Jump to content

ஓய்வை அறிவித்தார் அலைஸ்டர் குக்


Recommended Posts

ஓய்வை அறிவித்தார் அலைஸ்டர் குக்

 

 
 

இங்கிலாந்து அணியின் முன்னாள் தலைவர் அலைஸ்டர் குக் இந்தியாவுடனான டெஸ்ட் தொடரின் பின்னர் டெஸ்ட்போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறப்போவதாக அறிவி;த்துள்ளார்.

இந்தியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரில் 33 வயதான குக் சிறப்பாக விளையாடாதது குறித்து கடும் விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையிலேயே அவர் தனது ஓய்வை அறிவித்துள்ளார்.

தீவிரமாக சிந்தித்த பின்னர் நான் இந்தியாவுடனான தொடரின் பின்னர் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வுபெற தீர்மானித்துள்ளேன் என குக் அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளார்.

இது துயரமான நாளாகயிருந்தாலும் நான் பெரும் முகத்துடன் அதனை அறிவிக்கலாம் ஏனெனில் நான் என்னால் முடிந்த அனைத்தையும் வழங்கிவிட்டேன் இனி எஞ்சியது எதுவுமில்லை என குக் தெரிவித்துள்ளார்.

நான் கற்பனைசெய்து பார்க்க முடியாத அளவிற்கு சாதித்துவிட்டேன் இவ்வளவு நீண்ட காலம் என்னால் இங்கிலாந்து சில தலைசிறந்த வீரர்களுடன் இணைந்து விளையாட முடிந்தமை குறித்து நான் பெருமிதம் கொள்கின்றேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனது சகவீரர்களுடன் செலவிடும் நேரத்தை இழக்கப்போகின்றேன் என்பதே மிகவும் கடினமாக விடயமாக உள்ளது எனினும் ஓய்வு பெறுவதற்கு இதுவே சரியான நேரம் என கருதுகின்றேன் எனவும் குக் குறிப்பிட்டுள்ளார்.

cook5.jpg

நான் எனது வாழ்நாள்முழுவதும், சிறுவயதில் எனது வீட்டில் விளையாட தொடங்கிய காலம் முதல் கிரிக்கெட்டை நேசித்துள்ளேன்,இங்கிலாந்து அணியின் சேர்ட்டை அணிந்து ஆட கிடைத்தது எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த விடயம் என்பதையும் நான் குறைத்து மதிப்பிடமாட்டேன் என குக் தெரிவித்துள்ளார்.

அலைஸ்டர் குக் டெஸ்ட் போட்டிகளில் 32 சதங்களுடன் 12,254 சதங்களை பெற்றுள்ளார்.

2006 ம் ஆண்டு 21 வயதில் இந்தியாவிற்கு எதிராக நாக்பூரில் தனது முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடிய குக் தனது முதல் டெஸ்டிலேயே சதமடித்திருந்தார்.

அவரது தலைமையிலேயே இங்கிலாந்து அணி 20 வருடங்களிற்கு பின்னர் முதல் தடவையாக ஆசஸ் தொடரை கைப்பற்றியிருந்ததுடன் இந்தியாவிற்கு எதிரான தொடரையும் 2012 இல் கைப்பற்றியிருந்தது.

 

http://www.virakesari.lk/article/39656

Link to comment
Share on other sites

அலட்டல் இல்லாத அமைதியான சாதனையாளர் அலிஸ்டர் குக் ஓய்வு அறிவித்தார்

 

 
cook

அலிஸ்டர் குக் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு அறிவிப்பு. | கோப்புப் படம். ராய்ட்டர்ஸ்.

இந்தியாவுக்கு எதிராக ஓவலில் நடைபெறும் 5வது டெஸ்ட் போட்டியே தன் இறுதி டெஸ்ட் போட்டி என்று இங்கிலாந்தின் மிகச்சிறந்த பேட்ஸ்மெனான உருவெடுத்த அலிஸ்டர் குக் அறிவித்துள்ளார்.

டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக ரன்கள் எடுத்த 6வது வீரர் அலிஸ்டர் குக். அவருக்கு வயது 33தான் ஆகிறது. ஆனால் பேட்டிங் பார்ம் சீரடையவில்லை, இந்த ஆண்ட் 9 டெஸ்ட் போட்டிகளில் அவரது சராசரி 18.62 தான்.

   
 

ஆகவே இதுவே ஓய்வு பெற சரியான தருணம் என்று அவர் முடிவெடுத்து விட்டார்.

இங்கிலாந்திலேயே அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற சாதனையை குக் படைத்தவர். இதுவரை 160 போட்டிகளில் 12,254 ரன்களை எடுத்துள்ளார். சராசரி 44.88. சராசரி 45க்குக் கீழ் இப்போதுதான் இறங்கியுள்ளது. 32 சதங்கள் 52 அரைச்தங்கள், 11 டக்குகள். அதிகபட்ச ஸ்கோர் 294.

cook2jpg
 

2006-ல் நாக்பூர் டெஸ்ட்டில் அறிமுக டெஸ்ட்டிலேயே 21 வயது வீரராக சதம் அடித்தார். 2010-11-ல் ஆஷஸ் தொடரை இங்கிலாந்து ஆஸ்திரேலிய மண்ணில் 20 ஆண்டுகளுக்குப் பிறகு வென்ற தொடரில் தொடர் நாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார், அந்தத் தொடரில் தொடரின் ஆரம்பத்தில் சொதப்பிய குக் பிறகு பெரிய அளவில் மீண்டெழுந்து ஆஸ்திரேலிய பவுலர்களை வறுத்தெடுத்தார்.

32 சதங்களை இவர் எடுத்த வேகம் சச்சின் டெண்டுல்கர் சாதனையும் முறியடிப்பார் என்று இங்கிலாந்து ஊடகங்களை ஹேஷ்யம் கூற வைத்தன.

ஆனால் இவரது கிரிக்கெட் வாழ்வில் இருண்ட தருணங்களும் உண்டு 2014-ல் ஒருநாள் அணி கேப்டன் பொறுப்பிலிருந்து எந்த ஒரு அறிவிப்புமின்றி திடீரென நீக்கப்பட்டார். குக்கின் இங்கிலாந்து அணி ஆஸ்திரேலியாவில் ஆஷஸ் தொடரில் 2013-14-ல் ஒயிட் வாஷ் வாங்கிய போது கெவின் பீட்டர்சன் வெளியேற்றப்பட்டதில் முக்கிய பங்காற்றியதாக இவர் மீது விமர்சனங்கள் எழுந்தன.

ஆனால் இங்கிலாந்து கேப்டன்களிலேயே உண்மையில் ஒரு ஜெண்டில் மேன் இவர், அனாவசியமான கள சர்ச்சைகளில் சிக்கியதில்லை. சாதுவான சாதனையாளர். களத்தில் இந்த ஸ்லெட்ஜிங் போன்றவற்றை ஊக்குவிப்பவர் அல்ல என்று கேள்விப்பட்டிருக்கிறோம்.

cook3jpg
 

உத்தி ரீதியாக எப்போதும் கொஞ்சம் அதீத கவனம் மேற்கொள்பவர் என்பதால் இவரது ஆட்டத்தை அது வெகுவாகப் பாதித்தது, சேவாக், கில்கிறிஸ்ட், ஜெயசூரியா, லாரா போன்றவர்களுக்கு எதிர்நிலையான மனநிலை, அவர்கள் பொதுவாக உத்திபற்றியெல்லாம் கவலைப் பட மாட்டார்கள். இவர் கொஞ்சம் கவாஸ்கர் ரகம். லெக் திசைதான் இவரது வலுவான பிரதேசம்.

இங்கிலாந்து அணி நம்பர் 1 இடத்துக்கு முன்னேறியதில் இவரும் ஆண்ட்ரூ ஸ்ட்ராசும் துவக்க ஆட்டக்காரராக களமிறங்கிய நாட்கள் மிக முக்கியமானது. 2012 தொடரில் இந்தியாவில் வந்து இந்திய அணியை வீழ்த்தி டெஸ்ட் தொடரைக் கைப்பற்றிய போது அலிஸ்டர் குக் இந்திய ஸ்பின்னர்களை இந்தப் பிட்சில் ஆடியது பலருக்கும் கண் திறப்பாக அமைந்ததையும் மறுக்க முடியாது. மேத்யூ ஹெய்டனுக்குப் பிறகு இந்திய ஸ்பின்னர்களை இந்தியாவில் சிறப்பாக ஆடியவர் என்றால் அது அலிஸ்டர் குக் தான்.

ஆனால் ஸ்ட்ராஸ் ஓய்வு பெற்ற பிறகு குக்குடன் களமிறங்க ஏகப்பட்ட வீரர்களை இங்கிலாந்து சோதித்தது ஆனால் இன்னமும் கூட அவருக்கு துணையானவரைக் கண்டு பிடிக்க முடியவில்லை.

ஓவலில் குக் களமிறங்கும் போது 159 டெஸ்ட் போட்டிகளில் தொடர்ச்சியாகக் களமிறங்கிய வரலாற்றுச் சாதனைக்குச் சொந்தக்காரர் ஆவார்.

