Jump to content

இல்லறத்தமிழன் துணையிருக்கும் இயல்புடைய மூவர் யார்? - குறள் ஆய்வு-6 பகுதி-2


Recommended Posts

இல்லறத்தமிழன் துணையிருக்கும் இயல்புடைய மூவர் யார்? - குறள் ஆய்வு-6 பகுதி-2

பேராசிரியர் ந. கிருஷ்ணன், ம.சு.பல்கலைக்கழகம், திருநெல்வேலி.

 

"பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைத்தால் சங்காரம் நிசமெனச் சங்கே முழங்கு!"

- பாவேந்தர் பாரதிதாசன்

தமிழ்த் திருக்குறளை விழுங்கத் துடிக்கும் ஆரியம்!

ஒரே நாடு! ஒரே இனம்! ஒரே மதம்!' என்னும் ஒற்றைக் கலாச்சார அமைப்பை நிறுவி, இந்தியாவின் பன்மைத்துவத்தை விழுங்கிச் செரித்துவிட நினைக்கும் ஆரிய ஆதிக்க சக்திகள், தங்கள் இலக்கிற்குத் பெரும் தடையாகக் கருதுவது தமிழரின் தனித்துவப் பண்பாட்டு அடையாளங்களையும், அறங்களையும், வாழ்வியல் தடங்களையும் சுமந்துகொண்டு, பேரரண்களாக நிற்கும் மூவாயிரம் ஆண்டுகள் தொன்மையுடன் உயிர்ப்புடன் விளங்கும் தமிழ்க் கழக(சங்க) இலக்கியங்களைத்தான். அவற்றுள்ளும், 'உலகப்பொதுமறை' என்று உலகோரெல்லாம் பாராட்டி அழைக்கும் 'திருக்குறள்' என்னும் தமிழரின் பண்பாட்டு அறவாழ்வின் சாட்சியின் இருப்பு ஆரியர்களின் கண்களை நிறையவே உறுத்துகின்றது.

திருக்குறளையும் தமிழ் மொழியையும் 'இந்துத்துவத்துக்குள்' செரித்துவிடத் திட்டமிட்ட கோல்வால்க்கர்!

இந்தியாவின் பன்மைத்துவத்தைச் செரித்து ஆரியர்களின் ஒற்றைக் கலாச்சாரத்தை நிறுவும் முதன்மைத்திட்டம் வகுத்த ஆரிய சித்தாந்தவாதி திருமிகு.கோல்வால்கர் 1943லேயே தமிழ் மொழியையும் திருக்குறளையும் ஆரிய ஒற்றைக் கலாச்சாரத் சித்தாந்தத்துக்குள் செரிமானம் செய்துவிட விரும்பினார் என்பதை 1966ல் வெளியிடப்பட்ட "Bunch of Thoughts" ( Author: Madhav Sadashiv Golwalkar) என்னும் நூலில் பின்வருமாறு வெளிப்படையாகவே கூறுகின்றார்:

"Part Two - The Nation and its Problems : X. CHILDREN OF THE MOTHERLAND

These days we are hearing much about Tamil. Some protagonists of Tamil claim that it is a distinct language altogether with a separate culture of its own. They disclaim faith in the Vedas, saying that Tirukkural is their distinct scripture. Tirukkural is undoubtedly a great scriptural text more than two thousands year old. Saint Tiruvalluvar is its great author. We remember him in our Pratah-smaranm. There is an authentic translation of that book by V.V.S.Iyer, the well-known revolutionary. What is the theme propounded therein, after all? The same old Hindu concept of chaturvidha-purushartha is put forth as the ideal. Only the chapter on Moksha comes in the beginning. It does not advocate any particular mode of worship or name of God but enunciates the pure idea of Moksha. Thus it is not even a sectarian book. Mahabharata also eulogises the same picture of social life as Tirukkural presents. Except with the Hindu, this unique vision of social life is not found anywhere else. It is thus purely a Hindu text propounding great Hindu thoughts in a chaste Hindu language.

In fact all our languages, whether Tamil or Bengali, Marathi or Punjabi are our national languages. All these languages and dialects are like so many flowers shedding the same rich fragrance of our national culture. The source of inspiration for all these has been the queen of languages, the language of gods-Sanskrit. By virtue of its richness and sacred association, it also can serve as the common medium of our national intercourse. Nor is it difficult to acquire a working knowledge of Sanskrit. Sanskrit is to this day one of the greatest cementing factors of our national life. But, unfortunately, it is not in common usage now, nor do our present rulers possess the moral pride and grit to bring it into vogue."

மேற்குறிப்பிட்ட ஆர்.எஸ்எஸ் சித்தாந்தவாதம் திருக்குறளை மட்டும் செரித்து விழுங்க முயலவில்லை;, ஆரிய இந்துத்துவ சிந்தனையின் வெளிப்பாட்டில் அமைந்த ஆரிய இந்துத்துவ நூல் என்றும் தமிழ்மொழியையே 'இந்துமொழி' என்றும், தமிழ் மொழியே சமற்கிருதத்திலிருந்து பெறப்பட்டது என்ற நச்சுக்கருத்தையும் கூறி, தமிழ் மொழியையே விழுங்கித்தின்னத் துடிக்கிறது.   

