Jump to content

மன்னர்கள் காலந்தொட்டே நீடிக்கும் பிரச்னை..! காவிரி கைவிரிக்கப்பட்ட கதை


Recommended Posts

மன்னர்கள் காலந்தொட்டே நீடிக்கும் பிரச்னை..! காவிரி கைவிரிக்கப்பட்ட கதை - அத்தியாயம் - 1

 
 
Chennai: 

ண்டுகள் எத்தனை... ஆட்சிகள் எத்தனை... வழக்குகள் எத்தனை... இழப்புகள் எத்தனை... பிரச்னைகள் எத்தனை... வன்முறைகள் எத்தனை என இந்தப் பிரச்னையின் பின்னணியில் உள்ள எத்தனையோ வலிகளை  அடுக்கிக்கொண்டே போகலாம். அந்தப் பிரச்னை வேறு எதுவுமல்ல, காவிரி விவகாரம்தான்..!

காவிரி

 

உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றம், நடுவர் மன்றம் என எந்த மன்றத்தின் உத்தரவைக் கேட்டும் நியாயமில்லை காவிரிக்கு. காலங்கள் கடந்தபோதும் இதுவரை இந்தப் பிரச்னைக்கு எந்தவொரு நிரந்தரத் தீர்வும் ஏற்படவில்லை. இது, இன்று... நேற்றல்ல... மன்னர்கள் காலந்தொட்டே நீடிக்கிறது. 

‘காவிரிக்கரை விநியோகம்!’ 

கி.பி. 1146 - 1163 காலகட்டத்தில், சோழ நாட்டில் இரண்டாம் ராஜராஜன் எனும் பேரரசன் ஆட்சி செலுத்தினான். இவன், கி.பி. 1133 - 1150-ல் வாழ்ந்த இரண்டாம் குலோத்துங்கனின் மகன். இந்த ராஜராஜன் ஆட்சி செலுத்திய காலத்தின்போது... கர்நாடகத்தைப் போசளன் முதலாம் நரசிம்மன் என்பவன் ஆட்சி செய்துவந்தான். இவன், காவிரி வரும்வழியில் குறுக்கே செயற்கை மலைகளை ஏற்படுத்தித் தமிழகத்துக்கு வரும் நீரைத் தடுத்தான் என்கிறது காவிரி குறித்த வரலாறு. இதனால், காவிரியில் நீர்வரத்துக் குறைந்துபோனது. தமிழகத்தில் அடங்கிய சோழ நாட்டில் உள்ள பாசனக் கால்வாய்கள் எல்லாம் தூர்ந்துபோனதையடுத்து நாட்டில் வறுமையும், பஞ்சமும் ஏற்பட்டது. இதற்காக நாடுதோறும், ‘பஞ்சந்தாங்கி’ ஏரிகள் வெட்டப்பட்டன. ஆனாலும் எந்தப் பயனில்லை. அதற்காக, இரண்டாம் ராஜராஜன் சும்மா இருக்கவில்லை. கடும்கோபம் கொண்டான்; கர்நாடகத்தின்மீது படையெடுக்க நினைத்தான்.

''தமிழகத்துக்குக் காவிரி நீர் உரிமையானது; அதைத் தடுக்க மைசூரு அரசுக்கு உரிமையில்லை. போசள வீரநரசிம்ம அரசுக்கு இந்திரனே துணையிருப்பினும் கவலையில்லை” என்று போர்ப் பரணி பாடிப் போர் தொடுத்தான். இந்தப் போரில் வெற்றிவாகை சூடிய இரண்டாம் ராஜராஜன், போசளன் முதலாம் நரசிம்மன் அமைத்திருந்த அணைகளைத் தகர்த்தெறிந்தான். மீண்டும் தமிழகத்துக்குள் காவிரி பாய்ந்தோடி சோழ நாடு வளம் கொழித்தது. இதன்மூலம் இரண்டாம் ராஜராஜன், ‘காவிரி கண்ட சோழன்’, ‘பொன்னிக்கு வழிகண்ட கண்டன்’ என்றெல்லாம் புகழப்பட்டான். இந்தப் போருக்கான செலவை ஈடுகட்ட, ‘காவிரிக்கரை விநியோகம்’ என்ற வரி விதிக்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. இந்த வெற்றி குறித்து தக்கயாகப்பரணி, ராஜராஜ சோழன் உலா, பெரிய புராணம், எரிபத்த நாயனார் புராணம், நச்சினார்க்கினியரின் தொல்காப்பிய உரை மேற்கோள் பாடல் உள்ளிட்டவற்றில் சான்றுகள் இடம்பெற்றுள்ளன.

காவிரி

ராணி மங்கம்மாள்!

ராணி மங்கம்மாள்அதேபோல், கி.பி. 17-ம் நூற்றாண்டின் இறுதியில் காவிரி நீருக்காகத் தமிழகமும், மைசூரும் மோதிக்கொண்டன. அந்தக் காலகட்டத்தில் மதுரையை ராணி மங்கம்மாளும், தஞ்சையை மராட்டிய மன்னன் சகசியும் ஆட்சி செய்தனர். அப்போது மைசூரைச் சித்ததேன் மகாராயன் என்ற மன்னன் ஆட்சி செய்து வந்தான். அவன், காவிரியின் போக்கை அணைகட்டித் தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டான். ராணி மங்கம்மாளும், சகசியும் பல்வேறு பிரச்னைகளில் கருத்து வேறுபாடு கொண்டிருந்தபோதிலும், காவிரி நீரை அணைகட்டித் தடுக்கும் மைசூரு மன்னனுக்கு எதிராக ஒன்றுபட்டு எதிராகக் களம் இறங்கினர். இதையடுத்து, இருவருடைய படைகளும் மைசூருக்கு அனுப்பப்பட்டன. ஆனால், இந்தப் படைகள், மைசூரை அடைவதற்கு முன்னால் காவிரியின் குறுக்கே மைசூரு மன்னன் கட்டிய அணை திறமையற்றவர்களால் கட்டப்பட்டதால், தானாகவே உடைந்துவிட்டது. அதன் பின்னர், காவிரியில் தடையின்றி நீர்வரத் தொடங்கியது.

வரலாற்றுச் சான்றுகள்! 

இந்தச் சம்பவங்களை எல்லாம் அறியும்போது, மன்னர்கள் காலத்திலேயே காவிரி நீருக்கானப் போராட்டம் தொடங்கப்பட்டிருக்கிறது எனத் தெரிய வருகிறது. அந்தப் போராட்டம் இன்றுவரை தொடர்ந்துகொண்டிருக்கிறது. மூதறிஞர் ராஜாஜி கவர்னர் ஜெனரலாக இருந்தபோது... அவருடைய சீடரான அனுமந்தையா, கர்நாடக முதல்வராகயிருந்தார். அந்தச் சமயத்தில், கிருஷ்ணராஜ சாகர் அணை நிரம்பியிருந்தும் காவிரிக்கு நீரைவிட மறுத்தார் அனுமந்தையா. இதனால் சீற்றம்கொண்ட ராஜாஜி, ''நீரை நீங்களாக விடுகிறீர்களா அல்லது நான் ராணுவத்தை அனுப்பி கிருஷ்ணராஜ சாகர் அணையை என்னுடைய கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ளட்டுமா” எனக் கேட்டார். இதனால் அதிர்ச்சிக்குள்ளான அனுமந்தையா, அதன் பின்னர் தமிழகத்துக்குக் காவிரியில் தண்ணீரைத் திறந்துவிட்டதாகவும் வரலாற்றுச் சான்றுகள் உள்ளன.

‘நடந்தாய் வாழி காவிரி...’ என்ற சிலப்பதிகார வரிகளை நினைவூட்டும் வகையில்... ஒருகாலத்தில் காவிரி ஆற்றில் திறந்துவிடப்பட்ட தண்ணீரானது, தமிழக டெல்டா மாவட்டங்களைக் கடந்து, கடைமடை பகுதிவரை கரைபுரண்டு ஓடிய வரலாறும் இங்கு உண்டு. ‘சோழநாடு சோறுடைத்து...’ என்ற வழக்குக்கேற்ப, அப்போதெல்லாம் வயல்வெளிகள் ‘பச்சைப் பசேல்’ எனப் பசுமை போர்த்தியிருந்தன; முப்போக விளைச்சலால் விவசாயப் பெருங்குடி மக்கள் மட்டுமல்லாது, எல்லா மக்களும் குதூகலமாய் வாழ்ந்தனர். ஆனால், இன்று நிலைமை அப்படியே தலைகீழாக மாறிவிட்டது. 

''காவிரியில் ஏற்கெனவே கரைபுரண்டோடி வந்த நீர்... தற்போது வரும் குறைந்தளவு நீர்... எதிர்காலத்தில் அந்தளவு தண்ணீராவது வருமா...?” என்று கேட்குமளவுக்குப் போய்விட்டது இப்போதைய நிலைமை. இந்தளவு பிரச்னை முற்றியதற்கு என்ன காரணம், காவிரி கடந்துவந்த பாதை போன்றவை குறித்து அடுத்தடுத்து வரும் பகுதிகளில் காண்போம்...

நூல் ஆதாரங்கள்: காவிரி தமிழகத்தின் உயிரோட்டம், காவிரி அங்கும் இங்கும்!

காவிரி பாயும்...

https://www.vikatan.com/news/tamilnadu/123703-the-story-of-cauvery-series-1.html

Link to comment
Share on other sites

குடகு முதல் ஒகேனக்கல் வரை... காவிரி கைவிரிக்கப்பட்ட கதை! அத்தியாயம் - 2

 
 
Chennai: 

ங்ககாலப் புலவர்கள் முதல் இன்றைய கவிஞர்கள்வரை அனைவரும் காவிரியைப் பற்றிப் புகழ்வதற்குக் காரணம், ஒருகாலத்தில், அது வற்றாத ஜீவநதியாக ஓடியதுதான். அப்படிக் காவிரி பாய்ந்துசென்ற இடமெல்லாம் பசுஞ்சோலையாக விரித்துச் சென்றதால், ‘காவிரி’ என்ற பெயர் வழங்கலாயிற்று. மேலும் ‘பொன்னி’ என்று இன்னொரு பெயரும் உண்டு. நீரிலும், நீரடி மண்ணிலும் தங்கத் தாது உண்டென்பதாலும், மண்ணைக் கொழிக்கச் செய்வதாலும் அப்பெயர் உண்டாயிற்று. 

காவிரி

 

 

குடி தண்ணீர்... விவசாயம்! 

இப்படியான காவிரி, கர்நாடகத்தின் குடகு மாவட்டத்தில் உள்ள பிரம்மகிரி மலைப் பகுதியில் ‘தலைக்காவிரி’ என்னும் இடத்தில் உற்பத்தியாகிறது. அங்கிருந்து பாய்ந்தோடித் தமிழகத்தின் தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கலில் ஆர்ப்பரித்து, இறுதியில் பூம்புகாரில் வங்கக்கடலில் சென்று கலக்கிறது. தலைக்காவிரியானது, மேற்குத் தொடர்ச்சி மலையில் கடல் மட்டத்திலிருந்து 4,186 அடி உயரத்தில் இருக்கிறது. கர்நாடகத்தில் 320 கி.மீ. தூரத்தையும், தமிழகத்தில் 416 கி.மீ. தூரத்தையும், இருமாநில எல்லையில் 64 கி.மீ. தூரத்தையும் கடப்பதால் காவிரியின் மொத்த நீளம் 800 கி.மீ. ஆகும். இது தெற்கு, கிழக்குத் திசைகளில் பாய்கிறது. முதலில் குடகு மலைப்பகுதியில் பாயும் காவிரியானது, பிறகு தக்காணப் பீடபூமியின் மேட்டு நிலத்திலும், அதன்பின்னர் தமிழகத்தின் சமவெளிப் பகுதியிலும் பாய்கிறது. கர்நாடகத்தில் குடகு, ஹாசன், மைசூரு, மாண்டியா, பெங்களூரு, சாம்ராஜ் நகர் மாவட்டங்களில் பாயும் காவிரி ஆறானது,  தமிழகத்தில் தர்மபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சை, நாகை மாவட்டங்கள் வழியாகச் சென்று கடலில் கலக்கிறது. தமிழகத்தில் குடிதண்ணீர், விவசாயம் என நேரடியாகவும், மறைமுகமாகவும் 11 மாவட்டங்களைக் காவிரி ஆறு வாழ்வித்துக்கொண்டிருக்கிறது.  

காவிரி நீரில் செழித்த விவசாயம்

மழைப்பொழிவு... நீரின் அளவு!

காவிரி, 81,155 ச.கி.மீ. நிலப்பரப்பைத் தன்னுடைய மொத்த நீர்ப்பிடிப்புப் பகுதியாகப் பெற்றுள்ளது. இதில், 34,273 ச.கி.மீ. பரப்பு கர்நாடகாவிலும், 43,856 ச.கி.மீ. பரப்பு தமிழகத்திலும், 2,866 ச.கி.மீ. கேரளத்திலும், 160 ச.கி.மீ. பரப்பு புதுச்சேரியிலும் அமைந்துள்ளது. காவிரி வடிநிலத்தின் மேல் பகுதிகள், ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான தென் மேற்குப் பருவமழையால் பயன்பெறுகின்றன. கீழ்ப்பகுதிகள் அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான வட கிழக்குப் பருவமழையால் பயன்பெறுகின்றன. ஆற்றின் மழை நீர்ப்பிடிப்புப் பரப்பு 50 சதவிகிதத்துக்கு மேல் தமிழகத்துக்குள் அமைந்திருந்தாலும் தென் மேற்குப் பருவக்காற்று மழையின்போது கர்நாடகத்திலும், கேரளாவிலும் உள்ள உயர்ந்த மலைத் தொடர்களில் பொழிகின்ற கனத்த, செறிவான மழைப்பொழிவே ஆற்றின் நிலையான நீரோட்டத்துக்குக் காரணமாகிறது. 

தமிழகத்தில் உள்ள பரப்பு பெரும்பாலும் சமவெளியாகவும், தாழ்நிலமாகவும் அமைந்திருப்பதால், நீர்ப்பெருக்கைத் தேக்கிவைக்க வழியில்லாமல் இருக்கிறது. தென் மேற்குப் பருவக்காற்று கனத்த மழையையும், வட கிழக்குப் பருவக்காற்று குறைந்த அளவு மழையையும் தருகிறது. வட கிழக்குப் பருவக்காற்றின்போது புயலும், காற்றும் அதிக அளவில் இருப்பதால் மழைப்பொழிவு குறைந்துபோகிறது. குறிப்பாக, கர்நாடக வடிநிலப் பகுதிகளில் சராசரியாக 76 நாள்கள் இருக்கும் மழைப்பொழிவு, தமிழகத்தில் 55 நாள்களாக இருக்கிறது. இதனால், தமிழகத்தில் நீர்ப்பிடிப்புப் பகுதியில் ச.கி.மீட்டருக்குக் கிடைக்கும் நீரின் அளவைவிட, கர்நாடக, கேரள மாநில நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் ச.கி.மீட்டருக்குக் கிடைக்கும் நீரின் அளவு அதிகம்.

ஒகேனக்கல்

முதல் நீர்மின் உற்பத்தி நிலையம்! 

தலைக்காவிரியில் உருவாகும் காவிரி குடகு மாவட்டத்தில் ஹாரங்கி ஆற்றோடு இணைந்து மாண்டியா மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணராஜ சாகர் நீர்த்தேக்கத்தை அடைகிறது. இங்கு ஹேமாவதி, லட்சுமண தீர்த்தம் ஆகிய இரண்டு ஆறுகளும் காவிரியோடு இணைகின்றன. கிருஷ்ணராஜ சாகர் நீர்த்தேக்கத்திலிருந்து வெளிவரும் காவிரி, ஸ்ரீரங்கப்பட்டணம் தீவை உண்டாக்குகிறது. பிறகு கபினி, சொர்ணவதி ஆகிய ஆறுகள் காவிரியில் கலக்கின்றன. அதன்பின்பு, சிவசமுத்திரம் தீவைத் தோற்றுவிக்கும் காவிரி, அந்த இடத்தில் இருந்து இரண்டு பிரிவுகளாகப் பிரிகிறது. அங்கு ஒருபுறம், ‘சுகனசுக்கி’ என்ற அருவியாகவும், மறுபுறம் ‘பாறசுக்கி’ அருவியாகவும் விழுகிறது. ‘சுகனசுக்கி’ அருவியில்தான் 1902-ம் ஆண்டு ஆசியாவிலேயே முதன்முதலில் நீர்மின் உற்பத்தி நிலையம் அமைக்கப்பட்டு கோலார் தங்கவயலுக்கு மின்சாரம் வழங்கப்பட்டது. 

'ஆடு தாண்டும் பாறை!’ 

அதன்பிறகு, சிம்சா மற்றும் அர்க்கவதி ஆறுகள் காவிரியில் கலக்கின்றன. இந்த இரண்டு ஆறுகளும் இணைந்த பிறகுதான் காவிரி, ஆழமான அதிகமான நீரோடையாகப் பாறை இடுக்குகளில் புகுந்துவருகிறது. இந்த ஆழமான நீரோடைகளை ஆடுகூட தாண்டலாம் என்பதால், இந்தப் பகுதி, கன்னடத்தில் ‘மேக்கேதாட்டூ’ என்றும், தமிழில் ‘ஆடு தாண்டும் பாறை’ அல்லது ‘ஆடு தாண்டும் காவிரி’ என்றும் அழைக்கப்படுகிறது. இந்தப் பகுதியோடு கர்நாடகத்தின் எல்லை முடிவுற்று காவிரி, தமிழகத்தில் காலடி எடுத்துவைத்து பில்லிகுண்டு வழியாக ஒகேனக்கல் அருவியை அடைகிறது. அருவி நீர் பாறையில் மோதி புகைபோல் எழுவதால், ‘புகைக்கல்’ என்னும் பொருளில் 'ஒகேனக்கல்’ எனப் பெயர் வந்ததாகச் சொல்லப்படுகிறது. 

இந்தக் கட்டுரையின் முதல் அத்தியாயத்தைப் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்...

நூல் ஆதாரம்: காவிரி அங்கும் இங்கும், எழுத்தாளர் தியாகு எழுதிய காவிரி வரலாறு பற்றிய கட்டுரை.

காவிரி பாயும்...

https://www.vikatan.com/news/tamilnadu/123848-the-abandoned-story-of-cauvery-series-2.html

Link to comment
Share on other sites

கல்லணையைக் கட்டமைத்த கரிகாலன்! காவிரி கைவிரிக்கப்பட்ட கதை! அத்தியாயம் - 3

 
 
Chennai: 

கேனக்கலுக்குப் பின் பாலாறு, சென்னாறு, தொப்பாறு ஆகிய சிற்றாறுகள் காவிரியில் கலக்கின்றன. இதன்பிறகு காவிரி, மேட்டூர் அணையை அடைந்து ஸ்டான்லி நீர்த்தேக்கத்தில் நிறைந்து, அங்கிருந்துதான் தமிழகத்தின் காவிரி நீர்ப்பாசனம் தொடங்குகிறது. 

காவிரி

 

‘திரிவேணி சங்கமம்!’ 

மேட்டூரிலிருந்து வெளிவரும் காவிரியுடன், பவானி ஆறும் சேர்வதால் ‘பவானி கூடுதுறை’ என்ற பெயரும் உண்டு. இந்தப் பவானி, காவிரியுடன் ஆகாய கங்கையும் வந்து கலக்கிறது என்ற ஐதீகத்தின்பேரில், பவானி கூடுதுறைக்குத் ‘திரிவேணி சங்கமம்’ என்ற பெயரும் உண்டு. பவானியிலிருந்து ஈரோட்டுக்குப் படையெடுக்கும் காவிரி, கொடுமுடி அருகே நொய்யல் என்னுமிடத்தில் நொய்யல் ஆற்றையும் தன்னுடன் இணைத்துக்கொள்கிறது. (இந்த நொய்யல் ஆற்றில்தான் கடந்த 2017-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அலை அலையாக நுரைபொங்கி ஓடிய சம்பவம் பொதுமக்களிடையே மிகப்பெரும் அச்சத்தை உண்டாக்கியது. இதுகுறித்துப் பேசிய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி. கருப்பணன், “கடந்த சில ஆண்டுகளாக நொய்யலில்  நிலவிய வறட்சியின் காரணமாக, கோவை பகுதிகளில் தேங்கிய சாக்கடைக் கழிவுகள், தற்போதைய மழை வெள்ளத்தில் அடித்துவரப்பட்டு நொய்யலில் நுரை பொங்கியதே தவிர, சாயப்பட்டறை ஆலைகளில் இருந்து யாரும் கழிவுகளைக் கலக்க விட்டதாகத் தெரியவில்லை” என்று விளக்கம் அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது). அதன்பின்பு, கரூர் அருகே கட்டளை என்னுமிடத்தில் அமராவதி ஆறும், காவிரியுடன் கலக்கிறது. 

நொய்யலில் நுரை

கரூர், திருச்சி மாவட்டங்களில் காவிரி விரிந்துசெல்வதால் அகண்ட காவிரி என்று பெயர்பெற்றது. அடுத்து முசிறி, குளித்தலையைத் தாண்டிச் செல்லும் காவிரி, முக்கொம்பு என்னுமிடத்தில் மேலணையை அடைந்து இரண்டு கிளைகளாகப் பிரிகிறது. ஒருகிளைக்கு ‘கொள்ளிடம்’ என்றும், (வெள்ளப்பெருக்கின்போது மிகையாகப் பெருக்கெடுக்கும் நீரைத் திருப்பிவிட்டு அந்நீர் கொள்ளுமிடம் என்பதால் அது கொள்ளிடம்)  மற்றொன்றுக்கு ‘காவிரி’ என்றும் பெயர். கொள்ளிடம் செல்லும் பாதை காவிரியின் வெள்ள வடிகாலாக இருப்பதால் பெரும்பாலும் வறண்டே காணப்படும். கொள்ளிடம், காவிரிக்கு நடுவே ஸ்ரீரங்கம் தீவை உருவாக்கி, பின் பழைமையான கல்லணையை அடைகிறது. கல்லணையில் இருந்து செல்லும் காவிரி பல சிறுகிளைகளாகப் பிரிந்து அரசலாறு, வெண்ணாறு, வெட்டாறு, புதுஆறு, மன்னியாறு ஆகிய பெயர்களில் ஓடுகின்றன. பிறகு, தமிழகத்தின் நெற்களஞ்சியமான காவிரி டெல்டாவை உருவாக்கி தஞ்சாவூர், புதுச்சேரி, காரைக்கால், திருவாரூர், நாகப்பட்டினம் வழியாகச் சென்று இறுதியாகப் பூம்புகார் என்னுமிடத்தில் வங்கக்கடலில் கலக்கிறது. 

வெள்ளச் சேதம் குறித்த கல்வெட்டு!

தலைக்காவிரியில் உருவாகும் காவிரி எந்தவொரு தங்குத்தடையும் இன்றி, மழைக்காலங்களில் அடிக்கடி வெள்ளப் பெருக்கெடுத்து ஓடி, சோழ நாட்டுக்குள் புகுந்து பேரழிவை ஏற்படுத்தியது. இதனால் மக்கள் மிகுந்த துயரத்துக்குள்ளாகினர். காவிரியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் தமிழகம் பலமுறை அழிவைச் சந்தித்திருக்கிறது. குறிப்பாக, திருச்சி உறையூர் பகுதி கடுமையான பேரழிவைச் சந்தித்தது. கி.பி. 1118 -1135-ல் இந்தப் பகுதியில் விக்கிரமச்சோழன் ஆட்சி நடைபெற்றபோது, அப்போது ஏற்பட்ட இழப்புகள் குறித்து முந்தைய வட ஆற்காடு மாவட்டத்தின் திருவோத்தூர் வேதபுரீஸ்வரர் கோயில் கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ளது. இதேபோல், கி.பி. 9 - 10-ம் நூற்றாண்டுகளில் முதலாம் பராந்தகச் சோழன் ஆட்சி நடைபெற்றபோது, உறையூரை வெள்ளம் சூழ்ந்து பேரிழப்புகளை ஏற்படுத்தியது. அதுதொடர்பான சேதம் குறித்து அல்லூர் கோயில் கல்வெட்டு தெரிவிக்கிறது. ஒருகட்டத்தில், இப்படித் தொடர் பாதிப்புக்குள்ளான மக்கள், தஞ்சை ஆட்சியரிடம் கோரிக்கை வைத்தனர். அந்த மக்களின் கோரிக்கையை ஏற்று 1923-இல் அவர், மைசூரு சமஸ்தானத்துக்குக் கடிதம் அனுப்பினார். ஆண்டுதோறும் ரூ.30 லட்சம் இழப்பீடு கோரப்பட்டது. மைசூரு அரசும் இதனை ஏற்றுக்கொண்டதாக வரலாற்றில் சொல்லப்படுகிறது. ஆனால், இன்றைய நிலைமையோ தலைகீழ்.

மேட்டூர் அணை

கரிகாலன் கட்டிய கல்லணை!

இப்படி வீணாகக் கடலில் கலக்கும் இந்த நீரைத் தடுக்கும் வகையிலும், கோடைக்காலத்தில் தண்ணீர் இல்லாமல் வறண்டுபோய் மக்களுக்குக் குடிநீர்கூடக் கிடைக்கும் வகையிலும் ஓர் அணையைக் கட்டித் தமிழகத்துக்குச் சிறப்புச் சேர்த்தார், அன்றைய சோழப் பேரரசின் பெருவேந்தனாகத் திகழ்ந்த கரிகாற்சோழன். அவர் கட்டிய அந்த அணைதான் கல்லணை. மணல்படுகையில் 1,080 அடி நீளமும், 60 அடி அகலமும், 18 அடி உயரமும் கொண்ட இந்த அணை, பெரும் கற்களை ஒன்றின்மேல் ஒன்று அடுக்கிக் கட்டப்பட்டது. அதாவது, ஓடும் ஆற்று நீரில் கனமான கல் ஒன்றைப் போட்டால் அது, அங்கிருக்கும் மணலில் அப்படியே கிடக்கும். அப்படியான நிலையில், வேகமாய் ஓடும் ஆற்று நீரானது அந்தக் கல்லுக்குக் கீழுள்ள மணலையும் பறித்துக்கொண்டு ஓடும்போது, அந்த இடத்தில் மேலும் பள்ளம் ஏற்பட்டு அந்தக் கல் ஆழத்துக்குப் போகும். இப்படி அதன்மீது மேலும்மேலும் கற்களைப் போடும்போது முதலில் போட்ட கல்லானது இன்னும் ஆழத்துக்குப் போய்விடும். இப்படியாக அடுக்கப்பட்ட கற்களைக் கொண்டு கட்டமைக்கப்பட்டதே கல்லணை என வரலாற்றுச் சான்றுகள் சொல்கின்றன. அதாவது, சிமென்ட்டும், சுண்ணாம்புக் கலவையும் இல்லாமல் கி.பி. முதலாம் நூற்றாண்டில் இந்த அணை கட்டப்பட்டுள்ளது. என்றாலும் இன்றளவும், அணையின் கட்டுக்கோப்பு குன்றாமல் நீடித்து நிற்கிறது. இதன் கட்டுமான வேலைப்பாட்டினைக் கண்டு உலகம் முழுவதும் உள்ள கட்டுமானத் துறை வல்லுநர்கள் இன்றும் வியக்கிறார்கள்.

கல்லணை

உலகிலேயே மிகவும் பழைமை வாய்ந்த அணைகளில், தற்போதும் பயன்பாட்டிலுள்ள நான்காவது அணையாக (1.ஜோர்டான் நாட்டில் உள்ள ஜாவா அணை, 2. எகிப்து கெய்ரோவில் உள்ள சாத்தல் கபாரா, 3. ஏமன் நாட்டில் உள்ள கிரேட் டாம் அணை) கல்லணை விளங்குகிறது. இந்த அணை, மலைக்குன்றுகள் ஏதுமற்ற சமநிலத்தில், இயந்திரங்களின் உதவியின்றி கருங்கல் மற்றும் மண்ணைக் கொண்டு மனிதன் கட்டிய மிகப் பழைமையான அணையாக விளங்குவதுடன், சோழர்கால கட்டடக்கலைக்குச் சான்றாகத் திகழ்கிறது. இதை நீர்த்தேக்கம் என்று சொல்வதைவிடவும், நீரைக் கிளை பிரித்துவிடும் கலுங்கு முறை கொண்ட மதகு அணை என்று சொல்லலாம். அதன்மீதுதான் 19-ம் நூற்றாண்டில் பிரிட்டிஷ் பொறியாளர்கள் தற்போதைய கல்லணைக் கட்டுமானத்தை எழுப்பியுள்ளனர். 

இலக்கியத்தில் சிறப்பு!

 “இந்தத் தொழில் நுட்பம் அறிந்த தமிழ்நாட்டு வல்லுநர்களின் உதவியைக் கொண்டுதான் அந்தக் காலத்தில் நைல் நதியில் முதல் ஆசுவான் அணை கட்டப்பட்டது” என வளர்தமிழ் அறிஞர் முஸ்தபா கூறியிருக்கிறார். இந்த அணையைக் கட்டியதோடு மட்டும் கரிகாற்சோழன் சும்மா இருக்கவில்லை. சிங்களப் போர்க்கைதிகள் 12 ஆயிரம் பேரை அழைத்துவந்து காவிரிக்குக் கரை கட்டியுள்ளார். இதனால் அவர், காவிரி நாடன், பொன்னிவளவன் என்றெல்லாம் இலக்கியங்களில் போற்றப்பட்டுள்ளார். இவரை, பொன்னிக்கரை கண்ட பூபதி என்று ‘விக்கிரமச் சோழன் உலா’  நூல் குறிப்பிடுகிறது. இவரைத் தவிர சோழ அரசர்கள் பொன்னியின் செல்வர் என்றும், காவிரிக் காவலர்கள் என்றும் அழைக்கப்பட்டனர். 

