Jump to content

இலங்கை அரசியல் சதுரங்க ஆட்டத்தில் ஒவ்வொரு தரப்பினதும் நகர்வுகள் – விரிவான ஒரு அரசியல் அலசல்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை அரசியல் சதுரங்க ஆட்டத்தில் ஒவ்வொரு தரப்பினதும் நகர்வுகள் – விரிவான ஒரு அரசியல் அலசல்

fd60f3c4-bd1c-4db0-83ce-3dd42f42df5c.jpg

பட மூலம், MONEY1055

அரசியல் என்பது ஒரு சதுரங்க ஆட்டம். தாம் முன்கூட்டியே திட்டமிட்டு எந்த காய்களையும் நகர்த்த முடியாது. எதிராளி நகர்த்தும் காய்களுக்கு ஏற்பவே நமது காய்களை நகர்த்த முடியும். சில நேரம் சம்பந்தம் இல்லாமல் சில காய்கள் நகர்த்தப்படுவது போல பார்வையாளர்களுக்கு இருந்தாலும், அந்த நகர்வுகள் கூட எதிராளியை இறுதியில் திணற வைக்கும்.

தற்போது இலங்கை அரசியல் நகர்வுகளை உற்றுநோக்கும் போது, சில காய்கள் பார்வையாளர்களுக்காக நகர்த்தப்படுவது போலவும், சில காய்கள் தத்தமது இறுதி வெற்றிகளை நோக்கி நகர்த்தப்படுவது போலவும் தோன்றுகிறது.

ரணில் விக்கிரமசிங்கவை பதவியில் இருந்து நீக்கிவிட்டு மஹிந்த ராஜபக்‌ஷவை பிரதமர் பதவிக்குக் கொண்டு வந்த ஜனாதிபதியின் செயற்பாடு  சட்டரீதியானதா, ஜனநாயகத்திற்கு விரோதமானதா என்ற பேச்சுக்கள் ஒருபுறமும் நடந்துகொண்டிருக்க,  நாடாளுமன்றத்தில் தமது பெரும்பான்மையை நிரூபிப்பதற்காக இரண்டு தரப்புகளும் முயற்சிகள் செய்துவருகின்றன.

ஆனால், இந்த பெரும்பான்மை எப்படி நிரூபிக்கப்படப்போகிறது என்பது தெளிவில்லாமல் இருக்கிறது. ஏனெனில், பிரதமர் பதவியில் இருந்து ஒருவரை அகற்றுவதற்கு, அவர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்திற்காகவே நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெரும்பான்மை உறுப்பினர்களின் எண்ணிக்கை அவசியமாகிறது.

தமது பிரதமர் பதவியை பறித்தது சட்டத்திற்கு புறம்பானது என்ற நிலைப்பாட்டில் இருக்கும் ரணில் தரப்பும், தற்போது பிரதமராக பதவி ஏற்றிருக்கும் மஹிந்த தரப்பும் தமது எதிராளிகளுக்கு  எதிராக “பிரதமருக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம்” என்ற ஒன்றை கொண்டுவரமுடியாத சூழ்நிலை இருக்கிறது. ஏனெனில், நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட்ட உடனேயே தாங்களே பிரதமர் பதவிக்கு உரித்துடையவர்கள் என்ற அவர்களின் வாதம் அடிபட்டுப்போகும் ஆபத்து இருப்பதை உணர்ந்தே இருக்கிறார்கள்.

