Jump to content

உலகக் கிண்ணத்தினால் உலகையே ஈர்த்த நாயகர்கள்


Recommended Posts

உலகக் கிண்ணத்தினால் உலகையே ஈர்த்த நாயகர்கள்

Svdh-696x460.jpg
 

ரியெல் மெட்ரிட் வாழ்வை முடித்து ஜுவண்டஸுடன் இணைந்தார் ரொனால்டோஒரு மாத காலம் உற்சாகத்தைத் தந்த உலகக் கிண்ண கால்பந்து திருவிழா முடிவுக்கு வந்துள்ளது. ரசிகர்களின் எதிர்பார்ப்புகளையும், அனுமானங்களையும் இம்முறை உலகக் கிண்ணப் போட்டிகள் நொறுக்கித் தள்ளியது.

முன் எப்போதும் இல்லாத அளவில் பல்வேறு திருப்பங்களும், எதிர்பார்ப்புகளும் இம்முறை உலகக் கிண்ணத் தொடரில் அரங்கேறின. உலக கால்பந்து நட்சத்திரங்களைக் கொண்ட பெரிதும் எதிர்பார்த்த போர்த்துக்கல், ஆர்ஜென்டீனா, பிரேசில், ஜேர்மனி மற்றும் ஸ்பெயின் போன்ற அணிகள் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை பரிசளித்து சீக்கரமே தொடரிலிருந்து வெளியேறின.

 

யாருமே எதிர்பார்க்காத குரோஷியா இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இறுதிப் போட்டியில் அபாரமாக விளையாடிய முன்னாள் சம்பியனான பிரான்ஸ் அணி, 4-2 என்ற கோல்கள் கணக்கில் உலகின் இரண்டாவது மிகச் சிறிய நாடான குரோஷியாவை வீழ்த்தி வெற்றி வாகை சூடியது.   

வெற்றி மழையில் நனைந்த பிரான்ஸ் வீரர்கள், கூடுதலாக இயற்கை மழையிலும் நனைந்தபடியே பரிசுகளை பெற்றுக்கொண்டனர். முதல் இடம் பிடித்த பிரான்ஸ் அணிக்கு 38 மில்லியன் டொலர்கள் (255 கோடி ரூபாய்) பரிசாக வழங்கப்பட்டது. இரண்டாம் இடம் பிடித்த குரோஷியா அணிக்கு 28 மில்லியன் டொலர்கள் (188 கோடி ரூபாய்) வழங்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து, இம்முறை உலகக் கிண்ணத் தொடரில் சிறந்த முறையில் செயல்பட்ட வீரர்களுக்கு விருதுகளும் வழங்கி கௌரவிக்கப்பட்டன. அதன்படி, இம்முறை உலகக் கிண்ணத்தில் மிகச் சிறப்பாக விளையாடி, குரோஷிய அணியை இறுதிப் போட்டிக்கு அழைத்துச் சென்ற அந்த அணியின் தலைவர் லூகா மொட்ரிக்கிக்கு தங்கப் பந்து (Golden ball) விருது வழங்கப்பட்டது.

இதேபோல், உலகக் கிண்ணத்தில் 6 போட்டிகளில் 6 கோல்கள் அடித்தமைக்காக தங்க காலணி விருது (Golden Boot) இங்கிலாந்து அணியின் தலைவர் ஹெரி கேனுக்கு வழங்கப்பட்டது.  

 

மேலும், சிறந்த கோல் காப்பாளருக்கான தங்க கையுறை விருது (Golden Glow) பெல்ஜியம் அணியின் கோல் காப்பாளர் தியாபட் கோர்டாய்க்கு வழங்கப்பட்டது. இந்த உலகக் கிண்ணத்தின் இளம் வீரருக்கான விருதை பிரான்ஸ் அணியின் கிலியன் எம்பாப்வே பெற்றார்.

எனவே, இம்முறை உலகக் கிண்ணத்தில் திறமைகளை வெளிப்படுத்தி விருதுகளை பெற்றுக்கொண்ட வீரர்கள் தொடர்பில் ஆராய்ந்து பார்ப்போம்.

