Jump to content

ஜனாதிபதி மைத்திரிபாலவின் ஐநா உரை உணர்த்துவதென்ன?


Recommended Posts

ஜனாதிபதி மைத்திரிபாலவின் ஐநா உரை உணர்த்துவதென்ன?

 

Dn-EL3vWkAAmcmB-720x450.jpg

ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்றைய தினம் ஆற்றிய உரை இலங்கையின் அரசியல் மேடைகளில் ஆற்றிய உரைகளையே மீண்டுமாக நினைவுபடுத்தியது. ஒட்டுமொத்தமாக உற்றுநோக்கினால் புதிதாக எதனையும் அவர் முன்வைக்கவில்லை என்று முடிவிற்கு வரமுடியும்.கடும் எதிர்ப்புக்கள் வெளியாகிய நிலையில் ஜனாதிபதி ஐநாவிற்கு முன்வைக்கவுள்ள யோசனை விடயத்தினை மறுபரிசீலனை செய்கின்றார் என கடந்த வார ஆங்கில வார இதழொன்று தெரிவித்திருந்தது. ஜனாதிபதியின் உரையும் இதனையே புலப்படுத்துகின்றது

இலங்கையில் போருக்குப் பிந்திய நிலைமைகளைக் கையாள்வது தொடர்பில் யோசனையொன்றை முன்வைக்கப்போவதாக சில வாரங்களுக்கு முன்னர் ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்ற ஊடக முக்கிஸ்தர்களுடனான சந்திப்பின் போது ஜனாதிபதி கூறியதையடுத்து அவரது யோசனையில் உள்ளடக்கப்படப்போகும் விடயங்கள் என்ன என்பது கரிசனைக்குரியதாக இருந்துவந்தது.

ஜனாதிபதியின் கருத்தையடுத்து சிங்கள பௌத்த கடும்போக்குகாளரான அமைச்சர் சம்பிக்க ரணவக்க சில யோசனைகளை முன்வைத்திருந்தார்.அவற்றில்  போர்க்குற்றங்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளில் இருந்து அனைத்து இலங்கை படையினர் மற்றும் அரசியல் கைதிகள்,விடுதலைப் புலிகளுக்கும் பொதுமன்னிப்பு அளிக்க வேண்டும் என்பது முக்கியமானதாக இருந்தது.

அமைச்சர் சம்பிக்கவின் கருத்தை நிராகரித்து கருத்துவெளியிட்டிருந்த தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் பேச்சாளர் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் போர்க்குற்றம்சாட்டப்பட்ட  இலங்கை படையினரையும்இ தமிழ் அரசியல் கைதிகளையும் சமமாக எடை போட முடியாது எனக்குறிப்பிட்டிருந்தார்.

“தமிழ் அரசியல் கைதிகள் கைது செய்யப்பட்டு நீண்டகாலமாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களின் வழக்குகள் முடியவில்லை. இழுத்தடிக்கப்பட்டு வருகின்றன.

இவர்கள் கைது செய்யப்பட்டு, ஒப்புதல் வாக்குமூலங்களின் அடிப்படையிலேயே நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

எனவே இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட – அடையாளம் காணப்படாத கொடுமைகளுடன் தமிழ் அரசியல் கைதிகளை ஒப்பிட முடியாது.

எந்தவொரு பொதுமன்னிப்பு குறித்தும் கவனத்தில் எடுக்க முன்னர், உண்மை கண்டறியும் பொறிமுறை உருவாக்கப்பட்டு எவ்வாறான குற்றங்கள் இழைக்கப்பட்டன என்று கண்டறியப்பட வேண்டும்.” என விளக்கியிருந்தார்.

இந்த நிலையில் ஐக்கியநாடுகள் பொதுச்சபையில் நேற்றைய தினத்திற்கு அட்டவணைப்படுத்தப்பட்டிருந்த உரையில் முன்வைக்கும் யோசனைகளில் பொதுமன்னிப்பு உள்ளிட்ட விடயம் பிரஸ்தாபிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்படி எதுவும் முன்வைக்கப்படவில்லை.