முனைவர் நாகசாமியின் 'பத்மவிபூஷண்'

கோல்வால்கர் அவர்களின் சித்தாந்தத்தை முனைமுறியாமல், அப்படியே முழுநூலாக, தப்பும் தவறுமான அலங்கோல ஆங்கிலத்தில் ""TIRUKKURAL - An Abridgement of Sastras - Dr. R.Nagaswamy" என்று வடித்தெடுக்க முயன்று, அசிங்கப்பட்டு நிற்கிறார் திருமிகு நாகசாமி.  'கோல்வால்க்கர் என்பவரின் ஆரிய சித்தாந்த மண்டபத்தில் எழுதிவாங்கப்பட்ட பிழையான அரைகுறைக் கருத்தைத் தப்பும் தவறுமான அரைகுறை அலங்கோல ஆங்கிலத்தில் வடித்த தொல்லியல் அறிஞர் என்று அறியப்பட்ட ஆரியப் பிராமணர் திருமிகு.நாகசாமிக்குக் கூலியாக 'பத்மவிபூஷண்' பட்டத்தை 'ஆராயாமல்' உடனடியாக வழங்கிவிட்டது ஆரியமேலாதிக்க சித்தாந்தத்தைக் கைக்கொண்ட மத்திய அரசு. பாவம், அவர்கள் கூட்டத்தில், தருக்க அறிவும், முறையான ஆங்கிலமும், சமற்கிருதமும் அறிந்த 'நக்கீரன்' எவரும் இல்லை போலிருக்கிறது! பாவம்!!

'சிவமதம்' இருந்த சான்று! தமிழர்கள் இந்துக்கள் அல்லர்!!

ஆங்கிலேயே ஆட்சிக் காலத்திலும், விடுதலை பெற்ற இந்தியாவின் 1960ம் ஆண்டுகள்வரை தமிழக சார்பதிவாளர் அலுவலகங்களில் பதிவுகளான பத்திரப்பதிவு சொத்து ஆவணங்களில் 'விவசாயம் சிவமதம் வீராசாமித் தேவர் மகன் சங்குமுத்துத் தேவருக்கு' போன்ற சொல்லாட்சிகள் விரவிக் கிடக்கின்றன; இந்துமதம் என்று குறிப்பிடப்படாமல், தமிழரின் மதமாக 'சிவமதம்', என்று குறிப்பிடப்படும் வழக்கம் அண்மைக்காலம் வரை பயன்பாட்டில் இருந்து வந்துள்ளமைக்கு கட்டியம் கூறும் வரலாற்றுச் சான்றாவணங்கள் இவை.

தமிழர்களின் பண்பாட்டு மரபுகளை வீழ்த்திய திராவிட இயக்கங்களின் மடமைகள்!

இந்திய அரசியல் சட்டம் 'கிறித்துவர் அல்லாத, இசுலாமியர் அல்லாத வழிபாட்டு முறைகள் இந்துமதம்' என்று தந்த வரையறையும், தமிழகத்தில் 'கிறித்துவர் அல்லாத, இசுலாமியர் அல்லாத வழிபாட்டு முறைகள் பின்பற்றப்படும் கோயில்கள், நாட்டார் வழிபாட்டுத் தெய்வங்கள் அனைத்தும் ஒன்றிணைக்கப்பட்டு, இந்துசமய அறநிலையத்துறை என்ற உருவாக்கமும், தமிழர்களின் தொல்சமய வழிபாடுகளான சிவமதம், திருமாலியம் உள்ளிட்ட வழிபாட்டு நெறிமுறைகளை, கடவுள் மறுப்பை மட்டும் மையமாகக் கொண்டு அரசியல் நடாத்திய திராவிட இயக்கங்கள் 'ஆரிய வைதிக சமயங்கள்' என்று ஆராயாமல் பட்டம்கட்டி, ஆரியர்களுக்குத்  தாரைவார்த்துத் தந்த மடமைகளும் தமிழர்களின் சமயப் பண்பாட்டு மரபுகள் வீழ்ச்சியடையக் காரணிகள் ஆகிவிட்டன.

தமிழரின் ஆன்மிகத்தலைமையை ஆரியருக்குத் தாரைவார்த்த திராவிடஇயக்கங்கள்!

 'சைவ' என்ற சிவமத முன்னொட்டு 'இந்து' என்ற முன்னோட்டானது. காட்டாக, தகப்பனின் பள்ளிச்சான்று 'சைவ முதலியார்' என்றிருக்க, மகனின் பள்ளிச்சான்று 'இந்து முதலியார்' என்றானது; இன்னும், 'சைவ வெள்ளாளர்' என்பது 'இந்து வெள்ளாளர்' என்றும், 'சைவச் செட்டியார்' என்பது 'இந்து செட்டியார்' என்றும், இன்னும் இவைபோல் எண்ணற்ற அவலங்கள் 'தமிழ்ப் பண்பாட்டுக் காவலர்கள்' என்று மார்தட்டிக் கூறும் திராவிட இயக்கத்தார் ஆட்சிக்காலத்தில் அரவமின்றி சட்டமாயின. 'இந்துமதத்தை' இவ்வாறு உரமிட்டு வளர்த்து, தமிழக வழிபாட்டுச் சமயங்களான சிவமதம், திருமாலியம் போன்றவற்றின் அடையாளங்களை முற்றிலுமாக அழிக்க பேருதவி செய்த பெருமக்களில் திராவிட ஆட்சியாளர்கள் முதன்மையானவர்கள். திராவிட இயக்கத்தவர்களின் அறியாமைப் போக்கும், ஆட்சி அதிகாரத்தால் விளைந்த ஆணவ மயக்கமும் தமிழகச் சூழலில், ஆன்மீகத் தலைமையைத் தமிழரிடமிருந்து பெயர்த்து எடுத்து, ஆரியர்களிடம் விற்றுவிட்டன.

ஆரியர்-தமிழர் மரபணு அறிவியல் சான்று!

