Jump to content

சாமானிய நோக்கில் சமஷ்டி. -க. நவம்-


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சமஷ்டி என்றால் என்ன என்று விலாவாரியாக அறிய இந்தத் தேடல் எனக்கு உதவியது.
விரும்பியவர்கள் நேரம் எடுத்து வாசித்துத் தெளிவடையலாம்

ஐந்து விரல்களாய்ப் பிரிந்து நில்
அவசியமானால் இணைந்து கொள்!

– சாமானிய நோக்கில் சமஷ்டி –

- -

சமகால சர்வதேச அரசியற் போக்கு

இருபதாம் நூற்றாண்டின் இறுதிக் காலம் முதலாக, அனைத்துலக அரசியலில் இருவேறுபட்ட போக்குகள் இடம்பெறலாயின. நடைமுறையில் இருந்துவரும் அரசியற் கட்டமைப்புக்கள் குலைந்து, அதன் விளைவாகப் புதிய தேசிய அடையாளங்கள் முனைப்புப் பெற்று வருதல், ஒன்று. சோவியத் ஒன்றியத்தின் உடைவும், அதனைத் தொடர்ந்து இடம்பெற்ற செக்கோஸ்லவாக்கியா, யூகோஸ்லாவியா போன்ற நாடுகளின் சிதைவும் இதற்கு நல்ல உதாரணங்களாகும்.

இதேவேளை சுதந்திர நாடுகள் பல தமது இறைமை உரிமைகள் சிலவற்றை விட்டுக் கொடுத்து, பாரிய கட்டமைப்புக்களை நிறுவும் வகையில் ஒன்றுபட ஆரம்பித்துள்ளமை, இரண்டாவது போக்காகும். சமஷ்டி என்ற பெயருடனான கூட்டாட்சி முறையை ஸ்பெயின், பிரேஸில் போன்ற நாடுகள் அண்மைக் காலங்களில் தழுவிக்கொண்டுள்ளன. இதே கூட்டாட்சி முறையின் சில சிறப்பு அம்சங்களை உள்ளடக்கும் வகையில் ஐரோப்பிய நாடுகள் பல ஒன்றுகூடி ஐரோப்பிய ஒன்றியத்தினை நிறுவிக்கொண்டன. இந்த ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைந்துகொள்ள வேண்டும் என்ற விருப்புடன் கிரேக்கம், றொமேனியா, பல்கேரியா என்பன உட்பட, மேலும் பல நாடுகள் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன. அரை நூற்றாண்டுக்கும் மேலாக அனைத்துலகினதும் ஏகபிரதிநிதியாக இருந்து செற்பட்டு வரும் ஐ. நா. அமைப்பை ஏன் ஒரு சமஷ்டி அமைப்பாக மாற்றக்கூடாது என்றவாறான கோரிக்கைகூட அண்மைக் காலங்களில் முன்வைக்கப்பட்டிருக்கின்றது. மேலாக இனம், மதம், நிறம், மொழி போன்ற காரணங்களின் அடிப்படையிலான தீராத பிரச்சினைகளால் சிதைந்துபோயிருக்கும் நாடுகள் பலவும், இப்பிரச்சினைகளுக்கான பிணி தீர்க்கும் மருந்தாக சஷ்;டியையே பின்பற்ற முன்வருவதையும் இந்நாட்களில் அவதானிக்க முடிகின்றது. ‘சமஷ்டிப் புரட்சியானது முழு உலகையுமே அடித்துச் செல்ல ஆரம்பித்திருக்கின்றது’ என்று டானியல் எலஸார் எனும் அரசியல் விமர்சகர் அண்மையில் குறிப்பிட்டுள்ளமை இங்கு நினைவு கூரத்தக்கது. இவ்வாறான ஒரு சூழ்நிலையில் சமஷ்டி என்றால் என்ன என்பதை சாதாரணரும் விளங்கிக் கொள்ளும் வகையில் அதன் மீது மிகச் சிறியதாய் ஒரு பொட்டொளியைப் பாய்ச்சுவதே இச்சிறு கட்டுரையின் நோக்கமாகும்.

சமஷ்டி என்றால் என்ன?