கரிகாலன் காவிரிக்குக் கரை கட்டிய செய்தியினை, கலிங்கத்துப் பரணி, குலோத்துங்கச் சோழன் உலா, பிள்ளைத் தமிழ் ஆகிய நூல்கள் குறிப்பிடுகின்றன. சிங்களரின் மகாவம்சம் நூலிலும் இந்தத் தகவல் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.

காவிரி

“முழுகுல நதிக்கு
அரசர் முடிகொடு வகுத்த கரை
முகில்தொட அமைத்தது அறிவோம்” 

- என்று குலோத்துங்கச் சோழன் பிள்ளைத் தமிழும், 

“உச்சங்கோ ரெண்கோ லுயரம் பதினறுகோல்
எச்சம் பிரிவா யிருபதுகோல் - (த)ச்சளவு
மண்கொள்ளக் கொண்டகோ லெண்கோல் வளவர்கோன்
கண்கொள்ளக் கண்ட கரை”

- எனப் பெருந்தொகையும் கல்லணையின் சிறப்புகள் குறித்தும், கரிகாலனின் புகழ் குறித்தும் குறிப்பிடுகின்றன. 

 

காவிரி பாயும்...

https://www.vikatan.com/news/tamilnadu/124054-the-abandoned-story-of-cauvery-series-3.html

Link to comment
Share on other sites

வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட இளவரசன்! காவிரி கைவிரிக்கப்பட்ட கதை! அத்தியாயம் - 4

 
Chennai: 

ரிகாற்சோழனால் கல்லணை கட்டப்பட்டு, காவிரியில் கரை அமைக்கப்பட்ட பிறகு வளம் கொழிக்கும் பூமியாய் மாறியது தமிழகம். இதனால், ‘சோழவள நாடு சோறுடைத்து’ என்று விவசாய சாகுபடி, பார் போற்றுமளவுக்குப் பஞ்சமின்றிச் சிறந்து விளங்கியது. 

காவிரி

 

இந்தக் கட்டுரையின் முந்தைய அத்தியாயத்தைப் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்....

கல்லணை கட்டப்பட்டபோதே அங்கு உழவுத் தொழில் நடைபெற்று வந்ததை வரலாற்றுச் சான்றுகள் எடுத்துரைக்கின்றன. தொல்பொருள் ஆராய்ச்சியாளரான ராவ் என்பவர், “காவிரியின் தொன்மையைப் பார்த்தால், காவிரிப் பாசனப் பகுதியின் வேளாண்மை வரலாற்றுக்கு முந்தையது” என்று குறிப்பிடுகிறார். மேலும், அவர் நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இப்பகுதியில் மனித வாழ்வும், வேளாண்மையும் இருந்துள்ளன என்பதற்குச் சான்றுகளையும் தருகிறார். 

காவிரியும்... பட்டினப்பாலையும்!

காவிரியைப் பொறுத்தவரை, கடந்த காலத்தில் எந்த ஆண்டிலும் அது பொய்க்கவில்லை என்பதைப் பல இலக்கியங்கள் மூலம் நாம் உணர முடிகிறது. உண்மையைச் சொல்லப்போனால், தமிழின் இலக்கிய வரலாற்றில் காவிரியைப்போல வேறெந்த நதியும் பேசப்பட்டதில்லை. திரைப்படப் பாடல்களிலும், நாட்டுப்புறப் பாடல்களிலும் காவிரி பற்றி வர்ணிக்கப்பட்டுள்ளது. காவிரியின் செல்வவளம் பற்றி, “வெள்ளியாகிய விண்மீன் வட திசையிலிருந்து தென் திசைக்குச் சென்றாலும், வானம்பாடிப் பறவை மழைநீரை அருந்தப் பெறாமல் வருந்தும்நிலை தோன்றினாலும் மலைத் தலைய கடற்காவிரி புனலாகப் பொன்னாகக் கொழிக்கச் செய்யும்” என்கிறது பட்டினப்பாலை நூல். மேலும், “முற்றத்தில் காய்ந்துகொண்டிருக்கும் நெல் மணிகளைத் தின்னவரும் கோழிகளை விரட்ட, அங்குள்ள பெண்கள் தங்கள் காதுகளில் இருக்கும் பொன் நகைகளைக் கழற்றி வீசுவார்கள்” என்கிறது பட்டினப்பாலை. கோழிகளை விரட்டுவதற்கு தங்க நகைகளைக் கழற்றி வீசும் அளவுக்கு மக்களிடம் காவிரிப் பாசனத்தின் மூலம் கிடைத்த செல்வவளம் கொழித்திருந்ததாக இதன்மூலம் தெரிய வருகிறது. 

கல்லணை

காவிரியும்... சிலப்பதிகாரமும்!

அதேபோல், “துன்பமான காலங்களிலும் நாட்டைக் காக்கும் காவிரி” என்று சிலப்பதிகாரமும், “தடையின்றி வரும் காவிரி” என்று மணிமேகலையும் காவிரியின் வளம் பற்றி எடுத்தியம்புகின்றன. கோவலனும், மாதவியும் யாழிசைத்துக் காவிரியையும் கடலையும் நோக்கிப் பாடும் பாடல்கள் இந்திய இலக்கியத்தில் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். அதே சிலப்பதிகாரத்தில், கோவலனும், கண்ணகியும் மதுரை நோக்கிச் செல்லும்போது அவர்களுக்கு நேரப்போகிற துன்பத்தை உற்றறிந்த வையை என்னும் பொய்யாக்குலக்கொடி, “அவர்களுடைய துன்பத்தைக் காணமாட்டேன்” என்று மலர்களால் தன் கண்களை மூடிக்கொண்டு ஓடியதாக இளங்கோவடிகள் வர்ணித்துள்ளார். 

மேலும், திருஞானசம்பந்தரும், தொண்டரடிப் பொடியாழ்வாரும், சுந்தரமூர்த்தி நாயனாரும் காவிரியைப் பற்றிப் புகழ்ந்து பாடியுள்ளனர். மகாகவி பாரதியாரோ, “கங்கை நதிப் புறத்து கோதுமைப் பண்டம் காவிரி வெற்றிலைக்கு மாறுகொள்ளுவோம்” என்று பாடுகிறார். இப்படிச் செய்யுள்கள், கவிதைகள் மட்டுமின்றி கதைகளிலும், நாவல்களிலும்கூடக் காவிரி நதியைப் பற்றிய சிறப்பம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட இளவரசன்! 

ஒருகாலத்தில் பூம்புகாரை வந்தடையும் காவிரிக்கரையில், ஆண்டுதோறும் வெள்ளம் வருகிறபோது, அங்குள்ள ஆடவரும், பெண்டிரும் ஆடிப்பாடி மகிழ்வார்களாம். இதைக் காண்பதற்காகவே மக்கள் கூட்டம் அதிகமிருக்கும். இந்தப் புதுப்புனல் ஆட்டம் குறித்து பாரதி, “அவர் கன்னியராகி நிலவினில் ஆடிக் களித்ததும் இந்நாடே - தங்கள் பொன்னுடல் இன்புற நீர் விளையாடில் போந்ததும் இந்நாடே” என்று பாடுகிறார். 

காவிரிப் பாசனம்

இப்படி ஒருமுறை பூம்புகார் காவிரிக்கரையில் நடந்த புதுப்புனல் விளையாட்டில் பங்கேற்பதற்காக ஆட்டனத்தி என்ற சேர நாட்டு இளவரசன் வருகிறான். அவனுடைய ஆடற்கலையில் வசப்பட்ட சோழ நாட்டு இளவரசி ஆதிமந்தி, அவனுடன் போட்டிபோட்டுக்கொண்டு காவிரிக்கரையில் ஆடி மகிழ்கிறாள். காவிரித் தண்ணீரில் விளையாடியபோது, ஆற்றின் ஆழம் தெரியாமல் இறங்கிய ஆட்டனத்தியை, தண்ணீர் வந்த வேகத்தில் ஆழத்துக்கு இழுத்துச் சென்றுவிடுகிறது. ஆட்டனத்தி திடீரென்று மாயமானதால், அவரைக் காணாமல் இளவரசி ஆதிமந்தி அழுது புலம்பியதாக இலக்கியச் சான்றுகள் குறிப்பிடுகின்றன. அந்தளவுக்கு, காவிரியில் நீர் பெருக்கெடுத்து ஓடியதும், அதன்மூலம் காவிரிக் கரையோரப் பகுதிகள் அனைத்தும் செல்வச் செழிப்புடன் இருந்ததும் இலக்கியங்கள் சொல்லும் விஷயம் என்பது நமக்குப் புலனாகிறது.   

‘ஆட்டம்போட்டது போதும்!’  

இப்படி இலக்கியங்களில் புகழப்பட்டிருக்கும் காவிரி, அன்று எப்படியிருந்தது என்று மூத்த விவசாயி ஒருவரிடம் பேசினோம். “தண்ணீரின் முக்கியத்துவம் உணர்ந்துதான் எங்கள் மண்ணின் வளம் கொழிக்க அன்றே கரிகாற்சோழன் காவிரிக்காகக் கல்லணையைக் கட்டிச் சென்றான்... நீர்ப்பாசனத்துக்கான வழியை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே காட்டிச் சென்றான். அதனால்தான் காவிரி பாய்ந்து சென்ற பகுதிகள் எல்லாம் பச்சைப் பசேலென்று காட்சியளித்தன. அந்தப் பசுமைக்கு முக்கியத்துவம் கொடுத்துதான் அந்தக் கால இலக்கியங்களும் காவிரி ஓடிய பகுதிகளைப் புகழ்ந்து தள்ளின. அதற்குக் காரணம், இயற்கை எழிலையும், பசுமையையும் கொண்டிருந்தது எங்கள் மண். சில்லென்று வீசும் காற்றுடன் ஆற்றங்கரையோர பள்ளிக்கூடம்... அழகான வீட்டைச் சுற்றி அமைந்த பசுமையான வயல்வெளி... ஆனந்தமாய்க் குதித்து மகிழும் ஆற்றுக் குளியல்... ‘ஆட்டம்போட்டது போதும்’  என்று சத்தமிடும் பெருசுகள்... அயிரை மீன் குழம்புடனும், அனைத்து வகையான காய்கறிகளுடனும்  தலைவாழை இலை சாப்பாடு என அனைத்தும் எங்கள் பகுதிகளில் விடுமுறை நாளின்போது களைகட்டும். 

காவிரி

“அஃது அனைத்தும் இன்றில்லை!”

ஒவ்வொரு வருடமும் ஜூன் மாதம் பிறக்கும்போதெல்லாம்... ‘மேட்டூர் அணையில் தண்ணீர் திறக்கப் போகிறார்கள்’  எனும் செய்தி கேட்டதுமே... அக்கம்பக்கத்து உறவினர்களும், நண்பர்களும் ஒரு கூட்டமாகத் தண்ணீர் வரும் திசையைப் பார்த்து ஆற்றங்கரையில் கூடி நிற்கும் அழகே ஒரு தனி அழகு. அந்த நீரைக் கண்ட கணப்பொழுதில், அங்கு கூடியிருக்கும் அனைவருக்கும் எத்தனையோ கனவுகள், எத்தனையோ எதிர்பார்ப்புகள் அரங்கேறும். தண்ணீர் வந்த சில நாள்களில் எல்லோரும் அக்கரையில் உள்ள வயல்களுக்கு ஆற்றைக் கடந்து மாட்டை ஓட்டிச் சென்று வயலில் உழ ஆரம்பித்து விடுவார்கள். பெரியவர்கள் விவசாய வேலையில் தீவிரமாய் இறங்கிவிட, இளம்பருவத்தினரோ தூண்டில் போட்டு மீன் பிடிப்பார்கள்; துறுதுறுவென தண்ணீரில் துள்ளிக்குதித்து விளையாடுவார்கள். வேலையாள்களுக்கு டீயும், பன்னும் வாங்கிக்கொண்டு செல்லும் தாத்தாக்களுடன் வயல்வெளிக்குப் பயணிக்கும் பேரக்குழந்தைகளும், ‘எனக்கும் அதையும் இதையும் வாங்கித் தா’ என்று அடம்பிடிப்பார்கள். இப்படியான சூழ்நிலையில் விளையும் நெற்பயிர்களும் அவர்களுடைய எதிர்பார்ப்பைப் பூர்த்திசெய்யும் வகையில், பருவப் பெண்ணைப்போல் வெட்கமிட்டுத் தலைகவிழ்ந்து நிற்கும். அறுவடைக்குப் பிறகு அனைத்து வீடுகளும் சந்தோஷத்தில் திளைக்கும். ஆனால், அஃது அனைத்தும் இன்றில்லை. இதுபோல் வாழ்ந்த அனுபவங்கள்கூட இனி மூன்றாம் தலைமுறையினருக்குத் தெரியும்படி இருக்காது” என்றார் சற்றே வேதனையுடன்.

காவிரி பாயும்...

https://www.vikatan.com/news/tamilnadu/124330-the-abandoned-story-of-cauvery-series-4.html

Link to comment
Share on other sites

புஷ்கர விழாவில் புனித நீராடிய எடப்பாடி! காவிரி கைவிரிக்கப்பட்ட கதை! அத்தியாயம் - 5

 
 
Chennai: 

காவிரி பற்றிப் பாடிய நூல்களும் ஏராளம்; அதன் கரையில் வாழ்ந்த புலவர்களும் ஏராளம். இப்படி இலக்கியங்களிலும், புராணங்களிலும் போற்றிப் புகழப்பட்ட காவிரி, கவேரர் என்ற மகரிஷிக்கு மகளாக இருந்ததாகவும், அதன் பின்னர் அகத்தியருக்கு மனைவியாக வாழ்ந்ததாகவும் புராணக்கதைகள் உண்டு.

காவிரி

 

இந்தக் கட்டுரையின் முந்தைய அத்தியாயத்தைப் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்...

கவேரரின் மகள்!

கவேரர் என்ற மகரிஷி, தனக்கொரு மகள் வேண்டும் என்று பிரம்மனை நோக்கித் தவம் புரிந்தார். அவர் முன் ஒரு பெண் குழந்தையோடு பிரம்மா தோன்றி, “முனிவர்களில் சிறந்தவனே! முன்பு நான் தவம் செய்தபோது விஷ்ணுமாயாவின் அருளால் எனக்கு மானச புத்திரியாக இவள் தோன்றினாள். இவளுக்குப் பெண்ணுருவம், நதியுருவம் என இரண்டு உருவங்கள் உண்டு. இவளை இப்போது உனக்கு அளிக்கிறேன்” எனக் கூறி, அந்தக் குழந்தையைக் கவேரர் மகரிஷியிடம் ஒப்படைத்துவிட்டு மறைந்தார். மகள் கிடைத்ததால் மகிழ்ச்சியடைந்த கவேரர், அவளுக்கு லோபாமுத்திரை எனப் பெயர் சூட்டினார். அவள் வளர்ந்து, மங்கைப் பருவம் அடைந்தாள். பெற்றோரின் அனுமதியுடன் சிவபெருமானை எண்ணிக் கடுந்தவம் செய்தாள். அவளின் தவத்தினால் காட்சி தந்த சிவபெருமானிடம், “நான் நதிவடிவம் எடுத்து பூமியை வளப்படுத்த வேண்டும்” என்று வரம் கேட்டாள்.

காவிரி

அகத்தியருடன் திருமணம்!

அதற்கு சிவபெருமானும், “பெண்ணே, நீ கங்கையினும் புனிதமாவாய், ‘காவிரி’ என்று அழைக்கப் பெறுவாய். நீ நதிரூபம் அடைந்து பூமியை வளப்படுத்தினாலும், உனது அம்சம் லோபாமுத்திரை என்ற பெயரிலேயே இருக்கும். முனிவர்களில் சிறந்தவராகிய அகத்தியரை மணம் செய்வாய்” என்று வரம் தந்தருளினார். அதன்படி, அகத்தியருக்கும் லோபாமுத்திரைக்கும் திருமணம் நடைபெற்றது. இருவரும் காசி க்ஷேத்திரத்துக்குச் சென்று, சிவபூஜை செய்தபடி, இனிதே இல்லறம் நடத்திவந்தனர். அவளின் நதிரூபத்தைத் தன்னுடைய கமண்டலத்தில் வசிக்கும்படி செய்தார் அகத்தியர். பிறகு, பரமேஸ்வரரின் ஆணைப்படி, அவர்கள் தென்னகம் வந்தனர். இந்நாளில் குடகுமலை என்று சொல்லப்படும் இடம், அந்தக் காலத்தில் சையமலை எனப்பட்டது; இதனைப் பிரம்மகிரி என்றும் கூறுவர். அங்கு, சில காலம் தங்கியிருந்து சிவபூஜை செய்து மகிழ்ந்தனர் அகத்தியர் தம்பதி. சிவபெருமான் வரத்தின்படி, காவிரியாள் பூமியில் பெருக்கெடுத்து ஓடி, உலகை வளப்படுத்தும் காலம் கனிந்தது.

சோழநாட்டின் குலக்கொடி! 

ஒருநாள், நெல்லி மரத்தடியில் தன்னுடைய கமண்டலத்தை வைத்துவிட்டுத் தவத்தில் ஆழ்ந்திருந்தார் அகத்தியர். இந்த நிலையில், விநாயகரிடம் சென்ற இந்திரன் முதலான தேவர்கள், காவிரியைப் பூமியில் பெருகியோடச் செய்யும்படி வேண்டினர். அவரும் காக்கை வடிவம் கொண்டு, அகத்தியரின் கமண்டலத்தைக் கவிழ்த்து, காவிரியைப் பெருக்கெடுத்து ஓடச் செய்தார். ஆனால், காவிரியான லோபாமுத்திரையோ நெல்லி மரத்தடியைச் சுற்றிச்சுற்றி வந்து, தான் பாய வேண்டிய திசை புரியாது நின்றாள். கண்விழித்த அகத்தியர், காக்கை வடிவில் விநாயகர் வந்து கமண்டலத்தைக் கவிழ்த்ததை உணர்ந்து வருந்தினார். ஆனாலும், இறைவன் திருவுளப்படியே அனைத்தும் நடைபெறுகிறது என மனதைத் தேற்றிக்கொண்டவர், காவிரிக்கு வழிகாட்டியபடி நடக்கத் தொடங்கினார். அவரைத் தொடர்ந்து ஓடிய காவிரி, பல இடங்களை வளப்படுத்திய பின்பு கடலில் கலந்தாள். அன்றுமுதல், சோழநாட்டின் குலக்கொடியானாள் காவிரி.

காவிரி

காந்தமன் என்ற சோழ மன்னன் அகத்திய முனிவரிடம் கேட்டதற்கிணங்க காவிரி ஓடியதாகப் புராணங்கள் கூறுகின்றன. இதுகுறித்து மணிமேகலை காப்பியத்தில், 

“செங்கதிர்ச் செல்வன் திருக்குலம் விளக்கும்
கஞ்சவேட்கையிற் ‘காந்தமன்’ வேண்ட
அமரமுனிவன் அகத்தியன் தனது
கரகம் கவிழ்த்த காவிரிப்பாவை
பொங்கு நீர்பரப்பப் பொருந்தித்தோன்ற...”
என்று பாடப்பெற்றுள்ளது. 

புஷ்கர விழா!

இப்படி வற்றாத ஜீவநதியாய் ஓடிய காவிரி, ஆண்டுதோறும் ஆடி மாதம் 18-ம் தேதியன்று ஒவ்வொரு வீட்டுக்கும் வருகிறாள் என்பது நம்பிக்கை. அன்று காவிரியை, டெல்டா மாவட்டங்களைச் சேர்ந்த பெண்கள் சிறப்புற வணங்கி மகிழ்வர். அதேபோல், காவிரியில் புஷ்கர விழாவும் கொண்டாடப்படுகிறது. 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை வருவது புஷ்கர விழாவாகும். 144 ஆண்டுகளுக்கு ஒருமுறை வருவது மகா புஷ்கர விழாவாகும். புஷ்கரம் என்பது நதிகளுக்கே உரித்தான விழாவாகும். கங்கை, நர்மதை, சரஸ்வதி, யமுனை, கோதாவரி, கிருஷ்ணா, காவிரி, தாமிரபரணி, பிரம்மபுத்ரா, துங்கபத்ரா, சிந்து, பிராணஹிதா உள்ளிட்ட 12 நதிகளிலும் புஷ்கர விழா கொண்டாடப்படுகிறது.

புஷ்கர விழாவில் புனித நீராடிய எடப்பாடி!

பஞ்சாங்கங்களில் புஷ்கர காலம் பற்றிக் குறிப்பிடப்பட்டிருக்கும். ஒவ்வோர் ஆண்டுக்கும் தொடர்புடைய நதி என்பதை குரு (வியாழன், பிரகஸ்பதி) அந்தக் காலகட்டத்தில், எந்த ராசியில் உள்ளார் என்பதைப் பொறுத்து, குறிப்பிட்ட கால அளவுவரை புஷ்கரம் நடைபெறும். புஷ்கர காலத்தில் பிரம்மா, விஷ்ணு, சிவன், இந்திரன் ஆகியோர் ஒருசேர இருந்து அருள்பாலிக்கின்றனர் என்பது ஐதீகம். 2017-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் (12 முதல் 24-ம் தேதி வரை) குரு பகவான் துலாம் ராசியைக் கடந்தபோது காவிரி மகா புஷ்கர விழா கொண்டாடப்பட்டது.

காவிரி மகா புஷ்கர விழாவில் எடப்பாடி பழனிசாமி நீராடியபோது

அந்தக் காலகட்டத்தில் மக்கள் நதிகளில் நீராடி, தங்களின் முன்னோர்களுக்கு திதி கொடுப்பர். கடந்த ஆண்டு நடைபெற்ற காவிரி மகா புஷ்கர விழாவில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று நீராடினார். 2017 செப்டம்பர் 20-ம் தேதி காலை 10 மணிக்கு மயிலாடுதுறை துலாக்கட்ட காவிரியில் அவர் புனித நீராடினார். முதல்வரின் வருகைக்காக, மேட்டூர் அணையில் இருந்து காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்துவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதுதவிர, ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் 30 நாள்களும் மயிலாடுதுறை காவிரிக் கரையில் துலாக்கட்டத்தில் நீராடல் நடைபெறும். அந்தச் சமயத்தில் கங்கை நதி, காவிரியில் கலப்பதாகவும், கங்கையில் குளிப்பவர்கள் கரைத்த பாவத்தைக் காவிரியில் கலந்து போக்கிக்கொள்வதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

கங்கையைவிடவும் புனிதமானது! 

ஒருமுறை கண்வ மகரிஷியிடம் கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய மூன்று நதிகளும் பெண் வடிவம் எடுத்துவந்து, “இந்திய மக்கள் அனைவரும் தங்களுடைய பாவமூட்டைகளைச் சுமந்துவந்து எங்களிடம் மூழ்கிக் கரைத்துப் போகின்றனர். அதனால், நாங்கள் கருமை அடைந்துவிட்டோம். எங்கள் பாவங்கள் போக வழி செய்ய வேண்டும் என்று முறையிட்டனவாம். அதற்குக் கண்வ முனிவர், “ஐப்பசி மாதம் மயிலாடுதுறை காவிரியில் துலாக்கட்டத்தில் நீராடினால், பரிகாரம் கிடைக்கும்” என்றாராம். இதன்மூலம் கங்கையை விடவும் காவிரி ஆறு மிகவும் புனிதமானது என்பது புலப்படுகிறது. 

மேலும் காவிரி, கங்கையை விடவும் புனிதமானது என்பதை விளக்கும் வகையிலான கருத்து தொண்டரடிப் பொடியாழ்வாருக்கும் உண்டு. அதனால், “கங்கையிற் புனிதமாய காவிரி நடுவுப் பாட்டுப் பொங்குநீர் பரந்து பாயும் பூம்பொழில் அரங்கம்” என்கிறார் அவர். காவிரியில் அம்பிகை மயிலாய் வந்து பூஜை செய்த நிகழ்வை பரஞ்ஜோதி முனிவர், 

“மதிநுதல் இமயச்செல்வி மஞ்சையாய் வழிபட்டு ஏத்தும்
துலாப் பொன்னித் தானம்”
 என்று குறிப்பிடுகிறார்.

“கங்கையில் பல தினங்கள் நீராடிய புண்ணியம், மயிலாடுதுறையில் துலாக்கட்ட காவிரியில் நீராடுவதால் கிடைக்கும்” என்கிறது காவிரி மஹாத்மியம் என்னும் நூல். 

காவிரி பாயும்...

https://www.vikatan.com/news/tamilnadu/124532-the-abandoned-story-of-cauvery-series-5.html

Link to comment
Share on other sites

மைசூரு அரசின் முதல் துரோகம்! காவிரி கைவிரிக்கப்பட்ட கதை! அத்தியாயம் - 6

 
 
Chennai: 

சோழவள நாட்டைச் சொர்க்கபூமியாக மாற்றிய காவிரி, அந்தக் காலத்திலேயே நீரால் சுருங்கிப்போன நிகழ்வும் உண்டு; அதன் காரணமாகத் தமிழகம் பஞ்சத்தில் பரிதவித்த கதையும் உண்டு. காவிரியில், ஒருகாலத்தில் நீர் சுருங்கியதால் பஞ்சம் ஏற்பட்டதாகவும், அதற்காகக் கோயில் சொத்தைச் சூறையாடியதாகவும் ராஜராஜ சோழனின் 24-ம் ஆட்சியாண்டின் கல்வெட்டு குறிப்பிடுகிறது.

காவிரி

 

இந்தக் கட்டுரையின் முந்தைய அத்தியாயத்தைப் படிக்க இங்கு க்ளிக் செய்யவும்...

சீரமைப்புப் பணிகள் தொடக்கம்!

காவிரியில் அன்று ஏற்பட்ட பஞ்சம் இன்றும் தொடர்ந்துகொண்டிருக்கிறது; பல்வேறு துயரங்களுக்கு ஆளாக்கிக் கொண்டிருக்கிறது. இது, மன்னர்கள் காலந்தொட்டே நீடிக்கிறது என்று முதல் அத்தியாயத்திலேயே படித்தோம். அதேபோல காவிரி நீரை மையமாக வைத்து மைசூரு - மதுரை மன்னர்களிடையே பல யுத்தங்கள் நடந்ததற்கும், ஏராளமான குளங்கள் மற்றும் நீர்நிலைகள் சேதப்படுத்தப்பட்டதற்கும் ஆதாரங்கள் உள்ளன. அவ்வாறு சிதிலமடைந்த குளங்களையும், நீர்நிலைகளையும் சீரமைக்கத் தொடங்கினார் அப்போதைய மைசூரு திவான் பூர்ணையா. 

முதல்கட்டமாக மைசூருவில் 1807-ம் ஆண்டு தொடங்கிய இந்தச் சீரமைப்புப் பணிகள், அதன்பிறகு காவிரிக் கரையோரப் பகுதிகளில் நடைபெற்றன. இதனால், தமிழகத்துக்கு வரும் காவிரி நீர் குறைந்து போய்விடும் என்று கருதிய சோழநாட்டு விவசாயிகள், தங்கள் ஆதங்கத்தை மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்டனர். அவர்களுடைய உணர்வுகளைப் புரிந்துகொண்ட ஆட்சியர், மைசூருக்குச் சென்று அங்கு நடைபெற்று வரும் பணிகளைப் பார்த்து வருவதற்காக ஓர் அதிகாரியை நியமித்தார். அங்கு சென்று அப்பணிகளைப் பார்வையிட்ட அந்த அதிகாரி, “யுத்தத்தால் சிதைந்த குளங்களும், குட்டைகளும்தான் மறுசீரமைக்கப்படுகின்றனவே தவிர, வெறெந்த ஆக்கிரமிப்போ, தடையோ ஏற்படுத்தவில்லை” என்று விளக்கம் கொடுத்தார்.

காவிரி

‘மைசூரு பெருந்திட்டம்’! 

கால மாற்றத்தினால் 1831-ம் ஆண்டு மன்னர் ஆட்சியின்கீழ் இருந்த மைசூரு சாம்ராஜ்யம், பிரிட்டிஷாரின் கைக்குச் சென்றது. மைசூரின் வளர்ச்சிக்காக, ‘மைசூரு பெருந்திட்டம்’ என்ற பெயரில் சில சிறப்புத் திட்டங்களைக் கர்னல் ஆர்.ஜே.சான்கி என்பவர் உருவாக்கினார். குறிப்பாக, மைசூரில் வருடந்தோறும் கிடைக்கும் மழைநீரை முழுமையாகப் பயன்படுத்த ஏதுவாக நீர்ப்பாசனத் திட்டங்களை உருவாக்கினார். அப்படி, அவர் வகுத்துக் கொடுத்த திட்டங்களுக்கு அனுமதியும் வழங்கப்பட்டது. “அந்தத் திட்டங்கள் செயல்வடிவம் பெறும்பட்சத்தில் தமிழக டெல்டா மாவட்ட விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள் என்றும், அவர்களுடைய நெல் சாகுபடியும் பாதிக்கப்படும்” என்றும் சென்னை அரசுப் பொறியாளர்கள் எச்சரிக்கை விடுத்தனர். ஆனால், எதையும் கவனத்தில்கொள்ளாத மைசூரு அரசாங்கம், அந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவதில் முழுக் கவனம் செலுத்தத் தொடங்கியது. 1877-ம் ஆண்டு, பணிகள் முழுவீச்சில் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, மைசூரைப் பஞ்சம் தாக்கியது. ஆம், அது காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகளின் கண்ணீராகக்கூட இருக்கலாம்.

முதல் பேச்சுவார்த்தை!

