Jump to content

அவளை மறக்க முடியவில்லை!… ஏலையா க.முருகதாசன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அவளை மறக்க முடியவில்லை!… ஏலையா க.முருகதாசன்.

அவளை மறக்க முடியவில்லை!… ஏலையா க.முருகதாசன்.

நானும் தயாநிதியும் கோப்பிக் கடையைத் தேடி நடந்து கொண்டிருந்தோம்.வீதிகளில் ஆளரவத்தைக் காண முடியவில்லை.நத்தைகள் உடலை ஓட்டுக்குள் இழுப்பது போல குளிரின் தாக்கத்தால் குடியானவர்கள் வீட்டுக்குள் முடங்கிவிட்டார்களோ என நினைத்தேன்.

குளிர் வாட்டியது .குளிர்காற்று மூக்கு வழியாக சுவாசப்பைக்குள் சென்றது போன்ற உணர்வு ஏற்பட்டது.காதுகள் சிவந்தது.மூக்கிலிருந்து நீர் வழிந்தது. தயாநிதி மாதகலைச் சேர்ந்தவர். நான் தெல்லிப்பழையைச் சேர்ந்தவன்.இங்கு அறிமுகமாகி முப்பத்திமூன்று வருடங்களாகிவிட்டன.இப்பொழுது நண்பர்களாக இருக்கிறோம்.அவர் ஒரு குடும்பஸ்தர்.

தயாநிதி, தான் கப்பலில் வேலை செய்ததாக எனக்குப் பலமுறை சொல்லியிருக்கிறார்.கப்பல் வாழ்க்கையைப் பற்றி அவரிடம் கேட்க வேண்டுமென்று பலமுறை எண்ணியிருக்கிறேன்.ஆனால் அதற்கான சந்தர்ப்பம் கிடைக்கவில்லை.

இன்று அவரைச் சந்தித்த போது, ‘இன்றாவது சொல்லுங்களேன் உங்கள் கப்பல் கதையை’ என்று கேட்டேன்.அவர் கொஞ்சம் தயங்கினார்.அதற்குக் காரணம் நான் ஒரு எழுத்தாளன் என்றும், ஏதோ நேரம் போவதற்கு கதை கேட்பது போல கேட்டு அதைக் கதையாக எழுதி பத்திரிகைகளுக்கு அனுப்பிவிடுவேனோ என்பதால் அவருக்குத் தயக்கம் இருந்தது.

காற்றோடு வாட்டி வதைக்கும் குளிரிலும் அவரின் கப்பல் வாழ்க்கையை கேட்டுவிட வேண்டும் என்ற ஆவல் எனக்கிருந்தது.நீங்கள் சொல்வதை கதையாக எழுத மாட்டேன் என்று சொன்னதன் பின்பு எங்கேயாவது ஒரு கோப்பிக் கடையில் கோப்பி குடித்தபடி சொல்கிறேன் என்றார்.ஒரு கோப்பிக் கடை கண்ணில் தென்பட்டது.தண்ணீர்த் தாகத்துடன் பாலைவனத்தில் அலைந்து திரியும் ஒருவனுக்கு ஒரு சிறிய நீர்க்குட்டையை கண்ட போது ஏற்படும் ஆவலும் மகிழ்ச்சியும் எங்களுக்கு ஏற்பட்டது.

விரைந்து கோப்பிக்கடைக் கதவைத் திறந்து உள்ளே போனோம்.கோப்பி வாசனை உற்சாகத்தைத் தந்தது.கடை கோப்பி குடிப்பவர்களால் நிறைந்து வழிந்திருந்தது. ஆவிபறக்கும் கோப்பியைக் குடித்தபடி கதைத்துக் கொண்டிருந்தார்கள். உட்காருவதற்கு இடத்தைத் தேடின கண்கள். ஒரு மூலையில இரண்டு கதிரைகளும் ஒரு மேசையும் இருந்தன.வேகமாக அந்த இடத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்தேன். வேறு யாராவது வந்து அந்த கதிரைகளில் உட்கார்ந்துவிடக்கூடாது என்பதற்காக.குளிருக்கு கோப்பியும் அதைவிட கப்பல் கதையைக் கேட்க வேண்டுமென்ற எண்ணமே மேலோங்கி நின்றது.ஊரிலை, கப்பலுக்கு வேலைக்குப் போனவர்கள் தங்கள் கப்பல் வாழ்;க்கையைப் பற்றி அதிலை கொஞ்சம் இதிலை

கொஞ்சமாகச் சொல்லியிருக்கிறார்கள்.தாங்கள் அனுபவித்த அந்தச் சங்கதிகளும் நடந்தது என்றும் சொல்லியிருக்கிறார்கள்.’சங்கதி’ என்றால் அதற்கு என்ன அர்த்தம் என்று அறிந்து வைத்திருந்தேன்.

கப்பலுக்கு வேலைக்குப் போனவர்கள் பின்னர் திருமணம் செய்திருக்கிறார்கள்.தாங்கள் அனுபவித்த ‘சங்கதியை’ மனைவிக்குச் சொல்யலிருப்பார்களோ தெரியாது.அல்லது கப்பலுக்குப் போனால் சங்கதி நடக்காமலா போகப் போகுது என்று அதைக் கேட்காமல் மனைவிமார் விட்டிருக்கலாம்.

