Jump to content

வாசனை – அனோஜன் பாலகிருஷ்ணன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வாசனை – அனோஜன் பாலகிருஷ்ணன்

vasanai.jpg

இத்தனை காலம் கடந்து அவனை சந்திப்பேன் என்பதை சற்றும் எதிர்பார்க்கவில்லை. அவன் முகம் மட்டுமே எனக்கு மங்கலாக நினைவில் இருந்தது. ஜெயந்தனை கண்டவுடன் புதையுண்டிருந்த அவனின் முகம் ஞாபக அடுக்களில் இருந்து ஓர் அலைபோல் எழுந்து வந்து என் காலடியில் மோதி பொடிப்பொடியாக உதிர்ந்தது. அவன் தன் மனைவியை விட்டுவிட்டு என்னை மட்டும் தனியாக அழைப்பது மெலிதான சஞ்சலத்தைத் தந்தது. அவன் மனைவி தன் உறவினர் ஒருவரைப் பார்க்கப்போய்விட்டதாக நான் கேட்காமலே தொலைபேசியில் சொன்னான். ஹரிக்குச் சொல்லலாமா என்று யோசிக்கச் சங்கடமாகவிருந்தது. ஜெயந்தனைக் காதலித்து கடைசியில் ஹரியை கல்யாணம் செய்துகொண்டபோதும் ஜெயந்தனைப் பற்றி நான் ஹரியிடம் வாயே திறந்தது இல்லை.

ஜெயந்தனை சந்தித்தது மிகத் தற்செயல். அன்று மட்டும் ஃபஷன்பேக் செல்லாமல் இருந்திருந்தால் அவனைக் கண்டே இருக்க முடியாது. அந்தக் கொந்தளிப்பு நிகழ்ந்திருக்காது.

ஃபஷன்பேக் உடைய உள்படிகளால் இறங்கிவரும்போது அவன் என்னைப் பார்த்துக்கொண்டு இருந்ததினை தற்செயலாகக் கண்டேன். வலப்பக்க உதட்டைச் சுழித்து சிரித்தான். அவன் புன்னகை மெலிதாக வெடித்து என்மேல் பரவியதை உணர்ந்தபோது இப்போதும் என்தேகம் குளிர்கின்றது. அவன் அருகில் கூந்தலை மேவியிழுத்து கன்னங்கள் மினுங்க ஒரு பெண்ணிருந்தாள். மௌனமாக ஒருகணம் நின்றுவிட்டு சுதாகரித்து அவனைப் பார்த்துச் சிரித்தேன். என் அருகில் வந்தான். நானும் அவனை நோக்கிச் சென்றிருந்தேன். இருவரும் பேசத் தொடங்குவதற்கு ஏதோவொன்று இருப்பதாக நினைத்துக்கொண்டேன்.

“எப்படி இருக்குறீங்க..?” என்று ஆரம்பித்த சம்பிரதாய உரையாடல் நீண்டுகொண்டு சென்றது. தனக்கருகில் நிற்கும் அவளை தன் மனைவி என்று அறிமுகப்படுத்தினான். என்னைக் கட்டிப்பிடிப்பதுபோல் அருகில் வந்து என் தோள் மூட்டுக்களை தன் இடக்கையால் தட்டி மற்றைய கையால் என் வலக்கையைப் பிடித்து சிநேகமாகக் கதைக்கத் தொடங்கினாள்.

“வெளியே ரெஸ்டோரன்ட் ஒன்றுக்குப்போய் சாப்பிட்டுக்கொண்டு கதைப்பமா?” அவன் கேட்க அவன் மனைவி போகலாமே என்று என்னைப் பார்த்தாள். அவளுக்கு என்னைத் தெரியுமா? எங்கள் கதைகள் அவளுக்குத் தெரிந்திருக்குமா. அவசரமாகச் செல்ல வேண்டும், வேறொருநாள் சந்திப்போம் என்று சொல்லி ஒரு மாதிரி அவர்களைச் சாமாளித்துவிட்டுப் புறப்பட்டேன். போகும்போது அவன் மனைவி என் தொலைபேசி எண்னைக் கேட்டாள். கைத்தொலைபேசி எண்னைக் கொடுத்திருந்தேன். அதுதான் வம்பாகப்போனது. அடுத்தநாளே அவன் அழைத்தான். நீண்ட நேரம் கதைத்தான். மறந்தும் அவன் பழைய காதலைப் பற்றி பேசவேயில்லை. எப்படி அவனால் இப்படி நுட்பமாக உரையாட முடிகின்றது.

கட்டில் மெத்தையில் வீழ்ந்து படுத்தேன். தலை வலிக்கும்போல் தோன்றியது. அப்பாவும் தன் காதலியை இதுபோல் அம்மாவுக்குத் தெரியாமல் ரகசியமாகச் சந்தித்திருப்பாரா? அப்பாவின் காதலியின் கற்பனை விம்பம் ஒரு தேவதைபோல் எனக்குள் விரிந்தாள். அதுவொரு தனிக்கதை.