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான பகிரங்க விலை நிர்ணயம் 

வேறெந்த ஜனநாயக நாட்டிலும் நடைபெறாத நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான ஒக்ஷன் என்ற ஒரு கேலிக்கூத்துக்கு முழு நாட்டு மக்களும் பார்வையாளர்களாக மாறியிருக்கிறோம். மக்களின் வாக்குகளில் நாடாளுமன்றம் நுழைந்தவர்கள் எந்தவித கூச்சமும் இல்லாமல் தங்களை மக்கள் மன்றத்தின் முன்னால் விலைபேசிக்கொண்டிருக்கிறார்கள். கட்சி தாவுதல் என்பது புதிய விடயம் இல்லை என்றாலும், கடந்த காலங்களில் கட்சி மாறியவர்கள், அதை மக்களுக்கு நியாயப்படுத்தவேண்டிய தேவையிருந்தது, அதற்காக பெரும்பாடுபடவேண்டியிருந்தது.  ஒருமுறை எஸ்.பி. திசாநாயக்க சுதந்திர கட்சியிலிருந்து ஐதேகவுக்கு மாறிய போது,  ஏன் தனக்கு கட்சி மாறவேண்டி ஏற்பட்டது என்று மாதக்கணக்கில் பத்திரிகைகளுக்கு பேட்டியளித்துக்கொண்டிருந்தார். தற்போது மக்கள் மனநிலை என்ன, தங்களது குடும்ப உறுப்பினரக்ளுக்கு தெரியாமலேயே காலை ஒரு கட்சியிலும் மாலை இன்னுமொரு கட்சியிலுமாக பணத்துக்காக அங்கும் இங்கும் ஓடிக்கொண்டிருக்கும் இவர்கள்தான் இந்த நாட்டு மக்களுக்கான கொள்கை வகுப்பாளர்கள் என்று நினைக்கும் போது அழுவதா சிரிப்பதா என்று புரியவில்லை. இன்னுமொன்று, கட்சி மாறுதல் என்பது அவர்களுக்கு மரத்துப்போன விடயமாக இருந்தாலும் மக்களும் இதை ஒரு சாதாரண விடயமாக, ஒரு அரசியல் மரபாக ஏற்றுக்கொள்ளும் மனநிலைக்கு வந்திருப்பது ஆபத்தானது.

கட்சி மாறும் தடைசட்டம் மூலம் இந்த நிலையை கட்டுப்பாடுக்குள் கொண்டுவர முடியும். இதற்காக ஜேவிபி நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பிய போது, இரண்டு பிரதான கட்சிகள் உட்பட சில கட்சிகள் இந்தத் தடைச் சட்டமூலத்தை ஏற்றுக்கொண்டிருக்கவில்லை. அதன் எதிர்விளைவுகள் மக்கள் பிரதிநிதிகளை எந்தளவு மட்டகரமாக மாற்றியிருக்கிறது என்பது தற்போதைய நடப்புக்களை பார்க்கும் போது புரிகிறது. முன்னர் ஒரு நாடாளுமன்ற உறுப்பினருக்கு ஒரு கோடி இரண்டு கோடி என்றிருந்த விலைப்பட்டியல், வெளிநாடுகளின் தலையீடுகளால் தற்போது இருபது அல்லது முப்பது கோடிகளாக மாறியிருக்கிறது.

ஐ.தே.கவின் பலவீனம் 

கிராமிய மக்களை, உழைக்கும் வர்க்கத்தைச் சார்ந்தவர்களை கவரும் எந்தவித வேலைத்திட்டங்களை முன்னெடுக்காமல், தனது கல்லூரி நண்பர்களை வைத்து கொள்கைத் தீர்மானங்களை மேற்கொள்ளும் ரணில் தலைமையிலான ஐதேக இந்த சிக்கலில் இருந்து ஒருவேளை தற்காலிகமாக மீண்டாலும் இன்னுமொரு தேர்தலில் வெற்றிபெற முடியுமா என்பது சந்தேகத்திற்குரியது. ஒருகாலத்தில் தனிப்பெரும் கட்சி என்ற பெருமையைப் பெற்றிருந்த ஐதேக கட்சியை பொறுத்தவரை முற்றிலும் சிறுபான்மை வாக்குகளிலேயே தங்கியிருக்கிறது. இந்த வாக்குகளும் தற்போது இல்லை என்றிருந்தால் ஐதேகவும் சில இடதுசாரி கட்சிகளைப் போன்று ஒரு பெயர்பலகை கட்சியாக மாற்றப்பட்டிருக்கும். இதற்காக கட்சி உறுப்பினர்கள் ரணிலை விட்டு விரண்டோடுவது என்பது புதிய விடயமும் இல்லை. சொல்லப்போனால் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர்களும் முக்கால்வாசி ஏதோ ஒரு காலத்திலாவது ரணில் விக்ரமசிங்கவோடு இணைந்து அரசியலில் ஈடுபட்டவர்களாகவே இருந்திருக்கிறார்கள். தற்போது எஞ்சியிருக்கும் ஒருசில எம்பிக்களும், சஜித் கட்சிக்கு தலைமேயேற்பார் என்ற நம்பிக்கையிலேயே ஐதேகவில் தொடருகிறார்கள். ஆனால், ரணில் இருக்கும்வரை அது நடக்குமா, எப்போது நடைபெறும் என்பது எவருக்கும் தெரியாது.