அரசியல் என்பது அதிகாரத்தை உருவாக்கி அதனைப் பங்கிடும் ஒரு சமூக முறைமையாகும். ஒரு சமூகத்துக்காக அதிகாரத்துடன் கூடிய தீர்மானங்களை எடுப்பதற்கும், அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கும் அவசியமான வழிமுறை, அரசியல் முறை எனப்படும்;. அரசியல் முறையின் பல பிரிவுகளில் ஜனநாயகம் முக்கியமான ஒன்று. ஜனநாயகத்தை அடியொற்றி மேற்கொள்ளப்பட்டு வரும் ஆட்சி முறைகளில் ஒற்றை ஆட்சிமுறை, சமஷ்டி ஆட்சிமுறை என்பன இரு பிரதான கூறுகளாகும்.

அதிகாரம் பிளவுபடா வகையில் அதனை நாடு முழுவதும் பிரயோகிப்பது, ஒற்றை ஆட்சிமுறை. இதற்கு பிரித்தானிய, இலங்கை ஆட்சி முறைகள் எமக்கு நன்கு பரிச்சயமான உதாரணங்கள். அதிகாரம் ஒரு நாட்டின் மத்திய அரசுக்கும் அங்கத்துவ அரசுகளுக்கும் இடையே பிரிக்கப்பட்டுப் பிரயோகிக்கப்படுவது சமஷ்டி ஆட்சிமுறை. இது கனடா, இந்தியா, சுவிற்ஸலாந்து, அவுஸ்திரேலியா போன்ற நாடுகளில் நடைமுறையில் இருந்து வருகின்றது.

சமஷ்டியின் குணாம்சங்கள்

ஒரு சமஷ்டி அமைப்பில் எப்போதும் வரலாறு, இடம், இனம், மதம், மொழி, கலாச்சாரம் போன்ற ஒன்றிணைக்கும் அம்சங்களில் ஒன்றினாலோ அல்லது பலவற்றினாலோ மிக நெருக்கமாகப் பிணைக்கப்பட்ட சிறு நாடுகளின் பொது அமைப்பு ஒன்று இருக்கும். கனடா, இந்தியா போன்ற நாடுகளில் இந்தப் பொது அமைப்பை சமஷ்டி அல்லது மத்திய அல்லது தேசிய அரசாங்கம் என்றும், சுவிற்ஸலாந்தில் இதனை அரசாங்கம் என்றும், அவுஸ்திரேலியாவில் இதனை பொதுநலவாயம் என்றும் அழைப்பர். இப்பொது அமைப்பின் கீழுள்ள சிறிய அங்கத்துவ நாடுகளை கனடாவில் மாகாணங்கள் / நிலப்பரப்புக்கள் என்றும், இந்தியாவிலும் அவுஸ்திரேலியாவிலும் மாநிலங்கள் என்றும், சுவிற்ஸலாந்தில் கன்ரோன்கள் என்றும் கூறுவர். சிறிய அங்கத்துவ நாடுகளை, பொது அமைப்பான சமஷ்டி அரசு ஒரு மேலான, பாரிய, மையப்படுத்தப்படாத, தேசிய அமைப்பினுள் ஒன்றுபடுத்தி வைத்திருக்கும். அதே வேளை, ஒவ்வொரு அங்கத்துவ நாடும் தனது சுயாதீனம், சுய அடையாளம் என்பவற்றைப் பேணிப் பாதுகாத்துக் கொள்வதற்கும் அது அனுமதிக்கின்றது. அங்கத்துவ நாட்டவர்களிடத்தே தேசிய ஒற்றுமைக்கான விருப்புடன், தத்தமது நாடுகளது சுதந்திரத்தைப் பேணுவதற்கான மன உறுதியும் திடசங்கற்பமும் பிரதான அம்சங்களாகக் காணப்படும்.

