழிச்சுத்தான் இருக்கிறன். ஆமி போல இருக்கு. பேசாம இரு..."

தமிழினி: (இரகசியமாக) "இண்டைக்கு என்ன கூத்து ஆடப்போறாங்களோ தெரியாது... கடவுளே.."

நாய்களின் சத்தம்கேட்டு தூக்கம் கலைந்த அனைவரும் கண்களை மூடியபடி ஆனால் காதுகளைக் கூர்மையாக்கி வீட்டில் வருகின்ற ஓசைகளைக் கேட்டுக்கொண்டு இருந்தனர். வெண்ணிலா மட்டும் எதையும் அறியாது தொடர்ந்து தூங்கிக்கொண்டு இருந்தாள்.

டண்: (இரகசியமாக) "டேய் விசால் முழிச்சே இருக்கிறாய்?"

விசால்: (இரகசியமாக) "ஓம்"

டண்: (இரகசியமாக) "யாரோ கதவத் தட்டின சத்தம் உனக்கு கேட்டதே?"

விசால்: (இரகசியமாக) "ம் ஆமி போல இருக்கு, சத்தம் போடாத"

(பக்கத்து கட்டிலில் படுத்திருந்த ஜனனி மெதுவாக சத்தம் போடாமல் நிலத்தில் நடந்து தம்பிமார் உள்ள கட்டிலிற்கு செல்கின்றாள்)

ஜனனி: (இரகசியமாக) "டேய் முழிச்சே இருக்கிறாய்?"

டண்: (இரகசியமாக) "ஓம் சத்தம் போடாத"

ஜனனி: (இரகசியமாக) "யாரோ யன்னலடியில நிக்கிறமாதிரி இருக்கு.."

டண்: (இரகசியமாக) "ஆமிபோல இருக்கு.."

ஜனனி: (இரகசியமாக) "சரி தள்ளிப்படு, எனக்கு அங்க படுக்க பயமா இருக்கு.."

நாய்களின் தொடர்ச்சியான சத்தங்களால் வெண்ணிலாவும் எழுந்துவிடுகின்றாள். தற்போது அவளுக்கும் தனது கட்டிலிற்கு அருகில் உள்ள யன்னலடியில் யாரோ மறைந்து நிற்பது போன்ற உணர்வு தோன்ற, மெதுவாகத் திரும்பி ஜனனியைத் தேடுகின்றாள். ஜனனியைக் காணவில்லை. பயம் அதிகரிக்கின்றது. கண்களை இன்னும் சற்று விரித்து பக்கத்து கட்டிலை நோட்டமிடுகின்றாள். பின் மெதுவாக எழுந்து பக்கத்து கட்டிலிற்கு சென்று அங்கு மற்றவர்களுடன் சேர்ந்து படுக்கின்றாள்.

டண்: (இரகசியமாக) "விசால் கொஞ்சம் தள்ளிப் படு.. அக்காவுக்கு இடம் காணாது.."

வெண்ணிலா: (இரகசியமாக) "கவனிச்சனியே, யன்னலுக்கு பின்னால வெளியால யாரோ நிக்கிறாங்கள்"

ஜனனி: (இரகசியமாக) "ஆமி"

கதவடியில் அடிக்கடி "டக் டக்" என சத்தம் கேட்பதும் பின் அமைதி நிலவுவதும் காலை ஆறு மணிவரை தொடர்ந்தது. வீட்டில் அனைவரும் ஒவ்வொரு நொடிப் பொழுதையும் பீதியுடன் கழித்தனர். எப்போது விடியும் என அனைவரும் ஏங்கிக்கொண்டு இருந்தனர். சரியாக காலை ஆறுமணியளவில் கோயில் காண்டா மணியோசை "டங் டங் டங்" என மிக மெதுவாகக் கேட்டது. சுமார் ஒரு நிமிடத்தின் பின் திரும்பவும் அதேமாதிரி ஓசை. இதேபோல் திரும்பவும் மணியோசை...

சிவராஜா: "என்ன இந்த நேரத்தில மணியடிக்கிது? ஐயர் ஏழு மணிக்குத்தானே பூசைக்கு வருவார்?"

தமிழினி: "மணிச்சத்தம் ஏன் இவ்வளவு மெல்லமா கேக்கிது?"

சிவராஜா: "உவங்கள் ஆமி என்னவும் விளையாடுறாங்களோ தெரியாது"

திடீரென துப்பாக்கி வேட்டுச் சத்தங்கள் கேட்கின்றது.. சுவர், கண்ணாடிகள் அதிர்கின்றது... சுமார் பத்து நிமிடங்கள் துப்பாக்கி வேட்டுக்கள் தொடர்கின்றது... அனைவரும் சுவாமி அறையினுள் ஒன்றாக இருந்தனர். தமிழினி மனதினுள் திருவாசகம் பாடினாள். சிவராஜா மனதினுள் "சிவாயநம" என்று கூறிக்கொண்டு இருந்தார். வெண்ணிலா, ஜனனி, டன், விசால் ஆகியோர் ஆளையாள் பார்த்து முழுசிக் கொண்டு அமைதியாக இருந்தார்கள். பயத்தின் காரணமாக கதைப்பதற்கு வார்த்தைகள் எதுவும் வரவில்லை. சிறிது நேரத்தில் மயான அமைதி. சத்தம் ஒன்றையும் காணவில்லை. சுமார் ஏழுமணியளவில் வீட்டு கதவுகள், யன்னல்கள் திறக்கப்படுகின்றன.

டண்: "ஆமி போட்டான் போல இருக்கு"

விசால்: "சனியங்கள் காலம்பிற நித்திரையக் குழப்பிப் போட்டாங்கள்"

ஜனனி: (யன்னலினூடாகப் பார்த்துவிட்டு ) "ஆமிதான் வந்திருக்கிறான். நிலத்தில சப்பாத்துக் கால் அடையாளம் இருக்கு"

தமிழினி: "எல்லாரும் உடன முகங்களக் கழுவி குளிக்கிறெண்டா குளியுங்கோ.. திரும்பவும் வாறாங்களோ தெரியாது"

இவ்வாறு சொல்லிக் கொண்டு இருக்கும்போது கூலிக்குழுவின் இரண்டு வாகனங்கள் வருகின்றது...

டண்: "ஈப்பி... ஈப்பி வருது.."

(பிள்ளைகள் எல்லோரும் அறையினுள் ஓடி ஒளிகின்றனர்..)

தமிழினி: "இவங்கள் ஏன் எங்கட வீட்ட வாறாங்கள்?"

சிவராஜா: (மனதினுள்) "இண்டைக்கு எங்களுக்கு என்ன கஸ்டகாலமோ.."

ஈப்பி கூலிக்குழு சிவராஜா வீட்டை முற்றுகையிடுகின்றது.

ஈப்பி 01: (உரத்த சத்தமாக) "யாரடா வீட்டில இருக்கிறது? வெளியில வாங்கடா"

தமிழினி: "என்ன தம்பியவை பிரச்சன?"

ஈப்பி 02: "பிரச்சனையோ? என்ன ஒண்டும் தெரியாத மாதிரி நடிக்கிறியள்?"

தமிழினி: "சத்தியமா எங்களுக்கு ஒண்டும் தெரியாது.."

ஈப்பி 01: "உங்கட கோயிலுக்க இருந்து ஆயுதங்கள் எடுத்து இருக்கிறம்.."

தமிழினி: "ஐயோ எங்களுக்கு ஒண்டும் தெரியாது.."

ஈப்பி 02: "காலம்பற வெடிச்சத்தம் கேட்டது தானே? இண்டைக்கு காலம்பற உங்கள மாதிரி எல்.டீ.டீ க்கு சப்போட் பண்ணின நாலு பேரூக்கு மண்டையில போட்டு இப்ப அவேள் மதகுக்கு கீழ படுத்து இருக்கிறீனம்.."

ஈப்பி 01: "இப்ப உண்மையச் சொல்லாட்டி உங்களுக்கும் மண்டையில போடப்போறம்"

தமிழினி: (பயம்..) "ஐயோ எங்களுக்கு ஒண்டும் தெரியாது"

ஈப்பி 02: "யாரடா அவன் கதவுக்கு பின்னால ஒளிஞ்சு நிக்கிறது? வெளியில வாடா"

சிவராஜா: "என்ன தம்பி பிரச்சனை?"

ஈப்பி 01: "மச்சான் இவர்தான் ஆள், பிடியடா ஆளை.."

இரு கூலிக்குழு உறுப்பினர்கள் சிவராஜாவை பலாத்காரமாக இழுத்துச் சென்று தமது வாகனத்தில் ஏற்றுகின்றார்கள். சிவராஜா கண்களும், கைகளும் கட்டப்பட்ட நிலையில் வாகனத்தினுள் குப்புறக் கிடத்தப்படுகின்றார். தமிழினியும், பிள்ளைகளும் சத்தமிட்டு ஒப்பாரியிட்டு அழுகின்றனர். ஈப்பியின் வாகனங்கள் நகர்கின்றது. விசால் "அப்பா, அப்பா"என கத்தியபடி வாகனத்தின் பின்னால் சிறிது தூரம் துரத்திக்கொண்டு ஓடிவிட்டு திரும்பி வருகின்றான்.

ஜனனி: (அழுதவாறு) "அப்பாவச் சுடப்போறாங்களோ தெரியாது.."

தமிழினி: "ஆ எண்ட ஐயோ.. " (மயங்கி விழுகின்றாள்)

வெண்ணிலா: (அழுதவாறு)"தண்ணி கொஞ்சம் கொண்டுவா.. அம்மா மயங்கீட்டா.."

டண்ணும், விசாலும் தாயைத் தூக்கிச் சென்று கட்டிலில் கிடத்துகின்றனர்.

டண்: (நடுங்கியபடி) "இப்ப என்ன செய்யுறது?"

வெண்ணிலா: (அழுதவாறு) " நான் போய் மாமாவுக்கு சொல்லி ஏதாவது உதவி கேக்கவே?"

டண்: "இல்ல, நீ போகாத, நான் போறன்... ரோட்டில ஆமி நிப்பாங்கள்..."

ஜனனி: (அழுதவாறு) "ஒருவரும் வெளியில போகவேணாம்.. உன்னையும் ஈப்பி பிடிச்சா என்ன செய்யுறது..."

எதுவும் செய்ய முடியாத நிலமையில் அனைவரும் வீட்டினுள் அழுதபடி இருக்கின்றனர். தமிழினி மயக்கம் தெளிந்து எழுகின்றாள்.

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

நெருங்கிய உறவினர் ஒருவரின் மரணவீடு ஒன்றில் கலந்துகொள்வதற்காக சாத்திரி யாழ்நகரிற்கு வந்தசமயம் மடத்தடி முருகன் கோயிலில் பூசைசெய்தபோது முன்பு அறிமுகமான இந்தியஇராணுவ தலைமைஅதிகாரி ஒருவனின் கண்களில் தற்செயலாக பட்டுவிட்டார். உடனடியாகவே சாத்திரியை இனங்கண்டுகொண்ட சீக்கிய அதிகாரி சாத்திரியை கைதுசெய்து, பல்வேறு சித்திரவதைகள் மூலம் விசாரணை செய்தபின் இறுதியாக காங்கேசன்துறை தடுப்புமுகாமிற்கு அனுப்பிவைத்தான். இதேவேளை, ஈப்பி சிவராஜாவை சுட்டுக்கொல்வதற்காக வாகனத்தில் கடத்திக்கொண்டு சென்றசமயம் அவ்வழியால் ரோந்து வந்த வேறு ஒரு இந்திய இராணுவ பட்டாளியனின் தலையீடு காரணமாக சிவராஜா ஈப்பியின் பிடியில் இருந்து மீட்கப்பட்டு, அவரும் காங்கேசன்துறை தடுப்பு முகாமிற்கு விசாரணைகளிற்காக அனுப்பிவைக்கபட்டார். எதிர்பாராதவிதமாக யமுனாவும், சாத்திரியும், சிவராஜாவும் ஒன்றாக ஒரேகூண்டில் அடைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டார்கள். யமுனாவிற்கும், சாத்திரிக்கும் உடம்பில், முக்கியமாக முகத்தில் அகோரமாக தாக்கப்பட்டு சித்திரவதைகள் செய்யப்பட்டிருந்ததால் ஆரம்பத்தில் ஒருவரை மற்றவரால் இனம்காண முடியவில்லை. ஆனால், சிவராஜாவிற்கு அடிகள் குறைவாக விழுந்திருந்ததால், அவர் முதலில் சாத்திரியையும், பின்னர் குரலைவைத்து யமுனாவையும் இனங்கண்டுவிட்டார்.

யமுனா: "சாத்திரி அண்ண உதென்ன கோலம்? கடைசியில நீங்களும் இஞ்சவந்து சேந்திட்டியள்..." (முதலில் ஆச்சரியம்... பின்னர் சிரிப்பு..)

சாத்திரி: ""எல்லாம் உந்தகோதாரி பிடிச்ச தலைப்பாவால வந்தது... (எரிச்சல்...)

யமுனா: "யார் குடும்பியிண்ட கையிலையே மாட்டுப்பட்டனீங்கள்?" (சிரிப்பு)

சாத்திரி: "ம்.. தடியன் நான் யாழ்ப்பாணம் டெளவுனுக்குபோன நேரம் கழுகுக்கண்ணால கண்டுபிடிச்சிட்டான்.."

சிவராஜா: "நல்லகாலம் நீங்கள் ஈப்பியிட்ட மாட்டுப்படேல, உங்களையும் சாக்காட்டி இருப்பாங்கள்..."

யமுனா: "நீங்கள் எங்க இங்காலப் பக்கம் அங்கிள்?"

சிவராஜா: "எல்லாம் ஈப்பி நாய்களின்ற வேல... என்னச்சுட்டு இருப்பாங்கள்... கடவுள் அருளால தப்பி இதுக்க வந்திட்டன்..."

(இந்திய இராணுவ சிப்பாய் ஒருவன் வந்து ஒருவருடன் மற்றவர் கதைக்ககூடாது என எச்சரிக்கை செய்துவிட்டு செல்கின்றான்)

சாத்திரி: (தலையைக் குனிந்தபடி, மூக்கைப் பொத்திக்கொண்டு மெல்ல முணுமுணுக்கிறார்) "சனியனின்ற நாத்தம் தாங்கேல...."

யமுனா: (தலையைக் குனிந்தபடி, முணுமுணுக்கிறான்) "எங்கட உடம்பில இருந்துவாற ரத்தவாடய மேவி நாறுதெண்டா பாருங்கோ, உவன் எத்தின வருசமா குளிக்காம இருக்கிறானோ தெரியாது"

சிவராஜா: (சிரிப்பு வருகின்றது... சிரித்தால் காவலிற்கு நிற்கும் இராணுவச் சிப்பாய் திரும்பவும் வருவான் என்றபயத்தில் சொண்டைக் கடித்தபடி சிரிப்பை அடக்குகின்றார்...)

