Jump to content

இளையராஜா 75 - ஹம்மிங்கே புது தினுசு!


Recommended Posts

இளையராஜா 75 - ஹம்மிங்கே புது தினுசு!


 

 

ilayaraaja-75-humming

இசைஞானி இளையராஜா

 

 

எல்லா இசையும், மனதை வசப்படுத்தும் என்பது உண்மைதான். ஆனால் இவரின் இசையில் ஏதோ மயிலிறகு சாதனங்களும் இழைக்கப்பட்டிருக்கிறதோ என்னவோ. கேட்பவரின் உள்ளத்தின் துக்கத்தையெல்லாம் தவிடுபொடியாக்கிவிடும் இவரின் இசைக்கு, மயங்காதவர்களே இல்லை. அந்த இசைக்குச் சொந்தக்காரர்... இசையராஜா. மன்னிக்கவும்... இளையராஜா. ஏன் மன்னிப்பு? இரண்டும் ஒன்றுதான்.

கி.மு., கி.பி. என்று சொல்வது போல், இ.மு., இ.பி. என்று தமிழ் சினிமாவைப் பிரிக்கவேண்டும். அப்படிப் பிரித்துப் பார்க்கவேண்டும். இளையராவுக்கு முன், இளையராஜாவுக்குப் பின் என்று கோடு கிழித்துப் பார்த்தால்தான், எல்லையற்ற இசையையும் இசைக்குள் வித்தைகளையும் புகுத்தி, புகுந்துபுறப்பட்டிருக்கிறார் என்பதை உணரமுடியும்.

 

அன்னக்கிளி படத்தின் மூலம் வந்த இசைக்குயிலோனுக்கு 75 வயது (2.6.18). ஆனால் பெயருக்கேற்றது போலவே உடலிலும் உள்ளத்திலும் இசையிலும் ‘இளைய’ராஜாவாகவே இருக்கிறார் இளையராஜா.

இசை வழியே ராஜாங்கம் நடத்தியவர் இளையராஜா.

அன்னக்கிளி என்கிற முதல் படத்தில் இருந்தே, இவரின் சாதனைகள், சரித்திரமாகத் தொடங்கின. இதுவே ஓர் சாதனைதான்.

அன்னக்கிளிக்கு முன்பு வரை, கிராமத்து டீக்கடைகளில் கூட, ஹிந்திப் பாடல்கள் அலறிக்கொண்டிருக்கும். எங்கு திரும்பினாலும் ஹிந்திப் பாடல்கள் நம் செவிக்குள் நாம் விரும்பியோ விரும்பாமலோ வந்து தொட்டுச் செல்லும். ஆனால் அன்னக்கிளிக்குப் பிறகு, நிலைமை மாறியது. எல்லா சாலைகளும் ரோம் நகரம் நோக்கி என்பது போல, எல்லாரின் செவிகளும் ராஜாவின் இசையைக் கேட்டுக்கேட்டு நிரப்பிக்கொள்ளத் தொடங்கின.

அன்னக்கிளியே உன்னைத் தேடுதே... பாடலின் அந்த ஆரம்ப ஹம்மிங், கேட்போர் உயிரையையே ஒருகணம் கரைத்து, இசையுடன் இரண்டறக் கலக்கச் செய்துவிடும். இது ராஜ மாயம்.

16 வயதினிலே படத்தில் செந்தூரப்பூவே பாட்டு ஆரம்பிக்கும்போது ஹம்மிங்  இருக்காது. ஆனால் அந்த முந்தைய இசை, ஒரு குதூகலத்தையும் மிகப்பெரிய மென்சோகத்தையும் ஒரேசமயத்தில் தந்து, நம்மை உட்காரச் செய்யும். ஊஞ்சலாட வைக்கும்.

அந்த மெட்டி படம். தனனனனா... தனனனனனா... என்று ஹம்மிங்கும் அடுத்து வருகிற இசையும் நம்மை என்னவோ செய்யும். ‘மெட்டி ஒலி காற்றோடு’ என்று ராஜாவின் குரல், அந்தக் குழைவு... நம் மனசை அப்படியே அமைதிப்படுத்திவிடும். நடுவே... ‘ஓஓஓஓஓஓஓஓஓ... வாழ்நாளெல்லாம் உன்னோடுதான் வாழ்ந்தாலே போதும்’ என்று ராஜா சொல்லும் போது, வாழும்வரைக்கும் ராஜாவும் ராஜாவின் இசையும் இருந்தாலே போதும் என மனசு ஏங்கும். வேண்டும்.

சிகப்பு ரோஜாக்கள் படத்தில் ‘நினைவோ ஒரு பறவை’ பாடல். ‘ம்ம்ம்ம்ம்ம்ம்... ம்ம்ம்ம்ம்ம்ம்ஹும்...’ என்று ஜானகி ஆரம்பிக்க, ‘நினைவோ ஒரு பறவை’ என்று பாடியும் விட, ‘பாபாபாபாபா...’ என்று கமலின் ஹம்மிங், நம்மை சிறகின்றி பறக்கவைக்கும். இளையராஜாவின் இசையே சிறகாகியிருக்கும்.

‘ஓலா ஓலா ஓ... லலலா..’ என்று ‘மீன் கொடித்தேரில் மன்மத ராஜன் ஊர்வலம் போகின்றான்ன்’ என்கிற கரும்புவில் படத்தின் பாடல் இன்றைக்கு வரை, வில்லெனப் பாய்ந்து, இனிக்கிறது. கரும்புவில் அல்லவா. அப்படித்தான் வித்தை செய்திருப்பார் ராஜா.

நிழல்கள். இதுவொரு பொன்மாலைப் பொழுது பாடல். ஏ...ஓ....ம்... லல்லா......’ என்று எஸ்.பி.பி.யின் குரலும் குயிலோசையும் கலந்தடிக்க, அங்கே ராஜாவின் கொடி பட்டொளிவீசிப் பறந்தது.

இதயக்கோவில் படத்தில், ‘ஆஆஆஆஆ... ஆஆஆ.ஆஆஆ... ஆ...’ என்று வானுயர்ந்த சோலையிலே பாட்டுக்கு முன்னே உயிர் உருக்கும் அந்த ஹம்மிங்... மொத்தப் பாட்டின் ஜீவனையும் சொல்லிவிடும்.

அலைகள் ஓய்வதில்லை. ‘விழியில் விழுந்து இதயம் நுழைந்து’ பாடல். நடுவே... ‘தனன நநந தனன தநநநநநா...’ என்றும் ராஜாவின் குரலில், ‘தகதோம் தகதோம் தகதோம்... தகதகததோம்’ என்று வருமே... காதலின் அடர்த்தியும் ஆழமும் புலப்படச் செய்யும் இசை. சொல்லப்போனால், இசையின் அடர்த்தியைக் காட்டி, ஆழத்துக்கே கூட்டிச் சென்றிருப்பார் ராஜா.

தங்கமகன் படத்தில், பூமாலை... பாடலில், ‘ஹே... தகததகதா... தகததகதா... ‘ என்று இரண்டுநிமிடங்களுக்கு ஒரு ஹம்மிங் ஜிம்மிக்ஸ் செய்திருப்பார். அந்தப் பாடலுக்கு அந்த ஹம்மிங் மயிலிறகு. நம் மனசுக்கும்தான்!

’நான் தேடும் செவ்வந்திப்பூவிது’ பாடலில் ஆரம்ப ஹம்மிங், ராஜா குரலிசை. கொன்னுடுவார் மனுஷன். அதேபோல், வேதனை, சோகம், தோல்வி, எதிர்கால பயம் என எல்லாவற்றையும் நாயகன் படத்தின் தென்பாண்டிச் சீமையிலே பாடலுக்கு முன்னதான ‘ஆ....ஆ.....ஆஆஆஆஆ...‘ என்று மொத்தமாகக் கொட்டியிருப்பார்.

‘முள்ளும் மலரும்’ பாடல், இளையராஜாவுக்கு சீனிச்சக்கரை படம். செந்தாழம்பூ பாடலுக்கு முன்னதாக ஜேசுதாஸ் அண்ணாவின் ம்ம்ம்ம்ம்ம்... ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்...ம்ம்ம்ம்ம்ம்ம்ம் என்று இருக்குமே. அது இசைக்கவிதை. ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் பாடலுக்கு முன்னதாக, ’ஏலேலே ஏலேலே ஏலேலே... ஏலேலே... ஏலேலே...’ என்று வரும். அது கொண்டாட்ட மூடுக்கு நம்மைக் கொண்டு போய்விடும்.

ராஜபார்வையின் அந்தி மழை பொழிகிறதுக்கு முன்னதாகவும் டிக்டிக்டிக் படப் பாடல்களின் ஹம்மிங்குகளும் சொக்க வைக்கும். 

இவ்வளவுதானா... ராஜாவின் இசை கங்கை மாதிரி. அதை சொம்புக்குள் அடைத்துவிடமுடியாது.

இசைஞானிக்கு நாளை 2.6.18 பிறந்தநாள். 75வது பிறந்தநாள்.

இசையைக் கொண்டாடுவோம். இசைஞானியை வாழ்த்திக் கொண்டாடுவோம்.

உங்களுக்குப் பிடித்த ராஜாவின் பாடல்களையும் ஹம்மிங்குகளையும் பகிர்ந்துகொள்ளுங்கள்!

இசை வாழ்க... இசைஞானி வாழ்க!

http://www.kamadenu.in/news/cinema/3064-ilayaraaja-75-humming.html?utm_source=site&utm_medium=category&utm_campaign=category

Link to comment
Share on other sites

கற்பனையால் ரசிகர்களை வியக்க வைப்பதே வெற்றி; எல்லாவற்றையும் தாண்டிய இசை ஒன்று இருக்கிறது!: இசைஞானி இளையராஜா சிறப்பு நேர்காணல்

 

 

 
ilayarajaa

படம்: ஷாஜு ஜான்

பிரசாத் ஸ்டுடியோ. இளையராஜாவின் கற்பனையில் முகிழ்த்த ஆயிரக்கணக்கான பாடல்கள் ஒலி வடிவம் எடுத்த இடம். அவரது பல பாடல்களில் தவழும் ஆத்மார்த்தமான அமைதி, ஸ்டுடியோ முழுவதும் வியாபித்திருக்கிறது. வெளியில் வெவ்வேறு மொழித் திரைப்படத் தயாரிப்பாளர்கள் காத்திருக்கிறார்கள். இசைப்பதிவுக்கான ஏற்பாடுகளில் இசைக் கலைஞர்கள் மூழ்கியிருக்கிறார்கள். தனது ஆஸ்தான அறையில், ரமண மகரிஷி, ஆதிசங்கரர் படங்களுக்கு நடுவே ஒரு யோகியின் புன்னகையோடு அமர்ந்திருக்கிறார் இளையராஜா. இன்று அவரது 75-வது பிறந்தநாள். இதையொட்டி,‘தி இந்து’ தமிழ் வாசகர்களுக்காக அவர் அளித்த மனம்திறந்த நேர்காணல்:

முதலில், இசை ரசிகர்கள் சார்பில் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். ‘ஞானதேசிகன்’ என்ற சிறுவனாக நீங்கள் கண்ட கனவுகளை, இன்று 75-வது வயதில் திரும்பிப் பார்க்கும்போது என்ன தோன்றுகிறது?