சமஷ்டி முறையில் அதிகாரம் சமஷ்டி அரசுக்கும் அங்கத்துவ அரசுகளுக்கும் இடையே பகிர்ந்து அளிக்கப்படுகின்றது. வருமானங்களைப் பெற்றுக்கொள்வதற்கும் மக்களுக்குச் சேவைகளை வழங்குவதற்கும் என மத்திய அரசும் அங்கத்துவ அரசுகளும் வெவ்வேறு அதிகாரங்களைத் தத்தமக்கென்று வகுத்து வைத்துக்கொள்கின்றன. நாட்டின் பொது விவகாரங்களில் ஒவ்வொரு அங்கத்துவ அரசும் தனது அதிகாரத்தின் ஒரு பகுதியை மத்திய அரசுக்குப் பிரித்துக் கொடுக்கச் சம்மதிக்கின்றது. கனடாவில் குடிவரவு, தேசிய பாதுகாப்பு போன்ற பொறுப்புக்கள் மத்திய அரசிடமும், கல்வி, சுகாதாரம் போன்றவை மாகாண அரசுகளிடமும் கையளிக்கப்பட்டுள்ளமையை இதற்கு உதாரணமாகக் கூறலாம். இவ்வாறாக அதிகார மையப்படுத்தாமை சமஷ்டி ஆட்சி முறையின் ஒரு முக்கிய பண்பாகும். மேலும் மத்திய அரசே அண்மைக்காலம் வரை பல நாடுகளில் அதிகாரம் மிக்கதாக இருந்து வந்துள்ளது. ஆனால் இது ஒரு காலம் கடந்த நடைமுறையாக இந்நாட்களில் கருதப்படுகின்றது. பதிலாக அங்கத்துவ அரசுகள் கூடுதலான அதிகாரம் பெற்றுவரும் தன்மை தற்போது இடம்பெற ஆரம்பித்துள்ளது.

சமஷ்டி ஆட்சி முறையில் அங்கத்துவ நாடுகளுக்கிடையில் அரச அதிகாரம் பரவலாக்கப்பட்டிருப்பதனால் அவை தம்மைத் தாமே நிர்வகிக்கக்கூடியனவாக அமையப் பெறுகின்றன. இவ்வாறு அதிகாரத்தைப் பரவலாக்கிப் பகிர்ந்தளிப்பதற்கென்று அங்கு அரசியல் அமைப்புச் சட்டம் ஒன்று எப்போதும் இருக்கும். எழுதப்பட்ட அரசியல் அமைப்புச் சட்டத்தில் அதிகாரப் பரவலாக்கம் வலியுறுத்தப்பட்டிருக்கும். சமஷ்டி ஆட்சிமுறையில் இந்த அரசியல் அமைப்புச் சட்டமே அதியுச்ச அதிகாரத்தைக் கொண்டது. இதன் வழியாகவே அங்கத்துவ அரசுகள் நிறுவப்பட்டு, அவற்றின் அதிகார வரம்புகள் வரையறுக்கப்படுகின்றன. சமஷ்டி அரசியல் அமைப்புச் சட்டம் இறுக்கமானதாகவும், நெகிழ் தன்மை அற்றதாகவும், மக்கள் அங்கீகாரம் இன்றி இலகுவில் மாற்றியமைக்கப்பட முடியாததாகவும் காணப்படும்.

ஒரு நாட்டில் உள்ள வெவ்வேறு அரசியல் பிரச்சினைகளுக்கு வௌ;வேறு நிறுவனங்கள் ஊடாகத் தீர்வு காணப்படவேண்டும் என்ற கொள்கையை சமஷ்டி அரசியல் முறை ஏற்றுக்கொள்கின்றது. சில விடயங்கள் சிறிய உள்ளுர்ப் பிரதேசம் ஒன்றை மட்டும் பாதிப்பதாக இருக்கலாம். வேறுசில, நாடளாவிய பாதிப்பை ஏற்படுத்தக்கூடியனவாக இருக்கலாம். குறிப்பிட்ட ஒரு அங்கத்துவ நாட்டுக்குரிய விவகாரம் அதன் அரச நிறுவனத்தினாலேயே தீர்த்து வைக்கப்படுகின்றது. முழு நாட்டுக்கும் பொதுவான விடயம் மத்திய அரசாங்கத்தினால் தீர்த்து வைக்கப்படுகின்றது. மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தவை தவிர்ந்த ஏனைய விவகாரங்கள் பெரும்பாலும் கீழ் மட்டத்தில் உள்ள அரச நிறுவனங்களாலேயே தீர்த்து வைக்கப்படவேண்டும் என்ற ‘குறைந்த பட்சக் கொள்கை’ சமஷ்டி ஆட்சி முறையினால் பின்பற்றப்படுகின்றது. உதாரணமாக அவுஸ்திரேலியாவில் பூர்வீகக் குடியினர் தொடர்பான பிரச்சினைகள் பிரதானமாக தெற்கு அவுஸ்திரேலிய மாநிலத்தில் மட்டுமே பெருமளவில் கூர்மையடைந்திருந்தது. இதனால் அப்பிரச்சினையைத் தீர்த்து வைக்கும் பொருட்டு அம்மாநில அரசு, பூர்வீகக் குடியினருக்கான நிலவுரிமை மற்றும் சமூக நல சீர்திருத்தங்கள் பலவற்றை அறிமுகம் செய்தது. அதில் அந்த நாட்டின் பொதுநலவாய அரசு தலையிட வேண்டிய தேவை ஏற்படவில்லை.

