Jump to content

ஒருநிமிடக் கதை: ஏமாறு... ஏமாற்று!


Recommended Posts

ஒருநிமிடக் கதை: ஏமாறு... ஏமாற்று!


 

 

oru-nimida-kadhai-yemaru-yemaatru

 

 

சதாவிற்கு மிகவும் அதிகமாகக் கோபம் எட்டிப்பார்த்தது. வெளியில் காட்ட முடியாத இயலாமை, கார்க் கதவை ஒரு ஆர். டி. எக்ஸ் வெடியின் சத்தத்தோடு அடித்துச் சாத்துவதில் வெளிப்பட்டது.

பின்ன ...கோபம் வருமா வராதா..? இந்த டிரைவர், அவர் கத்திக்கொண்டேதான் இருக்கிறார்.. இங்கே வேண்டாம் தள்ளிப்போ என்று.... கேட்காமல் காரை மிகச்சரியாக... இந்தத் தெரு குப்பை எடுக்கும் பையன். என்ன பேர்...ஆங்.குமார்... அவன் பக்கமாக நிறுத்தித் தொலைக்கிறான். டிரைவரிடம் சத்தம் போட முடியாது மாசக்கணக்கில் லீவ் போட்டுவிடுவான். அதான் வாயில்லா அந்த கார் கதவு, அடியை வாங்கிக்கொண்டது.

சதாவுக்கு கோபம் இன்னும் அதிகமாகக் காரணம் நேற்று முக்கியமான மீட்டிங். பேசிக்கொண்டிருந்த அவருக்கு முக்கியமான ஒருவரின் பெயர் சட்டென்று நினைவில் இருந்து நிரந்திர விடுப்பு எடுக்க... தடுமாறி பின் எம்டியிடம் வாங்கிக் கட்டிக்கொண்டார்.

ஆனால் எதற்குமே உபயோகமில்லாத இந்த வெட்டிப்பயல் குமார் பெயர் மட்டும் எப்படி தானாகவே நினைவில் வந்து விழுகிறது?

குமாருக்கும் சதாவிற்குமான முரண்பாடு ஒரு குப்பைக் காரணமாகத்தான். மிகவும் சாதாரண காரணம் என்ற குறியீடாக குப்பை இங்கே உபயோகப்படுத்தப்படவில்லை. நிஜமாகவே வீட்டுக் குப்பைதான் காரணம்.

குமார், அவர்கள் தெருவை கூட்டிப்பெருக்க ஏற்பாடு செய்யப்பட்டவன். வருவதே வாரத்திற்கு அவனுக்குத் தோன்றுகிற ஒருநாளில்தான். தெருவில் குவிந்து கிடக்கும் குப்பையை சதாவின் வீட்டு முன் குவித்து வைத்துவிட்டு போயே போயிந்தி....போய்விடுவான். தெருக் கோடி வீட்டில் சாப்பிட்ட ஹோட்டல் சாம்பார் பொட்டலம், பக்கத்துவீட்டு ஜிம்மியின் காலைக்கடன் சுற்றிய பேப்பர், கோயில் பிரசாத தொன்னைகள், தெருவின் கனவுக்கன்னி லல்லுவின் சானிடரி பாட்...என்று வர்ஜியா வர்ஜியமில்லாமல் இவர் வீட்டுக்குள் வந்து சேர்ந்துவிடும்.

இந்த அடாவடி நடவடிக்கைக்குக்காரணம் இவர் அவனுக்கு பணம் தர மறுப்பதுதான். உனக்குத்தான் இந்த வேலைக்கு மாச சம்பளம் பேசி இருக்கில்ல... அப்புறம் ஒவ்வொரு வீட்டுலேயும் வரும்போதெல்லாம் பணம் கேட்குற. என்ன எங்களுக்கு பணம் மரத்துலேயா காய்க்கிறது...என்று ஒரு முறை நியாயத்தைப் பேச... அன்றிலிருந்து குமார், அவனுடன் சுற்றும் அந்த கறுப்பு நாய் என்று குடும்பமாக சதாவை ஏளனப்படுத்த தொடங்கிவிட்டார்கள்.