கோப்பிக் கடையில் வேலை செய்த பெண் எமக்கருகில் வந்து என்ன வேண்டுமென்று கேட்டாள். இரண்டு கோப்பி பெரியது என்றேன்.அவள் வடிவான பெண்,அவள் ஜேர்மனியப் பெண் அல்ல, வேறு நாட்டுப் பெண்ணாக இருக்குமோ என நினைத்தேன். அவள் சுவையான சுயிங்கத்தை சப்பியிருக்கிறாள் போல.அவளின் சுகந்தமான மூச்சுக் காற்று ஒரு கிறக்கத்தைக் கொடுத்தது.அவள் அழகாக சிரித்தபடி ‘இதோ கொண்டு வருகிறேன்’ என்று சொல்லிக் கொணடு போனாள்.அவள் போவதைப் பார்த்தபடி ‘நல்ல வடிவான பெண’; என்றேன்.பிரேசில்காரியாக இருக்கலாம்’என்றார் தயாநிதி.

இந்தக் கோப்பிக்கடையைவிட்டு வெளியே போவதற்கு முன்பே தயாநிதியிடம் முழுக்கதையையும் கேட்டுவிட வேண்டுமென்ற ஆவலுடன்’ நீங்கள் கப்பலில் வேலை செய்வதற்கு எந்த இடத்தில் போய் கப்பலில் ஏறினீர்கள்’ என்றேன்.

‘நாட்டைவிட்டு வெளிக்கிட்டு ஜேர்மனிக்கு வரும் வரைக்கும் கப்பலில் வேலை செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருக்கவில்லை’

‘எப்படி அந்த எண்ணம் ஏற்பட்டது’

‘கம்பேர்க்கில் உள்ள எனது நண்பர்கள் சொன்னார்கள், இங்கை இருக்கிறதைவிட கப்பலில் வேலை செய்தால் காசும் வரும் சந்தோசமும் வரும் என்றார்கள்’

‘காசு வரும் அது சரி, அது என்ன சந்தோசமும் வரும் என்றால்…என்ன ‘ என்று நான் கேட்க, தயாநிதி தயங்கியவாறு,பிறகு சொல்கிறன்’ என்றார்.

எப்படியும் அந்தச் சந்தோச சங்கதியை அவர் வாயாலேயே கேட்டுவிட வேண்டுமென்ற எண்ணத்துடன் நான் அவரிடம் கேள்விகளைத் தொடுத்தேன்.

‘கம்பேர்க்கில் இருந்து கப்பலில் ஏறிய நீங்கள் எத்தனை வருடம் கப்பலில் வேலை செய்தீர்கள்’ என்று கேட்டுக் கொண்டிருக்கும் போதே அந்த அழகான பணிப்பெண் கோப்பியைக் கொண்டு வந்து வைத்தாள்.அவளின் கிறங்கடிக்கும் அழகில் கேள்வி கேட்பது ஓரிரு விநாடிகள் தாமதமாகியது.

குளிரான சூழ்நிலைக்கு இதமான காப்பியைக் குடித்துக் கொண்டே’எவ்வளவு நாள்

வேலை செய்தீர்கள் ‘என்றேன்.கோப்பியை அவர் ஒரு உறிஞ்சு உறிஞ்சிவிட்டு’ பதினொரு நாட்கள் பிரான்சிலுள்ள சில துறைமுகங்களுக்கு போய் திரும்பிவிட்டேன்’

‘ஏன்’

‘எனக்கு அந்தக் கப்பலில் வேலை செய்ய ஏனோ பிடிக்கவில்லை,திரும்பிவிட்டேன்.சில நாட்களின் பின் ஒல்லாந்திலுள்ள ரொட்டர்டாம் துறைமுகத்துக்குப் போய் ஒல்லாந்து கப்பலில் வேலை செய்யத் தொடங்கினேன்’

‘அந்தக் கப்பலில் எவ்வளவு காலம் வேலை செய்தனீங்கள், எங்கெல்லாம் போனீர்கள்’

‘கிட்டத்தட்ட பதினொரு மாதங்கள் வேலை செய்தன்,கொலண்டுக்கும் தென்னமரிக்க நாடுகளுக்கும் அமெரிக்காவுக்கும் அந்தச் சரக்குக் கப்பல் போய் வந்தது’

‘கப்பலில் எத்தனை இலங்கையர்கள் வேலை செய்தார்கள்’

‘நான் மட்டுந்தான் இலங்கையாள், மற்றவர்கள் வேறு நாட்டுக்காரர்கள்’

‘கப்பலில் சண்டை சச்சரவு வருமர்’

‘வராமல் விடுமா, அடிபடுவாங்கள் பிறகு கப்ரின் எல்லாரையும் எச்சரித்துவிட்டுப் போவார்’

‘கப்பலில் வேலை செய்தவர்களில் யாரிடம் அதிகம் பயப்பட்டீர்கள்’

‘பிலிப்பைன்ஸ்காரரிடம்’

‘ஏன்’

‘அவர்கள் பொல்லாதவர்கள்’

