Jump to content

2018 – தமிழர்களுக்கான அரசியல் படிப்பினைகள்? - யதீந்திரா


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

2018 – தமிழர்களுக்கான அரசியல் படிப்பினைகள்?

யதீந்திரா 
வரலாற்றிலிருந்து நாம் எதனை கற்றுக் கொள்கின்றோம் என்றால் எதனையுமே அல்ல – என்று ஒரு கூற்றுண்டு. வரலாற்றில் இது எந்ததெந்த சமூகங்களுக்கெல்லாம் பொருந்துமென்று நாம் அறியாது விட்டாலும் கூட, நிச்சயமாக தமிழர்களுக்கு பொருந்துமென்று, அழுத்தம் திருத்தமாக குறிப்பிடலாம். அந்தளவிற்கு தமிழர்கள் எதனையுமே அவர்களின் கடந்தகாலத்திலிருந்து கற்றுக்கொள்ளவதில்லை. நான் இங்கு தமிழர்கள் என்று குறிப்பிடுவது சாமானிய தமிழ் மக்களை அல்ல, மாறாக, அந்த சாமானிய மக்களுக்காக இயங்குவதாகவும் சிந்திப்பதாகவும் கூறிக்கொள்ளும் அரசியல்வாதிகளையும், அரசியல் செயற்பாட்டாளர்களையும் புத்திஜீவிகளையும்தான். 2015இல் பெருமெடுப்பில் ஆரம்பித்த ஜனநாயகத்திற்கான பயணம் அதன் படுமோசமான தோல்வியை பதிவுசெய்த ஆண்டுதான் 2018. இந்த விடயத்தை ஆழமாகப் பார்த்தால் உண்மையில் இது ஜனநாயகத்தின் தோல்வியல்ல. மாறாக, தமிழ் அரசியல் தலைமையின் தோல்வி – அந்த தலைமையின் மீது காத்திரமான அழுத்தங்களை பிரயோகிக்க முடியாமல் போன தமிழ் சிவில் சமூகத்தினரின் தோல்வி. கூட்டமைப்பு பிழையாக பயணிக்கிறது என்று கூறி, தங்களை மாற்றுத் தலைமையாக நிறுவ முற்பட்டவர்களின் தோல்வி. மொத்தத்தில் நம் அனைவரதும் தோல்வி. அனைவரதும் தோல்விக்கு அனைவருமாகவே பொறுப்பேற்பதுதான் சரியானது.

தமிழர்களிடம் இரண்டு வகையான தோல்வி அனுபவங்கள் உண்டு. ஒன்று, மிதவாத அரசியலின் தோல்வி. மிதவாத அரசியல் தோற்றுப்போன இடத்திலிருந்துதான், அந்த இடைவெளியை ஆயுதப் போராட்டம் சுவீகரித்துக் கொண்டது. அதுவும் இறுதியில் தோல்வியில்தான் முற்றுப்பெற்றது. இந்த இரண்டு அனுபவங்களிலிருந்தும் நாம் கற்றுக்கொண்டது என்ன? எதையாவது கற்றுக்கொண்டிருக்கிறோமா? மிதவாதிகளான செல்வநாயகம் தொடக்கம் அமிர்தலிங்கம் வரையில் சட்ட ஆற்றலுக்கும், சர்வதேச சக்திகளுடன் ஊடாடுவதற்கான ஆங்கிலப் புலமைக்கும் பஞ்சமிருந்திருக்கவில்லை. அவை அனைத்தும் இருந்தும் அன்றைய சிங்கள ஆட்சியாளர்களை ஒரு வழிக்குக்கொண்டுவர அன்றைய மிதவாதிகளால் முடியவில்லை. சிங்கள ஆட்சியாளர்களை வழிக்குக் கொண்டுவரும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியை தழுவும்போது, அந்தத் தோல்வியை முறியடிக்கும் உபாயமாக தமிழ் மக்களுக்கான கோரிக்கைகளை அதிகரிக்கும் காரியத்தையே அன்றைய மிதவாத தலைவர்கள் செய்தனர்.

