Jump to content

ஆளப்போறான் தமிழன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

 

 

ஆளப்போறான் தமிழன்

 இக்கட்டுரை தமிழ் தேசியத்தைப்பற்றித் தெளிவாகப் புரிந்து கொள்ளாத தமிழ்நாட்டு மக்களுக்காக எழுதப்பட்டது.

 

அறிமுகம்

‘……ஆண்ட பரம்பரை மீண்டுமொரு முறை

ஆள நினைப்பதிலென்ன குறை………….‘

என்கிறார் உணர்ச்சிக் கவிஞர் காசியானந்தன்.   வடவேங்கடம் தொட்டு ஈழம் வரை பரந்து விரிந்து கிடக்கிறது தமிழ்நாடு.  தற்போது வடமாலவன் குன்றமென்னும் வேங்கடாசலபதியின் திருப்பதிப் பிரதேசம் தமிழ் நாட்டைவிட்டுப் பறித்தெடுக்கப்பட்டு விட்டது.  கடல் கோளால் அழிந்து போன தென் குமரிக் கண்டத்தில் ஈழம் தமிழனுக்காக எஞ்சியிருக்கிறது. மிகுதி சிங்கள சிறீலங்காவாக மாறிவிட்டது.   தமிழனுக்கான இந்தப் புவியியல் பரம்பலை காப்பது யார் மீட்பது யார்?

‘….தென் குமரியெங்கும் எங்கள் வாழ்விருந்தது - சங்கம்

செய்த தமிழ் இலக்கியத்தால் உலகுயர்ந்தது

பொங்கு கடல் வந்து வந்து போட்டழித்தது - எம்மைப்

பூமியிலே ஏதிலராய் ஆக்கிவைத்தது….‘ 

 

என்று தமிழீழத்து மக்கள் வேதனையோடு பாடிக்கொண்டிருக்க வேண்டியதுதானா? அல்லது போனவை போக மிஞ்சியுள்ள எமது நிலப்பரப்புகளை அன்னியரின் ஆக்கிரமிப்பு களிலிருந்து மீட்டெடுக்க  ஒட்டு மொத்தத் தமிழினமும் தன் முழுப்பலத்தையும் சேர்த்துப் போராடுவதா என்ற கேள்வியெழுகின்றது.

 

இன்று கச்ச தீவு என்னும் தமிழர் பாரம்பரியப் பூமியில் தமிழ் நாட்டு மீனவர்கள் மீன் பிடிப்பதற்குத் தடை போடப் பட்டுள்ளதோடு, தட்டுத் தடுமாறிக் காற்றினால் எற்றுண்டு அப்பாவி ஏழை மீனவர்கள் அந்தப் பிரதேசத்தினுள் உள் நுழைந்தால் அவர்கள்மீது  கொலை வெறியோடு துப்பாக்கிச சூடு நடத்துவதும், மிகப்பாரிய தண்டனைக்குரிய  குற்றம் சுமத்தப்பட்டு கைது செய்ப்படுவதும், மிகப் பெரிய அபராதம் விதிக்கப்படுவதும், அவர்களது பிழைப்புக் கருவிகளான படகுகள்,  வலைகள் உட்பட அனைத்து உடைமைகளும் பறிமுதல் செய்யப்படுவதும் நாளாந்தம் நடைபெறும் சர்வசாதாரண நிகழ்வுகளாகிவிட்டன.

 

காடுமலை மேடெல்லாம் எல்லை தாணடி

களவாகப் போவரைக் கைது செய்து

போடுவதாற் சிறையினிலே அர்த்தமுண்டு

புரியாத கடல்தன்னில் என்னவுண்டு?

 

தமிழருக்கெதிரான இத்தகைய அநீதிகளுக்கெதிராகக் காத்திரமான நடவடிக்கைகளை இந்தியாவின் மத்திய மாநில அரசுகள் எடுக்காததற்குக் காரணமென்ன?

நாடிரண்டைப் பிரிப்பதற்கு நிலத்தில்வேலி

நட்டிடலாம் தவறில்லை மீன்கள்துள்ளி

ஆடுமலைக் கடல்மீது எல்லைக் கோட்டை

அமைத்திவர்கள் ஆடுவதேன் மனித வேட்டை?

