Jump to content

கரித்துண்டால் மதிலில் எழுதுவது.


Recommended Posts

கள உறவு கவி அருணாச்சலத்தின் பதிவுகைளைத் தொடர்ந்து படித்தபோது ஒரு பதிவிடத் தோன்றியது. 

உங்களிற்கு சனரஞ்சக எழுத்துவளம் வாய்த்திருக்கிறது. ஞாபக வீதியினை அழகாகத் திறந்து மூடுகிறீர்கள். ஏராளம் கதை மாந்தர்களை நாமும் மேலோட்டமாக அறிந்து கொள்கிறோம். அவசியம் தொடர்ந்து எழுதுங்கள். உங்கள் பதிவுகளைப் படிக்கும் போது ஒரு விமர்சனமும் கூடவே பிறக்கின்றது. இந்தப் பதிவு அதிகபட்சம் இந்த விமர்சனம் சார்ந்தது தான்.

பதிவிற்குள் போவதற்கு முன்னர். உங்கள் கதைமாந்தர்களின் காலத்தை வைத்து நீங்கள் என்னைக் காட்டிலும் பதினைந்து முதல் இருபது வயது பெரியவர் என்று எண்ணுகிறேன். ஆர்வமாக நீங்கள் எழுதிக்கொண்டிருப்பது மிக ஆரோக்கியமானதும் மகிழ்ச்சியானதும். இந்த விமர்சனம் எவ்வகையிலும் உங்கள் மன அமைதியைக் கெடுத்துவிடக்கூடாது. அது இதன் நோக்கமல்ல. ஒரு படைப்பாளியாக, விமர்சனங்களைச் சந்திக்கும் பக்குவம் உங்களிற்கு இருக்கும் என்ற அபார நம்பிக்கையில் இதை முன் வைக்கிறேன்.

மதிலும் கரிக்கட்டையும்

நாங்கள் அனைவரும் பதின்மத்தில் அல்லது அதிகபட்சம் இருபதுகளின் ஆரம்பத்தில் ‘மதிலும் கரிக்கட்டையும்’ என்றொரு பருவத்தைக் கடந்து வந்திருப்போம். ‘மதிலும் கரிக்கட்டையும்” என்பதனை வெறுமனே சுவற்றில் கரிக்கட்டையால் எழுதுவதாக இங்கு குறிப்பிடவில்லை. மாறாக, நமது கருத்து வெளிப்பாடுகளின் தன்மையினை அச்சொட்டாகப் பிரதிநிதிப்படுத்தும் ஒரு படிமமாகக் குறிப்பிட்டுக்கொள்கிறேன். அதாவது, ஒரு துணுக்கு நமக்குக் கிடைத்தவுடன் அது சார்ந்து எதிர்வினையாற்றுவது. பொழுதுபோக்குப் பெறுமதியில் நமக்குக் கிடைக்கும் ஒற்றைப் பரிமாணத்தைச் சுவற்றில் எழுதுவது (சுவர் இணையமாகக் கூட இருக்கட்டும்). சுடச்சுட எழுதியதைப் பார்த்து மக்கள் ஆற்றும் அனைத்து எதிர்வினைகளையும் எமது புகழாகக் கருதிக்கொள்ளுதல். ஆனால், எப்போதும் நாம் எவரும் நம்மைப் பற்றிச் சுவற்றில் எழுதுவதில்லை. மாற்றமின்றி மற்றையவரின் கதைகளே கிறுக்கப்படும். காரணம், கதை சார்ந்த பொறுப்பினை நாம் சட்டைசெய்வதில்லை. வரவு முழுவதும் எனக்கு இழப்பு முழுவதும் மற்றையவரிற்கு என்பதான மனநிலையில் செயற்பட்டுக்கொண்டிருப்போம்.

