Jump to content

`கறுப்புத் தோல் மீது ஏன் இந்த வெறுப்புப் பார்வை? `#being me?'


Recommended Posts

`கறுப்புத் தோல் மீது ஏன் இந்த வெறுப்புப் பார்வை? `#being me?'

பெண்கள் தங்கள் சுயத்துடன் வாழ்வதில் என்னென்ன சவால்களையும், பிரச்சனைகளையும் சந்திக்கிறார்கள் என்று விளக்கும் பிபிசி தமிழின் #beingme தொடரின் முதல் கட்டுரை இது.

`கறுப்பு நிறத்தில் இருப்பது ஒன்றும் குற்றமில்லையே` #beingmeபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

தமிழ் சமூகத்தில், பல சமூக சீர்திருத்தங்களுக்கு வித்திட்ட நிறம் கறுப்பு. ஆனால் மனிதர்கள் கறுப்பாக இருந்தால்? அதுவும் பெண் என்றால்? பார்த்த நொடியில் உங்கள் தகுதி, குணம் என்று எதையும் யோசிக்காமல் உங்கள் நிறத்தை கொண்டு எடைபோட்டு ஒரு முடிவுக்கு வந்து விடுவார்கள்.

நம்மில் பலரும் இதனை பிறர் கூற கேட்டு இருப்போம் "பொண்ணு கறுப்பா இருந்தாலும் கலையாக இருக்கா" என்று. எனக்கு எப்போதும் இது புரிந்ததே இல்லை. இந்த வாக்கியத்தை கூறுபவர்கள் அந்த பெண் அழகாக இருப்பதாக குறிப்பிடுகிறார்களா? அல்லது அந்த பெண் அழகாக இருந்த போதிலும் அவள் கறுப்பு நிறத்தில் உள்ளதால் அதனை ஒரு குறையாக அவர்கள் குறிப்பிடுகிறார்களா? அவ்வாறு அவளது குறையை சுட்டிக் காட்டுகிறார்கள் என்றால் அவளது நிறம் எந்த வகையில் ஒரு குறையாகும்? என்பன போன்ற கேள்விகள் என் மனதில் எப்போதும் ஒடிக்கொண்டிருக்கும். நானும் கறுப்பு நிறத்தில் உள்ள ஒரு பெண் தானே. என்னையும் இப்படித்தான் கூறுவார்களோ? என்று பல நேரங்களில் எண்ணியது உண்டு.

இப்போது பெண்ணியம் பேசும் அனைவரும் பெண்ணின் பெருமைகள் குறித்து போதனை செய்கின்றனர். ஆணுக்கு பெண் சமம் என்று கூறும் அவர்கள் பெண்கள் அனைவரும் சமமாக நடத்தப்படுகிறார்களா? என்ற கருத்து குறித்து சிந்திப்பது இல்லையோ என தோன்றுகிறது.

பீயிங் மீ

என்னை போன்ற ஒரு நடுத்தர குடும்பத்தை சேர்ந்த பெண்ணுக்கு பெண்ணியம் குறித்து நினைக்க நேரம் இல்லை. உலகில் நடக்கும் அநீதிகள் குறித்து எனக்கு கவலை இருந்தாலும் நான் சற்று சிகப்பாக இருந்திருந்தால் எனது திருமணம் குறித்து என் தாய் கவலைப்பட்டிருக்க மாட்டார் என்பதே எனது பெரிய கவலையாக இருக்கும்.

'வெள்ளையாக இருந்து வேறு குறை இருந்தால் பரவாயில்லையா?'

கறுப்பு நிறத்தில் இருப்பது ஒன்றும் குற்றம் இல்லையே என்று எண்ணலாம். ஆனால் நான் பிறந்து வளர்ந்த இந்த நாட்டில் பெண்கள் கறுப்பு நிறத்தில் இருப்பதும் ஒரு வகையான ஊனம் தான். ஒரு பெண் பிறந்த நாளிலிருந்து அவளது நிறம் மூலமாகவே அடையாளம் காணப்படுகிறாள்.

எனது உறவினர் ஒருவருக்கு குழந்தை பிறந்தது. அந்த மகிழ்ச்சியான நிகழ்வில் கலந்து கொள்ள சென்றிருந்தேன். அந்தப் பெண் குழந்தை மிகவும் அழகான கண்களுடன் என்னைப் பார்த்தது.

அப்போது நான் புன்னகையுடன் அந்த குழந்தையின் பாட்டியிடம் சென்று "பெண் குழந்தை மிகவும் அழகாக உள்ளது, வாழ்த்துக்கள்" என்றேன்.

உடனே அந்த குழந்தையின் பாட்டி, "அட போ மா, குழந்தை இப்பவே இவ்வளவு கறுப்பா இருக்கு, வளர வளர ரொம்ப கறுப்பா ஆக போறா, இவள எப்படி கட்டிக் கொடுக்க போறோமோ?" என்று கூற நான் வெறுப்பில் திகைத்து போனேன்.

மனம் பொறுக்காமல் அந்த பாட்டியிடம் "அம்மா, குழந்தை நல்ல சிகப்பா இருந்து கண் தெரியாமல் இருந்தாலோ இல்ல காது கேக்காம இருந்தாலோ இல்ல வேற ஏதாவது குறை இருந்தாலோ பரவாயில்லையா" என்று கேட்டேன். அதற்கு அவர் வாயடைத்து போய் அங்கிருந்து சென்று விட்டார்.

பெண்கள்

"என்ன ஏம்மா கறுப்பா பெத்த?" என்று பல குழந்தைகள் தங்கள் அம்மாக்களிடம் கேட்பதுண்டு. இந்த கேள்விக்கு பின்னால் உள்ள வலியும் வேதனையும் அனைவராலும் புரிந்து கொள்ள முடியாது. தானும் பிறரைப்போல்தான் என்ற உணர்வுடன் இந்த சமூகத்திற்குள் நுழையும் ஒரு குழந்தை நிறத்தால் அடையாளம் காணப்படுவது மிகவும் வேதனையான ஒன்று.

கறுப்பு எந்த விதத்தில் தரக்குறைவு?

போதைப் பொருளுக்கு அடிமை ஆவதைப் போல் நிறத்திற்கு அடிமையாகியுள்ள இந்த சமுதாயத்தை எவ்வாறு மாற்றுவது? சமுதாயத்தை விடுங்கள், என் தாயின் எண்ணங்களையே என்னால் மாற்ற முடியவில்லையே.

ஒரு முறை எனது தாயின் தோழியை ஒரு நிகழ்வில் சந்தித்தோம். அப்போது எனது தாயும் அவரது தோழியும் பேசிக்கொண்டிருக்கும் போது நான் அவர்களது மகளுடன் பேசிக்கொண்டிருந்தேன். அப்போது அவர்கள் இருவரின் உரையாடல் எனது காதில் விழுந்தது.