 

என்று வேதனையோடு கேட்கும் போது அதற்கான நியாயத்தை எடுத்துச் சொல்லி மீனவர்கள் எல்லை தாண்டிப் போகாதிருக்க மத்திய மாநில அரசுகள் எந்த நடவடிக்கையை எடுத்துள்ளன?  என்ற கேள்வி எழுகின்றது.

 

இந்த அவலமான ஆதரவற்ற நிலையிற்தான் உலகத் தமிழினம் தனக்கெனவோர் சுயாதிபத்திய அரசை பாக்கு நீரிணையின் இரு மருங்கிலும்  அதாவது வடக்கிலும், தெற்கிலும் ஸ்தாபித்து, தெற்காசியப் பிராந்தியத்தின் தனிப்பெரும் சக்தியாக எழுச்சி பெறவேண்டுமென்னும் உணர்வு, கற்றிந்தோர் மத்தியில் மேலோங்கி வருகிறது.  இது தம்மைத் தமிழர்களென்று இனங்காணுவோரிடையே ஏற்பட்டுள்ள உணர்வு.

 

ஆளப் போறான் தமிழன்

ஆளப் போறான் தமிழன் என்று நம்பிக்கையோடு இன்று சினிமாவிலும் பொது மேடைகளிலும் துணிவோடும், நம்பிக்கையோடும் பாடவும் கூறவும் முடிகிறதென்றால் அதற்கான யதார்த்த சூழ்நிலைகள் அமைந்து வருகின்றன என்பதுதானே அர்த்தம்?   ஆனால் அதற்குமுன் தமிழன் தன்னைத்தானே ஏன் ஆள வேண்டும் என்ற கேள்விக்கும் நாம் சரியான விளக்கத்தையும் இவ்வுலகத்தின் முன் வைக்க வேண்டியிருக்கிறது.  நாம் முன்வைக்கும் வாதங்கள் ஏற்றுக் கொள்ளப்படக் கூடியவையாகவு மிருக்க வேண்டியது அவசியமாகிறது.  

 

இந்த உலகில் எத்தனையோ மொழி வழி இனங்களுள்ளன.  அந்த இனங்களுக்கெல்லாம் தம்மைத்தாமே ஆள வேண்டுமென்ற ஆசையில்லையா?  உண்டு ஆனால், தம்மைத் தாமே ஆளக்கூடிய ஒரு தேசிய இனத்திற்கான வரையறைகள் அத்தகைய இனங்கள் பலவற்றிற்கு இல்லாமலிருக்கலாம்.  அப்படியிருந்தாலும், அத்தகையவோர் உணர்வு நிலையை அவர்கள் இதுவரை அடையாமலுமிருக்கலாம். 

 

தென்னிந்தியாவின் தமிழரல்லாத பிற மொழி வழித் தேசிய இனங்களான கன்னடர், மலையாளிகள், தெலுங்கர் போன்றோரிடம் தமிழர்களிடமிருப்பது போன்ற, தனியாகத் தம்மைத்தாமே ஆளவேண்டுமென்ற உணர்வு நிலை வளர்ச்சி பெறவில்லை.  அதற்குக் காரணம் ஆரியத்துக்கு நிகரான இலக்கண  இலக்கியச் செல்வங்களற்ற அவர்களது மொழிகள், ஆரியத்தின் துணையோடு வளர்ச்சி பெற்றதால் ஆரியத்திலிருந்து தனித்து நிற்கக் கூடிய ஆற்றலற்றவையாகப் போனதுதான். இதனால் அவர்கள் இந்தியத் துணைக் கண்டத்தின் ஆரிய ஆதிகத்திலிருந்து விடுபட்டுத் தம்மைத் தனியான மொழிவழித் தேசிய இனங்களாக அடையாளப்படுத்த முனையவில்லை.  இருந்தாலும் சமீப காலங்களில் தமிழர் தவிர்ந்த ஏனைய திராவிட இனங்களிடமும் தமது தனித் தன்மையைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டுமென்ற உத்வேகம் தோன்ற ஆரம்பித்து விட்டது.

