Jump to content

இலங்கை வானொலி- கே.எஸ்.ராஜா


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை வானொலி- கே.எஸ்.ராஜா

 

imageproxy

அன்புள்ள ஜெ.,

நீங்கள் இலங்கை சென்றிருக்கிறீர்களா? இந்த பதிவு இலங்கை சம்பந்தப்பட்டது.

சென்னைத் தொலைக்காட்சியின் கொடைக்கானல் ஒளிபரப்பு 1987-ல் தொடங்கப்பட்டது. அப்போது ஊருக்கு நான்கு வீடுகளில் டிவி இருந்தால் அதிசயம். பஞ்சாயத்து போர்டில் டிவி பார்க்க மக்கள் கூட்டம் நிரம்பி வழியும். 1987 உலகக்கோப்பையில் மரடோனாவின் சாகசங்களைப் பஞ்சாயத்து போர்டில் பார்த்தது ஞாபகம் இருக்கிறது. 1987க்கு முன்பு மக்களுக்கு ஒரே பொழுதுபோக்கு வானொலி மட்டுமே. அதிலும் சிலோன் ரேடியோ என்று அன்போடு மக்களால் அழைக்கப்பட்ட இலங்கை வானொலி அளித்த பொழுதுபோக்கு இன்பத்தை என்றென்றும் மறக்க முடியாது. குறிப்பாக 1975-85 இடையேயான காலகட்டம் அப்போது பதின் வயதில் இருந்தவர்கள் மறக்க முடியாதவை.

சினிமாப் பாடல்களை இத்தனை விதமாய் வழங்க முடியுமா? நெஞ்சில் நிறைந்தவை, பொங்கும் பூம்புனல் – மாலை 5 மணிக்கு – இந்த நிகழ்ச்சியின் தொடக்க இசை மறக்க முடியாதது, நேயர் விருப்பம் – சங்களா மங்களா என்ற பெயர் அடிக்கடி வரும், ஒரு படப்பாடல்கள், பாட்டும் பதமும், இசையும் கதையும், இந்திப்பாடல்கள் – மதியம் 1.30-க்கு, விவசாயிகள் விருப்பம். சனி மற்றும் ஞாயிறுகளில் “திரை விருந்து” – பாசமலர் அடிக்கடி ஒலிபரப்புவார்கள் – பெண்கள் விசும்பி விசும்பி அழுது கொண்டிருப்பார்கள், பார்த்திருக்கிறேன். நல்ல தமிழ் கேட்போம் நிகழ்ச்சியில் அநேகமாக சிவாஜியின் பழைய படத்திலிருந்து எதாவது ஒலிச்சித்திரம் இருக்கும். ஜெமினி கணேசன் பாட்டு வாத்தியாராக நடிக்கும் ஒரு ஒலிச்சித்திரம் மிகவும் பிரபலம்.அடிக்கடி ஒலி பரப்புவார்கள். படம் ஞாபகமில்லை. சாயங்காலம் 5.30-க்கு “பிறந்தநாள் இன்று பிறந்தநாள். நாம் பிள்ளைகள் போலே தொல்லைகள் எல்லாம் மறந்த நாள்” என்று டி.எம்.எஸ் ஆரம்பித்து விடுவார் – அதாவது பிறந்தநாள் வாழ்த்துக்கள் நிகழ்ச்சி. காலையில் சிறிதுநேரம் பக்திப் பாடல்கள். இரவில் கொஞ்சம் கர்நாடக இசை. இரவு 9 மணிக்கு “இரவின் மடியி-லோடு தூங்க வைப்பார்கள். நடு நடுவே விளம்பரங்கள், மரண அறிவித்தல்கள், செய்திகள், பொப்பிசைப் பாடல்கள். தேர்ந்தெடுத்த பாடல்கள். மிகப் பழைய பாடல் கூட ஒலிபரப்புவார்கள். A.M. ராஜா, ஜிக்கி பாடல்கள் நிறைய போடுவார்கள். என்னுடைய வயது நாற்பத்தியொன்பது. நான் 40 மற்றும் 50களில் வெளிவந்த பாடல்களையும் பாடிக்கொண்டிருக்கிறேன் என்றால் ஒரே காரணம் இலங்கை வானொலிதான்.

அவர்கள் ஒலிபரப்பும் சில பாடல்கள் நம்முடைய வானொலி நிலையங்களில் நாம் கேட்கக் கிடைக்காதவை “தசரதனுக்கு ஒன்பது பெண்கள்” “அக்ரஹாரத்தில் கழுதை” “புதுச்செருப்பு கடிக்கும்” போன்ற வெளிவராத படங்களில் இருந்து. “புத்தம் புது காலை…” (அலைகள் ஓய்வதில்லை) “தூரத்தில் நான் கண்ட உன் முகம்…”(நிழல்கள்), “மஞ்சள் வெயில்..மாலையிட்ட பூவே..” (நண்டு) போன்ற படங்களில் இல்லாத, படமாக்கப்படாத பாடல்களை முதன் முதலில் இலங்கை வானொலியில் தான் கேட்டேன். மலேசியா வாசுதேவன் பாடிய “ஒரு மூடன் கதை சொன்னான்.. ” (நெஞ்சில் ஆடும் பூ ஒன்று), பட்டுல சேலை…(பண்ணைப்புரத்து பாண்டவர்கள்) அநேகமாக தினமும் ஒரு முறையாவது போட்டு விடுவார்கள். இன்று ஒரு படத்தை பார்க்கிற பரபரப்பு அன்று ஒரு பாடலைக் கேட்பதில் இருக்கும் – நிகழ்ச்சி அறிவிப்பாளர்களின் பங்களிப்பு அந்த அளவிற்கு இருக்கும். மயில்வாகனம் சர்வானந்தா, சாய் விதூஷா, ஜெயகிருஷ்ணா, கே எஸ் ராஜா (இனக்கலவரத்தில் சுட்டுக்கொல்லப்பட்டார்), ராஜேஸ்வரி ஷண்முகம், அப்துல் ஹமீத் – மறக்கக் கூடிய பெயர்களா அவை. இன்று இவர்களை ஞாபகப்படுத்த சூரியன் பண்பலையில் யாழ் சுதாகர் இருக்கிறார்.

கூகுளின் உபயத்தில் “பொங்கும் பூம்புனலின்” தொடக்க இசையை மறுபடி கேட்டபோது நனவு மறைந்தது காலம் உறைந்தது. இசை முடிந்தவுடன் “அந்த நாள் போனதம்மா… ஆனந்தம் போனதம்மா…” என்ற டி எம் எஸின் பாடல் தான் நினைவுக்கு வந்தது.

பொங்கும் பூம்புனல் தொடக்க இசை

 

 

 

மறக்க முடியாத சில பாடல்கள்

 

அன்புள்ள

கிருஷ்ணன் சங்கரன்.

***

 

 

அன்புள்ள கிருஷ்ணன்

உங்கள் கடிதம் வழியாக இணையத்தில் கே.எஸ்.ராஜாவின் குரலைச் சென்றடைந்தேன். என் வயதை ஒட்டியவர்களுக்கு அக்குரலின் கம்பீரமும் விரைவும் ஒரு பெரிய கனவை விதைப்பவை. அவருடைய வானொலி அறிவிப்பு அக்காலகட்டத்தின் முதன்மையான அடையாளத்தில் ஒன்று.

என் இளமையில் ரேடியோ அவ்வளவாக கிடையாது. மர்ஃபி வால்வ் ரேடியோதான். பெரிய தேக்குபெட்டியில் பச்சை ஒளிப்பரப்புடன் பொன்னிற திருகு குமிழ்களுடன் நவீனத் தொழில்நுட்பத்தின் காட்சி அடையாளமாக வீடுகளில் உயரமாக அமைக்கப்பட்ட பீடங்களில் அமர்ந்திருக்கும். ஒலிக்காதபோது மஞ்சள், நீலம், சிவப்பு நிறங்களில் வெல்வெட் திரைபோட்டு மூடி வைத்திருப்பார்கள். அப்பாக்களோ மூத்த அண்ணன்களோதான் தொடமுடியும். அக்காக்கள் கெஞ்சிக்கேட்டுத்தான் அதை போட்டு கேட்கவேண்டும்.

