Jump to content

தமிழ்வளர்ச்சித்துறை அமைச்சர் பாண்டியராஜனுக்குப் பல்லாண்டு கூறுதுமே!!


Recommended Posts

தமிழ்வளர்ச்சித்துறை அமைச்சர் பாண்டியராஜனுக்குப் பல்லாண்டு கூறுதுமே!!

பேராசிரியர் ந. கிருஷ்ணன், ம.சு.பல்கலைக்கழகம், திருநெல்வேலி.

"பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைத்தால் சங்காரம் நிசமெனச் சங்கே முழங்கு!"
- பாவேந்தர் பாரதிதாசன்

"ஆ ஊன்னா ஊர்ப்பேர மாத்தறேன்னு கெளம்பிருவானுக துப்புக்கெட்டவனுக!", என்று சிடுசிடுத்தார் நண்பர்! 'ஏம்பா! காலேல டென்சனாவுற", என்றார் நண்பரின் சித்தப்பா!

"ட்ரிப்ளிக்கேன்-ன்னு ஈஸியா சொல்றத உட்டுட்டு, 'திருவல்லிக்கேணி'-ன்னு சொல்லனுமா இனி", என்றார் நண்பர் வெறுப்பாக.

"அப்ப எம்பேத்திய இனி 'பிஷ்'-னு கூப்புடலாம்ல",என்றார் நண்பரின் சித்தப்பா.

"வெளையாட்டுக்குக்கூட அப்பிடி சொல்லாதேங்க சித்தப்பா! எங்கம்மா "மீனாட்சி" பேரல்ல அவளுக்கு வெச்சிருக்கேன்.", என்றான் நண்பன்.

"அதுமாறித்த்தானேப்பா சிதைஞ்சுபோன நம்ப பாரம்பரியப் பெருமையும் பண்பாடும்! மீட்டெடுக்கப் பாடுபடும் அமச்சரப் பாராட்டலேன்னாக்கூட பரவால்ல. திட்டாம இருந்தாப் போறும், என்றார் நண்பரின் சித்தப்பா! ஒன்றும் பேசாமல் அமைதியானார் நண்பர்.

ஐம்பது ஆண்டு கால திராவிட ஆட்சியாளர்கள் சாதிக்காத வெற்றியை சத்தமில்லாமல் சாதித்திருக்கிறார் தமிழ் வளர்ச்சி மற்றும் பண்பாட்டுத்துறை அமைச்சர் மாபா பாண்டியராஜன் அவர்கள். ஆங்கிலேயனின் வளையாத நாக்கு உளறிய 'Triplicane', 'Tuticorin' என்ற வேடிக்கைப் பெயர்களை அவமானச்சின்னங்கள் என்றுகூடத் தெரியாமல் சுமந்துகொண்டு வலம்வந்தது தமிழினம்.

தெள்ளுதமிழ்ச் சொற்களால் ஐம்பது ஆண்டுகாலம் கோலோச்சிய தலைவர்கள், மதராஸ் மாகாணம் என்பதன் தலைநகருக்குச் சென்னை என்றொரு பெயர் மாற்றி, தமிழ் மாநிலத்துக்குச் தமிழ்நாடு என்று பெயர்சூட்டி, மனோன்மணியம் சுந்தரனாரின் தமிழ்த்தெய்வ வணக்கப்பாடலை தமிழ்நாட்டின் அதிகாரப்பூர்வ மாநிலப் பாடலாக 'தமிழ்த்தாய் வாழ்த்து' என்றமைத்துச் செய்தது போதும் என்று உறங்கி விட்டன திராவிட ஆட்சிகள்.