 

ஆனால் நாம் அப்படிப்பட்டவர்களல்ல. எமக்கென்று ஓர் பூர்வீக சரித்திரமுண்டு.  நாமறிந்த சரித்திரத்திற்கும் மிக முற்பட்ட காலத்திலிருந்தே எமது மண்ணையும், எம்மையண்டிய நாடுகளையும் கடல் கடந்த பிரதேசங்களையும் நாம் கைப்பற்றி ஆண்டிருக்கிறோம்.  ஆரியர் இந்தியாவிற்குள்  நுழையுமுன்பே ஹரப்பா, மொஹஞ்சதாரோ போன்ற சிந்து கங்கைச் சமவெளி நாகரீகங்களின் முதன்மையினமாக தமிழர்களாகிய நாமே வாழ்ந்திருக்கிறோ மென்பதற்கான சான்றுகள் நிறையவுள்ளன.   ஆரியத்திலும் மேலானதும் திருத்தமானதுமான உலகின் முதல்மொழி தமிழேயென்ற பெருமை கொண்டவர்களாகவே தமிழறிஞர்கள் உள்ளனர்.  அதனால் நாம் மிகப் பழங்காலந் தொட்டே நாகரீகமடைந்தவோர் தேசிய இனமென்ற பெருமைக்குரியவர்களாயிருக்கிறோம். 

 

தேசிய இனமென்றால் யாது?  அந்த அந்தஸ்து எமக்குண்டா?

 

 

தமிழர் தாயகம்

 

ஓர் எல்லையிடப்பட்ட குறித்த புவியியற் பரப்பினுள் மொழி, சுயசார்புப் பொருளாதாரம், கலை கலாச்சாரம், மற்றும் இன்னோரன்ன, ஓர் இனத்துக்குத் தேவையான சகல தனித்துவ அம்சங்களுடனும், தாம் வாழும் பிரதேசத்தைத் தமது தாயகமாகக் கொண்ட மக்களைத் தேசிய இனமென்று (Nation) என்று அழைப்பார்கள். அத்தகைய இனமொன்றுக்குத் தனக்கான அரசையும் நாட்டையும் அமைத்து உலகுடன் தொடர்பு கொண்டு தன்னிச்சையாக வாழும் உரிமையிருக்கிறது. இதையே சுயநிர்ணய உரிமையென்பார்கள். இந்த எல்லா அம்சங்களும் தமிழர்களுக்கு உண்டு. தமிழர்கள் தம் தாயகத்துக்குரிய தொடர் நிலபப்பரப்பான ஈழம் வரை பரவி வாழ்கிறார்கள். ஒரே நாட்டின் சிறு தீவுகளைக் கடல் பிரிப்பது போல ஈழமும் தன் தாய்த் தமிழகத்திலிருந்து கடலால் (இராமரணையென்னும் நிலத் தொடர்போடு) பிரிக்கப்பட்டுள்ளது. அணையை மீண்டும் திருத்திவிட்டால் ஈழமும் தமிழகமும் ஒன்றாகிவிடும்.

 

 

ஆளப் போறான் தமிழனென்று நாம் ஆர்ப்பரிக்கும் போது பாக்கு நீரிணைக்கு வடக்கிலுள்ள தமிழ்நாட்டையும், தெற்கில் மன்னாரிலிருந்து ஒரே நிலப்பரப்பாய் பரந்து கிடக்கும் இலங்கையின் வடபகுதியான யாழ்குடா உட்பட கிழக்குப் பிரதேசமான மட்டக்களப்பு, அம்பாறைப் பிரதேசங்களையும் உள்ளடக்கும் கனவாகவே அது இருக்க முடியும்.

 

இந்தப் பிரதேசம்தான் உலகில் தமிழருக்கான ஒரே தாயகப் பிரதேசமாகும். உலகின் ஏனைய பல நாடுகளிலும், கர்னாடகா போன்ற இந்தியாவின் ஏனைய பிரதேசங்களிலும் தமிழர்கள் தமது வாழ்விடங்களை நிலைப்படுத்தி காலங்காலமாக வாழ்ந்தாலும், எமது தாயகமென்று சொல்லிக் கொள்ள உலகில் மேற் குறிப்பிட்ட பிரதேசமேயிருக்கிறது.  அதனால் நாம் ஆளப்போவதும், ஆளவேண்டியதும் அந்தப் பிரதேசத்தைத்தான்.