எவ்வளவிற்கு எவ்வளவு மேற்படி புகழிற்கு நாம் அடிமைப்படுகின்றோமோ அவ்வளவிற்கவ்வளவு நாம் அதிகம் அதிர்வேற்படுத்தும் கதைகளைத் தேடிச்செல்வோம். இந்த “மதிலும் கரிக்கட்டையும்” மனநிலை அதிகபட்சம் இரண்டாண்டுகள் நீடிக்கும். அனேகமாக ஒரு எதிர்பாராத் தருணத்தில் மற்றையவரிற்குத் தமது துணுக்கு ஏற்படுத்திய பாதிப்பின் கனதி இடியாக உணரப்படுவதில் இந்தக் கட்டத்தை நாங்கள் தாண்டுவது வழமையாக இருக்கும். பொதுவாக மிக இழமையில் நாம் இப்பருவத்தைத் தாண்டி விடுவது வழமையாக இருக்கும். குறிப்பாக எமது பிணைப்புக்கள் அது காதலோ, கலியாணமோ, குழந்தைகளோ, பணியோ, பணமோ என அதிகரிக்கையில் சுவரின் தாக்கம் இயல்பாக நம்மால் புரிந்துகொள்ளக்கூடியதாக மாறும். மற்றையவர் வலியினை நம்வலியாக உணர்ந்து கொள்ளல் சாத்தியப்படும். 

அப்படியாயின் மற்றையவர் கதைகளை நாம் பேசவே கூடாதா? ஊர்வம்பு பேசுதல் இல்லாத சமூகம் உள்ளதா? நிச்சயமாக மற்றையவர் கதைபேசுதல் தொன்மை மிகு மானிடத் தன்மை தான். ஆயினும், அனைத்தையும் போல இதன் பாத்திரம் மறக்கப்பட்டுவிட்டது என்று தோன்றுகிறது.

ஊர்வம்பினால் என்ன லாபம்?

மனிதனின் தன்மைகளைக் குறிக்கும் படிமங்கள் வேண்டுமாயின் வரையறைக்குட்பட்டதாய் இருக்கலாம். ஆனால் ஒவ்வொரு படிமத்திற்கும் எண்ணற்ற வெளிப்பாடுகள் சாத்தியம். மனிதன் ஒரு சமூக விலங்கு. நன்மையோ தீமையோ பிறருடன் பகிர்வதால் வாழ எத்தனிக்கும் ஒரு விலங்கு. அவ்வகையில் ஊர்வம்புகளின் மிகமுக்கிய பங்கு மனிதனின் தனிமையினைப் போக்குதல். அதாவது, உனக்கு என்னதான் பிரச்சினை உள்ளதாக—அது உடல், உள, உடமை எதுவாக வேண்டினும் இருக்கட்டும்—நீ நினைக்கிறாயோ அது உனக்கு மட்டுமானதல்ல. உன்னை ஒத்த பலர் உலகில் உள்ளார்கள். நீ தனியன் அல்ல. இப்பிரச்சினையில் இருந்து இவ்வாறு அவர்கள் மீண்டுவந்தார்கள் என்பதாக, ஒவ்வொரு தனிமையின் கனம்மிக்க தருணத்திலும் ஒரு கூட்டத்தைக் காட்டுவதில் ஊர்வம்புகள் மிக முக்கிய பங்காற்றியிருக்கின்றன.

தன்னைப்போன்ற பிறரை ஒருவர் ஊர்வம்புக் கதைகள் வாயிலாகத் தனது அண்மையில் கண்டுகொள்ளல் சாத்தியம்.
ஆனால் ஊர்வம்பளப்பவரும் வளருதல் அவசியம். கரிக்கட்டையால் மதிலில் எழுதிய மனநிலையில் ஒரு வளர்ந்த எழுத்தாளர் இருப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. ஒரு வம்பைப் பேசத் துணியின், கதைமாந்தர் பக்க நியாயங்களிற்கும் நியாயம் செய்யவேண்டும். ஏனெனில் ஒருவர் கதையினை அவர் இல்லாதபோது பேசுபவர், அந்தப் பொறுப்பை ஏற்றுக்கொண்டே ஆக வேண்டும்.