சமஷ்டிக்குச் சாதகமான சூழல்கள்

• சமஷ்டியை விரும்பும் மனோபாவம் சகல தரப்பினரிடத்தும் காணப்படவேண்டும். புவியியல், வரலாறு, இனம் போன்றவற்றின் அடிப்படையில் நாட்டு மக்களிடத்தே எல்லோரும் ஒரே தேசிய இனம் என்ற மனப்பான்மை இருத்தல் வேண்டும். அத்துடன் ஒன்றுபடுதலுக்கான விருப்பும் நாட்டு மக்களிடத்தே இருத்தல் வேண்டும். இந்தியாவில் ஆரம்ப காலத்தில் தமிழ் நாடு, காஷ்மீர், பஞ்சாப், அஸாம் போன்ற மாநிலங்களில் பிரிவினைக் கோரிக்கைகள் தீவிரமடைந்திருந்தன. தற்போது தமிழ் நாடு தவிர்ந்த ஏனைய பல மாநிலங்களில் இது தொடர்பாக இடம்பெற்று வரும் வன்செயல்களுடன் கூடிய போராட்டங்கள் காரணமாக, இந்தியாவில் உறுதியற்ற சமஷ்டி முறையே காணப்படுகின்றது. கனடாவில் பாரிய வன்செயல்களின்றி இடம்பெற்று வரும் கியுபெக் பிரிவினைப் போராட்டம் காரணமாக இங்கு ஓரளவு உறுதியான சமஷ்டி நிலவி வருகின்றது. வேற்றுமைக்குள் ஒற்றுமை காணும் சுவிற்ஸலாந்து நாட்டவர்களிடமோ சமஷ்டியை விரும்பும் மனோபாவமும், தேசிய இனம் என்ற மனப்பான்மையும், ஒன்றுபடுதலுக்கான விருப்பமும் காணப்படுவதால் அங்கு உறுதியான சமஷ்டி நிலவி வருகின்றது.

• ஓர் உறுப்பு நாட்டின்மீது ஏனையன அதிகாரம் செலுத்தாத வாறு, சகல அங்கத்துவ அரசுகளும் சம அந்தஸ்தும் பலமும் உடையனவாக இருத்தல் வேண்டும். அந்த வகையில் அரசியல் அமைப்புச் சட்டத்தின் ஊடாக அங்கத்துவ நாடுகளுக்குள் அந்தஸ்தும் அதிகாரமும் சமமாகப் பகிர்ந்து அளிக்கப்படுதல் அவசியம். தவறின் அங்கத்துவ நாடுகளுக்கிடையே போட்டிகளும் மோதல்களும் இடம்பெறுவதைத் தடுக்க முடியாது போய்விடும். மேலதிகமான அல்லது விசேடமான அந்தஸ்தும் அதிகாரமும் வழங்கப்பட வேண்டும் என்று கனடாவின் கியுபெக் மாநிலம் விடுத்துவரும் கோரிக்கை இதன் காரணமாகவே ஏனைய மாநிலங்களால் நிராகரிக்கப்பட்டு வருகின்றது. கியுபெக் மாகாணத்துக்கு விசேட அந்தஸ்து வழங்குவதற்கென மேற்கொள்ளப்பட்ட 1987 மீச்லேக், 1992 சார்லற்ரவுன் உடன்படிக்கைகள் ஏனைய ஆங்கில மாநிலங்களால் தோற்கடிக்கப்பட்டன. சமச்சீரற்ற சமஷ்டிக்கு நாட்டை இட்டுச் செல்லக்கூடிய இவ்வாறான விசேட அந்தஸ்து, கியுபெக் மாநிலத்தின் அரசியல், பொருளாதார ரீதியிலான ஆதிக்கத்துக்கு வழிவகுத்துவிடும் என்ற அச்சமே இந்த நிராகரிப்புக்கான அடிப்படைக் காரணமாகும். ஆனால் மேலதிகமான அதிகாரங்களைப் பெறுவதற்கு மட்டுமன்றி தேசிய அங்கீகாரம் ஒன்றை உறுதி செய்துகொள்வதற்காகவுமே தேசிய சிறுபான்மையோர் விசேட அந்தஸ்தைக் கோருகின்றனர் என்பதையும் இங்கு கருத்தில் கொள்ளவேண்டும். தேசிய சிறுபான்மையோர்க்கு அல்லது பின்தள்ளப்பட்ட இனத்தவர்களுக்கு – பிரதேசத்தவர்களுக்கு, பொறுமை மிக்க அரசியல் கலாச்சாரத்தின் கீழ் உண்மையான சுயாதிக்கம், சுதந்திரம் என்பவற்றை வழங்குவதே பிரிவினைவாதக் கோரிக்கையை பலவீனப்படுத்தும். சமஷ்டி ஆட்சி முறைக்கு வலுவூட்டும். இந்த நோக்குடன் முயற்சிக்கப்பட்ட ஒப்பந்தங்கள் தோல்வியைத் தழுவிக்கொண்டதன் விளைவாக கனேடிய சமஷ்டி தனது உறுதிச் சமநிலையை இழந்ததுள்ளதாகக் கூறப்படுகின்றது.