பஞ்சத்தால் நிதிப் பற்றாக்குறை ஏற்பட, அந்தத் திட்டம் பாதியிலேயே நின்றுபோனது. பஞ்சத்துக்குப் பிறகு மைசூரு ஆட்சியில் மாற்றம் ஏற்பட்டது. மைசூரு சமஸ்தானத்தில் ஆங்கிலேயர்கள் தங்களின் பிரதிநிதி ஒருவரை நியமித்து, மைசூரை ஆங்கிலேய மன்னரிடம் ஒப்படைத்தனர். எனினும், காவிரிப் பிரச்னை நீறுபூத்த நெருப்பாகப் புகைந்துகொண்டே இருந்தது. இந்த நிலையில், 1890-ம் ஆண்டு சென்னை ராஜதானி அரசு சார்பிலும், மைசூரு சமஸ்தான அரசு சார்பிலும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. 

காவிரி

ஹெச்.ஈ.ஸ்டோக்ஸ், ஜி.டி.வால்க் ஆகியோர் சென்னை ராஜதானி சார்பிலும், ஆலிவர் செயின்ட் ஜான், திவான் சேஷாத்ரி அய்யர், கர்னல் போவன் ஆகியோர் மைசூரு சமஸ்தானம் சார்பிலும் அந்தப் பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டனர். “காவிரி நீரில் எங்களுக்கு இருக்கிற உரிமையின் அடிப்படையில்தான் எங்களுக்கான நீர்ப்பாசனத் திட்டங்களை உருவாக்குகிறோம்” என்ற வாதத்தை மைசூரு சமஸ்தானம் முன்வைத்தது. இதை நிராகரித்த சென்னை ராஜதானி அரசு, “தஞ்சாவூர் கழிமுகத்தில் கிறிஸ்து சகாப்தத்துக்கு முன்னதாகவே பண்டைய சோழ மன்னர்கள் காவிரியில் அமைத்திருந்த உன்னதமான நீர்ப்பாசனம் தொடங்கியே இந்தப் பகுதியில் உள்ள விவசாயிகள் உரிமை பெற்று அனுபவித்து வந்தனர்” என்று பதிலளித்தது. இதனால் இருதரப்பு பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது. பின்பு, அதே பிரச்னைக்காக மீண்டும் இரு அரசுகளும் 1891-ல் பேச்சுவார்த்தை நடத்தின. அதிலும் தோல்வி ஏற்பட, இறுதியாக 1892-இல் இரண்டு அரசுகளுக்கிடையேயும் ஓர் ஒப்பந்தம் கையெழுத்தானது.

1892-ம் ஆண்டு ஒப்பந்தம்!

‘மைசூர் அரசின் பாசனப் பணிகள் - சென்னை - மைசூர் ஒப்பந்தம்-1892’ என்ற பெயரில் உருவான அந்த ஒப்பந்தத்தில், மைசூரு சமஸ்தானத்தின் முதன்மையான ஆறுகள் துங்கபத்ரா, துங்கா, பத்ரா, ஹகரி அல்லது வேதவதி, பெண்ணாறு அல்லது வட பினாகினி, சித்திராவதி, பாபக்னி, பாலாறு, பெண்ணாறு அல்லது தெற்குப் பினாகினி, காவிரி, ஏமாவதி, லட்சுமண தீர்த்தம், கபினி, சுவர்ணவதி, யகாதி (பேலூர்ப் பாலம் வரை) A பிரிவிலும், துணையாறுகள் B பிரிவிலும், சிறு ஓடைகளும், நீர்ப்பிடிப்புப் பகுதிகளும் C பிரிவிலும் இடம்பெற்றன. 

காவிரி

மேலும், ‘சென்னை அரசின் ஒப்புதல் இல்லாமல் மைசூரு அரசு A பிரிவில் உள்ள ஆறுகளில் அணைகள் கட்டக்கூடாது என்றும், B மற்றும் C பிரிவுகளில் உள்ள ஆறுகளிலும், ஓடைகளிலும் அந்த அரசு தனது விருப்பம்போல் செயல்படலாம் என்றும், A பிரிவில் உள்ள ஆறுகளில் புதிய நீர்த்தேக்கமோ, அணைகளோ கட்ட விரும்பினால் மைசூரு அரசு சென்னை அரசுக்கு அதுகுறித்த திட்ட விவரங்களைத் தெரிவித்து ஒப்புதல் பெற வேண்டும்’ என்றும் அதில் சொல்லப்பட்டது. உலக நாடுகளில் பொருந்தி வரக்கூடியபடியே இந்த ஒப்பந்தம் போடப்பட்டிருந்தாலும் மைசூரு அரசுக்கு அது சாதகமானதாக இல்லை என்றே சொல்லப்பட்டது.

மைசூரு அரசின் முதல் துரோகம்! 

1892-ம் ஆண்டு ஒப்பந்தத்துக்குப் பின் இரு அரசுகளுக்கும் இடையே முதல் சிக்கல் எழுந்தது. அந்த ஒப்பந்தப்படி, சிவசமுத்திரம் நீர்மின் நிலையத்துக்காக 11 டி.எம்.சி. கொள்ளளவு நீர்த்தேக்கத்தைக் கட்ட மைசூரு அரசு, சென்னை அரசிடம் அனுமதி பெற்றது. ஆனால், 41 டி.எம்.சி. கொள்ளளவு நீர்த்தேக்கத்துக்கான அடித்தளத்தை அமைக்க அது திட்டமிட்டது. இந்தத் திட்டமே, தமிழகத்துக்கு மைசூரு அரசு செய்யும் முதல் துரோகமாகப் பார்க்கப்பட்டது. இதை எதிர்த்து சென்னை அரசாங்கம் முறையீடு செய்தது. 

காவிரி பாயும்....

https://www.vikatan.com/news/tamilnadu/124731-the-abandoned-story-of-cauvery-series-6.html

Link to comment
Share on other sites

மைசூருக்கு ஆதரவாகத் தீர்ப்பு வழங்கிய நீதிபதி... காவிரி கைவிரிக்கப்பட்ட கதை! அத்தியாயம் - 7

 
 
Chennai: 

மைசூரு சமஸ்தானம் 1892-ம் ஒப்பந்தத்தை மீறிச் செயல்பட ஆரம்பித்ததால், அதை எதிர்த்து அப்போதைய சென்னை மாகாண அரசு முறையீடு செய்தது. இரு அரசுக்குமிடையே ஏற்பட்ட காவிரிப் பிரச்னையைத் தீர்த்துவைப்பதற்காக அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி ஹென்றி க்ரிஃபின் என்பவர், கடந்த 1913-ம் ஆண்டு நியமிக்கப்பட்டார். இவருக்குத் துணையாகப் பிரிட்டிஷ் இந்திய அரசின் நீர்ப்பாசனத் துறை தலைமை ஆய்வாளர் நெதர்சோல் நியமிக்கப்பட்டார். காவிரி நதி நீர்ச் சிக்கலைத் தீர்ப்பதற்காக ஹென்றி க்ரிஃபின் தலைமையில்தான் முதல் தீர்ப்பாயம் அமைக்கப்பட்டது. அதன்பின்னர், இரண்டாவது தீர்ப்பாயம் 1991-ம் ஆண்டில் அமைக்கப்பட்டது. 

காவிரி

 

 

‘க்ரிஃபின் அவார்டு’! 

இருதரப்பு வாதங்களையும் விசாரித்த ஹென்றி க்ரிஃபின், 1914-ம் ஆண்டு மைசூரு அரசுக்கு ஆதரவாகத் தீர்ப்பு வழங்கினார். அது, ‘க்ரிஃபின் தீர்ப்பு’ (Griffin Award) என்று அழைக்கப்பட்டது. ``கண்ணம்பாடி அணையைக் கட்டுவதன் மூலம் 1892-ம் ஆண்டு ஒப்பந்தத்தின் வழியாகச் சென்னை மாகாண அரசுக்குக் கிடைத்த எவ்வித பிரத்யேகச் சட்ட உரிமைக்கும் குந்தகம் ஏற்படாது” என்று க்ரிஃபின் அந்தத் தீர்ப்பில் குறிப்பிட்டிருந்தார். சென்னை ராஜதானி பாசனத்துக்கான நீரின் தேவை 22,750 கன அடி என்கிற உச்சவரம்பையும் அவர் அதில் நிர்ணயித்தார். அதன்படி, 1892-ம் ஆண்டு ஒப்பந்தத்தின்படி, சென்னை மாகாணத்துக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்த நீர் உச்சவரம்பில் 4,000 கன அடியைக் குறைத்தது க்ரிஃபின் தீர்ப்பு என்பது குறிப்பிடத்தக்கது. 

மைசூருக்கு ஆதரவான தீர்ப்பு!

“மேலணையில் 7 அடி உயரமும், ஒரு நொடிக்கு 26,750 கன அடியும் தண்ணீர் வந்தால்தான் பழைய பாசனப் பகுதிகளைப் பாதுகாக்க முடியும்; அனுபவ பாத்தியதை உரிமைப்படி உள்ள அளவு தண்ணீரும் கிடைக்கும்” என்று சென்னை அரசு கூறியதுடன், அந்தத் தீர்ப்பையும் ஏற்க மறுத்தது. இந்தத் தீர்ப்புத் தேதியின்போது மைசூரு சமஸ்தானத்தின் விளைநிலப்பரப்பு 1,15,000 ஏக்கராகவும், சென்னை ராஜதானியின் விளைநிலப்பரப்பு 2,25,500 ஏக்கராகவும் இருந்தது. தீர்ப்பை எதிர்த்து சென்னை மாகாண அரசு மீண்டும் மத்திய அரசிடம் முறையீடு செய்தது. க்ரிஃபினின் தீர்ப்பை எவ்வித மாற்றமுமின்றி ஏற்றுக்கொள்வதாக 1916-இல் மத்திய அரசு அறிவித்ததுடன், “தீர்ப்பை மாற்றினால் மைசூருக்கு மிகப்பெரிய அநீதி இழைப்பது போலாகும்” என்று கருத்துச் சொன்னது. 

காவிரி

மீண்டும் பேச்சுவார்த்தை!

மீண்டும் மைசூருக்கு ஆதரவாகத் தீர்ப்பு வழங்கப்பட்டதைக் கண்டித்து, சென்னை அரசாங்கம் இங்கிலாந்தில் உள்ள அரசுத் துறைச் செயலாளரிடம் முறையீடு செய்தது. அதன்படி, சென்னை அரசின் மேல்முறையீட்டில் முதல் நோக்கு நியாயம் இருப்பதாக அறிவிக்கப்பட்டதுடன், 1919-ம் ஆண்டு மத்திய அரசின் தீர்ப்பு ரத்து செய்யப்பட்டது. மேலும், “இந்திய அமைச்சரின் முடிவை எதிர்த்து மேல்முறையீடு செய்யலாம்; புதிய தீர்ப்பாயத்தை அணுகலாம்; இரு அரசுகளும் பேச்சுவார்த்தை நடத்திப் புதிய உடன்பாட்டுக்கு வரலாம்” என்ற நிபந்தனைகளையும் விதித்தது. ஆனால், மைசூரு அரசோ, மூன்றாவது நிபந்தனையான பேச்சுவார்த்தைக்கு உடன்பட்டது. இதையடுத்து, நீர்ப் பங்கீடு தொடர்பாக இரு அரசுகளுக்கும் மீண்டும் பேச்சுவார்த்தை தொடங்கியது. முதல்கட்டமாக 1920-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்கிய பேச்சுவார்த்தையில், மைசூரு அரசு சார்பில் எஸ்.கடாம்பியும், சென்னை அரசு சார்பில் டபிள்யூ.ஜே.ஜே.ஹவ்லியும் பங்கேற்றனர். பேச்சுவார்த்தையின்போது பிரிட்டிஷ் இந்திய அரசின் நீர்ப்பாசனத் துறை தலைமை ஆய்வாளர் ஜே.ஆர்.ஜே.வார்டும் பங்கேற்றார். 

பாண்டிச்சேரி ஆளுநர்!

ஒருவழியாக, 1921-ம் ஆண்டு ஜூலை மாதம் இரு அரசுகளும் கண்ணம்பாடி அணை கட்டுவதற்குரிய வரைவு விதிகளையும், ஒழுங்குமுறைகளையும் இறுதி செய்தபோதிலும் அதிருப்தியே நிலவியது. இதனால் மீண்டும் பேச்சுவார்த்தை தொடங்கியது. இப்படித் தொடங்கிய பேச்சுவார்த்தை 1924-ம் ஆண்டுவரை நீடித்தது. இதில் கடிதப் பரிமாற்றங்களும் அடக்கம். குறிப்பாக, இந்தப் பேச்சுவார்த்தையின்போது, பாண்டிச்சேரி ஆளுநரும் களமிறங்கி, “சென்னை - மைசூரு இடையே கையெழுத்தாகும் ஒப்பந்தம் எந்த வகையிலும் காரைக்கால் விவசாயத்தைப் பாதித்துவிடக் கூடாது. ஆகவே, பாண்டிச்சேரியை சென்னை ராஜதானி கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும்” என்று கோரிக்கை வைத்தார். 

காவிரி

இறுதியில் 1924-ம் ஆண்டு பிப்ரவரி 18-ம் தேதி ஓர் ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தில் சென்னை அரசு சார்பில் ஹாக்கின்ஸும், மைசூரு அரசின் சார்பில் திவான் ஏ.ஆர்.பானர்ஜியும் கையெழுத்திட்டனர்.
 
மைசூரு திவான் பாராட்டு!

``இந்த ஒப்பந்தம் இருதரப்பும் விட்டுக்கொடுத்து உருவானது” என்றார், மைசூரு திவான் ஏ.ஆர்.பானர்ஜி. இந்த ஒப்பந்தம் குறித்து மேலும் அவர், ``தொழில்நுட்ப அதிகாரிகளைப் பொறுத்தவரை அவர்கள் பணி எளிதானதல்ல. வேறுபாடு கொண்ட அம்சங்கள் எண்ணிலடங்காதவை. பலகட்டங்களில் இருதரப்பினருக்கும் இடையே சமாதானம் வர முடியாது என்ற நிலை ஏற்பட்டதை ஒப்புக்கொள்ள வேண்டும். சென்னைத் தரப்பைச் சேர்ந்த ஹவ்லி, மோரின், ராமலிங்க ஐயர் மற்றும் மைசூரு தரப்பைச் சேர்ந்த கடாம்பி, கர்ப்பூர் சீனிவாச ராவ் ஆகியோர் வரலாற்றில் நிற்பார்கள். இவர்கள் விவரங்களை எடுத்துவைப்பதில் முதல் தரமான திறனும் பரந்துவிரிந்த அறிவும் பெற்றிருந்தனர். அதேசமயம், பேச்சுவார்த்தையில் கொடுத்து வாங்கும் உணர்ச்சி இவர்களிடம் மேலோங்கி இருந்தது. தங்கள் பகுதி மக்களின் நலனையும் செழிப்பையும் கைவிடும் வகையில் இவர்கள் யாரும் தங்கள் தரப்பின் அடிப்படை அம்சங்களை விட்டுவிடாமல் பேசினர்” என்று குறிப்பிட்டுள்ளார். 

- காவிரி பாயும்...

https://www.vikatan.com/news/tamilnadu/124958-the-abandoned-story-of-cauvery-series-7.html

Link to comment
Share on other sites

`1924 - காவிரி நதிநீர் ஒப்பந்தம்' சொல்வது என்ன? காவிரி கைவிரிக்கப்பட்ட கதை! அத்தியாயம் - 8

 
 
Chennai: 

ண்ணம்பாடி அணையை மையப்படுத்தி உருவாக்கப்பட்ட இந்த ஒப்பந்தத்தில் சென்னை அரசு தனது விளைநிலப் பரப்பை அதிகரித்துக் கொள்வதற்கான உரிமை பாதுகாக்கப்பட்டிருந்தது. 1892- ம் ஆண்டு ஒப்பந்தம் இந்த இரண்டு பகுதிகளுக்கிடையே ஓடும் பல்வேறு ஆறுகள் சம்பந்தப்பட்டது என்றால், 1924- ம் ஆண்டு ஒப்பந்தம் காவிரி ஆற்றுப்படுகையின் பாசன அபிவிருத்தியைப் பொறுத்து மட்டுமே தொடர்புடையதாகும். 1892, 1924 ஆகிய இரண்டு ஒப்பந்தங்களுமே காவிரியின் கடைமடை பகுதிக்குத் தண்ணீர் பாய்வதை உத்தரவாதப்படுத்துகின்றன.

காவிரி

 

இந்தக் கட்டுரையின் முந்தைய அத்தியாயத்தைப் படிக்க இங்கு க்ளிக் செய்யவும்...

1924- ம் ஆண்டு ஒப்பந்தத்தில், கீழ்க்கண்ட அம்சங்கள் இடம்பெற்றிருந்தன.

1. மைசூரு அரசு, 1.25 லட்சம் ஏக்கர் விளைநிலத்துக்கு நீர்ப்பாசனம் செய்துகொள்ள ஏதுவாக 124 அடி உயரமும், 44.827 டி.எம்.சி. கொள்ளளவும் கொண்ட கண்ணம்பாடி அணையைக் கட்டிக்கொள்ளலாம்.

2. சென்னை ராஜதானி அரசு, 93.5 டி.எம்.சி. கொள்ளளவு கொண்ட மேட்டூர் அணையைக் கட்டிக்கொள்ளலாம்.

3. அணை, விளைநிலம் தொடர்பான விவரங்களை இரு அரசுகளும் ஒவ்வோர் ஆண்டும் பரிமாறிக்கொள்ள வேண்டும்.

4. சுமார் 45 டி.எம்.சி. நீரைப் பயன்படுத்திக்கொள்ள ஏதுவாக மைசூரு நிலப்பரப்பில் 1,10,000 ஏக்கர் அளவுக்கு விளைநிலங்களை விரிவுப்படுத்திக் கொள்ளலாம்.

5. மைசூரு சமஸ்தானத்தில் கட்டப்படவிருக்கும் அணைகள் குறித்த அனைத்துத் தகவல்களையும் சென்னை அரசுக்குத் தெரிவிக்க வேண்டியது மைசூரு அரசின் கட்டாயக் கடமை.

6. சென்னை அரசு புதிய அணைகளை (பவானி, அமராவதி, நொய்யல் ஆறுகளில்) கட்டிக்கொள்ளும் பட்சத்தில், அவற்றை ஈடுசெய்யும் வகையில் மைசூரு அரசும் புதிய அணைகளைக் கட்டிக்கொள்ளலாம். அதேசமயம், புதிய அணைகளைக் கட்டிக்கொள்வதன் மூலம் உபரிநீரைப் பகிர்ந்துகொள்வதில் எவ்வித உரிமை மீறலும் இருக்கக் கூடாது.

மேட்டூர் அணை

7. இந்த ஒப்பந்தத்தின் அம்சங்கள் குறித்து 50 ஆண்டுகள் கழித்து (1974) மறு ஆய்வு செய்ய வேண்டும்.

8. ஒருவேளை, ஒப்பந்தத்தை நிறைவேற்றிக்கொள்வதில் இருதரப்புக்கும் பிரச்னை ஏற்படும் பட்சத்தில், தீர்ப்பாயம் மூலமாகவோ, இந்திய அரசின் மூலமாகவோ தீர்த்துக்கொள்ளலாம்.

1924- ம் ஆண்டு ஒப்பந்தம் குறித்து பொறியியல் வல்லுநர் விஸ்வேஸ்ரய்யாவின் எதிர்வினை கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. ``இரு சமமற்ற தரப்புகளுக்கு இடையிலான ஒப்பந்தம் இது. ஒருபக்கம், ஏகாதிபத்திய சக்தி (சென்னை). மறுபக்கம், நிலப்பிரபுத்துவ ஆட்சியாளர் (மைசூரு). இந்த இடத்தில் பலவீனமானவர் வீழ்வதைத் தவிர, வேறு வழியில்லை”.

குறிப்பாக, இந்த ஒப்பந்தத்தைப் பொறுத்தவரை முக்கியமான அம்சம் அதன் கால எல்லை தொடர்பானது. 1924 ஒப்பந்தம் 50 ஆண்டுகள் முடிந்ததும், மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று சொல்லப்பட்டிருந்ததே தவிர, 50 ஆண்டுகளோடு காலாவதியாகிவிடும் என்று சொல்லப்படவில்லை. அதாவது, ஒப்பந்தம் நடைமுறைப்படுத்தப்பட்டு 50 ஆண்டுகளுக்குப் பிறகு கிடைக்கிற அனுபவத்தைக் கொண்டு உபரிநீரை (ஒப்பந்தம் எதிர்பார்த்ததைவிடக் கூடுதலாக வரும் நீரை) எவ்வாறு பகிர்ந்துகொள்வது என்று மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று உட்பிரிவு XI கூறுகிறது.  இதைத்தான் இன்றைய கர்நாடக அரசு, `ஒப்பந்தம் 50 ஆண்டுகளுக்குப் பிறகு காலாவதியாகிவிடும், செல்லாததாகிவிடும்’ என்ற வாதத்தை முன்வைத்துப் பேசுகிறது.

உட்பிரிவு XI-இல் உள்ளது என்ன?

The Mysore Government and the Madras Government further agree that the limitations and arrangments embodied in clauses (IV) to (VIII) supra shall, at the expiry of fifty years from the date of the excution of these presents, be open to reconsiderations in the light of the experience gained and of an examination of the possibilities of the further extension of irrigation within the terrotories of the respective Governments and to such modifications and additions as may be mutually agreed upon as the result of such reconsiderations.

காவிரி

1924- ம் ஆண்டு ஒப்பந்தம் விதி 10(13)-இன்படி 1924 ஒப்பந்தத்தில் கூறப்படும் விஷயங்கள் தவிர, வேற எந்த ஷரத்திலும் 1892- ம் ஆண்டு ஒப்பந்தச் செயல்பாட்டை மாற்றக் கூடாது என்றே கூறுகிறது. தமிழ்நாட்டில் அமைந்துள்ள காவிரி டெல்டாவினுடைய விவசாயப் பாதுகாப்பை 1892 விதி 3-ம், 1924- ம் ஆண்டு ஒப்பந்தம் விதி 10(2)-ம் உறுதிபடுத்துகின்றன. இந்த இரண்டு ஒப்பந்தங்களும் காவிரியை, மைசூரு எப்படியும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று கூறவில்லை. 

1924- ம் ஆண்டு ஒப்பந்தத்துக்குப் பிறகு, மைசூரில் சிறிய மற்றும் பெரியதுமான பல நீர்ப்பாசனத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. சென்னை - மைசூரு இடையே நடந்த பேச்சுவார்த்தை காரணமாக 1911- ல் அடிக்கல் நாட்டப்பட்ட கண்ணம்பாடி அணை (கிருஷ்ணராஜ சாகர்), 1924- ம் ஆண்டு ஒப்பந்தம் கையெழுத்தான பிறகே செயல்வடிவம் பெறத் தொடங்கியது. ஏழாண்டு கால கட்டுமானப் பணிகளுக்குப் பிறகு 1931- ல் கிருஷ்ணராஜ சாகர் அணை திறக்கப்பட்டது. அதேபோல், ஒப்பந்தம் கையெழுத்தாகி இரண்டாண்டுகள் கழித்து தமிழகத்தில், தொடங்கப்பட்ட மேட்டூர் அணையின் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்து 1934- ம் ஆண்டு அந்த அணை திறக்கப்பட்டது. பல நீர்ப்பாசனத் திட்டங்களால், மைசூரு அரசு தன்னுடைய விளைநிலப் பரப்பை அதிகரித்துக் கொண்டது. 1900-ல் 1.1 லட்சம் ஏக்கராக இருந்த விளைநிலம், 1930-களில் மூன்று லட்சம் ஏக்கராகவும், 1970-களில் 4.4 லட்சம் ஏக்கராகவும் விரிவுகண்டது.

 

- காவிரி பாயும்...

https://www.vikatan.com/news/tamilnadu/125164-the-abandoned-story-of-cauvery-series-8.html

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

தமிழகத்தைத் துணைக்கு அழைத்த மைசூரு! காவிரி கைவிரிக்கப்பட்ட கதை! அத்தியாயம் - 9

 
 
Chennai: 

1924 -ம் ஆண்டு போடப்பட்ட காவிரி நதிநீர் ஒப்பந்தத்தின் வழியாகக் கிடைத்த உரிமைகளைக் கொண்டு தத்தமது நீர்ப்பாசனத் திட்டங்களைச் செயல்படுத்துவதில் இரு மாநில (சென்னை - மைசூரு) அரசுகளும் தீவிரம் காட்டின. 

காவிரி

 

இந்தக் கட்டுரையின் முந்தைய அத்தியாயத்தைப் படிக்க இங்கு க்ளிக் செய்யவும்...

‘வரம்பு நீரோட்டம்’!  

இதனிடையே, 1921 ஜூலை 26-ம் தேதி இருதரப்பாலும் கொள்கையளவில், உடன்பாடு காணப்பட்ட கிருஷ்ணராஜ சாகர் ஒழுங்குமுறை விதிகள் 1929-ம் ஆண்டு ஏற்பட்ட இருதரப்பு உடன்பாட்டின் மூலம் ஒப்பந்தமாக உருவாக்கப்பட்டது. அந்த விதிமுறைகளின்படி கிருஷ்ணராஜ சாகர் அணையில் மாதந்தோறும் தண்ணீரைத் திறந்துவிட்டால்தான் மேலணையில்  குறிப்பிட்ட உயரத்துக்குத் தண்ணீர் ஓடும்; தமிழகப் பாசனப் பரப்புக்குரிய தண்ணீர் கிடைக்கும். இதற்கு, ‘வரம்பு நீரோட்டம்’  (Limit Flow) என்று பெயர். கிருஷ்ணராஜ சாகர் அணையிலிருந்து இந்த அளவு தண்ணீரை, முன்னுரிமை அடிப்படையில் தமிழ்நாட்டுக்குத் திறந்துவிட்ட பிறகு, அதற்குமேல் அதிகமாக உள்ள நீரைத்தான் கர்நாடகம் கிருஷ்ணராஜ சாகர் அணையில் தேக்க வேண்டும். 1921-ம் ஆண்டே இந்தக் கொள்கை இருதரப்பு உடன்பாட்டில் வகுக்கப்பட்டு, 1924 ஒப்பந்தத்தில் குறிப்பிட்ட அளவுகளோடு வரம்பு நீரோட்டம் இணைக்கப்பட்டிருந்தாலும், பின்னர் 1926-ல் மைசூரு அரசாங்கம் இதில் சிக்கல்களை எழுப்பியது.   

1924-ம் ஆண்டு காவிரி நதிநீர் ஒப்பந்தத்தின்படி 1931-இல் கிருஷ்ணராஜ சாகர் அணையைத் திறந்த மைசூரு அரசாங்கம், அதன்பிறகு 1940-களில் கன்வா, பைரமங்கலம், மார்க்கெனகள்ளி, சிம்சா போன்ற மேலும் சில நடுத்தர நீர்த்தேக்கங்களைக் கட்டியது. 1934-இல் மேட்டூர் அணை கட்டி முடிக்கப்பட்டதும், சென்னை அரசாங்கம் ஆயக்கட்டுத் திட்டங்களை விரிவுபடுத்தியது. குறிப்பாக, 2.1 லட்சம் ஏக்கருக்கான கீழ்ப்பவானி திட்டம், 50,000 ஏக்கருக்கான  மேட்டூர் கால்வாய் திட்டம், அமராவதி திட்டம், புதிய கட்டளை திட்டம் உயர்மட்டக் கால்வாய் திட்டம், புள்ளம்பாடி கால்வாய் திட்டம் ஆகியன அடுத்தடுத்து செயல்வடிவம் பெறத் தொடங்கின. 

காவிரி

சென்னை - மைசூரு மோதல்!

இந்த நிலையில், “சென்னை அரசாங்கம் செயல்படுத்தும் திட்டங்கள் எல்லாம் 1924-ம் ஆண்டு காவிரி நதிநீர் ஒப்பந்தத்துக்கு எதிரானது” என்றது மைசூரு அரசாங்கம். அத்துடன், அவற்றை கடுமையாகவும் எதிர்த்தது. ஆனால் சென்னை மாகாண அரசோ, “காவிரி மேட்டூர் திட்டத்துக்கான வரையறுக்கப்பட்ட பகுதியிலேயே மேட்டூர் கால்வாய் திட்டம் செயல்படுத்தப்படுகிறது என்றும், ஏனைய திட்டங்கள் யாவும் உபரிநீரிலிருந்தும், சிக்கனம் காரணமாகச் சேமிக்கப்படும் நீரிலிருந்துமே செயல்படுத்தப்பட உள்ளது” என்றும் விளக்கம் கொடுத்தது. நீண்ட யுத்தத்துக்குப் பின் பவானி ஆற்றில் கீழ்ப்பவானி அணைக்கட்டுத் திட்டத்தைச் சென்னை அரசாங்கம் 1954-இல் நிறைவு செய்தது. இதனைத் தொடர்ந்து 1954-55-இல் அமராவதியின் குறுக்கே 4 ஆயிரம் மில்லியன் கனஅளவு கொள்ளளவு உடைய சிறிய நீர்த்தேக்கத்தையும் சென்னை மாகாண அரசு கட்டியது.

மாநிலங்களின் மறுசீரமைப்பு!

இதையடுத்து, சென்னை அரசாங்கத்துக்குப் பதிலடி கொடுக்கும் விதமாகச் சில புதிய திட்டங்களை ஆரம்பித்தது மைசூரு அரசு. அதற்குச் சென்னை அரசாங்கம், “புதிய திட்டத்துக்கான செயல்திட்டக் குறிப்புகள் பற்றி அனுப்பவும்” என்று கோரிக்கை வைத்தது. அதற்கு மைசூரு அரசாங்கம், “புள்ளம்பாடி, புதிய கட்டளைத் திட்டங்கள் தொடர்பாக எவ்வித குறிப்புகளும் மைசூரு அரசுக்கு அனுப்பப்படாத நிலையில், புதிய திட்டங்கள் குறித்த எவ்விதக் குறிப்புகளையும் சென்னைக்கு அனுப்ப வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை” என்று கடுமையாகச் சொன்னது. 