என் அம்மாவின் தோழி கேட்டார், "எப்படி இருக்கே. உன் பொண்ணு என்ன பண்றா? அவளுக்கு கல்யாணம் நடந்தாச்சா?" என்று. அப்போது என் தாய் எங்கள் இருவரையும் ஒரு நொடி பார்த்து விட்டு அவரது தோழிக்கு பதில் அளித்தார் "என் பொண்ணு கவர்மென்ட் வேலைல இருக்கா, அவளுக்கு இன்னும் கல்யாணம் ஆகல என்றார்".

அதற்கு அவரது தோழி "பரவால்லையே, உன் பொண்ணு நல்ல வேலை வாங்கிட்டா, என் பொண்ணு எந்த வேலைக்கும் போகாம வீட்லயே இருக்கா" என்றார். அதற்கு என் தாய் கூறிய பதிலை நான் என் வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாது.

அவர் "உன் மகளுக்கு என்ன, நல்ல சிகப்பா அழகா இருக்கா, அவள கல்யாணம் செய்ய மாப்பிள்ளைகள் கியூவில் நிப்பாங்க, என் மகளை நினைத்தால்தான் கவலையா இருக்கு, அவள் கறுப்பா இருக்கா, அவளை யார் கல்யாணம் பண்ணிப்பாங்கனு தெரியலையே" என்றார்.

எனக்கு மிகவும் அவமானமாகி விட்டது. நான் அந்த இடத்தை விட்டு நகர்ந்து விட்டேன்.

எத்தனை முறை சிந்தித்தாலும் என் தாயின் தோழியின் மகளை விட எந்த விதத்தில் நான் குறைந்தவள் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. அறிவும் திறமையும் நிறைந்த போதிலும் பெற்றோருக்கு சிரமம் கொடுக்காமல் சம்பாதித்து சொந்தக் காலில் நின்ற போதிலும் நிறத்தை காரணம் காட்டி என்னை மட்டம் தட்டி விட்டார்களே என்ற காயத்துடன் வேதனை கொண்டேன்.

நிறம் ஒரு தகுதியா?

ஆம்! இதுதான் நாம் வாழும் சமுதாயம், சிகப்பாக இருப்பவர்கள் எல்லாம் பணக்காரர்கள் என்றும் கறுப்பாக இருப்பவர்கள் எல்லாம் ஏழைகள் என்றும் நினைக்கும் ஆட்கள் கூட இங்கு உண்டு. வேடிக்கையான மனிதர்கள்.

பெண்கள் வாழ பாதுகாப்பற்ற நாடு இந்தியா என கருத்துக் கணிப்பு முடிவுகள் கூறுகின்றனவே. இதற்காக சிகப்பான பெண்களை வைத்துள்ள பெற்றோர் மட்டும்தான் கவலைப்பட வேண்டுமா என்றுதான் எனக்கு தோன்றியது.

புறத்தோற்றத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும் இந்த சமூகத்தில் கறுப்பு நிறத்தில் உள்ள ஒரு பெண் தன் வாழ்நாள் முழுவதும் அவமானங்களை சந்திக்க வேண்டும். அவள் நன்றாக படித்திருந்தாலும் சரி, நல்ல குணங்கள் இருந்தாலும் சரி, திருமணம் என்று வந்தால் அதுவும் பெரும்பாடுதான்.

ஆனால் இதனால் நான் தளரப்போவதில்லை. நற்குணம் கண்டிப்பாக மதிக்கப்படும். நல்ல பண்புகள் கண்டிப்பாக பாராட்டப்படும். திறமைகள் கண்டிப்பாக கண்டறியப்படும். அழகு அழிந்தாலும் அறிவு அழியாது என்பது உணரப்படும். மனதிற்கும் குணத்திற்கும் வழங்கப்படாத மதிப்பு நிறத்திற்கு வழங்கப்படும் நிலை கண்டிப்பாக மாறும். என்னைப் போன்றவர்களின் தன்னம்பிக்கை இந்த மாற்றத்தை கொண்டு வரும்.

ஹூம்... உங்களுக்கு தெரிந்து இருக்கும். இருந்தாலும் மீண்டும் நினைவூட்டுகிறேன். 'Black Is not a Color to Erase. Its a Race'

(அரசுப் பணியில் இருக்கும் சென்னையை சேர்ந்த பெண் ஒருவரின் அனுபவங்களின் வெளிப்பாடே இந்தக் கட்டுரை. பெண்கள் அன்றாடம் சந்திக்கும் சவால்கள் குறித்து பேசப்படும் இந்த #beingme தொடர் பிபிசி தமிழ் செய்தியாளர் விஷ்ணுப்ரியா ராஜசேகரால் தயாரிக்கப்பட்டது.)

https://www.bbc.com/tamil/india-45388037

Link to comment
Share on other sites

பெரியாரும், அம்பேத்கரும் ஆண்களுக்கு மட்டும்தானா? #beingme

பெண்கள் தங்கள் சுயத்துடன் வாழ்வதில் என்னென்ன சவால்களையும், பிரச்சனைகளையும் சந்திக்கிறார்கள் என்று விளக்கும் பிபிசி தமிழின் #beingme தொடரின் இரண்டாம் கட்டுரை இது.

பெரியாரும், அம்பேத்கரும் ஆண்களுக்கு மட்டும்தானா?படத்தின் காப்புரிமைGETTY IMAGES

நம் தமிழ் சமூகம் முற்போக்கான சமூகம் என்று சொல்லும்போது பெருமை கொள்ளும் நாம், அதிலிருந்து ஒரு பெண் முற்போக்கு சிந்தனையுடன் இருந்தால் அவ்வளவு எளிதாக ஏற்றுக் கொள்வதில்லை.

காலம்காலமாக பெண்களை அடிமைப்படுத்தும் பழக்க வழக்கங்களை எதிர்த்து நின்றாலோ, ஆணுக்கு பெண் அனைத்து வகையிலும் சமம் என்று சொன்னாலோ ஏன் தனக்கு பிடித்த வாழ்க்கையை தேர்ந்தெடுத்தாலோ கூட அவர்கள் இந்த சமூகத்தில் இருந்து தள்ளி வைத்தே பார்க்கப்படுகிறார்கள்.

கதைகளிலும், கவிதைகளிலும் முற்போக்கு பெண் என்றால் வரிந்து கட்டிக் கொண்டு பாராட்டுபவர்கள் எல்லாம் நிஜத்தில் அதை தாங்கிக் கொள்ள முடியாதவர்களாகவே உள்ளனர்.

பத்திரிகைத்துறையில் பணிபுரியும் ஒரு முற்போக்கு சிந்தனையுடைய பெண் நான். பொதுவாக சாதாரண பெண்களை விட முற்போக்கு கொள்கைகளை பின்பற்றுகிற பெண்களிடம் பத்திரிகை துறை நிறையவே எதிர்பார்க்கிறது.