சிங்கள ஆட்சியாளர்களுடனான உடன்பாடுகள் கிழித்தெறியப்பட்ட பின்புலத்தில்தான் பிரிந்து செல்வதற்கான வட்டுக் கோட்டைத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதனை நிறைவேற்றிய அமிர்தலிங்கமே பின்னர் தமிழ் ஆயுதத்திற்கு பலியாகிப்போனார். அமிர்தலிங்கத்தின் கொலை என்பது தமிழ் மக்கள் மத்தியில் மிதவாத தலைமையின் செல்வாக்கை இல்லாமலாக்குவதற்கான கொலைதான். இதனை பிறிதொரு வகையில் கூறுவதானால் அது ஒரு தனிநாட்டுக்கான கொலை. அன்று ஆரம்பித்த கொலை 2009இல் முள்ளிவாய்க்காலில் தமிழ் இனத்தின் மீதான கொலையில் முற்றுப்பெற்றது. இந்த இடைப்பட்ட காலத்தில் வரலாறு ஏராளமான அனுபவங்களை, படிப்பினைகளை தமிழ் தலைமுறைக்கு விட்டுச்சென்றிருக்கிறது. சிங்கள தலைவர்கள் எப்படியானவர்கள் – அவர்களது ராஜதந்திர ஆற்றல் எத்தகையது? அவர்கள் எவ்வாறு நடந்துகொள்வார்கள்? இந்தியா என்ன செய்யும்? அமெரிக்கா என்ன செய்யும்? சர்வதேசம் என்ன செய்யும்? ஜக்கிய நாடுகள் சபை என்ன செய்யும்? புலம்பெயர் சமூகத்தினால் என்ன செய்ய முடியும்? இப்படியான ஏராளமான கேள்விகளுக்கு போதுமான பதில்கள் கடந்த காலத்திடம் இருக்கிறது. அந்த பதில்களை தேடுவதும் – அதிலிருந்து கற்றுக் கொள்வதும் யாருடைய பணி?

2015இல் ஏற்பட்ட ஆட்சிமாற்றத்திற்கு ஆதரவளிக்கும் முடிவை கூட்டமைப்பு எடுத்தபோது – எழுத்துமூல உடன்பாடின்றி ஆதரவளிப்பது சரியானதா என்றொரு கேள்வி முன்வைக்கப்பட்டது. எழுத்து மூல உடன்பாடுகள் பல கிழித்து வீசப்பட்டிருக்கின்றன – எனவே மீண்டுமொரு ஒப்பந்தம் கிழத்து வீசப்படுவதை நாங்கள் விரும்பவில்லை என்றவாறு சம்பந்தன் தரப்பு பதிலளித்தது. எனவே பரஸ்பர புரிந்துனர்வின் அடிப்படையில் நாங்கள் தீர்வை காணவுள்ளோம் என்றனர். உண்மைதான் – சிங்கள தலைவர்களுடனான எழுத்து மூல உடன்பாடுகள் பல கிழித்து வீசப்பட்டுத்தான் இருக்கின்றன. ஆனால் இன்று கூட்டமைப்பு ஏற்படுத்திக்கொண்ட வாய்மூல உடன்பாடுமல்லவா காறி உமிழப்பட்டிருக்கிறது. எழுத்து மூல உடன்பாட்டை மட்டுமல்ல வாய்மூல உடன்பாட்டையும் சிங்களத் தலைவர்கள் புறம்தள்ள தயங்கமாட்டார்கள் என்னும் ஒரு புதிய படிப்பினையல்லவா தமிழர்களுக்கு கிடைத்திருக்கிறது. ஒரு புதிய அரசியல் யாப்பு ஒன்று நிச்சயம் வரும் என்னும் நம்பிக்கையை சம்பந்தன் – சுமந்திரன் கூட்டு, தொடர்ச்சியாக கூறிவந்தது? ஆனால் தமிழர்களிடம் இருக்கின்ற கடந்தகால அனுபவங்களின் அடிப்படையில் அப்படியொரு யாப்பு இந்த நாட்டில் வர முடியுமா? வரலாற்று அறிவின் வழியாக சிந்தித்திருந்தால், கடந்த மூன்று வருடங்களை வேறுவிதமாக பயன்படுத்தியிருக்க வாய்ப்புக்கள் இருந்தனவா? இந்தக் கேள்விகளுக்கான விடைகளை தேட, நாம் அதிகம் கற்றுக்கொள்ள வேண்டியவர்களாகவும் சிந்திக்க வேண்டியவர்களாகவும் இருக்கிறோம்.