அண்டை மாநிலங்களான கேரளாவில் உள்ள அனைத்து ஊர்களின் பெயர்களும் தூய மலையாளப் பெயர்களாக சத்தமில்லாமல் மாற்றம் பெற்றுவிட்டன. 'Trivandrum'('ற்றிவன்றம்') 'Thiruvananthapuram'('திருவனந்தபுரம்') என்றும், Aleppi(அலெப்பி) Alappuzhai(ஆலப்புழை) என்றும் மாறிவிட்டன;

Bangalore(பெங்களூர்) Bangaluru(பெங்களூரு) என்றும், Bombay(பாம்பே) Mumbai(மும்பை) என்றும்   Calcutta(கல்கத்தா) kolkaththa(கொல்கத்தா) என்றும் இந்தியாவெங்கும் ஆங்கிலேயர் இட்ட காலனி ஆதிக்க அவமானச் சின்னங்கள் களைந்தெறியப்பட்டன,

காலனி ஆதிக்கத்தின் அவமானச் சின்னங்கள் தமிழ்நாட்டில் மட்டும் இதுவரை தொடர்ந்து வருகின்றது. அது இப்போது முழுமையாக நீக்கப்படுவது பெரிதும் பாராட்டுக்குரியது. இச்செய்தி பெரும் கவனத்தை ஈர்த்திருக்க வேண்டும். தமிழர்களின் அறியாமைத் துயரம் அகலாமல் இருக்கின்றது என்பதற்கு இச்செய்தி ஊடகங்களின் கவனத்தைக் கவரவில்லை என்பதும், ஊடகங்களால் பெரிதும் பாராட்டப்படவில்லை என்பதும் தமிழகமே வெட்கித் தலைகுனிய வேண்டியதாகும்.

ஆங்கிலேய அவலச்சொற்களால் அசிங்கப்பட்டுக் கிடந்த ஊர்ப்பெயர்களைத் தூய தமிழ்ப்பெயர்களால் அலங்கரித்து, உயரச்செய்வது, தாழ்ந்து கிடந்த தமிழினத்தின் பெருமையைத் தலைநிமிரச் செய்வதாகும்.

தனது திறமையான ஆளுமை மூலம் ஆவன செய்து நேர்செய்து தமிழகத்தைத் தலைநிமிரச் செய்திருக்கும் அமைச்சர் மாபா பாண்டியராஜன் அவர்களைத் தமிழகம் வணங்கி மகிழ்கின்றது; அன்னாருக்குத் தமிழகம் மிகவும் நன்றிக் கடன்பட்டிருக்கின்றது.

முன்னூறு ஆண்டு காலமாக ஆக்கிரமித்திருந்த ஆங்கிலக் காலனிப் பெயர்கள் என்னும் கருத்தியல் விலங்குகளை உடைத்துத் தமிழன்னையின் கரங்களை விடுவித்து மேன்மை நிலையை அடையச்செய்த அமைச்சர் பாண்டியராஜன் அவர்கள் தமிழன்னைக்குச் செய்யவேண்டிய இன்னுமொரு கடமை காத்திருக்கிறது; ஆரியர்கள், ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக, தூய தமிழ்ப் பெயர்களால் அமைந்த தமிழக ஊர்களின் பெயர்களையும், கோயில்களின் பெயர்களையும், தமிழர் வழிபடு தெய்வங்களின் பெயர்களையும் நீக்கிவிட்டு, வடமொழிப் பெயர்கள் இட்டுச் சிதைத்த வரலாற்று அவமானச் சின்னங்களை நீக்கி, மீண்டும் தூய தெள்ளுதமிழ்ப் பெயர்களைச் சூட்டும் கடமை காத்திருக்கின்றது.

ஆரியப்பற்றாளர்களின் சமற்கிருதமாக்கக் கடும்பற்றால் தொன்மையான அழகிய தமிழில் வழங்கப்பட்ட தமிழக ஊர்ப்பெயர்களெல்லாம் பொருட் சிதைவுண்டு சமற்கிருதப் பெயர் மாற்றம் பெற்ற  அவலத்தைக்கண்டு, வருந்தினார் வள்ளலார் இராமலிங்கசுவாமிகள். இது தொடர்பாக, வள்ளல் பெருமான் அருளிய இருபாடல்களை இப்போது காண்போம்.