திறமையாக இருந்தாலும் சரி, சமூக பொறுப்பாக இருந்தாலும் சரி. அதற்கு காரணம் அவர்களுக்கு நிறைய விஷயம் தெரிந்திருக்கும்; ஒரு விஷயத்தை அப்படியே நம்பாமல் அதனை பகுத்து பார்ப்பார்கள், சாதாரணப் பெண்களை விட வித்தியாசமான கோணங்களில் சிந்திப்பார்கள் என்ற எண்ணம் பத்திரிகைத்துறையில் இருக்கும் முற்போக்கு எண்ணம் கொண்டவர்களுக்கு மட்டுமல்ல; அத்தகைய கொள்கைகளில் இல்லாதவர்களுக்கு கூட இருக்கும்.

சித்தரிப்புப் படம்படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionசித்தரிப்புப் படம்

முற்போக்கு பேசுகின்ற பெண்கள் மார்க்சியம், பெரியாரியம், அம்பேத்கரியம் என அனைத்தையும் முழுமையாக கரைத்துக் குடித்தவர்களாக இருக்க வேண்டுமென்ற அவசியமில்லை. எல்லோருமே தாத்தா, பாட்டி, அப்பா, அம்மா சொல்லிக் கொடுத்தபடிதான் வளர்ந்திருப்பார்கள்.. பழமையை கேள்வி கேட்காமலேயே ஏற்றுக் கொண்டிருப்பார்கள். முற்போக்கு கருத்துகளை உள்வாங்கும்போது ஆண்டாண்டு காலமாக பின்பற்றி வந்த அறிவுக்கு ஒவ்வாத விஷயங்களை கொஞ்சம் கொஞ்சமாக மாற்றி தன்னை தானே செதுக்கி கொண்டிருப்பார்கள். அன்றாட வாழ்வில் அனிச்சை செயலாக மாறிவிட்ட விஷயங்களை கூட இது தேவையா? இல்லையா என மறு ஆய்வு செய்து கொண்டிருப்பார்கள்.

 

குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால், நொடிதோறும் கற்றுக்கொண்டிருப்பார்கள். இத்தகைய சமயத்தில், அறியாமையின் காரணமாக கொண்ட கொள்கைக்கு எதிரான ஒரு முடிவை எடுத்துவிட்டால் அல்லது ஒரு செயலை செய்துவிட்டால் அது நகைப்புக்குரிய, நம்பிக்கையின்மைக்குரிய விஷயமாக மற்றவர்களால் பார்க்கப்படும்.

"முற்போக்கு கொள்கை நோக்கி நடை போட்டு கொண்டிருக்கிறார்கள், போக போக சரியாகிவிடுவார்கள்" என்ற எண்ணம், தெளிவுள்ள கொள்கையாளர்களுக்கு இருக்கும். ஆனால் மற்றவர்களுக்கு அந்த தெளிவு இருக்காது. சிறு சிறு தவறுகளை சுட்டிக்காட்டி, கொள்கையை பின்பற்ற தகுதி இல்லாதவர் என்பது போல பின்நோக்கி இழுப்பார்கள்.

போராட்டங்களுக்கு மட்டுமே செல்ல வேண்டியவர்கள்?

முற்போக்கு கொள்கைகளை முன்னெடுப்பதால் பல விஷயங்கள் சாதகமாக இருந்தாலும், ஒரு சில பிரச்சனைகளையும் பல சவால்களையும் சந்திக்க வேண்டியிருக்கும். அலுவலகத்தை பொறுத்தவரையில், முக்கிய பொறுப்பில் பணியாற்றும் நபர்களை பொறுத்து, பிரச்சனைகளின் அளவு பெரியதாகவோ, சிறியதாகவோ இருக்கலாம். குறைந்தபட்ச ஜனநாயகம் கொண்டவர்களாக உயர் அதிகாரிகள் இருந்தால்கூட முற்போக்கு பெண்களுக்கான அடையாளம் மதிக்கப்படும். குறைந்தபட்ச ஜனநாயகம் இல்லாத இடத்தில் மாட்டிக்கொண்டால் நிறைய சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

பெரியாரும், அம்பேத்கரும் ஆண்களுக்கு மட்டும்தானா?

தொடங்கும்போதே நம்மை பற்றிய தவறான முன்கணிப்பை வடிவமைத்துக் கொள்வார்கள். சண்டைக்காரி இவர்களுக்கு பேனா முனை சரியாக இருக்காது, இவர்கள் போராட்டங்களுக்கு மட்டுமே செல்ல வேண்டியவர்கள் என்ற மேம்போக்கான கருத்துகளுக்குள் சென்று நம்மை எப்போதுமே நம்பிக்கையற்ற கண்களில் பார்ப்பார்கள். அப்படியான இடங்களில் முக்கிய பொறுப்புகள் ஒப்படைக்கப்படாது; உரிய அங்கீகாரம் கிடைக்காது. நம் ஒவ்வொரு எழுத்தின்மீதும் சந்தேகப்படுவார்கள். இத்தகைய இடங்களை தவிர்ப்பது நலம். அப்படியே தவிர்க்க முடியாமல் அத்தகைய இடங்களில் வேலை பார்க்கும் சூழல் ஏற்பட்டால் சிக்கல்களை எதிர்கொள்ளும் துணிச்சல் இருக்க வேண்டும்.

முற்போக்கு பேசும் பெண்களின் எழுத்து மட்டுமல்ல உடை, நடை, பாவனை, செயல்பாடு என அத்தனையும் உற்று பார்க்கப்படும். ஏன் அதை செய்கிறாய்? இதை செய்கிறாய் என்ற கேள்விகள் சீரியசாகவும், நகைச்சுவையாகவும் வந்து நம்மை பதம் பார்க்கும்..

முற்போக்கு சிந்தனையை ஏற்றுக் கொள்கிறதா இந்த சமூகம்?

இது என்னுடைய சொந்த அனுபவம்.. ஒருமுறை இரவு 10 மணிக்கு மேல் சாலையில் சென்று கொண்டிருந்த போது, சிக்னல் போட்டிருந்த நேரத்தில் யாருமற்ற இடத்தில் என்னை வழிமறித்த ஒருவன் துப்பட்டாவை பிடுங்கி கொண்டு, சில சேட்டைகளை செய்து என்னை அவமானப்பட வைத்தான்.. (இந்த சம்பவம் நடந்து 2 ஆண்டுகளுக்கு மேலாகிறது. அப்போது என்னை அழ வைத்த, அவமானப்படுத்திய அந்த சம்பவம் இப்போது நடந்தால் என்னுடைய நடவடிக்கை வேறாக இருந்திருக்கும், ஏனென்றால் எதற்கு அவமானப்பட வேண்டும்? எதற்கு அவமானப்படக்கூடாது என்பதை 2 ஆண்டுகளில் தான் நான் கற்றிருக்கிறேன்.)