பல சிரமங்களிற்கு மத்தியில் கல்விகற்ற முகி மிகச்சிறப்பான பேறுகளுடன் யாழ் மருத்துவபீட பரீட்சையில் சித்தியடைந்திருந்தாள். இதற்காக தமக்கு ஒரு விருந்து தரவேண்டும் என மணிவாசகன் நகைச்சுவையாகக் முகியிடம் கூற, முகி உண்மையிலேயே தான் கற்பதற்கு உதவிபுரிந்த மதனையும், மணிவாசகனையும் வீட்டில் பகல்போசன விருந்திற்கு அழைத்திருந்தாள். தேவகி சமயலறையில் இயந்திரமாக வேலை செய்துகொண்டிருந்தாள். சின்னப்புவும், முகியும், ரசிகையும், விதுவும் கரம்போர்ட் விளையாடிக்கொண்டு இருந்தனர்.

தேவகி: (கத்துகின்றாள்...) "அப்பா, நீங்களும் பிள்ளைகளோட சேந்து கூத்து அடிக்காமல் அடுப்படியில வந்து எனக்கு கொஞ்சம் உதவி செய்யுங்கோ.."

சின்னப்பு: "மெல்லக் கதையும், நீர் கத்திற கத்தில பயந்து உமக்கு உதவிசெய்ய பக்கத்துவீட்டு அப்பா ஓடிவரப்போறார்..."

முகி: (சிரிப்பு) "ஏனப்பா நீங்கள் அம்மாவ லவ்பண்ணித்தானே கலியாணம் செய்தனீங்கள்? அம்மா அப்பவும் இப்பிடியே கத்துறவ?"

சின்னப்பு: "ஓ... சோடா எண்டு நினைச்சு தகப்பன் செய்துவச்சிருந்த குருவிலேகியம் ஒண்ட சின்னனில குடிச்சுப்போட்டாவாம்... அதுதான் இப்பிடி சத்தம் வருது.."

தேவகி: (கோபம்... குசினியில் இருந்து வெளியில் வருகிறாள்..) "எண்ட அப்பாவப் பத்தி கதைச்சது காணும்! இப்ப எழும்பி தேங்காய் ஒண்டு உரிச்சு தாங்கோ. பால்புழிய தேங்காய் இல்ல.."

விது: (கோபம்) "அம்மா விளையாட்ட குழப்ப வேணாம். அப்பா எழும்பினா திரும்ப வரமாட்டார்.. நான் உங்களுக்கு தேங்காய உரிச்சுதாறன்.."

சின்னப்பு: "கவனம்... கத்தியால உரிக்காம அலவாங்கால உரி... நீ வரும்மட்டும் நாங்கள் விளையாடாம இருக்கிறம்.."

விது: "இல்ல எனக்காக முகி அக்கா அடிப்பா..."

ரசிகை: "அக்கா உண்ட ஆக்கள் எப்ப வருவீனம்?"

முகி: "பதினொரு மணிக்கு வருவமெண்டு சொன்னாங்கள்.. இப்ப எங்க நிக்கிறாங்களோ தெரியாது!"

சின்னப்பு: "மணிவாசகன் இருக்க ரூம் ஒண்டு தேடித்திரியுறதா சொன்னனி... ரூம் கிடைச்சிட்டுதே?"

முகி: "இல்லையப்பா... இன்னும் தேடிக்கொண்டு இருக்கிறார்!"

தேவகி: "நல்ல பெடியனா இருக்கு. வேணுமெண்டா எங்கட வீட்டில இருக்கிற முன்ரூம குடுப்பமே?"

சின்னப்பு: "நானும் அதத்தான் யோசிச்சனான். இந்தப் பிரச்சனையான நேரத்தில முகியுக்கும் சேந்து படிக்க உதவியா கொஞ்சம் இருக்கும்.."

ரசிகை: "அவரிண்ட ஊர் எங்கையாம் அக்கா இருக்கு?"

முகி: "பட்டிக்களோ.."

தேவகி: "சீபா குலைக்கிது... கேட்டில யார் எண்டு பார்..."

முகி: "நான் பார்க்கிறன்.."

(மதனும், மணிவாசகனும் வருகின்றனர்... முகி வாசலிற்கு சென்று வரவேற்கின்றாள்.)

இன்னிசையும், வானவில்லும் பிரிட்டிஷ் கவுன்சிலில் ஆங்கில வகுப்பு முடிந்து பேரூந்தில் ஏறுவதற்காக பம்பலப்பிட்டி சந்தி நோக்கி நடந்துசெல்லும்போது இடைவழியில் இன்னிசையின் மாமா ஜஸ்டின் காரில் வருகின்றார். ஜஸ்டின் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் மருத்துவராக பணியாற்றி வந்தார். இன்னும் திருமணம் செய்யவில்லை. பெற்றோர் யாழ்ப்பாணம் நல்லூரில் வசித்து வந்தனர். ஜஸ்டினின் தாயார் பெருத்த சீதனத்துடன் மகனிற்கு நன்கு படித்த மணமகளை தேடிக்கொண்டு இருந்தார். கடந்த இரண்டு கிழமைகளாக உதயன், மற்றும் வீரகேசரி நாளிதழ்களில் மணமகள் தேவை பகுதியில் ஜஸ்டினிற்கு பெண் தேடி தாயார் பிரசுரித்திருந்த விளம்பரம் வெளியாகிக்கொண்டிருந்தது. திருமண விளம்பரம் பின்வருமாறு எழுதப்பட்டிருந்தது.

"1958 இல் பிறந்த, நற்குணங்கள் மிக்க, அழகிய, சிவந்த நிறமுடைய, கொழும்பில் டாக்டராகப் பணியாற்றும் உயர்ந்த குடும்பத்தைச் சேர்ந்த தனது புதல்வனுக்கு தாயார் மிகவும் படித்த, அழகான, நற்குணங்கள் மிக்க உயர்ந்த குடும்பத்தை சேர்ந்த, செவ்வாய்க் குற்றமற்ற மணமகளை எதிர்பார்க்கின்றார். மணமகள் டாக்டராக இருப்பது விரும்பத்தக்கது. திருமணத்தின்பின் மணமகள் வெளிநாடு செல்வதற்கு ஆயத்தமாக இருக்கவேண்டும். சீதனம் எதிர்பார்க்கப்படும். மேலதிக தொடர்புகளிற்கு:.."

தனது திருமண விளம்பரம் பத்திரிகையில் பிரசுரிக்கபட்ட விடயம் ஜஸ்டினுக்கு தெரியாது. மேலும், சாதகம், சாதி, சீதனம் விடயங்களில் ஜஸ்டினுக்கு உடன்பாடும் இல்லை. படிப்பில் கண்ணாக இருந்ததால் மிகவும் கற்ற, அழகிய, செல்வந்த பெண்களுடன் பல சந்தர்ப்பங்கள் வலிய வந்து கிடைத்தபோதும் ஜஸ்டின் காதல் லீலைகளில் ஈடுபட முயற்சிக்கவில்லை. ஜஸ்டினை தமது மருமகனாக்குவதற்கு அவரது பல உறவினர்கள் திரைமறைவில் பல திட்டங்கள் தீட்டி தம்மிடையே போட்டி போட்டுக்கொண்டு இருந்தனர். புலமைப் பரிசில் பெற்று விரைவில் அமெரிக்காவுக்கு செல்வதற்கு ஜஸ்டின் தயாராக இருந்தார். இதனால் கலியாணச் சந்தையில் இவரின் விலை பல மடங்கு உயர்ந்துவிட்டது. ஜஸ்டினைப் பற்றி அறிந்த கொழும்பில் உள்ள பிரபல நகைவியாபாரி ஒருவர் நேற்று ஜஸ்டினின் தாயாருடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு, தனது ஒரே ஒரு டாக்டர் மகளிற்கு ஜஸ்டினை சுமார் ஐம்பது லட்சம் ரொக்கப்பணம், மற்றும் கொழும்பில் ஒரு வீடு, கடை, யாழ்ப்பாணத்தில் ஒரு வீடு, காணிகள், மற்றும் நகைகளிற்கு விலைபேசி இருந்தார்.

ஜஸ்டின்: (இன்னிசையைக் கண்டுவிட்டு காரை தெருவோரமாக நிறுத்துகின்றார்..)

இன்னிசை: (மாமாவைக் கண்டு முதலில் பயம்..) "எங்க இந்தாள் இதுக்கில நிக்கிது..."

வானவில்: "யார் தெரிஞ்சவரே? கார நிப்பாட்டிப்போட்டு உம்மத்தான் பாத்துகொண்டு இருக்கிறார் போல இருக்கு.."

இன்னிசை: "ஓம் எங்கட மாமா, நீங்கள் இஞ்சயே நில்லுங்கோ, நான் போய் அவரோட கதைக்கிறன்"

வானவில்: "மாமாவெண்டுறீர், அவருக்கேன் இவ்வளவு பயம்? உம்மட முகம் பார்க்கிறதுக்கு பேயரைஞ்சமாதிரி இருக்கிது!"

இன்னிசை: (கைக்குட்டையினால் முகத்தைத் துடைத்தபடி) "இல்ல, அவர் கொஞ்சம் பொல்லாதவர், கோவக்காரன்!"

ஜஸ்டின்: (கார் சைட் மிரர் ஊடாக வானவில்லையும், இன்னிசையையும் நோட்டமிட்டபடி மனதினுள் கதைக்கிறார்) "அக்காவுக்கு படிக்கிறன் எண்டு சொல்லிப்போட்டு உவள் ரோட்டில கண்டவனோடையும் சுத்திக்கொண்டு இருக்கிறாள். வரட்டும் ரெண்டு வெருட்டு வெருட்டி விடுவம்!"

இன்னிசை: "என்ன மாமா? சுகமா இருக்கிறீங்களே?"

ஜஸ்டின்: (கோபம் போல முகத்தை வைத்துக்கொண்டு) "எண்ட சுகமெல்லாம் இருக்கட்டும், முதலில காரில ஏறு!"

இன்னிசை: (பயம், ஒன்றும் பேசாது காரினுள் ஏறுகின்றாள், கார் நகர்கின்றது...)

வானவில்: (கோபம்.. மனதினுள் கதைக்கின்றான்) "போட்டுவாறன் எண்டும் சொல்லேல, யாரோ மாமாவாம் எண்டு சொன்னாள். பிறகு தன்பாட்டில அவரோட காரில ஏறி போறாள். கொழும்பு பெட்டைகள் இப்பிடித்தான் போல இருக்கு! ரெண்டு நாள் சிரிச்சுப் பழகுவாளவ, பிறகு அம்போ எண்டு கையக் கழுவிப்போட்டு கழண்டிடுவாளவ..."

ஜஸ்டின்: "யார் உது பெடியன்? போய் பிரண்டே?"

இன்னிசை: (பயம், பதில் சொல்லாமல் பேசாமல் இருக்கிறாள்..)

ஜஸ்டின்: "சரி நீ எக்கேடாவது கெட்டுப் போ, நான் உன்ன வீட்டில இறக்கிவிடுறன்.. சாப்பிட்டியே? கடையில ஏதாவது வாங்கித்தரவே?"

இன்னிசை: "ஒண்டும் வேண்டாம் மாமா!"

ஜஸ்டின்: "பரவாயில்ல, எனக்கு பசிக்கிது, வா அந்தக் கடையில ஏதாவது சாப்பிட்டுப்போட்டு போவம்" (காரை சிற்றுண்டி உண்பதற்காக நிறுத்துகின்றார்)

இன்னிசை: "எனக்கு பசிக்கேல மாமா. நீங்கள் சாப்பிட்டுப்போட்டு வாங்கோ, நான் காருக்க இருக்கிறன்.."

ஜஸ்டின்: "சரி, அப்ப நான் பார்சல் கட்டிக்கொண்டு வாறன். நீ காருக்க இரு!"

இன்னிசை: (மனதினுள்..) "இந்தாள் அம்மாவுக்கு வீட்டில என்னப்பற்றி என்னத்த அண்டி வைக்கப்போகுதோ தெரியாது. தானே இன்னும் கலியாணம் கட்டாம பரதேசி மாதிரி திரிஞ்சு கொண்டு வானவில்ல எண்ட போய்பிரண்டோ எண்டு கேட்டு நக்கல் அடிக்கிது. இந்தச் சுடுதண்ணிய கலியாணம் கட்ட யார்தான் கழுத்தநீட்டுவாளவ... வானவில் பாவம். சொல்லாமல் கொள்ளாமல் வந்திட்டன். என்ன நினைக்கிறாரோ தெரியாது.."

(சில நிமிடங்களின் பின் கையில் உணவுப் பொதிகளுடன் ஜஸ்டின் திரும்பி வருகின்றார்..)

ஜஸ்டின்: "இந்தா இந்த ஐஸ்கிரீமக் குடி... இந்தப் பார்சலில உனக்கு விருப்பமான கடைச்சாப்பாடுகள் இருக்கு. வீட்ட கொண்டுபோய்ச் சாப்பிடு. பிறகு மாமா வந்தார், தெருவில கண்டார், காரில ஏத்தினார், திட்டினார் எண்டு மனதுக்க புகையாத!"

இன்னிசை: (வெட்கம்...) "இல்ல வேணாம் மாமா"

ஜஸ்டின்: (சிரிப்பு) "ஐயோ வெக்கப்படாம பிடியுங்கோ... நான் உன்ர கொம்மாவுக்கு ஒண்டும் சொல்லமாட்டன், பயப்பிடாம ஐஸ்கிரீமக் குடி!"

இன்னிசை: (முதலில் வெட்கம்... பின்பு கொஞ்சம் துணிவு பிறக்கின்றது, ஐஸ்கிரீமைக் குடித்தபடி..) "அவர் சும்மா பிரண்ட் மாமா, வீட்டையும் வாறவர், அம்மாவுக்கும் அவரத் தெரியும்! நாங்கள் பிரிட்டிஷ் கவுன்சிலுக்கு இங்கிலிஸ் கோர்ஸ் ஒண்டு படிக்கப் போறனாங்கள்!"

ஜஸ்டின்: "கொழும்புக்கு நீ வந்து அஞ்சு வருசமாகப் போகிது. இன்னும் இங்கிலிஷ் படிச்சு முடியேலையே? குஞ்சு குருமான்கள் எல்லாம் மூண்டு வயசில இங்கிலிசில விளாசித் தள்ளுதுகள், உனக்கு பதினேழு வயசாகியும் இங்கிலிஷ் பிடிபடிது இல்லையே?"

இன்னிசை: (மெளனம்..)

ஜஸ்டின்: "சரி வீடு வந்திட்டு, இறங்கு!"

இன்னிசை: "வீட்ட வாங்கோவன் மாமா!"

ஜஸ்டின்: "இல்ல, நான் திரும்பவும் பின்னேரம் ஆஸ்பத்திரிக்கு போகவேணும், பிறகு ஆறுதலா வாறன்!"

இன்னிசை: "தங்கியூ மாமா, பாய், போட்டு வாறன்"

ஜஸ்டின்: "கவனமாப் படிச்சு முன்னேறிற வழியப்பார், கண்டறியாத இங்கிலிசையும், சிங்களத்தையும் படிக்கிறத நிப்பாட்டிப்போட்டு ஏ.எல் சோதினைக்கு நல்ல ரிசால்ட் எடுத்து என்னமாதிரி டொக்டரா வரப்பார்... "

இன்னிசை: "சரி மாமா"

ஜஸ்டின்: "எங்க உண்ட சாப்பாட்டு பார்சல விட்டிட்டுப் போறாய்? இதையும் கொண்டு போ, ஓகே சீ யூ"

இன்னிசை: (மனதினுள்) "டொக்டராம் டொக்டர், ஆக்களோட இன்னும் ஒழுங்காக் கதைக்கத் தெரியேல, அதிக்கில எனக்கு அட்வைஸ் தாறாராம், செய்யுறதையும் செய்துபோட்டு ஐஸ்கிரீமும், மண்ணாங்கட்டியும் வேற வாங்கித் தாறார். எல்லாம் எண்ட கெட்ட நேரம்! வானவில் பாவம்!"