பழமலைநாதர் கோயில் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் கடலூர் மாவட்டத்திலுள்ள தமிழில் காலம்காலமாகப் பழமலை என்று வழங்கப்பட்ட இவ்வூர் கடந்த மூன்று நூற்றாண்டுகளாக விருத்தாச்சலம் என்று ஆரியப்பற்றாளர்களால் பெயர் மாற்றம் செய்யப்பட்டுவிட்டது. இந்த பழமலை என்னும் விருத்தாசலத்தில் அமைந்துள்ளது சைவசமயச் சிவன் கோயில். மூலவர் பெயரை பழமலைநாதர் என்பதிலிருந்து இப்போது விருத்தகிரிஸ்வரர் என்றும், தாயார் பெரியநாயகியின் பெயரை விருத்தாம்பிகை என்றும்  மற்றும் இளையதாயார் இளையநாயகியின் பெயரை பாலாம்பிகை என்றும் பெயர் மாற்றம் செய்துவிட்டனர் ஆரியப் பற்றாளர்கள். சமயக்குரவர்களால் பாடல் பெற்ற இத்தலம் நடுநாட்டுச் சிவத்தலங்களில் முக்கியமானதாகும்.

வழிப்பறிக் கொள்ளையருக்கு அஞ்சிய சுந்தரமூர்த்தி நாயனார், இறைவனிடம் பரவை நாச்சியாருக்காகப் பெற்ற பொன்னை, இக்கோயிலில் உள்ள மணிமுத்தாற்றில் இட்டு, திருவாரூர் கமலாலயத்தில் மீட்டு எடுத்தார் என்னும் தொன்மம் கோயில் தலவரலாற்றில் காணக்கிடைக்கின்றது.

பழமலை ஒரு ஆகமக்கோயில்

சைவ சமயத்தில் 28 ஆகமங்கள் உண்டு. இவற்றை 28 லிங்கங்களாக இத்தலத்தில் முருகப்பெருமான் பிரதிஷ்டை செய்து பூஜை செய்துள்ளார். இக்கோயிலை ஆகமக்கோயில் என்றும் அழைப்பார்கள்.

விருத்தாச்சலம் என்று தற்போது அழைக்கப்படும் பழமலையில், பழமையும் சிவனுக்கே உரிமையும் உடையதாயிருக்க, உலகவர் அதனைக் கிழமலை என்னும் பொருள்படும் (விருத்தம்+அசலம் =விருத்தாச்சலம், விருத்தன் என்றால் கிழப்பருவம் எய்தியவன் என்று பொருள்;) என வடமொழியிலும், முதுகுன்றம் என்று தமிழிலும் கூறுவதை இரு அருட்பாக்களில் நகைச்சுவை ததும்பப் பாடியுள்ளார் வள்ளல் பெருமான்.

பழமலை கிழமலையானது!
இப்பாடலில் பெருமான் கூறுகிறார்: மலைகட்கெல்லாம் முதலான மலை; ஆயினும் என்று தோன்றியது என்றறியமுடியாத தொடக்கமற்ற மலை, அன்பே உருவான அன்புமலை; எங்கும் பரந்து விளங்கும் மலை, ஞானமாகிய மலை, இன்பமயமான மலை;  பெருமை சான்ற வான்சோதி மலை, துரிய நிலையமான மலை, துரிய நிலையின் உச்சிக்கப்பால் விளங்கித் தோன்றும் மலை;  கருவிக்கரணங்களாற் காணப்படாத நுட்பம் பொருந்திய மலை, திருநீற்றுமலை; சுத்தாவத்தைக் கண்ணின்று பெறும் அனுபவ மலை; எல்லாவற்றையும் படைத்தளிக்கும் மலையரசன் மகளாய கொடியென்று புகழப்படும் மலைமகளைத் திருமேனியிற் பாதியாகவுடைய பழமலைநாதரின் மலை; முத்திப்பேறு பெற்றவர்கள் சிக்கெனப் பற்றும் மலை எனப் புகழ்பெற்ற பழமலையை உலகினர் கிழ(ட்டு)மலையாகக் கூறுவது ஏனோ?  வியப்பாகவுள்ளது என்கிறார் வள்ளல் பெருமான்.
      ஆதிமலை அனாதிமலை அன்புமலை எங்கும்
          ஆனமலை ஞானமலை ஆனந்த மலைவான்
     ஜோதிமலை துரியமலை துரியமுடிக் கப்பால்              
       தோன்றுமலை தோன்றாத சூதான மலைவெண்         
    பூதிமலை சுத்தஅனு பூதிமலை எல்லாம்
          பூத்தமலை வல்லியெனப் புகழுமலை தனையோர்
   பாதிமலை முத்தரெலாம் பற்றுமலை என்னும்
          பழமலையைக் கிழமலையாய்ப் பகருவதென் னுலகே.–வள்ளலார் திருவருட்பா. 