TNA

கடந்த காலங்களில் ஒரு சிங்கள கட்சி தீர்வை தரப்போவதாக கூறுகின்ற போது, பிறிதொரு கட்சி அதனை எதிர்த்து கடுமையான பிரச்சாரங்களை மேற்கொண்டு, அந்த முயற்சியை தோற்கடிப்பதான தோற்றம் காண்பிக்கப்படும். பண்டா – செல்வா ஒப்பந்தத்திலிருந்து சந்திரிகாவின் தீர்வுப்பொதி வரையில் இதுதான் யதார்த்தம். இந்த வரலாற்றுப் போக்கிற்கு மைத்திரியும் – ரணிலும் எவ்வாறு விதிவிலக்காக இருப்பார்கள் என்று நாம் எதிர்பார்க்க முடியும்? கடந்த காலத்தில் தமிழர்களுக்கான தீர்வு முயற்சிகளை மாறி மாறி எதிர்ப்பதன் மூலம், தங்களது தென்னிலங்கை வாக்குவங்கியை தக்கவைக்க முற்பட்ட இருதரப்பும் ஓரணியாக நிற்கும் போது, அது தமிழர்களுக்கு சாதகமானதென்னும் கணிப்பு இருந்தது ஆனால் அதுவும் இன்று தவறென்று நிரூபிக்கப்பட்டிருக்கிறது. ஆட்சி மாற்றத்தின் போது சந்திரிக்கா ஒரு மிக முக்கியமான நபராக காட்சியளித்தார். அவர்தான் மைத்திரியை இயக்குவதான ஒரு தோற்றப்பாடும் காண்பிக்கப்பட்டது. ஆனால் இன்று அந்த சந்திரிக்கா சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமை செயலகத்திற்குள் நுழைவதற்கு மைத்திரி தடைவித்திருக்கின்றார். சிங்கள அதிகார உறவுகள் எந்தளவு விரைவாக மாறியிருக்கின்றன. இந்த நபர்களை நம்பி ஒரு இனத்தின் அரசியலை கையாளலாம் என்று எண்ணியது சரியானதா? இது யாருடைய தவறு?

அரசியலை பொறுத்தவரையில் ஒவ்வொரு விடயங்களையும் விளங்கிக்கொண்டு, அதற்கேற்ப செயலாற்ற வேண்டியது எங்களுடைய வேலையேயன்றி, அது மற்றவர்களுடையதல்ல. தமிழர்களுக்காக வேறு எவரும் சிந்திக்கமாட்டார்கள்? தமிழர்கள்தான் சிந்திக்க வேண்டும். 2009இற்கு பின்னரான கடந்த பத்து ஆண்டு காலத்தில், நாம் கடந்துவந்த ஒவ்வொரு ஆண்டின் அரசியல் அனுபவங்களும், நமக்கு உணர்த்தியிருக்கும் தவிர்க்க முடியாத உண்மை இதுதான். ஆனாலும் அந்த வரலாற்றிலிருந்து எதனையும் கற்றுக்கொள்ள நம் மத்தியில் தலைமைகள் இல்லாமல் போனதுதான், தமிழ் மக்களின் துரதிஸ்டம். இந்த நிலைமை இனியும் தொடரத்தான் செய்யும். கிடைக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பங்களையும் தமிழ் மக்கள் நலனுக்காக கையாளும் பொறிமுறை ஒன்றை கண்டுபிடிக்காத வரையில், எதிர்காலத்தில் சந்தர்ப்பங்கள் கிடைத்தாலும் கூட, அதனை தமிழ் தலைமைகளால் காத்திரமாக கையாள முடியாமல்தான் போகும். தமிழ் மக்களின் சில அடிப்படையான விடயங்களில் சேர்ந்தும், அதே வேளை தங்களது தனித்துவத்தை முன்னிறுத்தி பிரிந்தும் செயற்படும் ஒரு கட்சி ஒருங்கிணைவு பொறிமுறையொன்றை கண்டுபிடிக்க வேண்டியிருக்கிறது. அரசியலில் தீண்டாமை மனோபாவம் முற்றாக கழையப்பட்டால்தான், அது சாத்தியப்படும். அனைவரும் ஓரணியாக நிற்க வேண்டும் என்னும் கடந்த கால தமிழ் அரசியல் கோசமும் அதன் மோசமான தோல்வியைத்தான் பதிவு செய்திருக்கிறது. ஒன்று பிழைக்கும் போது, அதனை இன்னொன்று ஈடு செய்யும் உபாயங்கள்தான் அரசியலை கையாளுவதற்கு ஏற்ற சிறந்த உபாயம் என்பதையும் கடந்த கால அனுபவம் நமக்கு உணர்தியிருக்கிறது. இந்த ஆண்டிலாவது வடக்கு கிழக்கு தழுவி ஒரு பெறுமதியான அரசியல் உரையாடல் இடம்பெற வேண்டும். அதன் மூலம் புத்தாக்கம்மிக்க அரசியல் வழிமுறைகளை கண்டுபிடிக்கப்பட வேண்டும். இல்லாவிட்டால், 2018 மட்டுமல்ல – இனி வரப்போகும் ஒவ்வொரு ஆண்டுகளும், தமிழ் அரசியலைப் பொறுத்தவரையில், தோல்வி ஆண்டுகள்தான்.