பொழுதுபோக்கு

கதையின் பொழுதுபோக்கு அம்சத்தைக் கிஞ்சித்தும் கெடுக்காது, அதே நேரம் பொறுப்பாக எழுதல் சாத்தியம். ஆனால் அது உழைப்பினை வேண்டுவது. இதனால் தான் பல சமயங்களில் உண்மை மனிதரின் முகம் அடையாளப்படுத்தப்படமுடியாத வகையில் வம்பில் இருந்து புனைவிற்கு எழுத்தாளர்கள் மாறிக்கொள்கிறார்கள். இல்லை வம்மைப் தான் பேசுவேன் அப்போது தான் எனது கதைக்களம் நான் ரசித்த வகையில் வெளிப்படும் என்று எழுத்தாளர் உணரின், அவசியம் உழைப்புச் சேர்த்துக்கொள்ளப்படவேண்டும். தரவுகள் சரிபார்க்கப்படவேண்டும். பார்வைகள் நிறுக்கப்படவேண்டும். பாதிப்புக்கள் எடைபோடப்படவேண்டும். அனைவரிற்கும் குரல் கொடுக்கப்படவேண்டும். இல்லையேல், வழக்குகள் சட்டம் என்பனவற்றிற்கப்பால் மனசாட்சி சாட்டைவீசும். குறைந்தபட்சம் மனசாட்சியின் சாட்டையினை உணரப்பழகல் வேண்டும்.

மேற்படி தளத்தில் நின்று, சற்றும் குறையாத பொழுதுபோக்கினை வளங்குதல் முற்றிலும் சாத்தியம் என்பதற்கப்பால் அறமும் கூட.

புலப்பெயர்வைத் தொடர்ந்த குழந்தைத் தனம்

எமது சமூகத்தில் பல வளர்ந்தவர்கள் பதின்ம வயதின் தன்மையில் தங்கிநிற்பதைக் காணக்கூடியதாக இருக்கின்றது. இதற்கு ஏகப்பட்ட உளவியல் காரணங்களைக் காரணம் காட்டமுடியும் என்றபோதும், எனது அபிப்பிராயத்தில் இப்பிரச்சினை சார்ந்த முதற்படி எதிர்வினை காரணத்தைக் காட்டல் என்பதல்ல. மாறாக, இப்படி ஒரு பிரச்சினை சமூகத்தில் இருக்கின்றது என்பதை நாம் கருத்திற்கொள்வதே.

அண்மையில் எதேச்சையாக யாழ் இந்துவில் கூடப்படித்த ஒருவரை பலகாலம் கடந்து சந்திக்க நேர்ந்தது. எமது வகுப்பினரிற்கு ஒரு whatsapp குழுமம் இருப்பதாகவும் என்னை இணைக்கலாமா என்றும் கேட்டார். இணைந்தபோது மலைப்பாக இருந்தது. பத்தாம் வகுப்பில் இருந்த மனநிலை இன்னமும் அபரிமிதமாக குழுமத்தில் வெளிப்படுகிறது. நாற்பது வயது கடந்தும் பெண்களின் படம் பார்ப்பது அங்கு கிழர்ச்சி குடுக்கிறது. புரியவே இல்லை. பெண்களைப் பிடிக்கும் என்றால், பெண்துணை தேடிக்கொள்வது அத்தனை சிரமமா என்ன? எதனால் நாற்பது வயதிலும் ஒருவர் பதின்மப் பையன் போன்று படம் பார்த்துக் கிழுகிழுக்கின்றார்? எதனால் இந்தத் தேக்கம் நிகழ்ந்தது? சற்று இதுபற்றிச் சிந்திக்கையில் பதின்மத்தின் பல தன்மைகள் பலரில் நமது சமூகத்தில் அப்படியே தங்கி நிற்பதைக் காணமுடிகிறது. மதிலில் கரித்துண்டால் எழுதுவது கூட அத்தகைய ஒரு வெளிப்பாடு தான். 