 

ஆண்டு காட்டிய தமிழன்

ஆளப் போறான் தமிழனென்பது வெறும் கற்பனைக் கூச்சலல்ல.  ஆண்டு காட்டியிருக்கிறான் தமிழன்.  மண்ணிலும் நீரிலும் விண்ணிலும், முறையே தரை, கடல், ஆகாயப்படைகளைக் கட்டி, ஓர் மாதிரியரசை உருவாக்கி, நிதி, நீதி, அபிவிருத்தி, பாதுகாப்புப் போன்ற கட்டமைப்பு களை நிருவகித்து  தமிழன் மிகச் சமீபத்திற் கூட  ஆண்டு காட்டியிருக்கிறான்.

துரதிஸ்ட வசமாகத் தமிழன் கட்டிய ஆட்சிக்கட்டமைப்பு சர்வதேசத்தின் தவறான புரிதலால் பயங்கரவாதமென்கிற முத்திரை குத்தப்பட்டுக் கலைத் தெறியப்பட்டது.   கட்டிய கோட்டை தகர்ந்து போனது.  ஆனாலும் தமிழனுக்கென்று சுய நிர்ணயவுரிமை கொண்டவோர் தாயகம் வேண்டுமென்னும் உரிமைக்குரல் அடங்கவில்லை.  அது இன்னும் ஓங்கியொலிக்கிறது.  பற்றி விட்ட அந்த விடுதலை நெருப்பு – இலட்சியத் தீ இனி எக்காரணம் கொண்டும் அடங்கப் போவதில்லை.

 

சுயநிர்ணய உரமை கொண்ட தமிழர் தாயகம் எத்தகையது?

பெரிய பிரித்தானியாவில் இங்கிலாந்து, ஸ்கொட்லாந்து, வேல்ஸ், வட அயர்லாந்து என்று நான்கு நாடுகள் ஒன்றிணைந்துள்ளன.  அந்த நாடுகளுக்கென்று தனித்தனியான பாராளுமன்றங்களிருந்தாலும் பிரத்தானியப் பாராளுமன்றத்தின் கட்டுப்பாட்டுக்குள்ளேயே அவை இயங்குகின்றன.  அதில் ஸ்கொட்லாந்து தனக்கெனத் தனியான நாணயத்தைக கூட வைத்திருக்கிறது.  சில காலங்களுக்குமுன் ஸ்கொட்லாந்து பெரிய பிரித்தானிய ஒன்றியத்திலிருந்து பிரிந்து செல்வதா வேண்டாமா என்ற வாக்கெடுப்பைக் கூட எடுத்திருந்தது. ஆனால் ஸ்கொட்லாந்து மக்களோ பரிவினை தேற்போதைக்குத் தேவையில்லையென்ற முடிவுக்கே வாக்களித்ததால் இன்றும் பெரிய பிரித்தானியாவின் அங்கமாகவே ஸ்கொட்லாந்து இருக்கிறது. ஆனால் தாங்கள்  எப்போது விரும்பினாலும் பிரிந்து செல்லலாமென்ற உரிமை கொண்ட மக்களாக ஸ்கொட்லாந்து மக்களிருக்கிறார்கள்.

 

