Jump to content

ஒரு நிமிடக் கதை: யார் மனசிலே என்ன...?


Recommended Posts

ஒரு நிமிடக் கதை: யார் மனசிலே என்ன...?


 

 

one-minute-story

 

 

 

ராமன் சற்றே பெரியதாகிப்போன குரலில் பேசத்தொடங்கினார்.

"இந்த வரன் சரியாவரும்போல தான் இருக்கு...அதான் கொஞ்சம் கவலையாக இருக்கு"

 

ஒன்றும் புரியாமல் மீனாட்சி விழித்தாள்.

"கவலையா....இது என்ன புதுக்கதை. இருந்து இருந்து உங்க ஒரே பொண்ணு கல்யாணத்துக்கு படிஞ்சு பையனை பிடிச்சிருக்கு சொன்னாலும் மறுபடியும் முருங்கமரம் ஏறாமல் இருக்கணுமேன்னு நான் கவலைப்பட...நீங்க மாத்தி இல்ல கவலைப்படறீங்க....?"

பக்கத்துரூமில் இது வரை கேட்ட சத்தம் நின்று போனதோடு ஒரு அமானுஷ்ய நிசப்தம் குடி கொண்டது.

"இல்ல மீனாட்சி, நானும் ரிடையர் ஆனால் நம்ம சாப்பாட்டுக்கு என்ன செய்யங்கிற கவலை தான். பொண்ணோட சம்பளம் வந்தா செளகர்யம் தானே. அவளுக்கு இந்த பணமே நாம கொடுத்த படிப்பாலே தானே....அப்புறம்...அனுபவிக்கமட்டும் வேறு யாரோ ஒருவனா??"

மீனாட்சி அதிர்ச்சியுடன் அவர் முகத்தைப்பார்த்தாள்.

"போறும் இந்த மாதிரி பேசவேண்டாம்.. " சொல்லிக்கொண்டே கண் ஜாடை காட்டினாள் பக்கத்து அறையில் மகள் கேட்டுக்கொண்டிருக்கிறாள் என்பதை.

பக்கத்து ரூம் கதவு படீரென்று திறந்தது. வெளியே வந்த வந்தனா

" நான் கொஞ்சம் வெளியே போயிவிட்டு வந்துடறேன்"

எங்கே என்று கூட சொல்லாமல் கைப்பையை அள்ளிக்கொண்டு கிளம்பினாள்.

"எங்கேடி.... சொல்லிட்டு போ ஜாக்கிரதை" மீனாட்சியின் குரல் மூடப்பட்ட வாசல் கதவில் மோதி அநாமதேயமாக கீழே விழுந்தது.

மீனாட்சி கோபமாக கணவரிடம் சென்றாள்

" உங்களுக்குப் பைத்தியமா பிடிச்சிருக்கு? இப்படி எல்லாம் புது மாதிரி யோசனை இதுவரையில் நீங்க பேசி கேட்டதில்லை. பாவம் குழந்தை...அவ மனசு என்ன பாடுபடும். கடைசியிலே அம்மாவும் அப்பாவும் வெறும் பணப்பிசாசுதான்னு நினைக்கமாட்டாள்..? பாருங்க , பெண் பார்க்க வந்த பையனைத்தான் பார்க்கக் கோபமா போயிருக்கலாம்.. "

ராமன் சிரிப்புடன்

"இதை. ..இதை... இதைத்தான் நான் எதிர்பார்த்தேன் " என்று சந்தோஷமாக சொல்வதைப்பார்த்துத் திகைத்தாள்.

"ஆமாம், அவளுக்கு இந்தப் பையனை மிகவும் பிடிச்சிருக்கு. ஆனால் கல்தாணத்திற்கு ஒத்துக்கொள்வதில் மனக்குழப்பம். நம்மைத் தனியாக தவிக்க விடுவதில் ஒரு குற்ற உணர்வு. இப்போ பாரு, என்னைப்பிடிக்காமல் போய்விடும். சே நம் பணத்திற்கு தானா இந்த அப்பா பாசம் காட்டினார்...வெறும் நடிப்புன்னு கோபம் வரும். உடனே நம்மைப்பற்றி யோசிக்க மறந்து கல்யாணத்திற்கு சம்மதம் சொல்லிவிட்டு வரப்போகிறாள்...சீக்கிரம் பாயசம் தயார் செய்து வை....."

காத்திருந்தார்கள். வந்தாள்.

அம்மாவின் மடியில் தலை வைத்துப்படுத்தாள். ராமனும் மீனாட்சியும் ரகசியமாகச் சிரித்துக்கொண்டார்கள்.

"நான் பொண் பார்த்துவிட்டப்போன பையனைத் தான் பார்த்து நோ சொல்லிவிட்டு வந்தேன்"

ராமன் அதிர்ச்சியுடன்

"என்னது..?? நோவா...??"

"ஆமாம்பா, சற்று நேரம் முன் நீங்கள் இருவரும் பேசியது காதில் விழுந்தது. சாரி, ஒட்டு கேட்டுட்டேன். ஆனால் அது நல்லதா போச்சு. அந்தப்பையனை ரொம்ப பிடிச்சுது. சரி சொல்லிடத்தான் நினைத்திருந்தேன். நல்லவேளை...நீங்க இரண்டு பேரும் என் சம்பளம் இல்லாமல் கஷ்டப்படுவீங்கன்னு தெரிஞ்சுது...அப்பா நீங்க நினைக்கிறது தப்பே இல்ல....நமக்கு நாமே...உங்களுக்குக் கடைசி வரையில் நான் இருப்பேன். கவலைப் படாமல் தூங்கப்போங்க....அம்மா அப்பாக்கு பிரஷர் மாத்திரை கொடு..."

ஒரே நிமிடத்தில் ஏகமாக எகிறி நின்ற கணவரின் பிரஷருக்கு மாத்திரை எடுக்க மீனாட்சி உள்ளே சென்றாள்.

http://www.kamadenu.in

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.