Jump to content

ஆங்கிலம்+ஆரியத்துடன் ஒரு அக்கப்போர்! மொழிகளின் இயற்கை புரிந்துவிடு! மனிதர்க்குத் தமிழே ஆதிமொழி!-2


Recommended Posts

ஆங்கிலம்+ஆரியத்துடன் ஒரு அக்கப்போர்!

மொழிகளின் இயற்கை புரிந்துவிடு! மனிதர்க்குத் தமிழே ஆதிமொழி!-2

பேராசிரியர் ந. கிருஷ்ணன், ம.சு.பல்கலைக்கழகம், திருநெல்வேலி.

"பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைத்தால் சங்காரம் நிசமெனச் சங்கே முழங்கு!"
- பாவேந்தர் பாரதிதாசன்

"என்னப்பா! நேத்தே வந்துருவேன்னு சொன்ன! இப்பத்தான் ஊர்லந்து வர்றாப்ல இருக்கு! ஆங்கில உயிர்மெய் எழுத்து எப்படி இருக்கும் என்ற மண்டக் கொடைச்சல் தாங்கலப்பா! க்+அ=க மாதிரி b+a=ba, c+a=ca-ன்னுட்டு என்னென்னவோ கற்பனை செஞ்சு பாத்துட்டேன். கூகிள் பண்ணியும் பாத்துட்டேன்! எங்கயும் ஆங்கில உயிர்மெய் எழுத்துன்னு ஒண்ணக் கூடக் காணவே இல்லயே!", என்று அங்கலாய்த்தபடி வந்தார் நண்பர்.

"வாப்பா! இப்படி யோசிப்பமே! தமிழ்-ல உயிர்மெய் எழுத்து இல்லன்னு வச்சுக்குவம். 'வணக்கம்' என்பதை எப்படி எழுதுவோம்?", என்றேன் நான்.

"பிரிச்சு அப்படியே எழுதிற வேண்டியதுதான். 'வ்அண்அக்க்அம்'-னு தான் இருக்கும்! சரியா!", என்றார் நண்பர்.

"சரிதான்! அப்படித்தான் ஆங்கிலம் உள்ளிட்ட இந்தோ-ஆரியமொழிகளில் சொற்கள் எழுதப்படுகின்றன. சொற்களுக்கான உச்சரிப்புகள் சொற்களுடன் இணைத்துச் சொல்லிக்கொடுப்பார்கள்.", என்றேன்.

"சரிப்பா! தமிழுக்கும் இந்தோ-ஆரிய மொழிகளுக்கும் உள்ள வித்தியாசத்தைச் சொல்லு", என்றார் நண்பர்.

தமிழ் மொழிக்கும் இந்தோ-ஆரிய மொழிகளுக்கும் உள்ள அடிப்படை வேறுபாடு!

"தமிழ் எழுத்துக்கள் மனிதனின் இயல்பொலிகளால் (Natural Phonemes) உருவானவை. Iranian, and Nuristani, English, French, German, Italic உள்ளிட்ட Indo-Aryan (Indo-European) மொழிகளின் வரிவடிவ எழுத்துக்களுக்கும், ஒலிவடிவத்துக்கும் தொடர்பு இருக்காது!. அடிப்படை வேறுபாடு இதுதான்!", என்றேன் நான்.

தமிழ்எழுத்து முறையில் ஆரிய-கிரந்த எழுத்துக்கள் உருவாக்கம்!

"அப்படியானால், Indo-Aryan மொழிகளின் பின்வரிசையில் வந்த வடமொழி (பிற்காலத்தில் சமற்கிருதம்) எப்படி இயல்பொலிகளால் உருவானது?", என்றார் நண்பர்.

"அதில்தான் சங்கதியே இருக்கு! மற்ற Indo-Aryan மொழிகளில் எழுத்துக்கள் உருவாவதற்கு முன்பே, அதாவது, சுமார் 3500 ஆண்டுகள் முன்னால், அவர்களிடமிருந்து பிரிந்து இந்தியா வந்த    வேத ஆரியர்களிடமும் எழுத்து இல்லை; ஆடு-மாடுகளை மேய்த்துக்கொண்டு, எழுத்தில்லாமல், தம் இன இலக்கியமான ஆரியவேத ருக்வேதத்தை செவிவழியாகவே ஓதிவந்த வேதஆரியர்களுக்குத் தமிழ் மொழியின் நெடுங்கணக்கு அமைப்பைக் காப்பியடித்து, தம் கனத்த பொலிவொலிகளுக்கென்று (voiced sounds) சில தனி எழுத்துக்களையும் சேர்த்து, கிரந்த எழுத்துக்களை எளிதாக உருவாக்க முடிந்தது." என்றேன் நான்.