இது புலப்பெயர்வால் நிகழ்ந்த ஒன்றா? புதிய சமூகத்தில் வளர்ந்தவர்களாக வளர்வதில் பலர் தடைகளை உணர்கிறார்களா? ஒருவேளை இந்த மொழி இந்தச் கலாச்சாரம் அவர்களிற்குப் புரிந்துகொள்ளமுடியாததாகப் பயமுறுத்துகிறதா? அதனால் குழந்தைபோன்று கற்பனை நண்பர்களோடு பேசிப் போர்வைக்குள் ஒழிந்துகொள்கிறார்களா? தமக்கு இறுதியாகப் பரிட்சயமாக இருந்த புலம்பெர்ந்த காலத்தில் சிக்கிக்கொள்கிறார்களா? உளவியல் வளர்ச்சி அங்கேயே நின்று போகிறதா? இதன் வெளிப்பாடுகளில் ஒன்றாகத் தான் நம்மவர்கள் மதுவிற்கு அடிமையாதல், உடல் பருமன் சார்ந்த சிரத்தையின்றி கழிவுப்பொருட்களை உண்ணல் உள்ளடங்கலான பிரச்சினைகளிற்குள்ளும் சிக்கிக் கொள்கிறார்களா? கரித்துண்டால் மதிலில் எழுதுவதும் இத்தகைய ஒரு வெளிப்பாடா?

இவ்வாறு பலகேள்விகளோடு இருந்த ஒரு பொழுதில் தான் தொடர்ந்து உங்கள் பதிவுகள் சிலவற்றைப் படிக்க நேர்ந்தது. உங்களிற்கு சனரஞ்சக எழுத்துவளம் வாய்த்திருக்கிறது. ஞாபக வீதியினை அழகாகத் திறந்து மூடுகிறீர்கள். ஏராளம் கதை மாந்தர்களை நாமும் மேலோட்டமாக அறிந்து கொள்கிறோம். அவசியம் தொடர்ந்து எழுதுங்கள். உங்கள் பதிவுகளைப் படிக்கும் போது மேற்படி விமர்சனமும் கூடவே பிறக்கின்றது. அதனால் இந்தப் பதிவு.

உங்கள் கருத்துக்களை அறிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறேன்.

Link to comment
Share on other sites

மதிலும் கரிக்கட்டையும் என்றதும் ஞாபகத்துக்கு வந்தது. "நான் உன்னை விட்டு விலகுவதுமில்லை உன்னை கைவிடுவதும் இல்லை' என்று ஒரு மதிலில் எழுதப்பட்டிருந்தது.. நான் அவ்விடத்தை கடந்து போகும போது அந்த வசனம் என்னை மிகவும் பாதித்தது. இவ் வசனம்  கிறிததுவ மதம் சார் வசனம் என நினைக்கின்றேன். ஆனல் இவ்வசனத்தை  படிக்கும் போது இறந்த எனது அம்மா எனக்கு மட்டும் கேட்கும்படி சொல்வதாக தோன்றும்.. . வாழ்வின் நெருக்கடிகள் சார்ந்து  வாழ்வின் எனெர்ஜி லெவல் மிகவும் கீழநிலைக்கு செல்லும் இவ்வாறான உணர்வுத் தொடர்புகள் என்னை தாங்கிப் பிடிக்கும்.  எழுதியவரின் நோக்கம் வேறாக இருக்கலாம் ஆனால் அது சென்றடையும் திசை வேறாக இருக்கும். அதே போல் என்னுமொரு அனுபவம் ஒரு மாணவனுக்கு வாத்தி அடித்த ஆத்திரத்தில் அவரது மகளைப் பற்றி மதிலில் மிக ஆபாசமாக எழுதியது.. அநத சம்பவத்துக்கு பின்னர் அவரது உடல் நிலை மிக மோசமான நிலைக்கு சென்றது. ஒருவரில் இருந்து வெளிப்படும் எழுத்துக்கள் அது கரித்துண்டால் ஆரம்பித்தாலும் சரி அவைகளின் விழைவுகள் நீண்ட தொடர்சியை கொண்டிருக்கலாம்...  அளவிட முடியாது.. 