தங்கக் காலணி விருது

harry-kane-2.jpg

 

 

ரஷ்யாவில் நடைபெற்ற உலகக் கிண்ணத் தொடரில் அதிக கோல் அடித்த வீரர்களுக்கான பட்டியலில் முதலிடம் பிடித்த இங்கிலாந்து அணித் தலைவர் ஹெரி கேன் (6 கோல்கள்) தங்கக் காலணி விருது வென்றார். இதில் 3 கோல்கள் பெனால்டி உதைகள் மூலம் பெற்றுக்கொள்ளப்பட்டமை சிறப்பம்சமாகும்.

முன்னதாக 1986ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கிண்ணப் போட்டித் தொடரில் இங்கிலாந்து வீரர் கெரி லினகெர் 6 கோல்கள் அடித்து இவ்வாறு தங்கக் காலணி விருதை வெற்றிருந்தார்.   

இதேநேரம், பிரான்ஸ் வீரர்களான அன்டோனியோ கிரீஸ்மன், கிலியன் எம்பாப்பே, பெல்ஜியம் வீரர் ரொமெலு லூகாகு, போர்த்துக்கல் நட்சத்திரம் கிறிஸ்டியானோ ரொனால்டோ மற்றும் ரஷ்யாவின் டெனிஸ் செரிஷேவ் ஆகியோர் இம்முறை தலா 4 கோல்கள் அடித்து 2வது இடத்தைப் பிடித்தனர்.

இதுவரை தங்கக் காலணி விருது வென்றவர்கள் விபரம்

  • 2014 : ஜேம்ஸ் ரோட்ரிகஸ் (கொலம்பியா) – 6 கோல்கள்
  • 2010 : தோமஸ் முல்லர் (ஜேர்மனி) – 5 கோல்கள்
  • 2006 : மிரோஸ்லாவ் குளோஸ் (ஜேர்மனி) – 5 கோல்கள்
  • 2002 : ரொனால்டோ (பிரேசில்) – 8 கோல்கள்
  • 1998 : டாவோர் சுகேர் (குரோஷியா) – 6 கோல்கள்
  • 1994: ஹிரிஸ்டோ ஸ்டாய்ச்கோவ் (பல்கேரியா), ஓலெக் சலெங்கோ (ரஷ்யா) – 6 கோல்கள்.
  • 1990 : சல்வாடோர் சிலாக்கி (இத்தாலி) – 6 கோல்கள்
  • 1986 : கேரி லினகெர் (இங்கிலாந்து) – 6 கோல்கள்
  • 1982 : பாவ்லோ ரோசி (இத்தாலி) – 6 கோல்கள்
  • 1978 : மரியோ கெம்பஸ் (ஆர்ஜென்டீனா) – 6 கோல்கள்
  • 1974 : கிரிஸ்கோரஸ் லாடோ (போலந்து) – 7 கோல்கள்
  • 1970 : கெர்ட் முல்லர் (ஜேர்மனி) – 10 கோல்கள்
  • 1966 : எசுபியோ (போர்த்துக்கல்) – 9 கோல்கள்
  • 1962 : புளோரியான் ஆல்பர்ட் (ஹங்கேரி), வேலன்டின் இவானோவ் (சோவியத் யூனியன்), டிராசென் ஜெர்கோவிக் (யுகோஸ்லாவியா), லியோனல் சாஞ்சல் (சிலி), வாவா (பிரேசில்), கர்ரின்சா (பிரேசில்) – 4 கோல்கள்
  • 1958 : ஜஸ்ட் போன்டெயின் (பிரான்ஸ்) – 13 கோல்கள்
  • 1954 : சான்டோர் கோக்சிஸ் (ஹங்கேரி) – 11 கோல்கள்
  • 1950 : அடிமிர் (பிரேசில்) – 9 கோல்கள்
  • 1938 : லியோனிடஸ் (பிரேசில்) – 8 கோல்கள்
  • 1934 : ஓல்ட்ரிச் நெஜட்லி (செகஸ்லோவாகியா), அட்மண்ட் கோனன் (ஜேர்மனி), ஏஞ்சலோ சியாவியோ (இத்தாலி) – 4 கோல்கள்
  • 1930 : கிலர்மோ ஸ்டேபைல் (ஆர்ஜென்டீனா) – 8 கோல்கள்

 

தங்க பந்து விருது

luka-modrick-2.jpg1982ஆம் ஆண்டு முதல் தங்கப் பந்து விருது வழங்கப்படுகிறது. பிஃபாவின் தொழில்நுட்பக் குழுவின் உறுப்பினர்களும், ஊடகவியலாளர்களும் இணைந்து இந்த விருதுக்குரிய வீரரைத் தெரிவு செய்வர்.