இந்நிலையில் இவரது ஓய்வு இங்கிலாந்து அணியில் பெரிய ஓட்டையை ஏற்படுத்துவது உறுதி.

https://tamil.thehindu.com/sports/article24856223.ece?utm_source=HP&utm_medium=hp-tsothers

 

 

7 வயது சிறுவனாக கிரகாம் கூச்சின் கையெழுத்துக்காக வரிசையில் காத்திருந்தேன்: ஓய்வு அறிவித்த அலிஸ்டர் குக் நெகிழ்ச்சி

 

 
gooch

கிரகாம் கூச், அலிஸ்டர் குக். | கோப்புப் படம்.

வரும் ஓவல் டெஸ்ட் போட்டியுடன் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுகிறார், இங்கிலாந்தின் தொடக்க ஆட்டக்காரரும் முன்னாள் கேப்டனுமான அலிஸ்டர் குக்.

இந்நிலையில் தன் ஓய்வு முடிவு குறித்து அவர் கூறியதாவது:

 

நிறைய யோசித்து கடந்த சில மாதங்களாக மனதில் வைத்திருந்த ஓய்வு முடிவை இன்று அறிவித்துள்ளேன். இது துயரமான நாள் என்றாலும் என் முகத்தில் பெரிய புன்னகையுடன் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளேன். நான் அனைத்தையும் அளித்து விட்டேன், இனி என்னிடம் எதுவும் இல்லை.

நான் கற்பனை செய்ததற்கு மேலாகவே பங்களிப்புச் செய்து விட்டேன். இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் சிலபல கிரேட்களுடன் ஆடியதுதான் என் இனிய அனுபவம், நான் செய்த அதிர்ஷ்டம். இனி ஓய்வறையை எனக்குப் பிடித்த இங்கிலாந்து அணியுடன் பகிர்ந்து கொள்ளப் போவதில்லை என்ற முடிவு மிகவும் கடினமாக உள்ளது. ஆனால் சரியான நேரத்தில்தான் இந்த முடிவை எடுத்துள்ளேன்.

சிறுவயதில் தோட்டத்தில் கிரிக்கெட்டை ஆடத் தொடங்கியது முதல் இந்த ஆட்டத்தை பெரிதும் நேசித்து வருகிறேன். இங்கிலாந்து சீருடையை அணிந்ததை ஒருக்காலும் நான் குறைவாக எண்ண முடியாது. எனவே இளம் வீரர்களுக்கு வழிவிட இதுவே சிறந்த தருணம்.

தனிப்பட்ட முறையில் நிறைய பேருக்கு நன்றி நவில வேண்டும். ஆனால் பார்மி ஆர்மிக்கு சிறப்பு நன்றிகள். இங்கிலாந்து அணி எங்கு சென்றாலும் பார்மி ஆர்மி எங்களுக்கு அளித்த உத்வேகம் மறக்க முடியாதது. அதே போல் சிறப்பாக நன்றி தெரிவிக்க வேண்டுமெனில் அது கிரகாம் கூச்சிற்குத்தான். 7 வயது சிறுவனாக எசெக்ஸ் கவுண்டி கிரிக்கெட் கிளப் வாசலில் அவரிடம் ஆட்டோகிராப் வாங்க வரிசையில் காத்திருந்திருக்கிறேன். ஆனால் அவரே எனக்கு பின்னாளில் பயிற்சியாளரானதை எப்படி மறக்க முடியும். என் ஆரம்ப காலக்கட்டத்தில் கிரகாம் கூச்தான் எனக்கு எல்லாமும். மணிக்கணக்காக என் மட்டைக்கு அவர் பந்துகளை த்ரோ செய்ததைத்தான் மறக்க முடியுமா? நாம் என்னத்தை அடைய வேண்டும் என்று முயற்சிக்கிறோமோ அதற்காக கடுமையாக உழைக்க வேண்டும் என்பதை எனக்கு உணர்த்தியவர் கிரகாம் கூச்.

கிரிக்கெட் வீரராக குடும்பத்தை விட்டுப் பிரியும் பயணங்களை இந்த 12 ஆண்டுகளாக மேற்கொண்டேன் என்னைப் பொறுத்தருளி எனக்கு ஆதரவு காட்டிய என் குடும்பத்தினருக்கும் மிக்க நன்றிகள்.

என் 12 வயது முதல் என்னை ஆதரித்த எசெக்ஸ் கிரிக்கெட் கிளப்புக்கும் என் ஆழ்ந்த நன்றிகள்.

இங்கிலாந்து அணி எதிர்காலத்தில் சிறப்பாகச் செயல்படுவதற்கு வாழ்த்துக்கள், அதனை நான் ஆவலுடன் எதிர்நோக்குகிறேன்.

இவ்வாறு கூறினார் அலிஸ்டர் குக்.

https://tamil.thehindu.com/sports/article24856578.ece

Link to comment
Share on other sites

விடைபெறும் அலிஸ்டர் குக்: புகழ் மழையிலும் கவனம் சிதறாத வீரர்

 
 

அலெஸ்டர் குக் புகழ் வெளிச்சத்தில் பிரகாசமாக மின்னினார். ஆனால், அப்புகழ் மழை அவரை மயக்கவில்லை. அவரது கிரிக்கெட் வாழ்க்கையானது தனித்துவமிக்கதாகவும், அட்டகாசமானதாகவும் இருந்தது.

அலிஸ்டர் குக்படத்தின் காப்புரிமைGARETH COPLEY

குக்கின் சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையை விவரிக்க வேண்டுமானால் 2006 முதல் 2018 வரையிலான 12 வருடங்களை உற்றுநோக்க வேண்டும். கிரிக்கெட் உலகில் இக்காலகட்டத்தில் புதிய தலைமுறையின் பிரதிநிதியாக விளங்கினார் குக். அவர் பயணித்த பாதையில் பயணம் செய்தவர்கள் மிகக்குறைவு.

அவர் பேஸ்புக்கில் இல்லை; ட்விட்டர் கணக்கும் கிடையாது; இன்ஸ்டாகிராமிலும் அவருக்கு கணக்கு இல்லை. ஆகவே, எத்தனை ஃபாலோயர்களை வைத்திருக்கிறார் என பேசுவதற்கே இடமில்லை. சமூக ஊடகத்தில் ஒரு பதிவு போடுவதற்காக அவர் எவ்வளவு கோடிகள் சம்பாதிக்கிறார் என்றும் கேட்க முடியாது.

அவரது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து புகைப்படங்கள், காணொளிகள் ஏதேனும் பகிர்ந்திருக்கிறாரா என நீங்கள் தேடினால், உங்களுக்கு ஏமாற்றமே மிஞ்சும்.

குக் தனது தலைமுடிக்கு ஜெல் போடுவதில்லை; விசித்திரமான ஹேர்ஸ்டெயில் செய்துகொள்வதில்லை; உடலில் டாட்டூக்களை குத்திக்கொள்வதில்லை; டிஜெ பாடல்கள் கேட்பவரும் அல்ல; பிரபலமான தோழிகளும் அவருக்கு இல்லை; யாருடனாவது டேட்டிங் சென்றார்; எந்த பெண்ணுடனாவது உறவை முறித்துக் கொண்டார் என்ற கிசுகிசுக்களும் எழவில்லை. குடித்துவிட்டு இரவில் ஏதாவதொரு மதுபான விடுதியில் தகராறு செய்ததாக அவர் மீது புகார்களும் கிடையாது; வேகமாக வண்டி ஒட்டி சென்றார் எனக்கூறி அவருக்கு காவல்துறை இதுவரை அபராதம் விதித்ததுமில்லை.

கிரிக்கெட் களத்தில் மற்ற வீரர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபடுவது, திட்டுவது போன்ற செயல்களில் ஈடுபட்டதில்லை. பந்தைச் சேதப்படுத்துதல் முதலான எந்தவொரு இழிவான செயல்களிலும் அவரது பெயர் அடிப்பட்டது கிடையாது. போட்டியிலோ அல்லது போட்டி முடிந்தபிறகோ யாரையாவது குத்தலாக பேசுவதோ அல்லது தன்னை முன்னிலைப்படுத்தி உயர்த்தி பேசியதுமில்லை.

குக் நிச்சயம் வித்தியாசமான மனிதர். அவர் 24 கேரட் தங்கம்.

இங்கிலாந்து அணியுடன் தனது கிரிக்கெட் வாழ்க்கையை மிக இளம் வயதிலேயே துவங்கினார். தற்போது தனது 33-வது வயதில் ஓய்வு முடிவை அறிவித்துள்ளார். அவர் தன்னை ஜாம்பவானாக்கிக் காண்பித்திருக்கிறார்.

அலிஸ்டர் குக்படத்தின் காப்புரிமைSTEVE BARDENS

12 வருடங்களுக்கு முன்னதாக இந்த கதை துவங்கியது. அப்போது 2006-ம் வருடம். இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் வந்திருக்கிறது இங்கிலாந்து அணி. மார்கஸ் டிரஸ்கோதிக் இங்கிலாந்தின் நம்பகமான தொடக்க வீரராக விளங்கினார். ஆனால் மன ரீதியான பிரச்சனை காரணமாக இத்தொடரில் இருந்து விலகினார். இங்கிலாந்துக்கு டிரஸ்கோதிக்கின் இழப்பு பேரிடியாக இறங்கியது.

அது மார்ச் மாதம். வெயிலின் தாக்கம் எகிறிக்கொண்டிருந்த நிலையில் இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் இந்திய சுழற்பந்துவீச்சாளர்களை சந்திக்க வேண்டியிருந்தது. ஆகவே இங்கிலாந்து கடும் நெருக்கடியில் சிக்கியிருந்தது.