முதல் நாள் பாதிப்பில் இருந்து மீளாமல் மறுநாள் அலுவலகத்திற்கு சென்ற நான், மதிய பணிக்கு சீக்கிரம் வந்துவிட்டு இரவு 9 மணிக்கு கிளம்பிவிடுகிறேன் என்று உயர் அதிகாரியிடம் கூறினேன்.. அவருக்கும் எனக்கும் ஏற்கெனவே கொஞ்சம் கருத்து வேறுபாடு இருந்த நிலையில், என் கோரிக்கைக்கு அவர் பதில் சொல்லவில்லை. நான் அந்த இடத்தில் இருந்து சென்றதும்,”இதுகிட்டவெல்லாம் யாராவது வம்பிற்கு வருவார்களா? சீக்கிரம் வீட்டிற்கு போக வேண்டுமென்பதற்காக ஏமாற்றுகிறாள்'' என்று கூறியுள்ளார். முதல்நாள் சந்தித்த அவமானத்தை விட, மறுநாள் உயர் அதிகாரியாய் இருந்தவர் நடந்து கொண்ட விதம் என்னை எரிச்சலடைய வைத்தது.

பீயிங் மீ

தன்னை விட பெண் எல்லா விஷயத்திலும் கொஞ்சம் குறைந்தவள் என்ற எண்ணம் இந்த சமூகத்தில் பெரும்பான்மையான ஆண்களுக்கு உண்டு. பத்திரிகை மற்றும் மீடியாத்துறையும்கூட அதற்கு விதிவிலக்கல்ல. முற்போக்கு பேசும் பெண் எப்போது சறுக்கி விழுவாள் என்று அவர்கள் எதிர்பார்த்துக் கொண்டே இருப்பார்கள். நேராக வாக்குவாதம் செய்து வீழ்த்த நினைப்பது ஒரு வகை என்றால், நம் முன் சிரித்து பேசிவிட்டு, பின்புறம் திமிர் பிடித்தவள் இப்படித்தான் வேண்டுமென்று சிரித்து மகிழும் நபர்களோடு தான் நாம் தினமும் நடைபோட வேண்டும்…

முற்போக்கு பேசும் பெண்களை கண்டால் பெரும்பான்மையான ஆண்களுக்கு பிடிப்பது இல்லை.. நீயும், நானும் சமம் என்றாலே சண்டைக்கு வந்துவிடுவார்கள்..

சமூகத்தில் ஆணும், பெண்ணும் சமமாக பார்க்கப்பட்டிருந்தால், மதிக்கப்பட்டிருந்தால் பெண்களை பொருளாக பார்க்காமல், சக மனுஷியாக பார்த்திருப்பார்கள். ஆனால் துர்வாய்ப்பாக சிறு வயது முதலே பெண்ணை சமமாக மதிக்கும் போக்கை இந்த சமூகம் கற்றுக் கொடுப்பதில்லை.

இத்தகையவர்களை சந்திக்கும்போது வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் நமக்கு உறுத்தும் விஷயத்தை, அவர் சரியென நினைத்துக்கொண்டிருக்கும் விஷயத்தை தவறு என போட்டுடைக்க வேண்டும். ஒருவேளை அந்த இடத்தில் நாம் அமைதியாக இருந்துவிட்டால், அவர் செய்யும் தவறு சரியாகிவிடும், எதிர்ப்பை பதிவு செய்யாமல் இருந்தால் நாம் அதற்கு உடந்தை என்றாகிவிடும்.

குடும்பங்களின் ஆதரவு கிடைக்கிறதா?

முற்போக்கு பேசுகின்ற பெண்களை இந்த சமூகம் எப்படி பார்க்கிறது.... குடும்பங்களும், உறவுகளும், சுற்றியிருக்கிற மக்களும் சேர்ந்து தான் சமூகமாகிறார்கள்.. எனவே வழக்கம்போல குடும்பத்தில் கிடைக்கும் மரியாதையே சமூகத்திலும் கிடைக்கும்.. அலுவலகத்தில், பொது வெளியில் சந்திக்கும் சவால்களுக்கு இணையாக குடும்பத்திலும் முற்போக்கு சிந்தனையுடைய பெண்கள் பல சவால்களை சந்திக்க நேரிடும்.

பெரியாரும், அம்பேத்கரும் ஆண்களுக்கு மட்டும்தானா?படத்தின் காப்புரிமைGETTY IMAGES

ஆம் குடும்பம்... முற்போக்கு பெண்களை பின்னுக்கு இழுக்கும் விஷயமாகத்தான் இன்றளவும் உள்ளது. ஓரளவு முற்போக்கு கொள்கைகளை கொண்ட குடும்பங்களில் இருந்து வரும் பெண்கள் சமாளித்துவிட முடியும். அவர்களுக்கு குடும்பங்களில் பெரிய தடைகள் இருக்காது.. தடைகள் இருந்தாலும் பெரிய அளவில் பாதிக்காது. ஆனால் எந்தவித கருத்தியலும் இல்லாத சாதாரண குடும்பங்களில் இருந்து வரும் பெண்கள் மிகப்பெரிய சோதனைகளை சந்திக்க வேண்டியிருக்கும்.

அத்தகைய குடும்பங்களில் இருந்து பெண்கள் முற்போக்கு நோக்கி வெளியே வருவதே குதிரைக்கொம்பு. அப்படியும் வெளிவந்துவிட்டால் அவளை இயங்கவிடாமல் தடுக்க ஆயிரக்கணக்கான விஷயங்கள் முளைக்கும். ஒவ்வொரு நாளையும் நகர்த்துவதே மிகப்பெரிய சவாலாக இருக்கும்.

முற்போக்கு பேசும் பெண்கள் வாழ்க்கையில் எத்தனை உயரத்திற்கு போனாலும் திமிர்பிடித்தவள்.. அடங்காதவள் என்ற பெயரே பெரும்பாலான நேரங்களில் மிஞ்சுகிறது. முற்போக்கு பெண்களோடு வாழும் பக்குவம் முற்போக்கு பேசும் ஆண்களுக்கு கூட அத்தனை சீக்கிரம் வந்து விடுவதில்லை…

திருமணம்…. முற்போக்கு பெண்களுக்கு சவாலான மற்றொரு விஷயம். திருமணம் என்பது ஆணுக்கும், பெண்ணுக்கும் அவசியமான ஒன்று என்றே இந்த சமூகம் கட்டமைத்திருக்கிறது. பழமையான வழிகாட்டுதலில் 20 ஆண்டுகளுக்கு மேல் வளரும் பெண்கள், முற்போக்கு கருத்துகளால் ஈர்க்கப்பட்டாலும் கூட அவர்களால் திருமணத்தை ஒதுக்கி வைக்க முடியாது. தனது கொள்கைக்கு ஏற்ற ஒருவரை தேடி குடும்பத்தாரிடம் அனுமதி பெற்று வாழ்க்கை அமையும் என்பதெல்லாம் கனவில் நடப்பது போன்றவையே.