இதன்படி, இம்முறை உலகக் கிண்ணத் தொடரில் குழு நிலை ஆட்டங்களில் திறமைகளை வெளிப்படுத்தி, பின்னர் இடம்பெற்ற மோதல்களிலும் சிறப்பாக செயற்பட்டு குரோஷிய அணியை இறுதிப் போட்டி வரை அழைத்து வந்த அவ்வணித் தலைவர் லூகா மொட்ரிக் சிறந்த வீரருக்கான தங்கப் பந்து விருதை வென்றார்.   

மத்திய கள வீரரான லூகா, இம்முறை உலகக் கிண்ணத்தில் 2 கோல்களையும் பெற்றுக்கொண்டார்.

2ஆவது இடத்துக்கான வெள்ளிப் கால்பந்து விருதை பெல்ஜிய அணித்தலைவர் ஈடன் ஹசார்ட், பெற்றுக்கொண்டார். இம்முறை உலகக் கிண்ணத்தில் பெல்ஜியம் அணியை அரையிறுதிப் போட்டி வரை வழிநடத்தி வந்த பெருமை ஹசார்ட்டையே சாரும். பந்தை வேகமாக முன்னே எடுத்துச் செல்கின்ற திறன் கொண்ட அவர், இம்முறை உலகக் கிண்ணத்தில் 3 கோல்களையும் அவ்வணிக்காகப் பெற்றுக்கொடுத்தார்.

 

இதேநேரம், பிரான்ஸ் அணியின் அன்டோனியோ கிரீஸ்மன் 3ஆவது இடத்துக்கான வெண்கல கால்பந்து விருதை பெற்றார். இம்முறை உலகக் கிண்ணத்தை பிரான்ஸ் அணிக்கு பெற்றுக்கொடுப்பதற்கு காரணமாக இருந்த வீரர்களுள் ஒருவரான கிரீஸ்மன், அவ்வணிக்காக 4 கோல்களைப் பெற்றுக்கொடுத்தமை குறிப்பிடத்தக்கது.

இதுவரை தங்கப் பந்து விருது வென்றோர்

  • 2014: லியோனல் மெஸ்ஸி (ஆர்ஜென்டீனா)
  • 2010: டியாஜோ போர்லான் (உருகுவே)  
  • 2006: சினேடின் சிடான் (பிரான்ஸ்)
  • 2002: ஒலிவர் கான் (ஜேர்மனி)
  • 1998: ரொனால்டோ (பிரேசில்)
  • 1994: ரொமாரியோ (பிரேசில்)  
  • 1990: சல்வாடோர் சிலாக்கி (இத்தாலி)
  • 1986: டியாகோ மாரடோனா (ஆர்ஜென்டீனா)
  • 1982: பாவ்லோ ரோசி (இத்தாலி)  

தங்கக் கையுறை விருது

Thibaut-COURTOIS-2-2.jpgஇம்முறை உலகக் கிண்ணத்தில் பலமிக்க அணியாக வலம்வந்த பெல்ஜியத்தை அரையிறுதி வரை கொண்டு செல்வதற்கு முக்கிய காரணமாக அந்த அணியின் கோல் காப்பாளர் திபவுட் கோர்டொயிஸ் விளங்கினார். அதிலும் குறிப்பாக இங்கிலாந்து அணியுடனான மூன்றாவது இடத்துக்கான போட்டியில் பெல்ஜியத்துக்கு எதிராக போட முயற்சித்த பல கோல்களை அபாரமாகத் தடுத்தாடி அவ்வணியை வெற்றி பெறவும் செய்திருந்தார்.

அத்துடன், இம்முறை உலகக் கிண்ணத்தில் 27 தடவைகள் கோல் போடும் முயற்சிகளை திபவுட் கோர்டொயிஸ் தடுத்துள்ளமை அவர் இம்முறை சிறப்பாக செயற்பட்டமைக்கு மற்றுமொரு சான்றாகும்.

எனவே, 2018 உலகக் கிண்ணத்தில் சிறந்த கோல் காப்பாளருக்கான தங்க கையுறை விருது பெல்ஜியம் அணியின் கோல் காப்பளர் திபவுட் கோர்டொயிஸுக்கு வழங்கப்பட்டது.    