‘கேட்க மறந்திட்டன் நீங்கள் கப்பலுக்கு போன போது இளந்தாரிதானே எத்தனை வயது.எத்தனையாம் ஆண்டு கப்பலில் வேலைக்குப் போனீர்கள்’

‘இளந்தாரிதான், அப்ப எனக்கு இருபத்திநாலு வயது. நான் வேலைக்குப் போனது எண்பதாம் ஆண்டு’

‘அது சரி இந்த வயதில் காதல் வந்திருக்க வேண்டுமே’

‘ காதலிச்சன்’

‘என்ணெண்டு காதலியையும் விட்டிட்டு, பெற்றோரையும் விட்டிட்டு தண்ணியை மட்டுமே நாள் பூராவும் பார்க்கிற கப்பல் வேலைக்குப் போனீர்கள்’

‘கவலைதான் என்ன செய்யிறது,வாழக் காசு வேணுமே’

‘கப்பலிலை போய்க் கொண்டிருக்கிறியள் சுற்றிவரக் கடல், அப்ப உங்கடை மனநிலை எப்படி இருந்தது’

‘நடுக்கடலில் விட்டது போல் என்பார்களே, அப்படித்தான் மனம் தவித்தது’

‘அந்த நேரத்தில் அப்பா அம்மாவை நினைத்தீர்களா அல்லது காதலியை நினைத்தீர்களா’

‘காதலியைத்தான் எப்பவுமே நினைத்துக் கொள்வேன்.அவளுடைய முகத்தை நினைத்துக் கொள்வேன், அவளின் சிரிப்பை நினைத்துக் கொள்வேன்.அப்பா அம்மாவுக்கு கடிதம் எழுதும் போதெல்லாம் அவளுக்கும் எழுதுவேன்.அப்பா அம்மாவின் கடிதம் வரும்போதெல்லாம் அதில் பிள்ளைப்பாசம் இருந்தது.அவளின் கடிதத்தில் எல்லாமே இருந்தது, பரிவு பாசம் அக்கறை என்று எல்லாமே இருந்தது.நான் இருக்கிறேன் உங்களுக்காக, இந்தக் கடிதத்தில் நான் இருக்கிறேன்,கவலைப்படாதீர்கள் எவ்வளவு கெதியாக வர முடியுமோ அவ்வளவு கெதியாக வாருங்கள்.இனி இந்தக் கப்பல் வேலை வேண்டவே வேண்டாம், நானும் தவித்து நீங்களும், தவிக்கிற இந்த வேலை வேண்டாம்,பரந்திருக்கும் சமுத்திரத்தில் மிதக்கும் கப்பலில் அலையிலும் பலமாக வீசம் காற்றிலும் கப்பல் நிலைகொள்ளாமல் தவிப்பது போல உங்கள் மனம் தத்தளிப்பதை உணர்கிறேன்.கவலைப்படாதீர்கள், என்னை நினைத்துக் கொள்ளுங்கள், நானிருக்கிறேன் என்று அவள் எழுதுவாள்…’

தன் காதலியின் கடிதம் பற்றிச் சொல்லிக் கொண்டிருந்தவர் இடையில் நிறுத்தினார்.சில விநாடிகள் இருவரும் மெனமாக இருந்தோம்.அவரின் கண்கள் கலங்கியிருந்தது.கண்மடல்விட்டு கண்ணீர் வந்திடுமோ என்ற நிலையில் முகத்தை மறுபக்கம் திரும்பி கண்ணைத் துடைத்துக் கொண்டார்.

கோப்பியைக் குடித்து முடித்திருந்தோம்.இன்னும் குடிக்க வேண்டும் போலிருந்தது.அந்தக் கடையில் ஐந்தாறு பணிப்பெண்கள் வேலை செய்து கொண்டிருந்தார்கள்.எங்களுக்குக் கோப்பி தந்த அழகியைத்தான் என் கண்கள் தேடின.அவள் நிற்கும் திசை நோக்கினேன்.அவள் தற்செயலாக நாங்கள் இருக்கும் திசைநோக்கித் திரும்ப நான் கைகளால் வரும்படி அழைத்தேன்.எமக்கருகில் வந்தவளிடம் ‘இன்னும் கோப்பி வேண்டும்’ என்ற நான், ‘எந்தக் கேக் ருசியாக இருக்கும்’என்றேன்.’பிறவுணி ருசியாக இருக்கும், புதிய முறையில் செய்தது, கொண்டு வரவா என்றாள்.கொண்டு வரச் சொன்னேன்.

அமைதியாக இருந்த நான், ‘துறைமுகங்களில் கப்பல் போய் நிற்கும் போது, நிற்கும் நாடுகளுக்கு போவீர்களா எவ்வளவு தூரம் போவீர்கள்’ என்றேன்.

‘கனதூரம் போக முடியாது, ஒரு குறிப்பிட்ட அளவு தூரம் போக அனுமதி உண்டு, நிற்கும் நாட்களைப் பொறுத்தது’ என்றார் தயாநிதி.