ஹங்கரில் இருந்த ஹரியின் முழங்கை நீளமான மேற்சட்டையை தொட்டுப்பார்க்க மிருதுவாக கைகளில் அமிழ்ந்தது. ஒவ்வொரு சட்டைகளாக எடுத்து முகர்ந்து பார்த்தேன். ஹரியின்  வாசனை சட்டைகள் மீது வீசிக்கொண்டிருந்தது. ஹங்கரில் இருந்தன விதம்விதமான வரிகள் இடப்பட்ட சட்டைகள்.  ஹரி வரிகள் இடப்பட்ட சட்டைகளை அணிய விரும்புவார். சட்டைகளினை எடுத்து கட்டிலில் பரப்பிவிட்டு கைகளால் நீவீனேன். சாய்ந்து சட்டைகளின்மேல் வீழ்ந்து படுத்தேன். மென்மையாகக் கட்டில் மெத்தை அமிழ்ந்தது. மின்விசிறிகள் எனக்கு மேலாகச் சுழன்று கொண்டிருந்தன. மெலிதான வெயில் நீண்ட கோடுவடிவில் நீளமாக யன்னலால் நுழைந்து கட்டில் விளிம்பில் சாய்வாக விழுத்திக்கொண்டிருந்தது. எழுத்து சென்று பழுப்பு நிறமான திரைச்சீலையினை இழுத்து மூடும்போது வெளியே பார்த்தேன். கொள்ளுப்பிட்டி சுவாரசியமாக இயங்கிக்கொண்டிருந்தது. இராணி வீதியிலுள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் பன்னிரண்டாவது தளத்தில் எங்களுடைய குடியிருப்பு இருந்தது. யன்னலால் நோக்கும்போது பாசங்கற்ற கொள்ளுப்பிட்டியின் இயக்கத்தினைப் பார்க்கக்கூடியதாக இருக்கும்.

ஒவ்வொரு முறையும் ஹரி வேலைக்குச் சென்றபின் யன்னலால் குதூகலிக்கும் சிறுமிபோல் ஆர்வங்கள் சுடர்விட வேடிக்கை பார்ப்பேன். மழைநாட்களினை யன்னலினால் பார்க்கும்போது இன்னும் சுவாரசியமாக இருக்கும். பலசமயம் கண்ணில் தென்படும் முச்சக்கர வண்டிகளை வேகமாக எண்ணுவேன்.

திரைச்சீலையினை இழுத்து மூடிவிட்டு படுக்கையில் வீழ்ந்தேன். மின்விசிறிகள் சுழல இதமான காற்று என்மீது படர்ந்தது. ஹரியின் சட்டையின் பொத்தான்களை விரலால் சுழற்றிக்கொண்டு சட்டையின்மேல் படுத்து வாசனையை முகர்ந்தேன். முகர முகர ஹரியின் வாசனை வந்துகொண்டேயிருந்தது. என் அப்பாவின் வாசனையை நினைத்துப்பார்த்தேன். ஆண்தன்மையான கருணை நிரம்பிவழியும் வாசனை அது.

அப்பாவுக்கு எப்போதும் என்மீது பிரியம் அதிகமாக இருந்தது. சின்ன வயசில் மடியின் மேல் இருந்திவைத்து இறுக்கமாக தலைமயிர் பின்னிவிடுவார். ஒவ்வொருமுறையும் அப்பாவின் தோள் மூட்டுகளை பிடித்துக்கொண்டு தொங்கும்போதும் அப்பாவின் வாசனை என்னில் பரவும். சிறுமியாக இருக்கும்போது பலமுறை அப்பா வேலையால் வரும்போது ஓடிச்சென்று அப்பாவினை எட்டிப்பிடிப்பேன். அப்பாவின் வேர்வை வாசம் வீசிக்கொண்டிருக்கும். சைக்கிள் மிதித்து கொக்குவிலில் இருந்து நல்லூர் வரை அப்பா வியர்வை வழிய வேலைக்குப் போய் வருவார்.

அப்பா யாழ்.மாநகரசபையில் கிளார்க் வேலையிலே இருந்தார், இறுதிவரை அதிலேயே கிடைக்கப்பெற்ற பதவியிலே இருந்தார். சிவப்பு நிறமான பிளாஸ்ட்டிக் கூடையினை சைக்கிள் கைப்பிடியில் கொழுவிக்கொண்டு சைக்கிளினை இறுக்கி மிதித்துக்கொண்டு போய்வருவார். ஞாயிற்றுக் கிழமைகளில் திருநெல்வேலி சந்தைக்கு மரக்கறி வேண்டச் செல்லும்போது நானும் அப்பாவோடு செல்வேன். சைக்கிள் பாரில் ஏறி அமர்ந்துகொண்டு என் தலை அப்பாவின் மார்பில் இடிக்க சைக்கிளில் பயணிப்பது அலாதியான ஒன்று. அப்பாவின் வியர்வையில் இருந்து அந்தவாசம் வந்துகொண்டேயிருக்கும்.

எங்கள் வீட்டுக்குப் பின்னால் எக்கச்சக்கமான தென்னை மரங்கள் இருக்கும். சில்லென்று காற்றுவீச மெல்லமாகத் தென்னை ஓலைகள் அசைய பூவரசு வேலிக்கு அருகில் நாம் மரத்திலான தடிமான கதிரைகளைப் போட்டுவிட்டு அமர்வோம். கதிரைகளில் சப்பாணியிட்டு நான் அமர்ந்திருப்பேன். சிறுமியாக இருக்கும்போது அப்பாவின் மடியில் அமர்ந்து நெஞ்சில் தலைசாய்த்து தோள் மூட்டுகளைப் பிடித்துக்கொண்டு அப்பாவை பேசவிட்டு அமர்ந்திருப்பேன். அப்பாவின் இதயத்துடிப்பு காதில் கேட்கும். சிலசமயம் தாடி மழிக்கப்பட்ட நாடியில் முளைவிட்ட அப்பாவின் மயிர்கள் என் கன்னங்களில் மெலிதாகக் குத்தி உரசும். காற்றில் கலையும் என் கூந்தலைத் தடவிக்கொண்டு அப்பா கதைத்துக்கொண்டு இருப்பார்.

அம்மாவோடு அப்பா கதைத்ததைவிட என்னோடு கதைத்தது அதிகமாக இருக்கும். நான் வளரவளர அப்பா என்னோடு இன்னும் நெருக்கமாகப் பேசுவார். ஆனால் அப்பா எனக்குச் சொல்லாத ஒன்று இருந்தது. அம்மா அதனை தொடர்கதைபோல் வேகமாக பின்னொருநாளில் சொன்னாள். அம்மா அதனை மிகச்சாதரணமாக எனக்குச் சொன்னது இன்னும் தெளிவான காட்சிகளாக நினைவிருக்கின்றது.