குமார் வராத நாட்களில் மிகச்சாதுவாக அந்தத் தெரு கோடி வீட்டில் சுருண்டு படுத்திருக்கும் அந்த கறுப்பு நாய், இவரைப் பார்த்த உடன் குலைக்கத்தொடங்க... வாக் கிளம்பியவர் மராத்தான் கணக்காக ஓடி வீட்டுக்குத்திரும்பி விடுவார்.

மெதுவாக அந்த குமாரை பார்த்தபடி வாசல் கேட்டை அழுத்தித்தள்ளினார்.

" சார்...சார்..."

கத்திக்கொண்டே குமார் வருவதைப்பார்த்தார்.

'தெரியும்....இந்த ரெளடிப்பயல் என்னை வம்பிக் கிழுப்பான்னு....இந்த டிரைவர் முட்டாப்பய.. அவனால வந்தது.. ' அவசரமாகக் கதவைத்திறந்து உள்ளே சென்றார்.

"சார்...சார்...உங்களைத்தான்... " கத்திக்கொண்டே குமார் ஓடி வருவது தெரிந்தது.

அப்பாடா கதவைச்சாத்தி தாளிட்டார்.

காலிங் பெல் சத்தமிட்டது

'படவா ராஸ்கல்....பெல் அடித்து கூப்பிடறான்...இரு...இதை சும்மா விடக்கூடாது"

வாசலில் குமார் நின்றிருந்தான்.கைகளில் ஒரு நூறு ரூபாய்.

"இதப்பாரு..." அவர் பேச ஆரம்பிக்குமுன் குமார் முந்திக்கொண்டான்.

" சார், நீங்கக் காரை விட்டு இறங்கும்போது இந்த ரூபா நோட்டு கீழே விழுந்திச்சு...கொடுக்கலாம்னு கூப்பிட்டா... ஓடியாந்துட்டீங்க....இந்தாங்க..."

பாதி கையை நீட்டியபடி பேந்த விழித்தார்.

"இன்னா சார் பாக்குற. இன்னொருத்தர் துட்டு நமக்கெதுக்கு. நா வேலை செய்ய துட்டு கேட்பேன்...பாரு சாரு...நான் தெருவத்தான் கூட்டறேன்.. ஆனா உன் வீட்டு மரக்குப்பை அதுவே எம்மாம் குப்பையா இருக்கு பாரு...அத்தப்பெருக்க பணம் கேட்டா.. நீ சம்பள நார்ம்ஸ்லாம் பேசி என்னை சாவடிக்குறே.. இந்தா இத்தை நான் எடுத்தா அது திருட்டு... வாங்கிக்க உன் ரூபாயை.."

சதா லேசாகச் சிரித்தார்.

"நியாயமான பேச்சுப்பா. சரி இந்த ரூபாயை உனக்கே தரேன். இனிமே தெரு கூட்ட வரும்போது வா... ரெகுலராவும் தரேன்’’

சலாம் போட்டபடி பணத்தை பாக்கெட்டில் சொருகிக்கொண்டே குமார் மனதிற்குள் சொல்லிக்கொண்டான்.

' ஏ ரூபா நோட்டே நீ ரொம்ப ராசிதான். உன்னை அந்த ஆளு போட்ட நோட்டா காட்டி எப்புடி காரியத்தை சாதிச்சேன்...இந்தத் தெரு கடைசிலே ஒரு வீட்டுலேயும் பணம் கொடுக்காம டபாய்க்கிறாங்க... வா...அங்கேயும் இந்த நாடகம் போடுவோம்.....'

கைகளில் பர்சே எடுத்துப்போகாதபோது, அந்த ரூபாய் நோட்டு எப்படி கீழே விழுந்திருக்கமுடியும் என்பதை சதா யோசித்திருந்திருக்கலாம். உணர்ச்சிகளும் உணர்வுகளும் லாஜிக்கை மழுங்கடிக்கக்கூடியவை.

இதனால் இன்று சந்தோஷமாக  விசில்  அடித்தபடி குமாரும், சதாவும்!

http://www.kamadenu.in

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏச்சுப்பிழைக்கும் தொழிலே சரிதானா எண்ணிப்பாருங்க .....!  tw_blush:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.