ஊர் வம்பு.. என்பது மிக ஆழமான தலைப்பு.. மிக சிக்கலான நிலைகளை சதீயச் சமூகத்தில் உருவாக்கவல்லது.. ஒரு குடும்பத்தில் இருந்துதான் ஒரு சமூகம் உருவவது போல் இந்த ஊர் வம்பு என்பதும் ஒருவரில் அல்லது ஒரு சம்பவத்தில் ஒருவரின் ஈடுபாட்டில் இருந்து என்னுமொருவரின் விசயத்தில் தலையிடுவதில் ஆரம்பித்து பின்னர் அது விரிவடையும்.  இதில் முக்கியமாக ஆரம்பித்தவர் கட்டுபாட்டை விட்டு ஆரம்பித்த விசயம் வேறு கைகளளுக்கு சென்றுவிடும். வேறுவிதமாகவும சென்றுவிடும். நன்மைகளையும் தீமைகளையும் வீரியத்துடன் உருவாக்கவல்ல சக்தி ஊர்வம்புக்கு உண்டு. 

3 hours ago, Innumoruvan said:

இது புலப்பெயர்வால் நிகழ்ந்த ஒன்றா? புதிய சமூகத்தில் வளர்ந்தவர்களாக வளர்வதில் பலர் தடைகளை உணர்கிறார்களா? ஒருவேளை இந்த மொழி இந்தச் கலாச்சாரம் அவர்களிற்குப் புரிந்துகொள்ளமுடியாததாகப் பயமுறுத்துகிறதா? அதனால் குழந்தைபோன்று கற்பனை நண்பர்களோடு பேசிப் போர்வைக்குள் ஒழிந்துகொள்கிறார்களா? தமக்கு இறுதியாகப் பரிட்சயமாக இருந்த புலம்பெர்ந்த காலத்தில் சிக்கிக்கொள்கிறார்களா? உளவியல் வளர்ச்சி அங்கேயே நின்று போகிறதா? இதன் வெளிப்பாடுகளில் ஒன்றாகத் தான் நம்மவர்கள் மதுவிற்கு அடிமையாதல், உடல் பருமன் சார்ந்த சிரத்தையின்றி கழிவுப்பொருட்களை உண்ணல் உள்ளடங்கலான பிரச்சினைகளிற்குள்ளும் சிக்கிக் கொள்கிறார்களா? கரித்துண்டால் மதிலில் எழுதுவதும் இத்தகைய ஒரு வெளிப்பாடா?

இந்தக் கேள்விகளுக்கு இல்லை என்ற பதில் பொருந்தாது என்றே எண்ணுகின்றேன். நீங்கள் கேட்ட கேள்விகளை அவரவர் கேட்டுக்கொள்ளும் போது அவரவருக்குள் சில மாற்றங்கள் வரும். 

நல்ல பதிவுக்கு நன்றி.. இப்பதிவு குறித்து சிந்திக்கவே முடிகின்றது தவிர நிறைவாக கருத்து எழுத முடியவில்லை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நேரம் கிடைக்கும்போது எனது அபிப்பிராயத்தையும் எழுதுகின்றேன்.

மனிதன் பேசக் கற்றுக்கொண்டதே பிறரைப் பற்றி வம்பு கதைக்கமுற்பட்டபோதுதான். அதனால் வம்பளப்பது முக்கியமானது? 

நானும் கூடப்படித்த நண்பர்களின் வாட்ஸப் குழுமங்களில் இருக்கின்றேன். ஒன்று பத்தாம்  வகுப்பு மட்டும் வடமராட்சியில் படித்தவர்களின் குழுமம். அது பத்தாம் வகுப்பிலேயே உறைந்து நிற்பதால் வம்புகள், சில்லறைப் பிரச்சினைகள், கரிக்கட்டியால் சுவரில் எழுதுதல் என்று போகின்றது. 

இன்னொன்று இங்கிலாந்தில் உயர்தரம் படித்தவர்களின் குழுமம். கொஞ்சம் முதிர்ச்சி இருந்தாலும் 18- 19 வயதைத் தாண்டிய கதைகள் இல்லை. ஆனால் வம்புகள் குறைவு.