பழமலை என்னும் பெயரின் பொருள் உணராத குறையறிவுடையோர், தமிழின்மேல் உள்ள வெறுப்பு ஒன்றே காரணமாகக் கொண்டு ‘சமற்கிருத’மாக்கவேண்டும் என்ற நோக்கில் தவறாகப் பெயரிட்டிருப்பதை நயம்பட சுட்டும் வள்ளலாரின் அன்பும், பாங்கும் இங்கு உணரத்தக்கது.

வள்ளல் பெருமான் இப்பழமலையின் பெருமையைப் பற்றி மேலும் கூறுகிறார்: இப்பழமலை எப்பேர்ப்பட்ட பெருமை உடையமலை தெரியுமா? சாக்கியநாயனார் எறிந்த கற்களைச் சகித்த மலை; இறைவனைத் தம் தெள்ளிய அமைதியான மனத்தால் போற்றும் அன்பர்கள் சார்ந்தமையால் ஓங்கி உயர்ந்த தனித்துவம் பெற்ற மலை; இம்மலையின்கண் அமைந்துள்ள மன்றத்திலே அருள்தரும் தூக்கிய திருவடியுடன் இறைவன் அன்பர்களுக்குக் காட்சிதரும் தூயமலை; அறம் முதலாகிய வேதம் சொன்ன மலை; வாக்குகளுக்கு அப்பாற்பட்ட துரிய நடுமலை; மாறாத வானிலிருந்தே அனைத்தையும் படைத்து, காத்து, துடைக்கும் மலை; என்றும் அழியாத மலை; மெய்யன்பர்களுக்கு இன்பம் தரும் ஓர் அற்புதப் பொன்மலை; உயிர்கள் விரும்பும் நற்பேறுகள் அனைத்தும் கனிந்து பழமாகப் பழுத்த மலையாகிய இந்தத் தொன்மையான பழமலையை உலகினர் கிழ(ட்டு)மலையாகக் கூறுவது ஏனோ?  வியப்பாகவுள்ளது.

   சாக்கியனார் எறிந்தசிலை சகித்தமலை சித்த     
சாந்தர்உளஞ் சார்ந்தோங்கித் தனித்தமலை சபையில்
     தூக்கியகா லொடுவிளங்கும் தூயமலை வேதம்
சொன்னமலை சொல்லிறந்த துரியநடு மலைவான்
     ஆக்கியளித் தழிக்குமலை அழியாத மலைநேல்
அன்பருக்கின் பந்தருமோர் அற்புதப்பொன் மலைநற்
     பாக்கியங்க ளெல்லாமும் பழுத்தமலை என்னும்
பழமலையைக் கிழமலையாய்ப் பகருவதென் உலகே – வள்ளலார் திருவருட்பா.

தொடக்கம், இறுதியற்ற தொன்மையின் காரணமாகவே 'பழமலை' என்று கூறப்படுகின்றதேயன்றி முதுமையின் காரணமாக அன்று. “தொன்மையான பொருள்கள் அனைத்தையும் காட்டிலும் தொன்மையானவனாகவும், புதுமையும் இளமையுமாக, இனியும் வரயிருக்கின்ற, தோன்றப்போகும் எந்தப் பொருட்களைக் காட்டிலும் புதுமையாகவும், இளமையாகவும் இருப்பவன் இறைவா! நீயே அல்லவா!!” என்று இறைவனின் புகழ்பாடும்

மணிவாசகரின் திருவாசகத் திருவெம்பாவை வரிகள் இங்கு சிந்திக்கத் தக்கன. வள்ளலார் வாழையடி வாழையாக வந்த மாணிக்கவாசகரின் திருக்கூட்ட மரபைச் சார்ந்தவரன்றோ!