அண்மைக் காலத்திய  மரபியல்வழி (genes research) ஆய்வாளர்களின் ஆய்வு முடிவுகளால் ஆரியர்-தமிழர் என்னும் இரண்டு இனங்களும் தனித்துவமான உண்மையே என்பது மரபியல் அறிவியல் கொண்டு நிறுவப்பட்டுள்ளது. இத்தகைய ஆய்வுகள், 'ஆரியர்-தமிழர்(திராவிடர்) தனித்துவங்கள் கற்பனையே' என்று ஆரிய ஆதிக்க ஆட்சியாளர்கள்  வலிந்து நிறுவ முயலும் கருதுகோள்களைப் பொடிப்பொடியாக்கிவிட்டன.

தனித்துவமான இருவேறு இனங்கள்! ‘ஆரியன் கண்டாய் தமிழன் கண்டாய்’ - அப்பர் பெருமான் சான்று!!

 இத்துணை மரபியல் ஆய்வுகள் ஏதுமின்றி, தேவாரம் அருளிய திருநாவுக்கரசர் சுவாமிகள் கி.பி. 7 – ஆம் நூற்றாண்டிலேயே, ‘ஆரியன் கண்டாய் தமிழன் கண்டாய்’ என்று ஆரியர்-தமிழர் என்ற பாகுபாட்டை இரண்டு இனமாகவே குறிப்பிட்டார். ஆரியர்-தமிழர் ஒற்றுமையுடன் செயலாற்ற வேண்டும்; இருவரும் சிவபெருமானால் படைக்கப்பட்டவர்கள் என்று இறைவனின் பெயரால் இவ்விரண்டு இனங்களின் ஒற்றுமையை வலியுறுத்தினாரே தவிர, இரண்டு இனங்களின் தனித்துவ இருப்பைக் கேள்விக்கு உள்ளாக்கவில்லை என்பது நோக்கத்தக்கது. தமிழினத்தின் இருப்பை இல்லாமல் செய்வதும், தமிழரை ஆரியனின் சூத்திர அடிமையாக்கும் கொத்தடிமை முயற்சிகளின் வடிவம்தான் 'நால்வருண வருணாசிரமம் பேணும் ஆரிய வைதிக சநாதன மதத்தின் புதிய பெயரான இந்துமதம்'

தமிழரைச் சூத்திரனாக்கும் ஆரிய வஞ்சனை!!

தமிழகத்துக்குப் பன்னெடுங்காலம் முன்பே வந்தேறிய ஆரிய பிராமணர்களை ஆரத்தழுவிக்கொண்டு வரவேற்ற தமிழினத்தின் அடையாளத்தைக் கருவோடு வேரறுத்துத் தமிழர்களைத்  தம் ஆரிய இனத்தின் நாலாம் வருணச் சூத்திரனாக்கி அடிமை கொள்ளவேண்டும் என்னும் தீராத வஞ்சகத் திட்டத்தோடுதான் ஆரியப் பிராமணர்கள் வந்தநாள் தொட்டுத் தமிழகத்தில் வாழ்ந்து வருகின்றனர்.

தமிழ்ப் பார்ப்பனர்களோடு மணவுறவு கொள்ளாமல் இனத்தூய்மை காக்கும் ஆரியர்கள்!

தமிழ்ப் பார்ப்பனர்களையும், அந்தணர்களையும் தம் வேத ஆரிய வழிபாட்டு முறையை ஏற்கச்செய்து, ஏனைய தமிழர்களிடமிருந்து அந்நியராக்கி, அவர்களைத் தமது பிராமணர் வகுப்பில் இணைத்துக் கொண்டதைப்போல் பாவனை செய்து, அதேவேளை, அவரோடு மணவுறவு கொள்வதை விலக்கிவைத்துத் தம் இனத்தூய்மையைப் பாதுகாத்துக் கொண்டனர்.

சங்கர மடங்களில் தமிழ்ப்பார்ப்பனர்கள் மடாதிபதியாக முடியாது!

சங்கர மடங்களில் தமிழ்ப்பார்ப்பனர்கள் மடாதிபதியாக முடியாது என்பது இன்றுவரை எழுதப்படாத சட்டமாகவே இருந்துவருவதைத் தமிழ்ப் பார்ப்பனர்கள் இன்னும் உணரவில்லை. "பட்டாலும் புரியாது பார்ப்பனருக்கு" என்னும் தமிழ்ப் பழமொழி இன்னும் வழக்கில் உள்ளது அனைவரும் அறிந்ததே!

கோடரிக் காம்புகளாக . . .

கோடரிக் காம்புகளாகத் தமிழ்ப் பார்ப்பனர்களைப் பயன்படுத்தித் தமிழ் மொழியையும், தமிழரையும் அழிக்கும் முயற்சி முன் எப்போதையும்விட, இப்போது முழுவேகமாக நடக்கின்றது. தமிழில், அறவழிவாழ்ந்த தமிழரான திருவள்ளுவர், ஏனைய தமிழருக்குக்காக எழுதப்பட்ட அறநூலே  திருக்குறள்.

தமிழருக்குக்காக, தமிழில், அறவழிவாழ்ந்த தமிழன் திருவள்ளுவர் எழுதிய அறநூலே  திருக்குறள்!

எக்காலத்திலும், எந்நாட்டவருக்கும் எச்சமயத்தவருக்கும் பொருந்தும்வகையில் மாண்புடன் அமைந்துவிட்டதால் திருக்குறள் என்னும் இந்த அறநூல் "உலகப்பொதுமறை" என்னும் சிறப்பையும் பெற்றுள்ளது. திருக்குறளின் இம்மாண்பைத் தம் இன,மொழி,சமயத்திற்குக் கவர்ந்துசெல்லும் கபட நோக்குடன் திருக்குறளுக்கு உரையெழுதியவர்களில் தலையாயவர்கள் ஆரிய இனத்தவர்கள்.