ஜனாதிபதியின் உரையில் போருக்குப்பிந்திய விடயங்கள் குறித்து தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள் பின்வருமாறு:

எனது பாசத்திற்குரிய தாய்நாட்டின் உள்ளக நிலைமைகள் குறித்து குறிப்பிடும்போது ஜனநாயகம், மனித உரிமைகள் ,அடிப்படை உரிமைகள் ஊடக சுதந்திரம் இவை அனைத்தையும் விரிவாகப் பலப்படுத்தப்பட்டுள்ள அதேவேளை நாற்பது ஆண்டுகளுக்கு முன்பாக எமது நாடு இருந்த நிலை, நீண்டகாலமாக ஏறத்தாழ 30 ஆண்டு காலமாக இருந்த பயங்கரவாத யுத்தம் தொடர்பாக அவதானம் செலுத்தும் போது எமது நாட்டில் எல்ரீர்Pஈ பயங்கரவாத யுத்தம் நிறைவிற்கு வந்து பத்துவருடங்கள் ஆகிவிட்டன. இந்தப் பத்துவருட காலத்தில் நாம் எமது நாட்டில் விரிவான மாற்றங்கள் பலவற்றை மேற்கொண்டுள்ளோம். விசேடமாக எனது அரசாங்கம் கடந்த மூன்றரை வருட காலப்பகுதியில் விசேடமாக போருக்கு பிந்திய காலப்பகுதியில் மேற்கொள்ள வேண்டிய விடயங்களை விரிவாக செய்துமுடித்துள்ளோம். தேசிய சமாதானம், நல்லிணக்கம் ,மீண்டும் யுத்தம் ஏற்படாமல் தடுத்தல் ஆகியவற்றை நோக்காகக் கொண்டு விரிவான விடயங்களை நாம் விசேடமாக நிறைவேற்றியுள்ளோம். நிறைவேற்றிக்கொண்டு வருகின்றோம். அந்தவகையில் விசேடமாக மனித உரிமைகள் பிரச்சனையில் நாம் விரிவான பொறுப்பை நிறைவேற்றிய நிறைவேற்றிக்கொண்டிருக்கும் நாடென்ற வகையில் அனைத்து நாடுகளதும் ஐநாவினுடையதும் ஆதரவை நாம் எமது வேலைத்திட்டங்களுக்கு அதிகமதிகமாக கோரி நிற்கின்றோம். உலகில் கொடிய பயங்கரவாத அமைப்பொன்றே இலங்கையின் பாதுகாப்பு படையினரால் தோற்கடிக்கப்பட்டது. இதனால் தான் இன்று இலங்கை பிளவுபடாமல் துண்டுபடாமல் நிலையான சமாதானமுள்ள நாடாக இருக்கின்றது. அந்தவகையில் இலங்கையில் நிலையான சமாதானத்தை ஏற்படுத்துவதற்காக எமது பாதுகாப்பு படையினர் பிரபலமான பயங்கரவாத அமைப்பை தோற்கடித்து நிறைவேற்றிய அந்த வரலாற்றுக்கடமையை நான் இங்கு கௌரவமாக நினைவுகூரும் அதேவேளை நாட்டில் சமாதானத்தை ஏற்படுத்தவும் ஐக்கியத்தை  நிலைநாட்டவும் ஆற்றிய பெரும் அர்ப்பணிப்பிற்காக நான் படையினருக்கு நன்றி கூருகின்றேன். போர் நிறைவுபெற்று 10 வருடங்கள் ஆகின்ற நிலையில் அடிப்படையில் நான் இலங்கை தொடர்பாக புதிய விதத்தில் எனது தாய்நாட்டை நோக்குங்கள் என அனைத்து உலகப் பிரஜைகளிடமும் கேட்டுக்கொள்கின்றேன்.