இப்படி இரு மாநில அரசுகளுக்கிடையே தொடர்கதையாகிப் போன காவிரி நதிநீர்ப் பங்கீட்டு விவகாரம், தொடர்ந்து இழுபறியிலேயே நீடித்துவந்தது. இந்தச் சூழ்நிலையில், 1956-இல் செய்யப்பட்ட மாநிலங்களின் மறுசீரமைப்பினால், மைசூரு அரசாங்கத்தில் அரசியல் எல்லைகள் எல்லாப் பக்கங்களிலும் விரிவடைந்தன. தனி மாநிலமாக இருந்த குடகும், சென்னை மாகாணத்துடன் இருந்த தென் கன்னட மாவட்டமும், கொள்ளேகால் பகுதியும் மைசூருடன் இணைந்து கர்நாடகமாக மாறியது. அதேபோல், சென்னை மாகாணத்துடன் இணைந்திருந்த கபினி, பவானி ஆறுகளின் தலைப்பகுதிகளை உள்ளடக்கியிருந்த மலபார் மாவட்டமும், அமராவதியின் தலைப்பகுதியை உள்ளடக்கியிருந்த திருவாங்கூரும் கேரளத்துடன் இணைந்தது. 

காவிரி

தமிழகத்தைத் துணைக்கு அழைத்த மைசூரு!

குறிப்பாகக் காவிரி உற்பத்தியாகும் குடகு, 1834-க்கு முன் தனி மாநிலமாக இருந்தது. இதற்கு, தலைநகராக இருந்ததாகவும் குறிப்புகள் காணப்படுகின்றன. இங்கு வசித்த மக்கள் பேசிய மொழி குடகு. 1834-க்கு முன்புவரை பல மன்னர்களின் ஆட்சியின் கீழிருந்த குடகு, நெடுங்காலம் மின் ஒளியின்றி இருண்டே கிடந்திருக்கிறது. சோழ மன்னர்களும் குடகுப் பகுதியை ஆட்சி செய்திருக்கிறார்கள் என்றும், சோழ வனம் என்று அப்பகுதி அழைக்கப்பட்டது என்றும் வரலாற்றுக் குறிப்புகள் கூறுகின்றன. 1834-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 4-ம் தேதி முதல் ஆகஸ்ட் 15, 1947 வரை குடகுப் பகுதி ஆங்கிலேயரின் ஆளுகையில் இருந்தது. 1952-ம் ஆண்டு செப்புடிர பூனச்சாவின் தலைமையில் இரண்டு அமைச்சர்களின் மந்திரி சபையும் இருந்துள்ளது. 

குடகு மக்களின் பலத்த எதிர்ப்புக்குப் பிறகுதான் 1956-இல், மாநிலங்களின் மறுசீரமைப்பினால் அப்பகுதி மைசூருடன் இணைந்தது. குடகுப் பகுதி மைசூருடன் இணைவதற்கு முன் சர்வே ஒன்று நடத்தப்பட்டது. அப்போது, ``வெறும் 80 அடி உயரத்தில் ஹாரங்கி என்னும் இடத்தில் ஓர் அணை கட்டினால், போதிய மின்சாரம் கிடைக்கும். 6,000 ஏக்கருக்கு நீர்ப்பாசனம் கிடைக்கும்”என்று சொல்லப்பட்டது. இதற்கு முதலில் எதிர்ப்புத் தெரிவித்தது மைசூரு அரசாங்கம்தான். இதேபோல், குடகு மாநிலத்தில் லட்சுமண தீர்த்தம் என்ற அணைக்கட்டுத் திட்டத்தைக் குடகு மாநிலத்தினர் நிறைவேற்ற முயற்சி செய்தனர். இதற்குப் பலத்த ஆட்சேபனையைத் தெரிவித்தது மைசூரு அரசாங்கம். அத்துடன், சென்னை மாகாணத்தையும் லட்சுண தீர்த்தத்துக்கு எதிராகத் துணைக்கு அழைத்தது. ஆனால், 1956-க்குப் பின் மைசூருடன் குடகு இணைந்தபிறகு நிலைமை தலைகீழாய் மாறியது. குடகு போட்ட திட்டங்களை எல்லாம் கர்நாடக அரசு தன்னுடைய திட்டங்களாக வகுத்துக்கொண்டது.

- காவிரி பாயும்...

https://www.vikatan.com/news/tamilnadu/125307-the-abandoned-story-of-cauvery-series-9.html

Link to comment
Share on other sites

பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகண்ட நாடுகள்! காவிரி கைவிரிக்கப்பட்ட கதை! அத்தியாயம் - 10

 
Chennai: 

1956-ம் ஆண்டு, மாநிலங்களின் மறுசீரமைப்புக்குப் பின் கர்நாடக அரசு, 1959-ம் ஆண்டிலேயே ஒப்பந்த மீறல்களைத் தொடங்கிவிட்டது. மத்திய அரசுக்கும் தமிழக அரசுக்கும் தெரியாமலேயே, காவிரிக்குக் குறுக்கே கர்நாடக அரசு அணைகளைக் கட்டும் பணியில் ஈடுபட்டது. அதிலும் குறிப்பாக, கர்நாடக அரசு தனது நீர்த்தேக்கங்களை எல்லாம் டிட்டன்சன் ரிசர்வாயராகக் (Detention Reservoir) கட்ட ஆரம்பித்தது.

காவிரி

 

 

இரண்டு வகை நீர்த்தேக்கங்கள்! 

நீர்ப்பாசனத்தில் இரண்டு வகையான நீர்த்தேக்கங்கள் கட்டப்படுகின்றன. ஒன்று, டிட்டன்சன் ரிசர்வாயர்; மற்றொன்று, ரிட்டன்சன் ரிசர்வாயர் (Retention Reservoir). ஆற்றில் எவ்வளவு தண்ணீர் வருகிறதோ, அவற்றையெல்லாம் தேக்கிவைத்துக்கொள்ளும் வகையில் கட்டப்படுவது டிட்டன்சன் ரிசர்வாயர். இந்த முறைப்படிதான் கர்நாடக அரசு அணைகளைக் கட்டியது. இதன்படி பார்த்தால், விருப்பமிருந்தால் தமிழகத்துக்குத் தண்ணீர் கொடுக்கலாம்; இல்லையென்றால் கொடுக்காமலேயே இருந்துவிடலாம். ஆனால், ரிட்டன்சன் ரிசர்வாயர் வகையில் கட்டப்படும் நீர்த்தேக்கங்களில், குறிப்பிட்ட காலத்துக்கு மட்டுமே தண்ணீரைத் தேக்கிவைக்க முடியும்; முழுவதும் தேக்கிவைப்பதில்லை. வெள்ளம் வந்தால் தேக்கிவைத்துவிட்டு, தேவையானபோது திறந்துவிடுவதே ரிட்டன்சன் ரிசர்வாயர் ஆகும். 

காவிரி நதிநீர்குறித்து கர்நாடக அரசுடனான பேச்சுவார்த்தையில் எந்த முன்னேற்றமும் ஏற்படாததால், தமிழக அரசு மத்திய அரசின் உதவியை நாடியது. மேலும் தமிழக அரசு, காவிரிப் பிரச்னைக்குத் தீர்வுகாண நடுவர் மன்றம் ஒன்றை அமைக்கும்படி மத்திய அரசிடம் கோரிக்கை வைத்தது. இதையடுத்து, இந்திய அரசியல் சாசனப் பிரிவு 262-ன்படி 1956-ல் மாநிலங்களுக்கிடையிலான நதிநீர் தாவாச் சட்டம் இந்திய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. 

1956-ன் மாநிலங்களுக்கிடையிலான நதிநீர் தாவாச் சட்டம், நதிநீர்ப் பகிர்வை முன்வைத்து இந்தியாவின் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்களுக்கு இடையில் பிரச்னைகள் ஏற்படும் பட்சத்தில் பேச்சுவார்த்தைமூலம் தீர்வு காணப்படும். மத்திய அரசின் முன்னிலையில், சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் பேச்சுவார்த்தைகள் நடத்தும். ஒருவேளை, அந்தப் பேச்சுவார்த்தை தோல்வியடையும் பட்சத்தில், தீர்ப்பாயம் அமைக்கும் நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்கும். நதிநீர்த் தகராறு 1956-ன் அடிப்படையில் தீர்ப்பாயம் அமைக்க மத்திய அரசு முடிவெடுத்ததும், அதுதொடர்பான அறிவிக்கை அரசிதழில் வெளியிடப்படும். 

காவிரி

உலக அளவில் தீர்வு!

உலக வரலாற்றில் இதுவரை, தண்ணீருக்காக நடந்த பேசப்படும் யுத்தம் ஒன்று உண்டென்றால், அது 4,500 ஆண்டுகளுக்கு முன்னால் யூப்ரடிஸ் டைக்ரிஸ் தண்ணீருக்காக இரு அரசுகளுக்கிடையே நடைபெற்ற யுத்தமாக மட்டும்தான் இருக்கும். உலக வரலாற்றைப் பொறுத்தவரை, அநேகமாக 3,600-க்கும் மேற்பட்ட ஒப்பந்தங்கள் பேச்சுவார்த்தையில் ஏற்பட்டுள்ளன. நைல் நதி தொடர்பாக எகிப்து மற்றும் சூடான் ஆகிய நாடுகளுக்கிடையேயும், தான்யூப் நதி தொடர்பாக ஆஸ்திரியா - துருக்கி நாடுகளுக்கிடையேயும், தென் கிழக்கு ஆசியாவில் பாயும் மேகாங் நதி தொடர்பாக தாய்லாந்து, வியட்நாம், கம்போடியா, லாவோஸ் ஆகிய நாடுகளுக்கிடையேயும், ரைன் நதி தொடர்பாக ஜெர்மனி - பிரான்ஸ் நாடுகளுக்கிடையேயும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு தீர்வு காணப்பட்டுள்ளது.

மேலும், உலக அளவில் ஜோர்டான் நதி தொடர்பாக இஸ்ரேல், பாலஸ்தீனம், ஜோர்டான் ஆகிய நாடுகளுக்கிடையேயும், யூப்ரடிஸ் நதி தொடர்பாக துருக்கி, சிரியா, ஈராக் ஆகிய நாடுகளுக்கிடையேயும், கொலம்பியா நதி தொடர்பாக கனடா - அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கிடையேயும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, அதன்மூலம் தீர்வுகாணப்பட்டிருக்கிறது. இதுதவிர, நைஜர், செனகல் நதி தொடர்பாகவும், அஸ்வான் நதி தொடர்பாகவும் ஆப்பிரிக்காவில் பேச்சுவார்த்தைமூலம் தீர்வுகாணப்பட்டிருக்கிறது.

அமெரிக்க ஒன்றியத்தின் ஏழு மாநிலங்களுக்கிடையில் கீழ்ப்படுகைப் பகுதிகளின் சாகுபடி உரிமைகுறித்த பிரச்னை எழுந்தபோது,          1933-ம் ஆண்டு தென்னீசிய படுகை ஆணையம் அமைத்து அமெரிக்கா தீர்வுகண்டது. அதேபோல, தனுபி ஆறு குறித்து எட்டு ஐரோப்பிய நாடுகளிடையே பிரச்னை எழுந்தபோது, தனுபி ஆணைக்குழு அமைத்து தீர்வு காணப்பட்டது. இவை எல்லாவற்றிலும் கீழ்ப்படுகை நாடுகளின் பாசனம், ஒரு சென்ட் நிலம்கூட குறைக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. உலக நாடுகளைத் தவிர, இந்தியாவிலேயே பல நதிகள் பேச்சுவார்த்தைமூலம் தீர்வுகாணப்பட்டிருக்கின்றன. 

காவிரி

இந்திய அளவில் தீர்வு!

குறிப்பாக, 1960-ம் ஆண்டு செப்டம்பர் 19-ம் தேதி, அப்போதைய இந்தியப் பிரதமர் ஜவஹர்லால் நேருவும், பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் அயூப் கானும் உலக வங்கி அதிகாரிகள் முன்னிலையில், சிந்துசமவெளி உடன்படிக்கையை ஏற்படுத்திக்கொண்டனர். இந்த ஒப்பந்தத்தில் சிந்து, ஜீலம், செனாப் ஆகிய நதிகள் பாகிஸ்தானுக்கு என்றும், ரவி, பியாஸ், சட்லெஜ் ஆகியவை இந்தியாவுக்கு என்றும் உடன்பாடானது. மேலும், சிந்து நதியில் திரளும் நீர் 80.52 சதவிகிதம் பாகிஸ்தானுக்கு என நிர்ணயிக்கப்பட்டது. அத்துடன், வடிநிலப் பகுதியில் திரளும் நீர் முழுவதும் பாகிஸ்தானுக்கு என்று ஒப்பந்தம் குறிப்பிடுகிறது. இதுதவிர, பாகிஸ்தானின் விவசாய சாகுபடிக்காக, அந்த நாடு அணை கட்டிக் கொள்வதற்கு 6.2 கோடி ரூபாயை வழங்க இந்தியா ஒப்புக்கொண்டது. சர்வதேச தண்ணீர் பகிர்வுச் சட்டத்தில், இது ஒரு மைல்கல் என்று சொல்லப்படுகிறது.

அதேபோல, கங்கை நதியைப் பகிர்ந்துகொள்வது தொடர்பாக, மேற்குவங்க பராக்கா அணைகுறித்து 1996-ம் ஆண்டு டிசம்பர் 12-ம் தேதி, இந்தியாவும் பாகிஸ்தானும் ஓர் உடன்பாடு செய்துகொண்டன. தவிர, நேபாளத்துடன் இந்தியா ஆற்று நீர் படுகைகளிலும் ஒப்பந்தம் கண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இவையெல்லாம், இந்தியாவுக்கும் அண்டை நாடுகளுக்கும் ஏற்பட்ட ஒப்பந்த நடவடிக்கைகள் என்றால், இந்தியாவுக்குள் இருக்கும் மாநிலங்களிலேயே பல பிரச்னைகள் பேச்சுவார்த்தைமூலம் தீர்வு காணப்பட்டுள்ளன. 

முசாக்கந்த் திட்டத் தகராறு தொடர்பாக, உத்தரப்பிரதேசம் - பீகார் ஆகிய மாநிலங்களுக்கிடையேயும், பாலாறு தொடர்பாக தமிழ்நாடு - கர்நாடக மாநிலங்களுக்கிடையேயும், துங்கபத்ரா உயர்மட்ட கால்வாய் திட்டத் தகராறு தொடர்பாக கர்நாடகம் - ஆந்திர மாநிலங்களுக்கிடையேயும், ரவி, பியாஸ் நதிநீர் ஒதுக்கீடு தொடர்பாக பஞ்சாப், ராஜஸ்தான், ஜம்மு காஷ்மீர் ஆகிய மாநிலங்களுக்கிடையேயும், சுபர்நரேகா நதிநீர்ப் பங்கீடு தொடர்பாக பீகார், ஒடிசா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களுக்கிடையேயும், ஜம்னி அணைக்கட்டு தொடர்பாக உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேச மாநிலங்களுக்கிடையேயும், மகி நதிநீர் தொடர்பாக குஜராத், ராஜஸ்தான் மாநிலங்களுக்கிடையேயும், பரம்பிக்குளம்-ஆழியாறு பாசனத் திட்டம் தொடர்பாக கேரளா, தமிழ்நாடு மாநிலங்களுக்கிடையேயும் என உள்நாட்டில் செய்துகொள்ளப்பட்ட உடன்பாடுகளின் பட்டியல் நீண்டுகொண்டே போகிறது. ஆனால், காவிரி விவகாரத்தில் மட்டும் பேச்சுவார்த்தைமூலம் தீர்வுகாண்பது என்பது தலைகீழாக மாறிவிட்டதுதான் வேடிக்கை.

- காவிரி பாயும்...

https://www.vikatan.com/news/tamilnadu/125542-the-abandoned-story-of-cauvery-part-10.html

Link to comment
Share on other sites

முன்னுரிமை அளிக்கும் ஆற்றுநீர் பாசன அமைப்பு! காவிரி கைவிரிக்கப்பட்ட கதை! அத்தியாயம் - 11

 
 
Chennai: 

காவிரி மட்டுமல்ல... பொதுவாக உலகில் உள்ள எல்லா நாடுகளிடையேயும் ஆற்றுநீரைப் பகிர்ந்துகொள்வதற்கான வழிமுறைகள் பற்றி கடந்த நூற்றாண்டிலேயே சூடான விவாதங்கள் நடைபெறத் தொடங்கின.

காவிரி

 

 

நான்கு வகை கோட்பாடுகள்!

1894-ம் ஆண்டில் கொலராடோவில் தென்வர் என்ற இடத்தில் பாசனப் பேரவை ஒன்று கட்டப்பட்டது. பன்னாட்டு ஆறுகளின் மீது சட்ட அதிகாரம் கொண்ட பன்னாட்டு அமைப்பொன்றை உருவாக்குவது பற்றி அது கருத்துத் தெரிவித்தது. அந்தக் காலகட்டத்தில், உலகின் பல்வேறு நாடுகள் ஆற்றுநீர்த் தகராறு தொடர்பாகப் பல்வகைக் கோட்பாடுகளை முன்வைத்தன. நதிநீர்ச் சிக்கலில் தாங்கள் சார்ந்திருக்கும் நிலைக்குத் தகுந்தவாறு சில கோட்பாடுகளை அந்த நாடுகள் உருவாக்கியிருந்தன. 

1. ஆற்றுப்படுகை உழவர்களின் உரிமைக் கோட்பாடு (The doctrine of riparian rights),  2. தேச இறையாண்மைக் கோட்பாடு (The doctrine of Territorial sovereignty), 3. உடைமைக் கோட்பாடு (Doctrine of appropriation), 4. சமப் பங்கீட்டுக் கோட்பாடு (The doctrine of equitable apportionment) என அவற்றை நான்கு வகையாகப் பிரிக்கலாம்.

ஆற்றின் கடைக்கோடியில் உள்ள நாடு, ஆற்றில் இயற்கையாக ஓடிவரும் நீரைக் குறைவின்றிப் பெற வேண்டும் என்பது ஆற்றுப் படுகை உழவர்களின் உரிமைக் கோட்பாடு ஆகும். தன் எல்லைக்குட்பட்ட ஆற்றுநீர் மற்றும் அதன் பயன்பாடுகள் மீது, முழு இறையாண்மையையும் அறுதியான சட்ட அதிகாரத்தையும் கட்டுப்பாட்டையும் அந்நாடே பெறுவது தேச இறையாண்மைக் கோட்பாடு ஆகும். முதலில், தக்க நேரத்தில் தன்னுடைமையாக்கிக் கொள்பவருக்கே அதன் மீதான முதல் உரிமை உண்டு என்பது உடைமைக் கோட்பாடு ஆகும். குறிப்பிட்ட பரப்பு அல்லது அமைப்புக்குட்பட்ட ஆற்றுநீரின் பயன்கள், அவ்வமைப்பு அல்லது பரப்பின் மீது சட்ட அதிகாரம் செலுத்தும் நாடுகள் தங்களுக்கிடையே சமமாகப் பங்கிட்டுக்கொள்ள வேண்டும் என்பது சமப் பங்கீட்டுக் கோட்பாடு ஆகும். 

ஆற்றுப் படுகை உழவர்களின் உரிமைக் கோட்பாட்டையும், உடைமைக் கோட்பாட்டையும் ஆற்றின் கீழ்ப்படுகை நாடுகள் வற்புறுத்தின. ஹார்மன் கோட்பாடு என அழைக்கப்படும் தேச இறையாண்மைக் கோட்பாட்டை ஆற்றின் மேற்படுகை நாடுகள் வலியுறுத்தின. கொலம்பியா ஆற்றுநீர்த் தகராறின்போது கனடா, இந்தக் கோட்பாட்டின் (தேச இறையாண்மைக் கோட்பாடு)  அடிப்படையில் தன் வழக்கை முன்வைத்தது. அமெரிக்காவோ, தன் பகுதிக்குச் சார்ந்து வரக்கூடிய உடைமைக் கோட்பாட்டைச் சார்ந்து நின்றது. ஒப்பந்தங்கள் பலவற்றுக்கும் அமெரிக்கா இந்தக் கோட்பாட்டையே பின்பற்றியது. குறிப்பாக, 1944-ம் ஆண்டு அமெரிக்க - மெக்சிகன் ஒப்பந்தத்துக்கு இந்தக் கோட்பாட்டையே பின்பற்றி இருந்தது.

காவிரி

பயனில்லாத ஹார்மன் கோட்பாடு! 

மேற்கண்ட நான்கு கோட்பாடுகளில் பயனில்லாத கோட்பாடு ஹார்மன் கோட்பாடு மட்டும்தான் என்று பலராலும் விமர்சனம் செய்யப்படுகிறது. இந்தக் கோட்பாடு குறித்து ஓய்வுபெற்ற தலைமைப் பொறியாளர் எஸ்.வி.நமச்சிவாயம், “காவிரி ஆற்றுநீர்ச் சிக்கலில் கர்நாடகம் இப்போது வற்புறுத்தும் ஹார்மன் கோட்பாடு ஒதுக்கிவைக்கப்பட்ட, ஓரங்கட்டப்பட்ட ஒன்றாகும். ஏனெனில், அது இயற்கை நெறிமுறைக்கு எதிரானது. இக்கோட்பாட்டின்படி அணைகள் கட்டப்பட்டால், ஆற்றின் கீழ்ப்படுகை உழவர்களுக்குத் தேவைப்படும்போது நீர் கிடைக்காது. தேவைப்படாதபோது வெள்ள வடிவில் மிகையாகக் கிடைக்கும். வெள்ளத்தைத் தடுக்கவும், தேவைப்படும்போது நீரைப் பயன்படுத்திக் கொள்ளவுமே மனிதன் அணைகளைக் கண்டுபிடித்தான். எனவே, சட்டவியல் அடிப்படையிலோ, நீரியல் அடிப்படையிலோ ஹார்மன் கோட்பாடு எந்த நீதிமன்றத்திலும் செல்லுபடியாகாது” என்று குறிப்பிட்டுள்ளார். 

அதேபோல், 1972-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனம் கருத்தரங்கு ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருந்தது. அதில் பங்கேற்ற, சோமாலியாவின் உச்ச நீதிமன்ற முன்னாள் தலைவர் ஹாஜி என்.ஏ.நூர் முகமது, ‘இந்தியாவில் மாநிலங்களுக்கிடையேயான ஆறுகள்’ குறித்த கட்டுரையில், ஹார்மன் கோட்பாடு பற்றிப் பின்வருமாறு விவரிக்கிறார். “ஹார்மன் கோட்பாடு, இந்தியாவில் எப்போதும் பயன்படுத்தப்படவே இல்லை. அரசியலமைப்புச் சட்டத்தின்படி, ஓர் ஆற்றுப்படுகையில் அமைந்துள்ள மாநிலம் ஒன்று, அதே ஆற்றுப்படுகையில் அமைந்துள்ள பிற மாநிலங்களுக்குக் கேடு விளைவிக்கும் என்பதைப் பற்றிக் கவலையுறாமல், அந்த ஆற்றில், வளர்ச்சிப் பணியில் ஈடுபட உரிமை கிடையாது. அரசியலமைப்பின் 206-ம் பிரிவிலிருந்து இது அறியப்படுகிறது. இப்பிரிவு, மாநிலங்களுக்கிடையேயான ஆறுகள், வடிநிலங்கள் ஆகியன தொடர்பாக எழும் தகராறுகளைத் தீர்த்துவைக்கும் அதிகாரத்தை நாடாளுமன்றத்துக்கு வழங்குகிறது. இந்தக் கோட்பாட்டின் செல்லுபடியாகும் தன்மை உலகளவில் சந்தேகத்துக்கிடமானதாக உள்ளது. கூட்டாட்சியில் அதன் அலகுகளுக்கிடையே, மாநிலங்களுக்கிடையே இது பயன்படாது. எனவே, இரண்டாவது கோட்பாடு எங்கும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. அது, கல்வியாளர்களிடையே விவாதத்துக்கான ஒரு பொருளாக மட்டும் உள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார். 

காவிரி

ஹெல்சின்கி விதிகள்!

ஹார்மன் கோட்பாட்டைப்போல, ஆற்றுப்படுகை உழவர்களின் உரிமைக் கோட்பாடும், உடைமைக் கோட்பாடும் செல்வாக்குப் பெறவில்லை. அவை, ஆற்றின் கீழ்ப்படுகையைச் சேர்ந்தவர்கள் அனைத்தையும் தாங்களே உரித்தாக்கிக்கொள்ள வழிவகுக்கிறது. அதேவேளையில், நாடுகளுக்கிடையேயான அனைத்து நதிநீர்ச் சிக்கல்களும் நான்காவது கோட்பாட்டின் அடிப்படையிலேயே தீர்த்து வைக்கப்படுகிறது. புகழ்பெற்ற ஹெல்சின்கி விதிகளும் இதை முன்னடிப்படையாகக் கொண்டுதான் வகுக்கப்பட்டுள்ளன.

இவ்விதிகளில், விதி 5-இன்படி ஆற்றில் மிகை நீர் வடிநிலப் பகுதி, பிரிக்க முடியாத நீரியல் அலகாகும். இதன் அடிப்படையிலேயே வடிநிலப் பகுதிக்கான பங்கீடு முடிவு செய்யப்பட வேண்டும். அரசியல் அடிப்படையில் பல்வேறு நாடுகள் உள்ளன என்பது பங்கீட்டை எவ்வகையிலும் பாதிக்காது. இவ்விதிகள், காவிரி ஆற்று நீர்ச் சிக்கலில், தமிழ்நாடு கோரும் பங்கீட்டு உரிமைகள் நேர்மையானவை என ஏற்கின்றன. ஆற்றுநீரைப் பகிர்ந்துகொள்வதில் ஆற்றின் கீழ்ப்படுகை நாடுகளுக்குள்ள முன்னுரிமையைப் பன்னாட்டுச் சட்டம் ஏற்றுக்கொள்கிறது. குறிப்பிட்ட ஆற்றின் பாசன அமைப்பு முறை சூழல்களின் அடிப்படையில் அச்சட்டம் பல்வேறு நாடுகளுக்கு நீரைப் பகிர்ந்தளிக்கிறது. காவிரி ஆற்றுப் பாசன அமைப்பு, காவிரி ஆற்றுநீரில்  தமிழ்நாட்டுக்கு முன்னுரிமை அளிக்கிறது. ஆனால் கர்நாடகமோ, இவ்வாற்று அமைப்பை வெள்ளப்பெருக்கிலிருந்து தன்னைக் காப்பாற்றிக்கொள்வதற்கான வடிகால்  அமைப்பாக மாற்ற விரும்புகிறது. சட்டத்தின்படி, பிற்காலக் கண்டுபிடிப்புகளான அணைகள், ஆற்றின்கீழ் வடிகால் பகுதிகளில் வசிக்கும் மக்களின் ஆயிரம் ஆண்டுக்காலப் பழைமையும், இயற்கையானதுமான உரிமைகளை மாற்றவோ, நசுக்கவோ முடியாது. ஆனால், இவற்றையெல்லாம் மீறித்தான் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது கர்நாடகம்.

இரண்டு மாநிலங்களிடையே மீண்டும் பேச்சுவார்த்தை! காவிரி கைவிரிக்கப்பட்ட கதை! அத்தியாயம் - 12

 
 
Chennai: 

ர்நாடகத்துக்கும், தமிழகத்துக்குமான தகராறு காவிரி நீரில் ஒவ்வொருவருக்கும் உள்ள பங்கு பற்றியதாகும். ஆற்று நீரோட்டத்துக்கு ஒவ்வொரு மாநிலமும் எவ்வளவு பங்களிப்புச் செய்கிறதோ, அந்த அடிப்படையில் நீரைப் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று கர்நாடகம் விரும்புகிறது. ஆனால், தமிழ்நாடோ நீர்ப் பகிர்வுக்காக உருவாக்கப்பட்ட பன்னாட்டுச் சட்டத்தின் அடிப்படையில் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று கூறுகிறது. இப்பன்னாட்டுச் சட்டத்தின் அடிப்படையில்தான், நம் சொந்த நாட்டிலும் மாநிலங்களுக்கிடையேயான பல சிக்கல்கள் தீர்த்து வைக்கப்பட்டுள்ளன.

காவிரி

 

 

காமராஜர் நிராகரிப்பு!

மைசூரு, கர்நாடகமாய் உருமாற்றம் பெற்ற சமயத்தில் அங்கு ஆட்சியில் இருந்தவர்கள், ``1924 காவிரி நதிநீர் ஒப்பந்தத்தை மாற்றியமைக்க வேண்டும்” எனக் கோரிக்கை வைத்தனர். இதுதொடர்பாக அப்போதைய கர்நாடகப் பொதுப்பணித் துறை அமைச்சர், தமிழக முதல்வர் காமராஜரைச் சந்தித்துப் பேசினார். அதற்கு காமராஜர், ``அதற்கான தேவை எதுவும் எழவில்லை” என நிராகரித்துவிட்டார். எனினும், ``அந்தக் காலத்தில் போடப்பட்ட ஒப்பந்தம் இப்போது எப்படிச் செல்லுபடியாகும்” என்ற கேள்வியை அந்த மாநில ஆட்சியாளர்கள் தொடர்ந்து எழுப்பிக்கொண்டே இருந்தனர். 

காலங்கள் ஒருபுறம் ஓடிக்கொண்டிருக்க... மறுபுறம், காவிரி பற்றிய விவகாரம் நீறுபூத்த நெருப்பாகவே இரண்டு மாநிலங்களுக்குள்ளும் புகைந்துகொண்டிருந்தது; இன்றும் புகைந்துகொண்டே இருக்கிறது. கபினி, ஹேமாவதி, ஹேரங்கி அணைகளுக்கான திட்டங்களை இந்திய அரசுக்கு அனுப்பிவைத்தது கர்நாடகம். அதன் காரணமாகத் தமிழகத்திலிருந்து எதிர்ப்புகள் கிளம்பின. 

வாதம் செய்த கர்நாடகம்!