நாங்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே, கோப்பிக்கடைப் பணிப் பெண் இரண்டு பெரிய கப்பில் கோப்பியையும் இரண்டு தட்டில் பிறவுணி கேக்கையும் கொண்டு

வந்து வைத்தாள்’ கேக்கை முள்ளுக்கரண்டியால் பிய்த்து வாயில் போட்டு ருசி பார்த்தேன், சுவையாகவிருந்தது.தயாநிதியும் சாப்பிட்டுவிட்டு அருமையாக இருக்கிறது என்றார்.

நாங்கள் கோப்பிக்கடையின் கண்ணாடி போட்ட யன்னல் ஓரத்தில் உட்கார்ந்திருந்ததால்,அடிக்கடி வெளியே பார்த்துக் கொண்டிருந்தோம்,ஆகாயம் மூட்டமாகியது.மெதுவாக பனித்துகள் கொட்டத் துவங்கியது.கோப்பி குடித்துக் கொண்டிருந்தவர்களின் தொகையும்,சூடான கோப்பியும் ருசியான கேக்கும் மனதிற்கு இதமாக இருந்தது.

‘நான் ஊரில் இருந்த போது கப்பலுக்கு போய்வந்தவர்களைச் சந்தித்திருக்கிறேன், அவர்களுடன் பேசும் போது, கப்பல் துறைமுகங்களில் நிற்கும் போது, பரத்தையர்கள் வருவார்களா எனக் கேட்டிருக்கிறேன்.அங்கு எனக்குத் தெரிந்த கப்பலுக்குப் போய் வந்த ஒருவரிடம் பரத்தையர் என்று வெளிப்படையாக கேட்டதும் என்னை அவர் நிமிர்ந்து பார்த்துவிட்டு, வருவார்கள் நாங்கள் ‘சங்கதிக்காரர்’ என்று சொல்வோம், மற்றதை ‘சங்கதி’ என்று சொல்வோம் என்றார், நானும்’சங்கதிக்காரர் வருவார்களா, சங்கதியில் நீங்கள் ஈடுபட்டீர்களா’ என்று கேட்க, வருவார்கள் ஆனால் ‘கப்பலில் எதுவும் நடக்கவில்லை’ என்றார் தயாநிதி.

அதிக நாட்கள் கப்பல் தரித்துநின்ற துறைமுகம் எதுவென்று தயாநிதியைக் கேட்ட போது, பிரேசிலுள்ள றியோ டி ஜனைரோ என்ற அவர், அங்கு பதினேழு நாட்கள் கப்பல் நின்றது என்றார்.

‘பதினேழு நாட்களும் எப்படிப் பொழுது போனது’ என்றேன்.’றியோ டி ஜனைரோ பிரேசிலுள்ள பெரிய துறைமுகம். கடைகளும் விடுதிகளும் பார்களும் நிறைந்து வழிந்த நகரம் அது.டிஸ்கோவிற்கு போவோம், குடிப்போம், டிஸ்கோவில் மேல் உடை இல்லாமல் பெண்கள் ஆடுவார்கள்.பார்த்து இரசிப்போம்.கப்பலில் எனக்குப் பொறுப்பாகவிருந்தவர், நான் ஆடுவதற்காக எழ எனது கையைப் பிடித்து நிறுத்தினார்.அவசரப்பட வேண்டாம் என்றார்.

‘ஏன்’

‘சில வேளைகளில் சிக்கல் வரலாம் என்பதால்’.

‘இப்பவே நீங்கள் உயரமாகவும் வாட்சாட்டமாகவும் இருக்கிறியள், இளந்தாரியில் இன்னும் கம்பீரமாக இருந்திருப்பீர்கள் அழகிய உயரமான கறுப்பு,மாநிறம்,வெள்ளை என பல நிறம் கொண்ட அந்த வண்ணத்துப்பூச்சிகளைப் பாரத்த போது உங்களுடைய முறுகிய வாலிப வயது சும்மாவா இருந்தது’ என்றேன்.

இரண்டு நாட்களாக எந்த யோசனையும் வரவில்லை, கிளப்புக்குப் போவது டிஸ்கோ ஆடுவது,குடிப்பது என்றிருந்தேன்.மூன்றாவது நாள் ஒரு மேசையிலிருந்து பியர் குடித்துக் கொண்டிருந்தேன்.எனக்கருகில் ஒரு பெண் வந்து உட்கார்ந்தாள்.முகத்தை நளினமாக திருப்பி சிரித்தாள்.கந்தர்வ பெண் என்பார்களே அவர்களனைவரும்

இங்கேதான் பிறந்தார்களோ என வியந்தபடி அவளைப் பார்த்தேன், கொள்ளை அழகியாக இருந்தாள்.மீண்டும் ஒருமுறை தலையை அசைக்க அவளுடைய தலைமயிர் சிலிர்த்தெழுந்து அவள் மார்பில் படர்ந்தது.தலைமயிருக்கு வாசனை கொண்ட சம்பூ போட்டுக் குளித்திருப்பாள் போல அவளின் தலைமயிரிலிருந்து வந்த வாசனை என் சுவாசத்தை சுகமாக்கியது.மீண்டும் ஒருமுறை என்னைப் பார்த்து அழகாகச் சிரித்து கைலாகு தந்து’ஐ ஆம் எலிசபெத், யுவர் நேம் பிளீஸ்’ என்றாள்.’ஐ ஆம் தயாநிதி’ என்றேன்.’யு ஆர் பிறம் விச் கன்றி’ என்றாள்’ ‘மை மதர் லண்ட் இஸ் சிறீலங்கா’ என்றேன்.’ ஓ யா ஐ கேர்ட் எபவுட் யுவர் கன்றி’ என்றவள்,எலவ் மி ரு டான்ஸ் வித் யூ’ என்றவள் ‘யு ஆர் ஸ்மாற் யங்,டு யு சி அவர் போர்த் ஸ்கின் கலர்ஸ் ஆர் சேம்’ என்றாள்.

