Jump to content

60 ஆண்டுகள் நாடோடி மன்னனும்: எம்ஜிஆருக்கு ராசியான 22-ம் தேதியும்


Recommended Posts

60 ஆண்டுகள் நாடோடி மன்னனும்: எம்ஜிஆருக்கு ராசியான 22-ம் தேதியும்


 

 

nadodi-mannan-and-60-years

 

"இந்தப் படம் ஓடினால் நான் மன்னன், ஓடாவிட்டால் நாடோடி" என்று சொல்லி அடித்தவர் எம்.ஜி.ஆர். ஆம், நாடோடி மன்னன் படத்தைப்பற்றிதான் அவர் இப்படிப் பேசியிருந்தார். 

நாடோடி மன்னன் திரைப்படம் 1958 ஆகஸ்ட் 22-ம் தேதி வெளியானது. இத்திரைப்படம் வெளியாகி இன்றுடன் 60 ஆண்டுகள் ஆகிவிட்டன. நாடோடி மன்னன் படத்துக்கு பல சிறப்புகள் உண்டு. அதேபோல் எம்ஜிஆருக்கும் 22-ம் தேதிக்கும் ஒப்பிட்டுச் சொல்ல பல சிறப்புகள் உண்டு.

 

கனவு நனவானது:

'மலைக்கள்ளன்', 'அலிபாபாவும் 40 திருடர்களும்', 'மதுரை வீரன்', 'தாய்க்குப் பின் தாரம்' என்று வெற்றிப் படிகளில் ஏறி புகழின் உச்சியில் இருந்த எம்.ஜி.ஆர். நடிப்பதற்காக பல் வேறு படவாய்ப்புக்கள் காத்திருந்தன. ஆனால், அதையெல்லாம் ஒதுக்கிவிட்டு தனது முழு கவனத்தையும் 'நாடோடி மன்னன்' படம் எடுப்பதில் திருப்பினார் எம்.ஜி.ஆர்.!

1534933340.jpg

இந்தப் படம்தான் அவர் தயாரித்து இயக்கிய முதல் படம். நடிகர் எம்ஜிஆரை தயாரிப்பாளர் எம்.ஜி.ஆர்., இயக்குநர் எம்.ஜி.ஆர்., என அடையாளப்படுத்திய படம்.

'இஃப் ஐ வேர் ஏ கிங்' என்ற பிரான்க் லாய்ட் எழுதி இயக்கிய வரலாற்று நாடகத்தைப் பார்த்த எம்.ஜி.ஆர்., அதுபோல் ஒரு படத்தை எடுக்க வேண்டும் என்று திட்டமிட்டிருந்தார். அவரது திட்டம் என்று சொல்வதைவிட கனவு என்றே சொல்ல வேண்டும். எம்.ஜி.ஆரின் அந்தக் கனவு நனவானது. நாடோடி மன்னன் படப்பிடிப்பும் தொடங்கியது. 

எம். ஜி. ராமச்சந்திரன், பானுமதி, பி. எஸ். வீரப்பா, எம். என். ராஜம், சரோஜா தேவி, எம். என். நம்பியார், சந்திரபாபு, சகுந்தலா, முத்துலட்சுமி, எம். ஜி. சக்கரபாணி, ஈ.ஆர்.சகாதேவன், கே.ஆர்.ராம்சிங், கே.எஸ்.அங்கமுத்து என்று பெரிய நடிப்புப் பட்டாளமே படத்தில் உண்டு.

பெரும் பொருட் செலவு:

மிகுந்த பொருட்செலவில் எடுக்கப்பட்ட படம். 20,000 அடி ரீல் செலவானது என்று சொல்லக் கேட்டதுண்டு. நடிகர்களுக்கு சம்பளமும் உச்சம்தான். பெரிய முகங்கள் மட்டுமல்ல சாதாரணப் பணியில் இருந்த ஊழியருக்கும்கூட தினமும் சூட்டிங்கின்போது விருந்து சாப்பாடுதான். தளத்தில் பாரபட்சமே இருந்ததில்லையாம்.