“முன்னைப் பழம் பொருட்கும் முன்னைப் பழம்பொருளே!
பின்னைப் புதுமைக்கும் பேர்த்தும் அப் பெற்றியனே!”

இரண்டு பாடல்களிலும் 'பழமலையைக் கிழமலையாய்ப் பகருவதென் உலகே’ என அருளியதில் அரிய நயம் காணலாம். இத்தலத்தின் பெயர் பழமலை. ஆயினும் ஆரியப்பற்றாளர்களின் வடமொழி வெறியால் ‘பழமலை’ என்ற தமிழ்ப்பெயர் மாற்றப்பட்டு, 'விருத்தாச்சலம்’ என்று சமற்கிருதத்தில் பெயர் மாற்றிவிட்டனர்; இன்றுவரைத் தமிழகம் இதனை இன்றுவரை 'விருத்தாச்சலம்’ என்ற பெயரிலேயே வழங்குகின்றது என்பது வேதனையான செய்தி. 

இதைவிட வேதனையானது பழமலை (விருத்தாசலம்) பழமலைநாதரை " விருத்தகிரீஸ்வரர்" (கிழட்டு ஈஸ்வரர் என்றே பொருள்படும் இப்பெயர்) என்றும் மாற்றியுள்ளனர் வடமொழிப்பற்றாளர்கள்.

‘விருத்தம்’ என்ற சொல் 'முதுமை’ எனப் பொருள்பட்டு கிழத்தன்மையைக் குறிக்குமேயன்றிப் ‘பழைமை’யைக் குறிக்காது. விருத்தாச்சலத்தைத் தமிழில் பெயர் மாற்றம் செய்கிறேன் என்று கிளம்பிய ஒருசிலர் அறியாமையின் காரணமாக இதன் இயற்பெயரை அறியாமல், ‘விருத்தம்’ என்பதை ‘முது’ என்றும் ‘அசலம்’ என்பதை ‘குன்றம்’ என்றும் சமற்கிருதத்தினின்று தமிழுக்கு மொழிமாற்றம் செய்து ‘முதுகுன்றம்’ என்று அழைக்கின்றனர். இத்தவறு ஏழாம் நூற்றாண்டிலேயே நிகழ்ந்துவிட்டது.

Hamilton–ஆமில்டன்-ஆகி, ஆமில்டன்-அம்பட்டன் ஆகிப் பின் அம்பட்டன்- Barber ஆன கதை:

சென்னையில் இதைப்போல் நடந்த ஒரு பெயர் மாற்றக் கேலிக்கூத்து நினைவுக்கு வருகின்றது. ஆங்கிலேயர்களால் ‘Hamilton Bridge’ என்று பெயரிடப்பட்ட ‘ஹாமில்டன் பாலம்’ தமிழில் ‘ஆமில்டன் பாலம்’ என்று அழைக்கப்பட்டுக் காலப்போக்கில் ‘‘அம்பட்டன் பாலம்” என்று மருவியது. இப்பெயரைத் தரம் உயர்த்தக்கருதிய அறிவாளிகள்  ‘‘அம்பட்டன் பாலம்” என்பதை “Barber’s Bridge” என்று ஆங்கிலத்தில் பெயரிட்டு ‘Hamilton’-ஐ ‘Barber’-ஆக மாற்றிப் புனிதப்படுத்திவிட்டனர்.

வடமொழி வெறியர்களுக்குத் தமிழ் தெரியாத காரணத்தால் ‘பழமழை’ ‘விருத்தாச்சலம்’-ஆகிப் போனது. ஆதலின் முதுகுன்றைப் பழமலை என்னல் சிறப்பேயன்றி ‘விருத்தாசலம்’ என்னல் சிறப்பன்று.