அது அப்பாவின் இருபத்தியோராவது வயதில் நடந்த கதை. அப்போது அப்பா பிட்டக்கொட்டுவையில் நாலாம் குறுக்குத்தெருவிலுள்ள தானியங்கள் ஏற்றுமதி செய்யும் கடையில் கொஞ்சக்காலம் கணக்குவழக்குகள் பார்த்துக்கொண்டிருந்தார். அக்கடை மூட்டை மூட்டையாகக் களஞ்சியங்களை பத்திரப்படுத்தி சிறுகடைகளுக்கு ஏற்றுமதி செய்யும் பெரிய கடையாகவிருந்தது. தாத்தாவின் நண்பர் ஒருவருக்கு வேண்டப்பட்டவரின் கடை என்பதால் சிபாரிசின்பேரில் அப்பாவுக்கு வேலை கிடைத்தது. கிழமைக்கு நான்கு நாள் அங்கேயே தங்கி வேலைபார்க்க வேண்டியிருந்தது. கொட்டுவையில் இருத்து வெள்ளிக்கிழமை பின்னேரம் இரவுத்தபால் புகையிரதத்தில் புறப்பட்டு யாழ்ப்பாணம் அதிகாலையில் வந்துசேர்வார். மறுபடியும் திங்கள் காலமை யாழ்தேவியில் புறபட்டு கொட்டுவை போய்ச்சேருவார். இந்தப் புகையிரதப் பயணத்தில்தான் அப்பா அந்தப் பெண்ணைக் கண்டாராம். சிவப்பு நிற சேலையுடுத்தி நீல நிறமான நீண்ட பெண்களுக்குரிய கைப்பை தோளில் இருந்துவழிய அந்தப்பெண் போய்வருவதினை திங்கள்தோறும் யாழ்தேவியில் கண்டார். காணும்போது எப்போதும் சிவப்பு சேலையிலே அவள் இருப்பாளாம். யாழ்ப்பாணத்தில் இருந்து புறப்பட்டு வவுனியாவில் அவள் இறங்கிவிடுவாளாம்.

முதலில் அவளின் நீல கைப்பை அப்பாவின் கண்களில் விநோதமாகத் தட்டுப்பட்டதாம். அவளுக்கு நீண்ட கூந்தல் என்று அப்பா ரசித்துச்சொல்வாராம் என்று அம்மா என்னை படியில் இருத்திவைத்து தலைமயிரைப் பின்னிக்கொண்டு சொன்னபோது அம்மாவின் முகத்தை நான் திரும்பிப் பார்த்தேன். நல்லண்ணை வைத்து நன்றாகத் தேய்த்து பொறுமையாக சீவி நீண்ட ஓட்டைப்பின்னல் போட்டு அவள் இருப்பாளாம் என்று அம்மா சலனம் இல்லாமல் சொல்லிக்கொண்டு இருந்தாள். அம்மாவிடம் சிவப்பு நிற சீலை இருந்ததே இல்லை.

௦௦௦

நான் உயர்தரம் படிக்கும்போது ஜெயந்தனைக் காதலித்தேன். சிவச்சந்திரன் என்ற பிரபல பௌதிகவியல் ஆசிரியர் உயர்தர மாணவர்களுக்கு பௌதிகவியல் படிப்பித்துக்கொண்டிருந்தார். நீண்ட பனைமரச் சிலாகில் குற்றிகள் பிணைக்கப்பட்டு வாங்குகள் தயாரிக்கப்பட்டிருந்தன. கிட்டத்தட்ட நானூறுக்கும் அதிகமானவர்கள் ஒரு பிரிவில் படித்துக்கொண்டிருந்தோம். அங்கேதான் ஜெயந்தனைச் சந்தித்தேன். மெலிதான மீசை அவனின் உதட்டில் படர்ந்திருக்கும். தலையை எப்போதும் மேவியிழுத்து காற்றில் கலைய வருவான். ஒவ்வொரு முறையும் என்பின்னால் வரும்போது நான் கவனிக்கத் தொடங்கினேன். அப்பா வேண்டித்தந்த லுமாலா சைக்கிளினை மிதித்து செல்லும்போது நான் செல்லும் வீதிகளுக்குப் பின்னால் அவன் வந்துகொண்டிருந்தான். பத்தடி தள்ளி இடைவெளிவிட்டே நாகரிகமாகப் பின்தொடர்ந்து தனது சைக்கிளில் வந்துகொண்டிருப்பான். ஒழுங்கைகளுக்குள் நுழையும்போது மட்டும் எனக்கு அருகில் சைக்கிளில் சமாந்தரமாக நெருங்கிவந்து தொண்டை கரகரக்க பேசமுயல்வான். முதலில் நான் பயந்தேன். இரண்டாம் நாள் அவனைப்பார்க்க பயம்போய் சிரிப்பு எஞ்சத்தொடங்கியது. அந்த சிரிப்பு மூன்றாம் நாளில் அவன்மேல் பரிதாபமாக மாறத்தொடங்கியது.