இப்படிப் பொருட்செலவு செய்யப்பட்டது திரைத்துறையில் பல பேச்சுக்களை உண்டாக்கியது.
அப்போதுதான் எம்ஜிஆர், "இந்தப் படம் ஓடினால் நான் மன்னன், ஓடாவிட்டால் நாடோடி. நாடோடி மன்னன் ஒரு பரிசோதனை முயற்சி. என் விருப்பப்படி செய்து அதற்கு மக்களின் பதில் என்ன? என்று எதிர்பார்க்கிறேன்" என்று சொன்னார்.

'கேவா' கலர் திரைப்படம்!
கறுப்பு வெள்ளையாகத்தான் நாடோடி மன்னன் எடுக்கப்பட்டது. ஆனால், படம் பாதி சென்றபோது நடிகை பானுமதியுடன் மோதல் ஏற்பட்டது. ஏற்கெனவே சொன்னதுபோல் படம் மொத்தம் 20,000 அடிகளைக் கடந்தது. பல காட்சிகள் நேர்த்திக்காக திரும்பத்திரும்ப எடுக்கப்பட்டதால் கூடுதலாக ஃபிலிம் செலவானது.
படப்பிடிப்பின்போது ஒருமுறை நடிகை பானுமதி, "எடுத்த காட்சிகளையே எத்தனை முறை எடுப்பீங்க?" என்று எம்.ஜி.ஆரைப் பார்த்து கேட்டிருக்கிறார்.

அதற்கு எம்.ஜி.ஆர்., "படத்தின் தயாரிப்பாளர் மட்டுமின்றி, இயக்குநரும் நான்தான். என் இயக்கத்தில் நடிக்க விருப்பம் இருந்தால் நடிங்க. இல்லைன்னா விட்டுடுங்க" எனக் கூற படத்தில் இருந்து பானுமதி விலகிக்கொண்டார். பிறகு, அவர் இறப்பது போல காட்சிகள் மாற்றப்பட்டு நடிகை சரோஜா தேவியை கதாநாயகியாக அறிமுகப்படுத்தினார் எம்.ஜி.ஆர்.

சரோஜா தேவி வரும் காட்சிகளில் இருந்து கடைசி 7 ரீல் கேவா கலர் பயன்படுத்தி கலர் படமாக எடுக்கப்பட்டது. அலிபாபாவும் 40 திருடர்களும்தான் தென்னிந்தியாவின் முதல் கேவா கலர் (Gevacolor) திரைப்படம் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

சரோஜா தேவிக்கு திருப்புமுனை!
பானுமதி விலகியதால் சரோஜா தேவி வர, படத்தில் அவர் என்ட்ரிக்கு மானைத் தேடி மச்சான் வர்றான் பாடலும் வைக்கப்பட்டது. கலர்ஃபுல்லான அந்தப் பாடல் அந்தக் காலத்தில் மிகப்பெரிய ஹிட் அடித்தது. எம்ஜிஆர் அன்று அந்த வாய்ப்பைத் தராவிட்டால் நாடோடி மன்னனில் ரத்னாவாக சரோஜா தேவி மிளிராவிட்டால் அவருக்கு தமிழ்த் திரையுலகில் மிகப்பெரிய வெற்றிப் பாதை திறந்திருக்காது என்றே சொல்லலாம். சரோஜாதேவிக்கு திருப்புமுனை படம் அது.

1534932901.jpg

சண்டையும் பாடலும்..
படத்தில் சண்டைக் காட்சிகளும் பாடல்களும் வெறும் ப்ளஸ் என்று முடித்துக் கொள்ள முடியாது. ஒவ்வொரு சண்டையைப் பற்றியும் ஒவ்வொரு பாடலைப் பற்றியும் தனித்தனியாக எழுதலாம். க்ளைமாக்ஸ் காட்சியில் கயிற்றுப் பாலத்தின் மீது பி.எஸ்.வீரப்பாவும் எம்.ஜி.ஆரும் போடும் சண்டைக் காட்சிக்கு தியேட்டர்களில் விசில் பறக்கும்.