 

புதிய கருத்துக்களோடு எனது நாடு குறித்து பாருங்கள் எனக் கேட்டுக்கொள்கின்றேன். கொடூரமான யுத்தம் இருந்து முடிவிற்கு வந்து அமைதியான நாட்டில், தேசிய நல்லிணக்கத்தை வலுப்படுத்தியுள்ள நாட்டில், தேசிய சமாதானம் பலப்படுத்தப்பட்டுள்ள நாட்டில், மீண்டும் யுத்தம் ஏற்படாது தடுக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ள நாட்டில் ,மனித உரிமைகள் முழுமையாக பாதுகாக்கப்பட்டுள்ள நாட்டில், பொருளாதார முன்னேற்றமும் சுபீட்மும் உள்ள எதிர்காலத்திற்காக நீங்கள் அனைவரும் புதிய கருத்துக்களோடு புதிய சிந்தனையோடு என்னுடைய உன்னத தாய்நாட்டை நோக்கி எமக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்கின்றேன். எமக்குள்ள பிரச்சனைகளை நாமே தீர்த்துக்கொள்வதற்கு இடமளிக்குமாறு கௌரவமாக கேட்டுக்கொள்கின்றேன். நாட்டில் சுயாதீனம் என்பது மிகவும் முக்கியமானது அந்த சுயாதீனத்தைப் பாதுகாத்துக்கொண்டு எமது நாட்டில் எம்மால் முன்னெடுக்கப்படும் மனிதாபிமான நடவடிக்கைகள் ஜனநாயகத்தை பலப்படுத்தும் நடவடிக்கைகள் ஆகிய விரிவான செயற்பாடுகளுக்காக உங்கள் அனைவரதும் ஒத்துழைப்பை எதிர்பார்க்கின்றேன். எமக்கு எமது பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு எங்களால் முடிந்த அர்ப்பணிப்பும் புதிய வேலைத்திட்டமும் மிகவும் முக்கியமானதாகும். எந்தவொரு வெளிநாட்டு அழுத்தங்கள் வெளிநாட்டு அச்சுறுத்தல்கள் சுயாதீன நாடென்ற வகையில் எமக்கு அவசியப்படாது. அந்தவகையில் அனைத்துவிதத்திலும் பலம்வாய்ந்த நாடென்ற வகையில் சுயாதீன நாடென்ற வகையில் எமது உரிமையைப் பாதுகாத்துக்கொண்டு முன்செல்வதற்கு எமக்குள்ள பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு எமக்கு இடமளிக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம். அடிப்படையில் இங்குள்ள நிலைமைகளைக் கருத்தில் எடுக்கும் போது இலங்கையர் என்ற வகையில் தீர்க்கப்படவேண்டிய பிரச்சனைகளை நாமாக தீர்த்துக்கொள்ளும் அதேவேளை அதற்காக உங்களது ஒத்துழைப்பை கௌரவத்தோடு கேட்டுக்கொள்கின்றோம். எனது உன்னதமான தாய்நாட்டில் வாழும் மக்களின் சந்தேகங்களை, பயங்களை ,அவநம்பிக்கையை தூரப்படுத்தி அனைத்து இனங்களுக்கிடையில் பலமிக்க ஒற்றுமையைக் கட்டியெழுப்ப எம்மால் ,எமது அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டத்திற்கு உங்கள் அனைவரது ஒத்துழைப்பை நாம் கேட்டுககொள்கின்றோம்.”

ஜனாதிபதி இங்கு குறிப்பிட்ட விடயங்கள் அண்மைக்காலமாக அவர் கூறிவரும் கருத்துக்களையே மீள வலியுறுத்துவதாக இருந்தது. இதில் புதிதாக என்ன இருக்கின்றது. அடுத்துவரும் தேர்தலுக்காக மக்கள் பெரும்பான்மை சிங்கள மக்களின் ஆதரவைப் பெறுகின்ற நப்பாசையில் ஐக்கியநாடுகள் சபையில் சிங்கள மொழியில் அவர் உரையாற்றியிருக்கின்றார். ‘சிங்கள மக்களை முட்டாள்கள் ஆக்குவதுபோன்று ஐக்கிய நாடுகள் சபையை முட்டாள் ஆக்க முடியாது ‘ என பிரபல கல்விமான் ராஜன் ஹுல் தனது அண்மைய கட்டுரையில் எழுதியிருந்தார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை வாபஸ் பெறப்போவது போன்று அன்றேல் திருத்தியமைக்கப்போவது போன்று பெரும் தோற்றப்பாட்டை ஏற்படுத்திவிட்டு ஐநாவின் முன்பாக அரைத்த மாவையே மீண்டும் அரைத்திருக்கின்றார் ஜனாதிபதி.