வீட்டினுள் சென்ற இன்னிசை முதல் வேலையாக வானவில்லிடம் மன்னிப்பு கேட்பதற்காக அவனை தொலைபேசியில் அழைக்கின்றாள்.

அனிதா: "ஹலோ!"

இன்னிசை: "மே ஐ ஸ்பீக் டு வானவில்?"

அனிதா: "பிளீஸ் ஹோல்ட் ஒன்!" (சிரிப்பு, ரிசீவரின் மெளத் பீசை கைகளினால் பொத்திக்கொண்டு பிரியசகியைப் பார்த்து) "அக்கா வானவில்லிண்ட கேர்ள் பிரண்ட் கோல் பண்ணுறா!"

பிரியசகி: "என்னவாம்?"

அனிதா: "வானவில்லாம்!"

பிரியசகி: "தாங்கோ, அவவோட நான் கதைக்கிறன்!"

இன்னிசை: "ஹலோ.... ஹலோ.."

பிரியசகி: "ஹாய்.."

இன்னிசை: "மே ஐ ஸ்பீக் டு வானவில்?"

பிரியசகி: "ஹீ இஸ் கோன் ஒளட் சைட்! எனி மெசேஜ்?"

இன்னிசை: "யா, திஸ் இஸ் இன்னிசை, பிளீஸ் டெல் ஹிம் டு கோல் மீ பக்!"

பிரியசகி: "ஓகே, பாய்"

இன்னிசை: "தாங்க்ஸ், பாய்!"

அனிதா: "வச்சிட்டாவே?"

பிரியசகி: (சிரிப்பு) "வானவில்ல தனக்கு கோல் பண்ணச் சொல்லி சொல்லட்டுமாம்!"

வானவில்: (முகம் கழுவியபின் குளியலறையில் இருந்து வெளியே வருகின்றான்) "என்ன எனக்கு கோல் வந்ததே?"

பிரியசகி: "ஓ.. நீ சுகமா இருக்கிறியோ எண்டு கேட்டு ராஜீவ் காந்தி இந்தியாவில இருந்து கோல்பண்ணி இருந்தவர்!"

இனியவள்: "ஏன் தங்கச்சி அவனோட சும்மா விளையாடுறாய்? யாரோ பிள்ள படிப்பு விசயமா இல்லே கோல் செய்தது?"

பிரியசகி: (சிரிப்பு) "ஓமம்மா, படிக்கிற விசயமா இவரின்ர கேர்ள் பிரண்ட் கோல் பண்ணி இருந்தவ.."

வானவில்: (கோபம்) "போடி..." (பிரியசகியின் தலைமயிரைப் பிடித்து இழுத்துவிட்டு வெளியில் ஓடுகின்றான்)

பிரியசகி: (வேதனை..) "ஆ.... குரங்கு!"

இனியவள்: (பெருமூச்சு, கவலை... ஈழவனையும், சஜீவனையும் நினைத்தபடி...) "ஹும்! நீங்கள் இஞ்ச சந்தோசமா, முஸ்பாத்தியா இருக்கிறீங்கள்! அங்க எண்ட பிள்ளைகள் என்ன கஸ்டப்படுகிதுகளோ தெரியாது!"

தமிழ்தங்கை: "இந்தியன் ஆமி இன்னும் ஒரு மாதத்தில போகப்போறாங்களாமே? அதுக்குபிறகு எல்லாப் பிரச்சனைகளும் தீர்ந்திடும், கவலைப்படாதிங்கோ!"

Link to comment
Share on other sites

மூட்டை, முடிச்சுக்களைக் கட்டிக்கொண்டு, இந்தியப்படை தொகுதி, தொகுதியாக தமிழீழத்திலிருந்து வெளியேறத் தொடங்கியிருந்தது. இந்திய ஆக்கிரமிப்பு இராணுவத்தின்மூலம் பல்வேறு கொடுமைகளைச் சந்தித்துவந்த தமிழ்மக்கள் விரைவில், இன்னும் கொஞ்சநாட்களில் தாம் நிம்மதியாக வாழலாம் என்ற கனவுடன் பொறுமைகாத்து, கூலிப்படைகளின் அட்டகாசங்களை சகித்துவந்தனர். ஈப்பி தேசவிரோதக் கும்பல் வீடு, வீடாகச் சென்று தமிழ்மக்களிடம் பணம், மற்றும் நகைகளைக் கொள்ளையிடும் செயல்களை முடுக்கிவிட்டிருந்தது. தமிழ்த்தேசிய இராணுவம் என்ற பெயரில் இந்திய அரசும், ஈப்பி கூலிகளும் சேர்ந்து உருவாக்கிய கோமாளிகள் படையில் பலாத்காரமாகச் சேர்க்கப்பட்ட ஆயிரக்கணக்கான அப்பாவித் தமிழ் இளைஞர்களும், சிறுவர்களும் தமது வாழ்வு இனி என்ன ஆகப்போகின்றதோ என்ற பயத்தில் பெரும்பீதியுடன் ஒவ்வொரு நிமிடத்தையும் கழித்து வந்தார்கள். இந்திய அமைதிப்படை என்ற பெயரில் தமிழீழத்தினுள் ஊடுருவி தமிழ்மக்களின் இனஅழிப்பில் ஈடுபட்டிருந்த கொடிய இராணுவத்தால் பிடிக்கபட்டு, காங்கேசன்துறை தடுப்புமுகாமில் அடைத்து வைக்கப்பட்டிருந்த நூற்றுக்கணக்கான தமிழ் இளைஞர்களும், சிறுவர்களும், முதியவர்களும் தமது எதிர்காலம் பற்றி ஊகிக்கமுடியாத நிலமையில், நிலையற்ற தன்மையுடன் வாழ்வின் ஒவ்வொரு நொடிப்பொழுதையும் எதிர்கொண்டார்கள்.

சாணக்கியன்: "என்ன தூயா, பீச் கூட்டிக்கொண்டுபோய் காட்டச்சொல்லி கேட்டுப்போட்டு இஞ்சவந்து இப்பிடி யோசிச்சுக்கொண்டு இருந்தா என்னமாதிரி?"

தூயா: (கடல் அலைகளைப் பார்த்தபடி ஆழ்ந்தயோசனை...)

தூயவன்: "அக்காவுக்கு, எனக்கெல்லாம் விடிஞ்சாப் பொழுதுபட்டா மாமான்ர நினைப்பு.." (நாடியில் கைகளை ஊன்றி யோசனை)

கறுப்பி: (கண்களில் இருந்து வரும் கண்ணீரை துடைக்கின்றாள்)

ஈழப்பிரியன்: (கண்ணாடியைக் கழற்றி விரல்களினால் துடைத்தபடி யோசனை...)

சாணக்கியன்: "என்ன இப்பிடி உம்மென்று மூஞ்சைய வச்சு இருக்கவே எல்லாரும் பீச்சுக்கு வந்தனீங்கள்?"

தூயா: (தழதழத்த குரலில்..) "காங்கேசன்துறை தடுப்புமுகாமில இருக்கிற எல்லாரையும் இந்தியாவுக்கு கொண்டுபோகப் போறாங்களாம்!" (அழுகின்றாள்..)

ஈழப்பிரியன்: (பெருமூச்சு...) "ம் பாப்பம், எல்லாம் எங்க போய்முடியுதெண்டு!"

தூயவன்: "மாமா பாவம்..."

சாணக்கியன்: "நீங்கள் தேவையில்லாமல் யோசிச்சு பயப்பிடுறீங்கள், எல்லாரும் ஒருமாதிரி கொழும்புக்கு வந்து சேந்திட்டீங்கள், பழசுகள மறந்துபோட்டு இனி நடக்கவேண்டிய வேலைகளப் பாருங்கோ! மிச்சம் எல்லாம் கடவுள் பார்த்துக்கொள்ளுவார்..."

கறுப்பி: "இப்ப கடைசியா கடவுள் ஒருவரத்தான் நம்பிக்கொண்டு இருக்கிறன்! பாவம் தம்பி, அங்க என்ன துன்பப்படுறானோ?" (அழத் தொடங்குகின்றாள்)

சாணக்கியன்: "ஏன் அன்ரி, சும்மா திரும்பவும் அழுறீங்கள்? யமுனா கெட்டிக்காரன், ஏதாவது செய்தாவது தப்பீடுவான். வேலணையில இருந்து அவன் தப்பி வரேலையே?"

ஈழப்பிரியன்: "அது வேற, இது வேற தம்பி! எனக்கும் என்ன செய்யுறதெண்டு தெரியேல, யமுனா நல்ல கெட்டிக்காரன், டொக்டரா வரவேண்டியவன், வாற வருசம் தூயாவோட ஏ.எல் எக்சாம் எடுக்கவேணும்..எல்லாம் குழம்பிப்போச்சு!"

தூயவன்: "அங்க வானவில்லும், சுட்டியும் வாறாங்கள்"

சாணக்கியன்: "இஞ்ச இவங்களப் பாருங்கோ.. கொழும்புக்கு வந்து ரெண்டு, மூண்டு மாதத்தில எப்பிடி மாறிப்போனாங்கள் எண்டு!" (சிரிப்பு) "ஆக்களும், அவயின்ர கலுசான், தலவெட்டுக்களும்!"

சுட்டி: (பதற்றம்) "அண்ணா, உன்ன அம்மா உடன கூட்டிவரட்டாம்..."

சாணக்கியன்: "என்ன பிரச்சனை?"

சுட்டி: "தெரியாது..."

சாணக்கியன்: "அங்கிள், அன்ரி, தூயா எல்லாரும் இருங்கோ, நான் ஒருக்கா வீட்ட போட்டு வாறன்! டேய் சுட்டி, நீ எல்லாரையும் நிண்டு கூட்டுக்கொண்டுவா சரியே?"

வானவில்: "ஓமண்ண, நீங்கள் போங்கோ நாங்கள் பாத்துக்கொள்ளுறம்..."

தமிழ் தங்கை, அனிதா இருவரும் மெளமாக ஹோலினுள் உட்கார்ந்து இருக்கின்றார்கள். பிரியசகி ஆனந்தவிகடன் வாசித்துக்கொண்டு இருக்கின்றாள். இனியவள் சுவாமி கும்பிட்டுக்கொண்டு இருக்கின்றாள். சாணக்கியன் வீட்டினுள் நுழைகின்றான்.

சாணக்கியன்: "அம்மா, என்ன பிரச்சன? என்ன அவசரமா வரச் சொன்னீங்களாம்?"

தமிழ்தங்கை: "தம்பி, வந்திட்டியே? உடன நாங்கள் இப்ப ஹொஸ்பிட்டலுக்கு போகவேணும்!"

சாணக்கியன்: "ஏன் யாருக்கும் என்னமும்..?" (பதற்றம்)

அனிதா: "குமாரசாமி பெரியப்பாவுக்கு ஹார்ட் அட்டாக்காம்.."

சாணக்கியன்: (அதிர்ச்சி) "பிறகு?"

அனிதா: "வேலையில இருந்து உடன ஹொஸ்பிட்டலுக்கு கொண்டுபோனதால தப்பீட்டாராம்"

தமிழ் தங்கை: "பெரியம்மா கோல் எடுத்து சொன்னவ"

சாணக்கியன்: "அப்பாவுக்கு தெரியுமே?"

அனிதா: "ஓம், நான் கோல் எடுத்துச் சொல்லிப்போட்டன்!"

சாணக்கியன்: "அம்மா வெளிக்கிடுங்கோ உடன, பெரியப்பாவ பார்க்க போவம்!"

சாணக்கியனும், தமிழ்தங்கையும் குமாரசாமியைப் பார்க்க வைத்தியசாலைக்கு செல்கின்றனர்....

(தொலைபேசி மணி அடிக்கின்றது)

பிரியசகி: "அனி உங்களுக்குத்தான் வந்திருக்கும் எடுங்கோ!"

அனிதா: "ஹலோ"

குளகாடன்: "ஹாய், ஆ'ம் வானவில்'ஸ் மாஸ்டர் குளா ஸ்பீக்கிங்!"

அனிதா: "ஹோல்ட் த லைன் பிளீஸ்" (பிரியசகியைப் பார்த்து) "வானவில்லின்ர மாஸ்டர் கதைக்கிறார்"

இனியவள்: "ஹலோ, நான் வானவில்லின்ர அம்மா கதைக்கிறன்!"

குளகாடன்: "ஹாய் ஐ ஹாவ் எக்ஸ்ஸாம், ஐ வில் நொட் பி ஏபில் டு கம் டு கிளாசஸ் போர் நெக்ஸ்ட் திரீ வீக்ஸ்.."

இனியவள்: "சரி மாஸ்டர்..."

குளகாடன்: "தாங்க்ஸ், பாய்..."

பிரியசகி: "என்னவாம் அம்மா?"

இனியவள்: "தனக்கு சோதினையாம், மூண்டு கிழமைக்கு வானவில்லுக்கு பாடம் சொல்லித்தர வரமாட்டாராம்"

பிரியசகி: "ஓம் தெரியும்.. தனக்கு டோபல் சோதின வருது எண்டு ஒருக்கா சொன்னவர்"

அனிதா: "என்ன அவரும் டோபல் எடுக்கிறாரே?"

பிரியசகி: "ஓ எல்லாரும் அமெரிக்காவில போய் படிக்கிறதுக்கு ஓடித்திறியிறீனம்!" (சிரிப்பு)

அனிதா: "அப்ப இவரிட்ட நாங்களும் கேட்டுப் படிக்கலாமே? எங்களுக்கும் வாற மாதம் டோபல் வருதில்லே?"

பிரியசகி: "ம்.. ஆள் வந்தாப்பிறகு சோதின எல்லாம் எப்பிடி எண்டு கேட்டுப்பாப்பம்!"

அனிதா: "அக்கா நாங்கள் ரெண்டுபேரும் சேந்து இப்ப டோபல படிப்பமே?"

பிரியசகி: "ஓம் வாங்கோ, எனக்கும் பொழுதுபோகிதில்ல.."

(அனிதாவும், பிரியசகியும் டோபல் சோதனைக்கு தம்மை தயார் செய்கின்றனர்...)