தினமும் எனக்காகப் பின்னால் சலிப்பில்லாமல் வரத்தொடங்கினான். அவனின் உடைகள் கச்சிதமாக இருக்கும். இறுக்கமான கால்தசைகளை கவ்விப்பிடிக்கும் நீளக் காற்சட்டையும் பொருத்தமான வண்ண நிறத்தில் தெரிவுசெய்யப்பட்ட முழுக்கைச் சட்டையை கைமுழங்கைவரை மடித்துவிட்டும் அவன் வருவான். அவன் கண்களில் மிகுந்த தயக்கம் இருந்தது. வகுப்பு முடிய ஆண்களே சைகிளினை எடுத்துக்கொண்டு முதலில் வீடுசெல்வார்கள். ஆண்கள் எல்லோரும் சைக்கிள் எடுத்துமுடிய பெண்களை வகுப்பில் இருந்து வெளியேற விடுவார்கள். சில பொடியன்கள் ஒழுங்கை கரையில் நிற்பார்கள் அவர்களுக்குத் தேவையானவர்கள் செல்லும்வரை. நான் செல்லும் பாதையில் மௌனமாக மெல்ல மெல்லமாக ஜெயந்தன் சைக்கிளினை மிதித்துச் சென்றுகொண்டிருப்பான். நான் வேமகாக அவனை முந்திச்செல்வேன். அவனுக்குப் பின்னால் செல்லும்போது அவனது உடைகளை உற்றுக்கவனிப்பேன். தன் உடல்வாகுக்கு மிகப்பொருத்தமான அளவுகளில் உடைகளைத் தேர்வுசெய்யும் நேர்த்தியைப் பார்த்து வியந்துகொண்டிருந்தேன். என் அப்பாவும் அப்படிதான் உடையணிவார்.

மதனுக்கும் ஜெயந்தனுக்கும் இடையில் நிறைய வித்தியாசங்கள் இருந்தது. மதன் அதிகம் உடையலங்காரத்தில் கவனம் எடுத்துக்கொள்ள மாட்டான். சோம்பலாகவே செயல்படுவான். சிவந்த மேனி. நீண்ட மூக்கு. ஏறத்தாழ மூன்று நாளுக்கு ஒருமுறைதான் பள்ளிக்கூடம் வருவான். பத்தாம் ஆண்டின் நடுப்பகுதியில் எங்கள் பாடசாலைக்கு இடம்பெயர்வின் பின் புதிதாகப் படிக்கவந்தான். தயக்கம் கலந்த கண்களை நேருக்குநேராக முதலில் பார்த்தேன். அதிகம் கதைத்துக்கொள்ளாமல் இருந்தாலும் கொஞ்சநாளில் அவனும் கதைக்கத் தொடங்கினான். அவனின் கதையில் எப்போதும் மென்மைத்தனம் இருக்கும். அவன் உடல் நெளிவுகள் பெண்மையோடு வெளிப்படும். பிரடியில் சடையாக வளர்ந்துள்ள முடிகளை கதைக்கும்போது கைகளால் கோதிக்கொண்டு கதைப்பான்.

அந்தப் பிள்ளை ஏன் இப்படி இருக்கு என்று நண்பிகள் அவன்மேல் பொறாமைப்பட்டார்கள். அவன் என்னோடு மட்டும் கட்டுக்கடங்காமல் கதைக்கத் தொடங்கினான். ஆண்கள் ஒரு வரிசையிலும் பெண்கள் ஒரு வரிசையிலும் இருப்போம். ஆனால் இடைவேளை நேரம் நாங்கள் மாறிமாறி அவர்களுக்குப் பக்கத்தில் இருந்தும் கதைப்போம். கதைக்கும்போது என் இரட்டை சடை ஆடிக்கொண்டு இருப்பதினை அவன் பார்த்துக்கொண்டு இருப்பான். அவன் என்னோடு பழகி நான்காவது மாதத்தில் அவனுக்கு நான் கடிதம் கொடுத்தேன். நான் அக்கடிதத்தை கொடுக்கும்போது என் நண்பிகளுக்கு அப்போது பொறாமையாக இருந்தது. இப்போதும் சரியாகத் தெரியாவிட்டாலும் அவனிடம் இருந்த பெண்மைதான் கவர்ந்ததாக இருக்கலாம்.

அது வருடத் தொடக்கத்தின் பாடசாலை விளையாட்டுப் போட்டி நிகழும் சமயம். சனிக்கிழமை அன்று நாங்கள் பயிற்சிக்கு மைதானத்தில் எங்கள் வகுப்பும் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுமாகக் கூடியிருந்தோம். தண்ணிக் குழாயடியில் தண்ணீர் குடிக்கச் சென்றபோது மதன் தனியே தண்ணீர் குடித்துவிட்டு முழங்காலைக் கழுவிக்கொண்டிருந்தான். என்னவென்று வினவ முழங்காலில் காயம் ஏற்பட்டுவிட்டதாகக் காட்டினான். சிவந்த புண் தோலுரிந்திருந்தது. சற்றுமுற்றும் பார்த்துவிட்டு என்னை சட்டென்று இறுகிக் கட்டியணைத்தான். என் உடல் ஒருமுறை குளிர்ந்து அடங்கியது.

000

வேகமாக பறந்துவந்த கொக்கு யன்னலில் அடிபடுவதுபோல் வந்து சுதாகரித்து வேகமாக வளைவாக திரும்பி பறந்துசென்றது. யன்னல் கரையில் நின்ற நான் திடுக்கிட்டுப் பார்த்தேன்.

தோய்க்க வேண்டிய சட்டைகளையும் வேறு உடைகளையும், காலுறைகளையும் கழற்றி ஹங்கருக்குக் கீழ் அவர் வைப்பார், அல்லது வேலையால் வந்தவுடன் மேல்சட்டையைக் கழற்றி குஷன் இருக்கையின்மேல் போடுவார். ஹங்கருக்குக் கீழ் இருந்த உடைகளை எடுத்துக்கொண்டு சலவை இயந்திரத்தை நோக்கிச் சென்றேன்.

ஆறுமணிக்குப் பிறகுதான் ஹரி வேலைத் தளத்தால் திரும்புவார். குளித்துவிட்டு மதிய சாப்பாட்டிற்கு அரிசியை மின்னடுப்பில் போட்டுவிட்டு நீண்ட எல்.ஈ.டி தொலைக்காட்சிக்கு முன் வந்தேன். ஹரியைச் சுற்றி அப்பாவின் நினைவு சம்பந்தமில்லாமல் வந்தவாறிருந்தது.