தமிழரின் அறம் சார்ந்த இல்லறவியல் மாண்பைப் பதிவுசெய்யும் திருக்குறள்!

திருவள்ளுவர் காலத் தமிழரின் இல்லறவியல் மாண்பை பதிவு செய்கிறது திருக்குறள். அக்காலத்தில், தமிழகத்தில் வாழ்ந்து இல்லறம் பேணிய பெரும்பான்மைத் தமிழ் இல்லறத்தார்கள் கடைப்பிடித்த அறங்களையும் மரபுகளையுமே திருக்குறள் பதிவு செய்திருக்கவேண்டும். சிறுபான்மை வழுவும், பிறழ்வும் அவர் காலத்திலேயே காணப்பட்டிருக்க வேண்டும். அப்பிறழ்வுகளைச் செப்பனிடும் பொருட்டு வள்ளுவர் செய்த பதிவுகளே இல்லறத்தான் கடமைகளாகத் திருக்குறளில் காணக் கிடைக்கின்றன.

பிராமணர் ஒரு பிராமணருக்கே 'அதிதி' விருந்து படைப்பார்! ஏனையோருக்கு எப்போதாவது மீந்துபோனதை மட்டுமே பிச்சையிடுவார்!!

மனுசாத்திரம் சொல்லும் ஆரியப்பிராமணர்களுக்கான விருந்தோம்பல் விதி பின்வருமாறு:

"The Brahmin should never invite persons of other varnas for food. In case, the latter begs the Brahmin for food, the Brahmin may give them some left-over. Even these left-over must be served not by the Brahmin but by his servants outside the house. (Manu Chapter3 - 112)."References: 1. S.L.Shashtri, Manu Simiri ki Shav Preksha, concluded, Page 54 to 155 2. Author Coke Burnale, Hindu Polity (The Ordinances of Manu) concluded.

"பிராமணன் ஒருக்காலும் ஏனைய வருணத்தாரை உணவருந்த அழைக்கக் கூடாது! ஒருவேளை, ஏனைய வருணத்தைச் சார்ந்த எவரேனும் ஒரு பிராமணனை அண்டிப் பிச்சை கேட்டால், மீந்துபோன கொஞ்சம் உணவைப் பிச்சையிடலாம். அதைக்கூட, பிராமணன் தன் கையால் பரிமாறக்கூடாது. தனது வேலைக்காரர்களைக் கொண்டு, வீட்டுக்கு வெளியே பிச்சையிடலாம்."

விருந்தோம்பல் தமிழர் பண்பு! பிராமணருக்கு மட்டும் 'அதிதி படைத்தல்' ஆரியப் பிராமணர் கடன்!!

'இருந்தோம்பி இல்வாழ்வதெல்லாம் விருந்தோம்பி வேளாண்மை செய்தல் பொருட்டு' என்று தமிழனுக்கு விருந்தின் இலக்கணத்தைப் போதிக்கும் தமிழ்க் குறளுக்கும், 'பிராமணனைத் தவிர எவனுக்கும் உணவு தராதே!" என்று கேவலமான தீண்டாமை நீதியைப் பயிலும் ஆரியப் பிராமணனுக்கும் எந்தத் தொடர்பும் இருக்க இயலுமா என்பதை உலகோர்கள் தீர்மானிக்கட்டும்.

ஆரியர்களின் அடாவடிப் புனைவு!

அப்துல்காதருக்கும் அமாவாசைக்கும் தொடர்பு இருப்பதாகச் சொன்னால்கூட நம்பிவிடலாம். ஆரியப்பிராமணருக்கும் விருந்தோம்பலுக்கும் எந்தத்தொடர்பும் இருக்க இயலாது என்பதை மனுதர்ம சாத்திரம் சொல்வது இருக்கட்டும்; நடைமுறை வாழ்க்கையிலேயே அதுவே கடைப்பிடிக்கப்படுவது என்பது நாமெல்லாம் அறிந்தது. இருந்தும், அப்பட்டமான புளுகுமூட்டையை பரிமேலழகர் முதல் நாகசாமி வரையிலான ஆரியர்கள் அடாவடியாகப் புனைந்து பேசுவதைக் கண்டிக்க எவரும் முன்வருவது கிடையாது.

மனுசாத்திரம் சொல்லும் பிரமசாரி பிராமணர் மட்டுமே!

மனுசாத்திரம் பிரமசாரி பின்பற்ற வேண்டிய விதிகளையும், மரபுகளையும் விவரிக்கின்றது. பிரமசாரி என்னும் சொல் 'பிரம' என்னும் சொல்லிலிருந்து வருகின்றது. பிரம என்றால் வேதம். வேதத்தைப் படிப்பேன் என்ற சபதம் எடுப்பது பிரமசாரியாக இருப்பதற்கான முதல் தகுதி என்கிறது மனுசாத்திரம். முழு வேதத்தைப் படிப்பதற்கு ஆரியப் பிராமணர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டவர்கள்(சத்திரியன் சிலபகுதிகளையும், வைசியன் அதைவிடக் குறைந்த பகுதிகளை மட்டுமே கற்க முடியும்) என்பதால், பிரமசாரி என்று மனுதர்ம சாத்திரம் சொல்லும் நபர் பிறப்பினால் ஆரிய பிராமணனாகப் பிறந்த ஒருவனையே! எனவே, எந்தத் தமிழனும் மனுதர்மம் சொல்லும் 'பிரமசாரி' ஆகமுடியாது என்று தெளிக.