• உறுப்பு நாடு மீதான பற்றும் சமஷ்டி நாட்டின் மீதான பற்றும் எப்போதும் ஒன்றுக்கொன்று சமமாக இருத்தல் வேண்டும். உறுப்பு நாடு மீது பற்று அதிகமானால் சமஷ்டி உடைந்து, பிரிவினை ஏற்படும். சோவியத் ஒன்றியத்துக்கும் ஏனைய கிழக்கு ஐரோப்பிய நாடுகளுக்கும் நேர்ந்த கதி இதுவேயாகும். அதே போன்று சமஷ்டி நாட்டின் மீதான அளவு கடந்த பற்றுதல், ஒற்றை ஆட்சியை ஏற்படுத்திவிடும். 50 மாநிலங்களைக் கொண்ட அமெரிக்காவில் மக்கள் சமஷ;டி மீது அதிக பற்றுதலும் மதிப்பும் நாட்டமும் கொண்டுள்ள காரணத்தினால் மாநில அரசுகள் வலுவிழந்துள்ள நிலையில் மத்திய அரசு வலுவடைந்து வருதல் அவதானிக்கப்படுகின்றது.

• அங்கத்துவ நாட்டின் மீதான பற்றுதலையும் விஞ்சிய பொதுவான தேசாபிமானம் இல்லாதபோதும் சமஷ்டி தோல்வி அடைந்துவிடும். இந்தியாவில் உள்ள பல மாநிலங்களில் இந்நிலைமை காணப்படுவதாகக் கூறப்படுகின்றது. இந்தியா மீதான தேசாபிமானத்துக்கும் மேலாக பஞ்சாப், ஜம்மு-காஷ்மீர், அஸாம், திரிபுரா போன்ற பல மாநிலத்தவர்களும் தத்தமது பிரதேசங்கள் மீது அதீத பற்றுதலும் அபிமானமும் கொண்டு காணப்படுதல் இந்திய சமஷ்டிக்கு ஒரு பலத்த சவாலாகவே இருந்து வருகின்றது.

• சில சமூக, அரசியல், பொருளாதார நோக்கங்களை நிறைவேற்றுவதற்கென சமஷ்டி முறையில் அங்கத்துவ அரசுகள் ஐந்து விரல்கள் போலத் தனித் தனியே சுதந்திரமான அரசுகளாக இருக்க விரும்ப வேண்டும். அதேபோன்று அவசியமான, பாதுகாப்பு போன்ற வேறுசில நோக்கங்களுக்காக ஒன்றுபடவேண்டும் என்ற விருப்பும் அவற்றிற்கிடையே இருக்க வேண்டும். கனடாவின் மாகாணங்களான அல்பேர்ட்டா தனது எண்ணெய் வளத்தையும், சாஸ்கச்சுவான் தனது விவசாய வளத்தையும், பிரிட்டிஷ் கொலம்பியா தனது வன வளத்தையும், நோவஸ்கோஷியா, நியூ ஃபவுண்லாந்து என்பன தமது கடல் வளத்தையும் பயன்படுத்தி, பிரதேச ரீதியில் பொருளாதார அபிவிருத்தியை அடைந்துகொள்வதற்கென, தனிப்பட்ட சுதந்திர அலகுகளாக இயங்க விரும்பின. இதேவேளை நாட்டின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, ‘யானை ஒன்றுக்கருகே படுத்துறங்கும் நாடு, கனடா’ என்ற முன்னாள் பிரதமர் பியர் ட்ரூடோவின் கூற்று, அமெரிக்காவின் அச்சுறுத்தலுக்கு எதிராக கனடாவின் மாகாணங்கள் அனைத்தும் ஒன்றுபட வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்துகின்றது. இராணுவப் பாதுகாப்பின்மையும், அதனால் உண்டான பீதியும், பொதுவான இராணுவப் பாதுகாப்பு அவசியம் என்ற எண்ணமும் கனடா, அவுஸ்திரேலியா, இந்தியா போன்ற நாடுகளில் சமஷ்டிக்கான சில முக்கிய காரணங்களாகும்.