இரசித்துச் சொல்லிக் கொண்டிருந்த தயாநிதி இடையில் நிறுத்தினார்.அவர் சொல்லப் போகும் சுவாரசியமான சம்பவங்களை கேட்பதில் ஆர்வம் கொண்ட நான் ‘ பிறகு’ என்றேன்.’நீங்கள் விடமாட்டியள் போல’ என்றவர், நான் அவளுடன் நடனமாடத் தொடங்கினேன்.அது ஒரு வித்தியாசமான உலகம்.மகிழ்ச்சிக்காக ஒரு உலகத்தை உருவாக்கியிருந்தார்கள்.அவளுடன் ஆடிக் கொண்டிருந்த போது எனது வேலைப் பொறுப்பாளர் ஒரு மேசையிலிருந்து குடித்துக் கொண்டிருந்தார், கைவிரலைக் ‘என்ஜோய்’ என்பது போலக் காட்டினார்.

‘பியர் குடித்த போதையும் அழகிய பெண்ணின் அருகிருக்கையும்,ஆட ஆட அவளிடமிருந்து வியர்த்துக் கொட்டிய வியர்வை வாசனையும் என்னைக் கிறங்கடித்தது.சிரித்துக் கொண்டே கைகள் இரண்டையும் என் இரண்டு தோள்களில் போட்டு கழுத்தை இறுகப் பிடித்துக் கொண்டே ஆடினாள்.என்னையறியாமல் என் கைகள் அவள் இடுப்பை பிடித்துக் கொண்டன.அவள் கண்கள் எனக்கு ஏதோ ஒன்றைச் சொல்லிற்று, ஏதோ ஒன்றை வேண்டி நின்றது.அவள் இதழ்கள் லிப்ஸ்ரிக் பூசாமலே றோசப்பூ அழகில் இருந்தது.அவள் இதழ்கள் துடித்தன.அவள் இதழ்களை நோக்கி என் முகம் நெருக்கமாகியது’.

ஆடிக் களைத்துப் போன இருவரும் உட்கார்ந்தோம்.ஆடியதால் போதை குறைந்திருந்தது.இன்னுமொரு பியர் குடிக்க வேண்டுமென்று ஆசைப்பட்டேன்.அவளிடம்’ டு யு வான்ற் பியர் ‘ என்றேன்.’ தாங்ஸ் ஐ நெவர் றிங் எனி அல்ககோல் அன்ட் பியர்’ என்றாள். எனக்கு வியப்பாக இருந்தது.ஆச்சரியத்துடன் ‘இஸ் இற் றியலி என்றேன்.’யா’ என்றவள்,’பிளீஸ் டு நொற் றிங் புறொம் நவ் ரு ரில் யுவர் லைப்’ என்றாள்.நான் அதிசயத்து நின்றேன்.இவள் யார், என்னை மனதாலும் விரும்புகிறாளா.ஒரு மனைவி சொல்வது போல ஒரு காதலி சொல்வது போல அக்கறையாக சொல்கிறாளே.அவள் சொல்லை மீற முடியாது கட்டுப்பட்டு நின்றேன்.எனது தோளோடு சாய்ந்து என்னை இறுக கட்டிப் பிடித்தாள், எனக்கு மட்டுமே கேட்கக்கூடியதாக காதுக்குள் ‘சால் வி கோ ரு த கொட்டல்’ என்றவள் எழுந்து எனது கைக்குள் தனது கையைவிட்டு நெருக்கமாகினாள்.

அந்த டிஸ்கோ பாரைவிட்டு மந்திரிச்சுவிட்ட கோழி மாதிரி அவளுடன் நடந்து கொண்டிருந்தேன்.கணவன் மனைவி அல்லது காதலன் காதலி கைகளோடு கைகளை

இணைத்து நடப்பது போல நடந்து விடுதியைச் சென்றடைந்தோம்.

வரவேற்பு இடத்தில் அந்த விடுதியில் பதினைந்து நாட்கள் தங்கப் போவதற்கான பணத்தைக் கட்டினேன்.அழகான வசதியான அறைக்குள் போனதும், தேநீர் குடிப்போமா என்றவள், தேநீருடன் இரவுச் சாப்பாட்டுக்கும் அறைக்குள் இருந்த தொலைபேசி மூலம் ஓடர் கொடுத்தாள்

‘இருங்கள் குளித்துவிட்டு வருகிறேன்’ என்று போனவள்.ஐந்து நிமிடத்தில் குளித்துவிட்டு வந்தாள்.நான் படுக்கையில் தலையனை ஒன்றை எடுத்து தலைக்குப் பின் வைத்தவாறு சரிந்து உட்கார்ந்திருந்தேன்.குளித்துவிட்டு வந்தவள் நெருங்கி உட்கார்ந்தவாறு அவள் என் மார்பில் தலைவைத்தபடியே தனது இடது கை விரல்களால் முதுகின் ஓரத்தில் தாளம் போட்டுக் கொண்டிருந்தாள்.