 

 

பெண்ணுக்கு முற்போக்கான துணைவர் தேவையென நினைத்தால் அவரது குடும்பத்தினருக்கோ சாதி, மதம், அந்தஸ்து போன்றவை இணையாக இருக்க வேண்டும். ஏதோ ஒருகட்டத்தில் வீட்டில் காட்டும் நபரை திருமணம் செய்து கொண்டால் வாழ்க்கை நரகம் தான்… முற்போக்கையெல்லாம் மூட்டை கட்டி வைத்துவிட்டு சாதாரண வாழ்க்கையை தொடர வேண்டியது தான்.

முற்போக்கு பேசும் பெண்களின் மிகப்பெரிய ஆறுதல் வீட்டில், வேலையில், குடும்பத்தில் என எந்த இடத்தில் சிக்கல் என்றாலும் ஆறுதல் படுத்திக்கொள்ள நண்பர்கள் இருப்பார்கள்.

நண்பராக இருக்கும் நபர் முற்போக்கு கொள்கை கொண்டவராக இருந்தாலும், அவ்வாறு இல்லாவிட்டாலும் கூட ஆறுதல் தருபவராக இருப்பர். நம் மீது அக்கறை கொள்வர்… நம்மோடு நட்பு கொள்வதை பெருமையாக உணர்பவர்கள் நட்பை தொடர்வார்கள்… அவ்வாறு இல்லாதவர்கள் நம்மை விட்டு ஒதுங்கியே இருப்பார்கள்…

மொத்தத்தில் குடும்பத்தில், பணியில், சமூகத்தில் என எந்த இடமாக இருந்தாலும், முற்போக்கு பேசும் பெண்கள் ஒவ்வொரு நாளும் தன்னை செதுக்குபவர்களாகவும், தன்னை சுற்றியிருப்பவர்களை செதுக்குபவர்களாகவும் வலம் வருவார்கள்…

(தனியார் ஊடகம் ஒன்றில் பணியில் இருக்கும் சென்னையை சேர்ந்த பெண் ஒருவரின் அனுபவங்களின் வெளிப்பாடே இந்தக் கட்டுரை.பெண்கள் அன்றாடம் சந்திக்கும் சவால்கள் குறித்து பேசப்படும் இந்த #beingme தொடர் பிபிசி தமிழ் செய்தியாளர் விஷ்ணுப்ரியா ராஜசேகரால் தயாரிக்கப்பட்டது.)

https://www.bbc.com/tamil/india-45380925

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

பெண்கள் சமூக வலைதளங்களில் தீவிரமாக செயல்பட்டால் என்ன தவறு? #beingme

பெண்கள் தங்கள் சுயத்துடன் வாழ்வதில் என்னென்ன சவால்களையும், பிரச்சனைகளையும் சந்திக்கிறார்கள் என்று விளக்கும் பிபிசி தமிழின் #beingme தொடரின் மூன்றாவது கட்டுரை இது.

முகநூல்

சமூகவலைதளங்களில் முக்கியமானதாகக் கருதப்படும் ஃபேஸ்புக்கில் கிட்டத்தட்ட ஐந்து வருடங்களாகத் தொடர்ச்சியாக இயங்கி வருகின்றேன். நான் பார்த்த விதத்தில் பெண்களுக்கு சமூகவலைதளங்களில் நிகழும் சாதகமான விளைவுகளையும் எதிர்மறையான அனுபவங்களையும் ஒரு விவாதப் பொருளாக எடுத்து கொள்ளலாம். முதலில் சாதகமானவற்றைத் தெளிவுபடுத்திவிடுகிறேன். ஏனெனில் நேர்மறையான விளைவுகள் மிகக் குறைவு. எனவே அதை அடிக்கோடிட்டு முதன்மைப்படுத்துவது நல்லது.

எழுத்துகள் மூலம் கருத்து பரிமாற்றம்

சென்ற தலைமுறைப் பெண்களுக்குக் கிட்டாத ஒரு வாய்ப்பு எழுத்து மூலம் பொதுவெளியில் கருத்து பரிமாற்றம் நிகழ்த்துவது ஆகும். பெரும்பாலும் தோழிகளுக்குக் கடிதம் எழுதும் அளவிற்கு எழுதுபொருள் சுருங்கியதாக இருந்திருக்கும். பெண் எழுத்தாளர்கள் என்று சொல்லப்படுபவர்கள்கூட விரல்விட்டு எண்ணக்கூடிய அளவிற்கே இருந்தனர்.

ஆனால் சமூக வலைதளங்கள் வந்தபின் அத்தகைய இடர்கள் குறைந்து எழுத்துமொழி பெருமளவில் பயன்படுத்தப்படுகிறது. பத்தில் ஆறு பெண்களாவது எழுதக்கூடியவர்களாக இருக்கின்றனர். இவ்விடத்தில் என்ன எழுதுகிறார்கள் என்பது முக்கியமன்று. எழுத்து மூலம் கருத்துப் பரிமாற்றம் நிகழ்வது அதிகரித்திருக்கின்றது. மேலும் எழுதவேண்டும் என்கிற ஆர்வத்தினால் பல பெண்கள் புத்தகங்கள் வாசிக்கின்றனர்.

பிபிசிபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

பெண்கள் அரசியல் பேசுவதும் இலக்கியம் பேசுவதும் கடந்த நான்காண்டுகளில் சரசரவென அதிகரித்ததில் சமூகவலைதளங்களுக்குப் பெரும்பங்கு உள்ளது. அதேபோல எழுத்தாளராக அங்கீகரிக்கப்படுவது சாதாரண விஷயமன்று. ஆனால் இன்று ஃபேஸ்புக்கில் எழுதியோ ப்ளாக்கில் எழுதியோ பின்பு அவற்றைத் தொகுத்து எளிதாக எழுத்தாளர் என்று அறியப்படலாம்.

நம் படைப்புகளை விளம்பரம் செய்வதற்கும் நம்முடைய துறைசார்ந்தவர்களை அணுகுவதற்கும் இத்தளங்கள் ஒரு தொலைதொடர்பு காரணியாக இருக்கின்றன. மேலும் எனக்கு வருகின்ற விமர்சனங்களையும் பாராட்டுகளையும் நான் நேரடியாகப் பெற்றுக்கொள்ள முடிகிறது. இவ்வளவு நன்மைகள் இருப்பினும் இதில் இரண்டுபங்கு எதிர்மறை அனுபவங்கள் சமூகவலைதளங்களில் தொடர்ச்சியாக இயங்கும் அனைத்துப் பெண்களுக்கும் கிடைத்திருக்கும்.