"சரிதான்! போற போக்கப் பாத்தா  சமற்கிருதமொழியில் பாதிச்சொற்கள் தமிழ் சொற்கள்-னு சொன்னாலும் சொல்லுவப்பா! கலிகாலம்! தேவபாஷைக்கே இந்த நெலமையா!", என்றார் நண்பர்.

"எப்படிப்பா இவ்வளவு சரியா சொல்லுற! தமிழர்களின் மொழி-இலக்கியச் செழுமையை உள்வாங்கி,  தம் ஆரியமொழியுடன் ஐம்பது விழுக்காடுக்கும் மேற்பட்டத் தமிழ்ச் சொற்களைக் கடன்வாங்கி, தமிழ் நெடுங்கணக்கைப் பின்பற்றி, ஆரியமொழிக்கு கிரந்த எழுத்துக்களையும், பிராகிருதத்தின் தேவநாகரி வரிவடிவ எழுத்துக்களையும்,  ஒலிவடிவ எழுத்துக்களையும், உருவாக்கிக் கொண்டனர் என்பதே உண்மை!", என்றேன் நான்.

"நீ சொன்னதை நிரூபிக்க முடியுமா?", என்று கேட்ட நண்பர், சுதாரித்துக்கொண்டு, "அதை அப்புறம் சொல்லு! முதல்ல, ஆங்கிலேயன் எப்போ உயிர்மெய் எழுத்தக் கண்டுபுடிச்சான்? அதச்சொல்லு", என்று மீண்டும் ஆர்வமானார் நண்பர்.

ஆங்கிலமொழியில் பதினெட்டாம் நூற்றாண்டு வரை உயிர்மெய்ஒலி எழுத்தில்லை!

"கட்டாயம் நிரூபிக்கிறேன்! சரி, ஆங்கில உயிர்மெய் ஒலி எழுத்துப் பிறந்த கதைய மொதல்ல பார்ப்போம். பதினெட்டாம் நூற்றாண்டில் ஐரோப்பியர்களுக்குப் புதிதாக முளைத்த ஆரிய இனப்பற்றின் விளைவாக, தங்கள் இனமொழிகளின் வரிசையில் மிகவும் பின்னால் இருக்கும் Indo-Aryan மொழியான சமற்கிருத மொழியைக் கற்க முனைந்தபோது, வரிவடிவத்திலும், ஒலிவடிவத்திலும் ஒன்றாக இருக்கும் சமற்கிருத எழுத்துக்களின் ஒலிவடிவ மொழி அமைப்பைப் பார்த்து வியந்தேபோனார்கள்.", என்றேன் நான்.

"ஏன் அவர்கள் ஆச்சரியப்படணும்?", என்றார் நண்பர்.

"ஆரிய  இனமொழிகள் ஒன்றிலும் இப்பண்பு இல்லாததே அவர்தம் வியப்புக்குக் காரணம்!" என்ற நான், "அத்தோடு விட்டால் பரவாயில்லை! இன்னும் பலபடி மேல போயி, சமற்கிருதமே இயல்பான மொழி என்றும், உலக மொழிகளின் தாய்மொழி என்றும் உரக்கக் கூவினார்கள்.", என்ற நான்,

"மூத்த ஆரிய மொழிகளில் இல்லாத பண்பு இளைய ஆரியமொழியான சமற்கிருதத்துக்கு இருந்தா அது வேற எங்கயோ கடன் வாங்கியிருக்கும்னு ஊகிக்க முடியாத முட்டாள்தனத்தைச் செய்தார்கள் ஐரோப்பியர்கள்!", என்றேன்.

"வெள்ளக்காரனவிட நாமெல்லாம் புத்திசாலின்னு சொல்லுவ போலிருக்கே!", என்றார் நண்பர் படுநக்கலாக.