 

பெற்றோர் எனக்கு முதலில் இட்ட பெயர் ஞானதேசிகன்தான். ஆனால் பள்ளியில் சேர்த்தபோது ராஜய்யா என்ற பெயரில் பதிவு செய்தனர். ஒரு எளிய கிராமத்தில் ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்தவன் நான். இன்றைக்கு இவ்வளவு பெரிய இடத்துக்கு வந்திருக்கலாம். ஆனால், எதிர்காலம் குறித்த கனவுகளுக்கெல்லாம் அன்று என் குடும்ப சூழலில் வாய்ப்பு இருந்ததில்லை.

இளம் வயது நினைவுகளைச் சொல்லுங்களேன்..

எனக்கு நினைவில் இருப்பது, நான் படித்த ஆரம்பப் பள்ளிக்கூடம், அரு கில் இருந்த பிள்ளையார் கோயில், பாதையின் ஓரங்களில் அடர்ந்திருந்த செம்பருத்திச் செடிகளும் அதன் பூக்களும், அந்தப் பள்ளியை நடத்திவந்த பெருமாள் வாத்தியாரும்தான். நான் பள்ளிக்கூடம் போக, ஒரு வீட்டினுள் புகுந்துதான் செல்வேன். அந்த வீடு மட்டுமல்ல, அந்த வீட்டின் அம்மையாரும் இன்றும் என் நினைவில் உள்ளார்.

உங்களை உலகுக்கு அடையாளம் காட்டிய ‘அன்னக்கிளி’ பற்றி..

பாடல்களுக்காக எடுக்கப்பட்ட படம் ‘அன்னக்கிளி’. என் நண்பரும் கதாசிரியருமான செல்வராஜ் அடிக்கடி பஞ்சு அருணாசலத்தைச் சந்திப்பதுண்டு. என்னைப் பற்றி அவரிடம் சொல்லியிருக்கிறார். “ஒருமுறை பஞ்சு அருணாசலத்தைப் பார்த்துவிட்டு வா” என்றார் செல்வராஜ். நான் சென்று சந்தித்தேன். “பாட்டு ஏதாவது பண்ணியிருக்கியா? இருந்தால் பாடிக்காட்டு” என்றார். தயாராக இருந்த அனைத்துப் பாடல்களையும் பாடிக் காண்பித்தேன். அவருக்கு மிகவும் பிடித்துப் போய்விட்டது. “ஒரு நகைச்சுவைப் படத்துக்கு எழுதிக்கொண்டிருக்கிறேன். உன் பாடல்களுக்கென்றே ஒரு கதையை உருவாக்கிவிட்டு, பிறகு உன்னை அழைக்கிறேன். அதுவரை யாரிடமும் சொல்லிக்கொள்ள வேண்டாம்” என்றார். 3 மாதங்களில் இந்தப் பாடல்களையே ஆதாரமாக வைத்து, செல்வராஜ் எழுதியிருந்த கதையில் ‘அன்னக்கிளி’ படத்தைத் தொடங்கினார்.

0a05993c4293672mrjpg

படம்: எல்.சீனிவாசன்

 

வேறு சில படங்களும் பாடல்களை வைத்தே உருவாக்கப்பட்டன என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.

‘வைதேகி காத்திருந்தாள்’ படத்தைச் சொல்லலாம். ‘காக்கிச் சட்டை’ படத்தின் பாடல்களை கம்போஸ் செய்வதற்காக 3 நாட்கள் வெளியூரில் ரூம் போட்டிருந்தார்கள். அனைத்துப் பாடல்களும் முதல் நாளே அரை மணி நேரத்தில் முடிந்துவிட்டதால், நேரத்தை வீணாக்காமல் மீண்டும் 6 பாடல்களை கம்போஸ் செய்துவைத்தேன். பஞ்சு சார் இந்தப் பாடல்களைக் கேட்டுவிட்டு அதிலிருந்து ஒரு பாடலை மட்டும் தனக்குத் தரும்படி கேட்டார். மறுத்துவிட்டேன். பஞ்சு சார், “ஏய்.. எனக்கே இல்லை என்று சொல்கிறாயா?” என்றார். “யாராக இருந்தாலும் என் பதில் ஒன்றுதான். 6 பாடல்களும் ஒரே படத்தில் வருவதானால் தருகிறேன்” என்றேன். “சரி, ‘வைதேகி காத்திருந்தாள்’ படப்பிடிப்புக்காக அவசரமாக ஒரு பாடல் கேட்கிறார்கள். இதை அவர்களுக்குக் கொடு” என்றார். அதுதான் ‘மேகங் கருக்கையிலே’ பாடல். மற்ற பாடல்களையும் அவர்களே எடுத்துக் கொண்டார்கள்.

‘அன்னக்கிளி’ வெளியாகி, முதல் ஓரிரு ஆண்டுகளில் தங்களது இசையமைப்பில் மிகப் பெரிய மாற்றங்களை உணர முடிந்தது. இதை எப்படி திட்டமிட்டீர்கள்?

நான் திரைத் துறையில் அடி எடுத்து வைத்தபோது இருந்த இசையும், என் மனதில் தோன்றிய கற்பனைகளும் வேறுவேறாக இருந்தன. நடைமுறை யில் இருந்த திரையிசைப் பாணியை கற்கவேண்டி இருந்தது. அவ்வாறு இல்லாவிட்டால் ‘இவனுக்கு இம்மாதிரி இசையை அளிக்கத் தெரியவில்லை’ என்று வதந்தி பரப்பிவிடுவார்கள். பொழப்பைப் பார்க்க வேண்டுமே! எனவே, 12 படங்களுக்கு அவ்வாறு இசை அமைத்துவிட்டு, நான் என் பாணியை நான் நினைத்த வகையில் மாற்றிக்கொண்டேன். என் கற்பனைக்கு ஏற்ற படங்கள் அமைந்ததும் தெய்வாதீனம். பிறகு நான் அந்தப் பக்கம் திரும்பிப் பார்க்கவில்லை.

‘மூடுபனி’ திரைப்படத்தில், ஷோபாவுக்காகப் பிரதாப் போத்தன் ஆடை கள் வாங்கி வரும் காட்சியின் பின் னணி இசையில், ஸ்வர பிரயோகங்களின் இடைவெளிகள் அசாத்தியமாக இருக்கும். இதுவரை கேட்டிராத இசை அது. இப்படிப்பட்ட கற்பனை எப்படித் தோன்றியது?

இதற்கு என்ன சொல்வது! எங்கிருந்தோ வந்தது. என்னுள் புகுந்து அது வெளித்தோன்றியது. எங்கேயோ எப்பொழுதோ கேட்டதின் வெளிப்பாடாகக் கூட இருக்கலாம்.

தங்களது பல பாடல்களில் இரண்டாவது இடையிசை (II interlude) முதலாவது இடையிசையைவிட மிகவும் விசேஷமாக இருக்கும். ‘விழியிலே மணி விழியிலே’, ‘அந்தரங்கம் யாவுமே’, ‘ஏதோ நினைவுகள்’, ‘எங்கெங்கோ செல்லும்’ போன்ற பாடல்களைக் குறிப்பிடலாம். இரண்டாவது இடையிசை மனதைக் கொய்து நம்மை வேறு ஒரு உலகத்துக்கு அழைத்துச் சென்றுவிடுகிறது.

உண்மையில், இரண்டாவது இடையிசையைச் சிறப்பாக உருவாக்க வேண்டும் என்றெல்லாம் நினைப்பது கிடையாது. ஒரு பாடல் உருவாகும்போது படிப்படியாகச் செல்வோம். முகப்பு இசையையும், முதல் இடையிசையையும் கோத்த பின்னர், ஒரு உந்துதலில் இரண்டாவது இடையிசை தானாகவே சிறப்பாக வந்துவிடும்!

‘வான் மேகங்களே’, ‘தம்தன தம்தன தாளம் வரும்’ போன்ற பல பாடல்கள், பின்னணி இசைக்கோவைகளில் வீணையைப் பல்வேறு விதங்களில் பயன்படுத்தியிருக்கிறீர்கள். கிடாருக்கு மாற்றாக வீணை, வீணைக்கு மாற்றாக கிடார் என்று புதுமையைப் புகுத்தி வியக்க வைத்தீர்கள்.

கற்பனைதான் அடிப்படைக் காரணம். உங்களை வியக்கவைப்பதுதானே என் வேலை. அதுதான் என் வெற்றி!

உங்களது பல பாடல்கள் தாளத்தில் வித்தியாசமாகத் தொடங்கும். சில வீச்சிலும் தொடங்கும். இது தியாகராஜ சுவாமிகளின் கிருதிகள் மீதான பக்தியால் உண்டானதா?

இருக்கலாம். வழிவழியாக நமது சங்கீதத்தில் அமைந்த கிருதிகளும், பாடல்களும் இம்மாதிரி வெவ்வேறு எடுப்பில் அமைந்து வந்திருக்கின்றன. அதையொற்றியே எனது பாடல்களும் அப்படி அமைகின்றன.

பரபரப்பாக இருந்த நேரத்திலும்கூட, சமஸ்கிருதத்தையும் கர்னாடக இசையையும் விடியற்காலை அதற்கென்று நேரம் ஒதுக்கிப் பயின்றீர்கள். என்ன காரணம்?

சமஸ்கிருதத்தில் எத்தனையோ விஷயங்கள் உண்டு. ஆதிசங்கரர் எண்ணற்ற ஸ்தோத்திரங்கள், பூஜை விதிமுறைகளை நமக்குப் பொக்கிஷமாகக் கொடுத்துள்ளார்கள். அவற்றை அறிய விரும்பி சமஸ்கிருதம் பயின்றேன். கர்னாடக இசையில் அந்தக் காலகட்டத்தில் எனக்கு அவ்வளவு பரிச்சயம் இல்லை. தெரியாத ஒன்றைப் பயிலலாமே என்று அதைக் கற்றேன். கற்பதில் ஆர்வம் அதிகம் இருந்ததால் என் புகழோ, நேரமின்மையோ ஒரு பொருட்டாகத் தெரியவில்லை. உயர்ந்த விஷயங்களை உயர்ந்த விஷயங்கள்தான் என்று கண்டுகொள்வது தவறா. உயர்ந்த விஷயங்களை நாம்தான் கண்டுகொள்ள வேண்டுமே தவிர உயர்ந்த விஷயங்கள் நம்மைக் கண்டுகொள்கிறதா என்பது கேள்விக்குறியே. கடவுளைப் போல..