மற்றையது பல்கலைக்கழகத்தில் படித்த தமிழ் நண்பர்களின் குழுமம். புலம்பெயர்ந்த நாட்டில் ஒருவருக்கொருவர் உதவி செய்வதும், உள்நோக்கம் இல்லாமல் ஒற்றுமையாக பல விடயங்களைச் செய்யக்கூடிய பக்குவமும் உள்ளவர்கள்.

ஒவ்வொன்றில் கதைக்கும்போது அந்தந்த முகமூடியைப் போட்டுக்கொண்டுதான் போகின்றேன். ஆனால் இதுவரை ஒன்றிலிருந்தும் விலகவில்லை.?

இன்னொமொருவன் யாழ் இந்துக் குழுமத்தில் இருக்கின்றீர்களா அல்லது விட்டால் போதும் என்று விலகிவிட்டீர்களா??

Link to comment
Share on other sites

Quote

இது புலப்பெயர்வால் நிகழ்ந்த ஒன்றா? புதிய சமூகத்தில் வளர்ந்தவர்களாக வளர்வதில் பலர் தடைகளை உணர்கிறார்களா? ஒருவேளை இந்த மொழி இந்தச் கலாச்சாரம் அவர்களிற்குப் புரிந்துகொள்ளமுடியாததாகப் பயமுறுத்துகிறதா? அதனால் குழந்தைபோன்று கற்பனை நண்பர்களோடு பேசிப் போர்வைக்குள் ஒழிந்துகொள்கிறார்களா? தமக்கு இறுதியாகப் பரிட்சயமாக இருந்த புலம்பெர்ந்த காலத்தில் சிக்கிக்கொள்கிறார்களா? உளவியல் வளர்ச்சி அங்கேயே நின்று போகிறதா? இதன் வெளிப்பாடுகளில் ஒன்றாகத் தான் நம்மவர்கள் மதுவிற்கு அடிமையாதல், உடல் பருமன் சார்ந்த சிரத்தையின்றி கழிவுப்பொருட்களை உண்ணல் உள்ளடங்கலான பிரச்சினைகளிற்குள்ளும் சிக்கிக் கொள்கிறார்களா? கரித்துண்டால் மதிலில் எழுதுவதும் இத்தகைய ஒரு வெளிப்பாடா?

ஆம்

பாடசாலை காலங்களில் கடுகடுப்பு வெயிலில் நின்றாலும்  பேருந்து தரிப்பு மதிலில் எழுதப்பட்ட வாசகங்களில் பல பேருந்தில் வீடு செல்லும் வரை சிரித்த வாசகங்களும் உண்டு. அவை நாகரீகம் கருதி இங்கு எழுத முடியவில்லை. என்றாலும்  அவற்றை எழுதியவரின் மனநிலையை ஓரளவு  உணர முடியும்.
சில வரிகள் மிக சிந்திக்க வைத்தன. அவற்றில் ஒரு சில இன்றும் நினைவில் உண்டு. சில நுண்கணித நிறுவல்களும் அவற்றின் கீழ் தாறுமாறாக தரப்படுத்தலை பற்றிய வசனங்களும் அதனை எழுதியவர் எத்தகைய மனப்பாதிப்பை ஏற்படுத்தி இருந்திருக்கிறது என்பதை முற்று முழுதாக உணர முடிந்தது.

 

Quote

மதுவிற்கு அடிமையாதல்

ஆம்/ இல்லை

மதுவுக்கு அடிமையாவர்கள்  பெரும்பாலும்  மரபியலாக வருகிறது என் கிறது ஆராட் சிகள், அத்தோடு சிலர் ந|ண்பர்களோடு சேர்ந்து குடிக்க  சிறிதளவாக ஆரம்பித்து  குடிக்கும் அளவு நாளடைவில் கூடி மீளமுடியாமல் உள்ளவர்களும் உள்ளனர்.
ஏனையவர்கள் வாழ்வில் பிரச்சனையை எதிர்கொள்ள முடியாமல்  தற்காலிகமாகவேனும் பிரச்சனையை தீர்க்கும் என எண்ணி குடிக்க ஆரம்பித்து மீள முடியாமல் இருக்கிறார்கள்.