ஏதோவொரு கட்டத்தில் நானும் அப்பாவும் அதிகம் பேசமால் விலத்திக்கொண்ட்டோம். இல்லையில்லை அவரே விலத்திக்கொண்டார். அது எப்போது நடந்தது என்று யோசித்துப் பார்த்தேன். மிக நுட்பமாக அது விடுபட்டிருந்தது உறைத்தது. பலமுறை இராணுவம் எங்கள் வீட்டுக்கு வந்து போனார்கள். எனக்கும் அப்பாவுக்கும் இடையில் அதிகம் பேசாத் தன்மை அப்போதுதான் உருவாகியதாக இருக்கவேண்டும். இதுவரை இருந்த இயல்பு நிலை வீழ்ந்ததுபோல் இருந்தது. இரண்டு முறை அப்பாவை விசாரணை என்றபெயரில் படைத்தள தலைமையகத்துக்கு அழைத்துச் சென்றார்கள். சீலன் அண்ணா முத்திரைச் சந்தியடியில் வைத்து சுட்டுக்கொலை செய்யப்பட்டு இருந்தார். அப்பாவின் முகம் விறைத்தபடி இருக்கும். என்னோடு அதிகம் கதைக்கவும் மாட்டார். ஏதோவொன்றை நினைத்து கடுமையாக யோசித்துக்கொண்டு கதிரையில் இருப்பார்.

௦௦௦

அப்பா அந்தப் பெண்ணை தினமும் சந்திக்கும்போது அவர்மேல் காதல் அரும்பத் தொடங்கியதாம். ஆனால் ஒருநாள் கூடப் பேசியது இல்லையாம். ஒரு நாள் எதிர் எதிர் இருக்கைகளில் நேருக்குநேர் பார்த்துக்கொண்டு அவர்கள் இருவரும் புகையிரதப் பெட்டியில் அமர்ந்திருக்கவேண்டி ஏற்பட்டது. அப்பாவுக்கு நேராக அவள் ஒற்றைப் பின்னல்போட்ட நீண்ட கூந்தலை கழுத்துக்கு முன்னால் சுழற்றிப் போட்டுவிட்டு சீலையில் அமர்ந்திருந்தாள். அப்பா அவளுடைய கைப்பையையும் கைகடிகாரத்தையும் இறுதிவரை பார்த்துக்கொண்டு இருந்தார். அவர்களுக்கு இடையில் எந்த உரையாடலும் இல்லாமல் இருந்தது. ஒவ்வொரு ரயில் பயணங்களும் வெவ்வேறு கோணங்களுடன் கழிந்துகொண்டே இருந்தன. இறுதியாக அப்பாவுக்கு யாழ்ப்பாணத்தில் மாநகரசபையில் வேலை கிடைத்தது. கொட்டுவை வேலையையும் விடவேண்டியதாகியது. பயணங்கள் நிரம்பிய ஒரு சுமையில் இருந்து விடுவித்துவிட்டதாக தாத்தா குதூகலப்பட்டார். அப்பாவுக்கு அந்தக்குதூகலம் இல்லாமல் இருந்தது. சிவப்பு சேலையும் நீல கைப்பையும் அவர் பிரஞ்சையில் எஞ்சி ஈரமாக வடிந்திருந்தது என்று அம்மா சொன்னார்.

அப்பா கொழும்பில் இருந்தபோது சிங்களம் சரளமாகப் பேசக் கற்றுக்கொண்டார். உச்சரிப்பில் கூட சிங்களவர்கள்போலவே அப்பாவால் பேசமுடியும் என்று பலர் வியந்து அப்பாவைப் புகழ்வார்கள். சிங்களத்தில் நன்கு தேர்ந்த தமிழர்கள் சிங்களம் கதைத்தால் இருக்கும் சிறிய நுணுக்கமான வித்தியாசம்கூட அப்பாவின் பேச்சில் இருக்காதாம் என்று என் காதுபடவே பலர் சொல்வார்கள். அதில் முக்கியாமனவர் சீலன் அண்ணா. சீலன் அண்ணா அடிக்கடி அப்பாவை சந்திக்க வருவார். அவரை சந்திக்க வரும்போது அப்பாவும் அவரும் மெலிதான குரலில் கதைத்துக்கொண்டு இருப்பார்கள். நானும் அம்மாவும் தள்ளியே இருப்போம். அப்பா சீலன் அண்ணாவுக்கு நிறைய கடிதம் எல்லாம் எழுதிக்கொடுப்பார். அடிக்கடி பின்னேரம் சீலன் அண்ணாவுடன் போய்வருவார்.  அம்மா “ஏன் அந்தப் பொடியளுக்கு சிங்களம் படிப்பிக்க போறியல்.. தேவையில்லாத பிரச்சினை வரும்”  என்று அடிக்கடி சண்டை போட்டுக்கொள்வார். அப்பா பெரும்பாலும் அம்மாவுக்கு பதிலளிப்பது இல்லை. மௌனமாகவே கடந்துவிடுவார். சீலன் அண்ணா சுடப்பட்டதும் அப்பா மிகவும் உருக்குலைந்து போனார்.

௦௦௦

ஜெயந்தன் மீண்டும் அழைத்தான். சரியாக நாலுமணிக்கு வரச் சொன்னான். முச்சக்கர வண்டி ஒன்றை பிடித்து அங்கே சென்றேன். தேகம் வியர்த்திருந்தது. வெளிக்கதவருகே ஜெயந்தன் நின்றுகொண்டிருந்தான். என்னை கண்டு புன்னகைத்து உள்ளே அழைத்துச்சென்றான். அவளைக்கண்டு திடுக்கிட்டேன். அவன் மனைவி கண்ணாடிமேசையில் கன்னத்தை இருகைகளால் ஊன்றி காத்திருந்தாள். மெலிதான பொறாமை கிளர்ந்து எழுந்தது.