Link to comment
Share on other sites

ஈப்பி கூலிக்குழுவினதும், இந்திய ஆக்கிரமிப்பு இராணுவத்தினதும் கூட்டு நடவடிக்கை மூலம் பலவந்தமாக தமிழ்தேசிய இராணுவத்தில் இணைக்கப்பட்ட நூற்றுக்கணக்கான அப்பாவி தமிழ் இளைஞர்கள் தினமும் அதிலிருந்து தப்பியோடினார்கள். இவ்வாறு ஒடுபவர்களில் பெரும்பாலோனோர் தமது உயிரை ஈப்பி கூலிக்கும்பலிடமிருந்து காப்பாற்றிக் கொள்வதற்காகவும், ஈப்பி கூலிக் கும்பலை பழிவாங்குவதற்காகவும் நேராக இயக்கத்திடம் ஓடிவந்தார்கள். இதனால் இவர்களை நிருவகிக்கவேண்டிய புதிய பொறுப்பு இயக்கத்திற்கு வந்தது. இன்றுவரை ஈழவனிடம் இவ்வாறு பத்து இளைஞர்கள் சரணடைந்திருந்தார்கள். வந்தவர்கள் அனைவரும் தம்மை முழுநேர போராளிகளாக இயக்கத்தில் சேர்க்குமாறு கேட்டு விண்ணப்பித்திருந்தார்கள். எனவே, அனைவரையும் முறையான இராணுவப் பயிற்சிக்காக ஈழவன் கட்டம், கட்டமாக வன்னிக்கு அனுப்பிவைத்தான்.

இந்நிலையில், சுத்தமான நீரை அருந்தாமையால் சஜீவன், புத்தன், மருதங்கேணி, ஆதி அனைவரும் வயிற்றோட்ட நோயினால் பீடிக்கப்பட்டிருந்தார்கள். ஈழவன் மாத்திரம் தெய்வாதீனமாக நோயில் இருந்து தப்பிவிட்டான். ஆனால், மற்றையவர்களை தனித்து நின்று கவனிக்கவேண்டிய பாரிய பொறுப்பு இப்போது அவன் தலையில் விழுந்திருந்தது. ஊரில் ஒதுக்குப்புறமாக உள்ள பழைய வீடு ஒன்றில் அனைவரும் பாயில் படுத்த படுக்கையாக கிடந்தார்கள். நோயின் கடுமை இன்று அதிகரித்துவிட்டதால் மருத்துவர் ஒருவரின் உதவியை உடனடியாக நாடவேண்டிய தேவை தற்போது ஈழவனுக்கு ஏற்பட்டது. என்ன செய்வதென்று திகைத்திருந்த ஈழவன் கடைசியில் பக்கத்து ஊரில் தனியார் வைத்தியசாலை வைத்திருந்த மருத்துவர் மோகனை அழைத்து வந்தான். ஈழவன் இயக்கம் என்பதை அறிந்த மோகன் பயத்தில் வரமுடியாது என்று ஆரம்பத்தில் அடித்துச் சொல்லிவிட்டார். பின் ஈழவனின் கதையைக்கேட்டு பரிதாபப்பட்டு இறுதியில் மனம்இளகி நோய்வாய்ப்பட்ட போராளிகளை வந்து பார்வையிட உடன்பட்டார்.

மோகனிற்கு இளைஞன், வலைஞன் என இரு சகோதரர்களும் பிரியா என ஒரு சகோதரியும் இருந்தார்கள். சகோதர்கள் இருவரும் பேராதெனியா பல்கலைக்கழகத்தில் பொறியியல் பயின்றுகொண்டிருந்தார்கள். பிரியா கொழும்பு பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்று வந்தாள். தாய், தந்தையர் ஏற்கனவே பல வருடங்களிற்கு முன் விபத்து ஒன்றில் இறந்துவிட்டதால் மோகன் திருமணம் செய்யாது தனது உடன்பிறப்புக்களை கவனித்து வந்தார்.

(மோகன் ஒவ்வொருவராக போராளிகளை பார்வையிட்டு சோதிக்கின்றார். மருதங்கேணி, புத்தன், ஆதி, சஜீவன் அனைவரும் உடல் நடுங்க முணகிக்கொண்டு இருக்கின்றனர்.)

மோகன்: "நல்ல காலம் இப்பவாவது வந்தீங்கள், இன்னும் கொஞ்சம் விட்டிருந்தா உயிர் ஆபத்து வந்திருக்கும்!"

ஈழவன்: "இனி என்ன செய்யவேணும் அண்ண?"

மோகன்: "நான் மருந்துகள் தாறன் குடுங்கோ. வயிற்றுப்போக்கு நாளைக்கும் குறையாட்டி, உடன இவையள எண்ட ஆஸ்பத்திரிக்கு கொண்டு வாங்கோ. வேற வழி இல்ல"

ஈழவன்: "சரியண்ண!"

மோகன்: "நிலம மோசம் எண்டா யாழ்ப்பாணம் பெரியாஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கவேண்டி வரலாம்! நான் போட்டு வாறன்!"

ஈழவன்: "வந்து பார்த்ததுக்கு மெத்தப் பெரிய உபகாரம்!"

மோகன்: "பரவாயில்ல, ம்... (நோய்வாய்ப்பட்டவர்களை பார்த்து) தம்பிமார் இருங்கோ வாறன்" (அனைவரும் நன்றி என முணகுகின்றார்கள்)

(மோகன் தனது இருப்பிடம் நோக்கி செல்கின்றார். ஈழவனும் சிறிதுதூரம் அவருடன் சேர்ந்து செல்கின்றான்)

சிவராஜா ஈப்பி கூலிக்குழுவினால் வீட்டில் இருந்து கடத்தப்படும்போது வந்த திடீர் அதிர்ச்சியில் மயங்கி விழுந்த தமிழினியின் மனநிலை மீளவும் வழமைக்கு திரும்பாமையினால் வைத்தியர்களின் ஆலோசனைப்படி தெல்லிப்பழை மனநல மருத்துவமனையில் தற்காலிகமாக அனுமதிக்கப்பட்டாள். காலையில் விசாலும், இரவில் வெண்ணிலாவும் தாயிற்கு உதவியாக மருத்துவமனையில் தங்கினார்கள். தமிழினியின் தம்பி சோழியன் மருமக்களை தனது வீட்டில் வைத்து பாதுகாத்து வந்தார்.

ஜனனி: "மாமா, அப்பாவ நாங்கள் போய் எப்ப பாக்கிறது?"

சோழியன்: "அங்க நீங்கள் போறது ஆபத்து, எனக்கே அங்க போய்வர பயமா இருக்கு!"

டண்: "அப்ப அம்மாவையாவது எப்ப நான் போய் பாக்கிறது?"

சோழியன்: "டேய், உன்னக்கூட்டிக் கொண்டு போக எனக்கென்ன விருப்பம் இல்லையே? இந்த நேரத்தில நீ வீட்டவிட்டு வெளியில வெளிக்கிடுறது ஆபத்து!"

டண்: (கோபம்) "இப்பிடியே சாமத்தியப் பட்ட பெட்டைகள் மாதிரி வீட்டுக்க என்ன இன்னும் எத்தின நாளைக்கு இருக்கச் சொல்லுறீங்கள்?"

ஜனனி: "தம்பி, சும்மா வாய அமத்தி வச்சுக்கொண்டு இரு, உனக்கு மாத்திரமே இந்த நிலம? ஊரில எல்லாப் பெடியங்களுமே ஈப்பிக்கு பயத்தில இப்ப அறையுக்கதானே இருக்கிறாங்கள்?"

சோழியன்: "நான் இண்டைக்கு மூண்டு புது தமிழ்ப்படங்கள் வீடியோ கடையில எடுத்தனான். பேசாம ஒண்டையும் பத்தி யோசிக்காம இப்போதைக்கு படத்தப் பாத்துக்கொண்டு இருங்கோ!"

டண்: (கோபம்) "ரெண்டு கிழமையா படம், படமா பாத்து எனக்கு மூள கழண்ட மாதிரி இருக்கு, கடைசியில நானும் தெல்லிப்பழை ஆஸ்பத்திரியில அம்மாவுக்கு பக்கத்து கட்டிலில இருக்கவேண்டி வரப்போகிது!"

சோழியன்: (சலிப்பு) "ஏதோ எங்கட கெட்டகாலம் இப்பிடியாப்போச்சு, நாங்கள் வேற என்னத்த செய்யிறது?"

டண்: (யோசனை...) "நான் இயக்கத்தில போய் சேரப்போறன்!"

ஜனனி: "வா நானும் வாறன். எனக்கும் அதுதான் சரியாப்படுது!"

சோழியன்: "ரெண்டு பேருக்கும் என்ன விசரே? உங்கட அப்பா, அம்மாவுக்கு நான் என்ன பதில் சொல்லிறது?"

ஜனனி: "எல்லா ஈப்பிச் சனியங்களும் செத்தாத்தான் நாங்கள் நிம்மதியா வாழலாம்!"

டண்: "ஒரு குற்றமும் செய்யாத அப்பாவோட சொறிஞ்சவங்கள நான் சும்மா விடமாட்டன்!"

(விசால் தூங்கிக்கொண்டு இருக்கின்றான். விவாதம் தொடர்ந்து நடக்கின்றது. சோழியன் மனதில் திடீரென ஒரு சிந்தனை உதிக்கின்றது.)

சோழியன்: (கோபம்)"நீங்கள் சொல்லிறமாதிரி ஒண்டும் நான் கேக்கேலாது! நான் சொல்லிறதத்தான் நீங்கள் கேக்க வேணும்!"

ஜனனி: (பயம்) "என்ன மாமா சொல்லப்போறீங்கள்?"

சோழியன்: "ரெண்டு பேரையும் வெளிநாட்டுக்கு அனுப்பி வைக்கப்போறன்!"

ஜனனி: (திகைப்பு) "ஏன் அங்க?"

சோழியன்: "வேற வழியில்ல..."

டண்: (யோசனை...) "போகாட்டி?"

சோழியன்: (கோபம்) "நான் சொல்லிறத கேக்காட்டி வீட்டில இஞ்ச இருக்கேலாது!"

ஜனனி: (மெளனம்..)

டண்: "எப்பிடி போறது?"

சோழியன்: "ஏஜென்சிக்கால தான், "

ஜனனி: "அப்பா, அம்மாவ இந்த நிலமையில விட்டுட்டு நான் வரமாட்டன்!"

(நீண்ட வாக்குவாதம் நடைபெறுகின்றது. இறுதியில் ஜனனியும், டண்ணும் குடும்ப நன்மை கருதி மாமாவின் ஆலோசனைப்படி வெளிநாடு செல்ல உடன்படுகின்றனர். சோழியன் முதலில் இவர்களை உடனடியாக கொழும்பிற்கு அனுப்புவதற்கு தேவையான நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றார்.)

தூயாவும், சாணக்கியனும் மீண்டும் மிகவும் நெருக்கமாக பழகத் தொடங்கினார்கள். ஆனால், இப்போது இதை வெறும் நட்பு என்று கூறமுடியாது. காதல் என்று கூறுவது மிகப் பொருத்தமாக இருக்கும். ஈழப்பிரியனும், கறுப்பியும் தூயாவை அவள் விருப்பப்படி விட்டுவிட்டனர். சாணக்கியன் மீது ஈழப்பிரியனுக்கும், கறுப்பிக்கும் தற்போது புதிய பாசப்பிணைப்பு ஏற்பட்டிருந்தது. தூயாவீட்டில் பச்சைக்கொடி காட்டிவிட்டதாலும், சாணக்கியன் வீட்டிலும் எதுவித எதிர்ப்பும் இல்லாததாலும் காதலர்கள் இருவரும் சேர்ந்து சுதந்திரமாக கொழும்பை சுற்றி வந்தார்கள். சாணக்கியன் தூயாவை நேற்று தனது பல்கலைகழகத்திற்கு கூட்டிச்சென்று சுற்றிக் காட்டினான். நேற்று முன்தினம் இருவரும் தெகிவளை மிருகக்காட்சிசாலைக்கு சென்றிருந்தனர். தூயாவிற்கு இன்று இரவு படிப்பதற்கு மனம் ஒருமைப்படவில்லை. கடதாசியை எடுத்து கிறுக்கத் தொடங்கினாள். முதலில் மாமா யமுனாவின் நினைப்பு வர அவனைப்பற்றி ஒரு கவிதை புனைந்தாள். பின் சாணக்கியனை பற்றி ஏதோ எழுதத் தொடங்கினாள்.

நண்பனாய் உனையடைய

நானென்ன தவம் செய்தேன்?

கண்கள் இமைப்பதற்குள்

காதலனாய் மாறிவிட்ட

கள்வன் உனையடைய

நானென்ன தவம் செய்தேன்?

பெண்ணிவள் உள்ளத்தில்

கடவுளாய் நீ குடிகொள்ள

நானென்ன தவம் செய்தேன்?

நாயகனே பதில் சொல்லு!

வீட்டில் எல்லோரும் தூங்கிவிட்டனர். சாணக்கியனுக்கு மட்டும் இரவு தூக்கம் வரவில்லை. பல்வேறு எண்ணங்கள் அவன் மனதில் வந்து போயின. தூயாவுடனான தனது எதிர்காலத்தை எப்படி அமைப்பது என்று திட்டங்கள் தீட்டிக்கொண்டு இருந்தான். இறுதியில் அவனும் தூயாவின் நினைவில் கடதாசியில் கிறுக்கத் தொடங்கினான்.

நீயாகவும் என்னிடம் வரவில்லை!

நானாகவும் உன்னிடம் வரவில்லை!

ஆனால்...

நாமிருவரும் இணைந்துள்ளோம்

காதலர்களாக!

எப்படி? எப்படி? எப்படி?

தமிழ்தங்கை: (தூக்கம் கலைந்து..) "தம்பி மூண்டு மணியாகப் போகிது! இன்னும் படிச்சு முடியேலையே?"

சாணக்கியன்: "இல்லையம்மா, நித்திர வரேல, சும்மா குந்திக்கொண்டு இருக்கிறன்!"

தமிழ்தங்கை: "அப்ப லைட்ட நூத்துப்போட்டு இரு!"

சாணக்கியன்: (மின்விளக்கை அணைத்துவிட்டு, கட்டிலில் சாயந்தபடி மீண்டும் தீவிர யோசனை... தூரத்தில் புகையிரதம் போகின்ற ஒலி கேட்கின்றது... )

Link to comment
Share on other sites

சோழியன் ஒருவாறாக ஐனனியையும், டண்ணையும் கொழும்பிற்கு அனுப்பி வைத்தார். இருவரும் வெளிநாடு போவதற்காக சொந்தக்கார வீடு ஒன்றில் காத்திருந்தார்கள். எந்த நாட்டிற்கு போகப்போகின்றார்கள் என்று ஆரம்பத்தில் சரியாகத் தெரியாது. சோழியன் இவர்கள் இருவரையும் தான் ஒன்றாக கனடாவிற்கு அனுப்புவதாக கூறியே கொழும்பிற்கு அனுப்பி வைத்தார். ஆனால், கொழும்பில் நிலமை தலைகீழாக இருந்தது. ஜனனியை ஜேர்மனியில் உள்ள ஒருவனுக்கு திருமணம் செய்விப்பதற்கும், டண்ணை மத்திய கிழக்கு நாடு ஒன்றிற்கு அனுப்புவதற்கும் திரைமறைவில் திட்டங்கள் நடந்தது. இருபதே வயதான ஜனனி தனக்கு திருமணம் என்று கேட்டதும் அதிர்ந்து போனாள். அதுவும் ஆளை யார் என்றும் தெரியாது. இதைவிட அக்கா வெண்ணிலா இன்னும் திருமணம் செய்யவில்லை. அம்மா படுக்கையில், அப்பா சிறையில்! இந்த நிலையில் திருமணமா? ஆனால், ஜனனியின் புகைப்படத்தை பார்த்தபின் ஜேர்மனியில் இருந்த மாப்பிள்ளை திருமணத்திற்கு பூரண சம்மதம் தெரிவித்து விட்டான். கலியாணத் தரகர் சுவி, தான் ஜனனிக்கு கொண்டுவந்த சம்மந்தம் சரிவந்து திருமணம் விரைவில் நடந்துவிட வேண்டும் என்பதில் குறியாக இருந்தான். கடைசியில், ஜேர்மனியில் உள்ள குறித்த வாலிபனும், ஜனனியும் தொலைபேசியில் கதைப்பதற்கு ஒழுங்கு செய்து கொடுத்தான். இதனிடையில் ஜேர்மனியில் உள்ள வாலிபன் ஜனனிக்கு கடிதம், மற்றும் பரிசுப் பொருட்கள் வேறு கொழும்பிற்கு அனுப்பி வைத்துவிட்டான்.