எஸ்.எம்.சுப்பையா நாயுடு இசையில் பாடல்கள் ஒவ்வொன்றும் முத்திரை பதித்திருக்கும். பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரனாரின் தூங்காதே தம்பி தூங்காதே இன்றளவும் ஒரு உத்வேக உபதேசப் பாடலாக நிலைத்து நிற்கிறது.

அதேபோல், 
பாடு பட்டா தன்னாலே 
பலனிருக்குது கை மேலே 
பாடு பட்டா தன்னாலே பலனிருக்குது கை மேலே
தேடி வராது முன்னாலே திரும்பிப் பாரு பின்னாலே..

பாடலில் பொதுவுடைமை கருத்துகளை முன்வைத்திருப்பார்.

மதுரையும் நாடோடி மன்னனும்!
மதுரைக்கும் நாடோடி மன்னனுக்கும் நெருங்கிய தொடர்புண்டு. மதுரையில், தங்கம் தியேட்டரில் நாடோடி மன்னன் வெளியானது. 100 நாட்களைக் கடந்து படம் வெற்றிகரமாக ஓடியது. எம்ஜிஆர் கூறியதுபோலவே படம் வெற்றிபெற்று அவரை மன்னனாக்கியது. வசூல் ரீதியாக இமாலய சாதனை புரிந்தது. 
மதுரையில் பல லட்சம் மக்கள் முன்னிலையில் நாடோடி மன்னன் வெற்றி விழா நடந்தது. அப்போதைய மேயர், மதுரை முத்து, எம்.ஜி.ஆரை அலங்கார சாரட் வண்டியில் அமர வைத்து, மிக பெரிய ஊர்வலம் நடத்தி, எம்.ஜி.ஆருக்கு தங்க வாள் பரிசு அளித்தார். 

நாடோடி மன்னன் வெளியாகி சரியாக 19 ஆண்டுகளுக்குப் பின்னர் எம்ஜிஆர் முதல்வரானார்.

எம்ஜிஆரும் 22-ம் தேதியும்!
எம்ஜிஆருக்கும் 22-ம் தேதிக்கும் ஒரு நெருங்கிய தொடர்பு இருக்கிறது என சினிமா வட்டாரத்தில் ஒரு பேச்சு உண்டு. 

1958 ஆகஸ்ட் 22-ம் தேதி வெளியாகி வெற்றி பெற்றது நாடோடி மன்னன். தயாரிப்பாளர், இயக்குநர் எம்.ஜி.ராமச்சந்திரனை உருவாக்கியது.

அதற்கு முன்னதாக 1954 ஜூலை 22-ல் வெளியாகி பிரம்மாண்ட வெற்றி பெற்றது மலைக்கள்ளன். அந்தப் படம் நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளையின் கதை. படத்துக்கு திரைக்கதை வசனம் கலைஞர் கருணாநிதி. இசை எஸ்.எம்.சுப்பையா நாயுடு. 6 மொழிகளில் இப்படம் ரீமேக் செய்யப்பட்டது. 6 மொழிகளிலுமே பிரம்மாண்ட வெற்றி பெற்றது. இப்படத்தில் இடம்பெற்ற எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே பாடல் மிகவும் பிரபலமானது. தஞ்சை ராமையாதாஸ் இயற்றிய இப்பாடலை டிஎம்எஸ் பாடியிருப்பார்.

1534932994.jpg

பக்தனைப் போலவே பகல் வேஷம் காட்டி 
பாமர மக்களை வலையினில் மாட்டி.. எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே
என்ற டிஎம்எஸ்ஸின் குரலில் இப்பாடல் பட்டி தொட்டிகளில் எல்லாம் ஓங்கி ஒலித்தது.