மனுசாத்திர விதிகள் ஒருக்காலும் திருவள்ளுவரால் தமிழர்களுக்கு சொல்லப்பட்டிருக்காது!

மேலும், ஆரிய பிராமண பிரமசாரி குருகுலத்தில் குருவின் ஆசிரமத்தில் வாழவேண்டும். இரண்டு ஆடைகள் மட்டுமே வைத்திருக்கவேண்டும். கிரகஸ்தனாக வாழும் பிராமணர்கள் வீட்டில் மட்டுமே பிச்சை எடுத்து குருவிடம் அர்ப்பணித்துவிட்டு, குருவின் அனுமதியோடு மட்டுமே உண்ணலாம். காலை, உச்சிவேளை, மாலை ஆகிய மூன்று வேளை காயத்ரி மந்திரம் ஓதி சந்தியா வந்தனம் செய்ய வேண்டும். இவையெல்லாம் ஆரியப் பிராமணனுக்கு மனுசாத்திரம் விதித்த வாழ்முறைக் கட்டளைகள். இவை பின்பற்றப்பட்டால் மட்டுமே அவன் பிராமணப் பிரமசாரி! அப்படி ஒருவனை நடைமுறையில் யாரும் காட்ட இயலாது. அப்படியென்றால் பிராமணர் என்று ஒருவர் இன்றில்லை; காலிப்பெருங்காய டப்பாவில் மீதம் ஒட்டிக்கொண்டிருக்கும் வாசனைபோல், பிராமணர் என்பவர் ஒரு இல்பொருள். ஆரிய பிராமணப் பிரமசாரிகளுக்கான மனுசாத்திர விதிகள் ஒருக்காலும் திருவள்ளுவரால் தமிழர்களுக்கு சொல்லப்பட்டிருக்காது என்றும் தெளிக.

ஆரியக் கருத்தியல் வன்முறைகளைத் திருக்குறளுக்கான விளக்கமென உரையெழுதிய சதி!

பிராமணன் விருந்து ஓம்பினால், அவ்விருந்தினன் ஒரு பிராமணனாக இருக்கவேண்டும் என்பதே விதி.

உலகவழக்கு அழிந்து, ஒழிந்து செத்துப்போன வேதகால ஆரியமொழியின் அரைச்செயற்கைக் குழந்தையான, எவருக்கும் தாய்மொழி அல்லாத சமற்கிருதத்தில் எழுதப்பட்ட, ஆரிய இனத்தவர் வேதசமய சாத்திரங்களின் பொருளை வலிந்து, தமிழ்த் திருக்குறளுக்கு ஏற்ற முயன்றனர் ஆரியஇன, ஆரியசமய, ஆரியமொழிச் சார்பு கொண்ட பரிமேழகர் உள்ளிட்ட உரையாசிரியர்கள். இவ்வாரியர்கள் தமிழுக்குப் பெருமை சேர்க்கும் 'பசுத்தோல்' போர்வையில் தமிழரிடையே நுழைந்து, தமிழ்த் திருக்குறளின் இயல்பொருளைத் தமிழர்களே உணர இயலாமல், ஆரியக் கருத்தியல் வன்முறைகளைத் திருக்குறளுக்கான விளக்கமென உரையெழுதி,  மாபெருங் குழப்பம் விளைவித்தனர். இவ்வுரைகள் விளைவித்த குழப்பங்கள் இன்றுவரை தொடர்கின்றன என்பதுதான் அவலம்.

ஆரியக்கருத்துக்கள் தமிழர் பண்பாடு என்ற பெயர்களில் உலவுகின்றன!

இணையம் ஆட்சி செய்யும் இக்காலத்திலும், ஆரியப் பிராமணர்கள் பலர், தம் பெயர், இனம், மொழி, பாலினம், சமயச்சார்பு போன்றவற்றை மறைத்துக்கொண்டு, தமிழன், திருக்குறள் வழி, வள்ளுவன் மறை என்று வலைத்தளங்கள் உருவாக்கி, ஆரியக்கருத்துக்களை தமிழர் பண்பாடு, இந்துப் பண்பாடு, கிறித்துவர் சதி, அயல்நாட்டார் சதி என்று மனம் போன போக்கில் கற்பனைகளை அளந்து, புகுந்து விளையாடுகின்றனர்.

கடும் வசைமொழிகளுடன் வெளிப்படும் கோரமான ஆரியமுகங்கள்!

ஆரியர்கள், தமிழர்கள் கருத்துரையாடும் வாட்ஸ்அப் உள்ளிட்ட எந்தத் தளத்திலும் புகுந்து தம் ஆரியச்சார்புக் கருத்துக்கள்தாம் உண்மையான பொருள் என்று துணிந்து வாதங்கள் செய்ய முயல்வர்; பதிலுரைகள் வலுவான ஆதாரங்களுடன் வெளிவந்துவிட்டால், இவர்களின் கோரமான ஆரியமுகங்கள் கடும் வசைமொழிகளுடன் வெளிப்படும். அதில், இன, மத வெறுப்புக்களைத் தூண்டும் வன்முறை சொல்லாடல்கள் கட்டாயம் இடம்பெறும். தேசத்துரோகக் குற்றங்கள் கூசாமல் சுமத்தப்படும். " 'உளறல்', 'அபத்தம்', 'துரோகிகள்', 'முட்டாள்', 'கற்பனைக்கருத்து', 'நேர்மையற்ற சொற்கள்', 'இந்துமத விரோதிகள்', 'கிறித்துவக் கருத்துக்கள்', 'தேசிய ஒருமைப்பாட்டுக்கு ஊறுவிளைவிக்கும் கூட்டம்', 'தேசத்துரோகி', 'அமெரிக்கக் கைக்கூலி' உள்ளிட்ட சொல்லாடல்கள், இன்னபிற எழுதித்தில் வடிக்க இயலாத வசைமொழிகள்" இவர்களின் 'கையறுநிலை'ப் பதில்களில் கட்டாயம் இடம்பெறும்.