தரகர் சுவி: "சரி தங்கச்சி கதையுங்கோ! உங்கட அவர்தான் கதைக்கிறார்!"

ஜனனி: (தயக்கம், மெளனம்...)

தரகர் சுவி: "உடன கதையுங்கோ, அவன் அங்க ஆயிரக்கணக்கான மைலுக்கு அங்கால இருந்து கோல் பண்ணுறான்!"

டண்: "அக்கா நான் முதலில கதைக்கவே?"

ஜனனி: "ஓம்!"

தரகர் சுவி: "டேய் தம்பி, உனக்கே கலியாணம் பேசி இருக்கு? அக்கா முதலில கதைக்கட்டும் குடு!"

ஜனனி: (மெளனம், மெல்லிய குரலில்..) "ஹலோ!"

குட்டித்தம்பி: "ஹலோ! என்ன கிணத்துக்க இருந்து சத்தம் வாற மாதிரி இருக்கு? உள்ள விழுந்திட்டீங்களே?"

ஜனனி: (வெட்கம், என்ன சொல்வதென்று தெரியவில்லை.... திரும்பவும்) "ஹலோ.."

குட்டித்தம்பி: "மைக் டெஸ்டிங், வன், டூ, திரீ, என்ன சத்தம் கேட்கிதில்லையோ? நான் குட்டித்தம்பி, உங்கள் வருங்கால கணவன் கதைக்கிறன்"

ஜனனி: (திரும்பவும்) "ஹலோ!"

தரகர் சுவி: "என்ன பிள்ள திரும்பவும், திரும்பவும் ஹலோ எண்டு கொண்டு நிக்கிறாய்? எப்பிடி சுகமாய் இருக்கிறீங்களோ, எப்ப சிறீ லங்காவுக்கு வாறீங்கள் எண்டு கலகலப்பா கதையன்!"

டண்: (கோபம்.. மனதினுள்) "பேசாமல் இவனே அவன கலியாணம் கட்டலாமே? ஏன் அக்காவ கரச்சல் படுத்துறான்?"

குட்டித்தம்பி: "பிறகு? சொல்லுங்கோ, வீட்டில எல்லாரும் சுகமே? தம்பி யாரோ உங்களோட நிக்கிறதா கேள்விப்பட்டன்?"

ஜனனி: (இதுதான் சந்தர்ப்பம் என நினைத்துவிட்டு, உடனடியாக..) "ஓம், பக்கதில நிக்கிறார், கதைக்கப் போறாராம்.." (முகத்தை கோணல், மாணலாக வைத்துக்கொண்டு, தலையை ஆட்டி சைகை பாசையில் டண்ணை அருகில் வருமாறு அழைக்கின்றாள்...)

டண்: (சைகை பாசையில் தலையை ஆட்டி என்னவென்று கேட்கிறான்..)

தரகர் சுவி: (கோபம் வருகிறது..) "என்ன அக்காவும், தம்பியும் ஊம பாசையில என்ன செய்யுறீங்கள்? அந்தப்பிள்ள ஜேர்மனியில இருந்து மினக்கட்டு கோல் எடுத்து இருக்கு, நீங்கள் ரெண்டு பேரும் விளையாடிக்கொண்டு இருக்கிறீங்கள்?"

டண்: (ஜனனியிடம் போனை வாங்கி, தடிப்பான குரலில்) "ஹலோ நான் கதைக்கிறன்!"

குட்டிதம்பி: "நான் என்றா யார்? கலியாண புரோக்கரே?"

டண்: "இல்ல அக்காட தம்பி!"

குட்டித்தம்பி: "இதென்னடா, அக்காட தம்பியோ? எந்த அக்கா?"

டண்: (கோபம்..) "உமக்கு பேசி வச்சிருக்கிற அக்கா!"

தரகர் சுவி: (கோபம்) "இதென்ன பழக்கம்? நீங்கள் என்று கதைக்காம உமக்கு எண்டு சொல்லிக்கொண்டு.."

டண்: "பிறகு"

குட்டித்தம்பி: "அக்காவ நான் கலியாணம் கட்டிறது உமக்கு விருப்பம் தானே?"

டண்: "அக்காவுக்கு விருப்பமோ எண்டு கேளுங்கோ முதலில..."

குட்டித்தம்பி: "அக்காட்ட கேப்பம், குடுங்கோ..."

ஜனனி: "ஹலோ.."

குட்டித்தம்பி: "என்ன அக்காவும், தம்பியும் இழுபறிப்பட்டுக்கொண்டு இருக்கிறீங்கள்? உங்களுக்கு என்ன கலியாணம் கட்ட விருப்பம் இல்லையே?"

ஜனனி: "தெரியாது.."

குட்டித்தம்பி: "என்ன சொல்லுறீங்கள்?"

ஜனனி: (நடந்த பிரச்சனைகள் எல்லாவற்றையும் மெதுமெதுவாக சொல்லிவிட்டு அழத்தொடங்குகின்றாள்)

குட்டித்தம்பி: (அதிர்ச்சி..) "இந்த நாய்த்தரகன் இப்பிடி பிரச்சனைகள் ஒன்றையும் எனக்கு சொல்லேலையே?" (கோபம்..)

ஜனனி: "எனக்கும் ஒண்டும் சரியாச் சொல்லேல..."

குட்டித்தம்பி: "சரி, ஒண்டுக்கும் யோசிக்காதையுங்கோ! நான் இருக்கிறன், கட்டாயம் உதவி செய்வன், உங்களுக்கு விருப்பம் எண்டா என்ன கட்டலாம், விருப்பம் இல்லாட்டியும் பரவாயில்ல, உங்கள ஒரு தங்கச்சியா நினைச்சு உதவி செய்வன். உங்களையும், உங்கட தம்பியையும் ஜேர்மனிக்கு கூப்பிடிறன்! எனக்கு காசு ஒண்டும் தரத் தேவையில்ல.."

ஜனனி: (கேட்க மனதிற்கு சந்தோசமாக இருந்தாலும், வீணாக நல்லவர் ஒருவரை அவமானப்படுத்திவிட்டோம் என்ற குற்ற உணர்வு...) "மன்னிச்சு கொள்ளுங்கோ!"

குட்டித்தம்பி: "எதுக்கு?"

ஜனனி: "உங்களோட நான் ஆரம்பத்தில சரியா கதைக்கேல..."

குட்டித்தம்பி: "நான் தான் உங்களிட்ட மன்னிப்பு கேக்க வேணும், உங்கட பிரச்சனை ஒன்றும் தெரியாமல் நிறைய பிழையான விசயங்கள் செய்து போட்டன்..."

ஜனனி: "சீ இல்ல, பரவாயில்ல... உங்கள எனக்கு பிடிச்சிருக்கு.."

தரகர் சுவி: (சந்தோசம்.. ஆ வென்று வாயைப் பிளக்கின்றான், தொலைபேசியை ஜனனியிடம் இருந்து பிடுங்கி எடுத்துவிட்டு) "பிறகென்ன! பிடிச்சுப்போச்சுதாம்! அப்ப எப்ப கலியாணத்த வைப்பம்? நான் உமக்கு அப்பவே சொன்னனான் தானே....."

குட்டித்தம்பி: (கோபம்...) "அண்ண என்ன விளையாடுறீங்களே? பாவம் அந்தப்பிள்ள ஏதோ பிரச்சனையில இருக்கு, ஏன் எனக்கு ஒண்டும் சொல்லாமல் மறைச்சனீங்கள்?"

தரகர் சுவி: "நானெங்க மறைச்சனான்? நீர் தான் கேட்கேல! பொம்பிளையிண்ட படத்தப்பாத்து மயங்கிப்போட்டு கேக்க வேண்டிய விசயங்கள கேக்காம விட்டிட்டீர்!"

குட்டித்தம்பி: "இப்ப முடிவா என்ன சொல்லுறீங்கள்?"

தரகர் சுவி: (ஜனனியைப் பார்த்து...) "பிள்ள இப்ப, உனக்கு இவர பிடிச்சிருக்கோ இல்லையோ?"

ஜனனி: (மெளனம்..)

தரகர் சுவி: "என்ன பிடிச்சிருக்கே?"

ஜனனி: (ஆம் என தலையாட்டுகின்றாள்..)

தரகர் சுவி: "பாத்தீரே தம்பி, பொம்பிள ஓம் எண்டு சொல்லிப்போட்டா... நான் ஒரு கலியாணம் பேசினா முடிவு எப்பவும் மங்களகரமாத்தான் இருக்கும்..." (பெருமை...)

குட்டித்தம்பி: "சரி, சந்தோசம், அவவிட்ட ஒருக்கா குடுங்கோ கதைப்பம்..."

தரகர் சுவி: "இந்தா பிள்ள... கதைக்கப்போறாராம்..."

குட்டித்தம்பி: "அப்ப, உங்களுக்கு என்ன கலியாணம் செய்ய ஓம் தானே?"

ஜனனி: "ஓம், ஆனா.. உடன இல்ல... முதலில அம்மா குணமாக வேணும், அப்பா வெளியில வரவேணும்..."

குட்டித்தம்பி: "அதுக்கென்ன! வெயிட் பண்ணிறன்.."

ஜனனி: "நன்றி!"

குட்டிதம்பி: "நன்றி! கதைச்சது சந்தோசம்! தம்பியையும் கேட்டதா சொல்லுங்கோ..."

(குட்டித்தம்பி தொடர்ந்து தரகருடன் உரையாடுகின்றான். தொலைபேசி இணைப்பு துண்டிக்கபடுகின்றது...)

Link to comment
Share on other sites

நேற்றுடன் இந்திய ஆக்கிரமிப்பு இராணுவம் தமிழீழத்தை விட்டு முற்றிலுமாக வெளியேறிவிட்டது. தமிழீழம் மீண்டும் உற்சாகத்தில் களை கட்டியது. போராளிகளை மக்கள் ஆசை, ஆசையாக கண்டு, கதைத்து, கட்டியணைத்து அவர்களை வரவேற்று, கெளரவித்து மகிழ்ந்தார்கள். போராளிகளிற்கு இப்போது சீருடையும் கொடுக்கப்பட்டிருந்தது. ஆயுதங்கள், சீருடையில் செல்லும் போராளிகளை வழியில் காணும் சந்தர்ப்பங்களில் மக்கள் ஆரவாரமிட்டு தமது களிப்பை தெரிவித்துக் கொண்டார்கள். தெருக்களில் விடுதலை கானங்கள் ஒலித்துக்கொண்டிருந்தன. மாணவர்கள் மீண்டும் பாடசாலைக்கு செல்லத் தொடங்கினார்கள். பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் பேரூந்துகள் மாணவர்கள் கூட்டத்தினால் நிரம்பி வழிந்தன. எங்கும் சனக்கூட்டம்! மக்கள் சிறிய, சிறிய குழுக்களாக வழி தெருவில் கூடி இந்திய ஆக்கிரமிப்பு இராணுவம் மற்றும் கூலிக்குழுக்கள் தமிழீழத்தை விட்டு வெளியேறிய சந்தோசத்தில் இருந்து கதைத்துக்கொண்டு இருந்தார்கள். பாடசாலையில் மாணவர்கள் ஈப்பி கூலிகளினால் தமக்கு நேர்ந்த அவலங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொண்டிருந்தார்கள். சிலர் பாடசாலையில் தம்முடன் படித்த பல மாணவர்கள் தம்மைப் பிரிந்து கொழும்பு, மற்றும் வெளிநாடு சென்றுவிட்டார்கள் என்பதை அறிந்து மிகவும் கவலையடைந்தார்கள்.

யமுனா, சாத்திரி, சிவராஜா விடுதலை செய்யப்பட்டு விட்டார்கள். விடுதலையடைந்த யமுனாவை ஈழப்பிரியன் உடனடியாகவே கொழும்பிற்கு அழைத்துவந்துவிட்டார். சாத்திரி மீண்டும் மடத்தடி முருகன் கோயில் பூசகராக கடமையாற்றத் தொடங்கினார். ஊரவர் மத்தியில் சாத்திரிக்கு மிகுந்த மதிப்பு ஏற்பட்டுவிட்டது. சிவராஜா தனது குடும்பத்தினருடன் ஜனனிக்கு திருமணம் செய்து வைப்பதற்காக கொழும்புக்கு வந்துவிட்டார். தமிழினி இன்னும் முற்றிலுமாக குணமடையாத நிலையில் இருந்தாள். அவளுக்கு ஜனனி ஏன் இப்போது உடனடியாக திருமணம் செய்கின்றாள் என்ற காரணம் சரியாக விளங்காமல் இருந்தது. ஜனனியை திருமணம் செய்ய குட்டித்தம்பி வரும் கிழமை சிறீ லங்காவுக்கு வருவதாய் இருந்தான். திருமணம் செய்ததும் ஜனனியை மட்டுமல்லாது டன்னையும் தான் ஜேர்மனிக்கு கூப்பிடுவேன் என்று குட்டித்தம்பி உறுதிகூறியிருந்தான்.

ஆதி மிக நன்றாக கல்வி கற்கும் மாணவன் என்றும், அவன் உயர்தரப்பரீட்சை எடுக்கவேண்டும் என்றும், இதனால் உடனடியாக அவனை பாடசாலைக்கு அனுப்பும்படியும் கேட்டு வலிகாமம் அரசியல் பொறுப்பாளராக இருந்த சுண்டலிடம் ஆதியின் பாடசாலை அதிபர் தனிப்பட்ட கடிதம் ஒன்றை எழுதி அனுப்பி இருந்தார். இதனால், ஆதி அவனுக்கு உண்மையில் விருப்பம் இல்லாதபோதும், வலுக்கட்டாயமாக கல்வியை தொடர்வதற்காக சுண்டலினால் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டான். ஆதி வீட்டுக்கு வந்ததும் சின்னப்பு வீடு பழைய நிலமைக்கு திரும்பிவிட்டது. ஒரே சிரிப்பும், மகிழ்ச்சியும், கும்மாளமுமாக இருந்தது. சின்னப்பு வீட்டிற்கு தினமும் உறவினர்கள், நண்பர்கள், அயலவர்கள், ஊரவர்கள் வருகைதந்து அளவளாவிவிட்டு சென்றனர். இயக்கத்தில் இருந்துவிட்டு வந்ததால் ஆதியிற்கு ஊரில் இருந்த மதிப்பு நன்கு கூடிவிட்டது. சின்னப்பு குடும்பத்தினர் தற்காலிகமாக குடியிருந்த கொக்குவில் வீட்டில் மணிவாசகனும், வேறும் சில மருத்துவபீடத்தில் பயிலும் மாணவர்களும் இருந்தனர். மதன் உறவினர் ஒருவரது திருமணத்தில் கலந்துகொள்வதற்காக கொழும்பு சென்றுவிட்டான்.