மேற்சொன்ன, இத்தகைய உரிமையையே சுயநிர்ணய உரிமையென்கிறோம்.  ஆனால் துரதிஸ்ட வசமாக தமிழ்நாடு போன்ற இந்தியாவின் மொழிவாரி மாநிலங்களுக்கு இந்த உரிமை இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின மூலம் வழங்கப்படவில்லை.  ஆனால் தமிழ் நாட்டின் உள்ளூராட்சி தமிழக மக்களிடம் மட்டுப்படுத்தப் பட்ட அளவில் வழங்கப்பட்டிருக்கின்றது.  ஒரு குறித்த வரையறைக் குள்ளாகவே உள்ளூர் நிர்வாகத்திற்குத் தேவையான சட்டமியற்றும் அதிகாரம் தமிழ்நாடு சட்டசபைக்கு வழங்கப்பட்டிருக்கிறது. உதாரணமாக, தமிழக மீனவர்களுக்கெதிராக  இலங்கைக் கடற்படை நடத்தும் தாக்குதல்களைக் கண்டித்து இராஜதந்திர ரீதியில்  இலங்கையுடன் தொடர்பாடல்களைச் செய்யக்கூடிய ஓர் அரசுக்கான அதிகாரம், தமிழ்நாட்டின் மாநில அரசாங்கத்திற்கு இல்லை.   மீனவர்களைப் பாதுகாக்க ஓர் கடலோரப் பாதுகாப்புப் படையைத்தானும் மாநில அரசு கொண்டிருக்கவில்லை.  எல்லாவற்றிற்கும் மத்திய அரசிடம் போய் முறையிடுவதும் கையேந்தி நிற்பதுமே வழக்கமாகி விட்டது.

 

இலங்கையிலுள்ள தமிழர் வாழும் வடக்குக் கிழக்கு மாகாணங்களுக்கோ ஒரு மாநில அரசுதானுமில்லை.   இலங்கை இந்திய ஒப்பந்தமென்ற போர்வையில் கொண்டு வரப்பட்ட அதிகாரப் பரவலாக்கற் திட்டம் தமிழர்களை ஏமாற்றும் நோக்கிலேயே இலங்கை அரசால் கொண்டு வரப்பட்டது.  இந்திய மத்திய அரசும் இதற்கு உடன்பாடாயிருந்தது.  தற்போதுள்ள மாகாண அரசுகளுக்கு நிதியைக் கையாளும் உரிமைகூட இல்லை.  மத்திய அரசின் ஏஜண்டான கவர்னர்கள் அல்லது ஆளுநர்கள் வட கிழக்கு மாகாண அரசுகளைக் கட்டுப்படுத்திச் செயற்பட விடாமல் தடுக்கும் அதிகாரம் கொண்டவர்கள்.   அத்தகைய அதிகாரங்களையே அவர்கள் பயன் படுத்துகிறார்களே யொழிய மாநில அரசுகளின் அபிவிருத்தித் திட்டங்களுக்குத் துணைபோகிறவர் களாயில்லை.  தற்போது புதிய அரசியலமைப்பு என்கிற போர்வையில் புதிய மொந்தையில் பழைய கள்ளை ஊற்றித்தர முயற்சிப்பது போன்ற செயற்திறனற்ற அதிகாரப் பரவலாக்கத்தையே இலங்கையரசு கொண்டு வர முயற்சிக்கின்றது.

 

பாக்கு நீரிணையின் இருபுறத்திலுமுள்ள தமிழர் தாயகப் பிரதேசங்கள், தாங்கள் தற்போது இணைக்கப்பட்டுள்ள இந்தியா, இலங்கை போன்ற நாடுகளிலிருந்து பிரிந்து செல்லவும், வேண்டுமானால் தமிழீழப் பிரதேசங்களுடன் இணைந்து ஓர் தமிழருக்கான தனியான ஆட்சியலகொன்றை அமைக்கவும் தக்கதான தமிழர் தேசியம் கட்டமைக்கப்பட வேண்டும்.  ஐநா போன்ற உலக நிறுவனங்கள் சர்வதேசத்தின் ஆதரவுடன் இந்தத் தமிழர் தேசியத்தை உருவாக்க  முன்வரவேண்டும்.  