 

இறுதியாக நடைபெற்ற 2014 உலகக் கிண்ணத்தில் ஜேர்மனியின் மானுவெல் பீட்டர் னொயேரும், 2010 உலகக் கிண்ணத்தில் ஸ்பெய்னின் ஈகர் கஸிலஸ் பெர்னாண்டோஸும் சிறந்த கோல் காப்பாளருக்கான தங்க கையுறை விருதினைத் தட்டிச் சென்றனர்.  

இளம் வீரருக்கான விருது

kylian-mbappe-2.jpgநடந்து முடிந்த உலகக் கிண்ணத்தில் பிரான்ஸ் அணிக்காக சிறப்பாக விளையாடி தொடரின் மிகச் சிறந்த இளம் வீரர் என்ற பட்டத்தை 19 வயதுடைய இளம் வீரரான கிலியன் எம்பாப்பே பெற்றுக்கொண்டார்.

மிகவும் இளம் வயதில் உலகக் கிண்ணத்தில் கோலடித்த பிரேசில் ஜாம்பவான் பீலேவின் சாதனையை அவர் நெருங்கினார். அதேபோல் 60 ஆண்டுகளுக்குப் பிறகு, உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் கோலடித்த இளம் வீரர் என்ற பீலேவின் சாதனையையும் அவர் சமன் செய்தார்.

இந்த முறை உலகக் கிண்ணத் தொடரில் பிரான்ஸ் அடித்த அனைத்து கோல்களின் கௌரவத்தையும் இளம் வீரர் கிலியன் எம்பாப்பே மற்றும் அன்டோனியோ கிரீஸ்மன் ஆகியோர் பெற்றுக்கொண்டுள்ளனர். இந்த இருவரும் பிரான்ஸுக்காக தலா 4 கோல்களை பெற்று, அதிக கோல்கள் அடித்த வீரர்களில் 2ஆவது இடத்தையும் பெற்றுக்கொண்டனர்.  

நேர்மையாள அணி (FAIR PLAY AWARD)

espain-team.jpgஉலகக் கிண்ணத்தில் சிறந்த ஒழுக்கத்தை பின்பற்றி நேர்மையாக விளையாடும் அணிக்காக பெயார் பிளே விருது வழங்கப்படுகின்றது.

அதிலும், நொக் அவுட் சுற்றுக்குத் தகுதிபெற்ற அணிகளில் அதாவது மஞ்சள் மற்றும் சிவப்பு அட்டைகள் குறைவாக காண்பிக்கப்பட்ட மற்றும் தண்டனை உதைகள் குறைவாக வழங்கப்பட்ட அணிக்கு இந்த விருது வழங்கப்படுகின்றமை சிறப்பம்சமாகும்.  

இதன்படி, இம்முறை உலகக் கிண்ணத்தில் ரஷ்ய அணிக்கெதிரான நொக் அவுட் சுற்றில் தோல்வியைத் தழுவி போட்டித் தொடரிலிருந்து வெளியேறிய முன்னாள் சம்பியனான ஸ்பெயின் அணிக்கு நேர்மையாக விளையாடிய அணிக்கான விருது வழங்கப்பட்டது.  

அந்த அணி பங்குபற்றிய 4 போட்டிகளில் நான்கு மஞ்சள் அட்டைகளையும், 24 தண்டனை உதைகளையும் பெற்றுக்கொண்டது. எனினும், இம்முறை உலகக் கிண்ணத்தில் ஜப்பான் வீரர்கள் விளையாடிய விதம் மற்றும் அந்நாட்டு ரசிகர்கள் நடந்துகொண்ட முறைகளை வைத்து அவர்களுக்குத்தான் இந்த விருது வழங்கப்படும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது.

இதேவேளை, 1970ஆம் ஆண்டு முதல் அறிமுகப்படுத்தப்பட்ட இவ்விருதை பிரேசில் அணி அதிகபட்சமாக நான்கு தடவைகள் வென்றுள்ளது.

கடந்த 2014இல் பிரேசிலில் நடைபெற்ற உலகக் கிண்ணத்தில் கொலம்பியா அணி முதன்முறையாக இவ்விருதை தட்டிச் சென்றமை குறிப்பிடத்தக்கது.

http://www.thepapare.com

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.