கமல் - இளையராஜா கூட்டணி ரசிகர்களுக்குப் பெரும் விருந்து படைத்தது. கமலுடனான அனுபவம் ஏதேனும் ஒன்றைப் பகிர முடியுமா?

ராஜ்கமல் நிறுவனத்தின் முதல் தயாரிப்பு. பாடல்களை உருவாக்க அவர்களது அலுவலகத்துக்குச் சில கலைஞர்களுடன் சென்றேன். சிறிது நேரம் கமல் சார், படத்தின் இயக்குநர் சிங்கீதம் சீனிவாச ராவ் சாருடன் பொதுவான விஷயங்களைப் பேசிக்கொண்டிருந்தோம். “சரி, கம்போஸ் செய்ய நான் ரெடி” என்றேன். இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக்கொண்டார்கள். “சிச்சுவேஷன் சொல்லுங்கள்” என்றேன் மீண்டும். “நாளை பூஜை. பாட்டு ஒண்ணு பதிவு பண்ணணும். கதை இன்னும் தயார் செய்யவில்லை. இப்போதைக்கு இதுதான் சிச்சுவேஷன்” என்றனர். சரி என்று நானும் ஒரு ட்யூன் தயார் செய்த பின், கவிஞர் கண்ணதாசன் பாடல் எழுத வந்தார். “என்னப்பா கதை, பாடலுக்கு என்ன சிச்சுவேஷன்?” என்றார். அவருக்கும் அதே பதிலை அவர்கள் கூற, கவிஞர் சிரித்துவிட்டு, என்னிடம் ட்யூனைப் பாடச் சொன்னார். பாடலும் தயாரானது. பின்னர் அந்தப் பாடலைப் படத்தில் பொருத்தமான ஒரு இடத்தில் வைத்தனர். பாடலும் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றது. அதுதான் ‘அழகே அழகு தேவதை’ பாடல். படம், ‘ராஜ பார்வை’!

‘ராஜ பார்வை’யில் ஒரு காட்சியில், வயலின் இசைக் கலைஞரான கமல் சோலோ வயலின் வாசிக்கும் காட்சியில், உங்கள் இசை அற்புதமாக வந்திருக்கும்.

ஆமாம். நல்ல ஒரு இசைதான் அது. கமல் சாருக்காக நான் இசையமைத்த படங்களின் பின்னணி இசை அத்தனையும் அவருக்கு அத்துப்படி. இன்று கேட்டாலும் காட்சிவாரியாகப் பாடிக் காட்டுவார். நல்ல இசை ஞானம் கொண்டவர் கமல்!

மும்பையில் ஒரு பாடல் பதிவின் முடிவில், பாடலை வாசித்த இசைக் கலைஞர்களெல்லாம் எழுந்து நின்று கரகோஷம் செய்தனர் என்று கேள்விப்பட்டிருக்கிறோம். அதுபற்றி..

ஏவி.எம் தயாரித்த ‘தூங்காதே தம்பி தூங்காதே’ படத்தின் ‘வானம் கீழே வந்தால் என்ன’ பாடல் பதிவை மும்பையில் செய்தோம். மும்பையில் 7-1 கால்ஷீட் என்றால், 11 மணிக்கு வருவதுதான் இசைக்கலைஞர்களின் வழக் கம் என்றனர். நானோ கண்டிப்பாக 7 மணிக்கு எல்லோரும் இருக்க வேண்டும் என்று கூறிவிட்டேன். மறு நாள் அனைத்துக் கலைஞர்களும் சரி யாக 7 மணிக்கு ஆஜர். 90 பேர் கொண்ட இசைக்குழு அது. இசைக்கலைஞர்களுக்கான இசைக் குறிப்புகளை அவர்கள் முன்பே 30 நிமிடத்தில் தயார் செய்தது அவர்களுக்கு ஆச்சரியம். ரிகர்சல் நேரத்திலேயே பாராட்டு மழை தொடங்கிவிட்டது. பாடல் பதிவை விரைவாகவே முடித்துவிட்டோம். பாடல் பதிவு முடிந்ததும் எல்லோரும் எழுந்து நின்று தொடர்ந்து கைதட்டிக்கொண்டே இருந்தார்கள்.

ஒரு படத்துக்காக நீங்கள் மெட்டமைத்த பாடல், வேறொரு படத்தில் இடம் பெற்றிருக்கிறதா?

உடுப்பியில் பாடல் கம்போஸிங். பாலுமகேந்திராவும் அங்கு படப்பிடிப்பு நடத்திக்கொண்டிருந்தார். என்னைச் சந்தித்து அவரது ‘மூடுபனி’ படத்துக்கு, கதாநாயகன் கிடாருடன் பாடுவது போன்ற பாடல் ஒன்று வேண்டும் என்று கேட்டார். ‘இளைய நிலா பொழிகிறதே’ பாடலின் மெட்டைப் பாடிக்காட்டினேன். “இதுவேண்டாம். வேறு கொடுங்கள்” என்றார். ‘என் இனிய பொன் நிலாவே’ மெட்டைக் கொடுத்தேன். பிடித்துப்போய்விட்டது. பின்னர், ‘பயணங்கள் முடிவதில்லை’ படத்தில் இடம்பெற்ற ‘இளைய நிலா’ பாடலும் பெரிய அளவில் ஹிட் ஆனது. அவரது உதவியாளர்கள் அவரிடம், “என்ன சார் அதை இப்படி விட்டுவிட்டீர்களே” என்று கூற, “நான் என்ன செய்ய. ஆனால் ‘என் இனிய பொன் நிலாவே’ மட்டும் என்னவாம். சிறந்த பாடல்தானே” என்றாராம் பாலுமகேந்திரா. அப்பாடலும் இன்றளவும் மக்கள் மனதில் நீங்கா இடம்பெற்றுள்ளது யாவரும் அறிந்ததே.

பாடலுக்குப் பாடகர்களை எவ்வாறு தேர்வு செய்வீர்கள்?

ஒலிப்பதிவுக் கூடத்துக்கு வந்து, அன்றைக்கான பாடல் என்ன, என்ன ஸ்ருதி, தயாரிப்பு நிறுவனத்தின் பெயர் ஆகியவற்றை எழுதிவிட்டு, 30 நிமிடங்களில் பாடலுக்கான இசைக் குறிப்புகளையும் தயார் செய்துவிட்டு பாடகரின் பெயரை எழுதுவேன். அந்த க்ஷண நேரத்தில் தோன்றுவதுதான். குறிப்பிட்ட பாடகர் அன்று இல்லாவிட்டால், வேறு ஒருவரைச் சொல்லுவேன். பாடகர்கள் யாரும் கிடைக்காவிடில் நானே பாடிவிடுவேன். நான் பாடிய பல பாடல்கள் அவ்வாறு பதிவுசெய்யப்பட்டவைதான்!

மெல்லிசை மன்னர் எம்எஸ்வி பற்றி..

(ஒரு நிமிடம் கண்ணை மூடி தியான நிலைக்குச் சென்றுவிட்டு..) அவர் மிகச் சிறந்த இசையமைப்பாளர்!

பாரம்பரிய மேற்கத்திய இசை, நமது பாரம்பரிய இசை பற்றி..

மேலைநாடுகளில் நடக்கும் ‘கிளாசிக்கல் வெஸ்டர்ன் கான்ஸர்ட்’ நிகழ்ச்சிகளில், கேட்க வரும் ரசிகர்களின் ஒழுக்கம் பலமுறை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. எல்லோருக்கும் அங்கு வாசிக்கப்படும் இசைக் கோவைகள் பற்றி நன்றாகத் தெரிந்து இருக்கிறது. 200-300 வருடங்களுக்கு முன்பு இருந்த இசையை அப்படியே வாசிக்கிறார்கள். எப்படி? மொஸார்ட், பீத்தொவன், ஷாக்கியொவாஸ்கி போன்ற மேதைகள், ஏற்ற இறக்கங்கள், வளைவுகள், வேகம் என்ன என்று எல்லாவற்றையும் அன்றே குறிப்புகளுடன் எழுதிவைத்தார்கள். அவர்களின் இசை, சமுதாயத்துக்காக எழுதப்பட்டது. நமது கர்னாடக, இந்துஸ்தானி இசையோ உள்ளிருக்கும் ஆத்ம சுத்திக்காக உருவானவை. ஆனால் நமது இசையில் இம்மாதிரியான குறிப்புகள் இல்லை. நமது இசையைக் குறை சொல்லவில்லை. நம் இசையை ஸ்வரப்படுத்தி எழுதி ஒரு வடக்கத்தி இசைக் கலைஞரிடம் கொடுத்தால் வாசிப்பாரா? வாசிக்க மாட்டார். நமது இசை உயர்வானதென்றாலும், செவி வழியாகவே வந்துள்ளது. அவர்களது இசைக் குறிப்புகள் போல இலக்கண சுத்தமான இசைக் குறிப்புகள் இங்கே இல்லை. தோடி ராகத்தை எடுத்துக் கொள்ளுங்கள். (ஒரு பிடியைப் பாடுகிறார்) இது காந்தாரமா, ரிஷபமா, மத்யமமா என்று சொல்ல முடியாத அளவுக்கு ஒரு குழப்பம். நொட்டேஷன் சிஸ்டம் இங்கே முழுமையாக இல்லை. நமது இசையை, நன்றாகக் குறிப்புகள் எழுதி ஒரு சிம்பொனி ஆர்கெஸ்ட்ராவிடம் கொடுத்து, அவர்கள் அதை வாசித்தால் எவ்வளவு பிரமிப்பு ஏற்படும். ஆனால் அது இல்லை என்பதுதான் என் வருத்தம்.

மியூசிக் அகாடமியோ, அரசாங்கமோ இதில் மெனக்கெட வேண்டும். நமது இசையை இன்னும் பலர் புரிந்துகொண்டு ரசிக்கும்படியாகவும், நொட்டேஷனைப் பார்த்த மாத்திரத்தில் அதைப் பாடவோ, இசைக்கவோ செய்யுமாறும் என்னால் ஒரு திட்டம் வகுத்து, வெற்றிகரமாக அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்ல முடியும். வல்லுநர்கள் முன்வந்தால் நானும் அதில் கலந்துகொள்ளத் தயாராக உள்ளேன்.

பொதுவாக இசையைப் பற்றி..