 

எவ்வாறு இரண்டாம் உலகமகா யுத்தத்தின் பின்னர் இஸ்ரேலின் சியோனிசக் கோட்பாட்டுக்கு மதிப்பளிக்கப்பட்டு சர்வதேசத்தால் இஸ்ரேல் என்னும் நாடு உருவாக்கப்பட்டதோ, அவ்வாறே தமிழர் தாயகக் கோட்பாட்டுக்கு மதிப்பளிக்கப்பட்டு தமிழருக்கான சுயநிர்ணய உரிமை கொண்ட தமிழர்தாயகம் நிறுவப்பட வேண்டும்.  அந்த உரிமை நிலைநாட்டப்பட்ட பின்புதான் தமிழர்கள் தாங்கள் தனித்து ஒரு பிரதேசமாக ஒன்றித்து வாழ்வதா அல்லது, இலங்கையில் ஈழத்தமிழர்களும், இந்தியாவில் தமிழ்நாட்டுத் தமிழர்களும் தத்தமக்கான அரசியல் உரிமைகளுடன் தனித்து வாழ்வதா என்பதைத் தீர்மானிக்க முடியும்.

 

இந்தியாவிலுள்ள தமிழ் நாட்டுத் தமிழர்களுக்கு சுயநிர்ணய உரிமை கிடைத்து விட்டால் அவர்கள் இந்திய உபகண்டத்திலிருந்து பிரிந்து போக வேண்டிய தேவையில்லை.  இந்தியாவென்னும் வலுவான சக்தியுடன் ஒன்றிணைந்து வாழ்வதே அவர்களுக்கு நன்மை பயக்கும்.    வடக்கிலுள்ளோரின் தேவையற்ற இந்தித்திணிப்பு, இந்துத்துவா என்ற பெயரிலான அடக்குமுறை போன்ற அநாகரீகச் செயற்பாடுகள் இல்லாவிடின் தமிழர்கள் இந்தியாவில் பலம் பொருந்திய ஒரு தேசிய இனமாகத் தொடர்ந்து வாழ முடியும்.   ‘பெருமரத்தைச் சுற்றிய பல்லியும் சாகாது‘ என்பதைப் போல இந்திய வல்லரசின் கூட்டாட்சிக்குள் தமிழ் நாடு சிறப்போடு மிளிர முடியும். 

 

ஆனால் இலங்கைத் தமிழரின் நிலை அப்படியானதல்ல.  அவர்கள் பெரும்பான்மைச் சிங்களவர்களின் பேரின வாதப் பிடிக்குள்ளிருந்து மீள முடியாமல் தத்தளித்துக் கொண்டிருக்கிறார்கள்.  பௌத்த குருமார்களின் ஆதிக்கத்தினால் ஓர் நீதியான சுயாட்சியைத் தமது தாயகப் பிரதேசங்களில் நிறுவ முடியாமலும், தொடர்ச்சியான சிங்களக் குடியேற்றங்களால் தங்களது தாயகத்தைப் படிப்படியாக இழந்தும் வருகின்ற அவலநிலைக்குள் அவர்கள் காணப்படுகிறார்கள். 

 

இலகுவில் கண்டுகொள்ளப்பட முடியாத இனப்படுகொலைக்குத் தள்ளப்பட்டுள்ள ஈழத் தமிழர்களுக்கு உள்ள இரண்டு தெரிவுகளில், ஒன்று, தமிழ்நாட்டுத் தமிழர்களுடன் தம்மை இணைத்துக் கொள்ளல், அன்றேல் பிரிந்து செல்லும் உரிமையுடன் கூடிய தமது சுயநிர்ணய உரிமையை நிலைநாட்டித் தங்கள் தாயகத்தில் ஆட்சியமைத்தல் என்பனவாகும்

 

முடிவுரை

இந்தியத் தமிழர்களும் இலங்கைத் தமிழர்களும் பிரிக்க முடியாத தொப்பூழ் கொடி உறவுகளென்பதைத் தமிழுணர்வு கொண்ட எவராலும் மறுக்க முடியாது.  அவ்வகையில் இந்து சமுத்திரத்து வங்காள விரிகுடாவின் பாக்கு நீரிணைப் பிரதேசத்தின் இரு மருங்கிலுமுள்ள நாம் ஒரே தேசிய இனத்தவராவோம்.