குமரிமாவட்ட்த்தில் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் தெளிவாகவே எடுக்கும். நெல்லையும் திருவனந்தபுரமும் அதற்கு அடுத்தபடியாகத்தான். திருச்சியும் மதுரையும் கரகரக்கும். ஆகவே தமிழிசை என்றால் இலங்கை வானொலிதான். அன்றெல்லாம் படிப்பு முடித்து திருமணத்திற்குக் காத்திருக்கும் அக்காக்களின் உலகமே வானொலிதான். திரைப்படப் பாடல்கள், திரைப்பட ஒலிச்சித்திரங்கள், வானொலி நாடகங்கள் என அதிலேயே வாழ்வார்கள். மர்ஃபி வானொலிக்கு வலை போன்ற அதிர்வுவாங்கி தேவை. அதை வீட்டிலிருந்து அருகே உள்ள தென்னை மரம் வரை இழுத்துக் கட்டி வைப்போம். அப்படியும் மழைநாட்களில் கரகரப்புதான் மைய ஒலியொழுக்காக இருக்கும். பயிற்சி ஏட்டில் கோடுமீது எழுத்துக்கள் போல கரகரப்பின்மேல் பாடல்கள், பேச்சுக்கள்.

எழுபதுகளில்தான் டிரான்ஸிஸ்டர் ரேடியோ பிரபலமாக ஆரம்பித்த்து. வால்வ் ரேடியோக்களின் கரகரப்பு மறைந்த்து. வானொலியை குழந்தைபோல அருகே வைத்துக்கொண்டு அக்காக்கள் இரவு துயில்கொண்டார்கள். மானசீக்க் காதலனைப்போல அது அவர்களை கொஞ்சிக்கொண்டே இருந்த்து. அதிலிருந்து கே.எஸ்.ராஜாவின் குரல், ஆண்மையின் சின்னம் அது. அவர்களில் அது எழுப்பிய கனவுகளை என்னால் இன்று ஊகிக்க முடிகிறது. சைக்கிள் சர்க்கஸ்கள், கிராமத்திருவிழாக்களில் கே.எஸ்.ராஜாவை குரல்போலி செய்யும் உள்ளூர் அண்ணன்கள் கே.எஸ்.ராஜாவின் புகழின் ஒரு பகுதியை தாங்களும் பெற்று காதலிகளை வென்றனர்.

கே.எஸ்.ராஜாவின் வாழ்க்கையைப்பற்றி குறைவாகவே இணையத்தில் உள்ளது. இலங்கை ஒலிபரப்புநிலைய ஊழியராக இருந்த கனகரத்தினம் ஸ்ரீஸ்கந்தராஜா யாழ்ப்பாணம் காரைநகரில் பிறந்தார். தந்தை மருத்துவர். தாயார் ஆசிரியை. நான்கு தமக்கையரும் மருத்துவர்கள். 1966ல் கொழும்பு ராயல் கல்லூரியில் பள்ளிப்படிப்பை முடித்தார். இலங்கைப்பற்கலைக் கழகத்திலும் பின்னர் லண்டன் பல்கலைக்கழகத்திலும். கணிதம் மற்றும் வேதியியலில் பட்டம் பெற்றார். இலங்கைப் பல்கலைக்கழகத்தில் சிறிது காலம் விரிவுரையாளராகப் பணியாற்றிய பின்னர் இலங்கை வானொலியில் பணியில் சேர்ந்தார்.

1983ல் இலங்கையில் இனக்கலவரம் ஆரம்பித்தபோது ராஜா தமிழகத்திற்குச் சென்றார். அங்கே தமிழர்ஒற்றுமை சார்ந்த சில பாடல்களை ஒலிபரப்பியமையால் அவரை தமிழர் சிலரே காட்டிக்கொடுத்த்தாகவும், இலங்கை ராணுவத்தால் கைதுசெய்யப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டமையால் தமிழகத்திற்கு வந்த்தாகவும் அவர் விகடனுக்கு அளித்த பேட்டியில் சொன்னார். தமிழகத்தில் பத்மநாபா, வரதராஜப்பெருமாள் போன்றவர்களால் ஆரம்பிக்கப்பட்ட இ.பி.ஆர்.எல்.எஃப் அமைப்புடன் இணைந்து செயல்பட்டார். ஆனால் அவருக்கு பெரிய அளவில் அரசியல் ஈடுபாடு இருக்கவில்லை. எதனுடனும் இணைந்து அவர் செயல்படவுமில்லை. அனைத்து இயக்கங்களும் ஒன்றுபடவேண்டும் என்ற எண்ணம் கொண்டிருந்தார். அதையும் விகடன் பேட்டியில் சொல்கிறார்

1987ல் இந்தியா இலங்கை அமைதி ஒப்பந்தம் உருவானது. ஈ.பி.ஆர்.எல்.எஃப் இந்தியச் சார்புகொண்ட அமைப்பாதலால் இந்திய ஆதரவுடன் அது இலங்கையில் வேரூன்றியது. ராஜா இலங்கை திரும்பி வானொலி அறிவிப்பு வேலைக்கு மீண்டும் சேர்ந்தார். அவரை எவரோ கடத்தி கொன்று கொழும்பு கடற்கரையில் வீசிவிட்டுச் சென்றனர். அவருடைய கொலை விடுதலைப்புலிகளால் செய்யப்பட்டது என்றே பரவலாகக் கருதப்படுகிறது. ஏனென்றால் அன்று ஈபிஆர்எல்எஃப் அமைப்பின் முதன்மை எதிரியாக இருந்த்து புலிகள் அமைப்பே. ஆனால் டக்ளஸ் தேவானந்தாவால் நடத்தப்பட்ட அரசு ஆதரவு அமைப்பான ஈழ மக்கள் ஜனநாயக்க் கட்சியினரால் கொல்லப்பட்ட்தாக அக்கட்சியிலிருந்து வெளியேறிய டி.மதிவாணன் என்பவர் சொன்னதாக அனைத்து ஊடகங்களிலும் இப்போது செய்தி தொடர்ச்சியாகப் பதிவுசெய்யப்படுகிறது.டக்ளஸ் தேவானந்தாவின் அமைப்பு ஏன் கே.எஸ்.ராஜாவைக் கொல்லவேண்டும் என்ற கேள்விக்கு மறுமொழி இல்லை. உண்மையை இன்று உணர்வது மிகடினம்.

கே.எஸ்.ராஜா இலங்கைக்குத் திரும்பி மீண்டும் வானொலியில் வேலைசெய்யவேண்டும் என்பதை மட்டுமே தன் ஆசையாக விகடன் பேட்டியில் சொல்கிறார். அது எளிய கலைஞனின் ஆசை. அரசியல் இரும்புச்சக்கரம் கொண்ட வாகனம். அது மென்மையான நத்தைகளைத்தான் அரைத்துச்செல்கிறது. கலைஞர்கள் ஓடில்லாத நத்தைகள்.

ஜெ

***

ksராஜா-பற்றிய-ஒரு-குறிப்பு-பழைய-விகடனில்-இருந்து

 

https://www.jeyamohan.in/110424#.Wy8ZdBbTVR4

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Quote

ஜெயமோகன் தளத்தில் உள்ள இந்தச் சுட்டி யாழ்களத்தில் ஒட்டப்பட்ட பழைய பதிவைத்தான் காட்டுகின்றது. கூகிள் ஆண்டவர் யாழ் களத்தில் உள்ள பொக்கிஷங்களை மேலே தள்ளிவிடுகின்றாராக்கும்?

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
55 minutes ago, கிருபன் said:

....

என் இளமையில் ரேடியோ அவ்வளவாக கிடையாது. மர்ஃபி வால்வ் ரேடியோதான். பெரிய தேக்குபெட்டியில் பச்சை ஒளிப்பரப்புடன் பொன்னிற திருகு குமிழ்களுடன் நவீனத் தொழில்நுட்பத்தின் காட்சி அடையாளமாக வீடுகளில் உயரமாக அமைக்கப்பட்ட பீடங்களில் அமர்ந்திருக்கும். ஒலிக்காதபோது மஞ்சள், நீலம், சிவப்பு நிறங்களில் வெல்வெட் திரைபோட்டு மூடி வைத்திருப்பார்கள். அப்பாக்களோ மூத்த அண்ணன்களோதான் தொடமுடியும். அக்காக்கள் கெஞ்சிக்கேட்டுத்தான் அதை போட்டு கேட்கவேண்டும்.

குமரிமாவட்டத்தில் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் தெளிவாகவே எடுக்கும். நெல்லையும் திருவனந்தபுரமும் அதற்கு அடுத்தபடியாகத்தான். திருச்சியும் மதுரையும் கரகரக்கும். ஆகவே தமிழிசை என்றால் இலங்கை வானொலிதான். அன்றெல்லாம் படிப்பு முடித்து திருமணத்திற்குக் காத்திருக்கும் அக்காக்களின் உலகமே வானொலிதான். திரைப்படப் பாடல்கள், திரைப்பட ஒலிச்சித்திரங்கள், வானொலி நாடகங்கள் என அதிலேயே வாழ்வார்கள். மர்ஃபி வானொலிக்கு வலை போன்ற அதிர்வுவாங்கி தேவை. அதை வீட்டிலிருந்து அருகே உள்ள தென்னை மரம் வரை இழுத்துக் கட்டி வைப்போம். அப்படியும் மழைநாட்களில் கரகரப்புதான் மைய ஒலியொழுக்காக இருக்கும். பயிற்சி ஏட்டில் கோடுமீது எழுத்துக்கள் போல கரகரப்பின்மேல் பாடல்கள், பேச்சுக்கள்.