1975 ஆகஸ்ட் 22-ல் வெளியானது இதயக்கனி. ஆர்.எம்.வீரப்பனின் சத்யா மூவிஸ் தான் இப்படத்தைத் தயாரித்தது. சத்யம் திரையரங்கு 1974-ல் திறக்கப்பட்டிருந்த நிலையில் 1975 ஆகஸ்ட் 22-ல் சென்னையில் சத்யம் திரையரங்கில் வெளியான இப்படம் 100 நாட்களைக் கடந்தது.

மதுரையில் சிந்தாமணி திரையரங்கில் வெளியாகி பொங்கல் வரை ஓடியது. ஆகஸ்ட் தொடங்கி அடுத்த ஜனவரி ஓடிய மிகப்பெரிய வெற்றிப்படம் இதயக்கனி. 

இந்தப் படத்தை ஏ.ஜெகன்நாதன் இயக்கியிருந்தார். இந்தப் படத்தில் எம்ஜிஆருக்கு ஜோடியாக ராதா சலுஜா என்ற வடநாட்டுப் பெண் நடித்திருப்பார். எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் இன்பமே உந்தன் பேர் பெண்மையோ..., நீங்க நல்லா இருக்கோணும் நாடு முன்னேற பாடல்கள் மெகா ஹிட்.

காவிரியின் பெருமையை பறைசாற்றும் பாடல்..

நீங்க நால்லா இருக்கோணும் பாடலில் பொங்கிவரும் காவிரி அழகாக காட்சிப்படுத்தப்பட்டிருக்கும். மேலும் தொகையறாவில் காவிரியின் புகழ் பறைசாற்றப்பட்டிருக்கும்.

 

1534933166.jpg

தென்னகமாம் இன்பத்திரு நாட்டில் மேவியதோர்
              கன்னடத்துக் குடகுமலைக் கனி வயிற்றில் கருவாகி
              தலைக்காவிரி என்னும் தாதியிடம் உருவாகி
              ஏர் வீழ்ச்சி காணாமல் இருக்க சிவ சமுத்திர
              நீர் வீழ்ச்சி எனும் பேரில் நீண்ட வரலாறாய் 
பெண்  :    வண்ணம் பாடி ஒரு வளர்தென்றல் தாலாட்ட
              கண்ணம்பாடி அணை கடந்து ஆடு தாண்டும் காவிரிப் பேர் பெற்று 
              அகண்ட காவிரியாய்ப் பின் அடர்ந்து 
ஆண் : கல்லணையில் கொள்ளிடத்தில்
              காணும் இடமெல்லாம் தாவிப் பெருகி வந்து
              தஞ்சை வளநாட்டைத் தாயாகிக் காப்பவளாம்
              தனிக் கருணைக் காவிரி போல்
பெண்  :    செல்லும்  இடமெல்லாம் சீர் பெருக்கிப் பேர் நிறுத்தி
              கல்லும் கனியாகும் கருணையால் எல்லோர்க்கும்
ஆண் :  பிள்ளை என நாளும் பேச வந்த கண்மணியே
               வள்ளலே எங்கள் வாழ்வே இதயக்கனி

இவ்வாறு காவிரி கொண்டாடப்பட்டிருக்கும்.

13 ஆண்டுகளுக்குப் பின் காவிரி ஆறு இப்போது கரை புரண்டு பொங்கி ஓடுகிறது. இதயக்கனி படப்பிடிப்பின்போதும் காவிரி பொங்கி ஓடிக் கொண்டிருந்தது. அந்தக் காட்சிகளை அப்பாடலில் இன்று பார்த்தால் இப்போது காட்சியளிக்கும் காவிரியை நாம் தொடர்பு படுத்திக் கொள்ள முடியும்.