தமிழ் மக்கள் இவ்வாறு தற்காலிகமாக சந்தோசமாக இருந்தாலும், திரும்பவும் சிறீ லங்கா இராணுவத்துடன் இன்னொரு போர்வரக்கூடிய சந்தர்ப்பங்கள் நிறைய இருந்தது. அருவியும், நிதர்சனும் முழுநேரப்போராளிகளாக இயக்கத்தில் இணைந்துவிட்டனர். அருவி யாழ்ப்பாணம் கோட்டை இராணுவ முகாம் பகுதியில் பணியாற்றினான். நிதர்சன் கட்டுவன்/பலாலி இராணுவ முகாம் பகுதியில் பணியாற்றினான். சஜீவன் வலிகாமம் இராணுவப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டிருந்தான். மருதங்கேணியும், புத்தனும் காங்கேசன்துறை இராணுவ முகாம் பகுதியில் பணியாற்றினர். ஈழவன் புலனாய்வுப் பிரிவில் இருந்தான். அவன் இப்போது எங்கே இருக்கின்றான், என்ன செய்கின்றான் என்பது ஒருவருக்கும் தெரியாது. ஈழவனின் தம்பி சஜீவனுக்கு கூடத்தெரியாது. வடிவேல் இயக்க ஆதரவாளனாக பணிபுரிந்தான். அவன் எப்போதும் சஜீவனுக்கு துணையாக அருகில் நின்று பல உதவிகள் செய்தான்.

பிரியசகி லிசானை பதிவுத் திருமணம் செய்தபின், புலமைப் பரிசில் பெற்று அவுஸ்திரேலியப் பல்கலைக்கழகம் ஒன்றில் மருத்துவம் கற்பதற்காக சென்றுவிட்டாள். லிசான் விரைவில் வியாபாரம், மற்றும் தொழில் தகமைகளை காட்டி அவுஸ்திரேலியாவுக்கு சுய ஸ்பொன்சரில் போகும் முயற்சியில் ஈடுபட்டிருந்தான். வன்னிமைந்தன் லிசானின் வியாபாரத்தினை விரைவில் பொறுப்பேற்பதாய் இருந்தார். கடந்த சில மாதங்களாக லிசானுடன் சேர்ந்து வியாபாரத்தில் ஈடுபட்ட வன்னிமைந்தன் தற்போது அதிலுள்ள பல நுணுக்கங்களையும் கற்றறிந்து மிகுந்த அனுபவசாலியாக வளர்ந்து இருந்தார். வானவில்லும், இன்னிசையும் மிகவும் நெருங்கிய நண்பர்களாக மாறியிருந்தனர். இன்னிசை இப்போது வானவில் வீட்டுக்கு அடிக்கடி வந்துபோனாள். ஆயினும், வானவில்லுக்கு அக்கா பிரியசகி தன்னைவிட்டு பிரிந்துசென்றது மிகவும் வேதனையாக இருந்தது. இனியவளும் பிரியசகி தன்னைவிட்டு பிரிந்துசென்றுவிட்டாள் என்ற கவலையில் இருந்தாள்.

தூயா வெள்ளவத்தை இந்து மகளிர் கல்லூரியில் உயர்தரம் கற்றுக்கொண்டிருந்தாள். தூயவன் பம்பலப்பிட்டி இந்துவில் சேர்க்கப்பட்டிருந்தான். ஈழப்பிரியன் கொழும்பு ரோயல் கல்லூரியில் பெளதிகவியல் ஆசிரியராக வேலை நியமனம் பெற்றிருந்தார். வெள்ளவத்தையில் தனியார் ரியூசன் வகுப்புக்களும் எடுத்துவந்தார். கறுப்பி இராமநாதன் மகளிர் கல்லூரியில் பகுதிநேர சங்கீத ஆசிரியையாக நியமனம் பெற்றிருந்தாள். யமுனா என்ன செய்வதென்று தெரியாமல் வீட்டில் இருந்து யோசித்துக்கொண்டு இருந்தான். அவனை விரைவில் ஏனென்சி மூலம் பிரித்தானியாவுக்கு அல்லது கனடாவுக்கு அனுப்பும் முயற்சியில் ஈழப்பிரியன் ஈடுபட்டிருந்தார்.

அனிதா டோபல் சோதனையை சிறப்பாகச் செய்து சித்தியடைந்திருந்தாள். அனிதா குடும்பத்தினருக்கு அமெரிக்கா செல்வதற்கு வீசா கிடைத்துவிட்டது. விமானப்பயண ஒழுங்குகளை செய்வதற்கு நோர்வேஜியனின் பதிலை எதிர்பார்த்து காத்திருந்தார்கள். எனினும், தூயாவை பிரிந்து செல்ல விரும்பாத சாணக்கியன், தான் இப்போது உடனடியாக அமெரிக்காவுக்கு வரவில்லையென்றும், படிப்பு முடிந்ததும் வருவதாகவும் கூறிவிட்டான். நோர்வேஜியன் ஏற்கனவே அமெரிக்காவுக்கு சென்றுவிட்டார். சுட்டி எப்போது அமெரிக்கா போகலாம் என்ற ஆவலுடன் காத்திருந்தான். தமிழ்தங்கையும், அனிதாவும் தாயகத்தைவிட்டு நிரந்தரமாக விலகிச் செல்லப்போகின்றோம் என்ற கவலையில் இருந்தனர். அமெரிக்காவுக்கு போகும் முன்னர் ஒரு தடவையாவது யாழ்ப்பாணம் சென்றுவிட்டு வர அவர்கள் ஆவலாக இருந்தனர். ஆனால், திரும்பவும் பிரச்சனை தொடங்கலாம் என்றும், இதனால் யாழ்ப்பாணம் போவது ஆபத்து என்றும் கூறி சாணக்கியன் அவர்களை தடுத்துவிட்டான்.

இதேவேளை, தமது தம்பிகள் வலைஞன், இளைஞன், மற்றும் தங்கை பிரியாவை சந்திப்பதற்காக மோகனும் கொழும்புக்கு வந்திருந்தார். அவரை அனைவரும் திருமணம் செய்யுமாறு வற்புறுத்தத் தொடங்கினர். இறுதியாக, குட்டித்தம்பிக்கு திருமணம் பேசிய தரகன் சுவி கையில் மோகனின் சாதகம் ஒப்படைக்கப்பட்டது. சுவி தினமும் மோகனிற்கு திருமணச் சந்தைக்கு வந்துள்ள பெண்களின் படங்களை அனுப்பி தொல்லை கொடுத்துக்கொண்டு இருந்தான். மோகனிற்கு விருப்பமில்லையென்றால் வலைஞன் அல்லது இளைஞன் இந்தப் பெண்களை திருமணம் செய்யலாம் என்று ஆலோசனை வேறு சொன்னான். பிரியாவிற்கும் தான் வரன் பார்ப்பதாகவும் கூறி இறுதியில் தனது வாய் வல்லமை மூலம் பிரியாவின் சாதகத்தையும் பெற்றுவிட்டான். சுவிக்கு ஒரு திருமணப் பொருத்தம் சரியாக வந்தால் மாப்பிளை, பொம்பிளை பகுதிகளில் இருந்து தலா பதினையாயிரமாக, மொத்தம் முப்பதாயிரம் பணம் ரொக்கமாகக் கிடைத்தது. இதுவே, அவன் கண்ணில் பட்டவர்களிற்கெல்லாம் திருமணம் செய்துவைக்க நாயாய் ஓடித்திரிவதற்கு காரணமாக இருந்தது.

குளகாடனிற்கு வானவில்லின் பெரியப்பா குமாரசாமி மூலம் செல்வந்தனான இந்திரநாதனின் மகள் அகல்யாவிற்கு இரசாயணவியல் சொல்லிக் கொடுப்பதற்கு சந்தர்ப்பம் கிடைத்திருந்தது. வாரம் நான்கு தடவைகள் அவன் அகல்யாவிற்கு வீட்டில் சென்று பாடம் போதித்து வந்தான். ஒரு மணித்தியாலம் பாடம் சொல்லிக்கொடுக்க அவனுக்கு இருநூறு ரூபாய்கள் கிடைத்தது. இதனால் குளகாடனின் பொக்கற்றில் பணம் இப்போது முன்பைவிட இன்னும் தாராளமாக புழங்கத்தொடங்கியது.

ஜஸ்டின் பெற்றோரை பார்ப்பதற்காக யாழ்ப்பாணம் சென்றிருந்தான். விரைவில் அவனுக்கும் பிரபல தங்கநகை வியாபாரியின் மகளுக்கும் திருமணம் நடைபெற ஏற்பாடாகி இருந்தது.

விசா அலுவல்கள் சரிவந்ததும் சினேகிதி தனது தாயுடன், அண்மையில் கனடாவுக்கு சென்றுவிட்டாள். சினேகிதியின் அப்பா கந்தப்பு மிசிசாகா என்ற இடத்தில் பேருந்து சாரதியாக வேலை செய்து வந்தார். தனது குடும்பம் பல வருடங்களின் பின் மீண்டும் ஒன்றுசேர்ந்துவிட்ட சந்தோசத்தில் கந்தப்பு மிதந்தார்.

Link to comment
Share on other sites


இன்று குட்டித்தம்பிக்கும், ஜனனிக்கும் திருமணம். பம்பலப்பிட்டி கதிரேசன் மண்டபத்தில் திருமணம் நடைபெற ஏற்பாடாகி இருந்தது. ஒரே ஊரவர்களாக இருந்ததாலும், வன்னிமைந்தன் சிவராஜாவின் நண்பனாக இருந்ததாலும், மற்றும் பிரியசகி வெண்ணிலாவின் தோழியாக இருந்ததாலும், பெண்வீட்டார் பகுதிக்குரிய வேலைகளை வன்னிமைந்தனும், லிசானும் தலமை தாங்கி செய்தனர். சோழியன் அவ்வப்போது சிறு உதவிகள் செய்தார். இதைவிட நோர்வேஜியன் குடும்பத்தினர், மற்றும் ஈழப்பிரியன் குடும்பத்தினரும் சிவராஜா வீட்டில் நிகழும் மங்கள நிகழ்வு சிறப்பான முறையில் நடைபெற பேருதவி புரிந்தனர்.

மாப்பிள்ளை பகுதி என்று பார்த்தால், கொழும்பில் வசித்து வந்த குட்டித்தம்பியின் அண்ணா விகடகவியும், அவனது மனைவி செவ்வந்தியும் முழுவேலைகளையும் அழகான முறையில் திட்டமிட்டு செய்தார்கள். விகடகவி சிறீ லங்கா சுங்கத் திணைக்களத்தில் தலமை அதிகாரியாக வேலை செய்து வந்தார். குட்டித்தம்பியின் தாய் பல வருடங்களின் முன் இறந்துவிட்டார். தந்தை சைவன் இப்போது மிகவும் நோய்வாய்ப் பட்டிருந்தார். அவருக்கு ஊரைவிட்டு வெளிக்கிட விருப்பமில்லை. இதனால் மகனின் திருமணத்திற்கு வரவில்லை. எனினும், குட்டித்தம்பியின் தம்பிமார் இராவணனும், யாழ்பாடியும் திருமண வைபவத்தில் கலந்துகொள்ள யாழ்ப்பாணத்தில் இருந்து சில தினங்களிற்கு முன் யாழ்தேவி புகையிரதத்தில் கொழும்புக்கு வந்திருந்தார்கள்.

மாப்பிள்ளை வீட்டாரும், பெண்வீட்டாரும் பட்ட எல்லாத் தலையிடிகளும் நேற்றுடன் போய்விட்டது. திருமணத்திற்கு தேவையான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுவிட்டன. இன்று குட்டிதம்பி ஜனனியின் கழுத்தில் தாலியை கட்டுவது ஒன்றுதான் பாக்கி. கடைசிமுறையாக நேற்று முன்தினம் குட்டித்தம்பி ஜனனியுடன் நேரடியாக கண்டு மனம்விட்டு உரையாடி இருந்தான். ஜேர்மனியில் தான் என்ன செய்கின்றேன், தனது வாழ்க்கை முறைகள், தன்னிடம் இருக்கும் கூடாத பழக்கங்கள் என்று சகலவற்றையும் அவன் ஜனனியிடம் ஒரு சிறு குழந்தை போல் ஒளிவு மறைவின்றி ஒப்புவித்து இருந்தான். அவனிடம் உள்ள புகைப்பிடிக்கும் பழக்கம், மற்றும் மது அருந்தும் பழக்கம் ஜனனிக்கு பிடிக்கவில்லையாயினும் அவன் கள்ளம் கபடமின்றி அவளுடன் கதைத்ததால், அவனிடம் இருந்த அவள் விரும்பாத பழக்கவழக்கங்களை பற்றி ஜனனி மனதில் பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை. திருமணம் செய்ததும் அவனை தன்னால் திருத்தமுடியும் என அவள் நினைத்தாள்.

(மேள, தாளங்கள் முழங்கிக்கொண்டு இருக்கின்றன. "முதன் முதலாக காதல் டூயட் பாடவந்தேனே!" என்ற பாடல் நாதஸ்வரத்தில் இப்போது வாசிக்கபட்டுக்கொண்டு இருந்தது. திருமண மண்டபம் முக்கால்வாசி நிறைந்திருந்தது. மாப்பிள்ளை, பெண்வீட்டார் பெரும்பகுதியினர் ஊரில் இருப்பதாலும், இந்த திருமணம் ஊரில் நடைபெறாததுமே இதற்கு காரணமாக இருந்தது. திருமணத்திற்கு வந்தவர்களில் உறவினர்களின் எண்ணிக்கையை விட நண்பர்களின் எண்ணிக்கையே அதிகமாக இருந்தது.)

பூசாரி: "ம்.. உள்ள புடவ மாத்தப்போய் இவ்வளவு நேரமாச்சு.. உடன பொம்பிளைய அழைச்சு வாங்கோ! ம் கெதியா... கெதியா.."

குட்டித்தம்பி: (டன்னைப் பார்த்து.. காதினுள் இரகசியமாக..) "ஐயர் ஏன் சரியா அவசரப்படுறார்?.. அடுத்த கலியாணத்துக்கு போக டைம் வந்திட்டுதே?"

டன்: (ஹிஹி.. சிரிப்பு.. குட்டித்தம்பியின் பக்கம் சரிந்து இரகசியமாக) "இல்ல, அவருக்கு அவசரமா ஒண்டுக்கு ஏதும் போகவேணும் போல இருக்கிதோ தெரியாது!"

குட்டிதம்பி: "ஹாஹா!" (சிரிப்பு..)

பூசாரி: (டென்சன், கோபம்..) "இதென்ன தம்பி பழக்கம்? முகூர்த்த நேரம் போகப்போகிது எண்டு நான் அந்தரப்பட்டுக்கொண்டு இருக்கிறன்.. கலியாண மாப்பிள நீர் பொறுப்பில்லாம சிரிச்சுக்கொண்டு இருக்கிறீர்?"