• கொள்கை ஆக்கத்தின்போது மத்திய அரசுக்கும் அங்கத்துவ அரசுகளுக்கும் இடையே நெருங்கிய தொடர்பு இருத்தல் அவசியம். இந்த உறவுகளும் தொடர்புகளும் சட்ட விதிமுறைகளுக்கமையவே இடம்பெற வேண்டும். இவற்றிற்கிடையிலான முரண்பாடுகளும் உடன்பாடின்மைகளும் மோதல்களோ அல்லது சண்டைகளோ இன்றிச் சமாதானமான முறையில் தீர்த்து வைக்கப்பட வேண்டும். மேலும் அங்கத்துவ அரசுகளிடையே சச்சரவுகள் ஏற்படும்போதும், அவற்றிற்கும் மத்திய அரசுக்கும் பிணக்குகள் ஏற்படும்போதும் மத்தியஸ்தம் செய்வதற்கென சமஷ்டி நீதிமன்றம் நிறுவுவதற்கான விசேட நீதி ஒழுங்குகளும் இருத்தல் அவசியம்.

சஷ்டியின் நன்மைகள்

• பன்முகப்படுத்தப்பட்ட, பிரதேச அடிப்படையிலான வழிமுறைகளில் ஒரு நாட்டின் அபிவிருத்தியை சமஷ்டி ஆட்சிமுறை ஊக்குவிக்கின்றது.

• சமூக, பொருளாதார, அரசியல் பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பதற்கெனத் தனித்துவமான, புதுமையான வழிமுறைகளைக் கையாள்வதற்கு சமஷ்டி
ஆட்சிமுறை அனுமதிக்கின்றது.

• பெரும்பான்மையினரின் ஆதிக்கத்துக்குச் சமஷ்டி தடைபோடுகின்றது.

• மக்களுக்கு மிக நெருக்கமாக அங்கத்துவ அரசு இருப்பதை சமஷ்டி உறுதி செய்கின்றது.

• பொதுவான இராணுவப் பாதுகாப்பை ஏற்படுத்தி, அச்சமின்றி மக்கள் வாழ இது உதவுகின்றது.

• அந்நிய ஆதிக்கத்திலிருக்க விரும்பாமல் சுதந்திரமாக இருப்பதற்கும், அதன் பொருட்டு சிறிய அரசுகள் அல்லது சமூகங்கள் விரும்பி ஒன்றுபடுவதற்கும் இது உதவுகின்றது.

• மொழி, இனம், மதம் என்பவற்றின் அடிப்படையில் ஒருமைப்பாடு உடைய சமூகங்கள் சமஷ்டி ஆட்சியில் ஒன்றுபட்டு வாழ்வதற்கும் இது உதவுகின்றது.

சமஷ்டியின் தீமைகள்

• ஒரு நாட்டிற்கான பொதுக் கொள்கைகளின் பிரதான பகுதிகள் சிலவற்றை அலட்சியம் செய்துவிடுவதற்கு சமஷ்டி சில சமயங்களில் வழிவகுத்துவிடுகின்றது.

• ஒரே நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் வெவ்வேறுபட்ட முரணான கொள்கைகள் பின்பற்றப்படுவதற்கும் சமஷ்டி காரணமாக அமைந்துவிடுகின்றது.

• மாநிலங்களிடையே சமத்துவம் இல்லாமை ஏற்படுத்தப்பட்டு, ஆரோக்கியமற்ற போட்டிகளும் பொறாமைகளும் ஏற்பட வாய்ப்புண்டு.