எழுபதுகளில்தான் டிரான்ஸிஸ்டர் ரேடியோ பிரபலமாக ஆரம்பித்த்து. வால்வ் ரேடியோக்களின் கரகரப்பு மறைந்த்து. வானொலியை குழந்தைபோல அருகே வைத்துக்கொண்டு அக்காக்கள் இரவு துயில்கொண்டார்கள். மானசீக்க் காதலனைப்போல அது அவர்களை கொஞ்சிக்கொண்டே இருந்த்து.

....

https://www.jeyamohan.in/110424#.Wy8ZdBbTVR4

இலங்கை வானொலி இரண்டு மத்திய அலைவரிசைகளில் ஒலிபரப்பியதாக ஞாபகம் இருக்கிறது. ஒன்று மண்டைத் தீவிலிருந்தும், மற்றொன்று கொழும்பிலிருந்தும் என நினைக்கிறேன்.

இலங்கை வானொலி நிகழ்ச்சிகளை வட தமிழ்நாட்டின் கடலூர் வரை கேட்டுள்ளேன்.. கால நிலையைப் பொறுத்து சில நேரம் ஒலி இழுக்கும்.

எங்களுக்கு சிலோனை அறிமுகப்படுத்தியதே இலங்கை வானொலிதான். அதன் மூலமே ஈழத்தமிழை, ஈழத்தமிழரை நாங்கள் அறிந்தோம். ஒருநாள் இலங்கை வானொலி ஒலிபரப்பு நின்றுவிட்டால் எங்களின் அவயங்களில் ஒன்றை இழந்தது போலவே இருக்கும். 'அகில கிந்திய ரேடியோ'க்களை நாங்கள் அடியோடு வெறுத்து ஒதுக்கவும் இலங்கை வானொலிதான் காரணம்.

பேச்சுவழக்கில் பல தூய தமிழ் சொற்களை பயன்படுத்த இலங்கை வானொலியே எங்களுக்கு பழக்கப்படுத்தியது..(அம்மம்மா.. அப்பப்பா.. இன்னும் பல..). மிகச் சரளமாக தூய தமிழால் ஈழத்தமிழர்கள் உரையாடும்பொழுது சில சமயம் பொறாமையாகவும், நாமும் அவ்வாறு பழகவில்லையே என்ற ஏக்கமும் இருக்கும்.

சிறுவயதில் எங்கள் வீட்டிலிருந்த பிலிப்ஸ் வால்வு ரேடியோ, பிலிப்ஸ் பகதூர் டிரான்ஸிஸ்டர் போன்றவற்றை அருகிலேயே வைத்துக்கொண்டு நான் தூங்குவது வழக்கம்.

மாலை 05:58க்கு தமிழ்ச்சேவை இரண்டின் அன்றைய நிகழ்ச்சிகள் நிறைவு பெறும்.. அதுவரை கிராமத்தின் அனைத்து வீடுகள், டீக்கடைகளில் சத்தமாக ஒலித்துக்கொண்டிருந்த இலங்கை வானொலி பாடல்கள் நின்றதும் ஊரே நிசப்தமாகிவிடும்.

அன்றைய அடுத்த பொழுது போக்கு ஊரின் எல்லையிலுள்ள டூரிங் டாக்கீஸ்தான்.

இலங்கை வானொலி மட்டும் இல்லையென்றால், தமிழகத்துடனான ஈழத்தமிழர்களின் உறவுப்பாலம் இவ்வளவு நெருக்கமாக இருந்திராது. இன்றும் நான் யாழை, ஈழத்தை நேசிப்பதற்கு இலங்கை வானொலி இட்ட அடித்தளமே காரணம்.

.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 கே.எஸ்.ராஜா அற்புதமான அறிவிப்பாளர்.

வீட்டுக்கு வீடு வானொலிப் பெட்டிகளுக்கு முன்னால் மக்களை கட்டிப் போட்ட அழகான, வேகமான, துல்லியமான குரலுக்கு சொந்தமானவர்.

E6995_F28-5_B01-4_C04-9069-84_E029_A6_B9

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் வரைந்த இந்தச் சிரிப்பு மிகவும் நன்றாக வந்துள்ளது கவி அருணாசலம் ஐயா! விரைவாகவும் வரைந்தமைக்கு நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, ராசவன்னியன் said:

இலங்கை வானொலி இரண்டு மத்திய அலைவரிசைகளில் ஒலிபரப்பியதாக ஞாபகம் இருக்கிறது. ஒன்று மண்டைத் தீவிலிருந்தும், மற்றொன்று கொழும்பிலிருந்தும் என நினைக்கிறேன்.

இலங்கை வானொலி நிகழ்ச்சிகளை வட தமிழ்நாட்டின் கடலூர் வரை கேட்டுள்ளேன்.. கால நிலையைப் பொறுத்து சில நேரம் ஒலி இழுக்கும்.

எங்களுக்கு சிலோனை அறிமுகப்படுத்தியதே இலங்கை வானொலிதான். அதன் மூலமே ஈழத்தமிழை, ஈழத்தமிழரை நாங்கள் அறிந்தோம். ஒருநாள் இலங்கை வானொலி ஒலிபரப்பு நின்றுவிட்டால் எங்களின் அவயங்களில் ஒன்றை இழந்தது போலவே இருக்கும். 'அகில கிந்திய ரேடியோ'க்களை நாங்கள் அடியோடு வெறுத்து ஒதுக்கவும் இலங்கை வானொலிதான் காரணம்.

பேச்சுவழக்கில் பல தூய தமிழ் சொற்களை பயன்படுத்த இலங்கை வானொலியே எங்களுக்கு பழக்கப்படுத்தியது..(அம்மம்மா.. அப்பப்பா.. இன்னும் பல..). மிகச் சரளமாக தூய தமிழால் ஈழத்தமிழர்கள் உரையாடும்பொழுது சில சமயம் பொறாமையாகவும், நாமும் அவ்வாறு பழகவில்லையே என்ற ஏக்கமும் இருக்கும்.

சிறுவயதில் எங்கள் வீட்டிலிருந்த பிலிப்ஸ் வால்வு ரேடியோ, பிலிப்ஸ் பகதூர் டிரான்ஸிஸ்டர் போன்றவற்றை அருகிலேயே வைத்துக்கொண்டு நான் தூங்குவது வழக்கம்.

மாலை 05:58க்கு தமிழ்ச்சேவை இரண்டின் அன்றைய நிகழ்ச்சிகள் நிறைவு பெறும்.. அதுவரை கிராமத்தின் அனைத்து வீடுகள், டீக்கடைகளில் சத்தமாக ஒலித்துக்கொண்டிருந்த இலங்கை வானொலி பாடல்கள் நின்றதும் ஊரே நிசப்தமாகிவிடும்.

அன்றைய அடுத்த பொழுது போக்கு ஊரின் எல்லையிலுள்ள டூரிங் டாக்கீஸ்தான்.

இலங்கை வானொலி மட்டும் இல்லையென்றால், தமிழகத்துடனான ஈழத்தமிழர்களின் உறவுப்பாலம் இவ்வளவு நெருக்கமாக இருந்திராது. இன்றும் நான் யாழை, ஈழத்தை நேசிப்பதற்கு இலங்கை வானொலி இட்ட அடித்தளமே காரணம்.

.

உங்களைப்போல் நாங்களும் திருச்சி,சென்னை வானொலிகளை  தவறாது கேட்போம். அதிலும் திருச்சி வானொலியில் வயலும் வாழ்வும் மற்றும் வெள்ளிக்கிழமைகளில்  ஒரு குறிப்பிட்ட நேரத்தில் புதிய பாடல்களும் ஒலிபரப்புவார்கள். காலநிலை சரிவந்தால் சென்னை வானொலியின்  இரவு நேர தேன்கிண்ணம் எம் காதுகளுக்கு தேனூட்டும்.