தொடக்க வீரராக யாரை களமிறக்கலாம் என தேர்வுக்குழு ஆலோசனை நடத்தியதில் இறுதியாக அந்த பட்டியலில் முதலிடத்துக்கு வந்தவர் அலெஸ்டர் குக். ஆனால் ஒரு பிரச்னை என்னவெனில் அப்போது 21 வயது குக் இங்கிலாந்து அகாடமி அணிக்காக வெஸ்ட் இண்டீஸில் விளையாடிக்கொண்டிருந்தார். ஆனால் தேர்வுக்குழு குக் தான் வேண்டும் என முடிவில் உறுதியாக இருந்தது. இதையடுத்து இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் குக்கை அழைத்து.

இந்தியாவுடனான தொடர் துவங்குவதற்கு வெகு சில நாட்களே இருந்தநிலையில் விசா உள்பட அனைத்து தொழில்நுட்ப ரீதியான சம்பிரதாய முறைகளையும் முடித்தபிறகு வெவ்வேறு நேர மண்டலங்களையும் கடந்து மும்பை வழியாக நாக்பூரை சென்றடைந்தார். விமான பயண களைப்பு காரணமாக அவர் ஓய்வெடுக்கவில்லை மாறாக பயிற்சியில் ஈடுபட்டார். அடுத்த சில மணிநேரங்களில் அவர் இங்கிலாந்தின் தேசிய கிரிக்கெட் அணியின் வீரரானார்.

அலிஸ்டர் குக்படத்தின் காப்புரிமைMICHAEL DODGE

நன்றாக சவரம் செய்யப்பட்ட முகம், நல்ல உயரம், பெரிய ஹெல்மெட்டோடு கைகளின் பாதுகாப்பாக அணியப்படும் பட்டையை அணியாதநிலையில் களத்தில் காலடி எடுத்துவைத்தார் குக். அவர் நின்றதை பார்க்கும்போது பேஸ்பால் வீரர் போல இருந்தது.

முதல் இன்னிங்சில் 60 ரன்கள் குவித்தார். இவருக்குள் ஏதோ நல்ல திறமை இருக்கும் போல என நாக்பூர் மைதான பத்திரிகையாளர்கள் அறையில் முணுமுணுப்பு கேட்டது. இரண்டாவது இன்னிங்ஸில் இந்த இளம் வீரர் சதமடித்ததும் கிரிக்கெட் ரசிகர்கள் மெய்மறைந்தனர். தொடக்க போட்டியிலேயே சதமடிப்பது, அதுவும் இந்திய மண்ணில் இந்திய அணிக்கு எதிராகவும் குறிப்பாக கும்ப்ளே மற்றும் ஹர்பஜன் போன்ற சுழற்பந்துவீச்சாளர்களுக்கு எதிராக விளாசியது சாதாரண காரியமல்ல. ஆனால் குக் தன்னால் களத்தில் நிற்க முடியும் என்பதை வெளிக்காட்டிய நாள் அது.

அன்றைய தினம் முதல் குக் தனது பாதையில் ஒரு துறவியை போல நேர்மையுடனும் பயணிக்கத் துவங்கினார். கடந்த 12 வருடங்களாக அவரது மட்டையில் இருந்து ரன் மழை பொழிகிறது.

குக் ஏன் தனித்துவமிக்க சிறப்பான வீரர் தெரியுமா? அவர் கடுமையான நெருக்கடி மிக்க சூழ்நிலைகளில் சக வீரர்களுடன் இணைந்து சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தியிருக்கிறார்.

குக்குடன் அந்த டெஸ்ட் போட்டியில் முதன்முறையாக வெள்ளை ஜெர்சியில் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் நுழைந்தவர் இந்திய வீரரான ஸ்ரீசாந்த். அவரும் தனது கிரிக்கெட் வாழ்க்கையை நன்றாகத் தான் துவக்கினார் ஆனால் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்த தவறினார். மேலும் மேட்ச் பிக்சிங் குற்றச்சாட்டில் சிக்கி வாழ்நாள் தடை பெற்றார். இதே போட்டியில் டெஸ்ட் கிரிக்கெட் வாழ்வை துவங்கிய இன்னொரு வீரரின் பெயர் மான்டி பனீசர்.

இங்கிலாந்துக்காக ஆடிய பனீசர் ஆரம்பகட்டத்தில் அச்சுறுத்தல்தரும் பந்துவீச்சாளராக தனது கிரிக்கெட் வாழ்வை துவங்கினார். ஆனால் ஒரு கட்டத்தில் அவரது நடத்தை சரியில்லாமல்போக, நல்லதொரு பாதையை தொலைத்தார்.

இதே டெஸ்ட் போட்டியில் அறிமுகமான மற்றொரு வீரர் இயான் பிளாக்வெல். அவருக்கு இதுதான் அறிமுக டெஸ்ட் போட்டியாகவும் கடைசி டெஸ்ட் போட்டியாகவும் அமைந்தது.

மூன்று வீரர்கள் ஒரு புறமிருக்க, குக் இன்னொரு பக்கத்தில் ஜொலித்தார். 12 வருட கிரிக்கெட் வாழ்வில் 33 வயது குக் 32 சதங்களை விளாசியுள்ளார். டெஸ்ட் போட்டிகளில் 12,254 ரன்கள் குவித்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் குமார் சங்ககாரா, ராகுல் திராவிட், ஜேக்ஸ் காலிஸ், ரிக்கி பாண்டிங், சச்சின் டெண்டுல்கர் ஆகியோர்தான் குக்கை விட முன்னிலையில் இருப்பவர்கள். குக் எப்படிப்பட்ட விளையாட்டை விளையாடியிருக்கிறார் என்பதை மேற்கண்ட இந்த ஐந்து பெயர்கள் கூறும்.

கடந்த சில வருடங்களாக குக், டெண்டுல்கரின் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்தவர் எனும் சாதனையை முடியடிக்கக்கூடும் என்ற செய்தி அடிக்கடி வலம் வந்தது. ஆனால் குக்கின் ஒரு சாதனை குறிப்பிடத்தக்கது. கடந்த 12 வருடங்களில் தொடர்ந்து 158 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியிருக்கிறார். அதாவது இங்கிலாந்து அணிக்காக அறிமுகமானத்தில் இருந்து அவர் ஒரு டெஸ்ட் போட்டியையும் தவறவிட்டதில்லை.

அவரது ஆட்டத்திறன் அல்லது உடல்திறன் நிலையாக இருந்ததால் அணியில் இருந்து அவரை நீக்க வேண்டும் என்ற பேச்சுக்கே இடமில்லாமல்போனது. முன்னதாக இந்த உலக சாதனையை செய்திருந்தவர் ஆலன் பார்டர். ஒரு ஜாம்பவானின் சாதனையை குக் என்ற இன்னொரு ஜாம்பவான் முறியடித்திருக்கிறார். எண்களில் இந்த சாதனையை குறிப்பிடுவது படிக்கும்போது கவர்ச்சிகரமானதாக இருக்கலாம் ஆனால் உண்மையில் மிகவும் கடினமான மகத்தான சாதனை இது.

அலிஸ்டர் குக்படத்தின் காப்புரிமைTOM SHAW

ஒரு பேட்ஸ்மேனின் பணி ரன்கள் குவிப்பது. உலகில் அனைத்து பேட்ஸ்மேன்களும் இதைச் செய்கிறார்கள். பிறகு, குக் ஏன் சிறப்பானவர் என சிலர் கேட்கலாம். கேள்வி கேட்பதற்கு முன்னதாக அணியில் குக்கின் பணி குறித்து புரிந்துகொள்ள வேண்டும். குக் தொடக்க வீரராக களமிறங்கினார். டெஸ்ட் போட்டிகளை பொறுத்தவரையில் புத்தம்புதிய சிகப்பு பந்தை எதிர்கொள்ள ஒரு வீரருக்கு தனி திறமை தேவை.

ஒன்றரை நாள்கள் ஃபீல்டிங் செய்தபின்னர் உடல் தளர்ந்தாலும் தொடக்க வீரராக களமிறங்க வேண்டும் அல்லது ஆட்டத்தின் முதல் நாளில் முழு தெம்புடன் பந்துவீசவரும் பந்துவீச்சாளர்களை எதிர்கொள்ள வேண்டும். இதற்கு ஒரு வீரருக்கு பிரத்யேக திறமைஇருந்தால்தான் சாதிக்க முடியும்.

தன்னிடம் இருக்கும் தவறுகளை எதிரணி கண்டுபிடித்து தன்னை ஆட்டமிழக்கச் செய்துவிட்டால் கிரகாம் கூச்சிடம் சென்று தனது தவறுகள் குறித்து விவாதித்து, அதன் பின்னர் கடும் பயிற்சி வாயிலாக அடுத்தடுத்த இன்னிங்ஸ்களில் சிறப்பாக ரன்கள் குவிப்பது அவரது வழக்கம்.

அனைவருமே உள்ளூர் ஆடுகளங்களில் ரன் குவிப்பவர்கள்தான். ஒரு பேட்ஸ்மேனுக்கு உண்மையான சோதனை என்னவெனில் அயல்நாட்டில் தனது திறனை வெளிப்படுத்துவது. குக் இச்சங்கதியில் சிறந்தவர் என்பதை ஆதாரங்கள் காட்டுகின்றன.