எதிர்மறை அனுபவங்கள் அதிகம்

எதிர்மறை அனுபவங்களில் முதலாம் இடம் வகிப்பது பாலியல் வசை. உடல் ரீதியான விமர்சனங்கள், பகடிகள், தவறாகச் சித்தரித்தல் போன்றவை பெண்கள் வழக்கமாக எதிர்கொள்பவை. முதன்முறையாகத் தாக்கப்படும்போது பல பெண்கள் இங்கிருந்து கணக்கை மூடிவிட்டு கிளம்பிவிடுகின்றனர். ஏனெனில் பொதுவாழ்க்கைக்கு வரும் பெண்கள் தங்களது தனிப்பட்ட குடும்ப வாழ்க்கையிலும் சிரத்தை எடுத்துக்கொள்ள வேண்டியுள்ளது.

பீயிங் மீ

பெண்ணுக்கான பெயர் பாலியல் ரீதியாக சிதைக்கப்படும்போது அது அக்குடும்பச்சூழலை பெரிதும் பாதிக்கும் காரணியாக உள்ளது. திருமணமாகாத பெண்கள் எனில் அவர்களது தாய் தந்தையை பாலியல் ரீதியாகத் திட்டுவது, குடும்பப் பெண் எனில் அவள் சுயஒழுக்கத்தைக் கேள்விக்குறியாக்குவது என்று இங்கு பாலியல்ரீதியான தாக்குதல்கள் ஏராளம்.

இதைச் செய்பவர்கள் பெரும்பாலும் முகம் மறைத்துத் தாழ்வுணர்வில் போலிக்கணக்குகளில் இயங்கி வருபவர்கள். இவர்கள் ஏதேனும் ஒரு பெண் சுதந்திரமாக ஏதாவது கருத்தை முன்வைத்தால் அந்தக் கருத்தை நோக்கி எதிர்விவாதம் வைக்க மாட்டார்கள். உருவகேலி, ஒழுக்கப்பகடி, வசைகள் முதலியவற்றில் ஈடுபட ஆரம்பிப்பார்கள். இதற்குத் தீர்வாக ப்ளாக் செய்துவிடுங்கள் என்கிற அறிவுரைகளைப் பொதுவெளியில் கேட்கலாம். நாம் ப்ளாக் செய்வதால் அந்தப் போலிக்கணக்கர் அமைதியாகிவிடப்போவதில்லை.

இதேபோல மற்றொன்று, குழுவாக இணைந்து நம்மை வசைபாடுவது. இதில் பெண்களும் உள்ளடக்கம். காரணமற்ற வன்மங்கள் அல்லது சுயகழிவிரக்கம் முதலியவை இத்தகைய வசைபாடல்களுக்கு இவர்களை அழைத்துச்செல்கிறது. பெண்கள் இங்கு ஓரளவு இவற்றைப் புரிந்துகொண்டு தன்விருப்பத்தின் பேரில் தொடர்ந்து இயங்கிவந்தால் மனிதர்கள் எத்தனை கேவலமானவர்கள் என்பதை அறியலாம்.

 

 

சமூக வலைதளங்கள் மானுடம் மீது அசூயை கொள்ள வைக்கும். ஒவ்வொருவரிடமும் இருக்கின்ற நஞ்சை ஒவ்வொரு தருணத்தில் அறியலாம். மேலும் பெண்களுக்கு எதிராக இப்படியோர் உலகம் தீவிரமாக இயங்கிக்கொண்டிருக்கிறதா என்கிற வியப்பும் ஏற்படும்.

பிபிசிபடத்தின் காப்புரிமைBBC SPORT

பெண் என்கிற காரணத்தினால் வரும் மற்றொரு எதிர்விளைவு ஃபாலோயர்களின் விருப்பம். அவர்களது விருப்பம் வெறும் தற்படங்களும் புகைப்படங்களும் மட்டுமே. ஒரு கனமான இலக்கியம்சார் கட்டுரையோ கவிதையோ எழுதினால் கண்டுகொள்ளப்படுவதில்லை. பெண் பொதுவெளிக்கு வந்தால் அவள் அழகைக் கடந்து படைப்புகளை கவனிக்கத் தவறுகின்றனர். இது லாபமான விஷயம்தானே என்று கருதக்கூடும். மேலோட்டமாகப் பார்த்தால் அவ்வாறு தோன்றும். ஆழமாகச் சிந்திக்கும்போது பெண்களை அறிவுசார் தளத்தில் சுதந்திரமாக இயங்கிட மறைமுக எதிர்ப்புதான் இத்தகைய அழகு சார்ந்த ஆராதனைகளும் பாராட்டுகளும்.

இப்போது புதிதாக உருவாகியிருக்கும் மோசமான தாக்கம் ட்ரெண்டிங்கும் கொள்கைசார் சண்டைகளும். இன்றைய டிரெண்டிங் ஓர் அரசியல்வாதியின் பேச்சு என்றால் அதுகுறித்து கட்டாயம் பகடியோ எள்ளலோ செய்திருக்க வேண்டும். இல்லை அந்நேரத்தில் கவிதையோ வேறு ஏதோ எழுதினால் வசைக்குள்ளாவோம்.

அடுத்து அடிப்படைவாதம் மற்றும் பகுத்தறிவுக் கொள்கைகளால் இரண்டு பிரிவாக நின்று எந்தக் கருத்தையும் ஆராயாமல் முட்டாள்தனமாக ஒருவரையொருவர் சாடி எழுதும் வழக்கம். உதாரணமாக நம் வழியில் சுதந்திரமாக எழுதிக்கொண்டிருப்போம். நம்மிடம் வந்து ஒரு கொள்கையைத் திணித்து இதுதான் சுதந்திரம் என வகுப்பெடுக்க ஆரம்பிப்பார்கள். நாம் கேட்கவில்லை எனில் அடிப்படைவாதியாக முத்திரை குத்தப்பட்டு ஒவ்வொருமுறையும் மோசமாக சித்தரிக்கப்படுவோம். இதுதான் உங்கள் கருத்தியலா என்று கேள்வி கேட்டால் அந்தப் பெரிய மனிதரின் படத்தை முகப்புப் படமாக வைத்துக்கொண்டு நம் குடும்பத்தையும் சேர்த்து வசைபாடுவார்கள்.

being me

இதிலிருந்து மீள்வது எப்படி என்கிற கேள்வி அனைவருக்கும் எழும். உங்களை வசைபாடத் துவங்கினால் பதிலுக்கு நாமும் அதேமாதிரி கெட்டவார்த்தையில் அவர்களது குடும்பத்தை இழுத்தால் போதும் அடங்கிவிடுவார்கள். ஏனெனில் இங்கு பெண்கள் கெட்டவார்த்தை பேசமாட்டார்கள் என்கிற மூடநம்பிக்கை ரொம்பக்காலமாக இருக்கின்றது. அதிலும் நல்ல குடும்பத்துப் பெண்கள் என்று ஓர் உயர்வு நவிற்சியினை உருவாக்கிக்கொள்வர்.