மஹிந்த மற்றும் மைத்திரியின் நகர்வுகள் 

மறுபக்கம் பொதுத் தேர்தலை நோக்கியே மஹிந்த தரப்பு நகருகிறது என்பது புரிகிறது.  நாம் சமர்ப்பிக்கவிருக்கும் இடைக்கால பட்ஜெட் தோற்கடிக்கப்பட்டால்  பொதுத்தேர்தலுக்கு செல்வது எமக்கு இலகுவாகிவிடும் என்று மஹிந்தவே கூறியிருக்கிறார்.  19ஆவது அரசியலமைப்புச் சீர்திருத்தத்தில் நான்கரை வருடத்திற்கு முன்பாக மூன்றில் இரண்டு பெரும்பான்மை உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தாலே ஒழிய ஜனாதிபதிக்கு நாடாளுமன்றத்தைக் கலைக்கும் அதிகாரம் இல்லை என்ற விடயம் தெளிவாக இருக்கின்றது. இலங்கை அரசியலில் எதையும் நிச்சயித்து கூறமுடியாது. பிரதமரை அகற்றும் அதிகாரம் ஜனாதிபதியிடம் இருந்து 19ஆவது அரசியலமைப்புச் சீர்திருத்தத்தில் வறிதாக்கப்பட்டிருந்த போதிலும், மற்றொரு சரத்தை பாவித்து ரணில் விக்ரமசிங்கவை அகற்றியது போல குறிப்பிட்ட நாள் இடைவெளியில் இரண்டுமுறை அரசாங்கங்கள் மாற்றியமைக்கப்பட்டதால் நாட்டின் அரசியல் ஸ்தரத்தன்மை செயலிழந்திருகிறது. இதைப் பாதுகாக்க, நாடாளுமன்ற சம்பிரதாயப்படி மீண்டும் ஒருமுறை அரசாங்கத்தை நிறுவுவதை விட நாடாளுமன்றம் தானாக கலைக்கப்படும் என்ற அடிப்படையில் மஹிந்த அணி நகர்வதாக அரசியல் வட்டாரங்களில் ஒரு கருத்து தெரிவிக்கப்பட்டுவருகிறது.

எனினும், மஹிந்த அணி நம்பிக்கை வாக்கெடுப்பில் அல்லது பட்ஜெட்டில் தோல்வியடைந்தால், மீண்டும் பிரதமரை நியமிக்கும் அதிகாரத்தைப் பயன்படுத்தி சஜித் பிரேமதாசவை பிரதமராக ஜனாதிபதி நியமிக்கக்கூடும் என்ற ஒரு அரசியல் வதந்தியும் அரசியல் வட்டாரங்களில் உலா வருகிறது. காரணம் மீண்டும் ரணில் பிரதமராக வந்தால், ஒரு மணித்தியாலம் கூட தான் ஜனாதிபதி பதவியில் இருக்க போவதில்லை என்று ஜனாதிபதி கூறியிருப்பதையும் கவனித்தில் கொள்ளும் போது இந்தக் கூற்றை அடியோடு மறுப்பதற்கும் முடியாமல் இருக்கிறது