எனது உடலும் மனமும் சங்கதியை நோக்கி நின்றது.எனது மனநிலையை உணர்ந்தவளாக ‘கொஞ்சம் பொறுங்கள் சாப்பாடு வந்ததும் சாப்பிட்டிட்டு……’ என்று சிரித்தாள்.

கதவைத் தட்டும் சத்தம் கேட்டது.அவள் போய்க் கதவைத் திறந்தாள்.உணவுத் தட்டுடன் நின்றவரிடம் உணணவ வாங்கி மேசையில் அவள் வைத்தபடியே வாருங்கள் சாப்பிடுவோம் என்றாள்.

நான் கனவு காண்கிறேனா என நினைத்துக் கொண்டேன்.ஏனென்றால் கம்பேர்க்கில் எனது நண்பர்கள், துறைமுகத்தில் கப்பல் நின்றதும் கப்பலுக்குள்ளேயே அப்படிப்பட்டவளை வருவினம்.எல்லாம் முடிந்ததும் போய்விடுவினம், இல்லாவிட்டால் விடுதிக்கு அழைத்துப் போய் அது முடிந்ததும் போய்விடுவினம்.அவைக்கு பணந்தான் குறி என்றார்கள்.

அதற்கு முற்றிலும் மாறாக ஒரு அன்பான மனைவியாக, இனிமையான காதலியாக எலிசபெத் நடந்து கொள்வதை என்னால் நம்ப முடியாமலிருந்தது.சுவையான சாப்பாடு,அருமையான தேநீர் ஆனால் மனம் அதையெல்லாம் தாண்டி நின்றது.’ரேஸ்ரி பூட் அன்ட் ரேஸ்ரி ரீ’ என்றேன்.’ஒப்கோர்ஸ்’ என்றவள் ‘திஸ் ரீ மேக்ட் பை யுவர் கன்றி ரீ பவுடர் ‘ என்றாள்.

இருவரும் போய் படுக்கையில் சரிந்து உட்கார்ந்தோம்.அவள் அருகிலிருந்த றிமோற் கொண்ரோலால் மின்விளக்கின் வெளிச்சத்தைக் குறைத்தாள்.

‘அது எனக்குப் புது அனுபவம்.கலாச்சாரம் பண்பாடு என்பதை தாண்டி எனது உடலின் தேவையை மனமும் மூளையும் செயல்படுத்தியது.முதல் இரவு என்றால் இப்படித்தான் இருக்குமோ என்று நினைத்தேன்.

இடையில் நிறுத்திய தயாநிதி என்னை உற்றுப் பார்த்தார்.அவரை இடைமறித்து கேள்வி கேட்கவேண்டிய தேவை எனக்கு ஏற்படவில்லை.அவர் எலிசபெத்தின் அன்பில் நனைந்தும் அமிழ்ந்தும் போய் அணுவணுவாக இரசித்து இரசித்துச்

சொல்லிக் கொண்டிருந்தார்.

‘அந்த ஒரு நாளுடன் அவளின் நட்பு முடிந்துவிட்டதா’ என்றேன்.

‘இல்லையில்லை பதினான்கு நாட்களாக அவளோடு இருந்தேன்.காலையில் எழுந்து கப்பலுக்கு போய்விடுவேன் அவளும் தனது வீட்டுக்குப் போய்விடுவாள்.வேலை முடிந்து விடுதிக்குப் போவேன். அங்கே அறையில் எனக்காக அவள் காத்திருப்பாள்.ஒவ்வொரு நாளும் வீட்டில் செய்தது என்று விதம் விதமான சாப்பாடு கொண்டு வந்து சாப்பிடத் தருவாள்.சில நாட்களில் பழங்கள் வெட்டிக் கொண்டு வந்து தருவாள்.காதலித்துக் கல்யாணம் செய்த பின் வரும் நாட்களாக அந்தப் பதிமூன்று நாட்களும் இருந்தன.உடல்கள் இரண்டு சேர்வது வெறும் உடலுக்குரியது அல்ல, அது ஆழமான காதலுக்கும் உரியது என்று நினைத்துக் கொண்டேன்.அவள் அன்பான மனைவியாக எனக்கு அந்த பதினான்கு நாட்களும் நினைத்துப் பார்க்க முடியாத மகிழ்ச்சியைத் தந்தாள்’

தயாநிதியை உற்றுக் கவனித்தேன் அவர் குரல் தளதளக்கத் தொடங்கியது.

‘நீங்கள் பிரேசிலைவிட்டுப் போன அந்தக் கடைசி நாள் அவளுக்கும் உங்களுக்கும் எப்படி இருந்தது’ என்றேன்.