இந்தியா, இலங்கை, வங்கதேசம் போன்ற இடங்களில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

ஆசிய துணை கண்டத்தில் பொதுவாக பிட்சில் பந்துகள் நன்றாக திரும்பும். ஆகவே காலை முன்னோக்கி நகர்த்தி விளையாடுவதா அல்லது பின்னோக்கி நகர்த்தி விளையாடுவதா என முடிவு செய்ய பேட்ஸ்மேனுக்கு நேரம் பிடிக்கும். சுழல்பந்து வீச்சாளர்களை ஐந்து நாளும் எதிர்கொள்வதென்பது ஒரு புதிர் போன்றதாகவே இருக்கும்.

இதில் வெயில் காலம் என்றால், குளிர்பிரதேசத்தில் இருந்து வந்திருக்கும் இங்கிலாந்து வீரர்களுக்கு மொத்த சக்தியும் விரைவாக தீர்ந்துவிடும். ஆனால் குக் இது போன்ற சூழ்நிலைகளில் எளிதாக ரன்கள் குவித்துள்ளார்.

அலிஸ்டர் குக்படத்தின் காப்புரிமைPHILIP BROWN

இங்கிலாந்து அணிக்கு கிரிக்கெட்டில் எதிரி ஆஸ்திரேலியா. பொதுவாக ஆஸ்திரேலிய மைதானங்களில் பிட்ச் குளிர்ந்திருக்கும். இதுபோதாதன்று ஆஸ்திரேலியர்கள் வீரர்களை வம்புக்கிழுப்பதில் நன்றாக அறியப்பட்டவர்கள் என்பதால் அதையும் சமாளிக்க வேண்டும். இவ்விடங்களில் குக் சிறப்பாக விளையாடியிருக்கிறார்.

அவரை சீண்டும் வார்த்தைகளை பொருட்படுத்தாமல் ஆட்டத்தில் கவனம் குவித்து ரன்கள் குவித்திருக்கிறார்.

நியூசிலாந்தில் பந்து நன்றாக எழும்பும். அங்கே அதிகபட்ச குளிரும் கடுமையான குளிர் காற்றும் வேறு இருக்கும். இந்த சூழ்நிலைகளும் குக் எனும் ரன் மெஷினை தடுத்து நிறுத்தமுடியவில்லை.

தென் ஆப்ரிக்காவில் வேகப்பந்து வீச்சாளர்கள் சிறப்பாக வீசுவார்கள். அனால் குக் தனது வேலையை செவ்வனே செய்வார்.

கரீபியன் தீவுகள் உலகின் இன்னொரு மற்றொரு பகுதியில் இருக்கிறது. இங்கே பெரிய பேட்ஸ்மேன்களே குழப்பமடைவார்கள். அங்கே வெற்றிகரமாக விளையாடியிருக்கிறார்.

இங்கிலாந்தில் குக் ஒரு ரன் மெஷின். அவர் லாரா அல்லது ஜெயவர்தனே போல அழகான பாணியில் விளையாடுபவரல்ல; பாண்டிங் அல்லது சங்கக்காரா போன்ற ஆதிக்கம் செலுத்தும் பேட்ஸ்மேன் அல்ல. அவருடைய ஆட்டம் கிரிக்கெட்டின் அழகியலில் புதிதாக எதையும் சேர்க்காமல் இருந்திருக்கலாம் ஆனால் அவர் நம்பகமான பேட்ஸ்மேனாகவும் அதிக ரன்கள் குவித்தவராகவும் விளங்கியிருக்கிறார். தனது பொறுப்பை கடந்த 12 வருடங்களாக சிறப்பாக செய்திருக்கிறார்.

https://www.bbc.com/tamil/sport-45427079

Link to comment
Share on other sites

கெவின் பீட்டர்சனை அணியிலிருந்து நீக்கிய தீராப்பழிக்கு காலம்தான் மருந்து: அலிஸ்டர் குக் வேதனை

 

 
cook-pietersenjpg

இந்தியாவில் தொடரை வென்ற பிறகு குதூகலத்தில் குக், பீட்டர்சன். | படம்: கே.ஆர்.தீபக்.

ஓவல் டெஸ்ட் போட்டியுடன் ஓய்வு பெறும் இங்கிலாந்தின் மிகச்சிறந்த சாதனை பேட்ஸ்மென் அலிஸ்டர் குக், தான் கேப்டனாக இருந்த காலத்தில் ஏற்பட்ட கெவின் பீட்டர்சன் சர்ச்சை குறித்து பிபிசி டெஸ்ட் மேட்ச் ஸ்பெஷல் நிகழ்ச்சியில் பேசியுள்ளார்.

2014 ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஆஸியில் நடந்த ஆஷஸ் தொடரில் குக் தலைமையில் இங்கிலாந்து 5-0 என்று உதை வாங்கியது, அதில் இங்கிலாந்தில் ஓரளவுக்கு அதிக ரன்களை எடுத்தவர் கெவின் பீட்டர்சன் தான். ஆனால் இங்கிலாந்து அணியிலுள்ள மேட்டுக்குடி லாபி கெவின் பீட்டர்சனை வெளியேற்ற தோல்விகளை ஒரு காரணமாகப் பயன்படுத்தியது, ஜேம்ஸ் ஆண்டர்சன் உட்பட ஈடுபட்ட ஸ்டூவர்ட் பிராடின் சூழ்ச்சியில் கெவின் பீட்டர்சன் இங்கிலாந்து ஓய்வறைக்கு சரிப்பட்டு வரமாட்டார் என்று ஒருமனதாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் முடிவெடுத்தது.

 
 

இங்கிலாந்துக்காக தென் ஆப்பிரிக்காவை விட்டு வந்து ஆடி அந்த அணிக்கு பல வெற்றிகளை ஈட்டித்தந்து தன் சொந்த நாட்டையே தியாகம் செய்த ஒரு வீரரை இங்கிலாந்து இழிவு படுத்தி அனுப்பியது. இதற்கெல்லாம் ஒட்டுமொத்தமாக கேப்டன் குக்தான் காரணம் என்ற குற்றச்சாட்டு எழுந்தது.

இது குறித்து அப்போது கேப்டனாக இருந்த குக் கூறியதாவது:

என் கிரிக்கெட் வாழ்வில் அது மிகவும் கடினமான காலக்கட்டம். அந்தச் சர்ச்சை என் பேட்டிங்கையே பாதித்தது.

ஒருநாள் ஸ்ட்ராஸ் வந்து கெவின் பீட்டர்சன் இனி இங்கிலாந்துக்கு ஆடப்போவதில்லை என்று கூறியவுடன் என் தோள்களிலிருந்த பாரத்தை இறக்கி வைத்தது போல் இருந்தது.

முதலில் கெவின் பீட்டர்சனை அனுப்பிவிடுவது என்ற முடிவில் நானும் பங்கு பெற்றேன், ஆனால் இப்போதைக்கு வேண்டாம், ஓராண்டு கழித்து மீண்டும் அவரை அழைக்கலாம் என்றுதான் நான் கூறினேன்.

ஆனால் பல் டவுண்டன் தெளிவு வேண்டும் என்று வலியுறுத்தினார். பீட்டர்சன் விவகாரம் படுமோசம், இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அதனை மோசமாகக் கையாண்டதாகவே கருதுகிறேன். அதே போல் சமூக வலைத்தளங்கள் அப்போது சமூக வலைத்தளங்கள் எப்படிச் செயல்பட்டன என்பதையும் இங்கிலாந்து வாரியம் அறிந்திருக்கவில்லை.

ஆம், சமூகவலைத்தளங்களில் பீட்டர்சன் விவகாரத்தில் என்னைப் போட்டு வறுத்து எடுத்தார்கள். அதுதான் கேப்டனாக இருப்பது என்றால் ஏற்படுவது போலும் என்று நினைத்துக் கொண்டேன்.

டேவிட் கோவரை அணியிலிருந்து நீக்கியதற்கு கிரகாம் கூச்தான் காரணம் என்று அவர் மீது ஒரு தீராப்பழி இருந்தது. அதே போல் பீட்டர்சன் அனுப்பப் பட்டதற்கு நான் காரணம் என்று என் மீது தீராப்பழி உள்ளது. காலம்தான் மருந்து எங்கள் விரிசலுற்ற நட்பிற்கும் காலம்தான் மருந்து.

இதனால் நானும் பீட்டர்சனும் அதற்குப் பிறகு 4 ஆண்டுகளாக பேசிக்கொள்ளக்கூட இல்லை. ஆனால் எங்களிடையே நிறைய நினைவுகள் உள்ளன. நல்ல நினைவுகள் உள்ளன. கிரிக்கெட் என்ற ஒன்றை எடுத்துவிட்டால் எங்கள் உறவுகளில் பாதிப்பில்லை என்றுதான் கூறுவேன், ஆனால் பீட்டர்சன் வேறு கருத்தை நிச்சயம் வைத்திருப்பார்.

இவ்வாறு கூறினார் அலிஸ்டர் குக்.

https://tamil.thehindu.com/sports/article24890445.ece

Link to comment
Share on other sites

குக் போல ஓய்வு அறிவித்துவிட்டு பிறகு சதமடித்த ‘கில்லி’ பேட்ஸ்மேன்கள்!