``புதிய நீர்த்தேக்கங்களை உருவாக்கிக்கொள்ள கர்நாடக அரசுக்கு 1924- ம் ஆண்டு ஒப்பந்தம் வழிவகை செய்திருந்தாலும்கூட, அவற்றின் காரணமாகத் தமிழக நீர்ப்பாசனத்துக்கு எந்தவிதமான சிக்கலும் நேர்ந்துவிடாமல் இருக்க வேண்டும்” என நிபந்தனை விதித்தது தமிழக அரசு. இதை ஏற்றுக்கொள்ளாத கர்நாடக அரசு, ``தமிழகத்தின் பவானி அணையால் ஏற்படும் இழப்பை ஈடுகட்டும் அணையாகத்தான் கபினி அணை உருவாக்கப்படுகிறது என்பதால், இதில் ஒப்பந்த மீறல் எதுவுமில்லை” என்று எதிர்வாதம் செய்தது. 

காவிரி

அதேபோல, ``ஹேமாவதி அணையின் கொள்ளளவு 34 டி.எம்.சி. மட்டுமே. இது, ஒப்பந்தத்தில் வரையறுக்கப்பட்ட எல்லையைவிட 11 டி.எம்.சி. குறைவு. குறிப்பாக, ஹேரங்கி அணை காவிரி ஒப்பந்த எல்லைக்குள் அடங்காது” என்றது. இவை எல்லாவற்றுக்கும் தமிழகம் எதிர்ப்புத் தெரிவித்தாலும் கர்நாடகம் அதைப்பற்றிக் கவலைகொள்ளாமல் 1964-இல் ஹேரங்கி அணையையும், 1965-இல் ஸ்வர்ணவதி அணையையும், 1968-இல் ஹேமாவதி அணையையும் கட்டுவதற்கு ஆயத்தமாகியது. அதற்கான திட்ட அறிக்கைகளை வெளியிட்டது. 1967- ம் ஆண்டுவரை, ``1924- ம் ஆண்டு ஒப்பந்தத்தை மதிக்கிறோம்” என்று பெயரளவுக்காவது சொல்லிவந்த கர்நாடகம், அதன்பிறகு தன் போக்கை முழுவதுமாக மாற்றிக்கொண்டது. 

வீரேந்திர பாட்டீலின் பேச்சு!

1968-இல் ஹேமாவதி அணைக்கட்டுக்கு அடிக்கல் நாட்டிய அப்போதைய கர்நாடக முதல்வர் வீரேந்திர பாட்டீல், அதன்பிறகு நடந்த சட்டசபைக் கூட்டத்தில், ``1924 ஒப்பந்தத்தை மைசூரு அரசு மதிக்காது” என்று திட்டவட்டமாகவே தெரிவித்தார். ``மேற்கண்ட அணைகளை எல்லாம் கர்நாடக அரசு செயல்படுத்தினால், தமிழகத்துக்கான நீர்வரத்துப் பெருமளவில் குறையும். குறிப்பாக, மேட்டூருக்கான நீர்வரத்து முற்றிலுமாகப் பாதிக்கப்படும்” என்று மத்திய அரசிடம் தமிழக அரசு முறையிட்டது. இதன் காரணமாக, இரண்டு மாநிலங்களிடையேயும் மீண்டும் பேச்சுவார்த்தை தொடங்கியது. இடையில், கடிதப் பரிமாற்றங்களும் நிகழ்ந்தன. மத்திய அரசு, இந்தச் சிக்கலை அதாவது, புதிய திட்டங்களை எவ்வாறு நல்ல முறையில் தீர்த்துவைப்பது என்று ஆய்ந்துகொண்டிருக்கும்போதே கர்நாடக அரசோ ஒப்பந்தங்களுக்கேற்ப கீழ்ப்பாசனப் பகுதிகளுக்கு நீர் அளிக்க வேண்டிய தன்னுடைய கடமையை முற்றிலுமாகப் புறக்கணித்துவிட்டுத் தன்னிச்சையாகக் கிருஷ்ணராஜ சாகர் அணையிலும் புதிதாக அமைக்கப்பட்ட நீர்த்தேக்கங்களிலும் தண்ணீரைத் தேக்கிவைக்கத் தொடங்கியது. 

இதுகுறித்து அப்போது கருத்துத் தெரிவித்த பேராசிரியர் ராமராவ், ``கர்நாடகம் செயல்படுத்தி வருகிற, செயல்படுத்தப்போகிற திட்டங்கள் தடைகளின்றி நடைமுறைப்படுத்த இசைவளிக்கப்படுமெனில், மேட்டூருக்கு எந்தத் தண்ணீரும் வந்து சேராது; கர்நாடக நீர்த்தேக்கங்களில் தேக்க முடியாத வெள்ளம் மட்டுமே வந்து சேரும். இறுதியில், பல்லாண்டுக்கால காவிரி ஆயக்கட்டுத் தரிசாகிவிடும்'' என்றார். 

காவிரி

மீண்டும் பேச்சுவார்த்தை!

இப்படியான சூழ்நிலையால்தான் தமிழகமும், கர்நாடகமும் மத்திய அரசின் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தின. அப்போது மத்தியில் ஆட்சியில் இருந்தவர் இந்திரா காந்தி. 1968 ஆகஸ்ட் மாதம் 19- ம் தேதி நடைபெற்ற இந்தப் பேச்சுவார்த்தையில், இந்திரா காந்தி அமைச்சரவையில் அங்கம் வகித்த மின்சாரம் மற்றும் நீர்ப்பாசனத் துறை அமைச்சர் கே.லட்சுமண ராவ் தலைமை வகித்தார். கர்நாடக சார்பில் அம்மாநில முதல்வர் வீரேந்திர பாட்டீல் பங்கேற்றார். தமிழகம் சார்பில் அறிஞர் அண்ணா தலைமையில் அங்கம் வகித்த ஆட்சியில் அப்போதைய பொதுப்பணித் துறை அமைச்சராக இருந்த மு.கருணாநிதியும், சட்ட அமைச்சராக இருந்த செ.மாதவனும் பங்கேற்றனர். அப்போது, “காவிரி நீர்ப் பங்கீடு தொடர்பாக 1892, 1924 ஆகிய ஆண்டுகளில் போடப்பட்ட ஒப்பந்தங்கள் கர்நாடக அரசால் மீறப்படுகின்றன. இதைத் தடுக்க வேண்டிய உரிமை மத்திய அரசுக்கு உள்ளது” என்று தமிழக அமைச்சர்கள் எடுத்துரைத்தனர். அதற்கு வீரேந்திர பாட்டீல், ``கர்நாடகாவில் கட்டப்படும் அணைகள் எதுவும் விதிமுறைகளை மீறியதல்ல... ஒப்பந்தங்கள் எங்களுக்கு வழங்கியிருக்கும் உரிமையின் அடிப்படையிலேயே கட்டப்படுகின்றன” என்ற வாதத்தை வைத்தார். விளைவு, அந்தப் பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படவில்லை. 

இந்தச் சூழ்நிலையில்தான், தமிழகத்தில் துயரச் சம்பவம் ஒன்று நிகழ்ந்தது. தமிழக முதல்வராக இருந்த அறிஞர் அண்ணா, உடல்நலக் கோளாறால் மரணமடைந்தார். இதையடுத்து, முதல்வராகப் பொறுப்பேற்றார் மு.கருணாநிதி. இவர், முதல்வரான பின்பு காவிரி நதிநீர் தொடர்பாக இரண்டு மாநிலங்களுக்கும் இடையில் 1970 பிப்ரவரி 9- ம் தேதி பேச்சுவார்த்தை தொடங்கியது. மத்திய நீர்ப்பாசனத் துறை அமைச்சர் கே.லட்சுமண ராவ் முன்னிலையில் நடந்த இந்தப் பேச்சுவார்த்தையின்போது, தமிழகத்தின் சார்பில் முதல்வர் மு.கருணாநிதியும், கர்நாடகம் சார்பில் அம்மாநில முதல்வர் வீரேந்திர பாட்டீலும் கலந்துகொண்டனர். அதிலும் எந்தத் தீர்வும் ஏற்படவில்லை. 

https://www.vikatan.com

- காவிரி பாயும்...

Link to comment
Share on other sites

இந்திரா காந்திக்குக் கடிதம் எழுதிய கருணாநிதி... காவிரி கைவிரிக்கப்பட்ட கதை! அத்தியாயம் - 13

 
 
Chennai: 

காவிரி நதிநீர்ப் பேச்சுவார்த்தையில், தொடர்ந்து அடுத்தடுத்தத் தோல்விகளால் துவண்டுபோனது தமிழக அரசு. இதையடுத்து, ``மாநிலங்களுக்கு இடையிலான நதிநீர்ச் சட்டம் 1956 பிரிவு 3-இன்படி இரு மாநில நதிநீர்ச் சிக்கலைத் தீர்க்கத் தீர்ப்பாயம் அமைக்க வேண்டும்” என்ற கோரிக்கையை மத்திய அரசிடம் அப்போதைய தி.மு.க. அரசு முன்வைத்தது. 

காவிரி

 

 

மத்திய அரசு நிராகரிப்பு!

காவிரி நதிநீர்ப் பிரச்னையில் தீர்ப்பாயம் அமைப்பதுதான் நிரந்தரத் தீர்வாக இருக்கும்’ என்று தமிழக அரசின் சார்பில் அதிகாரபூர்வமாகச் சொல்லப்பட்டது. ``தீர்ப்பாயம் அமைப்பதை கர்நாடகம் ஏற்கவில்லை” எனக் காரணம் சொல்லி, அந்தக் கோரிக்கையை நிராகரித்தது மத்திய அரசு. மேலும், ``இரு மாநில அரசுகளும் சம்மதித்தால் மட்டுமே தீர்ப்பாயம் அமைக்க முடியும்” எனச் சட்டத்தையும் சுட்டிக்காட்டியது. ``கர்நாடக அரசின் சம்மதத்துடன்தான் தீர்ப்பாயம் அமைக்க வேண்டும் என்றால், அது எந்தக் காலத்திலும் நடக்காது” என்றனர் தமிழக அரசியல் தலைவர்கள்.

பேச்சுவார்த்தையில் இணைந்த கேரளா!

உண்மையைச் சொல்லப்போனால், பிரதமர் இந்திரா காந்திக்கு தமிழகத்தில் அப்போது இருந்த தி.மு.க. ஆட்சியைவிட, கர்நாடகாவில் இருந்த அவருடைய காங்கிரஸ் கட்சிதான் கண்ணுக்குத் தெரிந்தது. அதனால்தான், காவிரிக்கான நீதி செத்துப்போனது; காவிரிக்கான துரோகம் மத்தியிலும், கர்நாடக மாநிலத்திலும் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் மூலமே ஆரம்பமானது. ஆனால், அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாத தமிழக அரசு, காவிரிக்காகத் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தியது. 1970-ல் மட்டும் ஏப்ரல் - 17, மே - 16, அக்டோபர் 12 மற்றும் 27 ஆகிய தேதிகளில் பேச்சுவார்த்தை நடத்தியது. 1970 அக்டோபர் 12 வரை இரண்டு மாநிலங்கள் மட்டுமே பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருந்த நிலையில், 1970 அக்டோபர் 27-ம் தேதி நடந்த பேச்சுவார்த்தையில், ``காவிரி நீரில் எங்களுக்கும் உரிமை உண்டு” என்ற தார்மீக அடிப்படையில் கேரளாவும் அதில் கலந்துகொண்டது. கேரளத்தின் சார்பில் அப்போதைய முதல்வர் ஈ.எம்.சங்கரன் என்கிற ஈ.எம்.எஸ்.நம்பூதிரி பாட் பங்கேற்றார்.

காவிரி

இந்திரா காந்திக்குக் கடிதம்!

அந்தப் பேச்சுவார்த்தைகளின்போது, கர்நாடகாவில் உள்ள கபினி, ஹேமாவதி நீர்த்தேக்கங்கள் குறித்துப் பேசப்பட்டன. ஆனாலும், எந்த உடன்பாடும் ஏற்படவில்லை. இந்தப் பேச்சுவார்த்தைகளில் தொடர் பிரதிநிதியாகக் கலந்துகொண்ட மத்திய நீர்ப்பாசனத் துறை அமைச்சர் கே.லட்சுமண ராவ், ``பேச்சுவார்த்தையின் முடிவில் மைசூரும் தமிழ்நாடும் எடுத்துள்ள முழுக்க முழுக்க நேரெதிரான நிலைகளைக் காணும்போது, தீர்வு சாத்தியமானதாகத் தெரியவில்லை” என்றார். மேலும், ``இந்த விஷயத்தில் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்துவிட்டன என அமைச்சரவையிடம் தெரிவிக்கப்போகிறேன்” என்று கூறினார். இப்படிப் பேச்சுவார்த்தைகளின் மூலம் எந்த முடிவும் ஏற்படாததால், தமிழக அரசு 1970 டிசம்பர் மாதம், பிரதமர் இந்திரா காந்திக்குக் கடிதம் ஒன்றை எழுதியது. இதுகுறித்து அப்போதைய தமிழக முதல்வர் மு.கருணாநிதி எழுதிய கடிதத்தில், “இதுவரை நடந்த பேச்சுவார்த்தைகள் எல்லாமே பலனற்றுப் போய்விட்ட நிலையில், பிரச்னையைத் தீர்க்க ஏதுவாக, மத்திய அரசு தீர்ப்பாயம் அமைக்க வேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தார். அதற்குப் பதிலளித்த பிரதமர் இந்திரா காந்தி, ``1971 மார்ச்சில் பொதுத் தேர்தல் வரவிருக்கும் நிலையில், தீர்ப்பாயம் குறித்த எவ்வித முடிவையும் எடுக்க வாய்ப்பில்லை” என்றார். 

உச்ச நீதிமன்றத்தை நாடிய தமிழகம்!

இந்த நிலையில், பிரதமர் இந்திரா காந்தி 1971 நாடாளுமன்றத் தேர்தலின்போது பெங்களூருவில், ``காவிரி நதிநீர்ப் பிரச்னை நடுவர் மன்றத் தீர்ப்புக்கு விடப்படும்” என்று பகிரங்கமாக அறிவித்தார். இதற்கிடையே காங்கிரஸும், தி.மு.க-வும் கூட்டணிவைத்து தேர்தலில் களமிறங்கின. அவர்கள் கூட்டணி அமோக வெற்றிபெற்று டெல்லியில் இந்திராவும், தமிழகத்தில் மு.கருணாநிதியும் பெரும்பான்மையுடன் ஆட்சியமைத்தனர். இப்படி மத்திய, மாநில அரசுகள் இணக்கமாக இருந்ததையடுத்து, காவிரி தீர்ப்பாயம் கோரி மீண்டும் இரண்டு கடிதங்களை எழுதினார் மு.கருணாநிதி. ஒருகட்டத்தில், காவிரிப் பிரச்னையைப் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க முடியாது. நடுவர் மன்றம் மூலம்தான் தீர்க்க முடியும் என்பதை மத்திய அரசு நன்றாக உணர்ந்திருந்தாலும், அதைப் பெரிதுபடுத்தவும் இல்லை; மு.கருணாநிதியின் கடிதங்களுக்குப் பதில் எழுதவும் இல்லை; அத்துடன், காவிரி நடுவர் மன்றத்தை, மாநிலங்களுக்கிடையிலான நதிநீர் தாவாச் சட்டம் பிரிவு 4(1)-இன் கீழ் மத்திய அரசு அமைக்கவும் இல்லை. மத்திய அரசு காவிரி நடுவர் மன்றத்தை அமைக்காததால், தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தை நாடியது.

காவிரி

தஞ்சாவூர் விவசாயிகள் மனு!

``தீர்ப்பாயம் அமைப்பதற்கான வழிகாட்டுதல்களை உச்ச நீதிமன்றம் மத்திய அரசுக்குக் கொடுக்க வேண்டும்; கர்நாடக அரசு மேற்கொண்டிருக்கும் கபினி, ஹேமாவதி, ஸ்வர்ணவதி, ஹேரங்கி உள்ளிட்ட புதிய அணைக்கட்டுகளின் பணிகளை நிறுத்திவைக்க வேண்டும்” என்ற கோரிக்கைகளுடன் 1971 ஆகஸ்ட் மாதம் தமிழக அரசு, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்தது. இதே கோரிக்கைகளை வலியுறுத்தி, தஞ்சாவூர் விவசாயிகள் சார்பில் மன்னை நாராயணசாமி (தி.மு.க. மூத்த தலைவர்), முரசொலி மாறன் (முன்னாள் மத்திய அமைச்சர்), கருப்பையா மூப்பனார் (காங்கிரஸ் மூத்த தலைவர்) ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்தனர். 

இதே காலகட்டத்தில் அண்டை மாநிலமான கேரளாவும், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தது. ``தீர்ப்பாயம் அமைக்க வேண்டும்; கர்நாடகம் மற்றும் தமிழகம் மேற்கொள்ளவிருக்கும் புதிய அணைக்கட்டுத் திட்டங்களை நிறுத்திவைக்க வேண்டும்” என அது கோரிக்கை வைத்து வழக்கைத் தாக்கல் செய்திருந்தது. இதையடுத்து பலரும் தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், ``கர்நாடக அரசு கட்டவிருக்கும் புதிய நீர்த்தேக்கங்களால், தமிழகத்துக்கு எந்த அளவுக்குச் சேதம் ஏற்படும் என்பதை நிரூபிப்பது சாத்தியமில்லை என்பதால், அந்தத் திட்டங்களுக்குத் தடைபோட முடியாது” என்றது. இது, தமிழகத்துக்குப் பின்னடைவை ஏற்படுத்தியது. ஆனாலும், தீர்ப்புக் கோரிக்கை உச்ச நீதிமன்ற விசாரணையில் நீடித்தது.

 

 

துரோகமிழைத்தது காங்கிரஸா, தி.மு.க-வா? காவிரி கைவிரிக்கப்பட்ட கதை! அத்தியாயம் - 14

 
 

காவிரி நதிநீர் குறித்த தீர்ப்புக்கான கோரிக்கை உச்ச நீதிமன்ற விசாரணையில் நீடித்தவேளையில், மறுபுறம் கர்நாடக அரசியலில் காங்கிரஸின் எதிர்காலத்தைக் கணிக்க ஆரம்பித்தார் பிரதமர் இந்திரா காந்தி.

காவிரி கைவிரிக்கப்பட்ட கதை -14

 

 

இந்திரா காந்தியின் வாக்குறுதி!

``காவிரிப் பிரச்னைக்குப் பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகாண மத்திய அரசு உதவத் தயார்” என்று அறிவிப்புச்செய்த பிரதமர் இந்திரா காந்தி, மூன்று மாநில (கர்நாடகம், தமிழகம், கேரளம்) முதல்வர்களும் பேச்சுவார்த்தை நடத்துமாறு கேட்டுக்கொண்டார்.

இந்திரா காந்தி - கருணாநிதி

இந்தச் சமயத்தில், தமிழகத்துக்கு வருகை தந்த பிரதமர் இந்திரா காந்தி, முதல்வர் மு.கருணாநிதியைச் சந்தித்து வாக்குறுதி ஒன்றை அளித்தார். “காவிரி விவகாரத்தில், மத்திய அரசு இன்னும் ஆறு மாதங்களில் நடுநிலையான தீர்ப்பு ஒன்றை உருவாக்க உதவி செய்யும். இதற்கிடையில், சம்பந்தப்பட்ட எந்த மாநிலமும் இப்போதுள்ள அளவைக் காட்டிலும் மிகையாக நீரைத் தேக்கிவைத்தோ, பயன்படுத்தியோ சிக்கலை மேலும் கடுமையாக்க வேண்டாம். காவிரியை முன்வைத்துத் தொடரப்பட்ட வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தால் பேச்சுவார்த்தை நடத்துவதும், அடுத்தடுத்த முடிவுகளை எடுப்பதும் சிரமமாக இருக்கும். ஆகவே, அந்த வழக்கைத் தாங்கள் திரும்பப் பெற வேண்டும். அதன்பிறகு, பிரச்னையைச் சுமுகமாகத் தீர்ப்பதற்குத் தேவையான எல்லா உதவிகளையும் மத்திய அரசு செய்யும்” என்றார். இதை, அப்போது வெவ்வேறு காலகட்டங்களில் பொதுப்பணித் துறை அமைச்சர்களாக இருந்த ப.உ.சண்முகம், சாதிக் பாட்ஷா ஆகிய இருவரும் உறுதிசெய்துள்ளனர். 

திரும்பப் பெறப்பட்டது வழக்கு!

மேட்டூர் அணைபிரதமர் இந்திரா காந்தியின் வாக்குறுதியை நம்பி, அப்போதைய தமிழக முதல்வர் மு. கருணாநிதி, தன்னிச்சையாக எந்த முடிவையும் எடுக்காமல், அனைத்துக் கட்சித் தலைவர்களின் கூட்டத்தைக் கூட்டி அவர்களிடம் கலந்து பேசினார். அதன்பிறகு அந்த வழக்கைத் தமிழக அரசு திரும்பப் பெறுவது என தீர்மானிக்கப்பட்டது. அப்படித் திரும்பப் பெறும் நேரத்தில்கூட, மீண்டும் வழக்குப்போட வழி வைத்துக்கொள்ள முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து, 1972-ம் ஆண்டு ஜூன் மாதம் உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசின் சார்பிலும், தஞ்சை விவசாயிகள் சார்பிலும் தாக்கல் செய்திருந்த வழக்குகள் திரும்பப் பெறப்பட்டன. இதனால்தான், காவிரிப் பிரச்னைக்குத் தீர்வு காண வழியில்லாமல் போனது எனப் பலராலும் மு.கருணாநிதி மீதும், அவருடைய கட்சி மீதும் இன்றுவரை  விமர்சனம் வைக்கப்பட்டுவருகிறது. 

காங்கிரஸே காரணம்!

உண்மையில், தி.மு.க. மீது இப்படி ஒரு விமர்சனம் வைக்கப்பட்டாலும், அதற்கு முழுக்க முழுக்கக் காங்கிரஸே காரணம்; அத்துடன், காவிரியில் தண்ணீர் வராததற்கு அந்த ஆட்சியே முக்கியக் காரணம் என்கிறார், நாத்திகம் ராமசாமி. இதுகுறித்து அவர், "1967-ம் ஆண்டுவரை நாடு முழுவதும் ஏகபோகமாக மத்தியிலும் - மாநிலங்களிலும் ஆட்சி அதிகாரத்தைக் கையில் வைத்திருந்த காங்கிரஸ் கட்சி இந்தப் பிரச்னையைத் தீர்க்க முன்வரவில்லை. ஒரு ஜனநாயக நாட்டில், அரசியல் சட்டப்படி சம அந்தஸ்துள்ள இரு மாநில அரசுகளுக்கிடையே நதிநீர்ப் பிரச்னையில் தாவா ஏற்படும்போது, நாடு முழுவதற்கும் பொதுவாக உள்ள ஒரு மத்திய அரசு, தேசிய நலனுடன் 'அனைத்து மக்களும் இந்த நாட்டு மக்கள்' என்றரீதியில், அவர்கள் பிரச்னைகள் மற்றும் உரிமைகள் அனைத்தையும் பாதுகாக்க வேண்டியது அவசியமாகும். மத்தியில் உள்ள காங்கிரஸ் அரசு அப்படிப்பட்ட அரசாக இல்லாததால், தனது குறுகிய அரசியல் நலனுக்காக, அந்தக்கட்சி பல காலகட்டங்களில் எடுத்த முடிவுகளால்தான் மக்கள் அவதிக்குள்ளாக வேண்டியிருக்கிறது. இன்று தமிழகப் பாசன உரிமைகள் பாதிக்கப்படுவதற்குக் காரணம், கர்நாடகம் அல்ல, மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் அரசுதான் என்ற விமர்சனங்களும் எழுந்தன. இப்படியேபோனால், இதற்குத் தீர்வு உண்டா, இல்லையா? மத்தியில் காங்கிரஸ் ஆட்சி இருக்கும்வரை காவிரிப் பிரச்னை தீருமா, தீராதா என்று கூற முடியாது” என்றார் அவர். மேலும், “மத்திய அரசு ஒரு தேசிய நலன் இல்லாத ஆட்சி” என்றும், “பிரச்னைகளைக் காலம் கடத்தும் போக்கைக் கடைப்பிடிப்பது மத்திய அரசுக்கு வாடிக்கையாகிவிட்டது” என நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் காங்கிரஸ் பற்றி அந்தச் சமயத்தில் விமர்சனம் செய்ததையும் நாத்திகம் ராமசாமி சுட்டிக்காட்டினார்.

காவிரி தண்ணீர்

பழைய காங்கிரஸோ, புதிய காங்கிரஸோ கர்நாடகத்திலுள்ள காங்கிரஸ்காரர்கள், 1960-களில் தொடங்கி இன்றுவரை 'காவிரி கர்நாடகத்துக்கே சொந்தம்' என்ற கொள்கையை விதைத்ததன் மூலம் தற்போது கர்நாடகத்தைச் சேர்ந்த அனைத்துக் கட்சிகளும், சங்கங்களும், அமைப்புகளும் அந்தக் கொள்கையை உறுதிப்படுத்தும்வகையில், `தமிழகத்துக்கு ஒரு சொட்டுத் தண்ணீர்கூடத் தர மாட்டோம்' என்பதைத் தாரக மந்திரமாக்கிவிட்டார்கள். மேலும், அவ்வப்போது காவிரிப் பிரச்னை தமிழகத்தில் தப்பித் தவறித் தலைதூக்கினால் தவறாமல் காங்கிரஸ்காரர்கள், குறுக்குசால் ஓட்டுவார்கள். தமிழக மக்களைத் திசைதிருப்பும்  முயற்சியில் இறங்குவார்கள். இத்துணைக்கும் உறுதுணையாக, தமிழகத்துக்குத் துரோகத்தைத் தொடர்ந்து இழைத்து வருபவர்கள் தமிழ்நாட்டுக் காங்கிரஸ்காரர்கள்தான். தமிழகத்தில் காவிரிப் பிரச்னை முற்றும்போதெல்லாம் அவர்கள், அகில இந்திய காங்கிரஸ் தலைமையின் வழிகாட்டுதலோடும், உதவியோடும் காவிரி பற்றிய உரிமையுணர்வைத் தடுக்க எண்ணற்றத் தடைகளைப் போடுவார்கள் என்ற விமர்சனமும் தமிழகக் காங்கிரஸ் மீது வைக்கப்படுகிறது.

இதைவைத்துப் பார்க்கும்போது 'காவிரிக்கு அதிக அளவில் துரோகமிழைத்தது காங்கிரஸே' என்று நன்றாகப் புரிந்துகொள்ள முடிகிறது. அதேவேளையில், தி.மு.க. மீது வைக்கும் விமர்சனத்தையும் புறந்தள்ளிவிட முடியாது. 

``வழக்கைத் திரும்பப் பெற்றது ஏன்.." - மு.கருணாநிதி. காவிரி கைவிரிக்கப்பட்ட கதை! அத்தியாயம் - 15

 
 

``காவிரி நதிநீர்ப் பிரச்னையில் தி.மு.க. அரசு வழக்கை திரும்பப் பெற்றதால்தான், இன்றுவரை அதற்குத் தீர்வு காண முடியாமல் இருக்கிறது” என்று அன்றுமுதல் இன்றுவரை அ.தி.மு.க. உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும், விவசாயச் சங்கங்களும் தி.மு.க. மீது பழி சுமத்தி வரும் வேளையில், இதுதொடர்பாகத் தி.மு.க. தலைவர் மு.கருணாநிதி வெளியிட்ட அறிக்கையையும் நாம் சற்றே தெளிவுபடுத்த வேண்டியிருக்கிறது. 

காவிரி

 

 

மு.கருணாநிதியின் அறிக்கை!

"காவிரி நதிநீர்ப் பிரச்னை தொடர்பாக, தன் மீதும், தி.மு.க மீதும் விமர்சனங்கள் வைக்கப்படுவது குறித்து, தி.மு.க. தலைவர் மு.கருணாநிதி, கடந்த 2016- ம் ஆண்டு அக்டோபர் 26- ம் தேதி விரிவான அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், ``காவிரிப் பிரச்னையில் தி.மு.க. துரோகம் செய்துவிட்டது என்றும், உச்ச நீதிமன்றத்திலே தொடுக்கப்பட்ட வழக்கினைத் தி.மு.க. தன்னிச்சையாகத் திரும்பப் பெற்றதால், குடி முழுகிவிட்டது என்றும் கடந்தகால வரலாற்று நிகழ்வுகளைப் புரிந்துகொள்ள எந்தவித முயற்சியும் எடுத்துக்கொள்ளாமல் திரும்பத்திரும்ப அறிக்கைகள் வாயிலாகவும், தொலைக்காட்சி வாயிலாகவும் வெறுப்பையும், விரோதத்தையும் சிலர் கக்கிவருகிறார்கள். அவர்களின் உண்மைக்குப் புறம்பான அந்தப் பேச்சுக்கு முக்கியத்துவம் தரவேண்டிய அவசியம் இல்லை என்றபோதிலும், நடந்தது என்னவென்பதைப் புரியாதவர்களுக்கும், புரிந்தும் புரியாததைப்போல நடிப்பவர்களுக்கும் அழுத்தந்திருத்தமாகப் புரியவைக்க வேண்டும் என்ற ஜனநாயகக் கடமையின் அடிப்படையில் பின்வரும் விளக்கத்தை அளிக்க விரும்புகிறேன்.