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

மதுரக்குரல் மன்னன்…..

ksr-300x225.jpg

சாலையிற் தார் உருகிச் செல்லும் நெருப்பு வெயிலில் யாழ்ப்பாணத்தின் சிறு நகரம் ஒன்றிற்குள்ளால் எங்களது வாகனம் சென்றுகொண்டிருந்தது. வாகனத்திற்குள் எனது சகாக்கள் முழு ஆயுதபாணிகளாகப் போர்க்கோலத்திற் தயாராயிருந்தார்கள். வாகனத்தின் தலையில் ஒலிபெருக்கிகள் இரண்டு கட்டப்பட்டிருந்தன. வாகனத்தின் பின்இருக்கையில் நான் அமர்ந்திருந்து ஒலிவாங்கியில் அறிவிப்புச் செய்துகொண்டிருந்தேன். காலையிலிருந்து நாங்கள் இந்த வாகனத்திற் சிறு நகரங்களையும் கிராமங்களையும் அங்குலம் அங்குலமாக அளந்தவாறே வந்துகொண்டிருக்கிறோம். அந்தச் சிறு நகரத்தில் எங்களது வாகனம் ஒரு நிமிடம் நின்று கிளம்பியபோது வாகனத்திற்குள் புதிதாக ஏறி என்னருகே உட்கார்ந்தவரிடம் நான் ஒலிவாங்கியைக் கைமாற்றினேன். இனி அவர்தான் அறிவிப்புச் செய்யப்போகிறார். அந்தக் கறுத்த, சிறுத்த உருவமுடைய மனிதரிடம் அவர் செய்ய வேண்டியிருந்த அறிவிப்பு எழுதப்பட்டிருந்த காகிதத்தைக் கொடுத்தேன். காகிதத்தை வாங்கியவர் தனது தொப்பியை வருடியவாறே காகிதத்தை வரி வரியாகப் பார்த்துக்கொண்டிருந்த போது நான் அவரையே உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தேன். அவர் அக்காலத்தில் என்னைப் போன்ற ஆயிரக்கணக்கான பொடியன்களின் கனவு நாயகன், மதுரக்குரல் மன்னன் கே.எஸ். ராஜா.

எனக்கு ஏழெட்டு வயதிருக்கும்போது என் தந்தை வழிப் பாட்டி இறந்துபோனார். தனித்துப்போன எங்கள் தாத்தா – நாங்கள் அவரை அப்பு என்றுதான் அழைப்போம் – தனது உடைமைகளுடன் எங்கள் வீட்டிற்கே வந்துவிட்டார். அப்புவிடம் உடைமைகளாக ஒரு துணிமூட்டையும் சாகும்போது ஆச்சி காதில் போட்டிருந்த அரைப் பவுண் தோடும் ஒரு ரேடியோவும் இருந்தன. அப்பு ஒரு விறுக்கர். எத்தனை கிலோ மீற்றர்கள் பயணிக்க வேண்டியிருந்தாலும் ஆள் நடந்துதான் போவார். பஸ்ஸில் ஏறவே மாட்டார். நத்தாருக்கோ வருசத்திற்கோ சுடச் சுடச் சோறும் இறைச்சிக் கறியும் கொடுத்தாற் கூட அதற்குள் ஒருசெம்பு பச்சைத் தண்ணீர் ஊற்றித் தான் பிசைந்து சாப்பிடுவார். எப்போது பார்த்தாலும் “எனக்கென்ன குறை? என்னட்ட அரைப் பவுண் தோடும் ரேடியோவும் இருக்கு” என்று சொல்லிக்கொண்டேயிருப்பார்.

ஒரு சிங்கள நாட்டார் கதையில் கமறாலவின் மனைவி அவள் வீட்டு உரலை ஏணியாகவும் உட்காரும் ஆசனமாகவும் விளக்கு ஏற்றி வைக்கும் பீடமாகவும் கதவுக்கு முட்டுக் கொடுக்கவும் பயன்படுத்துவாளே! அது போலவே நாங்கள் அப்புவின் ரேடியோவைப் பாடல்கள் நிகழ்ச்சிகள் கேட்கவும் கடிகாரமாயும் அலாரமாகவும் அவசரத்துக்கு அடவு வைக்கும் பொருளாகவும் பயன்படுத்திக்கொண்டோம்.

பத்திரிகைகள், சஞ்சிகைகள் படிக்கவோ திரைப்படம் பார்க்கவோ வசதி வாய்ப்புக்கள் என் சுற்று வட்டாரத்திலேயே கிடையாது. ரூபவாஹினி என்ற பெயரைக் கூட நாங்கள் அப்போது கேள்விப்பட்டிருக்கவில்லை. அப்பு கொண்டுவந்த ரேடியோ எனக்குப் புதியதோர் கனவுலகத்தையே திறந்து வைத்தது. திரைப்படத்தின் மூலமும் கட்சியின் மூலமும் எம்.ஜி.ஆரின் அதி தீவிர ரசிகர்களானவர்கள் ஆயிரமாயிரமுண்டு. ஆனால் நான் ஆயிரத்தில் ஒருவன். ரேடியோவில் எம்.ஜி.ஆரின் பாடல்களைக் கேட்டுக் கேட்டே முளைக்கும்போதே எம். ஜி. ஆர் ரசிகனாகவே நான் முளைத்தேன். அநேகமாக எம்.ஜி. ஆரின் அத்தனை ‘தத்துவப்’ பாடல்களையும் நான் மனப்பாடம் பண்ணிவைத்திருந்தேன். இன்று வரை எனக்கு அந்தப் பாடல்களில் ஒருவரி கூட மறந்து விடவில்லை.

நான் ஆறாம் வகுப்போ ஏழாம் வகுப்போ படிக்கும்போது ஒரு சம்பவம் நிகழ்ந்தது. நான் இங்கே தீவில் படித்துக்கொண்டிருந்தேன். எனது அண்ணர் எட்டாம் வகுப்போடு படிப்பு ஏறாமல் பள்ளிக்குப் போகாமல் நின்று விட்டார். அப்போது பப்பா யாழ்ப்பாணம் சின்னக்கடைச் சந்தையில் சாக்கு விரித்து தேசிக்காய், இஞ்சிக் கிழங்கு வியாபாரம் செய்துகொண்டிருந்தார். பள்ளிக்குப் போகாமல் நின்றிருந்த அண்ணரையும் பப்பா தனக்கு உதவியாய் சந்தைக்குக் கூட்டிப் போய் வந்துகொண்டிருந்தார். இதனால் சைக்கிளில் போகவும் வரவும் அண்ணருக்கு யாழ் நகரத்திலுள்ள சினிமாத் தியேட்டர்களின் முன்பு வைத்திருக்கும் ‘கட் அவுட்’டுக்களையும் நகரத்துச் சுவர்களில் ஒட்டியிருக்கும் திரைப்பட விளம்பரச் சுவரொட்டிகளையும் கண்டுகளிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. ஒவ்வொருநாள் இரவிலும் அந்தக் ‘கட் அவுட்’டுக்களைப் பற்றியும் சுவரொட்டிகளைப் பற்றியும் அண்ணர் எனக்குக் கதை கதையாகச் சொன்னார். தங்களோடு சந்தைக்கு வந்தால் என்னாலும் ‘கட் அவுட்’டுக்களைப் பார்க்க முடியும் என்றார் அண்ணர். திரைப்படங்கள் பார்ப்பதற்காக அல்ல! வெறும் கட் அவுட்டுக்களைப் பார்ப்பதற்காகவே நான் பள்ளியிலிருந்து நின்றுவிடத் தயாரானேன். பப்பாவிடம் அடி வாங்காமல் ஏதாவதொரு தகுந்த காரணத்தைக் கூறி நான் பள்ளியிலிருந்து நின்றுவிட வேண்டும். நான் ஒரு புத்திசாலித்தனமான திட்டத்தை உருவாக்கிவிட்டு அதை நிறைவேற்றும் தருணத்திற்காகக் காத்திருக்கலானேன்.

ஒருநாள் முன்னிரவிற் சந்தையிலிருந்து அப்போதுதான் திரும்பியிருந்த பப்பா முற்றத்திற் சாய்வு நாற்காலியில் அமைதியாகப் படுத்திருந்தார். நான் முற்றத்தில் ஆட்டுக்குப் புண்ணாக்குத் தீத்திக் கொண்டிருந்தேன். திடீரென பப்பா என்னைக் கூப்பிட்டு “மகன் படிப்பெல்லாம் எப்பிடிப் போகுது?” என்று விசாரித்தார். ஆகா! இது தான் நான் காத்திருந்த தருணம். இதை நழுவ விடலாமா? பப்பா வழக்கத்திற்கு மாறாக இன்று கொஞ்சம் சாந்தமாய் இருப்பது போலவும் தெரிகிறது. நான் எனது திட்டத்தின் முதற் பகுதியை நிறைவேற்றத் தொடங்கினேன்.

“பப்பா எனக்குப் படிக்க கஸ்ரமாக்கிடக்கு நான் பள்ளிக்கு போகயில்ல…”
“ஏன் என்ன கயிட்டம்?”
“எனக்கு படிக்கிறதெல்லாம் மறந்துபோகுது பப்பா”
“சரி கயிட்டமெண்டால் விடு, பள்ளிக்கூடத்த விட்டுப்போட்டு என்ன செய்யப் போறாய்?”
“நானும் உங்களோட சந்தைக்கு வாறன் பப்பா”
“சரி நாளைக்கு என்னோட யாவாரத்துக்கு வா! இப்ப ஒரு பாட்டுப் படி பார்ப்பம்…கேப்பம்!”