“ஹாய்..” என்றாள்.

நானும் பதிலுக்கு புன்னகைத்துக்கொண்டு அதையே சொன்னேன். என்னாச்சு உறவிணரைப் பார்க்க போகவில்லையோ.. கணவனை தனிய அனுப்ப ஏதும்? ச்சே ச்சே.. ஏதோ நமக்கு என்ன. நான் எதையும் கேட்காமல் அமைதியாக முகத்தை வைத்திருந்தேன். ஜெயந்தன் என்னைப் பார்த்து சிரிப்பதில் அநாவசியத்தன்மை இல்லாமல் இருப்பதாக நினைத்துக்கொண்டேன்.

மெலிதான மஞ்சள்நிற ஒளி எங்களின் மேசையைச் சுற்றி மின்குமிழினால் பரவவிடப்பட்டிருந்தது. என் கண்களை அவன் கண்கள் வளைந்து நெளிந்து ஊடுருவியது. சட்டென்று கண்களைத் தாழ்த்திக்கொண்டேன். பின் நிமிர்ந்து பார்த்தேன் என்னைப் பார்த்து அவன் சிரித்தான். அவன் கண்கள் என் கண்களை சந்தேகம் இல்லாமல் மறுபடியும் ஊடுருவின. பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன் எனது கண்கள் வேறுவடிவில் ஜெயனை இன்பமாக உரிமையுடன் ஊடுருவி இருந்தது. அந்தக் குளிரூட்டப்பட்ட ரெஸ்டாரண்டிலும் எனக்கு சாதுவாக வியர்த்ததுபோல் இருந்தது. இப்படித்தான் யாழ்ப்பாணத்திலுள்ள பெரிய கடை வீதியிலுள்ள மலயான் கபேயில், ஒருநாள் அவனின் பலந்த கெஞ்சுதலுக்காக பயந்து பயந்து தயங்கி வெட்கப்பட்டு அவனுடன் இருவரின் தோள் மூட்டுக்களும் இடிக்கும் வைகயில் டியூட்டரி கொப்பியை மடியில் வைத்துக்கொண்டு அமர்ந்து வடையும் சம்பலும் தொட்டுச் சாப்பிட்டது நினைவில் வந்தது. வெள்ளவத்தை கடற்கரையை ஒட்டிய காப்பட் சாலையில் வாகனங்கள் காற்றை உராய்ந்துகொண்டு மிகைவேகத்தில் சென்றுகொண்டிருந்தன. அருகிலிருந்த கண்ணாடியால் பார்க்க கடற்கரையும் அதனை மறைக்க முயலும் தாழ்வான மரங்களின் கிளைகளும் தென்பட்டுக்கொண்டிருந்தன.

கறுப்பு நீளக் காற்சட்டையும் பச்சை மேற்சட்டையும் இறுக்கமாக அணிந்த பரிமாறுநர் அருகில்வந்து “மொகத ஓடர் சேர்?” என்று புன்னகைத்தான்.

“என்ன சாப்பிடுவம்?”  மெனுக்கார்டை குனிந்து பார்த்துக்கொண்டு கேட்டான்.

“நீங்க சொல்லுங்க..” என்றேன்.

“ஏதும் குடிப்பமோ?” அவன் என் முன்னால் மெனுகாட்டை நகர்த்தினான்

“எனக்கு ஏதென்றாலும் சரி, நீங்க சொல்லுங்கோ..” அவன் மனைவியை பார்த்துச் சொன்னேன். அவன் மனைவி தலைமையிரை மேவியிழுத்து பின்னால் விட்டு கூந்தலாக முடிச்சுப் போடாமல் கேசத்தை அலையவிட்டிருந்தாள். கன்னங்கள் திருப்பிவைத்த வளைவான புதிய கரண்டிபோல் பளபளப்பாக இருந்தன. மெலிதான கிரனைட்கற்கள் மினுங்கும் தோடுகள் கன்னங்களில் சுருண்டு வளர்ந்திருந்த கேசத்தின் இடைவெளியூடாகத் தென்பட்டன. ஜெயனின் மனைவி என்னைப் போலவே கழுத்தில் மெலிதான சங்கலி அணிந்திருந்தாள். ஆனால், அவளுடையது டைமன்டாக இருக்கவேண்டும்.

நாங்கள் மூவரும் பேசிக்கொண்டிருந்தோம். கிளாஸ் முழுவதும் நிரப்பப்பட்ட வோட்டர்மிலோன் பழரசத்தை குடித்துக்கொண்டு அவன் தன் அவுஸ்திரேலிய வாழ்க்கையைப் பற்றிச்சொல்லத் தொடங்கினான். அவன் மனைவி என்னைப்பற்றியும் கேட்கக் தொடக்கினாள். நன்கு பதப்படுத்தப்பட்ட கோழி இறைச்சி அடைக்கப்பட்ட சான்விச்சை மெல்வதுகூட எனக்குக் கடினமாகத் தோன்றியதுபோல் இருந்தது. அப்போது ஜெயனிலிருந்து வீசிக்கொண்டிருக்கும் ஃபெர்பியும் வாசனையிலிருந்து அவனின் வியர்வை வாசம் கசிந்ததை உணர்ந்தேன். அந்த வாசனை ஒரு ஏவுகனைபோல் எழும்பிப் பறந்தது.