நான் இசை என்று சொன்னால், நீங்கள் உடனே திரை இசையைத்தான் நினைப்பீர்கள். திரை இசையைத் தாண்டி ஒரு இசை இல்லையா? கர்னாடக இசையைத் தாண்டி ஒரு இசை இல்லையா? பாரம்பரிய மேற்கத்திய இசையைத் தாண்டி ஒரு இசை இல்லையா? இவை எல்லாவற்றையும் தாண்டி இசை ஏதோ ஒரு வடிவத்தில் இருக்கிறது. ஒரு பாடகர் ஒரு ராகத்தைப் பாடும்போது அதை ரசிக்க வேண்டும். மாறாக, உங்களுக்குப் பிடித்த ராகத்தைப் பாடினால் மட்டுமே அவனை அங்கீகாரம் செய்வது என்பது தப்பானது. அதேபோல ஒரு சினிமா பாடலை ‘இது நன்றாக இல்லை’ என்று நொடிப்பொழுதில் நிராகரிப்பதும் பெரிய தவறே. அதில் என்ன இருக்கிறது என்று உனக்கு என்ன தெரியும்? எப்படி நம் மனதுக்குப் பிடித்த சாப்பாட்டை மட்டுமே உண்ணும் தன்மையைப் போல, நம் மனதுக்குப் பிடித்த இசையை மட்டும்தான் கேட்பேன் என்ற நோக்கு மிகவும் தவறானதொன்றாகும். எல்லாவற்றையும் தாண்டி ஒரு இசை இருக்கிறது என்பதை உணரவேண்டும். நான் இன்னும் இசையை முழுமையாகக் கற்கவில்லை. தெரிந்துகொள்ள வேண்டியவை இன்னும் உள்ளன. இன்னும் என்ன இருக்கிறது என்று தேடிக்கொண்டிருந்தாலும், இசைக்கு என்னை நன்றாகத் தெரியும். இசை என்னைக் கண்டுபிடித்துவிட்டது!

http://tamil.thehindu.com/opinion/columns/article24064455.ece?homepage=true

Link to comment
Share on other sites

'மயிலிறகு' இளையராஜா! - உதயகீதம் இயக்குநர் கே.ரங்கராஜ்


 

 

ilayaraaja-k-rangaraj

இசைஞானி இளையராஜா - இயக்குநர் கே.ரங்கராஜ்

 

 

ஓர் இசை என்ன செய்யும்? என்ன வேண்டுமானாலும் செய்யும். அதுதான் இசை. அந்த இசையை தன் கைக்குள் அடக்கி, ஒவ்வொரு தருணங்களிலும் ஒவ்வொரு விதமாக தன் செவிகளுக்குள் இறக்கி, மனசுக்கு மயிலிறகு வருடலோ, காயம்பட்ட மனசு என்றால், களிம்போ தடவும் மாயக்காரர் இசைஞானி இளையராஜா. அவர் காலத்தில் வாழ்வதும் அவருடனேயே பணியாற்றியதும் என் இந்த ஜென்மத்தின் ஆகச்சிறந்த பரிசுகள்’’ என்று சொல்லிச் சொல்லிப் பூரிக்கிறார் இயக்குநர் கே.ரங்கராஜ்.

உதயகீதம், உன்னை நான் சந்தித்தேன், பாடுநிலாவே, மனிதனின் மறுபக்கம், இளையராஜா தயாரித்த கீதாஞ்சலி உட்பட 20 படங்களுக்கு மேல் இயக்கியுள்ளார் கே.ரங்கராஜ். இதில் 15 படங்கள் இளையராஜா இசையமைத்தவை. அப்படி அவர் இசையமைத்ததாலேயே மிகப்பெரிய வெற்றிப்படங்களாகவும் அமைந்தன. இதை அவரே நன்றியுடன் சொல்லியிருக்கிறார்.

 

இளையராஜாவின் 75வது பிறந்தநாளையொட்டி, தனக்கு மிகவும் பிடித்த, மனசுக்கு நெருக்கமான பத்து பாடல்களைக் குறிப்பிடுகிறார் கே.ரங்கராஜ்.

ராசாவே உன்ன நம்பி.. முதல் மரியாதை

என் குருநாதர் பாரதிராஜாவின் படம். படம் முழுக்க பாரதிராஜாவும் இளையராஜாவும் தெரிவார்கள். அதுவும் நடிகர்திலகம் எனும் இமயம் நடித்த படம் அல்லவா?

இந்தப் பாடலை எல்லோரும் கேட்டிருப்போம். ஒருமுறை... அந்த நான்குநிமிடப் பாடலை, மிக அமைதியாக, ஒன்றிக் கேளுங்கள். அந்தப் பாடலும் பாடலின் வரிகளும் வரிகளுனூடே பிணைந்தும் இணைந்துமாக வருகிற இசையும்... அற்புத விளையாட்டு அது!

காதலின் ஏக்கத்தையும் தவிப்பையும் ஏத்துக்கக்கூடாதா என்கிற எதிர்பார்ப்பையும் அந்த இசை, அத்தனை அழகாக நமக்குள் கடத்திவிடும். ரொம்ப ஃபீலிங்கான பாடல் இது!

ராத்திரியில் பூத்திருக்கும்... தங்கமகன்

தங்கமகன். ரஜினி படம். சத்யா மூவீஸ். மிகப்பெரிய வெற்றிப்படம்.எல்லாப் பாடல்களுமே மிகப்பெரிய ஹிட். எவர்கிரீன் ஹிட். அதிலும் புலமைப்பித்தன் எழுதிய ‘ராத்திரியில் பூத்திருக்கும்’ பாடல் வெகு அற்புதம். அபார இசை நுட்பம்.

வயலினும் புல்லாங்குழலும் கொஞ்சும். பிறகு தபேலாவில் பாட்டு முழுவதும் தன் வித்தையை இறக்கியிருப்பார் இளையராஜா. சாஸ்திரீய சங்கீதத்தை, செமி கிளாசிக்கலாக, எல்லோருக்கும் புரியும்படி, எல்லோரும் ரசிக்கும்படி, ஒரு கெமிஸ்ட்ரி விளையாட்டே நிகழ்த்தியிருப்பார். மனதை மயக்கும் பாடல். காதலிக்காதவர்களுக்குக் கூட காதல் வந்துவிடும். இசையைக் காதலிக்கத் தொடங்கிவிடுவார்கள்.

காதலின் தீபம் ஒன்று - தம்பிக்கு எந்த ஊரு

எல்லாப் படங்களுமே இளையராஜாவுக்கு ஸ்பெஷல்தான். இளையராஜாவின் இசை என்றாலே எல்லாப்படங்களுமே ஸ்பெஷல்தான். பஞ்சுஅருணாசலம் சார் தயாரித்து ராஜசேகர் இயக்கி ரஜினி நடித்த தம்பிக்கு எந்த ஊரு காமெடியும் கதையும் கலந்த படம். கூடவே இளையராஜா சாரின் தெய்வீக இசையும்!

‘காதலின் தீபம் ஒன்று’ பாடல், காதலுக்கு மரியாதை செய்யும் அழகான பாடல். நாயகனுக்கு உண்டான காதல் உணர்வையும் அந்த உணர்வின்பால் எழுந்த மென்மையையும் அப்படியே பாடலில் இசையில் கரைத்துக் கலந்து கொடுத்திருப்பார். குழல் பேசும். வயலின் பாடல் வரிகளை ஆமோதிக்கும்.

வரிகளும் இசையும் ரஜினியின் நடையும் எனச் சேர்ந்து, காதலை இன்னும் மேன்மையாக்கிவிடும் பாடல் இது. எனக்குத் தெரிந்து, ரஜினியின் ஆகச்சிறந்த காதல் பாடல் இதுவாகத்தானிருக்கும்.

தூக்கம் வராதவர்கள் இந்தப் பாடலைக் கேட்டால், அப்படியே மெய்ம்மறந்து தூங்கிவிடுவார்கள். தூங்கிக்கொண்டிருப்பவர்களுக்கு இந்தப் பாடல் காதில் விழுந்தால், சட்டென்று எழுந்து, பாடலுடன் இரண்டறக் கலந்துவிடுவார்கள். அதுதான் ராஜா சார் இசை செய்யும் மாயம்!

பாடு நிலாவே... உதயகீதம்

பாடலை கரும்புக்கு இணையான சுவையாகச் சொல்லுவார்கள். ஆனால் உதயகீதம் பாடல்கள் எல்லாமே பலாப்பழம். எல்லாமே சுவைக்கச் சுவைக்க தித்திப்பு ஏறிக்கொண்டே இருக்கிற சுளைகள். அதிலும் தேனில் தோய்த்துக் கொடுத்திருப்பார் இளையராஜா. இந்தப் படத்தை இயக்கியது எனக்குப் பெருமை. அவர் மனசில் தனியிடம் கிடைத்தது இன்னும் பெருமையான விஷயமாக நினைக்கிறேன்.

இந்தப் படத்தில்... ’பாடு நிலாவே’ பாடல் கேட்டிருப்பீர்கள். நினைவிருக்கிறதா? இருந்தாலும் எனக்காகவும் ஒருமுறை இந்தப் பாடலைக் கேளுங்கள். அவர் என்ன வித்தைகளையெல்லாம், மாயாஜாலங்களையெல்லாம் செய்திருக்கிறார் என்பதை உணருவீர்கள்.

பொதுவாக, சோகப் பாடல் என்று இருக்கும். காதல் பாடல் என்று இருக்கும்.  காதல் பாடலே பிறகு சோகப்பாடலாகவும் மாறிவரும். ஆனால் உதயகீதம் படத்தில் ‘பாடுநிலாவே’ என்ற பாடலின் முன்பகுதி, காதலை ஏற்கச் சொல்கிற சோகத்துடனும் வேதனையுடனும் இருக்கும். சிறைக்கு உள்ளேஇருந்துகொண்டு இரண்டாவது பாதியில், மோகன் பாட ஆரம்பிப்பார். அதாவது காதலை ஏற்றுக்கொண்டுவிடுவார். முதல் பாதி சோகமும் 2ம் பாதியில் சந்தோஷமும் என இரண்டையும் கலந்து, இசைக்கருவிகள் மூலம் அதை வெகு அழகாக உணர்த்தியிருப்பார் இளையராஜா.

ஓ.பட்டர்ஃப்ளை - மீரா

ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் இயக்கிய படம். விக்ரம் நடித்திருப்பார். இந்தப் பாடல் கேட்கும்போதெல்லாம் மனசு வண்ணத்துப்பூச்சியாகவே மாறியிருக்கும். படபடவென இங்கும் அங்குமாக சுதந்திரமாகப் பறக்கும். தக்கையாகியிருக்கும். பாடலின் 3வது பேக் கிரவுண்ட் இசையில், வயிலினைக் குழைத்துக் குழைத்துக் கொடுப்பார். அந்த வயலின் இசையினூடே பட்டாம்பூச்சி பறப்பதை உணர்ந்து சிலிர்ப்போம். படமாக்கிய விதமும் கவிதையாய் இருக்கும். இசை பெருங்கவிதை!

 

 பட்டுக்கன்னம் - காக்கிசட்டை

கமல் படம். ஏ.ஜெகநாதன் இயக்கியிருப்பார். சத்யா மூவீஸ் தயாரிப்பு. மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற படம். எல்லாப் பாடல்களுமே அபாரம். குறிப்பாக, பட்டுக்கன்னம் தொட்டுக்கொள்ள ஒட்டிக்கொள்ளும். அருமையான தாளம். வேகமான உணர்ச்சிக்குவியலும் அதேநேரம் கொஞ்சம் ஜாக்கிரதை உணர்வுமாகக் கலந்துகட்டுகிற இசையை, காதலின் உயிர்ப்பை, அழகின் லயிப்பை, ஒவ்வொரு வாத்தியமும் சொல்லிக் கொண்டே வரும். எப்போது கேட்டாலும் கேட்பவரை உற்சாகமாக்கிவிடும் பாடல்களில் இதுவும் ஒன்று.