• ஒரு மத்திய அரசு, பல அங்கத்துவ அரசுகள், ஏராளமான உள்ளூர் ஆட்சி சபைகள் ஆகியவற்றை சமஷ்டி முறை ஏற்படுத்துவதனால் அதிக பண விரயம் ஏற்பட இடமுண்டு.

• பலவித வரிச்சுமைகளை மக்கள் சுமக்கவேண்டி ஏற்படுகின்றது.

• பல அதிகாரங்களுக்கு மக்கள் அடிபணிய வேண்டியிருக்கின்றது.

சஷ்டி குறித்து முடிவாக

ஜனநாயகம், மனித உரிமை என்பவற்றைப் பேணிப் பாதுகாத்து உறுதிசெய்து கொள்வதற்குச் சமஷ்டி ஒரு நல்ல கருவி என்பதில் கருத்து வேறுபாடு இருக்க முடியாது. இந்த சமஷ்டி அமைப்பின் உறுதியானது முன்னர் கூறப்பட்ட பல அம்சங்களுடன் அரசியல் அமைப்புச் சட்டம், நிதி ஏற்பாடுகள், கட்சி அமைப்பு ஆகிய மூன்று முக்கிய அம்சங்களிலும் தங்கியிருக்கின்றது. மேலும் அரசியல் சித்தாந்தங்களின் அடிப்படையில் இறைமை பிரிக்கப்பட முடியாதது எனக் கருதப்படுகின்ற போதிலும், சமஷ்டி அமைப்பு ஒன்றில் அது பிளவுபட்டிருக்கின்றது என்பதுவே உண்மையாகும். இந்த யாதார்த்தத்தை ஏற்றுக்கொண்டு, மாநில அடிப்படையில் இறைமையின் உண்மையான செயற்படுதன்மையை அங்கீகரிப்பதே சமஷ்டியின் உறுதி நிலைக்கு உத்தரவாதமளிக்கும். குறிப்பாக இன, மத, மொழி அடிப்படையில் பகுக்கப்பட்டுள்ள மாநிலங்களைக் கொண்ட சமஷ்டிக்கு இது மிகமிக இன்றியமையாததாகும்.

சில நாடுகளில் மத்திய அரசுக்கும் தேசிய சிறுபான்மையினருக்கும் இடையே உள்ள முரண்பாடுகள் காரணமாக இடம்பெற்று வரும் மோதல்களை ‘மூன்றாம் உலக யுத்தம்’ என்று இக்கால அரசியல் விமர்சகர்கள் சிலர் பெயரிட்டுள்ளனர். மயன்மார், திபெத், ஆப்கானிஸ்தான், பிலிப்பைன்ஸ், இந்தோனேஷியா, பாகிஸ்தான், இலங்கை ஆகிய நாடுகளில் சமஷ்டியின் மிக முக்கிய மூலகமான பிரதேச சுயாட்சியை வேண்டி தேசிய சிறுபான்மையினர் தத்தமது நாட்டு அரசுகளுடன் போராடி வருவதாக இவர்கள் குறிப்பிட்டுள்ளனர். மக்கள் தமது தனித்துவங்களைப் பேணிக்கொள்ளும் அதேவேளை, தேசிய ஒருமைப்பாட்டையும் கட்டிக் காத்தவாறு, ஒன்றிணைந்து வாழ முடியும் என நிரூபித்துள்ள சமஷ்டி முறை, இந்த யுத்தங்களுக்கு உகந்த பரிகாரமாக அமைய முடியும் என்றும் இதன் காரணமாகவே இன்று பல நாடுகள் சமஷ்டி குறித்து ஆர்வம் காட்ட ஆரம்பித்துள்ளன என்றும் இவர்கள் மேலும் சுட்டிக் காட்டியுள்ளனர்.