 

 
cook444xx

 

சாகுற நாள் தெரிஞ்சா வாழ்ற நாள் நரகமாயிடும் - சிவாஜி படத்தில் சுஜாதா எழுதிய வசனம். ஆனால் இதுவே என் கடைசி டெஸ்ட் என்று முன்பே அறிவித்துவிட்டு அந்தக் கடைசி டெஸ்டில் சதமடித்த கில்லிகளும் உண்டு. நேற்று சதமடித்த குக் போல. 

5 டெஸ்ட் ஆட்டங்கள் கொண்ட தொடரை 3-1 என இங்கிலாந்து ஏற்கெனவே கைப்பற்றி விட்டது. இறுதி டெஸ்ட் லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இங்கிலாந்து முதல் இன்னிங்ஸில் 332 ரன்களுக்கும், இந்தியா 292 ரன்களுக்கும் ஆல் அவுட்டாகின. இரண்டாம் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 6 விக்கெட் இழப்புக்கு 364 ரன்களை எடுத்துள்ளது. அந்த அணியின் வீரர்கள் அலிஸ்டர் குக் 147, கேப்டன் ஜோ ரூட் 125 ஆகியோர் அபாரமாக ஆடி சதமடித்தனர். இதன் மூலம் இந்தியாவைக் காட்டிலும் 464 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. 4-ம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் 18 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 58 ரன்களை எடுத்திருந்தது. இறுதி நாளான செவ்வாய்க்கிழமை வெற்றி பெற இந்தியாவுக்கு 406 ரன்கள் தேவைப்படுகின்றன.

இங்கிலாந்து அணியில் அதிக டெஸ்ட் ரன்களை எடுத்த சாதனைக்கு சொந்தக்காரரான முன்னாள் கேப்டன் அலிஸ்டர் குக், இந்தியாவுடன் நடைபெறும் இறுதி டெஸ்ட் ஆட்டத்தோடு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். ஓவல் மைதானத்தில் நடைபெறும் டெஸ்டில் முதல் இன்னிங்ஸில் 71 ரன்களை எடுத்த குக், இரண்டாவது இன்னிங்ஸில் அபாரமாக ஆடி 147 ரன்களுடன் தனது கடைசி டெஸ்டில் இருந்து விடை பெற்றார். கடந்த 2006-இல் நாக்பூரில் நடைபெற்ற இந்தியாவுக்கு எதிரான டெஸ்டில் இரண்டாம் இன்னிங்ஸில் குக் சதமடித்தார். தற்போது இந்தியாவுக்கு எதிராக நடைபெற்ற கடைசி டெஸ்டிலும் சதமடித்து சாதனை படைத்துள்ளார். ஆஸி வீரர்கள் ரெஜினால்ட் டப், பில் போன்ஸ்போர்ட், கிரேக் சாப்பல், இந்திய வீரர் அஸாருதீன் ஆகியோர் இச்சாதனையை நிகழ்த்தி உள்ளனர். 

161 டெஸ்ட் ஆட்டங்களில் பங்கேற்ற குக் 33 சதங்கள், 57 அரை சதங்களுடன் 12472 ரன்களை அடித்துள்ளார். மேலும் தொடர்ந்து 158 டெஸ்ட் ஆட்டங்களில் பங்கேற்ற வீரர் என்ற சிறப்பையும் பெற்றுள்ளார். குக்கை இந்திய வீரர்கள் கேப்டன் கோலி தலைமையில் பாராட்டி வழியனுப்பினர்.

ஓய்வு அறிவித்துவிட்டு, பிறகு கடைசி டெஸ்டில் சதமடித்த வீரர்கள்

ராமன் சுப்பா ரோவ் (1961, இங்கிலாந்து), ரன்கள்: 12, 137. 
சோமொர் நர்ஸ் (1969, மே.இ.), ரன்கள்: 258.
கிரேக் சேப்பல் (1984, ஆஸ்திரேலியா),  ரன்கள்: 182.
ஜாக் காலிஸ் (2013, தென் ஆப்பிரிக்கா) ரன்கள்: 115.
பிரண்டன் மெக்கல்லம் (2016, நியூஸிலாந்து) ரன்கள்: 145, 25.
அலாஸ்டர் குக் (2018, இங்கிலாந்து), ரன்கள்: 71, 147.