பூவே செம்பூவே - சொல்லத்துடிக்குது மனசு

சுமாரான படம்தான். சுமாரான நடிப்புடன் வெளியான படம்தான். பாடலைப் படமாக்கியதும் கூட அப்படித்தான் இருக்கும். ஆனாலும் உலகம் உள்ளவரை இந்தப் பாடல் எல்லோர் மனங்களிலும் செல்போன்களிலும் டெளன்லோடாகியிருக்கும்.

இந்தப் பாடலின் தன்மை, மென்மை. அது எந்தவகையிலும் குறையாமல் பார்த்துக்கொள்கிற இசையும் ராஜா சாரும் வரம் நமக்கு!

ஒரு ஜீவன் அழைத்தது - கீதாஞ்சலி படத்தின் பாடல் காதல் பாடலில் தனி ரகம். அதேபோல் மெளனராகம் படத்தில் மன்றம் வந்த தென்றலுக்கு... பாடலில் எஸ்.பி.பி.யின் குரலை வைத்துக்கொண்டு, வித்தை காட்டியிருப்பார் இளையராஜா.

அலைகள் ஓய்வதில்லை படத்துக்காக தயார் செய்யப்பட்ட அற்புதமான பாடல் புத்தம்புதுக் காலை. அந்தப் பாடல் ஒருவிடியலை அப்படியே நம் கண்முன்னே கொண்டுவந்துவிடும். ஒவ்வொரு இசைக்கருவியின் ஓசைகளும் விடியலின் சுகத்தை நமக்குள் கடத்திவிடும். அந்தப் பாட்டினூடே, ‘டும்ட்டும்ட்டும்’ என்று மெல்லிசாக ஓர் இசை வந்துகொண்டே இருக்கும்.

அதேபோல அண்ணன் தங்கச்சிக்கு எத்தனையோ பாடல்கள் உண்டு. அண்ணன் தம்பிக்கு? தர்மத்தின் தலைவன் படத்தில், தென்மதுரை வைகை நதி என்ற பாட்டைக் கேளுங்கள். இல்லாத அண்ணனின் மீதும் பிறக்காத தம்பியின் மீதும் கூட, பாசத்தைக் கொட்டுவதற்கு ஏங்கச் செய்துவிடும், அந்தப் பாடல்.

முக்கியமாக, தளபதி படத்தின் பாடல். சுந்தரி கண்ணால் ஒரு சேதி. ராஜா சாரின் அசாத்தியத்திற்கு ஒரு துளி சான்று இந்தப் பாடல். கிளாசிக்கை, வெஸ்டர்னாக்கி குழையக்குழையக் கொடுத்திருப்பார். அதிலும் பாடலின் ஆரம்பமும் அமர்க்களம். ஜானகி ஒரு வரியைப் பாடிமுடிக்கும்போது எஸ்பிபி ‘ஆஆஆஆஆஆ’’ என்பார். அப்படிச் சொல்லிவிட்டுப் பாடுவார். அதேபோல் ஜானகி ஹம் செய்வார்.  

இப்படியெல்லாம் செய்யமுடியுமா என்று எல்லோரும் வியந்து பார்த்ததையெல்லாம் மிக எளிதாகச் செய்துவிட்டு, அடுத்த விஷயத்துக்குள் சென்று, புதிய இசையை நமக்குத் தந்துகொண்டே இருந்தார்... இருக்கிறார். அதுதான் ராஜா ஸ்பெஷல். இசைஞானியின் வரப்பிரசாதம். நமக்கு... இசைஞானியே வரப்பிரசாதம்!’’ என்றார் இயக்குநர் கே.ரங்கராஜ்.

http://www.kamadenu.in/news/cinema/3091-ilayaraaja-k-rangaraj.html?utm_source=site&utm_medium=TTH_slider_banner&utm_campaign=TTH_slider_banner

Link to comment
Share on other sites

இசையின் ராஜா இளையராஜா

 

75 வது பிறந்ததினத்தைக் கொண்டாடும் இசைஞானி இளையராஜா அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

.ஏழு ஸ்வரங்களுமே அண்ணாந்து பார்க்கும் இசை பிரமாண்டம் இளையராஜா. ஒற்றைத் துணுக்கு காற்றின் வழியே பறந்துவந்து செவியில் நுழைந்தாலும் அந்த பாடலின் முழு பிம்பமும், ராகமும், காட்சியும் கண்முன்னே வந்து செல்லும் சாத்தியத்தை கொடுத்தது இளையராஜா மட்டுமே

ilayaraja-insulted.jpg

. இந்த அசாதாரண வெற்றிக்கு துவக்க புள்ளியினை விதைத்தது பாவலர் வரதராஜன். கால்நடை பயணங்களாய், மாட்டு வண்டி பயணங்களாய், அவர் போட்டு கொடுத்த இசைப்பாதையில் தலையில் ஹார்மோனிய பெட்டியை சுமந்து தடம் பதிக்க புறப்பட்டார் இளையராஜா. பாட்டு கேட்க ஆசையாக வைத்திருந்த ரேடியோவை விற்று சென்னைக்கு சகோதரர்களுடன் ரயில் ஏறி வந்த ராஜாவிடம், வருமானம் குறைவாக இருந்ததால், ராஜாவிடம் பணமே வாங்காமல் மேற்கத்திய இசையின் அடிப்படை நுணுக்கங்களைக் கற்றுத் கொடுத்த தன்ராஜ் மாஸ்டர் இளையராஜாவின் குருநாதராக என்றும் உயர்ந்து நிற்கிறார். 

அன்னக்கிளி படத்திற்காக இளையராஜா தேர்வானபொழுது அதை அங்கீகரிக்க மறுத்தவர்கள் கண்முன்னே, "படபாடல்களை இசையமைத்து காட்டு" என பஞ்சு அருணாச்சலம் சொன்னதும், திருமண மண்டபத்திலேயே அனைத்து பாடல்களையும் இசையமைத்து காட்டி திறமைக்கு அடித்தளமிட்டார் ராஜா. அதற்கு பஞ்சு அருணாசலம், "இசைக்கருவியே இல்லாமலேயே தாளத்துடன் இப்படி பாடல்களை போட்டு காட்டிவிட்டாயே, உன்னை எந்த பெயரில் அறிமுகப்படுத்துவது? உன் பெயர் ராசைய்யாதானே, ஆனால் ஏற்கனவே ஏ.எம்.ராஜா என்று பாடகர் உள்ளதால், இளையராஜா என்றே பெயரை வைத்துக்கொள்" என்று பெயர் சூட்டி திரையுலகில் அவரை தவழவிட்டார்.

 மெல்லிய நீர்த்துளி ஒன்று கடின உழைப்பாலும், பாட்டாளி மக்களின் நேரடி உணர்வுகளை உள்வாங்கிய அனுபவத்தினாலும், மெல்ல மெல்ல ஊற்றாக பெருக்கெடுத்து, அருவியாக விழுந்து, காட்டாற்று வெள்ளம்போல் சிறிதுகாலத்திலேயே பெருக்கெடுத்து கட்டுக்கடங்காமல் தெறித்து ஓட தொடங்கியது.

52501704.jpg

 பொதுவாக ஒரு படத்தில் 5 பாடல் என்றால் 2 அல்லது 3 பாடல் ஹிட் ஆகும். ஆனால் ஒரு படத்தின் அனைத்து பாடல்களையுமே ஹிட் ஆக்கி தருபவர் ராஜாதான். இளையராஜாவின் பாடல்கள் என்றாலே மோகன், கார்த்திக், போன்றவர்களின் பாடல்களையே ஒலிபரப்புவதும், அவற்றினை .இருவட்டுக்களாக விற்பனை செய்வதும் நிறைய வழக்கத்தில் உள்ளன. உண்மைதான். அவற்றினை மறுப்பதற்கில்லை. ஆனால், அவரது ஏராளமான பிரபலமாக பாடல்கள் உள்ளன.

 குறிப்பாக 70-களின் இறுதிகள், 80-களின் தொடக்கங்களில் வெளிவந்த பாடல்களை ரசிகர்கள் கேட்க மறந்துவிக்கூடாது. மீண்டும் ஒரு காதல் கதை படத்தில் வரும் அதிகாலை நேரமே, பட்டாக்கத்தி பைரவன் படத்தில் தேவதை ஒரு தேவதை.. நிழல்கள் படத்தில் தூரத்தில் நான் கண்ட உன்முகம், இதுபோன்ற ஏராளமான பாடல்களும் அவைகளில் அடக்கம். சராசரிகளை உடைத்தவர் சராசரிகளை உடைத்து, பாய்ச்சல்களை புகுத்தி, புதிய வண்ண மெட்டுகளை மீட்டெடுத்தவர். 

அதற்கு உதாரணம் ஒன்று. ஒரு இசையமைப்பாளர் ஏற்கனவே இசையமைத்து பாடல் வரிகள் எழுதப்பட்டு, அது படமாகவும் எடுக்கப்பட்டுவிட்டது. பின்னர், அந்த சவுண்ட் ட்ராக்கை முழுவதுமாக நீக்கிவிட்டு அக்காட்சியை மட்டும் அப்படியே வைத்துக்கொண்டு, அந்த பாடலின் உதட்டசைவு, உடலசைவு, மற்றும் காட்சிக்கு ஏற்ப இசையமைத்தது உலகில் எந்த இசையமைப்பாளரும் செய்யாத முயற்சி அது. அந்தப் படம்தான் ஹேராம். தொடையில் தட்டினாலும் பாடல் பிறக்கும்... அது "நெஞ்சத்தை கிள்ளாதே' படத்தில் வரும் "பருவமே புதிய பாடல்" பாட்டு. அனாயாசமான வெளிப்பாட்டுத் திறனே அவரது சூட்சுமம். அவ்வளவு ஏன், "தென்றல்வந்து தீண்டும்போது" பாடல் உருவாக்க தேவைப்பட்ட காலம் வெறும் அரைமணி நேரம்தான். அதுமட்டுமா..

'கீதா' கன்னடப்படத்தில் வந்த 'ஜெதயலி' என்ற ஒரு பாடல். இந்த பாடலின்மேல் அனைவருக்குமே ஒரு மையல். வெளிப்படை நயனத்துடன், நுட்பமான இசைக்கருவிகள் மூலம் அலங்கரிக்கப்பட்ட இந்த பாடல், கன்னட மக்களின் ரத்தநாளங்களில் கலந்தது என்றே சொல்லலாம். அதனால்தான் இன்றும் அவர்களது இசைவரிசையில் முதல் பாடலாக "ஜெதயலி" என்ற பாடல் ஒலித்து கொண்டிருக்கிறது. இந்த பாடலை பாடிய பின்னர்தான் கச்சேரி தொடங்கும் வழக்கும் இன்றும் அங்கு நடைமுறையில் உள்ளது. இந்த பாடலை இளையராஜா "நூறாவது நாள்" திரைப்படத்தில் "விழியிலே மணி விழியின்" என்ற பாடலாக பயன்படுத்தினார்.