என்னுடைய திட்டம் இவ்வளவு சுலபமாக வெற்றியீட்டும் என்று நான் எண்ணியிருக்கவில்லை. பப்பா தண்ணியைப் போட்டால் அம்மாவைத்தான் பாடச் சொல்லிக் கரைச்சல் கொடுப்பார். ஒருநாளும் இல்லாத திருநாளாக இன்று என்னைப் பாடச் சொல்கிறார். இன்ப அதிர்ச்சியில் நின்றிருந்த நான் அப்பாவின் எதிரே முற்றத்து மணலில் உட்கார்ந்திருந்து பாடத் தொடங்கினேன்.

“பாடல் இடம் பெற்ற படம்: வா ராஜா வா!, பாடியவர்: சீர்காழி கோவிந்தராஜன், பூவை செங்குட்டுவனின் பாடல் வரிகளுக்கு இசையமைத்தவர் குன்னக்குடி வைத்யநாதன்” என்று அறிவிப்புச் செய்யாத குறைதான். மற்றப்படிக்கு எந்தக் குறையுமில்லாமல் “இறைவன் படைத்த உலகையெல்லாம் மனிதன் ஆளுகின்றான், மனிதன் வடித்த சிலையிலெல்லாம் இறைவன் வாழுகின்றான்” என்று முழுமையாகப் பாடலைப் பாடி முடித்தேன். இந்தப் பாட்டைப் பாடுவதில் ஒரு நுணுக்கமுள்ளது. சரணத்தின் ஈற்றில் “இசையில் மயங்கி இறங்கி வருகின்றான்/இறைவன் இறங்கி வருகிறான்” என அரை மாத்திரையளவே நிறுத்தி மறுபடியும் பல்லவிக்குக்கு உச்சஸ்தாயில் சீர்காழி எகிறுவார். நான் அந்தப் பாவத்தையெல்லாம் பாடலில் கொண்டு வந்திருந்தேன். பாடல் முடிந்தது தான் தாமதம், அதுவரை கண்களை மூடிச் சாய்வு நாற்காலியில் படுத்திருந்த பப்பா துள்ளி எழுந்து சாய்வு நாற்காலியின் துணியில் சொருகப்பட்டிருந்த தடியை உருவியெடுத்துக்கொண்டு “அடப் பு********டி, ஒரு வரி மறக்காமல் சினிமாப் பாட்டுப் பாடத் தெரியுது… ஆனால் உனக்குப் பள்ளிக்கூடப் பாடம் மறக்குதோ?” என்று உறுமியவாறே என்மீது பாய்ந்தார். தடபடவெனத் தடியடிகள் என் தேகத்தில் விழுந்தன. சும்மாயிருந்த அம்மாவுக்கும் இரண்டு அடிகள் போட்ட பப்பா அம்மாவைப் பார்த்து “வே* எல்லாம் நீ வளர்த்த வளர்ப்புத்தானடி” என்று பற்களை நெருமினார். பப்பாவுக்குத் தெரியாது; நான் அம்மா வளர்த்த பிள்ளையல்ல, நான் ரேடியோ வளர்த்த பிள்ளை.

‘தணியாத தாகம்’, ‘இரைதேடும் பறவைகள்’, ‘கோமாளிகள்’ போன்ற தொடர் நாடகங்களும் ‘கதம்பம்’, ‘முகத்தார் வீடு’ போன்ற உரைச் சித்திரங்களும் ‘வரலாற்றில் ஓர் ஏடும் குறிப்பும் சலவாத்தும்’ சொல்லும் முஸ்லீம் நிகழ்ச்சியும் கிழமை தோறும் வரும் ஒலிச் சித்திரங்களும் என்னை ரேடியோவுக்கு அடிமையாக்கிப் போட்டன. அந்தக் காலகட்டத்தில் ரேடியோவில் ஒலிபரப்பாகிய நூற்றுக் கணக்கான திரைப்படப் பாடல்கள் பாடல் இடம் பெற்ற படம், பாடியவர்கள், எழுதியவர், இசையமைத்தவர் என்பன போன்ற குறிப்பான தகவல்களோடு முழுமையாக எந்தச் சிரமமும் இல்லாமலேயே என் சின்ன மண்டைக்குள் தரவிறக்கம் செய்யப்பட்டன. பாடசாலையில் ஆசிரிய ஆசிரியைகளுக்குத் திரைப்படப் பாடல்களில் ஏதும் சந்தேகமோ கேள்விகளோ இருந்தால் அவர்களுக்குப் பாடல்களைப் பற்றிய விபரங்கள் தேவைப்பட்டால் எடுத்த வீச்சுக்கு “அழைத்து வாருங்கள் 8 Bயில் படிக்கும் அன்ரனிதாசனை” என்றுதான் கூப்பிட்டார்கள். எங்கள் கிராமத்துச் சண்டியர் ‘குத்துக்கார’ இரத்தினம் கூட என்னைக் கூப்பிட்டு வைத்து எம். ஜி. ஆரின் பாடல்களைப் பாடச் சொல்லிக் கேட்குமளவிற்கு எனது கியாதி என்னைச் சுற்றி ஆகக் குறைந்தது ஒரு கிலோ மீற்றருக்குப் பரவியிருந்தது. நானொரு நடமாடும் குட்டி ‘ரேடியோ சிலோனா’கக் கிராமத்தை வலம் வந்துகொண்டிருந்தேன்.

அப்போதைய இலங்கை வானொலியின் உச்ச நட்சத்திரங்களான அப்துல் ஹமீட், முகத்தார் ஜேசுரட்ணம், அப்புக்குட்டி ராஜகோபால், உபாலி செல்வசேகரன், சிறீதர் பிச்சையப்பா, கே. எஸ் .பாலச்சந்திரன், எஸ்.எஸ். கணேசபிள்ளை போன்றவர்கள் போலெல்லாம் பேச முற்பட்டதோடு மட்டுமல்லாமல் என்னைத் தன் மழலைக் குரலால் மயக்கி வைத்திருந்த கமலினி செல்வராசன் போலப் பேசவும் நான் பெரும் பிரயத்தனங்களில் ஈடுபட்டேன். எதிர்காலத்தில் மேடைகளில் நடிக்க வேண்டும் அல்லது ரேடியோ சிலோனிற்குள் புகுந்துகொள்ள வேண்டுமென்ற இலட்சியத்துடன் நான் இந்தக் கடும் பயிற்சிகளை மேற்கொள்ளவில்லை. நான் என் அன்றாட வாழ்க்கையிலேயே இவர்களைப் போலத்தான் பேசிக்கொண்டு திரிந்தேன். ஆடு மேய்க்கும் போது முகத்தார் போல அகடவிகடம் செய்தேன். பஸ்ஸில் தொற்றி ஏறியபடியே “அண்ண ரைட்” என்று குரல் கொடுத்தேன். கிராமத்துக்கு நாற்காலி பின்ன வரும் சிங்களவரான ‘பாஸ்’ ஐயாவோடு உபாலி செல்வசேகரன் போலக் கொச்சைத் தமிழில் கதைத்தேன். தொட்டதற்கெல்லாம் கமலினி போலச் செல்லமாகச் சிணுங்கினேன். இவ்வளவு பேரையும் போலச் செய்ய முயன்றவன் கே.எஸ். ராஜாவைப் போலப் பேச ஆசைப்பட்டிருக்க மாட்டேனா என்ன?

இலங்கை வானொலியிலேயே எனக்கு ஆகவும் பிடித்த நிகழ்ச்சி திரைவிருந்து தான். அப்போதெல்லாம் வருடம் முன்னூற்று அறுபத்தைந்து நாளும் திரைப்படங்கள் பற்றிய கனவிலேயே நான் மூழ்கிக் கிடப்பேன். ஆனால் வருடத்திற்கு ஒன்றிரண்டு திரைப்படங்களுக்கு மேற் பார்க்க வாய்ப்புக் கிடைக்காது. அப்போது கலரி ரிக்கட் ஒரு ரூபாதான். ஆனால் அதற்கே பெரும் தட்டுப்பாடு. அப்படி ரூபாய் கிடைத்தாலும் படம் பார்க்கச் செல்வதற்கு வீட்டில் அனுமதிக்க மாட்டார்கள். வீட்டாருக்குத் தெரியாமலும் படம் பார்க்கப் போக முடியாது. யாழ்ப்பாணத்திலிருந்த பதினொரு தியேட்டர்களிலும் எந்தத் தியேட்டரில் நான் களவாகப் படம் பார்த்தாலும் பப்பாவுக்குத் தகவல் தெரிந்துவிடுகிறது. இந்த உளவறியும் விசயத்திலெல்லாம் பொட்டம்மான் என் பப்பாவிடம் பிச்சை வாங்க வேண்டும். மேதினத்தில் மட்டும் படம் பார்க்கச் செல்ல எனக்கு அனுமதி கிடைக்கும். மேதினமன்று நகரத்தின் எல்லாத் திரையரங்குகளிலும் ஐம்பது சதம் மட்டுமே நுழைவுக் கட்டணம். அந்த ஐம்பது சத நுழைவுச் சீட்டு எல்லா வகுப்புக்களிற்கும் செல்லுபடியாகும். நான் மே தினங்களில் ஐம்பது சதத்துடன் பல்கனியில் இருந்தும் படம் பார்த்திருக்கிறேன்.