http://www.dinamani.com/sports/sports-news/2018/sep/11/the-elite-club-alastair-cook-joins-after-signing-off-with-a-hundred-2998292.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கல்லறையில் உடல்கள் தோண்டியெடுப்பு.. மனித எலும்பில் உருவாகும் போதைப் பொருள்.. அடிமையாகும் இளைஞர்கள்! ’போதைப் பொருட்கள் உயிருக்குக் கேடு விளைவிக்கும்’ என விளம்பரப்படுத்தப்பட்டாலும், அதன் விற்பனையும் அதற்கு அடிமையாகும் நபர்களின் எண்ணிக்கையும் நாளுக்குநாள் அதிகரித்தே வருகிறது. உலகளவில் பலர் இந்தப் போதைப் பழக்கத்துக்கு அடிமையாகி வருகின்றனர். அந்த வகையில் மேற்கு ஆப்பிரிக்க நாடான சியரா லியோனில் இதற்கு பலர் இளைஞர்கள் அடிமையாகி உள்ளனர். அதிலும், மனித உடல் எலும்புடன் தயாரிக்கப்படும் ஒருவித போதைப் பொருளுக்குத்தான் அவர்கள் அதிகமாக அடிமையாகி இருப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேற்கு ஆப்பிரிக்க நாடான சியரா லியோனில் போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு போதைப் பொருளுக்கு அடிமையான இந்நாட்டு மக்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளது. அதிலும், இந்நாட்டிலுள்ள பெரும்பாலான மக்கள் ’குஷ்’ என்ற ரக போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. இந்த ’குஷ்’ போதைப்பொருள் மனித எலும்புகளிலிருந்து உருவாக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. கடந்த ஆறு ஆண்டுகளாக இந்த ’குஷ்’ ரக போதைப்பொருள் சியரா லியோன் பகுதியில் பழக்கத்திலிருந்து வருகிறது. இதன் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அதனை தயாரிப்பவர்கள் கல்லறையில் இருக்கும் புதைகுழிகளைத் தோண்டி பிணங்களை சேகரித்து அதன் எலும்புகளிலிருந்து ’குஷ்’ போதைப்பொருளைத் தயார் செய்வதகாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த எலும்புகளுடன் , கஞ்சா மற்றும் சில இரசாயனங்கள் கலந்து இந்தப் போதைப் பொருள் தயாரிக்கப்படுகிறது. இதற்காக, சியரா லியோனில் இதுவரை நூற்றுக்கணக்கான புதைகுழிகள் தோண்டப்பட்டுள்ளன. இந்த போதை மருந்து கிட்டத்தட்ட பல மணி நேரம் போதை தருவதாகச் சொல்லப்படுகிறது. மேலும் இந்தப் போதைக்கு அடிமையான இளைஞர்கள் தங்களிடம் இருக்கும் பொருட்களை (புத்தகங்கள், ஆடைகள்) விற்று அந்த போதை மருந்தை வாங்குவதாகவும், அதற்குப் பிறகு வீட்டில் உள்ள பொருட்களைத் திருடிச் சென்று கொடுத்து வாங்குவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. போதைப்பொருள் மூலம் நாட்டில் குடியிருப்பதற்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக அந்த நாட்டின் ஜனாதிபதி கவலை தெரிவித்துள்ளார். இதன் பிடியிலிருந்து மக்களை மீட்க போதைப்பொருள் ஒழிப்பு மையங்கள் அமைக்கப்படும் எனவும் போதைப்பொருள் விற்பனையாளர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அந்த நாட்டு ஜனாதிபதி எச்சரித்துள்ளார்.   https://thinakkural.lk/article/299459
    • வடக்கு மீனவர்களின் ஓயாத போராட்டம் ஜே.ஏ.ஜோர்ஜ் “அது ஒரு சனிக்கிழமை, நான் எனது வலைகளை எடுப்பதற்காக கடலுக்கு சென்றேன். வலை நிறைய மீன்களை எதிர்பார்த்து சென்ற எனக்கு அங்கு அதிர்ச்சியே மிஞ்சியது. ஏனென்றால் நான் விரித்து வைத்திருந்த வலைகள் அங்கு இல்லை.  எனது வலைகளை இழுவை படகுகளில் வந்த இந்திய மீனவர்களை சேதப்படுத்தி விட்டனர். ஆனால் இது முதல் முறையாக நடக்கும் சம்பவம் இல்லை” -  இவ்வாறு தனது கதையை கூறும் மீனவரான ரெஜினோல்ட் தனது கடந்த கால அனுபவங்களுடன் ஒப்பிடுகையில் தற்போதைய தனது போராட்டம் தீவிரமடைந்திருப்பதாக கூறுகின்றார். 20 ஆண்டுகளாக தனது வாழ்க்கைக்காக கடல் அலைகளுடன் போராடி வரும் ரெஜினோல்ட் மட்டுமன்றி வடமாகாண மீனவர்களில் அதிகளவானவர்கள் தற்போது இவ்வாறு கடும் நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளனர். இலங்கை கடற்பரப்பிற்குள் இழுவை படகுகளை பயன்படுத்தி இந்திய மீனவர்கள் முன்னெடுக்கும் மீன்பிடி நடவடிக்கைகளே இந்த நெருக்கடிக்கு காரணமாக உள்ளது. நெடுந்தீவைச் சேர்ந்த ரெஜினோல்ட் தனது தந்தையுடன் இணைந்து நீண்டகாலம் மீன்பிடியில் ஈடுபட்ட நிலையில், திருமணத்துக்கு பின்னர் தற்போது தனியாக தொழில் செய்கின்றார். “நான் என் படகை மோட்டார் இல்லாமல் பயன்படுத்துகிறேன். மோட்டார் ஒன்றை வாங்க என்னிடம் போதுமான பணம் இல்லை. அதனால் என்னால் அதிக தூரம் செல்ல முடியாது. கடந்த காலங்களில் மீன்பிடிக்க பாரம்பரிய வலைகளைப் பயன்படுத்தினேன். இழுவை படகுகளில் வந்த இந்திய மீனவர்களை எனது வலைகளை சேதப்படுத்தி விட்டனர். எனவே, இப்போது மீன்பிடிக்க சிறிய வலையைப் பயன்படுத்துகிறேன். இதனால், முன்பு போல் மீன் பிடிக்க முடியவில்லை. கடலில் இரண்டு மூன்று மணி நேரம் மாத்திரமே செலவிட முடிகின்றது. எனக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர்.  எனது மூத்த மகன் ஐந்தாம் வகுப்பு படிக்கிறான். அவர்களுக்காக நான் பல செலவுகளைச் செய்ய வேண்டியிருக்கிறது. பொருட்களின் விலை முன்பை விட அதிகமாக உள்ளது. குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்றுவது இப்போது மிகவும் கடினமாக உள்ளது” என்கிறார் ரெஜினோல்ட். அமெரிக்க பாதுகாப்பு பல்கலைக்கழகம் 2008ஆம் ஆண்டு துருக்கியின் இஸ்தான்புல் நகரில் ஏற்பாடு செய்திருந்த செயற்குழு கூட்டத்தில் கலாநிதி சனத் டி சில்வாவினால் முன்வைக்கப்பட்ட அறிக்கையின்படி, இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான கடல் எல்லை மூன்று கடல் பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. வடக்கில் வங்காள விரிகுடா, நடுவில் பாக்கு நீரிணை, தெற்கில் மன்னார் விரிகுடா என இந்த கடல் எல்லைகள் உள்ள நிலையில், பாக்கு நீரிணை ஊடாக இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான சராசரி தூரம் சுமார் 32 கிலோமீற்றர்கள் என அறிக்கை கூறுகிறது. கச்சதீவில் இருந்து இந்தியாவின் ராமேஸ்வரம் வரையிலான தூரம் சுமார் 14 கடல் மைல்கள், அதாவது சுமார் 26 கிலோமீட்டர்கள். யாழ்ப்பாணத்தில் இருந்து கச்சத்தீவு வரை சுமார் 60 கிலோமீட்டர் தொலைவான கடற்பரப்பில் தனது அதிகாரத்தை கொண்டுள்ள இலங்கை கடற்படை, சர்வதேச கடல் எல்லையை தாண்டி இலங்கை கடலுக்குள் நுழையும்  இந்திய இழுவை படகுகள் குறித்து அவ்வப்போது  நடவடிக்கை எடுத்து வருகிறது. எவ்வாறாயினும், இலங்கை  கடற்பரப்புக்குள் இந்திய இழுவை படகுகள் பிரவேசிப்பது  நாளாந்தம் இடம்பெறுவதாக வடபகுதி மீனவ சங்க தலைவர்கள் கூறுகின்றனர். “இது ஒரு தீவிரமான பிரச்சினை. இந்திய மீனவர்கள் மீது இலங்கை கடற்படை உள்ளிட்டவர்கள் தேவையான நடவடிக்கை எடுக்காதமையே இந்த பிரச்சினை தொடர்வதற்கு முக்கிய காரணமாக உள்ளது.  ஏராளமான இந்திய இழுவை படகுகள் இலங்கை கடல் பகுதிக்குள் நுழையும் நிலையில், கைது செய்யப்படும் இந்திய மீனவர்கள் மற்றும் கைப்பற்றப்படும் இந்திய இலுவை படகுகளின் எண்ணிக்கை மிகக் குறைவாகவே உள்ளது. சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடி தேவையான நடவடிக்கை எடுத்து இந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண மீன்பிடி அமைச்சு நடவடிக்கை எடுப்பதாகத் தெரியவில்லை. இந்திய மீனவர்கள் பயன்படுத்தும் இழுவை படகுகள் வடபகுதி மீனவர்களுக்கு சொந்தமானதை படகுகளை விட பெரியவை. அவை தினமும் வடக்கு கடல் பகுதிக்குள் நுழைவதால், ஏராளமான பிரச்னைகள் ஏற்படுகின்றன. இதனால் வடபகுதி மீனவர்களின் வருமானம் பாதிக்கப்படுவதுடன், இந்திய இழுவை படகுகளால் இலங்கை மீனவர்களின் வலைகளுக்கு சேதம் ஏற்படுகின்றது. அத்துடன், எமது மீன்பிடி வளம் பறிபோகிறது. எமது மீனவர்களுக்குச் சொந்தமான படகுகளை சேதப்படுத்திய சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன”- என யாழ்ப்பாண மாவட்ட கடற்றொழிலாளர் சமாசங்களின் சம்மேளன தலைவர் அன்னலிங்கம் அன்னராசா தெரிவித்தார். அத்துடன், இந்தியாவில் இருந்து இழுவை படகுகள் வருவதை தடுக்கும் வகையில் இலங்கையில் சட்ட அமைப்பு இருப்பதாகவும் எனினும், அவற்றால் நடைமுறையில் இலங்கை மீனவர்களால் எந்தவித பயனையும் பெற்றுக்கொள்ள முடியவில்லை என, அன்னராசா சுட்டிக்காட்டினார். 