(குட்டித்தம்பி டன்னை பார்க்கின்றான்.. டன் மெளனம்...)

(ஜனனி அழைத்து வரப்படுகின்றாள். ஆடை, அணிகலன்களால் உடல் முழுதும் நிறைந்திருந்ததால் அவளுக்கு நடப்பது சற்று சிரமாகவும், செயற்கையாகவும் இருந்தது. ஜனனியின் பின்னால் செவ்வந்தி, வெண்ணிலா, தமிழினி, இனியவள், கறுப்பி, தூயா, தமிழ்தங்கை, அனிதா என ஒரு மகளிர் படை வந்துகொண்டிருந்தது. ஜனனியின் முன்னால் குழந்தைகள் பூச்செண்டுகளுடன் அணிவகுத்து சென்றார்கள். ஜனனியை கண்டதும் பூசாரிக்கு அப்பாடா என்று இருந்தது. உண்மையில் இன்னொரு திருமணத்தை நடாத்தி வைப்பதற்காக பூசாரி மயூராபதி அம்மன் கோயிலுக்கு விரைவில் செல்லவேண்டி இருந்ததே அவரின் அவசரத்திற்கான காரணமாக இருந்தது.)

சிறிது நேரத்தில் குட்டித்தம்பி மாங்கல்யத்தை ஜனனியின் கழுத்தில் கட்டுகின்றான். சபையில் இருந்து பூக்கள் தூவப்படுகின்றன. மேள, தாளங்களின் சத்தம் உச்ச நிலைக்கு செல்கின்றது. சிவராஜாவின் கண்களினால் கண்ணீர் வழிந்து ஒழுகுகின்றது. வெண்ணிலாவின் கண்களிலும் கண்ணீர். அவள் தாயை நோக்குகின்றாள். தமிழினியின் முகத்தில் பெரிதாக உணர்வலைகள் ஒன்றும் வெளிப்படவில்லை. யாரோ விருந்தினர் வந்து திருமணத்தை வேடிக்கை பார்ப்பது போல் நடப்பவற்றை அவதானித்துக் கொண்டிருந்தாள். அவளுக்கு அதிர்ச்சியின் காரணமாக வந்த மனக்குழப்பம் இன்னும் முற்றுமுழுதாக கலையவில்லை. தொடர்ந்து மருந்துக் குளிகைகள் தினமும் எடுத்து வந்தாள். இதனால், வெண்ணிலாவே தாயை அப்படி செய்யவேண்டும், இப்படி செய்யவேண்டும், என்று பச்சைக்குழந்தைக்கு சொல்லிக்கொடுப்பது போல் தமிழினியை நெறிப்படுத்திக்கொண்டு இருந்தாள். தங்கைக்கு நல்ல வாழ்வு கிடைத்ததையிட்டு வெண்ணிலா மனதில் மகிழ்ச்சி அடைந்தாலும், திருமணத்திற்கு வந்தபலரும் அவள் ஜனனியின் அக்கா என அறிந்துவிட்டு, வெண்ணிலா ஏன் இன்னும் திருமணம் செய்யவில்லை என்று அடிக்கடி கேட்டு நோண்டியதால், அவள் மனதில் ஒரு இனம் புரியாத ஏக்கமும், துயரும், வெட்கமும் பரவியது.

சோழியன்: (திருமண விருந்தை சுவைத்தபடி...) "என்ர மூளையப் பாவிச்சு சின்னப்பெட்டைய கரையேத்திப் போட்டன்.."

வன்னிமைந்தன்: "நீர் ஆள் சுழியன் எண்டு எங்களுக்கு தெரியும்தானே?" (சிரிப்பு)

ஈழப்பிரியன்: "பெரியவளையும் நேரகாலத்துக்கு ஒருத்தனிண்ட கையிலை பிடிச்சுக் குடுங்கோவன்!"

சோழியன்: "ஓமோம்... இப்பதானே அத்தான் வெளியில வந்து இருக்கிறார், இனி அக்காவுக்கும் இன்னும் சரியா வருத்தம் மாறேல.. கொஞ்ச காலத்துக்கு அவள் குடும்பத்துக்கு உதவியா வீட்டில இருக்கட்டும்.."

வன்னிமைந்தன்: "நீங்கள் சொல்லிறதும் சரிதான்.."

ஈழப்பிரியன்: "பிறகு உங்கட பெடியங்கள் பாடு என்னமாதிரி?"

வன்னிமைந்தன்: "பெரியவங்கள் விருப்பம் என்றா இயக்கத்த விடலாமாம்.. ஆனா அவங்கள் தங்களால வீட்டுக்கு திரும்பி வரேலாது எண்டு சொல்லி கடிதம் எழுதி அனுப்பி இருக்கிறாங்கள்.."

சோழியன்: "வேறேன்ன? உந்த ஈப்பி அறுவான்கள் செய்த அட்டகாசத்துக்கு பிள்ளைகள் பாவங்கள் என்ன செய்யுங்கள்?"

ஈழப்பிரியன்: "ஹும்.. உவன் யமுனாவயும் ஒரு மாதிரி இஞ்ச கூட்டிக்கொண்டு வந்திட்டன். அவனின்ர போக்குகள் அவ்வளவு நல்லதா தெரியேல. கெதியில ஏதாவது ஒரு நாட்டுக்கு அவன அனுப்பிவைக்க அலுவலுகள் பார்க்கவேண்டி இருக்கு!"

சோழியன்: "நீங்கள் கதையுங்கோ, நான் கலியாணத்துக்கு வந்த மற்ற ஆக்கள கவனிக்கிறன். பிறகு வந்தம் கவனிக்கயில்ல எண்டு சனம் குறைப்படப் போகிதுகள்!"

சாணக்கியனும், தூயாவும் இன்னொரு மூலையில் இருந்து உரையாடிக்கொண்டு இருந்தனர்..

சாணக்கியன்: "லிசான் மாமாவுக்கும் ரெஜின்ரேசன் முடிஞ்சு! இனி அடுத்தது உமக்கும் எனக்கும் தானே கலியாணம்?"

தூயா: (கோபம்..) "யூனிவசிட்டிக்கு போய் இன்னும் ஒரு வருசம் ஆகேல, அதிக்கில கலியாணம் வேற உங்களுக்கு தேவைப்படுகிதே?"

சாணக்கியன்: "சீ சும்மா சொல்லிப் பாத்தனான்! என்றைகாவது ஒருநாளைக்கு நாங்கள் ரெண்டுபேரும் கலியாணம் கட்டத்தானே வேணும்?"

தூயா: "ம்..." (மெளனம்.. யோசனை..) "அனி, அன்ரி, தம்பி எப்ப அமெரிக்காவுக்கு போறீனம்?"

சாணக்கியன்: "வாற கிழமை, ரிக்கெட்டிங் எல்லாம் செய்தாச்சு... இப்ப சொப்பிங் கொஞ்சம் செய்யவேண்டி இருக்கு! ஏன் நீர் உத அனியிட்ட கேக்கேலையே?"

தூயா: "கதைக்க நேரம் கிடைக்கேல.. ம்.. அது சரி யார் அந்த கேர்ள் வானவில்லுக்கு பின்னால சுத்திக்கொண்டு திரியுறா?"

சாணக்கியன்: (சிரிப்பு...) "இது கொழும்பு தானே? ஊர்மாதிரி இல்லை.. இஞ்ச பால்குடிகளுக்கெல்லாம் போய்பிரண்ட், கேர்ள் பிரண்ட் எண்டு இருக்கு!"

தூயா: "ஓ அப்பிடியே?" (ஆச்சரியம்..)

சாணக்கியன்: "என்ன அப்பிடியே? நீரும் என்ன உந்த வயசில விரும்பத்துவங்கீட்டீர் தானே?"

தூயா: "ஆனா இவவ மாதிரி கலியாணவீட்டுக்கெல்லாம் வந்து உங்களுக்கு பின்னால நான் திரிஞ்சனானே?"

சாணக்கியன்: "என்ன இருந்தாலும் லவ் பண்ணத்துவங்கீட்டீர் தானே? ஊரில மனதுக்க ஒளிச்சு வச்சு செய்யுறத இஞ்ச பப்ளிக்கா செய்யுறீனம்! இதில என்ன பிழ இருக்கு?"

தூயா: (யோசனை..) "பிழை இல்லத்தான்!"

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

இந்திரநாதனின் மகள் அகல்யாவிற்கு இரசாயனவியல் கற்பிக்க சென்ற குளகாடனுக்கு அகல்யா தனது உடல் அசைவுகள் மூலம் இயக்கவியல் கற்பிக்கத் தொடங்கினாள். கொழும்பில் செல்வச்செருக்குடன் வாழ்ந்த அகல்யாவிற்கு தனக்கு கற்பிக்கும் ஆசிரியருக்கு எப்படி மரியாதை செலுத்துவது என்று தெரிந்திருக்கவில்லை. முதலில் வெறித்த கண்பார்வையுடன் ஆரம்பித்த அவளது லீலைகள் இப்போது மேசைக்கு கீழாக கால்களினால் குளகாடனின் கால்கள் மீது உரசி விளையாடுவதுவரை வளர்ந்துவிட்டது. குளகாடன் ஆரம்பத்தில் இதை அவள் விளையாட்டுத்தனமாக செய்வதாக நினைத்து பேசாமல் இருந்துவிட்டான். மேலும் அகல்யாவிற்கு ஒரு தனியறையில் குளகாடன் பாடம் சொல்லி கொடுத்து வந்ததால் அவள் செய்யும் சேட்டைகள் வீட்டுக்காரருக்கு வெளியில் தெரிய வாய்ப்பு இருக்கவில்லை. பாடம் ஆரம்பித்து இடைவேளை வந்ததும் வேலைக்காரி மஞ்சு கதவை தட்டி "அம்மா டீ," என்று கூறி தேனீரையும், சிற்றுண்டியையும் அறையினுள் வைத்துவிட்டு செல்வாள். வேறு ஒருவரும் அறையினுள் பாடம் நடக்கும் நேரத்தில் வருவதில்லை. தொடர்ந்து வரும் வகுப்புக்களில் அகல்யாவின் நெருக்கங்கள், தொல்லைகள் அதிகரிக்க அதிகரிக்க அகல்யா தன்னை காதலிப்பதாக குளகாடன் நினைக்க தொடங்கினான். இதனால் அவள் செய்யும் சேட்டைகளையெல்லாம் அவன் புன்னகை செய்து பொறுத்துக்கொண்டான். ஆனால், இன்று அகல்யா ஒரு படி மேலே சென்று குளகாடன் அவளுக்கு கற்பித்துக்கொண்டு இருந்தபோது அவனது கையை திடீரென இறுகப்பற்றிக்கொண்டாள்.

குளகாடன்: "கைய விடும்.."

அகல்யா: "ஏன் விடவேணும்?"

குளகாடன்: "யாராவது பார்க்கப்போறீனம்?"

அகல்யா: "பாத்தா என்ன?"

குளகாடன்: "பிளீஸ் கையவிடும்.."

அகல்யா: "விட மாட்டன்.."

குளகாடன்: (கையை தனது பலத்தை பாவித்து அகல்யாவின் பிடியில் இருந்து விடுவித்துக்கொள்கின்றான்)

அகல்யா: (சிரிப்பு, மீண்டும் கால்களால் மேசைக்கு கீழாக தனகல்..)

குளகாடன்: "சரி, நாங்கள் பாடத்துக்கு வருவம்.." (தொடர்ந்து சீரியசாக பாடத்தை கற்பிக்கின்றான்)

அகல்யா: (படிப்பிப்பது எதையும் காதில்போடாது குளகாடனை வைத்தகண் வாங்காது வெறித்துப் பார்த்துக்கொண்டு இருக்கிறாள், கால்கள் தொடர்ந்து மேசைக்கு கீழாக குளகாடனின் கால்களுடன் உரசி விளையாடிக்கொண்டு இருக்கின்றன. குளகாடன் இப்போது தனது கால்களை வேறுபக்கம் விலத்தி எடுத்து அகல்யாவின் இயக்கவியல் பாடத்தை முடிவுக்கு கொண்டுவருகின்றான்) "சரி.. டைம் வந்திட்டுது, இண்டைக்கு இவ்வளத்தோட நிப்பாட்டுவம். படிப்பிச்சதெல்லாம் விளங்கினது தானே?"

அகல்யா: (பதில் எதுவும் கூறாது தொடர்ந்தும் வைத்தகண் வாங்காது குளகாடனை வெறித்துப்பார்த்துக் கொண்டு இருக்கின்றாள்.)

குளகாடன்: (மேலதிகமாக எதுவும் பேசாது அறையை விட்டு வெளியேறுகின்றான்)

(இந்திரநாதன் மேல்மாடியில் கிரிக்கட் வர்ணனை ஒன்றை தொலைக்காட்சியில் பார்த்துக்கொண்டு இருக்கின்றார்.)

இந்திரநாதன்: "எப்பிடி தம்பி, மகள் நல்லா செய்யுறாவே?"

குளகாடன்: "என்னால முடியுமானளவு படிப்பிக்கிறன்.."

இந்திரநாதன்: "என்ன தம்பி இப்பிடி சொல்லிறீர்? உமக்கு வேணுமென்றா இன்னும் ஐம்பது ரூவா hourக்கு கூட்டித் தரலாம். அகல்யாவ டெஸ்டுக்கு நல்ல மார்க்ஸ் எடுக்க வைக்கிறது உம்மட பொறுப்பு! understand?"

குளகாடன்: ஓகே.. (மேலதிகமாக எதுவும் கதைக்காது, சிரித்துவிட்டு மாடிப்படிகளால் கீழ் இறங்குகின்றான்..)

(கெளரி வெற்றிலையை மென்றபடி, தனது உறவினர்களுடன் தனது பெருமைகளை பேசி உரையாடிக்கொண்டு இருக்கின்றாள்.)

உறவினர்: "கூ இஸ் திஸ்?"

கெளரி: (சத்தமாக) "ஓ ஹீஸ் அகல்யாஸ் கெமிஸ்ரி மாஸ்டர். வெரி நைஸ் கை. வீ ஆ கிவிங் கிம் குட் மணி!"

உறவினர்: "ஓ ரியலி?" (போலியான ஆச்சரியம்)

கெளரி: "ஹாய் மாஸ்டர், திஸ் இஸ் மை கசின், சீஸ் இஸ் ஆஸ்க்கிங் எபவுட் யூ" (சிரிப்பு..)

குளகாடன்: (கதையை கேட்பதில் கவனம் செலுத்தியதில் படியை கவனித்து காலை வைக்கவில்லை. தடக்குப்பட்டு விழுகின்றான்..) "ஆ.."

கெளரி: (சத்தமாக) "ஓ மை காட்!"

(மனைவியின் ஓலத்தை கேட்ட இந்திரநாதன் மேலிருந்து ஓடிவந்து கத்துகின்றார்..)

இந்திரநாதன்: "ஹேய் வட் ஹப்பிண்ட் டார்லிங்க்? ஆ யூ ஓகே?"

கெளரி: "ஆம் ஓகே, பட் அகல்யாஸ் மாஸ்டர் காஸ் ஜஸ்ட் போலின் ஒன் த புளோர்.."