தயாநிதி மௌனமானார்.கண்கள் கலங்கியது கண்களைத் துடைத்துக் கொண்ட அவர் பனி பெய்வதை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தார்.’மறக்க முடியவில்லை, இன்றளவும் அவளை மறக்கமுடியவில்லை ‘ என்றவர் என் பக்கம் திரும்பி’ பிரேசிலைவிட்டு போவதற்கு முதல் இரவு எல்லாம் முடிந்த பின் அவள் என்னையே உற்றுப் பார்த்தாள்’ கண்கள் கசிய இரு இதழ்களையும் மடித்து அழுகையை நிறுத்த முயற்சித்தவாறு’ ஆர் யு லீவ் ருமாரோ பிறம் திஸ் கார்பர்’ என்றாள் பதில் சொல்லத் தயங்கினேன், தட்டுத்தாடுமாறி’ யேஸ் ஐ வில்’ என்றேன்.’ நோ நோ பிளீஸ் ஸரேய் கியர் வித் மி பிளீஸ் டு நொற் கோ பிளீஸ் டு நொற் கோ’ என்று தோளில் முகம் வைத்து குலுங்கிக் குலுங்கி அழுதாள்.அவளின் கண்ணீர் என் தோளை நனைத்தது.அவள் தலையைத் தடவியவாறு ‘பிளீஸ் எலவ் மி, ஐ காவ் ஏ லவர் இன் மை கன்றி’என்றேன்.அவளோ ‘ ஐ அக்சப்ற் பிளீஸ் பிறிங் கேர் ரு கியர் ஓர் பிறிங் மி ரு யுவர் கன்றி’ என்று குலுங்கிக் குலுங்கி அழுதாள்.அவளைச் சமாதானப்படுத்த முடியவில்லை.

‘மை டியர் வில் யு பிளீஸ் அண்டர்ஸ்ராண்ட் மி, ஐ கனொற் டு எனிதிங் பிக்கோஸ்’ என்று நான் முடிக்குமுன் ‘பிக்கோஸ் ஐ ஆம் ஏ பிறஸ்ரிரியுட்,இஸ் இற்’ என்று நெகிழ்ந்து நின்றாள்.’ நோ நோ நொற் தற் மீனிங்,யு ஆர் லைக் அஸ் மை வைப், யு ஆர் லைக் அஸ் மை லவர், ஐ நெவர் போரகெற் யு இன்மை வோல் லைப் ரில் டை’ என்றேன்.அன்றிரவு முழுக்க அவள் அழுது கொண்டிருந்தாள்.நானும் அழுதேன்.இறைவா இப்படி ஒருத்தியை ஏன் சந்திக்க வைத்தாய் என்று வெதும்பிக் கொண்டிருந்தேன்.

அடுத்த நாள் விடிய எழுந்த போது அவள் முகம் கண்ணீரால் கோடு கிழித்து காய்ந்து போயிருந்தது.நான் ஒருத்தியைக் காதலிக்காவிட்டால் இங்கேயே இவளுடனேயே இருந்திருக்கலாம் என்று என் மனம் அல்லாடியது.அவள் எனக்காக காத்திருக்கிறாள்.இவளும் எனக்காக ஏங்குகிறாள்.இருதலைக் கொள்ளி எறும்பாய் நான் தவித்தேன்.

நானும் அவளும் எதுவுமே பேசிக் கொள்ளவில்லை.வெளியூருக்குப் போகும் கணவனை, வெளியூருக்குப் போகும் காதலனை அனுப்பி வைக்க சோர்ந்த முகத்துடன் கப்பல் நிற்கும் இடத்திற்கு வரும் மனைவி போல் காதலி போல் என் இடுப்பை இறுகப் பற்றிக் கொண்டே வந்தாள்.

கப்பல் புறப்படுவதற்கு நேரம் நெருங்க நெருங்க அவள் பதைபதைப்பதை உணர்ந்தேன்.என்னாலும் அவளை விட்டுப் பிரிய மனமில்லை.

‘மை டியர் எலிசபெத் ஐ…..’ என்று சொல்லி முடிக்குமுன் கட்டி அணைத்து முத்தம் கொடுத்தாள்.நெஞ்சில் முகம் பதித்து அழுதாள்.’ஓ மை கோட்…வை…வை’ என என் நெஞ்சில் இடித்து இடித்து அழுதாள்.அவளைப் பரிவாக தடவிக் கொடுத்தேன்.எனது கால்கள் அந்த இடத்தைவிட்டு நகர மறுத்தது.

ஆனால் என்ன செய்வது.அவளைப் பிரியும் இறுதி நேரத்தில் அவள் சொன்ன வார்த்தை இன்றும் எனக்குள் எதிரொலிக்கிறது.

என்ன சொன்னாள் என்று அவரைக் கேட்கவில்லை.அவள்’ யு ஆர் மை கஸ்பண்ட் ரில் டை, நோ மோர் புறொஸ்ரிரியூசன்,திஸ் இஸ் மை கார்ட் பொறமிஸ்’ என்றாள்.