"செவப்பா இருக்கவன் கூமுட்டயா இருக்கக் கூடாதுன்ற 'வடிவேல் logic' இங்க வேண்டாமே! இந்திய நாகரிகத்தின் சுவட்டை கங்கைக் கரையில தேடுனதுனால வெள்ளக்காரனால தேவநாகரி சமற்கிருத எழுத்துக்கு முந்தின கிரந்த சமற்கிருத எழுத்தக் கண்டுபிடிக்க முடியல. 'பேரன் பாட்டனைப் பெற்றான்' என்பது எவ்வளவு அபத்தமோ, அவ்வளவு அபத்தம் 'சமற்கிருதம் உலக மொழிகளின் தாய்மொழி' என்னும் ஆய்வுக் கருதுகோள் என்பதை, சமற்கிருதத்துக்கும் மூத்தமொழி பேசிய ஜெர்மானிய மொழியியல் அறிஞர்கள் உணரவில்லை." என்றேன் நான்.

"இன்னங் கொஞ்சம் வெளக்கமா சொல்லப்பா!", என்றார் நண்பர்.

"'வெள்ளக்காரன் கிரந்த சமற்கிருத எழுத்த மொதல்ல பாத்திருந்தா, அதோட வேர் தமிழ்மொழியிலே இருக்குறதக் கண்டுபிடிச்சுருப்பான். நம்மஊரு இடையன்குடியிலேயே குப்பகொட்டி, திராவிட மொழிகளுக்கு ஒப்பிலக்கணம் எழுதிய பன்மொழிப்புலவர் பிஷப் கால்டுவெலாருக்கே இந்த விஷயம் கண்ணத் தப்பிருச்சே! மத்தவுங்க எம்மாத்திரம்?"  கால்டுவெலார் காலத்துல தொல்காப்பியம் அச்சுக்கு வரல. அதுனால அவருக்கு இது தெரியாமப் போச்சு!", என்றேன் நான்.

தமிழ்மொழியே சமற்கிருதமொழிக்குத் தந்தைமொழி!

"அப்ப வடமொழி நெடுங்கணக்கு எழுத்துக்களுக்கு மூலம் தமிழ்தான்னு சொல்லுறியா? ஏன், ஆரியர்களே கண்டுபுடிச்சிருக்க முடியாதா என்ன?", என்றார் நண்பர் அப்பாவியாக.

"Indo-European மொழிகளில் மிகவும் பின்வரிசையில் உள்ள சமற்கிருத மொழிக்கு, அதற்கு மூத்த இனமொழிகளைவிட மேம்பட்ட பண்பு இருந்தால், அப்பண்பு Indo-European அல்லாத வேற்று இனமொழியிலிருந்தே கடன் வாங்கியிருக்க முடியும் என்ற LOGIC ஏனோ அவர்கள் மூளைக்குத்தான் எட்டவில்லை. ஒனக்குமா எட்டவில்லை?", என்றேன் சற்றே காட்டமாக.

"சும்மா தெரிஞ்சுக்கத்தான் கேட்டேன். நீ ஆங்கில உயிர்மெய்க் கதயச் சொல்லுப்பா!", என்றார் நண்பர் விடாப்பிடியாக.

"ஆமா, தமிழ் மொழியே சமற்கிருதத்தின் ஒலிவடிவக் குறியீட்டு எழுத்துமுறைக்குத் தந்தைமொழி என்று அறியாமல், சமற்கிருதத்தின் உயிர்மெய் ஒலிவடிவை மற்ற ஆரியஇனமொழிகளுக்கு ஒட்டவைக்க, பதினெட்டாம் நூற்றாண்டில் ஐரோப்பியர் முனைந்தனர்,", என்றேன் நான்.

"ஆங்கில உயிர்மெய் ஒலிவடிவம் செஞ்சாங்களா இல்லையா!", என்று பொறுமையிழந்தார் நண்பர்.

"அங்கதான் சிக்கலே வந்திச்சு! வேத ஆரியர்கள் இந்தியத் துணைக்கண்டத்துக்கு வந்தபோது, எழுதப்படிக்கத் தெரியாத தற்குறிகளாகவே இருந்ததுனால, எழுத்தில்லாமல் இருந்தார்கள். தெற்கே புலம் பெயர்ந்த வேத ஆரியனுக்குத் தமிழ் நெடுங்கணக்கு எழுத்துமுறையை புதிதாய் அப்படியே உள்வாங்கி ஆரியமொழிக்கு உயிர்மெய் கிரந்த ஒலிவடிவம் உருவாக்குவது மிக எளிதாக இருந்தது!", என்ற என்னை இடைமறித்து,  

"வேத ஆரியர்கள் எழுதப்படிக்கத்தெரியாத தற்குறின்னுட்டு எப்படிச் சொல்ற?", என்று காட்டமாகக் கேட்டார் நண்பர்.