இந்திரநாதன்: "ஓ.. டோண்ட் வொரி! டோண்ட் வொரி! ஐ லுக் ஆப்டர் ஹிம்.. யூ ரிலாக்ஸ் டார்லிங்!"

(குளகாடன் தான் நிலத்தில் விழுத்திய பொருட்களை பொறுக்கியபின் காலை நொண்டியபடி வெளியே செல்கின்றான்)

இந்திரநாதன்: "வட் மாஸ்டர்? ஸ்டெப்ஸ் ஆள இறங்கேக்க கெயார்புலா இருக்கிறேலையா?"

குளகாடன்: "இல்ல, தெரியாமல்.."

இந்திரநாதன்: "ஓகே.. பரவாயில்ல. நெக்ஸ்ட் டைம் கெயார்புலா இருங்கோ. யூவ் ஸ்கெயார்ட் மை வைப்!"

குளகாடன்: "சொறி.."

அகல்யா: (மொட்டை மாடியில் நின்று கொண்டு குளகாடனை பார்த்து கிண்டலுடன் கத்துகின்றாள்) "பாஆய்!"

குளகாடன்: (மனதினுள் சொல்கின்றான்) "எல்லாம் இவள் இண்டைக்கு எண்ட கையப்பிடிச்சதால வந்த வின போல இருக்கு. என்ன காதலிக்கிறாள் போல இருக்கு. பாப்பம் எல்லாம் எங்க போய் நிக்கிது எண்டு. ஏதோ கடவுள்விட்ட வழி!"

Link to comment
Share on other sites

  • 5 months later...

இன்று மீண்டும் குளகாடன் அகல்யாவிற்கு பாடம் சொல்லிக்கொடுப்பதற்காக இந்திரநாதன் வீட்டிற்கு சென்றான். அவன் சிந்தனை எல்லாம் அகல்யா இன்றும் தன்னுடன் ஏதாவது சேட்டை செய்வாளோ என்பது பற்றியதாய் இருந்தது. அகல்யாமீது அவனுக்கு ஒருவிதமான அன்பும் தோன்றத்தொடங்கியது. எனினும், செல்வந்தன் இந்திரநாதனை நினைக்க, அவர்களின் செல்வாக்கை நினைக்க மனதினுள் சற்றுபயம் தொற்றிக்கொண்டது. அகல்யாவிற்கு பாடம் சொல்லிக்கொடுப்பதால் வீணாக ஒரு சிக்கலினுள் மாட்டிக்கொள்கின்றோமே என்றும் அவன் நினைத்துக்கொண்டான்.

வழமைக்கு மாறாக இன்று குளகாடனுக்கு வேறு ஒரு புது அனுபவம் காத்து இருந்தது. என்றும் இல்லதவாறு அகல்யாவின் தாய் குளகாடனை வாசலில் வைத்து அன்புஒழுக வரவேற்றாள்.

கெளரி: "வாங்கோ மாஸ்டர், வாங்கோ, இவ்வளவுநேரமும் உங்களப்பற்றித்தான் கதைச்சுக்கொண்டு இருந்தனாங்கள்!"

குளகாடன்: (குழப்பம்.. தலையை சொறிகின்றான். வெக்கமும் தொற்றிக்கொள்கின்றது.. தலையைக்குனிந்தபடி மெளனம்)

கெளரி: மாஸ்டர் கடைசி வகுப்பில கால்தடக்கி விழுந்தாப்பிறகு இப்பநடக்கேக்க கொஞ்சம் கவனம் போல இருக்கிது! நிலத்தப்பாத்துக்கொண்டு இருக்கிறார்..

குளகாடன்: (கொஞ்சம் ரோசம் வருகின்றது..) இல்ல..

கெளரி: "அகல்யா வெளியில யாரோ பிரண்ட் வீட்டபோய் இருக்கிறா. இருங்கோ வாறன்.." (ஹோலினுள் நின்றுகொண்டு கத்துகின்றாள்..) "மஞ்சு மாஸ்டருக்கு பிளேட்டில போட்டு ஐட்டம்ஸ் எல்லாத்தையும் கொண்டு வா.."

குளகாடன்: (திருதிரு என்று முளுசுகின்றான்..)

கெளரி: "மாஸ்டர் என்ன குடிக்கிறீங்கள்? கூலா என்னவும் தரட்டா? இல்லாட்டி டீ, காபி என்னமும் குடிக்கிறீங்களா?"

குளகாடன்: (மீண்டும் முளுசுகின்றான். வழமையாக பாடம் படிப்பிக்கத்தொடங்கி அரைமணித்தியாலத்தின் பின்பே டீ கொடுப்பார்கள். இன்று என்ன வித்தியாசமா நடக்கிது. மரியாதை எக்கச்சக்கமா இருக்கிது என்று குழம்பினான்...)

கெளரி: "என்ன மாஸ்டர் கடுமையா ஏதோ யோசிக்கிறீங்கள்? இண்டைக்கு அவரிண்ட பேர்த்டே!"

(அவள் கூறி முடிப்பதற்குள் வேலைகாரி மஞ்சு ஒரு தட்டம் நிறைய பெரியகேக்துண்டுகள், பட்டீஸ், இனிப்புக்கள் என்று கொண்டுவந்து குளகாடன் முன் நீட்டினாள்..)

குளகாடன்: (தனக்குள் முணுமுணுக்கின்றான்.. "என்ன இவள் ஆடு, மாட்டுக்கு தவிடு, புண்ணாக்கு வக்கிறமாதிரி ஒரு பழக்க வழக்கம் தெரியாமல் கோப்பய கொண்டு வந்து மூஞ்சைக்கு முன்னால நீட்டுறாள்?..")

கெளரி: "மஞ்சு மாஸ்டருக்கு போய் ஜூஸ் கொண்டுவா.. " (கதைத்தபடி.. குளகாடனுக்கு அருகில் உள்ள இன்னொரு இருக்கையில் அமர்கின்றாள்..)

தன்னை அடிக்கடி மாஸ்டர், மாஸ்டர் என்று கெளரி கூறியது குளகாடனுக்கு எரிச்சலை ஏற்படுத்தியது. சிற்றுண்டி சாப்பிடுவதற்கு அவனுக்கு விருப்பமாக இருந்தாலும் கெளரி அவன் அருகில் இருந்து அவனை உற்றுநோக்கிக்கொண்டு இருந்ததால் ஏதோ தனக்கு விருப்பம் இல்லாமல் சாப்பிடுவதுபோல் பாசாங்கு செய்துகொண்டு இருந்தான்.

கெளரி: "ஏன் மாஸ்டர் உமிஞ்சுகொண்டு இருக்கிறீங்கள்? கேக் நல்லா இல்லையா? நான்தான் செய்தனான்.."

குளகாடன்: (மனதினுள்.. "என்னடா இது.. இண்டைக்கு மகளுக்கு பதிலா தாய்வந்து என்ன அறுத்துக்கொண்டு இருக்கிறாள்!") இல்ல டேஸ்டா இருக்கிது.

கெளரி: "ஓ தாங்க்ஸ்"

குளகாடன்: "அகல்யா வர டைம் எடுக்குமோ?"

கெளரி: "சரியா தெரியாது மாஸ்டர். வை யூ காவ் எனி அப்பொயிண்ட்மண்ட்? கிளாஸ் இல்லையெண்டாலும் நாங்கள் உங்களுக்கு பே பண்ணுவம். வொறி பண்ணாதிங்கோ.."

குளகாடன்: (ஏன் சும்மா வாயக்குடுத்தம் என்று இப்போது நினைத்தான்..)

கெளரி: "மாஸ்டர்.. நீங்கள் தனியாவா இருக்கிறீங்கள்? குக்கிங் எல்லாம் நீங்கள்தான் செய்வீங்களா?"

குளகாடன்: (மனதினுள்.."என்ன இது... மகளிண்ட படிப்பபற்றி ஒண்டும் கேளாமல் நான் தனிய இருக்கிறனோ, யார் குக் பண்ணுறது எண்டு எல்லாம் கேக்கிறா..") "ஓம் தனியத்தான் இருக்கிறன். கடையிலதான் சாப்பாடு. சமைக்க ரூமில வசதி இல்ல.."

விட்டுவாசலில் கார் ஒன்றுவந்து நிற்கின்ற சத்தம் கேட்கின்றது.

கெளரி: "மஞ்சு வெளியில யார் எண்டு பார்!"

மஞ்சு: (ஓடிச்சென்று பார்க்கின்றாள்..) "தங்கச்சியிண்ட சிங்கள பிரண்ட் வந்து இருக்கிறா.."

கெளரி: (ஆச்சரியம், பதற்றம்.. எழுந்து செல்கின்றாள்..) "வட் கப்பிண்ட்? வெயாஸ் அகல்யா?"

அகல்யாவின் நண்பி: (ஆச்சரியம்...) ஐ டோண்ட் நோ.. வெயாஸ் சீ?"

கெளரி: (கோபம்...) "சீ டிட் இண்ட் கம் டு யுவர் கவுஸ்?"

அகல்யாவின் நண்பி: "நோ ஆண்டி.."

இந்தநேரம் அகல்யா தன்னுடன் படிக்கும் சிங்கள நண்பன் ஒருவனுடன் தியேட்டர் ஒன்றில் ஆபாசமான ஆங்கிலப்படம் பார்த்துக்கொண்டு இருந்தாள். வீட்டில் தாயுக்கு சிங்கள நண்பியின் வீட்டுக்கு போவதாக டிமிக்கி கொடுத்திருந்தாள். அவளது கெட்டகாலம் சிங்களநண்பி கெளரிவீட்டுக்கு தற்செயலாக சென்றுவிட்டாள்.

கெளரி: "ஓகே.. ஐ டேக் கெயார் ஒவ் ஹெ. டூ யூ லைக்டூ வெய்ட் போர் ஹெ?"

அகல்யாவின் நண்பி: "நோ ஆண்டி. ஐ கம் லேட்டர்.." (வெளியேறுகின்றாள்..)

கெளரி: (கத்துகின்றாள்..) "மஞ்சு பிரிங் மீ த போன்.."

மஞ்சு: (கைத்தொலைபேசியை தூக்கிக்கொண்டு ஓடிவருகின்றாள்) "இந்தாங்கோம்மா.."

கெளரி: (குளகாடன் இருப்பதை இப்போதுதான் நினைத்துவிட்டு...) "ஓ ஸாரி மாஸ்டர். நீங்கள் கிளாஸுக்கு பிறகு வாங்கோ. நாங்கள் இண்டைக்கும் சேத்து பே பண்ணுவம்.."

குளகாடன்: "ஓகே. நான் பிறகு வாறன்.. பாய்.."

கெளரி: "தாங்க்ஸ் மாஸ்டர்!"

குளகாடன் சென்றதும், இந்திரநாதனிற்கு கோல் பறக்கின்றது. இந்திரநாதனை கெளரி கோபித்துக் கொள்கின்றாள். அவர் மகளை அதிகசெல்லம் கொடுத்து பழுதாக்கிவிட்டார் என்று புலம்புகின்றாள். சில மணித்தியாலங்களின்பின் சிங்களநண்பன் அகல்யாவை தனது காரில் அவளது வீட்டுவாசல் வரைவந்து இறக்கிவிட்டுச் சென்றான்.

தகப்பனின் செல்லம் காரணமாக கெளரியின் கடுமையான விசாரணைகளில் இருந்து அகல்யா தப்பித்துக்கொள்கின்றாள். ஜாலியாக தகப்பனுடன் பிறந்தநாள் கொண்டாடி விளையாடிவிட்டு தனது அறைக்குச் சென்று சிங்கள நண்பனுடன் தொலைபேசியில் கதைத்து மகிழ்கின்றாள். இந்திரநாதனோ மகள்பற்றி ஏதும் சந்தேகப்படாமல் மகளைப்பற்றி கண்டபடி பேசியதற்காக தனது மனைவி கெளரியை கோபித்துக்கொள்கின்றார்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஹிந்தி மொழிக்கு எதிராக‌ போராடி ஆட்சிய‌ பிடித்த‌ திராவிட‌ம் உத‌ய‌நிதியின் ம‌க‌ன் எந்த‌ நாட்டில் ப‌டித்து முடிந்து விட்டு த‌மிழ் நாடு வ‌ந்தார்..................ஏன் உற‌வே புல‌ம்பெய‌ர் நாட்டில் த‌ங்க‌ட‌ பிள்ளைக‌ள் ஆங்கில‌த்தில் க‌தைப்ப‌து பெருமை என்று நினைக்கும் ப‌ல‌ர் இருக்கின‌ம் யாழில் இனி ப‌ழைய‌ திரிக‌ளை தேடி பார்த்தா தெரொயும்...............நான் நினைக்கிறேன் சீமானின் ம‌க‌னுக்கு த‌மிழ் க‌தைக்க‌ தெரியும்.................இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ர் ம‌ற்றும் அவ‌ரின் ம‌க‌ன் உத‌ய‌நிதி இவ‌ர்களுக்கு ஒழுங்காய் த‌மிழே வாசிக்க‌ தெரியாது.........ச‌ரி முத‌ல‌மைச்ச‌ர் ஜ‌யாவுக்கு வ‌ய‌தாகி விட்ட‌து ஏதோ த‌டுமாறுகிறார் வாசிக்கும் போது உத‌ய‌நிதி அவ‌ரின் அப்பாவை விட‌ த‌மிழின் ஒழுங்காய் வாசிக்க‌ முடிவ‌தில்லையே உற‌வே...............சீமானின் ம‌க‌ன் மேடை ஏறி த‌மிழில் பேசும் கால‌ம் வ‌ரும் அப்போது விவாதிப்போம் இதை ப‌ற்றி.............என‌து ந‌ண்ப‌ன் கூட‌ அவ‌னின் இர‌ண்டு ம‌க‌ன்க‌ளை காசு க‌ட்டி தான் ப‌டிப்ப‌க்கிறார்............அது சில‌ரின் பெற்றோர் எடுக்கும் முடிவு அதில் நாம் மூக்கை நுழைத்து அவ‌மான‌ ப‌டுவ‌திலும் பார்க்க‌ பேசாம‌ இருக்க‌லாம்............ஒரு முறை த‌மிழ் நாட்டை ஆளும் வாய்ப்பு சீமானுக்கு கிடைச்சா அவ‌ர் சொன்ன‌ எல்லாத்தையும் செய்ய‌ த‌வ‌றினால் விம‌ர்சிக்க‌லாம் ஒரு தொகுதியிலும் இதுவ‌ரை வெல்லாத‌ ஒருவ‌ரை வ‌சை பாடுவ‌து அழ‌க‌ல்ல‌ உற‌வே........................
    • உந்தாள் முந்தியும் ஒருக்கால் கம்பி எண்ணினதெல்லோ? 
    • “அந்த மக்களிடம் அற்ப விலைக்கு வாங்கி, புலம் பெயர் மக்களிடம் அறாவிலைக்கு விற்கும் கந்துவட்டி வகை வியாபாரிகளை” இதனை எந்த அடிப்படையில் கூறுகிறீர்கள்? உதாரணமாக ஓர் பொருளின் சிறீலங்கா v பிரித்தானிய விலையை கூறுங்கள். எனக்கு தெரிந்தவர்களிடம் அதனை விசாரித்து கூறுகிறேன்.  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.