வடமொழிப் பற்றாளர்களாலும், சொல் மருவியதாலும் பெயர்மாற்றம் பெற்ற சில ஊர்களின் இயற்பெயர்கள்

தன்செய்யூர் – தஞ்சாவூர், தஞ்சை பெரிய கோயில் பெருவுடையாரை " பிரகதீஸ்வரர்" என்று  மாற்றியுள்ளனர் வடமொழிப் பற்றாளர்கள்.

பொழில் ஆட்சி – பொள்ளாட்சி,

செங்கழுநீர்பட்டு - செங்கல்பட்டு ஆனது.

ஒத்தை கால் மண்டபம், ஒத்தை கால் மாந்தை இந்த பெயர்தான் உதகமண்டலம் என்று மாறியுள்ளது

ஒகேநக்கலின் உண்மையான பெயர் உகுநீர்க்கல் என்பதேயாகும்

வேதாரண்யம் என்ற ஊரின் உண்மையான தொன்மையான தமிழ்ப்பெயர் "திருமறைக்காடு"

மதி என்றால் நிலவு,  பாண்டிய நாட்டு தமிழர்கள் நிலவினை வழிபட்டு வந்தவர்களின் வழிவந்தவர்கள். எனவே ‘மதி’- என்ற சொல்லின் அடியினை ஒட்டி ‘மதிரை’ என்று பெயரிட்டனர். காலப்போக்கில் மதுரை என மருவியது.

திண்டிவனம் என்பதன் உண்மையான பெயர் புளியங்காடு என்பதாகும்.

நீலகிரி என்னும் மலையில் இப்பொழுது குன்னூர் என வழங்குவது குன்றூரே.

தமிழ்நாட்டில் ஆர்க்காடும், ஆலங்காடும், வேற்காடும், களங்காடும், பிற காடுகளும் இருந்தன என்பது ஊர்ப் பெயர்களால் விளங்கும். ஆர் என்பது ஆத்தி மரத்தைக் குறிக்கும். ஆத்தி மாலை அணிந்த சோழ மன்னனை ‘ஆரங்கண்ணிச் சோழன்’ என்று சிலப்பதிகாரப் பதிகம் குறிக்கின்றது. அந்நாளில் ஆத்தி மரம் நிறைந்திருந்த நிலப்பகுதி ஆர்க்காடு என்று பெயர் பெற்றது.

மலையின் முடியைக் கோடு என்னும் சொல் குறிப்பதாகும். சேலம் நாட்டிலுள்ள திருச்செங்கோடு சாலப்பழமை வாய்ந்தது.

“சீர்கெழு செந்திலும் செங்கோடும் வெண்குன்றும்

ஏரகமும் நீங்கா இறைவன்”

என்று சிலப்பதிகாரம் கூறுதலால் திருச்செங்கோடு முருகனுக்குரிய பழம்பதிகளுள் ஒன்றென்பது இனிது விளங்கும். செந்நிறம் வாய்ந்த மலையின் சிகரம் செங்கோடு என்று பெயர் பெற்றதென்பர்

ஏர்க்காடு - சேலத்தினருகே ஏர்க்காடு என்னும் ஊர் உள்ளது. காடு சூழ்ந்த இடத்தில் ஓர் அழகிய ஏரி அமைந்திருந்தமையால் ஏரியையும், காட்டையும் சேர்த்து ஏரிக்காடு என்று அவ்வூருக்குப் பெயரிட்டார்கள். அது சிதைந்து ஏர்க்காடு என வழங்குகின்றது.

தேவாரத்தில் தூய தமிழ்ப் பெயர்களால் வழங்கப்பட்ட சிவபெருமானின் திருக்கோயில்களின் மூலவர்களின் தூய தமிழ்ப்  பெயர்களை நீக்கிவிட்டு, வடமொழியில் பெயர்சூட்டினார்கள் வடமொழிப் பற்றாளர்கள். (இது ஒரு வடமொழி வெறியர்களின் செயல் என்றாலும், பண்பு கருதி நாம் அவர்களை வடமொழி வெறியர்கள் என்று சொல்லாமல் வடமொழிப் பற்றாளர்கள் என்கிறோம். ஆனால், தமிழ்மொழியைப் பாராட்டுபவர்களை தமிழ்மொழி வெறியர்கள் என்று அவர்கள் கூறத் தயங்குவதில்லை. இதுதான் தமிழ்ப்பண்பாட்டுக்கும், வடவர்களின் பண்பாட்டுக்கும் உள்ள வேறுபாடு. இறைவனை வழிபடத் தாய்மொழியாம் தமிழே சிறந்தது என்பது 'அருச்சனை பாட்டேயாகும்; எம்மைத் தமிழில் பாடுக என்று சிவபெருமான் சுந்தரருக்குச் சொன்ன சொல்லே நமக்கெல்லாம் மந்திரம்.)