2015ம் ஆண்டில் ஆட்சிக்கு வந்தபோது நாட்டு மக்களிற்கு வழங்கிய முக்கியமான வாக்குறுதிகள் இன்னமும் நிறைவேற்றப்படாத நிலையில் நாட்டில் நிலையான சமாதானத்திற்கும் நல்லிணக்கத்திற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுவிட்டதாகவும் போர் மீண்டும் நிகழாதவண்ணம் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி கூறியிருப்பது யாரை முட்டாளாக்கும் முயற்சி.

யுத்தத்தின் போது இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பான உண்மைகளைக் கண்டறிவதற்கு ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எடுக்கப்படாத நிலையில் ஒரு படைவீரரைத்தானும் விசாரணைக்கு உட்படுத்தாத நிலையில் எவ்வாறு நல்லிணக்கமும் நிலையான சமாதானமும் சாத்தியமாகும் என ஜனாதிபதி சிந்திக்க வேண்டும். உண்மை கண்டறியப்படாவிடின் நல்லிணக்கம் என்பது கானல்நீராவே அமையும். உண்மையை எவ்வளவு ஆழத்தில் புதைத்தாலும் அது தனக்கே உரித்தான கம்பீரத்துடன் என்றோ ஒருநாள் அரியணை ஏறும் என்பதை ஜனாதிபதி உள்ளிட்டவர்கள் நினைவில் கொள்ளவேண்டும். உண்மைகண்டறிதற்கான விசாரணைகள் சவால் மிகுந்ததாக இருக்கும் என வைத்துக்கொண்டாலும் போர் மீளநிகழாது உறுதிப்படுத்துவதற்கு தேவையான அனைத்துசமூகங்களையும் ஆட்சி அதிகாரத்தில் உள்ளடக்கக்கூடிய சமத்துவமாக கௌரவத்துடன் நடத்துவதை உறுதிசெய்யக்கூடிய அரசியல்யாப்பை நிறைவேற்றுவதற்கேனும் ஜனாதிபதி இதயசுத்தியுடன் செயற்படுகின்றாரா ?

ஐநா பொதுச்சபை உரையின் முன்னர் நெல்சன் மண்டேலா சமாதான மாநாட்டில் உரையாற்றிய ஜனாதிபதி, எத்தனை தலைவர்கள் நெல்சன் மண்டேலா வெளிப்படுத்திய உயர் குணாதிசயங்களை வெளிப்படுத்துகின்றனர் எனக் கேள்வி எழுப்பியிருந்தார். உண்மைதான் ஜனாதிபதி சிறிசேனவிற்கும் இது சாலப்பொருத்தம். நெல்சன் மண்டேலா சென்றபாதையில் உலகத்தலைவர்கள் கரம்கோர்த்துச் செல்லவேண்டும் எனக் கோரியிருந்த மைத்திரி 27 ஆண்டுகள் அரசியல் கைதியாக சிறையில் வாடிய அந்த தலைவரின் பெயரை உச்சரிக்க முன்னர் இலங்கையின் பலபகுதிகளிலும் உள்ள 13 சிறைகளில் வாடுகின்ற 107 அரசியல் கைதிகளையேனும் விடுவிக்க முதலில் நடவடிக்கை எடுத்தாரா? ஒரு நல்ல தலைவரை உதாரணம் காட்டிப் பேசமுன்னர் அவர் காட்டிய முன்னுதாரணங்களில் ஒருசிலதையேனும் பின்பற்றியிருக்க வேண்டியது அவசியமல்லவா?

http://athavannews.com/ஜனாதிபதியின்-ஐநா-உரை-உணர/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.