நான் பிறந்த வருடமான 1924-க்கும் காவிரிப் பிரச்னைக்கும் மிகுந்த தொடர்பு உண்டு. அப்போதுதான் மைசூரு ராஜ்ஜியமாக இருந்த கர்நாடக மாநிலத்துக்கும், சென்னை ராஜதானியாக இருந்த தமிழ்நாட்டுக்கும் காவிரி சம்பந்தமான நதிநீர்ப் பங்கீட்டு ஒப்பந்தம் கையெழுத்தானது. மேலும், 50 ஆண்டுகளுக்குப் பிறகு காவிரியில் வரக்கூடிய உபரிநீரை இரு மாநிலங்களும் எப்படிப் பகிர்ந்துகொள்வது என்பது பற்றிக் கலந்துபேசி அதனை முறைப்படுத்திக் கொள்வதற்கான அடிப்படையில் முடிவெடுப்பது என்றும், ஒருவேளை அதில் பிரச்னைகள் ஏற்படின், மத்திய அரசை நாடியோ, நடுவர் மன்றத் தீர்ப்பை நாடியோ உரிய முடிவெடுக்கக்கூடிய வழிவகை காண்பது பற்றித் தீர்மானித்திட 1974- ம் ஆண்டு ஆய்வு செய்யலாம் என்பதும்தான் 1924- ம் ஆண்டு ஒப்பந்தமாகும். 

கருணாநிதி

இடைப்பட்ட 50 ஆண்டுக் காலத்தின் பெரும்பகுதி பிரச்னைகள் எதுவும் அதிகமின்றி நிலைமை இருந்ததற்கு மாறாக; 1974-க்கு முன்பே கர்நாடக மாநில அரசினர், 1924- ம் ஆண்டு ஒப்பந்தமே 1974- ம் ஆண்டு முடிந்துவிடுகிற ஒப்பந்தமென்று வாதிடத் தலைப்பட்டு; அதற்கு முன்னதாகவே 1924- ம் ஆண்டு ஒப்பந்தப் பிரிவுகளுக்கு மாறாக 1968- ம் ஆண்டிலேயே ஹேமாவதி, ஹேரங்கி அணைகளைக் கட்டத் தொடங்கிவிட்டனர். அப்போது அறிஞர் அண்ணா தலைமையில் இருந்த தி.மு.க அரசு, தனது கடும் எதிர்ப்பைத் தெரிவித்ததுடன்; மத்திய அரசு உடனடியாகத் தலையிட வேண்டுமென்றும் கோரியது. மத்திய அரசு செய்த ஏற்பாட்டின்படி, 19-8-1968 அன்றும், 20-8-1968 அன்றும் டெல்லியில் காவிரி தொடர்புடைய மாநில அரசுப் பிரதிநிதிகளின் கூட்டம் நடைபெற்றது. அந்தப் பேச்சுவார்த்தையை மத்திய நீர்ப்பாசனத் துறை அமைச்சர் திரு.கே.எல்.ராவ் முன்னிலை வகித்து நடத்தினார்.

கர்நாடக முதலமைச்சர் வீரேந்திர பாட்டீல் பொதுப்பணித் துறையையும் கவனித்தார் என்ற முறையில் அதில் கலந்துகொண்டார். தமிழகப் பொதுப்பணித் துறை அமைச்சர் என்ற முறையில் நான், சட்ட அமைச்சர் மாதவனுடன் டெல்லி சென்று அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டேன். முக்கியமாக 1892 மற்றும் 1924-ஆம் ஆண்டு ஒப்பந்தங்கள் மீறப்படுவதைத் தடுக்க வேண்டும் என்பதுதான் தமிழக அரசின் வாதமாக எடுத்துவைக்கப்பட்டது; முடிவு எதுவும் தோன்றவில்லை. பின்னர், 1969-இல் அண்ணா மறைந்த பிறகு 1970 பிப்ரவரி 9- ம் நாள், மீண்டும் கே.எல்.ராவ் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதிலும், மகிழ்ச்சியடையக்கூடிய முடிவு எதுவும் ஏற்படவில்லை.

காவிரி

திரும்பத்திரும்ப நாம் வலியுறுத்தியதன் காரணமாக, 1970 ஏப்ரல் 17, மே 16, அக்டோபர் 12 மற்றும் அக்டோபர் 27 ஆகிய நாள்களில் மாநில முதலமைச்சர்கள் மட்டத்தில் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. எனினும், அவை பலனளிக்கவில்லை. எனவே, 1971 ஜூலை 8- ம் நாள் காவிரிப் பிரச்னைக்கு நடுவர் மன்றம் அமைக்க வேண்டுமென்று கழக அரசு சட்டப்பேரவையில் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது. 

தொடர்ந்து ஆகஸ்ட் திங்களில் நடுவர் மன்றம் அமைக்க மத்திய அரசுக்கு ஆணை வழங்கக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது. கர்நாடக அரசு, புதிய அணை கட்டும் வேலைகளைத் தொடராமல் தடுக்கவும், காவிரிப் பிரச்னையை நடுவர் மன்றத்துக்கு விடவும் தஞ்சை விவசாயிகள் சார்பில் முரசொலி மாறன் ஒரு வழக்கு தொடுத்தார்.

21-5-1972 அன்று தமிழகத்துக்கு வருகை தந்த பிரதமர் இந்திரா காந்தி, ‘வழக்கு இல்லாமலே பேச்சுவார்த்தை மூலமே சுமுகத் தீர்வு காணலாம்’ என்று கூறினார்கள். அப்போது இந்திரா காந்தி அம்மையார், ‘இந்தப் பிரச்னையில் நான் பேசுவதென்றால், இடையில் நீங்கள் ஒரு வழக்குப் போட்டிருக்கிறீர்களே, இந்த வழக்கு இருக்கும்போது பேச முன்வருவார்களா? எனவே, என்னை நம்பி இந்த வழக்கைத் திரும்பப் பெறுங்கள்’ என்று கேட்டார்கள். அப்போதுகூட நான் தன்னிச்சையாக எந்த முடிவையும் எடுக்காமல், அனைத்துக் கட்சித் தலைவர்களின் கூட்டத்தைத் தலைமைச் செயலகத்திலே கூட்டிக் கலந்துபேசி, அந்த வழக்கைத் தமிழக அரசு திரும்பப் பெறுவது என்று தீர்மானித்து - அப்படித் திரும்பப் பெறுகின்ற நேரத்திலேகூட மீண்டும் வழக்குப்போட வழி வைத்துக் கொண்டுதான் அந்த வழக்கை, தற்காலிகமாகத் திரும்பப் பெறுவதென முடிவெடுக்கப்பட்டது. 

உச்ச நீதிமன்றத்தில் இருந்த வழக்கைத் தமிழக அரசு திரும்பப் பெறக் காரணம் இதுதான். ஜனநாயக அடிப்படையில், அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்தி எடுக்கப்பட்ட இந்த முடிவைத்தான் முன்பு அ.தி.மு.க-வினரும், தற்போது பி.ஜே.பி-யினரும் காவிரிப் பிரச்னையில் தி.மு.க-வும், நானும் துரோகம் செய்துவிட்டதாகத் திரும்பத்திரும்ப வேண்டுமென்றே அடிப்படைப் பிரச்னையைத் திசை திருப்பக்கூடிய வகையில் குறைகூறுகிறார்கள்” என்று அதில் தெரிவித்துள்ளார். 

இப்படி, தி.மு.க. தலைவர் மு.கருணாநிதி விரிவான அறிக்கை வெளியிட்டும், அவர் மீதும் அவருடைய ஆட்சியின் மீதும் பலராலும் விமர்சனம் வைக்கப்படுகிறது. அதாவது, ஒவ்வொரு முறையும் காவிரிப் பிரச்னை தொடர்பாக விஸ்வரூபம் எடுக்கும்போதெல்லாம் தொடர்ந்து தி.மு.க. மீது விமர்சனம் வைக்கப்படுகிறது. 

காவிரி பாயும்...

https://www.vikatan.com/news/tamilnadu/126491-the-abandoned-story-of-cauvery-series-15.html

Link to comment
Share on other sites

காவிரி பிரச்னையில் கர்நாடகத்தின் ஒற்றுமை! - காவிரி கைவிரிக்கப்பட்ட கதை! அத்தியாயம் - 16

 
 
Chennai: 

``காவிரிப் பிரச்னையில் கருணாநிதி கடந்த 20 ஆண்டுகளாகச் செய்யக்கூடாததைச் செய்தும், செய்ய வேண்டியதைச் செய்யாமலும் விட்ட பெருங்குற்றங்களால்தான், நாம் இன்று காவிரியை இழந்துகொண்டிருக்கிறோம் என்பதைத் தெளிவாகப் புரிந்துகொள்ள இயலாது” என்று கருணாநிதி மீது குற்றம்சாட்டுகிறார் பூ.அர.குப்புசாமி. 

காவிரி

 

 

கருணாநிதி மீது விமர்சனம்!

குப்புசாமி மட்டுமல்ல... இன்னும் பலரும் காவிரிப் பிரச்னையில் கருணாநிதி மீது குற்றம் சுமத்திக்கொண்டுதான் இருக்கிறார்கள். மேலும் அவர், “இந்திரா காந்தியின் பேச்சைக் கேட்டு, காவிரி வழக்கை உச்ச நீதிமன்றத்திலிருந்து கருணாநிதி திரும்பப் பெறாமல் இருந்திருந்தால், 1975-ம் ஆண்டுவாக்கிலேயே நடுவர் மன்றம் அமைக்கப்பட்டிருக்கும். கர்நாடகாவைப் பொறுத்தவரை, காவிரி விஷயத்தில் அனைத்துக் கட்சிகளும் ஒரே குரலில் பேசி வருகின்றன. ஆனால், தமிழகத்தில் அண்ணாவின் மறைவுக்குப் பிறகு வந்த தி.மு.க. அரசு அதுபோன்று செய்யவில்லை” என்ற விமர்சனத்தை கருணாநிதி மீது வைக்கிறார். இவர் மட்டுமல்ல... இன்னும் பலரும் இன்றுவரை கருணாநிதி மீது விமர்சனத்தை வைக்கின்றனர். 

தனி திறமைசாலி!

இப்படி, காவிரி விவகாரம் பற்றி எரியும்போதெல்லாம் தி.மு.க. மீதும், அதன் தலைவர் கருணாநிதி மீதும் விமர்சனம் வைக்கப்படுவது ஒருபுறம் இருந்தாலும், மறுபுறம்  தமிழகத்துக்கானத் தண்ணீரைக் கேட்டு வாங்கிவிடுவதில் கருணாநிதி மிகச் சிறந்த திறமைசாலி என்கிறார் முன்னாள் பிரதமர் தேவகவுடா.

இதுகுறித்து ‘தெற்கிலிருந்து ஒரு சூரியன்’ என்ற புத்தகத்தில் அவர் அளித்திருக்கும் பேட்டியில், “தமிழகம் - கர்நாடகம் என்றாலே, காவிரிப் பிரச்னைதானே முதலில் வந்து நிற்கும். பொதுவாக, பற்றாக்குறையால் தமிழகத்துக்குத் தண்ணீர் திறந்துவிட முடியாத சூழல் ஏற்படும்போது, தமிழக முதல்வராக இருப்பவர், கர்நாடக முதல்வரிடம் பேசுவதும், தண்ணீர் திறந்துவிடுமாறு கடிதம் எழுதுவதும் வழக்கம். ஆனால், கருணாநிதி எப்படியாவது தண்ணீரைப் பெற்றுவிட வேண்டும் என்பதற்காகப் புதுப்புது யுக்திகளைக் கையாள்வார். கர்நாடகத்தில் தேவராஜ் அர்ஸ் முதல்வராக இருந்தபோது, தமிழகத்தில் கருணாநிதி முதல்வராக இருந்தார். அந்தச் சமயத்தில், அங்கே நான் (தேவகவுடா) எதிர்க் கட்சித் தலைவராக இருந்தேன். தேவராஜ் அர்ஸை நேரில் சந்தித்த கருணாநிதி, ‘தமிழக விவசாயிகள் தவிக்கிறார்கள்; மறுத்துவிடாதீர்கள்’ என்று அவரிடம் தண்ணீருக்காக மிகவும் உருக்கமாகக் கோரிக்கை விடுத்தார். 

கருணாநிதி

நீங்களும் ஒரு விவசாயி!

இதுதொடர்பாக தேவராஜ் அர்ஸை நேரில் சந்தித்த நான், ‘எக்காரணம் கொண்டும் தமிழகத்துக்குத் தண்ணீர் கொடுக்கக் கூடாது’ என்று எச்சரித்துவிட்டு வந்தேன். இந்தச் சூழலில், தேவராஜ் அர்ஸைச் சந்தித்ததோடு, யாருமே எதிர்பாராத வண்ணம் என்னையும் வந்து சந்தித்தார், கருணாநிதி. அப்போது அவர், ‘நீங்களும் ஒரு விவசாயி; சக விவசாயிகளின் வலியைக் கொஞ்சம் புரிந்துகொள்ளுங்கள்... மனதுவையுங்கள்’ என்று என் கையைப் பற்றிக்கொண்டு கேட்டார். இந்த அணுகுமுறை என்னை நெகிழச் செய்துவிட்டது. அன்று தொடங்கி கவனித்துவருகிறேன். அவர், முதல்வராக இருக்கும் காலகட்டத்தில் இதுபோன்று எப்படியாவது பேசி தமிழ்நாட்டுக்குத் தண்ணீரை வாங்கிவிடுவார்” என்று  தெரிவித்திருக்கிறார் நெகிழ்ச்சியுடன்.

எப்போதும் கர்நாடகத்திடமிருந்து கடுகளவுகூடத் தண்ணீரை வாங்க முடியாத சூழலில், இப்படியெல்லாம் கருணாநிதி ஏதாவது ஒன்றைச் சொல்லி உரிய நேரத்தில் தண்ணீரை வாங்கியிருக்கிறார் என்றால், உண்மையிலேயே நாம் பெருமைப்பட வேண்டிய விஷயம்தான். அப்படி, ஒருவேளை தமிழகத்துக்குத் தண்ணீர் கிடைக்காதநிலை வந்தால்கூட, தஞ்சையை வளர்ச்சிக்குள் கொண்டுவந்து விடுவார் என்கிறார், தி.மு.க. மூத்தத் தலைவர் எல்.கணேசன். அவர், “தஞ்சைக்கு நீர் வராமல் தரிசாகி விட்டாலும், கலைஞர் தஞ்சையைத் தொழில் மயமாக்கிவிடுவார்” என்கிறார். 

காவிரியைப் பற்றிப் பேசக்கூடாது!

தமிழக அரசியல் வரலாற்றில், ஏன் இந்திய அரசியலிலும்கூட கருணாநிதிக்கென்று நிச்சயமாக தனியானதொரு இடமுண்டு. அந்த வரலாற்றின் ஓர் அத்தியாயத்தில் காவிரி பற்றிய செய்திகளிலும் கருணாநிதி இடம்பிடித்திருப்பார். தி.மு.க-வின் முக்கியத் தலைவரும், கருணாநிதியின் அக்காள் மகனுமான முரசொலி மாறனின் புதல்வர் கலாநிதி மாறன் - காவேரி திருமண வரவேற்பில் கர்நாடக முன்னாள் முதல்வர் எஸ்.ஆர்.பொம்மை கலந்துகொண்டார். அந்த நிகழ்வில் பேசிய தி.மு.க. பிரமுகர்கள் பலரும், ``தலைவர் (கருணாநிதி), ‘காவிரி’யைத் (கலாநிதி மாறனின் மனைவி கர்நாடகத்தைச் சேர்ந்தவர்) தமிழ்நாட்டுக்குக் கொண்டுவந்துவிட்டார்” என்றனர். கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த பெண்ணை கலாநிதி மாறனுக்கு மணமுடித்ததால், இவ்வாறு பலரும் பேசினர். இறுதியில் பேசிய எஸ்.ஆர்.பொம்மை, ``காவிரியைக் கேட்டீர்கள்... கொடுத்துவிட்டோம். பிரச்னை முடிந்தது; இனி, யாரும் காவிரி வேண்டும் எனப் பேசக்கூடாது” என்றார்.

காவிரி

இந்தக் கூற்றைப் பார்க்கும்போது, கர்நாடகத்தில் ஆட்சிக்கு வரும் எந்த முதல்வரானாலும், அவர் எந்தக் கட்சியைச் சேர்ந்தவரானாலும், `தமிழகத்துக்குக் காவிரி நீரைத் திறந்துவிட மாட்டோம்’ என்பதில் ஒற்றுமையாக இருக்கிறார்கள்; இருந்துகொண்டு வருகிறார்கள் என்பதை நாம் தற்போதுவரை தெளிவாக உணர முடிகிறது. அதேபோல், கர்நாடகத்தில் எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர்களும், விவசாயச் சங்கங்களைச் சேர்ந்தவர்களும் இந்த விஷயத்தில் ஒற்றுமையாக இருக்கிறார்கள் என்பதையும் நாம் தெளிவாகத் தெரிந்துகொள்ளலாம். ஆனால், தமிழகத்தில் மட்டும் காவிரிக்கு ஆதரவாகத் தலைகீழ் மாற்றம் இருக்கிறது.

அதேபோல், கடந்த 2009-ம் ஆண்டு போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில், முதுகு தண்டுவட அறுவை சிகிச்சைக்காக கருணாநிதி அனுமதிக்கப்பட்டிருந்தார். அறுவை சிகிச்சை எல்லாம் வெற்றிகரமாக முடிந்துவிட்டது. அந்தச் சமயத்தில் மருத்துவர், அங்கிருந்த பெண் செவிலியரிடம், ``மயக்கம் தெளிந்து பேஷன்ட் விழிக்கும்போது, அனஸ்தீஸியாவின் பாதிப்பால்  தண்ணீர் தாகம் எடுக்கும். ஆனாலும் அதிக அளவில் தண்ணீர் கொடுத்துவிடக் கூடாது. அது, உடல்நிலையைப் பாதிக்கும். எனவே, நாக்கு நனையும்படி சில சொட்டு நீரை மட்டும் கொடுங்கள்” என்று அறிவுறுத்திவிட்டுக் கிளம்பிச் சென்றுவிட்டார்.

கருணாநிதிக்கு மெள்ள மயக்கம் தெளிய ஆரம்பித்தது. மருத்துவர் சொல்லியிருந்ததுபோலவே, அவருக்குத் தாகம் எடுத்தது. செவிலியரை அழைத்து தண்ணீர் கேட்டார். அந்தச் செவிலியரும் மருத்துவர் சொல்லியிருந்தபடியே சில துளி நீரை மட்டும் பருகக் கொடுத்தார். தாகம் தணியாத கருணாநிதி, மீண்டும் குடிக்கத் தண்ணீர் கேட்டார். அப்போதும், அந்தச் செவிலியர் சில துளி நீரை மட்டும் கொடுக்கவே.... “ஏம்மா... உன்பேரு என்ன ‘காவிரி’யா” என்று கேட்டேவிட்டார் கருணாநிதி. அந்த செவிலியப் பெண்ணுக்கோ அவரின் கேள்வி புரியவில்லை. ஆனால், உடனிருந்த அனைவரும் அந்தச் சூழ்நிலையிலும் சிரித்துவிட்டனர். அதாவது, காவிரி விவகாரத்தில் தமிழகத்துக்கு இழைக்கப்படும் துரோகத்தைத்தான் அப்படி நகைச்சுவையாய் வெளிப்படுத்தியிருந்தார், கருணாநிதி. 

இப்படிக் காவிரி பற்றிய விவகாரங்களில் கருணாநிதியின் பெயர் பல்வேறு தருணங்களில் இடம்பெற்றிருந்தாலும், தமிழகத்தில் அவரின் ஆட்சிக்காலத்தின்போது காவிரிப் பிரச்னைக்காக எண்ணற்ற தீர்மானங்களையும் கருணாநிதி நிறைவேற்றியிருக்கிறார். அவற்றில் முக்கியமான ஒன்று, காவிரி நதிநீர்ப் பிரச்னையில் நடுவர் மன்றம் அமைத்திட வேண்டும் என்று சட்டமன்றத்தில் 8-7-1971 அன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டதுதான் எனலாம். 

இதையடுத்து, காவிரிப் பிரச்னை குறித்து விவாதிக்க மூன்று மாநில (கேரளம், கர்நாடகம், தமிழ்நாடு) முதல்வர்களும் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராயினர்.

 

- காவிரி பாயும்...

https://www.vikatan.com/news/tamilnadu/126727-the-abandoned-story-of-cauvery-series-16.html

Link to comment
Share on other sites

புதிய ஒப்பந்த வரைவுக்குக் கர்நாடகம் எதிர்ப்பு! - காவிரி கைவிரிக்கப்பட்ட கதை! அத்தியாயம் - 17

 

காவிரி நதிநீர்ப் பிரச்னை தொடர்பாக 1972- ம் ஆண்டு மே மாதம் முதல்வர்களாக அப்போது பதவியில் இருந்த தமிழகத்தின் கருணாநிதி, கேரளாவின் அச்சுதமேனன், கர்நாடகத்தின் தேவராஜ் அர்ஸ் ஆகியோர் டெல்லியில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர். மத்திய நீர்ப்பாசனத் துறை அமைச்சர் கே.லட்சுமண ராவ் முன்னிலையில் நடந்த இந்தப் பேச்சுவார்த்தையின்போது சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. 

காவிரி

 

இந்தக் கட்டுரையின் முந்தைய அத்தியாயத்தைப் படிக்க இங்கு க்ளிக் செய்யவும்...

இந்தச் சந்திப்பின்போது, `பேச்சுவார்த்தை மூலமே காவிரிப் பிரச்னைக்குத் தீர்வு காண்பது; காவிரி உண்மை அறியும் குழுவை அமைப்பது’ என முடிவெடுக்கப்பட்டது. மேலும், ``மத்திய அரசாங்கம் இன்னும் ஆறு மாதங்களில் நடுநிலையான தீர்வு ஒன்றினை அடைய உதவி செய்யும். இதனிடையில், எந்தவொரு மாநிலமும் இப்போதுள்ள அளவைக் காட்டிலும், மிகையாகக் காவிரி நீரைத் தேக்கிவைத்தோ அல்லது பயன்படுத்தியோ சிக்கலை மேலும் கடுமையாக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாது” என்கிற ஒப்பந்தம் மூன்று மாநிலங்களுக்கு இடையே செய்துகொள்ளப்பட்டது. இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில், உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்திருந்த காவிரிப் பிரச்னை தொடர்பான வழக்கு வாபஸ் பெறப்பட்டது. 

காவிரி உண்மை அறியும் குழு!

மூன்று மாநிலங்களின் முதல்வர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, காவிரி வடிநிலப் பகுதியில் பயனடையும் பகுதியின் அளவு, பயன்படுத்தப்படும் தண்ணீரின் அளவு போன்ற விவரங்களைத் திரட்டுவதற்காகக் காவிரி உண்மை அறியும் குழு, 1972- ம் ஆண்டு ஜூன் 12- ம் தேதி அமைக்கப்பட்டது. இந்தக் குழுவில் இரண்டு பொறியாளர்கள் (பி.ஆர்.அஹுஜா, ஜதீந்திர சிங்) உள்பட ஓய்வுபெற்ற விவசாயத் துறை ஆணையர் (ஜே.எஸ்.படேல்) ஒருவரும், நீதிபதி பி.டி.பால் ஆகியோரும் இடம்பெற்றிருந்தனர். `1972- ம் ஆண்டு ஜூன் 15-இல் ஆரம்பித்து அதே ஆண்டு செப்டம்பர் 15- ம் தேதிக்குள் இந்தக் குழுவினர் அறிக்கையைச் சமர்ப்பிக்க வேண்டும்’ எனக் காலக்கெடு விதிக்கப்பட்டது. இக்குழுவினர் தனது ஆய்வுகளை முடித்து அறிக்கை கொடுக்கும்வரை, `சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் எடுக்கும் எந்தவொரு நடவடிக்கையும் காவிரிப் பிரச்னையை மேலும் பலவீனம் செய்துவிடாத வகையில் இருக்க வேண்டும்’ என்று அந்தக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. அதனடிப்படையில் தயாரிக்கப்பட்ட ஆய்வறிக்கை, 1972 டிசம்பர் 15- ம் தேதி மத்திய அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டது. 

காவிரி

ஒருநபர் கமிட்டி!

ஆய்வறிக்கையைப் படித்துப் பார்த்த மூன்று மாநில முதல்வர்களும் மத்திய அமைச்சர் கே.லட்சுமண ராவுடன் மீண்டும் ஆலோசனை நடத்தினர். அத்துடன், உண்மை அறியும் குழுவிடமும் கோரிக்கை வைக்கப்பட்டது. அதன்படி, 1973- ம் ஆண்டு அக்டோபர் மாதம் மத்திய நீர்ப்பாசனத் துறை கூடுதல் செயலாளர் சி.சி.படேல் தலைமையில் ஒருநபர் கமிட்டி ஒன்றை அமைத்தது மத்திய அரசு. காவிரி நதிநீர்ச் சிக்கல்கள் குறித்து படேல் ஆய்வுகளை மேற்கொண்டார். இது ஒருபுறமிருக்க, மறுபுறம் 1974-இல் மாநில முதல்வர்களுடன் மத்திய அமைச்சர்கள் தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அந்த ஆண்டு ஜூன் மாதம் நடைபெற்ற பேச்சுவார்த்தையின்போது கே.சி.பந்தும், நவம்பர் மாதம் நடைபெற்ற பேச்சுவார்த்தையின்போது ஜெகஜீவன் ராமும் கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

காவிரிப் பள்ளத்தாக்கு ஆணையம்!

1974- ம் ஆண்டு நவம்பர் 29 அன்று கூடிய கூட்டத்தில், மத்திய அரசு தயாரித்த காவிரி ஒப்பந்த வரைவு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. இந்த வரைவு அறிக்கையில் மூன்று முக்கிய இலக்குகள் இடம்பெற்றன. `காவிரி நீருக்கு உரிமையுள்ள மாநிலங்கள் நான்கும் அதனை உகந்த வகையில் பயன்படுத்திக்கொள்வது; சிக்கனமான வகையில் நீரைப் பயன்படுத்துவதன் மூலம் உபரிநீரைக் கூடுதல் நீர்ப்பாசனத் திட்டங்களுக்கும் தொழில் திட்டங்களுக்கும் பயன்படுத்திக்கொள்வது; நீர்த்தேக்கங்களின் பராமரிப்பையும் செயல்பாடுகளையும் ஒருங்கிணைப்பதன் வழியே சிறப்பான வகையில் காவிரி நீரைப் பயன்படுத்திக்கொள்வது’ என்கிற அந்த இலக்குகளை வைத்து காவிரிப் பள்ளத்தாக்கு ஆணையம் (Cauvery Valley Authority) உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பில், பல்வேறு அம்சங்கள் வலியுறுத்தப்பட்டன. குறிப்பாக, `சம்பந்தப்பட்ட மாநிலங்கள் தங்களுடைய பாசனத்துக்குத் தேவையானதுபோக எஞ்சிய நீரை வீணாக்காமல் சேமிப்பதை உறுதிசெய்து, அப்படிச் சேமிக்கப்பட்ட நீரை அந்தந்த மாநிலங்களுக்கே மறுபடியும் பகிர்ந்தளிக்க ஏற்பாடு செய்வது; கிடைக்கக்கூடிய நீரின் அளவு குறித்த துல்லியமான தகவல்களைச் சேகரித்து, அதன் வழியே மாநிலங்களுக்குக் கிடைக்க வேண்டிய நீரின் அளவு உரிய விகிதத்தில் கிடைப்பதற்கு உறுதி செய்வது’ எனப் பல சிறப்பம்சங்கள் இடம்பெற்றன. 

கருணாநிதி

கர்நாடகம் எதிர்ப்பு!

இந்த அம்சங்களுடன் கூடிய ஒப்பந்த வரைவு அறிக்கை விவாதிக்கப்பட்டபோது, மாநிலங்களுக்குள் கருத்து வேறுபாடுகளும் எழத்தொடங்கின. குறிப்பாக, கர்நாடகம் எப்போதும்போல எதிர்வினை ஆற்றத் தொடங்கியது. இதுகுறித்து, அப்போது கர்நாடக நீர்வளத் துறை அமைச்சராக இருந்த நஞ்சே கெளடா, ``புதிய ஒப்பந்த வரைவு, 1924- ம் ஆண்டில் செய்யப்பட்ட ஒப்பந்தத்தைவிட ஆயிரம் மடங்கு அதிகமான அநீதியை இழைக்கும். இதனைக் கர்நாடக அரசு ஏற்றுக்கொண்டால், கர்நாடகத்துக்குப் பேரழிவு காத்திருக்கிறது” என்றார். கர்நாடக பொதுப்பணித் துறை அமைச்சராக இருந்த சென்னபசப்பா, ``அறிவியல்பூர்வமற்ற, நடைமுறை சாத்தியமற்ற ஒப்பந்த வரைவு இது” என்றதுடன், ``இதை ஏற்றுக்கொண்டால் குழப்பமும், குளறுபடியுமே மிஞ்சும்” என்று எச்சரித்தார். 

மத்திய அரசுக்குக் கடிதம்!

 

இதையடுத்து, அந்த ஒப்பந்த வரைவு அறிக்கை சம்பந்தப்பட்ட மாநிலங்கள் மீண்டும் விவாதித்தபோதிலும் அதில் திருப்தியில்லாமல் போனது. இப்படிப் பேச்சுவார்த்தையால் பலனில்லாமல் போகவே தமிழக முதலமைச்சராக இருந்த கருணாநிதி அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி காவிரிப் பிரச்னை குறித்து விவாதித்தார். அதில், `காவிரிப் பிரச்னையைத் தீர்க்க தீர்ப்பாயம் அமைக்க வேண்டும்’ என்று முடிவெடுக்கப்பட்டது. அதன்படி, `விரைவில் தீர்ப்பாயத்தை அமைக்க வேண்டும்’ என வலியுறுத்தி மத்திய அரசுக்குத் தமிழக அரசின் சார்பில் கடிதம் எழுதப்பட்டது. அத்துடன், தி.மு.க. எம்.பி-க்கள், பிரதமர் இந்திரா காந்தியையும், ஜனாதிபதி பக்ருதீன் அலி அகமதுவையும் சந்தித்து உடனே தீர்ப்பாயம் அமைக்கும்படி வலியுறுத்தினர். 

- காவிரி பாயும்....