நாமெல்லாம் திருக்கோயில் வழிபாட்டைச் செந்தமிழில் மட்டுமே செய்யவேண்டும். இதில், வைணவம் மிகவும் பாராட்டுக்கு உரியது. ஆழ்வார்களின் பாசுரங்களையே திருமாலுக்கு முதல் அருச்சனையாக நிறுவி, புனிதர் இராமானுசர் நிறுவிய இறைவனுக்கும், மனிதனுக்குமான தனிவெளியை ஆழ்வார்களின் பாசுரத் தமிழால் புனிதப்படுத்திய வைணவர்கள் வணக்கத்துக்கு உரியவர்கள். தமிழருக்கெல்லாம் அவர்களே முன்னோடி.

அருச்சனை பாட்டேயாகும் ஆதலால் எம்மைச் சொற்றமிழில் பாடுக என்று சுந்தரரைப் பார்த்து சிவன் கூறியதாக சேக்கிழார் பாடியிருக்கிறார். தமிழ்மொழி தொன்மையான மொழி. செம்மொழி தகைமை பெற்ற மொழி.  தமிழே இறைமொழி என்பதில் நாம் பெருமை கொள்ள வேண்டும். நமக்கும் இறைவனுக்குமான தனிவெளியில் நம்மை இணைக்கும் ஒரே சக்தி தமிழன்னை மட்டுமே என்பதில் உறுதியாக இருக்கவேண்டும்.

உணர்வுக்கு ஒட்டாத புரியாத மொழியில் இறைவனிடம் தொடர்பு கொள்ள இடைத்தரகர்கள் தேவையில்லை என்று உணரவேண்டும். மொழிப்பற்று வேறு; மொழிவெறி வேறு. நாம் மொழிப் பற்றாளர்களாக இருப்பதில் எந்தத் தவறும் இல்லை; அதுவே இயல்பானது. ஒரு தாய்மொழிப் பற்றாளன் பிறமொழிகளையும் மதிக்கத் தெரிந்தவனாகத்தான் இருப்பான்.

கேரளாவிலும், கர்நாடகாவிலும், வங்காளத்திலும், மராட்டியத்திலும் அவரவர் தாய்மொழியில் ஊர்ப்பெயர், கோவில் பெயர்களை சத்தமில்லாமல் மீட்டெடுத்து விட்டனர். அமைச்சர் பெருமகனார் மபா பாண்டியராஜன் அவர்கள் இக்குறைபாட்டையும் நீக்கித் தமிழ் மண்ணுக்கும், தமிழ் அன்னைக்கும் பெருமிதம் சேர்க்க வேண்டும் என்ற வேண்டுகோளை முன்வைத்து, அன்னார் ஏற்கனவே செய்த தமிழ்ப்பணிக்கு தமிழர் அனைவரின் சார்பிலும் வாழ்த்தி மகிழ்கின்றோம்! விரைவில் செயல்படுக; விரைந்து செயல்படுக! என்று வேண்டுகின்றோம்.

வெள்ளம் போல் தமிழர் கூட்டம்!
வீரங்கொள் கூட்டம்!  அன்னார்
உள்ளத்தால் ஒருவரே! மற்
றுடலினால் பலராய்க் காண்பார்!
கள்ளத்தால் நெருங்கொணாதே
எனவையம் கலங்கக் கண்டு
துள்ளும் நாள் எந்நாளோ! - புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்!