Link to comment
Share on other sites

7 hours ago, கிருபன் said:

ஒவ்வொன்றில் கதைக்கும்போது அந்தந்த முகமூடியைப் போட்டுக்கொண்டுதான் போகின்றேன். ஆனால் இதுவரை ஒன்றிலிருந்தும் விலகவில்லை

அப்ப நீங்கள் சுயமாய் இல்லை ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கரியால் எழுதுவது என்பது கிராமியங்களுடன் நின்றுவிடும்.

அந்த கிராமியங்களை  இழிவுபடுத்தும் நகர்ப்புற மை பேனாக்களுக்கு கரியைப்பற்றி என்ன தெரியும்? :cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புலம் பெயர்ந்த நாடுகளில் பூங்காக்களில் பெரிய மதிலை கட்டி வைத்துள்ளார்கள் அதில் பெயிண்டினால் எழுவதற்கு அனுமதித்துள்ளார்கள் பலர் வந்து தங்களது கை, மற்றும் மன‌வித்தையை காற்றுவார்கள்....இதற்கும் மதிலும் கரிகட்டைக்கும் தொடர்பு இருக்குமோ...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, spyder12uk said:

அப்ப நீங்கள் சுயமாய் இல்லை ?

அந்தந்த வயதுக்கேற்ற முகமூடி என்பதால் அவையும் நானே?

Link to comment
Share on other sites

20 hours ago, சண்டமாருதன் said:

மதிலும் கரிக்கட்டையும் என்றதும் ஞாபகத்துக்கு வந்தது. "நான் உன்னை விட்டு விலகுவதுமில்லை உன்னை கைவிடுவதும் இல்லை' என்று ஒரு மதிலில் எழுதப்பட்டிருந்தது.. நான் அவ்விடத்தை கடந்து போகும போது அந்த வசனம் என்னை மிகவும் பாதித்தது. இவ் வசனம்  கிறிததுவ மதம் சார் வசனம் என நினைக்கின்றேன். ஆனல் இவ்வசனத்தை  படிக்கும் போது இறந்த எனது அம்மா எனக்கு மட்டும் கேட்கும்படி சொல்வதாக தோன்றும்.. . வாழ்வின் நெருக்கடிகள் சார்ந்து  வாழ்வின் எனெர்ஜி லெவல் மிகவும் கீழநிலைக்கு செல்லும் இவ்வாறான உணர்வுத் தொடர்புகள் என்னை தாங்கிப் பிடிக்கும்.  எழுதியவரின் நோக்கம் வேறாக இருக்கலாம் ஆனால் அது சென்றடையும் திசை வேறாக இருக்கும்....

 

நன்றி அனைவரின் கருத்துகளிற்கும்

நீங்கள் சொல்வது உண்மை தான். சுவர் எழுத்துக்கள் பரபரப்பு, பிரச்சாரம், நகைச்சுவை, வீரம், அரசியல், வன்மம், வம்பு முதலிய அனைத்தையும் அடக்கிக் தான் இருந்தன. சுவரில் இருந்த வேதாகமவரி தாய்மையின் வெற்றிடம் சார்ந்து உங்கள் மீதாற்றிய பங்கினை மிகவும் நுண்ணியதாய் அற்புதமாய் வெளிப்படுத்தியிருக்கிறீர்கள். அனேகம் வம்புகளையே சுவர் சுமந்து நின்றது. அதை எழுதியவர்கள் கெட்டவர்கள் என்பதல்ல, அதை எழுதுவதற்கு ஒரு குறிப்பிட்ட ஒரு பரிமாண மனநிலை அவசியம். அது அனேகமாக வாலிபத்தில் தான் பலரிற்குக் சாத்தியப்படடிருக்கும்.