மேலும் இங்கு சைபர் குற்றப்பிரிவு, பணமோசடிகளில் துரிதமாக இயங்கிக் குற்றவாளிகளுக்கு தண்டனையளிக்கும் அளவிற்கு பெண்கள் மீது நிகழ்த்தப்படும் சைபர் குற்றங்களில் ஆர்வம் காட்டப்படுவதில்லை. ஒருவன் ஒரு பெண்ணை பாலியல் ரீதியாக உருவகேலியாகத் தவறாகப் பேசுவதற்கோ எழுதுவதற்கோ பயப்படும் அளவிற்குச் சட்டங்கள் கடுமையாக்கப்பட வேண்டும். போலிக்கணக்குகளை முடக்குவதில் அரசு தீவிரம் காட்டினால் பெண்கள் மீது நிகழ்த்தப்படும் சைபர் குற்றங்கள் பெருமளவில் குறையும். பெண்களின் சுதந்திரமும் பாதுகாப்பும் சமூகவலைதளங்களிலேயே கேள்விக்குள்ளாகும் நிலையில் பெண்களுக்குப் பாதுகாப்பற்ற நாடுகளில் முதலிடத்தில் இந்தியா இருப்பதில் வியப்பேதும் இல்லை.

(சமூக வலைதளங்களில் தீவிரமாக செயல்பட்டு வரும் பெண் ஒருவரின் அனுபவங்களின் வெளிபாடே இந்தக் கட்டுரை. பெண்கள் அன்றாடம் சந்திக்கும் சவால்கள் குறித்து பேசப்படும் இந்த #beingme தொடர் பிபிசி தமிழ் செய்தியாளர் விஷ்ணுப்ரியா ராஜசேகரால் தயாரிக்கப்பட்டது.)

https://www.bbc.com/tamil/india-45532182

Link to comment
Share on other sites

திருமணம் மட்டுமே பெண்களின் வாழ்க்கையா? -தடைகளை தகர்த்த பெண்ணின் கேள்வி #beingme

பெண்கள் தங்கள் சுயத்துடன் வாழ்வதில் என்னென்ன சவால்களையும், பிரச்சனைகளையும் சந்திக்கிறார்கள் என்று விளக்கும் பிபிசி தமிழின் #beingme தொடரின் நான்காவது கட்டுரை இது.

ஆண்களுக்கு ஒரு விதி, பெண்களுக்கு விதி; ஏன் இன்னும் சமூகம் மாறவில்லை? #beingme

இந்த சமூகத்தில் ஆளுமையில் ஆணுக்கும் பெண்ணுக்கும் என்று பல்வேறு சட்டதிட்டங்கள், வரையறைகள் என்று தனித்தனியே தீர்மானிக்கப்படுகிறது. இதைத்தான் நான் படிக்க வேண்டும், இதைத்தான் நான் செய்ய வேண்டும், இப்படித்தான் இருக்க வேண்டும் என்று பல்வேறு நிபந்தனைகள். இதில் கொஞ்சம் முரண்படும்போது நான் உடையத்தான் வேண்டி இருக்கிறது.

பெண் என்றாலே நிரந்தரமாக, எந்த பிரச்சனைகளும் இல்லாத clerical work செய்வதைதான் எனக்கு விரும்பி தரக்கூடிய பணியாக இருந்தது. அதைத்தாண்டி சுயமாக சுய தொழில் மேற்கொள்ளும் போது இடர்பாடுகள் அதிகமாகத்தான் இருந்தது. நான் நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவள். கிராமத்திலும் சேராத பெருநகரத்திலும் சேராத தஞ்சை தான் என்னுடைய சொந்த ஊர்.

சமூக பணியில் முதுகலை பட்டம் பெற்று பதிமூன்று ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது.

முதுகலை படிப்பு மேற்கொள்வதே குதிரைக் கொம்பாக இருந்த நாட்களில் சமூக பணியில் முதுகலை படிப்பு என்பது சாதாரணமாக கிடைக்கவில்லை, சில வார அசாதாரண விரதத்திற்கு பின்னே கிடைத்தது.

கண்ணாடி கதவுகள்

சமூக பணித்துறை என்பது மலர்கள் போல மென்மையான பாதையில் அமையவில்லை. வேள்விகள் நிறைந்ததாகவே இருந்தது. என்னுடைய முதல் பணி சுனாமி நிவாரணம் மற்றும் வாழ்வாதார பணியாகும்.

ஆண்களுக்கு ஒரு விதி, பெண்களுக்கு விதி; ஏன் இன்னும் சமூகம் மாறவில்லை?படத்தின் காப்புரிமைERHUI1979

இந்தப் பணி காலையில் ஒன்பது மணிக்கு சென்று மாலையில் ஐந்து மணிக்கு திரும்பக்கூடிய பணி கிடையாது. மக்கள் தங்கள் வீடுகளுக்கு திரும்பும் நேரம் என்னுடைய பணி ஆரம்பமாகும். கால நேரமின்றிதான் இந்த வேலையை பார்க்க வேண்டும். வீட்டில் உள்ளவர்களுக்கு புரிய வைப்பது குதிரைக்கொம்பாக இருக்கும் பட்சத்தில் இந்த சமூகத்தின் பார்வை ஏளனம் நிறைந்ததாகத்தான் இருந்தது.

எல்லாவற்றையும் எல்லா நேரங்களிலும் புரிய வைப்பது என்பது இயலாத காரியம்தான், அதனாலே என்னுடைய சொந்த ஊரை தவிர்த்து மற்ற ஊர்களில் வேலை செய்தேன்.இப்படி பத்து ஆண்டுகள் நான் அரசு மற்றும் அரசுசாரா தொண்டு நிறுவனங்களில் வேலை பார்த்தேன். அதில் உயர் பதவி என்பது எட்டாக்கனியாகத்தான் இருந்தது.

நான் பத்தோடு பதினொன்றாக இருக்க விருப்பமில்லை, என்னை தனித்து அடையாளப்படுத்தவே விரும்பினேன்.

பெண்கள் இந்த சமூகத்தில் தனக்கென தனிமுத்திரையை பதிப்பது என்பது கண்ணாடி கதவுகளில் நடந்து செல்வது மாதிரிதான் இருந்தது.

தற்போது நான்கு ஆண்டுகளாக சுயமாக குழந்தைகள் மற்றும் பெற்றோருக்கான உளவியல் நிறுவனம் நடத்தி வருகிறேன்.