1979 ஆம் ஆண்டின் 59 ஆம் இலக்க கடற்றொழில் (வெளிநாட்டு மீன்பிடி படகுகளை ஒழுங்குபடுத்துதல்) சட்டத்தின் 04ஆவது பிரிவின்படி, அனுமதியின்றி மீன்பிடி தொடர்பான நடவடிக்கைகளுக்காக வெளிநாட்டு மீன்பிடி படகுகளை இலங்கை கடற்பரப்பில் மீன்பிடிக்க பயன்படுத்தக்கூடாது என்று கூறுகிறது. அத்துடன், இலங்கை கடற்பரப்பிற்குள் வெளிநாட்டுப் படகுகள் பிரவேசித்தால், மீன்பிடிக்கப்படுவதைத் தடுக்கும் வகையில், அந்தப் படகில் உள்ள மீன்பிடி சாதனங்களை முறையான முறையில் தடுத்து வைக்க வேண்டும் என்று சட்டத்தின் 05வது பிரிவு கூறுகிறது. வெளிநாட்டுப் படகுகளை நிறுத்தவும், சோதனைகளை நடத்தவும், பிடியாணையுடன் அல்லது இல்லாமலும் படகுகளைக் கைப்பற்றவும், தனிநபர்களைக் கைது செய்யவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.  2018 ஆம் ஆண்டில், இந்த சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்பட்டதுடன், இலங்கையில் உள்ள ஆயுதப்படைகளின் தளபதிகள் மற்றும் அதன் அமுலாக்கத்துக்காக கரையோரப் பாதுகாப்புத் திணைக்களத்தின் தலைவர் ஆகியோருக்கு பொறுப்பை வழங்கும் கூடுதல் சரத்துகள் அறிமுகப்படுத்தப்பட்டன. வெளிநாட்டுப் படகுகள் மூலம் இலங்கைக் கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடித்தால் இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும். இந்த குற்றம் தொடர்பான நீதிமன்ற விசாரணைகள் ஒரு மாதத்துக்குள் முடிக்கப்பட வேண்டும் என்று சட்டம் கூறுகிறது. இந்த சட்டத்தை நிறைவேற்றுவதற்கு பொறுப்பான அமைச்சருக்கு விதிமுறைகளை உருவாக்கும் திறன் உட்பட விரிவான அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. 1981 ஆம் ஆண்டு இந்தச் சட்டத்தின் கீழ் இலங்கைக் கடற்பரப்பில் நுழைவதற்கான அனுமதியைப் பெறுவதற்கான நடைமுறைகளை கோடிட்டுக் காட்டும் விதிமுறைகள் வெளியிடப்பட்டன. இந்தச் சட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு மீன்பிடி அமைச்சு மற்றும் கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்களம் என்பன மீள தவிர்க்க முடியாத பொறுப்பைக் கொண்டுள்ளன. இந்திய மீனவர்கள் வட கடலில் மேற்கொள்ளும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை முற்றாக நிறுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகள் தொடர்பிலான கலந்துரையாடல் 2023 ஜனவரி 24 ஆம் திகதி கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்றது.  மேலும், 2023ல் சட்டவிரோத வெளிநாட்டு மீன்பிடி கப்பல்கள் மற்றும் மீனவர்கள் குறித்து அந்தந்த நிறுவனங்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. எவ்வாறாயினும், இந்திய இழுவை படகுகளினால் வடபகுதி மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண போதிய நடவடிக்கைகளை எடுக்க அரசாங்கம் இன்னமும் தவறியுள்ளதுடன், இதனால் பிரச்சினை தொடர்ந்து மோசமாகி வருகிறது. இவ்விடயம் தொடர்பில் வினவிய போது கடற்றொழில் அமைச்சின் செயலாளர் கே.என். குமாரி சோமரத்ன, இந்த பிரச்சினைக்கு இரு நாடுகளுக்கிடையில் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்பட வேண்டும் என தெரிவிக்கின்றார். “இந்த விவகாரம் தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே பல ஆண்டுகளாக விவாதங்கள் நடந்து வருகின்றன. இந்த விடயம் தொடர்பில் மீண்டும் ஒருமுறை கலந்துரையாடலை ஆரம்பிக்குமாறு வெளிவிவகார அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளோம். வெளிவிவகார அமைச்சரும் அதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருவதை நாம் அறிவோம். இப்பிரச்சினை தொடர்பாக தற்போதுள்ள சட்டங்களில் திருத்தம் செய்ய தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, தற்போது இறுதிக்கட்டத்தில் உள்ளது. தற்போது, முதல் தடவை கைதுக்கான தண்டனை மற்றும் மீண்டும் மீண்டும் கைது செய்யப்பட்டதற்கான தண்டனையை சட்டம் குறிப்பிடுகிறது, ” என்று அவர் கூறுகின்றார். இந்தச் சட்டத்தின் கீழ் கைது செய்ய கடற்படையின் அதிகாரத்தைப் பயன்படுத்துவதற்கு ஏன் பணிப்புரை வழங்கப்படவில்லை என வினவியபோது, அந்தச் சட்டம் இன்னமும் அமுலில் உள்ளதாகவும், அதன்படி தற்போது கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் செயலாளர் தெரிவித்தார். இது இவ்வாறாக இருக்கும் நிலையில், இந்த ஆண்டு இதுவரையான காலப்பகுதியில் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களின் எண்ணிக்கை 150க்கும் அதிகமாகும். இது அதிக எண்ணிக்கையாக தெரிந்தாலும், நாளாந்தம் இலங்கைக் கடற்பரப்புக்குள் நுழையும் இந்திய மீனவர்களின் வருகையுடன் ஒப்பிடுகையில் இது மிகக் குறைவு என மீனவ சங்கத் தலைவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இந்த நிலையில், இலங்கை கடற்பரப்பிற்குள் பிரவேசிக்கும் இந்திய மீனவர்களை கண்காணிப்பதற்காக வடக்கில் ‘கடல் காவலர்கள்’ எனப்படும் தன்னார்வ குழுவொன்றை ஸ்தாபிப்பதற்கான அமைச்சரவை பத்திரத்தை கடற்றொழில் அமைச்சர் சமர்ப்பித்துள்ளார். இதேவேளை, இந்திய மீன்பிடி பிரச்சனையால் நாளாந்தம் 350 மில்லியன் ரூபாய் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக அமைச்சு மதிப்பிட்டுள்ளது. இந்த நிலையில், தற்போதைய கடற்றொழில் அமைச்சர் வடக்கில் உள்ள மீனவர்களின் வாக்குகளால் பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டதாகவும், கடற்றொழில் அமைச்சராக பதவியேற்றதன் பின்னர் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு அவர் போதிய தலையீடுகளை மேற்கொள்ளவில்லை என வடமாகாண மீனவர் சங்க தலைவர்கள் குற்றம் சுமத்துகின்றனர். வடக்கில் உள்ள எழுவைத்தீவு, அனலைத்தீவு, நெடுந்தீவு உள்ளிட்ட, மீன் பிடி தொழிலை வாழ்வாதாரமாக கொண்டுள்ள மக்கள் வசிக்கும் தீவு பகுதிகள் இன்னும் இலங்கை கடற்படையினரின் கண்காணிப்பிலேயே உள்ளதை எம்மால் நேரடியாக காண முடிந்தது. இந்த தீவுகளின் கடற்படையினரின் சோதனை சாவடி அல்லது முகாம் இன்னும் செயற்பாட்டிலேயே உள்ளது. இவ்வாறு வடக்கின் கடற்பரப்பை சுற்றி ரோந்து நடவடிக்கையில் ஈடுபடும் இலங்கை கடற்படையினர், இந்திய மீனவர்கள் இலங்கைக்குள் பிரவேசிப்பதை தடுக்க  உரிய நடவடிக்கை எடுக்காதது குறித்து வடபகுதி மீனவர்கள் தமது அதிருப்தியை வெளிப்படுத்துகின்றனர். இலங்கை கடற்படையினர் நினைத்தால் இந்திய மீனவர்களை இலங்கை கடல் வளத்தை சுரண்டாமல் இலகுவாக தடுத்து நிறுத்த முடியும் என்பதே வடபகுதி மீனவர்கள் நம்பிக்கையாகும். ஆனால், அது இன்றுவரை நிறைவேற்றப்படவில்லை என்பது அந்த மீனவர்கள் நிலையை நேரில் பார்க்குத்போது தெளிவாக புலப்படுகின்றது.   https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/வடக்கு-மீனவர்களின்-ஓயாத-போராட்டம்/91-336077