‘மெதுவாக எனது கால்கள் அவளைவிட்டு நகரத் தொடங்கியது.அவள் ஏக்கத்துடன் பார்த்துக் கொண்டிருந்தாள்.பாரமான மனதுடன் கப்பலில் காலடி எடுத்து வைத்தேன்’

‘சில நாட்கள் வேலை செய்துவிட்டு கம்பேர்க் வந்துவிட்டேன். கம்பேர்க்கில் இருந்த போது அவளின் கடிதம் வந்தது. தான் இப்பொழுது விவசாயம் செய்து சீவிக்கிறேன் இனி எப்பொழுது இருவரும் சந்திப்போமோ தெரியாது இறைவன்தான் அருள வேண்டும் என்று எழுதியிருந்தாள்.நானும் பதிலஇ போட்டுக் கொண்டிருந்தேன் அவள் எழுதுவதும் நான் பதில் போடுவதுமாக ஐந்து மாதங்கள் தொடர்ந்தன. பிறகு அவளிடமிருந்து கடிதம் எதுவும் வரவில்லை. நான் எழுதிய கடிதத்திற்கும் அவளிடமிருந்து பதில் வரவில;லை. ஊருக்குப் போய் என் காதலியைக் கல்யாணம் செய்தேன்.எலிசபெத்தை என்னால் மறக்க முடியவில்லை.இங்கே இருக்கிறாள்’ என்று நெஞ்சைக் காட்டினார்.

கோப்பிக்கடைப் பணிப்பெண் வந்தாள்’ எவ்வளவு காசென்றேன்’ பில்லை தந்து கொண்டே’ உங்களை ஒரு நாளும் இங்கே காணவில்லை நீங்கள் எந்த நாடு என்றாள்.’சிறீலங்கா’ என்றேன். ‘நீங்கள்…’ ‘பிறேசில் சிறுவயதிலேயே அக்காவுடன் வந்து கம்பேர்க்கில் இருந்தோம்.அக்கா தனது கஸ்பண்டை தேடி வந்தவர் என்றாள்.

நானும் தயாநிதியும் அவளைத் திகைப்புடன் பார்த்தோம் “அக்காவுடைய படம் ஏதாவது வைத்திருக்கிறீர்களா” என்றேன்.இருக்குது என்று பேர்சிக்குள்ளிருந்து தானும் தமக்கையும் இருந்த படத்தை என்னிடம் நீட்டினாள்.வாங்கிக் கொண்டே அக்காவுக்கு என்ன பெயர் என்றேன் ‘எலிசபெத்’ என்றாள்.

‘எலிசபெத்தா’ என்ற தயாநிதி படத்தை வாங்கிப் பார்த்தார்.திகைத்துப் போனார் வியப்பும் மகிழ்வும் கவலையுமாக அவர் தடுமாறினார்.’உங்கள் எலிசபெத்தா’ என்றேன். ‘அவளேதான்’ என்றவர் எழுந்து வேகமாக கடையைவிட்டு வெளியே போனார்.

பணிப்பெண் திகைத்துப் போய் நின்றாள். படத்தைப் பார்த்ததும் அவர் முகம் மாறியதைக் கவனித்த பணிப்பெண், ஏன் அக்காவின் படத்தைப் பார்த்ததும் எழுந்து போனார் என்றாள்.

நானும் பதட்டத்தில் இருந்தேன்.தமக்கையின் தொழிலைச் சொல்லாமல் பிரேசிலில் உங்கள் அக்காவைச் சந்தித்து காதலித்தவர்.இப்ப அவர் வேறு பெண்ணைத் திருமணம் செய்துவிட்டார். ஆனால் இன்றளவும் உங்கள் அக்காவை நினைத்துக் கொண்டிருக்கிறார் என்றேன்.

தயாநிதி எழுந்து போனதையும் நான் படபடப்புடன் பேசிக் கொண்டிருந்ததையும் கவனித்த மற்ற இரு பணிப்பெண்கள் எமக்கருகில் வந்து என்ன நடந்தது என்றார்கள். எலிசபெத்தின் தங்கை வேகமாக எழுந்து போனவர் அக்காவின் காதலன் என்று அவர்களுக்கு சொல்லி காசை இவரிடம் வாங்குங்கள் என்று சொல்லவிட்டு கடையை விட்டு வெளியே வந்த எலிசபெத்தின் தங்கை ‘யக்கற்றைப் போட்டுக் கொண்டு போ’ என்று சொல்லியும் கேளாதவளாக பனியில் கால் புதையப் புதைய தனது தமக்கையின் காதலனை நோக்கி ஓடினாள்.

தயாநிதி அந்தக் குளிரிலும் ஒரு மரத்தில் சாய்ந்தபடி நின்றார்.கடையைவிட்டு வெளியே வந்த நான் அவர்களருகில் செல்லாது அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்தேன். அந்தப் பணிப்பெண் தயாநிதியின் கைகள் இரண்டையும் பிடித்தவாறு நின்றாள்.என்னையும் கடையையும் அவள; திரும்பிப் பார்த்த போது அவள் அழுவது தெரிந்தது.

இனி……..

 

http://akkinikkunchu.com/?p=68302

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது கதையாயினும்  காதலில் இப்படி நடப்பதும் இதைவிட அதிகமாக நடப்பதும் சாத்தியமே ......!   tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கப்பலில் வேலை செய்பவர்கள் எல்லோரும் படு கில்லாடிகள் அப்பா

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.