ஒரு திரைப்படம் பார்க்கும் மகிழ்ச்சிக்கு நிகராகக் கே.எஸ் ராஜா வானொலியில் நிகழ்த்திய திரைவிருந்து நிகழ்ச்சியும் எனக்கு மகிழ்ச்சியைத் தந்தது. சில தருணங்களில் அந்த நிகழ்ச்சி ஒரு திரைப்படத்திலும் மேலாக எனக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தது. ‘வீட்டுக்கு வீடு வானொலிப் பெட்டிக்கருகில் ஆவலுடன் காத்திருக்கும் ரசிசிசி….கப் பெருமக்களுக்கு’ என்று ஆரம்பித்து ‘வணக்கம் கூறி விடைபெறுவது கே.எஸ்.ராஜா’ என்று மதுரக்குரல் மன்னன் முடிக்கும் வரை நான் கள்ளால் மயங்குவது போல அதைக் கண்மூடி வாய் திறந்தே கேட்டிருப்பேன்.

மிகவும் எளிமையான ஒலி ஒட்டு வேலைகள் மூலமும் நடிகர்களின் படிமங்களுக்குத் தகுந்த வசனங்களைப் பொருத்தமான இடங்களில் ஒலிக்கவிட்டும் நிகழ்ச்சியை முடிக்கும் போது ஒரு ‘தொக்கு’ வைத்து முடித்தும் கே.எஸ். ராஜா தனது பாணியை உருவாக்கியிருந்தார். யாழ்ப்பாணத்தில் ராஜா திரையரங்கில் கலைஞரின் வசனத்தில் ஜெய்சங்கர், எம்.ஆர். ராதா நடித்த ‘வண்டிக்காரன் மகன்’ ஓடிக்கொண்டிருக்கிறது. அதே நேரத்தில் சிறீதர் திரையரங்கில் எம். ஜி. ஆரின் ‘மீனவ நண்பனும்’ ஓடிக்கொண்டிருக்கிறது. திரைவிருந்து நிகழ்ச்சியில் இந்த இரண்டு படங்களுக்கும் சேர்த்து கே.எஸ். ராஜா நிகழ்ச்சி செய்தார். நிகழ்ச்சி முடியும் தருவாயில் ராஜா ஓர் ஒட்டு வேலையைச் செய்வார். முதலில் வண்டிக்காரன் மகனிலிருந்து எம். ஆர். ராதாவின் குரல் “ஏய்! சுட்டுவிடுவேன்… சுட்டுவிடுவேன்” என்றொலிக்கும். அந்த இடத்தில் கே.எஸ். ராஜா அதை அப்படியே நிறுத்தி மீனவ நண்பனிலிருந்து எம். ஜி.ஆரின் குரலை ஒலிபரப்புவார். “அய்யா பெரியவரே, இதற்கெல்லாம் நான் பயப்பட மாட்டேன் துப்பாக்கிச் சூடுபட்ட அனுபவம் எனக்கு ஏற்கனவேயுண்டு” என்று எம்.ஜி.ஆர் சொல்வார். அந்த நேரத்தில் என் ஆன்மா காற்றிலே மிதக்கும். ராஜா சின்ன விசயங்களின் கடவுளாயிருந்தார்.

‘நினைத்ததை முடிப்பவன்’ திரைப்படத்துக்கு ராஜா விளம்பரம் செய்யும் போது “இந்த ரஞ்சித்துக்கு முன்னால யாரும் சிகரட் பிடிக்கக் கூடாது அண்டர்ஸ்ராண்ட்!” என்ற வசனத்தை மறுபடியும் மறுபடியும் ஒலிபரப்புவார். இதைத் தொட்டு இந்த ‘அண்டர்ஸ்ராண்ட்’ என்ற வார்த்தை எங்களை மயக்கிப் போட்டு எங்களுடனேயே நிழல்போல அலைந்தது. “குழை வெட்டப் போவமா அண்டர்ஸ்ராண்ட்!”, “ரெண்டு அவுன்ஸ் புளி தாருங்கோ அண்டர்ஸ்ராண்ட்” என வார்த்தைக்கு வார்த்தை அண்டர்ஸ்ராண்ட் என்று நாங்கள் சுற்று வட்டாரத்தையே கலக்கிக்கொண்டு திரிந்தோம்.

நிகழ்ச்சிகளை முடித்து வைக்கும் போதும் தன் கை வந்த கலையான ஒட்டு வேலைகளால் ராஜா எங்களை இன்ப லாகிரியில் ஆழ்த்துவார். சிவாஜிகணேசன் நடித்த ‘தீபம்’ திரைப்பட நிகழ்ச்சியை முடிக்கும் போது ‘மீண்டும் சந்திக்கும் வரை வணக்கம் கூறி விடைபெறுவது’ எனச் சொல்லி ‘ராஜா யுவராஜா’ என்ற பாடல் துண்டை ஒலிக்கவிடுவார். ‘நாளை நமதே’ திரைப்பட நிகழ்ச்சியை முடிக்கும் போது ‘மீண்டும் சந்திக்கும் வரை வணக்கம் கூறி விடைபெறுவது’ எனச் சொல்லி படத்திலிருந்து ‘மை நேம் இஸ் ராஜா’ என்ற வசனத் துண்டை ஒலிக்கச் செய்வார். ‘நீயா’ திரைப்பட நிகழ்ச்சியை முடிக்கும் போது படத்திலிருந்து ‘ராஜா என்னை விட்டுப் போறீங்களா?’ என்ற வசனத் துண்டை சிறீபிரியாவின் குரலில் ஒலிக்கவிட்டு ‘மீண்டும் அடுத்த வாரம் சந்திக்கும் வரை வணக்கம் கூறி விடைபெறுவது கே.எஸ். ராஜா’ என்பார்.

யாழ்ப்பாணத்தையே தாண்டியிருக்காத எனக்கு நாட்டின் மூலை முடுக்குகளிலிருந்த திரையரங்குகளை எல்லாம் ராஜா காற்றலைகளில் அறிமுகப்படுத்தி வைத்தார். “செல்லமஹால் கொட்டாஞ்சேனை – சமந்தா தெமட்டகொட – ராஜி திருமலை – ஈஸ்வரி வாழைச்சேனை – சிறீதர் யாழ்நகர் வெண்திரைகளில் இன்றே பார்த்து மகிழுங்கள் ‘ஹாய் பேபி’ புகழ் கமலஹாஸன், ‘ஸ்ரைல் நடிகர்’ ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகிய தேவர் பிலிம்ஸின் ‘தாயில்லாமல் நானில்லை’, பார்த்தவர்கள் பாராட்டுகிறார்கள்! பார்க்காதவர்கள் பார்க்கத் துடிக்கிறார்கள்!!” என்று சடுதியில் ஏறியும் இறங்கியும் குழைந்தும் கொஞ்சியும் வரும் ராஜாவின் குரலைக் கேளாதோர்தான் தம் மழலை சொல் இனிதென்பர்.

கே.எஸ். ராஜாவை ஒரு தடவையாவது நேரில் பார்த்துவிட வேண்டும் என்ற தீராத ஆசையுடன் நான் தவித்துக்கொண்டிருந்தேன். ராஜா முற்றவெளியில் நிகழ்ச்சி செய்கிறார், ஜே. ஆர். ஜெயவர்த்தனாவின் பொதுக்கூட்ட உரையை மொழிபெயர்க்க யாழ்ப்பாணம் வருகிறார் என்றெல்லாம் ராஜாவைப் பற்றிய செய்திகள் இடைவிடாமல் கிராமத்தில் அலைந்துகொண்டேயிருந்தன. இதைத் தவிர ராஜாவுக்கு மொட்டைத் தலை, ராஜா ஒரு கணித மேதை, ராஜா திரைப்படத்தில் நடிக்கப் போகிறார், ராஜாவிற்கும் பி.எச். அப்துல் ஹமீதுக்கும் இடையே மோதல் என ஊர்ஜிதப்படுத்தப்படாத செய்திகளும் எங்கள் வட்டாரங்களில் விவாதிக்கப்பட்டுக் கொண்டிருந்தன. ஆனால் அப்போதெல்லாம் ராஜாவை நேரில் பார்ப்பதற்கான வாய்ப்பு எனக்குக் கிட்டவில்லை. பின்பொரு நாள் ராஜாவைச் நேரில் காணும் எனது கனவு பலித்தபோது அது ஒரு கொடுங்கனவாகப் பலித்தது.