தமிழ்ப்பணி அறம்செய்த அமைச்சர் பெருமகனாருக்குத் தொடர்க வெற்றி என வாழ்த்துவோம்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிக அருமையான அருகிய தகவல்கள். அமைச்சர் மாபா பாண்டியராஜன் அவர்கள் முன்னெடுத்த நற்பணியை முழுமையாக்க வேண்டும். 'வாழ்க நீ எம்மான்' என தமிழர் தம் உள்ளங்களில் பாண்டிய ராசனாய் அவர் பாடல் பெற வேண்டும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாபா பாண்டியராஜன் அவர்களின் குரலை தொலைக்காட்சி விவாதங்களில் கேட்டிருக்கின்றேன்.
அவரின் குரல் வளம் மிக இனிமையாக  கேட்டுக் கொண்டே இருக்கலாம் போல்...
அழகிய தமிழில், உணர்சிவசப்படாமல்  உரையாடுவார்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தற்போது WhatsApp இலேயே Catalog ஒன்றை உருவாக்கி செய்து கொள்ளலாம்.
    • அங்கால யாழ்ப்பாண பொருளாதாரம் அசுரப் பாய்சல் இஞ்சால குளம் வரை கூட்டி போறியள். உந்த யாழ் IT காரர்களுடன் நல்ல அனுபவம் உள்ளது. நண்பர் ஒருவருக்காக கொரானா காலத்தில் online sale ற்காக இணையம் ஒன்றை வடிவமைக்க கிட்டத்தட்ட 2/3 மாதங்கள் பலருடன் இழுபட்டு கடைசியில் 5 நாட்களில் தென்னிந்தியாவில் web + app  Logo என பல இத்தியாயிகளுடன் கிடைத்தது. ஆனால் சிறீலங்காவில் சில தென்பகுதி நிறுவனங்களிற்கு ஊடாக  செய்து முடிக்கலாம்.
    • 1)RR, CSK,SRH, KKR 2)  1# RR  2# CSK  3# SRH  4# KKR 3)RCB 4)CSK 5)SRH 6)SRH 7)CSK 8)SRH 9)GT 10)RIYAN PARAG 11)RR 12)Yuzvendra Chahal 13)RR 14)Virat Kohli 15)RCB 16)Jasprit Bumrah 17)MI 18)Sunil Narine 19)KKR 20)SRH
    • அமெரிக்கா இல்லை என்றால் இஸ்ரேல் இந்த‌ உல‌க‌வ‌ரை ப‌ட‌த்தில் இருந்து காண‌ம‌ல் போய் இருக்கும் இஸ்ரேலுக்கு ஏதும் பிர‌ச்ச‌னை என்றால் இங்லாந்தும் அமெரிக்காவும் உட‌ன‌ க‌ப்ப‌லை அனுப்பி வைப்பின‌ம் அதில் இங்லாந் போர் க‌ப்ப‌லுக்கு ஹ‌வூதிஸ் போராளிக‌ளின் தாக்குத‌லில் க‌ப்ப‌ல் தீ ப‌ற்றி எரிந்த‌து வானுர்த்தி மூல‌ம் த‌ண்ணீர‌ ஊத்தி தீயை அனைத்து விட்டின‌ம்..........................ஈரானின் ஆதர‌வாள‌ போராளி குழுக்க‌ள் இஸ்ரேல‌ சுற்றி இருக்கின‌ம்................ஈரான் மீது கைவைத்தால் இஸ்ரேலின் அழிவு நிச்ச‌ய‌ம்............................ ஈரானின் மிர்சேல்க‌ள் ப‌ல‌ வித‌ம் அதே போல் ரோன்க‌ள் ப‌ல‌ வித‌ம்...................ஈரானின் ஏதோ ஒரு மிர்சேல் டாட‌ரில் தெரியாத‌ம்  ச‌ரியான‌ இல‌க்கை தாக்கி  அழிக்க‌ கூடிய‌ ச‌க்ந்தி வாய்ந்த‌ மிர்சேலாம் அது அதை ஈரான் இன்னும் ப‌ய‌ன் ப‌டுத்த‌ வில்லை...........................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.