காவிரிக்காக ஜெயலலிதா உண்ணாவிரதம்... காவிரி கைவிரிக்கப்பட்ட கதை! அத்தியாயம் -18

 
 

காவிரி நதிநீர்ப் பிரச்னை தொடர்பாக மாநிலங்களுக்குள் தீர்ப்பாயம் அமைப்பது குறித்து மத்திய அரசிடம் தமிழக அரசு கோரிக்கை வைத்தது. ஆனால், அந்தக் கோரிக்கையைப் பிரதமராக இருந்த இந்திரா காந்தி ஏற்கவில்லை. இது ஒருபுறமிருக்க, மறுபுறம் இந்தியாவிலும், தமிழகத்திலும் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. பிரதமராக மொரார்ஜி தேசாய் பதவியேற்றார். தமிழகத்தில் எம்.ஜி.ஆர். முதல்வராகப் பதவியேற்றார். அவர் ஆட்சியிலும், காவிரி விவகாரம் குறித்து பேசப்பட்டது. அவரும், அப்போதைய கர்நாடக மாநில முதல்வரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால், அதிலும் எந்தத் தீர்வும் எட்டப்படவில்லை. இந்த நிலையில் மீண்டும் இந்திரா காந்தி பிரதமராக, காவிரி குறித்த பேச்சுவார்த்தை தொடங்கியது. 

காவிரி

 

மீண்டும் பேச்சுவார்த்தை!

1980-ம் ஆண்டு தமிழக முதல்வர் எம்.ஜி.ஆரும், கர்நாடக முதல்வர் குண்டு ராவும் பேச்சுவார்த்தை நடத்தினர். எப்போதும்போல அதுவும் தோல்வியில் முடிந்தது. இறுதியில், பெரிய எதிர்பார்ப்புடன் எம்.ஜி.ஆரும், குண்டு ராவும் 1981- ம் ஆண்டு அக்டோபர் 14- ம் தேதி சந்தித்துப் பேசினர். ஆனால், அதுவும் தோல்வியிலேயே முடிந்தது. இடையிடையே காலங்கள் உருண்டோடிய போதும், மத்தியிலும், மாநிலங்களிலும் காவிரிக்கான பிரச்னைக்கு மட்டும் நிரந்தரத் தீர்வு ஏற்படவில்லை. கர்நாடகாவில் புதிய முதல்வரான ராமகிருஷ்ண ஹெக்டேவிடமும் தமிழகத்தின் சார்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால், அதிலும் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இதையடுத்து, மீண்டும் தீர்ப்பாயப் பிரச்னையைக் கையிலெடுத்தது தமிழக அரசு. இந்தக் காலகட்டத்தில்தான் மன்னார்குடி ரங்கநாதனும் தீர்ப்பாயம் வேண்டி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

காவிரித் தீர்ப்பாயம்!

இடைப்பட்ட காலத்தில்தான் எம்.ஜி.ஆரின் மரணமும், அவருக்குப் பின் வந்த ஜானகி ஆட்சியின் கலைப்பும் நிகழ்ந்தேறின. என்றாலும் காவிரி சம்பந்தமாகப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டும் எந்தப் பலனுமில்லை. இதில், குடியரசுத் தலைவர் ஆட்சி அமலில் இருந்தபோதும் காவிரிப் பிரச்னை சம்பந்தமாகப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், அந்தச் சமயத்தில் நடைபெற்ற தேர்தலில் (1989) தி.மு.க. வெற்றிபெற்று கருணாநிதி மீண்டும் தமிழக முதல்வரானார். இதையடுத்து மீண்டும் காவிரிப் பிரச்னை துளிர்விட ஆரம்பித்ததோடு, ஒருவழியாகத் தீர்ப்பாயமும் அமைக்கப்பட்டது. காவிரித் தீர்ப்பாயம் அமைந்ததை மிகக் கடுமையாக எதிர்த்தது கர்நாடகம். இதுதொடர்பான பிரச்னை ஒருபுறம் வலுத்துக்கொண்டே இருந்தாலும், மறுபுறம் காவிரி குறித்த பிரச்னையைத் தீர்ப்பாயத்திடம் முறையிட்டது தமிழக அரசு. 

காவிரி

அரசிதழில் வெளியிடல்!

இதையடுத்து, காவிரி நதிநீர்த் தீர்ப்பாயம் இடைக்காலத் தீர்ப்பு ஒன்றை வழங்கியது. அதில், தமிழகத்துக்கு ஆண்டுக்கு, 205 ஆயிரம் மில்லியன் கன அடி (டி.எம்.சி) நீரைக் கர்நாடகம் தமிழகத்துக்கு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது. இந்தத் தீர்ப்பை தமிழகம் வரவேற்றபோதிலும், கர்நாடக அரசு எதிர்ப்பைக் காட்டியது. இதனால், தீர்ப்பாயம் வழங்கிய இடைக்கால தீர்ப்பை அமல்படுத்த எந்தவொரு நடவடிக்கையையும் மத்திய அரசு எடுக்கவில்லை. இந்தச் சமயத்தில், தமிழகத்தில் முதல்வராக இருந்த ஜெயலலிதா, இடைக்கால உத்தரவை அரசிதழில் வெளியிடச் சொல்லி மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்தார். அத்துடன், அனைத்துக் கட்சிகளையும் கூட்டி இதுதொடர்பாகத் தீர்மானங்களையும் நிறைவேற்றினார். இது ஒருபுறமிருக்க, மறுபுறம் கர்நாடகம் இதற்கு எதிராகத் தீவிரமாகச் செயல்பட்டு வந்தது. ஆனாலும், 1991- ம் ஆண்டு இடைக்காலத் தீர்ப்பை அரசிதழில் மத்திய அரசு வெளியிட்டது. 

ஜெயலலிதா உண்ணாவிரதம்!

இது, தமிழ்நாட்டுக்கான வெற்றியாகப் பார்க்கப்பட்டபோதிலும், அதுமுதல் கர்நாடகத்தில் குறிப்பாகப் பெங்களூரில் உள்ள தமிழர்களுக்கு எதிரான கலவரங்களாகவும் மாறி, தாக்குதல்கள் அரங்கேற்றப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. கர்நாடகத்தில் தமிழர்கள் கடும் தாக்குதலுக்கு ஆளாகினர். சிலர் கொல்லப்பட்டனர்; பலர் அகதிகளாக வெளியேற்றப்பட்டனர். பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகள் சேதப்படுத்தப்பட்டன. இந்தக் கலவரம் இந்திய நாட்டையே உலுக்கியது. ஒருகட்டத்தில், இந்தப் போராட்டத்தால் தமிழகத்துக்குத் தண்ணீர் வராமல் போகவே, இடைக்கால தீர்ப்பை வைத்து மத்திய அரசை வலியுறுத்தியது தமிழக அரசு. அதற்கு மெளனமே பதிலாகக் கிடைத்ததையடுத்து, யாரும் எதிர்பாராத வகையில் ஜெயலலிதா உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்தார். 

இது என்னோட பிரம்மாஸ்திரம்!

1993-ம் ஆண்டு ஜூலை 18- ம் தேதி காலை சென்னை மெரினாவில் உண்ணாவிரதத்துக்குத் தயாரானார் ஜெயலலிதா. அவர், ``காவிரி நடுவர் மன்றத்தின் இடைக்காலத் தீர்ப்பை அமல்படுத்தி, தமிழகத்துக்குத் தண்ணீர் திறந்துவிடும்வரை உண்ணாவிரதம் இருக்கப்போகிறேன்'' என்றார் மிகவும் அழுத்தமாக. அடுத்த நிமிடம், அங்கு பத்திரிகையாளர்கள் கூட்டம் குழுமியிருந்தது. அவர்களிடம் பேசிய ஜெயலலிதா, ``காவிரி நீர்ப் பிரச்னையில் நடுவர் மன்ற உத்தரவின்படி கர்நாடக அரசு 205 டி.எம்.சி. நீரைத் தரவேண்டும் என்பதை மத்திய அரசு அமல்படுத்த தவறிவிட்டது. காவிரி நீரைப் பெற்றுத் தருமாறு மத்திய அரசைப் பலமுறை வற்புறுத்தியாகி விட்டது. ஆனால், எந்தவிதப் பலனுமில்லை. அதனால்தான் இந்த உண்ணாவிரதம். கோரிக்கை நிறைவேறும்வரை, காலவரையற்ற உண்ணாவிரதம் இருக்கப்போகிறேன்" என்றார். ஜெயலலிதாவின் இந்த உண்ணாவிரதத்தால் தமிழ்நாடு அமளிதுமளியானது. பஸ்களும், ரயில்களும் நிறுத்தப்பட்டன; கடையடைப்புக் கலாட்டாக்களும் நடந்தேறின. இந்தப் பரபரப்புக்கிடையில் வி.ஐ.பி-க்கள் பலரும் அவரைச் சந்தித்தனர். அதில், நெடுமாறனும், நெடுஞ்செழியனும் உண்டு. 

ஜெயலலிதா

இடையில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த ஜெயலலிதா, "ரெண்டு வருஷம் பொறுத்திருந்தோமே. சொல்லப்போனால், இது என்னோட பிரம்மாஸ்திரம். உங்களுக்குத்தான் தெரியுமே... வேறு வழியே இல்லாம கடைசியிலதான் பிரம்மாஸ்திரத்தைக் கையிலெடுப்பாங்கன்னு'' என்றார். இதற்கிடையே அவரைச் சந்திக்கும் வி.ஐ.பி. படலமும் தொடர்ந்தது. அப்போதைய கவர்னர் சென்னா ரெட்டி ஜெயலலிதாவைச் சந்தித்தார். அவர் நிருபர்களிடம் பேசியபோது, ``முதல்வர் (ஜெயலலிதா) அவருடைய தரப்புக் கருத்துகளைச் சொன்னார். ஆனால், என்னைப் பொறுத்தவரைக்கும் இந்த மாதிரி நடவடிக்கைகளை நான் விரும்புவதில்லை. அவருடைய நலன் கருதி மட்டுமல்ல... மாநிலத்தின் நலன் கருதியாவது, அவர் உண்ணாவிரதத்தைக் கைவிட வேண்டும்'' என்றார். ஆனாலும், அவருடைய உண்ணாவிரதம் தொடர்ந்தது. மறுநாள், அவரைக் காண அ.தி.மு.க-வினர் அலைமோதினர். அவர்கள் மட்டுமல்ல; நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், பிரபு, ஒய்.ஜி.மகேந்திரன், ஆர்.எஸ்.மனோகர், முன்னாள் ஜனாதிபதி ஆர்.வெங்கட்ராமன், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி என அந்தப் பட்டியல் நீண்டது. 

ஜெயலலிதாவைச் சந்தித்த கமல், ``இன்று மாலைக்குள் உங்களுக்கு நல்ல செய்தி வரவில்லை என்றால், நானும் உங்களோடு வந்து உண்ணாவிரதத்தில் பங்கேற்பேன்'' என்றார். முன்னாள் ஜனாதிபதி ஆர்.வெங்கட்ராமன் தமிழக அதிகாரிகளிடம், ``எனக்கு இந்தக் காவிரி நதிநீர்ப் பிரச்னை பற்றி முழு விவரங்களையும் அனுப்பிவையுங்கள். நானும் டெல்லியில் பேசுகிறேன்'' என்றார். இந்த நிலையில், ஜெயலலிதாவின் உண்ணாவிரதத்தை நிறுத்துவதற்காக அ.தி.மு.க. எம்.பி. ஜி.சுவாமிநாதன் அவசரமாக டெல்லி சென்றார். இறுதியில் மத்திய அரசின் வாக்குறுதிகளை ஏற்று உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டார் ஜெயலலிதா. 

 

 

 

மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி? காவிரி கைவிரிக்கப்பட்ட கதை! அத்தியாயம் -19

 
 
Chennai: 

காவிரி நதிநீர்ப் பிரச்னையில் வழக்கைத் திரும்பப் பெற்றதாகத் தி.மு.க. மீதும், உரிய காலத்தில் தண்ணீரைப் பெற்றுத்தராத அ.தி.மு.க மீதும் பிற கட்சியினரும், விவசாயச் சங்கத்தினரும் விமர்சனம் வைப்பது தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருந்தாலும், தி.மு.க. ஆட்சியில் தீர்ப்பாயம் அமைக்கப்பட்டதையும், அ.தி.மு.க. ஆட்சியில் இடைக்காலத் தீர்ப்பை அரசிதழில் வெளியிட்டதையும் நாம் புறந்தள்ள முடியாது.

காவிரி

 

 

தண்ணீர் வரத்துக் குறைவு!

1968 முதல் 1990-ம் ஆண்டு வரை இந்தியாவிலும் தமிழகத்திலும் கர்நாடகத்திலும் ஆட்சி மாற்றங்கள் ஏற்பட்டு பிரதமர்களும், முதல்வர்களும் ஆட்சிப் பொறுப்பில் இருந்தபோதிலும் காவிரிக்கான பேச்சுவார்த்தைகள் மட்டும் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருந்ததே தவிர, காவிரி நதிநீர்ப் பங்கீட்டில் நிரந்தரத் தீர்வு எதுவும் ஏற்படவில்லை. அதேவேளையில், 1974-க்குப் பின்பு சட்டத்துக்குப் புறம்பாகக் கர்நாடகம் தண்ணீரைத் தேக்கிவைக்கத் தொடங்கிய பிறகு, தமிழகம் மிகக் குறைந்த அளவு நீரையே பெறத் தொடங்கியது. அதாவது, 1974-க்குப் பின் 11 ஆண்டுகளில் சராசரியாக மேட்டூருக்கு வந்த நீரின் அளவு 199 ஆயிரம் மில்லியன் கனஅடி. அதேநேரத்தில், 1974-க்கு முன்பு வந்த நீரின் அளவு 252 ஆயிரம் மில்லியன் கனஅடியாக இருந்தது. குறிப்பாக, 1985-ம் ஆண்டு மேட்டூருக்கு வந்த நீரின் அளவு 93 ஆயிரம் மில்லியன் கன அடி. இப்படி, நீரின் அளவைக் குறைத்தது மட்டுமின்றி, அப்படி வரும் குறைவான நீரையும் காலந்தாழ்ந்தே திறந்துவிட்டது கர்நாடகம். இதன் காரணமாக, வரலாற்றிலேயே முதன்முறையாக 1986-ம் ஆண்டு மேட்டூர் அணையும் பாசனத்துக்காகக் காலந்தாழ்ந்து திறந்துவிடப்பட்டது; அது இன்றுவரை தொடர்கிறது. இதனால், ``ஜூன் 15-ம் தேதிக்குப் பிறகு திறந்துவிடப்படும் தண்ணீரால் விளைச்சல் அதிக அளவு பாதிக்கப்படும்'' என்பதே இன்றளவும் காவிரி டெல்டா விவசாயிகளின் பிரச்னையாக இருக்கிறது. அதை எந்த அரசும் கவனத்தில் கொள்வது இல்லை.  

காவிரி

காவிரி நதிநீர் ஆணையம்! 

இது ஒருபுறமிருக்க... மறுபுறம், காவிரி நதிநீர்த் தீர்ப்பாயத்தின் இடைக்கால தீர்ப்பின் உத்தரவைச் செயல்படுத்துவதற்காக, அப்போதைய பிரதமர் ஐ.கே.குஜரால், காவிரி நதிநீர் ஆணையம் ஒன்றை உருவாக்க முடிவெடுத்தார். ஆனால், அதற்குப் பலத்த எதிர்ப்புகள் கிளம்பியதை அடுத்து, அந்த ஆணையம் அமைக்கும் பணி கைவிடப்பட்டது. இந்த நிலையில், இந்தியாவிலும், தமிழகத்திலும் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. பிரதமரானார் வாஜ்பாய். முதல்வரானார் கருணாநிதி. ஆட்சிக்கு வந்தவுடன், நதிநீர்த் தீர்ப்பாயத்தின் உத்தரவைச் செயல்படுத்தச் சொல்லி வாஜ்பாய்க்கு அழுத்தம் கொடுத்தார் கருணாநிதி. அந்தச் சமயத்தில், இதற்கு ஆதரவாக அ.தி.மு.க-வும் களமிறங்கியது குறிப்பிடத்தக்கது. ஒருகட்டத்தில், காவிரி நதிநீர் ஆணையம் அமைப்பதில் மாநில அரசுகள் சமரசம் ஆனதையடுத்து, மத்திய அரசு அந்த ஆணையத்தை அமைத்தது. அந்த ஆணையத்தின் கீழ் இயங்கக்கூடிய கண்காணிப்புக் குழு ஒன்றும் உருவாக்கப்பட்டது. 

காவிரித் தீர்ப்பாயத்தின் இறுதித் தீர்ப்பு! 

ஆனால், நதிநீர் ஆணையம் அமைத்தும் எந்தப் பிரயோஜனமும் இல்லை. பழையபடி வேதாளம் முருங்கை மரம் ஏறிய கதையாய், கர்நாடகம் தண்ணீர் தருவதில் பித்தலாட்டம் செய்தது. இதையடுத்து, உச்ச நீதிமன்றத்தின் கதவைத் தட்டியது தமிழக அரசு. ஆனால், எதற்கும் பணியவில்லை கர்நாடக அரசு. இதனால் அந்த அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர்ந்தது தமிழக அரசு. இது காரசாரமாய் வெடிக்கவே, அதன் விளைவாகக் கலவரங்களும், போராட்டங்களும் வெடித்தன. பேச்சுவார்த்தை, போராட்டம், வழக்கு என இப்படியாகவே காவிரிப் பிரச்னையில் ஆண்டுகள் கழிந்துகொண்டிருந்த வேளையில்தான் காவிரித் தீர்ப்பாயத்தின் இறுதித் தீர்ப்பு வழங்கப்பட்டது. கூடவே, இந்தத் தீர்ப்பை முறையாக அமல்படுத்துவதற்காகக் காவிரி மேலாண்மை வாரியம், காவிரி ஒழுங்காற்றுக் குழு ஆகியவற்றைப் பரிந்துரைத்தது. இந்தத் தீர்ப்பும் தமிழகத்துக்கு ஏமாற்றமே மிஞ்சும் வகையில் இருந்தது. அதாவது, இடைக்காலத் தீர்ப்பில் தமிழகத்துக்கு 205 டி.எம்.சி. வழங்க வேண்டும் என்று இருந்த நீரின் அளவு, இப்போது 192 டி.எம்.சி-யாகக் குறைந்துபோனது. 

மேட்டூர் அணை

கர்நாடகம் சூழ்ச்சி! 

இறுதித் தீர்ப்பு குறித்து மூன்று மாநிலங்களிலும் (கேரளா, கர்நாடகா, தமிழகம்) வாதங்கள் எழுந்தன. ஒருகட்டத்தில், இறுதித் தீர்ப்பு குறித்த அதிருப்தி தெரிவித்த இந்த மாநிலங்கள் உச்ச நீதிமன்றத்தை அணுகின. இந்தக் காலகட்டத்தில்தான் உச்ச நீதிமன்ற உத்தரவையடுத்து, காவிரித் தீர்ப்பாயத்தின் இறுதித் தீர்ப்பை அரசிதழில் வெளியிட்டது மத்திய அரசு. அரசிதழில் இறுதித் தீர்ப்பு வெளியான பின்பு, ஏற்கெனவே உச்ச நீதிமன்றம் பரிந்துரைத்த காவிரி மேலாண்மை வாரியத்தை அமைப்பதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்கத் தொடங்கியது. இது ஒருபுறமிருக்க... மறுபுறம், கர்நாடக அரசு மேக்கேதாட்டூ அணை விவகாரத்தைக் கையிலெடுத்தது. இதையும் தமிழக அரசு எதிர்க்கவே, கர்நாடகம் பழையபடி சூழ்ச்சியைக் கையாண்டது. அது, தமிழகத்துக்குத் தண்ணீரைத் திறந்துவிடுவதில் கால தாமதம் செய்தது. 

உச்ச நீதிமன்றம் கேள்வி!

இந்த நிலையில் உச்ச நீதிமன்றம், ``காவிரித் தீர்ப்பாயம் வழங்கிய தீர்ப்புக்குக் கர்நாடகம் கட்டுப்பட வேண்டும்'' என்று உத்தரவிட்டது. அதன் விளைவு, வெடித்தது கலவரம். இந்தச் சமயத்தில்தான் கர்நாடகாவில் 50 பேருந்துகள் தீவைத்துக் கொளுத்தப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே மாநிலங்களுக்குள் பேச்சுவார்த்தையும் நடத்தப்பட்டது. இந்த நிலையில்தான், ``காவிரி மேலாண்மை வாரியத்தை இன்னும் ஏன் அமைக்கவில்லை'' என்ற கேள்வியை மத்திய அரசிடம் வைத்தது உச்ச நீதிமன்றம். 

https://www.vikatan.com/news/tamilnadu/127341-the-abandoned-story-of-cauvery-series-19.html

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

காவிரி மேலாண்மை ஆணையம் அமைந்தது! காவிரி கைவிரிக்கப்பட்ட கதை! அத்தியாயம் - 20

 
காவிரி மேலாண்மை ஆணையம் அமைந்தது! காவிரி கைவிரிக்கப்பட்ட கதை! அத்தியாயம் - 20
 

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததைக் கண்டித்து, மத்திய அரசிடம் கேள்வி கேட்ட உச்ச நீதிமன்றத்துக்கு அரசிடம் இருந்து மெளனமே பதிலாக வந்தது. இந்தக் கால இடைவெளியில் தமிழகத்துக்குக் குறித்த நேரத்துக்குள் கர்நாடக அரசு தண்ணீரைத் திறந்துவிடாததாலும், பருவமழை பொய்த்துப்போனதாலும் காவிரி டெல்டா மாவட்டங்களில் உள்ள விவசாய நிலங்கள் கருகிப்போயின. இதைக் கண்டு தங்களின் உயிரை மாய்த்துக்கொண்ட விவசாயிகளின் எண்ணிக்கையோ தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே உள்ளது; விவசாயிகளின் தற்கொலையைத் தடுக்க காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைக்க வேண்டும் என்று வலியுறுத்திப் போராடத் துணிந்தனர் விவசாயச் சங்கப் பிரதிநிதிகள்.

காவிரி

 

 

 

விவசாயிகள் போராட்டம்!

தலைநகர் டெல்லியில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் கூடிய விவசாயிகள், நாள்தோறும் வெவ்வேறு வடிவங்களில் தொடர்ந்து 100 நாள்கள் போராட்டம் நடத்தினர். அதாவது, எலிக்கறி, பாம்புக்கறி தின்று போராட்டம் நடத்தியதோடு மட்டுமில்லாமல் ஆடைகளைக் களைந்து, நிர்வாணப் போராட்டத்திலும் ஈடுபட்டனர். எனினும், விவசாயிகளின் தொடர் போராட்டத்துக்கு மத்திய அரசு செவிசாய்க்கவில்லை.

 

 

ஒருகட்டத்தில், தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு ஆதரவாகக் குரல்கொடுக்கத் தொடங்கின. காவிரி விவகாரத்தில் நடுவர் மன்ற இறுதித்தீர்ப்பின் அடிப்படையில் மேலாண்மை வாரியம், காவிரி நதிநீர் முறைப்படுத்தும் குழு ஆகியவற்றை உடனடியாக அமைக்க வேண்டும் என்று கோரி, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு வழக்குகளும் தாக்கல் செய்யப்பட்டன. 

`ஸ்கீம்' குறித்த சர்ச்சை!

இந்த வழக்குகளை விசாரித்த உச்ச நீதிமன்றம், கடந்த பிப்ரவரி மாதம் 16-ம் தேதி தனது இறுதித் தீர்ப்பை வழங்கியது. அந்தத் தீர்ப்பில், காவிரியில் இருந்து தமிழகத்துக்கு ஆண்டுதோறும் 177.25 டி.எம்.சி தண்ணீர் வழங்க ஆணை பிறப்பித்ததுடன், தமிழகத்தின் நீண்டநாள் கோரிக்கையான காவிரி மேலாண்மை வாரியத்தைச் செயல்படுத்த `ஸ்கீம்' ஒன்றை 6 வாரத்தில் (மார்ச் 29, 2018-க்குள்) அமைக்கவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய முடியாது எனவும் உச்ச நீதிமன்றம் உறுதியாகத் தெரிவித்தது. இதையடுத்து, மேலாண் வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழக சட்டமன்றத்திலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து இதுதொடர்பாக அனைத்துக் கட்சிக் கூட்டங்களும் நடைபெற்று ஆலோசனை நடத்தப்பட்டதுடன், மத்திய அரசுக்கு தமிழக அரசு மற்றும் பல்வேறு எதிர்க்கட்சிகளும் தொடர்ந்து அழுத்தம் கொடுத்தன. ஆனாலும், அந்தக் காலகட்டத்தில் கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலை மனதில்கொண்டு, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் மத்திய அரசு காலம் தாழ்த்தி வந்தது. இந்த நிலையில், உச்ச நீதிமன்றம் குறிப்பிடும்,  `` `ஸ்கீம்' என்பது காவிரி மேலாண்மை வாரியத்தைக் குறிக்கவில்லை. இது, தீர்ப்பைச் செயல்படுத்த காவிரி மேற்பார்வை ஆணையத்தையே குறிக்கிறது'' என்றது கர்நாடகம்.

 

காவிரி

மத்திய அரசு காலக்கெடு!

இப்படியான சூழ்நிலையில், காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கான காலக்கெடுவை தளர்த்திக்கொண்டே சென்றது மத்திய அரசு. மேலும், ``உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டுள்ள `ஸ்கீம்' என்பதன் பொருள் என்ன? அது, காவிரி மேலாண்மை வாரியமாக இருந்தால், அதை உருவாக்கக் கூடுதலாக மூன்று மாதங்கள் கால அவகாசம் வழங்க வேண்டும். கர்நாடகாவில் தேர்தல் நடைபெறுவதால் காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தால் சட்டம் - ஒழுங்கு பாதிக்கப்படும்'' என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு பதில் மனுத் தாக்கல் செய்தது. இந்த நிலையில், மத்திய அரசு கேட்டிருந்த மூன்று மாதக் காலக் கெடு முடிவடைய சில நாள்களே இருந்த நிலையில், காவிரி வழக்கின் தீர்ப்பைச் செயல்படுத்த கால அவகாசம் போதவில்லை, வரைவுத் திட்ட அறிக்கையைத் தயார் செய்ய மேலும் இரண்டு வார கால அவகாசம் தேவை என்று மேலும் ஒரு மனுவைத் தாக்கல் செய்தது. இது எதற்காக என்றால், அதற்குள் கர்நாடகத் தேர்தல் முடிவுகள் வந்துவிடும் என்ற அடிப்படையில்தான். 

பிரதமர் மெளனம்!

இந்த நிலையில், காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக, மத்திய அரசு வாய் திறக்காததை அடுத்து, நாடாளுமன்றத்தில் அ.தி.மு.க. எம்.பி-க்கள் அமளியில் ஈடுபட்டு அவையை முடக்கினர். இது ஒருபுறமிருக்க... மறுபுறம், தமிழகத்தில் அனைத்துக் கட்சியினர், விவசாயச் சங்கத்தினர், மாணவ அமைப்பினர், வணிக அமைப்பினர் எனப் பலரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். மத்திய அரசை நம்பியிருக்கும் ஆளும் தற்போதைய அ.தி.மு.க. அரசு பெயரளவுக்கு உண்ணாவிரதத்தை நடத்தியது. தி.மு.க-வும் அதன் கூட்டணிக்  கட்சிகளும் மிகப் பெரிய அளவில் போராட்டத்தை நடத்தின. அதேபோல் வணிக அமைப்புகளும் போராட்டத்தை நடத்தின. இதற்கிடையில், இருசக்கர வாகன வழங்கும் விழாவுக்காகத் தமிழகத்துக்கு வருகை தந்த பிரதமர் மோடியிடம் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை மனுவை அளித்தார். என்றாலும், தமிழக அரசின் கோரிக்கை குறித்து பிரதமர் மோடி கருத்து எதுவும் கூறவில்லை. 

இந்தச் சூழ்நிலையில், காவிரிப் பிரச்னையில் தொடர்ந்து தமிழகத்தைப் புறக்கணித்து வரும் மத்திய அரசைக் கண்டிக்கும் வகையில், சென்னை அருகே திருவிடந்தையில் ராணுவக் கண்காட்சியைத் திறந்துவைப்பதற்காகத் தமிழகம் வந்த பிரதமர் மோடிக்கு எதிராக, மாநிலம் முழுவதும் கடும் எதிர்ப்புக் கிளம்பியது. சென்னையில் தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் கறுப்புப் பலூன்களைப் பறக்கவிட்டதுடன், கறுப்புச் சட்டை அணிந்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர். தி.மு.க-வினர் வீடுகளில் கறுப்புக்கொடி கட்டி, தங்களின் எதிர்ப்பைப் பதிவுசெய்தனர். இது, பிரதமர் மோடியைக் கவலைகொள்ளச் செய்தது குறிப்பிடத்தக்கது. இப்படியான நிலையில், பிரதமர் மோடியிடம் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கச் சொல்லி தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. 

காவிரி

காவிரி நீர் மேலாண்மை ஆணையம்!

இதையடுத்து மத்திய அரசு சார்பில் இறுதிகட்ட வரைவுத் திட்டம் தாக்கல் செய்யப்பட்டது. அதில், முன்னதாகத் தாக்கல்செய்யப்பட்ட திட்டத்தில் இருந்த, 'காவிரி அமைப்பு' என்ற பெயர், 'காவிரி நீர் மேலாண்மை ஆணையம்' என்று மாற்றம் செய்யப்பட்டிருந்தது. இதுதொடர்பான வழக்குகள் அனைத்தையும் முடித்துவைத்து உச்ச நீதிமன்றம் கடந்த 18-ம் தேதி உத்தரவிட்டது. பருவமழை தொடங்கும் முன்பாக மேலாண்மை ஆணையத்தையும், முறைப்படுத்தும் குழுவையும் அமைக்குமாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இதையடுத்து, கர்நாடகத் தேர்தலும் பி.ஜே.பி-க்கு மிகப்பெரும் வெற்றியைத் தராத பட்சத்தில், காவிரி மேலாண்மை ஆணையம் அமைத்து, அதற்கான உத்தவை, ஜூன் 1-ம் தேதி அரசிதழில் வெளியிட்டது மத்திய அரசு. இந்த ஆணையத்தின் தலைவராக மசூத் உசேன் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த ஆணையத்தின் தமிழக அரசின் பிரதிநிதிகளாகப் பொதுப்பணித் துறை முதன்மைச் செயலாளர் எஸ்.கே.பிரபாகர் மற்றும் மாநில நீர்வளத் துறை தலைமைப் பொறியாளர் ஆர்.செந்தில்குமார் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். 