Ilayaraja_Hits.jpg

 இன்றுவரை இந்தியிலே பிரபலமாக உள்ள ' சத்மா' படத்தின் 'சுர்மை அன்கியோன்மேன்' (கண்ணே கலைமானே) பாடலாகட்டும், தெலுங்கில் 'சாகர சங்கமம்' படத்தில் வந்த 'மௌன மேல நோயி' (மௌனமான நேரம்) பாடலாகட்டும், மலையாளத்தின் 'ஓலங்கள்' படத்தின் 'தும்பி வா' (சங்கத்தில் காணாத) பாடலாகட்டும் இனம்-மொழிகளை உடைத்தெறிந்து காலத்துக்கும் நின்று இனிமை கூட்டுகிறது. காடு, மேடு, கழனிகளில் எங்கு பயணித்தாலும் நீரின் வேகம் குறைவதில்லை. அதுபோலத்தான் இளையராஜா. எந்த மொழியானால் என்ன, அங்கு ரீங்காரமிடுவது ராஜாவின் இசை மட்டுமே. விரிவடையும் எல்லைகள் ராஜாவின் இசையை கேட்டு ரசித்தவர்களால் அதை விவரிக்க தெரியாத காலம் இருந்தது. ரசிகர்கள் தங்களின் உணர்வுகளை வெளிப்படுத்த தளம் இன்றி, களம் இன்றி தவித்தனர். மிஞ்சிப்போனால் ஒரு அஞ்சல் அட்டை. அதில் நான்கைந்து வரிகளில் முடிந்தவரை கொட்டும் உணர்வு வரிகள். இதில் மகிழ்ந்தவர்களோ ஏராளம்.

images.jpg

 ஆனால், அதுகூட இயலாமல், மனதுக்குள்ளேயே உணர்வு குவியல்கள் அனைத்தையும் பூட்டி வைத்தவர்களும் உண்டு. ஆனால் காலம் வேகமாக உருண்டியது. 2000-ம் ஆண்டுகளில் இணையதள வருகை ஒவ்வொரு தனிமனிதனின் உணர்வுகளை வெளிக்கொணர வரும் நவீன சாதனமானது. இதன்மூலம் ரசிகர்கள் பூட்டிக்கிடந்த இசையின் உணர்வு வேட்கைகளை வெகு அழகாகவும், வார்த்தை நேர்த்தியுடனும், மனதில் பட்டதை உரிமையுடன், உவகையுடனும் எடுத்து சொல்ல உதவ தொடங்கியது. ஏராளமான ரசிகர்களை தாம் பெற்றிருக்கிறோம் என்று இளையராஜா அறிந்திருந்தாலும், இணையதளம் மூலம் ரசிகர்களின் எல்லை விரிவடைந்து கிடப்பதை அறிந்து கண்கலங்கி போனார். 

ரசிகனின் உணர்வுகளை நேரிடையாக அறிய தொடங்கும் வாய்ப்பு இணையதளம் மூலமாக கிடைத்தது. அன்றுமுதல் ரசிகர்களுக்கும், ராஜாவுக்கும் இணையதளம் ஒரு இணைப்பு பாலமாக நின்றுவருகிறது. உலகை வலம் வரும் இமாலய மனிதர் கோடானகோடி ரசிகர்களின் உணர்வுகளை அறிந்த இளையராஜா, இன்று உலகம் முழுவதும் கச்சேரிகளை செய்து, ரசிகர்களை உவகை கடலில் மிதக்கவிட்டு வருகிறார். அவரது பாடல்களை கேட்க தொழில்நுட்பம் மூலம் ஆயிரம் வழி உண்டென்றாலும், இளையராஜாவை பார்ப்பதற்கென்றே முண்டியடித்து கூடும் கூட்டங்களுக்கு இன்றுவரை பஞ்சமில்லை.

 அதனால்தான் உலகை வகுந்துகொண்டிருக்கிறார் இந்த இமாலய மனிதர். உலக நாடுகளில் விதவித உணவு சாப்பிட்டாலும் அம்மா கையிலேயே சாப்பிடும் உணர்வே தனிதான். அதுபோலவே, பிறரது இசையை எவ்வளவு கேட்டாலும், நம் உதடுகள் முணுமுணுப்பது என்னவோ ராஜாவின் பாடல்களை மட்டுமே. இன்றும் தமிழகத்தில் எந்த ஒரு இசைக்கச்சேரி என்றாலும் ராஜாவின் பாடல்கள் இன்றி அந்த கச்சேரி நிறைவு பெறுவதில்லை. வாத்திய கருவிகளின் ஆளும் திறன் கற்பனாசக்தியின் உச்சம்தான் இளையராஜா. மனதில் யோசிக்கும் இசைவடிவங்கள் அடுத்த வினாடிகளில் இசைக்குறிப்புகளாய் வந்துவிழும். இதற்கு காரணம் தாம் விரும்பியவாறே வளைந்து கொடுக்கும் ராகங்கள்தான். 

128736_thumb_665.jpg

எனவேதான் ஹார்மானிய பெட்டியின் கட்டைகளும், வீணைகளின் தந்திகளும்கூட ராஜாவின் ஞானத்திற்கேற்றார்போல் நடனமிட்டு தாளமிடுகின்றன. சாமான்யனின் அனைத்து உணர்வுகளையும் வாத்திய கருவிகளாலேயே ஆளும் திறன் ராஜாவுக்கு மட்டுமே உரிய இயல்பின் ஊற்று. என்றுமே நஞ்சாகாத இசை இளையராஜா,

 அவர் நீண்டகாலம் வாழ ஒவ்வொரு இசை ரசிகனும் உளமார வாழ்த்துக்களை சிநேக உணர்வுடன் தெரிவித்து வருகின்றனர். அவரது மேற்கத்திய, கர்நாடக, கிராமிய பாடல்கள் வெறும் செவியின்பத்தை மட்டும் தருவதில்லை. எந்த ஒரு பாடலை எடுத்து கொண்டாலும் அது நம் நினைவுகளை மீட்டு கொடுத்துவிட்டே தான் செல்லும் என்பதை சத்தியமிட்டு சொல்ல முடியும். அனைத்து விதமான மனவியாதிகளுக்கும் ஒரே மாத்திரை இளையராஜாவின் இசை. அனைத்து பிரிவினரையும் இன, மத, மொழி பாகுபாட்டின் இடைவெளியை குறைத்து, நெருக்கத்தை கூட்டியிருப்பது இளையராஜாவின் இசை. மனநிலைக்கு ஏற்ப இசையமைக்கும் பாங்கை சாத்தியமாக்கியது இளையராஜாவின் இசை. தூக்கத்தை கொடுப்பதும், தூக்கத்தை கெடுப்பதும் இரண்டுமே இளையராஜாவின் இசையே. இளையராஜாவின் இசை மட்டும் அளவுக்கு மிஞ்சினால் என்றுமே நஞ்சாவதில்லை! இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் இசையின் ராஜா அவர்களே..

http://www.virakesari.lk/article/34320

Link to comment
Share on other sites

இளையராஜா -75 :  அந்த இரவின் விழிகளில் இளைஞனின் பகல்!


 

 

ilayaraaja-maanabaskaran

 

1964-ம் ஆண்டு. 

மே மாதம் 28-ம் நாள். 

 

ஜவஹர்லால் நேரு காலமான மறுநாள். 

சென்னை சீரணி அரங்கத்தில் - ரோஜாவின் ராஜா நேருவுக்காக மாபெரும் அஞ்சலிக் கூட்டம் ஏற்பாடாகியிருந்த’தினத்தந்தி’யின்  செய்தியை, அந்த இளைஞர்கள் எல்லோரையும் போல வாசித்தார்கள். அவர்களும் அந்த அஞ்சலிக் கூட்டத்தில் கலந்துகொண்டார்கள்.

ஆயிரக்கணக்கான மக்கள் நெஞ்சில் சோகம் படர, கண்களில் கண்ணீருடன் ரோஜாவின் ராஜாவுக்கான அந்தக் கூட்டத்தில் கூடியிருந்தனர். 

 நேருவைப் பற்றி தன்னுடைய பூந்தமிழால் கவியரசு கண்ணதாசன் செதுக்கிய அஞ்சலிப் பாடலை, தனது கணீர்க் குரலெடுத்துப் பாடுகிறார் சீர்காழி கோவிந்தராஜன். கடற்கரையில் குவிந்திருந்த தமிழர்களின் மனமெல்லாம் அந்தப் பாடலில் குவிந்தது. அந்த மூன்று இளைஞர்களும் அந்தப் பாடலை உருக்கமுடன் கேட்டு நேருவுக்கு தங்கள் அஞ்சலியை செலுத்துகின்றனர்.

கவியரசு கண்ணதாசன் எழுதி - சீர்காழி கோவிந்தராஜன் பாடிய அந்தப் பாடல்:

சாவே ! உனக்கொரு நாள் சாவு வந்து சேராதோ ?

சீரிய நெற்றி எங்கே ?

சிவந்தநல் இதழ்கள் எங்கே ?

கூரிய விழிகள் எங்கே ?

குறுநகை போன தெங்கே ?

நேரிய பார்வை எங்கே ?

நிமிர்ந்த நன்நடைதான் எங்கே ?

நிலமெலாம் வணங்கும் தோற்றம்

நெருப்பினில் வீழ்ந்ததிங்கே .

அம்மம்மா என்ன சொல்வேன்

அண்ணலைத் தீயிலிட்டார்

அன்னையைத் தீயிலிட்டார்

பிள்ளையைத் தீயிலிட்டார்

தீயவை நினையா நெஞ்சைத்

தீயிலே எரிய விட்டார்

தீய சொல் சொல்லா வாயை

தீயிலே கருகவிட்டார் .

பச்சைக் குழந்தை

பாலுக்குத் தவித்திருக்க

பெற்றவளை அந்தப்

பெருமான் அழைத்து விட்டான்

வானத்தில் வல்லூறு

வட்டமிடும் வேளையிலே

சேய்க் கிளியைக் கலங்கவிட்டு

தாய்க் கிளியைக் கொன்றுவிட்டான் .

சாவே ! உனக்கொரு நாள்

சாவு வந்து சேராதோ

சஞ்சலமே ! நீயுமொரு

சஞ்சலத்தைக் காணாயோ

தீயே ! உனக்கொரு நாள்

தீ மூட்டிப் பாரோமோ

யாரிடத்துப் போயுரைப்போம் ?

யார் மொழியில் அமைதி கொள்வோம் ?