கிருபன் அந்தக் குழுமத்தை விட்டு நான் விலகவில்லை. ஆனால் எந்தக் குழுமத்திலும் எதையும் எழுதுவதில்லை. வாரத்தில் ஏதாவது ஒரு பொழுதில் துரிதமாக எழுதியவற்றைப் பார்த்துச் செல்வதோடு போகிறது. ஊர்மீழல் போலத்தான் இதுவும். அந்தப் பழைய வகுப்பறையில் அன்றைக்கு இருந்தவர்கள் குழுமத்தில் கூடியிருந்தபோதும், வகுப்பு அன்றுபோல் இல்லை இருக்கவும் முடியாது. ஏனெனில் அன்றைக்கு இருந்த பொதுமை இப்போதில்லை. அது சாத்தியமுமில்லை.

13 hours ago, குமாரசாமி said:

கரியால் எழுதுவது என்பது கிராமியங்களுடன் நின்றுவிடும்.

அந்த கிராமியங்களை  இழிவுபடுத்தும் நகர்ப்புற மை பேனாக்களுக்கு கரியைப்பற்றி என்ன தெரியும்? :cool:


இதில் கரித்துண்டைக் கேவலப்படுத்தவில்லை. நகரத்து மதில்களுக்கும் கிராமத்து மதில்களிற்கும் அதிகம் வித்தியாசமில்லை. பாத்திரங்கள் தான் மாற்றமே அன்றி கதைகள் ஒன்றுதான். அடியேன் சுத்த கிராமத்தானாக்கும் :)

புத்தன் நீங்கள் graffiti ஒப்பிடிவது மிகவும் சுவாரசியமானது. கரிக்கட்டையால் மதிலில் கிறுக்குவதற்கும் கிறாபிடிக்கும் ஒற்றுமைகள் நிறையவும் காத்திரமான வேற்றுமைகளும் உண்டு. 

கிராபிடி ஒரு கலகக்காரனின் இலச்சினையாக இருக்கின்றபோதும் கிறாபிடியில் ஒரு Elitism இருக்கிறது. வித்தகத்தை வெளிக்காட்டுவதில் போட்டியிருக்கிறது. அது எல்லோரிற்கும் உரியதாயில்லை. விதிகளை இந்த வெளிப்பாடு தனதாக்கிக் கொண்டுள்ளது. அந்தவகையில் அது ஒழுங்குபடுத்தப்பட்ட கலகக்காரனின் முரசாகிவிடுகிறது. செய்திகளையும் உயர்மட்டத்தில் சித்தரிப்பது போட்டியாகிறது. கிறாபிடி வரைபவர்கள் சார்ந்து இரு முடிவுகள் எட்டப்படுகின்றன. ஒன்று, அதை வரைபவர்கள் தங்களை ஆழுமைகளாக, பிரமிப்புக்களாக வளர்த்துக் கொள்வதோடு வளர்ந்தவர்களாகிச் சென்றுவிடுகிறார்கள். மற்றையது, நகரம் அவர்களைக் குத்தகைக் காரர்களாக்கி நாசூக்காகப் பணியில் அமர்த்திவிடுவதால் கட்டிப்போட்டுவிடுகிறது. ஆனால் கிராபிடி வரைபவர்களிற்கும் பரந்தளவில் ஒரு வயதுக்கட்டுப்பாட்டைப் பார்க்கமுடிகிறது. பெரியளவில் இளையோராயிருக்கிறார்கள் (விதிவிலக்குகள் உண்டு). அனேகமான கிராபிடி வரைவோரிற்கு ஒரு சீற்றம் அல்லது குளப்பம் அல்லது தேடல் கூடவே இருக்கிறது. 

கரித்துண்டிற்கும் கிராபிடிக்கும் நிறைய இன்னும் பல கோணத்தில் ஒற்றுமை வேற்றுமை பேசலாம். நன்றி உங்கள் ஒப்பீட்டிற்கு

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 5/12/2018 at 1:42 PM, Innumoruvan said:

உங்கள் கருத்துக்களை அறிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறேன்.

470_AAFDF-243_F-4_CE8-940_D-_A9_CD1417_E

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.