1983ல் ராஜா இலங்கை வானொலியிலிருந்து விலகினார் அல்லது நீக்கப்பட்டார். வெலிகடச் சிறையில் கொல்லப்பட்ட அய்ம்பத்து மூன்று தமிழ் அரசியல் கைதிகளின் பெயர்களையும் வானொலில் அறிவிக்கச் சொன்னபோது ராஜா அதற்கு மறுத்துவிட்டார் எனவும் இலங்கை வானொலியிலுள்ள அரச ஆதரவாளர்களின் சதியால் ராஜா இலங்கை வானொலியிலிருந்து வெளியேற்றப்பட்டு விட்டார் என்றும் கதைகள் உலாவின. இதற்கு பின்பு ராஜா இந்தியா சென்றுவிட்டார் என அறிந்தேன். இந்தக் காலத்தில் நாட்டில் பல தலைகீழ் மாற்றங்கள் நிகழ்ந்தன. 1983 ஆடிக் காற்றில் அம்மியே பறந்தபோது நானும் ஒட்டிப் பறந்தேன்.

1986ன் முற்பகுதி! கே.எஸ். ராஜாவின் பெயர் மீண்டும் யாழ்ப்பாணத்தில் அமளியாய் அடிபடலாயிற்று. புங்குடுதீவில் நடக்கவிருந்த கலை இரவில் கே. எஸ். ராஜா கலந்துகொள்வதாக விளம்பரங்கள் வெளியாகியிருந்தன. மக்களுக்கு ராஜா மேலுள்ள அபிமானம் இம்மியளவும் குறையவில்லை என்பதை அன்றைய கலை இரவு நிரூபித்தது. ராஜாவைப் பார்ப்பதற்காகத் தூரத்துத் தீவுகளிலிருந்தெல்லாம் மக்கள் திரளாக வந்திருந்தார்கள். அந்தக் கலை இரவை ஈ.பி.ஆர். எல். எவ். இயக்கம் ஏற்பாடு செய்திருந்தது. நிகழ்ச்சிக்கு மற்ற மற்ற இயக்கங்களும் போயிருந்தோம். மைதானத்தில் இயக்கத்திற்கொரு மூலைகளில் வாகனங்களை நிறுத்தி வைத்து ராஜாவுக்காகக் காத்திருந்தோம்.

வருவார் வருவார் எனச் சனங்கள் காத்திருந்த ராஜா நள்ளிரவுக்கு மேற்தான் மேடையிற் தோன்றினார். ‘எங்கள் தமிழினம் தூங்குவதோ சொந்த மண்ணில் வாழ்வுக்கு ஏங்குவதோ’ என்ற பாடல் வரிகள் பின்னணியில் முழங்க ஒற்றைக் கால் மேடையிற் துள்ள மற்றக் காலைத் தூக்கிக் காற்றிலே உதைத்து உதைத்துத் தலையை உலுக்கி உலுக்கி ஒரு விநோதமான நாட்டியத்தை ஆடியவாறே ராஜா மேடையைச் சுற்றிச் சுற்றி வந்தார். ராஜாவின் ஒரு கையில் ஒலிவாங்கி மற்றக் கையில் எரியும் சிகரட். அதற்கு மேல் ராஜா செய்ததெல்லாம் வெறும் அலம்பல். ஆள் நிறை வெறியில் தள்ளாடிக்கொண்டிருந்தார். இயக்கம் ஏற்பாடு செய்த கலை இரவென்றாலும் நிகழ்ச்சிகள் ‘பாட்டுக்குப் பாட்டு’, ‘ஆம் இல்லையென்று சொல்லக்கூடாது’ என்ற வகையில்தான் அமைந்திருந்தன. இவற்றுக்கு இடையிடையே ராஜா தமிழீழ ஆதரவு முழக்கங்களையும் மேடையில் சகட்டுமேனிக்கு முழங்கிக்கொண்டிருந்தார். ராஜாவின் குரல் மட்டும் கொஞ்சமும் வசீகரத்தை இழக்கவில்லை. ராஜாவின் பொருளில்லாத வார்த்தைள் கூட அந்த இரவில் மதுரமாய் ஒலித்துக்கொண்டிருந்தன.

இதற்குச் சில நாட்கள் கழித்து வேலணை மத்திய மகாவித்தியாலய மைதானத்தில் இதே போன்றதொரு கலை இரவை ஈ.பி.ஆர்.எல்.எவ் இயக்கம் நடத்தியது. இந்த நிகழ்ச்சியில் ராஜாவின் அட்டகாசம் உச்சத்தைத் தொட்டது. தரையில் ஓங்கி அடித்த பந்துபோல ராஜா மேடையில் துடித்துக்கொண்டிருந்தார். தனது காலை உயரத் தூக்கிக் காட்டி “இந்தக் காலணிகளைப் பாருங்கள்! இவை ஒரு சிங்கள இராணுவ வீரனிடமிருந்து பறித்தெடுக்கப்பட்ட காலணிகள்” என்றார். “லலித் அத்துலத் முதலி எனது நண்பர்தான், ஆனாலும் அவரைக் கொன்றே தீருவேன் போரென்றால் போர் சமாதானமென்றால் சமாதானம்” என்று ராஜா மேடையில் சவால் விட்டார். ஆயிரக் கணக்கான இராணுவத்தினருக்குக் கொள்ளி போடத் தயாராயிருக்குமாறு ஜெயவர்த்தனாவை எச்சரிக்கை செய்தார். ஒரு ‘திரைவிருந்து’ நிகழ்ச்சியில் செய்வதைப் போலவே அவர் கலை இரவு மேடையில் சினிமாப் பாடல்களிற்கும் பாட்டுக்குப் பாட்டிற்கும் இடையே ஈழப் போராட்டம் குறித்து அர்த்தமில்லாத வெற்று வசனங்களைப் பேசி ஒட்டு வேலைகள் செய்துகொண்டிருந்தார். கொஞ்சம் விட்டால் ‘LTTE வல்வெட்டித்துறை – PLOT சுழிபுரம் – TELO கல்வியங்காடு – EPRLF சின்னமடு வெண்திரைகளில் கண்டுகளியுங்கள் சிவகுமாரன் பிலிம்ஸின் தமிழீழம்’ என்று கூட ராஜா சொல்லியிருப்பார்.

எனக்குச் சீயென்று போய்விட்டது. நான் அன்றிருந்த மனநிலையில் ராஜா ஈழப் போராட்டத்தைக் கொச்சைப்படுத்துவதாகவும் மலினப்படுத்துவதாகவுமே எனக்குத் தோன்றியது. எனக்கருகில் நின்றிருந்த என்னுடைய இயக்கப் பொறுப்பாளரிடம் “அம்மான்! கே.எஸ். ராஜா தேவையில்லாமல் போராட்டத்தைக் கொச்சைப்படுத்திக் கொண்டிருக்கிறான்” என்றேன். நானும் பொறுப்பாளரும் மட்டும் மேடையின் பின்புறத்துக்குச் சென்று ராஜாவுடன் பேசுவதற்காக வளம் பார்த்துக்கொண்டிருந்தோம். மேடையில் நின்றிருந்த ராஜா நிகழ்ச்சியின் நடுவே ஒரு முறை மேடைக்குப் பின்னே வரும் போது நான் ராஜாவிடம் “நீங்கள் நிகழ்ச்சி நடத்துவது என்றால் ஒழுங்காக நடத்துங்கள், போராட்டத்தைப் பற்றி அலம்பல் கதைகள் வேண்டாம்” என்றேன். ராஜா எங்களை முறைத்துப் பார்த்தார். தனது இடுப்பில் இரு கைகளையும் ஊன்றியவாறு தனது மதுரக்குரலால் அவர் எங்களைப் பார்த்துக் கலப்பில்லாத ஆங்கிலத்தில் கர்ச்சித்தார். எங்களுக்கு ஒரு இழவும் விளங்கவில்லை. ஆனால் அவர் எங்களைத் திட்டுகிறார் என்பது மட்டும் புரிந்தது. பொறுப்பாளர் ராஜாவைப் பார்த்து “இனிப் போராட்டத்தைப் பற்றிப் பேசினால் உன்னைத் தூக்குவேன்” என்றார். ராஜா திரும்பவும் மேடைக்குப் போய்விட்டார். இதற்குப் பின்பு ராஜா அந்த நிகழ்ச்சி முடியும் வரை அடக்கியே வாசித்தார்.