"சான்று இருக்கப்பா! வேத ஆரியர்கள் தம் இன இலக்கியமான 'ருக்' வேதத்தைச் செவிவழியாகவே ஓதி, தலைமுறை தலைமுறையாகப் பாதுகாத்து வந்தனர். இதனால் வேதத்துக்கு ச்ருதி (எழுதாக்கிளவி) என்று பெயர். பிற்காலத்தில் அதையே காரணமாச்சொல்லி, கடவுள் அசரீரியாச் சொன்னார் என்று புராணத்தைக் கெளப்பி, வேதத்துக்குப் புனிதம் ஏற்றினர்.", என்ற நான், தொடர்ந்து,

"கிரந்த எழுத்துக்கள் முறையிலேயே,  பின்னர் தேவநாகரி எழுத்தையும் வடிவமைத்துக் கொண்டனர். இது குறித்து விரிவான தரவுகள் பின்னர் தரப்படும். இப்போது, ஐரோப்பிய ஆய்வாளர்களின் ஒலி எழுத்துக்கள் முயற்சியைக் குறித்துப் பேசுவோமே!", என்றேன்.

"சரி! மேல சொல்லு", என்றார் நண்பர் காட்டமாக.

ஐரோப்பிய மொழிகளுக்கான (உயிர்மெய்) ஒலிஎழுத்துக்கள் கி.பி. 1886-ல்தான் உதயமானது!

"கி.பி. 1886-களில், பிரெஞ்சு மொழியிலாளர் திரு.பவுல் பாசி(Paul Passy) தலைமையில் ஆங்கில மற்றும் பிரெஞ்சு மொழியியல் ஆசிரியர்கள் ஒன்றுகூடி IPA எனப்படும் International Phonetic Association  அமைப்பை  உருவாக்கினர். ஏற்கனவே உயிரெழுத்துக்களையும், மெய்யெழுத்துக்களையும் தனித்தனியே எழுதும் வழக்கத்தில் ஊறிப்போயிருந்த எழுத்துமுறையை மாற்றுவது அவ்வளவு எளிதன்று என்பதை அனைவரும் ஒப்புக்கொண்டனர்.", என்று சற்றே நிறுத்தினேன்.

அவ்வளவுதான்; கடுப்பான நண்பர், "மொத்தத்துலே உயிர்மெய் ஒலி எழுத்துக்கள் இல்ல! இதுக்குத்தான் இவ்வளவு build-up-ப்பா!", என்றார் வெறுப்புடன்.  

"உயிர்மெய் எழுத்துக்கள் இல்லாட்டி என்ன? அதுக்குப் பதிலா, பெரும்பான்மையான சொற்களுக்கான ஒலி எழுத்துக்களை அவர்களால் உருவாக்க முடிந்தது. அனைத்து ஐரோப்பிய மொழிகளுக்குமான மூல ஒலி எழுத்துக்களை (Phonetic Alphabets) உருவாக்கியது IPA அமைப்பு. "கூட்டு-ஒலியாக அல்லாத ஒவ்வொரு தனித்த ஒலிக்கும் ஒரு எழுத்தை உருவாக்குவது" என்ற நோக்கத்துடன் புதிய ஒலி எழுத்துக்கள் அமைக்க முனைந்தது IPA. ", என்றேன் நான்.

"அதையாவது உருப்படியாச் செய்தாங்களா என்ன?", என்று வினவினார் நண்பர்.

"ஆமாம்! அதப்பத்தி விரிவா நாளக்கிப் பேசுவோமே! இப்ப பசி வந்திருச்சு.", என்று எழுந்தேன்.

வெள்ளம் போல் தமிழர் கூட்டம்! வீரங்கொள் கூட்டம்! அன்னார்
உள்ளத்தால் ஒருவரே! மற் றுடலினால் பலராய்க் காண்பார்!
கள்ளத்தால் நெருங்கொணாதே எனவையம் கலங்கக் கண்டு
துள்ளும் நாள் எந்நாளோ! - புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்!

 

மொழிகளின் இயற்கை அறிவோம்!

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அருமை.சிறந்த பணி.பகுத்தறியும் வாதம். பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

ஐயா, மொழிகளின் இயற்கையை அறிய ஆவலாக உள்ளேன். தொடர்ந்து எழுத வேண்டுகிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றாக நவில்கின்றீர்கள் .....மிகவும் சுவாரஸ்யமாக எழுதிக்கொண்டு வருகின்றீர்கள்........! 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.