எம்ஜிஆரின் வாழ்க்கையில் மிக முக்கியமான மூன்று படங்களும் 22-ம் தேதியில்தான் வெளியாகின. அதுமட்டுமல்லாமல் வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றியை குவித்தன.

https://www.kamadenu.in/news/cinema/5052-nadodi-mannan-and-60-years.html?utm_source=tamilhindu&utm_medium=TTH_home_slider_content&utm_campaign=TTH_home_slider_content

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முல்லைத்தீவில் புத்தாண்டை முன்னிட்டு இராணுவத்தின் மாபெரும் விளையாட்டு ! (புதியவன்) இலங்கை இராணுவத்தின் ஏற்பாட்டில் தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்டத்தில் மாபெரும் விளையாட்டு விழா முன்னாயத்த கலந்துரையாடல். மலர இருக்கும் 2024 ஆம் ஆண்டு தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்ட இலங்கை இராணுவத்தின் 59 வது படைப்பிரிவின் ஏற்பாட்டில் முள்ளியவளை பிரதேசம் மாமூலை டைமன் விளையாட்டுக் கழக மைதானத்தில் (07.04.2024) அன்று மாபெரும் விளையாட்டு நிகழ்வு நடைபெறவுள்ளது. அத்தோடு அன்றைய தினம் காலையில் மரதன் ஓட்டம், துவிச்சக்கரவண்டி ஓட்டம், ஏனைய மைதான விளையாட்டுக்கள், இரவு மாபெரும் இன்னிசை நிகழ்வும் இடம்பெறவுள்ளது. இதன் முன்னாயத்த கலந்துரையாடல் இன்றைய தினம் (28) மு.ப 10.00 மணியளவில் மாவட்ட செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் முல்லைத்தீவு மாவட்ட 59 வது படைப்பிரிவின் கட்டளைத் தளபதி மேஜர்ஜென்ரல் பிரசன்ன விஜயசூரிய தலைமையில் நடைபெற்றது. இந்தக் கலந்துரையாடலில் பிரதம அதிதியாக மேலதிக மாவட்ட செயலாளர் திரு.எஸ்.குணபாலன் கலந்து சிறப்பித்தார். இந்த நிகழ்வில் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி ம.உமாமகள், முல்லைத்தீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி , வலயக்கல்வி பணிமனையின் அதிகாரிகள், கலாசார உத்தியோகத்தர், மாவட்ட மருத்துவர்கள் , முல்லைத்தீவு மாவட்ட இராணுவ அதிகாரிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.   https://newuthayan.com/article/புத்தாண்டை_முன்னிட்டு_இராணுவத்தின்_மாபெரும்_விளையாட்டு_கலந்துரையாடல்!  
    • மக்கள் தொகை முதன்முறையாக வீழ்ச்சி!   புதியவன் சுதந்திரத்துக்குப் பின்னரான வரலாற்றில் முதல் தடவையாக நாட்டின் சனத்தொகையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது என்று இலங்கை பதிவாளர் பணியக புள்ளி விவரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2023 ஜூன் 30ஆம் திகதியுடன் முடிவடைந்த ஓராண்டு காலப்பகுதியில் மக்கள் தொகையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது. இந்த மக்கள் தொகை ஒரு இலட்சத்து 44 ஆயிரத்து 395 ஆல் குறைவடைந்துள்ளது. கடும் பொருளாதார நெருக்கடி நிலைமைகளால் நாட்டை விட்டு வெளியேறுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.  அத்துடன், பிறப்பு வீதமும் குறைவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்தக் காரணிகளால் நாட்டின் மொத்த சனத்தொகை எண்ணிக்கையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது.(க) https://newuthayan.com/article/மக்கள்_தொகை_முதன்முறையாக_வீழ்ச்சி!
    • முதலிலேயே சொல்லிவிட்டார்தானே
    • நெடுக்காலபோவான், இவை நீங்களே எடுத்த படங்கள் என்று மட்டும் சொல்லிவிடாதீர்கள்.  கேடுகெட்ட சொறிலங்காவுக்குள் உங்களைப் போன்ற மானமுள்ள வீரப் புலம்பெயர்ந்த தமிழர் யாராவது கால் வைப்பார்களா ? நினைக்கவே கால் கூசுகிறது. 😂
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.