 

http://www.samakalam.com/செய்திகள்/2018-தமிழர்களுக்கான-அரசியல/

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • https://online.srilankaevisa.lk/ யாராவது முயற்சி செய்து பார்த்தீர்களா? எனக்கு சரிவர வேலை செய்யவில்லை.
    • சர்கரை இல்லாங்கால்லிலுப்பை அஃதுபோல் சொல் ஒன்றின்றி நகைக்க லொல். உடான்ஸ்சுவாமி உரை எவ்வாறு சர்க்கரை இல்லாதவிடத்து, இனிப்பு சுவைக்கு இலுப்பை உபயோகிக்கப்படுகிறதோ, அதே போல,  சிரிப்பதை, நகைப்பு என சொல்லால் எழுதாமல், குறியீடாக லொல் எனவும் எழுதலாம்.  
    • வீசா பெறுவது இலகுவாக்கபடுவது முக்கியம். இழுபறி கூடாது. மற்றும்படி கட்ணங்கள் சம்மந்தமாக குறை சொல்ல ஏதும் இல்லை. அது எல்லாருக்கும் பொதுவானது தானே.  ஆனால் இங்கே என்ன கவனிக்கப்படவேண்டும் என்றால் நாங்கள் வீசா பெற்று சென்று இறங்கும்போது விமானநிலையத்தில் இலங்கை குடிவரவுப்பகுதி கையூட்டு/கைவிசேடம் கேட்டு எங்களுக்கு கரைச்சல் தரக்கூடாது. 
    • ஓம்….இடையிடே இச்சையின்றி வரும் yeah, தோள் குலுக்கல், கண் மேலே உருட்டல், பிறகு கடையில் வாய்தவறி £இல் விலை கேட்பது… எதையும் 100% மறைக்க முடியாது…. ஆனால் அப்பட்டமாய் ஜொலி ஜொலித்தால்…..ஏமாறும் சதவிகிதம் எகிறும். அதே போல் வெளிநாடு என தெரிந்தாலும், ஏமாற்ற முடியாது, விசயம், விலை தெரியும் என்ற தோற்றப்பாட்டை ஏற்படுத்துவதும் கைகொடுக்கும். எந்த வளர்முக நாட்டுக்கு போனாலும் உதவும் உத்திகள்தானே இவை.     நன்றி🙏
    • நான் இதன் மறுவளமாகவே பார்க்கிறேன். அங்கே மண்னெணை, முதல், மா, சகலதும் மானிய விலையில்தான் மக்களுக்கு தரப்படுகிறது.  ஏன் என்றால் அதை விட கூட விலைக்கு விற்றால் அந்த மக்களால் வாங்க முடியாது. அதே போலவே வடையும். அங்கே இவற்றுக்கான விலை அந்த மக்களின் வாங்கு திறனை வைத்தே தீர்மானிக்கப்படுகிறது. ஆனால் நாம் ஒரு பிரிதானியா வாங்கு திறனோடு போய், இலங்கை வாங்குதிறனுக்குரிய விலையில் பொருட்களை வாங்குவது - ஒரு வகையில் அந்த மக்களிடம் அடிக்கும் கொள்ளையே. ஆனால் எம் அந்நிய செலவாணி வரவால் அதை விட அதிகம் கொடுக்கிறோம் என்பதால் நன்மையே அதிகம். இது எல்லா 3ம் உலக நாட்டுக்கும் பொருந்தும்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.