மஹிந்த அணி தங்களை இடைக்கால அரசாங்கம் என்றே அழைத்துக்கொள்கிறார்கள் என்பதும் அவர்களின் முக்கியஸ்த்தர்கள் எவரும் எந்தவொரு அமைச்சுப் பதவியையும் இதுவரை பெறவில்லை என்பதும் அவர்கள் பொது தேர்தலுக்குத் தயாராகிறார்கள் என்பதற்கான சமிக்ஞையாகும். தேர்தலின் பின்னரான அவர்களின் உறுப்பினர்களை கொண்ட ஒரு உறுதியான அரசாங்கம் ஒன்றை அமைக்க முயல்கிறார்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது. பெரும்பான்மையை நிரூபித்தல் என்ற இருதரப்புக்குமான இழுபறியில், துமிந்த திசாநாயக்க என்ன நிலைப்பாட்டை எடுக்கப்போகிறார் என்பதில் இருந்த குழப்பநிலை காரணமாக இரண்டு நாட்களாக கள நிலவரம் கொஞ்சம் தளம்பல் நிலையில் இருந்தது. அதனால், கட்சி மாற உத்தேசித்திருந்தவர்கள்  மதில்மேல் பூனைகளாக இருந்திருந்தார்கள். துமிந்த என்ற தடை தற்போது அகற்றப்பட்டிருப்பதால், இனிமேல் விஷேட செய்திகளை எதிர்பார்க்கலாம். ஐதேகவில் இருந்து மாறமாட்டார்கள் என்று நம்பப்படும் பொன்சேகா, மங்கள, அகில, சாகல போன்றோர் வகித்த அமைச்சுக்கள் தவிர ஏனைய அமைச்சுக்கள் இதுவரை எவருக்கும் வழங்கப்படவும் இல்லை என்ற விடயத்தை “புதிய அரசாங்கம் உங்களை அன்புடன் வரவேற்கக் காத்திருக்கிறது” என்ற குறியீடாகவே பார்க்கவேண்டியிருக்கிறது.

திரிசங்கு நிலையில் சிறுபான்மை கட்சிகள் 

எந்த அரசாங்கம் தற்போது அமைந்தாலும், அடுத்த தேர்தல் வரும் வரையிலான இந்த இடைப்பட்ட காலத்தில் மக்களின் பிரதான பிரச்சினைகளுக்கு முடிவு எட்டும் வகையிலான சூழல் இருக்கப்போவதில்லை என்ற நிலையில் ஏதாவது ஒருதரப்புக்கு ஆதரவு அளிக்கவேண்டும் என்றால் சிறுபான்மை மக்களின்  பிரச்சினைகள்  தொடர்பில் எழுத்துமூலம் உறுதியை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று ஒரு சிலர் பேஸ்புக்கில் அறிவுரை கூறுவது வேடிக்கையாகத் தெரிகிறது. சிறுபான்மை கட்சிகளைப் பொறுத்தவரையில் எதிர்கால தேர்தல்களை அடிப்படையாகக் கொண்டே எந்தவொரு முடிவுகளை எட்ட முனைகிறார்கள் என்பது அவர்களின் கூற்றுக்களை வைத்துப்பார்க்கும் போது புலப்படுகிறது.

ஏனெனில், தமிழ் கூட்டமைப்பு தவிர ஏனைய கட்சிகள் ரணில் விக்ரமிசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய கூட்டமைப்பில் இருக்கிறார்கள். தற்போதைய நிலையில் மஹிந்த தரப்புக்கு மாறும் போது மிகவும் கிட்டிய தூரத்தில் பொது தேர்தல் நடைபெற்றால், அவர்கள் ஒன்றில் மொட்டு அல்லது வெற்றிலை சின்னத்தில் களம் இறங்கவேண்டி ஏற்படும். ஒவ்வொரு மாவட்டத்திலும் கட்சி மாறும் உறுப்பினர்கள் ஏற்கனவே மஹிந்த கூட்டணியில் இருக்கும் சிறுபான்மை உறுப்பினர்களுடன் விருப்பு வாக்குகளுக்காக கடுமையாக போராடவேண்டி வரும் என்பதையும் கணித்திருக்கிறார்கள்.