இதற்குப் பின் ராஜாவைப் பற்றிச் சில தகவல்கள் கேள்விப்பட்டேன். நிகழ்ச்சிகள் நடத்தச் செல்லும் கிராமங்களிலேயே அவர் தங்கிக் கோயில் மண்டபங்களிலும் பாடசாலைகளிலும் உறங்குகிறார், இருபத்து நான்கு மணிநேரமும் போதையிலேயே இருக்கிறார் என்றெல்லாம் செய்திகள் வந்தன.

அது 1986 மே மாதம், திகதி ஏழோ எட்டோயிருக்கலாம். நாங்கள் எங்களது வாகனத்தில் அறிவிப்புச் செய்துகொண்டே அந்தச் சிறுநகரத்துக்குள் நுழையும் போதே சாலையோரத்துத் தேனீர்க் கடையில் ஒட்டி நின்றிருந்த கே.எஸ். ராஜாவைக் கண்டுவிட்டோம். அவரருகே வாகனத்தை நிறுத்தி அவரை வாகனத்தில் ஏறச் சொன்னபோது ராஜா மிரட்சியுடன் எங்களைப் பார்த்தார். பின் தயங்கித் தயங்கி வாகனத்துள் ஏறினார். நாங்கள் எழுதி வைத்திருந்த அறிவிப்பை ஒலிபெருக்கியில் அறிவிக்குமாறு ராஜாவுக்குக் கட்டளையிடப்பட்டது. ராஜா மிரட்சி கலையாமலேயே அங்குமிங்கும் பார்த்தபோது எங்களது வாகனத்திற்குள் சில துப்பாக்கிகளும் ஒரு ஒலிவாங்கியுமிருந்தன. ஒலிவாங்கியைக் கையில் வாங்கிக் குனிந்த தலையுடன் அறிவிப்பைத் தொடங்கிய ராஜாவின் குரல் ஒலிபெருக்கியால் அந்தச் சிறுநகரத்தை உலுக்கிப் போட்டது: “தமிழீழ விடுதலை இயக்கம் ‘TELO’வினருக்குத் தமிழீழ விடுதலைப் புலிகளின் அறிவிப்பு! உடனடியாக நீங்கள் உங்கள் ஆயுதங்களுடன் எங்களிடம் சரணடைந்து விடுங்கள்….”அப்போது மதுரக்குரல் மன்னனின் குரல் நடுங்கிக்கொண்டிருந்தது.

இது நடந்து நான்கு ஐந்து வருடங்களிருக்கும். அப்போது நான் வெளிநாடொன்றில் இருந்தேன். குறிப்பான அந்தக் காலப் பகுதி இலங்கை அரசியலின் உச்சபட்சக் கொதிநிலைக் காலமாயிருந்தது. இந்தக் காலப் பகுதியிற் தான் அமிர்தலிங்கம், யோகேஸ்வரன், உமாமகேஸ்வரன், பத்மநாபா, கிட்டு, ராஜீவ் காந்தி, அத்துலத் முதலி, காமினி திஸநாயக்கா, பிரேமதாசா எனப் பல முக்கியமான தலைகள் விழுந்துகொண்டிருந்தன. வீடு புகுந்து கொலை, மத்திய குழு கூட்டத்திற்குள் புகுந்து கொலை, மெய்ப் பாதுகாவலர்களால் கொலை, தேர்தற் பிரச்சார மேடையிற் கொலை, கப்பலை வெடிக்க வைத்துக் கொலை, மாலை அணிவிக்கையில் கொலை, மேதின ஊர்வலத்திற் கொலை எனக் கற்பனைக்கு எட்டாத சாகசங்களுடனும் கொடூரங்களுடனும் விடாது கொலைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கையில் இடையில் ஒருநாள் கே.எஸ். ராஜா கொலை செய்யப்பட்ட செய்தியும் என்னை வந்தடைந்தது. ராஜாவின் உடல் கொழும்புக் கடற்கரையில் வீசப்பட்டிருந்ததாம். இந்தச் செய்தி அப்போது என்னில் எந்தத் துக்கத்தையோ வேதனையையோ கிளர்த்தவில்லை. ஒரு மனிதனை எத்தனை தடவைகள்தான் கொல்வது என்ற சலிப்புத்தான் என்னுள் மேலிட்டது.

 

http://www.shobasakthi.com/shobasakthi/2006/12/16/¨¨¨¨¨¨¨¨¨¨-2/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அந்தக் காலப் பகுதி இலங்கை அரசியலின் உச்சபட்சக் கொதிநிலைக் காலமாயிருந்தது. இந்தக் காலப் பகுதியிற் தான் அமிர்தலிங்கம், யோகேஸ்வரன், உமாமகேஸ்வரன், பத்மநாபா, கிட்டு, ராஜீவ் காந்தி, அத்துலத் முதலி, காமினி திஸநாயக்கா, பிரேமதாசா எனப் பல முக்கியமான தலைகள் விழுந்துகொண்டிருந்தன. வீடு புகுந்து கொலை, மத்திய குழு கூட்டத்திற்குள் புகுந்து கொலை, மெய்ப் பாதுகாவலர்களால் கொலை, தேர்தற் பிரச்சார மேடையிற் கொலை, கப்பலை வெடிக்க வைத்துக் கொலை, மாலை அணிவிக்கையில் கொலை, மேதின ஊர்வலத்திற் கொலை எனக் கற்பனைக்கு எட்டாத சாகசங்களுடனும் கொடூரங்களுடனும் விடாது கொலைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கையில் இடையில் ஒருநாள் கே.எஸ். ராஜா கொலை செய்யப்பட்ட செய்தியும் என்னை வந்தடைந்தது. 

அது ஒர் கொலையுதிர்காலம்

70, 80 க்கு ஒருதடவை போய்வந்தால் போல் உணர்வு. என்ன ஒர் அருமையான நினவுகள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

83 கலவரத்தின் போது கே.எஸ்.ராஜா ஒலிபரப்பிய பாடல்கள் எல்லாம் எம்ஜிஆர் படத்துப் புரட்சிப் பாடல்கள். அதிலும் , பணத்தோட்டம் படத்தில் இடம் பெற்றஎன்னதான் நடக்கும் நடக்கட்டுமே..” பாடல் மற்றது என் அண்ணன் படத்தில் இடம் பெற்றநெஞ்சமுண்டு நேர்மையுண்டு..” என்ற பாடலும் முதன்மையானவையாக இருந்தன.  

என்னதான் நடக்கும் நடக்கட்டுமே பாடலை ஒருதரம் பாருங்கள்.

“பின்னாலே தெரிவது அடிச்சுவடு

முன்னாலே இருப்பது அவன் வீடு

நடுவினிலே நீ விளையாடு

நல்லதை நினைத்தே நீ போராடு

உலகத்தில் திருடர்கள் சரி பாதி

ஊமைகள் குருடர்கள் அதில் பாதி

கலகத்தில் பிறப்பதுதான் நீதி

மனம் கலங்காதே மதிமயங்காதே

மனதுக்கு மட்டும் பயந்துவிடு

மானத்தை உடலில் கலந்துவிடு

இருக்கின்ற வரையில் வாழ்ந்துவிடு

இரண்டினில் ஒன்று பார்த்துவிடு 

அதுபோல் நெஞ்சமுண்டு நேர்மையுண்டு பாடலில்,

இரண்டில் ஒன்றை பார்பபதற்கு வாளை உயர்த்து 

நீதி உன்னை தேடிவரும் மாலை தொடுத்து என்ற வரிகள் இடம் பெற்றிருக்கும்

 (திரையில் தணிக்கை காரணமாகஇரண்டில் ஒன்றை பார்பபதற்கு தோளை நிமிர்த்து என்று இருக்கும்)  

இப்படியான பாடல்களை ஒலிபரப்பியதால் கே.எஸ்.ராஜா பல பிரச்சனைகளை சந்தித்தார் என்றும் நீண்ட காலம் ஒலிபரப்பு பணியில் இருந்து விலகி (விலக்கப்பட்டு)இருந்தார் என்று அன்று பேசிக் கொண்டார்கள்.

இதுபோல எம்ஜிஆர் திமுகவில் இருந்து வெளியேற்றப்பட்ட போது, “போனால் போகட்டும் போடா”, “உலகம் ஆயிரம் சொல்லட்டுமே உனக்கு நீதான் நீதிபதி  மனசை பாத்துக்க நல்படிஎன்று சிவாஜி கணேசனின் படப் பாடல்களை போட்டு ஆறுதல் சொல்லி இருப்பார்.

சந்தர்ப்பங்களுக்கு ஏற்ப அதுவும் இலங்கை வானொலிக்குள் இருந்து கொண்டே பாடல்களை ஒலிபரப்புவதில் கே.எஸ்.ராஜா போன்ற துணிச்சலான அறிவிப்பாளர்களை பிறகு வரவேயில்லை என்பேன்.

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.