    • யாழ்.பல்கலையின் பொன்விழாவை முன்னிட்டு ஆய்வு மாநாடு! adminApril 18, 2024 யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் யாழ்ப்பாண வளாகம் எனும் பெயரில் இலங்கைப் பல்கலைக்கழகத்தின் ஒரு அங்கமாக ஆரம்பிக்கப்பட்டு இவ்வருடத்துடன் ஐம்பதாண்டைப் பூர்த்தி செய்து பொன்விழாக் காண்கின்றது. அதனை முன்னிட்டு முதலாவது சர்வதேச கல்வியியல் ஆய்வுமாநாட்டை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் உயர்பட்டப்படிப்புக்கள் பீடமும் கலைப்பீடத்தைச் சேர்ந்த கல்வியியல் துறையும் இணைந்து ஒழுங்கமைத்துள்ளன. ‘நாளையை வலுப்படுத்தல் – கல்வியின் போக்குகளும் அவற்றை புரிந்துகொள்ளவும் உள்வாங்கவும் வடக்கு மாகாணத்தின் இயலுமைகள்’ எனும் கருப்பொருளில் இம்மாநாடு திட்டமிடப்பட்டுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர்.சி.சிறிசற்குணராசா தலைமையிலும் உயர்பட்டப்படிப்புக்கள் பீடப் பீடாதிபதி பேராசிரியர்.செ.கண்ணதாசன் மற்றும் கலைப் பீடாதிபதி பேராசிரியர்.சி.ரகுராம் ஆகியோரின் இணைத்தலைமையிலும் இவ் ஆய்வுமாநாடு அரங்கேறவுள்ளது. கல்வியியல் துறைத் தலைவர் கலாநிதி.ஆ.நித்திலவர்ணண் மாநாட்டின் இணைப்பாளராகச் செயற்படுகின்றார். வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ம.பற்றிக் டிரஞ்சன் மற்றும் வட மாகாணக் கல்விப் பணிப்பாளர் தி.ஜோன் குயின்ரஸ் ஆகியோர் இந்நிகழ்வில் சிறப்பு விருந்தாளர்களாகக் கலந்துகொள்கின்றனர். எதிர்வரும் 20ம் திகதி சனிக்கிழமையும் 21ம் திகதி ஞாயிற்றுக்கிழமையும் காலை மற்றும் மாலை அமர்வுகள் எனத் திட்டமிடப்பட்டுள்ள இம்மாநாட்டின் காலை அமர்வுகள் கைலாசபதி கலையரங்கிலும் மாலை அமர்வுகள் உயர்பட்டப்படிப்புக்கள் பீடத்திலும் நடைபெறவுள்ளன. சனிக்கிழமை நடைபெறவுள்ள அங்குரார்ப்பண நிகழ்வில் திறவுகோல் உரையினை கொழும்புப் பல்கலைக்கழக கல்வியியல் பீட கல்வி உளவியல் இருக்கைப் பேராசிரியர் மஞ்சுளா விதாணபத்திரண நிகழ்த்தவுள்ளார். ‘வாண்மைத்துவ விருத்திக்கான ஆய்வு மைய புத்தாக்கங்கள்: வடக்கு இலங்கையின் ஆசிரியர் கல்விக்கான தந்திரோபாய அணுகுமுறை’ எனும் தலைப்பில் இவ் உரை நிகழவிருக்கின்றது. திறவுகோல் உரையினைத் தொடர்ந்து மாநாட்டின் கருப்பொருளை மையப்படுத்திய மையக்கருத்துரைகள் இடம்பெறவுள்ளன. இக்கருத்தரங்கிற்கு உயர்பட்டப்படிப்புக்கள் பீடப் பீடாதிபதி பேராசிரியர்.செ.கண்ணதாசன் தலைமைதாங்கவுள்ளார். ‘இலங்கையின் ஆரம்ப பிள்ளைப்பருவக் கல்வியை முறைமைப்படுத்தல் – சவால்களும் பிரச்சனைகளும்’ எனும் தலைப்பில் திறந்த பல்கலைக்கழக கல்வியியல் பீடப் பேராசிரியர்.தி.முகுந்தனும், ‘வட மாகாணக் கல்வியின் சமகால உள சமூக நிலைமைகள்’ எனும் தலைப்பில் உளமருத்துவ நிபுணர் சி.சிவதாசும், ‘இலங்கையின் பாடசாலைக் கலைத்திட்டத்தின் சவால்களும் புதிய போக்குகளும்’ எனும் தலைப்பில் திறந்த பல்கலைக்கழக கல்வியியல் பீடப் பேராசிரியர் எவ்.எம்.நவாஸ்தீனும், ‘சட்டத் தீர்மானங்களை அறிவிப்பதில் கல்வியியல் ஆய்வுகளின் தேவைகள்’ எனும் தலைப்பில் களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்ற நீதிபதி ஜே.பி.ஏ.ரஞ்சித்குமாரும் உரையாற்றவுள்ளனர். ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள இரண்டாம் நாள் நிகழ்வுகளுக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கல்வியியல் துறைப் பேராசிரியர் ஜெயலக்சுமி இராசநாயகம் தலைமை தாங்கவுள்ளார். இந் நிகழ்வில் திறவுகோல் உரையை தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக கல்வியியல் மற்றும் மேலாண்மைத் துறைத் தலைவர் பேராசிரியர் கு.சின்னப்பன் ‘தமிழ் கற்பித்தலில் புதிய போக்குகள்’ எனும் தலைப்பில் நிகழ்த்தவுள்ளார். அதனைத் தொடர்ந்து ‘நாளையை வலுப்படுத்தல் – கல்வியின் போக்குகளும் அவற்றை புரிந்துகொள்ளவும் உள்வாங்கவும் வட மாகாணத்தின் இயலுமைகள்’ எனும் தலைப்பில் கலைப்பீடப் பீடாதிபதி பேராசிரியர் சி.ரகுராம் தலைமையில் திறந்த புலமைத்துவக் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. இக்கலந்துரையாடலில் ஓய்வுபெற்ற வலயக் கல்விப்பணிப்பாளரும் அதிபருமாகிய என்.தெய்வேந்திரராஜா, கல்வியியல் ஆய்வாளரும் அகவிழி மற்றும் ஆசிரியம் சஞ்சிகைகளின் ஆசிரியருமான தெ.மதுசூதனன், தேசிய கல்வி நிறுவன விரிவுரையாளர் ஐ.கைலாசபதி, கிளிநொச்சி விவேகானந்தா வித்தியாலய அதிபர் ஜெய மாணிக்கவாசகர், இலங்கை பரீட்சைகள் திணைக்களப் பணிப்பாளர் எம்.ஜீவராணி புனிதா, யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அதிபர் இ.செந்தில்மாறன், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகக் கல்லூரியின் முன்னாள் பணிப்பாளரும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் திட்ட முகாமையாளருமாகிய ஜே. ஜூட் வோல்ற்றன் மற்றும் கிளிநொச்சி வடக்கு கல்வி வலய தொழில் வழிகாட்டல் அலுவலர் சு.வீரசுதாகரன் ஆகியோர் பங்குபற்றவுள்ளனர். பார்வையாளர்களின் வினாக்களுக்கும் விடையளிக்கும் நிகழ்வாகவும் இக் கலந்துரையாடல் திட்டமிடப்பட்டுள்ளது. ‘வடக்கு மாகாணப் பாடசாலைகளின் வெற்றிகளும் பின்னடைவுகளும்’, ‘பாடசாலைகளும் சமூகமும் – எங்கு நாம் நிற்கின்றோம் – முன்னோக்கிப் போவதற்கான வழிகள்’, ‘எதிர்பார்க்கப்படும் கற்றல் பேறுகளை அளவிடுதல்’, மற்றும் ‘கல்வியும் வேலைவாய்ப்பும் – சந்தர்ப்பங்களும் சவால்களும்’ எனும் தலைப்புக்களில் இக்கலந்துரையாடல் கட்டமைக்கப்பட்டுள்ளது. கலந்துரையாடலின் கருத்துச்செறிவுகளை மாநாடு நிறைவுபெற்ற பின்னர் கொள்கை ஆவணமாக வெளியிட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இரண்டு நாள்களும் மாலை அமர்வுகள் பலாலி வீதியில் அமைந்துள்ள உயர்பட்டப்படிப்புக்கள் பீடத்தில் நடைபெறும். இரண்டு நாள் மாலை அமர்வுகளிலும் தலா நாற்பத்து நான்கு ஆய்வுக் கட்டுரைகள் பல்வேறு தலைப்புக்களிலும் சமர்ப்பிக்கப்படவுள்ளன. பல்கலைக்கழகங்களின் ஆய்வு மாணவர்கள், விரிவுரையாளர்கள், கல்வியியல் கல்லூரிகள் மற்றும் ஆசிரிய பயிற்சிக் கலாசாலை ஆசிரியக் கல்வியலாளர்கள், கல்வி நிர்வாகிகள், பாடசாலை அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் என பன்முகப்படுத்தப்பட்ட ஆய்வாளர்களினால் பல்வேறு தலைப்புக்களில் ஆய்வுக் கட்டுரைகள் முன்வைக்கப்படவுள்ளன   https://globaltamilnews.net/2024/201875/
    • போட்டியில் கலந்துகொண்ட @kalyani யும், @கந்தப்புவும் வெற்றிபெற வாழ்த்துக்கள். இன்னும் 15 மணித்தியாலங்களே இருப்பதனால், யாழ்களப் போட்டியில் விரைவில் கலந்துகொள்ளுங்கள்😀 இதுவரை போட்டியில் இணைந்தவர்கள்: @பையன்26 @முதல்வன் @suvy @ஏராளன் @நிலாமதி @Ahasthiyan @ஈழப்பிரியன் @kalyani @கந்தப்பு  
    • அமெரிக்கா ஏதோ ஒரு விதத்தில் பங்கு எடுக்கும், எடுக்க வேண்டிய நிலை, இஸ்ரேல் ஈரானுக்கு திருப்பி அடித்தால் . (மற்ற திரியில் சொன்னனது போல , இஸ்ரேல் க்கு தெரியும், அமெரிக்கா, மேற்கு பாதுகாப்புக்கு எப்போதும் வரும் என்று. அதை மேற்கும், மீண்டும், மீண்டும் சொல்லுகின்றன. இதுவே பங்கு எடுப்பது. அமெரிக்கா செய்வது, இஸ்ரேல் ஐ பாதுகாப்பத்தற்கு ஈரானின் ஏவுகணனைகளை தடுப்பது act of  war,)   ஈரானின் தூதரகம் மீதான இஸ்ரேல் இன் தாக்குதல் , மேற்கு, குறிப்பாக US க்கு தெரிந்து (அதன் மூலம் 5 கண்கள் உளவு நாடுகளுக்கு - 5 eyes intelligence community தெரிந்து), US ஆமோதித்து, அனுமதித்து  நடத்தப்பட்ட தாக்குதல். ஏனெனில், இஸ்ரேல் இப்படியானவற்றை அமெரிக்காவிடம் சொல்லாமல் செய்வதில்லை. மேலும், France க்கும்  உச அறிவித்து இருக்கும், ஏனெனில், சிரியா பிரான்ஸ் இன் காலனித்துவம்  கீழ் இருந்தது. மற்றது, பிரச்னை வந்தால் செக்யூரிட்டி கவுன்சில் இல் பிரான்ஸ் இந்த உதவி தேவை, ஆனால், இந்த காலனி என்பதே பிரதான  காரணம். இது செக்யூரிட்டி கவுன்சில் இல் எழுதப்படாத  விதி- காலனித்துவ அரசுகளே, முனைய காலணிகளின் இப்போதைய அரசுக்கள் சார்ந்த  விடயத்தில் முன்னுரிமை உள்ளது என்பது .  எனவே, மேற்கு ஆகக்குறைந்தது மறைமுக பங்குதாரர் (கனடா தூதரகத்தை காலி செய்தது அநேகமாக இந்த 5 eyes வழியாகத் தான் இருக்கும்) இஸ்ரேல் சொல்லியது தாக்குதலுக்கு மிகச் சிறிய நேரத்துக்கு முதல் என்று (வேண்டும் என்று) அமெரிக்கா கசிய விட்டு, சில செய்திகள் காவுகின்றன. அனால், தாக்குதலை இஸ்ரேல் 2 மாதமாக திட்டமிட்டது என்று பின் செய்து வந்தது.  கேக்கிறவன் கேணையனாக இருந்தால் ... என்ற அமெரிக்காவின் கதை. (அப்படி US  இடம் சொல்லாமல் இஸ்ரேல் செய்தது, Sinnai மீதான தாக்குதல், கைப்பற்றலும்  , ஆனால், அது பெரிய யுத்தத்தின் ஒரு பகுதி, Egypt முதல் தாக்கி இருந்தது). அமெரிக்காவுக்கு முதலே (ஏற்ற காலத்தில் ) தெரியும் என்றது, newyork times வெளியிட்டு உள்ள இன்னொரு செய்தியானா, அமெரிக்கா, இஸ்ரேல் அதிகாரிகள் ஈரானின் எதிர்பபை குறைத்து மதிப்பிட்டு விட்டார்கள் என்று அதிகாரிகள் அவர்களின் வாயால் சொன்னதாக என்ற செய்தியில்   இருந்து தெரிகிறது.   இதனால் தான் மேற்கு, ஈரானை தடுக்க முனைந்தது. முடியாமல் போக, அது தடுத்தது. un இன் பகுதி charter ஐ குழிதோண்டி புதைத்தன அமெரிக்காவும், அதன் வாலுகளும்.  இதை மேற்கு rule based என்று சொல்லும் என்று நினைக்கிறன்.  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.