காவிரி நதிநீர் தாவா தொடர்பான முழுமையான இந்தத் தொடரை நிறைவுசெய்யும் வேளையில், ஒருவழியாகக் காவிரி மேலாண்மை ஆணையத்தை மத்திய அரசு அமைத்துள்ளபோதிலும், இந்த ஆணையம் உரிய நேரத்தில் செயல்பட்டு, தமிழகத்துக்குத் தண்ணீர் திறந்துவிடுமா அல்லது பழையபடி கர்நாடக அரசு எனும் வேதாளம், மீண்டும் முருங்கை மரம் ஏறிய கதையாய் இருக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இந்தத் தொடர் கட்டுரைகளுக்கு உதவிய நூல்கள்:

* காவிரி அரசியலும் வரலாறும் (ஆர்.முத்துக்குமார்)
* காவிரி அங்கும் இங்கும் (பூ.அர.குப்புசாமி) 
* காவிரி தமிழகத்தின் உயிரோட்டம் (தமிழ்ப் பல்கலைக்கழகம்)
* காவிரி - நேற்று - இன்று - நாளை (பெ.மணியரசன்)
* காவிரி பிரச்னையின் வேர்கள் (வெ.ஜீவகுமார்)
* தெற்கிலிருந்து ஒரு சூரியன் (தி இந்து)
* எழுத்தாளர் தியாகு எழுதிய காவிரி பற்றிய கட்டுரை.

https://www.vikatan.com/news/tamilnadu/127527-the-abandoned-story-of-cauvery-series-20.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அதிஉயர் பாதுகாப்பு வலயங்களிலுள்ள 07 ஆலயங்கள் வழிபாடுகளுக்காக விடுவிப்பு யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் வடக்கு மாகாண ஆளுநர் தெரிவிப்பு.  (புதியவன்) அதி உயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் 21 வழிபாட்டுத் தலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவற்றுள் 07 ஆலயங்கள் வழிபாடுகளுக்காக விடுவிக்கப்படவிருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சினால் அறிவிக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் கூறியதாக அரச தலைவர் ஊடகப்பிரிவின் அறிக்கையில் தெரிவிக்கப்படுகிறது.  இவ்வாறாக கட்டுவன், வசாவிளான் மற்றும் பலாலி ஆகிய பகுதிகளில் காணப்படும் ஆலயங்களே வழிபாட்டு நடவடிக்கைகளுக்காக விடுவிக்கப்படவுள்ளன. அரச தலைவர் ஊடகப்பிரிவின் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், இணைத் தலைவர்களான வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் மற்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோரின் தலைமையில் இன்று நடைபெற்றது. இதன்போது கடந்த கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களின் முன்னேற்றம் குறித்து கலந்துரையாடப்பட்டதுடன், புதிய பிரேரணைகளும் சமர்பிக்கப்பட்டன. இதன்போது உரையாற்றிய வடக்கு மாகாண ஆளுநர், சுமார் 30 வருடங்களுக்கு மேலாக எவ்வித வழிபாடுகளையும் நிகழ்த்தாத குறித்த ஆலயங்களுக்கு முதலில் மக்கள் செல்ல வேண்டும் எனவும், இவர்களுக்கான போக்குவரத்து வசதிகளை பெற்றுக்கொடுப்பது தொடர்பில் இராணுவத்துடன் கலந்துரையாடவுள்ளதாகவும் தெரிவித்தார். மக்கள் அங்கு செல்லும் போது ஊடகவியலாளர்களுக்கும் அனுமதி வழங்கப்பட வேண்டும் என இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர். இந்த விடயம் தொடர்பில் பாதுகாப்பு தரப்பினருடன் கலந்துரையாடி பரிசீலிக்கப்படும் என மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் இணைத் தலைவர்கள் தெரிவித்தார்கள். இதேவேளை, 1985 ஆம் ஆண்டுக்கு பின்னர் வனவள மற்றும் வனஜீவராசிகள் பணிமனையின் கீழ் கையகப்படுத்தப்பட்ட காணிகளை விடுவிக்குமாறு துறைசார் அமைச்சரிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாகவும், எதிர்வரும் ஏப்ரல் மாதத்துக்குள் அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் ஆளுநர் தெரிவித்தார்.  இதேவேளை, வடக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்படும் விவசாய நவீனமயமாக்கல் செயற்பாடு தொடர்பில் மாகாண சபைக்கு அறிவிக்க வேண்டும் என குறித்த செயற்றிட்டத்தின் பிரதிப் பணிப்பாளருக்கு ஆளுநர் பணிப்புரை விடுத்தார்.  அத்துடன் விதை உருளைக் கிழங்கில் பக்றீரியா தொற்று ஏற்பட்டமை தொடர்பான முழுமையான அறிக்கையை சமர்பிக்குமாறு மாகாண விவசாய அமைச்சின் செயலாளருக்கு அறிவுறுத்தினார். அத்துடன் யுக்திய சிறப்புச் சுற்றிவளைப்பின் ஊடாக கைது செய்யப்படும் நபர்களுக்கான புனர்வாழ்வு செயற்பாடுகளை மாத்திரம் மேற்கொள்ளாது, போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடும் முழு வலையமைப்பையும் கண்டுபிடிக்க வேண்டும் என பொலிஸாருக்கு ஆளுநர் தெரிவித்தார்.  மேலும் பொதுமக்களின் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு யாழ்ப்பாணம் மத்திய பேரூந்து நிலையத்துக்குள் பொலிஸ் காவலரன் ஒன்றை அமைப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டது. குறித்த கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான, சி.சிறிதரன், செ.கஜேந்திரன், யாழ்ப்பாண மாவட்ட பதில் செயலாளர் ம.பிரதீபன், வடக்கு மாகாண சபைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம், பணிமனைத் தலைவர்கள், பிரதேச செயலாளர்கள், பொலிஸார், முப்படையினர், சமூகமட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டிருந்தனர்.  இதன்போது, பொதுமக்களின் காணியில் கட்டப்பட்டுள்ள யாழ்.தையிட்டி விகாரை இடித்து அகற்றப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர்களான சி.சிறிதரன், செ.கஜேந்திரன் குறிப்பிட்டிருந்தனர்.(ஏ) அதிஉயர் பாதுகாப்பு வலயங்களிலுள்ள 07 ஆலயங்கள் வழிபாடுகளுக்காக விடுவிப்பு (newuthayan.com)
    • முரளிதரன் காசிவிஸ்வநாதன் பதவி,பிபிசி தமிழ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பாக மிகப் பெரிய ஆரவாரத்துடன் தி.மு.கவில் இருந்து பிரிந்து உருவான ம.தி.மு.க. தற்போது மிகவும் பலவீனமான நிலையை எட்டியிருக்கிறது. காரணம் என்ன ம.தி.மு.கவின் பொருளாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அ. கணேசமூர்த்தியின் தற்கொலை மரணம் அக்கட்சியினரை உலுக்கியிருக்கிறது. அதற்கு இணையான அதிர்ச்சியாக, இந்த நாடாளுமன்றத் தேர்தலில் அக்கட்சிக்கு பம்பரம் சின்னம் கிடைக்காமல் போனதைச் சொல்லலாம். அ. கணேசமூர்த்தியின் மரணத்தைவிட, பார்வை ரீதியாக மிக மோசமான தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது இந்த விவகாரம். மாநிலத்தில் ஒரு தொகுதியில் மட்டுமே போட்டியிடுவதால் அக்கட்சி கேட்ட சின்னத்தைத் தர முடியாது என மறுத்திருக்கிறது இந்தியத் தேர்தல் ஆணையம். துவக்கத்தில் ஒரே சின்னத்தில் 24 மக்களவைத் தொகுதிகளில் போட்டியிட்ட கட்சி, தற்போது கூட்டணி அரசியலில் இரு தொகுதிகளில் போட்டியிட முடியாமல் சின்னத்தை இழந்து நிற்கிறது. தமிழ்நாடு அரசியலிலும் தி.மு.க. மீதும் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய கட்சியாகக் காட்சியளித்த ம.தி.மு.க., இவ்வளவு பெரிய சரிவை உடனடியாகச் சந்திக்கவில்லை. இந்தச் சரிவு படிப்படியாக நேர்ந்தது. வைகோவுக்கும் தி.மு.கவுக்கும் இடையிலான பிளவு தி.மு.கவின் முக்கியமான தளபதிகளில் ஒருவராக 1980களில் இருந்தவர் வை. கோபால்சாமி. தி.மு.கவின் மாநாடுகள், கூட்டங்கள் ஒவ்வொன்றிலும் அவருக்கெனவே இளைஞர்கள் திரண்டார்கள். ஆனால், 90களின் துவக்கத்தில் அவருக்கும் கட்சித் தலைமைக்கும் இடையிலான முரண்பாடுகள் முற்றத் துவங்கின. இந்த நிலையில், 1993இல் விடுதலைப் புலிகளால் தன் உயிருக்கு ஆபத்து இருப்பதாக மத்திய - மாநில அரசுகளின் உளவுத் துறைகள் அனுப்பிய கடிதத்தை தி.மு.க. தலைவர் மு. கருணாநிதி வெளியிட்டார். இதையடுத்து, வைகோவுக்கும் தி.மு.கவுக்கும் இடையிலான பிளவு முற்றத் துவங்கியது. 30 மாவட்டச் செயலாளர்களில் 9 பேர் வைகோவுக்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்டனர். அதே ஆண்டு நவம்பர் 11ஆம் தேதி தி.மு.கவை விட்டு நீக்கப்பட்டார் வைகோ. ஆதரவாக அறிக்கை வெளியிட்ட 9 மாவட்டச் செயலாளர்களும் நீக்கப்பட்டனர். செயற்குழு உறுப்பினர்களில் 40 பேர், பொதுக் குழு உறுப்பினர்களில் சுமார் 200 பேர், 9 மாவட்டச் செயலாளர்கள், சில சட்டமன்ற உறுப்பினர்கள் எனப் பெரும் எண்ணிக்கையிலானவர்கள் வைகோவுக்கு ஆதரவாக நின்றனர். எம்.ஜி.ஆர். தி.மு.கவைவிட்டு விலகியபோது ஏற்பட்ட பிளவைவிட இந்தப் பிளவு மிகப் பெரியது என அப்போது பலர் கருதினார்கள். காரணம், எம்.ஜி.ஆர். கட்சியைவிட்டு வெளியேறியபோது, தி.மு.கவின் மாவட்டச் செயலாளர்கள் யாரும் எம்.ஜி.ஆரோடு செல்லவில்லை. ஆனால், இந்த முறை, துடிப்புமிக்க மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட முக்கிய தலைவர்களான பொன். முத்துராமலிங்கம், செஞ்சி ராமச்சந்திரன், அ. கணேசமூர்த்தி, கண்ணப்பன், எல். கணேசன், ரத்தினராஜ், டிஏகே லக்குமணன், திருச்சி செல்வராஜ், நாகை மீனாட்சி சுந்தரம், மதுராந்தகம் ஆறுமுகம் உள்ளிட்டோர் வைகோவின் பக்கம் நின்றனர். இவர்கள் தவிர, திருச்சி மலர்மன்னன், முன்னாள் அமைச்சர் தங்கவேலு, புதுக்கோட்டை சந்திரசேகரன், கே.எஸ். ராதாகிருஷ்ணன் ஆகியோருக்கும் வைகோ பக்கம் நின்றனர். இந்தப் பின்னணியில் தி.மு.கவின் கட்சி, கொடி ஆகியவற்றுக்கு உரிமை கோரிய வைகோ அது நடக்காத நிலையில், 1994ஆம் ஆண்டு மே மாதம் ஆறாம் தேதி மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் என்ற கட்சியைத் துவங்கினார். இந்தக் காலகட்டத்தில் தமிழக அரசியலில் மிக முக்கியமான ஒரு கட்சியாக ம.தி.மு.க. பார்க்கப்பட்டது. அப்போதைய ஆளும் கட்சியான அ.தி.மு.கவை எதிர்ப்பதில் மிகப் பெரும் தீவிரத்தைக் காட்டினார் வைகோ. அ.தி.மு.க. ஆட்சியைக் கண்டித்து கன்னியாகுமரியில் இருந்து சென்னையை நோக்கி நடைபயணம் ஒன்றையும் மேற்கொண்டார் வைகோ. மதிமுகவும் பம்பரச் சின்னமும் ம.தி.மு.க. 1994இல் துவங்கப்பட்ட தருணத்தில் மயிலாப்பூர் மற்றும் பெருந்துறை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. அந்தத் தேர்தலில் ம.தி.மு.கவுக்கு மயிலாப்பூர் தொகுதியில் பேருந்து சின்னமும் பெருந்துறையில் பம்பரச் சின்னமும் ஒதுக்கப்பட்டது. கடந்த 1996ஆம் ஆண்டில் தேர்தல்கள் வந்தபோது, பா.ம.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, ஜனதா தளம், திவாரி காங்கிரஸ் ஆகிய கட்சிகளை உள்ளடக்கி, தனது தலைமையில் கூட்டணியை உருவாக்க விரும்பினார் வைகோ. ஆனால், கூட்டணியின் பெயர் ம.தி.மு.க. - பா.ம.க. கூட்டணி என இருக்க வேண்டுமென்று கூறியது பா.ம.க. இதனால், அந்தக் கூட்டணி உருவாக முடியவில்லை. முடிவில், ம.தி.மு.க, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, ஜனதாதளம் ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்தனர். இந்தக் கூட்டணியின் சார்பில் நாடாளுமன்றத் தேர்தலில் குடை சின்னத்தில் 24 இடங்களில் போட்டியிட்டது அக்கட்சி. சட்டமன்றத் தேர்தலில் அதே சின்னத்தில் 177 இடங்களில் போட்டியிட்டது அக்கட்சி. சட்டமன்றத் தேர்தலில் 5.7 சதவீதமும் நாடாளுமன்றத் தேர்தலில் 4.5 சதவீதமும் அக்கட்சிக்குக் கிடைத்தன. இந்தத் தருணத்தில் ஒரு நிரந்தரச் சின்னத்திற்காக முயற்சி செய்தது ம.தி.மு.க. பெருந்துறை இடைத் தேர்தலில் ம.தி.மு.க. போட்டியிட்ட பம்பரச் சின்னம் நன்றாக இருக்கிறது, அந்தச் சின்னம் கிடைத்தால் சிறப்பாக இருக்கும் என மு. கண்ணப்பன் தெரிவித்த கருத்தை ஏற்றுக்கொண்டு, அந்தச் சின்னத்தைப் பெற முயற்சிகளை மேற்கொண்டது ம.தி.மு.க. வைகோவும் கே.எஸ். ராதாகிருஷ்ணனும் டெல்லியில் தங்கியிருந்து இந்தச் சின்னத்திற்காக தேர்தல் ஆணையத்தில் தொடர்ந்து பேசி வந்தனர். ஆனால், ம.தி.மு.கவின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டிருந்ததால், ஒரே சின்னத்தை ஒதுக்குவதில் பிரச்னை இருந்தது. இதையடுத்து, ஒரு கட்சி சில தொகுதிகளுக்கு மேல் போட்டியிட்டால், ஒரே சின்னத்தை ஒதுக்கலாம் என ஆணை வெளியிடப்பட்டு, பம்பரம் சின்னம் ம.தி.மு.கவுக்கு ஒதுக்கப்பட்டதாக நினைவுகூர்கிறார் கே.எஸ். ராதாகிருஷ்ணன். இதற்கு அடுத்து வந்த 1998 நாடாளுமன்றத் தேர்தலிலேயே அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்ற ம.தி.மு.கவுக்கு 5 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. இதில் 3 இடங்களில் வெற்றி பெற்று ஆச்சரியமளித்தது ம.தி.மு.க. இந்தத் தேர்தலில்தான் முதன்முதலில் பம்பரம் சின்னத்தில் போட்டியிட்டது அக்கட்சி. வாக்கு சதவீதம் 6.2ஆக உயர்ந்திருந்தது. மீண்டும் திமுகவுடன் கூட்டணி பட மூலாதாரம்,GETTY IMAGES கடந்த 1998ல் தேர்வுசெய்யப்பட்ட நாடாளுமன்றம் ஓராண்டிலேயே கலைக்கப்பட்டுவிட, 1999இல் மீண்டும் தேர்தலைச் சந்தித்தது இந்தியா. அதற்குள் பல விஷயங்கள் நடந்திருந்தன. தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்த அ.தி.மு.க. அதிலிருந்து வெளியேறிவிட, தி.மு.க. உள்ளே வந்தது. எல்லாக் கூட்டங்களிலும் தி.மு.கவையும் வாரிசு அரசியலையும் விமர்சித்து வைகோ பேசி வந்த நிலையில், இப்படி ஒரு கூட்டணி உருவானது. ஆனால், தான் ஏற்கெனவே இருந்த தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குள்தான் தி.மு.க. வருகிறது என்பதால், பெரிய முரண்பாடு இன்றி கூட்டணி அமைந்தது. இந்த முறையும் 5 இடங்கள். அதே பம்பரச் சின்னம். வாக்கு சதவீதம் குறைந்தாலும் வெற்றி பெற்ற இடங்களின் எண்ணிக்கையில் ஒன்று அதிகரித்தது. கடந்த 2001ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்கியபோது தி.மு.கவுக்கும் ம.தி.மு.கவுக்கும் இடையில் பிரச்னைகள் ஏற்பட்டன. தமிழகத்தில் செல்வாக்கில்லாத கட்சியாக இருக்கும் பா.ஜ.கவுக்கு 23 இடங்களை அளிக்கும் நிலையில், எல்லாத் தொகுதிகளிலும் செல்வாக்கு கொண்ட தங்களுக்கு 21 தொகுதிகளை மட்டும் கொடுப்பது சரியல்ல என்றார் வைகோ. இதையடுத்து தனக்கு அளிக்கப்பட்ட 23 தொகுதிகளில் இரண்டைக் குறைத்துக்கொள்ள பா.ஜ.க. முன்வந்தது. ஆனால், தாங்கள் விரும்பிய தொகுதியைத் தரவில்லை என்றார் வைகோ. முடிவில் பா.ஜ.க. போட்டியிடும் தொகுதிகள் தவிர, மற்ற தொகுதிகளில் தனித்துப் போட்டியிடப் போவதாக அறிவித்தார் வைகோ. வைகோ எடுத்த மிக மோசமான அரசியல் முடிவுகளில் ஒன்றாக, இந்தத் தேர்தலில் அவர் எடுத்த முடிவை அரசியல் பார்வையாளர்கள் குறிப்பிடுகிறார்கள். காரணம், இந்தத் தேர்தலில் 211 தொகுதிகளில் போட்டியிட்ட ம.தி.மு.க., ஒரு இடத்தில்கூட வெற்றி பெறவில்லை. ஆனால், இதைவிட மோசமான முடிவுகளை எடுக்கக் காத்திருந்தார் வைகோ. பட மூலாதாரம்,வைகோ பொடா சட்டத்தில் கைதுசெய்யப்பட்ட வைகோ மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் நடந்த ஒரு பொதுக் கூட்டத்தில் விடுதலைப் புலிகளை ஆதரித்துப் பேசியதற்காக அவரைப் பொடா சட்டத்தில் கைதுசெய்தது அ.தி.மு.க. அரசு. இது நாடு முழுவதும் சலசலப்பை ஏற்படுத்தியது. பொடா சட்டத்தின் பிரிவுகள் எவ்வளவு கடுமையானவை எனக் காட்டுவதற்கான சின்னமாக உருவெடுத்தார் வைகோ. அவரை விடுவிக்க வேண்டுமென தமிழக அரசியல் கட்சிகள் அனைத்தும் குரல் கொடுத்தன. அதில் தி.மு.கவின் குரலும் இருந்தது. இதையடுத்து இரு கட்சிகளும் மீண்டும் நெருங்க ஆரம்பித்தன. வேலூருக்குச் சென்று வைகோவை நேரில் சென்று சந்தித்து வந்தார் தி.மு.க. தலைவர் மு. கருணாநிதி. 2004ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் ம.தி.மு.கவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட வைகோ, சென்னை வரை ஊர்வலமாக வந்து சேரப் பல மணிநேரம் ஆனது. சென்னையில் பொதுக் கூட்டத்தில் பங்கேற்ற வைகோ, நான்கு தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்தார். கடைசியாக சிவகாசி தொகுதியின் பெயரைச் சொல்லி நிறுத்தியதும், தொண்டர்கள் அனைவரும் 'வைகோ', 'வைகோ' என முழக்கமிட்டனர். ஆனால், யாரும் எதிர்பாராத வகையில் அந்தத் தொகுதியில் சிப்பிப்பாறை ரவிச்சந்திரன் என்ற இளைஞர் போட்டியிடுவதாக அறிவித்தார் வைகோ. வைகோ அரசியல் ரீதியாக எடுத்த மிக மோசமான முடிவுகளில் இதுவும் ஒன்றாகப் பார்க்கப்பட்டது. காரணம், இந்தத் தேர்தலில் நான்கு தொகுதிகளிலும் ம.தி.மு.க. வெற்றி பெற்றது. வைகோ தேர்தலில் போட்டியிட்டிருந்தால், அவரும் நாடாளுமன்றம் சென்றிருக்க முடியும். ஆனால், அந்த வாய்ப்பை வேறொருவருக்கு அளித்தார் வைகோ. 2006ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் சமயத்தில் மறுபடியும் ஒரு பரபரப்பை ஏற்படுத்தினார் வைகோ. அ.தி.மு.கவுடனான வைகோவின் கூட்டணி பட மூலாதாரம்,GETTY IMAGES தி.மு.க. கூட்டணியில் 35 இடங்களைக் கோரிய ம.தி.மு.கவுக்கு 22 இடங்களைக் கொடுக்க முன்வந்தது தி.மு.க. இதையடுத்து, திடீரென அ.தி.மு.க. கூட்டணியில் இணைந்தார் வைகோ. சில ஆண்டுகளுக்கு முன்பு அவரை பொடா சட்டத்தின் கீழ் தமிழக அரசு சிறையில் அடைத்தபோது மிகக் கடுமையான விமர்சனங்களை ஜெயலலிதா மீது அவர் முன்வைத்திருந்தார். இந்த நிலையில், வைகோவின் முடிவு பலரையும் அதிரவைத்தது. இந்தக் கூட்டணியில் 35 இடங்களில் போட்டியிட்டு வெறும் 6 இடங்களை மட்டுமே அக்கட்சியால் வெல்ல முடிந்தது. 2009 நாடாளுமன்றத் தேர்தலிலும் அ.தி.மு.கவுடனான கூட்டணி தொடர்ந்த நிலையில், ஒரு இடம் மட்டுமே அக்கட்சிக்குக் கிடைத்தது. கடந்த 2011ஆம் ஆண்டு தேர்தல் நெருங்கியபோதும் அ.தி.மு.க. கூட்டணியிலேயே ம.தி.மு.க. இடம்பெற்றிருந்தது. ஆனால், பேச்சு வார்த்தைகள் நடைபெற்றபோது, ம.தி.மு.க. குறைந்தது 21 தொகுதிகளாவது எதிர்பார்த்தது. ஆனால், பேச்சுவார்த்தையை 6 தொகுதிகளில் இருந்து துவங்கியது அ.தி.மு.க. இதனால், கூட்டணியில் இருந்து வெளியேறி, தனித்துப் போட்டியிடத் தயாரானது ம.தி.மு.க. இந்த நிலையில்தான் ஒரு அதிரடியான முடிவை எடுத்தார் வைகோ. 2011ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலைப் புறக்கணிப்பதாக ம.தி.மு.க. அறிவித்தது. ம.தி.மு.க. எடுத்த முடிவுகளிலேயே மிக மோசமான அரசியல் முடிவாக இந்த முடிவே பார்க்கப்படுகிறது. ம.தி.மு.கவின் பின்னடைவுகளுக்குக் காரணம் என்ன? ம.தி.மு.கவின் தொடர் பின்னடைவுகளுக்குக் காரணம், வைகோவின் முடிவுகள்தான் என்கிறார் அக்கட்சியின் ஆரம்ப காலத் தலைவர்களில் ஒருவரான கே.எஸ். ராதாகிருஷ்ணன். "வைகோ ஒரு விஷயத்தை அதைச் செய்ய வேண்டிய காலத்தில் செய்யவில்லை. ம.தி.மு.க. தற்போது அடைந்திருக்கும் பின்னடைவுகளுக்கு இதுவே காரணம்," என்று கூறும் கே.எஸ். ராதாகிருஷ்ணன், கூட்டணி தொடர்பாக அவர் எடுத்த மூன்று முடிவுகள் மிக மோசமாக இருந்ததாகச் சுட்டிக்காட்டுகிறார். கடந்த 2001ஆம் ஆண்டில், தி.மு.க. கூட்டணியிலேயே தொடர்ந்திருந்தால் சில இடங்களைப் பெற்றிருக்கக்கூடிய நிலையில், தனித்துப் போட்டியிட்டு எல்லாத் தொகுதிகளிலும் தோல்வியடைந்து, கட்சி பலவீனமாக இருப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தினார் வைகோ என்கிறார் ராதாகிருஷ்ணன். அடுத்ததாக 2006ஆம் ஆண்டு தேர்தலில், தி.மு.க. கூட்டணியில் இருந்து திடீரென அ.தி.மு.க. கூட்டணிக்கு மாறியது கட்சி மேலிருந்த நம்பகத் தன்மையை உடைத்தது என்கிறார் கே.எஸ். ராதாகிருஷ்ணன். "அப்போது திருச்சியில் மிகப் பெரிய தி.மு.க. மாநாடு நடந்தது. அதில் வைகோவின் கட்-அவுட்டும் வைக்கப்பட்டிருந்தது. அந்த மாநாட்டிற்கு வருவதாகச் சொன்ன வைகோ, திடீரென ஜெயலலிதாவை சந்தித்தார். அன்றைய தினமே கூட்டணி அறிவிக்கப்பட்டது. எப்படி ஒரு சந்திப்பில் கூட்டணி, இடங்கள் ஆகியவை முடிவாகும்? ஆகவே, முன்பே பேச்சுவார்த்தைகள் நடந்திருக்க வேண்டும் எனப் பலரும் கருதினர். இது அக்கட்சியின் மீதான நம்பகத்தன்மையை கேள்விக்குறியாக்கியது," என்கிறார் கே.எஸ். ராதாகிருஷ்ணன். வைகோ 2006இல் சரியான முடிவெடுத்திருந்தால் ம.தி.மு.க. அந்தத் தேர்தலில் சுமார் 15 இடங்களைப் பெற்றிருக்கும். கட்சி வலுவடைந்திருக்கும் என்கிறார் மூத்த பத்திரிகையாளரான குபேந்திரன். "வைகோ எப்போதுமே சரியான நேரத்தில் தவறான முடிவுகளை எடுப்பார் என்பதற்கு அந்தத் தேர்தல் உதாரணமாகிவிட்டது. அப்போது ஆரம்பித்த தவறு, சமீபகாலம் வரை தொடர்ந்தது. இதன் உச்சகட்டமாக 2011இல் தேர்தலையே புறக்கணிக்க வேண்டிய நிலை வந்தது," என்கிறார் குபேந்திரன். தி.மு.கவில் இருந்து வைகோ வெளியேறியபோது நொச்சிப்பட்டு தண்டபாணி, பாலன், இடிமழை உதயன், வீரப்பன், ஜஹாங்கீர் உள்ளிட்ட ஆறு பேர் தீக்குளித்தனர். ஆனால், வைகோ எடுத்த தவறான முடிவுகளால் அவர்கள் தியாகம் முழுவதும் வீணாகிவிட்டது என்கிறார் கே.எஸ். ராதாகிருஷ்ணன். தற்போது வைகோ உடல்ரீதியாக தளர்ந்திருக்கும் நிலையில், அவரது மகன் துரை வைகோ கட்சியை முன்னெடுத்துச் செல்கிறார். அவர் எடுக்கவிருக்கும் முக்கிய முடிவுகளே இனி கட்சியின் எதிர்காலத்தைத் தீர்மானிப்பதாக அமையும். ம.தி.மு.க தொடர் பின்னடைவுகளை சந்திப்பது ஏன்? வைகோ எடுத்த முடிவுகள் எப்படி பாதித்தன? - BBC News தமிழ்
    • தேர்தல் வருகின்றது என்பதற்காகவா.............🙃.........சரத் வீரசேகர உட்பட இன்னும் பலர் தொடர்ச்சியாக இப்படியான கருத்துகளை சொல்லிக் கொண்டே இருக்கின்றார்களே. நடவடிக்கை எடுக்கப்படுவது இதுவே முதல் முறை என்று நினைக்கின்றேன். தேர்தல் முடிந்த பின், இவருக்கு ஒரு ஜனாதிபதி மன்னிப்பு வழங்கும் திட்டமும் இருக்கலாம். அமெரிக்கா, இந்தியா, இலங்கை - இந்த மூன்று இடங்களில் இருந்து வரும் அரசியல் செய்திகள் ஒரே மாதிரியே இருக்கின்றன......😀
    • ஸ்கன்டினேவிய நாடுகளில் மத ரீதியாக பதற்றத்தை ஏற்படுத்தும் புட்டினின் முயற்சியாக இருக்குமோ?  😁
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.