‘ஒன்றோடொன்று போட்டியிடும் – சிலவேளைகளில் முரண்பட்டு மோதிக்கொள்ளும் – வேறுபாடுடமையை ஏற்று, அதனை உள்வாங்கி, செயற்படும் திறனிலேயே சமஷ்டியின் வெற்றி பெரிதும் தங்கியிருக்கின்றது. சகிப்புத்தன்மை, மரியாதை, விட்டுக்கொடுப்பு, பேரம்பேசல், பரஸ்பர அங்கீகாரம் என்பன அத்திறனின் முக்கிய கூறுகள். சுயாதிக்கத்துடன் கூடிய ஒன்றிணைப்பு அதன் உயிர் நாடி’ என்ற மைக்கல் பேர்கஸ் எனும் அரசியல் ஆய்வாளரது கருத்து இங்கு மிகுந்த கவனிப்புக்குரியது. சமஷ்டியில் உள்ள பலவீனங்கள் சிலவற்றிற்கும் மேலாக, பலங்கள் பலவற்றிற்காக அதனை உலக நாடுகள் பல இன்று பெரிதும் விரும்புகின்றன. இதுவே சமஷ்டியின் வெற்றி என்று பல நாடுகள் கருதுகின்றன!

 

https://knavam.wordpress.com/2013/01/02/சாமானிய-நோக்கில்-சமஷ்டி/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பையன் மைண்ட் வொய்ஸ்:   அப்பாடா .......... பெரியப்பாவுடன்  10 பேர் ஆச்சுது ....... இனி போட்டிக்கு பங்கமில்லை........!  😂 கிருபன் & பையன்.......!  🤣
    • சுற்றுலாப் பிரதேசங்களில் சிறப்பு சோதனை நடவடிக்கை! நாட்டிலுள்ள சுற்றுலாப் பகுதிகளில் சிறப்பு சோதனை நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தீர்மானித்துள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது. அதன்படி, கொழும்பு – காலி முகத்திடல், புதுக்கடை, பேருவளை, பெந்தோட்டை, ஹிக்கடுவ, காலி, எல்ல ஆகிய பகுதிகளில் இரவு நேரச் சோதனைகள் நடத்தப்படும் என நுகர்வோர் விவகார அதிகாரசபையின் சோதனைகள் மற்றும் விசேட விசாரணைப் பிரிவின் பணிப்பாளர் சங்ஜய இரசிங்க தெரிவித்துள்ளார். நாட்டில் அண்மைக்காலமாக  சுற்றுலாப் பயணிகள்  அச்சுறுத்தப்படுதல் மற்றும் ஏமாற்றப்படும் சம்பவங்கள் அதிகளவில் இடம்பெற்று வருகின்றன. அண்மையில், கொழும்பு – புதுக்கடை மற்றும் களுத்துறை நகரப் பகுதிகளில் இவ்வாறு இரு சம்பவங்கள் நடைபெற்றிருந்தன. இதையடுத்தே, இந்த விசேட இரவு நேரச் சோதனைகள் நடத்தப்படும் என நுகர்வோர் விவகார அதிகாரசபையின் சோதனைகள் மற்றும் விசேட விசாரணைப் பிரிவின் பணிப்பாளர் சங்ஜய இரசிங்க தெரிவித்துள்ளார். https://athavannews.com/2024/1378849
    • யாழில் அன்னை பூபதியின் 36 ஆம் ஆண்டு நினைவேந்தல். தியாகத்தாய் அன்னை பூபதியின் 36 ஆம் ஆண்டு நினைவேந்தலின் இறுதிநாள் நினைவுதிம் யாழ்ப்பாணத்தில் இன்று அனுஷ்டிக்கப்பட்டது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலிபனின் நினைவுத் தூபிக்கு முன்பாக இவ் நினைவேந்தல் நடைபெற்றது. அன்ணை பூபதியின் 36 ஆம் ஆண்டு நினைவேந்தல் வடக்கு கிழக்கு மற்றும் புலம்பெயர் தேசங்களிலும் நடைபெற்று வருகின்றது. இதன் அங்கமாகக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் யாழ்ப்பாண தலைமை அலுவலகத்தில் நினைவுநாள் தொடர்ச்சியாக அனுஷ்டிக்கப்பட்டு வந்ததுடன் இறுதிநாள் நிகழ்விற்காக ஊர்திப் பவணியொன்றும் இங்கிருந்து மட்டக்களப்பிற்கு சென்றிருந்தது. இதன் தொடராக நினைவுநாளின் இறுதிநாளான இன்று அக் கட்சியின் ஏற்பாட்டில் நல்லூரில் கொட்டகை அமைத்து நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டது. இதன் போது பொதுச்சுடர் ஏற்றி மலர்மாலை அணிவிக்கப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் அரசியல் கட்சி உறுப்பினர்கள் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1378867
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.