ஜெயந்தனை அப்போது சந்திக்கும்போது அவனின் சேர்ட்டில் இருந்து வீசும் வாசம் ஆண்மையாக இருக்கும். அது அப்பாவின் வாசனைதான் என்று நம்பிக்கொண்டிருந்தேன். இறுதியில் அப்பா இறந்து இறப்புவீட்டில் படுக்கவைக்கப்பட்டிருந்தபோது ஊதுபத்தி வாசனைகளும் வீட்டு விறாந்தை முழுவதும் நிறைந்திருந்தன. நான் அழாமல் இருப்பதை நம்ப முடியாமலும் ஏன் அழுகை வரவில்லை என்று யோசித்துக்கொண்டும் இருந்தேன். மூன்று வருடங்களின் பின் அப்பா புகையிரதத்தில் சந்தித்த அந்தப் பெண்ணை சந்தித்துக்கொண்டார். அப்போது அப்பா பேசினார். அவளும் நீண்ட நாள் சிநேகிதம்போல் தடங்கள் இன்றிப் பேசத்தொடக்கினாள். அப்பா கடைசிவரை அவள் காதலித்தாலா என்று கேட்கவும் இல்லை, தான் காதலித்ததாகச் சொல்லவும் இல்லை. அதனை எனக்கு அம்மா சொல்லும்போது கண்கள் அகலமாக விரியக் கேட்டுக்கொண்டிருந்தேன். அப்பா கடைசிவரை தன் காதலை என்னிடம் சொன்னதே இல்லை. நானும் சொன்னதும் இல்லை. அப்பாவின் இறப்புவீட்டிலும் அப்பாவின் உடலைப்பார்த்து அதனையே மீண்டும்மீண்டும் நினைத்துக் கொண்டிருந்தேன்.

வேலைத் தளத்தில் இருந்து வரும்போது அப்பா சுடப்பட்டார். நானும் அம்மாவும் போய்ப் பார்க்கும்போது அப்பா சைக்கிள்மேல் குப்புற வீழ்ந்திருந்தார். அவர் அணிந்திருந்த சட்டை இரத்தத்தில் சிவப்பு நிறமாகி காய்ந்துபோய் இருந்தது. அருகில் சிவத்த பிளாஸ்டிக் கூடை அநாதரவாகக் கிடந்தது. அம்மா கதறியழுது மயங்கி வீழ்ந்திருந்தார். அப்பாவின் உடல் அருகில் செல்லும்போது அந்த வாசனை இல்லாமல் இரத்தத்தின் வாசனை வந்தது என் குடலை புரட்டத் தொடங்கியது.

ஜெயந்தனின் வாசனை இப்போதும் அப்படியே இருந்தது. ஆனால் அது அப்பாவின் வாசனையில்லை என்பதை ஒரு கணத்தில் உணர்ந்தேன். வீடு திரும்பி வரும்போது அவன் மனைவியுடன் அவனைச் சந்தித்துவிட்டு வருவதை நினைக்கும்போது என் கண்கள் மெலிதாகக் கசிந்து அப்பாவின் வாசனையை நினைவு படுத்திக் கொண்டிருந்தது. ஹரி, ஜெயந்தன் இருவர்மீது இருந்துவரும் வாசனையும் வித்தியாசம் இல்லாமல் இருப்பதினை வெறுப்புடன் உணர்ந்தேன். அழுகை வெடித்து வந்தது. கண்களில் இருந்து வழியும் கண்ணீர் உதட்டில் உப்புச்சுவையை உணர்வித்தது. வாயைப் பொத்திக்கொண்டு என் அடுக்கு குடியிருப்பை நோக்கிச் செல்ல யாரும் பார்க்க முதல் ஓடிச்சென்று லிப்ட்டில் நுழைந்தேன்.

குளியறையில் சென்று தனிமையில் அழுதேன். தொண்டை விக்கி அடைத்தது. அப்பாவின் சிவப்பு இரத்தம் அவரின் சட்டை முழுவதும் நனைந்து இருக்க இரத்த வாசனையுடன் அந்த வாசனையும் படிப்படியாக வர, மதன் பிரடியை கோதிக்கொண்டு தண்ணி குழாயடியில் என்னைக் கட்டிப்பிடித்த விம்பம் நினைவுக்குவர ஜெயந்தனின் வாசனையும் மலயான் கபேயில் வடையை அங்காலும் இங்காலும் பார்த்துவிட்டு சட்டென்று எனக்கு அவன் தீத்திடிவிட்டது நினைவுக்கு வந்தது. அப்பாவின் கூடை சைக்கிளில் இருந்து தள்ளி விழுந்திருந்தது. ஏன் அழுகிறேன் என்று தெரியாமல் நீண்ட நேரம் அழுதேன். முகத்தை நன்றாகக் கழுவிவிட்டு வெளியேவர ஹரியும் உள்ளே வந்தார். தொண்டை எரிந்துகொண்டிருந்தது.

“ஏன் முகம் ஒரு மாதி இருக்கு….. டீ போட்டாச்சா?”  ஷோபாவில் அமர்ந்துகொண்டு காலுறையை கழற்றத் தொடங்கினார். நான் மௌனமாக அவரைப் பார்த்துக்கொண்டு சுவரில் சாய்ந்து நின்றேன்.

“எங்க வெளில வெளிக்கிட்டிட்டீர்போல…” சீலையை மாற்றாமல் நின்ற என் கோலத்தைப் பார்த்துக்கொண்டு கேட்டார். அவர் அருகில் சென்று கழற்றிய அவர் காலுறைகளை எடுத்தேன். மேல்சட்டையைக் கழற்றி குஷன் இருக்கையில் வைத்துவிட்டு உள்ளறைக்குச் சென்றார். வேர்வையில் தோய்ந்த மேல்சட்டையையும் எடுத்தேன். அதில் இருந்து கசிந்த அந்த வாசனையை நுகர உலுக்கமாக திடுக்கிட்டேன். அந்தச் சட்டையைப் பார்க்க வெறுப்பு ஆழமாகக் கசிந்து தகித்தது. அது என்றும்போல் அப்பாவின் வாசனைக்கு கொஞ்சமும் சம்மந்தமில்லாமல் இருந்தது. நடுங்கும் கைகளால் தூக்கி வாளிக்குள் போட்டேன். எதற்கு என்ன வேண்ட வேண்டும் என்று தெரியாமல் வெளியே சென்றேன் என்று யோசிக்க அழுகை மறுபடியும் வந்தது. கைப்பையை தோள் மூட்டில் கொழுவிக்கொண்டு வெளியே மீண்டும் விருட்டென புறப்பட்டேன். அறைக் கதவின் இடைவெளியில் தென்பட்ட நிலைக் கண்ணாடியில் என் விம்பத்தைப் பார்த்தேன். சிவப்பு நிறச் சீலையில் நீல நிறமான நீண்ட கைப்பை தோள் மூட்டில் இருந்து வழிந்துதொங்கிய என் விம்பத்தை அது காட்டியது. ஏதோவொன்றை வேண்ட வேகமாகப் படியால் கீழிறங்கிச் செல்லத் தொடங்கினேன். அப்பாவின் வாசனை மறுபடியும் என் நினைவில் வந்துகொண்டிருந்தது.