இவ்வரிசையில் தற்போது நுழைந்திருக்கும் ஆரியப்பார்ப்பனர் தொல்லியல் அறிஞர் முனைவர் திரு.நாகசாமி அவர்கள் 'தமிழுக்கு பெருமை சேர்த்தல்' என்னும் 'பசுத்தோல்' போர்வையைத் தூக்கி எறிந்துவிட்டு, 'தமிழர் பண்பாடு' என்னும் தமிழ் இனக்குருதியைக் குடிக்கத் துடிக்கும் வெற்றுடம்புடன் ஆரிய இனவெறித் தாண்டவமாடும் "Thirukkural - An Abridgement of Sastras"  என்னும் நூலை தப்பும் தவறுமான ஆங்கிலத்தில், கேவலமான மொழிநடையுடன் எழுதி வெளியிட்டுள்ளார்.

குறள் வரையறுத்த இல்லறத் தமிழர் அறக்கடமைகளுக்கு ஆரியப் பிராமணரின் சடங்கியல் முலாம் பூசும் திரு.நாகசாமி (Dr.R. Nagaswamy)!

"இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும் நல்லாற்றின் நின்ற துணை" என்னும் திருக்குறள் சொல்லும் 'இல்வாழ்வான்' என்பவன் இல்லறக்கடமையாற்றும் ஒரு தமிழன். அவன் எவர் எவருக்கு நல்லாற்றின் நின்ற துணை என்ற கேள்விக்கு 'இயல்புடைய மூவர்க்கும்' என்பதை விடையாகத் தருகிறார்.

வள்ளுவர் கூறும் 'இயல்புடைய மூவர்'  உற்றார், உறவினர், அறவோர்!

இன்றும் தமிழர்களின் இல்லவிழா அழைப்பிதழ்களில் 'தங்கள் நல்வரவை விரும்பும் உற்றார் உறவினர்' என்ற சொற்றொடரோ அல்லது 'தங்கள் நல்வரவை விரும்பும் சுற்றமும், நட்பும்' என்ற சொற்றொடரோ இடம் பெறுவதை இயல்பாகக் காண்கிறோம். இவ்விரு சொற்றொடர்களும் குறிக்கும் பொருள் ஒன்றே! உற்றார்=நட்புவட்டம்; உறவினர்=சுற்றம். இவ்விருவர் அல்லாமல் இல்லறத்தான் துணையாக இருக்கும் குறிக்கும் இயல்புடைய நல்லாற்றின் மூன்றாமவர் யாவர்? என்ற வினாவுக்கு விடை - அறவோர்கள் என்பதே!

பொதுப்பணியாற்றும் அறவோர்!

எப்படி என்று சற்றே ஆய்ந்து நோக்கலாம். தன்னலம் கருதாத பொதுநல நோக்கில், சமுதாய நன்மைக்காகத் தம்மை அர்ப்பணித்துக் கொண்ட அறவோர்கள் ஏற்றுக்கொண்டு தொண்டாற்றும் பொதுப்பணிகள் சிலவற்றைக் குறிப்பிடுதல் நம் பார்வையைத் தெளிவாக்கும். ஆதரவற்ற சிறார்களுக்கு உணவும், உடுக்க உடையும், இருக்க இருப்பிடமும், கற்க கல்வியும் நல்கும் இல்லங்களைத் தொண்டுள்ளத்தோடு நடத்தும் அறவோர்கள்; ஆதரவற்ற முதியோர்களுக்கு நலம் பேணும் கருணை இல்லங்கள் நடத்துதல்; நீர்நிலைகளுக்கு மராமத்துப்பணிகள் செய்தல்; வீடற்ற ஏழையர்க்கு வீடு கட்டிக்கொடுத்தல், ஏழைக் குழந்தையர்க்கு கல்விக்கட்டணம் செலுத்துதல், உடல்நலிவுற்ற ஏழையர்க்கு மருத்துவ உதவி செய்தல், அறுவை சிகிச்சை செய்யப் பொருளுதவி செய்தல், கோயில்-குளங்களைப் பராமரித்தல் போன்றவை.

அறவோருக்குத் துணைசெய்யும் இல்லறத்தான்!

மேற்கண்ட பொதுப்பணிகளுக்காக அறவோர்கள் அணுகி உதவி கேட்கும் நபர் இன்றுவரை இல்லறவாசிகளே என்பதை எண்ணிப்பாருங்கள். அறவழி வாழ்ந்த தமிழ்ச் சமூகம் வள்ளுவர் காலத்தில் இப்பணிகளை செவ்வனே ஆற்றியிருக்கும் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி.

எனவே, வள்ளுவப்பெருந்தகை குறிப்பிட்ட இந்த 'இயல்புடைய மூவர்' உறவோர், உற்றார், அறவோர் என்பவர்களாகத்தான் அன்றும், இன்றும் என்றும் தமிழ்ச் சமூகத்தில் நிலவும் இயல்பாக இருக்க முடியும்.

பொருந்தாப்பொருள் சொன்ன பரிமேலழகர்!!