‘ஒரு பொது மொழி, பொதுப்பிரதேசம், பொதுவான பொருளாதார வாழ்வு, பொதுவான மனஇயல்புடன் கூடிய உறவுகளைப் பிரதிபலிக்கும் உயிர்ப்பண்பு ஆகியவற்றின் அடிப்படையில் அமைந்த வரலாற்று ரீதியாக உருவாகிய மக்கள் சமூகமே தேசியஇனம். – ஆதாரம்: ‘சோவியத் யூனியனின் தேசங்களும், தேசிய இனங்களும் நூல்.   அவ்வகையில் நமது தமிழ்த் தேசிய இன அடையாளம் உலகினால் அங்கீகரிக்கப்பட வேண்டியதாகும்.  இந்த அடையாளத்தை இந்தியாவோ இலங்கையோ தற்போது ஏற்றுக்கொள்ளத் தயக்கம் காட்டுகின்றன.  ஆனால் உலக நாடுகளோ படிப்படியாக நம்மை ஓர் பிரதான இனமாக ஏற்கத் துவங்கி விட்டன.

 

சமீபத்தில் நடந்த நமது பாரம்பரிய விழாவான பொங்கல் விழாவுக்கு இங்கிலாந்து, கனடா, ஜெர்மனி போன்ற நாடுகளின் பிரதம மந்திரிகளுட்படப் பல தலைவர்கள் வாழ்த்துச் செய்திகளை அனுப்பியுள்ளமை உலக அரங்கில் எமது அடையாளம் உறுதிப்பட்டு வருவதையே காட்டி நிற்கின்றது.  அவ்வகையில் எமது சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட்டு விரைவில் எமக்கென்றோர் ஆட்சியதிகாரம் நிறுவப்பட்டே தீரும். அதற்காக நாம் நம்மாலான முயற்சிகளை முடிந்தவரை முன்னெடுத்துச் செய்ய வேண்டும்.  தமிழர் தேசியத்தின் முக்கியத்துவத்தைப் புரிந்து கொண்டு தமிழர்களை ஒன்றுபடுத்த முயற்சிக்கும் கட்சிகளையும் தனிநபர்களையும் தோளோடு தோள் நின்று ஆதரித்து அவர்களைப் பலப்படுத்துவதே இன்று நாம் செய்ய வேண்டிய பணியாகும்.

 

கொடுங்கடலாலும், சிங்களப் படைகளாலும் நாம் கொத்துக் கொத்தாக அழிக்கப்பட்டோம். பஃறுளியாற்றுடன் பன்மலையடுக்கத்துக் குமரிக்கோட்டமும் கொடுங் கடலுக்கிரையானது பழைய கதை ஆமியும் சுனாமியும் அழித்தது நம் கண்முன்னே நடந்த புதிய கதை.   ஆனாலும் நாம் மீண்டும் தளைத்தெழுவோம்.

 

காய்ந்து வெடித்த கழித்தரையில் நீர் சேர

ஓய்ந்து விடாது உடன் முகிழ்த்துப் பூச்சொரியும்

ஆம்பர், ஒட்டி, அல்லி அரவிந்தமாய் மலர்வோம்.

சாம்பரிலே நின்று பீனிக்ஸ் பறவைகளாய்

மீண்டும் எழுவோம் விரைந்துயர்வோம்,  இஃதுறுதி.

 

 

படைப்பைப் பற்றிய சிறு குறிப்பு-

 

இந்து சமுத்திரத்தின் வங்காள விரிகுடாவிலுள்ள பாக்கு நீரிணையின் வடக்கிலும் தெற்கிலுமுள்ள தமிழர் நிலப்பரப்பு எவ்வாறு இணைந்து செயலாற்ற வேண்டும், இந்தியத் துணைக்கண்டத்தின் பிரிக்க முடியாதவோர் பாகமாக அதே வேளையில், சுயநிர்ணய உரிமை கொண்ட பெருநிலப்பரப்பாக இவ்வுலகில் மிளிர வேண்டும், தமிழ்நாட்டு, தமிழீழ மீனவர்கள் தமக்குப் பொதுவாயுள்ள மீன்வளத்தை பங்கு போட்டுக் கொள்வதற்கு எவ்வித கடலெல்லைகளும் தடையாக இருத்தல் கூடாது என்பதை வலியுறுத்தி எழுதப்பட்டது இக்கட்டுரை.

எஸ். கருணானந்  தராஜா

    

 


 

 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.