யார் துணையில் வாழ்ந்திருப்போம் ?

யார் நிழலில் குடியிருப்போம் ?

வேரொடு மரம் பறித்த

வேதனை எம்மையும் நீ

ஊரோடு கொண்டு சென்றால்

உயிர்வாதை எமக்கிலையே

நீரோடும் கண்களுக்கு

நிம்மதியை யார் தருவார்

நேரு இல்லா பாரதத்தை

நினைவில் யார் வைத்திருப்பார் ?

ஐயையோ காலமே

ஆண்டவனே எங்கள் துயர்

ஆறாதே ஆறாதே

அழுதாலும் தீராதே

கை கொடுத்த நாயகனை

கைப் புறத்தே மறைத்தாயே

கண் கொடுத்த காவலனைக்

கண் மூட வைத்தாயே

கண்டதெல்லாம் உண்மையா

கேட்டதெல்லாம் நிஜம்தானா

கனவா கதையா

கற்பனையா அம்மம்மா

நேருவா மறைந்தார் , இல்லை !

நேர்மைக்குச் சாவே இல்லை !

அழிவில்லை முடிவுமில்லை

அன்புக்கு மரணமில்லை

இருக்கின்றார் நேரு

இங்கே தான் !

இங்கே தான் !

எம்முயிரில் -- இரத்தத்தில்

இதயத்தில் நரம்புகளில்

கண்ணில் -- செவியில்

கைத்தலத்தில் இருக்கின்றார்

எங்கள் தலைவர்

எமைவிட்டுச் செல்வதில்லை

என்றும் அவர் பெயரை

எம்முடனே வைத்திருப்போம்

அம்மா... அம்மா... அம்மா!

- இந்தப் பாடலை சீர்காழி கோவிந்தராஜன் என்ன ராகத்தில் பாடினார் என்பது அந்த மூன்று பேருக்கும் தெரியாது.

அந்த மூன்று இளைஞர்களும் அறைக்குத் திரும்பினார்கள்.

அன்று இரவு - மூன்று சகோதரர்களில் இருவர் தூக்கத்தின் தோழர்களாக - ஒருவரின் விழிகளில் இருந்து உறக்கம் வெளிநடப்பு செய்தது.

 நள்ளிரவு... கவியரசரின் வரிகள் அந்த இளைஞனை மென்றது. உணர்வுகளைப் பிசைந்தது. பாட்டினில் அன்பு செய்யச் சொன்னது.

அந்த இளைஞன்... தனது விரல்களைப் பதித்து தன்னுடைய ஆர்மோனியப் பெட்டியில் கவியரசரின் சாவே ! உனக்கொரு நாள் சாவு வந்து சேராதோ ?’ என்கிற வரிகளுக்கு புதிய மெட்டமைத்தான்.  

அந்தப் பனி இரவு தனது குளிர் செவியால் அந்த மெட்டை ருசித்தது. 

அந்த இளைஞனின் இதழ்களில் இரவின் புன்னகை. 

அந்த இரவின் விழிகளில் இளைஞனின் பகல்.

அந்த மன்னன் தன்னுடைய சாம்ராஜ்ஜியத்தைக் கட்டி மேலே மேலே எழுப்புவதற்கான முதல் செங்கல் அதுதான்.

ஆம்... தன்னுடைய ஆயிரமாயிரம் மெட்டுகளால் தமிழர்களின் உள்ளங்களைத் திருவிழாக் கூடமாக்கிய இளையராஜாவின் முதல் மெட்டு அதுதான்! 

 இன்னும் பல நூற்றாண்டுகளைக் கடந்தும் இமை மூடாது... அன்று விழித்த ராஜாவின் பகல்!

இரவுகளை நல்லிரவாக்கும் அந்த இசைச்சூரியனை வாழ்த்துவோம்!

http://www.kamadenu.in/news/cinema/3087-ilayaraaja-maanabaskaran.html?utm_source=site&utm_medium=category&utm_campaign=category

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இளையராஜா 75: அவர் ஒருவர்தான்!

28.jpg

செழியன்

இன்று (ஜூன் 2) இளையராஜாவின் பிறந்த தினம்

நேற்று முற்பகலில் இளையராஜாவின் பாடலை நானும் சிபியும் கேட்டுக்கொண்டிருந்தோம். மூன்றாம் பிறை படத்தின் துவக்கப் பாடல். இசை மாணவனான சிபி என்னைப் பார்த்துப் புன்னகைத்து, “அவருக்கு மட்டும் எப்படிப்பா இப்படியெல்லாம் தோணுது? எனக்கு அவரு கம்போஸிங் கத்துக் குடுப்பாரா?” என்று கேட்டான். “கம்போஸிங் கத்துக் குடுக்க முடியாது. நீயே அவரு பாட்டுல இருந்து கத்துக்க வேண்டியதுதான்” என்று சொல்லிவிட்டு இளைய நிலா பாடலின் பல்லவிக்குப் பிறகு வரும் கிட்டார் இசையை ஒலிக்கவிட்டு “இதை வாசிச்சுப் பாரு” என்றேன். கிட்டாரில் விரல்கள் அங்கும் இங்கும் தாவி அரைமணி நேரப் பயிற்சிக்குப் பிறகு அந்த இசையை வாசித்துவிட்டுப் புருவத்தை உயர்த்தித் தலையை அசைத்தான்.

கல்லூரி நாட்களில் சிவகங்கை பூச்சொரிதல் விழாவுக்கு ஆர்கெஸ்ட்ரா நடக்கும். அதில் ஒருமுறை ப்ரியா படத்தின் டார்லிங் டார்லிங் பாடலின் துவக்க இசையை இசைக் கலைஞர்கள் வாசித்துவிட்டுப் புருவத்தை உயர்த்தித் தலையை அசைப்பதைப் பார்த்திருக்கிறேன்.

ஒரு பாடல் அடிப்படையாக ஒரு ட்யூன் வழியாகத்தான் இயங்குகிறது. இதை நம் வசதிக்காக ராகம் என்று சொல்லிக்கொள்ளலாம். ஆனால், அந்த ஒரு ட்யூனின் ஆதாரத்திலிருந்து வேறு வேறு வகையான இசையை வேறு வேறான இசைக் கருவிகளைக் கொண்டு பாடலுக்குள் இளையராஜா நிகழ்த்துகிற அற்புதம்தான் ஆச்சரியமானது. Change over என்று சொல்லப்படும் குறிப்பிட்ட கதிக்குள் மாறிக்கொண்டே இருக்கும் இந்த இசைத் துணுக்குகளை மட்டும் நாம் கவனித்துப் பார்த்தால் அதுவே அலாதியான அனுபவமாக இருக்கும்.

28a.jpg

இசையின் பகுதியாகவே இருக்கும் ராஜா

குழந்தைகளிடம் க்ரீம் பிஸ்கட்டுகளைக் கொடுத்தால் அவர்கள் பிஸ்கட்டைப் பிரித்து எடுத்து முதலில் க்ரீமைத்தான் தின்பார்கள். அதுபோல அவரது எந்தப் பாடலைக் கேட்டாலும் எனக்குப் பாடலின் இடையில் இருக்கும் இசைதான் (Interlude, prelude) முதல் ஆர்வம் (Interlude என்பது பாடலின் முதல் சரணத்துக்கும் இரண்டாவது சரணத்துக்கும் இடையில் வருகிற இணைப்பு இசை. Prelude என்பது பாடலின் துவக்க இசை). மாதங்களில் மார்கழியாக இருக்கிறேன் என்று கீதையில் கண்ணன் சொல்வது போல இளையராஜா பாடலின் இசைப் பகுதியாகவே இருக்கிறார். அவரது இசையை ரசிகராகவோ அல்லது மாணவனாகவோ அணுகுகிற யாருக்கும் அந்த பிரமிப்பு தவிர்க்க முடியாதது. காரணம், அந்த இசைச் சேர்க்கையில் வரும் அற்புதமான இசை மாற்றங்கள்.

இளையராஜாவுக்கு முந்தைய திரைப்பட இசையமைப்பாளர்கள் ஒரு பாடலின் ராகத்தில் அது தரும் பாவங்களில் அற்புதமான பங்களிப்புகளைத் தந்திருக்கிறார்கள். அந்தப் பாடல்களில் பெரும்பாலானவை நம் இந்திய இசை மரபு வழி வருபவை. இந்திய இசை மரபு என்பது குரலை முதன்மைப்படுத்தி இயங்குகிறது. ஒரு பாடகர் பாடுவார். அவர் பாடும் ராகத்தின் தன்மைக்கேற்ப பல்லவியிலிருந்து அடுத்த சரணத்துக்கு இணைப்பை ஏற்படுத்தும் இசையாகவே அது இருக்கும்.

இது கச்சேரியில் ஒருவர் பாடும்போது அவரது ஆலாபனைகளையே வயலின் அல்லது வீணையில் திரும்ப இசைக்கும் மரபிலிருந்து வருகிறது. பாடுபவரின் குரலுக்கு இடையில் இணைப்புபோல இந்த இசைதான் இருக்கும். இதையே பக்க வாத்தியம் என்று சொல்கிறோம். இந்தப் பக்க வாத்திய மரபின் தொழில்நுட்பம் சார்ந்த தொடர்ச்சியாகவே திரைப்பாடல்கள் பெரிதும் இருந்தன. இதனால் பெரும்பாலான பழைய பாடல்களின் interlude என்பது இரண்டு பல்லவிகளுக்கும் இடையில் ஒரே இசைதான் திரும்பத் திரும்ப இசைக்கப்படும்.

பழைய தமிழ்த் திரையிசைப் பாடல்களில் அதன் இசைச் சேர்ப்புக்காகப் பெரிதும் புகழப்படுகிற இரண்டு பழைய பாடல்களைக் கேட்டால் (துள்ளுவதோ இளமை - குடியிருந்த கோயில், பட்டத்து ராணி - சிவந்த மண்) Interlude என்பதில் இருக்கும் வித்தியாசத்தை உணர முடியும். Interlude என்பதை விரைவில் கடந்துவிட்டுக் குரலுக்கு மாறுவதைக் கவனிக்க முடியும்.

ஆனால், இளையராஜா மேற்கத்திய இசையின் மீதிருக்கும் ஆளுமையினால் இந்த interlude, மற்றும் prelude என்பவற்றை அழகான கவிதைகளைப் போலத் தன் பாடல்களின் இடையில் கையாளுகிறார். அதிலும் சிறப்பு என்னவென்றால் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் இசைக் கருவிகளின் வழியாகக் கோர்வைகளை மாற்றிக்கொண்டே இருக்கிறார். இந்தச் சேர்க்கைகள் அபூர்வமானவை. இதனைப் புரிந்துகொள்ள ‘தளபதி’ படத்தில் வரும் ‘சுந்தரி கண்ணால் ஒரு சேதி’ என்னும் பாடலை எடுத்துக்கொள்ளலாம்.