இல்லை! இல்லை!! இந்த 'இயல்புடைய மூவர்' எங்கள் ஆரியர்வழிப் பண்பாட்டு ஆட்களான பிரமசாரி(மாணவன்), வானப்பிரஸ்தன்(இல்லம் விட்டுக் காட்டில் வாழ்பவன்), சந்நியாசி(துறவி) ஆகிய மூவரே என்று தமிழர்களாகிய நமக்குப் பொருந்தாத ஆரியப் பொருள் சொன்னார் பரிமேலழகர்.

ஆரியவியல் வழக்கப்படிப் பார்த்தாலும், இல்லறம் துறந்து வனத்தில் வாழும் வனப்பிரஸ்தனுக்கும், காட்டில் தவம் செய்யும் துறவிக்கும், நாட்டின் இல்லத்தில்(வீட்டில்) வாழும்  இல்லறத்தான் எவ்வாறு தினமும் காட்டுக்குச் சென்று துணை நிற்பான் என்பது பரிமேலழகருக்கே வெளிச்சம்!

தொல்லியல் அறிஞர் முனைவர் நாகசாமி அவர்களின் "Thirukkural - An Abridgement of Sastras"  என்னும் நூலின் 88-89ம் பக்கங்களில் பரிமேலழகருக்கும் ஒருபடி மேலே போய், திருவள்ளுவர் திருக்குறளில் தமிழரான இல்வாழ்வானின் ஆதரிக்க வேண்டிய மூன்று ஆஸ்ரமவாசிகள் பிரமசாரி, வனப்பிரஸ்தன் மற்றும் பித்ரு ஆகியோர் என்று பரிமேலழகரின் ஆரியப்புனைந்துரையை விஞ்சும் புதிய ஆரியப் புனைந்துரையைத் துணிந்து எழுதியுள்ளார்.

"In the grhasta dharma dealt with by Valluvar the first three are 1. Householder supporting the three  asramites, Brahmacari, Vanaprasta and Pitrus. 3. Offering of Yajnas to five namely, Deva, Rishi, Pitru, Athiti and Bhuta in succession."

It will be shown below the sequence of 1. Support of three Asramas 2. Tarpana 3. Panca yajnas are found in the Dharma Sastras in the same order.

The Kural on  -

இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்

நல்லாற்றின் நின்ற துணை

The grhasta (family man) is house-holder the firm supports in the journey of life of student the Vanaprasta and Sanyasin(ascetic) who constitute the three (other asramites) says Valluvar. Parimelalagar has pointed out they are Brahmacari, Vanaprasta and Sanyasin, who observe vow and pursue their determined life. They are supported by food and other requirements. This is a clear evidence of Valluvar supporting the three asramas which derive support from grhasta.

This is clearly after dharmasutra. Manu's exposition of this concept is important. He says, the rain comes down from Aditya, the Sun, from rain is created food and all living beings. And as all living beings live through Vayu so also all the Asramas flourish by the support of grhasta dharma."

 

திருக்குறளுக்குத் தரப்பட்ட மேற்கண்ட ஆரியவியல் கருத்தேற்றம் எவ்வளவு தூரம் உண்மை என்று காண்போம்.

'அறம்', 'தருமம்', ''Ethics' or 'Values' என்பன தனித்துவ இனப் பண்பாட்டு அடையாளச் சொற்கள்!

ஆங்கிலத்தில் 'Ethics' or 'values' என்றும் சமற்கிருதத்தில் 'தர்மா' என்றும் தமிழில் 'அறம்' என்றும் கூறப்படுபவை ஒன்றுபோல் தோன்றினாலும் அவை ஒன்றல்ல. இடத்துக்கு இடம், நாட்டுக்கு நாடு பொருள் மாறுபடும்;; இடம் ஒன்றேயாக இருந்தாலும், காலம் வேறுபடும் போது சொற்களின் பொருள் கொள்ளும் தன்மை வேறுபடுவதும், சொற்களின் பொருளே முற்றிலும் மாறுபடுவதும் இயல்பே! சுவாசித்தல், பருகுதல், பார்த்தல், பேசுதல், கேட்டல் போன்ற பண்புகள் மனித இனத்திற்குப் பொதுவானவை; பொதுவாகக் காணப்படினும்,  இவ்வடிப்படைகளின் அளவுகள் உடலுக்கு உடல் மாறுபடும் என்பது ஒவ்வொரு உடலின் தனித்தன்மை. அதுபோல், கைவிரல் ரேகை  ஒவ்வொரு உடலின் தனித்துவத்தை அடையாளப்படுத்தும்.

தமிழ்ப் பண்பாட்டு அசைவுகளின் அடையாளத்தை அழிக்கமுயன்று அழிந்த வேதகால ஆரியமொழி!

தனித்துவங்களை மதிப்பது பொது ஒற்றுமையை வலுப்படுத்தும் உறுதியான கருவி. தனித்துவத்தை அழிக்க முயலும் ஒவ்வொரு முயற்சியும், பொது ஒற்றுமைக்கு ஊறுவிளைவிக்கும் பேரழிவு ஆயுதமாகும். தமிழரின் பண்பாட்டு மரபுகளுக்கென்று இருந்துவரும் தனிச் சிறப்புப் பண்புகளை பெரிதும் வெளிப்படுத்தும் தனித்துவம் பெற்ற திருக்குறள் நூலின் தமிழ்ப் பண்பாட்டு அசைவுகளின் தமிழ் அடையாளத்தை, சமய ஒற்றுமை, இந்துத்துவம் என்ற பெயரால் அழித்து, ஆரிய பொதுமைப் பண்பை, ஆரிய மேலாண்மையை நிலைநிறுத்த   முயலும் ஆரியர்களின் சதிச்செயல்கள் மூவாயிரம் ஆண்டுகளாகியும் நிறைவேறவில்லை; மாறாக, ஆரியர்களின் வேதமொழி மக்கள் பேச்சு வழக்கிலிருந்து ஒழிந்து, அழிந்து, செத்துப்போய் விட்டது. இவ்வாறு, தம் தாய்மொழியின் சாவைக் கண்கொண்டு கண்டபின்பும், ஆரியர்கள் பாடம் கற்கவில்லை என்பதே பெருவியப்பே!