இன்னொரு தெரிவாக, பொதுத்தேர்தல் வரை ஐதேகவுடன் பயணித்து, பின்னர் மஹிந்த வெற்றிபெற்றால் இணைந்துகொள்வதும் இலகுவான தெரிவாக இல்லை. காரணம் பொதுத்தேர்தலில் மஹிந்த அமோக வெற்றிபெற்று தனியாக ஆட்சியமைக்கும் நிலை உருவானால், சிறுபான்மை  கட்சிகளின் தயவு மஹிந்தவுக்கு தேவைப்படப் போவதில்லை என்பதால் எதிர்கட்சியில் உட்காரவேண்டி ஏற்படும். கட்சித் தலைமைகளை மிச்சம் வைத்துவிட்டு, உறுப்பினர்களைப் பிரித்து கட்சிகளை உடைக்கும் பழைய வேலையை மஹிந்த செய்ய துணிவார் என்பதும் இவர்களுக்கு தெரிந்திருக்கும். எனவே, தங்களின் உறுப்புரிமையையும், கட்சியையும் காப்பாற்றும் உத்தியாக எதை செய்யப்போகிறார்கள் என்பதை தெரிந்துகொள்ள நீண்ட நாட்கள் காத்திருக்கவேண்டிய அவசியம் இல்லை.

Dilshan.jpg?zoom=3&resize=90%2C90டில்ஷான் முஹம்மத்

 

 

http://maatram.org/?p=7232

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அற்புதனின் தொடரில் பல ஊகங்களும் இருந்தன,  உண்மைகளும் இருந்தன.  ஈழப்போராட்ட உண்மைகளை அறிய வேண்டுமானால் பக்க சார்பற்ற முறையில் வெளிவந்த  பல நூல்களையும் அந்த கால பத்திரிகை  செய்திகளையும்வாசிப்பதன் மூலமே அதனை அறிந்து கொள்ளலாம்.  உதாரணமாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் களப்பலியான முதல் பெண்போராளி ஈபிஆர்எல் ஐ சேர்ந்த சோபா என்பதை அண் மையில் தான் அறிந்தேன். அதுவரை மாலதி என்றே தவறான தகவலை நம்பியிருந்தேன்.  
    • ஹிந்திக் கார‌ன் த‌மிழ் நாட்டுக்கை வ‌ந்து ஹிந்தி க‌தைக்க‌ த‌மிழ் நாட்டுக் கார‌ன் ஹிந்தி தெரியாது என்று சொல்ல‌ நீ இந்திய‌னே இல்லை என்று சொல்லுறான் என்றால் வ‌ட‌ நாட்டு கோமாளிக‌ளுக்கு எவ‌ள‌வு தினா வெட்டு   ஏதோ ஹிந்தி உல‌க‌ம்  முழுதும் பேசும் மொழி மாதிரி ஹா ஹா..................மான‌த் த‌மிழ் பிள்ளைக‌ள் வீறு கொண்டு எழுந்தால் ஒரு சில‌ வார‌த்தில் த‌மிழை த‌விற‌ வேறு மொழிக்கு இட‌ம் இல்லை என்ற‌ நிலையை உருவாக்க‌லாம்................ஹிந்தி என்றால் அதை மிதி என்ற‌ கோவ‌ம் த‌மிழ‌ர்க‌ளின் ர‌த்த‌த்தோடு க‌ல‌ந்து இருக்க‌னும்................எழுத்து பிழை விட்டு என் தாய் மொழிய‌ நான் எழுதினாலும் என‌க்கு எல்லாமே த‌மிழ் தான்...............................
    • 👍... நீங்கள் சொல்வது உண்மையே. இவர்கள் எப்படித்தான் எங்களை இப்படித் துல்லியமாக அறிந்து வைத்திருக்கின்றார்களோ என்று ஒரு 'பயம்' கூட சில நேரங்களில் வருவதுண்டு.....😀
    • Macroeconomics இல் மனம் மலத்தை மனிதன் கையால் அள்ளுவதை வளர்ச்சி என்று வரையறுக்கிறார்களா?போலியான தரவுகளைக் கொடுத்தால் போலியான முடிவுகள்தான் கிடைக்கும்.இந்தியாவில் மனித மலத்தை மனிதர்கள் அள்ளுவது பொய்யென்று சொல்கிறீர்களா?எத்தனையோ மனிதர்கள் நச்சு வாயுவைச் சுவாசித்து மரணித்து இருக்கிறார்கள்.அதெல்லாம் உங்கள் கணக்கீட்டில் வருகிறதா?
    • விற்றுப் போடுவார்கள் என்பதால்த் தான் பூட்டுக்கு மேல் பூட்டைப் போட்டு பூட்டிவிட்டு இருக்கிறார்களோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.