முற்றும்

கல்குதிரை -26 – கார் கால இதழ் – 2016 இல் பிரசுரமாகிய சிறுகதை.

 

 

http://www.annogenonline.com/2017/04/22/vaasanai/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தக் கதை எனக்கு சத்தியமாய் புரியல்ல...புரிந்தவர்கள் அல்லது இதைக் கொண்டு வந்து இணைத்தவர் விளக்கம் தரவும். 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெண்களுக்கு அப்பாவைப் போலவே ஒருவர் வாழ்க்கைத்துணையாக இருக்கவேண்டுமாம். இது புரியவில்லையா உங்களுக்கு?? 

உளவியலின்படி ஆண்களும் அம்மாவைப் போல ஒரு துணையைத்தான் தேடுவார்களாம்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப் பெண்ணுக்கு எல்லோருடைய வாசனையையும் நுகர்வதே வேலையாய் போட்டுது.காதலிக்கிறது தப்பில்லை, காதல் கப்பல் கவிழ்ந்து விட்டால் மீண்டும் தேடிச்சென்று ஓட்டப் போகக் கூடாது.....!  tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, suvy said:

இந்தப் பெண்ணுக்கு எல்லோருடைய வாசனையையும் நுகர்வதே வேலையாய் போட்டுது.

இந்தப் பெண்களுக்கு என்று பன்மையில் சொல்லலாம்தானே சுவி ஐயா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, கிருபன் said:

இந்தப் பெண்களுக்கு என்று பன்மையில் சொல்லலாம்தானே சுவி ஐயா?

ஏன்  கிருபன் சகோதரி ரதியிடம் வாங்கிக் கட்டுறதுக்கு துணைக்கு ஆள் தேடுறீங்கள் போல.....!  tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On ‎10‎/‎12‎/‎2018 at 4:58 AM, கிருபன் said:

பெண்களுக்கு அப்பாவைப் போலவே ஒருவர் வாழ்க்கைத்துணையாக இருக்கவேண்டுமாம். இது புரியவில்லையா உங்களுக்கு?? 

உளவியலின்படி ஆண்களும் அம்மாவைப் போல ஒரு துணையைத்தான் தேடுவார்களாம்?

இந்தக் கதையில் அதை விட அர்த்தமானது ஏதோ உள்ளது 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ரதி said:

இந்தக் கதையில் அதை விட அர்த்தமானது ஏதோ உள்ளது 

வாசித்ததில் எனக்கு விளங்கியதை நான் சொன்னேன். நீங்கள் உங்களுக்கு விளங்கியதைச் சொல்லுங்கள். சிலவேளை படைப்பாளிக்கு தெரியாத நுணுக்கமான விடயமும் ஒளிந்திருக்கும்.

முன்னர் ஷோபாசக்தி சொன்னதுதான் நினைவுக்கு வருகின்றது. ஒரு படைப்பு வெளியிடப்பட்ட பின்னர் அது எழுதியவருக்கு சொந்தமில்லை. அதை வாசிப்பவர்கள் புதிய கதைகளை உருவாக்குகின்றார்கள். அந்த வாசிப்பு அனுபவத்தைக் கொடுப்பதுதான் படைப்பாளியின் நோக்கம்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, ரதி said:

இந்தக் கதையில் அதை விட அர்த்தமானது ஏதோ உள்ளது 

இக் கதையில் அர்த்தமுள்ளது வாசனைதான்..... இப்பவும் நீங்கள் கவனித்துப் பார்த்தால் தெரியும் பிள்ளைகள் தாயின் முந்தானையை/சேலையை  கைக்குள் பிடித்தபடி கட்டை விரலை சுவைத்தபடி தூங்குவார்கள். வெளிநாட்டிலும் கூட பிள்ளைகளுடன் ஒரு துணிப் பொம்மையை பிரியாமல் வைத்திருப்பார்கள்.அது அழுக்கேறி இருந்தாலும் துவைக்கவும் விட மாட்டார்கள். அது தவறி விட்டால் அப்பிள்ளைகளால் நிம்மதியாக தூங்க முடியாது. அவ்வளவுக்கு வாசனை ஆக்கிரமித்து இருக்கிறது. இது பெரியவர்களிடமும் உள்ளது. பிரிந்திருக்கும் காதலர்கள் /கணவன் மனைவி கூட தமது இணையின் ஒரு பொருளை தம்முடன் வைத்திருப்பார்கள். ஆனால் வெளியே சொல்ல மாட்டார்கள்.இந்த வாசனைக்காக அக்கம் பக்கத்து வீடுகளில் ஆடைகளை திருடுகின்ற காளைகளும் இருக்கின்றார்கள்.

போலீசாரும் நாயுடன் இணைந்து துணியை வைத்து அதன் வாசனையில் மோப்பம் பிடிப்பதில் கில்லாடிகள். .....!  tw_blush:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.