தமிழ்இனம் வேறு! ஆரிய இனம் வேறு!

தமிழ்இனம் வேறு! ஆரிய இனம் வேறு! இவ்விரு இனங்களும் ஒற்றுமையுடன் வாழவே 'ஆரியன் கண்டாய்! தமிழன் கண்டாய்!' என்று அப்பர் பெருமானும், "ஆரியமும் தமிழும் உடனே சொல்லிக் காரிகையார்க்கும் கருணை செய்தானே" என்று திருமூலதேவ நாயனாரும் இறைவனின் திருப்பெயரால் மதநல்லிணக்கம் கூறினார்கள்!  ஒற்றுமையுடன் மதநல்லிணக்கத்துடன் வாழ்வது சுயமரியாதையுடன் வாழும் வாழ்வு! தமிழ் இன, சமய, பண்பாட்டு அடையாளங்களை ஆரியத்திடம் அடகுவைத்து, தொலைத்து ஆரியத்துடன் சங்கமிப்பது சூத்திர அடிமை வாழ்வு!! தமிழர்கள் ஒருக்காலும் தம் தன்மானத்தையும், இன, மொழி, பண்பாட்டையும் தொலைக்க இசைய மாட்டார்கள்!

கசப்புணர்வைத் தோற்றுவிக்கும் பசப்பு மொழி வேண்டாம்!

தமிழர்கள் அவர்தம் இன,மொழி, சமயம், பண்பாட்டு அடையாளங்களுடன் வாழட்டும்! ஆரியர்கள் அவர்தம் இன, மொழி, சமயம், பண்பாட்டு அடையாளங்களுடன் தமிழகத்தில் வாழட்டும்! இரண்டும் ஒன்றுதான் என்னும் பசப்பு மொழிகளே கசப்புணர்வுகளைத் தோற்றுவித்து, வேற்றுமைக்கு அடிகோலுகின்றன!

வேற்றுமையில் ஒற்றுமை காண்போம்!

கண்ணியத்துடன் மாறுபட்ட கருத்துக்களின் இருப்பைக் ஏற்றுக்கொள்வதும்,  அவரவர் இருப்பு அவரவர்க்கு என்று ஒருவரின் இருப்பை மற்றவரும், ஒருவருக்கொருவர் அவரவர் தனித்துவத்தை மதிக்கும் மாண்பைக் கற்றுக்கொள்வதும் நாட்டின் ஒற்றுமைக்கு வழிவகுக்கும்! ஆரியத்துக்கு முற்றிலும் மாறுபட்ட தமிழரின் திருக்குறளை ஆரியத்தால் எக்காலத்திலும் செரிமானம் செய்ய இயலாது! ஒற்றைக் கலாச்சாரத் திணிப்பு என்னும் சர்வாதிகாரத்தால் வீழ்ந்த நாடுகளின் வரலாற்றிலிருந்து பன்மைத்துவத்தின் மகத்துவத்தை உணர்ந்து நடந்தால் நாட்டுக்கு நன்மை பயக்கும்.

 

வெள்ளம் போல் தமிழர் கூட்டம்! வீரங்கொள் கூட்டம்!  அன்னார்

உள்ளத்தால் ஒருவரே! மற் றுடலினால் பலராய்க் காண்பார்!

கள்ளத்தால் நெருங்கொணாதே எனவையம் கலங்கக் கண்டு

துள்ளும் நாள் எந்நாளோ! - புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்!

 

குறளறம் தொடர்ந்து பேசுவோம்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆரிய ஏகத்துவத்தை எதிர்க்கவும், அறியாமல் அவர் வலையில் திராவிடச் சிந்தனையாளர் வீழ்வதைத் தடுக்கவும் இத்தகைய எழுத்துக்கள் இன்றைய தேவை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பேராசிரியர் கிருஷ்ணன் அவர்களுக்கு அன்பான வணக்கங்கள்,
உங்களை போன்ற தமிழ் அறிஞர்கள், தமிழ் ஆர்வளர்கள்  யாழோடு இணைந்திருப்பது குறித்து பெருமிதம் அடைகிறேன். 
நான் வாசித்த உங்கள் முதல் பதிவுதான் "இல்லறத்தமிழன் துணையிருக்கும் இயல்புடைய மூவர் யார்? - குறள் ஆய்வு-6 பகுதி-2".
நம்  தாய் தமிழுக்கு எதிராக எவ்வளவு காய் நகர்த்தல்கள் காலம் காலமாக மேற்கொள்ளப்பட்டுள்ளன என்பது உங்கள் கட்டுரை தெளிவாக்குகின்றது.
சு.ப . சோமசுந்தரம் ஐயா கூறியது போன்று, இம்மாதிரியான கட்டுரைகள், விளக்கங்கள் இன்றைய காலத்தின் தேவை.
தொடரட்டும் உங்கள் தமிழ்ப் பணி :100_pray:
அன்புடன்  சசி..   

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.