#beingme

இப்படி நான் என்னுடைய அனுபவங்களின் வருடங்களை கூறும்போதே என்னுடைய வயதினை மனவோட்டத்தில் கணக்கிட ஆரம்பித்து இருப்பீர்கள். இப்படி நீங்கள் யோசிக்காமல் இருந்தால் மட்டுமே ஆச்சரியம். பணி நிமித்தமாக பல நபர்களை சந்திக்க வேண்டி இருக்கிறது. அதில் என்னுடைய அனுபவங்களை பகிரும் போது பதிமூன்று வருடங்கள் அனுபங்களா? என்று ஆச்சரியத்துடன் பார்க்கும் உலகம் அடுத்தது அப்படியானால் உங்கள் வயது முப்பதிற்கும் மேல் இருக்குமே,உங்களுக்கு திருமணம் ஆகிவிட்டதா?இல்லையெனில் ஏன் இன்னும் திருமணம் செய்யவில்லை என மகாபாரதத்தில் வில்வேந்தன் அர்ச்சுனனின் அம்புகள் போல் சரமாரியான கேள்விகள் என்னிடம் கேட்கப்படாமல் இல்லை.

ஆரம்பத்தில் இந்த கேள்விகள் என்னை பெரும் சங்கடத்துக்கு உள்ளாக்கியது என்றே சொல்ல வேண்டும். ஏன் கொஞ்சம் கலக்கலமும் கூடவே இருந்தது, ஆரம்பத்தில் அதை எதிர்கொள்ள தெரியாமல் தவித்தேன்.

துரத்தும் கேள்விகள்

ஆண்களுக்கு ஒரு நியாயம் பெண்களுக்கு ஒரு நியாமா

நம்முடைய இந்தியாவில் பெண்ணின் திருமண வயது 21 ஆக இருக்கும் பட்சத்தில் முப்பதையும் கடந்து திருமணம் ஆகாமல் இருக்கும் என்னை ஆச்சரியமாகவும் ஏதோ குறை இருக்கிறதா என்று காண்பதையும் தாண்டி உங்கள் உணர்ச்சிகளை எவ்வாறு கட்டுப்படுத்துகிறீர்கள் என்று கூட கேள்வி கேட்பவர்களும் உண்டு.

ஊருக்கு ஊர் மனிதர்களின் பழக்க வழக்கங்கள் மட்டுமே மாறுபட்டதே தவிர கேள்வி கேட்கும் மனிதர்கள் எல்லா ஊர்களிலும் இருந்தார்கள்.

இதை நான் எப்படி எதிர்கொண்டு இருப்பேன்?... கண்டிப்பாக எல்லோருக்கும் எழக்கூடிய கேள்விதான் , உளவியல், சமூகபணி இப்படி இரண்டிலும் முதுகலை பட்டம் பெற்றாலும் இந்த மாதிரியான கேள்விகள் வரும்போது அபிமன்யு சக்கரவியூகத்தில் மாட்டிக்கொண்டு தவித்த நிலையில் தான் நானும் இருந்தேன்.

ஓர் ஆண் எத்தனை வயது வரை வேண்டுமானாலும் திருமணம் ஆகாமல் இருக்கலாம். ஆனால் அவன் சாதிக்க இந்த உலகம் கைக்கொடுக்கிறது. திருமணம் ஆகாமல் ஒரு பெண் தன்னுடைய வேலையில் சாதனை புரிய வேண்டும் என்று நினைக்கும் பொழுது ஒவ்வொரு முறையும் அத்தனை சறுக்கல்கள், கேளிக்கை பார்வைகள் தான் வந்துவிழுகிறது.

என் வாழ்க்கை பக்கங்களை பிறர் ஏன் முடிவு செய்ய வேண்டும் ?

அழுவதும் கவலைகொள்வதும் பெண்களின் இயல்பு கிடையாது என்பதை உணர்ந்த நான் அதிலிருந்து எவ்வாறு விடுபட வேண்டும் என்பதை முடிவு செய்தேன்.

பின் என்னுடைய சந்தோஷங்களையும் துக்கங்களையும் மற்றவர்களின் கேள்விகள் முடிவு செய்யக்கூடாது என்று தீர்மானம் எடுத்தேன்.

முதல் தகுதியாக நான் என்னை காதலிக்க ஆரம்பித்தேன், என்னுடைய விருப்பம் என்ன, என் இலக்கை அடைய நான் என்ன செய்ய வேண்டும் என்னுடைய வாழ்க்கையை நான் மட்டுமே சிறப்பாக வாழவும் என்னுடைய வாழ்க்கை பக்கங்களை என்னால் மட்டுமே சுவாரஸ்யமாக எழுதவும் முடியும் என்று தீர்மானம் செய்தேன்.

என்னுடைய இலக்கினை அடைய தடைகளை ஒதுக்கித் தள்ளி, சிறகுகள் கொண்டு பறக்க துவங்கினேன்; பறந்து கொண்டே இருக்கிறேன் வெற்றி கனியை பறிக்கும் உந்துதலோடு.

திருமணம் மட்டுமே பெண்களின் வாழ்க்கையா?

நான் சமூக பணி பயின்றதால் எனக்கும் என் சமுதாயத்தின் மீதான அக்கறை அதிகமாகவே உண்டு, பல இடர்களை கடந்து தொண்டு நிறுவனம் ஒன்றை நிறுவியுள்ளேன். அதில் ஒரு பணியாக இன்று அழிந்து கொண்டு இருக்கும் தமிழர்களின் மரமான பனை விதை விதைக்கும் முயற்சியிலும் ஈடுபட்டு வருகிறேன்; பெற்றோர் மற்றும் மாணவர்களுக்கான உளவியல் ஆலோசகராகவும் பணியாற்றி வருகி்றேன்.

இதற்காக நான் பெரிதாக விளம்பரம் செய்யவில்லை, சமூக பணி எனக்கு பிடித்த ஒன்று மனம் விரும்பி அதை மேற்கொண்டு வருகிறேன் எனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து கேள்வி கேட்பவர்களுக்கெல்லாம் எனது லட்சியம் குறித்தோ கனவுகள் குறித்தோ கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை ஆனால் நான் மகிழ்ச்சியுடன் எனது பணியை செவ்வனே செய்து வருகிறேன்.

திருமணம் என்பது ஒருவரது தனிப்பட்ட விருப்பு வெறுப்பு சார்ந்தது பெண்களுக்கும் தங்களது திருமணம் குறித்து முடிவு செய்ய அனைத்து சுதந்திரமும் உண்டு.

கேள்விகள் பல துளைத்தாலும், நமது இலக்கு குறித்து நாம் உறுதியாக இருத்தலும் அதற்கான உழைப்பை தருவதுமே நான் கொண்ட நோக்காக இருக்க வேண்டும் என்பதில் நான் உறுதியுடன் இருக்கிறேன்.

(சமூக பணியில் இருக்கும் தஞ்சாவூரை சேர்ந்த பெண் ஒருவரின் அனுபவங்களின் வெளிப்பாடே இந்தக் கட்டுரை. பெண்கள் அன்றாடம் சந்திக்கும் சவால்கள் குறித்து பேசப்படும் இந்த #beingme தொடர் பிபிசி தமிழ் செய்தியாளர் விஷ்ணுப்ரியா ராஜசேகரால் தயாரிக்கப்பட்டது.)

 

https://www.bbc.com/tamil/india-45614131

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 3 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 31 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.