28b.jpg

இசைக் கருவிகள் என்னும் கதாபாத்திரம்

திரைக்கதையின் நுட்பங்கள் பற்றிப் படிக்கும்போது அதில் fore shadow என்றொரு பதம் வருகிறது. அதாவது கதையின் பின்னால் வரும் கதாபாத்திரத்தை அல்லது அதன் குணாதிசயத்தைக் கதையின் தொடக்கத்திலேயே கோடிட்டுக் காட்டுவது. திரைக்கதையின் இந்த யுக்தியை வைத்துக்கொண்டு இந்தப் பாடலில் இசையைப் பார்க்கலாம். ஒரு தேர்ந்த இசையமைப்பாளருக்குத் தன் பாடலில் இருக்கும் இசைக் கருவிகள் ஒரு கதாபாத்திரம்போல.

திரை இசை என்பது மேற்கத்திய இசை வடிவம் போல தன்னிச்சையானது அல்ல. நமது இசையோ அல்லது பாடலோ ஒரு காட்சியின் மீதுதான் இசைக்கப்படுகிறது. இவ்வாறு இசைக்கப்படும்போது கதையில் அதுவரை நீங்கள் பார்த்த கதாபாத்திரத்தின் தன்மையை மீறி இசை இருக்க முடியாது. அவ்வாறு இருந்தால் அது படத்தின் மனநிலைக்குப் பொருந்தாது. எனவே பாட்டில் இருக்கும் இசை கதாபாத்திரத்தின் தன்மைக்கு மட்டுமல்ல கதையின் தன்மைக்கும் இசைந்ததாக இருக்க வேண்டும். பாடல் என்பது இந்தியத் திரைப்பட மரபில் மட்டுமே இருப்பதால் இதற்கு எந்த மேற்கத்திய மாதிரிகளும் இல்லை. எனவேதான் எந்த முன்மாதிரிகளும் இல்லாமல் இளையராஜா உருவாக்கும் இசைச் சித்திரங்கள் பிரமிக்க வைக்கின்றன. இவை இந்திய இசை மரபில் புதிய வடிவங்கள். புதிய கோர்வைகள்.

பிரமிக்கவைக்கும் அதிசயம்

‘சுந்தரி’ பாடலை ஒருமுறை கேளுங்கள். இந்த ஏழு நிமிடப் பாடல் காட்சி மாதிரிகள் எதுவும் இல்லாமல் கற்பனையில் முழுக்கப் புனையப்பட்டு பிறகுதான் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது என்பதை மனதில் வைத்துக் கேளுங்கள். ஒரு ஏழு நிமிடப் பாடல் காட்சிக்கான soundscape ஐ முழுக்கக் கற்பனையில் உருவாக்குவது என்பது சாதாரண வேலை இல்லை. உதாரணத்துக்கு Dunkrik என்ற படத்துக்குக் கரு இசை (theme music) உருவாக்கப்படுகிறது என்றால் அங்கே காட்சிகளுக்கான மாதிரிகள் நிச்சயம் வரையப்பட்டிருக்கும். வரையப்பட்ட படங்கள் ஒரு திரைப்படம்போல இயங்குவதற்கான தொழில்நுட்பத்தில் இந்தக் காட்சி திரையில் எவ்வளவு நேரம் வரும், எங்கே காட்சி மாறும் என்கிற குறிப்புகள் நிச்சயம் இருக்கும். ஆனால், நம் திரைப்படங்களில் ஒரு காதல் பாடல் போர்ப் பின்னணியில் நடக்கிறது என்பதைக் கடந்து குறிப்புகள் எதுவும் இருந்திருக்கும் சாத்தியங்கள் இல்லை.

முன்பு சொன்ன fore shadow என்கிற யுக்தியை மனதில் வைத்துக்கொண்டு இந்தப் பாடலின் பல்லவியில் வரும் புல்லாங்குழல் பாடல் முழுக்கச் செய்கிற வேலையைக் கவனியுங்கள். பாடல் எப்படித் துவங்குகிறது? போரும் காதலும் அகமும் புறமும் எப்படி இணைகிறது? எந்த இசைக் கருவிகள் இணைத்து வைக்கின்றன? அந்த மாற்றம் இயல்பாக எப்படி நிகழ்கிறது? மேற்கத்திய இசையும் இந்திய இசையும் இணைகிற (fusion) இடங்களைக் கவனியுங்கள். இந்தப் பாடலின் முழு இசையையும் காட்சி வழியே மனதில் முதலில் இயற்றி, ஒரு மனிதர் தன் கற்பனையின் வழியே அதை ஸ்வரங்களாகக் காகிதத்தில் எழுதினார் என்பதைக் கற்பனை செய்து பாருங்கள்.

இதுபோல அவரது இசைக்கோர்வைகள் உருவாக்கும் நிலக்காட்சிகள் குறித்து, கற்பனை வெளிகள் குறித்து நம்மிடம் அதிகம் பதிவுகள் இல்லை. அவர் பாடலுக்குள் கண்டுபிடிப்புகள் இருக்கின்றன. பரிசோதனைகள் இருக்கின்றன. அது குறித்த எந்த ஆய்வுகளும் நம்மிடம் இல்லை. முதன்முதல் தஞ்சாவூர் கோயிலைப் பார்க்கும்போது, தாஜ்மகாலைப் பார்க்கும்போது இது மனித உழைப்பா, இது சாத்தியமா என்று பிரமிக்கத் தோன்றும். அப்படி நுணுகிக் கேட்கிற யாரையும் பிரமிக்க வைக்கிறவர் இளையராஜா.

விழித்திருக்கும் பின்னிரவாக அது இருக்க வேண்டும். நெடுஞ்சாலைப் பயணமாக இருக்க வேண்டும். அகாலமான அந்தப் பொழுதின் அமைதியில், இருளின் தனிமையில் அவர் இசை உங்களுடன் இருக்க வேண்டும். அதுதான் தருணம். அப்படிக் கேட்கிற வாய்ப்பு நிகழ்ந்தால் உங்கள் கடந்த காலம் ஒரு மவுனத் திரைப்படம் போல உங்கள் மனதில் ஓடத் துவங்கும்.

28c.jpg

மேற்கத்திய இசை மரபில் ஒரு மேற்கோள் இருக்கிறது. ஆயிரம் இளவரசர்கள் பிறந்திருக்கலாம். இனியும் பிறக்கலாம். ஆனால், ஒரே ஒரு பீத்தோவன்தான். அதுபோல நமக்கும் ஒரு ஒரே இளையராஜாதான்.

 

(கட்டுரையாளர் பற்றிய குறிப்பு: செழியன், திரைப்பட ஒளிப்பதிவாளர், இயக்குநர். கல்லூரி, பரதேசி முதலான பல படங்களுக்கு இவர் ஒளிப்பதிவு செய்துள்ளார். பரதேசி படத்தின் ஒளிப்பதிவுக்காக 2013இல் லண்டன் திரைப்பட விழாவில் சிறந்த ஒளிப்பதிவாளர் விருதினைப் பெற்றார். இவரது இயக்கத்தில் அண்மையில் வெளிவந்த டு லெட் என்னும் திரைப்படம் தேசிய விருது பெற்றதுடன் சர்வதேச அளவில் பல விருதுகளையும் பெற்றுவருகிறது.)

https://minnambalam.com/k/2018/06/02/28

 

 

 

 

Link to comment
Share on other sites

உயிரில் உறைந்த இசை!


 

 

ilayaraaja-uyril-uraindha-isai

 

 எஸ்.ராஜகுமாரன் 

பேசும் கிளியை 

 

பாடும் குயிலாக்கிய 

மாயக்காரன் நீ -

அன்னக்கிளி!

###

மேற்குத் தொடர்ச்சி 

மலையடிவாரத்தில் இருந்த 

ஒரு சிறிய வீட்டின் 

சுண்ணாம்புக் காரைச் சுவற்றில் 

எதிரொலிக்கத் தொடங்கிய 

உன் இசைக்குரல் 

இன்று 

நிலத்திலும் வானிலும் 

நித்தமும் ஒலிக்கிறது 

பிரபஞ்ச சங்கீதமாய் !

###

உன் பாடல்கள் 

முதன் முதலில் 

ஒலித்த இடங்களில் 

உறைந்து நின்று 

ரசித்தவர்களின் 

பதின்ம காலங்களில் 

நானும் இருக்கிறேன் என்பதை 

இப்போது நினைத்தாலும் 

கர்வமாய் இருக்கிறது!

###

திரை இசையை 

வாழ்க்கையின் இசையாய் 

வார்த்தவை 

உனது புல்லாங்குழல் விரல்கள்!

ஆம்!

உன் துள்ளல் பாடல் கேட்டு 

ஆடிக் களித்திருக்கிறோம்!

உன் துயரப்பாடல் கேட்டு 

தேம்பி  அழுதிருக்கிறோம்! 

உன் காதல் பாடல் கேட்டு 

மயங்கிக் கிடந்திருக்கிறோம்!

உன் நம்பிக்கைப் பாடல் கேட்டு 

தோல்விகளைக் கடந்திருக்கிறோம்!

###

எங்கள் இளமைக்கு 

நீதான் இசையமைத்தாய்!

எங்கள் ரசனைக்கு 

நீதான் திசையமைத்தாய்!

###

உன்னை 

இசை ஞானி 

ராகதேவன்

என்றெல்லாம் சொல்வதில் 

உடன்பாடு இல்லை 

எனக்கு!

நீ 

இசை மனிதன் !

உன் ரத்தத்தில் இருப்பவை 

சிவப்பணுக்களோ 

வெள்ளையணுக்களோ 

அல்ல -

சர்வ அணுக்களும் 

சங்கீத அணுக்களே!

உன் 

தசைகளும் 

நரம்புகளும் 

ரத்தக் குழாய்களும் 

மிக மெல்லிய 

புல்லாங்குழல்கள்! 

இரண்டு கைகளும் 

தபேலாவும் 

டோலக்கும்!

உன் 

இதயம் என்பது 

ஹார்மோனியமாகவும் 

மூளை என்பது 

பியானோவாகவும் 

இருக்கக்கூடும் !

###

உனக்கு முன்னரும் 

இசை இருந்தது!

பின்னரும் 

இசை இருக்கும்!

ஆனால் -

எங்கள் 

உயிரின் ஆழத்தில் 

உறைந்த இசையாக 

உன் பாடல்கள் மட்டுமே 

என்றும் இருக்கும்!

இன்று 

உனக்கு 

வயது 75.

இது 

உன் பிறப்பின் கணக்கு 

மட்டுமே!

உன் 

பேரிசையின் வயது -

காலத்தின் வயது!

காற்றிருக்கும் 

காலமெல்லாம் 

வாழ்க  நீ 

இசைத்து!

http://www.kamadenu.in/news/cinema/3118-ilayaraaja-uyril-uraindha-isai.html?utm_source=site&utm_medium=TTH_slider_banner&utm_campaign=TTH_slider_banner

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.